Saturday, April 12, 2025

கவிதைகள் 3

 

 

 

எஸ்ஸார்சி கவிதைகள்

 

 

கும்பமேளா

 

கும்பமேளாவில் நெரிசல்

கோடி கோடியாய் மக்கள் கூட்டம்

நூற்று நாற்பத்து நான்கு ஆண்டுகட்கு

ஒருமுறை வரும் பெரு விழா

உலக அளவில் இத்தனை

மக்கள் திரள்

கூடுவதில்லையாம் எங்குமே

நெட்டித்தள்ளிய நெரிசலில் முப்பதுபேர் பலி

எண்ணற்றோர் காயம்

தண்ணீத் தரமிழந்து தவிக்கிறது

ஆயிரம் ஆண்டுகள்  ஆகியிருக்கலாம்

சித்தர்கள் பாடிப்போனார்கள்

கங்கைச் சங்கமத்தில்

சதா சர்வ காலமும் வாழ்ந்து மடியும்

மீனும்  தவளையும் நண்டும் நத்தையும்

பாம்பும்பெற்றிடுமோ சொர்க்கமென்று

நீயே அது  ஆவாய்- தத் துவம் அசி

நவின்றிட்ட தேசமிது

பாவிக்கத்தான் ஆட்களில்லை

பாரதத்தில்.

 

நியாயத்தலம்

 

சென்ற முறை தேர்தலில்

வென்றது ஜோபைடன்

அவர்  நாற்காலியில் அமர்வதற்குள்ளாய்

எத்தனைக் கலகம்

எத்தனை உயிர்ப்பலி

அமெரிக்கக் காங்கிரசில் அன்று

நிகழ்த்திய அக்கிரமத்திற்கு

சிறையிலிருந்தவர்கள்

அத்தனைபேரையும் மன்னித்து மொத்தமாய்

விடுதலை செய்தார் டொனால்ட் டிரம்ப்

என்ன அமெரிக்க மக்களே

யாரைத்தேர்ந்தெடுத்து

அரியணைக்கு அனுப்பி வைத்தீர்

மக்களாட்சி மத்துவத்தில்.

 

எது தெய்வம்?

 

தெய்வம் என்ற ஒன்று

தன் மக்களை மட்டுமே

பார்த்துப் பார்த்து

 காக்குமென்று சொன்னால்

அது தெய்வமாக இருக்குமா

எந்த மதமாக இருந்தாலென்ன

கடவுளின் குணங்கள் வேறுபடுமா/

உலகத்தை ஒரு குடும்பமாகப் பார்க்கச்சொன்னதுதான்

இராமனின் இந்து மதம்

பகை வளர்த்துப்பயன் பெறுவது

என்ன குணமோ

எந்த நாடோ எந்த இனமோ

அன்பை அடிவயிற்றிலிருந்து

அனுசரிக்கத்தெரியாதவர்கள்

பூமிக்குச் சுமையாய்

மட்டுமே வரலாற்றில்.

 

 

 

லாஸ் ஏஞ்சலிசில் தீ

 

அங்கங்கே எரிகிறது தீ

காட்டுத்தீ

கலிஃபோர்னியாவில் பூகம்பம் வருமென்று

அது மனித உயிர்களைக்

குடிக்குமென்று

மரத்தாலான வீடுகளை

பெரும்பாலும் அமைத்திருக்கிறார்கள்

காட்டுத்தீ எரிகிறது

காற்று அடிக்கிறது செமையாய்

ஆயிரம் தீயணைப்பு வண்டிகள்

வானூர்திகள் தீயை அணைக்கிறது

லட்சம் லட்சமாய்  மக்கள்  தங்க வைக்கும் கூடாரம்

நோக்கிப் பயணிக்கிறார்கள்

கனடாவை இணைக்கலாம்

பனாமாவைக் கைப்பற்றலாம்

மெக்சிகோவைப் பணியவைக்கலாம்

ஓயாமல் வக்கிரமாய்க்

 கொக்கரிக்கிறார் டொனால்ட் டிரம்ப்.

-----------------------

 

 

 

 

 

No comments:

Post a Comment