Saturday, January 25, 2020

paavannan- nallanayellaamtharum 1





1 பாவண்ணனின் எழுத்துலகம் 

தற்காலத்தமிழ் இலக்கிய படைப்பாளிகளர்கள் வரிசையில் படைப்பு மொழிபெயர்ப்பு என இருபெரும் தடங்களில் தனக்கென ஓர் தனியிடத்தைப்பெற்றுள்ளார் பாவண்ணன். தனது இலக்கியப்பங்களிப்பால் தமிழ் நாட்டு வளவனூர் சார்ந்த தனது மண்ணின் மனிதர்களை அனேக இடங்களில் உயிர்ப்போடு உலவவிட்டு சாதனைகளைத் தனதாக்கியுள்ளார்.
 ஆகப்பெரிய அறிவியல் தொழில் நுட்ப சாகசங்களை தான் பணியாற்றியதுறையிலே அனுபவமாய்க்கண்ட பாவண்ணன் கல் உடைக்கும் மண்சுமக்கும் சாதாரண மனிதர்களின் அனுபவங்களைப்படித்து அவதானிப்பதிலே தனிக்கவனம் செலுத்திய யதார்த்த எழுத்தாளர்.
           அனேக தருணங்களில் மனித மனம் ரணமாகி நிற்பதை அப்பட்டமாய் க்காட்டுவன அவரின் எழுத்துக்கள்.  .மனிதர்களின் வளமையும் வாழ்முறையும் அவர்களை ஏற்ற இறக்க சமுதாயத்தட்டுக்களில் அடைத்து, இறுக்கி, விறைப்பாக்கி நிறுத்தியிருப்பதை வேதனையோடு காண்பவர். தான் வாழும் சமுதாயத்தில் .அன்பு என்னும் சொல் நீர்த்துப்போன,தைப் பாசத்திற்கு ஏங்கித்தவிக்கும் மனித உள்ளங்களை சமூகத்தின் பல் வேறு தளங்களிருந்து சிறுத்துச் செயல்படும் அடிமன அலைகளை த் தனது எழுத்தில் பாவண்ணன் ஓவியமாகத்தீட்டிக்காட்டுகிறார். இலக்கிய சிந்தனை ப்பரிசுபெற்ற ‘முள்’ தொடங்கி  பாவண்ணனின் சிறுகதைகள் வாசகனை அப்படித்தான் சிந்திக்கவைக்கின்றன..
பெண்மையின் பேதமையும் மேன்மையும் பேசும் ‘கல்’ எனும் சிறுகதை வாய்வீச்சாளர்கள் பம்மாத்து செய்ய மேலட்டை மட்டுமே வைத்து நிகழ்த்தப்படும் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வை ச்சித்தரிக்கும் ‘வேஷம்’ என்னும் சிறுகதை  பச்சை மரங்களை நேசிக்கும் படைப்பாளியாய் வாசகனுக்குத்தன்னையுணர்த்தும் ’’‘மரங்களின் கதை இவை’ நம் நெஞ்சைவிட்டு அகன்றுவிடுமா என்ன?
அடிப்படையில் ஒரு கவிஞனாய்  பாவண்ணன் இருப்பதை அவருடைய படைப்புக்கள் நமக்குச்சொல்கின்றன. ’‘திரும்பி வராத குருவிகள்’ என்னும் ஒரு கவிதை பாவண்ணனின் மன கன பரிமாணத்தை அறிவிப்பு செய்வதாய் விளங்குகிறது. குருவிகள் ஏனோ தாம் வாழ்ந்த கூட்டிற்குத்திரும்பி வரவில்லை. ஏன் அவை திரும்பவில்லை என்பதற்காய்ப் பல் வேறு வினாக்களை த்தானே வைத்துக்கொள்கிறார் பாவண்ணன். அவருக்கு நிறைவு ஏற்படவில்லை. அவை அமர்ந்த தத்தித்தாவிய பேசிக்கொஞ்சிய இடங்களையெல்லாம் வரிசையாகக்கண்டும் அவை இல்லாமையின் வெறுமை அவரைச்சுண்டுகிறது.. இனி அவை வாரா என்கிற முடிவோடு அவை வாழ்ந்து காலியாய் விட்டுச்சென்ற குருவிக்கூட்டைப்பார்த்து ஆறுதல் பெறுகிறார்.  அவரின் கவிமனத்திற்கு அவை விட்டுச்சென்ற காலிக்கூடு சற்று இதம் அளிக்கிறது என்கிறார் பாவண்ணன்.
பாவண்ணன் விடைபிடிபடா  ஒரு கேள்விஒன்றிற்கு விடை தேடுவதைத்தன் படைப்புக்களில் காணமுடிகிறது.  மானிட வாழ்வுக்கு பொருள் என்ன என்பதை, வாழ்க்கை என்னும் புதிருக்கு அவிழ் முடிச்சு ஏதும் இருக்குமோ என்பதை ஆராயும் மனவெளி அகழ்வாராய்ச்சியில் பாவண்ணனுக்கு இசைவு இருப்பதை நம்மால் அவதானிக்க முடிகிறது. மெளனியின் எழுத்துக்களில் உறையும் அடர்வு கூடிய அமைதி. இவரின் எழுத்துக்களிலும் காணவாய்க்ககிறது.
‘தஸ்தாயெவ்ஸ்கி என்னும் ருசிய படைப்பாளி  மனித வாழ்க்கை ஒரு புதிர் அது அவிழ்க்கப்படும் வரை படைப்பாளியின் தேடுதலுக்கு ஓய்வில்லை என்பார்.
ஏதோ ஒரு மின்னல்  சிந்தையில் தென்படுவதும்  நொடியில் அது  தன்னை மறைத்துகொள்வதுவும் இப்பிரபஞ்சப்புதிருக்கான விடையின் ஓர் அணுவோ என்று படைப்பாளி யோசிப்பதுண்டு.
பாவண்ணனின் எழுத்துக்கள் வாசகனை எப்படியெல்லாமோ சிந்திக்கவைத்து வாசகனோடு சித்துவிளையாட்டு  விளையாடுகின்றன.
பிற நாட்டுப்பல அறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் ஆக்கம் பெறவேண்டும் என்னும் பெருங்கவிஞன் விண்ணப்பத்திற்குச் செவி சாய்ப்பதாக அவரின் மொழிபெயர்ப்புக்கள் விளங்குகின்றன. தமிழ் மண்ணில் சாதியக்கொடுவிஷத்தை அரசியல் ஆதாயத்திற்கு ஆதாரமாக்கி இலகு அரசியல் நடத்தும் கயமை தொடர்ந்துகொண்டிருக்க தலித்திய கன்னட படைப்புக்களைத்தேர்வு செய்து அவைகளைத் தமிழில் கொண்டு தருவதைத்தன் முழுமுதற்கடமையாகக்கொண்டு இயங்கும் படைப்பாளியவர்.

ஆங்கிலக்கவிஞர் கீட்சின் கவிதைவரிகளில்.’Heard melodies are sweet,but those unheard are sweeter’ என்கிற

 விஷயமாய் பாவண்ணனிடமிருந்து இன்னும் இலக்கிய அற்புதங்கள் தொடர்ந்து

பெறப்படவேண்டும். தமிழ் இலக்கிய உலகில் ஆரோக்கியமான  இலக்கியச்சூழல் ஆங்காங்கு

 இருக்கவேசெய்கின்றன. அவை பாவண்ணனின் படைப்புக்களை எப்போதும் சிரத்தையோடு

 அலசுகின்றன.             

