Tuesday, February 25, 2025

கவிதை -கவியுளம்

 

 எஸ்ஸார்சி/கவியுளம்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்

கடலூரில் இலக்கியப்பெருமன்றக்
கவிதைமாலைப்பெரு விழா
ஞானக்கூத்தன் தலைமை
பெருமன்றச் சிவப்பு மேடையில் ஞானக்கூத்தன்
எப்படிச்சாத்தியம் எல்லோர்க்கும் ஆச்சரியம்
கவிதைகள் படித்தனர்
கடலூர்க் கவிஞர்கள்.
கவி ஜி.ஜெ வாசித்தார்’ நண்டு’ கவிதை
உழவர்க்குத்தோழனாம் நண்டு அதுவே
சிறப்பென்றார் ஞானக்கூத்தன்
இவர்க்கு நண்டு பிடித்ததெப்படி?
பேசிக்கொண்டனர் கவியரங்கக் கவிஞர்கள்
கவிஞர் ’கவிதை வான்’ பற்றிப் பேசினார்
‘வடமொழி அறியத் தமிழ்க்கவிதை சிறக்கும்
கம்பனை பாரதியை விஞ்சினார் உண்டோ?
முடித்துக்கொண்டார் ஞானக்கூத்தன்.
கூட்டம் கலைந்து போனது அமைதியாய்.
கவிஞர் உரைத்ததுதான்
கரைய மறுக்கிறது இன்னும்.

    கவிதை- புத்தகக்காட்சி

     

    எஸ்ஸார்சி யின்/சென்னைப் புத்தகக் காட்சி

    oplus_0

    நந்தனம் பேருந்து நிறுத்தம் இறங்கினால்
    அண்ணாசாலையைத் தாண்டத்தான் வேண்டும்
    பதினைந்து நாட்களுக்கு
    ஒரு டிராஃபிக் காவலரைப் போடாது நிர்வாகம்
    புத்தகக் காட்சிக்குச் செல்லும்
    நடைபாதையில்
    பழைய புத்தகக் கடைகள்
    அடைத்துக் கொண்டு.
    தார்ச்சாலை நடைபாதை
    இவையிடை கிடக்கும் உடைந்த கருங்கல் சில்லுகள்
    காருக்கும் டூவீலருக்கும்
    நடப்போருக்கும் ஓரேயொரு பாதை
    ஒரு கிலோ மீட்டருக்கு நடந்தால் புத்தகக் காட்சியை எட்டலாம்
    டிக்கட் கவுண்ட்டர்கள்
    ஒன்றிரண்டு இயங்கி உதவும் உங்களுக்கு.
    வாங்கிய டிக்கெட்டை நம்பேரெழுதி பாதிக்

    கிழித்துப் பெட்டியில் போடவேண்டும்

    அது சம்பிரதாயம்

    எங்கும் தரை சமதளமாய் இருக்காது
    பள்ளமும் மேடும் தட்டுப்படும்
    கேபிள்கள் அடி செல்லும்
    நீட்டுப் பெட்டிகள்
    இடை இம்சிக்கும்.
    கழிப்பறை நடந்துசெல்ல கதவைத் திறந்து மூட
    வித்தை கற்றவர் களால் மட்டுமே முடியும்
    உரைவீச்சும் பட்டிமன்றமும் வாயிலில் நடக்கும்
    அரங்க இருக்கைகள் பாதிகாலியாய்
    நல்ல காபிக்கும் நல்ல டிபனுக்கும் பிரார்த்தனை செய்தால் உண்டு
    திருவள்ளுவர் சிலை அருகே செல்ஃபி எடுப்போர் கூட்டமாய் நிற்பர்.
    அனைத்தையும் விடுங்கள்
    நல்ல புத்தகங்கள் நிச்சயம் வாங்கலாம்
    புத்தகக்காட்சியில்
    ஐயமே இல்லை.

    சிறுகதை நம் நிழல் நம்மோடு

     

     

     

    நம் நிழல் நம்மோடு                             

     

     

    எங்கள் குடும்பம் அப்போதும்  அதே  தருமங்குடியில்தான் இருந்தது.  அக்காக்கள்  இருவர் மணம் முடித்து அவரவர்கள் கணவன் வீடு சென்றாயிற்று.எப்போதேனும் பிறந்தகம் என்று எட்டிப் பார்க்க வருவார்கள் மற்றபடி அவர்களிடமிருந்து கடிதம்  மாதத்தில் ஒன்றோ இரண்டோ வரும்.  சின்ன அக்கா திருமணத்திற்கு இன்னும் காத்துக்கொண்டிருந்தாள். அம்மா  அன்றாடம் தபால்காரனைப் பார்த்துவிட்டுத்தான் ஸ்நானத்திற்குப்போவாள். அப்படி அம்மா செய்வதில் ஒரு சூட்சுமம் அடங்கியிருந்தது. எங்கிருந்தேனும் சாவுக்கடிதம்  நம் வீட்டுக்கு  வந்தும் விடலாம். அம்மாதான்  இப்படிச் சொன்னாள்’ போதுமே   இப்பூலோக வாழ்க்கை’ என்று விடை பெற்றுப் போன அந்த உயிருக்கும்  சேர்த்து அன்றைக்கே  ஒரு முழுக்குப் போட வசதியாயிருக்குமே.  சில சமயங்களில்  தந்தி கூட சாதா தபாலோடு  சேர்ந்தே வருவதுண்டு. தந்தி வருகிறது என்றால் சாவுத்தந்திதான் வேறு எந்தச்  செய்தியும் தந்தி என்கிற பெயர் வைத்துக்கொண்டு வீட்டுக்கு வராது. தந்தி என்று சொன்னால் இன்று யாருக்கும் ஏதேனும் விளங்குமா என்ன? சரி சரி, கதைக்கு வந்துவிடுவோம்.  ஆகத் தபால் காரனை அன்றன்று பார்த்துக்கொள்வாள் அம்மா.  நித்யபடி சமையல் வேலையைத் தன்   சவுகரியப்படி     தொடருவாள்.

     அம்மா கர்நாடக சங்கீதம் நன்றாகப்பாடுவாள். அம்மாவின் அப்பா குடும்பம்  ஒரு காலத்தில் சிதம்பரம் நகரில் இருந்தது.  குருவையன் அக்கிரகாரத்தெருவில்தான் தாத்தா பாட்டியின் ஜாகை. அம்மா சின்ன பாப்பாவாய்  அங்கு கற்றுக்கொண்டதுதான் துளி சங்கீதம். அதுவும் முழுமையாகக் கற்றுக்கொள்ள விதி எங்கே அம்மாவை விட்டது. அந்த அம்மாவைப் பெற்ற பாட்டிக்கு  முகத்தில் ஒரு நாள் பரு ஒன்று வந்ததாம். அதைத் தெரிந்தோ தெரியாமலோ பாட்டி  கிள்ளி விட்டாளாம். அதனால் வந்தது  ஒரு விஷ  ஜுரம். அந்த  ஜுரம்தான்  பாட்டியைக்கொண்டு சென்றதாம் அம்மா சொன்ன  செய்திதான். அப்பா வழி தாத்தா பாட்டியையும் கூடத்தான் நாங்கள் பார்த்ததில்லை.  குடும்பத்துப் பெரியவர்கள் எல்லோருக்கும் என்னதான் அப்படி ஒரு அவசரமோ, போய்ச்சேர்ந்தார்கள்.

      ஒரு பெண் குழந்தைக்குப்  பெற்ற தாய்  போய்விட்டால் அவ்வளவுதான். ஒரு கை முறிந்து விட்டமாதிரியே எஞ்சிய  வாழ்க்கை அனுபவமாகும். அந்தப்பெரிய ஊருக்குப்  பாட்டி போய்ச்சேர்ந்தாள்.  அம்மாவுக்குச் சங்கீதம் பயில்வது இற்றுக்கொண்டது. திருமணமாகித்  தருமங்குடிக்கு வந்திருக்கிறாள்.  எங்களுக்குத்தெரிந்த  நாளாய் நாங்கள்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோமே. தினம் மதிய வேளையில் கம்பீரமாய்ப் பாட்டுப் பாடுவாள். எல்லாம் கீர்த்தனைப்பாட்டுக்கள் தாம். தெலுங்கு கீர்த்தனைகள்தான்  அதிகம். எனக்கும் கூடப் பாட்டு சொல்லிக்கொடுத்தாள். நானும்   பாடினேன், பாடித்தான் பார்த்தேன்.  என் குரலில் அத்தனை  சவுந்தர்யம் இல்லை. ஆக நான் பாடுவது  நின்று போனது.

