பரஸ்பரம்
கந்தசாமி என் நண்பன்தான்
என்னை மொபைலில் அழைத்தான். எப்போதாவது போனில் தொடர்பு
கொள்வான். நீண்ட நேரம் பேசுவான். என் பால்யகாலத்து
சினேகிதன். நானும் அவனும் முதுகுன்றத்தில் டெலிபோன் இலாகாவில் ஒன்றாய் வேலை செய்தவர்கள். அவனுக்கு ஜெயங்கொண்டம் அருகே டி. பழூர் சொந்த ஊர்.
அந்த ஊருக்கு இனிஷியல் டி. அது
தாதம்பேட்டை,, அருகிலிருக்கும் பெரிய
ஊரரைக்குறிக்கும். எனக்குச்சொந்த ஊர் முதுகுன்றம்
சிதம்பரம் செல்லும் சாலையில் இருக்கிற தருமங்குடி. இருவரும்
முதுகுன்றம் அய்யனார் கோயில் தெரு சேக்கிழார்
லாட்ஜில் ரூம் எடுத்துத் தங்கியிருந்தோம். பேச்சிலர்கள் தங்கியிருக்கும் லாட்ஜுக்கு எல்லாம் போய் பெரிய புராணத்து சேக்கிழார் பெயரை வைப்பார்களா
என்ன. நாங்கள் தங்கியிருந்த லாட்ஜுக்கு அப்படித்தான்பெயர் வைத்திருந்தார்கள். முதுகுன்றம் நகரில் அனேக மாமி
மெஸ்கள் உண்டு. கல்பாத்தி மலையாள மாமி ஒரு மெஸ் வைத்திருந்தார்கள். அந்த மெஸ்ஸில்தான் நாங்கள் ஒன்றாய்ச் சாப்பிடுவோம்.
எப்போதேனும் செம்பட்டையாய்த்தண்ணீர் இரண்டுகரைகளையும்
தொட்டுக்கொண்டு ஓடும் மணிமுத்தாறு, ஐந்து ராஜ கோபுரங்கள், ஆழத்து விநாயகர் என அருள்பாலிக்கும் பழமலையான் திருக்கோயில், கோர்ட்டுக்கு எல்லாம் போக முடியாத சேவார்த்திகள் பிராது எழுதி சூலத்தில் கட்டினால் சிவில் கேசுகள் மட்டுமே பார்த்துப்பார்த்து நியாயம் வழங்கும் கொளஞ்சியப்பர் கோயில், அப்படியே சேவார்த்திகளின் கிரிமினல் கேசுகள் மட்டுமே விசாரணைக்கு
எடுத்துக்கொண்டு குற்ற தண்டனை
வழங்கும் வேடப்பர் கோயில் என முதுகுன்றத்தைச்
சுற்றிச் சுற்றி வருவதும் உண்டு. பேச்சிலர்கள் தங்கியிருக்கும் லாட்ஜுக்கு எல்லாம் போய் பெரிய புராணத்து சேக்கிழார் பெயரை வைப்பார்களா என்ன.
நாங்கள் தங்கியிருந்த லாட்ஜுக்கு அப்படித்தான்பெயர் வைத்திருந்தார்கள்.
கந்தசாமி கணக்கில்
கெட்டிக்காரன். கையெழுத்தும் முத்து முத்தாய் இருக்கும். அப்படி இப்படி என்று எங்கு
எங்கோ பரிட்சை எழுதப்போய் வருவான். வள்ளுவம்
பொய்க்குமா என்ன. முயற்சித் திருவினை ஆக்கியது. அவனுக்கு கனரா வங்கியில் நல்ல வேலை கிடைத்தது. முதுகுன்றம்நகரை விட்டு திருச்சிக்குப்போனான். எப்போதேனும் என்னிடம் பேசுவான். கடிதங்கள் சில காலம் எழுதினான்.பின்
நிறுத்திக்கொண்டான். உலகம்தான் கடிதம் எழுதுவதை அறவே நிறுத்திக்கொண்டு விட்டதே.
ஆண்டுகள் ஓடின. ஆகா இப்படி எல்லாம் காலம் தன்னை சுருக்கிக்கொண்டு ஓட்டமாய் விடும் என்று நான் எண்ணியதில்லை. அவனும் பணி ஓய்வு பெற்று சென்னையில்
ஒரு அபார்மெண்ட் வாங்கிக்கொண்டு செட்டில் ஆனான். நானும் அப்படித்தான் சென்னையில் தங்கிவிட்டேன்.. அவனுக்கு
இரண்டு பையன்கள். எனக்கும் இரண்டு பையன்கள்.
என் பெரிய பையன் கலிஃபோர்னியாவில் அவன் குடும்பத்தோடு
,சின்னவன் ராமமூர்த்திநகர் பெங்களூரில், கிழமாகிவிட்ட நானும் என்னவளும் சென்னைக்கும் பெங்களூருக்கும் ஷண்டிங்க்
அடித்தபடிக்குக் காலம் ஓடிக்கொண்டிருந்தது.
