Tuesday, August 12, 2025

இங்கும் அங்கும் கவிதை நூல்

 

இங்கும் அங்கும்    கவிதை நூல்

 

எஸ்ஸார்சி என்னும் புனைப்பெயரில் எழுதிவரும் எஸ்.ராமச்சந்திரன் கடலூர் மாவட்டம் தருமநல்லூர்க்காரர். சுந்தரேசன் மீனாட்சி  இணையருக்கு 04/03 1954 அன்று பிறந்தவர். அண்ணாமலை, மதுரை காமராசர் பல்கலைக்கழகங்களில் பயின்றவர்.

இக்கவிதைநூல்  எஸ்ஸார்சியின் 36 வது நூலாகும். மனித நேயம் நிறைந்த மார்க்சியத்தின்பால் ஈடுபாடு  உடையடவர். படைப்பு இலக்கியங்களில் மனித மாண்பு தேடுபவர். குறிஞ்சிவேலனின் திசை எட்டும் மொழிபெயர்ப்பு இதழோடு நெருக்கமாய்ப் பயணிப்பவர். தமிழக அரசு திருப்பூர் இலக்கியச்சங்க விருது  சேலம் தாரையார் விருது என  அனேக விருதுகளைப்பெற்றுள்ளார். இவருடைய படைப்புகள் சில  பல்கலைக்கழகங்களில் பாட நூற்களாக இடம்பெற்றுள்ளன.

‘இங்கும் அங்கும்’  எஸ்ஸார்சியின் ஆறாவது கவிதை நூல்.


Sunday, August 10, 2025

கவிஞர் பி கே பி

 

 கவிஞர் பெரியசாமியின் கவின்மிகு கவிதைப்பயணம்

 

’வாழ்வை வெற்றிகொள்’ என் இனிய நண்பர் கவிஞர் பி.கே. பெரியசாமியின்  இரண்டாவது கவிதைத்தொகுப்பு.  நூற்றுக்கு மேற்பட்ட முத்தான கவிதைகளை உள்ளடக்கிய ஒரு கவிதைப்பேழை இது .மரபுக்கவிதைகள் புதுக்கவிதைகள் இரண்டிலும் அவருடைய  கவித்திறன் மிளிர்வதை  நெருங்கிய வாசக நண்பர்கள் அறிந்திருக்க முடியும்.

 ’வாழ்வை வெற்றிகொள்’    கவிஞர் இத்தொகுப்பில் படைப்பு முழுவதினையும் புதுக்கவிதையாகத் தந்திருக்கிறார்.  வாழும் சமுதாயத்தின் மீது  கவிஞருக்கு இருக்கும்  ஆரோக்கியமான விமர்சனப் பார்வையை  வாசகன்   இங்கே அனேக தருணங்களில் தரிசிக்க வாய்க்கிறது.

தமிழ் மொழி மீது ஈடில்லாப் பற்று, சாதிக்கொடுமைகளால் மக்கள் படும் அவதி குறித்த  தர்மாவேசம், பெண்டிரை மேல் நிலைக்குக் கொண்டுவருதலில் காட்டும் கூடுதல் அக்கறை, ஒரு  சமூக ஞானியை  அப்பழுக்கற்ற ஒரு நேர்மையாளரை, மனித நேயம் மிக்க  ஒரு சான்றோரைத்தேடிக்கண்டுவிடத்துடிக்கும் இலக்கோடு கவிதைப்பயணத்தைத்தொடருகிறார் கவிஞர்.

’அட என்ன நடக்குது நாட்டுல’- என்னும் முதல் கவிதை ஓசை நயம் மிக்கது. இது சமுதாயத்தில் அன்றாடம் காட்சியாகும் நடப்புக்களை பட்டியலிடுகிறது.

‘தட்டிப்பறிச்சவன் மேட்டுல அத

விட்டுக்கொடுத்தவன் ரோட்டுல’  

சாலையில் பறிதவிப்பவனுக்காகக்குரல் கொடுக்கிறார் கவிஞர். அரசாங்கத்தின் எந்த சேவையையும் ஒரு  எளியோன் பெற்றுவிடுதல் சாத்தியமே இல்லை. ஆயிரம் பிரச்சனைகள் தொடரும் குறுக்கீடுகள். இது பற்றிப்பேசுகிறது ‘அருகதை’ என்னும் கவிதை.

