Wednesday, November 7, 2018

sathyaanandan kavithai








. சத்யானந்தன் எழுதிய கவிதை 'பகல் வேஷம்' படித்தேன்..நல்ல கவிதை.கனம் மிகுந்த சொல்லாட்சி. கவிதை விடுபடா ப்புதிர்களை ஊடுருவி ஆராயும் சிந்தனை ஓவியமாய் உரு எடுக்கிறது. சத்யானந்தனின் கவிதை வரிகள் எப்போதுமே சத்தியமானவை.

'அசல் வீர்யம்
எந்த விதையில் என்னும்
கேள்வி முளைவிட்டது'

படித்து மகிழ்ந்தேன்.ஆழமான கேள்வி வைக்கிறது கவிதை..
இன்றைய உலகை அளந்து பேசும் கவிதை வரிகளும் அழகாக க்கவிதையில் அவிழ்கின்றன.ஒரு கவிஞனுக்கு சாத்தியமாகாத விஷயம் என்று எதுவுமே இருக்க வாய்ப்பில்லை படைப்புத்தளத்தில் கவிதை என்பது பெரு உச்சம்.அது கவிஞருக்கு இயல்பாக சித்திக்கிறது.
'சேமிப்பவற்றுள் பணம்
.மட்டுமே
சல்லி வேர்கள் அற்றது.'
நல்ல விஷயம். சொற்களின் நர்த்தனத்தை சத்யானந்தனின் கவிதையில் அனுபவிப்பவன் நான்.'பகலின் முனகல்,.இருமை ஓய'.என்னும் பதங்கள் என்னைக்கட்டிப்போட்டன.சிறு விலங்குகள் பறவைகள் மரங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தும் கவிதைகள் கவிஞர் தருவது.
வௌவாலுக்கு இரவு பகல் இரண்டில்லை என்பது வாசகன் படித்து அசைபோடச்செய்யும் இடம்.மனத்திரையில் ஒரு வௌவால் தோன்றிக் கவிதைவரிகளை சொல்லிப்பார்ப்பதுபோல் உணர்ந்தேன்.கழுதை மலை யேறுகிறது. கரடுமுரடான மலைப்பாதையில் ஏறும் வழி அறிந்த கழுதை. தன் உடல் வலி அறியாக்கழுதையும் அதுவே என்று பேசுகிறது கவிதை.இங்கே கழுதை மனிதனாகக்கூட உருப்பெறலாம். வலியை நோக்கியவன் வாழும் வழியை இழந்து நிற்றலை மனித வாழ்க்கை யதார்த்தம்மாக்குகிறது என்பதனை மிகச்சரியாக எண்ணிப்பார்க்கலாம்.
தலையணை நீது நரம்பற்ற ஒரு வீணை. கண்ணீர் த்துளிகள் அதன் மீது விழுந்து அது நரம்பாகிறது.விணை இப்போது ஒரு முழு அடைகிறது.சோகம் மலர்ந்து வெளி எங்கும் இசை வியாபிக்கிறது. அற்புதமான சித்திரம்.இப்படி ஒரு பேசும் சித்திரத்தை கவிதை கொணரும்போது வாசக மனம் நிறைந்து போகிறது.
பாதி உண்மைகள் பகுதி உண்மைகள் எனத் தரம் நோக்கும் சத்யானந்தன் உண்மைகளின் ஊடே மனிதனுக்கு அகப்ப்படா ஒன்று.கண் சிமிட்டி ப்பேசும் அந்த மொழி தனக்கு வசப்படுமா என்பதில்.கவனம் கொள்கிறார்.
-----------------------------------------------......

Sunday, September 23, 2018

maartam-story



மாற்றம் -எஸ்ஸார்சி

நான் சென்னைக்குச்செல்லும் பேருந்துக்காக நின்றுகொண்டிருந்தேன். ' சென்னை' எனப் பளிச்சென்று எழுதி வைத்துக்கொண்டு புதுவைப் பேருந்து நிலயத்தில் பேருந்துகள் சில அணிவகுத்து நின்றன.
நானும் என் மனைவியும் சீர்காழிக்குப்பக்கமாக ஒரு பயணம் போய்வந்தோம்... மிகநெருங்கிய உறவினர் இறப்பொன்றுக்குச்சென்றுவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தோம்.
புதுச்சேரி பேருந்து நிலையத்தில் வண்டியின் முன்பக்கத்தில்
சென்னை என்று எழுதிய போர்டு இருக்கிறதே என்று ஏறி அமர்ந்துவிடவும் முடிகிறதா அதுதான் இல்லை.ஒரு.பத்து பேருந்துக்கு ஒன்பது பேருந்து கிழக்கு கடற்கரை ச்சாலை(ECR) வழி என்று சொல்லி நம்மை ஏமாற்றி விடுகின்றன. தாம்பரம் வழி சென்றால் தான் என் வீடு போய்ச்சேர வசதியாக இருக்கும். பேருந்துகளில் சில பெருங்களத்தூரோடு பைபாசில் போய்விடும் ஆக தாம்பரம் போகாது .
சென்னைக்கு ப்.புதுச்சேரியிலிருந்து புறப்படும் வண்டிகளில் மரக்காணம் வழி சென்று மதுராந்தகம் ஏரிக்கரை காட்டி கிராமத்து அழகை எல்லாம் பாரடா பார் எனப் பார்க்க வைத்து பயண நேரத்தை க்கொஞ்சம் கூட்டி காலை வாறி விடும் ரகமும் உண்டு.
இதோ திண்டிவனம் வழியே பைபாசில் கோயம்பேடு செல்லும் ஒரு பேருந்தைக்கண்டுபிடித்தாயிற்று.அதற்குத்தானே இத்தனைப்பாடு.பேருந்துக்குள்ளாாக ஏறி இடம் போடவேண்டும்.இடம் போடுவதில் ஏத்தனை சண்டை.பொறுத்தார் பூமி ஆள்வார் பொறாதார் காடாள்வார் என்கிற வசனம் எல்லாம் இங்கே கவைக்கு உதவுமா?.அந்தப்பேருந்தில் இரண்டு வழிகள் இருந்தன.முன் பக்கமும் பின் பக்கமும் மக்கள் முண்டி அடித்துக்கொண்டு ஏறினார்கள்.மூட்டை முடிச்சுக்கள் ,குழந்தைக்குட்டிகள், கைகால் முடியாதவர்கள், காயலாக்காரர்கள் ஏறுகிறார்களே என்று யாரும் தாட்சண்ணியம் பார்ப்பதில்லை. பார்க்க முடியாத படிக்கு நடப்புக்கள் சிக்கலாகிக் கிடக்கின்றன.
.தலை வலியும் திருகு வலியும் அவர் அவர்களுக்கு வந்தால் மட்டுமே சில பூடகமான சமாச்சாரங்கள் அம்பலப்படுகின்றன.எப்படியோ ஒரு இரண்டு பேர் அமரும் இருக்கையைப்பிடித்துவிட்டேன்.ஒரு பேருந்தில் அமர்ந்து பயணிக்க ஒரு சீட்டுக்கிடைத்துவிட்டதில் ஒரு நிம்மதி அது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று பொய் சொல்வானேன்.
வண்டி கிளம்ப இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? என் மனைவி வினா வைத்தாள்.இன்னும் பத்து நிமிடம் ஆகலாம் என்று தெரிந்தவர்கள் சொன்னார்கள்.'லோடாயிட்டா கெளம்பிடறதுதான். வண்டியின் கண்டக்டர் வெடுக்கென்று பதில் சொன்னார்.
'பாத் ரூம் போய் வரலாமா?' என் மனைவி கண்டக்டருக்கு வினா வைத்தாள்.'பேசாதிங்க சட்டுனு போனாமா வந்தமான்னு வாங்க' அவர் கட்டளை தந்தார்.ஒரு பத்து ரூபாய் நாணயத்தை எடுத்து அவள் வசம் கொடுத்தேன்.
'இது இங்க செல்லுமா,தமிழ் நாட்டிலே பத்து ரூபாய் நாணயத்தை அங்கீகரிக்க மறுக்கிறார்கள்.அதன் பிறப்பில் என்னவோ குறையாம். புதுச்சேரியிலுமா அப்படி?'இந்த விஷயத்தில் தமிழ் நாடென்ன புதுச்சேரி என்ன எல்லாம் ஒன்றுதான்' அவள் பதில் சொன்னாள்.ஒரு இருபது ரூபாய் கொடுக்க அந்த நோட்டோடு போனாள் உடன் வந்தாள். நான் தான் அதைக்கொடுத்து அதுவும் இப்போதுதானே அனுப்பினேன். போனதும் தெரியவில்லை வந்ததும் தெரியவில்லை. என்னிடம் ஒரு பத்து ரூபாயை பாக்கி என நீட்டினாள்.அதுவும் ஒரு பத்து ரூபாய் நாணயம்.'மீண்டும் இப்படி கோகிலாவா' என்றேன்.
'சென்னை செல்பவர்களுக்கு ஒன்றும் பிரச்சனையே இல்லை. இந்த பத்து ரூபாய் நாணயம் அங்கு ஓடிவிடும்' பாத் ரூம் பொறுப்பாளி சொன்னதாகச்சொன்னாள் அவள்.
எங்கள் இருக்கைக்குப்பக்கத்தில் பத்து கல்லூரி மாணவர்கள் ஏறி அமர்ந்திருந்தார்கள்.அதனில் நான்கு பேருக்குப்பெண்கள்.எல்லோருமே இருபது வயதுகளில் தெரிந்தார்கள்.யாருக்கும் வாய் ஓயவில்லை.பேசிக்கொண்டே இருந்தார்கள்.சத்தம் போட்டு ப்பேசினார்கள்.பத்து பேருமே தமிழ் நாட்டுக்காரர்கள் இல்லை.இந்தியும் ஆங்கிலமும் பேசினார்கள் எத்தனை வேகம்..புதுச்சேரியில் என்ன படிக்கிறார்களோ அது ஒன்றும் தெரியவில்லை.கண்டக்டர் டிக்கட் போட்டுக்கொண்டு வந்தார் பத்து பேருக்கும் பத்து சீட்டு ஒரு மாணவனே வாங்கி முடித்தான். இனி கன ஜோர்.ஒருவர் மடியில் ஒருவர் படுத்துக்கொண்டார்கள். தாடை பிடித்துக்கொஞ்சிக்கொண்டார்கள்.எது எதனையோ கொண்டு வந்திருந்ததை ஒருவருக்கு ஒருவர் ஊட்டிவிட்டுக்கொண்டார்கள்.'பொது மக்கள் பயணம் செல்லும் அரசுப் பேருந்திலா இப்படி?' என்மனைவி என்னைக்கேட்டாள்.மெதுவாகத்தான் என்னைக்கேட்டாள்.அதற்குள் ஒரு மாணவ எங்களை முறைக்க ஆரம்பித்தாள்.'அவர்களுக்கு தமிழும் தெரியலாம்' என்றேன்.
'நமக்குத்தான் தமிழ் மட்டுமே தெரியும்'
'அது நமது வரலாறு' நான் பதில் சொன்னேன்.. மாணவிகள் ஒரு சிலர் இந்திப்பாடல் ஒன்றை பாடினர்.கோரசாக எல்லோரும் அதையே பாடிக்கொண்டார்கள்.எங்களுக்குப்பின்னால் இருக்கையில் இருந்த ஒருவர் நடுத்தர வயதிருக்கலாம். நெளிய ஆரம்பித்தார். எழுந்து கொண்டார்.'படிக்கிற பசங்கதானே நீங்க நல்ல படியாவரமாட்டிங்களா. அட்டூழியம் பண்ணுறீீங்க.இது பொது மக்கள் பயணம் செய்ற்து.கொஞ்சம் அடங்கிப்போனம்னா நல்லது.தெரிதா' என்று சத்தம் போட்டார்.பத்து பேரும் அந்த மனிதரை ஒரு முறை பார்த்துக்கொண்டனர்.அவ்வளவுதான்.
கண்டக்டர் அருகில் வந்தார்.'காலேஜ் பசங்க கிட்ட எல்லாம் யாரு பேசி மீள முடியும்.புசுக்குன்னு வண்டிய நிப்பாட்டி ப்போடுவாங்க.அதுவும் இதுங்க நம்ம பாஷையும் பேசறது இல்லயே.நாம என்னா பேசுனா என்ன அதுங்களுக்கு வெளங்கப்போவுது.இன்னும் செத்த நேரம் பொறுமையா இருந்தா போதும்'சமாதானம் சொல்லிக்கொண்டர் 'இதுவே தனியார் வண்டின்னா இப்படி கும்மாளம் போடுவாங்களா வாயையும் இன்னொண்ணையும் இழுத்து மூடிகுனு உக்காந்து இருப்பாங்க' மீண்டும் சொன்னார் அந்த நடுத்தர வயதுக்காரர்.உடன் என் மனைவியும் ஆரம்பித்தாள் அதுவும் ன்னிடம்தான்'யாராவது ஒருத்தர் கேக்குணும்.பொது எடத்துல எப்பிடி நடந்துகுறதுன்னு இருக்கு.அதுக்குன்னு ஒரு அளவு வேணாம்' நான் தான் அவளுக்கு சமாதானம் சொன்னேன்.'சென்னையில மின்சார ரயில்ல எப்பிடி இருக்கு.ஜோடி ஜோடியா என்ன என்ன அசிங்கமா நடக்குது.யாராவது வாய தொறக்க முடியுமா ஒரு பார்க்குக்கு இல்ல பீச்சுக்கு போய் நிம்மதியா உக்காரமுடியாதா ஏன் ஒரு கோவிலு கொளம்னு போனாலும் இதே கண்றாவிதான்' எங்களை ஒரு முறை பேருந்தின் நடத்துனர் பார்த்து ப்புன்னகை செய்தார்.நாங்கள் பேசுவதில் அவருக்கு ஒரு சமாதானம் தெரிவதாய் உணர முடிந்தது.' நிர்வாகத்துல வேல செஞ்சி கை நிறைய சம்பளம் வாங்குற கண்டக்டருவ இந்த் அநியாயத்தைக்கேக்குணும் அப்பத்தான் அது சரியாவுமிருக்கும்' அந்த நடுத்தர வயதுக்காரர் மீண்டும் ஆரம்பித்தார். அவருக்கு முன் தலை மட்டும் கொஞ்சம் முடி இல்லாமல் வழுக்கைஆக இருந்தது.பேருந்தில் சற்று அமைதி நிலவியது.வண்டி கிளியனூர் தாண்டிக்கொண்டிருந்தது.'அவரு ஆம்பளை அத கேட்டாரு எல்லாருமா கேக்குறாங்க.அது அது முழிக்கறத பாருங்க' என்றாள் என் மனைவி.சில நிமிடங்கள் மட்டுமே கடந்தன.அந்த பத்து பேரும் கொல் என்று சிரித்தார்கள். அந்த முன் வழுக்கை நடுத்தர வயதுக்காரரை ப்பர்த்துப் பத்துபேரும் 'கொக்கு'காட்டினார்கள்.
பின் ஒருவர் மடியில் ஒருவர் படுத்துக்கொண்டு தலைமுடியை வருடினார்கள்.கொஞ்சிக்கொண்டார்கள்.இன்னும் என்ன எல்லாமோ செய்துகொண்டார்கள்.பார்க்க அருவறுப்பாகவே உண்ர முடிந்தது.' நீங்க எல்லாம் பெசாசு சென்மமா எங்க ஊருக்குப் ,படிக்க இல்ல பொழைக்க வர்ரீங்க ஆனா உங்க கொழுப்பு கூடிகிட்டேத்தான போவுதுது. வண்டியில நாகரீகமா வருலாமுல்ல' சொல்லிய நடுத்தர வயதுக்காரர் அமைதி ஆனார்.'நமக்கு ஏன் வம்பு.எந்த கழுதயாவது எங்கயாவது மேயுட்டும் ' நான் என் மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்.அந்த பத்து பேரில் ஒருத்தி கைபேசியை எடுத்தாள் ஏதோ நம்பரைப்போட்டாள்..நான்கு வார்த்தைதான் பேசினாள். கைபேசியை வைத்துவிட்டாள்.அந்த பத்துபேருக்கும் என்னவோ சமிக்ஞை செய்தாள்.எல்லோரும் கப்சிப் ஆயினர். எங்கும் அமைதி.அந்த பத்துபேரா இப்படி என்று எனக்கு அய்யம்தான் வந்தது.'கதவுன்னா அதுக்கு கண்டிப்பா ஒரு தாப்பா இருக்கணும்' என்றாள் என் மனைவி.வழுக்கைத்தலை நடுத்தர வயதுக்காரர் உறங்க ஆரம்பித்தார். வண்டி திண்டிவனத்தை த்தொட்டுக்கொண்டு இருந்தது. தேசிய நெடுஞ்சாலை.மேம்பாலம் வருவதற்கு முன்பாகவே இருவர் எங்கள் வண்டியை நிறுத்தினர்.'வண்டிய இங்க நிறுத்துறாங்க ஏன்.எதனா ரிப்பேரா' நான் சொல்லிக்கொண்டிருந்தேன்.
வண்டியில் ஏறிய இருவரும் கண்டக்டரை நோக்கிச்சென்றார்கள்.'யாரு அது குடிச்சுட்டு கலாட்டா பண்றது'
ஒரு சேர வினா வைத்தனர்.'யாரும் அப்பிடி இல்லயே.ஒண்ணும் இங்க தகறாறு எதுவும் நடக்கவே இல்ல' என்றார் கண்டக்டர்.சற்று நேரம் முன்பு கைபேசியில் போன் செய்த அந்த இந்திக்கரப்பெண் வழுக்கைத்தலையரை கைகாட்டினாள்.அவர் இன்னும் உறங்கிக்கொண்டுதான் இருந்தார். வண்டியில் ஏறிய இருவரில் ஒரு மீசைக்காரர் வழுக்கைத்தலையரின் சட்டையைப்பிடித்துக்கொண்டார்.'ஏய் எழுந்திரிடா.இங்க என்ன வண்டில குடிச்சுட்டு கலாட்டா பண்றயாம்.இறங்குடா கீழே. உன்னை நாலு தட்டினாதான் சரியா வருவ' தூக்கத்தில் இருந்த அந்த நடுத்தர வயதுக்காரர் ஒன்றும் புரியாமல் பேந்த பேந்த விழித்தார்.'நீங்க யாரு. நீங்க என்ன ஏன் அடிச்சிவிரட்டுறீங்க' என்று ஓங்கிக்கத்தினார்.'ஸ்டேசனுக்கு வந்தா புரியும் யாருன்னு' பதில் சொன்னார் மீசைக்காரர்.
'கழுதைய இறக்கி விடு.நாங்க அங்க பாத்துகறம்' என்றார் கண்டக்டரிடம் அந்தக் காவல் அதிகாரி. இருவருமே ம்ஃப்டியில் இருந்தனர். அங்கு என்னதான் நடக்கிறது என்று நான் உற்று உற்றுப் பார்த்திக்கொண்டிருந்தேன்.' அங்க பாக்காதிங்க நமக்கு ஏன் இந்த வீண் வம்பு ' என் மனைவி எச்சரித்தாள்.'அதுவ இப்ப நம்பள பாத்து கூடம் மொறைக்குதே' அந்த பத்து பேரையும் பார்த்து அவள் சொல்லிக்கொண்டாள்.வழுக்கைத்தலையரை நெட்டியபடி சென்றனர் மஃப்டியில் வந்த காவல் துறையினர் இருவரும்
.'இங்க என்ன நடக்குதுன்னு ஒண்ணும் புரியில்ல.நானு ஏதும் போலிசு கம்ப்ளயிண்டு குடுக்கல.அந்த ஆசாமியும் தப்பா எதுவும் பேசிடல.அவரு குடிச்சிபுட்டு மப்பு லயும் இல்ல.ஆனா ரெண்டு வார்த்தை நல்லதுக்குத்தான் கேட்டாரு. படிக்கிற புள்ளிவ. நம்ப பாஷை தெரியாத புள்ளிவதான் .அதுக்குன்னு இம்புட்டு கொடுமையா' புலம்பிக்கொண்டே இருந்தார் கண்டக்டர்.
நடுத்தர வயது வழுக்கைத்தலையரின் துணிப்பை ஒன்று அவரின் காலுக்கு க்கீழாக இருந்ததை,அவர் மறந்து போய் வண்டியில் விட்டு ச்சென்றதை என் மனைவியிடம் காட்டினேன்.' மொதல்ல நம்ப பொழப்பை பாப்பம். செத்த கம்முன்னு வாங்க' என்று மனைவி என்னை விரட்டினாள்.
'எல்லாம் அந்த போன் போட்டுப் பேசுனவ அவ செய்ததுதான். அந்த பொம்பள நாம பேசுற பாச ரவையும் தெரியாதவ. அவளுக்கு பாரு நம்மூருல இம்மாம் பவுரு.நாயம் பேசுன மனுசன் ஒரு நல்லவரு அடி உத வாங்கிகிட்டு ப்போறாரு.கேக்குறதுக்குத்தான் யாருமில்ல.' என் மனைவி மெதுவாகச்சொன்னாள்.
' நாம இருக்குற ஊர்லதான் ஆவுட்டும், இப்ப எல்லாம் நாம பேசுற பாசய பேசுற நம்ம சனத்த, எங்கனா பாக்குறயா? காணோமே உனக்குத்தெரியாது. புள்ள, உலகமே மாறிகிட்டு வருது' நான் பதில் சொன்னேன்.அவர்கள் சேட்டையை மீண்டும் ஆரம்பித்தனர்.நான் என் கண்களை இறுக்கி மூடிக்கொண்டேன்.
'திண்டிவனம் சீட்டு எறங்கிக' கண்டக்டர் ஆணை இட்டுக்கொன்டு இருந்தார்.அந்த பத்துபேரின் அரட்டையும் கலாட்டாவும் உச்ச கதியில் தொடர்ந்து கொண்டிருந்தது.
--------------------------------------------------------------

Sunday, September 9, 2018

paavannanin kavithaikaL 8


8  பாவண்ணனின் கவிதைகளில் ஒரு பயணம்.