என் நண்பன் கந்தசாமிக்கு இரண்டு பிள்ளைகள் பெரியவனுக்கு
க் கல்யாணம் ஆவதற்கு முன்பாகவே சின்னவன் முந்திக்கொண்டு
விட்டான்.அவன் நல்லவன் தான் அவன் ஜாதகம் அப்படி.
அவன் தான் என்னிடம் சொன்னான். பெரிய பையனுக்கு
ரொம்பநாளாக பெண் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் அமையவில்லை நான் என்னதான்
செய்வது என்பான். இந்தக்காலத்தில் ஆண்பிள்ளைகளில் சற்று சூட்டிகை இருந்தால்தான் கல்யாணம்
கில்யாணம் எல்லாம் ஆகும்போல் இருக்கிறது. இல்லாவிட்டால்
ஒண்டிக்கட்டைதான். கடைசிவரைக்கும் அப்படித்தான். பார்ப்பவர்கள் எல்லாம் பாவம் என்றுதான் சொல்வார்கள்.
அவன் மொபைலில் என்னை அழைத்தான் என்கிற அந்தப்பல்லவிக்கு மீண்டும் வந்து விடுகிறேன்.
‘நா கந்தசாமி பேசறேன்’
‘சொல்லுப்பா’
‘சவுக்கியமா, எப்பிடி இருக்கே’
‘சவுக்கியம்’
‘என் பெரிய பையனுக்கு கல்யாணம் வச்சிருக்கேன்’
பெரியப்பா பையனுக்குக்
கல்யாணம் வைத்திருக்கிறேன் என்றுதான் அவன் சொல்வதாய் என் காதில் விழுகிறது.
‘நா எங்க வரப்போறன் சொல்லு. கல்யாணம் எங்கே என்றேன்’ பெரியப்பா
பிள்ளை கல்யாணத்துக்கு எல்லாம் நம்மை எதற்கு இந்த
பிஸ்து அழைக்கிறான் என் மனதில் நினைத்துக்கொண்டேன்.
‘திருச்சி ஸ்ரீரெங்கத்தில் ஏ ஆர் மண்டபத்தில்’
அவன் பெரிய பையனுக்குக் கல்யாணம் என்றாலும் போய்வரலாம். பெரியப்பா பையனுக்குக் கல்யாணம் என்று அவன் சொன்னதாய்த்தானே
நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
‘ மண மக்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்’
‘அப்ப நீ வரல’
‘சாரிப்பா’ முடித்துக்கொண்டேன்.
அவன் போனை வைத்துவிட்டான். நானும் அந்தக்கல்யாணத்தையே மறந்து
போனேன். ஒரு நாள் என் திருச்சி நண்பன் தாயுமானவன் எனக்குப் போன் செய்தான்.
‘என்னப்பா எப்பிடி இருக்கே’
‘சவுக்கியம்தான் நீ எப்பிடி’
‘’கந்தசாமி பெரிய
பையனுக்குக் கல்யாணம் நடந்துது. உனக்கு ரொம்ப வேண்டியவனாச்சே. நீ குடும்பத்தோட வருவேன்னு
எதிர்பாத்தேன். ஏமாந்துதான் போனேன். நீ வரலேயே
ஏன்? என் கிட்ட அவன் நீ கல்யாணத்துக்கு வரலேன்னு வருத்தப்பட்டு சொன்னான்.’
‘என்னது அந்தக் கல்யாணம் யாருக்குன்னு நீ சொல்ற’
‘கந்தசாமி பெரிய பையனுக்குத்தான்’
‘என் கிட்ட பெரியப்பா பையனுக்குக் கல்யாணம்னு சொன்னான்.
அதுக்கெல்லாம் நா எங்கப்பா வர்ரதுன்னு டக்குன்னு
முடிச்சுனூட்டேன்’
‘சரியாபோச்சி. சாக்ஷாத்
அவன் பெரிய பையனுக்குதான் கல்யாணம். நானும் என் வைஃபும் போயிட்டு வந்தோம்’
‘ என்னடா இது விஷயம் இப்பிடி ஆயிபோச்சி’
‘சரி சென்னையில்தான இருக்கே அந்தக் கல்யாணத்த ஒரு நா போய் விசாரிச்சிடு’
‘சரி அப்படியே செய்யறேன்’
நான் போனை வைத்துவிட்டேன். வாட்சாப்பில் கந்தசாமியின் பெரிய
பையன் கல்யாணப்பத்திரிகையையும் தாயுமானவன் எனக்கு அனுப்பியிருக்கிறான். அதனைத் திறந்து
பார்த்தேன். கந்தசாமியின் ஜேஷ்ட குமாரன் திருமணம் என்பது உறுதியானது. எனக்கு என்னமோ
போல் ஆகி விட்டது. நண்பனின் சின்ன பையனுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது. அவன்
ஒரு பெண்ணைக் காதலித்தான். அவன் ஜாதகம் அப்படி. ஏழில் சுக்கிரன் உச்சம். அண்ணனுக்கு
முன்பே தம்பிக்குத் திருமணம் காதும் காதும்
வைத்த மாதிரி நடந்து முடிந்தது. அந்தத் திருமணத்திற்குக் கந்தசாமி யாரையும் அழைக்கவும் இல்லை. பெரிய பையன்
திருமணத்திற்கு இருக்கும் போது அது அடுத்தவனின்
அவசரக் கல்யாணம். கந்தசாமி என்ன செய்வான். அவனுக்கு மனசே சரியில்லை.
