Saturday, October 2, 2021

தன்குறிப்பு

 

 

 

 

தன் குறிப்பு

இயற்பெயர்   எஸ். ராமச்சந்திரன்

புனை பெயர்   எஸ்ஸார்சி

பிறந்த தேதி  04/03/1954  தந்தை சுந்தரேசன்   தாய் மீனாட்சி

ஊர்   தருமநல்லூர்   கடலூர் மாவட்டம்

படிப்பு    எம் ஏ,  எம் ஃபில்,  (ஆங்கிலம்)   எல் எல் பி,

பணியாற்றிய துறை     பி எஸ் என் எல்

படைப்பு

புதினம் 6 சிறுகதை தொகுப்பு 9 கவிதை நூல் 4 கட்டுரை நூல் 5 மொழிபெயர்ப்பு 4 ஆங்கில நூல் 2

விருதுகள் -திருப்பூர் தமிழ் சங்கம்,  என் சி  பி  ஹெச்  பாரதி விழா, ஸ்டேட் வங்கிப்பரிசு  நெய்வேலி நிலக்கரி நிறுவனப்பாராட்டு,சேலம் எழுத்துக்களம் விருது, கம்பம் பாரதி இலக்கியப்பேரவை ப்பரிசு, கரூர் இலக்கியச்சிகரம் பரிசு  தமிழக அரசின் சிறந்த புதினம் விருது , சிவசங்கரி தினமணி சிறுகதை போட்டி,  பேசும் புதிய சக்தி  ராஜகுரு  நினைவு சிறுகதைப்போட்டி இவைகளில் ஆறுதல் பரிசு

சிறப்பு சந்திரசேகரேந்திர சரஸ்வதி பல்கலைக்கழக பட்டவகுப்பு துணைப்பாடம் சிறுகதைத்தொகுப்பு  -யாதுமாகி,

திருவள்ளுவர் பல்கலைக்கழக பி லிட் தமிழ் முதலாண்டு புதினம் –எதிர்வு- ம்

இதரபணி  கலை இலக்கிப்பெருமன்றம் கடலூர்  சிரில் அறக்கட்டளை (NFTE) கடலூர் இவைகளில் பத்தாண்டுகள் பொறுப்பு இலக்கியச்சிறகு, ஷைன் ஆலோசனைக்குழுவில் பணியாற்றியது

திசைஎட்டும்: மொழிபெயர்ப்பு ஆசிரியர்க்குழு 

முகவரி  23 ஏ இரண்டாம் தெரு, நேதாஜி நகர், பழையபெருங்களத்தூர்

சென்னை 600063.   கைபேசி:  9443200455

------------------------------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

நல்ல தமிழும் இல்லை

 

 

 நல்ல தமிழும் இல்லை ஆங்கிலமும் இல்லை 

தமிழ் மாநிலத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு எத்தனை முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கிறோம். அதன் சாதனை என்ன என்று கணக்குப்போட்டுப்பார்த்து இருக்கிறோமா ? நமது.  அரசுத்துறை தமிழ் வளர்ச்சியில் சாதித்தது என்ன என்று கணக்குக்கொடுக்கமுடியுமா ?

அரசு நூலத்துறைக்கு புது ப்புத்தகங்கள் வாங்குவதை ஆராய்ந்து பார்த்தது உண்டா என்ன ? சம்பந்தப்பட்டவர்கள் தம் மனசாட்சியைத் தொட்டு  நூலகத்திற்குப்புத்தகங்கள் வாங்குவதில் எத்தனை நேர்மையாக அவர்கள் நடந்துகொண்டார்கள் என்பதை வெளியில் சொல்ல வாய்க்குமா ? அப்படி இப்படி சில நூல்கள்  அரசு நூலகத்துக்குத் தேர்வானால்  அந்தந்தந்த மாவட்டங்களிலிருந்து  நியாயமாக ச்சேரவெண்டிய காசு பெறுவது ஒன்றும் லேசான சமாச்சாரமுமில்லையே  நூலக ஆணை கிடைக்கப்பெற அப்படி இப்படி என்றால் அது என்ன என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்துதான் இருக்கிறது.

விவசாயி என்று  பச்சைப்பொய் பொய்சொல்லி  மத்திய அரசு வழங்கிய ஆண்டுக்கு ஆறாயிரம் இனாம் தொகையை கோடி கோடியாய் கொள்ளை அடித்த பூதாகாரமான ஒரு சமாச்சாரம்  வேறு  தமிழகத்தை இப்போது கலக்கிக்கொண்டிருக்கிறது.

நூலகர் என அரசு நூலகங்களில் பணி செய்பவர்கள் வாசிப்புத்தரம் எப்படி,? வருகின்ற  வாசகர்கள்  படித்து நிறைவடைகிறார்களா? எந்த நூலகத்திலாவது தரையிலிருந்து  மேலாக மூன்று தட்டுக்களில்  அடுக்கி உள்ள நூல்களை யாராவது தொட்டுப்பார்க்க வசதிப்படுமா ? தரையில் உட்கார்ந்துகொண்டா வருகின்ற வாசகர்கள் புத்தகங்களைத்தேடுவது  அப்[படித்தேடுகையில் எழும் புழுதியை  வாசகர்களால் எதிர்கொள்ளத்தான் முடியுமா?

 சென்னை  அண்ணா பெரு நூலகப் பராமரிப்பு எப்படியெல்லாம் சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்று சென்று  நொண்டியும் முண்டியும் அடித்தது. நுங்கம்பாக்கம் வள்ளுவர்  திருக்கோட்டமும் பூம்புகார் கலைக் கட்டமைப்பும்  எத்தனை நிராகரிப்பு மனோபாவத்தோடு அணுகப்பட்டது  இவை நாம் அறிய மாட்டோ,மா ?

அரசு விருதுகள்  கொடுக்கப்பட   தொடங்கும் அறிவிப்பிலிருந்து  விருது வழங்கும் அந்த விழா நிகழ்வு வரை அனுசரிக்கப்படும் நடைமுறைகள் நடு நிலையாளர்க்கு எப்போதேனும் மன நிறைவு தந்ததுண்டா

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலமை என்ன ? தமிழ் ஆசிரியர்கள்  சமுதாயத்தில் எத்தனைக்கம்பீரமான மனிதர்களாக இருந்தார்கள். சிதம்பரம் ராமசாமி செட்டியார் உயர் நிலைப்பள்ளியின் புலவர் தங்க.முருகேசனார்  போன்ற ஒரு ஆளுமையை இனி எங்கே காண்பது ? கட்டுக்குடுமி கடுக்கன் மூலகச்சம் கட்டிக்கொண்டு விஷ்ணுபுரம் ஜார்ஜ் பள்ளியின் தமிழ் ஆகிருதியாயிருந்த புலவர் கந்தசாமி சிவாச்சாரியாருக்கு இணையாக யாரேனும் இனிப்பார்க்கத்தான் முடியுமா ? தமிழாசான்  திருக்குறள் ராஜாராம் திருப்பதிரிப்புலியூர் நகர் வாழ்ந்து குறளுக்கு ஆழ்ந்த விளக்கம் தந்ததை தமிழன்பர்கள் மறக்க இயலுமா ? அவர்களை ஒத்த  தமிழ்ஆசிரியர்களை எங்கேயாவது இப்போது கண்ணால் பார்க்கமுடிகிறதா ? ஏன் இல்லை.  இதற்கெல்லாம் காரணம்  எது என்று/ நாம் அறியமாட்டோமா ?

உதாரணத்திற்கு  மேலும் ஒரு விஷயம் சொல்லவேண்டும்.  எண்ணிக்கையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழும்  தமிழ் படைப்பாளிகளுக்கு மலாயா ப்பல்கலைக்கழகத்தோடு இணைந்து அண்ணாமலைப்பல்கலைக்கழகம் அவர்தம் வாழ்க்கை  வரலாறு மற்றும் சாதனைக்குறிப்பு நூல் வெளியிட்டதே அந்த அழகைத்தான் பார்த்தோமே. எத்தனை பொறுப்பின்மை. எத்தனை  அலட்சியம் .எவ்வளவு பொருளும் காலமும் வியர்த்தம்.

கேரள  மாநிலத்திலிருந்து  கிடைத்த  பேர் சொல்லும் இந்திய ஆங்கிலக்கவிஞர்கள் ஏராளம் உண்டு. கர்நாடகத்திலிருந்து எத்தனையோ ஆங்கில ப்படைப்பாளிகள் வெளிப்பட்டுப் புகழ்பெற்று இருக்கிறார்கள். மும்பை கொல்கத்தா டில்லி ஹைதராபாத் என்னும் நகரங்கள்  இந்திய ஆங்கிலப்படைப்பபாளிகளை அனேகம் தந்திருக்கின்றன.

ரவீந்திரர் அம்பேத்கர் சரோஜினி நாயுடு ராஜா ராவ்  ஆர் கே நாரயனான் அரவிந்த் அடிகா நிசிம்எசிகல் என்று புகழ் பெற்ற  ஆங்கில எழுத்தாளர்ள் வரிசையில் தமிழ் நாட்டிலிருந்து ஏன்  ஒரு முகத்தையும் பார்க்கமுடிவதில்லை.

