Monday, October 13, 2025

சுழல் -கதை

 

 

 

சுழல்                                                               

 

மஞ்சகுப்பத்தில்  என்  அலுவலகத்துக்கு அடுத்தக் கட்டிடம்   மாவட்டத் தலைமை அஞ்சலகம்   தபால் ஒன்றை எழுதி முடித்து   அன்றைய அஞ்சலில் சேர்க்க  அந்த அஞ்சலகம் நோக்கி நடக்கிறேன்.  சிவப்பு   நிறத்   தபால் பெட்டி   அலுவலக வாயிலில் படிக்கட்டுகளுக்குப் பக்கமாய்  சம்மணமிட்டு அமர்ந்திருக்கிறது.  நான்  கொண்டு வந்த  தபாலை அஞ்சல் பெட்டியின்  வாயினுள் நுழைத்துப் போட்டேன். பெட்டித்திறப்பில்  சிறிய மூடி ஒன்று இப்படியும் அப்படியும்  நடனம்  ஆடிக்கொண்டிருந்தது.  நான் போஸ்ட்  செய்த  கடிதம்  உள்ளாகச்சென்று விட்டதா என்று கைவிட்டுப் பார்த்தேன்.   என்   கையில் அது  தட்டுப்படவில்லை.  எப்படி எப்படியெல்லாம்  செய்துவிட்ட   ஒரு செயலைச் சரிபார்க்க வேண்டியிருக்கிறது.  தபால் ஒன்றை எழுதி முடித்து,  அதனைக் கையோடு கொண்டுபோய்  போஸ்ட் டும் செய்துவிட்டால்  மனதிற்குள் ஏதோ ஒரு நிம்மதி.      எனக்கு  எப்போதும்கிடைக்கும் அனுபவம்  இது..  எல்லோருக்கும்  அப்படித்தான் இருக்குமோ.

 தபால்பெட்டிக்கு முன்னால் ஒரு டூ வீலர் நிறுத்தப்பட்டிருக்கிறது.. அந்த டூ வீலர் என்னோடு பேச முயல்கிறது. நான் ஏதும் உளறுகிறேனா.  இல்லை நிச்சயம் இல்லை.

 இதோ  என் டூவீலர்   கிடைத்துவிட்டது  என் டூ வீலர்     வேகமாய்ச் சொல்லிக்கொண்டே  அதன் அருகே பதறிக்கொண்டு ஓடுகிறேன்.. ஆமாம்  அது  களவு போய்விட்ட என்  வண்டியேதான்.  TN.01 -9390    அந்த வண்டி எண்ணும்   சரிதான். திருடிக்கொண்டு போகிறவர்கள் வண்டியின் நெம்பரை  கட்டாயம் மாற்றி  அதனை வேறு ஊரில்  கொண்டுபோய்தான் விற்று விடுவார்களாம் கொஞ்சம்  விஷயம் தெரிந்தவர்கள் எனக்குச் சொல்லியிருக்கிறார்கள். வக்கீலின்  கழுத்துப்பட்டைக் குறிபோட்ட ஸ்டிக்கர் வண்டியின்  நெம்பர் பிளேட் அருகே கச்சிதமாய் ஒட்டப்பட்டிருந்தது.  அதே .சிமெண்ட் கலர்.  வண்ணத்தில்  ஒன்றும் மாற்றமில்லை. வண்டியை அங்கங்கு தொட்டு தொட்டு பார்த்துக் கொண்டேன். வண்டி தொலைந்து போய் ஆறு மாதம் கூட ஆகியிருக்கலாம்.

   என் வண்டியைத்தான்   இங்கே  நிறுத்திவைத்துவிட்டு  யாரோ  அஞ்சலத்தின் உள்ளே  சென்றிருக்கிறார்கள். அவர்கள்   வந்த  வேலையை முடித்து விட்டுத் திரும்பவும் இந்த வண்டியை எடுத்துக்கொண்டு மட்டுமே கிளம்புவார்கள். அப்போது அவரை வழிமறித்து   இந்த வண்டி பற்றிய விபரம் கேட்டுவிடலாம்  என்கிற  தீவிர யோசனையில் இருந்தேன்.  அஞ்சலத்தினுள் ஒரே கூட்டம். தலைமை அலுவலகமாயிற்றே.

