Sunday, August 31, 2025

தொலைபேசிநாட்கள் -விட்டல் ராவ்

 

விட்டல் ராவின்    தொலைபேசி நாட்கள்

சென்னைத்தொலைபேசியில் 35 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றி ஓய்வுபெற்றவர்  எழுத்தாளர் விட்டல் ராவ். தற்சமயம் பெங்களூரில் வசித்து வருகிறார். தன்னுடைய பணிக்கால அனுபவங்களை சுவாரசியமானதொரு கட்டுரை நூலாக்கியிருக்கிறார். அம்ருதா இலக்கிய இதழில் தொடர்ந்து விட்டல் ராவால்  எழுதப்பட்ட 25 வார பங்களிப்பை அம்ருதா பதிப்பகம்’ தொலை பேசி நாட்கள் ‘என்னும் ஒரு புத்தகமாய் வெளியிட்டு பெருமைப்படுத்தியிருக்கிறது. விட்டல் ராவ் கலை இலக்கியம் பற்றி ஆழமான புரிதல் உள்ள எழுத்துப் படைப்பாளி. பேசும் புதிய சக்தி இதழிலும் ஒவியம் சிற்பம் கட்டிடக்கலைப் பற்றி  விரிவான கட்டுரைத்தொடர் ஒன்றை எழுதி வருகிறார்.

 மேலட்டையில் பிரமாதமாக விட்டல் ராவின் வண்ணப்புகைப்படத்தோடு  இப்புத்தகத்தை  அம்ருதா பதிப்பகத்தார்  கொண்டு வந்துள்ளார்கள். சந்தியா நடராஜன் நல்லதொருஅணிந்துரை வழ்ங்கியிருக்கிறார்கள். எழுத்தாளர் பாவண்ணன்’ இவர்தான் விட்டல் ராவ், நம்மாளு’ என்று சொல்லி சந்தியாநடராஜனுக்கு அறிமுகப்படுத்தியதையும் குறிப்பிடுகிறார்.

‘எல்லோருக்கும் ஆசைப்பட்ட வேலையோ தொழிலோ அமைவதில்லை.கிடைத்தவேலையில் ஜீவித்துக்கொண்டு ஆன்மப்பசிக்குத்தீனி போடுகிறவர்கள் மிகச்சிலரே.அந்த மிகச்சிலரில் விட்டல் ராவ் மேல்நிலைத் தகுதிக்குரியவர் என்பதில் எனக்கேதும் ஐயுறவு இல்லை.’  இப்படி ஆவணப்படுத்துகிறார் சந்தியாநடராஜன். தொலைபேசி வரலாற்றைப் பேசிக்கொண்டே நேற்றைய சென்னையையும் அறிமுகப்படுத்திச் செல்கிறார் விட்டல் ராவ் என்று சரியாகவே பதிவு செய்கிறார் சந்தியா நடராஜன்.

தன்னுடைய  உரையை ’ஓர் உரை’ என்று புதிய தலைப்பிட்டு எழுதும்  விட்டல்  ராவ் ‘ நீண்ட கால அன்புறவும் பரஸ்பர அக்கறையும் கொண்ட எழுத்தாளரும் பதிப்பாசிரியருமான என் அருமைச்சகோதரி திருமதி திலகவதி அவர்கள்  விரும்பிக்கேட்டுக் கொண்டதற்கிணங்கி ’தொலைபேசி நாட்களை’ அம்ருதா இதழில் 25 மாதங்கள் தொடராக எழுதிமுடித்து வெளியிடச்செய்தேன்’ என்று செய்தி சொல்கிறார். இக்கட்டுரைகளில் இன்பம், துன்பம், மகிழ்ச்சி, நகைச்சுவை,எரிச்சல், எதிர்ப்பு,உவகை சாகசம்,வரலாறு என்று பல்வேறு சங்கதிகள் அடங்கியுள்ளன என்று விளக்கம் தருகிறார்.

பாஸ்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் அலெக்சாண்டர் கிரஹாம்பெல் 1876 ல் டெலிபொனைக் கண்டுபிடித்தார்.. அது ஐந்தாண்டுகளில் சென்னைக்கு வந்துவிட்டது. லண்டனைத்தலைமை இடமாகக்கொண்ட ஓரியண்டல் டெலிபோன் அண்ட் எலெக்ட்ரிக் கம்பெனி என்ற ஒரு தனியார் நிறுவனத்தின் ஏஜண்டுகளான அர்புத்னாட் அண்டு கம்பெனியின் மேற்பார்வையில் சென்னையில்  தொலைபேசி சேவை தொடங்கப்பட்டது என்று   ஆரம்பிக்கிறார் விட்டல் ராவ்.

தொலைபேசிநாட்கள் என்னும் முதற்கட்டுரையில் நடிகர் மேஜர் சுந்தரராஜன் பற்றி விட்டல் ராவ் குறிப்பிடுகிறார்.  இவர் இந்தத்துறையில் டெலிபோன் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றியவர். திரையுலகில் பிரகாசித்த நடிகர். மேஜர் சந்திரகாந்த் என்னும் திரைப்படத்தில் நடித்துப் புகழ்பெற்றார். அதிலிருந்து மேஜர் சுந்தரராஜன் ஆனார் என்கிற  அரிய விஷயம் சொல்கிறார் விட்டல் ராவ்.

 தொலைபேசித்துறையில் பணியாற்றி இலக்கியத்துறையில் பிரகாசித்த பாவண்ணன் என்கிற பாஸ்கரன், சுப்ரபாரதிமணியன், எஸ்.சங்கரநாராயனன்,விட்டல்ராவ் எனும் விட்டல், ரா சேஷாத்ரி,ஜெயமோகன்,லதாராமகிருஷ்ணன்(ரிஷி) இலந்தை.சு. ராமசாமி என்று தன் நினைவுக்குத்தெரிந்த பிரபலங்களை அடுக்கிச்செல்கிறார்.

பொதுமக்கள் பேசுவதற்கான செந்நிறக்கூண்டுகள்- பப்ளிக் கால் ஆபிஸ் - நகரில் ஆங்காங்கே நிறுவப்பட்டிருக்கும்.அதனுள்ளாய் சில விஷமிகள் நுழைந்து தொலைபேசி சேவையில் கிடைக்கும் இலவச எண்களோடு பேசுவார்கள்.  அடுத்தமுனையில்  பெண் ஊழியர்கள் இருப்பார்கள். அவர்களோடு  தேவையில்லாமல் பேசுவது  விஷமிகளின் வாடிக்கையாகியிருந்தது. அவர்களை எப்படி ஸ்விட்ச் ரூம் மெக்கானிக்குகள் கண்டுபிடித்து காவல்துறைக்கு தெரிவித்து தண்டனைக்குள்ளாக்கினார்கள் என்பதனையும் விட்டல் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

எம் ஜி ஆர் அவர்கள் முதல்வராகப் பொறுப்பு ஏற்றபோது அவருக்குச் சில மிரட்டல் கால்கள், அசிங்கமாகப் பேசும் கால்கள் வந்ததாகவும் அதன் மீது காவல்துறை உதவியோடு நடவடிக்கை எடுக்கப்பட்டதனையும் வாசகர்க்குச்சொல்கிறார்  நூல் ஆசிரியர்.

விட்டல்ராவ் நல்ல ஓவியர்.  தொலைபேசி இலாகா சார்பாக அகில இந்திய ஓவியப் போட்டி ஹைதராபாத்தில் 1966 ல் நடைபெற்றதாகவும் அதனில் கலந்துகொண்டு இரண்டாம் பரிசு பெற்றதையும் நமக்குச்சொல்கிறார். பின்னர் எழும்பூர் தினத்தந்தி  அலுவலக மைதானத்தில் விட்டல் ராவ் நடத்திய ஒவியக்கண்காட்சியைப்பற்றி அழகாகக் குறிப்பிடுகிறார். காட்சிக்கு வைத்த படங்கள் 22. அதனில் சில படங்கள் ஆண் பெண் நிர்வாண நவீன ஓவியங்கள். தொலைபேசி ஊழியர்களில் பெரும்பான்மை ஆண் பெண்களுக்கு பெரிய விஷயமாக,ஆர்வமூட்டுவதாக,அருவருப்பூட்டுவதாக,கிளர்ச்சிகரமாக,அசிங்கமானதாக,கிளிகிளுப்பூட்டுவதாக, இந்த நவீன ஓவியங்களே  இருந்தன என்பதை யதார்த்தமாகக் குறிப்பிடுகிறார் விட்டல் ராவ்.

 சென்னைத்தொலைபேசியில் பணியாற்றிய ரா. சேஷாத்ரி ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பர்.ஆனந்தவிகடனிலும் தினமணிகதிரிலும் முத்திரைக் கதைகளையும் நட்சத்திரக்கதைகளையும் எழுதியிருப்பவர். இவர்  இதே இலாகாவில் டைரக்டர் ஆஃப் விஜிலன்ஸ் உயர்பதவி வகித்தவர் என்பதை மறக்காமல் குறிப்பிடுகிறார்.  தொலைபேசி இலாகாவில் சென்னை  மக்கள் தொடர்பு அதிகாரியாய்  பணியில் இருந்த  இலந்தை சு .இராமசாமி, அமுத சுரபி கலைமகள், கல்கி, ஆகிய இதழ்களில் எழுதிப்புகழ்பெற்றவர் என்பதையும் சொல்லிச்செல்கிறார் விட்டல் ராவ். சென்னை  தொலைபேசி இல்ல இதழ் டெலி நியூஸ் என்பது அதனில் வெளியிடுவதற்காக தன்னை இலந்தை சு. இராமசாமி பேட்டி கண்டதையும்  அப்போது எழுத்தாளர் சா.கந்தசாமி உடன் இருந்ததையும் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார். தொலைபேசித்துறையில் எலக்ட்ரானிக் எக்ஸ்சேஞ்களை அறிமுகப்படுத்திய தொழில்நுட்ப வல்லுநர் சாம்பிட்ரோடா பற்றி நிறைய செய்திகளை வாசகர்க்குச்சொல்கிறார்.

இந்தத் துறையில்  டெலிபோன் டயல் என்பது எப்படி வந்தது என்கிற சுவாரசியமான கதையை வாசகர்க்குச்சொல்கிறார் விட்டல் ராவ். அமெரிக்காவில் கான்சாஸ் நகரில்  ஸ்டோவ்ஜர் என்பவர் சவப்பெட்டிகளை   தனக்கு வரும் ஆர்டர்களுக்கு சப்ளை செய்பவர். நம்பர் ப்ளீஸ் எக்சேஞ்கள் இயக்கத்தில்  இருந்த போது அங்கு பணியாற்றிய பெண்கள் அடிக்கடி ’எங்கேஜ்டு எங்கேஜ்டு’ என்று சொல்லி ஸ்டோவ்ஜரை நோக அடித்து இருக்கிறார்கள். ஆக இதிலிருந்து விடுபட  1891 ல்  அவரே கண்டுபிடித்ததுதான் டயல். டயல் வந்த பிறகு வேண்டும் தொலைபேசி எண்ணை அந்த அந்த  வாடிக்கையாளரே சுழற்றிக்கொள்ள முடியும். ஆப்ரேடர்களின் உதவி இல்லாமலே வாடிக்கையாளர் பேசி முடித்துவிடுவார். இதனைக்கண்டுபிடித்த ஸ்டோவ்ஜர் பெயராலேயே  அந்த எக்ஸ்சேஞ்சும் அழைக்கப்பட்டது.

சென்னை ஆலந்தூர் கடைத்தெருவில் மளிகைக்கடை வைத்திருந்த சங்கரலிங்க நாடார்’ ஐயா நம்ம டயல சுத்தினா, அது அப்படியே நிக்கி’ என்று சொன்னதைத்  தத்ரூபமாகக் குறிப்பிடுகிறார் விட்டல் ராவ்.

இலவச சேவைகளுக்கு வாடிக்கையாளர்களே மனமுவந்து ஊழியர்களுக்கு  கொடுத்த இனாம்’ பக்‌ஷீஸ்’ பின்னாளில் எப்படி கையூட்டாக உருப்பெற்றது என்கிற கதையையும் வாசகர்க்குச்சொல்கிறார்  நூல் ஆசிரியர். ஊழியர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமைஆகி அவஸ்தை பட்ட துன்ப  வரலாறும்  ஊடாகவே வந்துவிடுகிறது.

டெலிபோன் டைரக்டரிகள்  தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு விநியோகிப்பதற்காக ஊழியர்கள் நியமிக்கப்படுவதை தமாஷாகச்சொல்கிறார் விட்டல் ராவ். அந்த ஊழியருக்கு ஆங்கிலம் தெரியவேண்டும்,  அவர் டை கட்டிக்கொள்ளவேண்டும்.  சென்னைத்தொலைபேசி டைரக்டரிகள் 1941ல் தி அசோசியேட் பிரிண்டர்ஸ் என்னும் அச்சகத்தில் அச்சிடப்பட்டன. அச்சுப்பிழையின்மை,எழுத்துக்களின் கூர்மை,சிறந்த வடிவமைப்பு எல்லாம் ஒருங்கே கொண்ட அச்சகமாக அது அந்நாளில் கொண்டாடப்பட்டது. பிறகு ‘குமுதம்’ அந்த பொறுப்பை  ஏற்றுக்கொண்டது. அன்று குமுதத்திற்குரிய  குனேகா செண்ட் வாசனையோடு அந்த டைரக்டரிகள் விநியோகிக்கப்பட்டன.பிறகு டைரக்டரி தயாரிக்கும்பணி ‘யெல்லோ பேஜ்’ நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. பிறகு ஒரு காலத்தில் டைரக்டரி வழங்குவதே நின்றுபோனது என்பதைக்குறிப்பிடுகிறார் விட்டல் ராவ்.