Friday, January 24, 2020

enakkuppitiththa kathaikal-paavannan 2




எனக்குப்பிடித்த கதைகள்- பாவண்ணனின் சாகித்ய சஞ்சாரம்




பாவண்ணனின் அனேக படைப்புக்களில் ’ எனக்குப்பிடித்த கதைகள்’ வித்தியாசமான ஒன்று. புதிய தடத்தை வாசகனுக்கு அறிமுகமாக்கிய விஷயமது .தனக்கு நேர்ந்த அல்லது தான் சந்தித்த ஒரு நிகழ்வினை ஒரு சிறுகதைப்படைப்பின் மூலத்தோடு உரசிப்பார்க்கின்ற ரம்மியமான அனுபவமே இங்கு வெளிப்பட்டிருக்கிறது. இது விமர்சனமாய் படைப்பாய் ஏன் ஒருபடைப்புச் சந்திப்புமாகி வாசகனுக்கு முன் விரிந்து நிற்கிறது. எந்தச்சிறுகதையையும் அப்படிப்படிப்பார்க்கிற புதிய வெளிச்சத்தை தந்து நிறைவு செய்கிறது .பாவண்னனின் நினைவுத்தோயலுக்கும் இது ஒருவகையில் சரி வெளிப்பாடாய்க் கொள்ளலாம். ஆகப்பெறும் படைப்புச்சிகரங்களை தரிசிக்க வாய்ப்பு ஏற்படுவதோடு படைப்பாளியின் சொந்த அனுபவங்கள் இடை இடையே விரவி நெகிழவும் வைக்கிறது. அன்பெனும் பிடியுள் அகப்பட்டுக்கொள்கிறது மலை.
தமிழ் நாட்டுச்சிற்றூர் பாவண்ணனின் வளவனூர். இங்குதான் எத்தனைபேர் பாசத்தால்
இந்த படைப்பாளியைக்கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்கள். எல்லோரும் சாதாரண மனிதர்கள். அம்மனிதர்கள் சரிப்பொருத்தமாய் பாவண்ணனோடு இயைந்து வளவனூரை வலம் வந்தவர்கள் என்கிற விஷயம் படைப்பில் அவிழ்த்துக்கொள்கிறது
எந்தரோ மகானுபாவுலு- என்று நம்மை சொல்ல வைத்து விடுகிறார் பாவண்ணன்.. பாவண்னன் அவர்கட்கெல்லாம் உறவென்றால்
நமக்கும்தான் என்கிறது வாசக மனம். நாமும் அவர்களின் பெயர்களைச்சொல்லிப்பார்க்கலாம். இந்த அத்தனை பேரும் சேர்ந்து நமக்கு
பாவண்ணனாய் க்காட்சி அளித்திடலாம்.
வளவனூரின் திருக்குறள் கழகம், ஏரிக்கரை,ரயில்வேநிலையம்,சைக்கிள் பயணத்தின் போது
திருவக்கரையின் சாலைக்காட்சி, இவைஇவைகளோடு ,தையல்கார சித்தப்பா,சித்தி, வளவனூர் தபால்க்காரர்,படைப்பு சமர்ப்பணம் பெறும் திருஞானசம்பந்தம்.ரோஜாமண ,தங்கப்பா,மதிவாணன்,சுப்பிரமணியன்,பழனி ,பண்ணையார், அவர்மனைவி ,தியாகராஜன்,
குமாரசாமி உ,டற்பயிற்சி ஆசான்செல்வராஜ் கணேஷ¤, அவன் அக்கா ஓவிய ஆசிரியர் ,ரவி, கலைக்டருக்கு ப்படித்த உள்ளூர்க்காரர், டூங்கிலிசு ரங்கனாத அய்யர் அறிவியல் குலசேகரன் சரித்திர சுப்பையா, தமிழரசிஅக்கா ,குறள் ரங்கனாதய்யா,காத்தவராயன், ஓணான் பிடிக்கும் ஜெயபாலன், வேலு பெரியப்பா ,நட்பு- பாட்டி இந்த இரண்டுமான ஆயா ராஜாராமன் கணேசனார் அபசு ,பொன்னம்பலம் துரைசுந்தரமூர்த்தி, துரக்கண்ணு பழனிச்சாமி, தாமு கிருட்டினன், என எத்தனை மனிதர்கள் படைப்பாளியின் பாச வலையில்சிக்குண்டு நிற்கிறார்கள்.
இந்த நூலுக்கு நினைவில் பதிந்த சித்திரங்கள், என்கிற முன்னுரை தரும் பாவண்ணன் ஏரிக்கரை பற்றி தான் ஆரம்ப கால புராணம் எழுதியதைச்சொல்கிறார் .பழனி என்கிற நண்பனோடு தான் பேசுகின்ற வாசகம் , ‘ இப்படி இருப்பது நல்லது என்று வலியுறுத்துவது இலக்கணம் இ,ப்படி இருக்க முடியாமையின் அவத்தைதான் இலக்கியமோ’ ராமாயணமும் சிலப்பதிகாரமும் பாவண்ணனுக்குத் துணைக்கு வருகின்றன. எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இருக்க முடியாமையின்வரவு செலவுகளாகவே அக்காப்பியங்களை நாம் இன்றும் உணர்கிறோம்.
புதுமைப்பித்தனின் ‘மனித இயந்திரம்,’ பாவண்ணனின் ‘கழிமுகம் ஒ ’ப்பிட்டுக்காண வாய்ப்பு தருகிறார் ஆசிரியர்.
கிளிகள் ஒன்றையன்று சண்டையிட்டுக்கொண்டு ஜோடி பிரிதல் நிகழ்கிறது .பறத்தல் ஒன்றன் சுதந்திரமாய் க்காண முடியாமல்
சோகம் விஞ்சுகிறது. தவிப்பு தவிர்க்கமுடியாதது புதுமைப்பித்தனின் மீனாட்சிசுந்தரம் பிள்ளையை அலசிப்பார்க்கிறார் பாவண்ணன்.
வரவும் செலவுமே வாழ்க்கை, மானுட சுவாசம் அய்ந்தரைப்பெட்டி மணியமே ஒரே பணி என்பதாய் கழிந்துபோகிறது மனித வாழ்வு. யந்திரம் போலவா பிள்ளை யந்திரமேதான் பிள்ளை.
சிறு பிசகு செய்து தப்பித்தல் இங்கே; ஏது அதனைத் தாங்கும் திறம் கொண்டவரா பிள்ளை. இல்லை மீன்டும் விலங்கிட்டுக்கொள்வதே அவருக்குசாத்தியமாகிறது .’நடுத்தெருவுக்கு வந்து நாறிப்போகாமல் மத்திய தர வர்க்கம் தன்னை க்காத்துக்கொள்ள யந்திரமாகி இயங்குதல் பயில்கிறது புதுமைப்பித்தனை வாழ்க்கையும் ஏமாற்றித்தானே விட்டது.
ஒவ்வொரு கதை அலசலுக்கும் முன்பாக அந்த படைப்பாளியின் அழகு கோட்டுச்சித்திரம். ஆகப்பெரிய மரியாதை . அவ்வாசிரியரைப் பற்றிய சில குறிப்புகள் கூட. ..தனக்கு நேர்ந்ததோடு எதனையும்பொருத்திப்பார்க்கிறார் பாவண்ணன். அனுபவம் தரும் அருஞ்செல்வம் இது.
ந. பிச்சமூர்த்தியின் படைப்பு  ‘தாய்’ அற்புதமாய் இங்கே எடையிடப்படுகிறது. விமர்சகனாய் இங்கே பாவண்ணனைக் காணமுடியாது ஒரு படைப்பு தந்து வாசகனை நெஞ்சம் நெகிழவைக்கிறார். இலக்கிய சம்பந்தம் உள்ளவர்கள் பாவண்ணனைப் படித்து ரசித்து வசப்பட வேண்டிய இடம் இது. விமர்சகனுக்கு கட்டுப்படாமல் படைப்பு ஊற்று துருத்திப்பார்க்கிறது. ஞானப்பழம் கிடைக்க வாகனமும், பயணித்தலும் தேவைஓடும் ரயிலை ஞான ரதமாய்க்காட்டுகிறார் பாவண்ணன் . பிராந்திபாட்டிலைத்திறந்து இருமலால் அல்லல் படும் குழந்தைக்குப்பால் கொடுக்க முற்படும் முட்டாள் தந்தையைப் புறந்தள்ளி, தாயை இழந்த அக்குழந்தைக்கு தன் முலைச்சுரப்பை அளிக்க ஆவேசமாய் எழும் தாய்மையை வாசகனுக்குத் தருகிறார் பிச்சமூர்த்தி. ஞானப்பால் கொடுத்தவள் பராசக்தி. கண்கள் பிசைந்து அழும் கழுமலச் சம்பந்தனை சிரிக்கவைத்தவள் மாகாளி. யாதுமாகி இப்படி நிற்கமுடியும் ஒருதாயால்.. நாயுடு ப்பெண் தன் குழந்தக்கு மட்டுமே தாய் என்கிற நிலையிலிருந்து பசியால் அழும் இன்னுமொரு குழந்தைக்கு தாயாக தன்னை நகர்த்திக்கொள்வதைபிச்சமூர்த்தி காட்டுகிறார். பிரபஞ்சத்தில் பயணமே இப்படி மேதமை வளர்க்கிறது அது நிதர்சனமாய் என்கிறார் பாவண்னன். ஒரு ரயில் பயணமே மோகன்தாசு காந்திக்கு தென்னாப்பிரிக்காவில் தர்மாவேசம் தருவித்தது, ஞானவிளக்காம் ரமணரை திருவண்ணாமலைக்கு ரயில் பயணமே கொணர்ந்தது., ரவீந்திரரின் கப்பல்பயணமும் விவேகாநந்தனின் சிகாகோ பயணமும் மனத்திரைக்கு வருகின்றன. சொல்லப்போனால் குறிஞ்சி வேலனை , பாவண்ணனை, சுப்பிரபாரதிமணியனை
பயணங்கள் மட்டுமே மேதமை தந்து ஆழ அகல சிந்திக்க வைத்திருக்கின்ன.
மெளனியின் சிறுகதைபடைப்பு பற்றி, ‘ படிக்க நேரும் ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு விதமான அனுபவம் பெறுவதைக்குறிப்பிடுகிறார் பாவண்னன்.
