Saturday, April 26, 2025

சிறுகதை எல்லாமே புரியணுமா.

 

எல்லாமே புரியணுமா?                               

 

என் பையன்  தனி வீடு ஒன்றை    சென்னைப்புறநகர்  பழைய பெருங்களத்தூரில் வாங்கியிருந்தான். அப்படி  அவன்  வீடு   வாங்கியதில்   வங்கிக்கடனுக்கு  மாதம் ஐம்பது ஆயிரம்  ரூபாய் ஈ எம் ஐ வந்தது. அவன் குடும்பம்  மனைவி  ஒரு பெண் குழந்தை  அவர்கள் மூவரும் என்னோடுதான் இருந்தார்கள்.  அவன் வாங்கிய வீட்டை வாடகைக்கு விட்டிருந்தான். அதில்  மாத வாடகையாய் மாதம் பத்தாயிரம் ரூபாய் வந்தது.

 வங்கிக்கு  கட்டுகின்ற ஈ எம் ஐ யுக்கும் வாங்கிய வீட்டை வாடகைக்கு விட்டு அதில் வரும் மாத  வருவாயுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. வீடு வாங்கும் ஒவ்வொருவரும் வங்கியில் கடன் கிடைத்தால் போதும் என்று குல சாமியை வேண்டிக்கொள்கிறார்கள்.  கடன் கொடுத்த  வங்கிக்கு திருப்பிக்கட்டப்போகும்  அந்த வட்டியை அவர்கள் கணக்குப்போட்டுப்பார்த்தால்  மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிவிடும். வீட்டுக்கடன் முடிவதற்கும் அதை வாங்கிய ஆசாமிக்கு சஷ்டியப்த பூர்த்தி வருவதற்கும் சரியாக இருக்கும். கண்புரை  இரத்த அழுத்தம் இரத்த சர்க்கரை எல்லாம் தொட்டு தொட்டுப் பார்த்துக்கொண்டு கண் சிமிட்ட ஆரம்பித்து விடும். பிறகு  எல்லாமே இறங்கு முகம்தான்.  ஒருவருக்கு அறுபது வயதானால்  வேலை செய்யும்   ஆபிசில் மரியாதை இருக்காது. எழுபது வயதானால் சுற்றத்தார் மதிக்கமாட்டார்கள். எண்பதைத்தொட்டால்  நம்மை  நமக்கே  பிடிக்காதாம். சொல்கிறார்கள். பட்டால்தான் எதுவுமே தெரிகிறது.

இந்த வங்கிக்கடன் எப்போது அடைவது. இன்னும் ஒரு இருபது ஆண்டுகளுக்கு அந்தக்கடனை இழுத்துக்கொண்டா  போவது.  எப்போது கடனிலிருந்து மீள்வது  பையன்  யோசித்தான். அவன் பார்ப்பது பழைய மகாபலிபுரம் சாலையில் ஒரு  ஐ டி கம்பெனி உத்யோகம். அவ்வப்போது வரும்  குடும்ப கஷ்டத்திற்கு எல்லாம் நாங்கள்   பழனி  மலை முருகனுக்குத்தான் வேண்டிக்கொள்வோம். அவனும் அந்தப் படிக்கு முருகனுக்குத்தான் வேண்டிக்கொண்டான். 

நேராகவே  பழனிமலைக்குப்போனான். அந்த முருகனிடம்  கோரிக்கையைச் சொல்லிவிட்டு வந்தான். ஒரு பத்து நாள் ஆகியிருக்கும். அவனுக்குக் ’கலிஃபோர்னியாவுக்குப் போய் வேலை பார்’ என்று அவன் அலுவலகத்தில் உத்தரவு போட்டுவிட்டார்கள். பாஸ் போர்ட்டும்  எச் ஒன் பி விசாவும்   தயார். அவன் ஒண்டியாய் கலிஃபோர்னியா சென்று வேலை பார்த்தால் செலவு அவ்வளவாக இருக்காது, காசு மீறும்  என்று யோசித்தான். வீட்டுக்கடன் விரைவில்  அடையும்.  வங்கிச் சிறையில் இருக்கும்  கிரயப்பத்திரம் வீட்டுப் பீரோவுக்கு  வந்துவிடும் என்கிற கணக்குப்போட்டான்.