தமிழ்ச் செம்மொழி என்று அறிவிக்க மத்திய அரசுக்கு எழுபதாண்டுகள் ஆயிற்று.பாராளுமன்றத்தில் காங்கிரசின் உறுப்பினர்  எண்ணிக்கைச்சரியவும் காரியார்த்தமான தலைவர் கலைஞர் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கவும் அது சாத்தியப்பட்டது

 கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் செம்மொழிகளே என த்தொடர்ந்து அறிவிக்கப்பட்டன. அவர்களுக்கே அது ஆச்சரியமாக இருந்திருக்கும். தமிழர்கள் நாங்கள் எழுபதாண்டுகள் முட்டிக்கொண்ட ஒன்று. சில மணி நேரங்களீலேயே அடுத்தடுத்த  மா நிலத்தவருக்கு  அந்தச்செம்மொழி அந்தஸ்து எப்படிச்சாத்தியம் என்று நியாயம் கேட்டு ஒருவர் சென்னை உயர் நீதி மன்றம் போனார்.  நீதிமன்றமோ ’ ‘அதனால் உனக்கென்னப்பா கஷ்டம் வந்தது நீ  பொறுப்பாக உன் வேலையைப்பார்’ என்கிறபடிக்கு ஒரு மாதிரியாய்த் தீர்ப்பை த்தந்தது. அத்தோடு போயிற்று செம்மொழிக்கதை.

தமிழில் நாம் தடுமாறுகிறோம். ஆங்கிலம் கலவா வாழ்க்கை தமிழகத்தில் இல்லை . ஆண்டிற்கு  ஒரே ஒரு நாள் ஆங்கிலச்சொல் என்று ஒன்றுகூடக் கலவாமல் நம்மால் வாழத்தான்முடியுமா ?

 அது கிடக்கட்டும் காலம் காலமாய்ப்பிடித்துத்தொங்கிய  அந்த ஆங்கிலத்தில்தான்  உலகறிய என்ன கிழித்தோம் என்றால் அதுவும் ஒன்றுமில்லை  இதுவே தமிழ் நிலத்தின் இன்றைய யதார்த்தம். யார்  இதையெல்லாம் பேசினால்  காதுகொடுத்துக்கேட்கப்போகிறார்கள்.

------------------------------------------------

 

.

.

 

 

பிழைப்பு

 

 

பிழை(ப்பு)                        

 

 அதிகாலையிலேயே  மொட்டை மாடியில் இருக்கும்  சிண்டெக்ஸ் தண்ணீர்த் தொட்டி காலியாகியிருப்பது தெரிந்தது. அவன்  நீர் மோட்டார் சுவிட்சைப்போட்டான். சப்தம் வித்தியாசமாக வந்தது. இப்படியெல்லாம் வந்ததே இல்லை.  ஹூம் ஹூம்  என்று ஒரே ஹம்மிம்ங் ஓசை.

 ஏதோ கோளாறு  அது  மட்டும் தெரிந்தது. உடனேயே மோட்டார் நின்றும் விட்டது. மோட்டார் அருகே சென்று தொட்டு தொட்டுப் பார்த்தான். ஒன்றும் விளங்கவில்லையே.  உள்ளே எங்கேனும்  பியரிங்லில் பிடிப்பு இருந்தாலும் மோட்டார் ஓடாதுதான். ஆக தேங்காய் எண்ணெய் கொண்டுவந்து மோட்டாரின் கிடைத்த இடுக்கில் எல்லாம் நீண்ட ஸ்க்ரூ டிரைவரால் தொட்டுத் தொட்டு தடவினான். மோட்டார்  சுவிட்சைப்போட்டால்  அது ஓடினால்தானே.    ஹம்மிங் ஒலி  லேசாக மட்டும் வந்தது. பழைய ட்யூப் லைட்கள் எரியும் போது அப்படித்தான் ஒரு வண்டின் ரீங்காரம் வரும்.எத்தனையோ திருக்கோவில்களில் இப்படி குழல் விளக்குகள் எரிவதுண்டு. அவன்  தெரு   நிற்கும் மின்விளக்கும் கூட  இவ்விதமாய் ரீங்கரிப்பது கேட்டிருக்கிறான்.

   மோட்டார் ஏர் வாங்கியிருக்குமோ என்று அந்தப்பித்தளைத் திருகினை பலங்கொண்ட மட்டும் அழுத்தித்திறந்தான்.  அதெல்லாம் ஏர் ஒன்றும் வாங்கவில்லை. தண்ணீர் பீறிட்டுக்கொண்டு கொட்டியது. அந்தப் பிரச்சனையில்லை. தண்ணீர் அந்த சந்து வழி ச்சரியாக  வெளி வந்தால் கீழே ஃபுட் வால்வும் கூடச் சரியாகத்தான் இருக்கும். அவனுக்கு இதற்குமேல் என்ன செய்வது என்று தெரியவில்லை. திணறினான்.

அவன் வழக்கமாக அழைக்கும் பிளம்பரை க்கைபேசியில் அழைத்தான். இரண்டு முறை அழைத்தால்தான்  அவன் போனை எடுப்பது வழக்கம். அப்படித்தான் ஆகியது இம்முறையும்..

தண்ணீ மோட்டர் ஓடுல. என்ன பிரச்சனன்னு தெரியல. நீங்க உடனே வரணும். வீட்டுல சுத்தமா தண்ணி இல்ல.  நான் ஒண்ணுமே புரியாம நிக்குறன்’

’ ஒரு அரை மணி ஆவும் இங்க ஒரு  சின்ன வேலைல இருக்கன். நீங்க இப்புறம்  அந்த மோட்டார கீட்டார  போடாதிங்க. வெஷயம் தெரியாம யாரும் போட்டுற  கீட்டுற போறாங்க. பாத்துகுங்க  மோட்டாரு காயில் பூடும். நா வந்துடறன்’

பிளம்பர் கைபேசியை நிறுத்தினான்.  அவன்  அந்த பிளம்பர்  வருகைக்காகக்காத்திருந்தான்.

‘ முக்கியமான வேலய இருந்தா அத மட்டும்  பாரு. தண்ணி மோட்டாரு  ரிப்பேரு. அத ஞாபகத்துல வை’ அவன் மனைவியிடம் எச்சரிக்கையாய்ச் சொல்லிக்கொண்டான்.

‘சரிங்க.எதுவும் செய்யுல நான்’

‘பொங்குற வேல ஆவுட்டும். அத நிறுத்திடாதே.  தண்ணி சிக்கனமா ஆவுட்டும்.’’

அவன் மனைவிக்கு யோசனை சொன்னான்.

‘இண்ணைக்காவது வெளியில எங்காவது போயி சாப்புட்டுக்குவம்’

‘ஏற்கனையே  வூட்டுல மோட்டாரு பூட்டுது. இதுல சாப்பாட்டு செலவு  ஓட்டல்ல வேறயா’ அவன்  அதிர்ந்து பதில் சொன்னான்.

பிளம்பர் வரும் அரவம் கேட்டது. அவனது டிவிஎஸ் எக்செல்.  அது எழுப்பும் ஒலியே அலாதி.

பிளம்பர் வண்டியை நிறுத்தினான். கழுதை கனம் கனக்கும் டூல்ஸ் பை ஒன்றோடு மோடாரிடம் போய் நின்றான்.

‘மோட்டாரைப்போடுங்க’

‘ தோ போடுறன்’

அதே ஹம்மிங்க் ஒலி வந்தது.  மோட்டார் ஏர் வாங்குகிறதா எனப்பார்த்தான் . எல்லாம் சரியாகத்தான் இருந்தது.

மோட்டாரின் மேல் மூடியைக்கழட்டினான். திரும்பவும் மூடினான். மோடாருக்குப்பக்கத்தில் அதனோடு ஒட்டிகொண்டு இருந்த கண்டென்சரைக்கழட்டி சோதித்தான்.

‘ கண்டென்சர் போயிடுச்சி. அதான்’

‘ இப்ப என்ன செய்ய’

‘ நா சேட்டுகிட்ட போயி புதுசு வாங்கியாறன்.  ரூவா முந்நூறு கொடுங்க’

என்றான்.

அவனிடம் அவன் கேட்ட பணம்  கொடுத்தான்.  பிளம்பர் தனது வண்டியில் புறப்பட்டு சேட்டுக்கடைக்குப்போனான்.

‘தோ வந்துடறன்’ சொல்லிப்போனான்.

இரண்டு மணி நேரம் ஆகியது. இன்னும் பிளம்பரைக்காணோம். அவனுக்குப்போன் போட்டான். அவன் எடுக்கவே இல்லை.. அவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

பிளம்பரின் வண்டி சத்தம் உடனேயே கேட்டது. இம்முறை தன்னோடு ஒரு இளைஞனையும் அழைத்து வந்தான்.

