16.
சங்கு
சுட்டாலும்.
வானிலை
அறிக்கை தயாரிப்போர் லேசு பட்டவர்களா, சென்னைக்கு ரெட் அலெர்ட்
சொல்லியிருந்தார்கள்.நான் குடியிருக்கும் வீட்டுக்குப்பக்கத்தில்
ஒரு நூறு அடி தூரம் நடந்தால் அடையாறு வந்துவிடும். மழை
ஆரம்பித்து விடாது இரண்டு
நாட்கள் பெய்யலாம் அது தாக்குப்பிடிக்கும்.
அப்புறம் ஜிவ் ஜிவ்வென்று அடையாற்றில் மழை நீர்
வரத்து ஏறுமுகம் காணும். அது நிரம்பி வழிந்தால் தண்ணீர்
எங்கள் தெருவுக்குத்தான் முதலில் நாணிக்கொண்டும் கோணிக்கொண்டும்
எட்டிப்பார்க்கும். பார்ப்பதற்கு இந்தப்பூனையும் பால்
குடிக்குமா என்பதுவாய்த் தெரியும்.நேரம் ஆக ஆக அதன் அசுரத்தனம் கூடிவிடும். ஆற்று
நீர் தெரு முழுதும் நிரம்பும். கோலம் போடும் தரை காணாமல் போகும்.
அப்போது தொடங்கி வீட்டில் இருப்போர்க்கு இரத்த அழுத்தம் கொஞ்சம்
கொஞ்சமாய் உயர ஆரம்பிக்கும்.
மின்சார
இலாகா மனிதர்கள் டப்பென்று விநியோகத்தை
நிறுத்தி, ஒரு வக்கிர அமைதிக்கு வீடு
திரும்பி விட்டால் மனம் பிறாண்ட ஆரம்பித்துவிடும். தெருவில்
பிரவாகிக்கும் மழை நீர். முதலில் அது வீட்டு
வாயிற்படியைத்தொடும். தெருக்கூட்ட வைத்திருக்கும் விளக்கமாறும் தண்ணீர் தெளித்துக்
கோலம் போட வைத்திருக்கும் பிளாஸ்டி வாளியும் மிதக்கும். புதுத் தண்ணீர் ஆடி ஆடி வந்து வீடு
சொந்தம் கொண்டாடிய பொருட்களை அச்சுறுத்தும். புழங்கும் செருப்புக்கள்
தலைகீழாய் மிதக்கத்தொடங்கும்.
கன
மழை என்ற அறிவிப்பு வந்தவுடனேயே வீட்டிலுள்ள பல சாமான்கள் மேல் தளத்தில் உள்ள
லம்பர் ரூமுக்கு இடம் மாறியிருக்கும். அப்படி லம்பர் ரூம் எதுவும்
இல்லை என்றால், கீழ் வீட்டு லாஃப்டிலேயே அவை
திணிக்கப்பட்டுவிடும். முக்கியமான தஸ்தாஜுகள் பண
விவகார அயிட்டங்கள் ரேஷன் கார்டு இத்யாதிகள் ஒரு ஹேண் ட் பேக்குக்கு
இடம் பெயறும். இரண்டு செட் துணிமணியோடு ஒரு சூட்கேஸ் பயணத்திற்கு ரெடியாகும். வெள்ள
நீர் புகுந்து வீணாகாமல் இருக்க டூவீலர்கள் கார்கள் எங்கேனும்
தூரமாய் மேட்டுப்பகுதியில் நிறுத்திவைக்கப்படும்.
வீட்டைப்பூட்டிவிட்டுக் கிளம்பி
முட்டிக்கால் தண்ணீரில் மேடான ரோட்டுப்பகுதிக்கு, ஹேண்பேக்கும் சூட்
கேசுமாய் அவரவர்கள் வந்துவிடவேண்டியதுதான்.
