Wednesday, July 31, 2019

Si.Makenthiranin- ThiikkuL viralai vaiththaal



சி.மகேந்திரனின் ‘தீக்குள் விரலை வைத்தேன்’ இலங்கை பேரினவாதத்தின் முடிச்சவிழ்ப்பு.


தீக்குள் விரலை வைத்தேன் படித்து ஆராயலாம். ஏன் பதறிபோகலாம்.கண்கள் நிறைத்துக்கொண்டு சினம் கொப்பளிக்கலாம்.மனித நேயம் போற்றும் மானிட இலக்கணங்களைக்கண்டு தெம்பு கூட்டலாம்.காக்கைகள் பங்கு போட்டுத்தின்னும் தமிழனின் தெரு ரணக்களத்தை தரிசித்துவிடலாம். மனமே இல்லாத மனித உருக்களால் திட்டமிட்டு இனச்சிக்கல் வளர்க்கப்படுவதை கண்டு நோக்கலாம். சி. மகேந்திரனின் ‘தீக்குள் விரலை வைத்தால்’ அற்புதமாய் வந்திருக்கிறது.பக்குவப்பட்ட அரசியல்வாதி என்பதால் படைப்பிலே முதிர்ச்சியை அனுபவிக்க முடிகிறது.பொதுவுடமைவாதியின் கண்களுக்கு முன்னாலேயே இத்தனை அட்டகாசங்களும் தென்படுகிறபோது உலக சகோதரத்துவம் என்பது ஆடிப்போகிறது.
மஎந்திரனின் நூலுக்கு செ.கணேசலிங்கன் அறிமுகம் தந்துள்ளார் ‘’இந்நூல்  நான் பிறந்து வளர்ந்த வாழ்ந்த நாட்டை மேலும் சிறப்பாக எனக்கே அறிமுகப்படுத்துகிறது.’ இது முற்றிலும் மெய் என்பதனை வாசகனும் அங்கீகரித்து விடுகிறான்.இலங்கையின்இனச்சிக்கலை,பேரினவாதத்தை நன்கு விளங்கிக்கொள்ள இந்நூல் துணைபுரியும். நேர்மையாக எழுதப்பட்ட படைப்பு என்பதனை ப்படிக்கிறபோது உணர்ந்து பிரமிக்கச்செய்கிறது. மகேந்திரனின் மாணவப்பருவத்து அமைப்புப்பயிற்சியும்,தாமரையின் இலக்கிய அனுபவமும் பொதுவுடமை அரசியல் பாத்திரப்பணியும் நிகரற்றவை என்றாலும்’’தீக்குள் விரலை வைத்தேன் ’ அனைத்தையும் விஞ்சி நிற்கிறது.ஆம் என்றுமே நிற்கும் என்பதனை உறுதியாகச்சொல்லமுடியும். இலங்கயின் இனச்சிக்கல் இத்தனை எளிமையாய், பன்முகத்தன்மையோடு வெளிப்படுத்துதல் என்பது அவரின் அடிமன ஆர்வத்தை பிரதிபலிக்கிறது.இலங்கையைப்பற்றிய ஓர் இனப்புரிதல் இனி மகேந்திரனின் இந்நூலை விடுத்து சாத்தியப்படாது என்பதனை உணர்த்தி நிற்கிறது.