உபநிடதங்கள் படிக்கும்போது ஏற்படும் அனுபவம் இது. பன்னரும் உன்னத நூல்கள் அவை. அதுவா குப்பை என்று சொல்லி இறுமாந்து போவது மெருகிட்ட அகம்பாவம் மட்டுமே. திருக்குறளும் ,திருவாசகமும் படிக்கும் தோறும் பெறும் சுகானுபவத்தை வள்ளல் வடலூரார் வாய் சொல்லி கேட்டுப்பார்க்க ஓரளவு நமக்குத் தெரியலாம். கீட்சின் கவிதைகள் ஷெல்லியின் கவிதைகள் எப்போதும் அப்படித்தான். வயதான கணவர் இளைய மனைவி இந்தப்பொறுத்தப்பிசகு பற்றிப்பேசுகிறார் பாவண்னன். ‘சாவில் பிறந்த சிருஷ்டி’யோடு இதனை ஆய்கிரார், புகைவண்டி நிலைய பிளாட்பாரத்தில் மூன்றுமணி அடித்தலையும், இரண்டு மணி அடித்தலையும் மெளனியின் கதை வழி ச்சென்று மணவாழ்வின் படிமமாக தான் பார்த்தலை வாசகனுக்குச்சொல்கிறார் பாவண்ணன். நன்மைக்கும் தீமைக்கும் இடை மனிதன் அல்லல் படுவதைச்சுட்டுகிறார்.
தள்ளாத வயது அப்பர் பெருமானுக்கு அந்திமகாலத்து ஈசனின் காட்சி. வழுக்கைத்தலையில் ஒரு வைர ராக்கொடி. இன்று ஞானபீடமாம் ஜெயகாந்தனுக்கு. அதுவேறு.கதை பாவண்ணனும் ஜெயகாந்தனும் பக்கத்து பக்கத்து ஊரார்கள். அந்த வளவனூரும், கடலூரும். பக்கம் பக்கம்.
மனிதனின் இடது பக்க சிந்தனையை அழகாய் மீட்டி ஆலாபனை செய்யத்தெரிந்தவர் ஜெயகாந்தன். ஜெயகாந்தனின் குருபீடம் படித்துப்பேசுகிற பாவண்ணனை அடையாளம் காணாதவர்கள் மன்னிக்கப்படுதல் சிரமமே. க்ரீஷ் கர்னாட்டின் பலிபீடம் மொழியாக்கம் செய்தபாவண்ணனை புரிந்துகொள்ள தமிழ் இலக்கிய உலகுக்கு ஏதோ தடை இருக்கிறது. தடை உடைபடலாம். நேரும்போது பலருக்கு விலாசம் இல்லாமல் போகவும் கூடும்.
ஞானம் என்பது ஆழமும் எல்லையும் காணமுடியாத கடல். ஒவ்வொருவர் நெஞ்சிலும் சேகரமாவது ஒரு துளி மட்டுமே. துளி
கடலின் பகுதி மட்டுமே எப்போதும் அது கடலாவதில்லை.. ஆனால் தன் அடர்த்தியைப்பெருக்கிக்கொள்ளவே ஒவ்வொரு
துளியும் விழைகிறது. பாவண்ணன் இங்கு காலடி சங்கரரின் கடாகாசம் பேசுகிறார் .கற்றலும் ஞானமும் எல்லைகள் அற்றவை .
பிரமிக்க வைக்கும் உன்னதங்கள் அவை.
கி. ராஜநாராயணின்’கன்னிமை’ பாவண்ணனின் கண்களில் பட்டு வாசகனைக்கட்டிப்போடுகிறது. கன்னிப்பெண்ணும் ,மணமாகிய
பெண்ணும் என்கிற விசயங்கள் இந்தியக்கலாசாரத்திற்கே உரித்தான பொக்கிஷங்கள் .மக்களை ஈரம் காயாப்பசுமையோடு மட்டுமே
பார்ப்பவர் கி.ரா. பேச்சுமொழிக்கு மகுடம் சூட்டக்குரல் கொடுத்தவர் கி .ரா.. குக்கிராமத்து ஆதி திராவிடத் தாய்மார்கள் மத்தியில் பொதிந்து கிடக்கும் தூய தமிழ்ச்சொல் பற்றி என்றும் பெருமைப்பட பேசும் கி.ரா. ,கன்னிமையை கி.ரா ஆராதிக்க வழி மொழிகிறார் பாவண்னன்.
தாசுதாயெவ்சுகியின்’நாணயமான திருடன்’ பாவண்ணனுக்கு ஹாஸ்பெட் வாழ்க்கையில் தான் சந்தித்த ஒருவரை நினைவுக்குக்கொண்டுவருகிறது. நண்பன் கொடுத்து வைத்திருந்த பணத்தை இல்லை என்று சாதித்து விட்டு வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டு மரணம் வரும் தருவாயில் குற்றம் உலுக்கி எடுக்க கட்டிலில் சயனித்து இருக்கும் ஒரு நடுத்தர விவசாயி பற்றிய வாழ்வானுபவத்தை எடுத்து வைக்கிறார் பாவண்ணன். மரணத்தின் முன்னால் தன் அகங்காரங்களையும் பெருமைகளையும் மறந்து ஒருவன் மண்டி இடுகின்ற தருணம் முக்கியமானது.மரணத்தை இருளாய்ப்பார்க்கும் தாழ்ந்த தளம் தவிர்த்து மரணம் என்பது அழுக்குகளைப்பொசுக்கி மனிதனை நெறிப்படுத்தும் நெருப்புக்கோளமாய் ஒர் சூரியனாய் வாசகனைக்காணவைக்கிறார் பாவண்ணன்.
நடு இரவில் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்று தன் அம்மாவிடமே ரெண்டு ரூபாய் கடன் வாங்கி சாராயம் வாங்கிக்குடித்து சரிந்து கிடக்கும் தந்தையின் முன்னால் குழந்தையின் சவம். நேரில் தான் கண்ட அனுபவத்தை பிரேம்சந்த்தின் ‘தோம்புத்துணி’யோடு எண்ணிப்பார்க்கிறார். மாமனாரும், மகனும் பிரசவத்தில் இறந்துபோன மருமகளின் பிணைத்தைக்காட்டி காசு பெற்று சாராயம் குடித்துவிட்டு அந்தச்சவத்தை இருட்டியபின் அம்மணமாய் அடக்கம் செய்கிறார்க:ள். பிரேம்சந்த் மாபுருடன்தான். கட்டிக்கொண்டவளை சூதாட்டத்தில் தோற்று மானபங்கம் செய்ய அலிகளாய் நின்ற மாபாரத வீரர்களை நினைவு படுத்திப்பார்க்கிறார்பாவண்ணன்.
முல்க்ராஜ் ஆனந்த் எழுதிய’குழந்தை மனம்’ பாவண்ணனைத் தொட்டுப்பேசுகிறது. இலக்கியச்சிந்தனை விருது பெற்ற ‘முள்’ பாவண்ணனின் படைப்பு. இந்து நாளிதழில் மொழியாக்கமாய் வந்தது. அவரின் குழந்தை மனம் அதனில் வெளிப்பட்டது.
வீட்டுச்சாமான்கள் அளவுக்கு நான்கைந்து சாக்கு மூட்டைகள் விளையாட்டுச்சாமான்கள் குழந்தைக்கு வாங்கி ஆனந்தப்படும் நண்பர் ஒருவரைப்பற்றிச்சொல்கிறார். முல்க்ராஜின் கதையில் பெற்றோர்கள் அருகிருக்கும்போது பர்பி ,பூ ,பலூன் ,குடைராட்டினம் என்று அடம் பிடிக்கும் குழந்தை அவர்கள் தொலைந்துபோன சமயம் அவை எதுவும் வேண்டாம் என அழுது அடம் பிடிப்பதைப்பார்க்கமுடிகிறது.
சிறு கதைகள் எழுதுவதில்’ அந்தோன் செகாவ். இணை இல்லாச்சிகரம் என்றே எழுதுதல் தெரிந்தவர்கள் குறிப்பிடுவார்கள். வான்கா
என்கிற சிறுவன் பற்றிய செகாவின் கதையை தான் சந்தித்த ஒரு ஏழைச்சிறுமியோடு ஆசிரியர் இணைத்துச் சிந்தித்துப்பார்க்கிறார்.. ஒரு சட்டை எடுத்துத் தர வேண்டும் என நினைத்து கொடுக்காமலேயே அந்த ஊரைவிட்டு வந்துவிட்டதை நினைத்து மனம் ரணமாகிறது பாவண்ணனுக்கு. கவிஞர் பழமலய்ஒரு கவிதையில் ராமசாமி என்கிற சொந்த ஊர் காரனுக்கு சட்டை எடுத்து தருவதாய் வாக்குக்கொடுத்து அடுத்தமுறை வாயேன் என்பார். அடுத்த முறை ராமசாமி வரவில்லை. இறந்து போகிறான். மேற்சட்டை கேட்டவன் மெய்ச்சட்டை தொலைத்த சோகம் சொல்வார். எத்தனையோ ராமசாமிகள் எல்லோர்க்கும். மொழி தேசம் இனம் கடந்து வறுமையின் முகவிலாசம் தெரிந்தவன் மட்டுமே படைப்பாளி யாகிறான். பாவண்ணனுக்கு இது சாத்தியப்படுதல் அனுபவமாகிறது.
மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் படைப்பு’ மசுமத்தி. ‘அது ஒரு கிழவன் வரைந்த ஒவியம். முற்றுப்பெறா ஒன்று. படம் வரைந்து முடிப்பதற்குள்ளாய் ஊர்க்கோட்டையில் அந்நியன். ஆம் அந்த ஒவியம் பாதியில் நின்று போகிறது. குழந்தைக் கண்ணன். அவன் அருகே பசுவின் ஒவியம். முற்றுப்பெறாமல், வயிற்றுப்பசியால் ஓடிவந்த கன்று. கண்ணன் குழல் கேட்டு மெய்மறந்து நிற்கிறது. வயிற்றுப்பசியை தாயின் மடியும் ஆன்மப்பசியை கண்ணனின் குழலும் ஓவியத்தில் சுட்டுகிறது.
நண்பர் ஒருவருக்கு மரச்சாமான்கள் வாங்கப்போய் ஒரு பெரியவரையும், புராதன வேலைப்பாடு மிகுந்த அவரின் பொருட்களையும் கண்டு எதுவுமே வாங்காமல் திரும்பிவிடுதல் நிகழ்கிறது .பாவண்னனுக்கு மரச்சாமான்கள் உயிரோடு இருப்பதாய் இங்கு அனுபவமாகிறது.
‘பாழடையத்தொடங்கிய ஒன்று என ஆள்ஆளுக்கு இடிக்கத்தொடங்கினால்,’ என்னும் மாஸ் தியின் வார்த்தைகளை பாவண்ணன் ஓங்கி வழி மொழிகிறார்.
எனக்குப்பிடித்த கதைகள் கனமானது. படைப்பாளிகள் படிக்க பாவண்ணன் உதவி செய்துள்ளார் வாழ்த்தலாம்.. மனம்தான் வேண்டும்.

