Friday, March 29, 2024

கவிதை எஸ் ஆர் சி

 

எஸ்ஆர்சி கவிதை

16/3/24 சொல் புதிது கவியரங்கில் வாசித்த கவிதைகள்

அணிலைப் பார்த்தேன்
கலிபோர்னியாவில்
முதுகில் வரிக்கோடுகளில்லை
எங்கே என்றேன்
இலங்கைக்கு இராமன்
அணைகட்டுவதற்கு முன்பே
நாங்கள் குடிபெயர்ந்து
விட்டோம் குழுவாயிங்கு
ஆகத்தான் இல்லையது
பதில் சொன்னது.

எல்லோருமே காரில்
போகிறார்கள் அமெரிக்கர்கள்.
நடந்தால் சட்டை போட்டுக்கொண்ட
நாயோடு நடக்கிறார்கள்
ஹாய் என்கிறார்கள்
தேங்க்யூ என்கிறார்கள்
வேறு பேசுவது எல்லாம்
அவர் அவர்கட்கு
மட்டுமே விளங்கும்
நமக்கில்லை எதுவும்.

இந்தியர்கள் இருபத்து
நாலுமணி நேரமும்
வேலை செய்யத்தயார்
என்பதால் உலகெங்கும்
வரவேற்பு
சொந்த மண்ணில்
எழுவதே இல்லை அது
காசு பார்ப்பார்கள்
கணக்குப் பார்ப்பார்கள்
சட்டம் பேசுவார்கள்.

லாஸ் ஏஞ்சலிஸ்
சிவா விஷ்ணு கோவில்
உயரத்தில் பெருமாள்
ஏழுமலையான்
தாழ்ந்த நிலப்பரப்பில்
சிவன்
தமிழ்நாட்டு குருக்கள்
அர்ச்சகர்கள்
மடப்பள்ளி எல்லாமும்
லட்டு மட்டும் சுமாராய்
ஒன்றின் விலை ரூபாய் ஐநூறு.
கோவில் கோபுரத்தோடு
போட்டோ ஜோடி ஜோடியாய்
எடுத்துக்கொள்கிறார்கள்
எப்போதுமிருப்பவையோடு
இல்லாது போகிறவர்களின் ஆசை.

சாண்டியாகோ கடற்கரை
பசுபிக் பெருங்கடலின்
அனந்த சயனம்
கழுகுகள் கைக்கெட்டும் தூரத்தில்
அரை நிர்வாணத்தில்
வெள்ளையர்கள்
குறுக்கும் நெடுக்குமாய்
கருப்பர்கள்.
ஆங்காங்கே ஆசியாக்காரர்கள்.
அரேராம அரே கிருஷ்ண
பாடும் கீழ் பாய்ச்சி கட்டிய
வெள்ளையர்கள்.
அல்லேலுயா பாடி ஆடும்
ஆப்ரிக்க கிறித்துவர்கள்
பாருங்கள் பொடி மணலும்
பெருங்கடலும்
மந்தைமந்தையாய் மனிதர்களும்.

ஆரம்பிக்கிறது
பெங்களூரில் தண்ணீர்
பஞ்சம்
காவிரிதான் என் செய்வாள்
சென்னையிலோ வெள்ளம்
நவம்பரில் ஆண்டுக்காண்டு.
அடுத்த மகனோ
அமெரிக்காவில்.
கீலமாய் கிராமத்தில்
அப்பா விட்டுச்சென்ற வீடு.
சரிப்படவில்லை
எதுவும்
என் செய்வேன் நான்.

No comments:

Post a Comment