 ( பாவண்ணன் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.அவைகளை ஒரு தொகுப்பாய் வாசிக்க அவரின் படைப்பு மனம் பற்றியஒரு புரிதல் கூடுதலாய்ச் சித்திக்கும்.ஆக அவரின் கவிதைகள் வேண்டும்.எத்தனை புத்தகக்காட்சிகள் தேடினாலும் பாவண்ணனின் கவிதைத்தொகுப்பு கிடைக்கவில்லை.ஒன்று கிடைத்தது 'பச்சைக்கிளியே பறந்துவா' அது அவர் சிறுவர்கட்கு எழுதிய கவிதைகள். என்னுடைய தேடுதல் நிறைவடையவில்லை
அவரிடமே தொலைபேசியில் விசாரித்தேன்.'எனக்குத்தங்களின் கவிதைத்தொகுப்பு வேண்டும்' என்றேன்.
'நகலெடுத்து அனுப்பட்டுமா' என்றார்.நான் நேரில் வந்து பெற்றுக்கொள்கிறேன் அவருக்குப் பதில் சொன்னேன்.2017 ஜூன் முதல் வாரம். பெங்களூரு மாநகரின் அல்சூரில் அவர் இல்லத்திலேயே அவரைச்சந்திக்கும் பேறு பெற்றேன்.. அவர் எழுதிய 'குழந்தையைப்பின் தொடரும் காலம்' 'கனவில் வந்த சிறுமி' 'புன்னகையின் வெளிச்சம்' எனக்கவிதைத்தொகுப்புக்கள் அவரே நகலெடுத்து எனக்கு அன்போடு வழங்கினார்.நெகிழ்ந்துபோனேன்.பாவண்ணனின் கவிதா மனம் பற்றிய ஒரு புரிதலை வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள அவையே எனக்குக் கூடுதல் அடிப்படை).
படைப்புத்தளத்தில் கவிதைக்கு இணையாக எதுவுமில்லை. பிற எவையும் கவிதையின் பின் தொடர்வன மட்டுமே.ஆன்மாவின் வெளிப்பாடு கவிதை.மன நிழல்அது. மன ப்பூரணத்தின் பூப்புமே.கவிஞனின் ஆழத்தை ஆகிருதியை அலாரிப்பை ஆனந்தத்தை அது அளக்க வல்லது. மனித மனம்படுபாட்டை சுடுவேதனையின் சூக்குமத்தை ஓயாது குடையும் தத்துவக் குமைதலை, அறச்சீற்றம் மேலோங்கிக் கொப்பளித்து எழும் கோபத்தை,கொஞ்சி மலரும் அழகுக்காதலை, கலவி யின் அருட்கொடையாம் குழவி தரும் பெருங்களிப்பை, ஆடு முகர்ந்து மேயும் பச்சை சிறுபுல் தொடக்கம், ஆகாயம் தொடும் பனிச்சிகர த்தை நோக்க நோக்க உள்ளத்தில் ஓயாது துளைத்து எடுக்கும் ஞானத்துருவலை ச் செய்தியாய்ச்சொல்லவரும் உன்னதம் கவிதை.
'கவிதை எழுத
வாழ்வினூடே
ஓடும் தர்க்கத்தின்
இழையை உணரும்
திறன் வேண்டும்.' என்று வரையறை தருவார் கவிஞர் பிரமிள்.
பூமண்டல இருப்பில் நீர் நிலைகள் முக்கியமானவை.நீர் நிலைகள் இல்லா எவ்வண்டக்கோளமும் உயிர் நிலைத்தலின் செய்திதெரியாதன.எத்தனைப்பிரம்மாண்டமும் ஒரு மனித உயிரின் பார்வையில் அனுபவமாகதவரை அர்த்தமற்றன.ஆக நீர் முக்கியமானது.நீர் நிலைகள் மிக மிகமுக்கியமானவை.
'ஓடும் நீர் ஒரு தேவதை
கால் நடைகள் தாகம் தீர்ப்பன
நதிகள் வணக்கத்திற்குரியன
நீர் அமிருதம்
அதுவே ஔஷதம்
கடவுள் நீரை வாழ்த்துக.'(ரிக்1.1.23) நாம் தெரிந்தும் இருக்கலாம்.
பாவண்ணனுக்கு அவர் பிறந்த வளவனூரின் ஏரி ஆக முக்கியமானது.அதைத்தொட்டுப்பேசாத அவரின் கவிதைப் படைப்பு அபூர்வம்.பேச்சுக்குப்பேச்சு வார்த்தைக்கு வார்த்தைக்கு ஏரியின் கதைதான் அவரிடமிருந்து இயல்பாக அது புறப்பட்டுவரும்.எத்தனையோ மேடைப்பேச்சுக்கள் கேட்டிருப்போம் அத்தனையிலும் அந்த ஏரியின் சிலாகிப்பு.
'குழந்தையைப்பின் தொடரும் காலம்' நாற்பத்து நான்கு கவிதைகளைக்கொண்ட ஒரு கவிதை நூலாக விடியல் பதிப்பகம் கோவை கொண்டு வந்திருக்கிறது.கவிஞர் பாவண்ணன் நூலின் முன்னுரையில் புதுவைக்காரர், ம.லெ.தங்கப்பாவை மெத்தப்பணிவோடு எண்ணிப்பார்க்கிறார்.
' அன்புள்ள அம்மாவுக்கு' என சமர்ப்பிக்கப்பட்ட கவிதைத்தொகுப்பு இப்படித்தொடங்குகிறது.
'வறண்ட ஏரிக்குள் கம்மங்காடு
காவல் காக்கும் மூத்தபையனுக்குக்
கூழெடுத்து வருவாள் அம்மா.'
உழைக்கும் பிள்ளை கூழ்குடித்துஓய்வெடுக்க அதனில் மீந்த அந்த கஞ்சியைக்குடித்து ப்பசி ஆற்றிக்கொள்கிறாள் அன்னை. இத்தனையும் அரங்கேறுவது வறண்டு காட்சி தரும் அந்த ஏரிக்குள்ளே. அந்த ஏரி ஒரு பேரன்னை.அவள் மடி தருவது 'கம்பு'. ஏரியின்நீர் நிறைந்தால் ஊரே செழிக்கும். என் செய்ய? சுக்காய் வறண்டு கிடக்கும் ஏரி கம்பையேனும் விளைவித்து த்தன்மக்களை உயிர் பிழைக்க வைக்கிறது.
அந்தத்தாய் சொல்கிறாள்,
'அன்புதான் மொதல் படிப்பு
அதுக்கப்பறம்தான் பட்டப்படிப்பு'
வணங்கக்குவிகிறது அந்தத்தாயை வாசகனின் இரு கைகளும் தான்.அன்பேசிவம்.அன்பைத்தொலைத்துவிட்டு பெற்ற கல்வி வாழ்க்கை அங்காடியில் செல்லாக்காசு.இப்படிப்பேசுதல் இக்கணம் சாத்தியமா என்ன,லட்சம் கொடுத் த பின்னரே ஒரு மழலைக்கு ப்பள்ளியில் இடம் உறுதி செய்யப்படும் கலி காலம். என்றேனும் ஒரு நாள் இந்தத்துயரும் தொலையும் என்கிற நம்பிக்கையை விட்டுவிட முடியுமா?
எல்லா படைப்பாளியையும் ஒப்ப பாவண்ணனுக்கு பயணங்களில் ஈடுபாடு அதிகம். ஊர்ந்து செல்லும் ரயில் பயணங்களில் அவருக்கு அத்தனை வசீகரம்.சன்னோலரம் குந்தி இயற்கையை ரசிப்பதில் எல்லையில்லா ஆனந்தம்.வெவ்வேறு ஊர்கள்,வெவ்வேறு மனிதர்கள்,வெவ்வேறு மொழிகள்,வெவ்வேறு பண்பாடுகள் இவை அத்தனையும் அனுபவித்து த்தெரிய கிட்டிய பெருவாய்ப்பு.
பாவண்ணனின் வளவனூரில் ரயில் நிலையம் இருந்தது.அதனை சமீபமாய் மூடிவிட்டார்கள்.ரயில் இப்போது வளவனூரில் நிற்பதில்லை. பாவண்ணன் ஒரு சிறுவனாய் அந்த ரயில் நிலயத்தை ச்சுற்றிவந்த இனிய நாட்கள் அவருக்கு மனத்திரையில் காட்சி ஆகின்றன.
'இடித்துச்சிதைத்தார்கள் ஒரு நாள்
எங்கள் ஊர் ரயில்வே ஸ்டேஷனை
காரணங்கள் சொல்வதா கஷ்டம்
'பஸ்ங்க வந்து ரயில அழிச்சாச்சி
வருமானமே இல்ல
ஊர்க்கு நடுவுல பஸ்ல ஏறுவானா
ஊர்க்கோடிக்கு வந்து ரயில புடிப்பானா'
வாழும் சமூகம் தர்க்க நியாயம் பேசுவதை பாவண்ணன் காட்சிப்படுத்துகிறார்.'தண்டவாளம் மட்டும் இருக்கிறது,பழசின் மிச்சம் போல' கவிதை முடிகிறது.
தான் இளமையில் வாழ்ந்த ஊரை ஒரு படைப்பாளியால் மறக்க முடியாது.பாவண்ணன் என்னும் கவிஞனை அவர் சிறுவனாக வாழ்ந்திட்ட அந்த ஊர் விட்டுவிடுமா? அடிமனதில் அதே நினைவு அது தோய்ந்து கிடக்கிறதே.'கனவு வழி' என்னும் கவிதை அவருக்கு எந்த ஊர் இப்போது முக்கியம் என்பதைச்சொல்கிறது.தான் வாழ்ந்த அந்த வளவனூர் மட்டுமென்ன நாகரீகம் என்னும் பெயரில் உலா வரும் விபரீதங்களுக்கு விதி விலக்கு பெற்றதா?.கிராமங்கள் தம் அமைதி தொலைத்து எத்தனையோ ஆண்டுகள் ஆயின.
'இந்த நகரம் என்னைப்பிணைத்த சங்கிலி
என்று தெரியும்
இங்குதான் வாழ்ந்தாக வேண்டும்
என்கிற விதியும் தெரியும்' என்று உள்ளது பேசுகிறார் பாவண்ணன்.
மரங்கள் ஒரு படைப்பாளியை வெகுவாக பாதிக்கவே செய்கின்றன.ஒவ்வொரு கவிஞனும் மரத்தை மனிதனைப்போலவே நேசிக்கிறான்.அவற்றோடு பேசிப்பார்க்கிறான்.கொஞ்சி முடிக்கிறான்.உணர்வுகளைப்பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறான்.பண்டைய தமிழ் இலக்கியங்கள் அப்படிப்பேசும் செய்தி அறிவோம்.வான் உயர்ந்த மரம் தனக்கு முன்னவள் போல். அவள் நிழலில் கலவிச்செய்தி பகிருதல் சீர் மரபன்று என்கிற தமிழர் பண்பாட்டுஉச்சம் பேசியதுஅறிந்தவர்கள் நாம். நம்மோடு வாழும் விருட்சங்கள் நம் உறவே.பாவண்ணன் விருட்சங்களை ஆழமாய் நேசிக்கிறார். 'வீடு' என்னும் கவிதை அழகாக இப்படிப்பேசுகிறது.
'நண்பரின் வீட்டு வாசலில்
ஒரு தாய்போல நிற்கிறது தென்னை மரம்'
அது ஆசீர்வதிக்கிறது. வாழ்வு கொடுக்கிறது. மக்களை மகிழவைக்கிறது. இனியஉற்சாகத்தை அள்ளி வழங்குகிறது.தென்னைமரம் தாயாக நிற்க நண்பரின்வீடு அதன் காலடியில். வீடு ஒரு குழந்தையாகித்தவழ்கிறது. இன்றைக்கும் தென்னையை த்தெய்வமாய்ப்போற்றும் கேரளப்பண்பு நம் நினைவில் வந்து நிழலாடுகிறது.
'காற்றில் விழுந்த மரம்' என்னும் கவிதை மரம் மனிதர்கட்கு விலங்குகட்கு நிழல் கொடுக்க ப் பந்தலாகி நின்றதை,பறவைகட்கு சரணாலயமாக இருந்ததைப்பேசுகிறது.
'ஊர்க்கடைசியில் இருந்த அம்மரம்
மண் பிளந்து விழுந்திருப்பது கண்டேன்
மழையோடு வந்த காற்று
ஏதோ வெறியின் வேகத்தில்
மரத்தை அடியோடு வீழ்த்திவிட்டது
மரத்தைத்தழுவிக்காற்றுக்கும்
காற்றைத்தழுவி மரத்துக்கும்
உண்டாகி வந்த நெருக்கம்
தகர்ந்தது ஏனென்று புரியவில்லை.'
உட்காரவந்த பறவைகள் மரம் வீழ்ந்ததுகண்டு ஏமாந்துபோகின்றன.பாவண்ணனுக்கு மரம் வீழ்ந்துகிடப்பது மனிதன் வீழ்ந்துகிடப்பதாக அனுபமாகிறது. முறிந்துபோயின மனிதக்கைகள். அதனில் நிணம் இரத்தம் கவிஞர் காணுகிறார்.வாடியபயிரைக்கண்டபோதெல்லாம் வாடிய அந்த வடலூர் வள்ளலை வாசக மனம் மனத்திரையில் தோழமையோடு கொண்டுதருகிறது.
நம்பிக்கை இருக்கவே செய்கிறது. பச்சை இலைகொண்டு அம்மரம் இனித் துளிர்க்கும். கவிதை நல்ல விஷயத்தை ச் சுட்டி முடிக்கிறது.
வாடகை வீட்டில் மரம் வளர்ப்போர் வீடு மாறி வேறு இடம் செல்லும்போது அவர்கள் வளர்த்து ஆளாக்கிய ஒரு மரத்தை விட்டுச்செல்ல வேண்டிய கட்டாயம்.வீட்டுச்சொந்தக்காரரிடம் ஒரு விண்ணப்பம் வைக்கிறார் கவிஞர்.
'வருத்தமோ கசப்போ எங்களோடு போகட்டும்
மரத்துக்காவது கருணை காட்டுங்கள்.'
இனி 'கனவில் வந்த சிறுமி' என்னும் இரண்டாவது தொகுப்புக்கு வருவோம். தஞ்சை அன்னம் வெளியீடு.52 கவிதைகள் இந்த க்கவிதை நூலை அழகு படுத்துகின்றன.பாவண்ணனின் வளவனூர் நண்பர் மோகனுக்கும் அவர் மனையாள் ரேவதிக்கும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் தொகுப்பு இது.
தென்பெண்ணை மீது ஆறாக்காதல் கொண்டவர் பாவண்ணன். தென்பெண்ணை அவர் ஊர் அருகே ஓடும் ஆறு.
இன்று அது காய்ந்து கிடக்கிறது.எப்போதேனும் தண்ணீர் வரக்கூடும் அவ்வளவே.
'வற்றாமல் வைத்துக்கொள்ளும் விதம்
ஆற்றுக்கும் தெரியவில்லை
மனிதனுக்கும் தெரியவில்லை'. என்கிறார் பாவண்ணன்.ஆறு உயிரோடு தன்னிடம் முறையிடுவதாகவே உணர்கிறார்.
'பொசுக்கும் வெப்பம் தாளாமல்
புரளும் போதெல்லாம்
வானத்தை நோக்கி முறையிடுகிறது
மேகங்களைக்கண்டதுமே
கண்ணுக்குத்தெரியாத கைகளை நீட்டி
காப்பாற்ற வேண்டி க்கதருகிறது.' தென்பெண்ணையின் சோகம் இங்கே வாசகனின் சோகமாய் அனுபவமாகிறது.காவிரித்தென்பெண்ணை பாலாறு ஓடி, தமிழ் நாட்டின் மேனி செழித்தகதை எல்லாம் இப்போது பேசமுடிகிறதா,காலம் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டு க்கேலி பேசுகிறது.
'மண்ணாகிப்போன ஆற்றின் வயிற்றில்
சாராய உலைகள் எரிகின்றன' கவிதை சமூகம் தடம் இறங்கிப்போனதை ச்சுட்டி ச்செல்கிறது..
பாவண்ணனுக்குப்பிடித்தது மரங்கள். 'ஆலமரம்' என்னும் ஒரு கவிதை அவர் மனதிற்குள்ளாக ஓங்கி த்தழைத்து நிழல் பரப்பி அவருக்கு கிச்சுகிச்சு மூட்டி மகிழ்கிறது.
'ஏரிக்கரையில் நிற்கும் மரமல்ல
அடையாற்றில் நிற்கும் மரமுமல்ல
எந்தத்தோப்பிலும் அந்த மரம் இல்லை
இந்த உலகத்திலேயே அந்த மரம் இல்லை
ஆல மரம்ஒரு கனவு' என்கிறார் கவிஞர்.காற்றிடம் கவிதை பேசும் கவிஞனுக்கு விண்மீன்களுடன் கைகுலுக்க முடிகிறது.ஆலம் விழுதுகள் அவர் கரம் பற்றி நேசம் சொல்கின்றன.
'மரத்தின் பாடல்' என்னும் கவிதையில்,
'மரத்தின் மொழி விளங்காத
மனிதக்கூட்டம்
கானத்தைக்காற்றெனச்சொல்லும்
கண்மூடி உறக்கம் கொள்ளும்' என்கிறார் பாவண்ணன்.மரம் அதன் மொழி பேசுகிறது.அது புரியாத மனிதர் கூட்டம் அதன் கீழே இளைப்பாறுகிறது.மரம் இசைக்கிறது. மனிதர்கள்அதனைக்காற்று என்கிறார்கள்.பாரதி குயிற்பாட்டிலே இப்படிச்சொல்வார்.
'கானப்பறவை கல கல எனும் ஓசையிலும்
காற்று மரங்கிளைடை காட்டும் இசைகளிலும்'
மரங்களிடை காற்று இசை எழுப்புவதை அனுபவித்த பாரதி மனத்தைப்பறிகொடுத்து நின்றிருக்கிறார்.பாவண்ணன் தென்னாட்டுத் திரிகூட மலையின் அந்த அழகில் தன்னை மறந்து போகிறார்.'உயிரின் இசை' கவிதை பெரிய கவிதை. மனத்தின் லயிப்பை சித்திரப்படுத்தும் கவியாவணம்.மலையும் அருவியும் காற்றும் பிரமிக்கவைக்கிறது கவிஞனை.கவிதைப்பிரவாகம் பாரதியின் குயில்பாட்டை நினைவுக்குக்கொண்டுவந்து இன்பம் கூட்டுகிறது.வாழுலகமும், அதன் இருப்பும் ஒதுங்கி ப்போக ஆனந்தப்பறவை களி நடனமிடுவதை க்காண வாய்க்கிறது.
'ஹைபெரியான்' கவிதையில் ஆங்கிலக்கவி கீட்சு இப்படிச்சொல்வார்.
'Mortal, that thou may'st understand aright
I humanise my sayings to thine ear
Making comparisons of earthly things
Or thou better listen to the wind
whose language is to thee a barren noise
Though it blows legend-laden thro'the trees.'
'நிலையா மனிதர்க்கு மானுடக்கவிதை சொல்லும் என் போன்ற கவியைவிட, காற்றை கவனியுங்கள் மனிதர்களே, மரங்களிடைத்தவழும் அது காவியம் பல சுமந்து அல்லவா வீசுகிறது'மனிதன் ஒருவனால் சொல்லியும் எழுதியும் சாத்தியமாகா கண்ணீர்க் கவிதை வரிகளை அவை அள்ளித்தருகின்றனவே.' என்கிறார் கீட்சு.
பாவண்ணன் 'சரித்திரம்' என்னும் கவிதையில்
'கண்கள் கைகள் கால்கள்
எல்லாம் உண்டு மரத்துக்கு'
அத்தோடு இல்லை கவிஞர் தொடர்கிறார்,
ஒவ்வொரு ஒரு மரமும் இலைவிரல் நீட்டி எழுதிவைக்கிறது.காற்றின் அகன்ற பக்கங்களிலே எழுதி வைக்கிறது. அந்த அளவு ஆழ்ந்து எழுதப்பட்ட ஒரு சரித்திரம் வேறெங்கும் இல்லை. மனிதன் ஆயுள் முழுக்க முயன்றாலும் அது அறிய இயலா சரித்திரம்.எழுதிக்கொண்டே போகிறார் பாவண்ணன்.
கவி கீட்சு இலக்கணம் சொல்வதுபோல் 'அழகுடை ஒரு பொருள், வர்ஷிப்பது நிலைத்த ஆனந்தத்தை.'
''கைவிரித்து அலையுமொரு மேகம்
நானோ அது எனத்தோன்றும் பித்து'
நோக்கும் திசை எல்லாம் நாம் அன்றி வேறில்லை எனபதை அனுபவிக்க வாய்க்கிறது பாவண்ணன் என்னும் ஒரு மெய்யான தமிழ்க் கவிஞருக்கு. சுடர் முகம் தூக்கி மானிட சமுத்திரம் நான் நான் என்று கூவிய பாரதிதாசன் நம் கண் முன்னே வந்துபோகிறார்.'தெய்வம் நீ என்றுணர்' என்னும் அந்த அத்வைத உளநிலையை அனுபவிக்காத எவரும் கவிதையின் அமுதினை வாசகனுக்குக்கொண்டுதரவும் முடியாது.
'கள்ள நடை நடந்து
காது மடல் தீண்டி
மின்சாரம் போல் இசையைப்பாய்ச்சிவிட்டு
எங்கோ ஓடி ஒளிகிறாய்
உன் தீண்டலால் எழுந்த
ஆயிரமாயிரம் அதிர்வலைகள் நடுவே
தத்தளித்துத்திண்றும் என் கண்முன்
துண்டுச்சித்திரங்களாய்
மோதிச்சிதறுகிறது உன்முகம்
அது என்ன அது என்ன
பார்க்க விரியும் கண்ணின் மடல்களை
பட்டென்று மூடிப்பரவுகிறது
உன் இசை.'
நாத இன்பம். அதனை ஒளித்து ஒளித்துவைத்துக்கொண்டு கண்சிமிட்டிக்காட்டுகிறது காற்று.உடன் நம் சிந்தனைக்கு வருவது விக்ரமாதித்தன் சொல்லும் கவிதை இலக்கணமே.
'ஒரு உண்மையான கவிதை தன்னளவில் தனி அழகு கொண்டதாகவே இருக்கிறது.ஒரு உண்மையான கவிஞன் தன்னளவில் தனி வியக்தி கொன்டவனாகவே இருக்கிறான்.ஒரு மொழி இது போல அசலான கவிதைகளுக்காவே காத்திருக்கிறது.ஒரு இனம் இப்படிப்பட்ட கவிஞர்களாலேயே கௌரவம் பெறுகிறது.'
பாவண்ணன் கர்நாடக மாநிலத்தில் வாழ்கிறார்.பிழைப்புக்குச்சென்ற பேரூர் பெங்களூரு. ஆற்றும் பணி மத்திய அரசாங்கத்ததுதான் என்றாலும் அன்றாடம் பழகுவது கன்னட மொழி பேசும் நண்பர்களோடுதானே.மக்களை ஒன்றாக இணைக்கவேண்டிய காவிரியின் கொடை அப்போதைக்கு அப்போது பிணக்கில் கொண்டு நிறுத்திப்பார்க்கிறது.கன்னடம் பயின்று அதன் இலக்கிய வளங்களை தமிழுக்குத்தந்த மொழிபெயர்ப்பாளர்களின் வரிசையில் சிகரம் என பாவண்ணன் திகழ்கிறார். ஆனால் அவரின் 'கண்ணாடி' அவருடைய அனுபவத்தை இப்படிப்பேசுகிறது.
'எந்தெந்த நெஞ்சில் நெருப்பிருக்குமோ
எந்தெந்த கைகளில் வன்மம் வழியுமோ
பதறிச்சோர்வடைகிறது மனம்
பீறிடும் அச்ச ஊற்றில்
தடுமாறிப்புரண்டோடி
கரையொதுங்கும் எண்ணச்சடலங்கள்
காற்றில் கரையாத கூச்சலால்
கால் நடுங்கும் வெளியே செல்ல
இன்னொருமொழி புழங்கும் ஊரில்
வாழத்தந்த விலை பெரிது.'
வாசகமனம் கவிதைவரிகளை வாசித்து கனத்துப்போகிறது.உயர உயர ப்பறந்தாலும் ஒரு பறவை அதன் மரப்பொந்திற்குத்தானே மீளவும் வந்து வாழ்க்கை நடத்தவேண்டிய யதார்த்தம் இருக்கிறது.
'இல்லாத இடம்' என்கிற தலைப்பில் ஒரு கவிதை பொட்டில் அறைந்த மாதிரி ஒரு நியாயம் சொல்கிறது.கவிஞருக்கு ஒரு வண்டிக்குள் பயணிக்க இடம் இல்லாதுபோனது.இடம் எப்படிக்கிடைக்கும்.பொழுதுக்கும் அவர் ஊர் சுற்றி. தனக்கென ஒரு இடத்திற்கு எங்கே போவது.மலை மரம் சூரியன் எனச்சுற்றி சுற்றி சுற்றித்திரிந்ததால்தான் இப்படி.யாரும் அவருக்காக ப்பரிந்து பேசவில்லை.பெரியவர்கள் அவரை சட்டை செய்யவில்லை.குழந்தைகள் கூட அவரை மறந்து இனிப்புத் தின்பண்டங்களைத்தேடி நிற்கின்றன.
'அவர்கள் உலகத்தில் நான் இல்லாதபோது
அவர்களோடு செய்யும் பயணத்தால் என்ன பயன்'
இது சமூகப்பிரக்ஞையுள்ள மனிதர்கள் படும் அவஸ்தை. குமரி முனையில் திருவள்ளுவருக்கு சிலை வானுயர எழுப்பலாம்.கங்கைக்கரையில் சிலை வைக்கக்கட்டுரை பக்கம் பக்கமாய் எழுதலாம். ஆனால் உழுவோரை உலகத்தார்க்கு அச்சாணியாகச்சொன்ன அந்தத்திருவள்ளுவரை யார் புரிந்துகொள்வார்கள்.வோட்டுப்பெட்டியே குலதெய்வம் என்கிற அந்த உண்மை எத்தனை யதார்த்தமாக அனுபவமாகிறது.
'கனவில் வந்த சிறுமி' என்னும் இந்நூலின் தலைப்புக்கவிதை ஒர் அழகு மலர்.வார்த்தைகளின் பிரயோகம் இங்கே கவித்திறனை மெருகிட்டுக்காட்டுகிறது.அந்தந்த வார்த்தையும் அதனதன் இடங்களில் கச்சிதமாய், ஒரு மலரின் இதழ்களெனப்பொருந்தி கவிசெய் நேர்த்திக்குக்கட்டியம் கூறுகின்றன.
'காலம் முழுக்க அவள் காலடியைத்தொடரும்
காட்டாற்றின் தடமானேன்-அவள்
கண்களில் பொங்குகின்றன கருணைக்கடல்கள்
வா வா என்றபடி முன்னே ஓடுகிறாள் அவள்
மலைகள் காடென்று போய்க்கொண்டே இருக்கிறாள்
அவள் அழைப்பென்னும் அமுதம் பருகி
ஆனந்தக்கூத்தாடும் பித்துற்றேன்
மேகங்களை நோக்கி மிதந்து செல்கிறாள் அவள்
நட்சத்திரங்களை கலைத்துப்போடுகிறாள்
ஓடுகிறேன் நடக்கிறேன் விழுகிறேன் எழுகிறேன்'
கவிதையை வாசிக்கும் தருணம் நாமும் ஓடி நடந்து விழுந்து எழும் அனுபவம் பெற்றுவிடுகிறோம் கவிதை வாசிப்பில் 'ஒய்யாரமாய் த்தவழ்தல்' வாசகனுக்குக் கண்ணெதிரே நிகழ்கிறது.
அடுத்த தொகுப்பு 'புன்னகையின் வெளிச்சம்'.சந்தியா சென்னை வெளியீடு.58 கவிதைகள் கொண்ட கவிதைப்புத்தகம் இது.முன்னுரையில் ஒரு செய்தி.'ஒரு மாவீரனுக்கே உரிய துணிச்சலோடு எல்லாத்தடைகளையும்கடந்து நிற்கிற அவர் தோற்றத்தை நினைத்துக்கொண்டதும் என் மனம் உற்சாகத்தால் நிறையும். வற்றாத நம்பிக்கைக்கும் குறையாத உற்சாகத்துக்கும் மறுபெயர்தான் தேவராசன்' அந்த இனிய நட்புக்கு இந்தக்கவிதைகள் காணிக்கை ஆக்கப்பட்டுள்ளன.பாவண்ணனின் அன்புத்துணைவியார் அமுதா.மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் என்பார்கள். அவர் அப்படியே.கவிஞர் பாவண்ணன் தன்னுரையில் அந்தப்பெண்மையின் இனிய உந்துதலுக்கு நன்றி சொல்கிறார்.'
பூ' என்னும் கவிதை குழந்தைகளின் மீது அவர் கொள்ளும் அன்பைப்பேசுகிறது.குழந்தைகளின் உலகம் அலாதியானது. அவர்களின் மொழி தனித்துவமானது. அவர்களின் நம்பிக்கைகள் செல்வதோ வேறு ஒரு தடம்.அவர்களோடு பழகி மகிழ்ச்சி கொள்ளுதல் ஒரு கலை.ஒரு வித்தியாசமான ஆளுமை. பாவண்ணனுக்கு அந்தக்கலை எளிதாகக்கைகூடுகிறது.கவிதையில் குழந்தையொன்று அவரின் கன்னம் கிள்ளிவிட்டு ஓடுகின்றது.
'முடித்தல்'என்னும் கவிதை தொலைபேசியில்பேசி முடித்த பின்னே நினைவுக்கு க்கொண்டுவரும் ஒரு விஷயம். அது தான் சொல்ல மறந்த கதை பற்றி அழகாகப்பேசுகிறது.அற்புதமாய் உரை முடித்தல் எல்லோருக்கும் கைகூடுவது இல்லை.ஏதோ விடுபட்டுப்போய் மனம் கிடந்து அடித்துக்கொள்கிறது.பாவண்ணன் தொலைபேசிக்காரர் ஆயிற்றே.பேசும் கலை அத்தனையும் செய்நேர்த்தியொடு அறிந்தவர்தான்.இருப்பினும் கவிதை இப்படிப்பேசவே செய்கிறது.

'இன்னும் நீட்டிக்கும் வாய்ப்புக்காக
உன்னுடன் சொல்லிப்பகிர்ந்துகொள்ள
நினைவுகளை சீய்க்கிறது மனக்காகம்'
இங்கே மனக்காகம் சீய்க்கிறது என்னும் சொல்லாட்சி வாசகனுக்கு புத்துணர்ச்சி தருகிறது. பறவைகள் கவிஞனை எப்போதும் அசைத்துப்பார்க்கின்றன.அதற்கு திருவள்ளுவர் தொடங்கி சான்றுகாட்டலாம். மனத உயிரையே பறவையாகக்காண்பவர் அவர். வனப்பறவை ஒன்றின் துயரம் கேட்டே வால்மீகி பெருங்க்ாவியம் படைத்தார்.மயிலும் குயிலும் வள்ளல் ராமலிங்கரோடு தத்துவம் பேசி மகிழ்ந்தன.ஷெல்லி என்னும் மாகவி வானம்பாடியை நோக்கினான். மகிழ்ச்சியில் பங்கு கேட்டு மன்றாடினான்.குயிலைக்கொண்டாடிய பாரதியின் கவிதைகள் தமிழின் படைப்பு உச்சமாகவே நமக்கு அனுபவமாகும்.சடாயு என்னும் ஒரு கழுகு ப்பறவை ஒரு பெண்ணின் பாதுகாவலனாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டு உயிர்முடித்த கதையை ராமாயணம் பேசும்.பாவண்ணனின்'பிறவி' என்னும் கவிதை காகங்களோடு அவரின் நட்பு குறித்து சிலாகித்துப்பேசுகின்றன.
'அதிகாலையொன்றில்
காக்கைகூட்டில் விழித்தெழுந்தேன்
என் வருகையை
அருகிலிருந்த நட்புக்காக்கைகள்
கரைந்து கொண்டாடின.
ஏதோ ஒரு திசையிலிருந்து
ஒவ்வொன்றய் இறங்கி வந்து நலம் விசாரித்தன
பித்ருக்காக்கைகள்.'
மறைந்த முன்னோர்களை எப்போதும் இந்தப்பறவை வழி நினைவூட்டும் நமது பண்பாட்டுக்கூறு பாவண்ணனை மட்டும் விட்டுவைக்குமா என்ன?
வாழும் சமூகத்தை பிரதிபலிக்க வேண்டிய தார்மீகப்பொறுப்பும் ஒரு எழுத்தாளனுக்கு நிச்சயமாக இருக்கவே செய்கிறது. unacknowledged legilators தானே இலக்கியக்காரர்கள்.'நாடகம்' என்னும் கவிதை ஒரு வேட்பாளர் தேர்தலுக்கு ஓட்டுக்கேட்க வரும் அந்த காட்சியை ப்படம் பிடிக்கிறது.பல நூறு மக்கள்.அது ஒரு யாத்திரை போல்.வேட்பாளர் கைகள் வணங்கிக் குவித்தபடி.வெள்ளை உடை, அதனில் ரோஜா மணம்,இல்லை மல்லிகை மணம்,இல்லை அது எதுவோ,உணர்ச்சிப்பிரவாகத்தில் தொண்டர்கள்,கண்ணிமைக்கா மக்கள் கூட்டம்,ஆரத்தித்தட்டுக்கள் அவைபெறும் நூறு ரூபாய்ப்பணம், குழந்தைக்குத்தமிழ்ப்பெயர் சூட்டல்,தண்ணீர், தெருவிளக்கு,ரேஷன் அரிசி என்று ஆரம்பித்த பெண்களிடம் விசேஷமாக நின்றார் வாக்குறுதி தந்தார்,பயிற்சி பெற்ற நாடகக்காரர்கள் போல் எல்லோரும் கச்சிதமாக நடித்தனர்.காட்சி முடிந்தது. அந்தத்தெருவே இப்போது வேரு ஒரு காட்சிக்கு தன்னைத்தயாரித்து க்கொள்கிறது.ஓவியமாகத்தீட்டி நடப்புக்களை கண்முன்னே கொண்டு தருகிறார் பாவண்ணன். இத்தொகுப்பில் இறுதியாக
'ஆதரவு' என்னும் கவிதை ஒரு வேலைக்காரச்சிறுமி தன்னை ச்சுற்றி சுற்றி ஏங்கித்தவிக்கும் ஒரு குட்டி நாய்க்கு இடம் அளிக்க முடியாத கையறு நிலையை ச்சித்தரிக்கிறது.
தனக்கே தத்துகுத்து என்கிற வாழ்க்கை. தன்னையே நாடி வந்த அந்த குட்டி நாய்க்கு எப்படி பரிவு காட்டுவது. இது வேலைக்காரச்சிறுமியின் சோகம். அது வாசகனையும் தொத்திக்கொள்கிறது.பாவண்ணனின் கண்களில் படாத நிகழ்வென எதுவும் இல்லை.அவரின் கவிதை மனம் விரிந்து பரந்து உயர்ந்து ஆழ்ந்து நோக்குகிறது.
ஓங்கிய ஒரு மரம். அதனில் தொங்கும் கனிகள்.அணில் ஒன்று அந்த மரக்கிளையில் இங்கும் அங்கும் நகர்கிறது, விளையாடுகிறது. தொடர்கிறது அந்த அணிலின் விளையாட்டு.பாவண்ணனுக்கு மனித மரணம் என்பது அவ்வணிலின் விளையாட்டாய்த்தெரிகிறது.
'நடந்துசெல்லும் மானுடக்கூட்டத்தின்
பாதங்களுக்குக்கீழே
நிழல் போல் ஒட்டிக்கிடக்கிறது மரணம்'
என்கிறார் கவிஞர்.''நாம எங்க போனா என்ன நம்ம நெழல் நம்மோட' என்பார்களே அது நினைவுக்கு வருகிறது.அவரின் கவிதைகளைத்தேடி ஆழ்ந்து வாசியுங்கள்.இப்படி முடிக்கலாம்.
பாவண்ணன் என்னும் கவிஞரை வரவேற்போம். அவரின் கவிதை கனம் கூடியது. தமிழ்க்கவிதை இருப்புக்கு வளம் கூட்டுவது.பயிலும்போதெல்லாம் பாவண்ணன் கவிதைகள் ஒரு புத்துணர்ச்சியை ஒரு புதிய அனுபவத்தை அளிக்க வல்லன.
-------------------------------------------------------------------------









