Friday, September 16, 2016

anjalai ammaal




கடலூர் அஞ்சலை அம்மாள்-உங்களுக்குத்தெரியுமா? -எஸ்ஸார்சி


கடலூர் மண்ணின் ஓர் ஒப்பற்ற பெண்மணி இந்திய விடுதலை ப்போராட்ட வீராங்கனை தியாகி அஞ்சலை அம்மாள் 1890ல் பிறந்தார். தாய் நாட்டு விடுதலைப்போரில் பங்கேற்று ஏழு ஆண்டுகள் சிறையில் வாழ்ந்தவர். முப்பத்தோறாம் வயதில் தன் வயிற்றில் குழந்தையோடு கொடுஞ் சிறையில் அடைக்கப்பட்டவர்.
அஞ்சலையின் அம்மாளின் கணவர் முருகப்பா படையாச்சி ஒரு விடுதலைப்போராட்ட வீரர் இத்தேசத்தின் விடுதலைக்காக சிறை சென்ற குடும்பம் அவர்களது. அஞ்சலை அம்மாள் குழந்தையைப் பிரசவிக்க மட்டுமே சிறையினின்று விடுதலை செய்யப்பட்டு . மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.அம்மாக்கண்ணு என்று பெற்றோரால் பெயரிடப்பட்ட அஞ்சலையின் அந்தக்குழந்தையே பின்னாளில் தேசபிதா காந்தி அடிகளால் லீலாவதி என்று பெயர் சூட்டப்பெற்றார்.
அஞ்சலை அம்மாள் தென்னாட்டிலிருந்து விடுதலைப்போரில் ஈடுபட்ட எளிய குடும்பத்து முதல் பெண்மணி.நீலன் சிலை உடைப்புப்போராட்டம்-1927,உப்புக்காய்ச்சும் போராட்டம்-1937,சட்ட மறுப்பு இயக்கம் -1933,வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1942, என தொடர்ந்து அனைத்து போராட்ட இயக்கங்க்ளிலும் மகத்தான பங்கேற்றவர்.
கர்னல் ஜேம்ஸ் நீல் என்பான் வெள்ளையர்களின் துப்பாக்கிப்படையைச்சார்ந்தவன். 1857ல் சிப்பாய்க்கலகம் என்னும் விடுதலைப்போரில் இந்திய்ர்களை க் காட்டுமிராண்டித்தனமாக கொன்று குவித்த மாகிராதகன். அவனுக்கு ஒரு 16 அடி சிலையை அன்றைய பிரிட்டீஷார் சென்னை மவுண்ட் ரோடில் நிறுவியிருந்தனர்.அதனை இடித்து நொறுக்கவே நீல் சிலை உடைப்புப் போராட்டம் நடைபெற்றது.இன்றோ அந்த கொலைபாதகனின் சிலை சென்னை மியூசியப் பழங்குப்பையில் உறங்கக்கிடக்கிறது.
மதுரை மாவட்ட சுதந்திர வரலாறு- என்னும் நூலை எழுதிய விடுதலை போராட்ட வீரர் எஸ்.என்.சோமயாஜுலு அந்த வரலாற்று நூலில் பின் வரும் விஷயத்தை ப்பதிவு செய்கிறார்..
'1923ல் மதுரையில் கள்ளுக்கடை மறியலில் தண்டிக்கப்பட்ட சுமார் 100 தொண்டர்களை கடலூர் கேப்பர் மலை மத்திய சிறைக்குக்கொண்டு வந்தனர்.இதைக்கேள்வியுற்ற கடலூர் விடுதலை வீரர்கள் எஸ்.ஏ தெய்வ நாயக அய்யா,எம்.வி.சுதர்சனம் நாயுடு, அஞ்சலை அம்மாள் முதலியவர்கள் அனைவருக்கும் இரவு உணவு கொண்டு வந்து திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் காத்திருந்து ரயில் வந்ததும் வந்தே மாதரம் கோஷம் இட்டனர். ரயிலில் கொண்டுவரப்பட்ட மதுரைத்தொண்டர்களும் உற்சாகமடைந்து பதில் கோஷமிட்டனர். தியாகிகளைச் சிறைக்கு அழைத்து வந்த சார்ஜண்டும் போலிசாரும் திகைத்தனர். திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் கைதிகள் அனைவரையும் ஒரு பக்கமாகக்கொண்டுபோய் வைத்தனர்.உடனே கேப்பர் மலைக்குக்கொண்டுபோக முயற்சித்தனர்.கடலூர் தேசபக்தர்கள் கொண்டு வந்த உணவை அவர்களுக்குக்கொடுக்க போலிசார் உடன்படவில்லை.சத்தியாக்கிரகவாதிகளும் கடலூர் சொந்தங்கள் கொண்டுவந்த உணவை உட்கொள்ளாமல் கேப்பர் சிறைக்கு வரமுடியாது என இரவு முழுவதும் பட்டினி கிடந்தனர்.
அதன்பின்னர் மறு நாள் அதிகாலை கடலூர் தேசபக்தரும் ஹோட்டல் உரிமையாளருமான வெங்கட்ட ராவ் அனைவருக்கும் சிற்றுண்டி கொண் டு கொடுத்தார். கைதிகளுடன் வந்த போலிசாரும் சாப்பிட்டனர்.எல்லோரும் மகிழ தெய்வ நாயக அய்யா,அஞ்சலையம்மாள்,சுதர்சனம் நாயுடு மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் வீர வாழ்த்து கூறி வழியனுப்பி வைக்க மதுரைத்தொண்டர்கள் கேப்பர் சிறையை நோக்கிச்சென்றனர்.'
1927 ல் சென்னையில் காங்கிரஸ் இயக்கத்தின் 43 வ்து காங்கிரஸ் நடைபெற்றது.முஸ்லீம் லீக்கின் தலைவராக இருந்த டாக்டர்.எம்.ஏ அன்சாரி தலைமை ஏற்றார்.இம்மாநாட்டில் சைமன் கமிஷனை ப்பகிஷ்கரிப்பது என முடிவு செய்யப்பட்டது.பூரண விடுதலையே இந்திய மக்களின் குறிக்கோள் எனத்தீர்மானம் நிறைவேறியது.
சைமன் கமிஷன் பிரிட்டீஷாரால் இந்திய சட்டசபை மறு சீரமைப்புக்காக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது. அப்போது நாடு முழுவதும் சைமன் கமிஷன் எதிர்ப்புப்போராட்டம் நடைபெற்றது. லாகூரில் இப்போராட்டத்தில் பஞ்சாபின் சிங்கம் எனப்போற்றப்பட்ட லாலா லஜபதி ராய் ஈவிரக்கமற்ற வெள்ளையரகளின் குண்டாந்தடியால் அடிபட்டார். உயிர் நீத்தார்.
அதே சமயம் நெல்லை விடுதலை வீரர் சோமயாஜுலு தலைமையில் நீலன் சிலை தகர்ப்பு ப்போாட்டம் சென்னையில் நடைபெற்றதை க்குறிப்பிட வேண்டும். 43 வது காங்கிரஸ் சென்னை மா நாட்டிற்கு கடலூர் பகுதியிலிருந்து பெண்களைத்திரட்டி அணிவகுத்து அழைத்துச்சென்ற வீராங்கனை அஞ்சலை அம்மாள் ஆவார். தென்னாற்காடு மாவட்டம் கிராமங்கள் பலவற்றை த்தன்னகத்தே கொண்டது கிராம மக்களைக்கவர்ந்து ஈர்க்கும் ஆற்றல் பெற்ற பேச்சாளர் அஞ்சலை அம்மாள் என அவர் புகழப்பட்டார்.
கடலூரில் அஞ்சலை அம்மாள் இல்லத்தில் தேசபிதா காந்தி அண்ணலும் ஈ.வெ.ரா பெரியாரும் சந்தித்துப்பேசியுள்ளனர் என்பது குறிப்பிடப்படவேண்டிய ஒரு வரலாற்று நிகழ்வாகும்.
அஞ்சலையின் கணவர் முருகப்பா 1873ல் பிறந்தவர்.1927 விடுதலைப்போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார்.கடலூர், மற்றும் திருச்சி சிறைகளில் பலமுறை அடைக்கப்பட்டவர்.கணவனும் மனைவியும் நாட்டு விடுதலைக்காக சிறையில் அடைக்கப்படுதல் மிகப்பெரிய விஷயமல்லவா.தேச விடுதலைக்குப்போராடிய் அத்தனைத்தலைவர்களுக்குமா இப்படி வாய்த்தது.. கடலூர் அஞ்சலை அம்மாள் குடும்பத்திற்கு த்தான் அப்படி ஒரு கொடுப்பினை.
1952 ஆம் ஆண்டு வரை கடலூர் சட்டமன்றத்தேர்தல்களில் அஞ்சலை அம்மாள் போட்டியிட்டு பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்பதை எண்ணிப்பார்க்க நமது மனம் நெகிழ்ச்சி கொள்கிறது.
அஞ்சலை அம்மையாரின் கணவர் தியாகி முருகப்பா 1971 ஆம் ஆண்டு மறைந்துபோகிறார்..

அஞ்சலை அம்மாள் பெற்றெடுத்த செல்வமகள் பெயர் அம்மாக்கண்ணு.1927 நீலன் சிலை உடைப்புப்போராட்டத்தில் பங்கேற்று தனது ஒன்பது வயதில் சிறைக்குச் சென்றவர். நான்காண்டுகள் சிறைத்தண்டனை பெற்று சென்னை இளம்பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டவர்.மூதறிஞர் ராஜாஜி அம்மாக்கண்ணுவை 'இவரே கடலூர் விடுதலை வீராங்கனை அஞ்சலை அம்மாளின் மகள்' என தேச பிதா மகாதமாவுக்கு அறிமுகம் செய்துவைக்கிறார். அப்போது தேசபிதா காந்திய டிகள் அடைந்த பெருமகிழ்ச்சிக்கு அளவேயில்லை.அம்மாக்கண்ணுவை வார்தாவில் உள்ள தனது ஆசிரமத்துக்கு அழைத்துச்சென்று பல ஆண்டுகள் அங்கே தங்கியிருக்கவும் வைத்தார்.அம்மாக்கண்ணுக்கு லீலாவதி என அண்ணல் காந்தியே பெயர் சூட்டிப் பெருமைபடுத்தியவர்.
தென்னாப்பிரிக்காவில் மகாத்மாவோடு வெள்ளையர்களின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய தமிழத்தின் வீர மகள் தில்லையாடி வள்ளியம்மை. அவரையும் விஞ்சிய தியாகத்தை ச் செய்த பெருமை இந்த கடலூர் திருமகளுக்கு உண்டென்று சொல்லவேண்டும்.கடலூர் மண் பெருமைகொள்ள வரலாற்றில் எத்தனையோ அருஞ்செயல்கள் இங்கே நிகழ் த்தப்பட்டுள்ளன.அத்தனையும் நோக்கக் கடலூர் அஞ்சலை அம்மாள் குடும்பம் செய்த தியாகம் நிகரற்றது.
கடலூரில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் அஞ்சலை அம்மாளுக்கு ஒரு கையில் குழந்தை. மற்றொரு கையில் தாய் நாட்டு விடுதலைக்கொடி. போலிசார் தடி கொண்டு தாக்கியபோது தான் பெற்ற குழந்தையை கீழே விட்டு விட்டு விடுதலைக்கொடியை தூக்கிப்பிடித்த வீர ப்பெண்மணி கடலூர் அஞ்சலை அம்மாள். இது நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் சரித்திர விஷயமாகும்.
வட ஆற்காடு மாவட்டத்தில் ஜமதக்னி என்னும் நாடறிந்த ஒரு விடுதலைப்போராட்ட வீரர். விடுதலை ப்போரில் பல போராட்டங்களைச்சந்தித்துச் சிறைசென்றவர். உலக மக்கலின் பார்வையைப்புரட்டிப்போட்ட பெருந்தோழர் காரல் மார்க்சின் 'மூலதனம்' என்னும் ஒப்பற்ற அரிய நூலைத்தமிழில் மொழிபெயர்த்த சீரிய பணிக்குச் சொந்தக்காரர். மார்க்சீயம் பயின்ற அந்தச் சிந்தனையாளர் லீலாவதியை தம் மனைவியாகத்திருமணம் செய்துகொண்டார்.தனது தாயையும் தந்தையையும் லீலாவதி சிறையில் சென்று பார்த்தபோது போராட்ட் வீரர் ஜமதக்னியையும் அவர் சந்திக்க நல் வாய்ப்பு கிடைத்தது. அது காலத்தால் காதல் என மலர்ந்து அவர்களின் திருமணத்தில் நிறைவு பெற்றது.இந்திய நாட்டின் அடிமை விலங்கொடித்து பரிபூரண விடுதலை கிட்டிய பின்னர் மட்டுமே திருமணம் குடும்ப வாழ்க்கை என்கிற விரதம் பூண்டு அவர்களிருவரும் அவ்விதமே செயல்பட்டனர் செய்தும் காட்டினர். புரட்சியாளர்களான மணமக்கள்.தாலிக்குப்பதிலாக அரிவாள் சுத்தியல் சின்னத்தை தங்கத்தகட்டில் பொறித்து அதனையே தாலியென ஏற்றுக்கொன்டனர்.. அன்று அவர்களின் திருமணச்செலவு என்பது வெறும் மூன்று ரூபாய் மட்டுமே.
ஒரே குடும்பத்தைச்சேர்ந்த நால்வரும் கொடுஞ்சிறையில் வாழ்ந்தனர். தாய் நாட்டு விடுதலை ஒன்றையே லட்சியம் எனக்கொண்டனர். இப்படி போராட்டவாழ்க்கையை அமைத்துக்கொண்ட எளிய மனிதர்களை, சுய நலம் கிஞ்சித்தும் அற்ற மற்றுமொரு ஒரு குடும்பத்தை, இந்நாட்டின் வேறு எங்கேனும் யாராலும் காட்டிவிடத்தான் இயலுமா?.
தமிழக விடுதலை வீரர்கள் இந்திய விடுதலை வரலாற்றில் செய்த அளப்பறிய தியாகங்கள் எண்ணற்றவை.வட இந்தியர்கள் எழுதிய இந்திய விடுதலை வரலாற்றில் அவை கண்டுகொள்ளாமல் விடப்பட்டன. .
நாமும் இங்கு அப்படித்தானே இருக்கிறோம். கடலூரில் தியாகி அஞ்சலை அம்மாளுக்கு நினைவுச்சின்னமாக ஏதேனும் ஒரு சிறிய சந்துக்காவது பெயர் வைத்து அம்மையார் நினைவைப் போற்றி இருக்கிறோமா?
புகழ்ந்தவைப்போற்றி ச்செயல் வெண்டும் என்னும் வள்ளுவரின் கட்டளை நமக்கும் உண்டல்லவா?
-------------------------------------------------------------------

.