அப்படித்தான்
சகல பணிக்கைகளும் செய்துவிட்டு, என் மனைவியைக் கூட்டிக்கொண்டு
தியாகராயநகர் அண்ணன் வீட்டுக்கு ஒரு ஓலோ கார் பிடித்து
வந்தேன். பனகல் பார்க் சுற்றிலும் சாலையில் மழை நீர்
இரண்டடிக்கு இருந்தது. நாங்கள் பயணித்த ஓலோ கார் ’டொங்க் டொங்க்
’என்று பள்ளத்தில் இறங்கி திணறித் திணறி எழுந்தது.
‘இந்தத்
தும்பத்துக்கு நம்ப பெருங்களத்தூர் தேவலாமே’
‘நம்ப
வீட்ட தொட்டுகிட்டு அடையாறு. ஒருக்கால்
செம்பரம்பாக்கம் ஏரியையும் தொறந்து விட்டா
என்ன ஆவுறது அத யோசனை பண்ணில்ல இங்க கெளம்பி
வந்தம். ’ அவளும் நானும் பேசிக்கொண்டோம்.
மாம்பலம் ஸ்டேஷனை
ஒட்டிய ராமேஸ்வரம் தெருவில் ஒரு பழைய அபார்ட்மெண்ட். அதனில் கீழ்
தளம் மேல் தளம் அவ்வளவே. அங்குதான் அண்ணன் குடும்பம்
ஒரு ஃபிளாட்டில் குடியிருந்தது. வாடகை வீடுதான்.
‘வாடா
வா இந்த மழையில நீ அங்க என்ன செய்வ எப்பிடி
ஓட்டுவ, திரு திருன்னு முழிச்சிகிட்டு கெடப்பயேன்னு யோசனை
பண்ணினேன். பொண்டாட்டிய கூட்டிகினு நீ என்
வீட்டுக்கு வந்த வரைக்கும் சரி. கஞ்சியோ கூழோ ஒண்ணா குந்தி குடிக்கலாம்’
அண்ணிக்கும் மிகுந்த
சந்தோஷம்.
‘இந்த
மழை காத்து இல்லன்னாலும் நீங்க ரெண்டுபேரும் இந்த பக்கம் எட்டியா
பாப்பீங்க’ சொல்லி எங்களை அண்ணி அன்போடு வரவேற்றாள்.
அண்ணன்
வீடு ஒர் அறை வீடு. அந்த அறையில் பெரிய லாஃப்ட். அதனில் ஒரு பெரிய சூட் கேஸ்
படுத்துக்கிடந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். அண்ணி எங்கள்
இருவருக்கும் ஒரு கப் காபி கொடுத்தாள். பதமான சூடும் மணமும் காபிக்கு அழகு.
அண்ணி கொடுத்த காபி நன்றாகவே இருந்தது. எப்போதும் அப்படித்தான்
இருக்கும்.
‘என்ன
அண்ண அது ஒரு பெரிய சூட் கேஸ் லாஃப்ட்ல
உக்காந்து இருக்கு’
‘அது
அஞ்சி வருஷமா அங்கதான கெடக்கு. இப்பதான் நீ
பாக்குற கேக்குற’
‘நா
வீட்டு முன் ஹால்ல இருக்குற சோபாவுல குந்தி பேசிமுடிச்சி கெளம்பிடுவேன். ரூம்
உள்ள எல்லாம் வந்து பரணையில நீ என்ன
வச்சிருக்கன்னு எங்க பாத்தன்’
‘அதுவும்
சரிதான்’
‘வெளிநாடு
போறவன் தான் இப்பிடி பெரிய சூட் கேசு வச்சிருப்பான்’
‘ரொம்ப
சரி.. அது அமெரிக்கா மாமி சூட் கேசு’
‘
இருக்கட்டும் அது ஏன் அஞ்சி வருஷமா ஒன் வீட்டு பரணையில
குடியிருக்கு’
‘கேள்வி
சரிதான். நானும் அதுக்கு பதில் சொல்லணும்’
‘யாரு
அந்த அமெரிக்கா மாமி அது என்ன சமாச்சாரம்’
‘
இதே டி. நகர்ல பக்கத்துல மங்கேஷ் தெருவுல ஒரு மாமி இருந்தாங்க.
