Sunday, December 31, 2023

கவிதை- தலைப்பு

 இணைய கால கவியரங்கம் 74

31/12/23


தலைப்பு


புத்தகத்திற்குப் பெயர்

வைப்பதில்

எத்தனையோ இருக்கிறது

ஒரு சொல் சரி

இரு சொல் தேவலாம்

மூன்று சொல் கூடாது

அபசுரம் வரக்கூடாது

கர்நாடகமாய்த் தோன்றக்கூடாது

புத்தகம் சொல்வது தலைப்பில் புலப்பட வேண்டும்

மை எக்ஸ்பிரிமென்ட வித் ட்ரூத்

தேசபிதா காந்தி தந்தார்

பின்தொடரும் நிழலின் குரல் 

ஜெயமோகனின்

எழுத்துக்கொடை

என்ன சொல்கிறோம்

என்பதே பிரதானம்

தலைப்பில் ஒன்றுமில்லைதான்.


Thursday, December 28, 2023

கவிதை- நேரு கெட்டிக்காரர்

 இணைய கால கவியரங்கம் 70


28/12/23


நேரு கெட்டிக்காரர்


பாரதபூமியில்

மொழிவாரி மாநிலம்

பிரித்ததால்தான்

திராவிடம் சிதைந்து போனது

பொதுவுடமைக் கட்சி தெற்கில் சுருங்கிச் சிறுத்தது

இந்தி பேசும் மாநிலங்கள்

தாமே சட்டாம்பிள்ளையெனத்

துருத்தித் திரிகின்றன

கன்னடக்காரர்கள்

மொழிவெறிபிடித்து

ஆட்டம் போடுகிறார்கள்

மொழிவாரி மாநிலம்தான்

சரியென்றால் ஏன்

தெலுங்கு பேசுவோர்

மாநிலத்தை இரண்டாய்ப் பிரித்தார்கள்

புதுச்சேரியில் தமிழ்தானே

ஏன் நம்மோடு ஒட்டமுடியாமல் நிற்கிறது

கவிதையில் விடை தாருங்களேன்

யான் ஐயம் தெளிவேன்.


Wednesday, December 27, 2023

கவிதை- ஜல்லிக்கட்டு

 இணைய கால கவியரங்கம் 69


27/12/23



ஜல்லிக்கட்டு


தமிழ்மண்ணில் ஜல்லிக்கட்டு

பொங்கல் முடிந்து வரலாம்

மய்ய  அரசும் நீதிமன்றமும்

பச்சைக் கொடி காட்டி ஆயிற்று

ஜல்லிக்கட்டுச் செல்கிறது 

அதன் ராஜபாட்டையில்

ஜல்லிக்கட்டில் மாடுமுட்டி

காயமடைந்தோரை

இறந்தோரை

 யாரும்

பேசுவதில்லை 

அவர்கள் மறக்கப்படுகின்றனர்

மாடுகள் விடும் கண்ணீர்

பற்றி யாரும் வாய்திறப்பதில்லை

காளையை அடக்கிவிட்ட

உனக்குப் பரிசு

காளை உன்னை வென்றாலும் பரிசு உனக்குத்தான்

காளைக்கு   எதுவும் இல்லை

ரொம்ப நாளாய்  எனக்கு ஐயம்

ஜல்லிகட்டுக்கு

 ஏன்

ஆண்கள் மட்டும்தானா?


Tuesday, December 26, 2023

கவிதை- ஜனநாயகம்

 இணையக் கால கவியரங்கம்

26/12/23


ஜனநாயகம்


டிசம்பர் 13, ஈராயிரத்து இருபத்து மூன்று

டெல்லி பாராளுமன்றக்

கட்டிடத்துக்குள் பார்வையாளர்கள் யாம்

பொய் சொல்லி

நுழைந்த இரு அடாவடிகள்

கலர் புகை எழுப்பி

அதிர வைத்திருக்கிறார்கள்

பாரதமாதா கி ஜே கோஷம் வேறு

நான்கடுக்குப் பாதுகாப்பு

கேவலமானது

 தேசத்திற்கு தலைகுனிவு

எம்பி அதுவும்

 ஆளும்

கட்சிக்காரர் சிபாரிசாம்

ஒன்று வெளிச்சமானது

அத்தனைக்கு முக்கியமான

இடத்தில் செக்யூரிட்டி பணி

எத்தனைக்குத் தாழ்வாய்

ஏனிப்படி கேள்வி வைத்த

எதிர்கட்சி எம்பிக்கள் 

மொத்தமாய்

சஸ்பென்ஷன்

என்ன ஜனநாயகமடா இது

மக்களால் மக்களே மக்களுக்காகவா?

சாட்சியாய் செங்கோல் வேறு.


Monday, December 25, 2023

கவிதை- கிறிஸ்துமஸ்

 இணைய கால கவியரங்கம் 67

25/12/23



கிறிஸ்துமஸ்


ஏழைகள் பால்

இரக்கம் காட்டு

மன்னிக்கப்பயில்

அன்பினைக் கை கொள்

தன்னைப்போல் பிறரைநினை

ஒரு கன்னத்தில் அறை வாங்கிய நீ

அவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு

அடுத்தவனுக்குக் கொடுக்காமல் நீ

எதையும் எடுத்துக் கொள்ளாதே

உபதேசித்த கருணையின்

உருவே யேசுவே

நீ பிறந்த நாளில்

வெட்கப்படுகிறோம்

அப்பாவி மக்களைக்கொல்ல

ஆயுதமே விற்றுக்காசு

பார்க்கிறவர்கள் நின்

சந்நிதியில். படோடோபமாய்க் குழுமி

நிற்கிறார்கள்

நீ பிறந்து ஈராயிரம்

ஆண்டாகியும்

இப்பூலகம் நேர்படவில்லை

நினக்கு வானுயர்

கோபுரங்கள் ஆயிரம் எழுப்புவோம்

அத்தோடு நிறுத்திக்கொள்வோம்

அதற்கு மட்டுமே நீ.


Sunday, December 24, 2023

கவிதை- யார் கவிஞன்?

 இணையக் கால கவியரங்கம் 66


24/12/23




யார் கவிஞன்?



இறையை உணர்ந்தோன்

இயற்கையைப் போற்றுவோன்

உயிர்களை நேசிப்போன்

உண்மையே பேசுவோன்

உழைப்பை உயர்த்துவோன்

எளிமை ஏற்போன்

சண்டை சச்சரவு வெறுப்போன்

வன்முறைக்கு எதிரி

வருவது உரைப்போன்

பிறர் நலம் விரும்பி

நல்லதே நாடுவோன்

பேராசை அற்றோன்

பெருமை விரும்பி

குழந்தையை மதிப்போன்

பெண்மை போற்றுவோன்

மனசாட்சி பேணுவோன்

மக்களோடு நிற்போன்

யாரென்று கேட்பீர்

கவிஞன் அவனே.


Friday, December 22, 2023

கவிதை-ப்ராப்தம்

 இணையக் கால கவியரங்கம் 64


22/12/23



ப்ராப்தம்


அது ஒரு கனாக்காலம்

இளமை ஊஞ்சல் ஆடிற்று  அவன் என்னவெல்லாமோ

நினைத்துக் கொண்டிருந்தான்

என்ன என்னவோ ஆனது

சாண ஏற முழம்

சறுக்கிற்று

போட்ட கணக்குகளுக்கு

விடைகளோ தப்புத்தப்பாய்

யாரும் உதவிக்கு வரவில்லையே

எதிர்பார்ப்புகள் ஏமாற்றி

நகைத்தன

மனச்சோர்வு ஜீரணிக்கும்

ஞானமாவது கிட்டியிருக்கலாம்

சற்றேனும் ஆறுதலாயிருக்கும்.

எதற்கும்  ஒரு ப்ராப்தம்

வேண்டுமென்கிறார்கள்

விஷயம் தெரிந்தவர்கள்

 காலமோ எதனையும்

சட்டை செய்யாமல்

அதன் போக்கில் அது.


Thursday, December 21, 2023

கவிதை- மொழிபெயர்ப்பு

 இணையக் கால கவியரங்கம் 63


21/12/23


எஸ்ஸார்சி


மொழிபெயர்ப்பு



இலக்கியப் படைப்பொன்றை

எழுதிவிடலாம்

மொழிபெயர்ப்போ

கடினமானது 

ஒரு படைப்பாளி

மூலமொழியில் வாசகர்க்குத் தந்ததை

வேறு ஒரு மொழியில்

மொழிபெயர்ப்பாளன்

கடத்தித்தர வேண்டும்

மூலமொழியின் பண்பாடும் அது புழங்கு

நிலவியலும்

அப்படைப்பாளியின்

ஆன்மாவும் வசமாகவேண்டும் முதலில்

தன் கருத்தை நுழைக்காது

மொழிபெயர்ப்பு விரதம்

காக்க வேண்டும்

மொழிபெயர்ப்புத்தான்

இதுவென வாசகன்

உணரவே கூடாது

படைப்பு நெஞ்சில்

நிறையவேண்டும்

வாசகனை

மெய்யான வாசகன்

வாழ்த்துவான் மொழிபெயர்ப்பாளனை.

கா ஸ்ரீ ஸ்ரீ மராத்திய

காண்டேகரை தமிழ் உலகில் நிலைக்கச்செய்தார்

மொழிபெயர்ப்பின்

உச்சம் அது.


Tuesday, December 19, 2023

கவிதை -செயற்கைஅறிவு

 இணையக்கால கவியரங்கம்

4/11/23
வாசித்த கவிதை

செயற்கை அறிவு
எங்கெங்கும்
செயலாற்றத் தொடங்கிவிட்டதாம்
கற்ற அனைத்து ஊறும் அறிவு
மனிதர்க்குத் தெரிந்த குறள்
இயந்திரங்கள் செயற்கை
அறிவோடு
செயல்கள் பல ஆற்றக்
காத்துக்கொண்டிருக்கின்றன
கவிதை எழுதுமாம்
மொழிபெயர்ப்பு செய்யுமாம்
புனைகதை படைக்குமாம்
பிரச்சனை என்னால்
விடை கொடுக்குமாம்
கணிப்பொறியில்
ரோபோ ஒன்று பிணையக் கிடைக்குமாம் செயற்கை அறிவு
மக்களிடை புரட்சி செய்யத்தான்
கைகட்டி நிற்கிறது அது
சிந்திக்க ஒரு இயந்திரம்
வந்த பின்
மனிதன் உச்சமாய் செய்ய
எதுவுமில்லை
மனிதன் சிந்திப்பதை நிறுத்தினால்
செத்துப்போவானே.

