Tuesday, October 21, 2014

raajamkirushnan maraivu










எழுத்தாளர் ராஜம்கிருஷ்ணன் மறைந்தார்

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்(90) திங்கள் அன்று (20.10.2014) சென்னையில் போருர் ராமசந்திரா மருத்துவமனையில் காலமானார். அவர் அங்கு தங்கித்தன் இறுதி நாட்களை கழித்திட வாய்ப்பு தந்தது அந்த நிறுவனம். நாம் அந்த நிறுவனத்திற்கு நன்றி சொல்லவேண்டும்.
ராஜம் கிருஷ்ணன் நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதிக்குவித்த எழுத்து உழைப்பாளி. .சாகித்ய அகாதெமி,சரஸ்வதி சம்மான்,பாரதிய பாஷா விருது இலக்கியச்சிந்தனை விருது என விருதுகள் அணிவகுத்து அவருக்குப்பெருமை கூட்டின.
தருமமிகு சென்னையில் தான்வாழ்ந்த வீடும் தன் கணவன் கிருஷ்ணன் மறைந்த பிறகு தனக்கு இல்லாமல் போக நடுத்தெருவுக்கு வந்துவிட்ட அவர்க்கு எழுத்தாளர் திலகவதி தோழமை கை கொடுத்தார். ஆக திருவான்மியூர் பக்கத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லம் அவர்க்கு அடைக்கலம்தந்தது.
பின்னர் அவர் போரூரில் ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர்கள் பராமரிப்பில் தங்கி இருப்பதாக அண்மையில் காலமான நண்பர் கொல்கத்தா சு.கிருஷ்ணமூர்த்தி எனக்குச்சொன்னார்.ராஜம் கிருஷ்ணன் மருத்துவ மனையில் படுக்கையிலிருந்துகொண்டு சொன்ன நினைவு சொச்சங்களை தொகுத்து ஒரு நூலாக அது வெளிவந்திருப்பது குறித்துப் பேசிக்கொண்டிருந்தார். வெளியிட்டவர்கள் இன்னும் கொஞ்சம் சிரத்தையாகப்படித்து இதனை வெளியிட்டிருந்தால் அவருக்கு கூடுதல் பெருமை சேர்த்திருக்கும் சு கி .என்னிடம் இப்படி ப்பகிர்ந்து கொண்டார்.
கலைஞ்ர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது சமீபத்தில்தான் ராஜம் கிருஷ்ணன் படைப்புக்களை அரசுடமை ஆக்கி மூன்று லட்சங்கள் அவருக்குத்தந்து தமிழ்ப் புண்ணியம் கட்டிக்கொண்டார். எழுத்துப்படைப்பாளிக்கு பிரக்ஞ்னை உள்ளபோதே கொடுத்து கௌரப்படுத்தியது ஒரு நல்ல விஷயம்.இந்த வகையில் நிதி உதவி பெற்றோர் அது போது கொஞ்சம் எண்ணிக்கையில் அதிகம்.
.தமிழக ஆட்சிக்கட்டிலில் இப்போதுள்ளவர்கள் எப்படி என்ப்து.எல்லாம் நல்ல புத்தகம் வெளியிடுவோர் உங்களுக்குச்சொல்லி இருப்பார்கள்.என்னை மன்னிக்கவும் நான் ராஜம் கிருஷ்ணனுக்கு வருகிறேன்.