மவுண்ட் ரோடில் அண்ணா சிலை இருக்குமிடத்திற்கு அருகில் இருக்கும்  வி ஜி பி காட்சிக்கூடம் பற்றிச் சொல்கிறார். அங்கு  நாற்காலி மேஜை  வாங்கப்போகிறார் கதை சொல்லி. அந்தக்கடையில் ஒரு விளம்பரம் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.’ தவணை முறையில் நாங்கள்தான்  இந்தியாவிலேயே முதன் முதலாக டிரான்சிஸ்டர் ரேடியோவை நரிக்கிறவர்களுக்கு அளித்தோம்’. இன்று டிரான்சிஸ்டர் என்றால் வாழும் தலைமுறைக்கு அது  என்னவென்றே தெரியாத சூழ்நிலையை அல்லவா காண்கிறோம்.  அறிவியலின் கொடையால் உலகம்  எங்கு எங்கோ சென்று கொண்டிருக்கிறது.

கதை சொல்லி டெரிடோரியல் ஆர்மியில் பயிற்சிக்கு என கல்கத்தா பயணமாகிறார். அங்கு விக்டோரியா மெமோரியல் மியூசியம் சென்று பார்க்கிறார். அங்குதான் விட்டல் ராவ்,  பெயிண்டர்கள் டானியல்களின் ஓவிய பிரிண்ட்கள் அடங்கிய காலரியைக் காண்கிறார். தமிழகக்கோட்டைகள், கோயில்கள்,மாளிகைகள், மகாபலிபுரக்காட்சிகள் என்று  1780ல் செய்திருக்கும் வண்ண பதிப்போவியங்களை நோக்குகிறார். பின்னாளில் விட்டல் ராவ் தமிழகக்கோட்டைகள் என்னும் நூல் எழுத இவ்விஷயமே காரணமாக அமைந்தது என்பதையும் வாசகனுக்குச் சொல்கிறார்.

தொழிற்சங்கம் என்னும் தலைப்பிட்ட கட்டுரை சிறப்பாக அமைந்துள்ளது. விட்டல் ராவ் தான் பணி ஓய்வு பெறும்வரை மே தின விழாவில் கலந்துகொண்டதை பெருமையோடு குறிப்பிடுகிறார். மே தின வரலாற்றையும் வாசகர்க்குச்சொல்கிறார். 1886 மே முதல்நாள் சிகாகோ நகரில் ஹே மார்க்கெட் என்னும் இடத்தில் தொழிலாளர்கள் ’எட்டு மணி நேரம் மட்டுமே உழைப்பு’ என்று கோஷமிட்டு ஊர்வலம் செல்கின்றனர். கூட்டத்தைக் கலைக்க அங்கு துப்பாக்கிச்சூடு நடைபெறுகிறது. பல தொழிலாளர்கள் காயமுறுகிறார்கள். போராட்டத்திற்குத் தலைமையேற்ற  ஜார்ஜ் எங்கெல்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ்,ஆல்பர்ட் பார்சன்ஸ்,சாமுவேல் பில்டன், அடால்ஃப் ஃபிஷெர்ஸ் என்று ஐவர் தூக்கிலடப்பட்டு கொல்லப்பட்டனர்.அவர்களின் நினைவாகவே உலகெங்கும் மே தினம் கொண்டாடப்படுகிறது என்கிற  மேதினச் செய்தியைச்சொல்கிறார் விட்டல்.

தொலைபேசித்துறையின் பலம் பொருந்திய தொழிற்சங்கமாக NFPTE  இருந்தது. அதிலிருந்து 1970ல் FNPTO என்னும் ஒரு புதிய சங்கம் உருவானது. ஓம் பிரகாஷ் குப்தா என்னும்  தலைவர் நீண்டகாலம் NFPTE அமைப்பில் பொறுப்பில் இருந்ததைச்சொல்கிறார் விட்டல் ராவ். தமிழகத்தில் தொலைபேசித் தொழிற்சங்க இயக்கத்தில் மறக்கமுடியாத தலைவர்கள் என்று,தோழர் ஞானையா,பிரேமநாதன்,முத்தியாலு,சந்திரசேகரன்,ஏ. கே வீரராகவன், சீனுவாச ராவ்,பாண்டுரெங்கன், ஏ. டி ருக்மணி,அப்துல் மஜித்,ஜே.ரங்கநாதன்,மற்றும் ஜெகன் ஆகியோரைக்குறிப்பிடுகிறார்.இடது வலது இரு அணிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் என்று  ஜெகனை நேர்மையோடு குறிப்பிடுகிறார் விட்டல் ராவ்.

 தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யும் போது அதனை எதிர்த்துச் சில தொழிலாளர்கள் வேலைக்கு வருவதும் உண்டு. அந்த கருங்காலி ஊழியர்களுக்கு நிர்வாகம் சிற்றுண்டி காபி மதிய உணவு ஏற்பாடு செய்து வழங்கிய சிறுமையைக் குறிப்பிடுகிறார். இணைப்பக உயர் அதிகாரியே தன் கையால் ரொட்டியில் வெண்ணெய் தடவி அவர்களுக்குத் தந்த அனாசார செயலையும்  விடாமல் எழுதியிருக்கிறார். பொதுத்தொலைபேசி கூண்டுக்குள் சென்று பணியில் இருக்கும் கருப்பு ஆடுகளை வண்டை வண்டையாகத்திட்டிய தீவிர தொழிற்சங்கப் பற்றாளர்களையும் நமக்குக் காட்டிச்செல்கிறார் விட்டல் ராவ்.

1943 டிசம்பர் 12  அன்று இரவு ஜப்பானிய குண்டு வீச்சு சென்னையில் நிகழ்ந்ததைச் சித்திரமாய்த் தீட்டித்தருகிறார் விட்டல் ராவ். வீசப்பட்டு சேதம் ஏற்படுத்திய ஜப்பானிய குண்டின் சிதறிய பாகம் ஒன்று இன்றளவும் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திலுள்ள, கோட்டை மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது என்கிற வரலாற்றுச்செய்தியையும் வாசகன் அறிந்து கொள்கிறான்.

செயிண்ட் தாமஸ் மவுண்ட் தொலைபேசி அகத்தில் இருந்த ஆலமரங்கள் செங்கல் முட்டுக்கள் அங்கு பிடிக்கப்பட்ட பாம்புகள் எல்லாம் பற்றிச் சுவாரசியமாக வாசகர்க்குச்சொல்கிறார் நூல் ஆசிரியர். ருமால் பாவாடை ஆன கதை என்னும் கட்டுரையில் சில சுவாரசியமான செய்திகளை நமக்குச்சொல்கிறார். ருமால் என்பது தலைப்பாகை. அதற்கு ஒண்ணரையடி நீளத்துக்கு வால் தொங்கும். இலாகா  லைன் இன்ஸ்பெக்டர்கள் தலைக்கு  ருமால் சுத்திக் கட்டிக்கொள்ளவேண்டும். ருமால் தனித்தனியே இரண்டு நிறங்களினாலான கதர்த்துணியால் ஆனதாய்  இருக்கும். ஒன்று காக்கி மற்றொன்று இரத்தச்சிவப்பு, ஒரு ஊழியருக்கு இரண்டு ருமால்கள் வழங்கப்படும். பொன்னுசாமி என்னும் ஊழியர் ருமால் தைப்பதற்கு ஒத்துக்கொண்டு அதனில் மீதமாகிய  துணியை தொடர்பகத்திலுள்ள பதினைந்து பெண் ஊழியர்களுக்கு  உள் பாவாடை தைக்க  ஏற்பாடாகிய சுவாரசியமான செய்தி சொல்லப்படுகிறது. அந்த உள் பாவாடைகள் தலையணை உறைகளாக மட்டுமே தைக்கப்பட்ட சோகத்தையும் வாசகன் அறிந்து  கொள்கிறான்.

சடகோபன் என்னும் நேர்மையான ஊழியரை, லஞ்சம் கொடுத்தால் மறுக்கும் நேர்மையான தொழிலாளியையும் அடையாளம் காட்டுகிறார் விட்டல்  ராவ். அவருக்கு ‘சஞ்சார் ஸ்ரீ’  எனும் உயரிய விருது அளிக்கப்பட்டு கவுரவிக்கப்படுகிறாது என்பதனையும் இங்கே  நாம் தெரிந்துகொள்கிறோம்.

எம் ஜி ஆர் அமெரிக்காவில் சிகிச்சை முடித்துக்கொண்டு சென்னை திரும்புகிறார். மொஹித்தே மைதானம் வண்ண விளக்குகளால் மின்னுகிறது. மக்கள் கடல் போல் கூடி அவரை வரவேற்கிறார்கள். விட்டல் ராவின் கவலை எல்லாம்  அவர் வருகைக்காக கொடுத்த அவசர  தொலைபேசி இணைப்புகள்  சரியாக  இயங்கி  நம் பேர் சொல்லவேண்டுமே  என்றுதான். மெய்யான தொழிலாளிக்கு உணர்வு  அப்படித்தானே இருக்க முடியும்.

பேஜர் என்னும் செய்தி அனுப்பும் கருவியினையும் தொட்டுச்செல்கிறார் விட்டல் ராவ். அதன் வழி ஒருவர்  பேச முடியாது. ஆனால் ஒரு பேஜரிலிருந்து அடுத்த பேஜருக்கு செய்தி  மட்டுமே அனுப்பலாம்.

தந்தி என்னும் வசதி உலக அரங்கில்  மூடுவிழா கண்டதைப் பதிவு செய்கிறார். 1970 ல் தினமணி கதிர்   நடத்திய சிறுகதைப்போட்டியில்   விட்டல் ராவ் முதற்பரிசு பெற்ற  செய்தியை தந்தி மூலமே சாவி அவர்கள் அவருக்கு  அனுப்பி வைத்ததையும் வாசகர்க்குச்சொல்கிறார்.

பின்னர்  பாரத் சன்சார் நிகம் லிமிடெட்  என்கிற கார்ப்பரேட்,   BSNL   உதயமாகிறது.

ஓய்வூதியம் என்னவாகுமோ என்று கவலைப்பட்ட  இலாகா ஊழியர்களுக்கு மய்ய அரசின் தொலைத் தொடர்புத்துறை மூலம் அது அவர்களுக்கு  பிரச்சனையே இல்லாமல்  வழங்கப்படும் என்கிற  நற்செய்தி,  தொழிற்சங்கப்போராட்டத்திற்குப்பிறகே  சாத்தியமானது என்பதனையும்   வாசகர்க்குச்சொல்கிறார் விட்டல்ராவ்.

இறுதியாய் ஒரு  சாம்ராஜ்யம் வீழ்ந்து போனது என்கிறார் விட்டல் ராவ். கனக்கும் இதயத்தோடு  மட்டுமே இதனை எழுதுவதாய்க் குறிப்பிடுகிறார்.  இப்படைப்பில் இத்தனைச்செய்திகளையும் படித்து விட்ட  வாசகன் நூலாசிரியரின் கழுகுக்கண்களுக்கு எதுவும் தப்பவில்லை  என்பதையும்  வழி மொழிகிறான்.

-------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

கலையும் காலமும் -விட்டல்ராவ்

 

’கலையும் காலமும்’ வழங்கிய விட்டல் ராவ்                                            

கோவை விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ள’ கலையும் காலமும்’ என்னும் நூல்  ஓர் கலைச்சுரங்கம். ஆசிரியர் விட்டல் ராவ். இப்படைப்பை நாடறிந்த   எழுத்தாளர்  திரு. பாவண்ணன் அவர்கட்குச் சமர்ப்பித்துள்ளார். பாவண்ணனை சக எழுத்துப்பயணி, அன்பு சகோதரர் என்று  விளிக்கிறார் விட்டல் ராவ். நன்பர்களோடு பேசும்போது  தான் பெங்களூரில் வசித்து வருவதற்கு திரு. பாவண்ணனே காரணம்  என்று  சர்வ சாதாரணமாகக் குறிப்பிடுவார். இந்நூலுக்குப் பதிப்புரை தந்துள்ள அருமை நண்பர் மு. வேலாயுதம் இப்படிப் பதிவு செய்கிறார், ‘கலை இலக்கியம் இரண்டுமே மானுட சமூகத்தை மேன்மையை நோக்கி   அழைத்துச்செல்வதை தமது முக்கிய இலக்காகக் கொண்டவை. அந்த வகையில் ‘கலையும் காலமும்’என்ற விட்டல் ராவின் இந்நூல் கலையைச்சொல்கிறது. காலத்தைச்சொல்கிறது.அமைதியைச்சொல்கிறது.நிறைவைத்தருகிறது’.