thaiyalai uyarvu sey -bharathi


'தையலை உயர்வு செய்' - எஸ்ஸார்சி


பெண்களைப்போற்றிய பேராசான் பாரதி. மாகவி பாரதிக்கு முன்னர் மகளிரின் விடுதலையில் இத்தனை ஆழமாக அக்கரை காட்டியவர்கள் யார் யார் என்று ஆராய்ந்து பார்த்தால் கோடிட்டுச்சொல்லும்படியாக தமிழ் மண்ணில் யாரும் இல்லை
.பாரதியின் குரு, சகோதரி நிவேதிதை மிகச் சரியாக வழிகாட்டியதனால் பாரதிக்கு மகளிரைப்பற்றிய பார்வை விசாலமானது. படைப்புத்தளத்தில் அடிவயிற்றிலிருந்து எழும் உணர்வுக்கொப்பளித்து ச்சிந்தனையை உலுக்கிட பாரதிபோல் யாரும் எழுதிடவில்லை.பாரதிதான் அதனைத்தொடங்கி வைக்கிறார்.அன்னமூட்டிய அன்னை ஆணையில் அனலை விழுங்குவோம் பாரதி முழக்கமிடுகிறார்.நிவேதிதை பாரதியின் ஞானகுரு.பாரதியின் கண்களைத்திறந்துவிட்ட மாமேதை.மெய்யான முற்போக்கின் ஊற்றுக்கண்.
கற்பினை ஆணுக்கும் பெண்னுக்கும் பொதுவில் வைத்தவன் பாரதி. திருவள்ளுவர் இது விஷயத்தில் பெண்டிரை மட்டுமே சுட்டிக் 'கற்பெனும் திண்மை' என்கிறார்.சிலப்பதிகாரமோ கண்ணகியைக்கற்பின் செல்வி என்று போற்றுகிறது.கம்பன் சீதையைத் திட்டியின் விடம் அன்ன கற்பின் செல்வி என்று பேசுகிறார்.பாரதிக்கு கற்பென்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது.சமத்துவமானது.
அடுப்படியில் சமைத்தல் மட்டுமா அவள் தொழில்.சட்டங்கள் இயற்றுவாள்.பாராளப்புறப்படுவாள்.புரட்சிப்பெண் அன்றோ அவள்.ஆணுக்குப்பெண் என்றும் இளைத்தவள் இல்லை பாரதிக்கு.
பராசக்தியே பாரதிக்குக்கடவுள்.மாகாளியே அவன் கும்பிடும் தெய்வம்.சோவியத் நாட்டில் மாகாளி கடைக்கண் வைத்துத்தான் புரட்சி சாத்தியமானதுவாய் பேசுவான் பாரதி.
பாஞ்சாலி சபதத்தில் பாரத அன்னையை பாஞ்சாலியாகப்பாவித்து ப்படைத்தப் பெருந்தகையோன் பாரதி.அவரின் கவிதைகள் அனல் வீசுபவை.கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும் என்று நம்பிக்கை விதை வழங்குவோன்அவன்.வெள்ளையர்களை விரட்டிய பின்னர்தான் பாரதிக்கு இந்தியத்தாய் ஆனந்தக்கூத்திடுவாள்.பாஞ்சாலியின் சபதம் பாரத அன்னையின் அடிமை விலங்கு ஒடித்த காவியமாக பாரதிக்கு அனுபவமாகிறது.நாட்டின் சுதந்திரத்தை 'சுதந்திர தேவியாய்த்தரிசித்தவன் பாரதி.
தம்ழ் இனத்துப்பெண்டிர் பிஜித்தீவின் கரும்பு வயல்களில் வியர்வையும் குருதியும் சிந்தி பாழும் வயிற்றுக்கு உழைத்துச்சாவதை எண்ணி எண்ணி ஏங்கி நின்றவன் பாரதி.நாம் அழுதுகொண்டிருக்கவா பிறந்தோம் ஆண் பிள்ளைகளா நாம்? வினா தொடுக்கிறான் பாரதி.
தமிழைத்தேனாய்ப்பாவித்தவன் பாரதி செந்தமிழ் நாடு என்று வாயினால் சொன்னாலே தேன் வந்து தன் காதிலே பாய்வதாய் உணர்ந்தவன் பாரதி.வானத்தைக்கிழித்து நீ வைகுண்டம் பர்க்கவேண்டாம்.'தமிழ் பயில்' என்று கட்டளை தருகிறான் மாகவி.தமிழின் சுவை கண்டார் இங்கு அமரர் நிலை கண்டார் என்று நெஞ்சு நிமிர்த்திப்பேசிய பெருமனதுக்காரன்..
'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பேசி 'சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்வீர்' கட்டளை தருகிறான்.'சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்'என்று வேண்டுதல் வைக்கிறான்.
வாழ்கிற மண் மீது ஆறாக்காதல் கொண்டவன் இக்கவிஞன்.எத்தனை வளம் உண்டு புவிமேலே அவை அத்தனையும் பெற்றுச்சிறப்பாய் நிற்கிறாள் தமிழ்த்தாய் என்கிறான். தமிழ் மண்ணை பெற்ற தாயாய் நேசித்தவன்.தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற தாய் என்று கும்பிடடி பாப்பா' என்று பாடிய கவிஞன்.த்மிழ் நாட்டை முதன் முதலா 'திரு நாடு' என்று போற்றுகிறான் பாரதி.
பாரதிக்கு தமிழ், தமிழ் நாடு,இந்தியா,இப்பூவுலகு,பேரண்டம் எல்லாமே பெண் உரு தான்.பராசக்தியின் பல் வேறு காட்சி மாற்றங்கள் அவை.காலமே அவனுக்கு வனம்.காளித்தாய் பேரண்டமாம் மரத்தில் சுற்றித்திரியும் அழகு வண்டு. அத்தனையையும்.'யாதுமாகி நின்றாய் எங்கும் நீ நிறைந்தாய்' என்று பெண் தெய்வத்தை நிறைவாக வாழ்த்திய கவிஞன்.
பெண்பால் கவிஞர் அவ்வை மூதாட்டியை பாரதியைத்தன் தலைமேல் தூக்கிவைத்துக்கொண்டாடுகிறான்.சாதி இரண்டொழிய வேறில்லை,இங்கு நீதி வழுவா நெறிமுறையில் இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் என்று பாடிய அவ்வையைவிட புரட்சிக்காரி யார்? நமக்கு வினா வைக்கிறான் பாரதி.
'தையலை உயர்வுசெய் என்று' வேண்டுகிறான் கவிஞன். சிறியரை மேம்படச்செய்தால் தெய்வம் அத்தனை பேரையும் வாழ்த்தும் என்கிறான்.நீ என்ன இறைவனை வாழ்த்துவது உனது செயல்பாட்டால் இறைவன் இந்த மண் மீது வந்து, உன்னை வாழ்த்தட்டும் என்று கட்டுடைத்துப்பேசுகிறான் பாரதி.
மண்னின் மாண்புகளை மதித்துப்போற்றிய மாகவி பெண்விடுதலைக்கு வெளிச்சம் பாய்ச்சிய ஞானக்கதிரவன்.
கள்ளமற்ற முனிவர்கள் கூறும் கருணைவாசகத்து உட்பொருளாக அந்த பெண்தெய்வம் அவனுக்குக்காட்சியாகிறது.
'பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா' என்று கொக்கரித்த பேரன்புக்குச்சொந்தக்காரன்.பெண்விடுதலையொடு தன்னை எப்போதும் இணைத்துக்கொண்ட பாரதி பெண்விடுதலைக்குக்குரல் தந்த பொதுவுடைமையாளன். வரலாற்றில் நிலைத்த விஷயம் வணக்கத்திற்குறியஅந்தப்பேருண்மையே.
---------------------------------------------------------

ambedkaraippayiluvom


அம்பேத்காரை ப்பயிலுவோம்.- எஸ்ஸார்சி

பீமராவ் ராம்ஜி அம்பேதகார் மராட்டிய மண்,மனித சமுதாயத்திற்கு அளித்த பெருங்கொடை.சட்டவல்லுநர்,பேராசிரியர்,நீீதிமான்,சமூக விஞ்ஞானி,சமூகப்புரட்சியாளர்,சமூகப்போராளி,திறனார்ந்த அரசியலாளர்,இந்திய அரசியல் சட்ட சிற்பி, தேசியத்தலைவர் எனப்பல்வேறு சிறப்புப்பெயர்களால் போற்றப்படுபவர்.இவை அத்தனைக்கும் மேலாக ஒரு நேர்மையான சிந்தனையாளர்.புரட்சிகர ஆக்கங்களின் ஊற்றுக்கண்.
1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் தந்தை ராம்ஜி சக்பாலுக்கும்,தாய் பீமாபாயுக்கும் தவப்புதல்வனாய் மராட்டிய மாநிலத்து 'மௌ'(mhow) என்னும் ஊரில் தோன்றியவர்.அம்பேத்கார் தன் குடும்பத்தில் 14வது குழந்தையாவார். இந்திய மண்ணில் உயர்வானது என்று தன்னைக்கருதிக்கொண்ட ஒரு போலிச்சமூகம் ஒதுக்கித்தள்ளிய தீண்டத்தகாதவர்கள் மத்தியில் அம்பேத்கார்' மகர் 'இனத்தச்சேர்ந்தவர்.
அம்பேதகாரின் தந்தையும், பாட்டானாரும் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணிபுரிந்திருக்கிறார்கள்.தாய் வழியிலும் அவருக்கு ராணுவப்பின்புலம் இருந்து இருக்கிறது.போராளியாய்,வெற்றி இலக்குடையவர்களாய்,அநீதி கண்டு ஆத்திரப்படுபவர்களாய் மகர் இனத்து மக்கள் விளங்கி வந்திருப்பதும் தொடர் வரலாறு.
தனக்கு உற்ற துணையாக பள்ளியில் இருந்த அம்பேத்கார் என்கிற ஒரு ஆசிரியரின் பெயரை, நன்றிக்கடனாகத் தன் பெயரோடு இணைத்துக்கொண்டு பீமராம்ஜி சக்பால் என்பதை பீமராம்ஜி அம்பேத்கார் என மாற்றிக்கொண்டார். அந்த ஆசிரியர் அம்பேத்கார் ஒரு பிராம்ண வகுப்பினர் என்பதுவும் குறிப்பிடப்படவேண்டும்.
பயின்ற பள்ளியில் தாங்கமுடியாத வன்கொடுமைக்கு ஆளாகி, வடமொழி பயிலுவதனின்றும் தடுக்கப்பட்டு,இழிக்கப்பட்டும் பழிக்கப்பட்டும் அம்பேதகார் கல்வி கற்றார்.கல்வியின் மீது அவர் கொண்ட காதல் ஈடு இணை இல்லாத ஒன்றாகும்.அம்பேத்காருக்கு அறிவுப்பசி எந்நேரமும் கனன்று கொண்டிருந்தது.
தனக்கு 14 வயதாகும் போது அம்பேத்கார், ரமாபாய் என்னும் ஒன்பது வயது சிறுமியைத்திருமணம் செய்துகொண்டார்.
பரோடா மன்னர் சத்யஜித்ராவ் கேக்வர்டு ,அம்பேத்கார் கல்லூரியில் சேர்ந்து பயில உற்ற துணையாக இருந்தார்.அமெரிக்க கொலம்பியப்பல்கலைக்கழகத்திலும்,இங்கிலாந்தில் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்- லும் அவர் கல்வி கற்றார். கல்லூரிப்படிப்பு முடிந்து இந்தியா திரும்பிய அம்பேத்கார் பரோடா மன்னர் அவையில் ராணுவச்செயலாளராகப்பணியில் சேர்ந்தார்.
சாதீயக்கொடு நஞ்சு தான் பயின்றவைகளை எல்லாம் ஏறிமிதித்து கொட்டமடிப்பதைக்கண்டு அம்பேத்கார் நெஞ்சம் பதறினார்.பரோடா பணி இல்லை என்றானது. பம்பாயில் அரசியல் பொருளாதாரம் போதிக்கும் கல்லூரி ஆசிரியராகப்பணியில் சேர்ந்தார்.கல்லூரியிலும் சாதிக்கொடுமைகள் தொடர்ந்தன.கோலாப்பூர் மகாராஜா உதவியுடோடு மீண்டும் படிக்க லண்டன் பயணமாமார்.1923ல் இந்தியா திரும்பிய அம்பேத்கார் வக்கீல் தொழிலை ஏற்றுக்கொண்டார்.பார் அட் லா பட்டமும் டாக்டர் பட்டமும் இந்திய சாதியத்தின் முன் அலைக்கழிக்கப்பட்டன.
தீண்டப்படாதவர்களின் பிரதிநிதியாக லண்டன் வட்ட மேஜை மா நாட்டில் கலந்துகொண்டு தீண்டப்படாதவர்களுக்கு த்னி வோட்டு வங்கி வேண்டும் என்று குரல் கொடுத்தார்.1932ல் ராம் சே மக்டனால்டு அதை அமலுக்குக்கொணர அரசின் அறிக்கை வெளியிட்டார்.அந்த முயற்சியை எதிர்த்து மகாத்மா காந்தி உண்ணாவிரதத்தைத்தொடங்கினார் இந்து மக்களில் ஒரு இனத்தவரை ப்பிரித்து ப்பார்ப்பதில் காந்திஜிக்கு சம்மதமில்லை. நாம் அவர்களுக்கும் அவர்கள் நமக்கும் வோட் செய்யவேண்டும்.அவர்களுக்கு பிரதி நிதியை அவர்களே தேர்வு செய்து கொள்வது என்பது நம் சமுதாயத்தைக் கூறு போட்டுவிடும் என்றுணர்ந்த காந்திஜி தொடர்ந்து உண்ணாவிரதப்போராட்டத்தை நடத்தினார்.
தேசபிதாவை இழந்து விடுவோம் என்கிற மிக இக்கட்டான சூழ்நிலை.அம்பேத்கார் தனது நிலையை மாற்றிக்கொண்டு தேச பிதாவை காத்து உதவினார். .24 செப்டம்பர் 1932 ல் பூனா ஒப்பந்தம் கையெழுத்தானது.தனது கோரிக்கைவெற்றி பெறுவது என்பதைவிட மகாத்மாவின் உயிர் காப்பாற்றப்படவேண்டும் என்று விட்டுகொடுத்து உயர்ந்தார். ஆகப் பெரிய மனதுக்குச்சொந்தகாரர் அம்பேத்கார்.
மராட்டிய புரட்சிவீரர் ஜோதிபா புலே மீது அளப்பரிய மரியாதைகொன்டவராக அம்பேத்கார் விளங்கினார்.தான் படைத்த'சூத்திரர்கள் யார்'(who were sudras?) என்ற நூலை புலே க்கு சமர்ப்பணம் செய்தார்.அன்றைய சட்டசபைக்கு வங்காளத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் அம்பேத்கார்.வங்க மண்ணின் தரம் எப்போதும் சற்று உய்ர்ந்தே இருப்பதை இன்றைக்கும் நாம் அனுபவத்தில் காண்கிறோம்.
அம்பேத்காரின் இரு அற்புத குணங்கள் கடினமான பணியை விரும்பி ஏற்பது,விமரிசனத்தை விட்டுக்கொடுக்காதது என்பன.சோஷலிசத்தில் கம்யூனிசத்தில் நம்பிக்கை வைத்திருந்த அம்பேத்கார் புத்தக் கம்யூனிசம் என்று ஒரு விளக்கம் தந்தார்.
அரிசனங்களின் கோவில் நுழைவு போராட்டம் என்பதை புறந்தள்ளிய அம்பேத்கார் 'there is nothimg in the entryof temples' என்கிறார். இங்கு எல்லாமும் அரசியல் உரிமை பெறுவதில் தான் இருக்கிறது என்று வாதிட்டார்.
அம்பேத்கார், காந்திஜியை . மக்கள் மகாத்மா என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ளாதவர்.இந்து மதத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு அதற்கு த்துணை நிற்றல் என்பதுவே காந்திஜியின் புரிதல் என்றால் அதனைச் சகித்துக்கொள்ள முடியாது என்று மறுக்கிறார் அம்பேத்கார்.
சட்ட அமைச்சராக பிரதமர் நேருபிரானோடு பணியாற்றிய அம்பேத்கார் இந்து மத சட்ட விவகாரங்களில் தனது ஆரோக்கியமான பரிந்துரைகளை ஏற்காத மத்திய அரசாங்கத்தோடு முரண்பட்டார். பின்னர் பதவி விலகினார்.
டிசம்பர் 6 1956ல் தான் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார்.
அம்பேத்காருக்கு ஒருவர் செய்யும் மரியாதை அண்ணலின் சிந்தனைகளைப்பயிலுதல் என்பதே.விசாலப்பார்வையும்,ஆழ்ந்த சிந்தனையும்,ஒளிர் வழித்தடமும் அம்பேத்கார் நமக்கு வழங்கிய செல்வங்கள்.
பிரச்சனைகள் சிக்கலாகி இறுகும் நமது இந்திய அரசியல் சூழலில் அம்பேத்காரின் சிந்தனைகளை மறுவாசிப்பு செய்தல் கட்டாயமாகும்.யாந்திரிகமாக மட்டுமே அவரின் சிந்தனைகளைப்பயின்று த்ன் முனைப்புக்கு இயங்கு தளமாக அதனை ஆக்கிக்கொள்வது அவரின் நினைவுக்கு விழுமியம் சேர்க்காது.
சாதியக்கட்டமைப்புச்சிக்கல்களை விளங்கிக்கொள்வது என்பது அதனை த்தனக்கு வோட்டு வங்கியாக மாற்றிக்கொள்வது எப்படி என்பதுவேவாக இன்றைய அரசியல்வாதிகட்கு நடைமுறையாகி இருக்கிறது. இச்சூழல் ஆரோக்கியமானது அன்று.
கல்வியால் அறிவும் அறிவால் சிந்தனையும் சிந்தனையால் செயல் சிறப்பதுவும் ஒரு தரமான சமூக தளத்திற்கு இட்டுச்செல்லும்.எது கல்வி எது அறிவு எதுசிந்தனை எதுவெல்லாம் செயல் என்பதில் அம்பேதகாரின் எழுத்துக்கள் நமக்குப்பேருதவி செய்யும்.
யார் எப்பாடு பட்டால்தான் என்ன? யார் எக்கேடு கெட்டால்தான் என்ன? தேர்தலில் வெற்றியை தருவிப்பது எப்படி என்பதுவே மனித வாழ்க்கையாய்ச் சுருங்கிப்போய் விட்டோமே நாம்.
--------------------------------------

pennaakatam



பெண்ணாகடம் பெருமை பேசுவோம் -எஸ்ஸார்சி

நடு நாடு சான்றோர் உடைத்து என்று நவில்வர்.அதற்கொப்ப எண்ணற்ற ஞானியர்களைப்பிறப்பித்துப்பெருமை தேடிக்கொண்டது இந்த மண். இங்கே வரலாற்றுச்சிறப்பும் சமயத்துறையில் புகழும்,தொழில்வளச்செல்வமும் நிறைந்த நகரங்கள் பல உண்டு.அவற்றுள் முக்கியமான ஒன்று கடலூர் மாவட்டத்து ப் 'பெண்ணாடம்.'
வெள்ளாற்றங்கரைத்திகழும் பல சைவத்திருத்தலங்களில் இதுவும் ஒன்று.தென்னாடு உடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று பேசும் சைவத்தை த்தூக்கிப்பிடித்த சீர்மிகு திருத்தலமே பெண்ணாடம்.
இன்று பெண்ணாடம் என்கிறோமே அது பெண் ஆ கடம் என்பதன் மரூஉ.ஒரு சமயம் தேவலோகத்து இந்திரன் சிவ பூசைக்குறிய மலர்களைக்கொண்டுவருமாறு ஒரு பெண், ஒரு பசு,ஒரு யானை என மூவரையும் பூவுலகுக்கு அனுப்பியதாகவும் இந்த ஊரின் அழகிலே மயங்கி அப்பெண்ணும், பசுவும்,யானையும்,இங்கேயே தங்கிவிட்டதாகவும் ஆக இவ்வூர் பெண்ணாவுகடம் என ஆயிற்று என்று தல வரலாறு பேசும்.
'தில்லை மூவாயிரவர்,கடந்தை ஆறாயிரவர்' என்ற சொல்வழக்கிலிருந்து பல நூற்றாண்டுகட்கு முன்னர் இவ்வூரில் ஆறாயிரம் அந்தணர்கள் வாழ்ந்தனர் என்று அறிய முடிகிறது.இன்றும் பாப்பான் குளம்,அரியராவியாய் அறியப்படும் அழகா ஏரி என்னும் ஊர்கள் இந்த செய்திக்கு ச்சான்றாய் நிற்கின்றன.
கார்காத்த வேளாளர்கள் மெய்கண்டாரையும் அவர் தந்தை அச்சுத களப்பாளரையும் தம் மரபினாக க்குறிப்பிடுவதற்கு இந்தப்பெண்ணாடம் தலமே காரணமாகும்.பெண்ணாடத்திற்கு வரலாற்றில் அனேக பெயர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.அவை பெண்ணாகடம்,தூங்கானை மடம்,புஷ்பவனம்,சோக நாசனம்,சிவ வாசம்,மகேந்திரபுரம்,கடந்தை,பள்ளிகொண்டான் பட்டினம் என்பன.
பெண்ணாகடத்தை ச்சுற்றி நிற்கும் கிளிமங்கலமும்,கூடலூரும் சங்கப்புலவர்களின் தொடர்புடையன.
இவ்வூரை வளமுடையதாக்கும் வெள்ளாற்றின் மீது இருக்கும் 'ஏழு நீராடு துறைகள்' புனிதப்புகழுடன் பேசப்படுகின்றன.இவை பெரம்பலூர் மாவட்டத்து காளியாந்துறை,திருவாலந்துறை,திருமாந்துறை,ஆடுதுறை என நான்கும்,வசிட்டதுறை,திரு நெல்வாயில் அறத்துறை,சௌந்தரசோழத்துறை என க்கடலூர் மாவட்டத்து மூன்றும் ஆகும்.
திருஞானசம்பந்தருக்கு சிவிகையும் குடையும் திரு நெல்வாயில் அறத்துறையில்,யாதுமாகிய எம்பிரான் வழங்கியதாக பெரியபுராணம் குறிப்பிடுகிறது.
சைவ சமயத்தின் உயர்தனி நூலாகிய் 'சிவ ஞானபோதம்' இதனை இயற்றியவர் இந்த ஊரின் மெய்கண்டார்.மெய்கண்டாரின் முதல் மாணாக்கரான அருள்நந்திசிவாச்சாரியார், சகல ஆகம பண்டிதர் என வரலாற்றில் அழைக்கப்படுகிறார்.அவரே 'சிவ ஞானசித்தி' என்னும் அரிய நூலை வ்ழங்கிய பெருந்தகை ஆவார்.
மெய்கண்டாரின் தந்தை அச்சுதகளப்பாள பிள்ளை 13 ஆம் நூற்றாண்டில் அரசோச்சிய கோப்பெருஞ்சிங்கனின் கீழ் ஆட்சி புரிந்தவர்.தில்லை நடராசர் கோவில் கல்வெட்டுக்களிலும் அச்சுத களப்பாளர் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. கெடில நதிக்கரையில் உள்ள திருநாவலூரில் அரசன் கோப்பெரும்சிங்கன் மூன்றாவது ராஜ ராஜ சோழனை கி.பி. 1200ல் சிறைவைத்ததாக ஒரு வரலாற்று ச்செய்தியும் உண்டு.
யாப்பெருங்கலக்காரிகை இயற்றிய அமிர்தசாகரர் பத்தாம் நூற்றாண்டினர்.அவரின் இலக்கண நூலில் 'பெண்ணாகடத்தமர்'என்கிற சொல் பயின்று வருகிறது.
மெய்கண்டாரின் மாமன் காங்கய பூபதி ,நடு நாட்டு திருவெண்ணைநல்லூர்க்காரர்.மெய்கண்டாரின் தாய் மங்களாம்பிகை.
மெய்கண்டார் சிவ ஞானபோதம் வழங்கியதற்கு ஒரு நெடிய வரலாறு சொல்லப்படுகிறது. நந்தி தேவரின் மாணாக்கர் சனத்குமாரர்,சனத்குமாரரின் மாணாக்கர் சத்திய ஞான தரிசிகள்,இந்தப்பெரியவரின் மாணாக்கர் பரஞ்சோதி முனிகள்.பரஞ்சோதி கைலாய மலையிலிருந்து புறப்பட்டுத் தென்னாட்டு பொதிகைமலைக்கு அகத்தியமுனியைக்காணச்செல்கிறார்.அவரின் நிழல் மெய்கண்டார் என்னும் குழந்தையின் மீது பட்டுவிட பரஞ்சோதியின் விமானம் நின்று விடுகிறது.பரஞ்சோதி முனி கீழிறங்கி சுவேதவனப்பெருமாள் என்னும் அக்குழந்தைக்கு 'மெய்கண்டார்' என்னும் நாமம் சூட்டுகிறார்.அந்த மெய்கண்டார் பரஞ்சோதியிடம் சிவஞானபோதம் உபதேசம் பெறுகிறார்.
மெய்கண்டாரின் மாணாக்கர் அருணந்தியும் அவரின் மாணாக்கர் உமாபதி சிவாச்சாரியாரும் சைவ ஞானத்தில் நிகரற்று விளங்கியவர்கள்.மெய்கண்டார் கண்ட சமயம் 'சுத்தாத்வைத சைவ சித்தாந்த சமயம்' என்று வழங்கப்படுகிறது.
அச்சுத களப்பாளரின் வழிவந்தோர் இன்றும் பெண்ணாடம் மற்றும் அந்தப்பகுதியைச்சுற்றி சுற்றி இச்சைவ வரலாறு எல்லாம் தெரிந்தும் தெரியாமலும் வாழ்ந்துவருகின்றனர்.குருகுல ராயர்,கனக ராயர்,வாணாதிராயர்,பிரதானிகம்,என்ற பட்டப்பெயர்களோடு அவர்கள் அழைக்கப்பட்டதும் மறக்கப்பட்டே வருகின்றது.மணிமுத்தா நதி பிரதாபர்,விருத்தாசலத்திரியர்,கோபக்காரனார் என்கிற பட்டப்பெயர்களும் அவை ஒத்தவையே.
மெய்கண்டார் பதி பசு பாசம் இவை குறித்து ப்பின்வரும் விளக்கத்தைக்கொடுக்கிறார்.பதி-கடவுள்,பசு-உயிர்,பாசம்-உலகம். ஆணவம்,கன்மம், மாயை என்னும் மும்மலங்களை வென்று பசுவானது பாசத்தைவிட்டு பதியை அடைதல் முக்தி என்பதாம்.ஞான அளவில் நமசிவாய என்று பஞ்ச்சாட்சரத்தைத்தியானம் செய்தல் கன்ம பலன்களை நாசம் செய்யும் ஒரு யுக்தி என்றும் மெய்கண்டார் குறிப்பிடுகிறார்.இவ்வாறு சைவ த்தடத்தில் சிவ பேறு பெறுதல் மெய்கண்டாரால் உறுதி செய்யப்படுகிறது.
பெண்ணாகடம் என்னும் இத்திருத்தலம் சம்மந்தர், மற்றும் அப்பர் என்கிற திருநாவுக்கரசரால் தேவாரப்பாக்களில் ஆளப்பட்டுக்கிடக்கிறது.அருணகிரியாரின் திருப்புகழிலும் பெண்ணாடம் பற்றிப்பேசப்படுவதை நாம் குறிப்பிடலாம்.
சேக்கிழாரின் பெரிய புராணம் நமக்கு வேறு ஒரு நிகழ்ச்சியைச்சொல்கிறது.சமண சமயத்திலிருந்து விடுபட்ட அப்பர் பெருமானுக்கு பெண்ணாகடத்து தூங்கானை மாடத்து இறைவனால்தான் சைவக்குறிகளான சூலமும்,இடபமும் அமைவிக்கப்பட்டன.