     கல்யாணத்திற்கு வீட்டில்  இருந்த  சின்னக்காவுக்கு கேபிஎஸ் அம்மாவின் குரல். ’ நினைத்தபோது நீ வரவேண்டும்! நீல எழில் மயில்  மேல் அமர் வேலா!  என்று உச்ச ஸ்தாயியில் சின்ன அக்கா பாடுவதைத் தருமங்குடி ஊரே கேட்டு சபாஷ் சொல்லும். தியாகராஜ கீரத்தனைகள்  அம்மாவுக்குத் தெரிந்ததெல்லாம் அந்த அக்காவுக்கும் அத்துப்படி. முத்துசுவாமி தீட்சிதரின் ‘பஞ்சாக்‌ஷ பீட ரூபினி மாம்பாஹி ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி’ போன்று  சில  உருப்படிகளைச் சின்னக்கா அம்மாவிடம் கற்றுக்கொண்டாள். இருவரும் அவ்வப்போது சேர்ந்து பாடுவார்கள். உறவினர்களின் திருமணத்தில் காசியாத்திரையின் போது   அருணாச்சலக்கவியின் ‘ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே நன்மையுண்டு ஒருக்காலே’ சக்கை போடு போட்டு  பார்த்திருக்கிறேன்.’தருமங்குடி மாமி வந்துருக்கா அவாள  பாடச்சொல்லுங்கோளேன்’  இப்படி  பந்துக்கள் எல்லோரும் சொல்வார்கள்.

    அம்மா அப்பாவிடம் சொன்னாள். எத்தனை நாட்களாக இந்த யோசனை அம்மாவின் மனத்தில் கருக்கொண்டிருந்ததோ தெரியவில்லை.

    ‘திருவையாறு  தியாகய்யர்வாள்  ஆராதன உற்சவம் வர்ரது. பஞ்ச ரத்ன கீர்த்தன  எல்லாரும் கோஷ்டியா பாடுவா. எம் எஸ் அம்மாலேந்து எல்லாரும் வருவா. நா எப்பவோ  திருவையாறு உற்சவத்துக்கு  போயிருக்கேன்.  இப்ப எல்லாம் திருவையாறு போறது சாத்தியம் இல்லே.   நாம ஆத்துல உக்காந்துண்டே ரேடியோ வச்சிண்டா அந்த  காவேரிக்கரயில  ஆராதனைக்காராள் பாடற பாட்ட கேக்கலாம். அங்கேந்து அத  ரேடியோல  ஒலி பரப்பு செய்யறாளாமே’

    ‘ஆமாம். அது ரேடியோ இருந்தா கேக்கலாம். மொதல்ல  நம்மாத்துல கரண்டு ஏது. கரண்டு இருந்தான்னா ரேடியோ. அதுவும் ரேடியோ எல்லாம்  நம்மால வாங்கத்தான் முடியுமா என்ன’

    இப்படி சம்பாஷணை நடந்துகொண்டிருந்தபோதுதான் வடலூரிருந்து கோபால் சித்தப்பா பங்கஜம் சித்தி இருவரும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

    ‘என்ன சம்பாஷணை  அக்கா இங்க  மும்முரமா போயிண்டுருக்கு’ என்றாள் சித்தி.

    ‘டீ   பங்கஜம்  திருவையாறு உற்சவ வர்ரதே. அங்க தியாக பிரம்மம்  தியாகராஜர் ஆராதனை நடக்கும் புஷ்ய பகுள பஞ்சமி அன்னைக்கு  பஞ்ச ரத்ன கீர்த்தன எல்லாம் பிரமாதமா  பாடுவா. நாம  ஒரு  ரேடியோ  வாங்கினா காதாலே கேக்கலாமேன்னு அவர் கிட்ட சொல்லிண்டு இருந்தேன்.’

     ’அத்திம்பேர் என்ன சொன்னார்’

    ‘சட்டில இருந்தான்னா ஆப்பையில வர்ரத்துக்கு.  நம்மாத்துல ஆத்துல கரண்டு எங்க இருக்கு. சிமிழி காடா வெளக்கு  அரிக்கேன் லாந்தர் பெட்ரூம் லைட்டுன்னுதான காலட்சேபம் ஓடிண்டு இருக்குன்னார்’

    ‘அதுவும் சரிதான்’ என்றாள் பங்கஜம்  சித்தி.

    சித்தப்பா குறுக்கிட்டார். ‘ஏனாம் இப்ப டிரான்சிஸ்டர்னு  ஒன்னு புதுசா  வந்துருக்கே. கரண்டே வேண்டாம். நாலு பேட்ரி செல்லு வாங்கி அதுக்குள்ளே  போட்டுட்டா, ஆறுமாசம் கூட அது பாட்டுக்கு பாடிண்டு இருக்குமே’

    ‘ஆமாம் நானும் அதச்சொல்ல மறந்து போனேன்’ என்று ஆமோதித்தாள் சித்தி.

    ‘தோ பாருங்கோ, ஒரு முந்நூறு ரூவா ரெடி பண்னுங்கோ டிரான்சிஸ்டர் ஆத்துக்கு வந்துடும், பாட்டு கேக்கலாம். நியூஸ் கேக்கலாம். எல்லாம் கேக்கலாம். பெரிய பரிய பாட்டுக்காரா பாடற கச்சேரி கேக்கலாம் எவ்வளவோ விஷயங்கள் அதுல இருக்கு.  டிரான்சிஸ்டர்னா சும்மா இல்ல. ஒன்னு  வாங்கிடாலாமா’

    ‘எப்பிடி வாங்குவ நீ மெட்ராஸ் போயி வாங்கிண்டு வருவியா’ என்றார் அப்பா.

    ‘அதெல்லாம் ஒண்ணும் இல்ல. ஒரு லெட்டர் எழுதி போட்டா போறும். டில்லி விலாசம் என்னண்ட இருக்கு. அதுக்கு டில்லி செட்டுன்னு பேரு.  அங்கேந்து விபிபில  அனுப்புவான்.  நாம பணத்த தபால் காரன் கிட்ட கொடுத்துட்டு அந்தப் பார்சல வாங்கிகணும்’

    ‘அந்த செட்  பாடல்லேன்னா என்ன பண்ணுவே’

    ‘பாடும்.  வடலூர்ல நாலு மனுஷா வாங்கி இருக்கா. இப்பவும்  பாடிண்டு இருக்கு’

    ‘பார்சல் உள்ள எதான குப்பய வச்சி  பதவிசா  கட்டி ஒட்டி  அனுப்பிச்சிட்டான்னா நாம என்ன பண்றது’

    ‘அப்பிடி எல்லாம் ஆகாது’

    ‘நா கேள்வி பட்டேன்  இந்த  சேதி.’

    ‘எந்த சேதி அதச் சொல்லுங்கோ’

    ‘மூட்ட பூச்சின்னு ஒண்ணு வந்து ஒலகமே  அமக்களப்பட்டது தெரியுமோ.’ ஊர் ஊர்’ னு  முடியற ஒரு  நூறு ஊர் பேர பேப்பர்ல  எழுதி மூணு பேருக்கு  அத தனித்தனியா   தபால்ல  அனுப்பிச்சிட்டா  டாண்ணு  அது மொத்தமாவே காணாம போயிடும், இல்லேன்னா   ஆத்து  நெலப்படில   ‘மூட்டைப்பூச்சி அத்துப்போச்சி’ ன்னு  சுண்ணாம்பால எழுதி  வைக்கணும்,  அதுவே போறும் அத்தனையும்  அத்துப்போயிடும்னு  எல்லாரும் சேந்து சொல்லிண்டு திரிஞ்சமே, அதோட  இன்னொண்ணும்  நான் கேழ்விப்பட்டேன்.   மூட்டைபூச்சிய  ஒழிக்கறதுக்கு மெஷின் ஒண்ணு  புதுசா இருக்குன்னு டில்லிலேந்து  விளம்பரம் வந்துதாம். அத  உடனே  எனக்கு அனுப்பி வைன்னு   கடுதாசி எழுதி போட்டானாம் பிரகஸ்பதி  ஒத்தன்.  நீ  இப்ப சொன்ன மாதிரிக்கு அவன் விலாசத்துக்கு ஒரு  விபிபி  பார்சல்ல  வந்துதாம் . எவ்வளவோ ரூவாய  தபால்காரன்கிட்ட கொடுத்துட்டு அந்த பார்சல வாங்கி பிரிச்சி  பாத்தானாம்.  அதுக்குள்ளே ஒரு வட்டமா ஒரு கல்லும்  சின்ன சுத்தியும் இருந்துதாம்.  மொதல்ல மூட்ட பூச்சிய புடிச்சி அந்த கல்லுக்கு மய்யாமா வச்சிடணும். அந்த சுத்தியல் இருக்கே அதால ஒரு தட்டு  தட்டினா மூட்ட பூச்சி காலியாயிடும்.  இது  செய்முறை விளக்கம்னு ஒரு  சீட்டுல எழுதி அனுப்பியிருந்தானாம்’ இப்படி எல்லாம்  எவ்வளவோ ஏமாத்தல் சங்கதிகள்  கேள்விப்படறமே.’  அப்பா  சொல்லிக்கொண்டு சற்று சிரிக்கவும் செய்தார்.