விட்டல் ராவ் தன்னுடைய என்னுரையில்  அடிப்படையில் தான்  ஒரு ஓவியன் என்பதைக்குறிப்பிடுகிறார். அவர் சிற்பங்கள்,சிற்ப வடிவக் கட்டுமானங்கள் என்பவற்றில் மனத்தைப்பறிகொடுத்திருக்கிறார். கோயில்கள் கட்டிடங்கள் என்பவற்றைக்காண அனேக பயணங்கள் மேற்கொண்டிருக்கிறார். ’ மண்ணில் தோன்றி மண்ணுக்கே திரும்பும் சகல உயிரினங்களில், மகத்தான மனிதன் ஆற்றிய பெருஞ்சாதனைகளில் முக்கியமானது, அவன் தன்னை வெளிப்படுத்தியிருக்கும், வெளிப்படுத்திக்கொண்டே வரும் கலைக்கரியங்கள்’ என்கிறார்.  தொடர்ந்து  இக்கட்டுரைகளை  வெளியிட்ட பேசும் புதிய சக்தியின்  திரு. ஜெயகாந்தன் அவர்கட்கு தனது நன்றியைச் சமர்ப்பிக்கிறார்.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள கலை இலக்கிய விமர்சகர் இந்திரன்,

‘என் மனம் கவர்ந்த நண்பர்களில் விட்டல் ராவ் ஓர் அபூர்வப் பறவை.தனது சிறகுகளைப் பல்வேறு திசைகளில் புகைப்படம், ஓவியம், புனைவிலக்கியம் என்று விரித்துப்பறந்த 82 வயது பறவை. இவரது சிறகுகள் தொடர்ந்து பறப்பதில் சோர்வறியாதவை’ என்று குறிப்பிடுகிறார்.

கலையும் காலமும்  நூல் 28  கட்டுரைகளைக் கொண்டது. மண் கல் மரம் சிற்பம் ஓவியம் கட்டிடம் என்கிற வரிசையில்  கட்டுரைகளை நாம் இங்கே வாசிக்கலாம். சுடுமண் பற்றிப்பேசுவன முதல் இரண்டு கட்டுரைகள்.களிமண்ணாலான கலைப்படைப்பை ஏழை மனிதனின் கலை என்று சொல்கிறார்கள். அசையும் மற்றும்  அசையாத் சொத்துக்களை அதிகமாகக்கொண்ட செல்வந்தர்களின் ஆட்சியின் கீழுள்ள திருக்கோவில்களில்  தங்கம் வெள்ளி வெங்கல சிலைகளை கருங்கற் சிற்பங்களைக்காண முடியும். ஊரின் நடுநாயகமாய் அவை  குடிகொண்டிருக்கும். ஏழைகளின் சாமிகள் சுடுமண்ணாலானவை.ஊர் கோடியில் மட்டுமே அவை காணப்படும்.சுடுமண்ணாலான ‘முனியப்பன்,ஐயனார் சிலைகள்  சுடுமண் குதிரைகள் முதலான கிராம பாதுகாப்புத் தெய்வங்களுக்கு ஆடு கோழி பலியிடல், கள் சாராயம் சுருட்டு முதலியன படைத்தல்  வ ழக்கமாயின. அதற்கென நியமிக்கப்பட்ட  பூசாரிகள் அந்த அந்த காரியங்களைச் செய்தார்கள். தாரை, தப்பட்டை,எக்காளம்,பம்பை ஆகியன  இத்தெய்வங்களுக்கு இசைக்கருவிகள் ஆயின. பிராமணர்கள் இக்கோயிலகளுக்கு வருவதில்லை. அச்சமே காரணம் என்கிறார் விட்டல் ராவ்.

கற்சிற்பங்கள்,ஓவியங்கள், கல், சுதைச் சிற்பங்களாலான கோபுரங்கள் ஆகமம் என்றான  பெரிய கோவில்கள்  உயர்ஜாதிக்கோயில்கள் என்றே பார்க்கப்பட்டன. அவை பிராமண பூசாரிகள் வசமாயின.

மேட்டூர் அணைக்கட்டுக்குக் கீழே உள்ள பரந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள ‘ அணைக்கட்டு முனியப்பன் சுடுமண் சிலையை,   சேலம் நாலு ரோடு முனியப்பன்  சுடுமண் சிலையை, ஏழைகளின் சாமிகளுக்குச் சான்றாய்க் காட்டுகிறார் ஆசிரியர்.

எழுத்தாளர் சா. கந்தசாமி எழுதிய ‘நிழல்’ என்னும் சிறுகதையில் தெய்வம்  முனிக்குப்படையலும் பூசையும் நடைபெறும். முனிக்கு ஒரு பாடல் ஒன்றையும் சா.கந்தசாமி அக்கதையில் வழங்குகிறார்.

‘அண்ட சராசரம் காக்கும் ஆதிமுனியே

வால்முனியே அப்பனே

ஆதி முனியே எங்க அப்பனே

ஐயாவே எங்கள் குல நாயகரே

எலந்த மரம் விட்டு இறங்கி வரவேணும்

ஒதியமரம்விட்டு ஓடி வரவேணும்

பனைமரம் விட்டு பாய்ந்து வரவேணும்

இலுப்பைமரம் விட்டு இங்க வரவேணும்

இப்ப வரவேணும் இங்க வரவேணும்

காத்திருக்கும் பிள்ளைகளைக் காக்க வரவேணும்’

மூன்றாவது கட்டுரை ’கல்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.  மணற்கல்லில் கட்டப்பட்டுள்ள கோவில்களில் மிகமிகப்பெரியது காஞ்சி கைலாசநாதர் கோயில்.  நூல் ஆசிரியர் இந்தக்கோயிலை நான்குமுறை பார்த்துவந்ததாகக் குறிப்பிடுகிறார். 1300 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டக் கோயில் இது. கோயில் மதிற்சுவரில் பெரிய  யானைச் சிற்பம்  காணப்படும். பல்லவர் செய்வித்த கோயில்களில் சிற்பங்கள் தனித்தே இருக்காது. கோயிலே சிற்ப வடிவமாகவே அமைந்திருக்கும் என்கிறார் விட்டல் ராவ். காஞ்சி கைலாசநாதர் கருவறையின் உள்ளே பின் சுவரில் சோமாஸ்கந்தர் புடைப்புச் சிற்பம் இருக்கிறது. இதற்கு முன்னால் கருப்புக்கல்லால் ஆன லிங்கம் அமைந்திருக்கிறது. நந்தியின் சிலை  கோயிலுக்கு முன்னால் வெளியே  வெகு தூரம் தள்ளி மணற்கல் மேடையில் காணப்படுகிறது. நந்தி அமர்ந்துள்ள  மேடை மூன்று அடுக்குகளைக் கொண்டது. தரையோடு சேர்ந்துள்ள பகுதியில் சிவ கணச் சிலைகள் ஏராளமுள்ளன.

மேலும் காஞ்சி கைலாசநாதர் கோயிலில் சப்த மாதர்கள், ருத்திரர்கள் அஷ்டதிக் பாலகர்கள் என்னும் இந்திரன், யமன்,அக்னி,நிருதி,வாயு, வருணன், சோமன்,ஈசானன் சிலைகளோடு , நரசிம்மனுக்கும் கருடனுக்குமான சண்டைக்காட்சிகளும், மணற்கல்லில் சிற்பங்களாய் படைக்கப்பட்டுள்ளன. கோயில் வளாகத்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட  சிறு கோயில்கள் உள்ளன. சிவன் பார்வதி முருகன்  இணைந்த சோமாஸ்கந்தர் ஓவியங்கள் அதிகமுள்ளன. க்ரீட அலங்காரம், ஆபரணங்கள்,குடை தினுசுகள் அஜந்தா, சித்தன்னவாசல், தஞ்சை சோழர் ஓவியங்கள் போலவே உள்ளன.

நந்திவர்மன் கட்டிய கோயில் ஒன்று உத்திர மேரூரில் இருக்கிறது. இவ்வூரிலுள்ள  வைகுண்டப்பெருமாள் கோயிலில் கல்வெட்டுகள் அதிகம் காணப்படுகின்றன. மற்றுமொரு கோயில் சுந்தர வரதப்பெருமாள் கோயில். இது 1200  ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. இக்கோயிலில், ஆஞ்சனேயர்,கருடாழ்வார்,நின்ற கோலத்தில் சுந்தரவரதர் ஆகியோர் இருக்கிறார்கள்.  நின்றான், அமர்ந்தான், கிடந்தான், என்ற மூன்று நிலைகளிலும் அத்திமரத்தால் செய்யப்பட்ட  மூலவர்கள்  இருக்கிறார்கள். உத்திர்மேரூர் சுந்தரவரதப்பெருமாள் கோவிலின் மாதிரியில்தான் சென்னை அஷ்டலக்‌ஷுமி கோயில் கட்டப்பட்டுள்ளதாக விட்டல் ராவ் குறிப்பிடுகிறார்.

’மரம்’ என்னும் தலைப்பில் இரண்டு கட்டுரைகள்  வந்துள்ளன. மரப்பாச்சிகள் நல்ல செம்மரத்தில் செய்யப்படுபவை. அவை ஒரு அடி உயரமிருக்கும். சிலை செதுக்கும்போது  உடை ஆபரண தினுசுகளையும் செதுக்கியிருப்பார்கள். பெண் பொம்மைகளின் காதும் மூக்கும் குத்தப்பட்டிருக்கும். இதற்கென்றே கிடைக்கும் போலி நகை நட்டுக்களை அதனில் மாட்டி வைப்பார்கள். நார்பட்டில் புடவை, ரவிக்கை,வேட்டி, வஸ்திரம், மரப்பாச்சிகளுக்கு அணிவித்து இருப்பார்கள். மரப்பாச்சி பொம்மைகளுக்குத் திருமணம் உண்டு.  திருமண விருந்தும் ஏற்பாடாகும். நவராத்திரியின் கடைசியில்  ஒருநாள் பொம்மையைத் தூங்கவும் வைப்பார்கள். பிறகு அவை அனைத்தும் பரணைக்கு வந்து விடும்.

பழங்குடி மக்களின் கைவினைப்பொருட்கள் காட்சியகம்  ஒன்று மைசூர் மானசகங்கோத்திரியிலுள்ளது. 1968ல் தொடங்கப்பட்டது. 6500 அரிய  கலைப்பொருட்கள் இங்கே காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. சுண்டு விரலில் பாதி அளவு தொடங்கி  ஆளுயர மரப்பாச்சி வரை இங்கே நாம் பார்க்கமுடியும். ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்க்கும் நிகழ்ச்சியை  மரச்சிற்பமாக  செதுக்கியிருத்தலைக் கண்டு பிரமித்துப்போகலாம் நாம்.

சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதி ’சித்திரச்சாலை’ என்னும் பொம்மைக்கூடத்தைப்பற்றியும் விளக்குகிறார் விட்டல் ராவ். பொது மக்கள் இதனைச் சொர்க்க நரக பொம்மைச்சத்திரம் என்றழைப்பதாகவும் தெரிகிறது. சித்திரையில் நடைபெறு அறுபத்து மூவர் விழாவின் போது பொது மக்கள் இதனை கண்டு களிக்கிறார்கள். வியாசர் பாடி விநாயக முதலியாருக்குச் சொந்தமானது இச்சத்திரம். ஆற்காட் நவாபின் அரண்மனை கட்டட காண்ட்ராட்டராக இருந்தவர் இந்த முதலியார்.

தமிழ்நாட்டுக்கோயில்களில் சிதம்பரம், கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் இங்கெல்லாம் மரத்தாலான  கோயில்கள் காணப்படுகின்றன.கேரளத்தில் பத்மநாப அரண்மனை அருங்காட்சியகத்தில்  துர்கை சிற்பம் சிறப்பானதாகும். குறிப்பிடப்படவேண்டிய மற்றொன்று பைரவரின் சிற்பம். கேரளத்தின் மரச்சிற்ப அறிவுக்குச் சான்றாக நிற்பது இந்த பைரவ சிற்பமாகும். பைரவரின் சித்தரிப்பு அச்சம் தரக்கூடியதாகஇருக்கிறது. பைரவரின் விழி பிதுங்கிப் பற்கள் தெரிகிறது.கடைவாய் இரண்டிலும் கோரப்பற்கள் வளைந்து காணப்படுகிறது. காது குண்டலங்கள் யானைத்தலைகளாய்த் துதிக்கைகள் மேலோங்கிய சித்தரிப்பு, கழுத்தை அலங்கரிக்கும் ஆபரணங்களுக்குக் கீழாக இரு நாகங்கள் பின்னிப்பிணைந்து  பக்கத்திற்கு ஒன்றாக படமெடுத்து ஆடுகின்றன. அவற்றை ஒட்டி சிங்கங்கள். முழுச்சிற்பத்தையும் இருபத்திநான்கு நாகங்கள்  பின்னிச் சுழன்று காவல் புரிகின்றன. கேரள மரச்சிற்பியின் அரிய திறமையை உலகுக்குப் பறைசாற்றும் கலைப்பொக்கிஷம் இது.