நடப்பில் ஜன நாயகம் என்கிற எந்திரம் தன் வடிவத்தை எப்படி எளிதாய் மாற்றிக்கொண்டு ஒரு சிறுபான்மை இனத்தின் அடையாளங்களை அழித்துவிட முடிகிறது என்பதனை இலங்கையில் காண நேரிடுகிறது.இலங்கை இனப்பிரச்சனையில் சிங்கள தமிழின முரண்பாடு,தமிழர்களிடையே மலையகத்தமிழர்களின் கையறு நிலை, இசுலாமியத்தமிழர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் என முக்கியமாய் மூன்று கூறுகளைக்காணலாம்.இவை ஒவ்வொன்றையும் அக்கு வேறு ஆணி வேறாக அறிவதற்கு மகேந்திரன் உதவி இருக்கிறார் என்றும் குறிப்பிடலாம். பதிப்புரையில் சொல்லப்பட்டபடி’ இலங்கை பற்றித் தமிழில் வெளிவந்துள்ள நூல்களில் இது தனிப்பட்டதாகும் என்பது சரியான விளக்கமே. உணர்ச்சிப்பிரவாகத்தின் மீது  கொப்பளித்து எழுகின்ற சினக்குன்றின் மீது, துயரக்குகையில் குப்புறப்படுத்து க்குமுறுதலில் ஆழ்ந்து, மானுடத்தை வக்கிரமாக புரிந்துகொண்டு வியூகம் அமைப்பதில் தவறிவிட்டு,குழம்பிக்கொண்டும் குழப்பிக்கொண்டும்.கூக்குரல்  எழுப்பி அலையொலியில் ஒளிந்துகொண்டும், நெளிந்துகொண்டும் படைப்பு என்கிற ஒன்றை  வெளிக்கொணரும் அசாதாரணச் சூழலில் மட்டுமே அனுபவமாகிப்போன வாசகனுக்கு இந்த நூல் நல்ல புரிதலை கொடையாக்கி உதவுகிறது.
சி.மகேந்திரனின் வார்த்தைகளில் கச்சிதமானது அனேகம்.எடுத்துக்காட்டாய் சிலதுகளைச்சொல்லமுடியும். முதல் அத்தியாயத்து இறுதியில் இப்படிச்சொல்கிறார் ஆசிரியர்.’ஜன நாயகம் என்னும் மிக உயர்ந்த அரசியல் வடிவத்தை சிறுபான்மையினரின் உரிமையை நசுக்கும் கருவியாகப்பயன்படுத்தும் போது மோசமான விளைவுகளில் நாடு சிக்கிகொள்கிறது. இது எந்த ஒரு ஜன நாயக  நாட்டுக்கும் ஆகப்பொருத்தமானதே..1972 ல் இலங்கை பெளத்த நாடாக அறிவிக்கப்பட்டதே எல்லாப்பிரச்சனைகளுக்கும் ஊற்றுக்கன்ணாய்ப்போனதை மகேந்திரன் அற்புதமாய்க்கூறிவிடுகிறார். இரத்தம் சிந்துதல் உள்ளிட்ட எந்த கொலைக்கள கூச்சலையும் எழுப்பும் உரிமை பெற்றவர்கள் புத்த பிக்குகள் என்கிற விஷயம் அம்மலப்படுகிறது.
iஇலங்கையின் முற்போக்கு எழுத்தாளர்சங்க இலக்கியப்பேரரங்கின் ஜன நாயகத்தன்மையை புகழ்ந்து சொல்கிறார் ஆசிரியர்.அது மிகச்சரியானதே.உலக அரசியல், சித்தாந்த நெருக்கடியில் சிக்கித்தவித்த பொதுடமை அமைப்புக்கள் நீளவாட்டில் தம்மை கூறுபோட்டு மகிழ்ந்துபோயின. இன்றளவும் இதன் மீது விமரிசனம் எழும்போது பார்த்துக்கொள்கிற ‘சாக்கிரதை மனோபாவம்’ புரட்சி மேகங்களால் அடைகாக்கப்படுகிறது என்பது நிதர்சனம். ப்ரேம்ஜியின் விடையாய் மகேந்திரன் இப்படிச்சொல்கிறார்.
ஜன நாயகமும் இலக்கிய நோக்கம் குறித்த பொறுப்புணர்வும்தான் எதனையும் சாத்தியப்படுத்துகிறது. இப்படிப்பேசும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் குறித்து நாம் பெருமிதம் கொள்ளலாம். தோழர் பிரேம்ஜி ஒரு பொதுஉடமைவாதி.