    இருவரும் இப்படியாய்ப்  பேசிக்கொள்வதை  வீட்டில் உள்ள எல்லோருக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

    ’அது எல்லாம்  பாட்டி கதன்னா’  .

    ‘நா யோஜன பண்ணிட்டு  உனக்கு எதுவா இருந்தாலும்  சொல்லி அனுப்பறேன்’ அப்பா முடித்துக்கொண்டார்.

    அம்மா குறுக்கிட்டாள்.’ அந்த புஷ்ய பகுள பஞ்சமி  இண்ணைக்கு பதினைஞ்சா நாள் வர்ரது. இன்னும் பதினஞ்சே நாள்தான்  இருக்கு, அதுக்குள்ள  டிரான்சிஸ்டரோ இல்ல  அது  என்னமோ ஒண்ணு   ஆத்துக்கு வரணும்’

    அப்பா பதில் எதுவும் பேசாமல் இருந்தார்.

    சின்னக்கா  அப்பாவிடம் திடீரென்று பவ்யமாய்ப்   பேசினாள்,’ எண்ணைக்கு இருந்தாலும்   நா  வேற ஒரு ஆத்துக்கு போறவதான்.  இருந்தாலும்  அந்த ரேடியோவ  நம்மாத்துல வச்சி அதுல நாலு  கச்சேரி  பாட்ட  என் காதால  கேக்கணும்னு எனக்கும் ஆசை இருக்காதா’

    அப்பா சின்னக்காவைப் பார்த்துக்கொண்டார். அப்பாவுக்கு மனம் இறங்கிக்கொண்டு விட்டது என்பதை  என்னால்  ஊகிக்க முடிந்தது. ’ ஒரு தகப்பனுக்கு பெத்த பொண்ணவிட வேற  என்ன பெரிசு வேண்டிருக்கு’  அதுவும்  சரித்தான்’ அப்பா முணுமுணுத்தார்.

    ‘நீ டில்லிக்காரனுக்கு  லெட்டெர் போட்டுடு.  அத இண்ணைக்கே போட்டுடு. நா காசு ஏற்பாடு பண்றேன்’ சித்தப்பாவிடம் அப்பா சொன்னார். அப்பா லேசில் ஒரு காரியத்தை ஒப்புக்கொள்ளவே மாட்டார். ஆனால் ஒப்புக்கொண்டு விட்டால் அதனை நடத்தி முடிக்காமல் விடவும் மாட்டார்.

    நான் சின்னக்காவைப்பார்த்துக்கொண்டேன். அவள் ஜாடையாய் அம்மாவைப்பார்த்தாள். அவ்வளவுதான்.  சித்தப்பா சித்தி இருவரும் காபி டிபன் சாப்பிட்டு விட்டு ஊருக்குக் கிளம்பினர்.

    ‘ஏதோ அக்காவ பாக்கணும்னா,  நா  அவள  கூட்டிண்டு வந்தேன். வந்தாச்சு அக்காவை பாத்தாச்சு கெளம்ப வேண்டியதுதான்’

    ‘அத்திம்பேர  எல்லாம் யாரு பாக்க வரா’ அப்பா சொல்லிக்கொண்டார்.    

    சித்தப்பாவும்  சிரித்துக்கொண்டார். சித்தப்பாவும் சித்தியும் ஊருக்குக்கிளம்பினார்கள். அப்பா முந்நூறு ரூபாயுக்கு என்ன செய்வது என்ற யோஜனையில் தீவிரமானார். மேல வெளியில் எங்களுக்குச்சொந்தமாய் கால் காணி நஞ்செய் நிலம் இருந்தது. அதனைக் குத்தகைக்குப் பயிரிடுபவர்   சுருட்டு ஆறுமுகக் கோனார். யார்தான் எதிர்பார்த்தார்கள்  அவர் நான்கு மூட்டை நெல்லை ஒரு கட்டை வண்டியில்   ஏற்றிக்கொண்டு  அப்போதுதான் வீட்டு  ஆளோடியில் வந்து நிறுத்தினார். அப்பா ஒரு மூட்டையை அவிழ்க்கச்சொன்னார். ஒரு பிடி நெல்லை மட்டும் கையில் எடுத்துக்கொண்டார். அந்த  அவிழ்த்த நெல் மூட்டையைக் கோனார் திரும்பவும் நன்கு கட்டி வைத்தார்.

    ‘கோனாரே ஒரு சேதி இந்த நெல்ல காசாக்கி புடணும்’

    ‘சாமி சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவே’

    ‘பகவான் ஒத்தன்  இருக்கான் என்னை  கை  வுட்டுட மாட்டான்’

    ‘அப்பிடி என்ன மொடசல் அய்யாவுக்கு’

    ‘மொடசல்தான்’

    ‘நெல்லு மூட்டய   இப்ப நா  எறக்கவேணாமா’

    ‘காசு வந்தாதான்  எனக்கு தேவலாம்’

    ‘சரி அப்ப, நா  அளக்குற  நாலு மூட்ட  குத்தகை நெல்லு வண்டில  இருக்கு.  அத வித்தா  நா முக்கால் மூணு. முந்நூறு ரூவாயுக்கு வரும்’

    ‘’ ஊரு ஒலகத்துல வழங்குறது எப்பிடியோ அப்பிடி.  நமக்குன்னு என்னப்  புதுசா இருக்கு’

    சுருட்டு ஆறுமுகக்கோனார் வண்டியைத்திருப்பிக்கொண்டு போனார். அம்மா வீட்டின் உள்ளிருந்து வாயிலுக்கு வந்தார்.

    ‘ஏன் நெல்லு வண்டி திரும்பி போறது’

    ‘நான் தான் நெல்லு வேண்டாம் பணமா குடுன்னு சொன்னன்’

    ‘என்ன அக்கிரமம். வந்த லெச்சுமிய எறக்கி கூட வக்கவேண்டாம ஆத்துல’

    அப்பா   கையில் எடுத்து வைத்திருந்த  ஒரு பிடி நெல்லை அம்மாவிடம் கொடுத்தார்.’ இந்தா  உன் தான்ய லட்சுமி’ அம்மா அதனைக் கைகளில் வாங்கினார்.

    ‘எல்லாம் ஒரு காரணமாதான் வண்டிய திருப்பி விட்ருக்கேன்  கொஞ்சம் பொறும வேணும் உனக்கு’

    சற்று நேரத்திற்கெல்லாம்  சுருட்டு ஆறுமுகக்கோனார் மூத்த பையன் வந்தார். அப்பாவிடம் முந்நூறு ரூபாய் எண்ணிக் கொடுத்தார். ‘ எங்கய்யா  இத  உங்க கிட்ட  குடுக்க சொன்னாங்க’

    ‘ரொம்ப சரி’ என்றார் அப்பா. கோனாரின் மூத்த பையன் அவர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இத்தனைச் சுளுவாய்  கோனார்  பணம் அனுப்பிவிடுவார் என்று அப்பா  எதிரே பார்க்கவில்லை. அம்மாவிடம் அந்த நெல் விற்றபணத்தை ஒப்படைத்தார்.’

    ‘ரேடியோ வாங்கத்தன்  இந்த ஏற்பாடா’

    ‘ஆமாம்’

    அம்மாவுக்கு வாயெல்லாம் பல்லாக இருந்தது. ‘ஆகட்டும், உங்களுக்கும் மனசு வந்துருக்கே’’ சொல்லிய அம்மா பணத்தையும்,  கைப்பிடி நெல்லையும் எடுத்துக்கொண்டுபோய் ஸ்வாமி பிறையில் வைத்தார்.