நாம் தேர்த்திருவிழா பல ஊர்களில் பார்த்திருப்போம். மரச்சிற்பங்களின் மொத்த வெளிப்பாடும் தேர் சிற்பங்களில்தான் குடிகொண்டுள்ளன. தேர் செய்வதற்கு ஏற்ற மரங்கள் கோங்கு, அல்லது சால் ,செம்மரம், ஆப்பிள் மரம், சரகம்  முதலியன. புளியமரங்களையும் தேரின் சக்கரம் பீடங்கள் செய்ய  பயன்படுத்துகிறார்கள்.  பிரம்மன்,விஷ்ணு,சிவன்,கார்த்திகேயன்,விநாயகர், அம்மன், இலக்குமி, சரஸ்வதி என உருவங்கள் தேர்களில் கொலுவிருக்கும். தேர்  அமைப்பு எண்கோண வடிவ பீடத்தில், அடுக்கு அடுக்காக ஒன்றன் மேல் அமைந்திருக்கும். நாகஸ்வரம் வாசிப்பவர்கள் தேர் மீது அமர்ந்து வாசிப்பார்கள். தேரை நூற்றுக்கணக்கானோர் வீதிகளில் இழுத்துச் செல்வார்கள். தேர் இழுக்கும் போது வாசிக்கும் ராகம்,

‘தித்தி தித்தீ தின தியாகராஜா

தித் தினத தித்தீன தித்தி தித்தி…’

கோயிலில் ஒரு தேர் நிலையை அடைவது வரை அழகாகச்சொல்கிறார் விட்டல் ராவ்.

கிறிஸ்துவக்கோயிலிலும்  தேர் செய்யப்பட்டு  இறைவனின்  வீதி உலாவிற்குப் பயன்படுத்தப்படுவது குறித்து இக்கட்டுரையில் வருகிறது. திருச்சி டால்மியாபுரம் அருகே வடுகம்பட்டியில்  வீரமாமுனிவரால் அமைக்கப்பட்ட தேர் குறித்து  விபரங்கள் தரப்பட்டுள்ளன. இத்தேரில்  இயேசுநாதரின் வாழ்க்கைக் காட்சிகள் மரச்சிற்பங்களாகச் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

கல் என்னும் தலைப்பில்  முதல் மூன்று  கட்டுரைகள் மணற்கல்லினால் செதுக்கப்பட்ட சிலைகளைப்பற்றிப் பேசுகின்றன. முதல் கட்டுரையில் காஞ்சீபுரம்  தான்தோன்றீசுவரர் மணற்சிற்பங்கள் குறித்து நிறைய செய்திகள்  தரப்பட்டுள்ளன. இக்கோயிலின் வெளிச்சுற்றுச்சுவரில் தனித்தனியாக ஏழு மணற்கல் புடைப்புச்சிற்பங்கள் காணப்படுகின்றன. இவை காபாலிகர்களின் உருவங்களைத்தாங்கி நிற்கின்றன. இந்தியாவிலேயே காபாலிகர்கள் சிற்பம்  காணப்படுவது  இந்தக்கோயிலில்தான்.  காபாலியோடு காபாலினியும்  ஜோடியாகவே காணப்படுகிறார்கள். மாட்டுக்கொம்பில் மதுவை நிரப்பிக்குடித்தபடி நடனமாடுகிறார்கள்.

முக்தீஸ்வரர் கோயிலில் அனேக மண்ற்கல் சிற்பங்கள் பார்க்கலாம். இராவண கர்வ பங்கம் என்னும் புடைப்புச்சிற்பம் மிகவும் பிரசித்தி பெற்றது. முக்தீஸ்வரர் கோயிலின் வெளிச்சுவர்களில் ஈசன் நடராஜ வடிவங்கள்  இரண்டு இடங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன. வைகுண்டப்பெருமாள் கோயில் பல்லவப்பேரரசு சாளுக்கிய மன்னனை  வெற்றிகொண்டதற்குச்  சின்னமாகக் கட்டப்பட்டது. இக்கோயில் காஞ்சிபுரம் ரயில்வே ஸ்டேஷனுக்கும் பஸ் ஸ்டேண்டுக்கும் இடையே அமைந்துள்ளது. வைகுண்டப்பெருமாள் கோயிலிலும் ஏனைய பல்லவ காஞ்சிபுரத்துக்கோயில் போல  அதிட்டானம் கருங்கல்லால் ஆனது. மற்றவை மணற்கற்களால்ஆக்கப்பட்டுள்ளன. இகோயிலில் செதுக்கப்பட்டுள்ள குதிரைச்சிற்பங்கள் நம்மைப்பார்ப்பது போன்றே  வடிக்கப்பட்டுள்ளது சிறப்பாகும்.

 கட்டுரைகள் ’ கல்’-   நான்கும் ஐந்தும்  கற்சிற்பங்களைப் பற்றிப் பேசுகின்றன. செஞ்சிக்கோட்டையில் உள்ள  வெங்கட ரமணர் கோயில், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில், ஸ்ரீரெங்கம் அரங்கன் கோயில், சங்ககிரி வரதராஜப்பெருமாள் கோயில் தஞ்சைப்பெருவுடையார்கோயில் ஆகியன  சிறப்புமிக்க கற்கோயில்களாகும்.

அடுத்த  ’கல்’கட்டுரை ஐயங்கார் குளம், திருப்பனங்காடு மற்றும் கூழம்பந்தல் ஆகிய இடங்களில் உள்ள கற்சிலைகளைப்பற்றி விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. ஐயங்கார் குளத்தில் உள்ள கோயிலுக்கு சஞ்சீவராயர் கோயில் என்று பெயர் வழங்கப்படுகிறது. ஆஞ்சனேயர் சஞ்சீவி மலையோடு பறந்து செல்கையில்  ஒரு துண்டு இந்தக் கோயில் உள்ள இடத்தில் வீழ்ந்துவிட்டதாம் ஆகவே தான் இது சஞ்சீவராயர் கோயில் ஆனது என்கிறார்கள். ஐயங்கார் குளத்திலிருந்து  இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருப்பது  திருப்பனங்காடு. பெயருக்கு ஏற்றார்போல் இவ்வூரில் பனைமரங்கள் அதிகமாகக்காணலாம். கூழம்பந்தல் என்னும் ஊர் பற்றி விவரணை தொடர்கிறது. இங்குள்ள கோயிலின் பெயர் கங்கைகொண்ட சோழீச்வரம். இக்கோயிலுக்குச் சுற்றுச்சுவர் கிடையாது. தென்திசை  நுழைவாயிலில் பிரம்மாண்ட இரு துவார பாலகர் சிலைகள் கம்பீரமாய் நிற்கின்றன. சற்று தூர நின்று பாருங்கள், இக்கோயில்,  சக்கரங்கள் இணைக்காத  பெரும் கல் ரதம்  போன்ற வடிவமைப்பைக் கொண்டது. கி.பி 1012-1044ல்  கட்டிமுடிக்கப்பட்டதாகும் கோயிலுக்கு முன் பக்கத்தில் இருபது பருத்த தூண்களைக்கொண்ட பெரிய நடன மண்டபம் அமைந்துள்ளது. காஞ்சீபுரத்திலிருந்து இருபத்து நான்கு  தேவரடியார்களை அழைத்து வந்து  இந்த மண்டபத்தில் நடன  நிகழ்ச்சி நடைபெற்றதாக அறியப்படுகிறது.

அடுத்த கட்டுரை  புத்த ஜைன காஞ்சி.

1927ல் பாண்டிச்சேரியைச் சேர்ந்த வரலாற்றுப் பேர்டாசிரியர் துப்ரேல் காஞ்சி கைலாசநாதர் கோயிலில் பல பளிங்கிலான புத்த மதச்சின்னங்கள்  கொண்ட  தூண்களைக் கண்டிருக்கிறார். இதை டாக்டர் மீனாட்சி என்கிற வரலாற்றாளர் வழிமொழிந்திருக்கிறார் என்பதனை அறிகிறோம். திருப்பருத்திக்குன்றம் என்னும் ஊரில் சமணக்குடியிருப்புகள் இருந்திருக்கின்றன. சந்திர பிரபா தீர்த்தங்கரர் திருக்கோயில்  இங்கு வெகு சிறப்பாக இருந்திருக்கிறது.

கட்டுரைகள் 12 ம் 13ம்  மகாபலிபுரம் பற்றிப்பேசுகின்றன.  இது கல்லிலே கலை வண்ணம் கண்ட தலம். மகாபலிபுரத்திலுள்ள ராய கோபுரங்கள் இரண்டுமே முற்றுப்பெறாதவை. ஒன்று அர்ஜுன தபஸ் சிற்பத்திற்குப்பின்னால் இருப்பது மற்றொன்று  தலசயனப்பெருமாள் கோயிலுக்கு முன்பாக நிற்பது. இவை இரண்டும் விஜயநகரப் பேரரசர் காலத்தில் கட்டப்பட்டவை. அலங்காரத்தூண்களும் யாளி மீது நிற்கும் ஆளுயர மங்கயாக நிற்கும் கங்கைச்சிலையும் மிக முக்கியமானவை. 18 ஆம் நூற்றாண்டில் கடல் வழி தென்னிந்தியாவுக்கு வந்த ஐரோப்பியர்கள் மஹாபலிபுரத்தை  ஏழு கோபுரங்கள் அல்லது ஏழு கோயில்கள் என்றே குறிப்பிட்டு  அழைக்கின்றனர். இக்கோயில்களைக் கடல் கொண்டுபோய் இருக்கலாம். 2004 டிசம்பரில் வந்த சுனாமி இயற்கைப்பேரழிவுக்குப்பின் வெகு மாற்றங்கள் கடற்கரைக் கோவில்களில் பார்க்க முடிந்திருக்கிறது.  வங்கக்கடல் அப்போது  வெகு தூரம் உள்  வாங்கியதால் பல கட்டிட இடிபாடுகளைக்  கடற்கரை மக்கள் பார்த்ததாகச்சொல்வதையும் விட்டல் ராவ் பதிவு செய்திருக்கிறார்.

மகாபலிபுரத்தில் உள்ள  பஞ்ச பாண்டவர் ரதச்சிற்பங்களைப்பற்றிக்குறிப்பிடும்போது தர்மராஜா ரதத்தைப்பற்றி சிலாகித்துச்சொல்கிறார் ஆசிரியர். பொதுவாக பொதுமக்களை ரதத்தின் மேல் ஏறிப்பார்க்க அனுமதிப்பதில்லை. சிறப்பாகத்தான் அனுமதி பெற்று ஆசிரியர் சென்றிருக்கிறார். தர்மராஜ ரதத்தின் மேற் பகுதியில் இரண்டு தளங்கள் உள்ளன. முதல் தளத்தில் சோமாஸ்கந்தரின் சித்தரிப்பு, குழந்தை வடிவத்தில் முருகன்.  முருகனைப்பார்த்தபடி சிவனும் பார்வதியும் இருக்கிறார்கள். இடது புறமும் வலது புறமும் பிரம்மாவும் விஷணுவும் இருக்கிறார்கள். புடைப்புச்சிற்பங்களுக்கு மேலே ’ஸ்ரீநரசிம்மா ’என்கிற   கிரந்த எழுத்துக்கள் காணப்படுகின்றன. அர்ஜுனன் பாசுபதம் பெறும் காட்சிச் சிற்பம் மிகச்சிறப்பானது. திருபுராந்தகச்சித்தரிப்புச் சிற்பம் காண்போர்  மனதைக் கொள்ளை கொள்வது. முண்டாசு கட்டிக்கொண்டு எளிய தோற்றத்தில்  ஒரு சிவன் சிற்பம். காதில் குண்டலங்களோடு கையில் கழியொன்றை வைத்துக்கொண்டு அடியாரைப்பார்க்கும் ஈசன்,  இப்படிச் சிற்பங்கள் பலவற்றைக்காணலாம். இரண்டாவது தளத்தில் கதையை ஊன்றிய துவாரபாலகர்கள், அடுத்து பக்தர் வடிவில் பல்லவ மன்னன் தொடர்ந்து, அரச குடும்பம், கையில் மண்டையோடு வைத்திருக்கும்  கபாலீசுரர் சிற்பம் என அற்புதச்சிலைகளைக்காணலாம்.

அடுத்து வரும் கட்டுரை சாளுக்கியர்களின் இரு கோயிற்கலை மரபு என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. பாதமி  என்பது சாளுக்கியர்களின் தலைநகரம். வாதாபி என்பதுவே கால ஓட்டத்தில்  பாதமி ஆயிற்று. சாளுக்கிய அரசர்களில் புகழ்பெற்றவன் இரண்டாம் புலிகேசி. பதாமி குகைக்கோயில்கள் சிவப்பு நிற மணற்கற்களாலானவை. இவர்களின் கட்டடக்கலை மரபு இரண்டு விதமானவை ஒன்று வடஇ ந்தியமரபு அது ‘நாகரமரபு ’ மற்றொன்று  தென்னிந்தியாவினது’ திராவிட மரபு’. இவ்விடத்தில் விட்டல் ராவ் ஒரு சிறிய விமர்சனத்தை சினத்தோடு சுட்டிச்செல்கிறார். நமது வெகு பழங்காலச்சொல்லான  ’திராவிடம்’ என்கிற பதத்தை ஏதோ ஒரு  ஆங்கிலேயன் வந்துதான் இங்கு ஆரம்பித்து  வைத்தான் என்று யாரேனும் சொல்வார்களானால் அவர்களுக்கு வரலாற்று அறிவு போதாது என்றுதான் சொல்லவேண்டும் என்கிறார். ஹியூவன் சாங்  என்னும்   சீன யாத்ரீகன்  தான் சாளுக்கிய நாட்டுக்கு வருகை புரிந்ததைத் தன்னுடைய குறிப்புக்களில்  சொல்லியிருப்பதையும்  வாசகனுக்குச் சொல்கிறார் விட்டல் ராவ்.