மஞ்சகுப்பம் டெலிபோன் இலாகா  அரசு  கோர்ட்டர்சுதான் நான் குடியிருப்பது,    நான் பணியாற்றும்  அலுவலகத்திலிருந்து  அரை கிலோமீட்டர் தூரம் கூட இருக்காது.  நாலு தப்படி வேகமாய்  நடந்தால் அலுவலகத்துக்கே வந்துவிடலாம். சில சந்தர்ப்பங்களில்  வேறு எங்காவது செல்லவேண்டிய படிக்கு  ஆகிவிடுகிறது. பக்கமாய் திருப்பாதிரிப்புலியூர் இங்கிருந்து  மூன்று கிலோ மீட்டர்.  சின்ன வண்டி இருந்தால்  சவுகரியமாய் போகலாம் வரலாம்.

 சிக்கரிக் கலக்காது  காபித்தூள் வேண்டுமென்றால்  அவ்வப்போது அரைத்துக்கொடுக்கும் சந்தனப்பொட்டு வைத்த காபிக்கடைக்காரர்.  அந்தப்பொட்டைப்  பார்க்கும் போது   வெண்டைக்காயை  அவர்  நெற்றியில்  நிற்கவைத்தமாதிரி எனக்குத்தோன்றும்  அவரிடம்  வெண்ணெய் நெய்  அரிசிஅப்பளம், கெட்டிப்பெருங்காயம்   எல்லாமும் விற்பனைக்குண்டு.  நாட்டு மருந்து  விற்கும் கடை பூஜைசாமான் கடை. இன்னும்  ஏதும்  இப்படியாய்  வேண்டும் என்றாலும் அந்த திருப்பாதிரிப்புலியூர் போனால்தான் நமக்கு   காரியம் ஆகும்..

ராமாபுரம் கொய்யா  கடலூர் கேப்பர்மலை  ஜைலுக்குப் பின்னாடி  நாலு கிலோமீட்டர்  நேராகப்போனால்  வருவது ராமாபுரம் அது  குக்கிராமம். அங்கு விளையும்  கொய்யாவை நீங்கள் கேள்விப்பட்டதுண்டோ. மேல் தோல் பார்க்கப் பச்சையாக இருக்கும். ஆனால்   அதன் உள்ளோ சதைப்பற்று  கனிந்தேயிருக்கும். குங்குமச் சிவப்பு நிறம். கொய்யாவை  வாயில் போடுங்களேன்   அப்படி ஒரு தித்திப்பு நொந்த. மனம் டபக்கென்று   நிறைந்து போய்விடும். கொய்யாவின் விதைகள் உன்னைப்பார் என்னைப்பார் என்று விறைத்துக்கொண்டு தின்பவர்   நாக்கில்  நர்த்தனம்  ஆடும் தின்பவரை  இம்சிக்கவே  செய்யாது  . சமத்தாய்த் தொண்டைக்குள் இறங்கி விடும்.

வடலூர் வெள்ளரிப்பிஞ்சுகள் எப்போதாவது   சாப்பிட்டு இருக்கிறீர்களா. குட்டி குட்டியாய்  அரைச்சாண் நீளம்தான். மடக் மடக் என்று ஒடியும். அத்தனைப் பச்சை மணம்  ருசி. வடலூர் வெள்ளரிப்பிஞ்சு சாப்பிட்டோருக்குத் தண்ணீர் தாகமே எடுக்காது.  இவை அனைத்தும் கிடைக்கும் அதே திருப்பாதிரிப்புலியூரில்தான் சொல்லுக்குத்துணை நிற்கும் வேதியன்  பாடலீசன் திருக்கோவில் இருக்கிறது. இன்னும் போங்களேன் கெடிலக்கரை மீதமர்ந்த  வகிந்தமலை, அருள்பாலிக்கும்  தேவநாதன்  திருப்பதி வெங்கடாசலபதிக்கு  மூத்தவர். ஆக  டூ வீலர் இல்லாமல்   இவை  எதுவும் சரிப்பட்டு வராது  ஆகத்தான்  செகண்ட் ஹேண்டில்   வண்டி ஒன்று வாங்கினேன். கெட்டிக்காரத்தனமாய் நான்  அதனைப்  போற்றி    போற்றித்தான்  வைத்துமிருந்தேன்.நம் கெட்டிக்காரத்தனத்தில் எதுவுமில்லை.