 அவன் மனையாள் ’நானும்தான் கூடவே  வருவேன் ’ என்றாள். ஏற்கனவே அங்கு போனவர்கள்  அவனுக்குச் சொன்னார்கள். ஒரு ஆள் சம்பாரித்து கலிஃபோர்னியாவில் குப்பை கொட்ட முடியாது. கணவன் மனைவி இருவரும் வேலைக்குப்போகவேண்டும். இல்லா விட்டால் இராப்பட்டினிதான் என்றார்கள். அவன் மனைவியிடம் எவ்வளவோ சொல்லிப்பார்த்தான். ‘நானும்தான் படிச்சிருக்கேன்.  அங்கு வந்து  ஒரு வேல பார்ப்பேன்’ அவள் குரல் உயர்த்தினாள். ஆகப்  பேத்தியோடு  மூவரும்தான் கலிஃபோர்னியாவுக்குப்போனார்கள்.  பிறகு  அங்கு நடப்பதெல்லாம் அவர்கள் பிழைப்பின்  கதை. அதனில் நான் சொல்வதற்கு எதுவுமில்லை.  வீட்டின் வாடகையை வாங்கி மாதாமாதம்  அவன்  வங்கிக்கணக்கில் கட்டச்சொல்லியிருக்கிறான். அது மட்டுமே என் பணியாக இருந்தது.

பையன் வீட்டுக்கு யாரேனும் வாடகைக்கு வருவார்கள். ஆறு மாதம் இருப்பார்கள். பின்னர் வேறு ஒருவர் வருவார்  சற்றுக் கூடவும்  இருப்பார். வாங்கும் வாடகையில் வீட்டு வரி,, தண்ணீர் வரி கட்டுவது, பிளம்பர் எலக்ட்ரிசியன் கொத்தனார் ஆசாரி மேஸ்திரி பெயிண்டர் மோட்டார் மெக்கானிக் என அவ்வப்போது செலவு   போக மிஞ்சும் பாக்கியை  நான் வங்கிக்குச் சென்று கட்டிவிடுவேன். இப்படியாக காலட்சேபம் நடந்து வருகையில்  ஐடி ஊழியன் ஒருவன் பையன் வீட்டிற்கு வாடகைக்கு வந்தான். பார்ப்பதற்கு பள பள என்று  நம்பியார் கணக்காய் இருந்தான்.  முழுக்கை சட்டை . கருப்புக்கண்ணாடி. ராயல் என்ஃபீல்ட் வண்டி மின்னிக்கொண்டிருந்தது. வண்டியின் விலை எப்படியும் ஒன்றரை லட்சத்திற்குக் குறையாதுதான்.

‘சாருக்கு கல்யாணம் ஆயிடுச்சா’

‘ஏன் அப்பிடி கேக்குறீங்க’

‘இல்ல பேச்சிலருக்கு  நாங்க வீடு குடுக்கறது இல்லே’  நாங்கள் பேசிக்கொண்டோம். கையில் ஒரு சூட் கேஸ் வைத்திருந்தான். அதனை அவசர அவசர மாகத் திறந்தான். அதனுள் திருமணப்பத்திரிகை கத்தையாக இருந்தது. ’இதுதான் என் கல்யாணப்பத்திரிகை. இண்ணையிலேந்து சரியா இன்னும் ஒரு மாசம் இருக்குது என் கல்யாணத்துக்கு’ என்றான். அதற்குமேல் பேசுவதற்கு என்ன இருக்கிறது. ஆகக் கல்யாணம்  அவனுக்கு ஆகத்தான் போகிறது. ஆக நிம்மதி.  அந்த ஐ டி ஊழியனுக்கே  பையன் வீட்டை  வாடகைக்கு விட்டேன்.