இரண்டாம் புலிகேசி மக்லேந்திரவர்மனைத்தோற்கடித்துப்  பல்லவச்சிற்பிகளையும்  கலைஞர்களையும் பதாமிக்கு கூட்டிச்சென்று திராவிடப்பாணி கோயில் கட்டுமானங்களையும் குகைக்கோயில்களையும் கட்டுவித்தான்.பதாமி மலையில் நான்கு குகைக்கோயில்கள் உள்ளன. பல்லவ பாணியில் அமைக்கப்பட்ட  சிவனும் திருமாலும் ஒன்றாகிய ஹரிஹரன் சிலை இங்கே பிரசித்தி பெற்றது. பட்டதகல் கோயிலில் அமைந்திருக்கும் லஜ்ஜாகெளரி என்னும்  சிற்பம் பெண்குறியைக் காட்டியபடி  அமைந்திருக்கும். சில இடங்களில் ஆண்குறியோடு கூடியதாகவும்  லஜ்ஜாகெளரி சிலை காணப்படும். விஜயநகரப்பேரரசு காலத்தில் நிறைய பாலியல் உணர்த்தும்  சிற்பங்கள் கோயில்களில் தேர்களில் இடம்பெற்றன. இவை தமிழகத்துக்கும்விரிவடைந்தன. பட்டதகல் என்னும் ஊரின் பெயர்,  சாளுக்கிய மன்னர்கள்  இந்த ஊருக்கு வந்து மட்டுமே  ஒரு  பெரிய கல் மீது அமர்ந்து  அரச முடிசூட்டுக்கொள்வதை பழக்கமாகக்கொண்டதால் வந்தது என்பதையும் ஆசிரியர் தவறாமல்  குறிப்பிடுகிறார்.

பதினைந்தாவது கட்டுரை எலிஃபண்டா குகைச் சிற்பங்கள் பற்றிப்பேசுகின்றன. எலிஃபண்டா தீவு மும்பை கேட் வே ஆஃப் இந்தியா பகுதியிலுள்ள அபல்லோ பந்தரிலிருந்து பதினோரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எலிஃபண்டா தீவின் புராதனப்பெயர் ‘கராபுரி’. இத் தீவின் முனையில் யானைச்சிற்பம் ஒன்று நின்றதால் இத்தீவு எலிஃபண்டா தீவு என அழைக்கப்பட்டது. அந்த யானையோ வெடிவைத்துத் தகற்கப்பட்டு விட்டது. இங்கு முத்தலை சிவனின் சிற்பம் புகழ் பெற்றது. அது  புகழ்பெற்ற தீன் மூர்த்தி சிலை என்றழைக்கப்படுகிறது. துர்கைக்கான கோயில் ஒன்றும்  சிவனுக்கான கோயில் ஒன்றும் இங்கே இருப்பதைக்காண முடியும். சிவன் பார்வதி திருக்கல்யாணக்காட்சியைச் சிற்பமாக வடித்திருப்பதையும் இங்கே பார்க்கலாம்.

அடுத்து மூன்று கட்டுரைகள் சுவர் ஓவியங்கள் பற்றிப்பேசுகின்றன. கேரளாவில் வயநாட்டிலிருந்து  40 கிலோமீட்டர் பயணித்தால் எடக்கல் மலைக்குகையை அடையலாம். இங்குள்ள மலையும் குகையும் மத்திய தொல் பொருள் இலாகாவின் கட்டுப்பாட்டில் இருப்பவை. இங்கே  கூர்மையான கருவியைக்கொண்டே ஓவியங்கள் ஒத்த கீறல்களை ஆவணமாக  செய்துவைத்துள்ளதைக் காணமுடியும். மத்தியப்பிரதேசத்தில் பிம்பெட்கா  மலைக்குகைகளில் பண்டைகால ஓவியங்கள் காணப்படுகின்றன. மகாராஷ்ட்ரக் காடுகளில் உள்ளவை அஜந்தா குகை ஓவியங்கள். இவை அனைத்துமே புத்தமதம் தொடர்பானவை. அஜந்தா ஓவியம் என்றாலே நினைவுக்கு வருவது ‘அப்சரஸ்’ என்னும் தெய்வீக மங்கையின் ஓவியம். இது குகை எண் 17 ல் உள்ளது. மூக்கு உதடு இவைகளைத் தூக்கிக்காட்டும் விதத்திலேயே இந்த ஓவியங்கள் அமைந்துள்ளன. தஞ்சைப்பெருவுடையார் கோயில்  ஓவியங்கள் அண்ணாமலைப்பல்கலைக்கழக பேராசிரிய்ர் எஸ் .கே கோவிந்தசாமி என்பவரால் வெளி உலகுக்குக் கொணரப்பட்டவை.  பெருவுடையார் கோயில் பிரதட்சிணப்பாதையில் 15 அறைகள் உள்ளன. இவைகளின் உள்ளே  சோழர்கால ஓவியங்களும் நாயக்கர் கால ஓவியங்களும் தீட்டப்பட்டுள்ளன. தட்சிணாமூர்த்தியின் சித்தரிப்பு, சுந்தரர் வெள்ளையானைமீதமர்ந்து கைலாயம் பயணித்தல், சிதம்பர நடராஜரை சோழ அரசர் வணங்குதல், கல்யாண சுந்தரராய் சிவபெருமான், இராவணன் கயிலையைத் தூக்க முயற்சிக்கும் காட்சி, திருபுராந்தகர் சினத்தோடு இருக்கும் காட்சி என்று தஞ்சை ஓவியங்கள் பெரும் புகழ் வாய்ந்தவை.

19 வது கட்டுரை திருபுவனச்சிற்பங்கள் என்னும் கட்டுரை. விட்டல் ராவின் இனிய நண்பர் தேனுகா,  நூல் ஆசிரியரை சுவாமிமலைப்பகுதியில் 12 நாட்கள் தங்க வைத்துக் கும்பகோணம் நகரைச்சுற்றியுள்ள சிற்பக்கலைத்தலங்களைப் பார்வையிட்டு வர உதவியிருக்கிறார். தஞ்சைப்பெருவுடையார் கோயில்,கங்கைகொண்டசோழபுரக்கோயில்,தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில், மற்றும் திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோயில் என்கிற பிரதான கோயில் சிற்பங்கள் குறித்து இக்கட்டுரை இனிதே ஆய்கிறது. கம்பஹரேஸ்வரர் கோயில் இராமாயணச் சிற்பங்கள் குறித்து  விரிவான ஆய்வு இக்கட்டுரையில் தரப்பட்டிருக்கிறது.

5 அரசகுலங்களும் 3 சிற்பக்கோயில்களும் என்னும் அடுத்த கட்டுரையில் சோழ அரசர்கள் கர்னாடக மண்ணில் எடுப்பித்த சிற்பங்கள் பற்றிப்பேசுகின்றன. பெங்களூருக்கு 60 கிலோமீட்டர் தொலைவில் நந்திமலைக்கு அடியிலுள்ள நந்தி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சைவக்கோயில் சோழ அரசர்களால் கட்டப்பட்டுள்ளது. அருணாசலேஸ்வரர் கோயில், போக நந்தீஸ்வரர் கோயில், யோக நந்தீஸ்வரர் கோயில் என்று மூன்று சிறப்புப் பெற்ற கோயில்கள் உள்ளன. கோலாரை அடுத்த முலபாகில்  மத்வர்களுக்கான மடம் உள்ளது. இங்கிருந்து சற்றுத் தொலைவில் குருடு மலை உள்ளது. கூடு மலையே பின்னர் குருடு மலை என வழங்கலாயிற்று. சோழ மன்னனால் கட்டப்பட்ட  சோமேசுரர் ஆலயம் இம்மலையில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இத்திருக்கோயில்.

ஹொய்சாளர்களின் நுண் நுணுக்கச் சிற்பங்கள் என்னும் அடுத்த கட்டுரை ஹாவேரி என்னும் ஊருக்கு நூலாசிரியர் தம் துணைவியாரோடு தேனிலவுலவுக்குச் சென்றதில் ஆரம்பிக்கிறது.  நூலாசிரியரின் தமக்கை  அவ்வூரில் குப்பி வீரண்ணாவின் நாடகக்கம்பெனிமுகாமிட்டிருந்ததில்  பங்கெடுத்துக்கொண்டிருந்தார். ஹொய்சாளர்கள் அமைத்த  சித்தலிங்கேஸ்வரர் கோயில்  இங்கே உள்ளது. ஹொய்சாளர்கள் சிற்பத்திற்கு ’சோப் ஸ்டோன்ஸ்’ என்னும் சற்று மிருதுவான கருங்கல்லைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். 435 சிற்பக்கோயில்களை ஹொய்சாளர்கள் அமைத்திருக்கிறார்கள். சுமார் 150 கோயில்களில் கல்வெட்டு குறிப்புகள் உள்ளன. சிற்பிகளின் பெயர்கள் குறித்த விபரங்கள் ஹொய்சாளர்களின் கல்வெட்டுக்களிலிருந்து பெறமுடிவது ஒரு அரிய விஷயமாகும். பிராகிருத மொழியில் ‘வோஜா’ என்றால் உபாத்யாயர். அதுவே ஆச்சாரி என்று மற்ற மொழிகளுக்கு வந்ததையும் ஆசிரியர் சொல்கிறார்.’சரஸ்வதி கன தாசர்கள்’ என்றும் அவர்கள் தங்களை அழைத்துக்கொண்டார்கள்.

ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜன் கர்னாடகதேசத்துக்கு  அடைக்கலமாக வந்து இங்கிருந்த ஹொய்சாள மன்னரை ஜைன மதத்திலிருந்து வைணவ மதத்துக்கு மாற்றியிருக்கிறார். விஷ்ணுவர்த்தன் என்கிற பெயரை ராமானுஜரே அவருக்கு வைத்தவர். ஹொய்சாளர் சிற்பக்கோயில்கள்  கர்நாடகத்தில்  ஹாசன் மாவட்டத்தில் அனேகம் உள்ளன.ஹளே பீடு, பேளூர் ஆகிய இடங்களில் புகழ் பெற்ற கோயில்கள்  காணப்படுகின்றன. பத்ராவதியில் லட்சுமி நரசிம்மர் கோயில்   சிகரங்கள் கொண்ட அழகான கோயிலாகும்.

அடுத்து மூன்று கட்டுரைகள் விஜயநகரக் கலை  குறித்துப்பேசுகின்றன. இன்றைய ஹம்பியே அந்த நாளைய விஜயநகரம். பெர்ஷியத்தூதுவர் அப்துர் ரஜ்ஜாக்  இந்நகர் பற்றிச் சொல்லும்போது,’இந்த இடத்தைப்போல் இன்னொன்றைக்கண்கள் பர்த்ததில்லை, இதற்கிணையான இன்னொரு இடத்தை உலகில் இருப்பதாய் என் செவிகள் கேட்டதுமில்லை’ என்று குறிப்பிடுகிறார். இன்றைய ஹம்பி என்பது கோயில்கள் அரண்மனைகள் மாளிகைகள்  குளங்கள் இவைகளின் மிச்ச சொச்சங்களே ஆகும். விஜயநகரப்பேரரசில் முக்கியமானவர்  கிருஷ்ணதேவ ராயர். ஆமுக்த மால்யதா என்னும் தெலுங்கு இலக்கிய நூலை எழுதியவர்.

 ஹம்பியில் நுழைந்ததுமே  நாம் காண்பது ஜைன பசதி என்னும் கலைக்கோயில். இது சிற்ப ரூபக்கோயில்..அடுத்து நாம் காண்பது பீமனின் நுழைவாயில். தொடர்வது விருபாட்சர் கோயில். சேதப்படுத்தப்படாத அழகுக்கோயில் இது. விருபாட்சர் கோயிலில் தலைவாசலில்  காண்பது  நிர்வாணக்கோலத்தில் நிற்கும்  பெண்ணின் சுதையுருவம்.   தன் பெண் குறியை  அகலத்திறந்து காட்டும் ஒரு வித, தாந்திரிகக் காட்சியாக  அதனை நாம் காணலாம். ஹம்பி யாத்திரையைக் கோடைகாலத்தில்  நாம் மேற்கொள்ளக்கூடாது. நவம்பர் டிசம்பர் ஜனவரியில் மேற்கொள்வது சவுகரியமாக இருக்கும் என்கிறார் ஆசிரியர்.