paavannan- thungkapaththirai-kottikkitakkuthu azaku 3




3 பாவண்ணனின் ‘துங்கபத்திரை’ – கொட்டிக்கிடக்குது அழகு


எஸ்ஸார்சி

துங்கபத்திரை என்னும் கட்டுரைத்தொகுப்பு வழி பாவண்ணன் மானுட உறவுகளின் ஆழத்தை ஆளுகையை ஆகிருதியை பல்வேறு வண்ணங்களில் காட்சிப்பொருளாக வாசகனுக்குக் கொண்டுதருகிறார். பவண்ணனின் எழுத்து துங்கபத்திரையின் தண்ணீராகப் பிரவாகித்துச் சுழித்துக்கொண்டு ஒடுகிறது, துங்கபத்திரையின் ஓட்டத்தை அனுபவித்தவர்களுக்கு நன்கு உணரமுடியும் பாவண்ணன் எழுத்துக்களும் அப்படித்தான் என்று
அழகின் அலைகள் கும்மாளமிடும் ஆற்று நீர். அன்பின் விசை உந்த ப்புறப்பட்டு ஓடோடி வருகிறது. ஆற்றின் கரை பொதிந்து கிடக்கிறது ஒரு கூழாங்கல். ‘இனிய நீரே இத்தனை நாளாய் எங்கே இருந்தாய் இப்போது மட்டும் எப்படித்தான் என்முன் வந்தாய் ‘ என ஊடி நிற்க துங்கபத்திரை த்தண்ணீர் கூழாங்கல்லிடம் கெஞ்சி க்கொஞ்சுகிறது. கரைவாழ் கல் மீது இப்போது இதோ பொழிகிறதுஓடோடி வந்த நதி நீரின் முத்தமழை. முத்தம் சொரியும் முத்தம். ஆற்றின் கரை கிடந்த கூழாங்கல் நதி நீரோடு சினந்து புரண்டுதிரும்பிக்கொள்கிறது. காதல் வயப்பட்டுவிட்ட துங்கபத்திரை விடுவாதாய் இல்லை. கோபக்கனலில் தகிக்கும் கல்லைக் கட்டிப்பிடித்து அதன் மோகம் அழித்து முடிக்கிறது.. கல்லும் நீரும் உலகின் தோற்றத்தை ஒருமுறை நம்முன் நிகழ்கதை யாக்குகின்றன. பாவண்ணனின் ஆழ்மனம் அழகொழுக எழுதிய உயிர் ஓவியத்தைத்தான் இங்கே வாசக அனுபவமாக்குகிறார்.
பிள்ளைகள் எல்லாம் ஒரு வகையில் தெய்வங்கள் என்னும் வரியில் பாவண்ணன் குழந்தைகளை பாலழும் பிள்ளைக்கு நல்கிய பேரருளின் அம்சமாய்க்காண்கிறார். கண்ணன் என் தெய்வம் என்பான் பாரதி.. தெவிட்டாப் புன்சிரிப்பு உதிர்க்கும் பிள்ளைகளும் மண்மீது வீழும் வான்மழையும் கடவுள் இருப்பதற்கு நித்திய சாட்சிகளாய்க் கொள்ளும் மரபு நம்ஆன்றோர்களது. நிலம்தொட்டு ஓடும் தண்ணீர் அனைத்துமே மறு உருவாய் கங்கை. பாவண்ணனின் துங்கபத்திரைக் கட்டுரையில் வரும் ஓர் சிறுமிக்கும் கங்கைதான் இந்தத் துங்கபத்திரை.
பறவைகள் மீது எப்போதும் காதல் கொள்வான் கவிஞன். கானப்பறவையின் கல கல எனும் ஓ சை. மயில் குயிலாகும் பரவித்தை புக்குள் பறவையின் இருப்பு வால்மீகியின் வசந்த கோகிலம், அண்ணாமலை கோபுரம் அமர்ந்த ஞானப்புள் மேலைக்கவிஞர்களின் பாடிக்கொண்டே விண்ணுயர் வானம்பாடி, நிலையாமை பேசும் தோட்டத்துப் புறா, இன்னும் எத்தனையோ உண்டு பறவை உறவுகளாய்..
அறிவு அன்பு இரு இறக்கைகள் மேலே மேலே பறக்கிறது புள். இறக்கைகளில் ஒன்றின் எடையே மற்றதின் எடை. ஆக பறத்தல் சுகம் புள் பறந்து பறந்து வான் வதியும் அந்த வெண் நிலாவிடம் செல்லமுடியும் வடலூர் வள்ளல்பெருமானார் விருப்பமும் அது.
அலுவலக வளாகத்தில் ஒர் கணம் பார்த்து விட்டுவிட்ட பச்சைப்பறவைக்காக ஏங்கும் பாவன்ணன். பறவையின் பெயர்தான் தெரியவில்லை. பறவைக்கு என்ன பெயராக இருக்குமோ, யாருக்கேனும் அப்பெயர் தெரியுமோ என்ன விபரீதம் இது மனதை கிறங்கவைக்கும் ஆனந்தலகரியை வர்ஷிக்கும் அதன் பெயர் தான் என்ன பாவண்ணன் மனம் குடைந்து குடைந்து பெயர்தேடிப் போகிறது. பெயர் தேடும் முயற்சி இவண் ஈசன் அடி முடி தேடிய முடியாக் காரியமாகிறது. புள்ளின் பெயர் எட்டவில்லையே. ஒரு பெயர் ஒரு உருவம் இல்லார்க்கு பல் உருவம் பல் பெயர் சார்த்தி இன்புறும் மன்பதைக்கு எதற்கும் ஒரு பெயர் வைத்து விட்டால் தேவலைதான். கைக்கு ஒன்று அகப்பட்டால் அத்தனை மகிழ்ச்சி. கைக்குள் அகப்பட்டாலோ இன்னும் மகிழ்ச்சி.. ஆனால்
கிட்டாதிருத்தல் மட்டுமே சுகம் அது மட்டுமே ஒருவனைத்தேடல் வசம் ஒப்படைக்க பேருதவி செய்கிறது
கன்னடத்து ஷராவதி நதி பாவண்ணனின் முன்னர் ஒரு தீராத விளையாட்டுப்பிள்ளை பிரவாகித்துக் கொட்டுகிறது நீர். ஊழிக்கூத்து புரியும் கங்காதரன் அல்லவா தெரிகிறான். உலகமே நாத மண்டலமாகி பாவண்ணனைக் கிறங்க வைக்கிறது கண்ணனுக்கு யமுனா நதியே விளையாடும் பிருந்தாவனம். மாயக் கண்ணனுக்கு வாயைத்திறந்தால் வையகம் தெரிகிறது. ஆனால் அவனோ சிறு நங்கை ஒருத்தியின்பின்னலை பின் நின்று இழுக்கின்ற வம்பல்லவா செய்து சிரிக்கின்றான். பாவண்ணன் இங்கே இப்படித்தான் பேசுகிறார்.
‘ சக்தியின் காலடியில் நிற்பவனைப்போல் உணர்ந்தது என் மனம் .மானசிகமாக என் நெஞ்சிலிருந்து ஒவ்வொரு மலராக எடுத்து அவள் காலடியில் வைத்தேன். அந்த இசை நேராக உடலைக்கிழித்துக்கொண்டு ரத்தத்தோடு ரத்தமாகக்கலந்தது. இசையின் ஒவ்வொரு துணுக்கிலும் அளவற்ற மென்மை. பரவசமான சுகம். அப்படியே என் இடுப்பைத்தூக்கிக்கொண்டு பறப்பதுபோல இருந்தது. என்னையறியாமல் கண்களில் நீர் கட்டியது’
இது பற்றி ச் சரியாகச்சொல்ல வேண்டும் என்றால் அது ஒருவனுக்கு அகம்பாவத்தில் முடியலாம். ஆக அடக்கித்தான் வாசிக்க வேண்டும். அழகை ஆராதிக்கும் ஆங்கிலக்கவி கீட்சாகவே தெறிகிறார் பாவண்ணன்.
புதிய பெற்றோர்கள் என்னும் தலைப்பிட்டு வரும் கட்டுரையில் கனம் மிக்க எழுத்துக்களை மீண்டும் பாவண்ணன் மீட்டிக்காட்டுகிறார். ‘கனவுகளை யாரும் ஊட்டிவிடமுடியாது. அவை தானாகவே ஊறி வரவேண்டும்,,,,,,,கனவை வரித்துக்கொள்கிறவர்களுக்கு அதை அடையத்தேவையான திட்டங்களும் உழைப்பும் தாமாகவே வடிவமுறுகின்றன.’
அந்த வளவனூர் ஏரி. அதுவே இந்த எழுத்தாளனுக்கு என்றும் நெருங்கிய உறவு. அந்த ஏரி பற்றிப்பேசாத நாள் எல்லாம் பாவண்ணனுக்குப்பிறவாத நாளே. ஏரிமீது கண்ணுக்குத் தெரியும் அந்த செத்து செத்துப்பிழைக்கின்ற அம்மாக்கள் அடுப்புக்காகக்குச்சி பொறுக்கும் வளவனூர் அம்மாக்கள். அவர்களின் உலா காணும் ஏரிப் பெருவெளி. குடித்துவிட்டு ராஜகதியில் வரும் கணவன்மாருக்கு திருஅமுது படைப்பதுதான் எப்படி. ஆகத்தான் குச்சிகள் அம்மாக்கள் வசம்..
. ஒரு உதவிகேட்டு வந்த அந்த லட்சுமி சின்னம்மாவுக்கு உதவாமல் போய்விட்ட பாவண்ணன் குற்ற உணர்வோடு இக்கட்டுரையில் மனத்தை அசைபோடுகிறார்.  ஒரு பழைய சட்டைகேட்டு வந்த தன் கிராமத்து ராமசாமிக்கு அடுத்த முறை பார்க்கலாமே போய் வா  ராமசாமி என்று அனுப்பிவிட அந்த ராமசாமியும் உடன் இறந்து போகிறான். அது கொடுத்த வருத்தம் பற்றி பழமலய் கவிதை ஒன்றில் பேசுவார் மிகப்பெரிய விஷய ஞானத்தை இங்கே வாசகனுக்குச்சொல்லிவிடுகிறார் பாவண்ணன்..
‘ மாபெரும் சக்தியின் ஒரு துளியாக ஒரு பெண் ஒருவனுக்குக்கிடைக்கிறாள். அந்தச்சக்தியை அறிவதற்கு
முன்பாகவே அதை உடனடியாக அச்சுறுத்தி அடிமைப்படுத்தி, வதைக்கிற புத்தி வந்துவிடுகிறது ஆணுக்கு.’
லட்சுமி சின்னம்மா கால் பட்ட வளவனூர் ஏரிக்கரையும் வனக்கத்திர்குறியதுவாகவே வாசகன் தெரிந்துகொள்கிறான்.
‘வாழ்க்கை அதிருஷ்டம் ஒரு இழையாகவும் துரதிருஷ்டம் இன்னொரு இழையாகவும் வைத்து நெய்யப்பட்ட விரிப்பல்லவா என்கிறார் பாவண்ணன். கட்டுரை சொர்க்கத்தின் நிறம் இப்படிஎழுதிப்போகிறது. சிலருக்கு வாழ்க்கை எனும் விரிப்பில் அதிருஷ்டமே நீளத்திலும் அகலத்திலும் இழையாக அமைவதும் மறுதலையாய் வேறு சிலருக்கோ துரதிருஷ்டம் மட்டுமே அவ்விரண்டு இழைகளாக அமைந்துவிடுவதும் சாத்தியமே என்கிறார் பாவண்ணன். செவ்வியான் கேடு இன்னும் வள்ளுவன் தொடங்கி பிடிபடா விஷயமே. அது பிடிப்படத்தான் வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசைதான். இப்படியாகக் கட்டுரைகள் அலங்கரிக்கும்   பாவண்ணனின் துங்கபத்திரை தமிழுக்கு எழுத்து முத்திரை. .