‘கோப்பிலே போட்ட பாதிக்கையெழுத்திற்கும்

போடப்போகும் மீதி கையெழுத்திற்கும்

பேரம் பேசும் அதிகாரிகள்’

அறிவியலின் ஆட்சி இன்று  இணையதளத்தை பாரெங்கும் சாத்தியமாக்கியிருக்கிறது.ஆனால் மனித உறவுகளோ நொறுங்கிப்போய்விட்டன.

கவிஞரின் மனம் கனமாகிறது இப்படி.

’உனது இந்தக்கண்டுபிடிப்பால்

உலகம் மட்டுமா சுருங்கிவிட்டது.

உள்ளமும்தான்.’

நாட்டுவிடுதலைக்காகத் தம் இன்னுயிர் ஈந்த தியாகிகள் அந்தமான் சிறையிலே  செங்குருதி சிந்தினர். செக்கிழுத்தினர். கவிஞர் அந்தமான் பகுதியில் கணிசமான காலம் தொலைபேசித்துறையில் கணக்குஅதிகாரியாய் பணிசெய்துள்ளார் என்பது ஒரு சிறப்புச்செய்தி. கவிதை இப்படி வருகிறது.

’செக்கிலே எண்ணெய் பிழிய நீ ஏவப்பட்டாயா?

இல்லை!

நீயே எண்ணெயாய் பிழியப்பட்டாய்’.      

குழந்தையாய் வாழ்ந்த நாட்கள் மீண்டும் வராதா என்கிற ஏக்கம் எல்லோருக்கும் இருப்பதுதான். கூட்டாஞ்சோறு கூடி உண்டு களித்த நாட்கள் திரும்பவும்  வராதுதான். கவிஞர் இதனை  ஆழ்மனதில் எண்ணிப்பார்க்கிறார்.

‘அந்த நாள் வருமென்று

ஆவலாய் எதிர்பார்க்கிறேன்

பிள்ளைப்பிராயத்திலே

பெற்றதொரு பெருமகிழ்ச்சி’

என்கிறார் கவிஞர்.  கவிஞரின் தாய்  அண்மையில் மறைந்துபோகிறார். நிறை வயது வாழ்ந்து விடைபெற்றவர்.  ‘தாயே’ என்கிற ஓர் கவிதை எழுதுகிறார். எதிர் நிற்கும் பெற்ற மகனின் உரு அன்னையின் கண்ணுக்குத்தெரியாது போகிறது.

‘என் உருவம் தெரியாதபோதும் என்னை

உண்மையாய் நேசித்த ஒரே ஜீவன்’  என்று பெற்ற தாயுக்குப்பெருமை சேர்க்கிறார்.

கவிதைப்புத்தகத்துக்குத் தலைப்பாக வரும் கவிதை ‘வாழ்வை வெற்றிகொள்’.  வாசகர்  உள்ளத்தில் நம்பிக்கையை விதைக்கும் படைப்பாக மலர்ந்திருக்கிறது.நம்பிக்கைதான் வாழ்க்கை.நேர்மறையான எண்ணங்களே மனித வாழ்க்கையின் அடித்தளம்.

‘இன்றைய நூற்றாண்டின்

இணையற்ற மனிதனே

நம்பிக்கை கொண்டிரு

அதுதான்

பூமிப்பாறையைப்

புரட்டிடும் நெம்புகோல்’.

கவிதை வாசகனுக்கு  வெளிச்சம் பாய்ச்சுகிறது. வாழ்க்கைச்சவால்களை எதிர்கொள்ள அழைக்கிறது.படைப்பை படியுங்கள், தீர்க்கமாய் விமரிசியுங்கள் வாசகர்களே!

அழகான கவிதைகள். ஆழமான கருத்துக்கள். படிக்கப்படிக்க ஓர் நிறைவை அனுபவமாக்கும் பெரியசாமியின் கவிதைமலர்கள். தொடர்க கவிஞரே உமது வெற்றிப்பயணம். வாழ்த்துகள்பலவோடு.