ஆனால் இதுவோ பெரிய
பையனின் கல்யாணம் அவனே பெண் பார்த்துக் கல்யாண
ஏற்பாடு எல்லாம் செய்து முடித்திருக்கிறான். எல்லோரையும் அழைத்து இருக்கிறான். பத்திரிகை
அடித்து எல்லோருக்கும் அனுப்பி இருக்கிறான். பெரிய மண்டபம் பார்த்து ஸ்ரீரெங்கத்தில் கல்யாணம். போகாமல்
இருந்து விட்டோமே. பெரிய தப்பு. பெரிய தப்பு என்று எனக்கு நானே
அனேகதடவை சொல்லிக்கொண்டேன்.
இன்றைக்கு முப்பது ஆண்டுகளுக்கு
முன்னர் கந்தசாமிக்குக் கல்யாணம் கும்பகோணத்தில் நடந்தது. நானும் என் மனைவியோடு
கல்யாணத்துக்குப்போயிருந்தேன். கா;லையில் கந்தசாமிக்குத் திருமணம். தொடர்ந்தாற்போல் அதே மண்டபத்தில் மணமக்களை வாழ்த்தி ஒரு கூட்டம்.
அந்த மைக் வைத்தகூட்டத்தில் மணமக்களை வாழ்த்திப்பேசினேன். அது இப்போதும் நினைவுக்கு வருகிறது. நண்பன் கந்தசாமி வீட்டில் நடந்த பெரிய பையனின் கல்யாணத்திற்கு
இப்படிப் போகாமல் இருந்துவிட்டோம். பெரிய மடத்தனம்
என்று சதா மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. நேராக
ஒரு நாள் கந்தசாமி வீட்டிற்குச்சென்று அவன் பையன் கல்யாணத்தைக் கட்டாயம் விசாரித்து வரவேண்டும் என்று யோசனையில் இருந்தேன்.
நேரம்தான் சரிப்பட்டு வராமல் இருந்தது. ஏதோ தள்ளிக்கொண்டே போனது.
ஒருநாள் திடீரென்று கந்தசாமி என்னை மொபைலில் அழைத்தான்.
‘என்னப்பா எப்பிடி இருக்கே’
‘நா நல்லா இருக்கேன் உன் பையன் கல்யாணம் நல்லா ஆச்சா. திருச்சி தாயுமானவன் சொன்னாரு. அவர் கல்யாணத்துக்கு
தன் மனைவியோட நேரா வந்திருந்தாராமே’
‘ஆமாம் வந்திருந்தார். அவருக்கு உடம்பு முடியல்லதான். அவர் ஸ்ரீரெங்கத்துலயேதான இருக்காரு. கல்யாணமும்
அங்கதான. எப்படியோ சமாளிச்சிகிட்டு வந்துட்டாரு. அது சரி நீ பெங்களூர்லேந்து சென்னைக்கு எப்ப வந்த’
‘நான் இப்பதான் வந்தேன்’ சமாளித்துக்கொண்டு பொய் சொன்னேன்.
‘பெங்களூர்லேந்து நீ எங்க ஸ்ரீரெஙம் வரப்போற. அதான் நீ அப்பவே சொல்லிட்டயே’
‘ஒரு நா உன் வீட்டுக்கு
வைஃபோட வரேன் . தப்பா எடுத்துக்காத.
கல்யாணத்துக்கே நா வந்துருக்கணும்’
‘வா. எப்ப வேணுன்னாலும் வா. யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம்’
கந்தசாமி போனை வைத்துவிட்டான்.
பையன் கல்யாண விஷயமாய் பேசும்போது ‘ நீ எங்கே இருக்கிறாய்
என்றான்.நான் பெருங்களத்தூரில் இருக்கிறேன் என்றேன். அது அவனுக்கு நான் பெங்களூரில் இருப்பதாகக் காதில் விழுந்திருக்கிறது.
அதே மாதிரி அவன் என் பெரிய பையனுக்குக் கல்யாணம் என்றானே அது பெரியப்பா
பையனுக்குக் கல்யாணம் என்றுதான் என் காதில்
விழுந்திருக்கிறது.
இவை நிற்க பெரியப்பா
குடும்பத்திற்கும் இதே கந்தசாமிதான் பொறுப்பாய்
இருந்தான் என்பது எனக்கு முன்னமேயே தெரிந்த விஷயம்.
--------------------------------------------------
No comments:
Post a Comment