    வீட்டிற்கு ரேடியோ வரப்போகிறது என்கிற குஷியில் நானும் சின்னக்காவும் இருந்தோம். அம்மா வெளியில் எதுவும்  காட்டிக்கொள்ளவில்லை. சில நாட்கள் ஓடின. சித்தப்பா ஒரு நாள் கையில் ரேடியோவோடு வந்தார். அது சோப்பு பெட்டி சைசுக்கும்  இன்னுமொரு பங்குக்கு இருந்தது. அதனைக்கொண்டுபோய்  கூடத்தில் வைத்தார். வீட்டில் இருந்த எல்லோரும் அதனையே முறைத்துப்பார்த்துக்கொண்டிருந்தோம். தெலுங்கு கன்னடம் இந்தி மொழிகளில் எல்லாம் பாடல்கள் வீச்சென்று  வந்தன. பிறகு சிலோன் வானொலி. அது தன் இருப்பை வசீகரமாய்க் காட்டியது.  திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம் அதன் விவசாயிகளுக்கான நிகழ்ச்சியைச்  சொல்லிக்கொண்டிருந்தது.

    ‘ஒண்ணு சிலோன்  இன்னொண்ணு திருச்சி  இது  ரெண்டும்  நாம கேக்கலாம்’   

    சித்தப்பா,  ஒரு  வெள்ளைத் திருகு சக்கரத்தைத் திருப்பி திருச்சியும் சிலோனும் எங்கு இருக்கின்றன என்பதைக்காட்டினார். பென்சிலால் இரண்டு புள்ளிகள் வைத்துக்கொடுத்தார்.

    டிரான்சிஸ்டரில் நான்கு எவரெடி பாட்டரிகள் எங்கே உட்கார்ந்திருக்கின்றன  அவற்றை எப்படிக் கழற்றிப் போடவேண்டும் என்பதை எங்களுக்கு செய்துகாட்டினார். பாட்டரியில்  தலைப்புறம்  எது கால் புறம்  எது, அதனை எப்படி ஒன்றோடொன்று சரியாகப் பொறுத்துவது என்பதனையும்   சரியாகத் தெரிந்து கொண்டோம். எங்கள் வீட்டு  முற்றத்தில் கொசுவலை போல்  கம்பி வலையை நீட்டு வாகில் கட்டி அதனிலிருந்து ஒரு வயரை இழுத்து வந்து டிரான்சிஸ்டரின் பின்னேயுள்ள ஒரு ஓட்டையில் செருகிவிட்டார். ‘இதுக்கு ஏரியல்னு பேர் இது வழியாதான்  காத்துல  கலந்து இருக்குற  ஒலி அலை  எல்லாம்  ரேடியோக்குள்ள  வருது  தெரியர்தா, ரேடியோலேந்து  எப்பிடி கிளியரா இப்ப  பாட்டு  கேக்கறது பாருங்கோ’ என்றார். கொரகொரப்பு குறைந்தது ஒலி நன்றாகக் கேட்கமுடிந்தது.

    டிரான்சிஸ்டருக்கு அப்பா குங்குமப் பொட்டு மூன்று இடங்களில் வைத்தார். சுவாமி படத்தைப்பார்த்து ஒரு கும்பிடு போட்டார். அம்மா நெல் மூட்டைகள் விற்றுக் கோனார் கொடுத்த   அந்தப்பணத்தை எடுத்துவந்து அப்பாவிடம் கொடுத்தார். அவர் அதனைஅப்படியே  சித்தப்பாவிடம் சேர்த்தார்.

    ‘முந்நூறு ரூவா இருக்கு பாத்துகுங்கோ’

    சித்தப்பா பணத்தை எண்ணிப்பார்க்காமல் தன் சட்டைப்பையில் வைத்துக்கொண்டார்.

    ‘ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்,’

    ‘அதெல்லாம் உங்களண்ட வேண்டாம்’

    ‘எனக்கு இப்பிடி ஒத்தாச  செய்யறவா யார் இருக்கா’ அம்மா சொல்லிக்கொண்டாள். அம்மா சித்தப்பாவுக்கும் அப்பாவுக்கும் ஒரு  பனை விசிறி மட்டை கொண்டு வந்து கொடுத்தார்.

    ‘ஏனோ இப்பிடி புழுங்கறது மழை கிழை வருமோ’ என்றார் சித்தப்பா.

    ‘கரண்டு இழுத்துடுங்கோ ஆத்துக்கு,  ஒண்ணும் பெரிய செலவு இல்ல. ஒரு சீலிங் ஃபேன் கூடத்துல போட்டுட்டா அதுவே போறும் இந்த விசிறி மட்ட  வச்சிண்டு விசிறிக்கற வேல இருக்காது’ என்றார் மீண்டும்.

    ‘இப்பக்கி  என்னால முடியாது. என் பையன்க வேலைக்கு போயி சம்பாரிச்சிதான் அந்த  மாதிரி யோஜனையெல்லாம். ஒரு சேதி என் பெரிய பையனுக்கு  கொழந்தையில ஒரு விஷ  ஜொரம் வந்துது. பழனிமலை  முருகனுக்கு நாங்க  வேண்டிண்டம். எப்பிடித்  தெரியுமோ, ’ பழனி முருகா அவன் உடம்ப தேவலை ஆக்கு, அவன் பெரியவனாகி  அவனே  சம்பாரிச்சி உன் சந்நதிக்கு எங்களையும் கூட்டிண்டு வருவான்.    உன் சந்நதி உண்டியல்ல அவன் தன்  ரெண்டு கையாலயும்  காசு  நிறைய நிறைய    போடுவான்னு’ என்றாள் அம்மா.

    ‘ரொம்ப சமத்தா வேண்டிண்டு இருக்கேள்’ என்றார் சித்தப்பா.

    ‘இன்னும் ரெண்டு நாள்தான் பாக்கி இருக்கு தியாகைய்யர் ஆராதனைக்கு. ரேடியோ ஆத்துக்கு வந்தாச்சு. பஞ்சரத்ன கீர்த்தன இந்த வருஷம்  நம்ப ஆத்துலயே கேட்டுடலாம். இதுகள்  எல்லாம் ஒங்க ஒத்தாச’

    ‘ பகவான் செயல்’ சித்தப்பா முடித்துக்கொண்டார். காபி சாப்பிட்டு விட்டு வடலூருக்குப்புறப்பட்டார். நானும் சின்னக்காவும் இரண்டு தினங்கள் டிரான்சிஸ்டரை விடாமல் கேட்ட வண்ணம் இருந்தோம். ஒரு புது உலகமே எங்களுக்கு வசப்பட்ட மாதிரி அனுபவமாகியது. சிலோன் வானொலிதான் எப்பவும்,  அந்த அப்துல் அமீது அண்ணாவின் குரல் எங்களைச்  சிறைப்படுத்தி வைத்திருந்தது. தியாகைய்யர் ஆராதனை நாளன்று அம்மாவுக்கு மட்டுமேதான் டிரான்சிஸ்டர் முழு ஆளுகையும் என்று எல்லோரும் முடிவு செய்தோம். அம்மாவும் அந்த புஷ்ய பகுள பஞ்சமியன்று காலையிலேயே ஸ்நானம்  முடித்துத் தயாரானாள்.

    நான் தான் டிரான்சிஸ்டரை எடுத்து ஆன் செய்தேன். வீட்டில் அப்பா அம்மா சின்னக்கா எல்லோரும் பஞ்சரத்ன கீர்த்தனை கேட்க ரெடியானார்கள்.

    ‘டொய்ங் டொய்ங் டொய்ங்’ என்ற வீணை ஒலி மட்டுமே  இறங்குமுகமாய்க் கேட்டது. ‘ஜகதா நந்த காரகா ஜய ஜானகீ ப்ராண நாயகான்னு, நாட்டை ராகம்னா மொதல்ல வரணும்’  அதிர்ந்து சொன்னாள் அம்மா.

    ‘இதென்ன அபஸ்வரமா கேக்கறது’ என்றார் அப்பா. டிரான்சிஸ்டரை ஆஃப் செய்துவிட்டு மீண்டும் போட்டேன். ‘நமது பாரதப்பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் உஸ்பெகிஸ்தானிலுள்ள டாஷ்கண்ட்டில்   காலமானார்.ஆக முன்னம் அறிவிக்கப்பட்ட படி   எந்த  ஒரு இசை நிகழ்ச்சியும்  இந்நிலையத்திலிருந்து ஒலி பரப்பாகாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.  இன்று தொடங்கி மூன்று தினங்களுக்கு இத்தேசம் நிறைத் துக்கம் அனுஷ்டிக்கிறது.’ என்கிற அறிவிப்பினை ஒருவர்  துக்கத்தோடு  தன் கட்டைக்குரலில் வாசித்தார்.