Wednesday, January 22, 2020

recent issue- actor rajini regarding


சம்பந்தமில்லை என்றாலும் – பெரியார்

This entry is part of 40 in the series 20080103_Issue
எஸ்ஸார்சி

சம்பந்தமில்லை என்றாலும்
தமிழர் தலைவர் -ஆசிரியர் சாமி சிதம்பரனார்
வெளியீடு. பெரியார் சுய மரியாதை பிரச்சார நிறுவனம் 50, ஈ வெ கி சம்பத் சாலை
பெரியார் திடல் ,வெப்பெரி சென்னை 600007. முதற்பதிப்பு 1939. நன்கொடை ரூ.65. பக்கங்கள் 272.
—————-
சீரார் ஈ.வெ.ரா அவர்களுக்கும், எனக்கும் உள்ள அக நகும் நட்பு. யார் என்ன சொன்னபோதிலும் என்றும் குறையாது.
-சி.. இராஜகோபாலாச்சாரியர். கவர்னர் ஜெனரல். தில்லி -22-11-48 – பக்கம்-199
——————————————————————–
தமக்கென வாழாது பிறர்க்கே வாழ வேண்டுமென்பது,பண்டைத்தமிழரின் உயரிய கருத்தாகும். இச்ச்£ரிய கருத்தை தம் வாழ்நாட்களில்
கொண்டு, அதன்படி எல்லியும், காலையும் தூய தொண்டாற்றி மக்கள் அனைவரும் மாயவலையில் சிக்காவண்ணம் அறிவு கொளுத்தி
பிறப்பொக்கும் என்னும் தூய மொழியை இம்மாநிலத்தில் நிலைநாட்டிய பேரறிஞருள் நம் ஈ.வெ.ராமசாமி அவர்கள் முதல்வர் என்றால் ,வேறு கூறவேண்டுமோ?
-காஞ்சி.. பரவசுத்து இராஜகோபாலாச்சாரியார் பி.. ஏ. – பக்கம்-235
தேர்இல்லை,திருவிழாஇல்லை தெய்வம் இல்லை என்றார் நாயக்கர்.சுவாமியை குப்புறப்போட்டு வேட்டி துவைக்கலாம் என்றார். இவரைக்காட்டிலும் பழுத்த நாச்திகன் வேறு எவருமே இருக்க முடியாது. ,,,,,,,, மனசாட்சிக்கும்,தொண்டுக்கும் பக்தரான நாயக்கரை நாச்திகன் என்று அழைக்கும் அன்பர்கள் நாச்திகம் யாது என்றே தெரிந்துகொள்ளவில்லை என்றே சொல்வேன். அநீதியை எதிர்க்கத்திறமையும்,தைரியமும் அற்ற ஏழைகளாய்ச்சொரணையற்றுக்கிடந்த தமிழர்களினுள்ளத்தைக்கலக்கிய பிரம்மாண்ட பாக்கியம் நாயக்கரைப்பெரிதும் சேர்ந்ததாகும் அவர் இயற்கையின் புதல்வர்.! மண்ணை மணந்த மணாளர்! மண்ணோடு மண்ணாய் உழலும் மாந்தர்களுக்கு நாயக்கரின் பிரசங்கம் ஆகாய கங்கையின் பிரவாகம்,,,, தமிழ்நாட்டின் வருங்கால பெருமைக்கு நாயக்கர் அவர்கள் முன்னோடும் பிள்ளை; தூதுவன்; வருங்கால வாழ்வின் அமைப்பு.
–வ.ரா-( காந்தி-இதழில்-1933) பக்கம்-238
தமிழ்நாட்டில், இராமசாமியாரின் பிரசங்கம் ஒன்றை மட்டுந்தான் என்னால் மூன்று மணி நேரம் உட்கார்ந்து கேட்கமுடியுமென்று தயங்காமல் கூறுவேன்.,,,,, அவர் உலகானுபவம் என்னும் கலாசாலையில் முற்றுணர்ந்த பேராசிரியர் என்பதில் சந்தேகமில்லை.
– கல்கி- ( ஆனந்தவிகடன்-1931) பக்கம்-240
இன்னமும் சொல்லுகிறேன். நான் வெள்ளையன் வெளியேறுவதற்குக்குறுக்கே இருந்திருந்தாலும் இந்திய சுதந்திரத்திற்கு நான் துரோகம் செய்தது உண்மையாக இருந்திருந்தாலும், இந்தப்பாவிகள் மாபாவிகள் பார்ப்பான் ஆதிக்கத்திற்கும் அதனால் ஏற்பட்ட வடநாட்டான் சுரண்டல் ஆட்சிக்கும் இடம் கொடுத்து, அடிமையாகி அதனால் பணமும் பெருமையும் சம்பாதிக்கும் சுயநலம் கொண்டல்ல.
– பக்கம்- 14
———————————————————————————————————————-
ஆனால் எப்போது உங்கள் மனசாட்சியும் பகுத்தறிவும் இடங்கொடுத்து நீங்கள் கழகத்தில் சேர்ந்துவிட்டீர்களோ அப்போதிலிருந்து
உங்கள் பகுத்தறிவையும் மனசாட்சியையும் ஒரு புறத்தில் ஒதுக்கிவைத்துவிட்டு கழக்கோட்பாடுகளைக் கண்மூடிப் பின்பற்றவேன்டியதுதான் முறை..
-பக்கம்-16
——————————————————————————————————————
செத்துப்போன ஜெனரல் டயர் துரையை விடக்கொடுமையானவர்கள் நம் நாட்டில் உயிரோடு இருந்துகொண்டு பிள்ளைக்குட்டிகள் பெற்றுக்கொண்டு சுகமாய் வாழ்கிறார்கள்.,,,,,,,தெருக்களிலே போகக்கூடாது கிட்டத்திலே வரக்கூடாது என்கிறார்களே? இதைப்பற்றி
யாருக்கும் உறைக்கிறதா? இதனால் நமக்கு அவமானமாய் இருக்கிறதே என்று படுகிறதா? எந்தப்பத்திரிகையாவது இம்மாதிரி நடவடிக்கைகளைப்படுபாவி ‘டயர்த்தன்மை’ என்று எழுதுகிறதா?
-பக்கம்-171
பெண்கள் விடுதலைக்குப்பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக்கொள்வதெல்லாம் ஏமாற்றுவதற்குச்செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல.
,,,எங்காவது பார்ப்பனரால் பார்ப்பனரல்லாதார்க்குச்சமத்துவம் கிடைக்குமா?,,,,,,,,பெண்களால் ‘ஆண்மை’ என்ற தத்துவம் அழிக்கப்பட்டால் அல்லது பெண்களுக்கு விடுதளை இல்லை.
-பக்கம்-172
தமிழர்களைத்தட்டி எழுப்பித்தமிழர்களுக்காகப்போராடும் ஈ, வெ.ரா. ஔர் தமிழர் அல்லர். அவர் ஒரு கன்னடியர்.
-பக்கம்-188
பார்ப்பன நஞ்சு எவ்வளவு கொடிது, எத்தகைய கொல்லும் சக்தியை த்தன்னகத்தேகொண்டது என்பதை விளக்குவதுதான் அவரது.,,,,,,,,
——————————————————————————————————————— பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளனாய் இருக்கும் நாடு கடும் புலி வாழும் காடேயாகும். ஆதலால் நாங்கள் புலிவேட்டை ஆடுகிறோம். புலி மேலே பாய்ந்தால் ஒருவர் இருவர் கடிபட வேண்டியதுதான்,,,,,,,,,பிறவியில் மாறுதல் இருந்தால் ஒழிய புலி புல்லைத்தின்னாது. அதுபோலவாக்கும் நம் பார்ப்பனத்தன்மை.
-பக்கம்-197.
———————————————————————————————————————-
10/04/065 ல் கம்ப ராமாயணத்திற்குத் தீ 1 நாடெங்கும் பெரியார் அவர்களின் அறிக்கைப்படி திராவிடர் கழககத்தினரால் கம்பராமாயனத்திற்கு தீ இடப்பட்டு ’விடுதலை.’ அலுவலகத்துக்குச் சாம்பல் அனுப்பி வைக்கப்பட்டது.
-பக்கம்-264
23,24-1-71 ல் சேலம் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு 24/01/71 ல் ஞாலம் புகழ் சேலம் மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம்.
அய்யா ஊர்வலம் வந்தார். ஊர்வலத்தில் இந்துமதக்கடவுளின் யோக்கியதைகளை அம்பலப்படுத்தும் சித்திரங்கள் டிரக்குகளில் இடம் பெற்றன. இராமனுக்கு ச் செருப்படி வீழ்ந்த்தும் இறுதியில் இராமனுக்குத்தீ மூட்டப்பட்டதும் இந்த மாநாட்டில்தான். ஒருவன் மனைவி மற்றவனை விரும்புவது என்பதைக் குற்றமாக்கக்கூடாது’ என்ற சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் இந்தமாநாட்டில்தான். இவைகளை வைத்துக்கொண்டு பார்ப்பனர்களும் அவர்களது பாதம் தாங்கிகளும் தி மு க வுக்கு எதிராகத்தீவிர தேர்தல் பிரசாரம் செய்தார்கள்.
-பக்கம்-268
————————————————————————————————————