கோர்ட்டர்சில் என் வீட்டுக்கு எதிரே டூ வீலர் நிறுத்தும் ஷெட்..  நான் வசிப்பது தரை தளம்.  தரை தள வாசிகளுக்குக் கஷ்டங்கள் அதிகம்  கொசு இம்சை ஏகத்துக்கு இருக்கும். சாக்கடை அடைத்துக்கொண்டால் வீடு நாறிப்போகும். மழைக்காலத்தில் தவளையும் பாம்பும் உறவு கொண்டாடும்.. வயதாகிப்போனவர்கள் முட்டிக்காலில் வலிவந்த  பேர் வழிகளுக்குக் கொஞ்சம் சவுகரியம் தெரியலாம். படிகள் ஏற வேண்டாம்.

 என் டூ வீலரை எதிரே இருந்த ஷெட்டில் நிறுத்தியிருந்தேன். சைட் லாக்கோடு இரண்டு பூட்டூம் பூட்டித்தான் வைத்திருந்தேன். மறு நாள் காலை ரேஷன் கடைக்குப்போய் கோதுமை வாங்கலாம் என்பதாய் என் திட்டம்.  வண்டி சாவியைக்  கையில் எடுத்துக்கொண்டு  சுழற்றியபடி  ஷெட்டுக்குள் நுழைந்தேன். என் வண்டியைக்காண வில்லை.  செட் ஒன்றும் பெரிய கட்டிட,ம் இல்லை. இப்படியும் அப்படியும் வளைத்து வளைத்துப் பார்த்தேன். மொத்த ஷெட்டும்   பார்த்தாயிற்று.  நான் பூட்டி வைத்துவிட்டுப்போன  அந்த வண்டி அங்கிருந்தால்தானே.  என் வண்டியை மட்டும் காணவில்லை.  வண்டி சாவியைக் கையில்  வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது. எனக்கு  மிகவும் வருத்தமாய் இருந்தது. வருத்தம் மட்டுமா   கூடவே கொஞ்சம் சிரிப்பும் வந்தது. வரக்கூடாது  தப்புதான்.

உடனே   போலீசில் புகார் கொடுத்தாக வேண்டும்  வண்டியை யாரேனும்  திருடிக்கொண்டு கள்ளச்சாராயம்   விற்பதற்கு ஊர் ஊராய்ப் போய்விட்டால்,  குரங்கு மனம் என்னவெல்லாமோ யோசிக்கிறது.. போலிசில் உடன்  புகார் செய்வது  கட்டாயம் நண்பர்கள் சொன்னார்கள். எனக்கு மட்டும் தெரியாத செய்தியா அது.  வண்டியின் ஆர் சி புக்கையும் இன்சூரன்சையும் தேடி எடுத்தேன். போலிஸ் ஸ்டேஷனுக்குப் புறப்பட்டேன். அதற்கான பிரத்யேக  காவல் நிலையம் எங்கே இருக்கிறது என்று நண்பர்களிடம்  கேட்டுக்கொண்டேன். நேதாஜி சாலையில்  அந்த  போலிஸ்  ஸ்டேஷன் இருந்தது. நடந்தேதான் போனேன்.  அங்கு ஒரு சப் இன்ஸ்பெக்டரும் ஒரு ஏட்டும்  இருந்தார்கள். அந்த ஸ்டேஷன்  வாயிலில் போய்  தருவுத்தருவி நின்றேன்.

‘என்ன சேதி’

‘டூ வீலர் களவு போயிடுச்சி சார்’

‘உங்களுக்கு  எடம் எங்க’

‘பெரிய ஆசுபத்திரி எதுத்தாப்புல டெலிபோன் கோர்ட்டர்ஸ்’

‘அங்க ஒரு பெரிய டெலிபோன்  டவர் ஒண்ணு இருக்குமே’

‘அதே இடம் தான் சார். எங்க வீட்டுக்கு முன்னாலேதான் அந்த டவர்  பாட்டமே இருக்கு;

‘எப்ப நடந்தது  இந்த சமாச்சாரம்’

‘நேத்து ராத்திரி. நான் சாயந்திரம் வண்டிய பூட்டி ஷெட்டில வுட்டிருந்தன்.  எல்லாரும் டூ வீலரை அப்படித்தான் விடுவோம். காலையில ரேஷன் கடைக்குப்போலாம்னு கெளம்பினேன். சாவி எடுத்துகிட்டு  ஷெட்டுள்ள  போயி வண்டிய பாக்குறன்  என் வண்டிய காணுல. இதுதான்  அந்த வண்டி  சாவி’