விஜய விட்டலர் கோயிலின்  ’கருங்கல் ரதம்’ குறித்து நல்ல விவரணையைத் தருகிறார். நாம் ஐம்பது ரூபாய் பச்சை நோட்டில் காணும்  கருங்கல் ரதம் நம் நினைவுக்கு வரலாம். இங்குள்ள அர்த்த மண்டபத்தில் இசைத்தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணன் கோயிலும், ஹசாரா ராமர் கோயிலும் சிற்பக்கலையழகு கொண்டவை. கிருஷ்ணன் கோயில் மகாமண்டபத்துத்  தூண்களில்  விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. குதிரைத்தலையுடன் கூடிய  கல்கி உருவம் அற்புதமானது. அர்த்த மண்டபத்தில் காதல் சிற்பங்கள் சிறப்பானவை. அடுத்து சொல்லப்படுவது ’தாமரை மஹால்’ என்னும் ஹம்பியின் பெருமைபேசும் அற்புதக் கட்டிடம். துங்கபத்திரை நதியிலிருந்து ஹம்பிக்கு உயரமான கால்வாய் வழியாகத்தண்ணீர் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதனைப்பார்த்த  டோமிங்கோ பேயஸ்  என்னும் போர்ச்சுகீசிய பயணி ஹம்பியை  ரோம் நகரத்துக்கு ஒப்பாகக் குறிப்பிட்டுள்ளார். அடுத்தாக உக்கிர நரசிம்மர் சிலை. 6.7 மீட்டர் உயரமானது. நரசிம்மருக்கு  ஏழுதலை கொண்ட  நாகம் குடை பிடிக்கிறது. தொடைமீது இலக்குமியை இவர் கொண்டிருப்பதால்  இவரை யோகநரசிம்மர் என்பதே  சரி என்கிறார்கள். இசுலாமிய படையெடுப்பால் கண்டதுண்டமானது நரசிம்மர் சிலை. 600 துண்டுகளாகச் சிதறிய சிலையை  கர்நாடக அரசின் தொல்லியல்துறையே  நாகராஜ ராவ் என்பவரின் தலைமையில்  முயன்று மீண்டும்  நிலை நிறுத்தியிருக்கிறது. அடுத்து லேபாக்‌ஷி  என்னும் ஊர். அயோத்தி   இராமன்  ’சடாயு’ என்னும்  கழுகைப் பார்த்து’ பறவையே எழுந்திரு’  என்றாராம்,அதுவே ‘லே பட்சி’ லேபாக்‌ஷியாய் ஆகியிருக்கிறது.

ராட்சஸ தங்கடி எனும் ஊரில் இசுலாமியப்படைகள் ஹம்பிக்கான போரை இறுதியாய் நடத்தின. அவை வென்றன. ஹம்பி சூறையாடப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்டது.உடைக்கப்பட்டது. தீயிடப்பட்டது. அழிக்கப்பட்டது.  அந்தக்கால’ யுத்த தர்மம்” அதுவே என்கிறார் ஆசிரியர்.

இசுலாமியக்கலை என்னும் இரண்டு கட்டுரைகள் தொடர்ந்து வருகின்றன. இசுலாமியக்கலை என்பது முக்கியமாய்ச் சங்கேதக்குறிகள் வாசகங்கள் கொண்டது. உருவங்களையோ  அவற்றின் எவ்வித குறியீடுகளையோ கொண்டதன்று. உருவ வழிபாடு இல்லாத காரணத்தால் இசுலாம் ஓவியம் சிற்பம் குறித்து எதுவும் சொல்வதில்லை. கலையுலகிற்கென்று  இஸ்லாம் செய்திருக்கும் பெருங்காரியம் கட்டடக்கலை. ’காலிகிரஃபி’ என்னும் எழுத்துக்கள் முஸ்லிம்களால்  உயர்வாகக் கருதப்படுகிறது. ஜேட்  என்பது  உயர்தரக்கல் வகை. இதனை ஆபரணங்களில், கத்திகளுக்குக் கைப்பிடியில்,  மூக்குப்பொடி டப்பி செய்வதில், மோதிரம், பூ ஜாடி, லோட்டா குவளை, பேலா, ஹூக்கா செய்வதில் உபயோகமாகிறது. மீனாகாரி எனாமல் என்னும் கலை இஸ்லாமியர்க ளால் பெரிதும்  ஆதரிக்கப்பட்டு வந்திருக்கிறது. கி.பி 1367 ல்  மன்சூரின் பேரன்  ரஃபி  என்பவரால் கட்டப்பட்ட  ஜாமி மசூதி இசுலாமியக் கலைப்பாணிக்கு ஒரு எடுத்துக்காட்டு. ஐயாயிரம் பேர் ஒரே நேரத்தில் இதனுள்ளே தொழுகை செய்ய முடியும்.`

தக்காணக்கோட்டைகளில் முக்கியமானது கோல்கொண்டா. இதன் இளவரசன்  குலிகுதுப் தன் காதலி பாக்மதியைச் சந்தித்த இடத்தில்தான் ’சார்மினார்’ கட்டப்பட்டுள்ளது.பாக்மதியை  குலிகுதுப்  மணந்தபிறகு அந்த இடம் பாக்நகர் என்று பெயரிடப்பட்டது. பாக்மதியே  பின்னர் ஹைதர் மஹல் ஆனாள். பாக்நகர்  ஹைதராபாத் ஆனது. இந்த வரலாற்றையும் இங்கே சொல்கிறார் விட்டல் ராவ்.

அடுத்துவரும் இரண்டு கட்டுரைகள்  இந்திய ஐரோப்பியக் கலை பற்றிப்பேசுகின்றன.  நவீன ஓவிய சிற்பக்கலையில் ’ரோகோகோ’ என்னும் வகைமை ஃபிரான்சில் தொடங்கிச் சிறிதுகாலம்  நடைபோட்டது. எளிமைமிக்க அழகியலுக்கு ஆதரவு பெருகியது. பீங்கான் தங்கம் வெள்ளி வேலைப்பாடுகளில் ரோகோகோ இணைந்துகொண்டது. இந்தியாவில் தவழும் கிருஷ்ணன், வெண்ணெய்த்தாழி கிருஷ்ணன்  போன்றவை ரோகோகோ  கலையை  வெளிப்படுத்தின.பிறகு சலவைக்கல்லின் ஆளுமையைக் கலைத்துறையில் காணமுடிந்தது.

காலனிய சிற்பங்களில் கொண்டாடப்பட்டது விக்டோரியா மகா ராணியின் சிலை. பம்பாயில் விக்டோரியா டெர்மினஸ்  அந்த ராணியின் புகழைப் பறைசாற்றியது. சென்னையில் அழகிய உலோகச் சிலை சர் தாமஸ் மன்றோ சிலை. இன்றும் அது  கம்பீரமாய் நின்றுகொண்டிருக்கிறது. பெங்களூரில் கப்பன் பூங்காவில் ஏழாம்  எட்வர்டின் சிலையும் விக்டோரியாவின் சிலையும் புகழ் பெற்றவை.1901ல் விக்டோரியா மகாராணி ,காலமானபோது அவருக்கு ஐம்பது சிலைகள் இந்தியாவில் நிறுவப்பட்டன. கர்நாடக நவாப்  1768ல் சேப்பாக்கம் அரண்மனையை இந்தோசாராசனிக்  பாணியில் கட்டினார். இது பின்னர் பிரிட்டிஷார் வசமாயிற்று. கல்கத்தாவின் ஹூக்ளி ஆற்றின் கரையில் இருந்த பெரிய மைதானத்தில்  பிரிட்டிஷ்ராஜின் தாஜ்மஹால் என்றழைக்கப்பட்ட ’விக்டோரியா மெமோரியல் ஹால்’  என்னும் கட்டடம் உருவானது. இதற்கு ராஜஸ்தானிலுள்ள மக்ரானா சலைவைக்கற்கள் தருவிக்கப்பட்டன. எண்பதனாயிரம் டன் சலவைக்கற்கள் இந்த மஹாலுக்காக உபயோகப்படுத்தப்பட்டன. 1921 டிசம்பர் 28ல்  வின்சர் கோமகன் வேல்ஸ் இள்வரசரால் இது திறந்துவைக்கப்பட்டது.  இந்தியாவின் மாபெரும் சலவைக்கல் கட்டுமானம். இதனைக்கட்டி முடிக்கவேண்டும் என்று பெரு முயற்சி செய்த கர்சன் பிரபு , லண்டனுக்குச்சென்றார் ஆனால்  இந்தியாவுக்கு திரும்பவும் வந்து அதனை நேரில்  பார்க்காமலே முடிந்து போனார் என்பது ஒரு  வரலாற்றுச்சோகம். அவரது  அழகுச் சிலை  மட்டும் மியூசியத்தின் வெளிப்பகுதியில் நின்றுகொண்டிருக்கிறது.

விட்டல் ராவின்  கலை ஆர்வம் வாசகனைப் பிரமிக்க வைக்கிறது. அவருடைய கலைப் பயணங்கள்  திட்டமிடப்பட்டவை. எள்முனைகூட சலிக்காது ஒவ்வொரு சிலையையும் ஓவியத்தையும்  கட்டிடத்தையும் அவர் கழுகுக்கண்கொண்டு பார்த்திருக்கிறார். மனைவி, மகள், உறவினர், நண்பர்கள்  கலைப்பயணத்தில் அவருக்கு  அத்தனை ஒத்தாசையாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே  நம் நன்றிக்குரியவர்கள்.

-------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

சஹ்ருதயர் விட்டல்ராவ்

 

 சஹ்ருதயர் விட்டல் ராவ்                                       

என் நண்பர்  பாவண்ணனுக்கு நண்பர். எனக்கும் நண்பர்.   நண்பர் பாவண்ணன் தான் என்னை ராமமூர்த்தி நகரிலுள்ள  விட்டல் ராவ் வீட்டிற்கு முதன் முதலில்  அழைத்துச் சென்றார். என் இளையமகன்  குடும்பம் பெங்களூரில் இருக்கிறது. ஆக சென்னையில் வசிக்கும்  நான் பெங்களூர் அடிக்கடி செல்ல   வாய்ப்பு. எழுத்தாளர் பாவண்ணன் எங்கள் பகுதிக்காரர்.   எழுத்தாளர் பாவண்ணன் படைப்புக்களில் நான் மிகுந்த ஈர்ப்பு உடையவன். பாவண்ணனின் சொந்த ஊர் வளவனூர். நானும் கடலூர் மாவட்டத்துக்காரன். இன்னும் கூடுதலாய்ச்சொல்ல நாங்கள்  எல்லோருமே தொலைபேசி இலாகாவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். விட்டல் ராவ் அவர்களின் வீடு   ராமமூர்த்தி நகரில் டி சி பாளையா  பிரதான சாலையில் கோஷி மருத்துவ மனைக்கு அருகில் இருக்கிறது. நன்பர்  பாவண்ணனின் அப்போதைய குடியிருப்பு அல்சூரில் இருந்தது.  பேருந்தில் பயணித்து  ராமமூர்த்தி நகர் சர்ச் ஸ்டாப்பிங்கில் வந்து இறங்கிய பாவண்ணனோடு நானும் சேர்ந்துகொண்டேன். இருவரும் நடந்தே விட்டல் ராவ் வீட்டிற்குச்சென்றோம். கல்கரே மெயின் ரோடு வழியாகத்தான் விட்டல் ராவ் இல்லத்துக்கு நடந்து சென்றோம்.

அன்றுதான் முதன் முதலாக விட்டல் ராவ் அவர்களை முதலில் பார்க்கிறேன். அவர் எழுத்துக்களை வாசித்து வந்தவன்தான். சிரித்த முகம் வெள்ளை நிறத்தில் தலையில் சின்னச்சின்ன முடிகள். வயது எண்பதைத்தொட்டுக்கொண்டிருக்கலாம். அவருக்குத்தனி வீடு. சொந்த வீடு. கலைஞானமுள்ள ஒரு மனிதரின் வீடு என்பதை வீட்டில் நுழைந்ததும் அறிந்துகொண்டேன். அவர் வரைந்த  ஓவியங்களும் எடுத்த  நிழற்படங்களும் நம்மை வரவேற்கின்றன.  விட்டல் ராவின் வீடு ஒரு அரிய நூலகமாகவே திகழ்கிறது.

விட்டல் ராவ்  மிகச்சிறந்த ஓவியர். சினிமாக்கள் பற்றிய அவர் விஷய ஞானம் அபாரமானது.சிற்பங்கள் குகைகள் பற்றிய அவரின் அறிவு   விசாலமானது. சிறுகதைகள் நாவல்கள் என பிரமிக்கத்தக்க படைப்புக்களைத்  தமிழில் தந்தவர்.அவரின் ஆங்கில அறிவு பாரமானது.தொலைபேசித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சேலம் மற்றும் அதன் பகுதிகளில் இளமைக்காலத்தில் வசித்துச் சென்னைக்குச் சென்றுள்ளார். ஒரு எக்ஸ்ரே டெக்னீஷியனாத் தன் பணியைத்துவக்கி சென்னைத் தொலைபேசியில் பல்லாண்டுகாலம் பணியாற்றியுள்ளார். சென்னையை அணு அணு வாய் அறிந்தவர். அனுபவித்தவர். சென்னைத்தமிழ் விட்டலுக்கு கைவந்த விஷயம்.  சென்னையின்  புராதனக்  கட்டிடக்கலை, ஓவிய சிற்பக்கலைகள் பற்றிய அவரின் தெளிவு நம்மைக்கிறங்க வைக்கும். அவரோடு உரையாடிக்கொண்டு இருக்கும் போது அவரின் வரலாற்று ஈடுபாடு எவ்வளவு  உயிர்ப்பானது என்பதை நாம் அவதானிக்க முடியும்.