கவிதை- எளிதல்ல இல்வாழ்க்கை

இணையக் கால கவியரங்கம் 61


19/12/2023


 


எளிதல்ல இல்வாழ்க்கை


இப்போதெல்லாம்

மணமுறிவு சர்வ சாதாரணமாய்.

ஆண்களும் பெண்களும்

கூட்டம் கூட்டமாய்

நீதிமன்றங்களைப் பாருங்கள்

மனமுடைந்து போவீர்கள்.

ஏதுமறியா குழந்தைகள் தாம் 

பலிகடா ஆகின்றனர் பாவம்.

திருமணத்திற்கு முன்பாக

ஆணுக்கும் பெண்ணுக்கும்

குடும்பம் என்னும் 

ஒரு வகுப்பு கட்டாயம் வேண்டும்.

திருமணம் என்ன

 என்பதே

தெரியாமல் மணம் செய்து

முட்டிக்கொள்கின்றனர்

நீதி மன்றத்தில்.

யாரேனும் ஒருவர்

ஈகோ இல்லாமல் இருந்தாலொழிய இல்லற

வாழ்க்கையில்

 வெற்றி

சாத்தியமே இல்லை.

கல்யாணத்தில் சப்தபதி

என்னும் ஏழடி எடுத்து வைக்கும்

வைதீகச்சடங்கின் மந்திரத்தை

செந்தமிழில் சொன்னால்

எல்லோருக்கும் விஷயம் விளங்கலாம்

மனதில் அச்சம்

சற்றேனும் அரும்பலாம்.

 

Saturday, December 16, 2023

ஒளிவண்ணனின் சிறுகதைப்பாணி

 

 

 

 

ஒளிவண்ணனின் சிறுகதைப்பாணி.                                           

 

நேற்று 15/12/23 மாலை  6.30 க்கு  அழகிய சிங்கர்  நடத்தும் இணையவழி கதைஞர் கூட்டம் சிறப்பாக  நடந்தேறியது. அதனில்a ஐந்து இலக்கிய நண்பர்கள் பேசினார்கள். கோ. ஒளிவண்ணன் என்னும் கதைஞரின் சிறுகதைப்படைப்புக்கள் பற்றிப் பேசினோம்.அவரே தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். அவரின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். உற்சாகமாகப் படைப்புக்களை அளிப்பதில் அவருக்குள்ள ஆர்வம் வெளிப்பட்டது. இறுதியில் ஏற்புரை போல்  விமர்சகர்கள் பேசிய கருத்துக்களுக்கு பதில் அளித்தார்.  அன்னாரின் ஏற்புரை விரிவாக  அழகாக அமைந்தது.

அபர்ணா என்னும் சிறுகதை பற்றி என்னைப் பேசச்சொல்லியிருந்தார் அழகிய சிங்கர்.  இது வித்தியாசமான சிறுகதை. ஒரு பெண்ணும் ஒரு ஆணும் ஒன்றாக வாழ்தல்.  இதனை ஆங்கிலத்தில்- living together-  என்று பெயரிட்டு அழைப்பார்கள். அபர்ணா என்னும் பெண் ராய் என்னும் ஆணோடு பத்தாண்டுகளாக ஒன்றாக வாழ்கிறார்.

அதே அடுக்ககத்தில் கதை சொல்லியும் தனியாகவே வாழ்கிறார். கதை சொல்லி ஒரு கணிதப்பேராசிரியர். அவரும் ஒண்டிக்கட்டை. அபர்ணா ஒரு நாள் அதிகாலை நான்கு மணிக்கு  கதை சொல்லியின் வீட்டுக்கதவைத்தட்டுகிறார். கதவு திறக்கப்படுகிறது. டிரவுசரும்டீ ஷர்ட்டும் அணிந்த அபர்ணா தன்னுடைய ‘பாவா’ வுக்கு உடல்நிலை சரியில்லை உடன் வீட்டுக்கு வாருங்கள், அவரைப்  பாருங்கள் என்று கெஞ்சுகிறாள். கதைசொல்லி  அபர்ணா வீட்டுக்குப்போகிறான். அதுவும்  அவள்  வீட்டுக்கு இப்போதுதான் முதல் முறையாகப்போகிறான்.

அபர்ணாவின் கணவர் ராய்.  அவர் படுக்கையில் மல்லாந்து கிடக்கிறார். கதை சொல்லி தயக்கத்தோடு தொட்டுப்பார்க்கிறார். உடல் ஜில்லென்று இருக்கிறது. ஆம்புலன்சுக்குப்போன் செய்யப்படுகிறது. ஆம்புலன்சு வருகைக்காக  செக்கூரிடியிடம் கதவைத் திறந்துவைக்கக் கதை சொல்லி கேட்டுக்கொள்கிறார். அவன் இந்தியிலே பேசுகிறான். எத்தனை ஆண்டுகள்  இங்கு வேலையில்  இருந்தாலும்  நான்கு வார்த்தை தமிழ் கற்றுக்கொள்ளாத இந்திக்காரனை  நொந்து  கொள்கிறார்  கதை சொல்லி.

ஆம்புலன்ஸ் வருகிறது. அதில் வந்தவர்கள் ராயைப்பார்த்துவிட்டு அவர் இறந்து வெகு நேரம் ஆயிற்று என்று சொல்லிப்போகிறார்கள். செயற்கை மூச்சு அளிக்கும் முயற்சி தோற்றுப்போகிறது. ராய் இறந்து விட்டார். ராயின் ஒரே சகோதரி கொல்கத்தாவில் இருக்கிறாள். அவள் வந்து சவ அடக்கம் முடிகிறது.

ராயின் சகோதரி ஒரு லாட்ஜில் தங்கியுள்ளார். அபர்ணாவிடம்  தனது சகோதரனின் வீட்டைக்காலி செய்யச்சொல்லி கட்டளையிடுகிறாள். ஒரு வாரம் அவகாசம் தருகிறாள். அபர்ணா  கணிதைப் பேராசியரை அதாவது கதை சொல்லியை அணுகித் தனக்கு உதவுமாறு வேண்டுகிறாள். அபர்ணாவுக்கு உற்றார் உறவினர் யாரும் இல்லை.

கதை சொல்லி மனம் இறங்கி, அடுக்ககம் வாழ்வோர் சங்கத்தைக்கூட்டி அதனில் ஒரு முடிவு எடுத்து அபர்ணாவுக்கு உதவி செய்வது என்று நினைக்கிறார்.  ராயின் சகோதரியிடம் பேசி  அபர்ணாவுக்கு  உதவுமாறு  கேட்டுக்கொ:ள்வது என்று முடிவாகிறது.

சங்க செயலாளர் ரிங்கு. அவர் ஒரு வக்கீல். குடியிருப்போர்  சங்கம் கூட்டப்படுகிறது. ஏது ஏதோ பேசுகிறார்கள். கதை சொல்லி அபர்ணாவுக்கு உதவுவது    பற்றி கூட்டத்தில்  பேசுவார்கள் என ஆவலோடு காத்திருக்கிறான். எதுவும் நடக்கவில்லை. செயலாளர் ரிங்கு  ’அதற்கென்ன பார்க்கலாம்’ என்று அலட்சியமாகச் சொல்லி சென்று விடுகிறார்.

குழம்பிப்போன கதை சொல்லி ரிங்கு இல்லம் சென்று அவரிடம் அபர்ணாவுக்கு உதவவேண்டும் என்கிறான். அதற்கென்ன  என்று மீண்டும்  ஆரம்பித்த ரிங்கு’   ராய் ஒரு மாதம் முன்பே அவரிடம் வந்து யோசனை கேட்டார். தனக்கு உடல் நிலை மோசம். ஆகத்  தான் வாழும்  வீட்டை தன்னோடு இருக்கும் அபர்ணாவுக்குத் தந்து விடுவதாக உயில் எழுதி விடுவதாய்ச்சொல்கிறார்.

ரிங்கு அவரிடம்  அபர்ணாவை மணந்து கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டாராம்.  ராய் தான் இறந்துவிட்டால் அபர்ணா வாழ்க்கை இன்னும் மோசமாகிவிடும் ஆக மணக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டாராம்.  ஆக உயில் மட்டுமே எழுதப்பட்டது. ராயின் வீடும் இன்னும் சில வைப்பு நிதிக்கணக்கும் அபர்ணாவுக்கு ராயின் இறப்புக்குப்பின் கிடைக்கும்.   ராயும் இறந்து விட்டார்.  இனி  உயிலை கோர்ட் மூலம் ப்ரொபேட்  செய்து  அமுலுக்குக்கொண்டு வரவேண்டியதுதான்’ என்கிறார்.

 இவ்வளவும்   செயலாளர் ரிங்கு  கதை சொல்லியிடம் சொன்ன விஷயங்கள்.

கதை சொல்லி நிம்மதியாகிறார். இனி அபர்ணாவுக்குப்பிரச்சனை இல்லை.   இனி அந்த வீட்டைக்  காலி செய்யவும் வேண்டாம்.

ஓளி வண்ணன் இவ்விடத்தில் ஒரு விஷயம் சொல்கிறார். அது  கணித ஆசிரியர் கதை சொல்லி சொல்வதாகவே வருகிறது. ‘’ எவ்வளவோ கணக்குகளை எளிதாகப்புரிந்துகொண்ட எனக்கு இந்தப்பெண்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை’

பெண்கள் எளிதானவர்களாய்த்தோற்றமளிக்கலாம். ஆனால் புரிந்து கொள்ளச் சற்றுக் கடினமானவர்கள் என்பதை வாசனும் அங்கீகரிக்கிறான்.

ஒளிவண்ணன் தற்கால நடப்புக்கு ச்சான்றாய் இக்கதையைத்தந்துள்ளார்.  இப்படித்தான் இன்று எங்கும் நடக்கிறது என்று தனது ஏற்புரையிலும் வழிமொழிந்தார்.