vellam 2



சென்னையில் வெள்ளம்....2



அலுவலகத்திலிருந்து என் பெரிய பையன் நேராக  தியாகராய நகர் ராமேஸ்வரம் சாலைக்கு வந்துசேர்ந்தான்.தொப்பரையாக நனனைந்துதான் வீடு வந்தான்.சின்ன அண்ணன் வீடு தரை முழுவதும் ஈரம். தூக்கம் வரத்தான் செய்கிறது.தூங்கினால்தான் மனித மூளை திரும்பவும் தன் பாட்டுக்கு வேலை செய்ய இயலும்.ஒரே அரையில் அத்தனை பேரும் படுத்துக்கொண்டோம். சாக்கு பழம்புடவை கோரைப்பாய் எல்லாம்தான்.
காலையிலும் தூரல் விட்டால்தானே
.பெரியபையனும் அவன் மனைவியும்   ஓ எம் ஆர் சாலைக்குப்போய் அவரவர்கள் தம் பணியில் சேர்ந்துகொண்டார்கள்.நானும் என் மனைவியும் பேத்தியோடு சின்ன அண்ணன் வீட்டில் .வக்கீலுக்குப்படிக்கும் சின்ன அண்ணன் மகள் எங்களுக்குகூடயிருந்து  உதவிக்கொண்டிருந்தாள்.அண்ணிதான் எப்போதும்போல் சமையல்.அண்ணன் அ ங்கும் இங்கும் சென்று திரும்பி வீட்டிற்கு ஏதேனும் வாங்கிவருவதிலேயே குறியாக இருந்தார்
                                                             .மாலை நெல்லை எக்ஸ்பிரசில் பையனும் மருமகளும் பேத்தியும் சேரன் மாதேவிக்குப்புறப்பட்டார்கள். தமிழ் நாட்டு  அரசியலில் ஒரு பெரும்  திருப்பம் கொணரக் காரணமான  வவேசு அய்யரின்  ஆஸ்ரமம் இருந்த ஊர்தான்.மருமகளின் அந்த  ஊருக்குப்   போய்விட்டு திரும்பி வந்தால் மழை நின்றுவிடலாம் என்கிற ஒரு சின்ன   நம்பிக்கை.நான்தான் மாம்பலம் ஸ்டேஷனில் ரயில் ஏற்றிவிட்டேன்.நெல்லை துரித வண்டி மட்டும் என்ன மாம்பலத்தில்  நிற்குமா என்ன அவர்கள் எழும்பூருக்குச்சென்றுதான் ரயில் பிடித்தார்கள்
.அப்போது நெல்லையில் மழை பெய்துவிட்டிருந்தது.தாமிரபரணி மீதிருக்கும் சுலோசனா  முதலியார்   பாலத்தை ஆற்றுத் தண்ணீர் தொட்டுவிட்டால் அவ்வளவுதான் மழை.இனி பெய்யாது. இந்த வருடத்திற்கு இவ்வளவுதான் மழைகொள்முதல்    இதுவிஷயம்  என் சேரன்மகாதேவி  சம்பந்தி மாமா என்னிடம் போனில் சொன்னது உங்களுக்கும் தெரிந்து இருக்கட்டுமே என்று சொல்லிவைத்தேன்.
 நானும் என் மனைவியோடு மாலை நேரத்தில் ரெங்க நாதன் தெரு உசுமான் சாலை பனகல் பார்க் என சுற்றி வந்தேன்.பெண்கள் தியாகராய  நகர் வந்து விட்டு சும்மா இருப்பார்களா என்ன எதாவது ஒரு கடையில் ஏறி இறங்கி கையில் உள்ள காசினைக்கொடுத்து ஒரு பையை நிறைத்து தூக்கிக்கொண்டு வந்தால்தான் மனமடங்குகிறது. அவர்கள் மீது எதுவும் தவறு சொல்லிவிடாதீர்கள்.  தி நகர் மண் ராசிதான் இப்ப டிக்குப்  பெண்களை ஆட்டிப்படைக்கிறது.விஷயம் தெரிந்தவர்கள்  இதனை என்னிடம் சொன்னார்கள்.
மழை எங்கே விட்டது.பெய்து கொண்டேதான் இருந்தது.தொடர்ந்து பெய்யும் என ச்சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.கடல் மட்டும் என்னதான் செய்யும் எவ்வளவு தண்ணீரை உள்வாங்கும், 'அப்பா ஆளை விடுங்கள்' என அதுவும் புலம்பத்தான் தொடங்கியது.
நெல்லைசேரன்மாதேவிக்குப்போன மகன் அவன் மனைவி பேத்தியோடு                           சென்னைக்கு த்  திரும்பி வந்தனர்.மழை சற்று விட்ட மாதிரி தெரிந்தது. ஆக நாங்கள் எல்லோருமாக பழைய பெருங்களத்தூருக்குத்திரும்பிவிட தீர்மானித்தோம்.ஒரு மாலை நேரம் பார்த்து வாடகைக்கார் அமர்த்திக்கொண்டு தி. நகரிலிருந்து புறப்பட்டோம்.தாம்பரம் வந்து முடிச்சூர் சாலையில் திரும்பும் போது மனம் கொஞ்சம் கனத்தது.கிருஷ்ணா நகர் தாண்டும்போது சாலையில் தண்ணீர் காருக்குள் நுழைந்துவிடவில்லை.கார் இந்தப்பக்கத்திற்கு புதியது என்பதால் டிரைவர் கடக் புடக் என்று ஏதோ வண்டியை ஓட்டிக்கொண்டு பழைய பெருங்களத்தூர் வந்து பார்வதி நகர் தாண்டினார்  ஸ்ரீராம் நகர் வரை வந்து இனி வண்டி போகாது என்றார்.நாங்கள் அனைவரும் இறங்கி நடக்க ஆரம்பித்தோம்.நேதாஜி நகரில் தெருவெல்லாம் மழைத்  தண்ணீர்.முழங்கால் வரை.    தண்ணீர் வரவு . அவ்வளவுதான் மழை இனி வராது நாங்களே ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டோம்.நாங்கள் வசிக்கும் தெருவில் முதல் வீட்டு தெலுங்கு  மாமி ' மழை இனி ஒன்றும் வராது.அப்படியே வந்தாலும் நாங்க எங்க வீட்டு மொட்டைமாடியில இருப்போம்.' என்றார்.  அவர்கள் வீட்டு மொட்டைமாடியில் சிறிய அறை கூட இருந்தது. நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம்.
'நம்ம வீடு நம்ம வீடுதான்' என் மனைவி' சொன்னாள். நாங்கள்' 'ஆமாம் ஆமாம்' என்று பதில் சொன்னோம்.ஆனால் எல்லோருக்கும் அடி வயிற்றில் புளிகரைந்து கொண்டேதான் இருந்தது.மழை தூர ஆரம்பித்தது. காற்று எதுவும் வீசவில்லை. மின்னல் இல்லை.இடி சப்தம் எதுவும் இல்லை.இரவு முழுவதும் ஊமை மழை. ஊமைவெயில் இல்லையாஅப்படித்தான்.
நாங்கள் பால்க்காரன் வந்துவிட்டனா என எட்டிப்பார்த்தோம்.கேட்டில் தொங்கிக்கொண்டிருந்த பால் பாக்கெட் பை கனத்து தொங்கிக்கொண்டிருந்தது.நான் போய் பால் பாக்கெட்டுகளை எடுத்து வந்தேன்.மோர்   இங்கு   கடையில்கிடைக்க வில்லை நீல்கிரிஸ் கடைக்குப்போனால்  கிடைக்கலாம்.  கோதாஸ் காபித்தூள் வாங்கியது இன்னும் தீராமல் இருந்தது.காபி குடித்தாயிற்று.சமையலுக்கு என்ன இருக்கிறது என ஃபிரிட்ஜை திறந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.
                                                  தெருவில் மைக் வைத்து என்னவோ அலறி யபடி செய்தி சொன்னார்கள்.
'செம்பரம்பாக்கம் ஏரி தண்ணி தொறந்தாச்சி.அவுங்க அவுங்க கையில் கனக்குற சாமானு ங்க எதுவும் எடுத்துக்காம இங்கிருந்து சட்டுனு கரையேறிப்போயிடணும். பேசக்கூட உங்களுக்கு இனி நேரம் இல்லை. புறப்படுங்க புறப்படுங்க' இது மட்டும்தான் சொன்னார்கள். இவ்வறிவிப்பு  எல்லா இடங்களிலும் நடந்திருக்குமா அநேகமாக வாய்ப்பில்லை.
               ஏடிம் கார்டு வீட்டில் இருந்த தங்க நகைகள் எடுத்துக்கொண்டு வீட்டை ப்பூட்டிக்கொண்டு தெருவுக்கு வந்திவிட்டோம்.
மழை தூரிக்கொண்டே இருந்தது.தெருவில் முட்டிக்கால் வரைக்கும் தண்ணீர். வீட்டை பூட்டிக்கொண்டு பல குடும்பங்கள் சென்றே விட்டதைக்காணமுடிந்தது.ஓரிருவர் வீட்டைபூட்டிக்கொண்டு புறப்படுவதா வேண்டாமா என்ற கலக்கத்தில் இருந்தனர்.  மனைவி ,மருமகள் பேத்தி என் பையன் என நாங்கள் தண்ணீரில் நடந்துகொண்டு இருந்தோம்.வானம் மேகத்தால் இருட்டிக்கிடந்தது.வழியில் பள்ளங்கள் சிறு மடுவு எல்லாம் இருந்தது.தண்ணீர் இப்போது தொடைவரைக்கும் வந்துவிட்டது.
'தண்ணீர் ஏறுது ஏறுது'
சொன்ன மனைவிக்கு
 'ஒண்ணும் பயமில்ல வா' என்றேன். என் பக்கத்து வீட்டுக்காரர் பரணி  தன் டூ வீலரை நான்கு தெருக்கள் முன்பாக ஒரு வேப்ப மரத்தடியில் ஒரு ஓரமாக நிறுத்திவைத்துக்கொண்டிருந்தார்.
'நம்ம ரெண்டு வண்டியுமே வீட்டு வாசல்ல நிறுத்தி வச்சிருக்கம்'
'இப்ப அது பேசி என்ன ஆவப்போவுது' என் பையன் எனக்குப்   பதில் சொன்னான்.
                                                  என் மனைவிக்கு புடவை முழுவதும் நனைந்து விட்டதால் திண்டாடி திண்டாடி நடந்தாள்.எப்போதும் ஒரு முட்டி சரியாக இயங்காததால் அவளால் கீழே தரையில் உட்காருவது என்பதெல்லாம் சிரம விஷயம் ஆயிற்று. எத்தனைக்களிம்புகள் மருந்துக்கடையில் விற்கிறதோ அவை அத்தனையும் வாங்கிப்போட்டாயிற்று. எதுவும் ஆகவில்லை. வலி வலிதான். அசவுகரியம்  அசவுகரியம்தான்  அதில் ஒன்றும் மாற்றம் வந்துவிடவில்லை.எலும்பு டாக்டர்கள் நரம்பு டாக்டர்கள் எத்தனயோ பேர். எல்லாரும் பார்த்து முடிந்தது. காலில் முட்டி மாற்று அறுவை செய்யலாம் என்கிறார்கள் சிலர்.என் மனவி இன்னுமதற்குச்சரி என்று சொல்லவில்லை.சொன்னால் பார்க்கலாம் என்று காலம் ஓடிக்கொண்டிருந்தது.
என் பக்கத்து வீட்டு பரணி  தன் டூவீலரிடம் நின்றுகொண்டிருந்தார்.'இன்னும் மழை வருமா'என்று ஆகாயம் பார்த்துக்கொண்டிருந்தார்.
'என் வண்டியில உக்காருங்க நா பஸ் நிறுத்தத்தில் கொண்டுபோ விட்டுடறன்' என் மனைவியை தன் டூவீலரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.
'நீங்க காலிபண்ணிட்டு புறப்படலயா'
'அதான் யாரு வீட்டுக்கு போவுலாம்னு யோசனை.தம்பி வீடா இல்லை மச்சான் வீட்டுக்குப்போலாமான்னு' எனக்கு பதில் சொன்னார்.
                                                              டூவீலர் எங்களுக்கு முன்பாக போய்க்கொண்டிருந்தது. நாங்கள் ஆளுக்கு ஒரு பை வைத்திருந்தோம்.எல்லாம் கனக்கத்தான் செய்தது.என் பேத்திக்கு இன்னும் இரண்டு வயது ஆகவில்லை. நடப்பவைகள் எல்லாமே அவளுக்குப்  புதிய விஷயங்கள்.எங்களுக்கும் கூட இப்படித்தான்.
                                 2005ல் சுனாமி  வந்தபோது நாங்கள் மஞ்சகுப்பம்  டெலிபோன் குவார்ட்டர்ஸில் குடியிருந்தோம்.நானும் என் சின்ன மகனும் சாப்பாட்டு அரிசி வாங்கத்தான் மஞ்சகுப்பம் மார்கெட் அருகேயுள்ள  முருகன் செட்டியார் மளிகைக் கடை வாயிலில் நின்றுகொண்டிருந்தோம்.
குய்யோ முறையோ ' என்று அலறி அடித்துக்கொண்டு மக்கள்கூட்டம்கூட்டமாக  உப்பல வாடி பகுதியிலிருந்து மேற்கே தலைதெறிக்க ஓடி வந்துகொண்டிருந்தார்கள்.'கடலு பொங்கி வருது கடலு பொங்கி வருது' என்று கூவிக்கொண்டே ஓடினார்கள்.மக்கள் சாரைசாரையாக கடலுக்கு எதிர்த்திசையில் ஓடிக்கொண்டேயிருந்தனர்.நெல்லிக்குப்பம் செல்லும் சாலையில் மனிதர்கள் நடக்கக்கூட இடம் இல்லை.நாங்களும் அங்குக்  கூட்டத்தோடு கூடமாக ஓடியவர்களே .அப்படி ஓடினோம் என்றாலும் ஏடிஎம் கார்டை வீட்டில் மறந்து வைத்துவிட்டது என் மனைவிக்கு நினைவு வர  -இது  விஷயம் அவர்களுக்கு மட்டும்தானே  வரும்-  மஞ்சக்குப்பம் வீடு நோக்கி த்திரும்பவும் வேகு வேகு என்று நடக்க ஆரம்பித்தோம். அது  எல்லாம் எப்பவோ முடிந்துபோன கதை.இப்போது ஏனோ  .நினைவுக்குவருகிறதே.
                  என் மனைவியை பேருந்து நிறுத்தத்தில் விட்டுவிட்டு பக்கத்து வீட்டுக்காரர் பரணி  திரும்பிவிட்டார்.
'தாம்பரத்துக்கு பஸ் எதுவும் கிடையாது.ஆட்டோவும் போவாது. வழியில கிருஷ்ணா நகருல தண்ணீ. நீங்க புது பெருங்களத்தூருக்குப்போயி எலக்ட்ரிக் ரயில கியில புடிச்சாதான் உண்டு'
'நாங்க எதுவோ பண்ணிகரம். நீங்க மொதல்ல வீட்டை விட்டுட்டு கிளம்புங்க' நான் சொல்லிக்கொண்டேன்.
'எனக்கு அவ அம்மா வீட்டுக்கு போவ இஷ்டமில்ல.அவளுக்கு என் தம்பி வீட்டுக்கு வர பிரியமில்ல. என்ன செய்ய '
'இங்க நாலு நாளு அங்க நாலு நாளு இருக்கறது'
நான் சமாதானம் சொன்னேன்.இது என்ன பெரிய கண்டுபிடிப்பா அவர்களுக்குத்தெரியாததா நானே சொல்லிக்கொண்டேன். பரணி  வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.
'உங்க வண்டிய ரெண்டையும் தண்ணில வுட்டுட்டு போறீங்க' சொல்லிய அவர் விடை பெற்றுக்கொண்டார்
.எனக்குத்தெரிந்த ஆட்டோக்காரன் ராஜ்ஜா வுக்குப்போன் போட்டேன்.'என்னா சாமி எங்க போவுணும்' என்றான்.
'அதான் புது பெருங்களத்தூர் ரயிலடிக்கு ப்போவுணும்'
'அங்க மட்டும் ஒண்ணு ரெண்டு ஆட்டோ போவுது. நா வர்ரன்'
நாங்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தோம். வானம் உன்னை விட்டேனா பார் என்கிறபடிக்கு மேகங்களைத்  தன் மேலே திணித்துக்கொண்டிருந்தது. ஆட்டோக்காரன் ராஜ்ஜா  வந்தான். நாங்கள் நால்வரும் ஆட்டோவில்  ஏறினோம். பேத்தியைக்கூட்டினால் ஐந்துபேர்.மூன்று பேர் பின்னால். நான் பேத்தியைக்கையில் வைத்திருந்தேன்.என் பையன் ஆட்டோக்காரன் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.  விட்டிருந்த மழை மீண்டும்  ஆரம்பித்தது.
'நானு சுத்திகிட்டு தாம்பரம் பஸ் ஸ்டேண்டு போவுறேன். நீங்க எதுக்கு புது பெருங்களத்துருக்கு போவுணும்'
'அதுக்கு காசு ஜாஸ்தி கேப்பிங்கல்ல' என்றாள் என் மனைவி.
'நீங்க கொடுக்குறத வாங்கிக்குவன். இண்ணைக்கு நேத்தி பழக்கமா. மழை பிச்சி கிணு வொதறும்போல'
ஆட்டோக்காரன் பதில் சொன்னான்.தாம்பரம் பஸ் ஸ்டேண்டைத்தான்  சானடோரியத்தில் கட்டியிருக்கிறார்கள்.மேற்கு தாம்பரம் அம்பேத்கர் சிலைக்கு நேராக எல்லா பேருந்துகளும் நின்று செல்கின்றன.ஒன்றன் பின் ஒன்றாகத்தான் நின்றுகொண்டிருக்கும் அவை.
மேற்கு தாம்பரம் இறங்கி நாங்கள் அனைவரும் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்திற்குச்சென்றாக வேண்டும். ஆகாயம் பார்த்தேன் .அடர்ந்த மேகங்கள் திணித்துக்கொண்டு நின்றன. தேசிய சாலை 45 ஐ கடக்க சிக்னலில்பலர்  நின்றார்கள்.சிலர் சிக்னல் ஒன்று இருப்பதாகவே எண் ணவில்லை. தோன்றியது செய்தனர். பாதாசாரிகள் நடக்கலாம் என்கிற விதமாக பச்சை வண்ண மனிதன் சிக்னல் கம்பத்தில் ஒளிர்ந்தது. அவரவர்கள் சாலையைக்கடந்து கிழக்குப்பக்கம் போனார்கள். இது எப்படி வேலை செய்கிறது.யோசித்தேன். 'அது தப்புத்தப்பா வேலசெய்யுது' என் பையன் சொன்னான்.ஏனோ அப்படிச்சொன்னான்.எப்படித்தப்பு கேட்கும் நேரமா இது.
                           அரசுப்  பேருந்து  நிறுத்த இடத்தில் சிறிது நேரம் நின்று செல்லலாம் என முடிவு செய்தேன் . மழை ஜிவ்வென்று தொடங்கிற்று.அரசு பேருந்து டிக்கட் கவுன்ட்டர்   இரும்புத் தகட்டுக்கூரையின் கீழ் நிற்க  நான்  தலையை உள்ளே நுழைத்துக்கொண்டேன். அந்த கூரைக்குள் முன்னமேயே நின்றுகொண்டிருந்த ஒரு இளைஞர் 'இங்கென்னா உள்ள வரீங்க நாங்க பஸ்சுக்கு போறவங்க மட்டும்தான் இங்க நிக்குலாம் எட்ட நவுறுங்க' என்று கத்தினார் .மழைக்கு  ஒதுங்கியது பொறுக்கமாட்டாத அந்த இளைஞரை  வருங்காலத்  தலைமுறையை  என்ன சொல்ல இருக்கிறது. ஆக  மழையில் நனைந்துகொண்டே நின்று இருந்தேன்.
 மனைவி மகன் மருமகள் பேத்தி என அந்த நால்வரும் மேற்குத்தாம்பரம் ரயில் நிலயத்திற்கு நடக்க ஆரம்பித்தார்கள். நான் பின் தொடர்ந்தேன்.சாலை எங்கும் மக்கள் வெள்ளமாக இருந்தது.எல்லோருக்கும் எங்கேயாவது சென்றுவிடவேண்டும்.சென்னை போதுமப்பா என்கிறபடிக்கு ஆகியிருக்கலாம் என்று நினைத்தேன்
.ரயில் நிலைய டிக்கட் கவுன்டர்களில் மக்கள் மக்கள் நீண்ட வரிசைக்கு நின்றார்கள்.ஒரு இடம் பார்த்து எலோரையும் இருக்கச்சொல்லிவிட்டு டிக்கட் எடுக்க வரிசையில் நின்றேன்.மக்கள் அனேகமாக நனைந்துதான் இருந்தனர்.யார் முகத்திலும் ஒரு ஜீவனைக்காண முடியவில்லை.அச்சம் அவரவர்கள் மென்னியைப்பிடித்து உலுக்கிக்கொண்டிருக்கவேண்டும் என்கிறபடி  அனுபவமானது.
'மாம்பலம் நாலு' கவுண்டரில் சொல்லி டிக்கட் கேட்டேன்.
'டிக்கட் தர்ரம் வண்டி எப்ப கெளம்பும்னு சொல்ல முடியாது' டிக்கட் தருபவர் எச்சரிக்கை செய்தார்.டிக்கட் ஒன்று ஐந்து ரூபாய்தானே மழையில் நனையாமல் எங்கேயாவது ஒதுங்கினால் போதும் என்று  மனம் சொல்லிக்கொண்டது.எல்லா ரயில் நிலையங்களும் கொஞ்சம் மேடான பகுதியிலேயே  அறிவோடு   கட்டியிருக்கிறார்கள்..வெள்ளைக்காரர்களுக்கு நன்றி சொல்லத்தான்வேண்டும் நாம்.டிக்கட்டை வாங்கிக்கொண்டு எல்லோரையும் கூட்டிக்கொண்டு பிளாட்பாரம் நோக்கி நடந்தேன் . பிளாட்பாரத்தில் நிறகக்கூட இடம் இல்லை.குடை வைத்திருந்தோர்,ரெயின் கோட்டுக்காரர்கள்,பாலிதீன் பையை அவசரத்துக்கு த்தலையில் மாட்டிக்கொண்டவர்கள் என ரகங்கள் பல இருந்தன.பாதிக்குமேல் மழையில் நனைந்தவர்கள் பிளாட்பாரம் எங்கும் ஒரே ஈரம்.எங்கும் ஈரம்.எந்த ரயிலும் புறப்படுகிற மாதிரியே தெரியவில்லை.மழை அது தன் விருப்பத்துக்கு கொட்டிக்கொண்டே இருந்தது.யார் இவ்வளவு அடர்த்தியாய் மழையை பார்த்து இருக்கிறார்கள்.என்னசெய்யப்போகிறோம் என்கிற கவலை எல்லார் முகத்திலும் கொட்டையாய்   எழுதிக்கொண்டு தொங்கியது.தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்கக்கூட இடம் கிடைக்குமா என்கிற கவலை த்   தொண்டையை அடைக்கத்தொடங்கியது
.ஒரு மின்சார ரயில் உடனே தாம்பரத்திலிருந்து புறப்பட்டுக் கடற்கரைக்குச்செல்லும் என்று மக்கள் பேசிக்கொண்டார்கள். அவர்கள் பேசிக்கொண்ட படியே ஒரு ரயில் டாண் என்று வந்து நின்றது.மக்கள் அதனுள்ளாகப்புக முண்டி அடித்துக்கொண்டார்கள். உயிரே போனாலும் அது அந்த   ரயில் பெட்டி உள்ளே போகட்டும் என்ற முடிவோடு மக்கள் ஏறினார்கள்.  பயந்து போனேன். மனைவிக்கு க்கூட்டத்தைக்கண்டால் எப்போதும் அச்சம்.ஏ ன்  அவளுக்கு   அச்சம்.
 இப்போதைக்கு அந்த க்கதை  விஸ்தாரமாய்ச் சொல்கிறமாதிரி இல்லை.சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். தமிழ்ச் சமூகத்தில் ஒரு இனத்தவருக்கு த்தனி ஒதுக்கீடு வேண்டும் என்கிற போராட்டம் அப்போது  நடந்து கொண்டிருந்தது.கடலூர் மாவட்டத்து  விருத்தாசலம் அருகே  நானும் என் மனைவியும் ஒரு பேருந்தில்  ஊர்  திரும்பிக்கொண்டிருந்தோம்.சாலை  மறியல் போராட்டம் நடந்துகொண்டிருந்தது.ஆயிரக்கணக்கில் மக்கள் சாலையை மறித்துக்கொண்டுநின்றார்கள் கல் வீச்சு ஆரம்பித்தது. நெய்வேலி ஊத்தங்கால்  அருகேதான்  இந்த நிகழ்வு. எங்களுடன் கைக்  குழந்தையைத் தூ க்கிகொண்டு போயிருந்தோம்.என் மனைவி  குழந்தையை த்தன் மடியில்போட்டுக்கொண்டு  தன்  முதுகால்   ஜல்லிக்கற்களின்  தாக்குதலை  எதிர்கொண்டாள்.தலையில்  ஆறு தையல் போட்டு அதோடு   ஒருமாதம் படுக்கையில் கிடந்தாள்.குழந்தைக்கு ஒன்றும்  ஆகவில்லை. அதனை  எங்கே  அவள்  மறப்பது.
                                                     பெண்கள் பெட்டி, முதல்வகுப்பு எதுவாக இருந்தால் என்ன ரயில் கடற்கரை செல்கிறதா அது போதும் செக்கிங்க் கிக்கிங் எல்லாம் யார் சட்டை செய்தார்கள்.
'இந்த ரயில்ல ஏறி நம்மால போக முடியாது. நாம செத்தே போயிடுவோம் கொழந்த வேற இருக்கு'  மனைவியும்  பையனு ம்  திகைத்துப்போய் நின்றிருந்தார்கள் .ரயில்புறப்பட்டது.ரயிலுக்கு வெளியே தொங்கியவர்கள் எண்ணிக்கை உள்ளே இருந்தவர்களுக்கு ச்சமமாகவே இருந்திருக்கும். இனி ரயில் வருமா நாம் அதனில் ஏறிப்போக முடியுமா என்று பயம் வந்தது.அந்த நேரம் பார்த்து திருச்செந்தூர் துரித வண்டி உருமிக்கொண்டே  ஐந்தாவது  பிளா ட்பாரத்தில் வந்து நின்றது. பிளாட்பாரத்தில் நின்றிருந்தோர் அதற்குள்ளாகவும்  முண்டியடித்து ஏறி நிற்க ஆரம்பித்தனர்.மழை அது தன் போக்கிற்குப்பெய்துகொண்டே இருந்தது.இப்படியும் கூட ஒரு  மழை பெய்யுமா என்ன யார் கண்டார்கள்.பெய்கின்ற மழையில் தாம்பரம் ஊரே மூழ்கிவிடுமோ  அச்சமாக இருந்தது.
நான் என் மனைவியின் கையைப்பிடித்துகொண்டு திருச்செந்தூர் வண்டியை  நோக்கி வேக வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.என் மகனும் மருமகளும் உடன் வந்தார்கள்.பேத்தி நடப்பது எல்லாவற்றையும் கவனமாகப்பார்த்துக்கொண்டே வந்தாள்.' நாம் லோகல் வண்டிக்குத்தானே டிக்கட் வாங்கினோம்.இந்த துரித வண்டியில் ஏறிப்போகலாமா கூடாதா' என்கிற கேள்வி மனதிற்குள் எழுந்தது.பையனிடம் லேசாக விசாரித்தேன்.'எதாவது ஆகட்டும்.மொதல்ல இங்கிருந்து போயிடணும்' அவன் எனக்குப்பதில் சொன்னான்.என் மனைவிக்கோ மருமகளுக்கோ இது பற்றி எல்லாம்  கவலை இருப்பதாகவே தெரியவில்லை.ஒரு ரிசர்வேஷன் பெட்டியில் நுழைய ப்படியில் காலை எடுத்து  வைத்தேன்