அம்ருதா இலக்கிய இதழில் தொலைபேசி நாட்கள் என்னும் தொடர்ச் சித்திரத்தை எழுதியவர். பேசும் புதிய சக்தி இதழில் புராதனச் சிற்பங்கள் ஒவியங்கள் குகை அமைப்புக்கள் குடைவரைக்கோவில்கள் பற்றிய தொடர் ஒன்றை விஸ்தாரமாக வெளியிட்டுக்கொண்டும் இருக்கிறார்.  எழுத்தாளர்  பாவண்ணனோடு விட்டல் ராவ் உரையாடிக்கொண்டிருப்பது அருகிருக்கும் நமக்கு அனேக விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஒரு  வாய்ப்பாக அமையும். சுவாரசியமான  உரையாடலில்  இலக்கியச் சங்கதிகள் அவரிடமிருந்து வந்து வந்து விழுந்துகொண்டே இருக்கும்.

விட்டல் ராவ்’ வண்ண முகங்கள்’ என்னும் புதினத்தைப்படைத்துள்ளார். நாடகக்கம்பெனிகளில் நடிக்கும் மனிதர்கள் படும் இன்ப துன்பங்களை அலசி ஆராயும் நூலாக இது அமைந்துள்ளது. கன்னட மண்ணின் நாடக உலகில் நிகழ்ந்த சம்பவங்களை அடுக்கிக்கொண்டே போகிறார் விட்டல்.

இந்த நாவலுக்கு முன்னுரை தந்த ‘இரா. முருகன், இப்படிப்பேசுகிறார்.

‘கன்னட நாடக அரங்கு பற்றிய இந்த நாவல் எழுதிய விட்டல்ராவின் சகோதரி பங்கு பெற்றிருந்த  வரலாற்றுப்புகழ் மிகுந்த  கன்னட நாடக கம்பெனி குப்பி வீரண்ணா தியேட்டர்ஸ்.  அக்காவோடு இருக்க, ஊர் பார்க்க, நாடகம் பார்க்க, ரசிகர்களை மேடைக்குப்பின்னாலிருந்து பார்க்க,ஆண் பெண் நாடக நடிகர்களோடு நேசத்தோடு பழக, அவர்களோடு சேர்ந்திருந்து உண்ண உறங்க,சுவாசிக்க விட்டல் ராவுக்குக் கிடைத்த அனுபவங்களனைத்தின் சாரம் அவருடைய வண்ண முகங்கள் நாவல்.’

விட்டல்ராவ் ஹோசூரில் பிறந்தவர். தாய்மொழி கன்னடம் ஆயினும் பயின்றமொழி பழகிய மொழி தமிழ். சேலம் பகுதிளில் இளமைக்காலத்தில் வாழ்ந்திருக்கிறார். அவர் எழுதிய’ அன்னாடு காச்சியின் சேலம்’ என்கிற படைப்பு  அன்றைய சேலம் நகரைப்பற்றி விரிவாகப்பேசுகிறது. இந்த அரிய படைப்பை எழுத்தாளர் சா.கந்தசாமி அவர்களுக்குக் காணிக்கையாக்கி இருக்கிறார். சா.கந்தசாமி பற்றி விட்டல் சொல்லும்போது  ‘எழுத்துலகத்தில் என்னுடைய சகபயணியும் குடும்ப நண்பருமான மறைந்த எழுத்தாளர் சா. கந்தசாமி அவர்களுக்கு என் அன்புக்காணிக்கை’  என்று குறிப்பிடுகிறார்.

விட்டல்ராவ் தன்னுடை முன்னுரையில் இப்படிச்சொல்கிறார்.

‘என்னுடைய நாவல்கள் சிலவற்றிலும் சிறுகதைகள் நெடுங்கதைகளிலும் சேலத்தை, சேலத்தானை, அதன் அன்னாடு காச்சிகளை, அன்னாடுகாச்சித் தனத்தையெல்லாம் வேண்டிய மட்டும் தேவைப்படும் பொதெல்லாம் சித்தரித்து வந்திருக்கிறேன். சேலம் என் ஊர்,என் மண். என்னை ஆளாக்கிய புனித பூமி. அதைப்பற்றி எழுதுவது என் கடமைகளில் ஒன்று.’

விட்டல் ராவின் பார்வை எத்தன கூர்மையானது என்பதனை விளக்க ’ ஓர்  அன்னாடு காச்சியின் சேலம்’ வரலாற்று நூலில் வரும் இந்த எடுத்துக்காட்டு போதுமானது. இப்படிச் சொல்லிச் செல்கிறார் விட்ட;ல் ராவ்.’ எங்கள் குல தெய்வமான எல்லம்மன் என்றழைக்கப்படும் ரேனுகாதேவி கோயில் பூசாரி எனக்கு மொட்டையடிக்கும்  போது பூணூல் அணிந்திருக்கவில்லை.அவருக்குப்பின் அந்த திருச்செயலை சுவீகரித்துக்கொண்ட அவர் மகன் அம்மனுக்குப் பூசை  காரியத்தின் போது பூணூல் அணிந்திருப்பது வழக்கமாயிற்று’ இதை என் மகளுக்கு அங்கு  முடி இறக்கிய போது நான் கவனித்தேன்.

அர்ச்சகர் என்ற சொல் பூசாரி என்கிற சொல்லினும் உயர்வு பட்டதாக இந்த சமூகம் கருதத்தொடங்கியதை வேதனையோடு குறிப்பிடுகிறார் விட்டல். இருவரும் ஒரே தொழிலைச்செய்தாலும் இந்த  ஏற்றத்தாழ்வு சமூகத்தில் நிலவத்தொடங்கியதைக் குறிப்பிடுகிறார்.

 அன்றைய திரையரங்குகள்   மாடர்ன் தியேட்டர்ஸ்  படப்பிடிப்பு இடங்கள்,  சிறு மலர் உயர் நிலைப்பள்ளி  போன்ற கல்வி நிலையங்கள், சேலத்து  வீதி ஒழுங்குகள் கடைத்தெருக்கள் உணவுவிடுதிகள், உணவு விடுதி சிப்பந்திகள்,  சிறிய பெரிய  திருக்கோயில்கள், சமூகப் பொதுமேடைகள் என்பனபற்றி  இந்நூல் விரிவாகப்பேசுகிறது’ .டி. ஆர் சுந்தரமும்  அவரது ஆங்கிலேய மனைவியும் திட்டமிட்டு எல்லா வசதிகளும் ஒரே இடத்தில் இருக்கும்படியாகத்  திரைப்பட ஸ்டுடியோ ஒன்றைக்கட்ட முடிவு செய்தனர்.இப்படியாக ஒன்பது ஏக்கர் நிலத்தில் ஏற்காடு செல்லும் ரம்மியமும் அமைதியுமான சூழலில் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோ 1935ல் உருவானது. மாடர்ன் தியேட்டர்ஸின் முதல் தயாரிப்பான ‘சதி அகல்யா’ பற்றிப்பேசுகிறார் விட்டல். இப்புத்தகத்தின் இறுதியில்  தனது தந்தை மரணமெய்திய செய்தியைப்பதிவு செய்கிறார். மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் டபள்யூ எஸ் சுந்தரம்  விட்டல் ராவிடம் ’ பிழைப்பது கஷ்டம். இந்த நிலையிலேயே கூட்டிட்டு போனா குதிரை வண்டி வரும்.செலவு ஜாஸ்தியிருக்காது. இங்கே செத்துப்போயிட்டா குதிரை வண்டி வரமாட்டான். வந்தாலும் ஏராளமா பணம் கேப்பான்’  மருத்துவர் பளிச்சென்று  கூறியதைப்பதிவு செய்கிறார்.

சேலத்தைப்பற்றி ஒரு வரியில்,’சேலம் பிறர் அறியாத மகத்தான மனிதர்களை நிறையவே கொண்டிருக்கிறது என்கிறார் விட்டல். அந்த மகத்தான மனிதர்களின் வரிசையில் விட்டல் ராவும் உண்டுதானே.

விட்டல் ராவ் எழுதிய தமிழகக்கோட்டைகள் என்கிற நூல் இங்குள்ள கோட்டைகளின்வரலாறு  கட்டிட அமைப்பு  கோட்டைகளின் சிறப்பு அம்சங்கள்அதனோடு தொடர்புடைய மன்னர்கள் ஆட்சியாளர்கள் அந்தக்கோட்டைகளின் இன்றைய நிலை, குறிப்பிடப்படவேண்டிய சிறப்பான தகவல்கள் அந்த இடத்தினைப் பார்வையிட ஒருவர்  எப்படி  அடைவது என்கிற எல்லா விஷயங்களையும் வாசகர்கள் எளிதில் அறியுமாறு விறுவிறுப்பான நடையில் எழுதியுல்ளார் விட்டல் ராவ்.

அவர் தொட்டுப்பேசும் கோட்டைகள் ஓமலூர், நாமக்கல்,கிருஷ்ணகிரி,தேன்கனிக்கொட்டை,ஓசூர், தர்மபுரி,சந்திரகிரி,தரங்கம்பாடி திருமெய்யம்,வேலூர்,செயிண்ட்ஜார்ஜ் கோட்டை என நீள்கின்றன. கோட்டைகளைப் பற்றி  ராவ் சொல்லுகையில் திப்புசுல்தானின் சரித்திரமும் கூடவே பயணிக்கிறது. தொடக்க கால யுத்தங்களை பிரெஞ்சுப்படைகளுடன் சமாளித்த  திப்புசுல்தான் , ஆங்கிலேயருக்கும் பிரஞ்சுக்காரர்களுக்கும் உடன்படிக்கை ஏற்பட்டதால்  சங்கடத்தில் சிக்கிக்கொள்கிறார். திப்பு சுல்தானின் தலைப்பாகை கீழேவிழ அவர் போரிடுவதைச் சித்திரமாக வரைந்து  அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிடுகிறார்.  கட்டிவைத்த கோட்டைகள் எதிரிகளால் வெல்லப்படுவதை விட சூழ்ச்சிகளால் துரோகங்களால் சதிகளால் வெல்லப்படுவதை அழகாய்ச்சுட்டுகிறார்.

கோட்டைகளை ஆய்கையில்    அவருக்குத்துணையாக வருபவர்கள் வழிகாட்டுபவர்கள்,வரலாற்றுக்கதை சொல்பவர்கள் ஆடு மாடு மேய்ப்பவர்களே என்பதை நேர்மையாகப் பதிவு செய்கிறார்விட்டல்.

நிலநடுக்கோடு என்கிற நாவல் அவருடைய சென்னை வாழ்க்கையை சென்னையின் புராதன கட்டிடக்கலை விஷயங்களை அன்று இயங்கிய திரையரங்குகளை, வாடகை வீடுகளை  அன்று உலாவிய சமூக உணர்வுகளை பொது மருத்துவமனை இயங்கிய விதங்களை அன்று மிச்ச சொச்சமாய் சென்னையில் வாழ்ந்த ஆங்கிலோ இந்தியக்குடும்பங்களின் ஒழுகலாறுகளை எழுத்துச் சித்திரமாய்த்தீட்டித் தந்திருக்கிறார் விட்டல்.

சென்னையில் உள்ள தேவாலயங்கள், சென்னையின் பிரதான பழைய புத்தகக்கடையான மூர் மார்க்கெட்,மரினா கடற்கரை, செயின் ஜார்க் கோட்டை என அடுக்கிக்கொண்டே போகலாம். அன்று நகரத்தில் ஓடிய ரிக்ஷாக்கள், நகரப்பேருந்துகள் அவை ஏழு பைசாவுக்கு வழங்கிய டிக்கட்டுகள், எம்ஜி ஆர்  எம் ஆர் ராதாவால்  சுடப்பட்ட சமாச்சாரம்,  பிரதமர் நேரு இறந்தபோது  மாநகர கெடுபிடி, பின்னர் நாட்டில் வந்த உணவுப்பஞ்சம் அதனை சென்னைநகரம் அணுகிய விதம், அவர் காதலித்துத்திருமணம் செய்துகொண்ட சாகசம் நிறைந்த சென்னை வாழ்க்கை, தொலைபேசித்துறையில் பணியாற்றிய கெடுபிடி அதிகாரிகள், பொறுப்புமிக்க ஊழியர்கள், சோரமில்லா  தொழிற்சங்கத்தலைவர்கள், தலைவர்கள் நிகழ்த்திய விறு விறுப்பான கூட்டங்கள், தொலைபேசித்துறையில் நடைபெற்ற  அகில இந்திய வேலை  நிறுத்தங்கள், இன்னும் எத்தனையோ சுவாரசியமான செய்திகளைச் சொல்லிக்கொண்டே போகிறார். புத்தகம் வாசகனை கட்டிப்போட்டுவிடுகிறது. விட்டலின் எழுத்து நடை நம்மைப் பிரமிக்க வைக்கிறது.