சிங்கள இன அரசு இயந்திரத்தால் யாழ்ப்பானத்திலிருந்து விரட்டப்பட்ட இசுலாமியத்தமிழர்கள் கேட்கும் கேள்வியை நாம் ஒவ்வொருவரும் அது  நமக்கே எனப்பாவிக்கலாம். கேள்வி இது
துப்பாக்கி முனையில் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டபோது தமிழகத்தில் ஏன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை ? அந்த அப்பாவி மக்களுக்கு ஏன் ஆறுதல் வார்த்தைகூட எங்கிருந்தும் வரவில்லை. மெய்யாகவே நமக்குத்தலை தாழ்ந்துபோகிறது. இந்திரா பார்த்தசாரதி ‘பனியும் பறையும்’ என்ற படைப்பில் குறிப்பிட்டுள்ளதனை மகேந்திரனே இங்கே பேசுவதைச்சொல்லி ஆறுதல் தேடலாம். ஒரு ஆஸ்திரேலிய வெள்ளையர் விமானப்பயணத்தின் போது கேள்வி கேட்டாராம்.’இந்தியாவிலுமா தமிழர்கள் வசிக்கிறார்கள் ? என்று. வேதனையின் உச்சம்தானே இது.
இலங்கை மலத்தோட்டங்களில் தம் குருதியைக்கொட்டி தமிழ் இனம் லட்சக்கணக்கில் கேட்பார் அற்றுக்கிடக்கிறது. இலங்கை குடியுரிமை இல்லை. இந்தியாவுக்கு ச்செல்லவும் வழி இல்லை. தலைமுறைகள் ஏழு கடந்தன.வயிற்றுப்பசிக்கு படகில் ஏறிப்போனவர்கள் விலாசம் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள். மனிதப்புழுக்களாய்க்காட்சி தரும் தமிழர்கள். லால்பஹதூர் சாஸ்திரியையும் ராஜிவ் காந்தியையும் சபித்துக்கொண்டு. தமிழ் ச்சகோதரர்கள் விதியின் சதியில்.
இலங்கை மலையகத்தமிழர்களின் வாழ்வுக்குப்போராடிய உத்தமத்தோழர் நடேச அய்யரைப்பற்றிய குறிப்புகள் மகேந்திரன் எழுத்து நேர்மைக்கு ச்சான்று பகர்கின்றன. தமிழ் மண்ணில் இப்படி  எல்லாம் எழுதிவிட்டு குப்பை கொட்டிவிடமுடியாதபடிக்கு. எதோ ஒரு அறிவு திரையிட்டு நிற்கிறது. என்பது வேறு. நடேச அய்யரின் துணைவியார் மீனாட்சி அம்மையின் பேச்சாற்றல், கவிதா வலிமை,தொழிற்சங்க ஆளுமை குறித்தும் மகேந்திரன் பேசுகிறார்.. கண்டி நகரில் கைலி கட்டிக்கொள்வது தமிழனுக்கு பாதுகாப்பு. கண்டித்தமிழன் காது குத்திக்கொள்ள அஞ்சுகிறான். வேட்டிகட்டுதலும் காது குத்துதலும் அவனைக்காட்டிக்கொடுத்துவிடும் அடையாளங்களாக ஈனப்பட்டு நிற்கின்றன. மாத்தளை சோமு தனது எல்லைதாண்டா அகதிகள் என்னும் புதினத்தில் குறிப்பிடும் உண்மையை சுட்டிக்காட்டுகிறார் மகேந்திரன்.’தமிழர்கள் சிங்கள மண்ணைக்கவர்ந்த பகைவர்கள் என்கிற விஷத்தை ஊட்டியே காடையர்கள் என்கிற ரவுடிக்கும்பலை திட்டமிட்டு அரசாங்கம் ஆசிர்வதித்து நடத்துகிறது. நரபலிகள் இலங்கையில் தொடர்கதையாகிறது.
யாழ்ப்பாணம் பற்றிய ஆய்வு நீண்டதொரு கட்டுரையாய் மலர்ந்திருக்கிறது. யாழ்ப்பாண கல்வி நிலையங்கள்,சமுதாய அமைப்பு,சாதீய விஷயங்கள்,சாப்பாட்டு விஷயங்கள், வழிபாடுகள்,இலக்கிய ப்பங்களிப்புகள் அனைத்துமே விரிவாகப்பேசப்பட்டுள்ளன.மறக்காமல் எஸ்.பொ.வையும் அவரின் எழுத்து கம்பீரத்தையும் தொட்டுப்பேசுகிறார் மகேந்திரன்.பொருத்தமாய்ச்சேரனின் கவிதை ஒன்றை யாழ்ப்பாண நிலமைகளுக்குச்சான்றாய் வைக்கிறார் ஆசிரியர்.