‘இவுரு  மெக்கானிக்கல்  படிச்சவரு.  நாம  இந்த தொழிலு  அனுபவத்துல பழகுனம் அவ்வளவுதான்’’ பிளம்பர் சொன்னான்.

உடன் வந்திருந்த இளைஞன் மோட்டாரிடம் சென்று அந்த பழைய கண்டென்சரை கழட்டிவிட்டு புதிய ஒன்றை அவ்விடத்தில்  பொருத்தினான்.

’ இப்ப மோட்டாரை போடுங்க’

திரும்பவும் அதே ஹம்மிங் ஒலி. ஆனால் இம்முறை சற்று அதிர்வு ஒலி கூடுதலாகக்கேட்டது.

’ மேல தொட்டியில பாருங்க தண்ணி அங்க உழுவுருது தெரியும்’

அவன் மொட்டை மாடிக்குச்சென்று சிண்டெக்ஸ் தொட்டியின் மூடியைத்திறந்து பார்த்தான். தண்ணீர் குழாயில் கொஞ்சமே வந்தது. அரை குழாயுக்கு இருக்கலாம். அதனை ப்பார்த்துக்கொண்டான்.

\தண்ணி சீரா வருது. மொத மாதிரி இல்ல. அர குழாயிக்கு இருக்கும்’

‘இங்க மோட்டாரு பாடியில கரண்டு லீக்கு ஆவுது, இங்க பாருங்க டெஸ்டரை’

டெஸ்டரில் இருந்த விளக்கு  அழுமூஞ்சியாய் எரிந்தது.

‘ மோட்டரு சரியில்லங்க. இத மாத்தினாதான் வேலைக்கு ஆவும்’

‘ ரிப்பேரு செய்யலாமா’

‘ என்ன சாரு இத ரிப்பேரு பண்ணுறதுக்கு புதுசே வாங்கிகலாம் பிரச்சனை இல்லாம ஓடும்’

உடன் வந்திருந்த இளைஞன் தலை ஆட்டி அதுவே சரி என்றான்.

‘ புதுசுன்னா எவ்வளவு வரும்’

‘ அது பத்து ரூபாயுக்கு வரும்’

‘ பத்தாயிரமா’

‘ மேலயும் ஆவும் சாரு. இப்ப வெல வாசி என்னா’ பிளம்பர்  ஆகாயம் பார்த்தான்.

அவன் மனைவி எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

‘ ஆக வேண்டிய ஜோலிய மொத  பாருங்க இது தண்ணி பிரச்சனை’ என்று  மனைவி சத்தம் போட்டாள்.

‘ ஸேட்டுகிட்ட நீங்க  வாங்க பேசிக்கலாம். நா அங்க இருக்கன்.’ பிளம்பர் புறப்பட்டான்.

அவன் மயங்கி மயங்கி நின்றான்.

‘ வேலய பாருங்க. இப்ப  என்னதான் செய்வ நீ’  தனக்கு மரியாதை  ட்க்கென்று  குறைந்து போனதை எண்ணிப்பார்த்தான்.

சேட்டுக்கடை நோக்கிப்புறப்பட்டான். கடை வாயிலில் பிளம்பர் நின்று கொண்டிருந்தான். கூட வந்த இளைஞனும் அவனுக்குத்துணையாக அங்கே இருந்தான்.

‘சேட்டு என்ன சொல்றாரு’’

‘ சாரு நா சொல்ல என்ன இருக்குது. ரூவா பதிமூணு சூப்பரு மோட்டாரு  

குசுணா மோட்டாரு. மேங்கொண்டு சாமான் கூலி இருக்கு’

 அவன் தன் சட்டைப்பையில் இருந்த ஏடிஎம் கார்டு இருப்பதை உறுதி செய்துகொண்டான்.

‘ ஒரு வருசம் காரண்டி’. மோட்டாரு நல்லா ஓடும்.இது வரக்கும் இந்த அயிட்டம் நூறு பீஸ் ஒடி இருக்கு. ஒரு ரிமார்க்கு இல்ல. பாத்துகுகுங்க. செய்யுறது நல்ல செய்யுணும். பேரு முக்கியம். பேரு கெட்டா ஒருத்தர நா கூடம் மதிக்காதில்ல’

சேட்டு சொல்லி நிறுத்தினான்.பிளம்பர்  ஒரு தரம் கண்களை மூடித்திறந்தான்.

ஒரு பத்தாயிரம் ரூபாய் அட்வான்ஸ்  கை மாறியது. மோட்டர் வாங்கியாயிற்று. அதனைப்பொறுத்தும் சாமான்கள் ஒரு  சின்ன பையுக்கு இருந்தது. மூவரும் திரும்பவும் வீட்டிற்கே வந்தார்கள்.

‘ சமையல் செஞ்சியா என்னா’

‘ எல்லாம் ஆச்சி. அதுல கொற வப்பனா’ அவன் மனைவி பதில் சொன்னாள்.

புது மோட்டார் இப்போது பிணைக்கப்பட்டது.  கழட்டிய பழைய மோட்டாரை ஒரு ஓரமாக எடுத்து வைத்தான் பிளம்பர்.

‘ இது எடைக்குக்கூடம் தேறாது’ சொல்லிக்கொண்டான்.  திரும்பவும் பழைய மோட்டாரை த்தொட்டுப்பார்த்தான்.

‘இப்ப மோட்டார்  சுவிச் போடுங்க’ என்றான்.

அந்தப்புது மோட்டாரும் ஓடினால் தானே. எந்த ஒலியும் இல்லை. அவனுக்குத்தலை சுற்றியது. புது மோட்டாரும் ஓடாதா இது என்ன கஷ்ட காலம் என யோசித்தான். பிளம்பர் சேட்டுக்குப்போன் போட்டான்.  புது மோட்டார் ஓடவில்லை என்றான்.

சேட்டு என்ன சொன்னாரோ தெரியவில்லை.  பிளம்பர் அடுத்த வீட்டுக்குச்சென்றான். கரண்டை  டெஸ்டுக்கு என்று கேட்டு வாங்கினான். ஒரு பெரிய ஜங்க்‌ஷன் பாக்ஸ் வழியாக  புதிய மோட்டாருக்கு அந்த  மின்சாரத்தைக்கொண்டுவந்தான்.. அவர்கள் அப்படி எல்லாம் கொடுத்து உதவிடவும் விட மாட்டார்கள். பிளம்பருக்கு என்ன சாமர்த்தியமோ. அவர்களும் டெஸ்டுக்கு என்று ஒத்துக்கொண்டு கரண்டு கொடுத்தது சாதாரண விஷயமில்லை.. ’என்னடாவோ உலகம்’ இது அவன் நினைத்துக்கொண்டான்.

‘சாரு ஒண்ணும் யோசனை வேண்டாம். அவுங்க வீட்டு மெயின் செவுத்துல சமையலறை கழுவுத்தண்ணி லீக் ஆவுது. அத அடுத்ததா நா போய் பாக்கணும். இல்லன்னா அவுங்க  மெயின் செவுறு போயிடும். அதான் செத்த டெஸ்டுக்கு கரண்டு  கொடுங்கன்னுகேட்டேன். ஒ கே எடுத்துகன்னாங்க’ பிளம்பர் அவனுக்கு விளக்கம் சொன்னான்.

புது மோட்டாருக்கு அடுத்த வீட்டு கரண்டு கனைகஷன் கொடுத்தார்கள். சுவிட்சை ஆன் செய்தார்கள். மோட்டார் கும்மென்று ஓடத்தொடங்கியது. அவன் மொட்டை மாடி ஏறிப்பார்த்தான். குழாய் நிறைத்துக்கொண்டு தண்ணீர் தொட்டியில்  கொட்டிக்கொண்டிருந்தது.

‘ சாரு ஒரு சேதி.  கரண்டு ஆபிசுல எழுதி வையுங்க.  உங்க வீட்டுக்கு வர்ர நியூட்ரல் சரியா வரலன்னு. அத அவுங்க வந்து சரி பண்ணுவாங்க. கரண்டு மரத்துலேந்து வர்ர  நியூட்ரல் சரியில்ல அத  உங்க வீட்டுக்கு வர்ர கரண்டு போஸ்டுல ஏறி  ஈ பி காரனுங்க அவுங்கதான் சரி பண்ணணும்’.

அவன் கரண்டு ஆபிசுக்கு போன் போட்டான்.  நடந்த சேதி சொன்னான்.’ இன்னும் ஒரு மணி நேரத்துல ஆளு வரும்’ என்று பதில் சொன்னார்கள்.  அப்படி இப்படி என்று  ஒரு மணி நேரம் ஆனது. ஈபி காரர்கள்  ஆணி அடித்தாற்போல் வந்தார்கள். கரண்டு மரம் ஏறி  நியூட்ரலை பிரித்து அடித்துச் சரிசெய்தார்கள். இப்போது அவன் வீட்டு க்கரண்டு  கனைக்‌ஷன் கொடுத்து மோட்டார் சுவிட்சை ப்போட்டார்கள். புது மோட்டார் கும்மென்று தண்ணீர் இறைத்தது.