வாடகைக்கு வீட்டை விட்டதிலிருந்து அவன் ரோதனை சொல்லிமுடியாது. மாத வாடகையைப் பத்து நாள் கழித்துத்தான்  தருவான். நான் நாலுதடவை அவனுக்குப் போன் போடுவேன். மெசேஜ் அனுப்புவேன். பிறகு                   ஜீ. பே வரும். ’சார் ஃபேன் ஓடும் போதே இறைச்சல் வருகிறது  பிளம்பரை அனுப்புங்கள் என்பான். ’தண்ணீர் மோட்டார் ஓடும் போது  கிர்ரிக் கிர்ரிக் என்று சவுண்ட்  வருகிறது’. அதனை வீடியோ பிடித்து  வாட்சாப்பில் அனுப்புவான். மெக்கானிக் யாரையாவது உடனே அனுப்புங்கள் என்பான். வாயிலில் செல்லும் ’தெருச்சாக்கடைக்கு  மூடியிருக்கும் சிமெண்ட் காங்க்ரீட் விரிசலாக இருக்கிறது. என் டூவீலர் ஏற்றி மேலே வைக்கவேண்டும். அதனை சற்று மாற்றுங்கள்’ என்பான். ’தண்ணீர்  டேங்க்கிலிருந்து வரும்போது பழுப்பு நிறமாய் வருகிறது பாருங்கள் பாருங்கள்’ என்று அலறுவான். டேங்க்கை சுத்தம் செய்ய  நான் ஆள் பிடித்து அனுப்பவேண்டும். ஒரு நாள் ’தோட்டத்துப் பக்கமாய் இருக்கும் கதவில் ஏதோ ஒரு காளான் வந்து கொண்டே இருக்கிறது. அதனைத் தினமும் பிய்த்து பிய்த்து போடுகிறேன். பார்க்கவே அருவருப்பாய்  இருக்கிறது. அந்தக் கதவை  இப்போதே  மாற்றுங்கள்’ என்றான். அதற்கு ஆசாரிக்கும்  வாள் பட்டறைக்கும்  மரவாடிக்கும்   அலைந்தேன்.   இன்னொரு நாள்,’வீட்டுக்கு வரும் கரண்ட் பில் ரொம்ப ஜாஸ்தி, அந்த  ஈ. பி. மீட்டரில் ஏதோ கோளாறு இருக்கிறது. மின்சார இலாகாவுக்கு உடனே புகார் எழுதுங்கள்’ என்றான்.தொல்லையோ தொல்லை. தாங்க முடியவில்லை.

 தலைவலிக்காரனைக்கொண்டு வந்து வீட்டில் வாடகைக்கு வைத்து விட்டோமே  எனக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

ஒரு நாள் நேராக வாடகைக்கு விட்ட  வீட்டிற்கே சென்றேன். வீடுதான் எப்படி எல்லாம் இருக்கிறது என்பதைப்பார்த்து வரலாம் என்று. மொட்டை மாடியில் ஒரு ஆலமரத்தின் சிறு செடி ஒன்று முளைத்துத் தழைத்து வளர்ந்து கொண்டிருந்தது.

‘இத கொஞ்சம்  கட் பண்ணி எறியலாமில்ல.  வீட்டு செவுத்துக்கு கேடு’ என்றேன்.

’பால் மரத்த நா கட் பண்ணக்கூடாது. அது  பெரிய தோஷம்’ என்றான் அவன்  ஐ டி ஊழியன். நானே அதனைப்பிடுங்கிப்போட்டேன். மொட்டை மாடியில் ஒரு  சிறிய அறை இருந்தது. அந்த அறையின் கதவு லேசாக சாத்தியிருந்தது. அதனை விலக்கிப்பார்த்தேன்.’ அடடா என்ன இது’    ஒர்  ஐந்து முகக் குத்து விளக்கு எரிந்துகொண்டிருந்தது. பக்கத்தில் ஒரு மட்டைத்தேங்காய். அதன் மீது குங்குமமும் சிவப்பும் அப்பிக்கிடந்தது.  மூன்று கடல்  சங்குகள். வெள்ளை ரோஸ் வண்ணத்தில். அவை   சைசிலும் பெரியவையாக இருந்தன. அவைகளில் துளசித் தண்ணீர் நிரம்பி யிருந்தது. அறையின் சுவரில் பத்து ஃபிரேம்  போட்ட சித்தர் படங்கள் ஆணியில் தொங்கிகொண்டு  இருந்தன. தாடி மீசை கோவணம் கையில் மணி மாலை என்று எல்லா சாமியாரும்  காட்சியானார்கள். தாயத்து கட்டிய  கருப்புக்கயறு ஒன்று  மேலிருந்து தொங்கிக்கொண்டிருந்தது. எனக்குக் கை கால்கள் நடுங்க ஆரம்பித்தன. இதை யெல்லாம் பார்த்ததில் குடியிருப்பவன் ஒரு மந்திர வாதியாய் இருப்பானோ என்கிற அய்யமும் முளைத்தது. நான் அந்த அறையைப்பார்த்தது   அவனுக்குத் தெரியாது. குடியிருப்பவனைத்தேடி னேன். அவன் வாயிலில்  ஒய்யாரமாய் நின்று கொண்டிருந்தான்.  அவன் மனைவி, சினிமா நடிகை போல்  அவனுடன் இருந்தாள். அவன் அவளோடு கொஞ்சி கொஞ்சிப் பேசிக்கொண்டு இருந்ததைப்பார்த்தேன்.