‘இரு புறமும் துப்பாக்கி
நடுவில் நான்
எரிகின்ர்ற நெருப்புக்கு
நடுவில் நான்
அவன் ‘இரு’ என்றால்
இவன் ‘ எழும்பு’ என்பான்
அவன் ’’வா  என்றால்
இவன் ’போ’ என்பான்
அவன் ‘இற’ என்றால்
இவன் ‘இரு’ என்பான்
அவன் உடலைக்கொன்றான்
இவன் ஆத்மாவைக்கொன்றான்
இப்போ நான் பிசாசானேன்.
யாழ்ப்பாண நூலகம் எரிப்பு என்னும் மீளமுடியாத சோகம் துக்க சாகரமாய் உணரப்படுவதைத்தவறாமல் மகேந்திரன் குறிப்பிடுகிறார். வரலாற்று ரீதியாக த்தமிழ் மக்களின் உரிமை மறுக்கப்பட்டுத்தான் வந்திருக்கிறது என்பதை அப்பட்டமாய் ஒத்துக்கொள்ளும் கம்யூனிஸ்ட் தலைவர் டி.யூ. குணசேகராவை ஆசிரியர் அடையாளம் காட்டுகிறார். சிங்கள மக்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக க்காடையர்கள் ரவுடிகள் என்று முடிவுகட்டுதல் நியாயமாகாது என்கிற நல்ல செய்தியையும் சொல்கிறார். தமிழர்களை மணந்துகொண்ட சிங்களவர்களும் சிங்களவர்களோடு வாழ்க்கையைத்தொடங்கிய தமிழர்களின் முன்னுதாரணங்கள் எத்தனையோ இருப்பதை மறக்காமல் சுட்டிக்காடுகிறார் மகேந்திரன்.
இலங்கையின் வெளிக்கடை சிறைச்சாலையில் நிகழ்ந்த கலவரத்தில் தப்பி டேவிட் அய்யா பற்றிய மகேந்திரனின் எழுத்தாக்கம் வாசகனை நெஞ்சத்தால் வணங்க வைக்கிறது. மகேந்திரனின் சித்திர எழுத்தினை இப்படிக்காணலாம்.
‘அர்த்தமற்று வாழும் வாழ்க்கை என்ற மதிப்பீட்டுக்குள்ளிருக்கும் அர்த்தங்கள் நம்மை அதிர்ச்சியுறச்செய்யும்’- எத்தனை ப்பொருள் பொதிந்த வாசகம் இது.ஒவ்வொரு வாசகனும் படித்து சிந்தித்து சொக்கிபோய் பிரமிக்க வேண்டியிருக்கிறது. எந்த கர்வத்தினையோ யாருமே செய்யத்தயங்கும் தியாகத்தையோ தான் செய்துவிட்டதற்கான ஆணவத்தையோ கிஞ்சித்தும்  வெளிக்காட்டாத மாமனிதன் டேவிட் அய்யாவை தரிசிக்கத்தந்த ஆசிரியரின் மானுடப்பிடிப்பை ப்போற்றிப்பெருமிதம் அடைகிறோம்.
மகேந்திரனின் எழுத்தாற்றல் வெளிப்பாடு இந்த நூல். இது அவரின் எழுத்து நேர்மையை உரக்கப்பேசுகிறது. நெஞ்சுக்கு நேர்மையாய் அவர் வெளிப்படுத்திய விஷயங்கள் மனசாட்சி உள்ளோரை ரணப்படுத்தியே முடிக்கும்.அதுவே மானுட இருப்பின் நியாயமும் கூட..
(மே 2004 தாமரை)
 .