.'இது ரிசர்வேஷன் பெட்டி' 'இங்க யாரும் ஏறக்கூடாது' ஒரு முதியவர் கத்தஆரம்பித்தார்.






பெட்டிக்குள்ளிருந்து வாயிற்கதவு வரை ஓடிவந்து வழி மறித்தார்..

Wednesday, July 6, 2016

COM.GJ




தோழமைச்செல்வம் கோவி.ஜெயராமன் -எஸ்ஸார்சி

தொழிற்சங்க இயக்கம் என்றால் அது கடலூர் மாவட்டம். இன்றும் என்றும் தமிழ் மாநில தொலைத்தொடர்பு ஊழியர்களின் தொழிற்சங்க இயக்கத்தில் பிரதானமாக த்தன்பங்கை ஆற்றி ப்பெருமைகொள்வது கடலூர்.
தோழர் சிரில் என்னும் செஞ்சுடர் வாழ்ந்து வழிகாட்டிய தொழிற்சங்க இயக்கத்தை தன் ஆதாரச் சுருதியாகக்கொண்டது.
கோவி.ஜெயராமன் என்னும் சிறந்த கவிஞர் இங்குதான் கூர்மைமிகு தொழிற்சங்க இயக்கத்தில், தோழர் சிரிலின் குருகுலத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். சிரில் ஆழ்ந்த தமிழ்ப்பற்றாளர், சிறந்த சிறுகதையாளர் நல்ல கவிஞ்ர் மனித நேயம் ஊறிய மார்க்சீயர்.
கோவி.ஜெயராமன் பண்ருட்டிக்காரர்.தொழிற்சங்கப்பணிக்காக கடலூர் வந்தவர். சீர்மிகு கவிஞர் சிறந்த கட்டுரையாளர்,நாத்திறம் கொண்ட மேடைப்பேச்ச்சுக்கு ச்சொந்தக்காரர்.வடலூர் வள்ளல் இராமலிங்கரின் நெறிக்கு உறவாளர்..பெரு நெறி பிடித்து ஒழுகவேண்டும் என்பது கருணை வள்ளலின் அன்புக கட்டளை. ஆகவேதான் பொதுவுடமை என்னும் செந்நெறி தோழர்கோவி.ஜெயராமனை சிக்கெனப்பிடித்தும் இருக்கலாம்.

கடலூர் மாவட்ட தமிழ் நாடு கலை இலக்கியப்பெருமன்றம் ஜெயராமனின் முயற்சியால் மீண்டும் புனரமைக்கப்பட்டது. கவிஞர்கள் க.பொ. இளம்வழுதி, வளவதுரையன், விழுப்புரம் பழமலய் என இலக்கியச்சான்றோர்கள் மன்றத்துக்கு ப்பெரு ஆதரவு தந்தார்கள். பெருமன்றம் ஒரு கவிதை அரங்கை நடத்தியது.சாகித்ய அகாடெமி விருது பெற்ற ஞானக்கூத்தன் கவியரங்கத்தலைமை.கடலூர் நகர மற்றும் சுற்றுப்புற கவிஞ்ர்கள் பா.சத்தியமோகன் உள்லிட்ட கவிஞர்கள் ஐம்பது பேருக்குமேல் கலந்துகொண்டனர்.கோவி.ஜெயராமனின் 'நண்டு' கவிதை மிகச்சிறந்த கவிதையென ஞானக்கூத்தன் கவிதையரங்கில் பாராட்டினார்.அனைத்துக்கவிதைகளையும் ஒரு தொகுப்பாக்கி' கவிதை மாலை' என பெருமன்றம் பின்னர் அதனை வெளியிட்டது.
'நண்டு' கவிதை எழுதிய ஜெயராமன் இப்படிப்பேசுவார்.
பசி வயிற்றுக்கு
பயிர்களை நறுக்கினால் தப்பாம்......
வரப்புக்களைத்துளைத்து
இல்லாதவன் பிரதேசத்தில்
ஈரம் ஊட்டினால் தவறா?
நண்டு எழுப்பும் வினாவோடு ஆழ்ந்த பொருள் சுமக்கும் வரிகள் இக்கவிதைக்கு வலுசேர்ப்பதைக்காணமுடியும்.
ஜீவா நூற்றாண்டு நிறைவு விழாவினை கடலூரில் வெகு சிறப்பாகக்கொண்டாடியது இலக்கியப்பெருமன்றம்.ஜூலை 8 ,2007 ல் நடை பெற்ற கவியரங்கில் இரா.காமராசு,க.எழிலேந்தி,த.பாலு,பி.கே.பெரியசாமி,ம.ரா.சிங்காரம்.வெ.நீலகண்டன் ஆகியோரோடு கோ.வி.ஜெயராமனும் அற்புதக்கவிதை தந்தார்.இந்த ஏழு பெருங்கவிதைகளையும் ஒரு தொகுப்பாக்கி கடலூர் பெருமன்றம் கவிதை மாலை இரண்டு என வெளியிட்டது. 'திசை எட்டும்' சசி தலைவராகவும்,வீ.லோகநாதன் துணைத்தலைவராகவும் இருந்து பெருமன்றம் செழித்துச் சீராய் செயல்பட அடிகோலினர்.கோவி.ஜெயராமன் பெருமன்றப்பொருளராக இருந்து செய்ல்பட்ட அருமைத்தோழர்.
இர்ர்.காமராசு தலைமையில் நடந்த அக்கவி அரங்கில் ஜெயராமன் 'வடலூரார் எம் உறவு' என்னும் பொருளில் கவிதை தந்தார். அந்தக்
கவிதையில் இருந்து வடலூர்ர் வள்ளலின் ஆன்ற அருள்தமிழ் உணர்வையும் கோவி. ஜெயராமனின் தமிழ் நெஞ்சத்தையும் நாம் அறியலாம்
தமிழ் பேச தமிழ் மண்ணில் வாழ
பிறப்பித்த ஆண்டவனுக்கோர்
நன்றி சொன்ன நாயகன் நீ
ஆதலால் நீர் எமக்கு உறவு.
அற்புதத் தமிழின் பெருமை அறியா மக்களை க்கண்டு நொந்து போனவன் எட்டயபுரத்துக்காரன் பாரதி.தமிழை அறிதல் மனித வாழ்வை அறிதல் என்பதே மெய். தமிழின் திருக்குறளும் திருவாசகமும் திரு மந்திரமும் படித்து இன்புறத் தமிழனாய்ப்பிறக்க வாய்க்கவேண்டும் என்பதுவே உண்மை.
வடலூர் கருணை வள்ளல் ராமலிங்கரின் சமூகக்கருத்துக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஜெயர்ரமன் வடலூர் குருகுலம் உயர் நிலைப்பள்ளியின் மாணாக்கர்.வடலூர் வள்ளலின் அடியார் தவத்திரு ஊரன் அடிகளுக்கு மிக நெருக்கமானவர்.'வள்ளலார் ஒரு சமூக ஞானி' ஒரு கட்டுரை நூல் எழுதி வெளியிட்டவர்.வடலூரில் முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூரார் நிறுவிய அப்பர் அநாதை ஏழை மாணவர் இல்லத்தில் தங்கிவள்லார் குருகுலம் உயர் நிலைப்பள்ளியில் படித்துப் பள்ளி முதல்வனாகத்தேர்ச்சி பெற்றவர்.
ஜெயராமன் ஒரு நல்ல கவிஞர்,ஆக தான் எழுதிய அழகுக்கவிதைகளை 'வெளிச்சப்புள்ளிகள்' என்னும் தலைப்பிலே ஒரு கவிதை நூலாகக்கொணர்ந்தவர். விழுப்புரம் நகரின் பெருமைமிகு கவிஞர் த.பழமலயின் அணிந்துரையோடு வெளிச்சப்புள்ளிகள் வெளிவந்தது.காலத்தை விடுதலை செய்யும் கவிதைகள் என அக்கவிதைகளை ப்பெருமையோடு பேசுகிறார் கவி பழமலய். சாதி அரசியல் பற்றி அங்கே ஒரு கவிதை இப்படிப்பேசுகிறது.
சந்தர்ப்பவாதிகளுக்கு
சாதி பலமான ஆயுதந்தான்
அது நெருப்பையும் மாசுபடுத்தும் வல்லமையுடையது
மார்க்சிய வெளிச்சத்திற்குள்ளேயே கூட
இருளை அடைக்க முயல்கிறது
தத்துவத்திற்குள் இருக்கும் மனிதாபிமானம்
அரசியலில் காணாமல் போனதால்
விடுதலைத்தியாகத்தைக்கூட
விலை பேசுகிறது சாதி.
படைப்பாளியின் அற்புதமான நிதர்சனப்பார்வை வாசகனுக்கும் கிட்டிவிடுகிறது
கடலூர் தொலை பேசி மாவட்டச்சங்கத்தின் வெள்ளி விழாவின் போது ஒரு கணிசமான தொகையை தமிழ் வளர்ச்சி மற்றும் அதன் தொடர்புடைய பணிகளை மேற்கொள்ள ஒரு அறக்கட்டளை நிறுவுவது என முடிவாகியது. பதினாறு ஆண்டுகளுக்கு மேலாக சிரில் நினைவு அறக்கட்டளை என்ற
அந்த அமைப்பு தொடர்ந்து 'தமிழ் விழா' என்னும் பெயரில் ஒரு பெரு நிகழ்ச்சியை கடலூரில் நடத்திவருகிறது.தொலைபேசி த்துறையி பணிபுரியும் ஊழியர்களின் செல்வங்களில் பத்து பன்னிரெண்டாம் வகுப்புகளில் தமிழில் உயர்ந்த மதிப்பெண் பெற்ற பிள்ளைகளுக்கு ச் சங்க வேறுபாடு எதுவுமின்றி ரொக்கபரிசுகள் வழங்குவது, மற்றும் தமிழ் அறிஞ்ர் ஒருவரை அழைத்து கௌரவிப்பது என்பன முடிவாகி அந்த நற்பணி இன்றுவரை சீரும் சிறப்புமாக நடந்து வருகிறது. கடலூரின் பல் வேறு தமிழ் அமைப்புக்கள் இந்த த்தமிழ் நிகழ்வில் நிறைவோடு பங்கேற்கின்றன. கடலூர் மற்றும் அதன் சுற்றுப்புறத்து தமிழ்ச்சான்றோர்கள் அதனில் பங்கேற்று ச்சிறப்பிப்பது மரியாதைக்குரிய ஒரு நிகழ்வு. இந்த செவ்விய முடிவு நிகழ் சாத்தியமாக உழைத்திட்ட நல்ல உள்ளம் கோவி.ஜெயராமனது என்றால் மிகையாகாது.கடலூர் மாவட்டச்சங்கத்து தமிழ்ப்பணி போற்றுதலுக்குறியது.
கடலூர் தொலைபேசி ஊழியர்களின் பெருமை மிகு தலைவர் ரகு நாதன். அன்னாரின் பணி ஓய்வு விழா நிகழ்வு மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. மரியாதைக்குரிய மார்க்சீயப்பெரியவர் தோழர் நல்லக்கண்ணு ரகு நாதனை அரங்க மேடையில் வாழ்த்திய வரலாற்று நிகழ்வு அது. இதனை ஒட்டி தோழர் ரகுவின் பணி ஓய்வு பாராட்டு விழா மலர் ஒன்று கடலூர் தோழர்களால் கொண்டு வரப்பட்டது.அந்த மலரின் சிறப்புக்குக்காரணமாக அமைந்தவர் ஜெயராமன். அவ்விழா மலரில் ஜெயராமன் தோழர் ரகு பற்றி இப்படிப்பேசுவார். விருட்சமாய்.. என்னும் தலைப்பிட்ட கட்டுரை அது.
'மத நல்லிணக்கம்,தேச ஒற்றுமை,சாதி ஒழிப்பு,விடுதலைப்பொன்விழா உலக அமைதி,நெல்சன் மண்டேலா விடுதலை இப்படி ஏதேனும் ஒரு செய்தியை முன்வைத்து கடந்த காலங்களில் மா நாடுகளை நடத்தியுள்ளோம்.சமூக உணர்வு தளத்துக்கு உறுப்பினர்களை அழைத்துச்செல்ல இவை பங்காற்றியுள்ளன.இதன் கர்த்தா தோழர் ரகு தான்.' இப்படித்தான் தெரிந்து கொண்டஉண்மைய ஓர்ந்து சொல்லும் பெரிய மனதுக்காரர் ஜெயராமன்.
மகளிர் தின விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடியது கடலூரின் வரலாறு. தோழியர் ராஜம் கிருஷ்ணன் தொடங்கி எத்தனையோ பெரியவர்கள் சிறப்பாகப்பங்கேற்றனர். நானும் நண்பர் ஜெயராமனும் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் வந்தவர்களை ஊர் திரும்ப அனுப்பிவைக்கும் நிகழ்வுக்குச்சென்று வருவோம். தோழியர் ராஜம் கிருஷ்ணனோடும்,பதமாவதி விவேகானந்தனோடும், இலக்கியம் பேசிக்கொண்டிருந்த நிகழ்வுகள் நினைத்துப்பார்க்க இப்போதும் மனம் நெகிழ்வு கொள்கிறது. எழுத்தாளர் பொன்னீலனோடு மிக நெருக்கமான தோழர் ஜெயராமன்.
பட்டுக்கோட்டை ராமலிங்கம் அவர்களால் கொண்டுவரப்படும் இலக்கிய இதழ் 'இலக்கியச்சிறகு' வில் நிறைய கவிதைகளை எழுதியவர்.. இலக்கியச் சிறகின் முதல் இதழ் வெளியீட்டு நிகழ்வு வடலூர் வள்ளலின் சபை வளாகத்தில் நிகந்தது.கவிஞர் ஜெயராமன் அதனில் கலந்துகொண்டு சிறப்பு சேர்த்தவர்.
கடலூரில் ஒரு கவிதைப்பட்டரை அதனில் தமிழகம் முழுவ்திலிருந்து தொலைபேசித்துறையின் இலக்கிய படைப்பாளிகள் பங்குகொண்டு 'ஈழம் மலரும்' என்னும் தலைப்பில் கவிதை வாசித்தனர்.இந்தப்பெரு நிகழ்வு தமிழ் மாநில சங்கம் பொறுப்பேற்று நடத்தியது.கொவி.ஜெயராமனின் கடின உழைப்பு இந்நிகழ்வுக்கு பின்புலமாக இருந்ததைக்குறிப்பிடவேண்டும்.
கடலூர் தோழர்களிடையே விடுதலைப்புலிகளின் கவி காசி ஆனந்தனையும், அமரர் நூற்கடல் கோபாலய்யரையும் மேடையேற்றிப்பேசவைத்த சூத்திரம் தெரிந்தவர் ஜெயராமன். ஊதிய உயர்வு சரி,உள்ளம் உயர்தல் வேண்டும் என்பதறிந்தவர்கள் என்றும் இந்தக் கடலூர் தோழர்கள்.
ஒன்றா இரண்டா எத்தனையோ மனம் நிறைந்த நிகழ்வுகள் இப்படி இப்படி. கடலூர் அருகே சாத்தங்குப்பம் அனாதை ஆசிரமத்துக்கு கடலூர் தோழர்களை அழைத்துச்சென்று அன்புப்பணியில் பங்கு கொள்ள வைத்தவர் ஜெயராமன்.
கடலூரிலிருந்து 'நெய்தல்' என்னும் இலக்கிய இதழைத்தொடங்க ஜெயராமனும் ஒரு சமயம் முடிவுசெய்திருந்தோம்.அமரர் சிரிலின் அனைத்துப்படைப்புக்களையும் ஒரு தொகுப்பாக வெளியிடவும் விரும்பினோம்.
இலக்கியப்பெருமன்ற மாநில மாநாடு திருவண்ணாமலையில் நடந்த சமயம் ஜெயராமன் கடலூர் சசி ஆகியோர் பங்கேற்றனர். பெருமன்ற மாநிலச்செயலரான தனுஷ்கோடி ராமசாமி கடலூரில் ஜெயகாந்தன் ஞானபீடம் பெற்றகாலை சிறப்பு நிகழ்ச்சியில் பங்குகொண்டார்.
ஒரு தருணத்தில் கடலூரில் தொலைபேசி தொழிற்சங்க (என்.ஃப் டி. இ) சம்மேளனக்கவுன்சில் கூடியது. தொலைபேசி ஊழியர்களின் மூன்றாம் பிரிவும் நான்காம் பிரிவும் இணைந்து ஐக்கியமாயின.ஜெயராமனின் பொறுப்புக்கள் தொழிற்சங்க இயக்கத்தில் கூடிப்போனது. தொழிற்சங்க இயக்கம் இலக்கிய தளத்தை விஞ்சி ஜெயராமனை ஆட்கொண்டது. அகில இந்திய பொறுப்புக்கள் தொழிற்சங்க அரங்கில் தொடர்ந்து அவருக்குக்கொடுக்கப்பட்டன. கடமை பெரிது. இன்றளவும்அவருக்குள்ளாக ஒரு கவிதைக்காரன் இருப்பது மட்டும் மெய்.
அன்பர் பணிக்கென்னை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்ப நிலை தானே வந்தெய்தும் பராபரமே என்பதுவே நிதரிசனம்.
-----------------------------------------------------------------------------------------------------------------







.