ezu latasam varikal 4








4 விரிவடையும் பாவண்ணனின் எழுத்துத்தளம் (ஏழு லட்சம் வரிகள் -தொகுப்பை முன்வைத்து ஒரு குறிப்பு)





வெளிச்சத்துக்கு ஏங்குகிற பிரக்ஞையின் அனுபவத்தை வாசகனுக்குத் தெரிவிக்கின்ற உத்தியைப் பாவண்ணனின் சிறுகதைப் படைப்புகளில் எளிதாகக் காணலாம். புராணப் பின்னணியில் அமைந்த கதைகள் பாவண்ணனுக்குக் கூடுதல் சிந்தனைத் தளத்தைத் தந்து உதவியிருக்கின்றன. தன் கவனத்தின் ஆழத்தை அனாயசமாய்த் தொட்டுப் பார்த்துவிட புராணப் பாத்திரங்கள் அவருக்குத் துணைக்கு வருகின்றன. வாழ்க்கை என்னும் புதிர் அவிழாதா என்கிற சிறுபிள்ளையின் பெருவிண்ணப்பம் அவரைக் குடைந்து குடைந்து, திக்குமுக்காட வைத்து, திணற வைத்து, உறைய வைத்து, கிறங்க வைத்துக் கருத்துக் கதிர்வீச்சாய்ப் படைப்பாக்கங்களில் கொப்பளிக்கிறது. ஞானவாரியில் ஜலக்கிரீடை செய்து விடுகிற பேரவா சாத்தியப்பாடில்லை என்பது சத்தியமாய்த் தெரிந்தாலும் சாதிக்க முனையும் மனித உந்துதல்களின் அரிய வெளிப்பாடு. கருத்து மூலங்களில் எதிராய்ச் சென்று கன்னத்தில் அறைவது என்பது எளிதாய் இருக்க கருத்தோடு கைகோர்த்துக் கொண்டே கருத்துக்குள் விளங்காது பூடகமாய்க் கிடக்கிற முடிச்சுகள் சிலவற்றை அவிழ்த்து விடுதல் பாவண்ணனுக்குச் சாத்தியமாகி இருக்கிறது.
சிறுகதை வடிவத்தின் சூட்சுமத்தைத் தளமுயர்த்திக் காட்டியிருக்கிறார் பாவண்ணன். ‘ஏழு லட்சம் வரிகள் ‘ என்னும் சிறுகதை மிக நேர்த்தியாக எழுதப்பட்ட கதைகளில் ஒன்று. சிறுகதை ஓடிப்பறந்து மறைந்து விடுகிற செய்தி சொல்லும் சிட்டுக் குருவியாக இல்லாமல் பசுமரத்தில் அமர்ந்து பலபேசும் புதிர்ப்பறவை என்பதை எதார்த்தமாகக் காண்பிக்கிறார் பாவண்ணன். ஆகப்பெரிய செவ்வியல் படைப்புகளில் ஆன்மாவுடன் வாதப் பிரதிவாதம் செய்கின்ற நசிகேதன் நம் கண்முன் தோன்றிப் பிரமிப்பூட்டுகின்றான். ஞானப்புயல் சுழல வைக்கிறது வாசகனை.
அரசருடன் அமர்ந்து அரசுக்காகச் சிந்திக்கிற பொறுப்பினைத் தமதாக்கிக் கொண்ட பண்டிதக் கூட்டங்களைத் தோலுரித்துக் காட்டுகின்ற ஏழு லட்சம் வரிகள் என்னும் சிறுகதை கூரான சமூக விமர்சனமாக வெளிப்பட்டுள்ளது. பைசாச மொழி இழிக்கப்பட்டதன் ஆதி வரலாற்றைத் தளமாகக் கொண்ட கதையில் ஒவ்வொரு வரியிலும் விமர்சனம் மறைந்திருக்கிறது. ‘பூவின் மணத்தை நரிகள் எப்படி உணரும் நந்திதேவா ? ‘ குணாட்யர் மூலமாய் வினாவை வைக்கின்றார் பாவண்ணன். சமூக நீதி இங்கே திரைவிலக்கி மெல்ல எட்டிப் பார்க்கிறது. ‘வெகுவேகமாக இந்தக் காவியம் மக்களிடையே பரவ வேண்டும் என்கிற அவசரத்தில் அரசரை அணுகி விட்டேன். அது பெரிய பிசகு ‘ இது கதையில் வரும் சாரமான வரி. மக்களுக்கும் அரசருக்கும் இடையேயுள்ள வெளி சிரஞ்சீவியாக நிலைத்திட நிரந்தரமாய்ச் சுழலும் ஒரு அசட்டுக் கூட்டம். படைப்புத் தளத்தில் லாவகமாகத் தோலுரிக்கிறார் பாவண்ணன்.
பெண்மையின் மனப்பறவை பறந்து பறந்து செல்லும் உச்சங்களையும் அதல பாதாளங்களையும் அழகு மெருகிட வடித்துக் காட்டும் படைப்பு ‘அல்லி ‘. சிறுகதையின் வெற்றி இது. உன்னதம், செய்நேர்த்தி, எழுத்துப் பெருமிதம் ஆகியவை அனைத்தும் ஒருங்கே கொப்பளிக்கும் படைப்பு. தன் தந்தையை ஒத்த ஆண்மகனுக்காக ஏங்கித் தவிக்கும் அல்லி. ‘அவரைப் போல ஓர் ஆண் உலகத்தில் மறுபடியும் பிறக்காமலேயே போனானா ? ‘ கேள்வி ஒரு உதிர்ந்த இறகு போல மிதந்து இறங்கி அவள் நெஞ்சை அடைந்தது. கச்சிதமான சொல்லாடல். பாவண்ணனுக்கு வருத்திக் கொள்ளாமல் வசப்படுகிறது. வாசகனை உலுக்கிப் பார்க்கிற இக்கதை உலகத் தரத்துக்கு இணையானது.
‘ரணம் ‘ சிறுகதையில் அற்புதமான விவாதமொன்று முன்வைக்கப் படுகின்றது. கர்ணன் தன் தாயையே ஒரு பாவி, அரக்கி, இரக்கமில்லாதவள் என்று அடுக்கடுக்காயத் திட்டுகிறான். ‘பரசுராமனிடம் நீ உன்னைப் பிராமணன் என்று பொய்யுரைத்து விற்பயிற்சி அடைய உனக்கு உருவான நெருக்கடி போல மற்றவர்களுக்கு நெருக்கடி வரக் கூடாதா கர்ணா ‘ என்கிற கேள்வி அவனைச் சுக்கு நுாறாக உடைத்துப் போடுகிறது. வண்டு துளைத்து ரணப்படுத்தியது சிறுத்துப் போய் இவ்வினாவின் ரணம் விசுவருபம் எடுக்கிறது.
துரியோதனனின் இறுதிக்கணம் குறித்து உணர்வுக் குமிழ்களை வரிசைப்படுத்தும் சிறுகதைப் படைப்பு திரை. முக்கியமான தருணத்தைச் சித்திரக் காட்சியாக முன்வைக்கிற கதை. குற்ற உணர்வைத் துரியோதனனைப் பிடறியைப் பிடித்து உலுக்க வானம் பார்க்கிறான் அவன். பாவண்ணனின் பார்வையில் விரிந்த நீலப்பரப்பில் சுற்றிச் சுற்றி வட்டமடித்த அந்தப் பறவையை அவன் கண்கள் தேடின. வாழ்வின் அந்திப்பொழுதைப் பறவையோடு பார்க்கிறான் துரியோதனன். பாவண்ணன் பறவைகளை அடிக்கடி தொட்டுப் பேசுகிறார். தத்துவப் பார்வை செறிவு பெற்றதன் வெளிப் பாடாய் இது இருக்க சாத்தியப் பாடுகள் அதிகம். ராமானுசரின் பறவை குறித்த வியாக்கியானங்கள் துணைக்கு வரலாம். ஷெல்லியின் வானம்பாடியின் அடைமொழி மனக்கண்களிலே தெரிகிறது. வால்மீகியின் பறவை தரிசனம் இதிகாசமாய் உரு எடுத்து வெளிப்பட்டதும் எதார்த்தம் . தமிழ்மறை திருக்குறளும்  உயிர்ப்பறவையைப் பற்றிப் பேசுகிறது.