அவுங்களுக்கு ஒரே பையன். நல்லா படிச்சான். நல்ல உத்யோகம்
கிடச்சிது.அவன் அமெரிக்காவுல கலிபோர்னியா ஸ்டேட்ல இருக்கான். ஆனா ஒரு
வெள்ளக்காரிய காதலிச்சான் கட்டிகிட்டான். இந்த கலப்பு கல்யாணத்துக்கு
முந்திதான் இந்த மாமி அமெரிக்காவுக்குப் போயி
வந்துது. அப்ப அந்த அய்யாவும் நல்லாதான் இருந்தாரு. அப்பறம்
அய்யா காலமாயிட்டாரு. நா ஒனக்கு ரெண்டு மூணு மே சட்டவ
குடுத்தேன். யாவகம் இருக்கா. அமெரிக்கா மாமி குடுத்துதுதான் ’நீ
போட்டுக்கன்னு’ . அது ஏழெட்டு வருஷம் கூட இருக்குமே. நீ மறந்து
போயிருப்ப’
‘ஆமாம்
இப்பதான் நெனப்பு வருது எனக்கு. நீ
குடுத்தது எல்லாமே சின்னதும்
பெரிசுமா கட்டம் போட்ட சட்டைங்க. கருப்பு வெள்ளயா
கோடு குறுக்க போட்டு
இருக்கும். அந்த சட்டைய நா போட்டுகிட்டு
ஆபிசு கூட போனேன். எங்க ஆபிசுல அத பாத்துட்டு ஆச்சரிய பட்டாங்க.
’இதெல்லாம் ஏது. அய்யா பிளைனா போடுவீரு இப்ப என்னா கட்டம் கட்டமா இருக்கு’ன்னு
கேட்டாங்க. அண்ணன் எடுத்து, குடுத்து அனுப்பினதுன்னு சொன்னன்’
‘நா
எடுக்கறன் குடுக்கறன். அதெல்லாம் நம்மால ஆவுற கத இல்ல. விரலுக்கு தக்கனதான
வீக்கம். இந்த அமெரிக்கா மாமிதான் அமெரிக்காவுல இருக்குற அது புள்ள
போட்ட சட்டையெல்லாம் என் கிட்ட குடுத்து நீ போட்டுக்கன்னு சொன்னாங்க.
என் பொழப்பு எப்பிடி. அந்த சட்டைங்க எனக்கு சரிப்பட்டு
வருமா. அத நா ஒனக்கு அனுப்பி வச்சன்’
‘அப்பிடியா
சேதி. இது இப்பதான் எனக்கு தெரியும்’
‘மாமிக்கு
வயசு ஆயிடுச்சி. இனி மேலுக்கு மாமி தனியா
இருக்கவேணாம்னுட்டு மாமி யோட பையன் ஹைதராபாத்துல
ஒரு முதியோர் இல்லம் பாத்தாரு. அதுல அம்மாவ சேத்துக்க
ஏற்பாடு செஞ்சிட்டாரு. அங்கேந்தும் ஒரு ஆளு சென்னைக்கு வந்தாரு. மாமிய
ஹதராபாத்துக்கு அழச்சிகிட்டு போறதுக்கு. ஒரு அஞ்சி வருஷம் அந்த
மாமிக்கு இங்க வேண்டியது நான்
தான் பாத்து பாத்து செஞ்சன்.எனக்கும் அப்ப அப்ப செலவுக்கு பணம் குடுப்பாங்க.
மருந்து மாத்திர வாங்கி குடுப்பன். கடைத்தெருவுக்கு போனா கூட மாட போயி
வருவன்,பேங்குக்கு போவுணும்பாங்க. துணைக்கு போவென் வருவேன். ஒரு
ஒத்தாசைதான் வேற என்னா’
‘அப்புறம்
என்னாச்சி’
‘ஹைதராபாத்
முதியோர் இல்லத்துல அந்த மாமியே காலமாயிட்டாலும் அவுங்க
சவத்த எடுத்துபோட்டு அடக்கம் பண்றவரைக்கும் ஆவுற
செலவுக்கு அந்த மாமி மவன் காசு கட்டி
முடிச்சிட்டாரு. மாமி மூச்சு இருக்குறவரைக்கும்
சாப்பாட்டுக்கு மருந்து மாத்திரைக்கு துணிமணிக்கு
காசு அமெரிக்காவிலேந்து வந்துடும் பிறகென்ன.