’ சார் என் மிசஸ் ‘ என்றான். அவள் ‘;நமஸ்காரம்’ என்றாள். நான் அவளை ஒரு முறை நன்றாகப்பார்த்துக்கொண்டேன். அழகாகத்தான் இருந்தாள். அவளுக்கும் ஐ டியில்தான் உத்யோகம்.

‘சார் மட்டும்தான்  இப்ப இங்க இருக்காரு. அப்ப அப்ப  இங்க எட்டிப்பாப்பாரு அவ்வவளவுதான். மத்தபடி  எங்க குடும்பம் இங்க இல்ல. வேற வீடு பாத்து  அங்கதான் நாங்க குடியிருக்கறம்.’’ என்றாள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

 மிக நெருக்கமான  நண்பர் ஒருவரிடம்  யோசனை கேட்டேன். ‘ இதானே, நீ விடு நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்றார். அவரேதான் ஒரு நாள் என் பையன் வீட்டுக்குப்போனார். ’மோட்டார் ஓடும் போது  ஏதோ சத்தம் வருகிறதாமே  அதனைப்  பார்த்து  விட்டுப் போகிறேன் என்றார். மோட்டார்  ஃப்யூசை கையோடு  எடுத்துக்கொண்டார். ‘ இந்த போர்ல தண்ண சுத்தமா  இல்ல. அதான் மோட்டார் கர்ரு கர்ருன்னு இழுக்குது.   புதுசா வேற  ஒரு  போர் போட்டதான்  தண்ணி.வரும்’   குடியிருப்பவனிடம் சொல்லிவிட்டுப்புறப்பட்டார்.

குடியிருப்பவன் எனக்குப் போன் செய்து ‘ சார்  போர்ல தண்ணி இல்ல.  புதுசா போர் போடுணும்னு மெக்கானிக் சொல்றாரு’ என்று ஆரம்பித்தான்.  ‘ அவர் இந்த சேதிய என்கிட்ட சொல்லிட்டாரு, அமெரிக்காவுல இருக்குற பையன கிட்ட இதச் சொன்னேன்.  இன்னும் மூணு மாசத்துல இந்தியா வந்துடறேன். அங்க வந்து எதுவானாலும்  நான் பாத்துகுறேன்னு சொல்லிட்டான். நீங்க வேற வீட்ட  பாத்துகுகுங்க’ என்றேன்.

மூன்று நாட்கள்தான் ஆகியிருக்கும். வீட்டுச்சாவியைக்கொண்டு வந்து கொடுத்தான்.வீட்டுக்குக்கொடுத்திருந்த அட்வான்சை வாங்கிக்கொண்டான். அந்த தாடிவைத்த  பத்து சித்தர் படங்கள், சங்குகள் மணிமாலை கருப்புக்கயறு எல்லாம்  அவன் எங்கு கொண்டு வைத்திருப்பான். அவன் மனைவியும் அவைகளை எல்லாம்பார்த்திருப்பாளா என்கிற கவலை இல்லாமலில்லை.  பையன் வீட்டு இரும்புக் கேட்டில்  மீண்டும் ‘ டு லெட் போர்டு’ மாட்டி வைத்திருக்கிறேன். நல்ல மனுஷாள் யாரும் வாடகைக்குக் கேட்டால் எனக்கு மறக்காமல் போன் போடுங்கள்.

--------------------------------------------------------------------

 

  

 

 

 

 

 

No comments:

Post a Comment