கொடுக்கவேண்டிய மாமூலைக்கொடுத்து கரண்டுகாரனை அனுப்பியாயிற்று.

‘இன்னும் சேட்டுக்கு பாக்கி நாலாயிரம் தரணும் குடுத்துடுங்க. எனக்கு கூலி ரெண்டாயிரம். இந்த பழைய மோட்டாரு அத ஐநூறுக்கு நானே எடுத்துகறன்.   அது ஒரு முந்நூறுதான் பொறும்  போவுட்டும். நாம எம்மானோ சம்பாரிக்கறம். இதுல என்னா. ஆக எனக்கு  இன்னும் ஆயிரத்து ஐ நூறு குடுங்க போதும்’

‘ இந்த மோட்டாரு  ஐ நூருதான் போவுமா’

‘ சாரு இது முந்நூறுக்குத்தான் போவும் யாரு எடுத்துகுவா குப்ப நானு போனா போவுதுன்னு  எடுத்துகிறன். உங்களுக்கு ஒரு  எர நூரு சேத்து தர்ரேன்’ பிளம்பர் அழகாகவே சொன்னான்.

அவனோடு துணைக்க வந்த இளைஞன்  பழைய மோட்டாரை அலாக்காகத் தூக்கினான். பிளம்பரின்  டூ வீலரில் பதனமாக இறுத்திவைத்தான்.

‘ சேட்ட பாத்து  அந்த பாக்கிய குடுத்துடுங்க’ சொல்லிய பிளம்பர்  தன் கூலி ஆயிரத்து ஐநூறு வாங்கித்தன்  சட்டைப்பையில்  பத்திரமாய்ப்போட்டுக்கொண்டான். வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

‘ஏங்க அந்த பழைய மோட்டாருக்கே அடுத்த வீட்டு கரண்டை கொடுத்து   மோட்டார ஓட்டி  பாத்து இருக்கலாமுல்ல. நம் வீட்டுக்கு வர்ர நியூட்ரல்லதானங்க  பிரச்சனை இருந்திச்சி..  அப்படின்னா புதுசா ஒரு மோட்டார  நாம  என்னாத்துக்கு வாங்குணும்.  நமக்கு இருக்குற கஸ்டத்துல’’ அவன் மனைவி  சன்னமாக ஆரம்பித்தாள்.

   நீ சொல்லுறது சரிதான்’’ அவன் திகைத்துப்போய் நின்றான்.

        எல்லாமே எனக்கும் காதுல வுழுவுது. சாரு’’

சொல்லிய பிளம்பர் வண்டியை நகர்த்தி ஓட்டிக்கொண்டு போயே சேர்ந்தான்.

-------------------------------------

.

 

 

 

.

 

 

 

 

 

 

 

 

 

 

Friday, September 3, 2021

தமிழராய்ப்பிறந்தும்

   தமிழராய்ப்பிறந்தும்….                                      

 

தமிழ் மொழியில் மூன்று நூல்கள் மிக முக்கியமானவை.அவை திருக்குறள் திருவாசகம் திருமூலம் .

திருக்குறளின் மாண்பு உலகறியும். திருக்குறளை விஞ்சி மானுட சத்தியம் பேசும் வேறு ஒரு நூல் உலகில் இருக்கமுடியுமா என்று தெரியவில்லை.

ஆயினும்  உப நிடதங்கள் தத்துவார்த்த விஷயத்தில் சிகரம். பன்னரும் உப நிட நூலெங்கள் நூலே,பார்மிசை ஏதொரு நூலிதுபோலே என்பார் மகாகவி பாரதி. தத்துவ புருடர் ஓஷோ எவ்வளவு ஆழமாக ஆன்மீக சூக்கும கருத்தினை எடுத்துவைத்தபோதும் உப நிடத சமாச்சாரங்கள்தாண்டி தத்துவார்த்த உலகில் வேறு எதுவும் இருக்குமா என்பது அய்யமே.

மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்

ஆகுல நீர பிற.

இத்திருக்குறளையும் தாண்டி ஒருவர் அறத்திற்கு இலக்கணம் சொல்லவேண்டுமா என்ன?

எத்துணையும் பேதமுறாதுஎவ்வுயிரும்

 தம் உயிர் போல் எண்ணி, உள்ளே

 ஒத்து, உரிமை உரிமை உடையவராய் உவக்கின்றார்

 யாவர்? அவர் அவருளந்தான் சுத்த

 சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும்

 இடம் என நான் தேர்ந்தேன் அந்த

 வித்தகர் தம் அடிக்கேவல்புரிந்திட என்

சிந்தை மிக விழைந்ததாலோ

என்பார் அருட்பிரகாச வள்ளலார். இங்கே உள்ளே ஒத்து என்பது என்கிற பதம் ஆழமான பொருளுடையது.  நமது உள்ளம் நிறைவாய் ஒப்பது என்று நாம்பொருள் கொள்ளமுடியும். இதனில் இன்னொரு விஷயம்  உள்ளம் ஒத்து பின் அதனில் உவக்கின்ற  அந்த  பெருநிலையும் வரவேண்டும்.

 என்னடா இப்படி வசமாகமாட்டிக்கொண்டு விட்டோமே என்கிற நிலைசாதாரண  மனித இயல்பு  உள்ளே ஒப்பதும்  அது கண்டு மனம் உவப்பதும் மனம் செம்மையானவர்களுக்கே சாத்தியமாகும்        

 திருக்குறளிலேயே மிகப்பிடித்த குறள் மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் என்று தொடங்கும் அந்தக் குறளே ஆகும்

To like keats is a test of fitness for understanding poetry  என்பார் ஆங்கில நாவலாசிரியர்  ஜார்ஜ் கிஸ்ஸிங். அந்த  ஆங்கிலக்கவி கீட்ஸ் சொல்லுவார்

A thing of beauty is joy for ever அதற்கு மேல் சென்றும் பெருஞ்சேதியொன்று சொல்லுவார்.

Beauty is truth, truth beauty that is all

Ye know on earth and all ye need to know.

எப்பொழுதும் ஆனந்தத்தை வர்ஷிப்பது  அழகு.  நீல வானும்  வெண்நிலவும்  நீலக்கடலும்    நீள் மலையும் அந்த வகையில் கொள்ள முடியும்.சத்தியமே அழகு அழகு என்பது சத்தியமே.  இவ்வுலகில் வாழுகின்ற  ஒவ்வொரு மனிதனும்அறியவேண்டியதும் அறியக்கிடப்பதும் சத்தியானந்தம் ஒன்றே என்கிறார் கீட்ஸ.

‘யாமெய்யாக்கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்

வாய்மையின் நல்ல பிற’ 

என்று பேசுகிறது திருக்குறள்  கொல்லாமை பற்றிப்பேசும் திருவள்ளுவர்

’ஒன்றாக நல்லது கொல்லாமை அதன்

பின்சாரப்பொய்யாமை நன்று’ என்று ஒரு நீதி சொல்கிறார். பொய்யாமை வேறு வாய்மைவேறு என்கிற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று

.இரண்டு முறை அல்லவா பொய்யாமையைச் சொல்கிறார்.செய்யாமையும் இரண்டுமுறைச் சொல்கிறார்தான். ஆனால் வாய்மை பற்றிக்கூறும் போது

’மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு

தானம் செய்வாரின் தலை’ என்று பேசுகிறார்.

 இங்கு ஈகை அறம் ஆகிய விஷயம் மட்டுமல்ல தவம் செய்யும் முனிவர்களையும்  தாண்டிப்போகிறது வாய்மை மொழிபவன் செல்வாக்கு.பொய்யாமையைவிடவாய்மைஉயர்வானது வெல்லும் வாய்மையே என்பது வேத வாக்காகிறது.பொய்யாமையே வெல்லும் என்பது சற்றுக்கனமிழக்கிவே செய்கிறது.

வள்ளுவருக்கு வருகின்ற அறச்சீற்றம் உச்சமானது.பாரதி ‘தனியொருமனிதனுக்குணவிலை எனில் இச்சகத்தினைஅழித்திடுவோம்’என்பார் திருவள்ளுவர் இன்னும் சற்றுத்தாண்டியும் போகிறார்.

’இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்

பரந்து கெடுக இவ்வுலகிற்றியான்’. கடவுளுக்கே பிடியப்பா என் சாபம் என்கிறார் திருவள்ளுவர்.

இன்பத்துப்பாலிலே ஆயிரம் கவித்துவம் பெய்து எழுதியிருக்கிறார் திருவள்ளுவர்  எடுத்துக்காட்டுக்கு ஒரு குறள்.

’மலரினும் மெல்லிது காமம் சிலரதன்

செவ்வி தலைப்படுவார்’.

அந்த சிலர்களில் யார் யார் வருவார்களோ.ஆகவே வெகு சிலரே வாழ்வில் இல்லற இன்பம் என்பது என்ன என்று  நிறைவாய் அறியும் வாய்ப்பு பெறுகிறார்கள்.