‘சாவிய  வச்சிகிட்டு நாக்க வழிக்கிறதா, சாவி  என்னாத்துக்கு இப்ப.  வண்டிக்கு  கரெக்டா  இன்சூர் பண்ணியிருக்குதா. வண்டிக்கு  ஆர்சி புக் இருக்குதா. ரெண்டையும் ஜெராக்ஸ் போட்டுக்குங்க.  அதுங்கள  கூட  வச்சி வெவராமா   ஒரு கம்ப்ளெயிண்ட் எழுதிக்குடுங்க.. பாப்பம். எங்க பாத்தாலும் களவு களவு.  இதுகதான் இப்ப  நடக்குது  நா என்னத்த சொல்ல’

‘ரெண்டு கொயர்  டிம்மி பேப்பர் வாங்கிட்டு  வந்துடுங்க. அதுவும் வேணும்’

நான் சற்றுத் தயங்கி நின்றேன்.

‘இங்க ஆபிசு வேலைக்குதான். நா ஒண்ணும் பேப்பர  பொறியல் வச்சி சாப்பிடப் போறதில்ல’ வேகமாய்ச்சொன்னார்.

ஆர் சி புக்கையும் இன்சூரன்சு பத்திர நகலையும்  பக்கத்துக்கடையில்

செராக்ஸ் போட்டேன்.  அதே கடையில் இரண்டு கொயர் வெள்ளை பேப்பர் வாங்கிக்கொண்டேன்.

 ‘ வண்டி சின்ன வண்டி போல. அதான் ரெண்டு கொயர் பேப்பரோட முடிச்சிகினாரு’ கடைக்காரர் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். செய்யும் தொழில் தெய்வம்தான்.

 வண்டி தொலைந்து போன விபரம் சொல்லி ஒரு மனு எழுதினேன். மனு எழுதுவதெல்லாம் எனக்குத்தெரிந்து இருக்கிறதே  அதிலே ஒரு அல்ப சந்தோஷம்.  போலிஸ் ஸ்டேஷனுக்குப்போய்   மொத்தத்தையும் கொடுத்தேன்.  உதவி ஆய்வாளர் பெற்றுக்கொண்டார். ‘போயிட்டு வாங்க’ என்றார். நான் அங்கேயே நின்றேன்.

‘தகவல் ஏதும் தெரிஞ்சா சொல்றம். இப்ப நீங்க  போவுலாம்’

நான் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன்.

எ ஃபை ஆர் காபிக்காக இரண்டு முறை போயிருப்பேன்.. அதனையும் ஒரு வழியாய்  வாங்கிக்கொண்டேன்.

‘ஒரு நா  ஒங்க  கோர்ட்டர்ஸ்  வீட்டுக்கு போலிசு  வருவம். சின்ன  ஸ்கெட்ச் போட்டு பாக்குணும். எப்பிடி களவு போனதுன்னு தெரியணும். அக்கம் பக்கம் விசாரிக்கணும். ஆரு மேலயாவது உங்களுக்கு சந்தேகம் இருந்தா அத கட்டாயம்  இப்பவே  சொல்லுணும். களவு போன  வண்டி எதனா ஆப்டா உங்கள  கூப்பிடுவம். நீங்க வந்து  அதுவுள பாக்குணும்.  இன்னும்  சேதிவ  கனமா இருக்கு. வண்டிய கொண்டுகுனு போனவன் அத சட்டமா  வுட்டுகினு இருப்பான் நாம இங்க சின்னப்பட்டுதான் ஆவுணும் எத்தினி வண்டி களவு போச்சி எத்தினி வண்டிய புடிச்சி கொண்டாந்திங்கன்னு எங்கள  மேல இருக்குற ஆ சாமிவ தொலச்சி எடுத்துடும்.’ சப் இன்ஸ்பெக்டர் சொல்லி முடித்தார். அவரைப்பார்க்கவும் பரிதாபமாக இருந்தது.

களவு போன வண்டியை சரியாய்  இன்சூர் செய்து வைத்திருந்தோமே என்று  அந்தக் காகிதங்களை எடுத்துக்கொண்டு நியூ இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகம் போனேன். அது நகரின் பிரதான லாரன்ஸ் சாலையில் இருந்தது. அங்கு ஒரு அம்மா நடுத்தர வயது இருக்கும்.  அவர்கள்தான் டூ வீலர் இன்சூரன்ஸ் கிளையிமுக்கு பொறுப்பாக இருந்தார்கள். அவர்கள் கொடுத்த ஃபாரத்தை யெல்லாம் ஃபில் அப் செய்து கொடுத்தேன். ஆர் சி புக் செராக்ஸ்   இன்சூரன்ஸ் ஒரிஜினல் எல்லாம் சமர்ப்பித்தேன்.