 அறம் வலியுறுத்தும் என்போன்றோர் இலக்கிய உலகில் சிறுபான்மையரே.

.

 

 

 

 

கவிதை - கலிகாலம்

இணையக்கால கவியரங்கம் 58

16/12/23


எஸ்ஸார்சி


கலிகாலம்


கார்ப்பரேட் என்ற ஒன்றைச்

சிருட்டித்து

லாபம் நஷ்டம்

நல்லது கெட்டது

எல்லாவற்றிர்க்கும்

பொறுப்பாக்கி முதலாளிகள் சவுகரியமாய்

ஒதுங்கி நிற்கிறார்கள்

திருமணம் என்கிற

புனித உறவைப் புறந்தள்ளி  நோ கிட்ஸ் நோ கிச்சன் குரூப்-லைஃப் காண்ட்ராக்ட்- லிவிங்டுகெதர் என்று எது எதுவோ கொண்டுவந்து விட்டார்கள்

பெற்ற தாய் எனும் கடவுள்

ஸ்தானத்தை நீர்க்க வைத்துக் கம்பீரமாய் வாடகைத்தாய் வழக்கத்திற்கு வந்து

விட்டது

முதியோர் இல்லத்தைக்

கேலி பேசிய காலம்போய்

அதுவே நல்ல தீர்வு என்னும் சகஜநிலை

வந்தாயிற்று

ஆண் விந்துவையும் பெண்முட்டையையும்

மருத்துவ வங்கியில்

சேமிக்கிறார்கள் எப்போதோ இறந்துபோன

தாயுக்கும் தந்தைக்கும்

வாடகைத்தாய் வழி வாரிசு

உண்டென்பது உறுதியாயிற்று

மரபுகள் நீர்த்துப்போகும்

கலிகாலம் கண்முன்னே

புலிவாலைப்பிடித்த நாயராய் நாம்.


Friday, December 15, 2023

கவிதை- குடிப்பழக்கம்

 இணையக் கால கவியரங்கம்


15/12/23


எஸ்ஸார்சி


குடிப்பழக்கம்



மக்கள் குடித்து அழிக்கிறார்கள்

மக்கள் குடித்து

அழிகிறார்கள்

கள்ளச்சாராயம் காய்ச்சிக்

குடிப்பதால் சாகிறார்கள்

வாய்மையே வெல்லும்

சொல்லும் அரசாங்கம்

சாராயம் விற்கிறது

கொள்ளை லாபம் பார்ப்பவர்கள்

தொடர்ந்து கல்லா கட்டுகிறார்கள்

தேசபிதா மகாத்மா

குடிப்பழக்கம் இல்லாத தேசத்தை உருவாக்க

ஆசைப்பட்டார் பாவம்

பரிதாபமாய்த் தோற்றுப்போனார்

குடிக்காத பெண்களை

மாநகரில் விரல்விட்டு

எண்ணிவிடலாம்

ஐடி தொழில் வந்தபிறகு

குடிக்கத்தெரியாதவன்

சுத்தப் பட்டிக்காடு

நஞ்சுண்பார் கள்ளுண்பவர் சொன்ன வள்ளுவருக்குக்

குமரிமுனையில்

வானுயர சிலை வைத்தாயிற்று

பிறகென்ன விடுங்கள்


Thursday, December 14, 2023

கவிதை- லேசு பட்டதில்லை மனசு

 இணையக்கால கவியரங்கம்

எண் 56.    14/12/23


எஸ்ஸார்சி


லேசு  பட்டதில்லை மனசு


கோபம்தான் மனிதப்பிரச்சனைக்கு

மூலகாரணம்

கோபம் வாராமல்

தடுக்க முடிகிறதா

என்றால் அதுதான் இல்லை

தான் நினைப்பதுவும்

செய்வதுவும் மட்டுமே சரி

அதுபோல் அடுத்தவனுக்கும்

நினைக்க உரிமை உண்டெனபதை

ஏற்க மறுக்கிறது பாழும் மனம்

மனம் விசாலமாகத்தான்

கற்றதும் பெற்றதும்

கை கொடுக்க வேண்டும்

மாறாக தான் என்கிற

கர்வம் மட்டுமே

கெட்டிப்பட்டால். துன்பமே

எஞ்சகிறது

துன்பம் சுற்றி வளைக்கின்ற போது

தானும் இதற்குக் காரணம்

என்பதை

மனம் லேசில்

ஏற்பதில்லை.


Wednesday, December 13, 2023

கவிதை-பாவம் சென்னை

 இணையக் கால கவியரங்கம் 55


13/12/23


எஸ்ஸார்சி




பாவம் சென்னை



மாற்றமே இல்லை

ஏமாற்றமே விஞ்சுகிறது

சென்னை மீது வைத்த

மதிப்பெல்லாம் பூச்சியமாகிறது

பெருமழையைத்தாங்கி

ஊரைக்காப்பாற்ற முடியாத

திட்டங்கள் சாமான்யனை

கண்ணீர் சிந்த வைக்கிறது

அது இது என்று பட்டியலிட்டுச் செய்தவை

எல்லாமே

எதற்கும் உதவவில்லை

பெருமழை வந்தபோது.

மார்கழி இசையும்

தை புத்தகக்காட்சியும்

சோகத்தோடுதான் இவ்வாண்டு.

வேறு என்ன செய்வார்கள்

உட்கார்ந்து சிந்திக்காதவர்கள்

ஓடிப்போகிறார்கள்

பிரச்சினையை

வழக்கம் போல்

மக்களிடமே விட்டு விட்டு.









பாவம் சென்னை


Tuesday, December 12, 2023

கவிதை -மொட்டைத்தலையும் முழங்காலும்

 இணையக்கால கவியரங்கம்

12/12/23


எண் 54


எஸ்ஸார்சி


மொட்டைத் தலையும்

முழங்காலும்


நீர்வழிப்படூஉம் படைத்த

தேவிபாரதிக்கு

விருதென்றார்கள்

வாழ்த்துக்கள்  குவித்தார்கள்

அறிவிப்பு வரவில்லை என்றார்கள்

யாரது முந்திரிக்கொட்டை

சேதி எப்படி வெளிவந்தது

என்றார்கள்

இந்தக் களேபரத்துக்கும்

அந்தப்படைப்பாளிக்கும்

என்ன பொறுப்பு

அவரது தேர்வு தனி

குப்பைச்சலசலப்பு

ஒருவரது தேர்வை

எப்படிப்பாதிக்குமோ

அவ்விருதுக்குழுவும்

அதனியக்கமும்

அதுபுழங்கு வெளியும்

எப்போதுமே புரியாப்புதிர்தான்

அதில் யாருக்கும் அய்யமே இல்லை.


Monday, December 11, 2023

கவிதை-அவர்கள் நியாயம்

 இணையக்காலகவியரங்கம்.     48

6/12/23  



எஸ்ஸார்சி


அவர்கள் நியாயம்





கைரேகை வைத்துத்தான்

பொருள் பெறவேண்டும்

அந்த வக்கணையில்

ஒன்றும் குறைவில்லை.

வீட்டில் ரெண்டுபேர்

இருவருக்குமே நீரிழிவு

அவர்களுக்கு ஏன் சீனிவிநியோகம்

ரேஷன்கடை அரிசிவாங்கி

மாட்டுக்கும் பன்றிக்கும்

போடுகிறார்கள்

எல்லோரும் அப்படியில்லை

நிச்சயம் பலர் செய்கிறார்கள்.

அரசுக்குத் தெரியாதா என்ன

ஆகத்தகுதியுடைய இல்லாதவனுக்கு

மட்டுமே அரிசி இனாம் 

அரசாங்கம் என்று சொல்வதுவோ?

வோட்டு எல்லோருக்கும்

இருக்கிறதே.

ரேஷன்கடை பாமாயிலை

சாமி விளக்குக்குப்பயன்

படுத்துகிறார்கள்

யாருக்குத் தேவையோ

அவர்கட்கு அதுபோய்ச்சேர்வது இல்லை.

ஒருவரின் வருமானம்தெரிந்து

அவருக்கு இலவசமாய்

அரிசி தருகிறதா அரசாங்கம்

இல்லவே இல்லை

மக்கள் வாங்காத அரிசி

மொத்தமாய் எங்கோ போகிறது

எத்தனைக்காலமாய்

இப்படிக்கொள்ளை.

அரசு தரும் ஆயிரம் ரூபாய்

உரிமைத்தொகை பெறுவோரில்

பாதிபேருக்குமேல்

பித்தலாட்டம்.

மகாத்மாகாந்தி நூறுநாள்

வேலைத்திட்டத்துக்கு

இன்னொரு வடிவம் இது.

நாம் எவ்வளவோ கொள்ளை அடிக்கிறோம் இதெல்லாம்

ஜுஜுபி இருக்கட்டும்

என்பதுவே அவர்களின்

நியாயமாய்.


கவிதை-எது கவிதை?

 

எது கவிதை?                 5/12/23



கலைகளில்  கவிதை தனித்தது

கஷ்டம் வரும்போதுதான்

கவிதை வரும்

கிரவுஞ்சப்பறவையின்

ஆண் துணை அம்பு எய்தப்பட்டு

அழிந்ததைக்கண்டுதான்

மலர்ந்தது வான்மீகி ராமாயணம்

பூவுலகில் அதை மீறிய காவியம்

இன்றளவும் இல்லைதான்

காவியங்களில் துன்பவியல் பாராட்டப்படுவது

மனிதச்சோகம்தான் கவிதையின் ஊற்றுக்கண்

மெய்யாய் கவிதை எழுதுபவர்கள்

குஷிப்படுத்தவோ கும்மாளமடிக்கவோ எழுதவில்லை

கண்ணீர்ப்பூக்கள் கவிதை வரிகள்

படைப்பாளி அறியாததுவா என்ன?

