எஸ்ஸார்சி கவிதைகள்
பிழைப்பு
எல்லோரும் ஓர்விலை
எல்லோரும் ஓரினம்
அந்தப்பாரதிப் புலவன் தான் பாவம்
விடுதலைப் பெற்று
ஆயின எழுபத்தெட்டு
ஆண்டுகள்
கிராமப் பஞ்சாயத்து உறுப்பினராய் ஆவதற்கும்
வேண்டும் பல லட்சம்
சட்டமன்ற உறுப்பினர்
பாராளுமன்ற உறுப்பினர்
பல கோடிகள் இருந்தால் மட்டுமே
நின்று பார்க்கலாம்
சாதி வோட்டு வலு வேண்டும்
பொய்யும் புரட்டும்
பித்தலாட்டமும் கை வரவேண்டும்
பொதுத்தேர்தல்களின் நியதி
பொய்மையே வெல்லும்
மக்களால் மக்களுடைய மக்களுக்காக
மூடுங்கள் வாயை
எந்த நாடாக இருந்தாலும்
உலகெங்கும் இதுவே சட்டமாய்.
நீதியும் நிதியும்
கீழமை நீதிமன்றம் உன்னைக்குற்றவாளி
அறிவிக்கும்
மேலமை நீதி மன்றமோ
நிரபராதி என்னும்
வாதிடுகின்ற வக்கீலைப்பொறுத்து
நீதியின் தீர்ப்பு மாறும்
பொதுவாய் ஒரு நியாயமுமில்லையா?
ஐந்து நீதிபதிகளில் மூன்று நீதிபதிகள்
சொல்வது தீர்ப்பென்றால்
ஏதும் அறியாதவர்கள் அவ்விருவருமா?
சட்டம் ஒரு இருட்டறை
வக்கீலின் வாதம் ஒரு விளக்கென்றால்
உன் வங்கிக்கையிருப்பே வக்கீலைத்தீர்மானிக்கும்
ஆக நியாயங்கள்
வேறு
தர்மங்கள் வேறுதான்.
பழங் கணக்குகள்
காமராஜும் கக்கனும்
ஜீவாவும் வாழ்ந்து காட்டியது
அரசியல் வாழ்க்கை.
இணையாக வேறு ஒரு
தலைவரை
கூறிடத்தான் முடியுமா?
பெங்களூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
ஜெயலலிதாவின் சொத்துக்களை
தமிழக அரசிடம் ஒப்படை.
ஆறு டிரங்க் பெட்டிகளில் தங்க வைர நகைகள்
ஆயிரத்து ஐநூற்று இருபத்தாறு
ஏக்கர் நில ஆவணங்கள்
ஒப்படைப்பு
மாதம் முடிந்தால் பெற்றதோ
ரூபாய் ஒன்று மட்டுமே
ஊதியமாய்
மறந்திருப்பீர்கள் மக்களே.
வேட்டித் துண்டோடு பாராண்ட
இங்கிலாந்து அரசர் அரசியை
சந்தித்த மகாத்மாவின் தேசமிது.
No comments:
Post a Comment