‘போலிசுக்கு நீங்க  குடுத்த  கம்ப்ளெயிண்ட் காபி எஃப் ஐ ஆர் காபி  அப்புறம் போலிசுல  குடுக்குற ‘  நான் ட்ரேசப்ல் சர்டுபிகேட்’  இதுக மூனும் அவசியம்.  போலிசுகாரங்க    அந்த  வண்டிய  நாங்க தேடிப்பாத்தம் அது  அகப்படலன்னு  ஒரு சர்டிபிகேட்டு தரணும் அது முக்கியம்’

‘அது குடுத்துடுவாங்களா’

‘அத அங்க கேக்குணும்’ என்றாள் அந்த அம்மா.

போலிஸ் ஸ்டேஷனுக்கு அலையாய் அலைந்தேன். எத்தனையோ முறை போயிருப்பேன். லேசில் அந்த நான் ட்ரேசபல்  சர்டிபிகேட்டை வாங்க முடியவில்லை. அது எப்படி வாங்குவது என்கிற யோசனையில் இருந்தேன். நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் பக்கிரி என்கிற நண்பர் எழுத்தராக இருந்தார். அவரிடம் யோசனை கேட்டேன். அவருக்கு என்னைக்காட்டிலும் பல நண்பர்கள் அதிகம்  இருந்தார்கள். அவரின் சுபாவமோ இல்லை அவருக்கு முக ராசியோ  அப்படி.  எனக்குத்தான் எந்த  ராசியுமில்லை. இது விஷயம்  எனக்கு எப்பவோ அனுபவமாயிற்று.’ உப்பு விக்கப்போனா மழை பேயும் , மாவு  விக்கப்போனா புயலடிக்கும்’ இப்படி ஒரு பழமொழிக்கும்  எனக்கும்  ஏகப்பொருத்தம் . நண்பர்  பக்கிரிக்கு அங்கங்கேயும் ஒரு ஆள் இருந்தது. அவரைப்பிடித்து இவரைப்பிடித்து   போலிசிலிருந்து எனக்கு ஒரு நான் டிரேசபல் சர்டிபிகேட் வாங்கி வந்து விட்டார். ஆயிரம் ரூபாய் செலவானது என்றார். அதனைக் கையோடு அவரிடம் கொடுத்துவிட்டேன்.  அதுவாவது   நிச்சயம் ஆகித்தான் இருக்கும். காசு பணம்  வாங்கிக்கொண்டால் என்ன  நமக்குக் காரியம் முடித்துக்கொடுப்பவர்கள் தெய்வம்.. காசும் கொடுத்துவிட்டு  காரியமும் ஆகாமல் முகத்தில் கரிபூசிக்கொண்டு  எனக்குத்தான்  எத்தனையோ அனுபவமாகியிருக்கிறது.

‘உங்களுக்கு எவ்வளவு ரூவா இன்சூரன்சுல வண்டிக்கு குடுப்பாங்க’

‘ஆறாயிரம்’ என்றேன்.

‘அந்த ஆபிசுல ஏதும் தரணுமா’

‘இல்லை.’

‘இன்னும் ஒன்னு ரெண்டு  ஆபிசுவ கெட்டுப்போவாமதான்  இருக்கு’ என்றார் அந்த பக்கிரி. அவர் இல்லாவிட்டால் இந்த சர்டிபிகேட் எங்கே நான் வாங்குவது. அந்த சான்றிதழைக் கொண்டு போய்  எஃப் ஐ ஆர் காபியோடு இன்சூரன்சு அலுவலகத்தில் கொடுத்தேன். ஒரு வாரம் கழித்து வரச்சொன்னார்கள். போனேன். ஆறாயிரத்துக்கான காசோலை தந்தார்கள். அதனைச் சேமிப்பு வங்கியில்  டிபாசிட் போட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன். என் தொலைந்து போன வண்டி   ரூபாய்  பன்னிரெண்டாயிரத்துக்கு செகண்ஹேண்டில் வாங்கியது. படிக்குப் பாதி தேறியது. ஆயிம் பேர் இன்சூரன்சில் பணம் கட்டினால் ஒருவன் செத்துப்போவான். அவன் குடும்பத்திற்கு லட்ச ரூபாய் கொடுத்துவிட்டு  சாதித்ததாய்ப்  போஸ்டரில் போட்டுக்கொள்வார்கள். தொளாயிரத்து  தொண்ணூற்று ஒன்பது  பேரிடம் வாங்கிய அந்தத் தொகையோ  கொள்ளையோ கொள்ளை இன்சூரன்சு நிறுவனத்தாருக்கு. மனிதன் செத்துப்போய்விட்டால் அவன்  பிள்ளை பெண்சாதி தெருவில் நின்றுவிடுமே என்கிற அச்சத்தை வியாபாரமாக்கிப் பிழைக்கிற  நிறுவனம் தான் இன்சூரன்சு கம்பெனி. சாவு எப்போதும் யாருக்கும்  நிகழலாம் என்கிற  புரியாத விஷயம் அவர்களுக்கு தொழிலின் அடிப்படை.