இரண்டாவதாக  திருவாசகத்துக்கு  வருவோம்.தெய்வத்தமிழ் இலக்கியங்களில் முதன்மையானது திருவாசகம் திருவாசகத்துக்கு உருகாதார் எவ்வாசகத்துக்கும் உருகார் என்கிற ஆன்றோர் வாக்கிலிருந்து அதன் பெருமை நமக்குப்புலனாகும்.

வடலூர் வள்ளல் இராமலிங்கர்

’வாட்டமிலா மாணிக்க வாசக நின்வாசகத்தை

கேட்டபொழுது அங்கிருந்த கீழ்ப்பறவை சாதிகளும்

வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞான

நாட்டமுறும் என்னிலங்கு நான் அடைதல் வியப்பன்றே. என்று மனம் உருகி மணிவாசகப்பெருமானின் வாசகங்களுக்குப்பெருமை சேர்க்கிறார்.

 வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்

கோனாகி யான் எனது என்று

அவரவரைக்கூத்தாட்டுவானாகி நின்றாயை

என் சொல்லி வாழ்த்துவனே. என்று  மறை பொருளுக்கு விளக்கம் தருகிறது திருவாசகம். இதனில் உண்மையுமாய் இன்மையுமாய் என இறையை க்குறிப்பிடுவது கூர்ந்து  நோக்கத்தக்கது  அப்படியே யான் எனது என்று அவர்அவரைக்கூத்தாட்டுவான் அந்த இறைவன் என்று பேசுவதும் கூடுதலா நம்மைக்கிறங்கவைக்கிறது.

‘சாதிகுலம் பிறப்பென்னும் சுழிபட்டுத்தடுமாறும்

ஆதமிலி நாயெனை அல்லல் அறுத்து ஆட்கொண்டு

பேதைகுணம் பிறர் உருவம் யான் எனது என்னுரை மாய்த்து

கோதிலா அமுதினானை குலாவு தில்லை கண்டேனே.

இவண் சாதிகுலம் பிறப்பு என்பதை சுழி என்கிறார் மாணிக்கவாசகர்.அதனில் அகப்பட்டுக்கொண்டவர்கள் வெளியேறுதல் அரிது.ஆக அம்மூன்றிலும் சிக்காமல் மனிதன் காப்பாற்றப்படவேண்டும். பிறகு,

பேதை குணம்

பிறர் உருவம்

யான்

எனது

என்னுரை

இத்தகைய விஷயங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பது மனிதனின் கீழ்மைக்குணம். இவைகளை மாய்த்து  என்னை மீட்டு எடுத்தக்குறை ஒன்றிலா அமுதினன் மகிழ்ச்சி பொங்கும் தில்லையில் உள்ளான் அவனை க்கண்டுகொண்டேன்  என்கிறார் மானிக்கவாசகர்.

மண்ணில் நல்ல வண்ணம் மனிதன் வாழ் நெறி காட்டும் திருவாசகம் ஒப்பற்ற  ஒரு ஞானக்கருவூலம்.

அடுத்து நாம் திருமூலர் இயற்றிய திருமூலம் சற்றே காணலாம்.

அடுத்தவேளை உணவு இல்லாத ஏழை நம்முன்னே நிற்க நாம் கோவிலில் கோண்டுபோய் பாலும் தேனும் குடம் குடமாய்க்  கொட்டி இறைவனை ஆராதிப்பது வழிபடுவது நியாயமில்லை என்று சமத்துவம் பேசும் தெய்வத்மிழ்நூல் திருமூலம்.

பமடமாடக்கோவில் பகவற்கு ஒன்று ஈயில்

நடமாடக்கோவில் நம்பர்க்கு ஆங்கு ஆகா

நடமாடக்கோவில் நம்பற்கு ஒன்று ஈயில்

படமாடக்கோவில் பகவற்கு அது ஆமே

எழையின் சிரிப்பில் இறைவனைக்காண்பது அது. ஏழையின் மகிழ்ச்சியில் இறைவனைக்காண்பது என்று சொல்வது பொருத்தம் கூடித்தெரியலாம்.

ஆயிரம்ஆயிரம்  என வேதம் ஓதியஅந்தணர்களுக்கு உண்விடலினும்  திரு நீறு பூசிய ஒரு  எளிய தொண்டனை  உள்ளத்தால் நினைத்து ப்பார்த்தல்சாலச் சிறந்தது. ஒர் பிடி அன்னம்  அவர்க்கு அன்பாய் வழங்க அதுவே நற்பேறு. 

’ஆறிடும் வேள்வி அருமறை நூலவர்

கூறிடும் அந்தணர் கோடிபேருண்பதில் நீறிடும் தொண்டர் நினைவின் பயனிலை

பேறு எனில் ஓர் பிடி பேறதுவாமே’.

இதைவிட நெஞ்சிற்கு நேர்மையாய் வேறு ஏதும் சொல்லிவிட வாய்க்குமா என்ன?

ஆடம்பரமும் ஆரவாரமும் ஆங்காரக்கூச்சலும் தெய்வ வழிபாடு என்று வாடிக்கையாகி கண்முன் நிற்கிறது. திருமூலரின் எளிமையைத்தான் என்று நாம் விளங்கிக்கொள்ளபோகிறோமோ?

’யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை

யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை

யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி

யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரைதானே.’

இறைவழிப்பாட்டை இத்தனை எளிமையாய் நேர்மையாய் என்று நாம் பயில்வதுவோ?

என்னுடைய தந்தை  நிறைவாழ்வு வாழ்ந்து இவ்வுலகினின்று விடைபெற்றுக்கொள்ளும்வரை தெருவில் நின்று கொண்டு தினம் ஒரு பிடி பசும்புல்லை தன்  கையாலே பறித்து அதனை  ஏதேனுமொரு பசுவிற்கு வழங்கியபின்னரே தனது மதிய உணவு என்பதை வழக்கமாக க்கொண்டிருந்தார் என்பதை இங்கு வெகு அடக்கத்தோடு பதிவு செய்துகொள்கிறேன்.

இறைவன் ஒருவனே அவனை அடைதற்கு ஆறுகள் பல. இது சிறந்தது அது சிறந்தது என்று பேசுவதைத் திருமூலர்

’’நன்றிது தீதிது என்றுரையாளர்கள்

குன்று குரைதெழு நாயை ஒத்தார்களே’. என்று வலிந்து குரல் கொடுக்கிறார்.

’ஒன்றே குலம் ஒருவனே தேவன்

நன்றே நினைமின் நமனில்லை.’

கச்சிதமாய்ச்சொன்ன திருமூலரை ஆழ்ந்து படிக்க  ஞானம் கைகூடும்.

ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று என்று ஒதிய திருமூலர் தமிழர்தம் அறிவுப்பெட்டகம்.

ஆகத் தமிழராய்ப்பிறந்த ஒவ்வொருவரும்

திருக்குறளை திருவாசகத்தை திருமூலத்தை படிக்காமல் தம் வாணாளை வீணில் போக்குதல் நியாயமே ஆகாது.

-----------------------------------------------------------------------

Saturday, July 10, 2021

எழிலன் -உள்ளம் படர்ந்த நெறி

 

உள்ளம் படர்ந்த நெறி- யில் கோவை எழிலன்   

 

இலக்கிய விஷயங்களை ரசனையோடு சொல்வது எல்லோருக்கும் வாய்த்துவிடாது. கோவை எழிலனுக்கு அது இயல்பாக வருகிறது.சொல்லவேண்டிய இலக்கிய த்தகவல்களை கேட்டார் பிணிக்கும் தகையவாய் சொல்லுதல் இங்கே சாத்தியமாகிறது.

. ஒரு மென்பொருள் பொறியாளர் மரபுக்கவிதையில் காலூன்றி நிற்பதுவும் இலக்கியப்பொக்கிஷங்களை ஆய்ந்து கருத்துச்சொல்வதும் அரிதினும் அரிதுதான்.  எழுத்தாளர் கடலூர் மன்றவாணன்  இலக்கிய விரும்பி எழிலனை ச்சரியாக வரையரை செய்கிறார். பொறியாளருக்குள் விஞ்சி நிற்கும் புலவர் என எழிலனைச்சுட்டி ப்பெருமை சேர்க்கிறார்.

சுவாரசியமான தகவல்கள் எழிலனால் சர்வ சாதாரணமாக உள்ளம் படர்ந்த நெறியில் எடுத்துவைக்கப்படுகின்றன. நாத்திகம் கேட்கவந்த தெய்வங்கள் என்னும் தலைப்பில் அண்ணாவின் நாத்திறம் பற்றி  கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகளை மெற்கோள் காட்டி எழுதுகிறார்.

‘ஆயதோர் காலையில்

ஆலய வீதியில்

நாயகனே உன்

நாத்திகம் கேட்கத்

தெய்வங்களெல்லாம்

தேர்களில் வந்தன

பொய்தாம் தாமென

புலம்பிப்போயின.

