Saturday, April 12, 2025

தமிழ் மணம் நுகர்வோம்

 

 

 

தமிழ்மணம் நுகர்வோம்.

 சங்க இலக்கியமான எட்டுத்தொகையில்  நற்றிணை  முதல் நூல். அக நூலான இந்நற்றிணையில் வரும்  177 வது பாடல்.  காமுற்று வருகிறான் தலைவன். தலைவனைக்  கவனப்படுத்துவதாக தோழி இவண் கூறுகிறாள்.

‘இதோ நிற்கிறதே  இது வெறும்  புன்னை மரம்தான் என்று எண்ணிவிடாதே.   வெண்மணலில் புன்னை விதையைப்  புதைத்து  வைத்து மூடுவோம்.  அது எங்கே புதைந்து இருக்கிறது காட்டு காட்டு எனச்  சிறார்களொடு  விளையாடியது ஒரு  காலம். அன்று ஒரு நாள்  மழை வந்து விட்டது.   வெள்ளை மணலில் புன்னை விதையை  மூடிப்புதைத்து விட்டுச்சென்றோம்.   நான்கைந்து நாட்களில் அப் புன்னை விதை மரமாக வளர்ந்தது. அது வளர  வளர நெய்யொடு இனிய பாலை அன்றோ அத்தலைவியின் தாய் ஊற்றினாள்.  அம்மரத்தைத்  தலைவிக்குச் சகோதரி என்றாள்.  தலைவியினும் சிறப்பு மிக்கவள்தான் அப்புன்னை. அய்யய்ய !    இணையே  உம் தலைவி  நாணுகிறாள்.  அவளுக்கு வெட்கமாக இருக்கிறது.. தலைவனோடு சோதரப்புன்னை மரத்தருகே எப்படித்தான்  அவள் நகைத்து விளையாடுவது? ’

’நற்றிணைப்பாடலைக்காண்போம்.

விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி

மறந்தனம் துறந்தகாழ் முளை அகைய

நெய்பெய் தீம்பால் பெய்து இனிது வளர்ப்ப

நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று

அன்னை கூறினள் புன்னையது சிறப்பே

அம்ம! நாணுதும் நும்மொடு நகையே’.

 

-எஸ்ஸார்சி

No comments:

Post a Comment