குந்தியின் சோகம்தான்

வியாசனின் பாரதம்

கஷ்டத்தில் மலர்வதுதானே கவிதை.









































கவிதை -பாரதி அன்றும் என்றும்

 23-12-11 - Leave a Comment

இணையக்கால கவியரங்கம்

53

11/12/23

பாரதிக்கு எதிராகக் கலகக்குரல்
கொடுக்க முடியாத அளவுக்கு
புகழின் எட்டாச்சிகரத்தில்
அவன் எப்போதும் வாழ்கிறான்
தமிழ்த்தாயின் ஆசீர்வாதம்
நிறைவாய் உண்டு பாரதிக்கு.
சிந்தையில் பாரதியோடு
வாழ்ந்தவர் வ உ சி
பாரதியை நாவில் சுமந்தார் வ.ரா.
பாரதியைத்தோளில் சுமந்தவர் ஜீவா
பாரதியின் சொற்கள் அத்தனையும் வழிமொழிந்தார் பாவேந்தர்
இவர்களோடு ஓராயிரம்
உத்தமர்கள் அவனோடு
வாழ்ந்தது அவனுக்கு க்கிட்டிய வரலாற்றுப்பேறு.
இன்றைய சேற்று அரசியலும் சோற்று அரசியலும் அன்றில்லை
அது மாற்றுக் குறையா
அரசியல்
மனசாட்சி உள்ள மறவர்களின்
மாற்று அரசியல்.

Sunday, December 10, 2023

கவிதை சென்னை 2023

 

இணையக் காலகவியரங்கம் 46

சென்னை 2023

4/12/23

என்னவெல்லாமோ செய்தார்கள்
அடையாற்றை ஆழப்படுத்தினார்கள்
கட் அண்ட் கவர் கால்வாய்
அமைத்தார்கள்
ஆற்றின் கரையை
உயர்த்தினார்கள்
புதுப்புது ஷட்டர் அமைத்தார்கள்
சிமெண்ட் சாலை போட்டார்கள்
வண்ணமடித்தார்கள்
இரும்புக் கம்பி வேலி போட்டார்கள்
விளம்பரப்பலகை வைத்தார்கள்
கோடிகோடியாய்ச் செலவு
செய்தார்கள் .
மிக் ஜாம்
புயல் வருகை
போயிற்று
எல்லாம் .
தெருவில் இடுப்புவரைத் தண்ணீர்
வீடுதரைத் தளமெல்லாம்
சாக்கடைத் தண்ணீர்
மின்சாரம் இல்லை
குடிதண்ணீர் இல்லை
போக்குவரத்து
வசதியில்லை மக்கள் தத்தளிக்கிறார்கள்
வீடு கட்டாதே இங்கு
சிஎம்டிஏ சொன்னதுண்டா
இங்கு வீடு வாங்காதே
எந்த வங்கியும் சொன்னதில்லை
யார் சந்தி சிரித்தால்
இவர்களுக்கென்ன?
கொண்ட ஆசைக்கும்
வாங்கும் சம்பளத்திற்கும்
இடையே போராடித்தவிக்கும்
சிறு துரும்பாய் எளிய மனிதனின் வாழ்க்கை
எப்போதும்.

கவிதை- தலைகீழாய் உலகம்

 

 கவிதை  -தலைகீழாய் உலகம்


சென்னையில் இடம் வாங்கி

வீடு கட்டிய லடசணத்திற்கு

இராப்பகலாய்த்தூக்கமில்லை

இரண்டாயிரத்து பதினைந்தை

எங்கே மறப்பது

இப்படியாய் நான் யோசிக்கும்போது

இரண்டாயிரத்து இருபத்து மூன்று வெள்ளம் வந்து

கொன்று போட்டது  சென்னையை

திருச்சிக்கு மாற்றலாம் தமிழ்நாட்டின் தலைநகரை

எம் ஜி ஆர் சொன்னபோது

அவரைக்கேலிபேசியவர்கள் நாம்

இட ஒதுக்கீட்டில் வருமானத்தை முற்போக்காய் எண்ணி

 இணைக்க விரும்பிய நல் மனத்தை

புதுவையில் தோற்கடித்தோம்

எந்தப்பாவமும் யாரையும்  சும்மா விடாது

முடிச்சூர் வீட்டை  நல்ல வெயில் நாளில் விற்றுவிட்டு

அரவம் தெரியாமல் வெளியூர் போய்விடலாம்

யோசனையில் தீவிரமாய் இருக்கிறேன்

ரியல் எஸ்டேட் பணிபுரியும்

இளம்பெண்கள் ஓயாமல் போன் போடுகின்றனர்

பாதி சென்னையும் வெள்ளத்தில் நாறுகின்ற தருணமே

‘சென்னையில் பிளாட் சார்’ 

நீட்டி முழக்கி முடிக்கின்றனர்

அவர்களுக்குச் சம்பளம் தருகின்றானே  ஒருவன்.

-----------------------------------------------------





























































எம் ஜி ஆர்





Saturday, December 9, 2023

கவிதை- அழகியசிங்கர் -70

 இணையக் கால கவியரங்கம்

எண் 49

7/12/23

கதைஞன் கவிஞன்
விருட்சம் வெளியீட்டாளன்
நவீன விருட்சம் இதழாளன்
சொல்புதிது இசைபுதிது
கண்டவன்
என்பா அவன் தந்தது
கவிதை நேசிப்பு
கவிதை வாசிப்பு
கதை அலசல்
அழகியசிங்கரின் தீட்சண்யவெளி
ஞானக்கூத்தனும்
அசோகமித்திரனும்
சாயாவனம் கந்தசாமியும்
உற்றத் தோழமை
எப்போதும் ஏதேனும்
புதிது செய்யத் தப்பாத
தமிழண்ணல்
எதையுமே மறைக்கத்தெரியாத மாசிலி
தேய்ந்த பற்கள் பளிங்கென உள்ளம் திறந்து காட்டும்.
சும்மா இருப்பதறியா பெம்மான்
எழுபதாண்டு கண்ட இளையோன்.
இன்புற்று வாழ்க
இப்புவியில் நூற்றாண்டு.

கவிதை- அயோத்தி

கவிதை   -அயோத்தி   இணையக்கால கவியரங்கம்    9/12/23        

கங்கைப்படகோட்டி குகனைத்
தம்பியாக்கி
பருந்து ஜடாயுவைத்
தந்தையாக்கி
வானரமாம் அனுமனை
எதிரி இராவணன் இளவலைச்
சுற்றமாக்கிய பெரிய பெரியவன்
கரிய செம்மலுக்கு அயோத்தியில்
கோவில் கட்டுகிறார்கள்
கடவுள் ராமர் மீது கொண்ட
பக்தியினால் கட்டப்படுவதா அது
ராமபக்திக்கு மணல் சுமந்த அணிலைத்தான் சாமான்யர்கள்
உதாரணம் காட்டுவார்கள்
அவ்வணிலுக்கு ஈடாய்
யாரேனும் ஒரேயொரு
பெரிய மனிதரைச் சுட்டுங்களேன்
வணங்கி எழலாம்.

Tuesday, December 5, 2023

ஜம்பம்

 

 

 

ஜம்பம்                       

சலூன்கள் மூடிக்கிடக்கின்றன இது கொரானாக் காலம்.இரண்டாம் கிளாஸ் படிக்கும் என் பையனுக்குத் தலை முடி காடாய்  வளர்ந்து   நிற்கிறது. முகமே தலை முடிக்குள் புதைந்து கிடப்பதுவாய் ஒரு தோற்றம். காது  மடல்கள் தேடினால் மட்டும் தெரியலாம். கல்விக்கூடங்கள் மூடிப்பல மாதங்கள், இல்லை, வருடங்கள் சிலவும்  ஓடி விட்டன.

ஆன் லைன் வகுப்புக்கள். ஏனோ தானோஎன்ற  படிக்கு  ஒப்பேற்றும்  சமாச்சாரம் மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தது. ஆசிரியர்கள் கற்றது மறக்காமல் இருக்கக் கடவுள்தான் அருள்பாலிக்க வேண்டும்  .கல்விக்கூடங்கள் நிர்வாகம் செய்வோர்க்குக் கல்லா கட்டுவதில் கொஞ்சம் சிரமம் உண்டு.  பெருந்தொற்றுக்காலத்தில் அது கூடவா இல்லாமல் இருக்கும்.  தெய்வங்கள் எல்லாம்  துணை செய்ய எந்தக்குறையுமில்லாமல் ஜிகு ஜிகு என்று பிய்த்துக்கொண்டு  ஓடுவது   சாராயக்கடை வியாபாரம் மட்டுமே.

யோசித்து யோசித்து ஆன்லைனில்  அமேசான் வழி  ஆர்டர் செய்தேன். ஹேர் கட்டர் ஒன்று பொட்டலத்துக்குள்  சயனித்து வீடு வந்தது.   பத்துபக்கத்திற்கு  ஒரு லிட்ரேசர். அந்த மெஷினை பராமரிக்கும் முறையினை  வீராப்பு  ஆங்கிலத்தில் எழுதி மெஷினுடன்  அனுப்பியிருந்தார்கள்.படித்துப்பார்த்தேன். பாதி புரிந்தது. பாதி புரியாமல்   இருக்க  ஊகம் செய்து  முடித்தேன். காலம் காலமாய்   இப்படித்தான்.

வீட்டு வாசலில் ஒரு மர  ஸ்டூல் எடுத்துப்போட்டு என் பையனை அமர வைத்தேன். கழுத்தில் ஒரு துண்டு போர்த்திவிட்டேன்.  அவன் உடம்பில் முடி படாமல் இருக்க  எனது  முன்னேற்பாடு. ஸ்டூலுக்குக் கீழாகப் பிளாஸ்டிக் பேப்பர் விரித்து வெட்டப்பட்ட முடிகள் சேகரம் செய்ய  உஷாராக ஒரு ஏற்பாடுசெய்தேன்..

ஹேர் கட்டரை சார்ஜில் போட்டு வைத்திருந்தேன். அதனுள்ளாய் கட்டர் பிளேடை நுழைத்தாயிற்று.  ஸ்டாட்டர் பட்டனை ஆன் செய்து பையனின் தலைமுடிக்குள்ளாக ஹேர் கட்டர் மெஷினை நுழைத்துக்கொண்டு போனேன்.ஏதோ  புல் டோசரை கிரிக்கெட் மைதானத்தில் செலுத்துவதாகக் கற்பனை செய்துகொண்டேன். நன்றாகத்தான் எல்லாம் நடப்பதுபோல் தோன்றியது. முன் மண்டையில் கட்டர் மெஷின்  முடியை ஒட்ட வெட்டி விட்டதைச் சட்டென்று கவனித்தேன்.’ போச்சுடா மோசம்’ எப்படியாவது அதனைச்சரி செய்ய இயலுமா என முயற்சித்தேன். என் முயற்சி திருவினை ஆக்கவில்லை. பையன் தலைமுடியைப்பார்க்க எலி கத்தரித்து விட்ட  மாதிரிக்கு இருந்தது. கையில் முகம் பார்க்கும் கண்ணாடி வைத்திருந்த அவன்  தன் தலைமுடியை அதனில் பார்த்துவிட்டான். அவன் கண்கள் குளமாகி அழ ஆரம்பித்துவிட்டான்.