கடவுளரையே  தாம் பொய் என்று கூற வைக்கும் அளவுக்கு நாவன்மை படைத்தவர்  அறிஞர் அண்ணா. என்கிறார் வைரமுத்து.

எழிலன் ’‘ங ப்போல் வளை’ என்னும் ஆத்திச்சூடியை எடுத்துக்கொள்கிறார்.’ங’என்ற எழுத்து எத்தனை வளைவு  நெளிவு இருந்தும்  அதனை ஏற்று வாழக்கற்றுக்கொண்டதோ அப்படி  நாமும் வாழ்க்கையில் அத்தனை துயரங்களையும் ஏற்றுக்கொண்டு  வெற்றி நடைபோடவேண்டும். நாம் எல்லோரும் இப்படிப் பொருள் சொல்லுவோம்.

எழிலன் இப்படிச்சொல்கிறார். ‘ங என்கிற எழுத்து ஒன்றுக்கும் உதவாத தன் இன எழுத்துக்களை தனியா நின்று எப்படிக் காக்கிறதோ அது போல் நாமும் நம்மை ச்சர்ந்தவர்களை பயன் கருதாது காக்கவேண்டும். நன்றாகத்தான் இருக்கிறது எழிலனின் விளக்கம். பாராட்டுவோம்.

மென்பொறியாளர் அம்மானைப்பாடல் ஒன்றும் எழுதுகிறார். அது அற்புதமாக வந்திருக்கிரது எழிலனுக்கு.

‘ சூரன் தனையழித்த

சண்முகனுக்கிந்திரன்தான்

தாரமெனத்தன்மகளைத்

தந்திட்டான் அம்மானை.

 

தாரமென வந்தவளைத்

தானணைத்து வாழாமல்

வீரன் வனத்திற்கே

வந்ததுமேன் அம்மானை

 

சீர்கொண்ட வள்ளியைச்

சேர்த்தணைக்க அம்மானை.

கொங்கு நாட்டார் பண்பாட்டுச்சிறப்பு பற்றி கவிஞர் கண்ணதாசன் அழகாகக்குறிப்பிடுவார். இது விஷயம் நாம் எல்லோரும் அறிந்ததே. கோவைப்பகுதிக்காரர்கள் மரியாதையுடன் பிறரை நடத்துவதைப்பார்த்து  தமிழ் நாட்டின் பிற பகுதிக்காரர்கள் நெகிழ்ந்துதான் போகவேண்டும். செட்டி நாட்டாரும் விருந்தோம்பலுக்குப்பெயர்போனவர்கள்தாம்.  அந்த நகரத்தார் இனத்து கண்ணதாசனே கோவை விருந்தோம்பலைப்பற்றி எத்தனைப்பெருமையாகக்குறிப்பிடுகிறார். அதனை எழிலன் வாசகர்களுக்கு கொண்டு தருகிறார்

வாழ்கின்றார் கோவையிலே

நல்ல மக்கள் !

சூழ்கின்ற பண்பெல்லாம்

கோவையில்தான் !

என்று தொடங்கிய கண்ணதாசன் அடுக்கிக்கொண்டே போகிறார்.

அப்பப்பா ! கோவையிலே

விருந்து வந்தால்

ஆறு நாள் பசி வேண்டும் !

வயிறும் வேண்டும்

தப்பப்பா ! கோவைக்கு

வரக்கூடாது !

சாப்பாட்டினாலே

சாகடிப்பார் !

விருந்தோம்பலுக்குப்பெயர்போன செட்டி நாட்டு. நகரத்தோர் திருமண நிகழ்வுக்குச்சென்று திரும்பியவர்கள் அதனை அனுபவித்தே திரும்பியிருப்பர். நகரத்தார் கண்ணதாசன் இப்படி கோவை மக்களின் விருந்தோம்பலை வாயாரப்புகழ்வது அப்பகுதிக்குப் பெருமை சேர்க்கிறது..

எழிலனோ தன்னை கோவை எழிலன் என்கிறார்.  பணி நிமித்தம் சில காலம் கோவையில் தங்கியுள்ளவர் அவர்.  மும்பையில் முன்பு  அவர் வசித்தபோது  அவர் இல்லத்துக்கு  நான் விருந்தினனாய் என் குடும்பத்தோடு சென்றிருக்கிறேன். அவர் குடும்பத்து விருந்தோம்பும் பண்பை அனுபவித்தவன்.

கோவை எழிலன்  எழுத்தாளர் வளவதுரையனின் மூத்த மகன். வளவ துரையனின்  இல்லத்து க்காபியை ப்புகழாத எழுத்தாளர்களும் உண்டா என்ன ! !

சந்தியா பதிப்பகம் கொணர்ந்துள்ள  இந்நூல் சிறப்பாக வந்திருப்பது பாராட்டுக்குறியது. எழிலனுக்கு இது நல்ல தொடக்கம்.  எழிலனின் இலக்கியப்பயணம் வெல்லட்டும்.

------------------------------------------------------------

 

.

 

 

 

 

 

Thursday, June 3, 2021

விதியே விதியே t

 

 

விதி விதியே                  -எஸ்ஸார்சி

 

 

திருப்பதி ஏழுமலையானை த்தரிசிக்க ரெண்டு தினங்கள் காத்து க்கிடக்கவேண்டும். அது பழங்கதை. பதினைந்து நிமிடம் காத்திருக்க ஏடு கொண்டலவாடனை வெங்கட ரமண கோவிந்தனை த்தரிசிக்க வாய்க்கிறது. கொவைட் பெருந்தொற்றின் ஆட்சியல்லவா இப்போது நடக்கிறது. பக்தர்கள் நடமாட்டமின்றி  வெறிச்சோடிக்கிடக்கின்றன திருக்கோவில்கள்.

இந்தியாவில் தாய் தந்தை இருவரையும் பெருந்தொற்றில் பலிகொடுத்துவிட்டு அனாதைகளாகிய இரண்டாயிரம் குழந்தைகள் வீதிக்கு வந்திருக்ககிறார்கள்.  மத்திய   மாநில அரசுகள் அவர்கட்கு நிறையவே உதவி செய்ய  உறுதியேற்றுக்கொண்டுள்ளன.  மக்கள் எல்லோரும் துயர் உற்ற குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டஅறைகூவல் விட்டிருக்கிறார்கள்..   சற்றே ஆறுதல் தரும் விஷயங்கள் இவை.

அண்மையில் அஸ்ஸாமில் கொரானா வைத்தியம் பார்க்கும் மருத்துவர் ஒருவரை த்தாக்கியிருக்க்கிறார்கள்.  பெருந்தொற்று நோயாளி இறந்து போனதற்கு அந்த  மருத்துவரே காரணம் என்கிற  தவறான குற்றச்சாட்டை வைத்துத் தெரு நாயை அடிப்பதுபோல்  அடித்துத் துவைத்து  எடுத்து இருக்கிறார்கள்.  தொலைக்காட்சியில் இக்கொடுமையை ப்பார்த்தபோது கண்கள் கலங்கின. இவையும் இன்னபிறவும் நம் தேசத்திற்கே அவமானம்   அநியாயம்  சர்வ அக்கிரமம். விபரீதம்.

 தியாகப்படையாய் உலக அரங்கில்  மருத்துவப்பணி செய்யும் மருத்துவர்கள்  மருத்துவ உதவியாளர்கள் செவிலியர்கள் எல்லோருமே இன்று  நடமாடும் தெய்வங்கள் என்றுமட்டுமே  மக்கள் சமூகத்திற்கு அனுபவமாகவேண்டும்.

ஒன்றரை ஆண்டுகாலமாக முடிதிருத்தும் அழகு நிலையங்கள் மூடிக்கிடக்கின்றன.ஆளுக்கொரு கத்தரிக்கோலை வைத்துக்கொண்டு இங்கும் அங்கும் வெட்டி முடியை சரிசெய்துகொண்டு  நம் காலம் ஓடுகிறது. யார் முகத்தையும் யாரும் பார்ப்பதில்லை. அப்படியே பார்த்தாலும் எதிரே நிற்பவர்முகக்கவசம் அணிந்திருந்தாலே போதுமடா சாமி என்கிறபடிக்குத்தான்  நேரும் அனுபவங்கள்.

துணி வெளுக்கும் தொழிலாளி வண்டி தள்ளிக்கொண்டு  வீதியில் இஸ்திரிபோடும் தொழிலாளி என்னவெல்லாம் ஆகியிருப்போரோ அவர்களையெல்லாம் பார்த்து எத்தனையோ மாதங்கள் ஓடிவிட்டன. அவர் பெற்ற குழந்தைகளுக்குச்சோறு போடுவதெப்படி. அவர் எப்படி எப்படி  காலட்சேபம் செய்துகொண்டு இருப்போரோ தெரியவில்லை..

’ஏ  தயிரு தயிரே’ என்று கூவித்  தயிர் விற்றபடி   சதா வெற்றிலைபோடும் பாட்டியின் குரலைக்கேட்டு மாதங்கள் பலவாகின.. அவ்வம்மையின்வ யோக க்‌ஷேமங்கள் நமக்கு எங்கே தெரிகிறது.

