Monday, April 26, 2021

கடலூர் தொழிலாளர் கல்வி மய்ய சிந்தனைகள் சில

 

 

கடலூர் தொழிலாளர் கல்வி மய்ய சிந்தனைகள் சில

நல்லதொரு சமுதாய அமைப்புக்காக  தம் உழைப்பைச்செலுத்துகின்ற எண்ணற்றோர் போற்றப்படவேண்டியவர்களாவர்.சுரண்டலற்ற சமுதாயம்  தமது லட்சியமாகக்கொண்டு வாழ்ந்த தலைவர்கள் நமக்கு என்றும் வழிகாடிக்கொண்டிருக்கிறார்கள்.மனித உழைப்பே மனிதனை பிற விலங்குகளின்று வேறுபடுத்தியது.மனித முயற்சி இற்றுப்போயிருந்தால் மனிதன் மரத்தின் மீதே இன்னும் உலவிக்கொண்டு இருந்திருப்பான்.உழைப்பும் ஊக்கமும் அவனை உயர்த்தி இன்று தகவல் பரிமாற்றப்புரட்சி வரை கொண்டு சேர்த்துள்ளது.இந்த உழைப்பினைச்சுரண்டி மனிதகுலம் ஒரு பக்கம் உயர்வதும் மறுபக்கம் ஏதுமற்று நிற்பதும் சகித்துக்கொள்ளமுடியாத ஒன்று. இந்தஞானத்தை ச்செரித்துக்கொள்ளவே நம்மை நாம் தகுதியாக்கிக்கொள்ளவேண்டும்.

நாம் நீர்த்துப்போகாமல் சமுதாயத்திற்காகப்பணியாற்றுவதே நமது வழிகாட்டிகளுக்கும் சிந்தனையாளர்களுக்கும் நேர்மையாக இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தும்.

என் கடன் பணி செய்து கிடப்பதே என்றார் நடு நாட்டு அப்பர் பெருமான்.பணி செய்வதும் அப்பணியை நமது அகங்காரத்திற்கு வித்தாகாது காப்பதும் வேண்டியே பணி செய்வதையும் கிடப்பதையும் பற்றிப்பேசுவார்.

சித்தாந்தமும் செயல்பாடும் ஒன்றையொன்று சார்ந்த விஷயங்கள். அவை ஒன்றையொன்று வளப்படுத்தவும் வலுப்படுத்தவும்முடியும்.  மார்க்சிய சித்தாந்தங்கள் மட்டுமே கற்றறிந்து முடங்கிப்போன  விமானப்படை

ஆ.சீனிவாசன்,சித்தாந்தம் தெளியாது  போராட்டச்செயல்பாடுமட்டுமே தொடர்ந்து கொண்டிருந்த புதுவை மஞ்சினி ஆகியோர் வீணாய்ப்போன இரு உதாரணங்கள்.. ஆ.சீனுவாசன் பிஜேபி கட்சிக்குப்போய் சிறுத்துத் தொலைந்துபோனார் புதுவை.மஞ்சினி பாமகவுக்குப்போய் பிறகு காணாமல் போனார்.  கற்பவை கற்றலும் அதன் வழி நிற்றலும் இணையான விஷயங்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

உலக அரங்கில் தாராளமயம் பேயாட்டம் ஆடுகிறது.செல்வந்த நாடுகள்பொருளாதார உச்சத்திலும் ஏழை நாடுகள் அதல பாதாளத்திலும் சிக்கித்தவிக்கின்றன.படித்த வர்க்கத்திற்கோ சுய நலன் மட்டுமே பிரதானமாகிக்கிடக்கிறது.

நமது நாட்டில் சமூக யதார்த்தங்கள் புறந்தள்ளப்பட்டு,உள்ளீடற்ற கலாச்சாரம் உள் நுழைய அனுமதி தரப்பட்டுள்ளது.பொதுத்துறை திட்டமிட்டு அழிக்கபடுவது தொடர்கதையாகிறது. சுதேசியும் சுயசார்பும் உலகமயத்தால் விளைந்த  காற்றில் பறந்துபோய்விட்டன. வாழ்வியல் மட்டுமே பிதானமாகிப்போன அரசியல் கபடர்கள் மத வாத சக்திகளோடு கை கோர்த்து நிற்பதைக்கண்கிறோம்.

இந்த மண்ணையும் மக்களையும் நேர்பட விளங்கிக்கொள்ளாது,அடிமனதிலிருந்து நேசிக்காது மார்க்சீயம் நமக்கு சரியாக வசப்படாது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

நாம் திரளாகக்கூடும்போதெல்லாம் ஆளுக்கொரு கை மண் எடுத்து ஒரு சிற்றூரின் குளத்தை ஆழப்படுத்துவோம். ஒரு சிற்றூரின் சாலையி ஒரு முழத்தை சீர் செய்குவோம்.

தாய்மொழி வளர்ச்சிக்குப்பாடுபடுவதும்,சமூக அவலங்களிலிருந்து எளியவர்களை க்காப்பதும்,சாதி சமய இன துவேஷக்கருத்துக்களை புறந்தள்ளக்கற்பதுவும்,இயற்கை ச்சீற்றங்கள் ஓங்கி எழும்போது எளியவர்களொடு துணை நிற்பதும்,பெண்டிரின், சிறாரின் நலன்களுக்கு அரணாக அமைந்து நிற்பதும் இயற்கை ச்செல்வ வளங்கள் கொள்ளை போகாமல் காக்கப்படுவதும் நம் பணித்தளங்ளாகும்.

மக்கள் சக்தி வெற்றி பெற ஒன்று பட்டு நிற்பதும் சிந்திப்பதும் செயல்படுவதும் ஆக்கம் தருவன எனத்தெளிவோம். ஆக அதற்குத்தக நம்மை ஒழுங்கமைத்துக்கொள்வோம்.

கூடுதலாய்ப்பணி ஆற்றுவதே கூடுதலாய்ப்பணி நிறைவுற நம்மைத் தகுதிப்படுத்தும்

----------------------------


No comments:

Post a Comment