இனிமேலுக்குதான் போயி எந்த ராட்சியத்த புடிக்க
போறாங்க அமெரிக்கா மாமி. எல்லாம் அவ்வளவுதான். அந்த ஹைதராபாத்
ஆளும் வந்தான். மாமிய இட்டுகினு போவ. ரெண்டு
பேருக்கும் ரயில்ல டிக்கட் புக் பண்ணிட்டாங்க.. என்னய
வீட்டுக்கு வரச்சொன்னாங்க. என் கிட்ட எல்லா
சேதியும் வெவரமா சொன்னாங்க.
இதுல நாதான் சொல்ல என்ன
இருக்கு. அவுங்க வூட்டுக்கு நா போயிருந்தனா மாமி
அவுங்குளுக்கு வேண்டியத துணிய மணிய, யாரு கண்டா எது
எதுவோ ஒரு பெட்டில போட்டு பூட்டினாங்க. என்னண்ட
குடுத்தாங்க.’ நீ நாளக்கி பொட்டிய எடுத்துகிட்டு வெடிய
காலம்பற ஏழு மணிக்கு எல்லாம் செண்ட்ரலுக்கு வந்துடு.
என்ன ரயிலு ஏத்து ‘ன்னு சொன்னாங்க. நானும் சரின்னேன்.
.’
என்னமோ நெனச்சி புள்ளய வளத்தேன். படிக்க வச்சேன். ஆளாக்குனேன். இப்ப இந்த கதிக்கு
ஆளு ஆயிட்டேன். காசு அனுப்பறான். அத சொல்லுணும். இல்லன்னுட்டா
அதுக்குதான் என்ன பண்ண முடியும் நாண்டு கிட்டுதான் சாவுணும்னாங்க.
பாவம். கண்லேந்து தார தார யா தண்ணி வந்துது.
அவ்வளவுதான். நா பொட்டிய தூக்கிகிட்டு வூட்டுக்கு வந்துட்டன். ‘ நாளைக்கு
நா செண்ட்ரலுக்கு உங்க பொட்டியோட வந்துடறேன்னு
சொல்லிட்டுதான் வந்தேன்.’
‘பொட்டி
பூட்டி யிருந்ததுதானே’
’
பொட்டிக்கு ரைட்டா நம்பர் பூட்டு போட்டிருந்தாங்க.
அது வெஷயம் தெரிஞ்சவங்கதான் தொறக்க முடியும்.
எல்லாராலயும் ஆவாது’
‘ஏன்
அண்ணே நீ ஒரு தரம் ‘யார் மேல தப்பு’ன்னு கதய குடுத்து
அனுப்பி அத சின்ன திரைப் படமா ஒரு மாமி எடுக்ககபோறாங்க.
அந்த கதைக்கு வசனம் ஒண்ணு எழுதி குடுன்னு கேட்டயே அது இந்த அம்மாதானா’
‘அவுங்களேதான்.’ அன்ணன்
சிரித்துக்கொண்டார்.
‘இந்த
சின்ன படத்தை எடுக்க கேமரா மென் தங்கர் பச்சான்
உதவுவாறான்னு நீ என்ன கேட்ட.. நானும் தங்கர் பச்சான் கிட்ட
போன்ல பேசுனேன் பத்திரகோட்டை தங்கர் பச்சான்
எனக்கு செனேகிதமாச்சே. அவுரு அப்ப பம்பாயில இருந்தாரு.
காதல் கோட்டைன்னு ஒரு தமிழ் படத்த இந்தில எடுத்தாங்க .’