Thursday, July 25, 2019

yayaathi- kaantekarum kaa sri sri yum


யயாதி வழங்கிய காண்டேகரும் மொழிபெயர்த்த  கா ஸ்ரீ ஸ்ரீ யும் 
மகாபாரதக்கதையில் வரும் பாண்டவர்களின் முன்னோர்களில் ஒருவன் யயாதி.அத்தினாபுரத்துச்சக்கரவர்த்தி நகுஷனின் குமாரன். நகுஷனோ இந்திரனை வெல்லும் ஆற்றல் பெற்றும் அகத்தியமுனியிடம் சாபம் பெற்றவன்.
யதி, யயாதி இருவரும் நகுஷனின் புதல்வர்கள் .யதி அரண்மனையை விட்டு நீங்கி வனத்தை சரண் அடைகிறான். யயாதி அரண்மனையை அலங்கரித்துக்கொண்டே வளர்கிறான்.’நகுஷ ராஜாவின் மக்கள் ஒரு போதும் சுகமாக வாழமாட்டார்கள்’ என்கிற அகத்திய முனிவனின் சாபம் இந்த சகோதரர்களுக்கு தலைக்கு மேலாக அச்சுறுத்திக்கொண்டே நிற்கிறது.
’யயாதி’ என்கிற இந்த நாவல் ஒரு புராண நாவலன்று.புராணக்கதையினை ஆதாரமாகக்கொண்டு காண்டேகர் மராத்தியில் படைத்திட்ட மாபெறும் அற்புதம்.யயாதியை பெண் பித்தனாக நிறுத்தும் மகாபாரதத்தினின்றும் சற்று ஆழமாகச்சிந்தித்து பெருங்கவி காளிதாசனோடு காண்டேகர் ஒத்துப்போகிறார்.
அக்கினியை அந்தணர்களை சாட்சியாய்க்கொண்டு யயாதி தேவயானியை மணக்கிறான்.தேவயானியோ அசுர குரு சுக்ராச்சாரியரின் மகள். தேவயானி யயாதிக்கு வழங்க மறுத்த அந்த அன்பினை தேவயானியின் பணிப்பெண்ணாய் ப்பணிக்கப்பட்ட சர்மிஷ்டை வழங்குகிறாள்.
காளிதாசனின் கூற்றுப்படி தன் சொந்த சுகத்தையும் கடந்து கணவனின் அன்புக்காக நிற்பவளாய் பெண் வெற்றி பெறுகிறாள்.சர்மிஷ்ட்டயை  காண்டேகர் அப்படித்தான் பார்க்கிறார்.கணவனுக்கு மனைவியிடமிருந்து கிடைக்க வேண்டிய அன்பிற்குத்தேவையான பரிவு ஈரம் தீவிரம், மேன்மை ஆகிய எதுவும் தேவயானிடமிருந்து யயாதிக்குக்கிட்டவில்லைதான்.
சஞ்சீவினி என்னும் உயிர்ப்பிக்கும் வித்தையை சுக்கிராச்சாரியரிடமிருந்து கற்றுக்கொண்ட கசன் தேவருலகம் செல்கிறான்.துறவி கசன் தேவர்களின் குரு பிரகஸ்பதியின் குமாரன்.ஆங்கிரச முனிவரின் பேரன். மகாபாரதக்கதையிலிருந்து  காண்டேகரின் கசன் வித்தியாசமானவன் .அளவறிந்து வாழ்பவன்.எல்லைகளை மதித்து வெற்றிகொள்பவன்.தேவயானியிடம் கொள்கின்ற முதற்காதலை ஞானத்தால் செரித்து வெற்றி கொள்கிறான். காமவிஷயத்தை ஆத்மபலத்தால் சமாளித்து எழுகிறான்.யயாதி அவனின் சகோதரன் யதி சர்மிஷ்டை சர்மிஷ்டைக்கும் யயாதிக்கும் புதல்வனான புரு ராஜமாதா நகுஷனின் மனைவி அனைவரிடமும் இணையான அன்பினை ப்பொழிகின்ற மனோதர்மத்தை தனதாக்கிக்கொள்கிறான்.