தினம் தினம் விடியற்காலை ’கோலமாவே  கோலமாவே’ என்று  எறும்புதின்னா அந்தக்கல் கோலமாவு விற்ற சைக்கிள்காரனை  நாம் எப்போது பார்ப்பது.

நண்பர்கள் உறவினர்கள் தெரிந்தவர்கள் என எத்தனையோ மனித உயிர்களை இப்பெரும்தொற்று விழுங்கிவிட்டது  விருந்து புறத்ததா தாணுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று என்கிற அய்யன் குறளுக்கு இப்போது என்னதான் மரியாதை. அன்றாடம் விருந்தோடு உண்பான்  சொந்த விளை நிலத்தில் விதைக்கவும் வேண்டாம் தானாகவே அவனுக்கு நிலம் விளையும் என்றார்களே. அது நெஞ்சில் ரணமாக உறுத்துகிறது.

வாழும் நகருக்கு மத்தியாய் சக்தி விநாயகர் திருக்கோவில் திண்டுக்கல் பூட்டுப்போட்டு. கதவடைத்துக்கிடக்கிறது. எப்போதேனும் வீதிக்கு வரும் மக்கள் அந்தக்கோபுரம் பார்த்துத்தாடையில் போட்டுக்கொண்டே நகர்ந்து போகிறார்கள். அந்த ஐயர்  கற்பூரத்தட்டைக்காண்பித்து காசு சம்பாரித்து காலம் ஓட்டினார்.  ஐந்துபேருள்ளது அக்குடும்பம்.அவர் என்னவானார் சேதியில்லை.

பிணம் சுடும் கூடங்கள் ஜே ஜே என்று கூட்டமாய்.  பிணம் சுடும் தொழிலாளி நன்றாக ப்படுத்துத்தூங்கியும் உண்டும் எத்தனையோ காலமானது.  மயான பூமியைச் சுற்றியுள்ள தெருக்களெல்லாம் துர்நாற்றம். புகை கடும்புகை. ஓலங்கள் அழுகுரல்கள் அன்றாடம் இவை.   ஏதோ வீச்சமடிக்கும் தண்ணீரில் நனைந்து போன துணிகளுடன்  ஓயாத மனித  நடமாட்டங்கள் புழக்கங்கள்.

சென்ற ஆண்டு குழந்தைகளுக்கு வாங்கிய யூனிஃபாரம் துணி இன்னும் கட்டுப்பிரிக்காமல்  கிடக்கிறது   இதோ இந்தாண்டு அந்தத்துணி மூட்டை. இந்த தான் பள்ளிக்கதவே திறக்கக்காணோம் தையலர்கள் கடைகள்  நிரந்தரமாய் அடைத்தே கிடக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளித் திறக்கும் போதெல்லாம் கடைத்தெருக்களில் நோட்டு புத்தகம் புத்தகப்பை எழுதுகோல் அது உறங்கு பெட்டி விதம் விதமாய்க் காலணிகள்  தண்ணீர் பாட்டில்கள் என்று வாங்க எத்தனையோ மக்கள் அலை கூடுவார்கள். கடைக்கு கடைக்கு ஏறி ஏறி இறங்குவார்கள். கல்வி நிறுவனங்கள் எல்லாம்தான் முடங்கிக்கிடக்கிறதே.

·         மருந்துக்கடைகள்  மட்டும் ஓயாமல் திறந்து கிடக்கின்றன.  முகமணியும் மாஸ்க் விற்பனை படு ஜோர். சானிடைசர்கள் கையுறைகள் விற்பனைதான் ஓய்வதே இல்லை.

மருத்துவ மனை வாயில்களில் எப்போதும் கூட்டம் கூச்சல் ஆரவாரம் ஆம்புலன்சுகள் அவை எழுப்பும் முனகல். அவை வழங்கும் கிலி தரு ஒலி இவை இவை

பேருந்து நிலையங்கள்  தெரு நாய்கள்  கால்களைப் பரப்பிக்கொண்டுஉலவும் உறங்கும் அரங்கங்களாக  மாற்றம் பெற்றுள்ளன. வேறு ஒன்றையுமே அங்கே பார்க்கத்தான் முடியவில்லை

ரயில் நிலையங்கள் வெறிச்சோடி அச்சம் தருகின்றன. பசு மாடுகள் படுத்துக்கிடக்கின்றன. தினம் ஆயிரம் ரயில் பிச்சைக்காரர்கள் இங்கே  வந்து வந்து போவார்கள். அவர்கள் என்ன ஆனார்களோ. திரு நங்கைகளின் கைததட்டொலி கேட்டிலையே நாம்

வங்கிக்கிளைகள் வாயிலில் ஒத்தை ஒத்தையாய் மனிதர்கள் கால் கடுக்க நிற்கிறார்கள். அவர்களுக்கு என்ன  வங்கிச்சேவை கிடைத்ததோ. உள்ளே ஆட்கள் ஓரிருவர்  வாடிக்கையாளர்களோடு முட்டிக்கொண்டு இருக்கக்கூடும்

தனியார்ப்பள்ளி ஆசிரியர்கள் அதுதான் சுய நிதிக்கல்லூரி ஆசிரியர்கள் ஆன் லைனில் பாடம் நடத்துகிறார்கள். மாணவர்கள் மணிக்கணக்கில் கைபேசி முன் அமர்ந்து பாடம் கேட்கிறார்கள்.  ஆசிரியர்களுக்கு ப்பாதி சம்பளம் கொடுப்பதாய் நிர்வாகம் சொல்கிறது. உண்மையாகவும் இருக்கலாம்.

நீதிமன்ற இரும்புக்கேட்டுக்கள் பெரும்பாலும் சாத்தியே கிடக்கின்றன.திண்டுக்கல் பூட்டுக்கள்  அங்கே அழகாய்க் காவல் செய்கின்றன. நீதிபதிகளுக்கு சம்பளம் வந்துவிடும். வக்கீல்கள் பாதிபேர் பட்டினி.  பெருந்தொற்றுக்காலம். ஒரு தே நீர் குடிப்பதற்கும் அவர்களுக்கு வாய்ப்பில்லையே. அரைக்கட்டனச்சலுகையில் உயர் நீதி மன்ற வளாகத்துக் காண்டினை நம்பியே வாழ்ந்த வக்கீல்கள் ஏராளம். அவர்கள் கதியெல்லாம் என்னவானதோ.

கல்யாணமண்டபங்களில் வவ்வால்கள் கம்பீரமாய் ஆட்சிசெய்கின்றன. நாதசுரக்காரர்கள் சமையலர்கள் வாழயிலை சப்ளை செய்யும் வாழைமர விவசாயிகள் செய்வது அறியாது திகைத்து நிற்கிறார்கள்.   மண்டபப் புரோகிதர்கள் கண்கள் கலங்கியபடியே அங்கும் இங்கும் விழித்துக்கொண்டு நிற்கிறார்கள்.

எப்போது வரும் எல்லோருக்குமான வெளிச்சம்.

---------------------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

t

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  

விதியேவிதியே                  -

 

 

திருப்பதி ஏழுமலையானை த்தரிசிக்க ரெண்டு தினங்கள் காத்து க்கிடக்கவேண்டும். அது பழங்கதை. பதினைந்து நிமிடம் காத்திருக்க ஏடு கொண்டலவாடனை வெங்கட ரமண கோவிந்தனை த்தரிசிக்க வாய்க்கிறது. கொவைட் பெருந்தொற்றின் ஆட்சியல்லவா இப்போது நடக்கிறது. பக்தர்கள் நடமாட்டமின்றி  வெறிச்சோடிக்கிடக்கின்றன திருக்கோவில்கள்.

இந்தியாவில் தாய் தந்தை இருவரையும் பெருந்தொற்றில் பலிகொடுத்துவிட்டு அனாதைகளாகிய இரண்டாயிரம் குழந்தைகள் வீதிக்கு வந்திருக்ககிறார்கள்.  மத்திய   மாநில அரசுகள் அவர்கட்கு நிறையவே உதவி செய்ய  உறுதியேற்றுக்கொண்டுள்ளன.  மக்கள் எல்லோரும் துயர் உற்ற குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டஅறைகூவல் விட்டிருக்கிறார்கள்..   சற்றே ஆறுதல் தரும் விஷயங்கள் இவை.

அண்மையில் அஸ்ஸாமில் கொரானா வைத்தியம் பார்க்கும் மருத்துவர் ஒருவரை த்தாக்கியிருக்க்கிறார்கள்.  பெருந்தொற்று நோயாளி இறந்து போனதற்கு அந்த  மருத்துவரே காரணம் என்கிற  தவறான குற்றச்சாட்டை வைத்துத் தெரு நாயை அடிப்பதுபோல்  அடித்துத் துவைத்து  எடுத்து இருக்கிறார்கள்.  தொலைக்காட்சியில் இக்கொடுமையை ப்பார்த்தபோது கண்கள் கலங்கின. இவையும் இன்னபிறவும் நம் தேசத்திற்கே அவமானம்   அநியாயம்  சர்வ அக்கிரமம். விபரீதம்.