    ‘டொய்ங் டொய்ங் டொய்ங்’ மீண்டும் வீணை முகாரி வாசித்துக்கொண்டிருந்தது.

    அம்மாவைத் திரும்பிப்பார்த்தேன். அம்மா தோட்டத்துப் பக்கமாய் போய் நின்று கொண்டிருந்தாள். நான் வருத்தத்தோடு அம்மா அருகில் போய் நின்றேன். ‘எங்க சுத்தி எங்க வந்தாலும் நம்ப நெழல் மட்டும்  நம்பள விட்டுட்டு எங்கயும் போய்டாது’  சொல்லிய அம்மா  விஷ்ணு சகஸ்ரநாமத்தைப்  பாராயணம்  செய்ய ஆரம்பித்தாள்.

    ‘ திருவையாறு ஆராதன  கச்சேரிதானே   அத அடுத்த வருஷம் கேட்டுக்கறோம்’ என்றார் அப்பா.  பாம்பு பஞ்சாங்கத்தை கையில் எடுத்துக்கொண்டு வாசலுக்குப்போனார்.

    மூன்று தினங்கள் தொடர்ந்து   ஆகாசவாணி  அழுதது. நானும் அக்காவும் ரேடியோவோடு சேர்ந்து அழுதோம். அந்த வருஷமே  சின்னக்காவுக்குத் திருமணம் ஏற்பாடாகியது. அம்மா இருந்துதான்  சின்னக்கா கல்யாணத்துக்கு   வேண்டியது அத்தனையும் செய்தாள்.  அடுத்த ஆண்டு புஷ்ய  பகுள பஞ்சமி யன்று திருவையாறு ஆராதனை நாள் வந்தது. ஆனால் என் அம்மாதான் இல்லை.

    ----------------------------------------------------

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Monday, February 10, 2025

    சிறுகதை - உலகம் பலவிதம்

     

     

     

     உலகம் பலவிதம்                                                          

     

    அவன் வீடு கட்ட சென்னையில்  இடம் ஒன்று  வாங்கினான். முடிச்சூர் அருகேதான். தாம்பரத்திற்கு மேற்கே ஐந்து கிலோமீட்டர் போங்கள்  அந்த முடிச்சூர் வரும்.   அவனால்  ஒரு அரை  கிரவுண்ட்தான் வாங்க முடிந்தது.  அதுவே பெரிய சாதனையாக உணர்ந்தான்.  அங்கே வீடொன்று  கட்டவேண்டும்.’ வாழப்போகும்   அந்த வீட்டின்    விலாசத்தில் சென்னை மாநகரப் பின் கோடு இருந்தால் போதாதா வேறென்ன  ஒருவருக்கு வேண்டியிருக்கு’. அவன் மனதிற்குள்ளாகவே சொல்லிக்கொண்டான்.அவன்  மனை  வாங்கியதில் ஒரே விசேஷம்.  அது  சி எம் டி ஏ அப்ரூவல் பெற்ற மனை. மனையில்  அவன் சக்திக்கு  ஒரு  கட்டிடம் கட்டுவதைக் காண்ட்ராக்டாக விட்டான். வீட்டு வேலை ஆரம்பிக்க வேண்டும்.  முதலில் பில்டிங் பிளான் அப்ரூவல் வாங்கியாகவேண்டுமே ஆக அதற்கு விண்ணப்பங்கள் தயார் செய்தான். அதனை எடுத்துக்கொண்டு  உள்ளூர் ஆட்சி மன்ற அலுவலகத்திற்குச் சென்று  நீட்டினான். செயல் அதிகாரி  என்கிற  அந்தஸ்த்தில்  இந்த விவகாரங்களையெல்லாம் கவனிப்பதற்காகவே அந்த அலுவலகத்தில் ஒருவர்   நியமிக்கப்பட்டிருந்தார். அவர் முன்பாக  கனமான   ரிஜிஸ்தர்கள் அடுக்கி   வைக்கப்பட்டிருந்தன. அவர்  தன் மேசை மீது பிரித்துவைக்கப்பட்டுள்ள ள்ள கோப்புக்களை நோட்டமிட்டபடி  இருந்தார்.

    ‘என்ன செய்தி’

    ‘வீடு கட்டணும். அதற்கு அப்ரூவல் வேணும். விண்ணப்பம் கொண்டு வந்து இருக்கேன்’

    அதிகாரிக்குப்பதில் சொன்னான்.

    ‘ஏரியா பெயர்  என்ன சொன்னீங்க’

    ‘நேதாஜி நகர்,  பார்வதி நகருக்கு வடக்க’

    ‘அந்த மடுவங்கரையிலதானே’

    அவன் எதுவும் பேசாமல் நின்றுகொண்டிருந்தான்.

    ‘ஒரு பார்ட்டி  மெட்ராசுல  டிராபிக் ராமசாமின்னு தெரியுமா. அவுரு நிர்வாகத்து மேல  கேசு போட்டுருக்காறு. இங்க இங்கெல்லாம் வீடு கட்ட அனுமதி கொடுக்கக்கூடாதுன்னு. ‘

    ‘என்ன சொல்றீங்க’

    ‘சுப்ரீம் கோர்ட்டுல கேசு இருக்கு.  நீங்க  வாங்கியிருக்குற  அந்த இடத்துல வீடு  கட்ட நாங்க  அப்ரூவல் தரக்கூடாதுன்னு’

    ‘கிரவுண்ட் அப்ரூவல் ஆயிருக்கே’

    ‘ இண்ட்விஜூவலா   வாங்கிகிட்டது. அது லே அவுட் அப்ரூவல் இல்ல. தெரியுமா’

    அவன் கைகளைப்பிசைந்துகொண்டு நின்றான்.

    ‘கேசு முடியணும். முடிஞ்சாதான் எதையும் சொல்ல வைக்கும்’

    ‘இப்ப என்ன செய்யலாம்’

    ’ கைகாசு போட்டு  வீட்ட கட்டிகிங்க.  பாங்க் லோன் எதுவும் கெடைக்காது அத மட்டும்  சொல்லிடுறன்’

    ‘லோன் இல்லாம எப்பிடி ஆவுறது ’

    ‘கைய  வச்சி கர்ணம் போடறதுதான்.எவ்வளவு முடியுமோ அதுவரைக்கும்  செய்யுலாம்ல’

    விண்ணப்பத்தைத் திருப்பிக்கொடுத்தார் அதிகாரி.

    ‘நீங்க சொன்ன அந்த கோர்ட் கேசு  இருக்குற  செய்திய  ஒரு வரி  என் விண்ணப்பத்துல எழுதி குடுத்துடுங்களேன்’

    ‘அது முடியாதுல்ல. நீங்க விண்ணப்பத்த பதிவுத்தபால்ல அனுப்பிவையுங்க. அது  இந்த ஆபிசுக்கு வரட்டும். அத கன்செண்டடு செக்‌ஷன்ல  எனக்கு புட் அப் செய்வாங்க. நா அத  பாப்பேன் படிப்பேன் பதில் சொல்லுவேன்’

    அவன் அங்கேயே நின்றுகொண்டிருந்தான்.

    ‘வேற எதாவது ஒரு வழி சொல்வீங்களா சார்’

    ‘நீங்க எங்க வர்ரீங்கன்னு தெரிது. யார் இந்த சீட்டுல இருந்தாலுமே  அது எல்லாம்  இப்ப நடக்குற காரியம் இல்லே. கோர்ட் கேசு இருக்குதுல்ல. அதுல தீர்ப்பு வரணும். அது எப்ப வரும்னு எப்பிடி வரும்னு சொல்லமுடியாதுல்ல’

    அவன்   உள்ளூர் ஆட்சி  அலுவலகத்தை விட்டுப் புறப்பட்டான். எது எதுவோ யோசனை செய்தான். தெரிந்தவர்கள் உறவினர்கள் எல்லோரிடமும்  கடனோ உடனோ வாங்கினான். கையில் இருந்த காசு பணம் எல்லாவற்றையும்  திரட்டிப்போட்டான்.  வட்டிக்குத்தான்   வீடு கட்டக் கடன்  வாங்கினான். எல்லாம்தான்.