காண்டேகர் கசனின் கடிதத்தை தேவயானி படிப்பதாக எழுதுகிறார். இயற்கைக்கும் இறைவனுக்கும் நடுவிலே மிகச்சிறந்த இணைப்பாகத்திகழ்பவன் மனிதன் என்றும் தாகத்தினால் தவிக்கும் மனிதனின் வேட்கையைத்தணிக்கும்  அந்த ஆறு அவன் சிறிது முன்னால் ஆழத்தில் சென்றால் அவனுடைய உயிரையே பறித்து விடுகிறது என்னும் விஷயத்தைச்சொல்கிறார்.
மனிதன் இரட்டைகளாகவே உலகைப்பார்க்கிறான். நன்மை தீமை, தர்மம் அதர்மம்,உடல் ஆத்மா,ஆண் பெண், என்கிறபடியாய்.இறைவனோ எல்லா இரட்டை நிலைகளையும் கடந்தவன் என்கிறார் காண்டேகர். வடலூர் வள்ளல் ராமலிங்கரின் இறைவன் கல்லார்க்கும் கற்றவர்க்கும்,வல்லார்க்கும் மாட்டார்க்கும்,மதியார்க்கும் மதிப்பவர்க்கும், நரர்களுக்கும் சுரர்களுக்கும் என்கிற இரட்டை நிலைகளைக்கடந்தவன் என்பதை இங்கே நினைவுபடுத்தி சிந்திக்கலாம்.
காண்டேகர் குறிப்பிடுகிறார் ‘இல்லறம் என்பது உயர்ந்த தூய வேள்வி. ஆயிரம் அசுவமேத யாகங்களின் புண்ணியம் இதில் அடங்கிக்கிடக்கிறது. எனினும் இந்த இல்லற வேள்வி அது நிறைவேறவேண்டுமானால் கணவனும் மனைவியும் அதற்குக்கொடுக்கவேண்டிய முதல் அவி தங்கள் தங்கள் அகங்காரத்தை துறப்பதுதான் இந்த அற்புத விஷயத்தை தமிழ் வள்ளுவரின் மங்கலம் என்ப மனை மாட்சியோடு எண்ணிப்பார்க்கலாம்.
ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து                 குறள் எண் 48).. என்கிற துறவறத்தை வெல்கின்ற இல்லறத்தையும் ஒப்பிட்டு நோக்கலாம். இந்தப்புனிதத்தில் ஆணுக்கு ஒரு விளக்கமும் பெண்ணுக்கு ஒரு விளக்கமும் தருகிறார் காண்டேகர். ஆண் உருவமற்ற பொருட்களின் பின்னால் ஓடுகிறான்..புகழ், ஆத்மா,,தவம், வீரம் ஆண்டவன்முதலிய விஷயங்கள் அவனை விரைவில் கவர்கின்றன.ஆனால் பெண் இவற்றில் சடக்கென்று மயங்குவதில்லை.அவளை க்காதல், கணவன்,குழந்தை,,தொண்டு,குடும்பம் என்கிற உயிருள்ள பொருள்களே பெரிதும் கவர்கின்றன.
காண்டேகர் ஒரு வரையறை தருகிறார்.’’ பெண் மனத்தை அடக்கித்தியாகம் செய்வாள்.ஆனால் அது உயிருள்ள பொருள்களுக்காக மட்டுமே. உருவமற்ற பொருள்களிடம் ஆணைப்போல் அவள் ஆர்வம் கொள்வதில்லை தன்னிடமுள்ள அனைத்தையும் தந்து வழிபடுவதற்கு அல்லது தன் கண்ணீரை அபிஷேகம் செய்வதற்கு அவளுக்கு மூர்த்தம் வேண்டும். ஆண் இயல்பிலேயே வானத்தை வழிபடுகிறான்.பூமியை வழிபடுவதே பெண்ணுக்கு மிகவும் பிடித்தமானது’
பொறுப்புள்ள வாசகனை, காண்டேகரின் எழுத்துக்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. படித்து படித்து, சிந்தித்து சிந்தித்து,ரசித்து ரசித்து புரிதலை ஆழமாய் அகலமாய் க்கொண்டுமட்டுமே இந்த ப்படைப்பினை அணுகமுடிகிறது.