சுழல் என்னும் சிறுகதை லட்சுமணன் சீதையை முனிவரிடம் ஆற்றுப் படுத்திய விஷயம் பேசுகிறது. பொருள் பொதிந்த ஒன்று பொருளற்றதாகப் போகிற தருணத்தைத் தற்செயல் என்றுதான் சொல்ல வேண்டும். மகளே, மானிடத்தைப் பொசுக்குகின்ற நெருப்புப் புள்ளி அது என்று சீதையிடம் பேசும் வால்மீகியின் ஊடாக வாழ்வு கோடி கோடித் தற்செயல்களாின் தொகுப்பு சீதை. மணிகளைக் கோர்க்கின்ற கயிறு போல எல்லாவற்றையும் கோர்த்தபடி ஒரு சரடு கண்ணுக்குத் தெரியாமலே நீள்கிறது. என்று உபநிடத சாரத்தைச் சொல்லிச் செல்கிறார் பாவண்ணன்.
புள்ளொடு விருட்சத்தையும் அடிக்கடி தொட்டுத் தொட்டுப் பேசும் பாவண்ணன் சுழல் கதையில் பெண்களை மரத்தோடு ஒப்புமைப் படுத்தி அழகாயப் பேசுகிறார். உலக உயிர்ப்புக்கு நீரைத் தருவிக்கும் மரங்கள் , உயிர்கள் மூச்சுவிட உயிர்க்காற்றுக் கொடை தருபவை. பசி நெருப்பு ஆற்றும் கற்பகத் தருக்கள் மரங்கள். மரங்களின் ஒவ்வொரு இலை நுனியிலும் கண்ணீர்த் துளி போல நீர்நின்று வழிந்தபடி இருந்தது என்று குறிப்பிடுகிறார் பாவண்ணன். சீதையின் துயரத்தைக் காட்டில் நிற்கும் நெடுமரங்கள் உணர்கின்றன. பெண்கள் உயிர்த் தருக்கள். பெரும்பாலும் மனிதர்கள் அதை உணர்வதில்லை. கேவலமாகக் குறுக்கிக் கொள்கிறார்கள் என்ற விமர்சனம் சொல்லாமலேயே வெளிப்படுகிறது.
‘போர்க்களம் ‘ சிறுகதையில் ராகுவின் தீட்சண்யம் துல்லியமான சொல்லோவியமாகத் தீட்டிக் காட்டப்படுகிறது. ராகுவின் கேள்விக் கணைகள் ஒரு நல்ல வழக்கறிஞரின் ஆளுமை வயப்பட்டதாய் வெளிப்படுகின்றன. மார்க்சிய விஷயங்களை மாயக் கண்ணன் ஒப்ப ராகுவின் வாக்கு மூலமாக நமக்குத் தருகிறது இக்கதை. ‘நன்றாக யோசித்துப் பாருங்கள். பாற்கடலைக் கடையநாமும் அவர்களும் ஒரே அணியில் நின்ற அக்கணத்தை எண்ணிப் பாருங்கள் ‘ என்று சொல்லும் ராகு ‘தந்திரப் பின்னணியில் ஒற்றுமையை வளர்ப்பதை விட வெளிப்படையாகவே மோதிச் செத்துப் போகலாம் ‘ என்று பேசுகிறான். ‘உழைப்பின் பலன் உரியவர்களுக்குக் கிடைப்பதில்லை என்பதுதானே காலம் காலமாக நாம் பேசி வரும் பேச்சு ‘ என்று ராகுவின் பேச்சில் வெளிப்படும் விஷயம் கதையைச் சமகாலத் தன்மை கொண்டதாக மாற்றி விடுகிறது. தேவர்களின் கொப்பரையில் அமுதத்தை ஊற்றும் மோகினி வெற்று அகப்பையை அசுரர்களின் கொப்பரைகளில் விட்டுவிட்டு எடுக்கிறாள். அமுதம் தமக்குக் கிடைத்ததாக எண்ணி வெற்றுக் கொப்பரையைத் தம் வாயில் கவிழ்த்துக் கொண்டு மோகினியின் சுண்டி ஈர்க்கும் சிங்காரத்தில் சிறைபடுகிறார்கள் அசுரர்கள். யார்யாருக்கோ இதில் செய்தி அடங்கியிருப்பதுதான் இக்கதையின் வெற்றி. கஞ்சி குடிக்க வழியும் அதற்கான காரணங்கள் என்ன என்கிற தெளிவும் இல்லாதவர்கள், வீட்டில் பூச்சிகள் போல மக்கள் வாழ்வதையும் மடிவதையும் கலைநயத்துடன் வெளிப்படுத்துகிறார் பாவண்ணன். சிறிதும் கலைநயம் குறையாத வகையிலும் ச்முக விமர்சனத்தைப் படைப்பில் வெளிப்படுத்த முடியும் என்பதற்கு இப்படைப்பு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
ஆண்டாள், பெரியாழ்வார், மகள், தந்தை, அரங்கன், அரங்கநாயகி, ஜீவாத்மா,பரமாத்மா, அன்பு பேரன்பு என்கிற அருமையான உணர்வுத் தளங்களை அலசுகிறது புதிர் என்னும் சிறுகதை. ‘அவரும் நீயா ? நானும் நீயா ? எல்லாமே நீயா ? எல்லாமே நீயா ? எனக்கு ஏன் புரியவில்லை ? ‘ இது என்கிற பெரியாழ்வாரின் கேள்வி, அண்ணாமலை ரமணரின் நிலைத்த கேள்வியாகும். காரிருள் வானில் மின்மினிபோல் கண்ணில் படுவன அவை என்ன ஆரிதற்கு எல்லாம் அதிகாரி என்னும் உள்ளம் துருவும் வினா. பாவண்ணனின் படைப்புகளில் நிழலாய்த் தென்படுகிற அடித்தள நாதமிது.
வியாசர் சொல்வதாகப் பாவண்ணன் குறிப்பிடுகிறார் . '‘ஒரு பிம்பமாய் ஒரு கணம் எழுச்சி கொண்டது மட்டுமே உண்மை. பிறகு ஒவ்வொரு கட்டத்திலும் என் மனத்தை நானே முறுக்கேற்றிக் கொண்டு கவிதையின் உச்சத்துக்குச் சென்றேன். எழுதி முடித்ததும் எனக்குள் மறுபடியும் உருவான வெறுமைக்கு அளவேயில்லை. மிகப் பெரும் வெறுமை' ‘ என்கிற வரிகள் வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் எல்லாருமே மனத்துக்குள் சொல்லிக்கொள்ளக் கூடிய வரிகள் . மனத்தின் மறுபக்கம் இது. வியாசர் எவ்வளவு பெரிய கவிஞர். அவர் கெஞ்சிக் கரைவதைக் காட்டும் இம்மறுபக்கம் வாழ்வில் ஒவ்வொரு தந்தைக்கும் நேரக் கூடியதே. காலந்தோறும் ஒவ்வொரு ஆணுக்கும் உருவாகும் மனநெருக்கடியை வியாசர்-சுகர் பின்னணியில் வைத்துப் பேசுகிறது இக்கதை.
ஆழ்ந்த இந்தியத் தத்துவ ஞானச் சுரங்கமாய் விளங்கும் தொன்ம விஷயங்களைச் செரித்துக் கொண்டு சமகாலத் தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் சில தருணங்களை மறு ஆக்கம் செய்வது இத்தொகுதியின் முக்கியத் தன்மையாகும். படைப்புத் தளத்தை விரிவாக்கும் பாவண்ணனின் முயற்சிகள் வெற்றி அடைந்திருக்கின்றன. எந்த இடத்திலும் கதையின் சரடு சமகாலப் பிரதிபலிப்பைக் கைவிடாமல் இருப்பது கவனிப்புக்குரிய விஷயம். சமூக அக்கறையோடு ஒவ்வொரு கதையும் ஒடுக்கப்பட்டோர்களின் பக்கம் நிற்பது கூடுதல் சிறப்பாகும். தமிழ்ப் படைப்புலகில் பாவண்ணனின் எழுத்து முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டிய விஷயங்களாகின்றன . நல்லது பெரிதாகும்.

akniyum mazaiyum grish karnad -paavannan 5




5 அக்னியும் மழையும் ‘ – கூர்மையான உரையடல்களைக் கொண்ட நாடகம் (பாவண்ணன் மொழிபெயர்த்துள்ள கிரிஷ் கர்னாட் நாடகம்)