ராஜம் கிருஷ்ணனை கடலூர் தொலைபேசிதொழிற்சங்கம் சார்பில் ஒரு மகளிர்தின விழாவுக்கு நாங்கள் அழைத்திருந்தோம்.பெண் எழுத்தாளரை அழைப்பது மகளிர் தினவிழாவில் பேசவைப்பது கடலூர் தொலைபேசி ஊழியர் மரபு. வெண்ணிலா, தமிழரசி, பத்மாவதி விவேகானந்தன்,சைரா பானு என பெண்டிர் அனிவகுத்து கடலூர் வந்திருக்கிறார்கள். சென்னை தொலைபேசித்தோழியர் ஏ டி ருக்மணியும் ராஜம் கிருஷ்ணனோடு கடலூருக்கு வந்திருந்தார்.
கடலூரில் சிரில் பெயரால் ஆண்டுதோறும் தொலைபேசி ஊழியர்கள் தமிழ் விழா ஒன்று சிறப்பாக நடத்துகிறார்கள். தமிழ் நாட்டு தமிழ் அறிஞ்ர்கள் இது விஷயம் அறிவர். புதுவை நூற்கடல் கோபாலைய்யர் தொடங்கி ஈழத்துக்கவி காசி ஆனந்தன்.வரை இங்கு வந்து சிறப்பித்து இருக்கிறார்கள்.இது நிற்க.
ராஜம் கிருஷ்ணன் (1998) கடலூர் நகரம் வந்து தொலைபேசி ஊழியர்கள் மகளிர் தின நிகழ்வில் பெண்கள் சமூக அரங்கில் எப்படி முன்னணியில் நின்று பணி ஆற்றிவது என்பது பற்றி உருக்கமாகப்ப்பேசினார், தோழியர் ஏ டி ருக்மணி ராஜம் கிருஷ்ணன் பெருமைகளை எல்லாம் சொல்லி நிகழ்ச்சிதொடங்கி வைத்தார்.கடலூர் தமிழ் எழுத்தாளர்கள் தமிழ் அன்பர்கள் இன்றும் கூட அதனை நிறைவோடு நினைத்துப்பார்ப்பார்கள்.
நிகழ்ச்சி முடிந்து இரவு திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் தோழியர்கள் இருவரையும் வண்டி ஏற்றி அனுப்பிவைத்தோம். ரயில் வருமுன்பு திருப்பாப்புலியூர் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் உலக நடப்புக்கள் பற்றி எல்லாம் பேசிக்கொண்டிருந்தோம்
.பெண்ணை ஆணின் பின் இணைப்பாக.வைப்பதில் மதங்களின் பங்கு ,சாதியும்(!) நாதியும் அற்று பெண் வாழ்வதில்தான் ஆண் இனத்தின் கீழ்மை வெளிச்சம் பெறுவது, பெண்குழந்தையை இரண்டாந்தர பிரஜையாகமட்டுமே இந்தச் சமூகம்.அங்கீகரிப்பது. பெண்களுக்குஇட ஒதுக்கீடு வழங்குவதில் ஆண்கள் அரசியல் நடத்துவது, விதவைப்பெண்கள் காலம் காலமாக பட்ட நெடிய துயரம் இவைபற்றி எல்லாம் பேசிக்கொண்டே இருந்தார். கூர்மையான நகைச்சுவை,ஆழ்ந்த அறிவு,பளிச்சிடும் தெளிவு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக்கொண்டே இருக்க ஊற்றாய்க்கொப்பளிக்கும் இயல்பான ஆர்வம் இவை அவரிடம் தரிசிக்க முடிந்தன..
தன் கணவரின் ஈடில்லா ஒத்துழைப்பு.த்னது படைப்பு சார்ந்த தொடர் பயண அனுபவங்கள். எல்லாம் இடை இடையே பங்கு பெற்றன.

எனது முதல் புதினம் 'மண்ணுக்குள் உயிர்ப்பு' விருத்தாசலம் அரசு பீங்கான் ஆலை, சேஷசாயீ இன்சுலேடர் ஆலை இவை மூடப்பட்டது தொடர்பாக நான் எழுதியது.. அந்த ப்புதினம் 'மண்ணுக்குள் உயிர்ப்பு பற்றி' ராஜம்கிருஷ்ணன் நல்லதொரு விமரிசனமெழுதி அது கணையாழியில் வெளிவந்ததும் எனக்குப்பெருமை.
ராஜம்கிருஷ்ணனின் கரிப்பு மணிகள்- உப்பளத்தொழிலாளி துயர் பேசும் அற்புதமான ஒரு படைப்பு. அதில் அவர் சொல்லும் ஒரு விஷயம் அவர் எந்த நிறம், யார் பக்கம் என்பது அறிவிக்கும்.