 செய்துவிட்ட பிழையைச் சரி செய்ய, சரி செய்ய, இன்னும்  கேவலமாகத்தான் தலைமுடி காட்சி தந்தது. கட்டர் மெஷினை தூக்கி எரிந்துவிடலாமா என்றால் மனம் வரவில்லை.  ஈகோவும் ஆல்டர் ஈகோவும் மன்டைக்குள் முட்டி க்கொண்டன.

இனி என்ன செய்ய, சலூன் ஒன்றிர்க்குச்சென்றால்தான் ஓரளவுக்கேனும் பிரச்சனை சரியாகும். ஸ்டூலை  எட்டி ஒரு உதைவிட்டு ஓரங்கட்டினேன்.. பையனின் துண்டு போர்த்திய  வேஷத்தைக்கலைத்தேன். ஒரு பனியனை அவனுக்கு மாட்டிவிட்டேன். வீட்டு வாசல் முச்சூடும் ஏக அமர்க்களமாக இருந்தது. கன்னா பின்னா என்று தலை முடி சிதறிக்கிடந்தது. எல்லாவற்றையும்   அப்படியும் இப்படியும் ஓரம் பண்ணி முடித்தேன்..

‘தம்பி சலூன் வரைக்கும் போயி வருவமா’

‘எதுக்கு’

‘உன் தல முடிய சரி பண்ணணுமே’

‘ சிசர் வச்சி நீயே சரிபண்ணிடு’

’இல்லப்பா இத சரி பண்ணறது நம்மால ஆவாது   யாராவது சலூன் கடைக்காரரைத்தான் போய்ப்பார்க்கணும்  சரிபண்ணிட்டுவரணும்’

என் பையனும் நானும் கடைத்தெருவுக்குக் கிளம்பினோம். கொரானாக்காலம் கடைத்தெருவோ வெறிச்சோடிக்கிடந்தது. மெடிகல் ஷாப்கள் டீக்கடைகள் ஒன்றுவிட்டு ஒன்று  திறந்திருந்தன.

சலூன்கடையைத்தேடினேன். எல்லாம் அடைத்துக்கிடந்தன. ஒரு டீக்கடைக்காரரை விசாரித்தேன்..

‘சலூன்காரங்க ஒருத்தர் வேணும்’

‘ இப்ப எல்லாம் கடை ஏது  சலூன்கடைங்க தொறக்குறது இல்லயே’

 சலூன்கடைகாரங்க  வீடு எதாவது உங்களுக்கு தெரியுமா’

‘ தெரியாது. ஒரு சேதி.  இங்கிருந்து இன்னும் நாலு கட தள்ளி போங்க ஒரு சலூன்கடை வரும். கதவு மூடிதான் கெடக்கும். ஆனா  அவுரு போன் நெம்பரு சாக் பீசால கதவுமேல எழுதி வச்சிருக்காரு. பேசுங்க ஒரு அவசரம் அக்கரைக்குக்கு பேசித்தானே ஆவுணும்’

‘ நா பாக்குறேன்’

நான்கு கடை தள்ளி டீக்கடக்காரர் சொன்னமாதிரியே ஒரு சலூன் இருந்தது. அதன் கதவு சாத்தப்பட்டுக்கிடந்தது. சாக் பீசால் போன் நெம்பரை எழுதி இருந்தார்கள்.

என்னுடைய மொபைல் போனை எடுத்தேன். அந்த  எண்னுக்குப்போன் போட்டேன்.

‘யாரு’

‘ஒங்க கடை வாசல்ல நிக்குறேன்.’

’ சாரு நா சலூன் கடைகாரன்’

’ நானும் சலூன்கடையை தான் தேடுறேன்.  எம் பையன் ரெண்டாவது படிக்குறபையன் அவுனுக்கு அவசரமா கிராப் வெட்டுணும்’

‘ சலூன் கடை இப்ப  தொறக்க வக்காதுல்ல’

‘அதான் போன் பண்னுறேன்’

‘ அப்படின்னா  என் வூட்டுக்குத்தான் நீங்க வருணும்’

‘வறேன். பையன் என்னோடத்தான் இங்க இருக்கான்’

‘ரொம்ப சரி. நீங்க நிக்கற கடைக்கு அடுத்தாப்புல ஒரு தெருவு. அந்த தெரு மெலயே வந்தா   பெரிய வாட்டர் டேங்க் வரும் . அப்பிடியே சோத்து கைபக்கம் திரும்பினா ஒரு தெரு.  தெருவுமாதிரியும்  இல்ல  ஒரு சந்தாட்டம் இருக்கும். அது மேலயே வருணும். கடசீல ஒரு செல்லியாயி கொவிலு. அதுக்கு எதுத்தாப்புல என் வீடு. வீட்டு வாசல்ல ஒரு ஆட்டோ நிக்கும். ஆட்டோ நிக்குற வூடு என் வூடு. எம்மொவன் ஆட்டோ ஓட்டுறான்.என் தொழிலும் தெரிஞ்சி இருக்கான்.   ஆனா  கூட மாட வருவான். ஒண்ணு மறந்துட்டன் ரூவா நூறு குடுத்துடணும். என்ன சில்லரை மாத்தி குடு கிடுன்னு சொல்றவேல மட்டும் வேணாம்’

‘சரி நா உங்க வூட்டுக்கு நேரா வரன்’

என் பையனைக்கையில் பிடித்துக்கொண்டு சலூன்காரர் சொன்னபடியே நடந்தேன்.

வாட்டர் டேங்க் வந்தது. வலதுகை பக்கம் திரும்பினேன். நடந்தேன்.

சந்தில் கோலி விளைடிய இரண்டு சிறுவர்கள்.

‘ ஆலே அந்த தம்பிய பாருடா.’

‘ஆமாம் தல முடி எலி கரண்டிவுட்ட மாதிரிக்கு இருக்கு’

‘எலி ஒண்ணும் கரண்டுல’ என் பையன் வெடுக்கென்று பதில் சொன்னான்.

‘பசங்க எதாவது சொன்னா என்னா சொல்லுட்டுமே’

‘ தல முடி என்னுது. தப்பு பண்ணுனது நீ. என்னத்தானே எல்லாரும் ஒரு மாதிரியா பாக்குறாங்க’ சட்டமாய்ப்பேசினான்.

செல்லியம்மன்கோவில் வந்தது. எதிர்சாரியில் ஆட்டோ ஒன்றும் நிற்கவில்லை. கோவில் வாயிலில் நின்றுகொண்டிருந்தேன்.

‘சாரு சாரு’

யாரோ அழைக்கும் குரல் கேட்டது. திரும்பிப்பார்த்தேன்.

‘இங்க வாங்க ஆட்டோவ எம்மொவன் கெளப்பிகினுபோயிட்டான் அதான் முழிக்கிறீங்க’

அந்த சலூன்கடைக்காரரிடம்  நேராகப்போய் நின்றேன்.

‘யாரு ஒன் மவனா’

‘தலமுடி என்னா அசிங்கிதமா கெடக்கு பாரு’

‘ஆமாம்’

என் பையன் தன் தலையை ஒருமுறைத்தடவிப்பார்த்துக்கொண்டான்.

‘புது கட்டரு வாங்கினிங்களா’

‘ வாங்கினேன்’

‘அத அந்த பயலுக்கு தெரியற மாதிரிக்கு வக்கிலாமா’

நான் ஒன்றும் பதில் சொல்லவில்லை. என் பையனை மட்டும் பார்த்துக்கொண்டேன். அவன் முகம் கடு கடு வென்று இருந்தது.

‘’செறு பையன் அவன சொல்லி குத்தமில்ல.  நாம்ம சாக்குறதயா இருக்குணும்’

’இப்ப என்ன செய்யுலாம்’

‘எங்கிட்ட கட்டர் இருக்கு.  தம்பிக்கு தல முடி ஏடா கூடமா  கட் பண்ணிக்கெடக்கு.  இப்ப  ஒரே  ஒழுங்குக்கு தல முடிய நேர் பண்ணிடனும்.’

‘ தெ இப்பிடி குந்து தம்பி’ தரையை மேல் துண்டால் தட்டி விட்டான்.

பிளாஸ்டிக் மக்கில் தண்ணீர் எடுத்து என் பையன் தலைமுடியை ஈரப் படுத்தினான்.  ஹேர் கட்டரைக் கையில் எடுத்துக்கொண்டு அவன் தலைமுடியை அறுவடை செய்து முடித்தான். அனேகமாக மொட்டை அடித்த மாதிரிக்கு இருந்தது. சந்தனம் தடவத்தான் வாய்ப்பில்லை. பையன் தலைமுடியைத்தடவித்தடவிப்பார்த்துக்கொண்டான்.

முகம் சுருங்கிப்போய் இருந்தது.

‘ஒரு பத்து நாளு பொறு. முடி ஜோரா வந்துடும்’ என் பையனுக்கு ஆறுதல் சொன்னார்  சலூன்கடைக்காரர்.

 நூறு ரூபாயை எடுத்து நீட்டினேன். கட்டிங்க் செய்தவர் ’முருகா’ என்று உரக்கச்சொல்லி புன்னகையோடு வாங்கி.  தன் சட்டைப்பையில் போட்டுக்கொண்டார்.