.

Monday, June 20, 2016

raguveer- vimarisanam














ரகுவீரரின் 'ஒரு கல் சிலையாகிறது' ஒரு பார்வை- எஸ்ஸார்சி

ரகுவீரர் எழுதிய 'ஒரு கல் சிலையாகிறது' கட்டுரை நூல் படித்து முடித்தேன். ஆன்மீக இதழில் தொடராக வந்த 110 கட்டுரைகள் நூலாக மலர்ந்து தெய்வீக மணம் வீசுகிறது.ஆன்மீகப்புரட்சியாளர் ராமானுஜரை நினைவு க்கு கொண்டுவரும் ஒரு சமயப்பணியை ரகுவீர் நிகழ்த்திவருவது தெரிய வருகிற்து.அவரின் அயரா வைணவ உழைப்பு போற்றுதலுக்குரியது கூடவே தமிழ் மொழி மீது அவர் கொண்ட காதல் வாசகனை நெகிழ வைக்கிறது.
அட்டைப்பட ஓவியம் அஜந்தா குகை அழகு ராமர் சிலை. நூலுக்கு வலு சேர்க்கிறது.
நாராயணியமும் நானும்- என்றொரு கட்டுரை. ரகுவீர் இப்படிச்சொல்கிறார்,சேங்காலிபுரம் ஸ்ரீ அனந்தராம தீட்சிதர் எழுதிய 'நாராயணீயம்' என்னும் உரை நூலை படித்த பின்னர் 'அரைகுறை நாஸ்திகனான எனக்கு அவையெல்லாம் புனை உரைகளோ என்கிற சந்தேகம் அடிக்கடி ஏற்படும்'. வைணவர்க்கே உரிய தன் அடக்கம் இங்கே ரகுவீரரிடம் யதார்த்தமாக வெளிப்படுகிறது.
ரகுவீரரின் இந்து மதம் பற்றிய ஒரு கண்ணோட்டம் 'இருமாயனின் பாராட்டு' என்னும் கட்டுரையில் கச்சிதமாக சொல்லப்படுகிறது.''மற்ற மதத்தைப்போல அல்லாமல் இந்து மதம் கொள்கை அல்ல.ஒரு வாழ்க்கை வழி.உயிருடன் தொடர்புடைய ஒன்று.எனவே உண்மையான இந்து வேறு மதத்தைத்தழுவினாலும் இந்து என்ற இரத்தம் மாறாது.மாற்ற முடியாது.' மூதறிஞ்ர் ராஜாஜி எழுதிய 'இந்துயிசம் தி வே அன் டாக்ட்றின் ஆஃப் லைஃப்' என்னும் நூல் வாசகனின் மனத்திரையில் ஓடி நிற்கிறது.
தற்கால அரசியல் மட்டும் விடுமா என்ன ? ரகுவீரரை அது பாதிக்கவே செய்கிறது.பரம்பரை ஆட்சி உரிமை பெறுவது சமூகத்திற்கு நல்லதல்லவென்பதால் சனநாயகம் என்ற மக்களாட்சி கொண்டுவரப்பட்டது. (ஏன் ஜன நாயகம் என்று சொல்ல மனம் ஒப்பவில்லைபோலும்) குழு ஆட்சிகளும் குடும்ப ஆட்சிகளும் பெருகி வருவதால் மீண்டும் நாம் பழைய நிலைக்கே செல்கிறோமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது என்று அச்சத்தோடு குறிப்பிடுகிறார் பிறிதொரு கட்டுரை 'ஆறு மனமே ஆறு'
அதனில் சேலம் மாவட்டத்தில் ஸ்ரீ சென்ராயப்பெருமாள் கோயில் அடிவாரம். செங்கோடம்பாளையம் என்னும் ஊர்' சாத்தாத' ஸ்ரீ வைணவர்களை அர்ச்சராக உடையது என்கிற செய்தி தருகிறார்.சேலம் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சன்னிதிகளில் ' சாத்தாத' ஸ்ரீ வைணவர்களே அர்ச்சக ர்களாக இருப்பது நடைமுறை. இப்படி ஒரு நல்ல செய்தி சொல்லப்படுகிறது.'சாத்தாத' என்பதற்கு என்ன பொருளோ , பூணல் அணியாத பிறசாதியினரா, சாத்துதல் என்பது சங்கு சக்கரம் சாத்திக்கொண்டு ஒரு நெறிமுறைப்படுத்தி வைணவர்கள் கூடுதல் ஆசாரம் எடுப்பார்களே அந்த வகையா? எது எப்படியோ பிற சாதியினர் பூசை செய்து மக்கள் வழிபாடு தொடர்வது ஆரோக்கியமான சமாச்சாரமே.
கடுக்கலூர் திருமாலடியார் அருள் நெறி மன்றத்து 'உய்யும் வழி' இதழில்தான் இவைகள் தொடராக ப் பிரசுரமாகி ஆன்மீக வாசகனைத்தொட்டு வந்திருக்கின்றன. ஆக இதழ் வாசித்த வைணவர்கள் பெரும்பாலும் இது விஷயங்கள் அறிந்தே இருப்பர்.தமிழர்களில் பிராம்ணர்கள் தமது தாய்மொழியை பிராம்ணர் அல்லாதார் இடமிருந்து வித்தியாசமாகவே பேசுகின்றனர்.தெலுங்கர் கன்னடர் மராட்டியர் என பிற வட இந்திய பிராம்ணர்கள் இப்படி பிற மக்களிடமிருந்து வேறு பட்ட ஒரு ஒலியொடு பேசுவார்களா என்பது தெரியவில்லை.
தன்னைப்பற்றியே ஓரிடத்தில் ஆய்ந்து குறிப்பிடும் ரகுவீரர்,
'பல ஊர்களுக்குச்செல்லவைத்து என்னைப்பக்குவப்படுத்துகிறான்.பல மாத இதழ்கள் மூலம் என்னை அருளிச்செயலில் ஆழங்காற்பட வைக்கிறான்.பல வைணவ மா நாடுகள் மூலம் என்னைப்படிக்க வைக்கிறான்.பண்படுத்துகிறான்படிப்படியாக என்னைப்படிக்க வைக்கிறான். ஆக படியாய்க்கிடந்தே( படித்துக்கிடந்தே) பவளவாய்க்காண்பேனே' இப்படியாகவே ஒரு முடிவுக்கு வருகிறார். பவளவாயன் நெடுந் திருமால் அவன் திருவடிகள் சிக்கெனப்பிடித்துவிட ஒரு பெரு விண்ணப்பம் அவருள்ளாகப் பொதிந்து கிடக்கிறது. ' கடவுளும் கந்த சாமிப்பிள்ளையும்' புகழ் புதுமைப்பித்தனின் கடவுள் என்னும் கட்டுரையிலிருந்து சில வரிகளை ரகுவீரர் மிகப்பொருத்தமாகக்கையாள்கிறார்.'கடவுள் உண்டென்னும் சமாச்சாரம் மனித சமுதாயத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் பிரயோசனப்படுகிறது என்றால் அது இருக்கத்தான் வேண்டும்.'இந்த கடவுள் விஷயம் என்பது மிகவும் சுவாரசியமானது.அது தனிமனிதனுக்கு தைரியத்தைக்கொடுக்கிறது.சமூகத்திற்கு ஒரு சக்தியைக்கொடுக்கிறது.நாஸ்திகம் தர்க்கத்தில் நிஜமாக இருக்கலாம் அது சுவாரசியமற்றது..வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்ற முடியாது.அது தனி மனிதனுக்குச்சாந்தியை அளிக்கலாம்.ஆனால் அது ரசனை யற்றது. இங்கே'பகுத்தறிவுவாதிகளுக்கு ஒரு வினா வைக்கிறார் ரகுவீரர்.
'இறைமையை மறுப்பவர்கள் இயற்கையைப் போற்றலாமே!இளைஞ்ர்களிடம் காணப்படும் உழைப்பின்மையைப்போக்க பகுத்தறிவாளர்கள் ஏதாவது முயற்சி எடுத்தார்களா?மேலும் கூடுதல் பொறுப்போடு ஒரு விஷயம் சொல்கிறார்.'ஒரு குறிப்பிட்ட இனத்தைத்தாக்குவதையே அல்லவா குறிக்கோளாக்கி விட்டார்கள்'அது எந்த இனம் அது ஏன் இப்படி என்ற வினா இங்கே வேண்டாம்.அனேகமாக தமிழ்ச்சமுதாயத்தில் ஒவ்வொரு பிராமணனல்லாதவரும் கடுகளாவது பிராமண எதிர்ப்பாளரே என்கிற சின்ன விஷயம் யாவரும் அறிந்ததே. ஏற்ற இறக்கங்கள் சிறிது இருக்கலாம். அது நியாயமும் கூட. .
'கங்கையைக்கண்டேன்' என்னும் ஒரு கட்டுரை. அந்த நதியோடு ஒவ்வொரு இந்தியக்குடிமகனும் பந்தப்பட்டுக்கிடக்கிறார்கள் என்பதுணர்த்தி ரகுவீரர் எழுதிச்செல்கிறார்.'கங்கையில் நீராடிய
பொழுதுதான் நான் பாரதத்தாயின் மகனானேன்.' உணர்ச்சி வெள்ளம் கொப்பளிக்க கட்டுரை நீண்டு கொண்டு செல்கிறது.
கங்கை சுமந்துவருவது அமுதம் அதனைத் தூய்மையாக வைத்து இருக்க எப்போதேனும் வாய்க்குமோ' காசியம்பதியின் அந்த காலபைரவருக்கு இதுகள் எல்லாம் கவனிக்க நேரம் இல்லை போலும்.
தாய்முகம்' என்னும் ஒரு கட்டுரை ஒரு புதிய செய்தியைச்சொல்கிறது.ஸ்ரீவைகானச ப்பிரிவு வைஷ்ணவர்களுக்குகருவில் இருக்கும்போதே எட்டாவது மாதத்தில் அந்தத் தாய்க்கு விஷ்ணுபலி என்கிற சடங்கின் மூலம் வைணவதீட்சை செய்யப்படுகிறது.என்வே ஸ்ரீவைகானசர்கள் கர்ப்ப வைணவர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர். ஆக வயிற்றில் இருக்கும் சிசு ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இந்த வைண்வ தீட்சை உண்டு..
'முயற்சியே போதும் என்ற தலைப்பிட்ட ஒரு கட்டுரை நல்ல பல தகவல்களை அள்ளித்தந்து வாசகனை நிறைவுகொள்ள வைக்கிறது.கர்னல் பிளேஸ் ம்துராந்தகம் ராமர் கோவிலில் ஒலி எழுப்பும் கருவி (?) வழங்கியிருக்கிறார்.ராபர்ட் கிளைவ் கஞ்சி வரதருக்கு பதக்கம் நல்கி யிருக்கிறார்.திருமலைஅப்பனுக்கு ஒரு இசுலாமியர் பொற்காசுகள் தந்து பெருமை பெறுகிறார்.அரும்பாக்கம் ராஜகோபுரத்தில் ஒரு நிலை கிருத்துவர் ஒருவரின் அன்பளிப்பு.கிள்ளை திருத்தலத்தில், திருமுட்டம் பூவராகருக்கு இசுலாமியர்களின் வரவேவேற்பு. திருவரங்கத்துத் துலுக்க நாச்சியார் சன்னிதி என பட்டியல் தொடர்கிறது.இன்னும் இந்த வகையில் எத்தனையோ. இந்தப் புனித மண்ணில் ஆயிரம் ஆயிரம் என்று இவை எண்ணிக்கையில் கூடிக்கொண்டே இருக்கலாம். நாம் இவைகளை அறிந்தே இருக்கிறோம்.
விண்ணிலிருந்து வீழும் மழை நீர் பல பெயர் கொண்டு கடலை அடைவது ஒப்ப மதங்கள் பல எனினும் சென்றடையும் இறை ஒருவனே என்பது இங்கு வேதம் சொல்லும் சமாச்சாரம். சான்றோர் க்கவி எனக்கிடந்த கோதாவரியைப்பாடும் கம்பர் நீராடு துறைகள் பலப்ப்ல எனினும் நதியொன்றே.சமயங்கள் வேறு வேறு எனினும் இறையொன்றே என்று பேசுவார். இன்றளவும் மனிதனால் செய்யப்பட்ட அரிய ஆன்மீக ப்படைப்பு அற்புதப்படைப்பு என்பது இந்திய மண்ணின் உப நிடதமே. இது மிகையில்லை ஒரு சத்தியமான வார்த்தை.
ரகுவீரரின் 'ஒரு கல் சிலையாகிறது' நூலுக்கு வருவோம். அவர் தம் வைணவப்பணியைப் பட்டியலிடுகிறது இக்கட்டுரைத்தொகுப்பு. மதுராந்தகத்துப் பெருமகனின் உழைப்பு கடினமானது.ஆத்மார்த்தமானது. கற்றுத்துறைபோகிய வைணவர்கள் இன்னும் நன்கு தெரிந்து நமக்குச்சொல்ல நிறைய விஷயங்கள் இங்கு இருக்கவே செய்யும். அமுதத்தமிழும் திருவைணவமும் நூலாசிரியர் ரகுவீரருக்கு இரு தோள்களாக இருப்பதை வாசகர்கள் உணரமுடியும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------. .