‘நீ
கூடம்தான் சொன்ன அந்த தங்கர் பச்சான் பேசுனாரு, ’ வயசான
காலத்துல இந்த சின்ன சினிமா படம் எடுக்கற சோலி எல்லாம் அந்த
கெழவிக்கு தேவையான்னுட்டு’ அதே அம்மாதான்’
‘அப்பிடி
சொல்லு’
‘மேல
இருக்குற பொட்டி கதைக்கு வர்ரேன். மறுநா வெடிஞ்சிது. நா
பல்லு வெளக்கி காபி சாப்பிட்டேன். செண்ட்ரல் ஸ்டேசனுக்கு
போயாவுணுமே. மாமி என்னண்ட குடுத்த சூட்கேச எடுத்துகினு கெளம்புனேன். வீட்டு
வாசப்படி தாண்டுனேன். அப்புறம் ஒரு இருபது படி
கீழயும் எறங்குணும். இப்ப நீ ஏறி வந்தியே அதே படிவ தான். மொத
படில காலு வச்சன். எதோ வழக்கிடுச்சி. என் கையிலு பாரமான பொட்டி. பட
படன்னுது. தடுமாறிட்டேன். இருபது படியும் வுழுந்து வுழுந்து
பொரண்டு தரைக்கு வந்து கெடக்குறன். மாமி சூட்கேசு ஒரு பக்கம்
கெடக்குது, நா ஒரு பக்கம் கெடக்குறேன். பேச்சில்ல மூச்சில்ல. அக்கம் பக்கத்துல
இருந்தவங்க நா வுழுந்து கெடக்குறத பாத்துட்டு தண்ணி தெளிச்சி
எழுப்பி இருக்காங்க. ஒரு மணி நேரத்துக்கு எனக்கு நெகா இல்ல. உங்க
அண்ணிக்கி சேதிசொல்லி யிருக்காங்க. அண்ணியும் வூட்ட வுட்டு வந்து’
என்னடா இது தும்பம்னு’ என்கிட்டயே குந்தி இருந்தது.
நா விலுக்குன்னு எழுஞ்சிகிட்டன். ஏன் உழுந்தன் எப்படி உழுந்தங்கிறது
ஒண்ணும் வெளங்குல. மாமி குடுத்த சூட் கேஸ் என்னயே பாக்குது என்
முன்னாடி கெடக்குது. என்ன செய்வே. எங்க செண்ட்ரலுக்கு நா
போவுறது. இது என்னடா கஸ்டம். ரயிலுக்கு
போன அம்மா என்ன கதி ஆச்சோன்னு ஒரே கொழப்பமா போச்சி.
இனி நா போயி அந்த ரயில பாக்க முடியாது. அந்த
அம்மா இந்த பொட்டி யில்லாமலே ரயிலு ஏறியிருக்கும்னு முடிவு
செஞ்சென். நானே எழுஞ்சி மெதுவா ஒரு ஒரு படியா ஏறி மேல என்
வூட்டுக்கு போயிட்டன். அமெரிக்க மாமி பொட்டிய என் கூட இருந்தவங்க
கொண்ணாந்து வூட்டுல வச்சிட்டாங்க. பூட்டுன பொட்டி அப்பிடியே
கெடக்குது. நீ என்ன செய்வே. அந்த அம்மா அவ்வளவுதான் ஹைதராபாத் போயி
ருக்கும். பொட்டிய எடுத்து இதோ ஒசக்க இந்த
பரணையில வச்சன் அத்தோடு சரி.அந்த மாமிகிட்டேந்து இன்னக்கி வரைக்கும் எந்த சேதியும்
வருல.நா இந்த பொட்டிய எடுத்துகினு ஹைதராபாத் போயி யார எங்க தேடறதுன்னுட்டு
வுட்டுட்டன். பூட்டுன பொட்டி அஞ்சி வருஷமா அப்பிடியே
பரணையில கெடக்குது’
‘பொட்டில எதனா
காசி பவுனு நக நட்டுன்னு எதனா இருந்துச்சின்னா’
‘சரியா
போச்சி போ. அது உள்ளாற இருக்குறது எதுவும் நம்புளது இல்லே. அந்த
பொட்டிக்கு சாவியும் நம்பகிட்ட இல்ல’
‘நம்பர்