'பொன்னார் திருவடிக்கொன்றுண்டு விண்ணப்பம் போற்றிச் செய்யும்
என்னாவி காப்பதற்கு இச்சையுண்டேல் இரும் கூற்றகல
மின்னொரு மூவிலை ச்சூலமென் மேற்பொறிமேவு கொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச்சுடர்க்கொழுந்தே' என்று பேசுகிறார் அந்த திருநாவுக்கரசர் பிரான்.

'இக்கணம் இவர் சிவனடியார்,முன்னம் இவர் நமக்கு க்குற்றேவல் செய்தவர் என்பதற்காக கைகால் கழுவிப்பின் உணவருந்த ஒரு செம்பு நீர் அளிக்க மறுத்த தன் மனையாளின் கையைத்துணித்த சிவப்பற்றாளர். இவரே அறுபத்து மூவரில் கலிக்கம்ப நாயனார். பெண்ணாடத்தவர்.இந்த நாயனாருக்கு இவ்வூரில் திருக்கோவில் உள்ளது.
பெண்ணாகடத்து இறைவனின் திருப்பெயர் சுடர்க்கொழுந்து நாதர். இறைஅம்மை, கடந்தை நாயகி,அழகியகாதலி என்னும் இனிய தமிழ்ப்பெயர்களால் அழைக்கப்படுகிறார்.இக்கோவிலில் நந்திப்பெருமான் கிழக்கு நோக்கி அமர்ந்து காணப்படுகிறார்.அது பெருஞ்சிறப்பு.பெண்ணாகடம் ஊரினை வெள்ள் அழிவினின்று காத்து நின்றதால் இறைவனுக்கு பிரளகால ஈசுவரர் என்கிற திருநாமம்.
' கெழுமனைகள் தோறும் மறையின் ஒலி தொடங்குங் கடந்தை த்தடங்கோயில்சேர் தூங்கானை மாடம்' என்று திருஞானசம்பந்தர் பேசுவார். அவரே' காதலியும் தானும் கருதி வாழும் தொல் சீர் கடந்தை' என இறைவனை அந்த இறையன்னையை அழகாக விவரிப்பார்.
இக்கோவிலின் அமைப்பு முறை பிற கோயில்களின் அமைப்பு முறையினின்று சற்று வேறுபட்டது.யானை தூங்கும் நிலையில் இக்கோயில் காட்சி அளிப்பதால் 'தூங்கானை மாடம்' என்று பெயர் பெறுகிறது.மூலவரைக்கோயிலின் உட்சுற்றில் இருந்தபடி நான்கு திக்குகளிலும் அடியார்கள் வழிபடுமாறு கல்லில் 'கண் துளை வழிகள்' செதுக்கப்பட்டுள்ளன.
மூலவர் விமானத்துக்கு அருகில் இரண்டு ஆள் உயரத்தில் ஒரு 'கட்டு மலை'. அதன் மீது ஒரு சிவன் கோவில் உள்ளது.அதனுள் உறை இறைவன் லிங்க வடிவில் 16 பட்டைகளில் தெரிகிறார். இந்த இறைவனை 'சௌந்தரேசுவரர்' என்று அழைப்பர்.
மெய்கண்டாருக்கு இவ்வூரில் ஒரு தனிக்கோயில் உள்ளது.மெய்கண்டாரின் மரபு வந்த நமசிவாய மூர்த்திகளே திருவாவடுதுறை ஆதீனத்தின் மூலகுரு ஆவார்.
பௌத்த சமயம் பெண்ணாகடத்தில் ஒரு காலத்தில் புகழோடு நிலவி வந்திருக்கலாம் என்பதற்கு புத்தர் ஏரியும் அதன் அருகே புத்தர் சிலையும் சாட்சிகளாய் நிற்கின்றன.சிற்றரசன் ஒருவரின் தலை நகராய் பெண்ணாகடம் இலங்கியது என்பதற்கு ஆதாரமாக 'மங்கலம்' என்று இறுதிச்சொல்பெற்று நான்கு திக்குகளிலும் நான்கு ஊர்கள் உள்ளன.அவை வடக்கே நந்திமங்கலம்,கிழக்கே கிளிமங்கலம்,தெற்கே சேந்தமங்கலம்,மேற்கே போத்திரமங்கலம் என்பனவாம்.
களப்பாளமேடு என்ற பெயருடைய பகுதி இவ்வூர் அருகே காணப்படுகிறது.இந்த மேட்டில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் களப்பாளரின் அரண்மனை இருந்திருக்கலாம் என்பதற்கு அங்கு கிடைக்கும் அள்வில் மிகப்பெரிய செங்கற்கள் சாட்சி சொல்கின்றன.

தமழ்ப்புலமையும் தமிழ் ஆர்வமுமுள்ள மக்களை இம்மண் பெற்று வந்திருக்கிறது.1934ல் கடந்தை தமிழ் ச்சங்கம் இங்கு தொடங்கப்ப்ட்டு இருக்கிறது என்பதும் ஒரு செய்தி.பொங்கல் வாழ்த்து அனுப்பும் மரபினை 1935ல் புலவர் இ.சிவகுருநாதன் இவ்வூரிலிருந்துதான் தொடங்கினார் என்பதனை தென்னாற்காடு மாவட்டம் என்னும் நூலில் எஸ். எம். லட்சுமணன் செட்டியார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இன்று தன் பழம்பெறும் வரலாறுகளை முதிர்ந்த பண்பாட்டுக்கூறுகளையெல்லாம் மறந்து ஆரவாரம் ஏதுமற்ற சிறு நகரமாய் காட்சி தருகிறது.ஆழ்ந்து நோக்குபவர்கட்கு மட்டுமே இந்த மண்ணின் விரிவும் ஆழமும் தென்படக்கூடும்.
கரும்புப்பயிர் இம்மண்ணில் செழித்து வளருகிறது.இதனைப்பயன்கொண்டு அருணா சர்க்கரை ஆலை என் கிற பெரிய நிறுவனம் செல்வர் மருதப்பிள்ளை என்பவரால் இவ்வூரருகே இறையூரில் நிறுவப்பட்டது. இறையூரில்தான் சம்பந்தப்பெருமானுக்கு இறைவனும் இறைவியும் விருந்து படைத்ததாகப்புராணச்செய்தி
இந்த சுற்றுப்பட்டு மக்களுக்கு ஒரு பெரும் ஆதாரமாக அருணா ஆலை நடைபோட்டது.இன்று அருணாவுக்கு 'அம்பிகா சர்க்கரை ஆலை' என்று பெயர் மாறி இருக்கிறது.இரண்டு சிமெண்ட் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைகள் இவ்வூர் வெள்ளாற்றங்கரையின் தெற்கே நிறுவப்பட்டுள்ளன.
தத்துவ உலகில் சீர்மிகு சைவ சித்தாந்தம் இந்தமண்ணின் தனிப்பெரும் கொடையாகும்.ஆனால் காலம் எல்லா நல்ல விஷயங்களையும் கொள்ளைகொண்டு விடுமா என்கிற அச்சம் எழத்தான் செய்கிறது.
தமிழர் மதமான சைவத்தை உயிர்ப்பித்து ஆய்ந்து ஆய்ந்து செழுமைப்படுத்திக்காக்கும் நெறி காட்டும் நாயகர்களுக்குத்தான் எங்கு போவது.எல்லாம் இருந்தும் சைவமடங்கள் கண்களைமூடி மௌனம் காப்பதற்கு ஒரு நியாயமே இல்லை.
தமிழக ஐம்பதாண்டு அரசியலில் நாம் தொலைத்துவிட்ட செல்வங்களுள் தலையாயது 'தமிழ்ச்சைவம்' என்பது நமக்கு என்றேனும் விளங்குமா?யாரிட்ம் கோபித்துக்கொண்டு எத்னைத்தொலைத்துவிட்டு நிற்கிறோம் என்கிற விஷயம் நமக்கு எப்போது எட்டும்?
------------------------------------------------------------------

vellam 5


சென்னையில் வெள்ளம் - 5

ஆட்டோக்காரன் தனக்குத்தெரிந்த வெள்ளச்செய்திகளை சொல்லிக்கொண்டேபோனான்.'அடையாற்று த்தண்ணீ நந்தனம் ரோடுல.மெட் றோவுக்கு வெட்டுன ரோட்டுக் குழியில  பூந்து பொறப்புட்டுடுச்சி.ஆத்துல என்னா என்னாவோ  வூட்டு ஜாமானுவ மொத்தமா அடிச்சிகினு போனது. பத்து பைசா நீ கேட்டா  உனக்கு  குடுப்பானா.எல்லாம் போவுது கடலுக்கு'.

லேசான தூரல்.எந்த பேருந்தையும் சாலையில் காணோம்.எல்லா பேருந்துகளும் ஓரங்கட்டப்பட்டு அசிங்கமாக நின்றுகொண்டிருந்தன.பேருந்துக்காரர்கள் வண்டியை எடுப்பதா வேண்டாமா என்ற யோசனையில் இருந்தனர்.எந்த சாலை எது வரைக்கும் நல்லபடியாக இருக்கும் என்பதே அனுமானிக்க முடியாமல் இருந்தது.பந்தோபஸ்துக்கு என நின்றுகொண்டிருந்த போலிசுகாரர்கள்'வண்டி போனா ஏறுங்க.எதயும் ஒண்ணும் உறுதியா சொல்ல முடியாது' என்றனர்.மக்கள் ஆங்கங்கே நின்று நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
'எல்லாம் ஏரியையும் ஒடச்சி உட்டுட்டானுவ.பின்ன என்ன செய்வ.செம்பரம் பாக்கத்தை இப்பிடி  தொறந்ததுதான்  பெரிய ஆபத்து' என்று பேசிக்கொண்டனர்.
ஆட்டோக்காரன் அண்ணாசாலையில்  நடு ரோட்டில் ஓட்டிக்கொண்டிருந்தான்.சாலையில்தான் பேருந்துகள் இல்லையே.சைதாப்பேட்டை வந்தது.மக்கள் கூட்டம்கூட்டமாக நின்று அடையாற்றை வேடிக்கை பார்த்தனர்.
'தண்ணீ ரோட்டுல ஆக்ரோஷமா பொறண்டுபோச்சி. இப்ப செத்த  அடங்கிப்போவுது.கர ஓரம் இருந்த சனம் கோ   ன் னு கத்துகிட்டு மூலைக்கு ஒண்ணா ஒடுனது.எந்த கதயை சொல்லுவ' என்றான் ஆட்டோ ஓட்டி
.                                                   சைதாபேட்டை மைன்ரோடெல்லாம் கசா முசா என்று கிடந்தது.ஊரே எதுவோ புதிய கோர  உருவத்தைத்தாங்கிய மாதிரிக்குத்தெரிந்தது.
கலைஞர் மணிவிழா நினைவு வளைவு தாண்டி ஆஜானுபாகு பனகல் மாளிகையோ  எனக்கு மட்டும் ஒன்றுமில்லை என அப்படியே நின்று கொண்டிருந்தது.அடையாற்றில் இன்னும் மழை த்தண்ணீர் கோபமாகத்தான் சீறி நுரைத்துக்கொண்டோடியது. கரையைக்கடந்த  மழை நீர் ஊரை அச்சுறுத்தியது மட்டும் இப்போது  கொஞ்சம் அடங்கிவிட்டிருந்தது. ஆற்றின் கரையோரம் இருந்த ஆஸ்பெஸ்டாஸ் குடியிருப்புக்கள் சிதறிக்கிடந்தன.குப்பையைக்கிளறிக்கொண்டு சிலர் இங்கும் அங்கும் நின்று கொண்டிருந்தார்கள். தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக கண்ணில் தென்படும் அந்த இடங்களெல்லாம் வெறிச்சோடி க்  காட்சியாயின. அவை எங்கேனும் பாதுகாப்பான  மேடான இடம் நோக்கிச்சென்றும்  இருக்கலாம். கட்சிக்கொடி மரங்கள் அங்கங்கு தென்பட்டன. அவை கொடியைத்தொலைத்துவிட்டு அம்மணமாக நின்று கொண்டிருந்தன.ஆகாயத்தில் கழுகுகள் ஏகத்துக்கு விர்விரென்று பறந்தன.வட்டமிட்டன.அடையாற்றில் அடித்துவரப்பட்ட குப்பை கூளங்கள் ஆற்றின் கரை ஓரம் மலையெனக்கிடந்தன.சாலையில் பேருந்துகள் இங்கொன்றும் அங்கொன்றும் நிறுத்தப்பட்டு இருந்தன.சில அவை எங்கே செல்கிறது என்பது சொல்லும் பலகையைத்தொலைத்துவிட்டிருந்தன.
மக்கள் நம் கையில் ஒன்றும் இல்லை எது நடக்கணுமோ அது நடக்குது என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பதைப்பார்க்கமுடிந்தது. அனுபவித்த மழை நீர் அச்சம் மக்களை அப்படிப்பேச வைத்தது.ஆட்டோக்காரன் எங்களை கிண்டியில் கொண்டு சேர்த்துவிட்டான்.கிண்டி ரேஸ் கோர்ஸ் முன்பாக ரயில் நிலையம் வெறிச்சொடிக்கிடந்தது.