----------------------

                                                                                                          

நாய்வால் முன்னுரை

 

வணக்கம்

‘நாய்வால்’ . இது என்னுடைய பன்னிரெண்டாவது  சிறுகதைத்தொகுப்பு.

.ஒரு எழுத்தாளன் சொல்லத் தேர்ந்த ஒரு விஷயத்தை வாசகர்க்கு  நச்சென்று சொல்லிவிட ஏற்ற வடிவம் சிறுகதையே.. ஒரு சிறுகதையை எழுதி முடித்த பிறகு அந்த எழுத்தாளன் அடையும் நிறைவே அதன் வெற்றி.  வாசகர்களால் அல்லது இலக்கிய அமைப்புகளால்  அப்படைப்பு  எப்படிப் பார்க்கப்படுகிறது என்பது அந்த எழுத்தாளனுக்குக் கிடைக்கும் அரிய உற்சாகம். அன்றாட வாழ்க்கையில்  ஒரு எழுத்தாளன் எதிர்கொள்ளும் சாதாரண விஷயமே சிறுகதைக்குக் கருவாய் அமைந்து சிறக்கிறது. சிறுகதையைப் படிக்கின்ற போது வாசகன் எந்தக் குறுக்கீடையும் சந்திக்கக்கூடாது  படைப்பின்  ஆற்றொழுக்கான நடை வாசகனைக் கைப்பிடித்து ஒய்யாரமாய் அழைத்துச் செல்ல செல்லவேண்டும்  என்பதனை  நான் எதிர்பார்க்கிறேன். என் சிறுகதைகள்  அறிந்துகொள்ள வேண்டிய சிறு செய்தி ஒன்றையேனும்  வாசகனுக்குக் கடத்தவேண்டும்,.

 மக்கள் சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட மக்களோடும்  விபரம்  போதாச்  சகோதரர்களோடும்  உழன்று துணை நிற்பதையே வாய்த்திட்ட   நற்பேறாகக் கருதுகிறேன். மனிதனை நெஞ்சுயர்த்தி  நடக்க வைத்த  மார்க்சிய நெறியின் வெளிச்சத்தோடு,  நமது  இந்திய மண்ணின் இயல்பான மனிதநேயம், தமிழ் இலக்கியத்தின் ஈடில்லா அற வளம் இவை  எனது படைப்பிற்கு  எப்போதும் ஆதாரமாகிறது.

எனக்கு நேர்ந்த நிகழ்வுகள் என்னோடு உறவில்  நட்பில் இருப்பவர்கள் பகிர்ந்துகொண்ட நிகழ்வுகள் பெரும்பாலும் என் படைப்பில்  சிறுகதையாய்  உருக்கொள்ளும். அவைகளோடு எனது கற்பனையையும் கட்டாயம்  சேர்ந்து மெருகூட்டும். அப்படித்தான் எனது எல்லாச் சிறுகதைப்படைப்புக்களுமே.

எனது சிறுகதைகளை வெளியிட்டு எனக்குப் பெருமை சேர்த்த இலக்கிய இதழ்கள் சொல்வனம் தினமணிக்கதிர் சங்கு  நவீன விருட்சம்  குவிகம் தமிழ்ப்பல்லவி திண்ணை சிறகு இலக்கியச்சிறகு பேசும் புதிய சக்தி ஆகியவற்றிர்க்கு நான் மிகுந்த நன்றியுடையேன்.

இச்சிறுகதைத்தொகுப்பைச் சிறப்பாய் வெளியிட்டு உதவியப் பெருமனதுக்காரர் நாற்கரம் பதிப்பகம்  நல்லு. ஆர். லிங்கம் அவர்கட்கு எனது நன்றிகள் பல.

 எனது  உடன்பிறவா சகோதரர்கள்  V. ரகுநாதன்,  K.R  மாத்ருபூதம்   ஆகியோரின் அன்பிற்கு  இப்படைப்பு சமர்ப்பணம்.

                                                                                                                                                   மிகவும் அன்புடன்

                                                                                                                                                      எஸ்ஸார்சி