    வீடு எப்படியோ கட்டி முடித்தாயிற்று.  வீட்டுக்கடன்  வாங்கியது அங்கங்கே நின்றுகொண்டிருந்தது.  அவன்    வாங்கிய கடனுக்கு   வட்டியாகவே தொடர்ந்து  கட்டிக்கொண்டிருந்தான். காலம் உருண்டோடியது. பஸ் ஸ்டாப்பிங்கிலிருந்து அவன் வீடு கொஞ்சம் தூரம்தான். நடக்கிற தூரமும் இல்லை. ஆட்டோ பிடித்து போகிற தூரமும் இல்லை. டிவிஎஸ் எக்செல் ஒன்று வைத்துக்கொண்டு அங்கைக்கிம் இங்கைக்கும் தடமாடிக்கொண்டு இருந்தான். கடைத்தெருவுக்கும் வீட்டுக்கும்  போய்வர டூ வீலர் இல்லாமல் கதை ஆகாது.  அவன் வீட்டுக்கு வருகைதரும் விருந்தினர்கள் ஆட்டோவோ டாக்சியோ இல்லாமல்  வர முடியாதுதான்.

    2015 ல் சென்னையில்   மழையோ மழை. மாமழைதான்  பெய்தது. ’மாமழை போற்றுதும்  மாமழை போற்றுதும்’ எங்கே போற்றுவது, பெரு  வெள்ளம்தானே வந்தது. ஊர் உலகமே சென்னையை இளக்காரமாக வேடிக்கை பார்த்தது. அவன் வீட்டுக்குள்ளாய் செம்பரம்பாக்கம் ஏரித்தண்ணீர் புகுந்து விளையாடியது. அவன் குடும்பத்தோடு அருகிலிருக்கும் மேற்கு தாம்பரம் நகரம் சென்றான்.  மக்கள் சமூகத்தில்  நடுத்தர வகுப்பாருக்கு ஏற்ற  மாதிரி   சென்னை டு  நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது அருணா நடராஜ் லாட்ஜ்.  அதனில்  ஒரு  அறை எடுத்துத் தங்கினான். அருகில் அடையாறு ஆனந்த பவன் இருந்தது. வேளாவேளைக்கு எதாவது சாப்பிட வசதியாகவே  இருந்தது. ஒரு வாரம் ஓடிப்போயிற்று. நிலைமை  கொஞ்சம் சீரடைந்தது. சென்னை மாநகரமே வெள்ள நீரில் நாறிக்கொண்டு கிடந்தது. சென்னை மாநகரில்  ஐநூறு பேருக்கு மேல் வெள்ள நீரில்  மடிந்து போனார்கள். பொருள் நாசம் சொல்லி முடியாது.  உறவினர்கள் எல்லோரும் ஏற்பட்டுவிட்ட  பொருள் இழப்புக்கு அவனைத்  துக்கம் விசாரித்தார்கள். வீட்டிலிருந்த மின்சார சாதனங்கள் எல்லாம் பல்லை இளித்துக்கொண்டன. வெள்ளம் வடிந்து  வீட்டை சுத்தம் பண்ணவே போதும் போதும் என்றானது. தெருவெங்கும் நீர்பிசுக்கு.  ஒரே வீச்சம்.  சகித்துக்கொள்ளவே  முடியாமல் இருந்தது. தரைதள வாசிகள் எல்லோரும் மொத்தமாய் பாதிக்கப்பட்டார்கள். நிகழ்ந்துவிட்ட சோகத்திலிருந்து  மீளவே வெகு நாட்களானது.

    இனி   இந்தப்பகுதியில் குடியிருக்க  தரை தளம் லாய்க்குப்படாது. முதல் தளத்தில் ஒரு சிறிய வீடு கட்டினால் தான் தப்பிப்பிழைக்கலாம். மழை வெள்ளம் வந்தாலும்  வீட்டுப் பொருட்கள் காப்பாற்றப்படும். ஆக முதல் தளத்தில் ஓர் அறை ஹால்கொண்ட வீடொன்று கட்டத் திட்டமிட்டான். கையிலிருந்தது, வைத்து   நண்பர்களிடம் கடன் என்று ஆரம்பித்து  நகை நட்டுக்களை விற்றுக்காசாக்கி மேல் தளத்தில் வீடு என்று சொல்லும்படிக்கு ஒரு வசதி செய்து கொண்டான். தரை தள வீட்டைக்காலி செய்துகொண்டு மேல் வீட்டுக்குப்போனான்.  சும்மாவா கிடப்பது கீழ் வீடு.  தரைதள வீட்டை வாடகைக்கு விட்டான். லட்சம் ரூபாய் மாதம் சம்பாதிப்பவர்களா அங்கு  எல்லாம் வாடகைக்கு வரப்போகிறார்கள். அதுதான் இல்லை. ஊறுகாய் விற்பவர்கள், முதியோர் இல்லத்தில் ஆயா வேலை பார்ப்பவர்கள், பள்ளிக் குழந்தைகளுக்கு  ஆட்டோ ஓட்டுபவர்கள் பசு மாட்டை தெருக்காடுகளில் மேய விட்டு  விட்டு காலை மாலை பால்  மட்டுமே கறந்து விற்பவர்கள், மாத  சம்பளத்திற்கு  அடுத்தவர்  இல்லங்களில்   பத்து பாத்திரம் தேய்ப்பவர்கள்  என்றுதான்  மாறி மாறி குடி வந்தார்கள். அவ்வளவே. கீழ் வீடு  பூட்டியிருக்காமல்  யாரேனும் கூட்டியும் பெருக்கியும் வைத்துக்கொண்டால் அதுவே பெரிது என்று அவன் மனைவி ஆறுதலாய்ச்சொன்னாள்.

    இனிவெள்ளம்  இந்த நேதாஜி நகருக்கு  வரவே வராது என்றும், முதலில் வந்தது  கூட நூறு ஆண்டுகளில் சென்னையில்  பெய்யாத ஒரு பேய் மழையால் வந்தது என்றும் அங்கங்கு மக்கள் பேசிக்கொண்டார்கள். அது  கேட்க மட்டுமே  ஆறுதலாய்  இருந்தது.  இனி செய்வதற்கு என்ன இருக்கிறது. சட்டியா பானையா மாற்றுவதற்கு.  நமக்கு அவ்வளவுதான் பொசுப்பு என்று  விரக்தியாகத்தான் இருந்து வந்தான். அவன் மட்டுமா அங்கு சொந்த  வீடு கட்டிக்கொண்டு  குடி வந்தான், இன்னும் இருபது பேரும் அப்படித்தானே  வந்திருக்கிறார்கள். வந்த எல்லோருக்கும் அவரவர்கள் ஜாதகத்தில்   கிரக  ராசி  ஒன்றாயும் இருக்கலாம்..  அவ்வளவே.     

    ஆமாம்  இந்த நேதாஜி நகரில் குடியிருப்போர் அனைவரும் சேர்ந்து ஒரு  குடியிருப்போர் நலச் சங்கம் ஆரம்பித்தால் என்ன என்று யோசனை செய்தான். இந்த குடியிருப்புப்பகுதியில்  அப்போது வரை இப்படி யாருமே யோசனை செய்து பார்க்கவில்லை. அக்கம் பக்கத்து  வீடுகளில்  குடியிருப்போரிடம் போய் போய் சொல்லிப்பார்த்தான்.  சிலர் வாடகைக்கு  மட்டுமே நேதாஜி நகருக்குக்  குடியிருக்க வந்தவர்கள். அவர்களுக்கு இதில் எல்லாம் அக்கறை என்பது வருமா என்ன?

    ‘நாங்க என்னா சார் கொஞ்ச நாளைக்கு  வாடகைக்கு இருப்பம். அப்பறம் கெளம்பிடுவம். எங்களுக்கு இதுல என்னா இருக்கு’ என்றுதான்  அவனுக்குப் பதில்  சொன்னார்கள்.

     ஆனால் சொந்த வீடு கட்டிக்கொண்டு குடியிருப்பவர்களோ ‘ நல்ல யோசனை இது’ என்று ஆமோதித்தார்கள். அப்படி ஆமோதித்தவர்களையெல்லாம் வரச்சொல்லி  நேதாஜி நகருக்கு  மய்யமாய் ஒரு கூட்டம் போட்டான்.   கூட்டத்திற்கு வந்தவர்கள் ஆளுக்கு ஒன்றாய் யோசனை சொன்னார்கள். வீதியில்  குடிநீர்க் குழாய் இருக்கிறது  தண்ணீர்  சரியாக வருவதில்லை என்றார்கள். தெரு மின் விளக்கு விட்டு விட்டு எரிகின்றது என்றார்கள்.   வீதிச் சாக்கடையில் தண்ணீர்  கருப்பு நிறத்தில் தேங்கிக்கிடக்கிறது என்றார்கள். குப்பை லாரிக்காரன் சரியாக வருவதில்லை என்றார்கள்.  வீதிக்குப் போடப்பட்ட தார்ச் சாலை படுமோசம் ஜல்லிக் கற்களெல்லாம் பெயர்ந்து  காலில் குத்துகிறது என்றார்கள்.  ’என்றார்கள்’ எண்ணிக்கை நீண்டு கொண்டே போகிறதோ.