இப்படியே காலம் போய் கொண்டிருந்தது. வேறு ஒரு வண்டி வாங்கினால் தேவலை. அதுவும் திருடு போகாது என்று சொல்ல முடியுமா. மஞ்சகுப்பத்தில் லட்சம் வண்டிகள் இருக்க்லாம். நம் வண்டிதானா திருடு போக வேண்டும். கடலூர் வருவதற்கு முன்னே  நான் விருத்தாசலம் பெரியார் நகரில் குடியிருந்தேன். அங்கு அப்போது  ஐயாயிரம் வீடுகள் இருந்தன. என் வீட்டுக்குத்தான் திருடன் வந்தான்.

போஸ்டாபிசுக்குள் வேலையை முடித்துக்கொண்டு அந்த வக்கீல் வெளியே வந்தார். டூவீலரின் சாவியை எடுத்து வண்டியைத்திறந்தார். என் வண்டியைத்தான் திறந்தார். சட்டமாய் அமர்ந்து கொண்டார். நான் அவரையே பார்த்துக்கொண்டு நின்றேன். போய் அவரை  இடை மறித்து ‘அய்யா  இது என் வண்டி சொல்லலாமா’ என ஒரு மனசு சொல்ல இன்னொரு மனசோ வண்டி தொலைந்து போலிசு ஸ்டேஷனுக்கு அலைந்த கதை,  இன்சூரன்சு கம்பெனிக்கு அலைந்தகதை, . வண்டியின் ஆர்  சியின் அசல் நகலை ஒப்படைத்துப் பின்  ஆராயிரம் ரூபாயுக்கு   செக் வாங்கி வங்கியில் போட்ட கதையைச்  சொல்லியது. ’ வாயை மூடு எதுவுமே நடக்காதது போல் உடன்  நட  உன்  அலுவலகத்துக்கு’ என்று யாரோ சொல்வது போல் இருந்தது. அது யாரென்று தேடிப் பார்த்தேன் எனக்குக் கண்ணில் படவேயில்லை.

 எப்போதோ என் வசமிருந்த டூவிலர்.  அதனை  அந்த வக்கீல் ஓட்டிக்கொண்டு ஜம்பமாய்ப் புறப்பட்டார்.  நான் ஒரு ஓரமாய் நின்றுகொண்டிருந்தேன். 

‘டெலிபோன் ஆபிசு சாருக்கு என்ன ஜோலி. போஸ்டாபீசுல   அதுவும்  இந்த நேரத்துல’ என்னை வக்கீலுக்குத் தெரிந்துதான் இருக்கிறது. எனக்குத்தான் அவரைத் தெரியவில்லை.

‘ இங்க  பி அண்ட்  டி கோவாப்ரேடிவ் ஸ்டோர் இருக்குதுல்ல . அதுல கொஞ்சம் மளிகை ஜாமான்  வாங்கணும் அதான்’

‘ட்யூடி  நேரமாச்சே இது’

‘ ஸ்டோர் மேனேஜர்  பாயிகிட்ட  நா  ஜாமான்  லிஸ்டு  குடுத்துட்டு போயிட்டா.  போட்டு வச்சிடுவாரு சாயந்திரம்வந்து எடுத்துக்குவேன்’’

எனக்குக் கூட  பேச  சரியாய்த்தான் வருகிறது நானே  எனக்குள் சொல்லிக்கொண்டேன்.

‘தப்பில்ல. பாத்துகுங்க. நா வரேன்’  சொல்லிய  அந்த வக்கீல் என் வண்டியில் தான் விர்ரென்று புறப்பட்டார்.

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment