Sunday, August 10, 2025

நாய்வால் முன்னுரை

 

வணக்கம்

‘நாய்வால்’ . இது என்னுடைய பன்னிரெண்டாவது  சிறுகதைத்தொகுப்பு.

.ஒரு எழுத்தாளன் சொல்லத் தேர்ந்த ஒரு விஷயத்தை வாசகர்க்கு  நச்சென்று சொல்லிவிட ஏற்ற வடிவம் சிறுகதையே.. ஒரு சிறுகதையை எழுதி முடித்த பிறகு அந்த எழுத்தாளன் அடையும் நிறைவே அதன் வெற்றி.  வாசகர்களால் அல்லது இலக்கிய அமைப்புகளால்  அப்படைப்பு  எப்படிப் பார்க்கப்படுகிறது என்பது அந்த எழுத்தாளனுக்குக் கிடைக்கும் அரிய உற்சாகம். அன்றாட வாழ்க்கையில்  ஒரு எழுத்தாளன் எதிர்கொள்ளும் சாதாரண விஷயமே சிறுகதைக்குக் கருவாய் அமைந்து சிறக்கிறது. சிறுகதையைப் படிக்கின்ற போது வாசகன் எந்தக் குறுக்கீடையும் சந்திக்கக்கூடாது  படைப்பின்  ஆற்றொழுக்கான நடை வாசகனைக் கைப்பிடித்து ஒய்யாரமாய் அழைத்துச் செல்ல செல்லவேண்டும்  என்பதனை  நான் எதிர்பார்க்கிறேன். என் சிறுகதைகள்  அறிந்துகொள்ள வேண்டிய சிறு செய்தி ஒன்றையேனும்  வாசகனுக்குக் கடத்தவேண்டும்,.

 மக்கள் சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட மக்களோடும்  விபரம்  போதாச்  சகோதரர்களோடும்  உழன்று துணை நிற்பதையே வாய்த்திட்ட   நற்பேறாகக் கருதுகிறேன். மனிதனை நெஞ்சுயர்த்தி  நடக்க வைத்த  மார்க்சிய நெறியின் வெளிச்சத்தோடு,  நமது  இந்திய மண்ணின் இயல்பான மனிதநேயம், தமிழ் இலக்கியத்தின் ஈடில்லா அற வளம் இவை  எனது படைப்பிற்கு  எப்போதும் ஆதாரமாகிறது.

எனக்கு நேர்ந்த நிகழ்வுகள் என்னோடு உறவில்  நட்பில் இருப்பவர்கள் பகிர்ந்துகொண்ட நிகழ்வுகள் பெரும்பாலும் என் படைப்பில்  சிறுகதையாய்  உருக்கொள்ளும். அவைகளோடு எனது கற்பனையையும் கட்டாயம்  சேர்ந்து மெருகூட்டும். அப்படித்தான் எனது எல்லாச் சிறுகதைப்படைப்புக்களுமே.

எனது சிறுகதைகளை வெளியிட்டு எனக்குப் பெருமை சேர்த்த இலக்கிய இதழ்கள் சொல்வனம் தினமணிக்கதிர் சங்கு  நவீன விருட்சம்  குவிகம் தமிழ்ப்பல்லவி திண்ணை சிறகு இலக்கியச்சிறகு பேசும் புதிய சக்தி ஆகியவற்றிர்க்கு நான் மிகுந்த நன்றியுடையேன்.

இச்சிறுகதைத்தொகுப்பைச் சிறப்பாய் வெளியிட்டு உதவியப் பெருமனதுக்காரர் நாற்கரம் பதிப்பகம்  நல்லு. ஆர். லிங்கம் அவர்கட்கு எனது நன்றிகள் பல.

 எனது  உடன்பிறவா சகோதரர்கள்  V. ரகுநாதன்,  K.R  மாத்ருபூதம்   ஆகியோரின் அன்பிற்கு  இப்படைப்பு சமர்ப்பணம்.

                                                                                                                                                   மிகவும் அன்புடன்

                                                                                                                                                      எஸ்ஸார்சி

 

 

No comments:

Post a Comment