நிலநடுக்கோடு புதினம் பற்றி பாவண்ணன்  இப்படிக்குறிப்பிடுகிறார்,

’வரலாற்றில் எப்போதுமே வெளிச்சத்திலிருக்கிற மனிதர்களையும் நிகழ்ச்சிகளையும் ஒரு கோட்டுச்சித்திரம்போல் ஒன்றிரெண்டு வரிகளில் தீட்டிவிட்டு, காலமெல்லாம் ஒளிவுமறைவுப்பிரதேசத்திலேயே வாழ்ந்து மறையும் எளியவர்கள் மீது வெளிச்சம்  விழும்படியாக ஒரு நாவலை எழுதிப்பார்த்திருக்கிறார் விட்டல் ராவ். தெருக்கள், வீடுகள் கடைகள், திரையரங்குகள்,உணவுவிடுதிகள் குதிரைப்பந்தயம் என சென்னை வாழ்க்கையைப்பற்றி அவர் அளிக்கும் பல நுண் தகவல்கள் வாசிப்பின் சுவாரசியத்தை அதிகரிக்கின்றன.அறுபதுகளின் வாழ்க்கை நம் கண் முன்னால் எழுத்தில் ரத்தமும் சதையுமாக விரிகிறது.,’

தேவ் என்கிற பெயரில் வரும் இந்த நாவலின் கதாநாயகன் விட்டல் ராவ் அவர்களேதான். தகப்பனை இழந்த தேவு எனும் தேவேந்திர அய்தாளாவின் பேரில் குழந்தை பாக்கியமற்ற டாக்டர் ஹமீத் தம்பதிகள் வாஞ்சை காட்டி வந்தனர். சேலத்திலிருந்து ஒலவக்கோடு பாசெஞ்சரில் சென்னை நோக்கி மூன்றாம்வகுப்புப்பெட்டியில் கூட்டத்தோடு கூட்டமாய் வண்டியில் ஏரும்  கதாநாயகன்  தேவை வழி அனுப்ப டாக்டர் ஹமீத் சேலம் ரயில்வே சந்திப்புக்கு வருகிறார் என்று தொடங்குகிறது நாவல். தேவின் நல்ல குணங்களை அவரின் மாமனார் தன்னுடைய வாழ்வின்  இறுதிக்கணங்களில்  மட்டுமே  தரிசிக்க வாய்க்கிறது.

 ‘தனக்கு மனிதர்கள் உண்டு மொழி உண்டு ஊர் உண்டு இனி எல்லாம் உண்டு என்ற தெளிவான நம்பிக்கை மிக்க பிரக்ஞை தேவுக்குள் எழுந்து பரவியது.’ என்று முடிக்கிறார் விட்டல்.

’மின்னற்பொழுதுகள்’ என்னும் கட்டுரைத்தொகுப்பு பேசும் புதியசக்தி இதழில் வந்த இலக்கியக்கட்டுரைகளின் தொகுப்பு. இந்த நூலுக்குப் பதிப்புரை எழுதிய ஜெ .ஜெயகாந்தன்,  ஓவியர் தேனுகா,எழுத்தாளர் சா.கந்தசாமி அசோகமித்திரன், மா. அரெங்கநாதன்,தனுஷ்கோடி ,மகரிஷி,பாவண்ணன்,பாவை சந்திரன்,பதிப்பாளர் கலைஞன் மாசிலாமணி  ஆகியோரைப்பற்றி விட்டல் ராவின் நினைவுகள் அபாரமானவை என்று வியந்து எழுதுகிறார்.

தனுஷ்கோடியின் பன்முக ஆளுமை என்று தலைப்பிட்டு கட்டுரை எழுதும்  விட்டல், ‘ நம்மைச்சுற்றி நமக்கு அருகே அரைகுறைகளும், அதுவுமில்லாதவையும் தாம் தூமெனக் குதிதெழும்பிச் சுய பீற்றலில் ஜொலிக்கையில், குடத்திலிட்ட மணி விளக்காய் அதிகம் தெரியவராமலே இருப்பவர்கள் அனந்தம். அவ்வாறான பன்முகக் கலை ஆளுமை கொண்ட திரு. ஆற்காடு வரதராசப்பிள்ளை தனுஷ்கோடி வெளியுலகுக்குத்தெரியாமலே சுடர்விட்டுப்பிரகாசிப்பவர் என்று தொடங்குகிறார்.

 தனுஷ்கோடி மூன்று தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ‘ஹாசன்’ சகோதரர்கள் தயாரித்த ‘ராஜபார்வை’ டி. ராஜேந்தர் இயக்கிய ‘நெஞ்சில் ஒரு ராகம்’ பிரதாப் போதன் இயக்கிய இந்தியப்பிரதமரின் பரிசுபெற்ற ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என்கிற மிக அரிய விஷயங்களை வாசகர்க்குத் தருகிறார்.

கன்னத்தில் அறைவாங்கி தத் ரூபமாய் நடித்தவர்கள் தமிழ்த்திரையுலகில் இருவர் என்கிறார் விட்டல். ஒருவர் சகஸ்ரநாமம், ‘மண மகள்’ படத்தில் பத்மினியிடம் அறை வாங்குவது, மற்றொன்று  ‘ராஜ பார்வை’ படத்தில் எல் வி பிரசாத்திடம்  அறை வாங்கும் தனுஷ்கோடி என்கிறார். சினிமா பற்றிய விட்டலின் தெரிவு இயல்பாய்  மிக ஆழமானது.

’எழுத்தில் சித்து மா. அரங்கநாதன்’ என்னும் கட்டுரையில் விட்டலும் மா. அரங்கநாதனும் திருப்போரூர் பேருந்தில் பயணித்த சுவாரசியமான  கதை வருகிறது. அரங்கநாதனிடம்  இருப்பது  ஐந்து ரூபாய், விட்டலிடம் இருப்பது ஒண்ணரை ரூபாய. இருவரும்  திருப்போரூர் பயணம் போய் திரும்பிய கதையை நகைச்சுவையோடு சொல்கிறார் விட்டல்.

தனக்கொரு முன் மாதிரியாக எவரையும்  சொல்லமுடியாத ஒப்பற்ற கதாசிரியர் மா. அரங்கநாதன். அவர் பெயரில் ஒரு அறக்கட்டளைத்தொடங்கி இலக்கிய ஆளுமைகளுக்கு பரிசளிப்பதை மகிழ்ச்சியோடு குறிப்பிட்டுப் பாராட்டுகிறார் விட்டல்.

புதுமைகளை  விரும்பும் சாவி  ,  மனிதத்தன்மை மிக்க கோமல் சுவாமிநாதன், நட்பு போற்றும் பாவை சந்திரன்  ஆகியோர் பற்றிய கட்டுரைகளை இப்படைப்பில் காணலாம். இந்த  நூலில் இன்னும்   திருவாளர்கள் சா. கந்தசாமி,பாவண்ணன், கலைஞன் மாசிலாமணி, நர்மதா இராமலிங்கம், தீபம் திருமலை என்னும் பல ஆளுமைகளைச்சிறப்பித்து எழுதுகிறார் விட்டல்.

பாவண்ணன் பற்றிய கட்டுரையில், வெங்கட்சாமினாதன் குறிப்பிட்ட செய்தியினைப்பதிவு செய்கிறார் விட்டல்.

‘பாவண்ணன் ரொம்ப நல்லவனா தெரியறான்யா,அவ்வளவு நல்லவனாவும் இருக்கக்கூடாதய்யா’

‘’ இயல்பை மாத்திக்க முடியாது அண்ணா’ விட்டலின் பதில் இது.

நான் ஒரு சமயம் கவிஞர் பழமலயிடம் பேசிக்கொண்டிருந்தேன். பாவண்ணனின் வளவனூரில்தான். ஏதோ ஒரு இலக்கிய  நிகழ்ச்சிக்குப்போயிருந்தோம்.’ பாவண்ணன் ஈர வன்னியன், வீர வன்னியன் இல்லே’ என்று குறிப்பிட்டார் பழமலய்.  அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய் தந்நோய்போல் போற்றாக்கடைக்கு இயயைந்தவராய் எழுத்தாளர் பாவண்ணனைச்சொல்லலாம். இதுவே வெ. சா வின் பாவண்ணன்  பற்றிய வரையறையிலும் இருப்பதை நாம்  காணலாம்.

’காலவெளியில் வண்ண முகங்கள்’ என்னும் கட்டுரைத்தொகுப்பை லாவண்யா சுந்தரராஜன் கொண்டு வந்துள்ளார். அதனில் பாவண்ணன் எம் கோபாலகிருஷ்ணன்,லாவண்யா சுந்தரராஜன்,குமாரநந்தன், மு. குலசேகரன்,சிவபிரசாத், சாகிப் கிரான்,ரமேஷ் கல்யாண்,திருநாவுக்கரசு, திருஞானசம்பந்தம் ஆகியோர் விட்டல்ராவின் பன்முக ஆளுமை பற்றி போற்றிப்  போற்றி எழுதியிருக்கிறார்கள்.

எளிய மனிதர்களின் ஆன்மாவைத்தேடிய பெரிய எழுத்தாளர் விட்டல். உலக சினிமா பற்றிய ஞானம் பெற்றவர், நடமாடும் ஒரு தகவல் களஞ்சியம், மொழியை மிக நுட்பமாகக் கையாளுபவர், சளைக்காத கலைப்பயணி, நாட்டுப்புற மனிதர்களின் சம்பாஷணையில் ஒளிந்திருக்கும் அற்புதத்தை தரிசிக்கத்தெரிந்தவர்,ஆங்கிலோ இந்தியக்குடும்பங்களின் வாழ்வியலை நுட்பமாக அறிந்தவர், காம்ரேட்கள் வாழ்க்கையில் நிகழ்ந்துவிட்ட சோகத்தைப் பதிவு செய்தவர், மனித உறவுகளின் நுட்ப இழைகளை அவதானிக்கத்தெரிந்தவர், தமிழக சமூக வரலாற்றை உள்வாங்கிய படைப்பாளி, ஏதுமிலிகளின்வழக்கறிஞராய் விட்டலை வாசகர்கள் தரிசிக்க முடிகிறது.

 

 

 

 

 

 

 

Thursday, August 28, 2025

நாய்வால் - முன்னுரை

 

வணக்கம்

‘நாய்வால்’ . இது என்னுடைய பன்னிரெண்டாவது  சிறுகதைத்தொகுப்பு.

.ஒரு எழுத்தாளன் சொல்லத் தேர்ந்த ஒரு விஷயத்தை வாசகர்க்கு  நச்சென்று சொல்லிவிட ஏற்ற வடிவம் சிறுகதையே.. ஒரு சிறுகதையை எழுதி முடித்த பிறகு அந்த எழுத்தாளன் அடையும் நிறைவே அதன் வெற்றி.  வாசகர்களால் அல்லது இலக்கிய அமைப்புகளால்  அப்படைப்பு  எப்படிப் பார்க்கப்படுகிறது என்பது அந்த எழுத்தாளனுக்குக் கிடைக்கும் அரிய உற்சாகம். அன்றாட வாழ்க்கையில்  ஒரு எழுத்தாளன் எதிர்கொள்ளும் சாதாரண விஷயமே சிறுகதைக்குக் கருவாய் அமைந்து சிறக்கிறது. சிறுகதையைப் படிக்கின்ற போது வாசகன் எந்தக் குறுக்கீடையும் சந்திக்கக்கூடாது  படைப்பின்  ஆற்றொழுக்கான நடை வாசகனைக் கைப்பிடித்து ஒய்யாரமாய் அழைத்துச் செல்ல செல்லவேண்டும்  என்பதனை  நான் எதிர்பார்க்கிறேன். என் சிறுகதைகள்  அறிந்துகொள்ள வேண்டிய சிறு செய்தி ஒன்றையேனும்  வாசகனுக்குக் கடத்தவேண்டும்,.

 மக்கள் சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட மக்களோடும்  விபரம்  போதாச்  சகோதரர்களோடும்  உழன்று துணை நிற்பதையே வாய்த்திட்ட   நற்பேறாகக் கருதுகிறேன். மனிதனை நெஞ்சுயர்த்தி  நடக்க வைத்த  மார்க்சிய நெறியின் வெளிச்சத்தோடு,  நமது  இந்திய மண்ணின் இயல்பான மனிதநேயம், தமிழ் இலக்கியத்தின் ஈடில்லா அற வளம் இவை  எனது படைப்பிற்கு  எப்போதும் ஆதாரமாகிறது.

எனக்கு நேர்ந்த நிகழ்வுகள் என்னோடு உறவில்  நட்பில் இருப்பவர்கள் பகிர்ந்துகொண்ட நிகழ்வுகள் பெரும்பாலும் என் படைப்பில்  சிறுகதையாய்  உருக்கொள்ளும். அவைகளோடு எனது கற்பனையையும் கட்டாயம்  சேர்ந்து மெருகூட்டும். அப்படித்தான் எனது எல்லாச் சிறுகதைப்படைப்புக்களுமே.

எனது சிறுகதைகளை வெளியிட்டு எனக்குப் பெருமை சேர்த்த இலக்கிய இதழ்கள் சொல்வனம் தினமணிக்கதிர் சங்கு  நவீன விருட்சம்  குவிகம் தமிழ்ப்பல்லவி திண்ணை சிறகு இலக்கியச்சிறகு பேசும் புதிய சக்தி ஆகியவற்றிர்க்கு நான் மிகுந்த நன்றியுடையேன்.

இச்சிறுகதைத்தொகுப்பைச் சிறப்பாய் வெளியிட்டு உதவியப் பெருமனதுக்காரர் நாற்கரம் பதிப்பகம்  நல்லு. ஆர். லிங்கம் அவர்கட்கு எனது நன்றிகள் பல.

 எனது  உடன்பிறவா சகோதரர்கள்  V. ரகுநாதன்,  K.R  மாத்ருபூதம்   ஆகியோரின் அன்பிற்கு  இப்படைப்பு சமர்ப்பணம்.

                                                                                                                                                   மிகவும் அன்புடன்

                                                                                                                                                      எஸ்ஸார்சி