ரயில் எதுவும் ஓடவில்லை. நின்றிருந்த ரயில் பெட்டிக்குள் சில மனிதர்கள் அடைத்துக்கொண்டு கிடந்தார்கள்.அவர்களை அங்கிருந்து யாரும் விரட்டிவிடவில்லை என்பது மனதிற்கு ஆறுதலான விஷயம் . ரேஸ் கோர்ஸ் சாலையில் நரிக்குறவ்ர்கள் கும்பல் கும்பலாக நின்று கத்திக்கொண்டே இருந்தார்கள்.அவர்களுக்கு நடுவாக ஒரு சவம் ஒன்று கிடத்தப்பட்டிருந்தது. அது ஆணின் சடலமோ பெண்ணின் சடலமோ  தெரியவில்லை. அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதும் புரியவில்லை.சத்தம் மட்டும் அதிகமாக வந்துகொண்டே இருந்தது
.ரயில் ரோடு ஒட்டி  ஓரமாக வந்த எங்களின் ஆட்டோ   கே வி  கல்யாண மண்டபத்தைத்தாண்டியது  எங்கு எங்கெல்லாமோ சுற்றி பிருந்தாவனம் நகர் மையின் ரோடை ஆட்டோ சென்றடைந்தது.இதுவே பெரிய சாதனையாக நான் உணர ஆரம்பித்தேன்.
'இதுலயே ஆதம்பாக்கம் அந்த  சக்தி நகருக்கு  போயிடலாம்'
என் மனைவி சொல்லிக்கொண்டிருந்தாள்.ஆட்டோக்காரன்' எனக்கு ஒண்ணுமில்ல.எது வரைக்கும் போமுடியுதோ அதுவரைக்கும் நான் வர்ரேன்.காசு கணக்கு பாக்காதிங்க .போவுற  தூரம்  பாத்து அதுக்குத்தக்கன போட்டுக்குடுக்கணும் ஒரு .மனுஷன் இதுல ஆட்டோ ஓட்டிகிட்டு வர்ரதுதான் பெரிசு. எனக்கும் குடும்பம் புள்ள குட்டிங்க இருக்குது.வவுத்து பொழப்புக்குத்தான் நானு வர்ரன்' சொல்லிக்கொண்டான்.என் மனைவி என்னைப்பார்த்துக்கொண்டாள்.அவன் சொல்வதும் சரிதான் என்கிற விதமாக அவளின் பார்வை இருந்தது.
சாலை எங்கும் மழை நீர்..நண்டுகள் நத்தைகள் அட்டைகள் பாம்புகள் தவளைகள் மரவட்டைகள் என ஊர்ந்துகொண்டே இருந்தன.சில அரைபட்டும் பிளவு பட்டும் நாறிக்கொண்டு கிடந்தன.காக்கைகள் தம் பசிக்கு அவைகளை கொத்திகொண்டே இருந்தன.சாலைகள் மீதெல்லாம் தண்ணீரும் தழை களுமாகக்கிடந்தன.பிருந்தாவன் நகர் மெயின் ரோடில் எந்தக்கடையும் திறந்து இல்லை. மூலைக்கொன்றாக கை பம்புகள் மட்டும் லொபுக் புடுக் என்று குரெலழுப்பிக்கொண்டு தண்ணீர் தந்தன.அந்த ஓலி மட்டும் ஓயவே இல்லை.மழை தூறுவதும் பின்னர் விடுவதும் என அது   இன்னும் நின்றபாடில்லை.தெருக்களில் முழங்கால் மட்டும் தண்ணீர். பள்ளமான தெருக்கள் இன்னும் மோசமாக இருந்தன.வீதி ஓரங்களில் நின்றுகொண்டிருந்த கார்கள் கண்ண றாவியாகக்காட்சி தந்தன.மழைக்  காற்றில் முறிந்து விழுந்த வாழை மரங்களின் காய் பூ தண்டு என சாலையில் பெண்கள் விற்றுகொண்டு போனார்கள்.முருங்கை பப்பாளி கீரை வகைகள் வியாபாரமாயின.
பிருந்தாவன் நகர் மையின் ரோடின் கடைசி பகுதி வந்தாயிற்று. இரண்டு பக்க தெருக்களில் பார்க்கும் தூரம் எல்லாம் தண்ணீர் நின்றுகொண்டிருந்தது.ஏ டி எம் கள் நோயுற்றுக்கிடந்தன.பத்து கடைகளுக்கு ஒரு கடை திறந்து வைத்திருந்தார்கள்.உடனுக்குடன் மூடி க்கொண்டார்கள்.சரக்குகள் எதுவும் வந்தால்தானே வியாபாரம் உயிர்ப்போடு நடக்கும். எதற்கும் வழி இல்லையே.சக்தி நகர். குறிஞ்சி தெரு வாந்தாயிற்று.
இரண்டாம் முறை அண்ணன் வீடு.அண்ணன் வீடு என்றால் அண்ணன் மகன் வீடுதான்.அண்ணன் தருமங்குடி கிராமத்தை விட்டு க்கிளம்பி ஆண்டுகள் சில ஆகிவிட்டன.ஆறு மாதம் ஒரு முறை என தருமங்குடி வீட்டை எட்டிப்பார்ப்பார். எங்கள் அம்மாவின்வீடு. அம்மாதான் எங்களுக்கு அதனை கொடுத்துவிட்டு கண்ணை மூடினார். அம்மா உயில்படி அதில் எங்களுக்குச்சரி   பங்கு. அந்த வீட்டை  ப்ழுதுபார்ப்பதே பெரிய வேலை.வீட்டை யாருக்கும் வாடகைக்கு விட்டுவிடலாம்.ஆனால் நல்ல மனிதர்கள் வேண்டுமே.அதற்கு எங்கே போவது.அதுதானே   இன்றைக்கு மிகவும் சிரமம் .
                                     அண்ணன் எங்கள் எல்லோரையும் அன்பாக வரவேற்றார்.
'நீங்க வந்த முகூர்த்தம் கொஞ்சம் கரண்டு வந்து இருக்கு'
'ரொம்ப சந்தோஷம்.கரண்டு பாத்து அஞ்சி நாளாச்சி.இண்ணைக்கி ஆறாவது நாள்'
'இது எவ்வளவு நாழி இருக்கும்னு சொல்லமுடியாது.அதானால எது முக்கியமோ அத செஞ்சினூடணும்'
'சரி அண்ணே.மொதல்ல செல் போன்  சார்ஜ் போடணும்'
'சார்ஜ் போடலாம்.போன் வேல செய்யணுமே.எங்க பாத்தாலும் தண்ணியாச்சே'
'சார்ஜ் போட்டு வச்சிகுங்க. அப்புறமா பேசறது பேசாதது எல்லாம் பாத்துகலாம்'
அண்ணி  அருகே வந்தாள்.
'மொதல்ல கை கால் அலம்பிகோங்க. சாப்புட வாங்கோ சாப்புடுங்கோ அப்புறம் பாக்கி கதங்க . எப்ப சாப்புட்டுதோ நீங்க'
அண்ணி  சொல்லி நிறுத்தினாள்.அண்ணி  எப்போதும்  அப்படித்தான்.அன்னபூரணி.
'கொஞ்சம் துணிய தொவைக்கணும் மொதல்ல'
என் மருமகள் சன்னமாக ஆரம்பித்தாள்.
'மோட்டார் பொயிண்டிருக்கு. அந்த காரியமும் முக்கியம். ஆதம்பாக்கத்துலதான் கரண்டு மொதல்ல குடுத்து இருக்கான்.இன்னும் தி.நகர்ல எல்லாம் கரண்டு வல்ல'
அண்ணன் சொல்லிக்கொண்டார்.
'பேப்பர் வர்ரதா என்ன'
'பேப்பரா அது பாத்து எவ்வளவு நாளாாச்சி' அன்ணன் பதில் சொன்னார்.
'டிவி இல்லே.ரேடியோங்கறதுமறந்து போச்சே.மொபைல் வேல செய்யாது. தண்ணிக்கு  கை பம்பு  .எதனா ஒரு எண்ணெய் போட்டா  திரியில  எரியும் காமாட்சி வெளக்கு. இதுதான் இப்ப வாழ்க்கே'
'கெணரு எல்லாம் நாசமாயிட்டுது.கை பம்புன்னு ஒண்ணு இருக்கு.அங்கங்க லொடுக்கு புடுக்குன்னு சப்தம் வர்ரதே'
அண்ணா சொல்லிக்கொண்டார்.
ஃபேன் ஓடிக்கொண்டிருக்கிறது.கரண்ட்தான் வாழ்க்கை என்றாகி எவ்வளவுகாலம் ஆகி விட்டது.மின்சாரம் இல்லாட்டா பைத்தியம் பிடித்த மாதிரி ஆயிடுது'
'இண்ணைக்கி இங்க கரண்டு வந்துருக்கு.அங்க பழைய பெருங்கள த்தூர்ல எல்லாம் எப்படி இருக்குமோ?'
'நானும் என்பையனும் போயி பார்க்கணும்.பார்த்தாதான் தெரியும் என்ன எல்லாம் ஆயி இருக்குன்னு'
' பாத்தாதான் தெரியும்.மேற்கொண்டும்  என்ன செய்யணும்னு' அண்ணன் சொல்லிக்கொண்டார்.ஆதம்பாக்கம் அண்ணன்வீட்டிலே மதிய உணவு சாப்பிட்டோம்.சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு பழைய பெருங்களத்தூர் சென்று வீட்டை பார்த்துவரலாம் என்கிற தீர்மானம்.
'காபி சாப்பிடுங்கோ உடனே பொறப்படுங்கோ' என் மனைவி கட்டளை தந்தாள்.
'எப்பிடிப்போவேள்' மன்னி கையில் காபிக்குக் கழுவி வைத்திருந்த டபரா செட்டோடு ஆரம்பித்தாள்.
'நன்னா விஜாரிச்சுக்கணும். மின்சார ரயில் பத்து நாளைக்கு அப்பறம் இண்ணைக்கு சாயந்தரமா பொறப்படும்னு சொல்றா.தாம்பரத்திலேந்து         முடி ச்சூர் போற அந்த ரோடு எப்பிடி இருக்குமோ,நல்ல நாள்ளயே நாழி பாலுக்கு வழி இல்லாத சேதிதான,இப்ப என்ன கிழிச்சுடப்போறது'
'மொதல்ல பொறப்பட்டு போயிபாக்கட்டும்.அந்த ரோடு சரியில்லன்னா புது பெருங்களத்தூர் போயி அங்கே இருந்து ஏரிக்கர ஓரமா போற ரோடுல நடந்தே கூட பழைய பெருங்களத்தூர் போயிடலாம்' என் மனைவி தன் ஓரகத்திக்குப்பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்.
அண்ணன் குடும்ப த்திற்கும் எங்களால் எவ்வளவோ அசௌகரியங்கள் ஏற்பட்டிருக்கலாம்.ஆனால் வேறு என்ன செய்வது? அவருடைய மனைவி மகன் மருமகள்,பேத்தி என அவர்களோடு நாங்கள் குழந்தையைச்சேர்த்து ஐந்து பேர்.ஒருவேளைக்குப்பத்து பேருக்கு சமைத்தாகவேண்டும்.இதில் யாருக்கேனும் ஒருவர் இருவருக்கு உடல் அசௌகரியமாகிவிடும்.டாக்டரைக்கண்டுபிடிப்பதே சிரமம். ஆஸ்பத்திரி போய் வருதல் இன்னும் சிரமம்.ஏடிஎம்கள் சவம் என தூங்கிக்கொண்டு கிடந்தன.பணப்புழக்கம் நொண்டிதான்  அடித்துக்கொண்டு இருந்தது.தி.நகர் சின்ன அண்ணன் வீட்டிலோ இன்னும் கொஞ்சம்  தங்கி இருப்பது முடியாத துபோல் ஆகிவிட்டது.வீடு சிறியது.அவரின் மகள் வீட்டில் இருந்தாள்.அதுதான் கொஞ்சம் ஒத்தாசை.
காபி சாப்பிட்ட கையோடு நானும் என் பெரிய பையனும் நேதாஜி நகருக்குப்புறப்பட்டோம்.
சிறிய குடைகள் இரண்டு.டார்ச் விளக்கு குடிப்பதற்குத்தண்ணீர் என்று எடுத்துக்கொண்டோம்.
'வீட்டுசாவி இருக்கா'
'பத்திரமா இருக்கு' பையன் சொன்னான்.முதல் தளத்தில் நாங்கள் இருந்தோம்.கீழ் தரைதளத்தில் என் சின்ன பையனின் குடும்பம். அவனுக்குத்தான்  பெங்களூரில் வேலை.அவன் மனைவி பிரசவத்துக்குப்போயிருக்கிறாள். இது விஷயம் முதலிலேயே நான் குறிப்பிட்டபடிதான்.  அங்கு ப்பேரன் புண்யகாவசனத்திற்கு திருச்சிக்குப்போய் திரும்பும் சமயம்தானே இத்தனை மழையும்.திருச்சியில் நன்றாகத்தான் வெய்யில் அடித்தது.காவிரியில் கருத்துசலசலத்த கருஞ்  சாக்கடையையும் கொள்ளிடத்தில் மணல் மைதானத்தையும் தான் கண்டு வந்தோம்.சென்னையில்தானே இந்தக்கொள்ளை சமாசாரம்  எல்லாம்.
பிருந்தாவன் நகர் மையின் ரோடில் ஒரு ஆட்டோ பார்க்கமுடியவில்லை.ஆதம்பாக்கம் டி ஏ வி பள்ளி இருக்கும் தெருவில் மழை நீர் நிறைத்துக்கொண்டிருந்தது.அந்தப்பள்ளியில்தான் என் அன்ணனின் பேத்தி படித்துக்கொண்டிருந்தாள்.இந்த பேத்தியின் படிப்புக்காகத்தான் என் அண்ணன் நேதாஜி நகரில் என் வீட்டூக்கு அடுத்த வீட்டு ஜாகையைக்காலிசெய்துவிட்டு இந்த ஆதம்பாக்கம் எனும் கொசு க்ஷேத்திரத்திற்கு   வந்து சேர்ந்தார் .இல்லாவிட்டால் இந்த செம்பரம்பாக்க வெள்ள   அவஸ்தையை எல்லாம் இரண்டு குடும்பமும் சேர்ந்து பட்டுக்கொண்டிருக்கும்.அது ஏதோ நல்லகாலம். அண்ணன்  இங்கு  வந்ததால் எங்களுக்கு  ஒதுங்க ஒரு இடம் கிடைத்தது.
பிருந்தாவன் பிள்ளையார் கோவில் நிறுத்தத்தில் எங்களைப்போல் இருவர் நின்றுகொண்டிருந்தனர்.
'பஸ் வருதா' என்றேன்
'உங்களுக்கு ஏதும் தெரியுமான்னு பாத்தேன்'
பெரியவர் எனக்குப்பதில் சொன்னார்.
'எலக்ட்ரிக் ட்ரைன்  போவும்னு சொன்னாங்களே'
'அங்க போனாதான் நமக்கு அந்த சேதி என்னன்னு புரியும்'
அவர் மீண்டும் எனக்குப்பதில் சொன்னார்.
'இங்க கரண்டு இல்ல.தெருவுல மழைத் தண்ணி.கேபிள் முழுகி கெடக்கு.உங்க பக்கம்'
அவரே மீண்டும் ஆரம்பித்தார்.
'குறிஞ்சி நகர்ல கரண்டு வருது உடனே   போவுதுன்னு சொல்றாங்க'
'உங்களுக்கு எந்த ஊரு'
'முடிச்சூர் ரோடுல பழைய பெருங்களத்தூரு'
'முடிச்சூர்னா கேக்கவே வேண்டாம்.அங்கதான் ரொம்பவும் பிரச்சனை.அப்புறமா அந்த  வேளச்சேரி'
'நீங்க சொல்றது ரொம்ப  சரி' பதில் சொன்னேன்.
அவர்கள் ஒன்றும் அசைவதாக இல்லை. அங்கேயே நின்றுகொண்டு இருந்தனர்.
'பஸ் ஆட்டோ எதாவது வருணும்.நாங்க அததான் பாக்குறம்'
பெரியவர் பதில் சொன்னார்.அவருக்கு அருகில் நின்றிருந்தவர் கண்களில் கருப்புக்கண்ணாடி போட்டிருந்தார்.காட்டராக்ட் ஆப்ரேஷன் செய்துகொண்டிருக்கவேண்டும்.அவர் வாயையே திறக்கவில்லை.கையில் பெரிய  குடை ஒன்று  கட்டை பிடிபோட்டது வைத்திருந்தார்.
மழை எப்போதும் வரலாம் என்றபடிக்கு வானம் இருந்தது.நாங்கள் இருவரும் மவுண்ட் ஸ்டேஷன் நோக்கி நடந்துகொண்டிருந்தோம்.தெருக்கள் எல்லாம் ஒரே  நாற்றம்.அங்கங்கே எலிகள் பெருச்சாளிகள் செத்துக்கிடந்தன.பூனைக்குட்டிகள் இறந்து அந்த உடல்களை காக்கைகள் தம் அலகுகளால் கொத்தி க்கொத்தி இழுத்து விகாரப்படுத்தி மனசை இம்சித்தன.காற்று மழையில் முறிந்த வாழைமரங்களின் குலைகள் தார் தாராய் வீதி ஓரத்தில் பரப்பிவைத்து விற்றுக்கொண்டிருந்தாள் ஒரு பெண். காயை பூவை   வாங்குவதற்குத்தான் அங்கே ஆட்கள் யாரும் வரவே   இல்லை.டீக்கடை மூலைக்கொன்று திறந்து வியாபாரம் நடைபெற்றுக்கொண்டு இருந்தது.ஆகாயத்தில் ஹெலிகாப்டர்கள் விமானங்கள் என தாழப்பறந்து சேதங்களை நோட்டமிட்டன.ஆட்டோகாரர்கள் தமது வண்டிகளை சீர்செய்துவிட்டு யாரேனும் அழைக்கிறார்களா எனத்துழாவிக்கொண்டு நின்றனர்.
'ரயிலு ஓடுனா சனம் வரும்' என்றான் ஒரு ஆட்டோக்காரன்.
'ரயிலு ஓடுதா' என்றேன்.
'இப்பறம் போவும்னு சொல்றாங்க' எனக்கு பதில் சொன்னான் அவன்.
மவுண்ட் ஸ்டேஷன் சமீபமானது.அருகிருந்த ஏ டி எம் கள் ஜீவனற்று  கோரமாய்க் கிடந்தன .அவைகளைச் சுற்றிலும் தெரு நாய்கள் காதல் வயப்பட்டு ஒன்றையொன்று சுற்றிக்கொண்டு நின்றன.மன்மதனுக்குத்தான்  ஒய்வேது .அவைகளும் பாவம்  என்னதான் செய்யும் எண்ணிக்கொண்டேன்.மழை நீர் ஏ டி எம் உள்ளாக புகுந்து தரை முழுவதும் சொத சொத என்றிருந்தது.
புக்கிங் கவுண்டர் முன்பாக சொல்ல முடியாத கூட்டம்.முதல் ரயில் அல்லவா வரப்போகிறது.எத்தனயோ நாட்களாக  தண்டவாளங்கள் ஓய்வெடுத்துக்கொண்டுவிட்டன.இப்படி ஏதும் நிகழ்ந்தால்தானே தண்டவாளத்திற்கும் ஓய்வு.எண்ணிப்பார்த்தேன்.உலகம் சுழல்வதும் அது சூரியனைச்சுற்றிக்கொண்டு சாய்ந்தபடியே வருவதும் நின்று விட்டால் என்னவாகும். மனிதனின் சிறிய அறிவுக்கு விடை தென்படாத  வினாக்கள்  குறித்து யோசித்துத்தான்  என்ன பிரயோசனம்.
                                                     டிக்கட்  வாங்கஇருவரும் வரிசையில் நின்றோம்.முதலில் ஒரு கவுண்டர்தான் இயங்கிக்கொண்டிருந்தது.திடீரென மற்றொரு கவுண்டரும் திறந்துகொண்டது. டிக்கட் வழங்க ஒரு பெரியவர் ஆயத்தமானார். ரயில் வருவது உறுதிதான்.
'நீ போய் அந்த வரிசையில் நில்லேன்.நான் இங்கு நிற்கிறேன்'
'அதுவும் சரி' என்று பதில் சொல்லிய பையன் அந்த கவுண்டரின் வரிசையில் நின்று கொண்டான்.
யார் முதலில் டிக்கட் வாங்கினாலும் அடுத்தவரிடம் உடன் வந்து சொல்லிவிடுதல் மிக முக்கியம் எச்சரிக்கை செய்து கொண்டோம்.தாம்பரம் வரை போகும் ரயிலா இல்லை செங்கல்பட்டு வரை செல்லும் ரயிலா வரப்போகிறதா என்கிற விஷயம் இன்னும் ருசுவாகவில்லை.முன்பாக  நிற்பவரிடம் தயங்கித்தயங்கி கேள்வி வைத்தேன்.
'நீங்க எங்கப்போகணும்'
'நான் பெருங்களத்தூர் போகணும்' அவரின் கேள்விக்குப்பதில் சொன்னேன்.
'நான் சிங்கப்பெருமாள் கோவில் போகணும்' அவர் மீண்டும் சொன்னார்.
'டிக்கட் வாங்கும்போதுதான் அது தெரியும்போல'
'இப்ப சரி' என்று சொல்லி நிறுத்திக்கொண்டார்.நான்தான் டிக்கட் வாங்கபோகிறேன் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.அதற்குள் என் பையன்'நான் வாங்கிட்டேன் நீ டிக்கட் வாங்காதே' என்று ஓங்கிக்குரல் கொடுத்தான்.
நான் வரிசையைவிட்டு வெளியில் வந்தேன்.எனக்குப்பின்னே நின்றவரின் முகம் சற்றுப்பிரகாசம் கூடியது.மனிதர்களுக்கு எதில் எதிலோ ஒரு திருப்தி இருக்கத்தான் செய்கிறது.திருப்தி அதிருப்தி என்பவைகளின்  மனக் கோர்ப்புதான் இந்த மானிட வாழ்க்கை.
பரங்கிமலை ரயில் நிலையத்தைத்தான் மவுண்ட் என்கிறார்கள். ஒரு சிலர் சென்ட் தாமஸ் மவுண்ட் என்று முழுப்பெயரையும் சொல்வதுண்டு. இங்கு தண்டவாளத்தைத்தவிர மற்ற இடங்களில் எல்லாம் மழை நீர் ஆக்கிரமித்து   நின்றுகொண்டிருந்தது.
'தண்ணி இன்னும் இருக்குது பாரு' என்றேன்.
'மழத்தண்ணி எங்க போவுணும்னுகற சிந்தை இல்லாமதான்  ஜனங்களுக்கு  சென்னையில வாழ்க்கை.சுயநலம்தான் இங்க  மூச்சுக்காத்துன்னு ஆகிப்போச்சு' என் பையன் தனக்குத்தெரிந்ததைச்சொன்னான்
                                  .' பயணிகளுக்கு ஓர் கனிவான அறிவிப்பு செங்கல்பட்டு வரை செல்லும் தொடர் வண்டி இன்னும் சற்று நேரத்தில் இரண்டாவது நடைமேடையை வந்தடையும் இது எல்லா ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.'என்னும் அந்த  அறிவிப்பு வந்தது.நடைமேடையில் நல்ல கூட்டம்.எப்படியாவது ஏறித்தான் ஆகவேண்டும்.காவல் பணியாளர்கள் விசில் ஒலி எழுப்பி உஷார் படுத்திக்கொண்டிருந்தார்கள்.நடைமேடையில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் தத்தமது கைகளில் ஏதோ ஒன்று வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்கள்.நிலைய அதிகாரி அறை முன்பாக ரயில் பணியாளர்ஒரு  பெண்தான் கையில் சிவப்புக்கொடியும் பச்சைக்கொடியும் வைத்துக்கொண்டு ரயில் வருவதை நோக்கிக்கொண்டிருந்தார்.ரயில் வருவதற்கான அறிவிப்பு வந்து கொண்டே இருந்தது.தூரத்தில் ஒரு ராட்சத மண் புழு ஒன்றின் தலை மாதிரிக்கு ஒன்று தெரிந்தது.ஆம்  ரயில் வண்டி வந்தது.நடை மேடையில் வந்து  நின்றுகொண்டது.மவுண்ட்  நிலையம் இறங்குபவர்கள் கட கட என இறங்கினார்கள்.ஓரிருவர் தட்டுத்தடுமாறி கீழே இறங்கினர்.ஏறுகின்ற கூட்டம் பட் பட் என தன்னை வண்டியில் திணித்துக்கொண்டு இருந்தது.
'இன்னும் இந்த ரயில் பிச்சைக்காரர்கள் தம்தொழிலை ஆரம்பிக்கவில்லை' என்றேன்.
'இன்னும் ரெண்டு நாட்கள் ஆகாதா.'
'சென்னையில் ரயில் பிச்சைக்காரர்கள் ஒரு அழகுதான்.நீட்டாக ஆடை அணிந்து கொண்டு.நல்ல காலணியும் போட்டுக்கொண்டு நடக்கிறார்கள்.நல்ல தமிழில் பேசுகிறார்கள்.இருக்கைகள் காலியாக இருந்தாலும் அமரவே மாட்டார்கள்.அவர்களே பிச்சை போடுபவர்களுக்கு ச்சில்லரை கொடுத்தும் உதவுகிறார்கள்.பாதி பேருக்கு மேல் ஊனமுற்றவர்கள்.கண் தெரியாதவர்கள் சற்று அதிகம்.எல்லோருமே ஒழுக்கமானவர்களாகத்தான் தெரிகிறார்கள்'
' நீ என்ன அவர்களுக்கு சங்கம் வைத்து நடத்துவது போல ப்பேசுகிறாய்'
'இல்லயப்பா ஏதோ தோன்றியது சொன்னேன்'
'திரு நங்கைகள் ரயிலில் காசு கேட்பதை ப்பார்த்து இருக்கிறாயா நீ'
'அவர்கள் வேறு மாதிரி.கை  தட்டுவார்கள் இயற்கைதான் எப்படி எல்லாம் படைத்து வேடிக்கை பார்க்கிறது.அவர்கள் நிலையில் இருந்தால் ஒழிய அந்த கஷ்டத்தை  நாம் உணரத்தான் முடியுமா?'
'ஏன் அப்பா இறைவன் என்று சொல்லாமல் இயற்கை படைத்து விட்டதாய் ச்சொல்கிறாய்'
'புரியாத ஒரு விஷயம்.அது இயற்கையோ.இறைவனோ'
'சில விஷயங்கள் புரியாமல் இருப்பது கூட நமக்கு இயற்கை சாதித்துக்  கொடுத்த  சவுகரியமே ''
வண்டியில் இருப்பவர்கள் எங்கள் இருவரையும் வேடிக்கை ப்பார்க்க ஆரம்பித்தார்கள். ஆக இது விஷயம் பேசுவதை நிறுத்திக்கொண்டோம்.வண்டி தாம்பரத்தை நெருங்கிவிட்டிருந்தது.நல்ல கூட்டம்.உட்கார்ந்துகொண்டு வந்திருந்தால் வழியெல்லாம் எப்படி இருந்தது என்பது பார்த்து இருக்கலாம்.அதுதான் முடியவில்லை.வழக்கம்போல் மூன்றாவது நடைமேடையில் வண்டி நிறுத்தப்பட்டது.பாதி பேருக்கு மேல் இறங்கிக்கொண்டனர்.தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனை நன்கு பார்க்கவும் வாய்த்தது.ஓரிருவர் வண்டியில் ஏறிக்கொண்டனர்.
'உக்காரலாம் எடம் இருக்கே'
'இன்னும் ஒரு ரெண்டு நிமிஷத்தில எறங்கணும்'
எனக்கு பையன் சொன்னான்.பரவாயில்லை என்று சொல்லிக்கொண்டு நான் ஒரு இருக்கை பார்த்து அமர்ந்தேன்.தாம்பரத்திலிருந்து ஒன்றும் பிரச்சனை இல்லை.ஆனால் முடிச்சூருக்கு பேருந்து செல்கிறதா என்றுதான் தெரியாமல் இருந்தது.பெருங்களத்தூர் வந்தது.நாங்களும் வண்டியை விட்டு இறங்கினோம்.ரயில் நிலையத்தில் மேம்பாலம் கட்டும் பணி அசுரத்தனமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.மனிதர்களின் தேவை விரிவாகிக்கொண்டேதான் போகிறது.மக்கள் எல்லாம் நகரம் நோக்கி குடிபெயரப்  பித்தாகி நிற்கிறார்கள்.எல்லோருக்கும் ஏதேனும் ஒரு தேவை இருந்துகொண்டே இருக்கிறது.நகரம் வந்து என்ன சவுகரியப்படப்போகிறார்கள் என்றால் ஒன்றுமில்லை.நகரத்தில்  ஏதோ ஒரு  வேலையைத்தேடிக்கொள்ள வாய்க்கிறது.'கெட்டும் பட்டணம் சேர்' என்று சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்கள்.பெருங்களத்தூரின் ரயில்வே நிலையத்தின் அந்த வடக்கு முனையில் குப்பென  மூத்திர வாடை. இந்த பெருங்களத்தூரை பேருந்து நிலையமாக வேறு மாற்றி இருக்கிறார்களே.கோயம்பேட்டில் ஒரு  பெரிய பேருந்து நிலையம். இந்த பெருங்களத்தூரில் வெறும் சாலை மட்டுமே. ஆனால் ஆயிரம் ஆயிரமாய் மக்கள் இறங்கி ஏறுகிறார்கள்.யாருக்கும் எந்த வசதியும் கிடையாது.எதைப்பற்றியும் யாருக்கும் அக்கறை இல்லை.யோசிக்க நேரம் மட்டுமிருக்கிறதா என்ன?.அதுவும்தான் இல்லை.
'பாத்து வா கருங்கல்லு ஜல்லிவ கொட்டிக்கிடக்குது. கொஞ்சம் வழுக்குது' என் மகன் எனக்கு சொல்லிக்கொண்டிருந்தான்.நானும் தத்தக்கா புத்தக்கா என்று நடந்தேன்.புக்கிங் கவுண்டரில் டிக்கட் வாங்குவோரின் நீண்ட வரிசை..டிக்கட் வாங்கியவர்கள் ஓட்டமும் நடையுமாக இருந்தார்கள்.தெருவின் இரண்டு புறமும் இரு சக்கரவாகனம் பாதுகாப்பிற்காக நிறுத்தும் வாடகைக்கடைகள் இருந்தன.வண்டிகள் வரிசை வரிசையாக நின்றுகொண்டிருந்தன.அவை அத்தனையும் பள்ளிக்குழந்தைகள் என சமத்தாக நின்று கொண்டிருந்தன.
'நம்ப வண்டிய இங்கே நிறுத்திவிட்டிருக்கலாம்.தவறிவிட்டோம்'
'எதனை யோசிக்க முடிகிறது.வாழும் இடத்தைவிட்டு உயிர் பிழைக்க வேறு ஒரு இடம்  வந்துவிட்டால் அதுவே   போதும் என்கிற இக்கட்டில் மாட்டிக்கொண்ட மனிதர்களின் கதி எப்போதும்  இப்படித்தான்'
நான் அவனுக்கு ச்சொல்லிக்கொன்டேன்.
'இலங்கைத்தமிழர்களை நினைத்துப்பார்க்கிறேன்.எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு எங்கு எங்கெல்லாமோபோய் நிற்கதியாய் நிற்கிறார்கள்.புலம் பெயர்ந்த இந்தத்தமிழர்களின் சோகங்கள் சொல்லி மாளாது.சொந்த மண்ணைவிட்டு ஓடிவந்த மக்கள் எங்கேயாவது  நிம்மதியாக வாழ்கிறார்களா என்ன?'
ரயில் நிலையம் செல்லும் அந்தத்தெரு முடிந்தது
இந்திரா காந்தியின் வெள்ளைச்சிலைமுன்பாக இருவரும் நின்றுகொண்டிருந்தோம்.இந்திராகாந்தி  சிலையை சற்று  உயரமான பீடத்தில்வைத்திருக்கலாம். சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தார்கள்  கவனிக்கவேண்டும்
'ஆட்டோ ஏதும் கிடைக்குமா'
'பார்ப்போம் இங்கு கிடைக்கலாம் மழை .பாதிப்பு  வெள்ள  பாதிப்பு இல்லாத இடம்தான் இது' சொல்லிய நான் ஆட்டோக்காரர்கள் யாரேனும் உண்டா என்று தேடினேன்.ஒரு ஆட்டோக்காரன் வந்தான்.அதனுள்ளாக இரு இசுலாமியப்பெண்மணிகள் அமர்ந்து இருந்தனர்.
ஆட்டோக்காரன் நிறுத்தினான்.
'எங்க போவுணும்'
'பழைய பெருங்களத்தூர் பார்வதி நகர் உள்ளார நேதாஜி நகரு போகணும்'
'பார்வதி நகர் போவுலாம். நேதாஜி நகரு  பெறவு பாப்பம். நீங்க  இங்கயே இருங்க நா  வரேன். தெ இந்த சூராத்தம்மன் கோவிலுவரைக்கும் போயி சவாரிய இறக்கிவிட்டு வந்துருவேன்'
'நாங்க வெயிட் பண்றம். நீங்க அவசியம் வரணும்' நான் பதில்சொன்னேன்.
'இங்க எல்லாம் ஒண்ணும் பாதிப்பு இல்ல'
'ஆமாம் அப்பா.இது கொஞ்சம் மேட்டுப்பகுதி.  நேரமாகியது.'
'இன்னுமா அந்த ஆட்டோக்காரன் வர்ரான்'
'அதான் நானும் பாக்கறேன்.இத்தனி நாழிக்கு அவன் வந்து இருக்கலாம்'
'வரல்ல.அவன எதிர்ப்பாக்குறதில ஒண்ணும் பிரயோசனம் இல்ல'
'வேற ஆட்டோக்காரன் யாருமே காணும்'
'அப்பா நாம பொடி நடையா போயிடுவோம்.நமக்கு நேரம் ஆயிடும்.இருட்டுறதுக்குள்ள ஆதம்பாக்கம்  திரும்பிப் போயிடணும்'
' சரிதான் அந்த ஆட்டோக்காரன் வந்தபாடில்லை. அவனுக்கு வேறு ஏதும் கிராக்கி வந்திருக்கலாம்.நாம் காத்து இருப்போமா இல்லை வேறு ஏதும் வண்டி பிடித்து போய்விட்டோமா என்பது அவனுக்கும்தெரிய நியாமில்லை'
ஆட்டோக்காரனை இனி எதிர்பார்க்கவேண்டாம் என நடக்க ஆரம்பித்தோம்.அருகிலிருந்த கழிவு நீர்க்கால்வாய் தண்ணீர் நிறைத்துக்கொண்டு நுரைத்துக்கொண்டு கண்ணில் பட்டது.அழுக்கு தண்ணீர் இன்னமும்   சென்றபாடில்லை.ஏதேனும் அடைப்பு இருக்கலாம். தண்ணீர் செல்வதை தடுத்தும்  இருக்கலாம்.வருமுன் காப்போம் என்பதெல்லாம் வாய்  வார்த்தையோடு சரி.பிரச்சனை வந்தால்தான்  அதன் ஆழம்  தெரிகிறது ஒவ்வொன்றையும் அதனுடைய விபரீதம் என்னவென்பதை அனுபவித்தே தெரிந்துகொள்ள வாய்க்கிறது.
டீக்கடைகள் ஒன்று இரண்டு திறந்து வைத்திருந்தார்கள்.கடையைச்சுற்றி நல்லகூட்டம்.நாங்கள் இருவரும் சீனுவாசப்பெருமாள் கோவில் தாண்டிக்கொண்டிருந்தோம்.பெருங்களத்தூர் ஏரியை ஒட்டிய அந்த சாலையை  நன்கு போட்டிருந்தார்கள்.மழையும் வெள்ளமும் அந்த சாலையை விட்டு வைத்திருந்தது.மக்கள் அந்த சாலையை நன்கு பயன்படுத்தமுடிந்தது.பெருங்களத்தூர் ஏரியின் கிழக்குப்பகுதியும் வடக்குப்பகுதியும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி இருந்தது.ஒரு ஐம்பது வீடுகளாவது ஏரியின் உள்ளே இருப்பதை ப்பார்க்க முடிந்தது. அரசாங்கத்தின் மின்சாரமும் தண்ணீர்க்குழாய்களும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுத்தான் இருக்கின்றன.இந்த மழை அங்கு வாழ்ந்த மக்களை ஒன்றும் பாதித்துவிடவும் இல்லை.தடி எடுத்தவன் மட்டுமே  தண்டல்காரன் என்பதுதான் இப்போது   நடைமுறை.ஆக  ஆக்கிரமிப்புக்காரர்களின்  எண்ணிக்கை க்கூடிக்கொண்டே போகமுடியும். வீட்டு வாயிலில் ஒரு கொடிக்கம்பம் மிக மிக  முக்கியம்
                                ஏரியின் கரையில் ஒரு புற்றுக்கோயில் இருந்தது.அந்த அம்மன் கோயில் சிலை முன்னால் நிறைய நிறைய  வளையல்கள் அடுக்கு அடுக்காய் தொங்கவிடப்பட்டிருந்தன.மனிதர்களின் வேண்டுதல்கள்.  .நிறைவேற்றப்பட்டதற்கு அவை சாட்சி கூறி க்கொண்டு நின்றன. நாத்திகர்கள்  பார்த்தால் சற்று  வருத்தமும் படலாம்.
'நாய்வ நெறைய இருக்கு பாத்து போ'
நான் என் பையனுக்குச்சொல்லிக்கொண்டு இருந்தேன்.மழை வெள்ள பாதிப்புக்கள் அவைகளுக்கும் இருக்கத்தானே செய்யும்.
'ஏரியிலிருந்து ஜிவ் ஜிவ்வுனு ஊதக்காத்து வீசுது'
'ஏரியை எட்டிப்பார்க்கலாமா'
'அதற்கெல்லாம் இப்போது நேரம் ஏது' நான் பதில் சொன்னேன்.ஊரும் உலகமும் சென்னையை நோக்கிக்கொண்டிருந்தன.சென்னைக்கு என்னவோ ஆகிவிட்டதெனத்தான் மக்கள் பேசிக்கொண்டர்கள்.
பறவைகள் மரத்தில் அமர்ந்தவை அம்மரத்தைச் சுற்றி சுற்றி மீண்டும் அங்கேயே அமர்ந்து தம் சோகத்தைப்பாடிக்கொண்டிருந்தன.ஒரு அசாதரணமான சூழல்.உயிரினங்கள் அனைத்தும் சிக்கிகொண்டு தவிக்கவே செய்தன.
எனக்கு வண்டலூர் மிருகக்காட்சி சாலையின் நினைவு வந்துபோயிற்று.அவை அங்கே என்ன பாடு பட்டுக்கொண்டிருக்குமோ.நோக்கிய இடமெல்லாம் வெறும் தண்ணீர் மட்டுமே ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது.
பழைய பெருங்களத்தூருக்கு வடக்காகத்திரும்பும் சாலை ஓரம் ஒரு ஈமச்சடங்கு மண்டபம்.அதனுள்ளாக மக்கள் கூட்டம்,வெள்ள பாதிப்பு அவர்களை அங்கே கொண்டு நிறுத்தி இருக்கிறது. மண்டபத்தின் வாயிலில் ஓரு கிழவி மீன்களைக் கூடையில் வைத்துக்கொண்டு வியாபாரம் செய்துகொண்டிருந்தாள்.மீன்கள்   அத்தனை  அம்சமாக இருந்தன. வெள்ளம் அவைகளை மட்டும்  உற்சாகப்படுத்தி இருக்கலாம்
====================







.
'



.
.