'அரைக்கஞ்சி அவள் கருணை
பட்டினி அவள் கருணை
அறியாமை மௌட்டிகம் அவள் கருணை
அடுத்தவனை நம்பி அவன் அமுக்கிட்டு மேலேறுறதும்:நாம ஒருத்தரை ஒருத்தர் அடிச்சிகிட்டு சாவறதும் அவ கருணைதான்'

எந்தப்பகுதித்தொழிலாளர்களையும் தன் படைப்புக்குள் கொணர்ந்த முற்போக்காளர் அவர். என்றும் தமிழ்மொழியில் உழைப்பாளி இலக்கியம் அவர் நினைவு போற்றும். ராஜம்கிருஷ்ணனை நினைவுக்குக்கொண்டு வரும் ஒரு பெண் எழுத்தாளருக்கு இனி இந்த இலக்கிய உலகம் காத்துக்கிடக்கும்.
--------------------------------------------------------------------------------------------
....

Friday, October 17, 2014

munnurai - birammalipi




பிரம்ம லிபி இது என்னுடைய ஏழாவது சிறுகதைத்தொகுப்பு.

வண்டி யோட்டி ஒருவன் தானிய மூட்டைகள் சுமந்த பரரவண்டியை ஓட்டிக்கொண்டே செல்கிறான்.. காளைகள் வண்டியை இழுத்துக்கொண்டு மண்சாலையில் நடக்கின்றன. காளைகளின் கழுத்துப்பட்டை சதங்கை ஒலியும் கொம்பில் தொங்கும் மணி களின் ஒலியும் கூத்து அரங்கொன்றை மனத்திரையில் காட்சிப்படுத்துகின்றன. முன் இரவுப்போது.சாலை நெடுகிலும் அடர்ந்து உயர்ந்த மரங்களின் வரிசை. மலர்ந்து மணம் வீசும் பூங்கொத்துக்ககளை அவை தாங்கி நிற்கின்றன.பறவைகள் இரவுக்கு த்தம் இருப்பிடம் வந்துவிட்டதை க் கூவி க்கூவித்தம் சொந்தங்களுக்கு அறிவிக்கின்றன
ஆகாயத்தில் சிரிக்கும் பொக்கை நிலவோடு தாரகைகள் சூழ இடை இடையே மேகங்கள் நடனமாடுகின்றன.தூரத்தில் ஒரு நீர் நிலை இருப்பதை த்ழுவிச்செல்லும் குளிர் காற்று ச்சுகம் உறுதி செய்கிறது.சாலை ஓரத்தில் நடப்பட்டிருக்கும் குத்து மைல் கற்கள் கடந்து வந்ததும் கடக்க இனி காத்திருப்பதும் எத்தனை தூரம் என்பது பேசுகின்றன.
வண்டியோட்டிக்கு த்தலையில் ஒரு முண்டாசு. கையில் கடிதோச்சி மெல்ல எறியும் ஒரு மூங்கில் கொம்பு.. தன்னை அறியாமலே தன் வாய் எதுவோ ஒரு ராகத்தை நீட்டிப்பாடுகின்றது. வண்டியோட்டியின் ஆழ்மனம் சொல்லொணா நிறைவு ஒன்றை இக்கணம் அசைபோடுகிறது. .
ஒரு சிறுகதை எழுதி முடித்ததும் படைப்பாளி பெறும் மன நெகிழ்வு இது.