பூட்டுன்னு சொன்னியே’
‘ தப்புதான்,
அந்த ரகசிய நெம்பரு எனக்கு தெரியாதுன்னு வச்சிகயென்’
‘நா
இப்ப பொட்டிய எறக்குறன். உசுமான் ரோடுல எவனாவது பூட்டுக்கரன் கிட்ட பொட்டிய
கொண்டுபோறன். பொட்டிய தொறந்து என்னா இருக்குதுன்னுதான்
நாம பாத்துடுவமே’
‘என்ன
ரூவா நோட்டு எதனா கத்த கத்தயா வச்சிருப்பங்களா அந்த அம்மா’
‘இல்ல
என்னன்னு தெரிஞ்சிகிடலாம்’
அந்த
அம்மா கட்டிகிற நாலு பழம்பொடவங்க , இருக்கும். ஒரு
சமக்காளம் போர்வ ஒருதுண்டு இருக்கும். சில்வர் டவரா செட்டு
ஒரு தட்டு கொவளைன்னு எதனா இருக்கும். வேற ஒண்ணும்
இருக்காது’
‘அப்ப
என்னதான் ஆவுறது அந்த பொட்டி’
‘ ஒரு
சேதி சொல்ல வுட்டுட்டன். என் மோபைல் போன்ல
மாமிகிட்டேந்து எனக்கு ரெண்டு மிஸ்டு காலு இருந்திச்சு. நா
வுழுந்து எந்திரிச்சி
கொஞ்சம் உடம்பு தேவலாம்னுட்டு என் போன பாத்தேன்.
அந்த அமெரிக்கா மாமிக்கு போன் போட்டேன். தொட்ர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்னு
பதில் வந்துது. வுடுல அப்பறமும் போன் போட்டேன் ஸ்விட்ச் ஆஃப் னு சேதி
வந்துது. அத்தோட சரி. இண்ணைக்கு வரைக்கும் ஒரு சேதியும் இல்ல. நா என்ன செய்யறது.
வருஷம் அஞ்சாச்சி. இனிமேதான் சேதி வருமோ இல்ல அந்த அம்மா நல்லா இருக்குதோ இல்ல,
காலமே ஆயிட்டுதோ இல்ல , திடீர்னு ஒரு நாள் வந்து எம்பொட்டிய குடுன்னு
கேக்குமோ, அந்த அம்மா மவன் கிட்டயும் இந்த சேதி
போயிருக்கும் அவுரு ஒருநா வந்து எங்க அம்மா பொட்டி உங்க கிட்ட குடுத்துதுதாமே அத
என்கிட்ட குடுன்னு கேப்பாரோ’
‘ரொம்ப
டீப்பா போற அண்ணே’
‘போயிதான
ஆவுணும். மொதல்ல அது என் பொட்டி இல்ல. அது நம்பர்
பூட்டாலே பூட்டி இருக்கு. அத தொறக்குற துக்கு
அந்த ரகசிய நம்பரும் நமக்கு அந்த அம்மா சொல்லுல.
அப்பறம் அந்த பொட்டி மேல நமக்கு என்ன உரிமை
இருக்கு. பொட்டிய சும்மா வச்சிருக்கலாம். அவ்வளவுதான். வேற
எதுவும் செய்ய முடியாது’
‘நா
எதுவோ சுளுவா நெனச்சேன். இந்த நம்பர் பூட்ட பூட்டு ரிப்பேர்காரன்கிட்ட
காட்டி தொறந்துடலாம். அதுல எதாவது காசு பணம் இருந்துதுன்னா அண்ணன்
குடும்ப செலவுக்கு ஆவுமேன்னு’
‘தம்பி
அது தப்புல்ல. நமக்கு ஆயிரம் கஸ்டம் இருக்குலாம். அந்த அம்மா இத
நீ செண்ட்ரல் ஸ்டேசனுக்கு எனக்காக எடுத்துகினு வந்து
குடுன்னு சொன்னாங்க. என் நேரம் எனக்கு போக முடியாம ஆயிடுச்சி. யாரு எதிர்பார்த்தா
இப்படி எல்லாம் நடக்கும்னுட்டு. அதுதான் அப்பிடி ஆச்சின்னா
பெறகு அந்த அம்மா கிட்ட போன்லயும் பேச முடியல்ல.