Sunday, May 1, 2016

vellam 1




சென்னையில் வெள்ளம் 1

சென்னை வாழ்க்கை.' சாமியோவ்' செத்துப்பிழைத்தோம். தீபாவளியன்றே மனம் லேசாக குறு குறுத்தது.ஏதோ பிரச்சனை வரவிருக்கிறது நாம் என்ன செய்ய ப்போகிறோம்.   கவலை யொன்று  லேசாக முளைத்து விட்டது.
                                            ஆகாயம் முட்டிய ஜவுளிக்கடைக்கடைகளும் அகண்டு விரிந்த வெடிக்கடைகளும் ஆரவாரம்தொலைத்து  சூம்பிப்போயின. தீபாவளியாவது மண்ணாங்கட்டியாவது. .மீறி வாங்கிவிட்ட மத்தாப்பு  வெடிகள் பிரிக்கப்படாமல்  கட்டாய்க்கிடக்கின் றன  வீட்டு  மூலையில்.
                                           சென்னை மா நகரின் சுற்றுப்புற வாழ்விடங்களில்  தாம்பரத்துக்கு  மேற்கே அந்த  மண்ணிவாக்கம் மற்றும் ,  ஸ்ரீபெரும்புதூர்  சாலையில்  ஐந்துகிலோமீட்டர் போனால்  வருவது முடிச்சூர்.
 முடிச்சூருக்கு முக்கால் கிலோமீட்டர் முன்பாக பார்வதி நகர்.அதனுள்ளே ஒரு கிலோமீட்டர் நடந்தால்  நேதாஜி நகர் வரும்.அங்கேதான் மண்  என்று  கொஞ்சம் வாங்கினேன்  ஒரு வீடெனவும் கட்டிக்கொண்டேன்.
                                           வீட்டு உரிமையாளர்கள் எல்லாம் தேவ ஜாதி என்றபடிக்கு எனக்கு எப்போதும் அனுபவம்.ஆகவே தான் இந்தச்  சொந்த வீடு.
வீடா அது  எத்தனைக்குப்   பெரியது  அந்தக்கேள்வி எல்லாம் வேண்டுமா  என்ன   .
                        இங்கு  காலம் காலமாய் ,ஓட்டும் ஆட்டோக்காரர்களுக்கும் கால் டேக்சிகாரர்களுக்கும் நேதாஜி நகர் வாசிகள் மனிதர்கள் இல்லை. தரையில்   ஊரும் ஜந்துக்கள்.
 ஆட்டோவில் ஏறி க்கொண்டு இதுவரை  அவர்களிடம் வாங்கிய பாட்டுக்கள் அதான் திட்டுக்கள் எவ்வளவோ.    நடு  இரவு நேரம் தாம்பரத்தில் இறங்கி விட்டோம்   பின்  வீடு  செல்லவேண்டுமென்றாலோ என்றாலோ  சொல்லவே வேண்டாம். ஆட்டோ  சார்ஜை நம்மிடம் இருமடங்காகக்  கூட்டி வாங்கத்தான் இத்தனை முஸ்தீபும் .
                                       திருச்சியில் என் சின்ன மகனுக்கு ஆண் குழந்தை  பிறந்ததைப்பார்த்துவிட்டு  வாடகை வேன் பிடித்து க் குடும்பத்தோடு சென்னைக் குத்  திரும்பினோம்.திருச்சியைத்தொட்டுக்கொண்டு ஓடும்  அகண்ட  காவிரியில்சொட்டுத்  தண்ணீரில்லை .கொள்ளிடம்வழக்கம் போல்  காய்ந்துகிடந்தது.பார்த்துக்கொண்டேதான் வந்தோம்
                  , அன்று மாலை நாங்கள் குடியிருக்கும் பழையபெருங்களத்தூருக்குள்  நுழைகிறோம்.  அந்த  நேதாஜி  நகருக்குள்   போகமுடியவில்லை எங்கும் .மழை, மாமழை பெய்துக்கொண் டே இருந்தது .
எங்கள் தெருவிலும்  முட்டிக்காலுக்கு மேலாகத் தண்ணீர் எப்படி வீட்டிற்குள் நுழைவது?  வீடடைத்  தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டோம்.
 என் குடும்பத்தோடு குடும்பம் என்றால்- என் மனையாள் என் பெரிய மகன் அவன் மனைவி  அதாவது என்   மருமகள்,  மற்றும்  ஒரு ஒண்ணரை வயது பேத்தி - திருச்சி சென்று  திரும்பிய எங்களில்  நானும் என் பெரிய பையனும்  பழைய   பெருங்களத்தூர்   நேதாஜி நகரிலேயே தைர்யமாகத்  தங்கி விட்டோம்.
இதுசரிப்படாது என்று   குடும்பத்து  மற்றவர்கள் ஆதம்பாக்கம் பெரிய அண்ணன்  வீடு  சென்றார்கள்.
  நேதாஜிநகரில் எங்கள்  தெருவில் இறங்கி  நடக்கிறோம். முழங்கால் முட்டும் தண்ணீர்.அச்சமும் அதிசயமும் விரவி மண்டைக்குள்  என்னவோ செய்தது.
முடிச்சூர் பகுதியில் வெள்ளம்.   தண்ணீரின்   அபரிமித  வருகை மட்டும் இல்லை. அதன் இழுப்பு வேகம் சொல்லி மாளாது. கொஞ்சம் ஏமாந்தால் அவ்வளவுதான் .நம்மைக்  கீழே தள்ளி விடும்  இழுத்து க்கொண்டு ஓடிவிடும்.
மனைவியை யும் மாட்டுப்பெண்ணையும்  பேத்தியோடு  ஆதம்பாக்கம் பெரிய அண்ணன் வீட்டிற்கு அனுப்பி வைத்ததில் திருப்தி.
                                    நானும் என் பெரிய பையனும் மட்டும் அந்த  நேதாஜிநகரில் இரவு தங்கி இருந்தோம்.மழை தன்  பாட்டுக்கு பெய்துகொண்டே இருந்தது.   தூக்கம் எங்கே வந்தது எழுந்து எழுந்து பார்த்துக்கொண்டோம் .  இரவு முழுவதும் வீதியில் கையில்  டார்ச் வைத்துக்கொண்டு மக்கள் இங்கும் அங்கும்  வெள்ள  நீரில் திரிந்துகொண்டேதான்  இருந்தார்கள். வெளியில்  மின்சாரம் இல்லை. வீட்டிலிருந்த  யுப்பி எஸ்சும்  தன்  பிராணனை விட்டுக்கொண்டே இருந்தது. மொபைல் போன்   சற்று நேரம்  வெளிச்சம்  தந்தது. ஒரு வழியாக  பொழுது விடிந்தது. மனதிற்குள் மட்டும்  விவரிக்க முடியாத  அச்சம், .
                     வீட்டு  பீரோவிலிருந்து   முக்கியமான  ரிக்கார்டுகளைத் துணிமணிகளைப்  பொறுக்கி எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தோம். வாயிற்படியிலேயே மழைநீர் நெஞ்சு தொட்டது .வீடு சற்று உயரமான வீடு என்பதால் மழைநீர்  வீட்டின் அடிக்கதவை தொட்டு தொட்டு எட்டிப்பார்த்தது.
 நாங்கள் தலா ஒருபளுவான  சூட்கேசினை தலையில் சுமந்துகொண்டு நடக்க ஆரம்பித்தோம்.வீட்டின் பின் புறம் ஒரு பள்ளம். அது தாண்டினால் கொஞ்சம் நிம்மதி கிடைக்கலாம்  .தாண்டிப்போகவேண்டிய பள்ளத்தில் தண்ணீர் கழுத்துவரை சென்றது.
இந்த பக்கத்து மின்சாரக்கம்பத்தில் பெரிய கயறு கட்டிக்கொண்டு  அடுத்த கரையில் நான்கு பேர்  வருபவர்களுக்கு உதவுவதற்காக 'கவனமா கவனமா வாங்க ' சொல்லிக்கொண்டு  நின்றிருந்தார்கள்.அவர்களைப்பார்த்ததும்தான் என் பையனுக்குக்  கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது.கட்டியிருந்த நீளக்   கயறு பிடி த்துக்கொண்டு அணுஅணு வாக தண்ணீரில்   நடந்தோம்.எனக்கு க் கொஞ்சம்  நீச்சல் தெரியும்.நான் தருமங்குடி கிராமத்துக்காரன்.
அந்தக் காலத்தில் திருமுது குன்றத்து மணிமுத்தாற்றில் தெளிந்த தண்ணீர் ஓடும். ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதுகளில் திருமுதுகுன்றத்தில் தொலைபேசிப்பணி பார்த்த நான் நண்பர்களோடு அந்த  ஆற்றில்நீந்திக்  குளித்தது இன்றும் நினைவுக்கு வருகிறது.என் பையனுக்கு நீச்சல் தெரியாது.கற்றுக்கொடுக்க வாய்ப்பு இல்லாமல் போனது.  நகர்ப்புறத்து  வாழ்க்கை
.பின்னர் பணிமாற்றலில்  குடிவந்த  கடலூரில் ஒரு  நீச்சல் குளம். மஞ்சகுப்பம்  பெரிய மைதானத்தில்  கட்டி முடித்தார்கள் வாய்ப்பும் வந்தது. அப்போது அவர்களுக்குப்   பயம் கூடவே வந்து விட்டது. ஆக த்தண்ணீர் என்றால் நிரந்தரமான  அச்சம்.
தாம்பரத்திலிருந்து முடிச்சூர் வரும்  சாலையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டன.மழை தூறிக்கொண்டே இருந்தது.நானும் என் பெரிய பையனோடு நடைப்பயணமாகப்  புதுப்பெருங்களத்தூர் ரயில் நிலையம் வந்தோம். புதுப்பெருங்களத்தூரின் பெரிய ஏரியின் கரையை ஒட்டிய சாலை அந்த . ஏரிக்குள்ளாக எத்தனையோ வீடுகள்.  ஏரிக்குள் எத்தனையோ வீதிகளே இயங்கின.
பெருங்களத்தூர்  ரயில் நிறுத்தத்தில் ரயிலில் ஏறிவிடஆயிரம்பேர்  மூட்டை முடிச்சுகளோடு பிளாட்பாரத்தில் தயாராகத்தான்  நின்றார்கள்.சரியான  கூட்டம்.நெருக்கி அடித்துக்கொண்டபடியே  மின்சார ரயிலில் ஏறினோம். ம வுண்ட் ரயில் நிறுத்தத்தில் இறங்கி ஒரு ஆட்டோ  பிடித்து ஆதம்பாக்கத்திற்குச்சென்றோம்.அங்குதான்  என் பெரிய அண்ணனின்  வீடு. வாடகை ஃபிளாட் வீடுதான் . வீட்டுசொந்தக் காரர்
கொஞ்சம் நல்லவர்.வீட்டுக்காரரும் வாடகைக்கு க் குடியிருப்பவரும் கீழும் மேலும் குடியிருப்பது அவ்வளவுக்கு நல்லதல்ல என்பார்கள்.இந்த  வீட்டுக்காரர் வித்யாசமானவர்.
'மழை ஜாஸ்தி என்ன பண்ணுவீங்க.எப்பிடியிருக்கு?,அன்பாக விசாரித்தார்.அதுவே பெரிய ஒத்தாசை.ஒரு அய்ந்து நாட்கள் குடும்பத்தோடு ஆதம்பாக்க வாசம்.மழை ஏதோ குறைந்துவிட்டது போல் தோன்றியது. ஆதம்பாக்கத்தில் கொசு என்றால் அப்பப்பா சொல்லிமாளாது. கொசுவிரட்ட எனன்னவோ பாடு. புகை போடுதல்.கொசுவிரட்டி திரவத்தை மின்சாரம் மூலம் ஆவியாக்கிவிடுதல், கொசுச்  சுருள் புகை,கொசு விரட்டும்உடல்  மேல் பூச்சு.  சீலிங்  ஃபேன் உன்னைப்பிடி என்னைப்பிடி ஓடி என்ன பயன் இரவு முச்சூடும் கொசு பிடுங்கித்தின்றது தான் மிச்சம்
.நான் குடியிருந்த பழைய பெருங்களத்தூர் முடிச்சூர்  பக்கமெல்லாம்  பல கிரவுண்ட் ஃப்ளோர் வீடுகளில் மழைத் தண்ணீர் புகுந்து  ஆட்களை திண்டாட வைத்து விட்டது அனகாபுத்தூர்   எம்ஜிஆர் நகர்  கிண்டி  சைதாப்பேட்டை  வேளச்சேரி கோட்டூர்புரம்  அடையார்  என்று  குடியிருப்பு பகுதிகளில்   வண்ண வண்ண .பிளாஸ்டிக்   போட்டுக்கள்  சன்னமாய்   உறுமிக்கொண்டே நகர்ந்தன. . சென்னையில்  ஹெலிகாப்டர்கள்  சுற்றி சுற்றி வந்து அங்கங்கு  மக்களைக்  கரை சேர்த்த  நிகழ்வை  தொலைக்காட்சியில் பார்த்து க்கண்கள் கலங்கினோம்.
                                       நேதாஜி நகர் வீட்டில்  நாங்கள் மேல்தளத்திலும்  எனது சின்ன மகன் கீழ்வீட்டிலும் குடியிருந்தோம் ..சின்ன பையனுக்கு பெங்களூரில் வேலை.அவன் குடும்பம்மட்டும்   கீழ் வீட்டில் இருந்தது.
பெரியவன் குடும்பம் என்னோடு இருந்தது. பெரியவனுக்கு ஒரு பேத்தி. நானும் என் மனைவியும்  மேல் வீட்டில் ,  கீழ் வீட்டில் என அங்கும் இங்குமாய் இருப்போம். எனது  பொக்கிஷமாகிய   இலக்கிய   புத்தகங்கள் மேல் வீட்டில் வெள்ள த்  தண்ணீரைப்பார்க்காமல் தப்பிவிட்டன  அது எனக்கு  மழைக்கட வுள்  இந்திரன்  செய்த  ஒத்தாசை.
                                         சின்ன மருமகளின் புத்தகங்கள்   நீரில்  நனைந்து கொழ கொழ என  வாழ்வு  முடித்துக்கொண்டன . ஜவுளிகள்  கொஞ்சம்  நாஸ்தி.லேப்டாப் மேசை மின்விசிறி, கிரைண்டர் வெளி நாட்டு மிக்சி என்பன  கேவலமாய் பழுதாகிப்போனது.எல்லாமும் ஒரளவுக்குசரிசெய்துமுடித்தோம்  .ஆதம்பாக்கத்திலிருந்து வீட்டிற்குத்திரும்பி  வந்த நாங்கள் கீழ்வீடு சுத்தம் செய்யவே  ஒருவாரம் ஆனது. அந்தக் கீழ்வீடு சுத்தம் செய்வதற்குள்  ஒருவழி  ஆகிப்போனோம்  .
                                      வானில்,மீண்டும் கருமேகங்கள் கூடின. என்னவோ முடிவு செய்தன  எங்கும்  இருட்ட. ஆரம்பித்தது. வானிலை அறிவிப்புப்    புகழ் ரமணன் ஓயாமல் மழை வருகிறது வருகிறது  அறிவித்து க்கொண்டே இருந்தார்.மழை பெய்ய ஆரம்பித்தது.தெரு ஓரமாக ஒரு வாய்க்கால் அது எப்போதும் காய்ந்து கிடக்கும். அது இப்போதெல்லாம். இரு  கரையும்  தத்தளிக்கொண்டு தண்ணீர் செல்ல ஆரம்பித்தது.அதுதான் அடையாறு.   எங்களுக்கு இப்போதுதான் அதன்  பெயர்  சொன்னார்கள்.எனக்கு நம்பமுடியவில்லை. இனி புறப்பட்டுவிடவேண்டியதுதான்.இங்கு  சாத்தியப்படாது
என் மனைவி என் மருமகள்,பேத்தி மூவருமாக ஒரு ஆட்டோ பிடித்து குறுக்கு வழியாக புதுபெருங்களத்தூர் ரயில் நிலையம் அடைந்தோம்.மழை பெய்துகொண்டுதான் இருந்தது.இந்த முறை தி.நகருக்கு ச்சென்று நடு அண்ணன் வீட்டில் தங்கலாம் என்று. முடிவோடு புறப்பட்டோம்.
 ஆனால் திடீரென மழை நின்றது. பளிச்சென்று வெயில் வந்தது. என் மனைவி சொன்னாள்
.' நாம் பழையபடி நம் வீட்டுக்கேபோய்விடுவோம். என்ன சொல்றீங்க'
ஆரம்பித்தாள். என் மருமகளிடம் யோசனை கேட்டேன்
.'நல்லா வெயில் அடிக்குதே. நம்ப வீட்டுக்கே போய்விடலாம்' அவள் என் மனைவி சொன்னதை ஆமோதித்தாள். அத்திப்பூப்பது சாத்தியந்தானா. எப்போதேனும்இப்படி  ஒருவர் சொல்வதை மற்றொருவர் ஆமோதிப்பதும் உண்டு.
 மூட்டை முடிச்சுக்களை எடுத்துக்கொண்டு திரும்பவும் ஒரு ஆட்டோ பிடித்து எங்கள் நேதாஜி நகருக்கே  புறப்பட்டோம்.என் பேத்தி மட்டும் என் கையில் பத்திரமாக இருந்தாள்.என் மருமகள் மூட்டை முடிச்சுக்களை சுமக்க என் மனைவி சும்மாதான் நடந்துவந்தாள்.ஆனாலும் ரயில்வே டிராக்கைக்கடக்கும்சமயம் கீழே விழுந்து 'அய்யோ' என்று  அலறினாள். நான் திரும்பிப்பார்த்தேன்.என் மனைவியை இருவர் பிடித்துத்  தூக்கிவிட்டனர். ஒரு நிமிடம் கழிந்தது. அதே டிராக்கில் ரயில் வண்டி ஒன்று வேகமாக  சடக்புடக் என  கடந்து போனது.என் உடல் நடுங்கியது ஒருமுறை குலுங்கி முடித்தது. எல்லாம் ஈசன் செயல் என்பார்களே அது  போல் இதுவும்  இருக்கலாம்.  உள் மனம்  எனக்குச்  சொன்னது.
 என் மனைவியிடம் சென்று அவள் கையைப்பிடித்துக்கொண்டு மெது மெதுவாக நடத்தி அழைத்து வந்தேன்.அவள் நொண்டி நொண்டி நடந்துவந்தாள்.காலில் ஏதேனும் அடி பட்டும் இருக்கலாம்.வீட்டுக்குப்போய் பார்த்துக்கொள்வோம் என நினைத்தேன்.அதுவரைக்கும் அவள் தாக்குப்பிடிக்க வேண்டுமே என்கிற அச்சம்வேறு.என் பேத்தி பாட்டிக்கு ஏதோ ஆகிவிட்டது என்று பதட்டமாக இருந்தாள்.ஒண்ணரை வயது பேத்திதான் இருந்தாலும்  அவ்வளவு விபரமாக முக பாவம் காட்டுபவள்.
ஆட்டோக்காரன் ஒருவனைப்பிடித்து அவனிடம் நேதாஜி நகர் பழைய பெருங்களத்தூர் செல்லவேண்டும் என்றேன்.'ஆட்டோ நேதாஜி நகர் போவாது கொஞ்சம் முன்னாடி எறக்கி விடுவேன்' என்று பதில் சொன்னான்.எப்படியோ ஒரு ஆட்டோ கிடைத்தது அது  பகவான் புண்யம் என்று நினைத்துக்கொண் டேன்.பளிச்சென்று காய்ந்த வெயில் எங்கோமறைந்துபோனது.இருட்ட ஆரம்பித்தது.சூல்கொண்ட  மேகங்கள் தயாராகின.ஆட்டோக் காரன்   வெகு தூரத்தில்  இறக்கிவிட்டான்.நனைந்து கொண்டே வீட்டுக்கு நடந்துபோனோம்.தெருவில் சல சல என மழை நீர் அங்கும் இங்கும் ஓடி விளையாடிக்கொண்டு இருந்தது.மேல்தள வீட்டுக்குள் நுழைந்து விட்டோமே தவிற பதற்றம் உள்ளுக்குள் இருப்பதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.மழை விடாமல் பெய்துகொண்டேதான் இருந்தது.
ஆதம்பாக்கம் அண்ணன் டெலிபோனில் பேசினார்.' உடன் புறப்படு. இங்கு வா பெருங்களத்தூர் .ரயில் நிலையம் வந்து டிக்கட் வாங்கிய நீ எப்படி திரும்பிப்போவாய்.மழை அதிகம் வரும் என்கிறார்கள்.அங்கு இருக்க வேண்டாம்.கிளம்பு முதலில் . வேறு எதுவும் பேசாதே' கட்டளை தந்தார்.
 என்ன செய்ய மூட்டை முடிச்சுக்களோடு மீண்டும் புறப்பட்டோம். தெருவில் பாதம் நனையும் தண்ணீர் இருந்தது.ஆளுக்கு ஒரு குடை பிடித்துக்கொண்டு பார்வதி நகர் வந்தோம்.நடக்கவே  முடியவில்லை. ஒரு ஆட்டோவையும் காணோம். என்னதான்  செய்வது? என் மனைவிக்கு கால் வலி வீக்கம் கூட இன்னும்  எல்லாமும் இருந்திருக்கும். அதனை சட்டை செய்ய நேரம் மன நிலை இருந்தால்தானே.
ஓட்டை லாரிசத்தத்தை கிளப்பிக் கொண்டு ஒரு ஆட்டோக்காரன் வந்தான்.தாம்பரத்திற்கு பேருந்து எதுவுமில்லை. கிருஷ்ணா நகர் வழியில் மார்பு அளவு தண்ணீர் போவதாகச்சொல்லிக்கொண்டார்கள்.
'நீங்க குடுக்கறதை குடுங்க நானு புது பெருங்களத்தூர் போறன்' நாங்கள் எல்லொரும் ஆட்டோவில் ஏறி அமர்ந்து கொண்டோம்
.என் அண்ணன்மகன்  போன் செய்தான்' சித்தப்பா புறப்பட்டாச்சா இன்னும் என்ன பண்றீீங்க' போனை வைத்தான்.
மேற்குத்தாம்பரத்திற்கு முடிச்சூரிலிருந்து எந்த போக்குவரத்தும் இல்லை.புதிய பெருங்களத்தூர் ரயில்வே நிலையம் போனால் போதும் என்று ஆகிவிட்டது.தெரு எங்கும் மழை நீர் கால் முட்டி அளவுக்கு பிரவாகித்துகொண்டிருந்தது. புதிய பெருங்களத்தூர் ஏரியை எட்டிப்பார்க்க பயம்  மனதைக் கவ்விப்பிடித்தது. ஏரியிலிருந்து குளிர்ந்த காற்று ஜிவ் ஜிவ் என்று வீசி அடித்தது. சாலையில் மக்கள் பதறி அடித்துக்கொண்டு இங்கும் அங்கும் நடந்தவண்ணம் இருந்தார்கள்.மாம்பலத்திற்கு மின்சார ரயிலில் டிக்கட் வாங்கினோம் எதற்கும் இருக்கட்டும் என்றுதான் .ஆனால் மவுண்டில் இறங்கி ஆதம்பாக்கம் அண்ணன் வீடு செல்வதுதான்எங்கள் முடிவு. ஆதம்பாக்கத்திலோ  எங்கும் கொசுக்கள் தொல்லை நினைத்தாலே அச்சமாக இருந்தது.தூக்கம் எங்கே வரப்போகிறது.மழை தூறிக்கொண்டே இருந்தது.மவுண்டில்மின்சாரவண்டியை விட்டு  இறங்கி அடித்து பிடித்துக்கொண்டு வெளியில் வந்தோம்.ஆட்டோக்கள் எதுவும் எங்கும் நகரவில்லை.அண்ணன் இருக்கும் சக்தி நகருக்கு ஆட்டோ கிடைக்குமா எனவிசாரித்தோம் .'ஆட்டோக்காரர்கள் 'வேற எதாவது பேசுங்க இப்ப ராத்திரி நேரம் கரண்டு இல்லே. தெருவுல எல்லாம் தண்ணி நிக்குது' பதில் சொன்னார்கள். அண்ணனுக்கு போன் செய்தேன். அவர் 'வீீட்டில் கரண்ட் இல்லை. தெருவில் தண்ணீர் இருக்கிறது. 'ஆட்டோக்காரன் வந்தால் வா. என் பையனும் இன்னும் வீடு வரவில்லை.அவன் ஆபிசை விட்டு கிளம்பி மூன்று மணி நேரமாகிவிட்டது.நீங்க எல்லாரும் தி நகர் சின்ன அண்ணன் வீட்டுக்குப்போயிடுங்க.இப்பக்கி அதான் வழி' போனைவைத்துவிட்டார்.
நாங்கள் எல்லொரும் நொண்டி அடித்துக்கொண்டு மீண்டும் படிகள் ஏறினோம். ஒரே வழுக்கல். சேறு.மாம்பலம் வரை டிக்கட் வாங்கி யிருந்ததால் ஒரு சவுகரியம்.  இங்கே  க்யூவில் நின்று டிக்கட் வாங்க வேண்டாம்.மழை பெய்து கொண்டே இருந்தது.கொட்டித்  தீர்த்தல் என்றால் இது தானோ என்னவோ அப்படி ஒரு மழை. மவுண்ட்  பேருந்து  நிலையத்தில் .பேருந்துகள் இயங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது.
என் பெரிய மகன் . அவனுக்கு சென்னை சிறுசேரியில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை. அவனுக்கு போன் போட்டேன்.' நீ நேராக தி நகர் பெரியப்பா வீட்டிற்கு வந்துவிடு.நாங்கள் அங்குதான் செல்கிறோம்'அவன் போனை வைத்துவிட்டான்.அங்கும் ஒரே மழையாகத்தான் இருக்கும்.
ரொம்ப நேரம் கழித்து ஒரு மின்சார ரயில் வந்தது.புற நகர் செல்லும் ரயிலைத்தான் அப்படிச்சொல்கிறேன்.மக்கள் ரயிலில் திணித்துக்கொண்டு வந்தார்கள்.நானும் என் மனைவியும் என் மருமகளும் பேத்தியும் கூட்டத்தோடு கூட்டமாக பிளாட்பாரத்தில் நிற்கிறோம்.மழையின் சாரலில் உடல் முழுவதும் நனைந்துவிட்டிருந்தது.என் பேத்தி எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தாள்.மின்சார ரயில் பெட்டிக்குள் ஏறுவதற்குள் நாங்கள் பட்டபாடு சொல்லிமுடியாது.என் கையில் மூன்று லக்கேஜ்கள் இருந்தன.ரயில் பெட்டியின் வாசற்படியில் நிற்கும் கம்பியை அணை த் துக்கொண்டு நிற்கிறேன்.மழை 'வீஸ் வீஸ்' என்று பெய்த வண்ணம் இருந்தது.என் பேத்தியின் அழுகுரல் கேட்டுக்கொண்டே இருந்தது.கூட்டம் அவளை நெறித்து விட்டு இருக்கலாம்.என் மனைவி ரயில்  பெட்டியுனுள் ஏறி இருக்கலாம். ஒன்றும் புரியவில்லை. வண்டி கிளம்பிவிட்டது. நான் எந்த நேரத்திலும் கீழே விழுந்துவிடலாம் என்ற  அச்சத்தோடு நின்றுகொண்டு இருந்தேன்.கிண்டி நிலையம் வந்தது.மக்கள் இறங்கினார்கள்.பின் ஏறினார்கள்.எனக்கு உயிர் போய் உயிர் வந்தது.நான் வாயிற்படியில் அல்லவா மாட்டிக்கொண்டு விட்டேன்.கையில் சுமை வேறு. வண்டி அடையாறு  பாலம் தாண்டியபோது பயமாக இருந்தது. சீற்றத்துடன் சீரிப்பாயும்ஜலப்பிரவாகத்தை மிக நெருக்கத்தில் உணரமுடிந்தது.உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு மின்சார ரயில் பெட்டியின் கம்பத்தை இறுக்கிப்பிடித்தபடி நின்றேன்.சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் சிலர் ஏறினார்கள்.சிலர் இறங்கினார்கள்.மழை அசுரகதியில் பெய்துகொண்டேதான் இருந்தது.
ஒரு வழியாக மாம்பலம் நிலையம் வந்தது.தி நகர் செல்பவர்களே ஏகத்துக்கு இறங்கினார்கள்.நானும் என் மனைவியும் வண்டியிலிருந்து எப்படியோ இறங்கி பிளாட்பாரத்தில் நின்றபடி மருமகளைத்தேடினோம்.அவள் குழந்தையைக்கையில் பிடித்துக்கொண்டு என்னபாடு பட்டாளோ இப்போது பிளாட்பாரத்தில் இறங்கி நிற்கிறாள்.குழந்தையை ச்சென்று பார்த்தேன்.அது பயந்துபோய் திரு திரு என்று விழித்துகொண்டிருந்தது. குழந்தை அழுது முடித்திருப்பதைமுகம் காட்டிக்கொடுத்தது.என்னிடம் தொத்திக்கொண்டிருந்த மூன்று பைகளும் சரியாகவே இருந்தன. மழை விட்டபாடில்லை. ஒரே கூட்டம்.ரயில் நிலையம் முழுவதும் தொப்பலாக நனைந்து இருந்தது. கால் வைத்த இடம் எல்லாம் ஒரே வழுக்கல்.மாடிப்படிகளில் ஏறி இறங்கினால் ரெங்கனாதன் தெரு. எங்கும் மக்களின் தலை.இடித்துக்கொண்டும் பிடித்துக்கொண்டும் மக்கள் அயர்ந்துபோய் ஊர்ந்த வண்ணமாக இருந்தனர்.ரெங்கனாதன் தெருவில் முழங்கால் அளவுக்குத்தண்ணீர் அழுக்குத் தண்ணீர்தான்  நின்று கொண்டிருந்தது.ராமேஸ்வரம் சாலையில் நாங்கள் திரும்பி நடந்தோம்.கால் முட்டி அளவுக்கு மழை நீர். ததகா புதகா என நடந்து கலா பிளாட் எங்கே என்று தேடிக்கண்டு பிடித்தோம்.அங்குதான் சின்ன அண்ணன் வீடு இருந்தது.வாடகை வீடு.இரவு பத்துமணிக்குஒருவழியாக  அண்ணன் வீட்டில் சாப்பிட்டுப்படுத்தோம்.
சின்ன அண்ணன் வீடு முழுவதும் ஈரமாக இருந்தது.அண்ணனும் அண்ணியும்  எத்தனை அன்பாக உபசரித்தார்கள்.மழை இன்னும் பெய்து கொண்டேதான் இருந்தது.தொலைக்காட்சிப்பெட்டியில் வானிலை த்தகவல் சொல்லும் அந்த ரமணன் தான் எல்லோர் மனதிலும் ஆட்சிசெய்துகொண்டிருந்தார்.அவர் சொல்படிக்குத்தான் வானம் செயல் பட்டுக்கொண்டிருந்தது....

.


.

Thursday, February 25, 2016

Thaatsanyam-story



தாட்சண்யம் -எஸ்ஸார்சி

பட்டுக்கோட்டையிலிருந்து என் நண்பர் தான் கடிதம் எழுதியிருந்தார்.
'பட்னாக்ர் கவிதைகள் சிலதுகள மொழிபெயர்த்து கொடுத்துங்க இலக்கியச்சிறகு இத்ழ்ல வெளியிடலாம்னு இருக்கேன் ' என்கிறபடி.
என் நண்பர் ராமலிங்கம் பட்டுக்கோட்டையிலே இருந்துகொண்டு சிற்றிதழ்கள் ஆங்கிலம் ஒன்றும் தமிழ் ஒன்றும் நிறைவோடு கொண்டு வருகிறார். தமிழ் இலக்கிய இதழ் 'இலக்கியச்சிறகு'.ஆங்கில இதழுக்கு 'ஷைன்' என்று பெயர் வைத்திருந்தார்.
பட்னாகரின் ஆங்கிலக்கவிதைகள் சிலவற்றை ஷைன் இதழில் பட்டுக்கோட்டை ராமலிங்கம் வெளியிட அந்த இதழோடு அவருக்கு தமிழ் இலக்கியச்சிறகும் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது. தவறுதலாகத்தான் இது நிகழ்ந்துவிட்டிருக்கிறது. அனேகம் பேருக்கு இப்படி இரண்டு இதழ்களும் சேர்த்து அனுப்புவதுண்டு.அந்த வகையறாவில் பட்னாகார் பெயரும் சேர்ந்துகொள்ள இரண்டு இதழ்களும் அவருக்கும் சென்றிருக்கிறது.பட்னாகர் குவாலியர் வாசி.அந்த வட மா நிலப்பெரு நகரில் எத்தனையோ தமிழர்கள்வாசம் செய்கிறார்கள்.அவர்களில் சில நண்பர்கள் பட்னாகருக்கு இருக்கத்தானே செய்வார்கள்.அவர்களில் ஒருவரை தேடிப்பிடித்து தமிழ் இதழ் இலக்கியச்சிறகினை கொடுத்துவிட்டிருக்கிறார். அந்த நண்பர் ஆகா ஊகு என்று இலக்கியச்சிறகினை பாராட்டியும் இருக்கிறார். ஆகத்தான் பட்னாகர் பட்டுக்கோட்டை ராமலிங்கத்திடம் தன் கவிதைகள் சிலதுகளை மொழிபெய்ர்த்து இலக்கியச்சிறகில் போடுமாறு கேட்டுக்கொள்ள அது இப்போது என் வரைக்கும் வந்துவிட்டது.
நானும் சில பட்னாகர் கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்துக்கொடுத்தால் நல்லதுதானே என்று 'சரி' செய்கிறேன் பதில் சொல்லிவிட்டேன்.ராமலிங்கம் கேட்டுக்கொண்டபடிக்கு ஒரு நான்கு கவிதைகளை தமிழாக்கி பட்டுக்கோட்டைக்கு அனுப்பி வைத்தேன்..அவை அடுத்த இலக்கியச்சிறகு இதழில் வெளியாகியது. எனக்கும் அந்த இதழ் வ்ழக்கம்போல் வந்தது.பட்னாகருக்கும் ஒரு பிரதி போயிருக்குந்தானே செய்யும்..பத்து நாட்கள் சென்றன.பட்னாகரிடமிருந்து எனக்கு ஒரு புத்தகப் பார்சல் வந்தது. தபால் கொஞ்சம் கனமாகவே இருந்தது.பிரித்த்ப்பார்த்தேன்.உள்ளாக அவர் எழுதிய ஆங்கிலக்கவிதைகளின் நான்கு தொகுப்புக்கள் இருந்தன.அத்தனையும் அந்த பட்னாகர் எழுதியவை.கவிதை நூல்களுள்.ஒரு கடிதம் ஒளிந்துகொண்டு இருந்தது.பிரித்துப்படித்தேன்.நான் மொழிபெயர்த்து வெளியான கவிதைகள் தாங்கிய இதழை ராமலிங்கம் பட்னாகருக்கு அனுப்பிவைத்ததாகவும்.அவை நன்றாகவந்திருப்பதாக தமிழ் படிக்கத்தெரிந்த் அவர் நண்பர் படித்துக்காட்டியதாகவும் அவரே ஒரு ஆண்டு சந்தா தொகையினை ராமலிங்கத்திற்கு அனுப்பிவைத்துவிட்டதாகவும் மொழிபெய்ர்ப்பு செய்து கொடுத்த அதற்கு மிகவும் தான் கடமைப்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டு எழுதியிருந்தார். மனம் எனக்கு குதூகல்ம் ஆனது.எழுத்துப்பைத்தியங்களுக்கு மட்டும்தான் இந்த அல்ப திருப்திகள் விளங்கும் என்பார்கள்
. பட்னாகரின் கடிதத்தில் கடைசி வரியாக ஒரு விஷயம் இருக்கத்தான் செய்தது.' நான் எனது நான்கு கவிதை நூல்களை இத்துடன் அனுப்பியுள்ளேன்.அவைகளில் மொத்தம் சுமார் நானூரு கவிதைகள் இருக்கின்றன.அவைகளில் உங்களுக்குப்பிடித்த ஒரு நூறு கவிதைகளை தமிழாக்கித்தர வேண்டும்.சென்னையில் எனக்கு நண்பர்கள் உண்டு. அது ஒரு நூலாக வெளிவருதல் என் பொறுப்பு..நீங்க்ள் எனக்கு மொழிபெயர்த்து உதவத்தான் வேண்டும்.' கடிதம் முடிந்து இருந்தது.ஒரு தலைவலி முடிந்து இன்னொரு தலைவலியில் அல்லவா மாட்டிக்கொண்டுவிட்டோம்.
நான் ஏதும் கதை எழுதுகிறேன். அவை பின் புத்தகமாக வெளிவர எத்தனையோ பெரிய பெரிய மனிதர்களை சுற்றித்தான் வரவேண்டியிருக்கிறது.காலை கெட்டியாப்பிடித்துக்கொண்டு விடுவோமோ என்கிற பயத்தில், எழுத்தாளர்களிடமிருந்து தங்கள் பொற்ப்பாதங்களை எல்லாம் மூடி மறைத்துக்கொண்டுதானே இந்த பதிப்பக உரிமையாளர்கள் ஆனந்தமாக உலாவருகிறார்கள்.
ஆக ஒரு விஷயம் மட்டும் சரி. இந்த பட்னாகரே அது புத்தகமாக வெளிவருதல் தன் பொறுப்பு என்று சொல்லிவிட்டார். முடிந்தவரைக்கும் ஒருகை பார்ப்போம்.ஒரு நூறு கவிதைகள் மொழிபெயர்த்துவிட்டு அவருக்கும் தகவல் தெரிவித்துவிடுவோம் என்று ஒரு முடிவுக்கு வந்தேன்.பட்டுக்கோட்டை ராமலிங்கம் சாருக்கும் இந்த விஷயம் கடிதத்தில் எழுதியிருந்தேன்.'புதிய சிக்கலில் நான் மாட்டிக்கொண்டு விட்டது குறித்து அவரும் எனக்கு வருத்தப்பட்டு பதில் எழுதியிருந்தார்.
நேரம் கிடைத்தபோதெல்லாம் பட்னாகரின் கவிதைகளை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தேன்.மொழிபெயர்க்க ஆரம்பித்தேன்.எனக்குப்பித்த கவிதைகளாகத் தேர்வு செய்தேன்.நான்கு கவிதைப்புத்தகங்கள் அல்லவா எனக்கு அவர் அனுப்பி வைத்து இருக்கிறார். பிடிக்காத கவிதைகளே அனேகம் இருந்தன.சொல்லிவிட்ட விஷயத்தையே திரும்ப த் திரும்பச்சொன்னால் எனக்கு கவிதைகள் சுவாரசியப்படுவதில்லை. அலுப்புத்தட்டி விடுகிறது.எப்படியோ நூறு கவிதைகள் பொறுக்கி எடுத்த நான் அவைகளைத் தமிழாக்கி விட்டேன்.திரும்பத் திரும்ப படித்து த்திருத்தி அவ்வளவுதான் குவாலியர் நகரத்து பட்னாகருக்கு நமது உழைப்பு என்கிறபடி முடிவுக்கு வந்தேன்.
மொழிபெயர்த்த கவிதை நூலுக்கு தலைப்பு என்ன வைப்பது என்று யோசித்து யோசித்து 'காலம் மாறும்' என்கிற தலைப்பு கிடைத்தது. ஒரு கவிதையின் தலைப்பும் அது.பொதுவுடைமை தத்துவத்தைச் செயலாக்கி உலகுக்கு ஒரு புதிய தரிசனத்தை வழங்கிய சோவியத் நாட்டின் மீது எனக்கு எப்போதும் மிகுந்த மரியாதை இருக்கவே செய்தது.அதனை கவி என்கிற வகையில் பட்னாகரும் உணர்ந்துதானே இருக்கவேண்டும்.ஆக சோவியத் நாடு திரும்பவும் தன் மகத்துவத்தை நிலை நிறுத்தத்தான் போகிறது என்கிற சமாச்சாரத்தை சொல்லும் கவிதை ஒன்றை அந்த பட்னாகர் எழுதியிருந்தார். அதையே என் கவிதை நூலுக்குத்தலைப்பு என முடிவு செய்தேன். எனக்கும் அக்கருத்தில் உடன்பாடு உண்டுதானே.மாகாளி கடைக்கண் வைத்து தந்த ரஷ்ய வெளிச்சம் என்று தமிழ்க்கவிபாரதி வாழ்த்திச்சென்றானே அது இல்லை என்றாகிவிடுமா என்ன? மனதில் எப்போதும் இப்படி ஒரு அச்சம்.
எழுபதுகளில் சோவியத் பயணம் செய்துவிட்டு மாஸ்கோவில் தமிழன் என்று ஒரு நூல் எழுதிய அன்றைய காங்கிரசுக்காரர் தருமலிங்க.ராமச்சந்திரன் எனக்கு நண்பர். சோவியத் சிதறுண்டு போகும் என்று ஆரூடம் எழுதிய அவரை நான் வெறுத்தேன். பொய் பேசுகிறார் என்று முடிவு கட்டினேன்.பின்னர் வரலாற்றில் நிகழ்ந்த சோகம் உங்களுக்குத்தெரியாதா என்ன?எல்லாம் காலம் நிகழ்த்திவிட்டது. மாகாளியை எங்கே போய் த்தேடி முறையிடுவது. புதுக்கவிதை தாடிக்காரர் பிச்சமூர்த்தி மீது எனக்கு வருத்தமுண்டு.'மனு வெள்ளம்போச்சி,மார்க்சு வெள்ளம் போகும்' என்றல்லவா ஒரு கவிதை தந்தார்.மனு வெள்ளம் போகவேண்டும்தான் மார்க்சு வெள்ளம் கூட அப்படியா என்ன?
பட்னாகருக்கு வந்துவிடுகிறேன்.
'காலம் வெல்லும்' என்கிற பெயர்வைத்து பட்னாகரின் நூறு கவிதைகளை மொழிபெயர்த்து வைத்தவுடன் பட்னாகருக்குத்தகவல் சொன்னேன்.
' எனக்கு புத்தகம் அச்சில் வரவேண்டுமே' அவரிடம் பசினேன்.
'சென்னையில் எனக்கு தோழியர் உண்டு அவர்கள் விலாசம் தருகிறேன். அவர்களுக்கு நீங்கள் நேராகவே மொழிபெய்ர்த்தவைகளை அனுப்பிவையுங்கள்'
'அவர்கள் இதனை புத்தகமாக வெளியிடுவதெல்லாம் செய்துவிடுவார்கள்தானே'
'நிச்சயமாக.அவை ஒரு புத்தகமாவது என் பொறுப்பு.விடுங்கள்'
எனக்கு பட்னாகர் பதில் சொன்னார். மொழிபெயர்த்த நூறு கவிதைகளை அவர் சொல்படி சென்னை விலாசத்துக்கு அனுப்பி வைத்தேன். கவிதைகளை பெற்றுக்கொண்ட தோழியர் சென்னை மகளிர் கல்லூரி ஒன்றில் இந்திப்பேராசிரியர்.தமிழ் மொழியும் நன்கு அறிந்தவர் இவை பட்னாகர் எனக்குச்சொன்னவைகள். நானா சென்னைக்குப்போய் பார்த்துவிட்டு வந்தேன். சில நாட்கள் ஆகியது.
'ஒரிஜனல் கவிதைகளை செராக்ஸ் எடுத்து அனுப்புங்கள்.அப்போதுதானே மொழிபெயர்ப்பு எப்படி வந்து இருக்கிறது என்பது எனக்குத்தெரியும்' இப்படி எழுதிக்கொண்டு எனக்கு ஒரு கடிதம் சென்னையிலிருந்து வந்தது.
'ி புத்தகம் அச்சிட தன் கை காசு செலவு செய்பவன் எது சொன்னாலும் சரிதானே என்று நான்கு கவிதைபுத்தகங்களில் பென்சிலால் மார்க் செய்துகொண்ட கவிதைகளை செராக்ஸ்கடைக்கு எடுத்துப்போய் நகல் எடுத்தேன்.அதனைச் சுருட்டி கிருட்டி கொரியர் தபாலில் சென்னை முகவரிக்கு அனுப்பிவைத்தேன். என் வேலை முடிந்ததாய் எண்ணிக்கொண்டேன்.ஒரு வாரம் கழித்து எனக்கு மீண்டும் தபால் வந்தது.அனுப்பிய கவிதைகள் பத்திரமாய் சென்னையிலிருந்து எனக்குத்திரும்பி வந்தன.
'நன்கு வந்திருக்கிறது மொழிபெய்ர்ப்பு. நீங்கள் தேர்ந்திட்ட கவிதைகள் அத்தனையும் 'காலம் மாறும்' என்கிற அந்த பெயரிலேயே அச்சிட்டுவிடலாம் .நீங்கள் முன்னுரை எழுதும்போது எனது பெயரை மறக்காமல் எப்படிக்குறிப்பிடவேண்டுமோ அப்படி குறிப்பிட்டுவிடுங்கள்.வேறு ஒன்றும் நான் எதிர்பார்ப்பதில்லை.புத்தகம் வெளியானதும் இரண்டு பிரதிகள் மட்டும் மறக்காமல் என் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். அரசு நூலக ஏற்பு ஆணை வாங்கித்தருவது விஷயமாக அதுவும் நீங்கள் விருப்பப்ப்ட்டால் என்னோடு தொடர்புகொள்ளலாம்.நன்றி'
படித்துமுடித்தவுடன்.தலை கிர்ரென்றது.
பட்னாகருக்கு கொஞ்சம் கோபமாக ஒரு கடிதம் எழுதினேன். இனி மொழிபெயர்த்த கவிதைகளின் அச்சாக்கம் என்ன ஆவது என்கிறபடிக்கு. உடனே எனக்குப் பதில் கடிதம் வந்தது.
அவர் எங்கே எனக்குப்பதில் எழுதப்போகிறார் என்று கூட நினைத்தேன். ஆனால் பதில் வந்ததே.
'ஒன்றும் தவறில்லை. சென்னை நண்பர் அவருக்கு ஏதோ சந்தர்ப்பம் சரியில்லை. மற்றபடிக்கு மிக நல்ல மனிதர்.கவிதைகளை அப்படியே வைத்திருங்கள்.வேறு யாராவது பார்க்கிறேன். இத்துடன் என் புகைப்படம் அனுப்பியுள்ளேன்.இதனையும் அந்த மொழிபெயர்த்த கவிதைகளோடு பத்திரமாகவையுங்கள்.அட்டைபடத்துக்கு தேவைப்ப்டும்.ஆகத்தான் அனுப்பியுள்ளேன். போட்டோவை பின் அட்டையில் கூடபோடுங்கள் தவறில்லை'.
மொழிபெயர்த்த கவிதைகள் மற்ற கடிதங்கள் அத்தனையும் பரணையில் எடுத்துப்போட்டேன்.'கிடக்கட்டும் சனியன்' என்று சொல்லிக்கொண்டேன்.நாட்கள் ஓடின. பட்டுக்கோட்டை ராமலிங்கத்துக்கும் நடந்தவைகள் அத்தனையும் தகவல் சொன்னேன்.
'சிலர் இப்படித்தான். நல்லா கவிதைங்க எழுதுறாரு ஆனாலும் என்ன செய்ய' இது அவர் தந்த செய்தி. பட்னாகர்
குவாலியரில் தனது நாற்பத்தைந்தாவது தொகுப்பு ஒன்றுக்கு என க்கவிதைகள் எழுதிக்கொண்டுமிருக்கலாம்.அவரிடமிருந்து எனக்கு எந்த தகவலும் இல்லை.பரணையில் இருப்பவைகள் எனக்கு மன உறுத்தல் தர ஆரம்பித்தன.அந்தக்கவிதைகள் கூட என்னிடம் பேசுமா என்ன? கொஞ்சம் பாருங்க நீங்க நெனச்சா புத்தகம் அச்சாகிடும்.மனசு வையுங்க' இவைகளைச் சதா சொல்லிக்கொண்டே இருந்தன.
எப்படியோ சிங்கி அடித்து ஒரு பத்தாயிரம் ரூபாய் புரட்டிக்கொண்டு அருகிருக்கும் சிதம்பரம் அது வன்னியர் தெரு என்றுதான் நினைக்கிறேன் அங்குள்ள தட்சிணாமூர்த்தி புத்தக அச்சகத்தாரிடம் சென்றேன். மொழிபெயர்த்த அந்தக் கவிதைகளை ஒப்படைத்தேன்.
மேலட்டைக்கு மும்பை பிரசித்தம் அந்த குதிரை சவாரி வீரசிவாஜி படம் ஒன்று என்னிடம் இருந்ததை மறக்காமல் கொண்டு சென்றேன்.பின்னட்டையில் பட்னாகர் புகைப்படம் வரவேண்டும் சொல்லிவிட்டுப்புறப்பட்டேன்.
தவறுகள் சரிபார்க்க ஒறுமுறை சிதம்பரம் வன்னியர்தெரு அந்த தட்சணாமூர்த்தி அச்சகம் போனேன். பத்து நாள் கழித்து எனக்கு 'காலம் மாறும்' கவிதை நூல் முந்நூறு பிரதிகள் லோகல் லாரி பார்சலில் வீடு தேடிவந்தது.அச்சாகிய புத்தகத்தை தடவிப்பார்த்துக்கொண்டேன்.பின்பக்க அட்டையில் பட்னாகர் படம் லட்சணமாகத்தான் அச்சாகி இருந்தது. மீண்டும் என் வீட்டுப் பரணையில் பட்னாகரின் கவிதைகள் ' காலம் மாறும்' புத்தகங்கள் என உரு மாற்றிக்கொண்டு துயிலத்தொடங்கின. கிறுக்கு மனம் விட்டால்தானே.
ஒரு பத்து புத்தகங்கள் எடுத்துக்கட்டி பட்னாகருக்கு தபாலில் அனுப்பிவைத்தேன். ஒருவர் ஏதோ இரண்டு புத்தகத்தை
தபாலில் அனுப்பவேண்டுமென்று ஒரு முடிவோடு தபால் ஆபிசுக்குப்போனால் போதும். பார்சலைக்கட்டியது சரியில்லை என்பார்கள்,ஒட்டியது சரியில்லை என்பார்கள்,குவாலியர் உள் நாடா வெளி நாடா என்பார்கள். யாரும் திறந்து பார்க்கும்படிக்கு என்வெலப்பின் மூடிப்பக்கம் இருக்கவேண்டும் என்பார்கள், விலாசம் தெளிவில்லை என்பார்கள்,பின்கோடு எழுதவில்லையா என்பார்கள், அனுப்புனர் விலாசம் தெளிவாக எழுதிக்கொண்டுவாங்களேன் என்பார்கள், பதிவஞ்சலா, வெறும் பார்சலா நூல அஞ்சலா, அச்சிட்ட புத்தகங்களா ஒன்றும் சரியாக எழுதவில்லை நீங்கள், என்பார்கள் சரியானசில்லரையையாவது கொடுங்கள் தபால் அனுப்ப வந்துவிட்டீர்கள் என்பார்கள் நமக்கு ரசீது என்று ஒன்று கொடுப்பதற்குள் நம் முகத்தையே பார்க்காமல் எப்படித்தான் இவை அத்தனையும் செய்வார்களோ.
பட்னாகருக்கு ஒரு கடிதம் எழுதினேன் அதனில் .புத்தகங்கள் பத்து அனுப்பியது சொல்லியிருந்தேன்.
கடிதம் கிடைத்ததுதான் தாமதம் பட்னாகர் டெலிபோனில் பேசினார்.
'புத்தகங்கள் வந்துசேரவில்லை.கொஞ்சம் பாருங்கள்.தபால் ஆபிசில் விசாரியுங்கள். உங்களால் முடியும் முடிந்தால் என் சரியான விலாசம் எழுதி சிரமம் பாராமல் பத்து பிரதிகள் வைத்து மீண்டும்ஒரு பார்சலை அனுப்பித்தாருங்கள்' என்றார்.
அடுத்தவன் படும் சிரம்ங்கள் என்னவென்று கண்டே கொள்ளாமல் தன் காரியம் மட்டும் சாதிக்க நினைப்பவர்கள் நன்றாக கவிதை எழுதுவது எப்படி என்று எனக்கு அய்யம் வர நண்பர் விழுப்புரம் பழமலய்தான் எனக்கு ப்பொட்டில் அரைந்தமாதிரி விடை சொன்னார்,'கையில பேனா எடுத்துட்டா அவன் எழுத்தாளன் ஆயிடுவான் மற்ற நேரம் அவன் சராசரியா மனிதன் இல்ல அதுக்கும் கீழயும் போயிடுவான்'. பட்னாகர் விஷயத்திலும் அது சரி என நினைத்துக்கொண்டு மீண்டும் ஒரு பத்து புத்தகங்களைக்கட்டிக்கொண்டு தபால் ஆபிசுக்குப்போய் பட்னாகருக்கு அனுப்பி வைத்தேன். ஒருவாரம் சென்றது. பட்னாகர் மீண்டும் போனில் பேசினார்.'சார் இரண்டு பார்சல்களுமே ஒரே நாளில் எனக்குக்கிடைத்துவிட்டது.மிகுந்த நன்றி. முடிந்தால் புத்தகத்தை புத்தக விமரிசனத்துக்கு என்று அங்கு அங்கு இலக்கிய இதழ்களுக்கு அனுப்பிவையுங்கள்.உங்களுக்கும் நல்லது என்று ஆலோசனை சொன்னார்.
படபட என வந்தது. எழுந்தேன்.
பரணையில் கிடந்த அத்தனைப்பிரதிகளையும் கீழிறக்கி ஒரே கட்டாகக்கட்டி கோயம்புத்துர்ர் புத்தக விற்பனையாளர் ஒருவர் விலாசம் எழுதி கொட்டை எழுத்துக்களில் 'டு பே' என்றும் போட்டுக்கொண்டு பார்சல் லாரி அலுவலகம் சென்றேன். கோயம்புத்தூரில் அப்படி யார் என்று மட்டும் கேட்காதீர்கள். உங்களுக்கும் எனக்கும் அவர் நண்பர்தான் பார்சல்மீது அனுப்புனர் விலாசம் சரியாக எழுதி என் தொலைபேசி எண்ணும் குறிப்பிட்டு இருந்தேன். அவ்வளவுதான்.என் வேலை முடிந்தது.
கோயம்புத்தூரிலிருந்து தொலைபேசியில் என்னை யாரும் இதுவரை கூப்பிடவில்லை யார் கேட்டாலும் நீங்களும் சொல்லிவிடாதீர்கள்.
--------------------------------------------




.

Tuesday, February 23, 2016

கலில் ஜிப்ரான் கவிதைகள்l




ஆத்ம ஞானம் -கலில்ஜிப்ரான்

 மனிதன் கேட்கிறான்.
ஆத்ம ஞானம் பற்றிக்கூறுங்கள்'
அவர்  சொன்ன விடை .
பகல் இரவின் அந்தரங்கங்களை
உங்கள் இதய அமைதியில் தெரிந்திருப்பீர்கள்
ஆத்ம ஞானம் பற்றிக்கேட்க
 உங்கள் செவி 
விடாய் பெற்றிருக்கும்
சிந்தனை செறிந்த 
அச்சொற்களை நீங்கள் அறிவீர்கள்
அக்கனவின் நிர்வாணக்கனவுகளை
உங்கள் விரல்கள் 
 ஸ்பரிசிக்கலாம் நிச்சயமாக
ஆன்ம ஊற்று எழ விழையும்
சிற்றுருமல் சாதிக்கும்
 கடல் நோக்கி ஓடும்
ஆழம்காணாமுடியா ஆன்மக்கருவூலம்
கண்களே  அறியும்
அறியமுடியா ச்செல்வத்தை எது கொண்டு அளப்பது
கம்போ அல்லது வேறு கருவிகொண்டோ 
அளவிட விழைவாயோ
கங்குகரைகாண்முடியாத 
அளப்பரிய ஆன்மக்கடல்.
உண்மையை அறிந்தேன்
 சொல்லாதே அப்படி
உண்மை யொன்று 
தெரிந்ததாய்ச்சொல்
ஆன்மாவின் பாதையைக்
கண்டதாய்ச்சொல்லாதே
ஆன்மாநின்வழி 
நடை பயில்வது கண்டதாய்ச்  சொல்
ஆன்மா எத்தடத்திலும் பயணிக்கும்
ஆன்மா கோடு வரைந்து பயணிக்காது 
 ஒரு செடியின் தண்டென நீட்டமாய் வளராது
எண்ணிலடங்கா இதழ்கள்
 போர்த்திய  ஓர்  தாமரைப்பூ
தன்னில் மலர்வதே ஆன்மா.
------------------------------------------.

கலில் ஜிப்ரான் கவிதைகள்l



உள்கட          -கலில்ஜிப்ரான்

பெண் பூசாரி கேட்டார்.
'இறைவழி பாடு பற்றிச்சொல்லுங்கள்.'
அவரின் விடை வந்தது.
துயரமும் தேவையும் 
நெருக்கத்தானே உமது வழிபாடு
மகிழ் நிறைவும்
 வாழ்செழிப்பும் உறுதிப்படுகிறது
அத்தருணம் இறை வழிபாடு ஏதுமுண்டா?
இறைவழிபாடென்பது 
உம்மையே விரித்து வாழும்
பெருவெளியொடு ஏகமாகிடும் அனுபவம்
உமது இருள்துயரத்தை
 மாத்திரமா பெருவெளியொடு பகிருதல்
இதயம் மலருதலை
 மகிழ்வையும் கூட்டித்தான்
ஆன்மா வழிபாடென்று
 அழைப்பு விடும்பொதெல்லாம்
 அழுகை அழுகை
ஆன்மா கடையப்படுதல் தொடர்கிறது.
தொடரும் அழுகை 
அது மகிழ்சிரிப்பாகும்வரை.
வழிபடு போதெல்லாம்
வான்வெளியில் வழிபடு
 பிறரோடு சந்திப்பு
வழிபாடில்லை எனில் 
 அச்சந்திப்புத்தான் நிகழுமா?
ஆலயத்துக்கு ச்செல்கிறாய்
தேடும்அது கண்ணுக்குத்தெரிந்தாலென்ன
 இல்லை என்றால் என்ன
ஆனந்தப்பரவசமும்
 இனிய சந்திப்பும் நிச்சயம்
வேண்டும் இது வேண்டும் அது
இப்படித்தானா  செல்வாய் ஆலயம்
கேட்பது கிடைத்தும் விடுமா
குறுகி குறுகிக்
கெஞ்சி அஞ்சியுமா நீ
எப்படி கிட்டும் உய்ர்வு
அடுத்தவன் ஒருவனுக்கு நன்மையே
 வேண்டுமென ஆலயம் போனதுண்டா
உன் வேட்டல் 
அவன் செவி அப்போதும் ஏறாது
கண்ணுக்குப்புலனாகா ஆலயம்
நின்னுள்  கட உள்
எப்படி கடப்பது 
நான் சொல்லவும் மாட்டேன்
கடவுள் நீ சொல்வது கேட்கவும்மாட்டர்ர்
அவராக உன் வாய்வழி வந்து
 ஏதும் உரைக்கக் 
அது கேட்கும் அவர்க்கு.
கடலும் மலையும் வனமும் பிரார்த்திக்கிறது 
உனக்கு அது கற்பிக்க முடியுமா
கடலொடு மலை வனம்
 நின் பிறப்பிற்கு ஆதாரம்
நின் இதயம் அறியும் அது
நடு நிசிப்போதில் அவைகளின் வேட்டல்
 கவனி  அது கேட்டிருக்கும்

' கடவுள் நம் இருப்புக்கும்
 நம் விருப்புக்கும் மூலம்
கடவுளின் விருப்பே 
உள் போய் நம் விருப்பாகிறது

நம்முன் பகலும் இரவுமாய்
 மாறி மாறி விரிவது
இறை விருப்புத்தான்

யான் என்ன கேட்க
என் தேவை யாவும்
இறை முன்னம் அறிந்து
 எம்பாற் பின்னே பிறப்பது
இறைநீயே எமது விருப்பு.
நின்னை எமக்கு நீயே கொடுக்கிறாய்
 யாம் அனைத்தும் பெறுகிறோம்'

----------------------------------------------------------------








Monday, February 1, 2016

கலில் ஜிப்ரான் கவிதைகள்




கலில் ஜிப்ரான் 

அழகென்பது


'அழகு எது என்று சொல்வாயோ'
 கவியின் கேள்வி
 விடையோ வினாவாய் .
எங்கே அழகைத்தேடுவாய் நீ?
அழகே வழி சமைத்து
அவ்வழகே வழிகாட்டி
அமைய க்கிடைக்கலாம் அழகு

அழகு பற்றி இன்னும்  ?
அழகே மனமிறங்கி அதனை 
அமைத்துக் கொடுக்க 
அது சாத்திய மாகலாம்.