Tuesday, August 14, 2018

kaliyugan gopl





கலியுகன் கோபியின் கவிதைக்கோலங்கள்-எஸ்ஸார்சி



கவியரசர் கண்ணதாசனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட கலியுகன் கோபியின் கவிதை நூல் 'மனச்சிற்பி'. இங்கே எளிமை,தெளிவு,செறிவு இவைகளின் எழுத்து வெளிப்பாடாக மலர்ந்துள்ளன கவிமலர்கள்.கவிஞருக்கு வாழ்த்து சொல்லும் கலை மாமணி சுரேந்திரன் கவிஞரின் பொதுவுடைமை எண்ணங்களை அழகாகவே சுட்டியுள்ளார்.
'குடிசைக்குள் கஞ்சி கொதிக்க வேண்டும்
குழந்தைகள் பசியாறக் குடிக்க வேண்டும்' இப்படி கவிதை சொல்லும் கலியுகன் நம் நெஞ்சைத்தொட்டுவிடுகிறார். பேராசிரியர் ஹரணி யின் அணிந்துரை எழுத்துத்தளத்தில் கவிஞரின் நம்பிக்கையை பறைசாற்றுகிறது. எளிமையே கவிதையின் மேன்மை என்பதை அற்புதமாகக்குறிப்பிடும் ஹரணி ஓர் ஆழமான படைப்பாளி. அவரின் வாழ்த்துக்கள் கவிதை நூலுக்கு வலு கூட்டுகிறது.
'குடும்பப்பாதை' கவிஞரின் மெருகு கூட்டிய கவிதை.அது வாசகனின் இதயம் தொடுகிறது.பளிச்சென்று வெடித்துக்கிளம்புகின்றன கவிதை வரிகள்.
'சூரியன் நிலவென இரண்டு
வானமொன்று' என்று ஆரம்பித்து கணவன் மனவி உருவமிரண்டு,குடும்பப்பாதை ஒன்றேதான் என்று முத்தாய்ப்பாக முடிகிறது. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சியாமளா அதனை The Goal of The Life என அற்புதமாக மொழியாக்கம் செய்துள்ளார்.
'working hands are two
But the heart is one' என்கிற மொழிபெயர்ப்பாளரின் அந்தப்புரிதல் கூர்ந்து நோக்கத்தக்கது.
திருக்குறளை தேசிய நூலாக்கக் குரல் கொடுக்கிறார் கவிஞர்.தமிழை செம்மொழி என்று அறிவிக்க மய்ய அரசுக்கு அறுபதாண்டுகள் பிடித்தன.தமிழ் மா நில க்கட்சி ஒன்றின் ஆதரவு தேவை என்பது தவிர்க்கமுடியாததுவாக ஒரு நெருக்கடி.ஆக எம்தமிழ் செம்மொழி ஆனது.தொடர்ந்து தென் மாநில மொழிகள் எல்லாம் செம்மொழிகள் என அறிவிப்பு.. மய்ய அரசின் அழகு நடு நிலமை இது.யதார்த்தநிலமை இப்படி இருக்க திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க ஆசைப்படுகிறோம்.முயற்சி திருவினை ஆக்கலாம்.
டாக்டர்.அறிவுடை நம்பியின் ஆங்கில மொழியாக்கத்தில் 'In that hut' ஆக வந்துள்ளது 'அந்த குடிசைக்குள்' என்னும் கவிதை.குடிசை ஒன்றில் ஒரு தீக்குச்சி இல்லா சோகத்தை கொப்பளிக்கிறது'அந்த குடிசைக்குள்' என்னும் அந்தக் கவிதை.
'But in that small hut
the darkness hold permanent grip' நல்ல மொழியாக்கம்.
அரித்துவார் நகரில் திருவள்ளுவர் சிலைக்கு நிகழ்ந்த புறக்கணிப்பைக்கண்டு கொதித்துப்போகிறார் கலியகன் கோபி. நினைத்துப்பார்ப்போம்.பெங்களூரில் எத்தனை ஆண்டு காலம் துயில் கண்டது வள்ளுவர் சிலை.வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்ததுவாகப்பேசுவார் பாரதி.பிரபாகரனின் இந்தி மொழிபெயர்ப்பில் சில கவிதைகள் மலர்ந்து மணம் சேர்ப்பது பாராட்டுதலுக்குரியதாகும்
'மழைவெள்ளம்' என்னும் தலைப்பிட்ட கவிதை கச்சிதமாக ஒரு செய்தி தருகிறத்.
' ஆறுகள் ஏரிகள் சீரமைத்து இருந்தால்,அப்பாவி மனிதனை அவை விழுங்கி இருக்குமா'. 2015 ல் வந்த மழை வெள்ளம் ரொம்பவும்தான் மனிதனைப்புரட்டிப்போட்டது.தமிழகத்தின் வடகரையின் கடலோரம் சந்தித்த சோகம் இது.இயற்கைக்கு கோபம் வந்தால் அது கடலூரைத்தான் சீண்டி இன்பம் கொள்ளுமோ?என்னவோ.
'ஆகாய சொர்க்கம்' என்னும் கவிதை கவிஞரின் அகம் எனும் சுரங்கத்தைத்திறந்து காட்டுகிறது.மனதிற்குள்ளே விளைந்த ஒரு மாங்கனி,குணத்தில் பூத்ததோர் மல்லிகை,கவிதை வரிக்குள் ஊறும் ஒரு இனிப்பு,அன்பெனுமந்த ஈரப்பொழிவு என அடுக்கிக்கொண்டே போகிறது கவிதை.
இலவசங்கள் சமுதாய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை என்ற ஒரு விமரிசனத்தோடு இத்தொகுப்பு நிறைவுக்கு வருகிறது.
சமூக அக்கறையும்,மொழி மீது அன்பும் கொண்ட வெற்றிப்படைப்பாக இந்த நூல் அனுபவமாகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------

nadum nadappum





திரையுலகம்-ஆகிவந்த தடமே- எஸ்ஸார்சி

பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு.பல இன மத மொழிகளைக்கொண்டது நம் பாரத நாடு. பல கலாசாரக்கூறுகளைத்தன்னகத்தேப்பயிலும் விரிந்த நிலப்பரப்பு.மக்கள் தொகையில் உலகிலேயே இரண்டாவது இடம். மக்களாட்சி என்னும் மந்திரச்சொல்லை ச்சரியாக நடைமுறைப்படுத்தும் ஒரே நாடு என்கிற பெருமையும் நமக்குண்டு.
வல்லரசு நாடுகளில் தானும் ஒன்றாக வேண்டும் என்கிற பெருங்கனவோடு இருக்கின்ற இந்திய நாடு.புத்தரும் காந்தியும் அம்பேத்கரும் பிறந்து பெருமை சேர்த்துக்கொண்ட பூமி.
இந்திய விடுதலையை முன்னெடுத்துச்சென்ற அன்றைய காங்கிரஸ் கட்சியின் ஆளுகையில் பன்னெடுங்காலம் மைய அர்சு இருந்தது . ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட நேர்மையான அரசியல்வாதிகளை நம்பிக்கையோடு ஆதரித்தனர் இந்திய மக்கள். தன் இறப்புக்குப்பின் தன்னுடைய சிதையின் அஸ்தியை வான் ஊர்தியில் கொண்டுபோய் இந்தியா முழுவ்தும் தூவச்செய்து இந்திய விவசாயியின் காலடிக்கலப்பையின் மண்ணோடு கலந்துவிட ஆசைப்பட்ட பேரான்மாவுக்குச்சொந்தக்காரர் அந்த நேரு பிரான்.
அவர் மனிதருள் மாணிக்கம்.பொதுத்துறை நிறுவனங்களைக்கோயிலென நம்பிப்ப்போற்றிய நேர்மையாளர்.
காலம் செல்லச்செல்ல நேரு கண்ட கனவுகள் அவரின் வழிவந்த ஆளுங்கூட்டத்தாலேயே சிதைக்கப்பட்டன.உலக அரங்கில் இந்தியாவின் தனித்தனமை என்பது கொள்ளைபோனது. இன்று அது கார்ப்பொரெட்டுகளுக்கு மட்டுமே நிம்மதியான வாழ்வு என்பதில் முடிந்து போய் நிற்கிறது .பணபலமும் அரசியல் அதிகாரமும் பெறுதல் எப்படி என்பதுதான் இன்றைய பிரதான விஷயங்கள்.
எங்கு பார்த்தாலும் ஊழல் எதிலும் ஊழல் என்பதைப்பார்த்து பார்த்துச்சலித்துப்போன இந்திய மக்கள் சென்ற பாராளுமன்றத்தேர்தலில் வாக்குகளை மாற்றிப்போட்டார்கள்.வேறு வழி தெரியவில்லை.வாய்ப்பந்தல் போடும் வல்லமையும்,மதத்தை மய்யமாக்கி பிரித்தாளும் வித்தையும் கற்று அரங்கேற்றும் அரசியல்வாதிகள் அதிகாரத்துக்கு வந்தனர்.நான்காண்டுகள் முடியப்போகிறது
.ஆள்வோரின் வெற்றுக்கூச்சல் மட்டுமே நாடெங்கும் கேட்கிறது. தேசிய பொருளாதாரத்தை நிமிர்த்திவிடுகிறேன் பார் என்று ஆரம்பித்து புழக்கத்தில் இருந்த உய்ர் மதிப்பு ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று உத்தரவு வந்தது.சாதாரண மக்கள் ஆங்காங்கே நடுத்தெருவில் நிறுத்தப்பட்டார்கள். வாழ்வு சீரழிக்கப்பட்டது. அவர்கள் சிதைந்துபோனார்கள்.கருப்புப்பணம் ஒழிக்கத்தான் வந்ததாம் அந்த மோடிவித்தை. ஆனால் எந்தக்கதையும் ஆகவில்லை. ஆகூ ஊகூ என்கிற முழக்கத்தோடு சரி. நன்மை எதுவுமே நடைபெறவில்லை.நாட்டை கருப்புப்பண முதலைகளிடமிருந்து 'காக்க கசப்பு' மருந்தென்று மக்களிடம் பொய்சொன்னார்கள்.
ஜி எஸ் டி என்று வரிவிதிப்புத்திட்டத்தை அவசர கோலத்தில் நாடெங்கும் அரங்கேற்றம் செய்தார்கள்.சிறு வணிகர்களும் விவசாயிகளும் பெருமளவு பாதிப்புக்கு உள்ளானார்கள். குழப்பமே மிஞ்சியது.
நாட்டுடமை ஆக்கப்பட்ட வங்கிகள் மக்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனங்கள். அப்படிச் செயல்பட்டுவரும் காலம் இனி விடைபெற்றுக்கொண்டுவிடலாம் என்கிற தோற்றம் உருவாக்கப்பட்டு விட்டது.உழைத்துச்சம்பாதித்த பணத்தை,பணி ஓய்வு காலபண பலன்களை வங்கிகளில் வைப்பாகவைத்து நிம்மதியாக இருக்கமுடியாது என்பதாக மட்டுமே அனுபவமாகிறது. கொள்ளையர்கள் மல்லையா, நிராவ் மோடி போன்றோர் எண்ணிக்கையில் கூடிக்கொண்டு போகிறார்கள்.நமது தேசிய வங்கிகள் கொள்ளையடிக்கப்படுகின்றன.மாறாக சிறுகடன் பெற்ற விவசாயிகள் நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள்.
உச்ச நீதிமன்ற விவகாரங்கள் குழம்பிய ஆளுகையின் கீழ் சிக்கித்தவிக்கின்றன.நீதிபதிகளுக்குள்ளேயே முரண்பாடுகள் மனப்புழுக்கங்கள், ஒரு நீதிபதியின் மரணம் அது குறித்து விசாரிப்பதில் முரண்பாடுகள்.
சென்ற தேர்தல்களத்தில் வீதி எங்கும் உலாவந்த 2G வழக்கு சுருங்கிப்போன விவகாரம்,சென்னைத்தொலைபேசியில் முன்னாள் அமைச்சரின் தொலைபேசி துஷ்பிரயோக வழக்கு என நீீர்த்துப்போனதுகளைப் பட்டியலிடலாம்.
காவிரி நீர்ப்பங்கீடுப்பிரச்சனையில் ஓரளவுக்கு உச்ச நீதிமன்ற த்தீர்ப்பு என்கிற ஒன்று வெளிவந்தாலும் அதையெல்லாம் செவிமடுக்க ஆளும் கர்நாடக அரசுக்கு எங்கேமனம் இருக்கிறது. கர்நாடகமெங்கும் தேர்தலில் பெறும் வோட்டுக்கள் பற்றியும் அவை கொணரும் சீட்டுக்கள் பற்றியும் கவலைப்படும் பெரிய பெரிய அரசியல் கட்சிகள்.
ஜம்மு காஷ்மீரத்தில் எப்போதும்போல் அமைதியற்ற சூழல்,சீனாவின் நிரந்தர எல்லைப்பிரச்சனை அது கொண்ரும் முஸ்தீபுகள்,வந்து வந்து போகும் இந்திய நேபாள உறவு உரசல்கள்,ஓயாத இலங்கைக்கடற்படையின் தமிழக மீனவர்களுக்கு எதிரான அடாவடித்தனங்கள் என்று இவை தொடர்கதையாகவே இருக்கின்றன.
அட்டவணை இனத்தோர் மீது தொடரும் வன்முறை,ஆதிவாசிகள் மீது தொடரும் அடக்குமுறைகள், ஏதுமறியாச்சிறுமிகளின் மீது நடத்தப்படும் பாலியல் வன்மங்கள் என்பவைக் கூடிக்கொண்டே போகின்றன.
மையத்தில் ஆளும் அரசு தனது மதவாதப்போக்கினை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.அதற்கு தொடர்ந்து கிடைத்த தேர்தல் வெற்றி அதன் கண்களைக்குருடாக்கி இருக்கிறது.அண்மையில் நமக்கு முன்னே உ பி
யிலும் பிகாரிலும் குஜராத்திலும் நடைபெற்ற பல்வேறு தேர்தல் முடிவுகள். ஆரோக்கியமான தீர்மானகரமன நல்லதொரு மாற்றங்கள் இனி வரலாம் என்கிற ஒரு நம்பிக்கையை வழங்கி இருக்கிறது.
பெரும்பணக்காரர்களின் பசுமையான வாழ்க்கையே தனது மூச்சுக்காற்றாக ப்பாவித்துச் செயல்படும் ஆளும் கட்சிக்கு சாதாரண நடுத்தர மக்களை ஏழைகளைப்பற்றியகவலை எல்லாம் படுவதற்கான அக்கறையை எதிர்பார்க்க முடியுமா?.மதவாத அரசியல் ஆரோக்கியமான் அரசியல் அல்ல என்பதை வருங்கால தேர்தல்முடிவுகள்தான் அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.
இந்திய இடதுசாரி இயக்கங்களுக்குத் தங்களின் சமூக ப்பார்வையை ஆகச்சரியாகஅமைத்து ஜன நாயக சக்திகளின் பலம் சிதறிவிடாமல் பொறுப்போடு காத்து, தேசத்தை ப்பாசிச தீயசக்திகளிடமிருந்து மீட்கவேண்டிய பெரும் பொறுப்பு இருக்கிறது.மதவாத சக்திகளிடமிருந்து இத்தேசத்தை மீட்காது போனால் வரலாறு இடதுசாரிகளை மன்னிக்காது.
அந்த வகையில் மக்கள் இயக்கங்கள் ஆற்றவேண்டிய பெருங்கடமை அவர்கள் முன்னே நிற்கிறது.
'எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்டே' என்பார்களே அதனைத்தான் தமிழகத்தின் அரசியல்களத்திற்கு ஒப்பாகச்சொல்லமுடியும்.ராஜாஜியும்,ஓமந்துர்ராரும்,காமரஜரும்,அண்ணாதுரையும் ஆட்சிசெய்த தமிழகத்திற்கு இந்தியாவின் மாநிலங்களுக்கு மத்தியில் மிகப்பெரியமரியாதை உண்டு.பிரிட்டீஷ்காரர்கள் இந்தியாவின் ஆளுகையை கவர்னர் ஜெனரல் ராஜாஜியிடம் ஒப்படைத்துச்சென்றார்கள்,இந்தியாவுக்கு பிரதமராக இந்திராகாந்தி வரவேண்டும் என்பதை தமிழகத்து காமராஜர்தான் முடிவுசெய்தார். ஒப்பற்ற ஓமந்தூரார் நேர்மைக்கு இலக்கணமாக தமிழகத்தில் ஆட்சிசெய்தவர். பிரதமர் நேரு மாநில அரசியலில் ஒரு யோசனைவைக்க அவரோடு கருத்து முரண்பட்டு தன் ஆட்சிக்கட்டிலை தூக்கி எறிந்த நெஞ்சுரம் வாய்ந்தவர் அந்த ஓமந்தூரார்..
ஆனால் இன்று அரசியல் எப்படி ஆகிப்போய் இருக்கிறது முதல்வர் ஜெயலலிதா காலமான்பிறகு தமிழக அரசியல் மய்ய அர்சின் ஆடுகளமாகி இருக்கிறது.
அம்மையாரின் மறைவுக்குப்பின் கட்சி மூன்றாக ஏன் நான்காக உடைந்து போனது. தேறிய இரண்டு பிரிவுகளுக்கு பிரதமர் மோடி அவர்கள் ஒட்டுப்போட்டு வைத்தார். தமிழக ஆட்சி என்னும் வண்டி தள்ளாடி தள்ளாடி ஓடிக்கொண்டு இருக்கிறது.எல்லா அரசியல் அலங்கோலங்களுக்கும் சாட்சியாக கொலுவிருக்கும் அந்த தமிழகஆளுநர்.
போக்குவரத்துதொழிலாளிக்கு ஓய்வு ஊதியம் வழங்குவதில் கூட தீராத சிக்கல். அந்தப் போராட்டம் நடக்கும்போதே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் உயர்த்திக்கொண்ட அழகு இங்கே நிறைவேறியது..
இடது சாரிகளே இல்லாத சட்டசபையைப் பெற்றிட்ட தமிழகத்தை என்னவென்று சொல்வது. காசுகொடுத்து எப்படியும் பெற்றுவிடலாம் தேர்தலில் வோட்டு என்றாகிவிட்டஇச்சோகம் தமிழக மக்களை எங்கேயோ கொண்டு நிறுத்தி இருக்கிறது. அரசியலில் எரிமலையாய்ப்பொங்கிய பொதுவுடமைத்தோழர் பாலதண்டாயுதமும்,சட்டசபையில் கர்ஜித்த ஜீவாவும் விடுதலைப்போராளி ராமமூர்த்தியும் வாழ்ந்து மறைந்த மண்ணில்தான் இத்தனையும் காட்சியாகிறது. .
கல்வி சிறந்த தமிழ் நாட்டில் நல்ல கல்விக்கு எத்தனை விலை. பணம் லட்சக்கணக்காக நன்கொடையாகத்தந்து மழலைப் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்ப்பது.பட்டிதொட்டி எல்லாம் பொறியியல் கல்லூரிகள் த்ரம் பற்றிய அக்கறை இல்லை.மருத்துவப்படிப்புக்கு மய்ய அரசின் நீட் தேர்வுப்பிரச்சனை.சமச்சீர்கல்வி என்பது நீர்த்துப்போய் சி பி எஸ் ஸியின் பின்னால் ஓடுவது என்கிற அவலம்.துணைவேந்தர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பிறகு அவர்களின் நியமனத்தில் ஆயிரம் பித்தலாட்டங்கள். இன்னும் எத்தனையோ.
மஞ்சுவிரட்டுதல் என்னும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்குத்தடை அதை எதிர்த்துப் பிறகு வரலாறு காணாத மக்களின் எழுச்சிப்போராட்டம் அதனில் பெற்ற வெற்றி.
காவிரியில் நீர்ப்பங்கீடு குறித்து உச்ச நீதிமன்ற ஆணையை என்றும் மதிக்காத கர்நாடகம்,அதற்கு எதிராகத் தமிழக மக்களின் எழுச்சிப்போராட்டங்கள்,மய்ய அரசின் மெத்தனப்போக்கு, அதற்குக் காரணமான கர்நாடக மாநிலத்தில் வர இருக்கின்ற தேர்தல் அதன் தாக்கம். சென்னைக்கு வந்த ஆகப்பெரிய பிரதமரை திரும்பிப்போ என்று கருப்புச்சட்டை அணிந்து தமிழர்கள் நடத்திய எழுச்சிமிகு போராட்டாம்,ஐ பி எல் கிரிக்கெட்டு க்கு சென்னையில் நடந்த உணர்ச்சிமிகு எதிர்ப்பு.பிறகு அவ்விளையாட்டு பூனே நகருக்கு மாற்றம்.
தொடர்ந்து நமது தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் நசுக்கப்படுகிறார்கள்.முடிவில்லாத சோகம் இது. ஓகிப்புயலும் அவர்களின் வாழ்வை உலுக்கி எடுத்து மீளாத்துயர் தந்தது.
தமிழ் மண்ணில் சாராயாக்கடைமூடப்பட பெண்களின் போராட்டங்கள்,காவிரிப்படுகையில் ஹை ட் ரோ கார்பனுக்கு எதிரான டெல்டா மக்களின் போராட்டம், தூத்துகுடி ஸ்டெரிலிட் நச்சு ஆலை எதிர்ப்பு ப்போர் இவை இவை இங்கு ஆரோக்கியமான சமூக நிகழ்வுகள்.
.தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான அடக்குமுறை என்பதுவோ சாதிய அதிகாரமய்யங்களால் தொடர்கதையாக நிகழ்த்தப்படுகிறது.பெயருக்குப்பின்னால் இங்கே தமிழ்மண்ணில் சாதிப்பட்டம் இல்லை.வெறும் பெயருக்கு அது மட்டுமே இல்லை.
நம்மூர் பல்கலைக்கழக பெரும்பத்விகளில் எப்படி இத்தனை அழுக்கு. இவற்றிற்கு ச்சரியான பரிகாரம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை தென்படவில்லை.நம்பிக்கை இல்லாத மனிதன் வாழ்வதற்கே தகுதியற்றவன் என்கிறார்கள்.என்னசெய்வதோ?
வெண்திரையில் மக்கள் கண்ட காட்சி நாயகர்கள் இன்று தமிழக அரசியலுக்கு வந்து நல்லது சொல்லத்துவங்கியிருக்கிறார்கள்.போகப்போகத்தெரியலாம் போகும் இடம் எதுவென்று.நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.தமிழக அர்சியலுக்குத் திரையுலகம்கூட ஒரு ஆகிவந்த தடமே.
----------------------------------------------------------------.
---------------------------- எஸ்ஸார்சி -எழுத்தாளர்.