அவுங்களும் என்கிட்ட இதுவரைக்கும் பேசுலயே. நா
என்ன செய்ய’
‘சரி
அந்த பொட்டி இப்ப என்னதான் ஆவுறது’
‘நீதான்
சொல்லேன் என்ன செய்யிலாம்னு’
‘நாந்தான்
சொன்னேன். நீ என் ரோசனைய பொறட்டி போட்டுட்டயே’
‘அது
நம்புளுது இல்ல. அந்த பூட்டயும் நாம அவுங்க அனுமதி இல்லாம்
தொறக்கறதுன்னா எனக்கு சம்மதமில்ல. அதுவுள்ள எந்த ஆஸ்தியிருந்தாலும் அது
நம்பளது ஆவுமா’
‘ஆவாது’ நான் அரை
மனதோடு பதில் சொன்னேன்.
‘
ஒரு சேதி உனக்கும் தெரிஞ்சி
இருக்கும். கேரளாவுல அந்த திருவனந்தபுரம்
பத்மநாப சாமி கோவில்ல இன்னும் ரெண்டு ரகசிய ரூம்பு தொறக்காம கெடக்கு
தாமே. அதுக்கு யாருதான் என்ன செய்ய. இருக்கு.அந்த மாதிரி இந்த பொட்டியும் அங்கனே
பரணையிலேயே கெடந்துபோவுது. ஆவுறது ஆவுட்டும் வுடுவியா. என்
மூச்சி நின்னே போனாலும் அந்த பொட்டிய நா
தொறக்க சம்மதிக்க மாட்டேன். அந்த அம்மா என்கிட்ட
சொன்ன வார்த்ததான் எனக்கு முக்கியம்’
நான்
அண்ணனை ஒரு முறை நன்றாக பார்த்துக்கொண்டேன்.a தருமங்குடி
கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து ஐம்பது ஆண்டுகள் முடிந்துபோனது.
வயது எழுபத்தி மூன்று. இன்று வரை அவருக்கு எந்த மாத
வருமானமும் நிரந்தரமாயில்லை. குடியிருக்க சொந்தமாய் ஒரு வீட்டில்லை.
தினமும் வயிற்றுப்பிழைப்புக்கு இந்த சென்னை மாநகரத்தை அனேகமாய்
நடந்து நடந்துதான் சுற்றி வருகிறார். அப்படியே சுற்றி
வந்தாலும் இத்தனை வைராக்கியம் இவர் நெஞ்சுக்குள் எப்படி குடிகொண்டு
இருக்கிறது என்று எண்ணிப்பார்த்தேன்.
எனக்குப்
பெருமையாகக்கூட இருந்தது. எல்லாமிருந்தும் என்ன? எனக்கு
இன்னும் சின்ன புத்திதான். என் மனம் ஒரு ஓரமாய் சொல்லிக்கொண்டே
இருந்தது.
‘அண்ணன்
தம்பி ரெண்டு பேருக்கும் இன்னும் என்னதான் பேச பாக்கியிருக்குமோ. டிபன்
சாப்பிடலாம் எழுந்திரிங்க. நேரம்
ஆவுதில்ல. வந்தவுங்க எப்ப சாப்டாங்களோ
என்னவோ’ சொல்லிய அண்ணி அன்போடு எங்களை சாப்பிட அழைத்தாள்.
இந்த மாதிரி ஒரு அண்ணி எல்லாம் அமைவதற்கு நம்
மக்கள் எங்குதான் போவார்களோ இனி என்கிறது மனம்.
----------------------------------------------------------------
No comments:
Post a Comment