    மாதம் இருபது ரூபாய்  நலச்சங்க  உறுப்பினர் சந்தா என்று முடிவாகியது. நேதாஜி நகர்  நலச் சங்கத்தைப்பதிவு செய்து விடவேண்டும் என்பதில் கூட்டத்திற்கு வந்தவர்கள் உறுதியாக இருந்தார்கள். சங்க நிர்வாகிகள் பட்டியல் ஒன்றைத்  தயார் செய்தார்கள். அவனைத்தான்  நலச்சங்கத் தலைவராய்த் தேர்வு செய்தார்கள். இதைவிடவும் வேறென்ன வேண்டும் அவனுக்கு.’தலைவரே தலைவரே’ என்பதைக் கேட்க அப்படியே ஜில் ஜில்லென்று இருந்தது.

     நிர்வாகிகள்  பெயர் கொண்ட அறிக்கைத் தயார் ஆனது.  உதவித்தலைவர் செயலாளர் உதவிச்செயலாளர் பொருளாளர் உதவிப்பொருளாளர் செய்ற்குழு உறுப்பினர்கள் இருவர் என நீண்ட நிர்வாகிகள்  பட்டியல்  படிக்கப்பட்டது. நலச்சங்கத்திற்கு  உடனே வங்கிக்கணக்கைத் துவக்கிட வேண்டும். அதுவுமே  பொருளாளர்   மற்றும் தலைவர் பெயரில் கூட்டாக  அதுவும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஆரம்பிக்க வேண்டும் என்றார்கள். கூட்டத்திற்கு வந்தவர்கள் ஒரு பதிவேட்டில்  அவரவர்  பெயர் எழுதிக் கையொப்பமிட்டார்கள். அவரவர்கள் பிளாட் எண்ணையும்  செல் பேசி எண்ணையும்  விடாமல் குறிப்பிட்டிருந்தார்கள்.

    நேதாஜி நகர் நல சங்கத்திற்கு  லெட்டெர் பேடு ,சந்தா ரசீது புத்தகம். உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் என எல்லாவற்றையும்  அச்சகமொன்றில் கொடுப்பது  அழகாய்  அச்சடிப்பது என்று முடிவாகியது.  வீதிப்பெயர்  தாங்கிய  சிமெண்ட் பலகைகள் மஞ்சள் கருப்பு  நிறத்தில்  பளிச்சென்று எழுதப்பட்டு உடன்  வைக்கப்படவேண்டும் என்று ஆலோசனை தந்தார்கள். நன்கொடை தருபவர்கள் நலச் சங்கத்திற்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம்  அவன் ஓங்கிச்சொன்னான்.

     விடுதலைப்பெருநாள் ஆகஸ்ட் பதினைந்து  குடியரசு தினம் ஜனவரி இருபத்திஆறு ஆகிய இரண்டு நாட்களில் நகர நலச்சங்கம் சார்பாக எல்லோரும் ஓரிடத்தில்  கூடி  கொடியேற்ற வேண்டும்.  கூட்டத்திற்கு வருகை தருவோர்  அனைவருக்கும் இனிப்பு வழங்கவேண்டும்.  தேசியக்கொடியேற்ற  இரும்புக் கம்பம் வேண்டும் அதுவும்    அந்தக்கொடிக்கம்பத்தை அவன் வீட்டு முன்பாகவே   நட்டு விடுவது  என்று முடிவாகியது.  கொடிக்கம்பத்திற்கு காவி நிறம் வெள்ளை பச்சை என வர்ணம் பூசியாகவேண்டும்.  கதர்த்துணியில் தேசியக்கொடியும் அந்தக்கொடியை ஏற்றிக்கம்பத்தில் கட்டநூல் கயறும் வாங்க முடிவானது.  கொடியேற்றத்திற்கு வருபவர்கள்.  சின்ன  சின்ன  பேப்பர் தேசியக்கொடியை குண்டூசி  வைத்து மேலாடையில்  கட்டாயம் குத்திக்கொள்ள வேண்டும் எனவும் முடிவு செய்தார்கள்.  உறுப்பினர்கள்     நான் நீ  என போட்டி போட்டுக்கொண்டு  டொனேஷன் கொடுத்தார்கள். குடியிருப்போர்   நலச்சங்கத்திற்கு  பொருளாதார  வலு கூட்டினார்கள். சங்க விளம்பரப்பலகை ஒன்று தயார் செய்யப்பட்டு அதனில் அறிக்கைக:ள் ஒட்டப்பட வேண்டும் என்றும்   அவன் சொன்னான். தலைவர் செயலர் பொருளர் என்று மூவருக்கும் விசிடிங் கார்ட் அடிப்பது  அதோடு மட்டுமா இந்த மூவருக்கும் விலாசத்தோடு ரப்பர் ஸ்டாம்புகள் செய்ய ஆர்டர்கள் கொடுப்பது என்று ஏகோபித்து முடிவு செய்தார்கள்.

    தலைவரே  தனது  திருக்கரங்களால், இரண்டு தேசிய நாட்களிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என்றும்  ஒத்த கருத்தோடு  முடிவு செய்தார்கள். அவனுக்கு இனம் புரியாத மகிழ்ச்சி. அவன் இதுவரைக்கும் எங்கே  தேசியக்கொடியேற்றினான். பள்ளி நாட்களில் கொடியேற்ற விழா நடக்கும்.  வரிசையாய் நிற்கும் மாணவர்களோடு  தானும் நின்று தாயின் மணிக்கொடி பாரீர் என்று பாட்டு மட்டும்பாடி கொடிக்கு வணக்கம் செலுத்தியிருக்கிறான்.

    சென்னை அண்ணாசாலையில் நந்தனம் அங்குதான்  நலச் சங்கங்களின் துணைப்பதிவாளர் அலுவலகம் இருந்தது. அவன் ஊபர் ஆட்டோ  புக் செய்துகொண்டு அதனில்  புறப்பட்டான்.  அனைத்து உறுப்பினர்கள்   கையெழுத்து, நடந்த முடிந்த  சங்கக்கூட்ட நிகழ்வுக்குறிப்பு,  கூட்டத்தில் ஏற்கப்பட்ட   தீர்மானங்கள்  இவைகளோடும்தான் நந்தனம்  வந்திருக்கிறான்.  சங்கப்பண இருப்பும்  அவன்  கையில் இருந்தது.  பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்து  நலச்சங்கப்பதிவு பற்றி  விசாரித்தான். அந்த அலுவலகத்தில் அவனிடம் இருந்த ரிகார்டுகளையெல்லாம் வாங்கிக்கொண்டு ஏதோ கொஞ்சம் பணம் மட்டுமே கட்டச்சொன்னார்கள். அதற்கு ரசீது போட்டுத்தந்தார்கள்.அப்படி இப்படி கொஞ்சம்  ரூபாய் செலவானது.  அரசு அலுவலகம்.  அது இது எல்லாம் சகஜம்தானே.  சும்மாதான்  ஆகுமா ஒரு காரியம்.  கொண்டுவந்த ரிகார்டுகளில் அது  நொட்டை இது நொள்ளை என்று  முதலில்  அவனைத்திருப்பித்தான்  அனுப்பினார்கள். சில நாட்கள்  சம்பந்தப்பட்ட எழுத்தர் விடுப்பிலிருப்பார் சில சமயம்  பொறுப்பு அதிகாரிர் காம்ப்பில் சென்று  விடுவார்.  நலச் சங்கப்பதிவு என்பது அவ்வளவு எளிய விஷயமாய் இல்லை. சங்கப் பதிவு பெறாமல் இவன் விடமாட்டான் என்பதறிந்த, பதிவாளர் அலுவலகத்தார் ஒரு வழியாய்  நேதாஜி நகர் நலச்சங்க பதிவு ச் சான்றிதழை அச்சடித்த தாளில் கொடுத்தார்கள்.  பவ்யமாய் அதனை இரண்டு கைகளாலும்   வாங்கிக்கொண்டான். நேதாஜி நகர  நலச்சங்கப்பதிவு என்கிற வேலை முடிந்தது. இனி ஆண்டு தோறும் ஒரு மாநாடு நடத்தவேண்டும். அதற்கு அறிவிப்பு தரவேண்டும். வரவு செலவுக்கணக்குகளை எழுத வேண்டும். சங்கச் சந்தா தராதவர்கள் லிஸ்டைத் தயார்  செய்யவேண்டும். அவர்களை வீட்டில் போய்ப் பார்த்துக்கெஞ்சி  அதனை வசூல் செய்யவேண்டும். உள்ளூரில் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பொருளாளரை அழைத்துக்கொண்டு போய் சேமிப்புக்கணக்கைத்துவக்க வேண்டும் எனச் சங்கக்கடமைகள் தொடர்ந்தன.

    அச்சகத்தில் அடித்து வந்த லெட்டர் பேடு பத்து  பிரதிகள் அவன் வசம் இருந்தன.  லெட்டர் பேடில் அவன் தலைவர் என்று போடப்பட்டிருந்ததை ஒருமுறை பார்த்து மகிழ்ந்து போனான்.   வாரத்திற்கு ஒரு முறை உள்ளூர்  அலுவலகத்திற்கு,   தலைவர் என்கிற  அந்தஸ்த்தில் கடிதம் எழுதினான். தாம்பரம்  மாநகராட்சி அலுவலகம் சென்று எழுதிய கடிதத்தைக்கொடுத்து வந்தான்.அதன் நகலை கோப்பொன்றில் பத்திரப்படுத்தினான். மின் சார வழங்கு துறைக்கு புகார்க் கடிதம் எழுதினான். அதனைக் கொண்டுபோய் முடிச்சூர்  மின்சாரம்  வழங்கு அலுவலகத்தில் அவனே  கொடுத்து வந்தான்.  ஒவ்வொரு நாள் படப்பை  பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் அலுவலகம் செல்வான் நேதாஜி நகர் அருகே செல்லும் அடையாற்றின் கரையை உயர்த்திச் செப்பனிட வேண்டுகோள் வைப்பான். பழைய  தாம்பரத்தில் குளத்தங்கரை ஸ்டாப்பிங்க் அருகே இந்தப்பகுதியின்  சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இருக்கிறது. அவரைப்போய்ப் பார்த்து கோரிக்கைகள்  பலவற்றை  பணிவோடு  சமர்பிப்பான். நேதாஜி நகருக்குப் பாதை ஊரைச்சுற்றி வருகிறது. இரண்டு கிலோமீட்டர் அனாவசியமாகச் சுற்றித்தான் நேதாஜி நகருக்குள்  வரவேண்டியிருக்கிறது.  இதற்குப்பதிலாக  அருகிலுள்ள க்ரீன் சீட்டி  புது மனைப்பிரிவிலிருந்து  ஐம்பது அடி அகலத்திற்கு  நூறு அடி நீளத்துக்கு  ஒரு சாலையை அரசாங்கம்  வாங்கிக் கொடுத்தால் போதும். நேதாஜிநகர் வாசிகள்  யாரும்  ஊரைச் சுற்றி வரவே வேண்டாம். அந்தக்கோரிக்கையை  எடுத்துக்கொண்டு சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு அடிக்கடி செல்வான். சட்ட மன்ற உறுப்பினரிடம்  இது குறித்து  விஸ்தாரமாய்ப் பேசுவான்.

    சுதந்திர தின விழா இல்லை குடியரசு தின விழா அவ்வப்போது   வரத்தானே செய்யும். அதற்குக் கொடி மரம் சீர் செய்வான். கொடிக்கம்பத்தைச் சுற்றித்  தரையில்  உள்ள  புற் பூண்டுகளை அப்புறப்படுத்துவா ன்.  கொடி ஏற்று விழாவுக்கு அவரவர் வீட்டிற்கு  நேராய்ச்சென்று எல்லோரையும்  புன்னகைத்து அழைப்பான்.    நேதாஜி நகரில் கம்பீரமாய்  தேசியக்கொடியேற்றப்படும்.  அவன் தானே கொடியை  ஏற்றுகிறான். தாயின் மணிக்கொடி பாரீர் அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் பாடலை  மட்டும் இரண்டு  பாராக்கள் எல்லோரும்  சேர்ந்து பாடுவார்கள்.  தனியாய் மட்டும்  இது யாருக்கும்   பாடவே வராது அவனே சொல்லிக்கொள்வான்.  வந்திருந்த எல்லார்க்கும் இனிப்பு வழங்குவான். கொடியேற்றத்திற்கு ப்  பத்து பேர் மட்டுமே   கூடியிருந்தாலும் அவனுக்குத்தெரிந்த  வீர உரை ஒன்று ஆற்றுவான். வந்திருந்தவர்கள்  தேசிய கீதம் சேர்ந்து  பாடிட  கூட்டத்தை நிறைவு செய்வான்.

    அவன் எப்போது வெளியூர் சென்றாலும் விசிடிங் கார்டு அடித்ததை கையோடு எடுத்துக்கொள்வான். நேதாஜி நகர நலச்சங்கத்தலைவர்.  அவன் பொறுப்பாய்ப் பார்க்கும்  அந்த வேலை அவன் பெயருக்குக் கீழே அச்சடிக்கப்பட்டிருக்கிறதே. அதை விட வேறென்ன வேண்டும் அவனுக்கு.

    எப்போதும் போல்  மழைக்காலம் வரும் .சென்னைக்குக் குடிநீர்  வழங்கும்   அந்த செம்பரம் பாக்கம்  ஏரி ஆண்டுக்காண்டு  நீர் நிறையும் . வேறென்ன செய்ய.  அதிகாரிகள்  ஷட்டரைத்திறந்து விடுவார்கள். இவனின்  நேதாஜி நகர் குடியிருப்புக்குக்கு அருகே தான் அந்த அடையாறு வளைத்துக்கொண்டு செல்கிறது.  ஒவ்வொருமுறை  ஏரித் திறப்புக்கும் அடையாற்றில் தண்ணீர் முட்டிக்கொண்டு வரும். அடையாறு  தளும்பி நிறையும்.  ஆற்றின்  கரையைத்தாண்டி  வெள்ள நீர் வழியும்.   கரை வழிந்து வரும் நீர்  நேதாஜி நகரை அலசிப்பார்க்கும். சில சமயம் வீதியொடு மரியாதையாய்ச் சென்றுவிடும். சில சமயம் வீட்டினுள் எட்டிப்பார்க்கும்.  சமயத்தில்  தரைதள வாசிகள்  சாபமிடு வார்கள்.  அவர்களை  அது அழவும் வைக்கும்.

    எது  நடந்தால்தான்  என்ன அவனுக்கு இப்போதெல்லாம் முன்பு மாதிரி எந்தக் கவலையும் இல்லை.  கைவசம் லெட்டர் பேடு இருக்கிறது. ரப்பர் ஸ்டாம்ப் இருக்கிறது. விளம்பரப்பலகையில்  அவன் தலைவர் என்று போட்டிருக்கிறார்கள்.  சட்டைப்பை நிறைய   அவன்  பெயருக்கு  நேராகத் தலைவர் என்று போட்ட  வழ வழ விசிட்டிங் கார்டு இருக்கிறது. ஆண்டுக்கு இரண்டு முறை  தேசியக்கொடியை யேற்றுகிறான். அவன்  வீட்டு வாசலில் தலைவர் நேதாஜி நகர் நலச்சங்கம் என்று பெயர்ப்பலகை சட்டமாய்த்  தொங்குகிறது. அவசியம்  நீங்கள் எல்லோரும்  வந்து பார்க்கவேண்டும்தான்.

    ’ வடகிழக்குப் பருவமழையா  அது  வரும்தான். செம்பரம்பாக்கம்  ஏரியைத் திறப்பான் தான். வீதியில்  அடையாற்றுத்தண்ணீர் வரும்தான்.  ஏன்? அது  வீட்டுக்குள்ளும்  வரும்தான். இதற்கெல்லாம் கவலைப்பட்டால் ஆகுமா, சென்னை மாநகரமே  வங்கக்கடல் மட்டத்தைவிட குறைவுதான்.  மழைக்காலம் என்றால்  சென்னையில் பாதி   வெள்ளத்தில் தான் மிதக்கிறது அது தெரியாதா உனக்கு’ என்கிறான் அவன்.

    இப்போதெல்லாம் அவன் மனைவிக்கு என்னவோ  அவனைப் பிடிப்பதில்லை. விடுங்கள் அது தனிக்கதை.

     

    ------------------------------------------------------------