poypesi



'பொய் பேசி பலவானாக இருந்தாலும்'- எஸ்ஸார்சி


நான் எழுபதுகளில் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தேன்.நண்பர்கள் கல்லூரி முடிந்ததும் அன்றாடம் சிதம்பரம் காந்தி அமைதி நிலையத்தில் கூடுவோம்.அப்போது அந்த மன்றம் வடக்கு ரத வீதியில் இருந்தது.அங்கு பல்வேறு சேவைப்பணிகள் தொடர்ந்து நடக்கும்.ஏழைக்குழந்தைகளுக்கு இலவசமாக பாடங்கள் நடத்துவோம்.மருத்துவமனைக்கு ச்சென்று ஆதரவற்ற நோயாளிகளை கவனித்து வருவோம்.வீட்டில் உபயோகித்து மீதமாய் உள்ள நல்ல மருந்துகளை சேகரித்து மருத்துவமனைக்குக்கொண்டு செல்வோம்.யோகா வகுப்பும் இந்தி வகுப்பும் இந்த மையத்தில் சிறப்பாக நடைபெறும்.வெள்ளிக்கிழமை தோறும் சர்வ மதப்பிரார்த்தனை காந்தி பஜனை என்ற தலைப்பின் கீழ் நடைபெறும்.'ஈசா வாஸ்யாம் இதம் சர்வம் யத் கிஞ்ச்ச ஜகத்யாம் ஜகது' தவறாமல் உப நிடதத்திலிருந்து சொல்லப்படும்.பைபிளும் குரானும் வாசிக்கப்படும்.எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும் பாடுவோம். 'ரகுபதி ராகவ' தொடங்கி 'ஈசுவர அல்லா தேரே' நாம் வரை சென்று முடிப்போம்.தியானம் நிச்சயம் இருக்கும்.
முடிந்தவரை கதர் ஆடை மட்டுமே பயன் படுத்துவோம். காந்தி மன்றத்தில், குஞ்சிதபாதம், ஞானம்,குழந்தைசாமி,ம.ராமசாமி, பாலச்சந்திரன் முத்துசுப்ரமணியம் என இன்னும் எத்தனையோ நண்பர்கள் இருந்தார்கள்.
இயற்கைச்சீற்றம் வந்தபோதெல்லாம் 'மாணவர் அமைதிப்படை' என்கிற பதாகையின் கீழ் சென்று பணியாற்றுவோம்.அருள்மிகு சிவகாமித்தாய் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சியில் மக்களுக்கு ச்சேவையாற்றினோம்.மன்றத்திலிருந்து'தொண்டு' என்கிற இலக்கிய ஆண்டுமலர் வெளிவரும்.அதனில் இலக்கியப்பங்கு கொள்வோம்.
சாந்தி சேனா-என்கிற ஒரு தொண்டு அமைப்பு அப்போது வாரணாசியைத்தலைமை இடமாகக்கொண்டு இயங்கியது.தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் வழிகாட்டுதலில் அவ்வமைப்பு இயங்கிக்கொண்டிருந்தது.
நான்'சாந்தி சேனா' அமைப்பு நடத்திய அகில இந்திய முகாமில் கலந்து கொள்ளப் பணிக்கப்பட்டேன். தேசத்தந்தை மகாத்மாவின் செயலர் மகாதேவ தேசாயின் மகனார் நாராயண்தேசாய் எங்கள் முகாமுக்குத்தலைமை ஏற்றார்.முகாம் கர்நாடக(அப்போது மைசூர் மாநிலம்) மாநிலம் பெல்காமுக்கு அருகிலுள்ள கடோலி என்னும் கிராமத்தில் நடைபெற்றது.இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் நண்பர்கள் அழைக்கப்பட்டிருந்தன.பங்களாதேஷ் லிருந்தும் இருவர் வந்திருந்தனர். முகாமில் பங்கு கொண்டவர்களுக்கு அன்றைய மத்திய ரயில் நிர்வாகம் ஒருவழி பயணச்சலுகை அளித்து உதவியது.
தேசிய முகாமில் இறுதி நிகழ்வாக மே 28-30.1972ல் அகில இந்திய மாநாடு பெல்காம் நகரில் நடைபெற்றது.'what we have achieved and lost during 25 years of independence?'என்பதுவே மாநாட்டின் ஆய்படுபொருளாகும்.இது பற்றியே விவாதம் கருத்தரங்கம் அனைத்தும் நடந்தன..
அண்ணாமலைப்பல்கலைக்கழகத்திலிருந்து நான் ஒருவனே சென்றிருந்தேன்.சிதமபரத்திலிருந்து ரயில் பயணதொட்ங்கிக் கடலூர் வழியாக பெங்களூர் சென்றேன். பயணம் முழுக்க வினோபாஜி எழுதிய 'கீதைப்பேருரைகள்' படித்து படித்து ஆழ்ந்த சிந்தனை வசமானேன்.பெங்களூர் அப்போது ஒருவன் காலால் நடந்தே சுற்றி முடிந்துவிடும் ஒரு எளிய நகரமாக எனக்கு அனுபவமானது.
சிடி ஜங்க்ஷனிலிருந்து மிராஜ் எக்ஸ்பிரஸ் பிடித்து இரவு முழுவதும் பயணித்தேன். பெல்காமை விடியற்காலை நான்கு மணிக்கு அடைந்தேன்.சற்று குளிராகத்தான் இருந்தது.பொதுவாகத்தமிழ் மண்ணில் இருந்து பழக்கப்பட்டவர்களுக்கு வெளியிடம் சென்றால் சாதாரணக் குளிர்கூட தாங்கமுடியாமல்தான் இருக்கிறது.பெல்காம் ரயில் நிலையத்திலிருந்து வெளிவந்து டவுன் பஸ் பிடித்தாக வேண்டும்.முதலில் கிட்டூர் ராணி சின்னம்மா சிலை நிறுத்தத்திற்குச்சென்று பின்னும் ஒரு பஸ் பிடித்து அந்தக்கடோலி சென்றாகவேண்டும்.ரயில் நிறுத்ததிலிருந்து சின்னம்மா சிலை நிறுத்தம் செல்ல ஒரு டிக்கட் 'பந்த்ரா பைசா'.என்னோடு முகாமுக்குச்செல்பவர்கள் சிலரும் வண்டியில் ஏறி இருந்தார்கள். கொஞ்சம் தெம்பாக உணர்ந்தேன் கண்டக்டர் பேருந்தின் அடிக்கூரையில் நீளமாகத்தொங்கவிடப்பட்டிருந்த கயரை ஆட்டினால் டிரைவர் அருகே தொங்கவிடப்பட்டிருந்த கண்டா மணி 'ணங்க்' என ஒலித்தது.
'கடோலி' என்கிற கிராமம் ஏன் தேர்வு செய்யப்பது என்று அங்கு சென்றவுடன் தான் தெரிந்தது. கடோலி கிராம மக்கள் மராட்டி மொழி பேசினார்கள்.மகாராஷ்டிராவும் கர்நாடகாவும் பிரிகின்ற எல்லைக்கோட்டில் அந்தக்கிராமம் இருந்தது.மகாராஷ்டிரா, பெல்காம் பகுதியை தனது என்று உரிமை கொண்டாடி எல்லைப் பிரச்சனை எழுப்பியிருக்கிறது.இன்றுவரை கூட அது தீர்க்கப்படவில்லைதான். கடோலி கிராமத்தில் முத்ன் முதலில் ஒரு வீர சிவாஜி கோவிலைப்பார்த்தேன். மராட்டிய சிவாஜி அந்த மக்களுக்கு தெய்வமாக ஆக்கப்பட்டுவிட்டார் என்பது நமக்குச்செய்தி.
கடோலி கிராமத்தில் ஒரு மாந்தோப்பு.அதனுள்ளாக ஒரு நூறு மாமரங்கள் இருக்கலாம்.மே மாதம் என்பதால் காயும் பழமுமாக மரங்கள் கனத்துப்போய் இருந்தன.இந்த மாந்தோப்பில்தான் பதினைந்து நாட்கள் வாசம்.பத்துக் கூடாரங்கள் தார்ப்பாயால் போடப்பட்டிருந்தன. பெரிய கூடாரங்கள் உணவருந்தவும். விவாதத்திற்கும் என ஒதுப்பட்டிருந்தன.
இந்தியாவின் அனைத்து மாநில நண்பர்களும் ஒன்றாகக்கூடினோம். மகளிர் இருபது பேர்.ஆடவர் எண்பதுக்குக்குறையாது என ஞாபகம்.எல்லோருக்கும் வழிகாட்டியாக காந்தி அமைதி நிலையத்தின் எஸ்.என் சுப்பா ராவ் இருந்தார்.அரைக்கால் சட்டை அணிந்து அரை.குறையாக நரைக்கத்தொடங்கிய தலைமுடியுடன் காணப்பட்டார்.மிடுக்குடன் அவர் ஆங்கிலம் பேசியது எல்லோரையும் கிறங்க அடித்தது.
பத்து குடில்கள் அமைக்கப்பட்டு இருந்தன.குடிலுக்கு எங்களை அனுப்புவதில் ஒரு புதிய அனுபவம்.என் குடிலில் ஒரு அஸ்ஸாம்காரர்,ஒரு மராட்டியர்,ஒரு ஆந்திராக்காரர்,ஒரு ஒரிசாக்காரர்'ஆந்திராவின் வெங்கடேசலு,ஒரிசாவின் மொகந்தி,மராட்டிய ராமச்சந்திரபாகேல் இவர்களே நினைவுக்கு வருகின்றனர்.மொகந்தி மருத்துவ மாணவர்.அசாம்காரர் பெயர் மறந்து போனது.
முகாமில் இரவு முழுவதும் விழித்து இருந்து இருவர் காவல் பணி ஆற்ற வேண்டும்.விடியற்காலை ஐந்து மணிக்கு ஐவர் கொண்ட குழு ஒரு பாடலை இசைத்துக்கொண்டு அனைவரையும் எழுப்பும்.பிறகு சரியாக ஆறு மணிக்கு பிரார்த்தனை.தொடர்ந்து 'ஸ்ரமதான்' என்னும் உடல் உழைப்பு.இது 9 மணி வரை.சாலை அமைத்தல்,ஏரி ஆழப்படுத்துதல்,துப்புரவுப்பணி என்று வரையறை.பிறகு காலை உணவு. உணவு தயாரிப்பும் பரிமாறுதலும் முகாமில் பங்கேற்பவர்கள்தான்.உணவு உட்கொள்கின்றபோது ஒரு தேசியப்பாடல் பாடவேண்டும்.'நல்ல மனிதன் நல்ல காரியங்களை மட்டுமே செய்வான்.பொய் பேசுபவன் எவ்வளவு பலவானாக இருந்தாலும் நல்லகாரியங்களைச்செய்யமுடியாதவன்' இந்தக்கருத்தைச்சொல்லும் பாடல் அது.இன்று நினைத்தாலும் எனக்கு இந்த வரிகள் மன வலு சேர்க்கின்ற பாடல் வரிகளே..
துவக்க நாளில் அனேக நண்பர்கள் பரிமாறிய உணவில் மிகுந்த சேதத்தை ஏற்படுத்திவிட்டனர்.முகாமின் முன்னணித்தோழர்கள் வரணாசி அசோக் பங்க் என்பவரின் தலைமையில் புறக்கடையில் நின்று கொண்டு மீீீதமாய் எறியப்படுபவனவற்றை எல்லாம் சேகரித்து அவற்றைத்தாமே பங்கிட்டு உண்டனர்.உணவை மீதமாக்கி எறிந்தவர்கள் அவர்கள் முன் வெட்கித்தலைகுனிந்தோம்.அன்றிலிருந்து ஒரு பருக்கை உண்வு எறியப்படுதல் மனித உழைப்பை அவமதிப்பது என்பதனைப் புதியதாக்கற்றுக்கொண்டோம்
பத்து மணியிலிருந்து மாலை ஒரு மணி வரை கருத்தரங்கம் நடைபெற்றது.அனேகமாக இந்தியிலும் எப்போதேனும் ஆங்கிலத்திலும் சொற்பொழிவு இருந்தது.இந்தி தெரியாத ஒரு ஐந்து பேருக்கு ஒரு மொழி பெயர்ப்பாளர் இருந்தார். ஐந்து பேர் அனைவரும் தமிழர்களே.ஆந்திராக்காரரான அவர் ஆங்கிலத்திலும் இந்தியிலும் புலமை பெற்றவராக இருந்தார் தமிழும் அறிந்திருந்தார்.அவருக்கு தமிழ் நாட்டை அடுத்த அந்த சித்தூர் பக்கத்திலே ஒரு கிராமம் சொந்த ஊர்.
.'தமிழுக்குத்தாலாட்டு' இந்திக்கு .?' தமிழ் எங்கள் உயிர் இந்தி எங்கள் .?' என்றுகண்ட கண்ட சுவர்களில் எழுதி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வரை போராடியது எல்லாம் நினைவலையில் ஓடியது.வரலாறு என்ன எல்லாமோ செய்துவிட்டதுதான்.
எனக்கு இன்றும் நினைவில் இருப்பது' man and machine' ஒரு பேராசிரியர் எடுத்த வகுப்பு.. முடிவில் இயந்திரங்களின் வருகை மனித ஆன்ம நேயத்தை சுருக்குப்போட்டுவிட்டதாக உணர்ந்தோம்.
மதிய உணவிற்குப்பிறகு மீண்டும் கூடுவோம்.காலையில் நிகழ்ந்தவைகள் பற்றிய ஒரு ஆய்வு நடைபெறும். தேநீருக்குப்பதிலாக மாங்காய் ஜூஸ் கொடுப்பார்கள்.அது இளஞ்சூட்டில் இருக்கும்.அது அத்தனை இனிமையாக இருந்தது.பிறகு விளையாட்டு நிகழ்ச்சி.மைதானத்தில் ஒரு இந்தியாவே விளையாடுவது போன்ற உணர்வு இருந்தது.
அனேகமாக தமிழ் நாட்டுக்காரர்கள் தவிர ஆடவரும் பெண்டிரும் சகசமாக விளையாடிக்கொண்டிருந்தனர்.எங்களுக்கு அவ்விதம் பழக்கம் இல்லை என்று நாங்கள் சொன்னோம். உங்களுக்கு மனதில் அழுக்கு என்று துடுக்காக பதில் தந்தார்கள்.
மாலை ஆறு மணிக்குப் பிரார்த்தனை.அனைத்து சமயப்பிரார்த்தனை.அனைத்து மொழிகளின் பாடல்கள் இடம் பெற்றன. சுப்பா ராவ் தமிழ் பாரதியின் பாடல் ஒன்றைப்பாடினார். 'ஆத்திச்சூடி இளம்பிறை அணிந்து மோனத்திருக்கும் முழுவெண் மேனியான்' என்று தொடங்கும் அந்தப்பாடல்.
தாகூரின் பாடல்கள் வங்கத்து நண்பர்கள் பாடினார்கள்.பிறகு எளிய இரவு உணவு.இரவு பத்து மணிவரை கலை நிகழ்ச்சி.மனித நேயம் வலியுறுத்தும் கலை நிகழ்ச்சிகள்.ஒரு பிரார்த்தனைப்பாடல். அத்தோடு அவரவர் குடிலுக்குச்சென்று உறங்கிவிடுவோம்.
மருத்துவகுழுவில் ஒரு டாக்டர் இருந்தார். எங்கள் குடிலின் ஒரிய மொகந்தி மருத்துவ மாணவர், அவரோடு மருத்துவ சேவை செய்தார்.
குடில் அருகிலே ஒரு சிறு மலை இருந்தது.அங்கு அனைவரும் சென்று வந்தோம். அந்த மலைவாசிகளின் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதறிந்தோம்.முதலில் எங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்குள் அனுமதிக்க மறுத்தார்கள். கடோலி ஊர் மக்கள் அவர்களுக்கு எங்களை அறிமுகம் செய்துவைத்து உத்வினார்கள்
இப்படியாக ப்பதினைந்து நாட்கள் முடிந்தன.பெல்காம் கல்லூரி ஒன்றிலே தேசிய மாநாடு நடந்தது.கல்வித்திட்டத்தைத் தகுந்த முறையிலே மாற்றி அமைக்காமல் இந்தியாவில் எந்த சாதனையும் நிகழ்த்திவிட முடியாது என்ற முடிவுக்கு வந்தோம்.
யங் இந்தியாவில் 10.09.1931ல் மகாதமா காந்தி எழுதிய வாசகம்,' I shall work for an india,in which the poorest shall feel that it is their country,in whose making they have effective voice, an India in which there shall be no higher class and low class of people,an India in which all communities shall live in perfect harmony.There can be no room in such an India for the course of the intoxicating drniks and drugs.women will enjoy the same rights as men.'
இதுவே தேசிய மாநாட்டின் பிதான விவாதப்பொருளாக இருந்தது.
மாநாடு முடிந்து அனைவரும் கிளம்பிக்கொண்டிருந்தனர்.கல்கத்தாகாரர் சக்ரபர்த்தியும் உர்மிளாவும் அங்கிருந்து கோவாவுக்குச்சென்றுவிட்டனர்.இதனைச்சிலர் 'குசு குசு' என பேசிக்கொண்டனர்.இயற்கையும் அதன் திருப்பணியை செய்யாமல் இருக்குமா என்ன?தவறில்லை ச்சரியே.
மாநாடுமுடிந்து பெங்களூர் வழியாக சிதம்பரம் திரும்பினேன்.
இது எல்லாம் முடிந்து இன்று ஐம்பது ஆண்டுகள் ஓடி விட்டன. அந்த 'வசு தெய்வ குடும்பகம்' மனதில் நிழலாக வந்து வந்து போகிறது..
ஜயப்பிரகாஷ் நாராயணனை யருக்கேனும் தெரியுமா? தெரிந்தவர்களைத்தேடினேன். எங்கும் காணோம். 'வந்தேமாதரம்' பாடிய என் தேசத்தில்
குடியும்,போதைப்பொருளும், சாதிய வன்கொடுமையும்,பெண்களின் விசும்பலும் விசுவ ரூபமெடுத்து இருக்கக்காண்கிறேன்..
இன்றும் 'பொய் பேசுவோன் பலவனாக இருந்தாலும் நல்லவைகளைச்செய்துவிட முடியாது' என்று அந்தக்'கடோலி' முகாமின் பாடல் வரி மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது..
----------------------------------------------------------

.
.

Thursday, May 31, 2018

PARUVAM -PAAVANNAN 9


9  பருவம்- என்னும் பொய்கைக்கரையில் எங்கள் பாவண்ணன்.