பிரம்ம லிபி -இந்த தொகுதிக்கு தலைப்பாகி வந்திருக்கும் சிறுகதை. கபாலி என்னும் என் நண்பனின் மகள் +2 படிக்கும் அருணா தற்கொலை செய்துகொள்கிறாள்.அவளின் அத்தைக்கு தன் தங்கச் சங்கிலியை ஏதோ ஒரு நிகழ்வுக்கு கழுத்தில் அணிந்து செல்லக் கடனாகக்கொடுக்கிறாள். அதனை அந்த அத்தை புருஷன் சர்ராயம் குடிக்க வாங்கிச்சென்று விற்று விடுகிறான். அருணா தன் அப்பாவுக்குத்தெரியாமல் நடந்துவிட்ட இந்த நிகழ்வுக்காக செய்வது அறியாமல் தூக்குப்போட்டு மடிகிறாள்.
அத்தை அருணாவின் இறப்புக்கு வருகிறாள். துக்கத்தில் கலங்கிப்போயிருக்கும் இருக்கும் சகோதரனுக்கு ஆறுதலாக க்கொஞ்ச காலம் தங்கி இருப்பதாக க்கணவனிடம் பொய்சொல்லி விட்டு தன்னால் நடந்துவிட்ட இந்தத் துயரம் தாங்கமாட்டாமல் ஊரைவிட்டு எங்கேயோ சென்று விடுகிறாள்.
ஒரு நாள் இறந்த மகளின் டைரியை தற்செயலாகப்புரடட்டுகிறான் கபாலி. தன் மகள் அருணா தன் இறப்புக்குக்காரணத்தை ஸ்கூல் டைரியில் ப்பதிவு செய்து இருப்பதைப்படிக்கிறான். தன் மனைவியிடம் நடந்த அந்த விஷயம் எப்படிச் சொல்வது. ஆக அடக்க முடியாத சீற்றத்தோடு தன் தங்கையின் வீடு தேடிப்போகிறான்.
அங்கு சென்று தன் தங்கை, தன் அண்ணன் தங்கி வீட்டில் இருப்பதாய்ப்பொய்சொல்லிவிட்டு எங்கோ சென்றுவிட்டதை அக்கணம்தான் கேள்விப்படுகிறான்.எதிரே தன் தங்கையின் கணவன் வழக்கம் போல் குடித்துவிட்டு போதை தலைக்கேறி நிலைதடுமாறி வீடு வந்து சேர்கிறாான். இருப்பிடம் தேடி வந்த மைத்துனனை தன் வசம் இன்னும் பாக்கி இருக்கும் சாராயத்தைக்குடிக்கச்சொல்லிக் குழந்தையாய் க்கெஞ்சுகிறான்.
தன் தங்கை. தன் மகள் தன் தாரம் ,தன்தாய்.எல்லோரையும் தான் ஏமாற்றி விட்டதை நினைத்துக்கபாலி குமுறுகிறான்.குடிகாரக்கணவனைத்தன் தங்கைக்கு அவன் தான் மணம் முடித்துவைத்தவன். அன்று ஏமாந்துபோனான் இந்தக் கபாலி.
காலமாகிப்போனக் கபாலியின் தாய் எப்படி நொந்துபோயிருப்பாளோ. இன்று தன் மகள் நடந்துவிட்ட இந்த எதுவும் தன் தாயுக்குத்தெரியவேண்டாம் என்று எழுதி வைத்துவிட்டு 'அத்தை பாவம்' என்று அவள் டைரிக் குறிப்பை முடித்து இருப்பதுவும் அவனுக்கு மனதில் ரணமாய் நெருடுகின்றது.
இவற்றிர்க்கு எல்லாம் விடை காணமுடியாத கபாலி ' எதுவும் அவன் போட்ட எழுத்துப்படி 'என்று சமாதானம் சொல்லிக்கொள்கிறான்.
தாஸ்தாயெவ்ஸ்கி சொல்லுவார் மனிதன் ஒரு புதிர்.அந்த ப்புதிர் அவிழ்க்கப்படும்வரை இறைவன் இம்மண்ணில் இருக்கவே செய்வார் என்று. மாற்று வழி அறியாது துயரம்தொடர்கின்றவரை மனிதன் இறைவனிடம் சென்றுதான் மண்டியிட்டு நிற்பான் இப்படி இயம்புகிறது மார்க்சியம். ஆனாலும் தத்துவங்கள் என்றும் பசி ஆற்ற மாட்டாதன
. மனித இருப்பும் உழைப்பும் அன்பெனும் விருடசம் தழைக்க ஆதாரமாகும்போது மட்டுமே அமரத்வம் பெருகின்றன. அவ்வழி ப்பயணித்து இறை நிலை என்பது மானிட உன்னதம் என்றும் கொள்ளலாம்