’மெஷினு என்ன ஆச்சிங்க’

‘ஏன் வூட்டுலதான் இருக்கு’

‘அது  இன்னும் வேணுங்களா உங்களுக்கு,’

‘ ஏன் அப்பிடி கேக்குறிங்க’

‘இல்ல எனக்கு மெஷினு தேவயா இருக்கு. நானே வாங்குணும்னு பாத்தன். அது உங்க கிட்ட சொம்மா கெடந்தா வாங்கிகலாம்னு ரோசனை’

‘ஆயிரத்து எட்டு நூறு போட்டு வாங்குனது’

‘ நானு உங்க வூட்டுக்கு வர்ரன்  அத வாங்கிகிறேன். ஒங்களுக்கு ரெண்டு தம்பிக்கு ஒண்ணு. மாசம் மூணு நூறு ஆவும்.. ஆறு மாசம் வறேன். நீங்க எங்கயும் வெளில முடிவெட்டிக போவேணாம் சாரு. உங்க போனு நெம்பருதான் எங்கிட்ட இருக்கு. நா அப்பப்ப பேசுறேன் வறேன்’

‘சரி நானு வறேன்’

  சாரு நானும் கூட வறேன் உங்க வூட்ட பாத்துட்டு அந்த  ஹேர் கட்டரு மெஷின கையோட எடுத்தாந்துடறன். இனிமேலுக்கு  நானே  வூட்டுக்கு வறென் ரெண்டு பேருக்கும் முடிவெட்டுறன்..  கூலின்னு சல்லிக்காசு வேணாம்.  நீங்க  அக்காடான்னு இருக்கலாம்ல சாரு’

நான் என் பையனோடு நடக்க ஆரம்பித்தேன். நான் இன்று  கூலியாய்க்கொடுத்த நூறு ரூபாயை திரும்பக்கேட்டு வாங்கிக்கொண்டு விடலாமா என்று ஒரு சின்ன யோசனை வந்தது. அது வார்த்தையாக மட்டும் வெளிவரவில்லை.

‘சாரு கொரானா காலத்துல நாங்க செத்து செத்து பொழக்கிறம். கடத்தெரு  சலூனுக்கு வாடவ தரணும். கரண்டு பில்லு இருக்கு. வூட்டு வாடவ, குடும்ப செலவு மளிக பாலு இன்னும்  காயலா கருப்புன்னு எம்மானோ இருக்கு. நாங்க சின்னபட்டமாதிரிக்கு யாரும் சின்ன பட்டு இருக்க மாட்டாங்க’

நான் நடந்துகொண்டே இருந்தேன்.

தெருச்சந்தில் கோலி விளையாடிய சிறுவர்கள் மீண்டும் என் பையனைப்பார்த்தார்கள்.

‘தேவுலாம்டா தல முடி இப்ப சூப்பர்டா’ என்றார்கள்.

 பையன் இப்பொழுது என் கையைவிட்டுவிட்டுத்தானே ஜோராய் நடக்கிறான்..

----------------------------

 

 

 

 

 

 

 

 

மனுசங்க

 

 

 

 

 

 

மனுசங்க       


                                                                

 சார் இருக்காரா’ வாயிலில்  ஓர் கூப்பிடும்  குரல்.

அவன் மனைவி எட்டிப்பார்’த்தாள். யாரோ ஒரு இளைஞன் யூனிகான் வண்டியிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தான்.  வீட்டினுள்ளே  ஏதோ  காரியமாக  இருந்த அவன் வீதிப்பக்கமாக ‘யாரு’  என்று சொல்லிக்கொண்டே எழுந்து வந்தான்.

‘யாரோ புதுசா வந்திருக்காங்க பாருங்க’ மனைவி சொல்லிவிட்டு வீட்டினுள்ளே சென்றாள்.

‘வாங்க வாங்க துளசிங்கமா’

 வந்திருந்த இளைஞன் புன்னகையோடு  நெருங்கி வந்தான்.

துளசிங்கம் வளரும் கவிஞர். அனேக இலக்கிய பத்திரிகைகளில் அவரதுபுதுக் கவிதைகள் தொடர்ந்து வந்து  கொண்டிருந்தன. கவிஞனுக்கென்று ஒரு  பிரத்யேக தலைமுடியும், ஜிப்பா மேல்சட்டையும் வெள்ளை வெளேர் என்ற வேட்டியும் எப்படித்தான் அமைந்து விடுகிறதோ தெரியவில்லை.

‘எப்பிடி இருக்கிங்க’

‘ நல்லா இருக்குறன்’

‘ போன வாரம்  இங்க முதுகுன்றத்து பெரிய கோவில்ல ஒரு புத்தக விமரிசனம்னு கேள்விப்பட்டேன்.  கவிதை நூல்.  பூமலய் அய்யாவோடது. கடிதம் எனக்கும்  வந்திருந்தது. என்னால வரமுடியல்ல. நீங்க போய் வந்தீங்களா எப்பிடி இருந்தது’

‘ போய் வந்தேன்.’அவாள் வாழ்ந்தது’  புத்தகத்துத் தலைப்பு’

‘கவிதைங்க  எப்பிடி இருந்தது’

‘ கவிதைங்க எளிமையா  மக்கள் மொழில இருந்திச்சி. அது பூமலய் அய்யாவோட பாணின்னு சொல்லணும். இல்லாதவன் படுற கஷ்டங்களை இதவிட சிறப்பா யாராலயும் சொல்லமுடியாது’

‘உங்க  விமரிசனம் என்னன்னு சொல்லுங்க’

 சமுதாயத்துல மேலடுக்குல இருக்குற சமூகம் பண்ணுன அக்கிரமம் பற்றி எழுதியிருக்காரு. அதெல்லாம் சரி.  கவிதை புத்தகத்தை முழுசா படிச்சி முடிச்சப்பறம் நமக்கு சேதியா கெடச்சது  கவிஞரோட ஆழ் மனசுல  இருக்குற  ஜாதிய முரண் மட்டுந்தான். கவிதைங்க  சமுதாயத்துல  ஒரு பகுதிய இன்னொரு பகுதிக்கு எதிரா நிறுத்துது.   அந்த முரண்பாட்டை இன்னும் கூர்மையாத்தான் மாத்திடும்.  ஒருத்தரோட  கவிதைங்க  இப்படி   பயன்படணுமான்னு கேள்வி வச்சன்’

‘என்ன ஆச்சு’

அவன் வீட்டுக்குள் சென்று ஒரு கடிதம் எடுத்துவந்தான். அது அந்தக் கவிஞர் பூமலய்  அவனுக்கு எழுதிய கடிதம்தான். அவன் படித்தான்.

  என் மனசுக்குச்சரி என்று பட்டதை  கவிதைகளாய் எழுதினேன். அவை உங்களைப் புண்படுத்தியிருக்கலாம். நான் எழுத்தில் தடமிறங்கிப்போவதாய்க்குறிப்பிட்டு  இலக்கிய நிகழ்வில் விமரிசனம் படித்தீர்கள். இப்படியெல்லாம்  படைப்பாளியை விமரிசனம் செய்து படைப்புணர்வைக் காயடித்துவிடலாம்  என்று மட்டும் தப்புக்கணக்குப்போடவேண்டாம் இப்படிக்கு பூமலய்.

’எப்பிடி இருக்கு துளசிங்கம்.’

‘ ஜாஸ்திதான் இது’

‘சரி விடுங்க, நீங்க எப்பிடி இருக்கிங்க’

‘ நல்லா இருக்கன் போன மாசம் கணையாழில  எங்கவிதை வந்திருந்துது வாசிச்சிங்களா’

‘ வாசிச்சேன் ’ கும்பிடுவான் கத்தியும் கும்பி நிறைய வாசிப்பும்’

‘ தலைப்பு மட்டும்  அப்பிடியே சொல்றீங்க   வேற ஒண்ணும் சொல்லலியே’

’பாட்டையும் சொல்லிடுவேன் ஒரு . கவித  படிச்சா  அதுவும் மனப்பாடம்தான்’.

‘ நாவிதன் கையில் கூர்மைக் கத்தி

இருந்துமென்னெ

தெருவில் போகும் நாயுக்கும்

கையெடுத்துக் கும்பிடுவான்.. 

கூப்பிட்ட வீட்டில்

வாசிப்பான் பீப்பீ  டும் டும்

ஓரமாய் குந்திக் கும்பி நிறைப்பான்

மனம் மட்டுமுண்டு.

தன்மானந்தானறியான்’’

‘ரொம்ப சந்தோசம்  கவிதய   சரியாவே  சொல்லிட்டிங்க, சார், ஒரு  சின்ன ஒதவி வண்டிக்கி பெட்ரோல் தீந்துபோச்சி  சுத்தமா காசு இல்லே. கைமாத்தா  ஒரு நூறு ரூபா கொடுத்தீங்கன்னா அடுத்த வாரம் இங்க வரென் கொடுத்துடுவன்’ என்றான் துளசிங்கம்.

தே நீர் இரண்டு கிளாசில் கொண்டு வந்து அவன் மனைவி கொடுத்துவிட்டு அங்கே  நின்றாள்.

‘டீ எடுத்துகுங்க’

அவன்  டீ யை எடுத்துக்கொண்டான்.

‘ போயி  ஒரு நூறு எடுத்துட்டு வா’ மனைவிக்குக் கட்டளையிட்டான்.

நூறு ரூபாயை வாங்கிக்கொண்டார்.  துளசிங்கம் வண்டியை கிளப்பினார்.

’ அடுத்தவாரம்  நான் வரன் பாக்குலாம்  அந்த கவிஞர்  எழுதுன லெட்டர எல்லாம் வச்சிகிட்டு  ஒண்ணும் யோசிச்சி குழப்பிக்காதிங்க. இது எல்லாம்  எழுத்து  உலகத்துல  புதுசா ? சகஜம்தான் உங்களுக்கு தெரியாததா நான் சொல்லணுமா’

அவன் வீட்டுக்குள்ளே  போனான்.

‘ உங்கள பாக்க வந்தா  டீ மட்டும்தான் செலவாவும்.  ஒருத்தரு காசுகுடுன்னு  கடனா கேட்டது  இப்பதான் மொத மொதல்ல. இதெல்லாம் சரியா வராது’ என்றாள் மனைவி.

அவன் அவளை முறைத்தான். பேச எதுவுமில்லை.

அடுத்த நாள் காலை. இரண்டு எழுத்தாள நண்பர்கள் அவன் வீட்டிற்கு வந்தார்கள். வழக்கமாக  அவன் செல்லும் இலக்கிய கூட்டங்களுக்குத்தவறாமல் வருபவர்கள்தான்.