எஸ் எல் பைரப்பா கன்னடத்தில்'பருவம்' என்கிற நாவலைப்படைத்திருக்கிறார்.அதனைத்தமிழாக்கியிருக்கிறார் எழுத்தாளர் மொழிபெய்ர்ப்பாளர் பாவண்ணன்.போற்றுதலுக்குரிய ஒரு கனமானபடைப்பை மிகச்சிரத்தையோடு பாவண்ணன் தமிழுக்குக்கொண்டு வந்திருக்கிறார். படைப்பாளியைவிட கடினமாக உழைப்பவன் மொழிபெயர்ப்பாளன்
.மிக்க கவனமும் ஆழ்ந்த பண்பாட்டு ஞானமும் பாவண்ணனின் இயல்பாய் அமைந்த குணங்கள்.எத்தனையோ அரிய இலக்கியங்களை அவர் கன்னடத்திலிருந்து தமிழுக்குக்கொண்டு தந்தவர்.
ஊரும் சேரியும்,கவர்மென்ட் பிராம்ணன்,பலிபீடம்,நாகமண்டலம், பசித்தவர்கள்,அக்னியும் மழையும்,ஓம்நமோ,பருவம் இன்னும் இப்படி எத்தனையோ.
பைரப்பாவின் 'பருவம்' பாவண்ணனின் மொழிபெயர்ப்பில் சிலிர்த்துக்கொண்டு வெளிப்பட்டு வாசகனை ச்சிந்தனைச்சாகரத்தில் அமிழ்த்திப்பார்க்கிறது.அறிவினை விரிவு செய்,அகண்டமாக்கு,விசாலப்பார்வையால் விழுங்கு மக்களை, இவை இவை பருவத்தில் வாசகனுக்கு ஒருங்கே அனுபவமாகிறது.
பைரப்பாவின் பருவம் மகாபாரதப்பெரும்போரை மையமாகவைத்துக்கற்பனையாகப்புனையப்பட்டது..
பைரப்பா மகாபாரததின் அரிய நிகழ்வுகளை தனக்கே உரிய கண்ணோட்டத்துடன் தொட்டுப்பேசுகிறார்.மகாபாரத்தின் நிகழ்விடங்களுக்கு எல்லாம் தானே நேராகச்சென்று பார்வையிட்டு,அங்கு வாழ்கின்ற மக்களோடு பேசி உறவாடி,அங்கு நிலவும் பூகோள அமைப்போடு ஒன்றிப்பயணித்து த்தன் அனுபவ சாகசங்களைப் 'பருவம்' வழி நம்மோடு பைரப்பா பகிர்ந்துகொள்கிறார்.மாபாரதத்தின் கால விதானத்திற்கே வாசகனை அழைத்துச்சென்று அந்தப்பாத்திரங்களிடையே அமர வைத்து அலாதி பிரமிப்பை ஏற்படுத்துகிறார்.
சாகித்ய அக்காதெமி இதன் தமிழ் வடிவத்தை பாவண்ணன் என்னும் மொழித்திறனாளியின் கடுமையான உழைப்பில் நேர்த்தியாகக்கொண்டுவந்திருக்கிறது. இந்நூல் 'பருவம்' குறித்து இப்படிப்பேசித்தொடங்கி வைக்கிறது.
'மகாபாரதக்கதையில் காணப்படும் போர்-அமைதி,அன்பு-இறப்பு,மனிதன்-கடவுள் ஆகியவற்றை மையமாகக்கொண்ட புகழ்பெற்ற கன்னட நாவல்'.
பைரப்பா இப்படைப்பை இளம் வயதிலேயே மறைந்துபோன தன் தாயுக்கு சமர்ப்பித்துப்பெருமை சேர்க்கிறார்.ஜைமினியின் காவியத்தை, குமார வியாசத்தை ஆழ்ந்து கற்ற அந்தத்தாய் 'கௌரம்மா'கேழ்வரகுக்களியோடு குழந்தை பைரப்பாவுக்கு இலக்கிய ரசனையையும் சேர்த்து ஊட்டி வளர்த்திருப்பதை சமர்ப்பணம் என்னும் பகுதியில் குறிப்பிட்டு அந்த ஞானப்பெண்மைக்கு ப்பெருமை கூட்டுகிறார்.வீர சிவாஜியின் தாயொடு வைத்து எண்ணத்தக்கவர் பைரப்பாவின் அன்னை கௌரம்மா.
'மூல நூலான வியாசபாரதத்தை ஒருமுறை முழுக்கவும் படித்தபிறகு வேதகாலத்தின் இறுதிபகுதியில் நிலவிய பொருளாதார,சமூக,அரசியல் நிளைகளைப்பற்றியும் சமய நிலைகளைப்பற்றியும் தீவிரமாக ஆய்வுசெய்தேன்'
'மகாபாரததோடு தொடர்புடைய இமயமலைப்பகுதியில் சில காலம் தங்கி இருந்தேன்'
'துவாரகை,ஆரவல்லி மலைத்தொடர்கள்,விராட நகரம்,மதுரா,தில்லி,குருக்ஷேத்ரம்,அஸ்தினாவதி,பர்நாவம்,சக்கர நகரம்,ராஜகிரி ஆகிய இடங்களில் மேலும் பயணம் மேற்கொண்டேன்.ஆய்வுகள் நிகழ்த்தினேன்.'
இப்படிப் பாரதக்கதை நிகழ்ந்த மண்ணோடும் மக்களோடும் நேராகச்சென்றுப்பழகி அனேகவிஷயங்கள் கற்றுக்கொண்டதாக பைரப்பா தன் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
ஒரு முக்கியமான செய்தி. பைரப்பா அவர் ஒன்றும் மகாபாரதக்கதையை மீண்டும் எழுதிட 'பர்வம்' என்னும் புதினத்தைத்தொடங்கவில்லை.பைரப்பாவின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் இப்படிச்சொல்லலாம்.
'மகாபாரதப்பாத்திரங்களின் கதையை நான் எழுதவில்லை.மனித சமுதாயத்தின் பல்வேறு முகங்கள்,உணர்வுகள்,உறவுகள்,முரண்கள் பற்றிய பிரக்ஞை,இந்த நாவலை எழுதி முடிக்கும்வரை இருந்தது.
சிற்சில இடங்களில் ஒன்றிரெண்டு புதிய பாத்திரங்களைச்சேர்க்கும்போதும்,சிற்சில சம்பவங்களைச்சேர்க்கும்போதும் நாவலின் பரிமாணம் பெருகியது.....'
தூதனாக வந்த கிருஷ்ணனிடம் துரியோதனன் பேசியவார்த்தைகள் விதைகளாக வெடித்துச்சிதறி குந்தியின் மனக்கனலை வளர்த்து நிற்கின்றது.குந்தியும் பாண்டுவின் இன்னொரு மனைவி மாதுரியும் பெற்ற பிள்ளைகள் யார்?துர்யோதனன் சொல்கிறான்.'பாண்டவர்களில் யாருமேஅவர்களுடைய அப்பாவுக்குப்பிறந்தவர்கள் அல்லர்.அவர்களைப்பாண்டவர்கள் என்று கூப்பிடக்கூட என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை.இந்த வம்சத்தையே சேராதாவர்களுக்கு அநியாயமாக இந்த ராஜ்யத்தில் பங்கு கொடுத்தீர்கள்.அந்த அநியாயத்தை,அவர்களைச்சூதில் வென்று சரிசெய்தேன்.'
பாண்டவர்கள் ஐவருமே நியோக முறையில் பிறந்தவர்கள்.நியோக முறையில் பிள்ளைகள் பெற்றுக்கொள்வதை அங்கீகாரம் செய்த சமுதாயம் அன்றிருந்தது.அதனை பைரப்பா அழகாகச்சொல்லிப்போகிறார்.'கணவனால் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாத நிலை வரும்போது அல்லது குழந்தைகள் இல்லாமலேயே அவன் இறந்துபோகும்போது அவனுடையவம்சம் வளர்வதற்காக,அவன் மனைவிக்கு இன்னொரு ஆண்மகனுடன் சேர்ந்து குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படும். அவள் தான் கருவுற்றது உறுதிப்படும் வரை அந்த ஆடவனோடு சேர்ந்து இருக்கவேண்டும்.பிறகு அந்த ஆண்மகனைத் தன் தந்தையாக பாவித்துக்கொள்ளவேண்டும். அவனோடு சம்போகிக்கின்ற தருணம் அவள் தன் உண்மையான கணவணைப்பற்றிய நினைவோடு மட்டுமே இருக்கவேண்டும்.இச்சம்போகம் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள மட்டுமே என்கிற.இந்த எண்ணமே அவள் மனதில் நிறைவாக இருத்தல் வேண்டும்.இதுவே நியோக முறை
மா.பாரதத்து குந்தியும் மாதுரியும் இப்படித்தான் குழந்தைகளைப்பெற்றுக்கொள்கிறார்கள்.
குந்திதேவி தேவர்(ஒரு இனம்)களின் தர்மராஜனோடு புணர்ந்து ஒரு குழந்தைக்குத்தாயாகிறாள். குந்தியின் கணவன் பாண்டு இதற்கான சகல ஏற்பாடுகளையும் சிரத்தையோடு செய்து நிற்கிறான்.விதைத்துவிட்டு ச்செல்பவன் விடைபெற்றுக்கொள்கிறான்.பாண்டு தன் மனைவி குந்தியை அழைத்து அந்த தர்மராஜனுக்கு வணங்கச்சொல்கிறான்.குந்தி தான் ஒரு மகள் என இப்போது அதே விருந்தாளியிடம் ஆசி பெறுகிறாள். அப்படி குந்திக்குப்பிறந்தஅந்தக்குழந்தையே பாண்டவர்களில் தருமனாக பின்னாளில் உலாவருபவன்.
வீரமுள்ள ஒரு குழந்தைக்கு ஆசைபட்டான் அந்தப் பாண்டு.பிறகு அந்த தேவர்களின் பராக்கிரம சேனைத்தலைவன் வந்தான்.அவனோடு குந்தி பாயைப்பகிர்ந்து கொண்டாள்.பாண்டு வெறும் ஆசி மட்டுமே வ்ழங்க பீமன் பிறக்கிறான்.
பைரப்பா குந்தியின் உடல் அமைப்பு பற்றி அழகாகப்பேசுகிறார்.
'ஒரு புலியையே கொன்று தோளில் சுமந்துவரும் ஒரு மாவீரனுக்கு சந்தோஷத்தையும் அமைதியையும் தரும் ஆற்றல் என்னிடம் இருக்கிறது. என் தோளா? என் மார்பா?என் உடற்கட்டா?' குந்தியின் வார்த்தைகள் இவை.பைரப்பா குந்திதேவியின் பாத்திரப்படைப்பில் உச்சத்தை எட்டுகிறார். ஒவ்வொரு ஆண்மகனும் குந்தியின் முன்னால் சிறுத்துப்போகவே படைக்கப்பட்டிருபதாக வாசகனுமிங்கே எண்ணிப்பார்க்கிறான்.
தேவர் இன இந்திரன் வருகிறான். அவனுக்கு பாண்டுவும் சம்மதம் சொல் கிறான். குந்தி தேவி நியோகமுறையில் மீண்டும் ஒரு ஆண்மகவைப்பெறுகிறாள்.அவனே அர்ஜுனன்.அர்ஜுனனுக்கு இந்திரனின் தேக உரு அமைப்பு.கூர்மையான கண்கள்.நீல நிறத்தன.. கூர்மையான மூக்கு.அழகான கன்னம்.வடிவான முக அமைப்பு.அவன் சுபாவமும் அப்படியே.வேகம்,சுறு சுறுப்பு,உல்லாசம்,அன்பு செய்தல் எல்லாவற்றிலும் கூட அப்படியே.பைரப்பா அடுக்கிக்கொண்டே போகிறார்.
தேவரின மருத்துவ இரட்டையர்கள் பாண்டுவின் வேறொரு மனைவி மாதுரியைப்புணர்ந்தார்கள் அந்தப்.பாண்டுவின் நியோக ஏற்பாடு.நகுலனும் சகாதேவனும் மாதுரிக்குப் பிறந்தார்கள். அந்த நியோக முறை குந்தியின் மாதுரியின் வாழ்வில் நல்ல விளைச்சல் தந்தது.
மக்கள் வயல்காட்டில் விவசாயத்தைச் செய்து வாழ்வதைவிட போரில் வீரனாக வாழ்வதைப்பெரிதெனக்கருதியதாக பைரப்பா சொல்கிறார்.'விவசாயம் பார்த்துக்கொண்டிருந்தால் நம்மால் எப்படி வீரர்களாக முடியும்?அதனால்தான் யுத்தம் வரும்படி செய்யவேண்டும்.இல்லையென்றால் நமக்கு எந்தவித சுகமும் இல்லை.இன்னொரு முக்கிய விஷயம் இதில் இருக்கிறது.எந்த யுத்தமும் இல்லாமல் வெகுகாலம் கழித்துவிட்டால் அரசர்கள் எப்படி நம்மை வைத்துக்கொண்டிருப்பார்கள்?நீங்களும் சென்று விவசாயம் பாருங்கள் என்று அனுப்பிவிடுவார்கள்.அப்புறம் சேற்றில் இறங்கித்தான் நாம் வேலை செய்யவேண்டும்.அது மட்டுமல்ல வீரன் என்கிற கௌரவமும் போய்விடும்'. இப்படிபோகிறது விஷயம்.
உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி என் கிற செய்தி அங்கு பேசப்படவில்லை.ஜெய் ஜவான் ஜெய் கிசான் சமாசாரம் கிடையாது. விவசாயம் தாழ்ந்த நிலையிலேயே வைத்து பேசப்படுவதாக பைரப்பா வாசகனுக்கு ச்சொல்லிவிடுகிறார்.
க்ஷத்திரிய குணம் பற்றி ஒருவிளக்கம் ருக்மரதனால் கொடுக்கப்படுகிறது.அழகான விளக்கம் அது.'நண்பனாகவும் இல்லாமல் பகைவனாகவும் இல்லாமல் உறவுவைத்துக்கொள்வது ஒரு க்ஷத்ரியனால் முடியாத காரியம்'.
குந்தி பாண்டுவின் ஆண்மையற்ற நிலையால் பாதிக்கப்பட்டவள்.பாண்டு குந்தியோடு இல்லாமல் மாதுரியையும் மணந்து குழந்தை பிறக்குமா என்று தப்புக்கணக்கு போடுகிறான். மாதுரியும் மாதவிலக்காகி நிற்கிறாள்.குழந்தைக்கனவு சிதைந்து போகிறது.பாண்டு தன்னை ஏமாற்றி விட்டான் என்பது குந்திக்கு மனதில் ரணத்தை உண்டாக்குகிறது.பாண்டு குந்தியிடம் பொய் சொல்லி நாட்களைக்கடத்திக்கொண்டே போகிறான்.அவனிடம் ஆண்மை இல்லை. இருப்பதாய் ப்பொய் பேசுகிறான். அவனைக்குந்தி தன் கூர்ந்த கண்களால் நோக்குகிறாள்.பாண்டு இப்போது சுருங்கிப்போகிறான்.'உண்மை அறிந்தவன் பொய்சொல்பவனை வெறும் பார்வையாலேயே தாக்கி இல்லாமல் ஆக்கமுடியும்' என்று குந்தி விளக்கம் தருகிறாள்.பொய் பேசுபவன் எத்தனை பலவானாக இருந்தாலும் ஒன்றும் செய்துவிடமுடியாது என்பது நமக்கு சொல்லப்படுகிறது.சத்யமேவ ஜெயதே என்பது தூக்கிப்பிடிக்கப்படுகிறது.
தர்மபத்தினி என்பவள் யார் என்பதை பைரப்பா வாசகனுக்கு வேறு ஒரு இடத்தில் வரையறை செய்து சொல்கிறார்.'முதல் மனைவிதான் தர்ம பத்தினி' அவள்தான் அதிகாரம் பெற்றவள் என்று குந்திதேவியை வைத்து வாசகனுக்குச் செய்தி சொல்கிறார்.
பைரப்பா இமயமலை ப்பகுதிகளில் வாழும் மலையக மனிதர்களின் வாழ்க்கைமுறைகள அவைகளில் கிடைக்கும் சில புதிய அனுபவங்கள் பற்றி புதினத்தில் சொல்லிப்போகிறார்.குடும்பத்தில் எல்லாச்சகோதரர்களுக்குமாக ஒரு பெண்ணை அல்லது ஒன்றிரெண்டு பெண்களை த்திருமணம் செய்துகொள்ளும் பழக்கம் அவர்களிடையே நிலவிவந்தது.பெற்ற குழந்தைகள் எல்லோருமே மூத்தவனின் பெயராலே அழைக்கப்படுவர்.ஒருவன் தனக்கு நான்கு மனைவி என்பான் இன்னொருத்தி தனக்கு ஆறு கணவன்கள் என்பாள்.இப்படிப்போகிறது குடும்ப விஷயம். இந்தப்பிறவிக்கு இன்னொரு பெண்ணை சிந்தையாலும் தொடேன் என்னும் ராமகாவிய விஷயத்தை இங்கே நினைத்துப்பார்க்கிறோம்.
தமிழ்க்கலாசாரத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை மட்டுமே சங்ககாலந்தொட்டுப்பார்க்கமுடிகிறது.பரத்தையர்மீது காதல்கொண்டு ஆண்மகன் செல்வது நடைமுறையில் இருந்து இருக்கிறது.கற்பென்பது பெண்களுக்கு மட்டுமே உரித்தான விஷயமாகப்பேசப்படுகிறது.மாதவியோடு புழங்கி வந்த தன் மனாளன் கோவலனை கண்ணகி தூக்கி எறிந்துவிடவில்லை.அது அக்கால நடைமுறையாக அனுபவமாயிற்று.
மாதுரியின் வயிற்றில் பிறந்தாலும் நகுலனும் சகாதேவனும் குந்தியிடமே கூடுதலாக அன்பு பாராட்டினர்கள்.குந்தியை பைரப்பா அப்படி உச்சத்தில் வைத்து புதினத்தை கொண்டுபோகிறார்.பாண்டுவைப்புணர்ந்து தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள மாதுரி விழைகிறாள்.பாண்டுவும் தான் ஆண்தன்மை பெற்றுவிட்டதாக மலட்டுதன்மையிலிருந்து விடுபட்டுவிட்டதாக நினைக்கிறான்.ஆனந்தத்தின் முதல்படியில் மாதுரி கால் வைக்கிறாள்.ஆனால் பாண்டுவின் முகம் திடீரென சுருங்குகிறது.இதயம் நின்றுபோகிறது.பாண்டுவோடு உடன் கட்டை ஏறித்தன் உயிரை மாதுரி மாய்த்துக்கொள்கிறாள்.குந்தி இப்படியாக ஐந்து ஆண்பிள்ளைகளோடு தனிமரமாகிறாள்.உடன்கட்டை ஏறும் பழக்கம் இந்த மண்ணில் இருந்ததை நாம் அறிவோம்.இன்றைக்கும் அது எங்கேனும் ஒரு மூலையில் இந்திய மண்ணில் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது.சட்டங்களும் தண்டனைகளும் மனித மனங்களை முற்றாக பக்குவபடுத்திவிடுமா என்ன?என்பதே எஞ்சுகிறது.
மதஸ்ய தேசத்தில் பயணிக்கும் பாண்டவரின் குதிரைகளுக்கு தண்ணீர் தாகம். ஆக ஒரு நீர் நிலையில் குதிரைகளுக்குத்தண்ணீர் காட்டுகிறார்கள்.பாவண்ணன் இங்கே 'குதிரைகளுக்கு நீர் குடிப்பாட்டித்தாமும் குடித்தார்கள்' என்று மொழி பெயர்க்கிறார்.குடிப்பாட்டுதல் என்பது புதிய சொல்லாக அனுபவமாகிறது.குளிப்பாட்டுதல் அறிவோம்.ஆனால் குடிப்பாட்டுதல் என்பதை புதியதாக க்கேள்வியுறுகிறோம்.பாவண்ணன் இந்த ப்புதிய வினைசொல் ஆக்கத்தை த்தமிழுக்குக்கொண்டு தந்தாலும் பாராட்டுதலுக்குரியதே. மீண்டும் பிறிதொரு இடத்தில் கூட பீமனே குதிரைக்கு த்தண்ணீர் குடிப்பாட்டினான் என்று பாவண்ணன் எழுதிப்போகிறார்.
சதாகாலமும் காட்டில் இருக்கும் ராட்சதர்களுக்கு மிருகங்களின் குணங்கள் வந்துவிடும் என்கிறார் பைரப்பா.சாதாரணமாக நீ யாரை எதிர்த்துச்சண்டை இடுகிறாயோ அவர்களின் குணம் உனக்கும் வருவதில்லையா? அதுபோலத்தான் புலியின் குணமும் கரடியின் குணமும் ராட்சதர்களுக்குண்டு.இங்கே நமக்கு ஒரு விஷயம் மனத்திரையில் எட்டிப்பார்க்கிறது.சுரண்டும் முதலாளித்துவ அமைப்பை எதிர்த்துப்போராடும் சில தொழிலாளர் அமைப்புக்கள் தாமே காலப்போக்கில் சுரண்டும் முதலாளித்துவ குணத்தைப்பெற்றுவிடுதலில் முடிந்துபோவதை நாம் பார்த்திருப்போம்.
பெண்களை முன்னிலைப்படுத்தும் படைப்புதானே பைரப்பாவின் 'பருவம்'. பீமன் சொல்கிறான்.''அண்ணனின் ரத்தம் ஒழுகும் தலையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு காட்டில் இருக்கிற மரம் செடி கொடிகள் கூட கலங்கும்படி உருக்கமாய் அழுதவள் தன் அண்ணனைக்கொன்றவனையே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று விரும்பிய அந்தப்பெண்ணின்அன்பு'.
குந்தி தன் மகன் பீமனிடம் பேசுகிறாள்,'பெண்களின் மனசையும் அன்பையும் புரிந்துகொள்ள வேண்டுமானால் கொஞ்சம் முதிர்ச்சி வேண்டும்.நீ இன்னும் விளையாட்டுப்பிள்ளையாய் இருக்கிறாய்.உன் புரிதல் போதாது.பெண் தன் மனத்தை உனக்கு அர்ப்பணிக்க வரும்போது வேண்டாம் என்று சொல்வது பெரிய பாவம்.இவர்கள் ராட்சதர்கள்,இவர்கள் நாகர்கள்,இவர்கள் நிஷாதர்கள்,இவர்கள் கிராதர்கள்,இவர்கள் ஆரியர்கள்,இவர்கள் தேவர்கள் என்கிற வேறுபாடு அன்புக்கு இல்லை.அவள் உன்னை நேசிக்கிறாள் கூடுதலாக அவள் உன்னை நேசிக்கிறாள்.அவள் விருப்பத்தை நிறைவேற்றுவது உனது கடமை.எழுந்திரு.'.
பீமன் சொல்கிறான்.'சாலகடங்கடியின் அன்பை நான் புரிந்துகொள்ளுமுன்பு அம்மா புரிந்து கொண்டாள்'. மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன் செவ்விதலைப்படுவார் என்பார் திருவள்ளுவர்.பெண்களின் அன்பை விளங்கிக்கொள்ள ஒரு பக்குவம் வேண்டியிருக்கிறது.ஷேக்ஸ்பியர்' frailty thy name is woman' என்று வித்தியாசமாகச்சொல்வதை இந்த இடத்தில் வாசகன் ஒரு முறை அசை போட்டுப்பார்க்கலாம்.லேடி மாக்பெத்தையும் அந்த ஷேக்ஸ்பியர் தான் நமக்குக்கொடுத்தவர்.
பாவண்ணன், தனது மொழிபெயர்ப்பில் பீமனின் சின்னம்மா அந்த மாதுரி தன் கணவன் பாண்டுவோடு உடன் கட்டை ஏறுதலை உடன்படுக்கை ஏறுதல் என்று குறிப்பிடுகிறார்.அது அந்த அவ்வளவுக்குப்பொறுந்திவருமா என்று நம்மால் சொல்லமுடியவில்லை.
கிராமப்புறங்களில் நாம் பார்த்து இருப்போம்.நம்மூருக்கு வாக்குப்பட்டு வந்த பெண்களை அவர்களின் பிறந்த ஊர் பெயர்கொண்டே அழைப்போம்.நம்மூருக்கு மாப்பிள்ளையாய் வந்தவர்கள் இங்கேயே வசிக்க நேர்ந்துவிட்டாலும் அந்த ஆண்மக்களை அவர்களின் பிறந்த ஊர்பெயர் கொண்டுமே அழைப்போம்.அதுபோலவே பாஞ்சால தேசம் சேர்ந்தவளை கதையில் பாஞ்சாலி என்று குறிப்பிடுகின்றனர்.அவளுக்கு க்கிருஷ்ணை என்ற  பெயர் உண்டு. அதைவைத்துத்தான் பீமன் அவளை அழைக்கிறான்.வேறு ஊர்க்காரி என்றபெயரிலழைத்தால் அவள் தன்னிடமிருந்து அன்னியப்பட்டுப்போய்விடுவாள் என்று பீமன் விளக்கம் சொல்கிறான்.
ராமாயணமும் பாரதமும் க்ஷத்ரியனின் பெருமை பேசுவன.பெண்ணைக் 'கன்னிகாதானம்' என்று சொல்லிப்பெறுவது அந்த ராமனுக்கும் இல்லை அர்ஜுனனுக்கும் இல்லை.பராக்கிரமத்தைக்காட்டியே அதற்குப்பரிசாக பெண்கள் வந்து சேருகின்றனர்.பைரப்பா அழகாகச்சொல்கிறார்.எதிரியே ஆனாலும் வீரமிக்க ஒரு புருஷனுக்கு மரியாதை செய்பவன் க்ஷத்ரியன்.'க்ஷத்ரியன் ஒரு பெண்ணை வெற்றி கொள்கிறான்.எப்போதும் தானமாகப்பெறுவதில்லை'.
ஒரு நாளுக்கு ஒருவன் என்பதுபோய் ஒரு ஆண்டுக்கு ஒருவன் என்று மாமியார் குந்தி தன் மருமகளுக்கு ஆணை தருகிறாள்.தருமன் முறையிலே ஒரு நாள் அர்ஜுனன் கிருஷ்ணையிடம் வருகிறான்.அவள் சொல்லிப்பார்க்கிறாள்.அவன் எல்லை மீறிவிடுகிறான். கிருஷ்ணை அர்ஜுனனிடம் பேசுகிறாள்.'நீ வில் முறித்து இருக்கலாம். உன் அன்னைக்குக்கொடுத்த வாக்கு காப்பாற்றப்படவேண்டும்' என்கிறாள்
கிருஷ்ணை பேசுகிறாள்.'அர்ஜுனா,நீ புத்திசாலி அழகன்.உன் வார்த்தைகளால் எந்தப்பெண்ணையும் வசப்படுத்திவிடுவாய். அர்ஜுனா, நீ என்னை மயக்கமுற வைத்துவிட்டாய்.இதற்குப்பிறகு மேலும் மூன்று பேரைமயக்கி மணந்துகொண்டுவிட்டாய்.இது போதாதென்று எத்தனை பெண்களை மய்க்கினாய்? அர்ஜுனா,நீ அகங்காரம் நிறைந்தவன்.பெண்களை உன் அகங்காரத்துக்குப்பலியாக்கினாய்.இந்தப்பாஞ்சாலி மட்டுமுன் அகங்காரத்துக்குப்பலியாக விரும்பவில்லை.அர்ஜுனா, நீ சமீபத்தில் தோற்றாய்.குருட்டுத்தனமான உனது மிருகப்பசிக்கு இந்தப்பாஞ்சாலி இடம் தரவில்லை என்கிற ஒரே காரணத்தால் அவளை உன் இடது காலால் உதைத்துச்சென்றுவிட்டாய்.' கொட்டித்தீர்க்கிறாள் பாஞ்சாலி.பாரில் யார்க்கும் அஞ்சாத வில்லாளி அவள் முன் அற்பமாய்ச்சிறுத்துப்போகிறான்.
திரௌபதியை என் மடியில் வந்து உட்காரடி என்று ஒங்கி அழைத்தான் துரியோதனன்.பீஷ்மனோ விதுரனோ சகோதரன் மனைவியை இப்படிப்பேசலாமா இது தருமமில்லை என்கிறார்கள்.துரியோதனன் சொல்கிறான்.பாண்டவர்கள் ஐவருக்கும் இவள் மனைவி. நானும் அவர்களுடைய சகோதரன் தானே.ஆக எனக்கும் இவள் மனைவி ஆகிறாள் என்று குருட்டு நியாயம் பேசுகிறான். ஆங்கிலக்கவி மில்டனின் இழந்த சொர்க்கத்தில் சாத்தா ன்கள் இந்தப்படிக்கு நியாயம்பேசுவதை நாம் இவ்விடத்தே எண்ணிப்பார்க்கலாம். சபிக்கப்பட்ட மரத்தின் பழத்தைச் சாப்பிட்டு, ஒரு சர்ப்பம் ஆகிய என்னால் உன்னோடு பேசவும்முடிகிறது. மனிதர்கள் ஆயிற்றே நீங்கள். இந்த பழத்தை சாப்பிட்டால் எவ்வளவு நன்மை உங்களுக்கு வரும் அது வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இறைவன் அந்த சபிக்கப்பட்ட மரத்தின் பழத்தை த்தொடாதே, என்று ஒரு தீய எண்ணத்தோடு உங்களுக்கு கட்டளை தந்திருக்கிறார். வழக்குரைஞரைப்போல நன்றாக எடுத்து வைப்பார் கவி மில்டன்.
பந்தயமோ இல்லை விளையாட்டோ அதனில் தோற்றுப்போன ஒருவனின் மனைவி போட்டிருக்கும் ஆடை அணிகலன்களை மற்ற சூதாடிகள் பிடித்து இழுப்பார்கள் எனற செய்தி புனிதமான வேதவரிகளில் காணப்படுவதாக பைரப்பா குறிப்பிடுகிறார்.துச்சாதனன் செய்த அந்த இழிச்செயல் சரியே என்கிறான் துரியோதனன்.சூதாட்டத்தில் தோற்றவனை விட்டு பெற்றோர்களும் சகோதரர்களும் விலகிப்போய்விடுவார்கள். இதுவும் வேதம் சொல்லும் விஷயமே.
சூதாட்டத்தில் வெற்றி பெறும்போது பித்தேறும் என்றும் தோற்கும்போது வெறிபிடிக்கும் என்றும் சொல்லும் கிருஷ்ணனின் வார்த்தைகள் உண்மையானவை என்று நகர்ந்துபோகிறது கதை.
ஒரு பெண்ணுக்கு எப்படிப்பட்டவனைக்காதலிக்கவேண்டும் என்று தெரிவதில்லை.மனம் பக்குவம் அடைகிறவரைக்கும் அவளுக்கு இந்த அறியாமை தொடர்கிறது.அதற்குள்ளாகவே எங்கேனும் காதல் எனும் சிக்கலில் மாட்டிக்கொண்டுவிட்டால் அவ்வளவே.பைரப்பா நன்றாக எடுத்து வைக்கிறார்.நாமும் நிறைய வாழும் உதாரணங்களை பார்த்து இருப்போம்.எத்தனையோ காதல் கோணல்கள் கண் முன்னேபளிச்சிடும்.
பாஞ்சாலியின் மானம் பங்கப்பட நேர்ந்துவிட்ட அந்த சோகம் பீமனைப்போல் அந்த அளவுக்கு வேறுயாரயும் பாதிக்கவில்லை. ஜயத்ரதனும் கீசகனும் பாஞ்சாலியை அனுபவிக்க க்கெஞ்சி நிற்கிறார்கள்.பீமனுக்குத்தான் ஆத்திரம் பீறி எழுந்தது.எம். டி. வாசுதேவன் நாயர் இரண்டாம் இடம் என்று ஒரு நாவல் எழுதியிருப்பார்.அது பாண்டவர்களில் அந்த பீமனின் பெருமை பேசும்.அந்த நாவலை குறிஞ்சிவேலன் அழ்குதமிழில் தந்து இருக்கிறார்.
கிருஷ்ணனைத்தவிர எந்த ஆண்மகன்தான் என்னைப்பார்த்ததுமே சஞ்சலப்படவில்லை? என்கிறாள் பாஞ்சாலி. துர்யோதனன், துச்சாதனன்,ஜயத்ரதன்,கர்ணன்,கீசகன்,எல்லோரும்தான் மயங்கிப்போனார்கள்.ஆனால் கிருஷ்ணன் மட்டுமே கட்டுப்பாடு உள்ளவன்.பாஞ்சாலியை மணக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லாத க்ஷத்ரியன்.வில்லை எடுத்து அர்ஜுனனனுக்கு இணையாக அல்லது விஞ்சி கிருஷ்ணனால் சாகசம் செய்ய முடியாதா என்ன? என்று கதை சொல்லிக்கொண்டு நகர்ந்து போகிறது.
சூதாடிகளுக்கும், குடிகாரர்களுக்கும்,விபச்சாரிகளுக்கும் தேச எல்லைகள் எல்லாம் கிடையாது.தம்மையொத்தவர்களை அடையாளம் காண்பதில் நட்பு கொள்வதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.பருவம் இந்த யதார்த்தத்தை அழகாக எடுத்து இயம்புகிறது.
இமயமலைக்கும் விந்தியமலைக்கும் இடையே எத்தனை தேசங்கள்.பைரப்பா தேசங்களின் பெயர்களை அடுக்குகிறார்.சிந்து,பாலிகம்,வாததானம்,காந்தாரம்,கேகயம்,திரிகர்த்தம்,உத்தரகுரு,ஹேமகூடம்,குரு,பாஞ்சாலம்,கோஜம்,கோசலம்,குந்தலம்,புளிந்திரம்,கலிங்கம்,சேதி, அவந்தி,விதர்பம்,ஒவ்வொன்றிற்குள்ளுமெத்தனையோ துணைதேசங்கள்.கிருஷ்ணன் யாவும் அறிந்தவன் என்கிறார் பைரப்பா.
இது மொழியாக்க நூலா என்று வாசகனுக்கு இடையில் ஒரு எண்ணமே வராதபடிக்கு பாவண்ணன் வெற்றிகரமாக மொழிபெயர்ப்பைக்கொண்டு செல்கிரார்.
'வர வர க்ஷத்திரியர்கள் வேதம் படிப்பதே குறைந்து கொண்டுவருகிறது.பீஷ்மா,நீ பிரம்மசரிய விரதம் பூண்டிருப்பவன்தானே .பேசாமல் நீ பிராம்ணனாக மாறிவிடு' என்கிற வாசகம் பராசரர் சொன்னதாக பைரப்பா எடுத்து வைக்கிறார்.க்ஷத்திரியர்கள் வேதம் படிப்பது வழக்கத்தில் இருந்திருக்கிறது.க்ஷத்திரியர்கள் பிராம்ணர்களாக மாறுவதும் நிகழ்ந்து இருக்கிறது என்பதை பைரப்பா சொல்லிப்போகிறார்.வேதம் பிராம்ணர்கள் மட்டுமே பயில்வது என்கிற விஷயம் பிற்காலத்தில் நடைமுறைக்கு வந்திருக்கவேண்டும்.பிறகு காலம் செல்லச்செல்லக் கல்வி என்பது பிராம்ணர்களுக்கு மட்டுமே என்கிற சமாச்சரமாகி இருக்கக்கூடும்.வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன் கட்படுமே என்கிற தமிழ் இலக்கியச்சான்று ஒரு ஆரோக்கியமான செய்தியைச் சொல்கிறது.
சொந்த பந்தங்களைக்கொன்று நமக்கு என்ன இந்த மண்ணாசை என்று அர்ஜுனன் குழம்பிப்போகிறான்.ஆசிரமம் கட்டிக்கொள்வோம் அது போதும். வேதம் ஓதி சொச்ச வாழ்க்கை முடிக்கலாம் என அர்ஜுனன் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறான். 'நான் யுத்தம் செய்ய மாட்டேன்.யுத்தம் வேண்டாம்'என்று புலம்புகிறான். தருமனும் அவனோடு இணைந்து கொள்கிறான்.
'யார் என்னதான் சொன்னாலும் அர்ஜுனன் ஓரளவுக்கு நல்லவன்தான் இல்லையா விதுரா? என்கிறான் திருதராஷ்டிரன் என்று சுவாரசியமாகக் கதையை பைரப்பா எழுதிக்கொண்டு போகிறார். விதுரன் எந்த ப்பதிலையும் திருதராஷ்டிரனுக்குச் சொல்லவில்லை. அமைதி காக்கிறான்.அற்புதமான இடம் இது.அந்த விதுரனின் அமைதிக்குத்தான் எத்தனை கனமான பொருள். விதுரனின் அந்த அமைதிக்கு என்ன பொருள் என்பதை திருத்ராஷ்டிரன் உணர்ந்துகொள்கிறான். பாவண்ணனின் மொழிபெயர்ப்பில் இங்கே அழகாக நகர்கிறது பருவம்.
'நான் சொல்வது தரும நெறி பற்றி.இது கோழைத்தனமோ பயமோ அல்ல' என்கிறான் அர்ஜுனன்.பீமனுக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வருகிறது.கோழையின் மனம் எப்போதும் தருமத்தின் உருவத்தை தனதாக்கிக்கொண்டு பேச ஆரம்பித்துவிடும் என்கிறான் பீமன்.சோர்ந்துவிட்ட அர்ஜுனனை தட்டி எழுப்புகிறான் கிருஷ்ணன்.உபதேசம் சொல்கிறான் கிருஷ்ணன்.தருமம் வெல்ல வேண்டும் என்கிறான்.அறம் நிலை பெற வேண்டும் எத்தனை இழப்புக்கள் வந்தாலும் அதனை நீ எதிர்கொள்.அறம் வென்றாக மட்டுமே உழைக்கவேண்டும் என்கிறான் கிருஷ்ணன்.அதுவே கீதா உபதேசம்.உங்களுக்கும் எனக்குமெல்லோருக்கும் இனி வருகின்ற அத்தனை பிரஜைகளுக்கும் உபதேசம் என்றாகிறது. இங்கே பருவம் சொல்லும் செய்தி' முயற்சித்திருவினையாக்கும்' என்பதாக நாம் கொள்ளலாம்.
குந்திக்கு இந்தப்போரில் மகிழ்ச்சி உண்டா என்றால் இல்லை.அவள் சுமக்கும் சோகம் அவள் மட்டுமே அறிவாள்.கிருஷ்ணனுக்குத் தெரிந்தும் தெரியாமலும் எந்த ஒரு செய்தியும் இருக்கமுடியாது.எல்லாம் அறிந்தவன். சிறுபிள்ளை போல் விளையாடுவான்.பார்த்தனுக்கு த்தேரோட்டி.கோபியர்களோடு கொஞ்சி மகிழும் கோபாலன். நட்புபோற்றத்தெரிந்த பண்பாளன்.கீதை உபதேசிப்பான். மன்னரிடம் தூது போவான்.செய்யாத வேலை என்று எதுவும் இல்லை.பாரதி கண்ணனை இப்படி எல்லாமாகப்பார்த்து பாடிய மாகவியல்லவா.
'என் பிள்ளைகள் வெல்லப்போவது நிச்சயம்.அவர்கள் வெல்லவேண்டும் என்பதுதான் என் விருப்பமும் கூட.ஆனால் என்னைப்பொருத்தவரை நான் தோற்றுவிட்டேன் என்றே எண்னுகிறேன்.சரியாகத்தெரியவில்லை. அவர்கள் வெற்றியில் என்னால் பங்கெடுத்துக்கொள்ள இயலாது' இது குந்தி சொல்வது.குந்தி நினைத்து இருந்தால் இந்த்ப்போரே நிகழ்ந்து இருக்காதுதான்.பெற்ற ஐவரும் தாய்ச்சொல்லை மீறப்போகிறார்களா என்ன? எப்போது மீறினார்கள்.பாஞ்சாலியும் ஐவருக்கும் மனைவி என்றுதானே வாழ்ந்து முடித்தாள்.கர்ணனை வலுவிழக்கச்செய்ததில் குந்திக்கும் கிருஷ்ணனுக்கும் பெரும்பங்குண்டு.பிறகு வெற்றி என்ன வெற்றி.எல்லாம் இவை போர்த்தந்திரங்கள் என்று நிம்மதி பெறலாம்.ஆனால் நேர்மையான நியாயமான மனசாட்சி உறங்கிவிடுமா என்ன?.
காந்தார தேசத்து காந்தாரி திருதுராஷ்டிரனை மணக்கிறாள்.திருதுராஷ்டிரன் குருடன்.பொன்னையும் பொருளையும் கொண்டுவந்து வரண்டுபோன காந்தாரதேசத்தில் குருடன் கொட்டுகிறான்.அந்தக்குருடனைப்பார்க்கச்சகிக்காத காந்தாரி அவனை வேறு வழியின்றி மணம்முடிக்கிறாள்.அழகின் உச்சம் காந்தாரி.அவள் கண்களைக்கட்டிக்கொண்டு வாழ்ந்தாள்.ஊர்ரர் காந்தாரி கண்ணைக்கட்டிக்கொன்டு வாழ்ந்ததற்கு நல்லதொரு கதைகட்டிவிட்டார்கள்.கணவன் குருடன் தானும் அப்படியே வாழவேண்டும் என்கிற பதிவிரதா அறம் என்றார்கள்.காந்தாரி புகழ்ச்சிக்கு இரையானாள்.அப்படியே வாழ்ந்து முடித்தாள்.பெற்ற மக்களை அவள் எங்கே கண்களால் பார்த்தாள்.எல்லோரும் போரில் இறந்துபோனார்கள்.கிருஷ்ணன் அவளை கண்கட்டை அவிழ்க்க வேண்டுகிறான்.எல்லாம் அழிந்துபோன சமயம் அவள் கண் திறந்து பார்க்கிறாள்.கண்கள் கூசுகின்றன.குருட்டுக்கணவனை மிச்சமிருந்த மனிதர்களைப்பார்க்கிறாள்.வெறுப்பு மேலிடுகிறது.மீண்டும் தன் கண்களை க்கட்டிக்கொண்டு வாழவே ஆசைப்படுகிறாள்.
கிருஷ்ணனிடம் வினா வைக்கிறாள் காந்தாரி.'நான் ஒரு புண்யவதி என்றால் என்னைச்சுற்றி ஏன் இத்தனை இறப்புக்கள் நிகழ்கின்றன. குந்தி நியோக முறையில் உயர்ந்த குழந்தைகளை ப்பெற்றுக்கொண்டதை மிக ச்சரி என்கிறது அவள் மனம். திருதுராஷ்டிரனை மணந்து அவன் மூலம் திறமையற்ற குழந்தைகளை ஏன் பெற்றுக்கொண்டு வாழ்க்கையில் தோல்வியுற வேண்டும்.இப்படி எண்ணிப்பார்க்கிறாள் காந்தாரி.அவளின் வினா நியாயமானதே.பைரப்பா இப்படி ஒரு புதிய விஷயத்தை வாசகனுக்கு எட்டவைக்கிறார்.
'என் பிள்ளைகளின் பிணங்களையாவது குறைந்த பட்சம் பார்க்க விரும்பிகிறேன்' கிருஷ்ணனிடம் மீண்டும் கெஞ்சி நிற்கிறாள் காந்தாரி.
காந்தாரி பக்கத்தில் ஒரு ஆடவர் கூட பாக்கி இல்லை. எல்லோரும் மடிந்துபோயினர்.குந்தியின் மைந்தர்களிடம் இது விஷயம் கேடக மனம் இடம்தரவில்லை. ஆக கிருஷ்ணனிடம் கேட்கிறாள் அவள்.
'கழுகுகளும் நாய் நரிகளும் அரசன் சாமான்யன் என்கிற வித்தியாசம் இன்றி எல்லாப்பிணங்களையும்கொத்திச்சிதைத்து அடையாளத்தை அழித்திருக்கும்' கிருஷ்ணன் காந்தாரிக்குப்பதில் சொல்கிறான்.
போர்முனைக்கு ச்சென்ற சாமான்யப்பெண்கள் அங்கே யுத்தத்தின்போது காமம் தேவைப்படும் வீரர்களுக்கு அது வழங்கி பின்கருவுற்று நிற்கிறார்கள். விதை தந்த வீரர்களோ களத்தில் மடிந்துபோகிறார்கள்.. ' எங்கள் வயிற்றில் இருக்கும் இந்தக்குழந்தைகளுக்கு 'அப்பா' என்று யாரைக்காட்டுவது? அந்த கர்ப்பிணிப்பெண்கள் புலம்பித்தீர்க்கிறார்கள் அவர்கள் முன்னே. ஐவரில் மூத்த தருமன் நிர்க்கதியாகி நிற்கிறான்.அய்யோ பாவம் அந்த தருமன்.
அரண்மனைக்கு முன்பாக எங்கு பெருமழை. வெள்ளம் எங்கும் ஒரே வெள்ளம். எங்கும் அழிவின் முற்றுகை.கோர முற்றுகை.
பைரப்பா ஆழ்ந்த வினாவைத்து பெருங்கதையை முடித்து வைக்கிறார்.
பெண்களைச்சுற்றியே 'பர்வம்' கதை கொடியெனப்பின்னிக்கொண்டுபோகிறது.பெண்களே சாதிக்கிறார்கள்.வினா வைக்கிறார்கள்.விடை சொல்கிறார்கள்.சமூகச்சிக்கலில் சிக்குண்டு வதைபடுகிறார்கள்.வாழ்வை மீட்டும்எடுக்கிறார்கள்.பெண்களின் பிபஞ்சம் அல்லவா இது.
கன்னடக்காரர் பைரப்பாவின் இலக்கிய ஆளுமையைத் தமிழ் இலக்கிய தளத்திற்கு பர்வம் என்னும் புதினம் வழி அற்புதமாக கொண்டு தருகிறார் பாவண்ணன்.
பாவண்ணனின் ஈடில்லா மொழியாக்க உழைப்பு போற்றுதலுக்குரியது.தமிழுக்குத்தொண்டு செய்வோன் என்றும் வணக்கத்திற்கு உரியவன்.
--------------------------------------------------------------------


.