சுழல் என்னும் சிறுகதை மனிதன் காசு என்னும் ஒரு விஷயத்துக்கு பின்னால் ஒரு நாயாய் குழைந்து அனுபவமாவதைப்பேசுகின்றது.பேராசை இல்லை என்று வெற்று வாயால் சொல்லமட்டுமே முடிகிறது.அடி மனத்தில் அந்த ஆசை மண்ணுக்குள் உயிர்ப்புபோல எப்போதும் வாழ்ந்துகொண்டே இருக்கிறது.நல்லவனைப்போல வேடமிட மனிதன் எத்தனை ஆலாய்ப்பறக்கிறான்.தோலை உறிக்க உறிக்க இல்லாதுபோகும் வெங்காயம்போல மனிதனின் வைராக்கியங்கள் நெருக்கடியில் தம் முகம் தொலைத்துவிடுகின்றன. .ஏமாற்றுக்காரர்கள் சின்னத்தனமாய் அயல் மொழி பேசுவதும் பகட்டு வித்தை காட்டுவதும் நெளித்துக்கொண்டு நிற்பதுவும் தொடரமட்டுமே வாழும் இச்சமுதாய அரங்கம் அமைக்கிறது.
சுழல் இக்கதையைத்தன் 'சங்கு' இதழில் வெளியிட்ட எனது பாசமிகு நண்பர் வளவதுரையன் யான் பெற்ற நட்புச்செல்வம்.மாற்றுஅறியா அன்புக்குரியவர். என் நன்றிக்கும்தான்.
'ஆகவே' என்னும் சிறுகதை சுரண்டப்படும் வர்க்கத்திற்கு எதிராக த்தன்னை வரிந்து கொண்ட பாட்டாளி வர்க்கத்தின் கூர்மை எப்படி மழுங்கிப்போகிறது என்பது பேசும். அதிகாரமும் அகங்காரமும் பொதுவுடமை இயக்கத்தை விழுங்கும் ராகுவும் கேதுவும். மனித அன்பை புரிந்துகொள்ளுதல் முதலாளித்துவ சதி என்று பேச ஆரம்பித்தால் போதும் அதிகாரக்கதவுகள் அங்கே திறந்துகொள்ளும். ஆய்வு செய்யப்படாத விஷயங்கள் ஆய்வு கட்டாயம் செய்யப்பட வேண்டிய முடிச்சுக்கள் ஏராளமுண்டு.நேர்மையான ஆய்வாளர்களின் வருகைக்குத்தேவை பொதுவுடமை அரங்கில் அசாத்தியம் நேர்மை என்பதற்கு உடன் இலக்கணம் யார் சொல்வது?.
எழுத்தாளர் சத்யானந்தன் என்றும் என் மரியாதைக்கு உரியவர். அவர் ரசித்துப்படித்த கதை நாய்ப்பிழைப்பு, மனிதர்கள் நாய்களோடு எப்படி வாழ்ந்து பின் வீழ்ந்து போகிறார்கள் என்பது பேசும் சித்திரம். இக்கதை குறித்து சத்யானந்தனின் திண்ணை பின்னூடாக்குறிப்புக்கும் எனது நன்றிகள். திண்ணை இலக்கிய இணைய வார இதழுக்கு என் நன்றிகள் என்றும் போல்.
'காசிக்குத்தன்போனெலென்ன' கதையை ரசித்துப்பாராட்டியவர் என் சொந்த ஊர் மூத்த எழுத்தாளர், சகிருதய்ர், வே.சபாநாயகம். எங்கு போனாலும் நம் நிழல் நம்மோடு என்பது வாசகர்க்குச் சொல்லும் கதை இது.
இப்படியாய் இங்கு இன்னும் பல கதைகள். நானே சொல்லிக்கொண்டு போனால் என்ன ஆவது. வாசகர்கள் நீங்கள் படியுங்கள்
. இத்தொகுப்பை எனது எழுத்தாள நண்பர் எஸ்.ஷங்கர நாராயணனுக்கு ச்சமர்ப்பிக்க என் மனம் விரும்பயது அவரின் வாழ்த்துக்களின்றி'பிரம்ம லிபி' சோபிக்கவும் முடியாது.
என் நண்பர் இத்தொகுப்பு வெளியீட்டுக்கு உறுதுணையாளர் உதயகண்ணனுக்கு என் அன்பு எப்போதும்..


எஸ்ஸார்சி

23 அ இரண்டாவது தெரு
நேதாஜி நகர்
பழைய பெருங்களத்தூர்.சென்னை 63.

9443200455.
... . .

.


.

.