மனம் துன்புற்றவனும் 
உடல் புண்பட்டவனும் சொல்கிறான்.
அழகென்பது கருணை
அழகென்பது அனுசரணை.
இளந்தாய் ஒருத்தி
 தன் பெருமையின் பிடியில்
கொஞ்சமாய் வெட்கப்பட்டு
 நம்மிடையே  நடப்பதொப்பது அழகு.

உணர்ச்சி வயப்பட்டோன் சொல்வான்.
'அப்படி இல்லை
அழகென்பது வலிமை
 அது அஞ்சவும் வைப்பது.
கீழிருக்கும் இப்பூமியை
 மேலிருக்கும் அந்த விண்ணை
உலுக்கிப்போடும் இளம் புயல் அது.

களைப்பும் சலிப்பும் கொண்டவன்
 விடை சொன்னான்.
அழகு மென்மையின் அழைப்பு.
அழகு நம் உணர்வின் உயர் தளத்தில்
 நம்மிடம் சம்பாஷிப்பது..
ஒரு சிறிய ஒளிக்கீற்று
 சூழ்நிழலைக் கிழித்துக்கொண்டு ப்
பாய்வதொக்கும்.

ஆயின் மனக் கவலையில் 
தோய்ந்தவன் சொல்கிறான்.
மலைகளின் நடுவே
 அழகு எழுப்பும் பேரொலி
நாம் கேட்டிருப்போம்.
அதனைத்தொடர்ந்துதானே
புரவிகள் குளம்பொலி
இறக்கைகளின் படபடப்பு
சிங்க கர்ஜனை.

மா நகர இரவுக்
காவலாளி பகர்கிறான்.
அழகென்பது புலரும் காலையில் கிழக்கின் உதயம்.

நண்பகல் உழைப்போனும்
 நடைப்பயணம் செல்வோனும் சொல்கிறார்கள்.
கதிரவன் மறை போதே சாரளமாகி
அழகுப்பெண் பூமி மீது
 ஒய்யாரமாய்ச்சாய்ந்திருப்பாள்.

மாரிக்கால ப்பனி
 போர்த்தியவை சொல்லும்
குன்றின் மீது தவழ்ந்து
வசந்தகாலத்தில் உலா வரும் அழகு.

கோடை வெயிலில்
 கதிர் அறுப்போர் சொல்வர்,
உதிர்ந்த இலைகளிடை 
 அழகுக் கூத்திடுவாள்
 கண்டோம் யாம்
அவள் கூந்தலிடை
 பனி தழுவிச்சென்றதங்கே.

 அழகு குறித்து ப்
 பலரும் பகன்றவை.
அழகு குறித்தா இல்லை இல்லை

உம்  நிறைவேறாத் தேவைகள் அவை
அழகு, தேவையொடு 
தொடர்புடைத்தா என்ன
அது பேரானந்தச்சிலிர்ப்பு.
நாவில் நீர் சொட்டவைக்கும் விடாயோ 
வெறுங்கையின் நீட்சியோ இல்லை அது
இதயம் தரும் ஒளிப்பிரவாகம் 
ஆன்மாவின் ஆனந்த லயிப்பு

பார்க்கும் உருவும்
 நீ கேட்கும் பாடலும் இல்லை அது.

கண்களை மூடிட க்காட்சி யாவது
 செவிகளை ப்பொத்திடக்கேட்க முடிவது
பிளவுண்ட மரக்கிளையின் மையப் பகுதி
 சொட்டும் அத்திரவமில்லை அது
நகத்தொடு ஒட்டித்தொங்கும் 
சிறகும் இல்லை அது
பொதெல்லாம் மலர் அவிழும் நந்தவனம் 
தேவ கன்னியர் கூட்டத்து ஓயாப்பேரணி.
.
 ஆர்ஃபலிசு ( Orphalese)  நகரத்து  மாசனங்களே
வாழ்க்கையின் புனித முகம் 
தெரியத்தெரிய
 மனித வாழ்க்கை அழகு.

வாழ்க்கை நீ
அவ்வாழ்க்கையைத் தொலைப்பது நீ.
இதோ ஆடி முன்னே 
தன் அழகு பார்க்கிறது
அமரத்துவ அழகு.

காலத்தை வெல்பவன் நீ
நின்முன்னே நிற்கும் அவ்வாடியும் நீ..
-----------------------------------------------------




Saturday, January 16, 2016

paazum manam - story



பாழும் மனம் -எஸ்ஸார்சி

டெலிபோன் மணி கிர்ரிங்க் கிர்ரிங்க் என் அடித்துக்கொண்டே இருந்தது.ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இப்படித்தான்.காலை ஒன்பது மணி ஆனால் இந்த டெலிபோன் மணி அடிக்கத்தானே செய்கிறது.நானும் இந்த ஊருக்கு வந்து ஒரு ஐய்ந்து ஆண்டுகள் ஆகி யிருக்கும்.இன்னும் இந்த டெலிபோன் அழைப்பு விடாமல் தொடர்கிறதே.
'யார் நீங்க்'
''ச்சீனு இருந்தா பேசச்சொல்லுங்....க'
' இங்க சீனுன்னு யாரும் இல்லை.உங்களுக்கு சீனு என்ன வேணும்'
'அந்த மயிதிலியானு பேச்சொல்லுங்கோ'
'இது ராங்க் நம்பர். நீங்க போன கட் பண்ணுங்க'
வயதான ஒரு பெண்மணியின் குரல் என் டெலிபோனிலிருந்து இற்றுக்கொள்கிறது.ஒவ்வொரு ஞாயிறு அன்று என் மனைவி இல்லை என் மகன் இல்லை நான் என்று பதில் பேசுகிறோம். பேச்சு எப்பவும் இவ்வளவுதான்.எத்தனை முறை ராங்க் நம்பர் ராங்க் நம்பர் என்று அடித்துச் சொன்னாலும் அந்தப்பெண் நாம் சொல்வதை எங்கே கேட்டாள்.
எந்த எண்ணிலிருந்து இந்த அழைப்பு வருகிறது என்பதை அறிய முடியவில்லை. நானும் என்னவளும் யோசித்தோம். அதன்படியே நான் அருகிலிருக்கும் தொலைபேசி நிலையம் சென்றேன்.
'உங்க கிட்ட டிஸ்பிளே வர்ர டெலிபோன் இல்லயா' டெலிபோன் நிலையத்து வாசலில் நீல நிற யூனிஃபாரத்தில் இருந்தவர் என்னிடம் கேள்வி வைத்தார்..
'இல்லை சார்'
'ஒண்ணு ப்ண்ணுங்க அந்த லேடி பேசும்போது நீங்க போன் ரிசிவர தூக்கி தூரமா வச்சிட்டு உடனே இங்க வாங்க அந்த நெம்பரை அப்பத்தான் கண்டு பிடிக்க முடியும். என்ன நான் சொல்றதைச்செய்வீங்களா'
' அப்படியே செய்யறேன் சார்'
சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தேன்.மனைவியிடம் இது விஷயம் சொன்னேன்.
'போன் ரிசிவர எடுத்து தூரமா வச்சிட்டு அப்படியே டெலிபோன் ஆபிசுக்கு எல்லாம் ஓட முடியுமா என்ன? நீங்க டெக்னிகலா விஷயம் தெரிஞ்ச சரியான செக்ஷன்லதான் பேசுனிங்க்ளா இல்ல ஒரு காலத்துல உங்க தங்கச்சிக்கு மாப்பிள்ள பார்த்த கணக்கா அதான் யாரோ தெருவுல நின்னுகிட்டு இருந்த ஒரு மூணாவது மனுசன் கிட்ட விசாரிச்ச அந்த கதையா'
எனக்குப்பதில் சொல்ல வரவில்லை. ஒன்றும் பேசாமல் நின்று இருந்தேன்.
'நான் அந்த டெலிபோன் நெம்பரை என்னன்னு கண்டுபிடிச்சு உங்ககிட்ட சொல்றேன்.அப்புறம் நீங்க என்ன செய்யுறீங்கன்னு பாக்கலாம்'
'எப்படி'
'பாருங்களேன்'
அவள் அவளுக்குத்தெரிந்த நண்பர் ஒருவர் வீட்டிலிருந்து டெலிபோன் எண்களை டிஸ்பிளே செய்யும் ஒரு இன்ஸ்ட்றுமென்ட்டை இரவலாக வாங்கி வந்தாள்.அதுவரைக்கும் என் வீட்டு டெலிபோன் அவர்கள் வீட்டில் பதிலியாக இருந்தது. வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமையும் வந்தது ஒன்பது மணிக்கு ச்சரியாக டெலிபோன் மணியும் அலறி அடித்தது. நான்தான் ரிசிவரை எடுத்தேன்

'கொஞ்சம் சீனுவ பேசச்சொல்லுங்க'
'இங்க யாரும் அந்த பேரில இல்ல'
'மயிதிலி இருப்பாளே'
'இது ராங் நெம்பர். இனி இந்த நெம்பரைக் கூப்பிடாதிங்க' எத்தனை தரமோ இப்படி சொல்லி ஆயிற்று.
டெலிபோனில் டிஸ்பிலே ஆன நெம்பரைச்சரியாக்குறித்துக்கொண்டேன்.
'இப்ப டெலிபோன் ஆபிசுக்குப்போங்க இந்த நெம்பரு வேல செய்யுற விலாசம் வாங்கியாங்க மொதல்ல' அவள் கட்டளை தந்தாள். நான் பழைய பரமசிவமாய் அந்த டெலிபோன் ஆபிசுக்குப்போனேன். நான் எடுத்துகொண்டுபோய் காட்டிய அந்த எண்ணுக்கு 'மேற்கு தாம்பரம் சண்முகம் தெருவில் ஒரு வறுகடலை வியாபாரி' விலாசம் தந்தார்கள்.இனி அங்கு சென்று விசாரிக்க வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தேன்.
'சார் நீங்க் இந்த ஏரியாவுக்கு எப்ப குடி வந்தீங்க'
டெலிபோன் ஆபிசுக்காரர்கள்தான் கேள்வி கேட்டார்கள்
'அய்ந்து வருடம் இருக்கும்'
'அப்ப இந்த அஞ்சி வருஷமா இப்படி ஒரு கால் வருதா'
'ஆமாம் சார். இப்பத்தான் இது என்ன விஷயம்னு கண்டுபிடிக்க யோசனை வந்திச்சு'
'சார் அஞ்சி வருஷத்துக்கு முன்னால சீனுவாசன்னு ஒருத்தருக்கு இதே டெலிபோன் நெபம்ரு வேல செஞ்சிது..அவரு போஸ்ட் ஆபிசுல வேலையும் செஞ்சாரு குடியும் இருந்தாரு. அப்புறம் அவருக்கு திருநெல்வேலி வேல மாற்றலாயிடுச்சின்னு மட்டும் எனக்கு நல்லா தெரியும் நானும் அவரும் மலயாள மாமி மெஸ்சுல அப்பப்ப ஒண்ணா லன்ச் சாப்பிடுவோம்.' கணினித்திரையயை உற்றுப்பார்த்துக்கொண்டே ஒருவர் எனக்குப்பதில் சொன்னார்.
நான் கட கட என் வீடு திரும்பினேன். நடந்த விபரத்தைக் காத்துக்கொண்டிருந்த அவளிடம் சொன்னேன்.
'வருகிற ஞாயிறு காலை ஒன்பது மணிக்கு நேரா தாம்பரம் போயி அந்த பட்டாணிக் கடைக்குப்பக்கத்தில நில்லுங்க. யாரு வர்ரா எப்படி பேசுறான்னு பாருங்க'
மீண்டும் அவள் எனக்கு யோசனை சொன்னாள். எப்படியும் வயதான ஒரு பெண் வந்து போனில் பேசப்போகிறாள்.நாமும் போய் பார்த்துவிட்டு ப்பிறகு இன்னது செய்வது என்று முடிவுக்கு வரலாம். எண்ணினேன்.
மறு நாள் ஞாயிற்றுக்கிழமை .காலையிலேயே கிளம்பினேன். எட்டரை மணிசுமாருக்கு என்னுடைய டூவீலரை எடுத்துக்கொண்டு தாம்பரம் சண்முகம் தெரு முழுதும் தேடினேன். எனக்குத் தெரிந்த அரசாங்க நூலகத்துக்கு அருகே ஒரு செருப்புக்கடைக்கு ப்பக்கமாய் அந்த பட்டாணிக்கடை இருந்தது. கடை வாசலில் போய் நின்றுகொண்டேன்.
'பாண்டு பட்டாணிக்கடை' அழகிய கொட்டை எழுத்துக்கள் வா வா என்று தெருவில் போவோர் வருவோரை அழைத்துக்கொண்டிருந்தது.பட்டாணிக்கடையில் ஒரு ஓரமாக அடுப்பு எரிந்து கொண்டிருந்தது.தலையில் முண்டாசும் முண்டா பனியனும் போட்டிருந்த ஒரு நடுத்தர வயதுக்காரர் பட்டானி வறுத்துக்கொண்டிருந்தார்.மஞ்சள் கரைத்த சிறு சட்டி வாயைப்பிளந்துகொண்டு அருகிருந்தது.வெள்ளை மணலும் கருகிய மணலும் சிறு சிறு முட்டுக்களாய் ஒரு பக்கத்தில் அமர்ந்திருந்தன. அவர் அடிக்கொருதரம் வெற்றிலை போடுபவர் போலிருக்கிறது.வாயைக்குதப்பிக்கொண்டிருந்தார்.அடுப்பிலிருந்து எழும் புகை வெளிப்போகஒரு உயரக்குழாய் அவருக்கு முன்பாக விரைத்துக்கொண்டு நின்றது,
மணி சரியாக ஒன்பதை நெருங்கிகொண்டிருந்தது.எனக்கு மனம் படக் படக் என்று அடித்துக்கொண்டிருந்தது.நான் தவறு ஏதும் செய்யவில்லை இருந்தாலும்தான் என்ன.
தூரத்தில் ஒரு பெண்மணி நடந்து வந்தாள்.தலை வெள்ளை வெளேர் என நரை தட்டியிருந்தது. இரண்டு கைகளிலும் ஒவ்வொரு துணிப் பை,அவை நிறைத்துக்கொண்டிருந்தன அவள்.கடை அருகே வந்து விட்டாள்.முகம் வாடி க்கருத்து இருந்தது.வயது அறுபதுக்கும் எழுபதுக்கும் இடையில் இருக்கலாம்.தலை வாரி பல காலங்கள் ஆகியிருக்குமோ. என்னவோ அப்படித்தானே இருந்தது.காதி மூக்கில் எந்த அணிகலனுமில்லை.கழுத்தில் ஒரு மஞ்சள் நிற மணி மாலை மட்டும் அழகாகக்கிடந்தது.
தன் ஜாக்கெட்க்குள்: கை விட்டு குட்டை நோட்புக்கை கையில் எடுத்தாள்.
'சாரு'
கல்லாவில் இருந்த பட்டாணிக்கடை நாடார் டெலிபோனை ரிசிவ்ரோடு எடுத்து அந்தப்பெண்மணியிடம் கொடுத்தார். குட்டைப்புத்தகத்தைப்பார்த்துக்கொண்டே அந்தப்பெண் டெலிபோன் எண்ணை தட்டினாள். ரிசிவரைக்காதில் வைத்துக்கொண்டாள்.
'ச்சீனுவ பேசச்சொல்லுங்கோ'
'அப்ப மயிதிலி' அந்தப்பெண் டெலிபோனில் பேசுவது(?) எனக்குக்கேட்கிறது. ஒரு நிமிடம் கூட இல்லை. அந்தப்பெண்
டெலிபோனை ரிசிவரோடு அந்த பட்டாணிக்கடை நாடாரிடம் ஒப்படைத்தாள். தயாராக வைத்திருந்த நாணயம் இரண்டை அவரிடம் நீட்டினாள். கீழே கிடத்தி வைத்திருந்த இரண்டு பைகளையும் திரும்பவும் எடுத்துக்கொண்டாள். ஆகாயத்தைப் பார்த்து ஒரு முறை லேசாக ச்சிரித்துக்கொண்டாள்.
தாம்பரம் ரயில் நிலையம் பக்கமாகத்தான் நடையைக்கட்டினாள்.
நான் பட்டாணிக்கடை நாடாரிடம் நேராக சென்று என் மனைவிக்குப்பிடித்த உப்புக்கடலை நூறு கிராம் வாங்கினேன்.
''இப்ப கூட இந்த இந்த மாதிரி டெலிபோன் பேசறதுக்கு எல்லாம் ஆளு இருக்காங்க போல'
'சாரு.இந்த பொம்பள எத்தினி வருஷமாவோ இந்த நம்பருக்கு கால் போடும்.ஞாயிற்றுக்கிழமையே தவறினாலும் இந்த அம்மா வர்ரது மட்டும் நிக்காது. நானு ரூவா ரெண்டு வாங்கிகறேன் பேச வுடுறேன்.இந்த அம்மா தன் தம்பியதான் டெலிபோனில் கூப்பிடுது. நல்ல குடும்பத்து பொம்பளயாவே கூடம் இருக்கும். அந்த அம்மா தேடுற தம்பி அவுரு உயிரோடத்தான் இருக்காரோ அப்படி இருந்தா எந்த ஊருல இருக்காரோ. இந்த பொம்பளைக்கி மூள கொஞ்சம் கோளாறுன்னு தெரியுது.தாம்பரம் ரயில்வே பிளாட்பாரத்துல உக்காந்து கைய நீட்டும்.பிச்சை கிச்சை யாராவது போடுறாங்க:ளே உலகம் இன்னும் ஒண்ணும் அழிஞ்சிடலயே'
சண்முகம் தெருவில் நடந்து போன அந்த பெண்ணின் உருவம் மறைந்து போனது.உப்புக்கடலை பொட்டலத்தைக்கையில் வாங்கினேன்.கை லேசாச்சுட்டது.
'இப்பக்கி அடுப்பிலேந்து எடுத்த சரக்குல்ல' பட்டாணிக்கடைக்காரர் சொல்லிக்கொண்டார்.
டூவீலரை எடுத்துக்கொண்டு நான் என் வீடு திரும்பினேன்.மனம் என்னவெல்லாமோ செய்தது.சுகர் வியாதியும் வந்து மூளையும் சற்று கோளாறாகி வயது நாற்பது கூட தொடாமல் பாதியிலே போய்விட்ட என் தங்கையின் நினைவு வந்து உறுத்திற்று.
வீட்டுக்கு வந்து நடந்த விபரம் முழுவதுமாய் என் மனைவியிடம் சொன்னேன்..
' 'அந்த டெலிபோன் நெம்பர் வேண்டவே வேண்டாம் அத உடனே மாற்றிட்டு வேற நல்ல நெம்பரு ஏதாவது வாங்கிடுங்க' அவள் எனக்குக் கட்டளை தந்தாள். எனக்குத்தானின்னும் மனம் ஒப்பவே இில்லை.
-------------------------------------------------




.. ..