 தியாகப்படையாய் உலக அரங்கில்  மருத்துவப்பணி செய்யும் மருத்துவர்கள்  மருத்துவ உதவியாளர்கள் செவிலியர்கள் எல்லோருமே இன்று  நடமாடும் தெய்வங்கள் என்றுமட்டுமே  மக்கள் சமூகத்திற்கு அனுபவமாகவேண்டும்.

ஒன்றரை ஆண்டுகாலமாக முடிதிருத்தும் அழகு நிலையங்கள் மூடிக்கிடக்கின்றன.ஆளுக்கொரு கத்தரிக்கோலை வைத்துக்கொண்டு இங்கும் அங்கும் வெட்டி முடியை சரிசெய்துகொண்டு  நம் காலம் ஓடுகிறது. யார் முகத்தையும் யாரும் பார்ப்பதில்லை. அப்படியே பார்த்தாலும் எதிரே நிற்பவர்முகக்கவசம் அணிந்திருந்தாலே போதுமடா சாமி என்கிறபடிக்குத்தான்  நேரும் அனுபவங்கள்.

துணி வெளுக்கும் தொழிலாளி வண்டி தள்ளிக்கொண்டு  வீதியில் இஸ்திரிபோடும் தொழிலாளி என்னவெல்லாம் ஆகியிருப்போரோ அவர்களையெல்லாம் பார்த்து எத்தனையோ மாதங்கள் ஓடிவிட்டன. அவர் பெற்ற குழந்தைகளுக்குச்சோறு போடுவதெப்படி. அவர் எப்படி எப்படி  காலட்சேபம் செய்துகொண்டு இருப்போரோ தெரியவில்லை..

’ஏ  தயிரு தயிரே’ என்று கூவித்  தயிர் விற்றபடி   சதா வெற்றிலைபோடும் பாட்டியின் குரலைக்கேட்டு மாதங்கள் பலவாகின.. அவ்வம்மையின்வ யோக க்‌ஷேமங்கள் நமக்கு எங்கே தெரிகிறது.

தினம் தினம் விடியற்காலை ’கோலமாவே  கோலமாவே’ என்று  எறும்புதின்னா அந்தக்கல் கோலமாவு விற்ற சைக்கிள்காரனை  நாம் எப்போது பார்ப்பது.

நண்பர்கள் உறவினர்கள் தெரிந்தவர்கள் என எத்தனையோ மனித உயிர்களை இப்பெரும்தொற்று விழுங்கிவிட்டது  விருந்து புறத்ததா தாணுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று என்கிற அய்யன் குறளுக்கு இப்போது என்னதான் மரியாதை. அன்றாடம் விருந்தோடு உண்பான்  சொந்த விளை நிலத்தில் விதைக்கவும் வேண்டாம் தானாகவே அவனுக்கு நிலம் விளையும் என்றார்களே. அது நெஞ்சில் ரணமாக உறுத்துகிறது.

வாழும் நகருக்கு மத்தியாய் சக்தி விநாயகர் திருக்கோவில் திண்டுக்கல் பூட்டுப்போட்டு. கதவடைத்துக்கிடக்கிறது. எப்போதேனும் வீதிக்கு வரும் மக்கள் அந்தக்கோபுரம் பார்த்துத்தாடையில் போட்டுக்கொண்டே நகர்ந்து போகிறார்கள். அந்த ஐயர்  கற்பூரத்தட்டைக்காண்பித்து காசு சம்பாரித்து காலம் ஓட்டினார்.  ஐந்துபேருள்ளது அக்குடும்பம்.அவர் என்னவானார் சேதியில்லை.

பிணம் சுடும் கூடங்கள் ஜே ஜே என்று கூட்டமாய்.  பிணம் சுடும் தொழிலாளி நன்றாக ப்படுத்துத்தூங்கியும் உண்டும் எத்தனையோ காலமானது.  மயான பூமியைச் சுற்றியுள்ள தெருக்களெல்லாம் துர்நாற்றம். புகை கடும்புகை. ஓலங்கள் அழுகுரல்கள் அன்றாடம் இவை.   ஏதோ வீச்சமடிக்கும் தண்ணீரில் நனைந்து போன துணிகளுடன்  ஓயாத மனித  நடமாட்டங்கள் புழக்கங்கள்.

சென்ற ஆண்டு குழந்தைகளுக்கு வாங்கிய யூனிஃபாரம் துணி இன்னும் கட்டுப்பிரிக்காமல்  கிடக்கிறது   இதோ இந்தாண்டு அந்தத்துணி மூட்டை. இந்த தான் பள்ளிக்கதவே திறக்கக்காணோம் தையலர்கள் கடைகள்  நிரந்தரமாய் அடைத்தே கிடக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளித் திறக்கும் போதெல்லாம் கடைத்தெருக்களில் நோட்டு புத்தகம் புத்தகப்பை எழுதுகோல் அது உறங்கு பெட்டி விதம் விதமாய்க் காலணிகள்  தண்ணீர் பாட்டில்கள் என்று வாங்க எத்தனையோ மக்கள் அலை கூடுவார்கள். கடைக்கு கடைக்கு ஏறி ஏறி இறங்குவார்கள். கல்வி நிறுவனங்கள் எல்லாம்தான் முடங்கிக்கிடக்கிறதே.

·         மருந்துக்கடைகள்  மட்டும் ஓயாமல் திறந்து கிடக்கின்றன.  முகமணியும் மாஸ்க் விற்பனை படு ஜோர். சானிடைசர்கள் கையுறைகள் விற்பனைதான் ஓய்வதே இல்லை.

மருத்துவ மனை வாயில்களில் எப்போதும் கூட்டம் கூச்சல் ஆரவாரம் ஆம்புலன்சுகள் அவை எழுப்பும் முனகல். அவை வழங்கும் கிலி தரு ஒலி இவை இவை

பேருந்து நிலையங்கள்  தெரு நாய்கள்  கால்களைப் பரப்பிக்கொண்டுஉலவும் உறங்கும் அரங்கங்களாக  மாற்றம் பெற்றுள்ளன. வேறு ஒன்றையுமே அங்கே பார்க்கத்தான் முடியவில்லை

ரயில் நிலையங்கள் வெறிச்சோடி அச்சம் தருகின்றன. பசு மாடுகள் படுத்துக்கிடக்கின்றன. தினம் ஆயிரம் ரயில் பிச்சைக்காரர்கள் இங்கே  வந்து வந்து போவார்கள். அவர்கள் என்ன ஆனார்களோ. திரு நங்கைகளின் கைததட்டொலி கேட்டிலையே நாம்

வங்கிக்கிளைகள் வாயிலில் ஒத்தை ஒத்தையாய் மனிதர்கள் கால் கடுக்க நிற்கிறார்கள். அவர்களுக்கு என்ன  வங்கிச்சேவை கிடைத்ததோ. உள்ளே ஆட்கள் ஓரிருவர்  வாடிக்கையாளர்களோடு முட்டிக்கொண்டு இருக்கக்கூடும்

தனியார்ப்பள்ளி ஆசிரியர்கள் அதுதான் சுய நிதிக்கல்லூரி ஆசிரியர்கள் ஆன் லைனில் பாடம் நடத்துகிறார்கள். மாணவர்கள் மணிக்கணக்கில் கைபேசி முன் அமர்ந்து பாடம் கேட்கிறார்கள்.  ஆசிரியர்களுக்கு ப்பாதி சம்பளம் கொடுப்பதாய் நிர்வாகம் சொல்கிறது. உண்மையாகவும் இருக்கலாம்.

நீதிமன்ற இரும்புக்கேட்டுக்கள் பெரும்பாலும் சாத்தியே கிடக்கின்றன.திண்டுக்கல் பூட்டுக்கள்  அங்கே அழகாய்க் காவல் செய்கின்றன. நீதிபதிகளுக்கு சம்பளம் வந்துவிடும். வக்கீல்கள் பாதிபேர் பட்டினி.  பெருந்தொற்றுக்காலம். ஒரு தே நீர் குடிப்பதற்கும் அவர்களுக்கு வாய்ப்பில்லையே. அரைக்கட்டனச்சலுகையில் உயர் நீதி மன்ற வளாகத்துக் காண்டினை நம்பியே வாழ்ந்த வக்கீல்கள் ஏராளம். அவர்கள் கதியெல்லாம் என்னவானதோ.

கல்யாணமண்டபங்களில் வவ்வால்கள் கம்பீரமாய் ஆட்சிசெய்கின்றன. நாதசுரக்காரர்கள் சமையலர்கள் வாழயிலை சப்ளை செய்யும் வாழைமர விவசாயிகள் செய்வது அறியாது திகைத்து நிற்கிறார்கள்.   மண்டபப் புரோகிதர்கள் கண்கள் கலங்கியபடியே அங்கும் இங்கும் விழித்துக்கொண்டு நிற்கிறார்கள்.

எப்போது வரும் எல்லோருக்குமான வெளிச்சம்.

---------------------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

t