யயாதியின் உயிர் நண்பன் மாதவன் .சர்மிஷ்டையைக்காத்து அப்புறப்படுத்தியதில் இயற்கையின் இடரால் ஆரோக்யம் இழந்து மாய்ந்தவன். நட்புக்காக த்தன் உயிரைத்தியாகம் செய்த உத்தமன்.அவனின் இழப்பில் யயாதி இப்படிப்பேசுகிறான்.
‘மனிதன் என்று நாம் எவனை மதித்துப்போற்றுகிறோமோ ஆண்டவனின் இவ்வுலகத்து ப்பதுமை என்று கூறி எவனுடைய செயல் திறமையை வழிபடுகிறோமோ அந்த மனிதன் எவன் ? உலகம் என்ற விரிவான மரத்திலுள்ள சிறிய இலை அவன்’ இந்தப்பேரண்டத்தைப்பெருவனமாய் இப்பூவுலகத்தினை ஒரு விருட்சமாய் மனித இருப்பை ஒரு இலையாய் ஒப்பீடு செய்கிறார் காண்டேகர் மாகவி.பாரதியின் காலமும் காளிசக்தி என்னும் ஒரு வண்டும் நம் நினைவுக்கு வந்துவிடும்.
சர்மிஷ்டை குமாரன் பிருகுவுக்குக் கசன் தன் தவ வலிமையால் இளமையை மீட்டுத்தருகிறான் புதிய வாழ்வை பெற்றுக்கொண்ட யயாதி இத்தகு அறிவுரை வழங்குகிறான்.’காமம் பொருள் என்னும் இவ்விரு புருடார்த்தங்களை எப்போதும் கடிவாளமிட்டு காக்க வேண்டிய கடமை அறம் என்னும் புருடார்த்தத்திற்கானது. அறம் பொருள் வீடு என்கிற புருடார்த்தங்களில் இன்று  பொருளும் இன்பமும் மலிந்து கிடக்கின்றன.அறம் அதனைக்கட்டுப்படுத்தாது செயலிழந்து ஊனமாகிக்கிடப்பதையும் சுட்டுவது தன் விழைவு என்கிறார். காண்டேகரின் பெரு விருப்பம் அது என்று அறிந்து நாம்  பிரமிக்கிறோம்.
யயாதியைத்தமிழில் தந்த கா.ஸ்ரீ .ஸ்ரீ( கா.ஸ்ரீ. ஸ்ரீ நிவாசார்யார்) மொழிபெயர்ப்பில் உச்சத்தை எட்டியிருக்கிறார்.மூலமா அல்லது மொழிபெயர்ப்பா என்பதனை வாசகன் பிரித்து அறியமுடியாமல் திக்குமுக்கு ஆடுகிறான்.மூலத்தை வென்று நிற்கும் மொழிபெயர்ப்பு என்பது யயாதியில் சித்தித்து இருக்கிறது. நாவலைப்படிக்கும் போதெல்லாம் மேலட்டையைத்திருப்பி திருப்பி மொழிபெயர்ப்புதான் என்று உறுதி செய்துகொள்ள வேண்டியதாகிறது.
தமிழ் வாசகர்களுக்கு காண்டேகரை அறிமுகம் செய்து ஞானசம்பந்தம் ஏற்படுத்திக்கொடுத்தமை கா ஸ்ரீ ஸ்ரீ என்கிற மொழிபெயர்ப்பாளனுக்கு வசப்பட்டிருக்கிறது. தாய்மொழி தமிழ் ஆகி பல இந்திய மொழிகளில் வல்லமை பெற்று நமது தமிழ் பண்பாட்டுக்கு கருத்து வளம் சேர்த்தமை போற்றுதலுக்குறிய தொண்டு என்று வரலாறு அவரின் படைப்பு பற்றி என்றும் பெருமையோடு பேசும்.
--------------------------------------------------------

 .