‘ சார்  சார்’

‘ தமிழ்ல எழுதுறவங்கன்னாலும் சார் சார்தான், அய்யா ன்னு கூப்பிட்டா அது சுருதிபேதமாயிடுது’

சொல்லிக்கொண்டே அவன் வீதிக்கு வந்தான்.

 சேதி  ஆப்டுதா  துளசிங்கம் போயிட்டாரு. ரயில்ல உழுந்து செத்துட்டாரு.’

‘ என்னா சார் நேத்து வந்தாரு பேசுனாரு, நூறு ரூவா  கை மாத்தா கேட்டாரு குடுத்தன் இப்ப போயிட்டாருன்னு சொல்றீங்க  செரு வயசு இது என்ன கொடுமை என்ன சார் ஆச்சு’

‘ நேத்து எங்கிட்டயும் வந்தாரு ரொம்ப மொடசல்னு  நூறு ரூவா  கேட்டாரு குடுத்தன் பெட்ரோலுக்குதான்னாரு’ ஒருவர் சொன்னார்.

அடுத்த வரும் தொடர்ந்தார்.’ நானும் தான் ரூவா நூறு கடனா குடுத்தன்  டூ வீலர்  மக்கார் பண்னுதுன்னாரு. என்னையும் பாத்து பேசிட்டுத்தான் போனாரு துளசிங்கம்’

‘சரி அத வுடுங்க, இப்ப எப்பிடி செத்தார் தற்கொலைன்றீங்களா’

‘ ஆமாம் சார் நல்ல கவிஞன் நல்லா கவித எழுதுவாரு. நாம நெறைய படிச்சிருக்கம்.  கவிதங்கள கூட  ஒரு தொகுப்பா போடுணும்னாரு’ வந்ததில் ஒருவர்.

இன்னொருவர் ஆரம்பித்தார்,

‘ சார் அவன் குடிப்பானாம் நமக்குதான் அந்த விஷயம்  சுத்தமா   தெரியல. தெனம் அவனுக்கு  குடிக்கணுமாம். நிரந்தரமா  ஒரு வருமானம் இல்ல.  வீட்டுல அவன் அண்ணன் அண்ணி இருக்காங்க. இவனுக்குத்தான்  கல்யாணம் ஆகுல.  கொஞ்சம் நெலம்  இருக்கு. அது எதுக்கு காணும்   வெலவாசி  முண்டிகிட்டு  நிக்குற  இந்த  காலமான காலத்துல. அண்ணன் தம்பி ரெண்டு பேரு.  பாகமும்   ஒண்ணும் ஆவுல.

      குடிக்கணுமே  காசு வேணும் . வெறி.  குடிச்சே ஆவுணும்னு அந்த வெறி. நேத்து ராத்திரி  துளசிங்கம் அண்ணி வீட்டுல  தூங்கிகிட்டு இருந்தப்ப  அவுங்க கையில இருந்த பவுனு  வளையல  கொறடா வச்சி கட் பண்ணி இருக்கான்..  டபுக்குன்னு அண்ணி முழிச்சிகிட்டாங்க .  சொந்த மச்சினந்தான் எதிரில நிக்கிறாரு அவர கண்ணால  பாத்துட்டாங்க. ‘ நீங்களா  அய்யோ   நீங்களா அய்யோ, குடிச்சி குடிச்சி இப்பிடி  நாசமா   போனீங்களே’  குய்யோ முறையோன்னு கத்தியிருக்காங்க. அழுது இருக்காங்க  புலம்பியிருக்காங்க.

 அண்னன்  எழுந்திரிச்சி எல்லா கூத்தையும்  தன்  கண்ணால பாத்து இருக்காரு.  அவனா  பாதகம் செய்யுறான் அந்தப்பெசாசில்ல அவன  செய்யசொல்லுது. தலையில் அடித்துக்கொண்டு ‘விதிப்பா விதி’ன்னு  சொல்லிகிட்டாராம்.

.அவுமானம் தாங்கமுடியாம  துளசிங்கம்  வாசக்கதவ தொறந்துகிட்டு ஓடுனவருதான். வீட்டுக்கு எதுத்தாப்புல  ரயிலு தண்டாவாளம் . அந்த நேரம் பாத்து ஒரு ரயிலுவண்டி எமனா வந்துருக்கு.  அவ்வளவுதான் முடிஞ்சி போச்சி கவிஞர்  துளசிங்கம் கத’

விபரமாய்ச்சொன்னவர் வாயையே பார்த்துக்கொண்டிருந்தான் அவன். அவனுடைய மனைவியும் வீதிக்கு வந்து அவர்கள் பேசிக்கொள்வதைக் கவனித்தாள். ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்துக்கொண்டுவந்து  மீண்டும் அவனிடம் நீட்டினாள்.   அவளை அவன் கேட்கவில்லைதான்.

மற்ற இருவரும் தலா நூறு ரூபாய்  எடுத்துக்கொடுத்தார்கள்

மூவருமாய்  சவத்திற்கு  பூக்கடை  ஒன்றைதேடிப்பிடித்து மாலை ஓன்று நீட்டமாய்  வாங்கிக்கொண்டு  துளசிங்கம் வீடு நோக்கிப்புறப்பட்டனர்.

‘போஸ்ட்மார்டம் ஆயிதான பாடி  வூட்டுக்கு வரும்.  இந்நேரம் வந்துருக்குமான்னு தெரியல’ என்றார் ஒருவர்.

‘போனதான் வெவரம் தெரியும்’ என்றார் மற்றொருவர்.

துளசிங்கம் வீட்டு வாயிலில்  கீத்துப்பந்தல் போட்டிருந்தார்கள். பார்டர் கட்டாத மொட்டைப்பந்தல். எழவு வீட்டுக்குப்போடும்  தட்டைப்பந்தல்தான்.

வீட்டு வாயிலில் துளசிங்கத்தின் அண்ணிக் குந்தி உட்கார்ந்திருந்தாள்.  இலக்கிய விரும்பிகள் மூவரும் மாலையும் கையுமாய் தயங்கித் தயங்கி நின்றார்கள்.

‘அய்யாமார்வுளே,   குடிக்காதடா நீ  கெட்டு நாசமா பூடுவன்னு ஒரு வார்த்த சொன்னிங்களா. ஒங்க மனசாட்சிய  நீங்க  கேட்டுகுங்க. அப்பிடி  எண்னிக்காவது சொல்லியிருந்தீங்கன்னா  நீங்க மனுசங்க. இல்லாகாட்டி  வாங்கியாந்த  மாலய  தெரு மூலையில வுட்டு கெடாசிட்டு  போயிட்டே இருக்கலாம்’

‘ துளசிங்கம் குடிப்பாருன்னுட்டு எல்லாம்   எங்களுக்கு  தெரியாதுங்க’ என்றான் அவன்.

மற்ற இருவரும் ஆமோதித்துக்கொண்டு அவனோடு நின்றனர்.

’ நீங்க  எல்லாம்  என்னாதான் மனுசங்களோ . அவுரு  என்ன என்னுமோ எழுதறாருன்னுட்டு  உசுப்பி உசுப்பி   வுட்டிங்க.. அந்த மொதலு நல்லா இருக்கணும்னு ரோசனை பண்ணுல.  புத்திகெட்ட அவுரும்  ஆடுனாரு. பாடுனாரு  தே  ஆளு பூட்டாரு. இப்ப என்ன செய்யுவ.   ரயிலுல அடிபட்டு அந்த  மொகம் நொறுங்குன  பாடி கடலூர் பெரிய ஆசுபத்திரி பொணக்கொட்டாயில  சனி  மூலைல கெடக்கு. பாத்துட்டு வரன்.  கூறு  கூறு போட்டு  வைக்கல்ல  ஒரு   பொட்டணமா சுத்தி,   அது  இங்கதான் வருதோ இல்ல  கெடில  நதி மணல்ல  அப்பிடி  இல்லன்னா  அந்த தெம்பெண்ணாத்து மடுவுல     பொதச்சி பூடுறாங்களோ ஆரு கண்டா. போனவரு எம்புருசன்  அவுரு  திரும்பி வந்தாதான்  அந்த விவரம் எனக்கு புரியும்’

அந்தப்பெண் கூறிமுடித்தாள். அவள் கைகளில் ஒரு கை வளையல் இல்லாமல் முண்டமாகத்தான் இருந்தது.

அவன் வாங்கி வந்த மாலையை  சாவுப் பந்தலின் ஒரு காலில் கட்டி முடிச்சுப்போட்டு விட்டு நகர்ந்தான். மூவரும் ஒருவருக்கொருவர் ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை. அவரவர்கள் தம் வீட்டுக்கு மவுனமாய் நடந்தார்கள்.

-------------------------------------

 

 

 

 

 

 

 

 

-------------------------------------

 

 

 

 

 

 

.

 

 

 

 

 

 

நாயினும் தாழ

 

 

பாழும் மனம்                                              

 

என்ன வாங்கிவரவேண்டும் வினா வைத்தேன்.’ ஜீனி பாமாயில் துவரம்பருப்பு’ என்றாள் மனைவி.

ஒரு நாள் என் தங்கை என் வீட்டிற்கு வந்திருந்தாள்.

‘அண்ணா  பாமாயில் எல்லாம்  யூஸ் பண்ணாதே. கொலஸ்ட்ரால் கூடிவிடும்’ என்றாள்.

என் மனைவியோ ’ பாமாயில  நாம சாமி விளக்குக்கு  யூஸ் பண்ணிக்கலாம்.’என்றாள். நாத்தனாருக்கு நறுக்கென்று பதில் தர எல்லோருக்கும் தெரியுமா என்ன.

இப்போது என் வீட்டில்  சாமி விளக்கு  சமாச்சாரம் பாமாயிலில் ஓடுகிறது. சாமி கள்  கோபித்துக்கொண்டால்  என்ன செய்வது என்கிற அச்சம்  ஒன்று எனக்குள் முளைத்தும் விட்டது.

 ரேஷன் பொருட்களுக்கான சில பைகளோடும்  என் ரேஷன் கார்டு  அதுதான் அந்த ஸ்மார்ட் அட்டையுடனும் கடையை நோக்கிப் பயணமானேன். ஸ்மார்ட் என்பதற்குத் தமிழ் என்னவோ.

  வயது இருபதைத் தொடும் ஒரு டூ வீலர் என்னிடமுண்டு.  அந்த டூவீலர்தான் எனக்குக் கைகொடுக்கும் வாகனம். ரேஷன் கார்டில் மனைவி சொல்படி எப்போதேனும் பச்சரிசி மட்டும் வாங்குவேன். மாவரைக்க  அது வேண்டுமென்பாள்.  மற்றபடி சாப்பாட்டிற்கு ஆந்திரா நெல்லூர்  ஜில்லா அன்னமேடு கிராமத்து  அரிசிதான். காவேரி பாய்ந்தால் என்ன கல்லணை நிரம்பினாலென்ன நம்மூர் விளச்சலை வேற்றூர் காரர்கள் யாரேனும்  சாப்பிடட்டும் என்கிற பண்பாடு நமது. சென்னையில் எங்கும்  ஆந்திரா அரிசிதான் உபயோகம். இது ஏன் எப்படி என்றெல்லாம் நமக்குத்தெரிந்தால் நாம் ஏன் ரேஷன் கடைக்குப்போகிறோம். நம் அப்பாதான் ஏன் வீடு வீடாக தர்பைக்கட்டோடு நின்றிருக்கபோகிறார்.

ரேஷன் கடையில் கோதுமை வாங்கி புடைத்து அலசி க்காயவைத்து அரைத்த ஒரு காலம் இருந்தது. அது இப்போது இல்லை. ஏன் இல்லை என்பதை உங்களுக்குச்சொல்லாமல்  பின் யாருக்குச்சொல்வது. ஆறுமாதம் ஆகியிருக்கலாம். இல்லை கூடவே இருக்கும். ரேஷன் கோதுமையை வாங்கி பணிக்கை எல்லாம் செய்து அரைக்கப்புறப்பட்டேன். டூ வீலர் ஸ்டார்ட் ஆக மாட்டேன் என்று அடம் பிடித்தது. உதைத்து உதைத்து கால் வலித்தது. பட்டனை அமுக்கினால் ஸ்டார்ட் ஆகும் வண்டிகள் ஆயிரம் உண்டு. நமக்கு வாய்த்தது பற்றித்தானே நாம் பேச முடியும். வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. வண்டியைப்பூட்டி விட்டு  மாவு மெஷினுக்கு நடக்க ஆரம்பித்தேன். வண்டியை பூட்டாவிட்டாலும் ஒன்றும் பாதகமில்லை. ஒருவேளை  வண்டியை லவுட்டிக்கொண்டு போகலாம் என்று வரும் அவனுக்கு ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல இடத்தில்  அதுவும் வலுவாய் இருந்து தொட்டது துலங்கி விட்டால் என்ன ஆவது. ஆகத்தான் வண்டியைப் பூட்டினேன்.

மெஷினுக்குப்போனேன்.  கோதுமை அரைத்து வந்து வீட்டில் வைத்துவிட்டு நின்றேன்.

‘ எங்கே செல் போன்’ மனைவி கேட்டாள்.

‘ எடுத்துப்போனேனா நான்’

‘ நல்லக்கதை உங்களைக்கூப்பிட போன் போட்டேன். சுவுட்சுடு ஆஃப் என்று வந்தது. அப்போதே எனக்கு திக்  என்றது. முடிந்ததா கதை ரூவா பதினைந்தாயிரம் போச்சு ‘

அவள் போனை நானும் வாங்கி  என் நம்பருக்குப் போன்அடித்துப்பார்த்தேன். அதே ஸ்விட்சுடு ஆஃப் எனக்கும் சேதி. மெஷினுக்கு தெண்டமே என்று நடந்தேன். தெருவில் போவோர் வருவோர் எல்லாரையும் கேட்டேன். ஒரு கதையும் ஆகவில்லை. போனது போனதுதான். ஆக இனி  ரேஷன் கடையில் கோதுமை வாங்கவே கூடாது முடிவு செய்தேன்.

கோதுமை மாவாக மளிகைக்கடையில் வாங்க ஆரம்பித்தேன். கோதுமை  ரேஷன் கடையில்  நான்  வாங்காமல் விட்டதற்கு இந்தக்கதை.  ஜீனி வாங்கியாகிறது. சுகர் வியாதி எனக்கும் அவளுக்கும் பிறகு ஜீனி  எதற்கு? பெங்களூரிலிருக்கும் மருமகளுக்கு  ஜீனியும் துவரம் பருப்பும் அனுப்பி வைப்போம். அந்த அனுப்பலுக்கும் ஆகா ஓகோ என்று யாரும் சொல்லவில்லை. அது எல்லாம் பேசி எதற்கு?

ரேஷன் கடை க்யூவில் போய் கடைசி ஆளாய் நின்றேன்.  ஒரு பெண்மணி என்னிடம்  நேராக வந்தாள்.

‘ சார் பச்சரிசி நீங்க வாங்கலன்னா எனக்கு வாங்கி குடுங்களேன்’

‘சரி’ என்றேன். மனதில்  ஒருகணம் கர்ணமகாப்பிரபு ஆகிவிட்டதாய் போதை கூட வந்து போனது.

‘ நா அரிசி வாங்கலேன்னு  உங்களுக்கு எப்பிடி தெரியும்’ நான் கேட்டேன்.

‘அரிசி வாங்கறாப்புல பையிங்க  கொண்டாருலயே. தேங்கா பழம் போடுற மஞ்ச பையி ரெண்டு வச்சிரிக்கிங்க அவ்வளவுதானே’

நமக்கு சாமர்த்தியம் அவ்வளவுதான்.  என் அம்மா சொல்லிக்கொள்வாள். ஒரு பேமாலத்த கட்டிண்டு ஏழு பேமாலத்த பெத்து இருக்கேன் என்று. என் அப்பாவுக்கும் சேர்த்துத்தானே அந்தத் திட்டு. ஆக  நாமும் ஒரு பேமாலம். நினைத்துக்கொண்டேன்.

ரேஷன் கடை குமாஸ்தா முன்  இருக்கும் விரல் ரேகை அழுத்தியில் விரல் வைத்தேன். அது சரி என்றது அந்தக் கணினி .’ நீங்களே நீங்கள் ’  என்று  சத்தியம் செய்ய வேண்டும். இல்லாவிட்டல் ஓரமாய் நில்லுங்கள் பிறகு  பார்ப்போம் என்று சொல்லிவிடுவார்கள். அப்புறம் உங்களுக்கு பகவான் மனது வைத்தால்தான் பொருள்கள் கிடைக்கும்.

 விரல் ரேகை பரீட்சையில் நான் பாசாகி விட்டேன்.  அந்தப்பெண்மணி மீண்டும் என்னிடம் வந்தாள். பச்சரிசிக்கு ஒரு கனமான பை தந்தாள். ரேஷன் கடைக்காரர் என்னைக்கடைக்கண்ணால் ஒருமுறை பார்த்துக்கொண்டார். வழக்கமாய் என்  பங்கு ரேஷன் அரிசி பச்சையோ புழுங்கலோ அவர்தானே எடுத்துக்கொள்வார். இம்முறை அவருக்குப் பச்சரிசி  இல்லை.

எனக்கு அரிசி கார்டே வந்திருக்காது.   சிவில் சப்ளை அலுவலகத்தில்  மாத வருமானம் என்ன என்பதற்கு   என் சம்பள பில் கொடுத்துத்தான் இருக்கிறேன்.  இருந்தாலும் சிவப்பாய் ஒரு ரேஷன் அட்டை கொடுத்தார்கள்.

‘ இது என்ன சிவப்பு அட்டை  அரிசி எல்லாம்  எனக்குக்கூட குடுப்பீங்களா’

‘ சார் நீங்க வாங்கறது வாங்கீங்க,   உங்க அரிசிய  நாங்க எடுத்துகறம் இதெல்லாம்   கண்டு காதிங்க சார்’ ரேஷன் கடைக்காரர் எனக்குப்பதில் சொன்னார்.

‘ என்னை கேக்காம என் கார்டை அரிசி கார்டா  மாற்றி இருக்கிங்க’

‘ மூஞ்ச பாத்தா எங்களுக்கு தெரியும் சார், நாங்க எத்தினி  வருஷமா  உங்கள பாக்குறம்’

ரேஷன் கடைக்காரர் சொன்னார். சரிதான் என்றது உள்மனம்.

பொருட்கள் அளந்து போடும் ஆளிடம் என் பையில் ஜீனி துவரம்பருப்பு வாங்கி பாமாயிலும் ஒரு பாக்கெட் வாங்கினேன். அந்தப்பெண்மணிக்குப் பச்சரிசி பத்து கிலோ அவர் கொடுத்த பையில் வாங்கினேன்.

சாதித்துவிட்டதாய் அந்த அரிசிப்பையை அந்தப்பெண்மணியிடம் கொண்டுபோய் கொடுத்தேன். அவர் ஒரு’ தேங்க்ஸ்’ எனக்குச்சொல்லியிருக்கலாம். சொல்லவில்லை. அவரோடு இருந்த வாண்டு பெண் சொன்னது’ எதுத்து வூட்டு ஆயாவுக்குத்தான் இந்த அரிசி’

நான் விழித்தேன்.

‘ ரேஷன் கடைக்கு கிளம்பகுள்ள எதிர்வீட்டு பாட்டி  இந்த பைய குடுத்துது,’ பச்சரிசி ஒரு பத்து கிலோ கேட்டு பாரு. யாராவது அரிசி வாங்காத சனம் மாட்டுனா  எனக்கும் அரிசி கெடைக்கும்’னு.  அதான் உங்கள கேட்டேன் நீங்க  பட்டுன்னு சரின்னுட்டீங்க. பைய குடுத்தேன் .இப்ப இந்த பாட்டி அரிசியும் செமந்து கிட்டு யாரு நடக்கறது. எனக்குதான் லோலு. என் புள்ளயையும் தூக்க வைக்காது.’

அவள் காலைக்கெட்டியாகப்பிடித்து  கொண்டிருந்த  பெண் குழந்தை என்னைப்பார்த்துச் சிரித்தது..

------------------------------------------------------------