இந்தியப் பண்பாட்டுப் பெட்டகமாய் இன்றளவும் இயங்குவது இதிகாசங்கள். மகாபாரதத்தையோ இராமாயணத்தையோ புரட்டிப் போட்டு அதன் மீது நிமிர்ந்து பேசுகின்ற ஒரு படைப்பினை நம்மால் கடந்த ஆயிரம் ஆயிரமாண்டுகளாய்க் கொடுத்து விட முடியவில்லை. அப்படி ஒரு தேவை எழாததும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்தியாவில் எங்கே சென்றாலும் ஐந்து பேர்களில் ஒருவன் ராமன் அல்லது கிருட்டிணனாகப் பெயர் தாங்கி உலா வருவதைப் பார்க்க முடிகிறது. இந்த இதிாகசங்களில் ஏதேனும் ஒரு சிறு நிகழ்ச்சியை நினைவு படுத்திக் கொள்ளாது அவனுக்கு ஒருநாள் முடிவதில்லை. அப்படைப்பாளியின் ஒப்புமை இல்லாத பெருவெற்றியை இது பறைசாற்றி நிற்கிறது.
‘அக்னியும் மழையும் ‘ நாடகம் கருக்கொள்ள கிரீஷ் கார்னாடுக்கு மகாபாரதம் ஏதுவாகிறது. வனபர்வத்தில் இடம்பெறும் யவக்கிரிதனைப் பற்றிய சிறுவிளக்கம்- தருமனால் பெறப்படுகிற விளக்கம் – இந்த நாடகம் உருக்கொள்ளத் துாண்டுதலாகியிருக்கிறது. தொன்மங்களைச் செரித்து வெளிச்சம் பெறுதல் ஓர் அருதிறன். அதனைப் படைப்பாக்கங்களில் மீட்டுருவாக்குதல் தான் தெரிந்து கொண்டவைக்குத் தன்னை நிலைநிறுத்துதல் என்பதாகக் கொள்ளலாம்.
மொழிபெயர்ப்புத்தளத்தில் தொடர்ந்து சாதித்து வருபவர் பாவண்ணன். பலிபீடம், நாகமண்டலம் இப்படி  கிரீஷ் கார்னாடின் நாடகங்களை ஏற்கனவே தமிழில் மொழிபெயர்த்தவர். தொடர்ந்து  கன்னடத்தின் பெருஞ்சிந்தனையைத் தமிழுக்குக் கொண்டு சேர்ப்பதில் பெருவெற்றியை ஈட்டிவரும் பாவண்ணனுக்குத் தமிழ் உலகம் நன்றிக்கடன் பட்டுள்ளது. அவருடைய மொழிபெயர்ப்புகளின் வரிசையில் சமீபத்தில் நமக்குக் கிடைத்திருக்கும் வரவு ‘அக்னியும் மழையும் ‘.
‘அக்னியும் மழையும் ‘ நாடகப் படைப்பில் இந்திரனை வேண்டி யாகம் நடக்கிறது. மழை கொணர்வான் இந்திரன் என்று வேத கோஷங்கள் ஒலிக்கின்றன. இடையே ஒரு நாடகக் குழு நுழைகிறது. நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டுத் தாள்பணிந்து நிற்கிறது. நடிப்பு முதலான கலைகளைத் தொன்மைக்கால அரசனும் புரோகிதர்களும் எப்படி கேவலப்படுத்தி இருக்கிறார்கள் என்பதைச் சொல்லி நாடகம் தொடங்குகிறது.பரத முனிவரின் பிள்ளைகள் கூட நாடகத்தில் பங்கேற்று நடித்ததால் சாதியிலிருந்து வெளியேற்றப் பட்டார்கள் என்றும் இதே சாதியில் இருக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தால் ஆட்ட பாட்டங்களையெல்லாம் விட்டுவிடு என்ற வரிகள் பராவசுவின் தம்பியின் விண்ணப்பமாய் நாடகக் குழுத் தலைவன் சொல்கின்ற வசனத்தில் இடம்பெறுகின்றன. அசுரர்களுக்கும் வேதம் ஓதும் கும்பலுக்கும் ஓயாத பிணக்கு இருந்து வந்திருப்பதை நாடகம் தொட்டுப் பேசுகிறது.
பராவசு சொல்கிறான்
‘யாகத்திலிருந்து ராட்சசர்களை முழுக்கத் தள்ளி வைக்க முடியறதில்லை. அது கூட ஒரு பந்தம்தான் ‘
இப்படிச் சொல்லும்போது பாற்கடலைக் கடையும் நிகழ்வில் அசுரபலம் தேவையாகி நிற்பதையும் அதனைப் புறந்தள்ளி ஒன்றும் நடைபெற்று இருக்காது என்பதையும் நினைவுபடுத்திக் கூடுதலாகச் சிந்திக்க வழிவகுக்கிறது.
நித்திலை வேட்டுவப்பெண். அரவசு பார்ப்பனன். இந்த இருவரிடையே நிகழும் உரையாடல் மிகவும் ஆழமாக அர்த்தம் செறிந்ததாகக் காட்சி அளிக்கிறது. நித்திலை சொல்கிறாள் ‘ டேய் சாதிக்காரங்களை பொறுத்தவரையில் அவுங்க ஆசைப்பட்டு வஞ்சிக்கறதுக்குத்தான் கீழ்ச்ாதிப் பொண்ணுங்க வேணும். கட்டிக்கும் போது மேல்சாதிப் பொண்ணுங்களத்தான் கட்டிக்குவாங்களாம் ‘ என்று சாதாரண தளத்தில் இருந்து பேசுகிறாள். சமூகப் பார்வை நல்ல விமர்சனமாய் வந்து விழுகிறது. அதே பெண், யவக்கிரிதன்போன்ற ஞானிகளிடம் கேட்பதற்கு தன் தளத்தை உயர்த்திக் கொண்டு விடுகிறாள். மற்றொரு இடத்தில் ‘மழை ஏன் பெய்யலங்கறது ஒரு கேள்வி. உன்னுடைய சாவு எப்பன்னு உனக்குத் தெரியுமாங்கறது ரெண்டாவது கேள்வி. ரெண்டுக்கும் அவர் தெரியாதுன்னே பதில் சொல்லிட்டா அவர் ஞானம் அடைஞ்சி எந்தப் பிரயோஜனமும் இல்லன்னு அர்த்தம் ‘ என்கிறாள் நித்திலை. கிரிஷ் கார்னாட் இவ்விடத்தில் நித்திலை வாயிலாக ஞானம் என்பது என்ன என்கிற விளக்கத்தை அளிக்கிறார்.
‘தவத்தால் ஞானம் அடைய முடியாது. அது வாழ்க்கையிலிருந்து கனிந்து பெருகி வரணும் என்கிற வரியும்ஆனா எதுவுமே கிடைக்காதுங்கற உண்மையாவது புரிஞ்சிது. அதுவும் ஒருவகையில ஞானம்தானே ‘ என்று யவக்கிரிதனே சொல்லும் வரியும் வாசகனைக் கிறங்க வைக்கின்றன. விசாகை தனக்கு இஷ்டமில்லாதவனை மணந்து காதலைத் துய்க்கிறாள். கணவன் அரசனின் அழைப்பை ஏற்றுப் பஞ்சத்தைப் போக்க நிகழ்த்தப் படுகிற யாகத்தை நடத்தச் சொல்கிறான். விசாகைக்குத் தன் கணவன் வேண்டும். அவனோ அரசனுடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டவன். விசாகை தன் அவஸ்தையை யவக்கிரிதனுடன் பகிர்ந்து கொள்கிறாள்.
நாடகத்தில் யவக்கிரிதன் தன் தந்தைக்கு நேர்ந்த சோகத்தை எண்ணிப் பேசுகிறான். ரைப்ய மகரிஷிதான் தன் தந்தையை எப்படி எல்லாம் அவமதித்தார் என்று பேசுகிறாள். யாகம் நடைபெற்ற போது தன் தந்தைக்கு வரவேண்டிய தலைமைப் பொறுப்பு இடம்மாறிப் போனதைப் பற்றியும் பேசுகிறான். தான் காட்டுக்குச் சென்று தவம் இயற்றியற்கான காரணங்களைப் பட்டியலிடுகிறான் யவக்கிரிதன். ஒரு கட்டத்தில் ‘ஞானம் எனக்கு வேணாம். கோபம், குரோதம், மோகம் எல்லாவற்றையும் சுட்டுச் சாம்பலாக்குகிற ஞானம் தனக்கு வேணாம் என்று பேசுகிறான். இந்த மன விசாரங்கள்தாம் நான். என் துஷ்டத்தனங்களையும் ஒத்துக் கொண்டு இடம் தருகிற ஞானம்ான் எனக்கு வேணும்ன்னு சொன்னேன் ‘ என்று சொல்லும் வார்த்தைகள் நம் சிந்தனையைத் துாண்டுகின்றன.
‘பூத்து வாடிக் கீழே விழத்தான் போறோம்ன்னு முதலிலேயே பூவுக்கு தெரியாம இருந்தா என்னைக்காவது பூ பூத்திருக்குமோன்னு அடிக்கடி தோணும் ‘ என்ற நித்திலையின் வார்த்தைகள் அற்புதமான தத்துவச் சொடுக்கு. சாவு என்பது எவனுக்கு நேருமோ அவனே விஷயங்களைச் செரித்துக் கொள்ள முடியும். சாவு ஒரு வாய்ப்பு, சாவு ஒரு கொடுப்பினை என்கிற எண்ணங்களுக்கு இட்டுச் செல்வதாக இவ்வரிகள் அமைகின்றன. ‘முகமூடிய ஒரு முறை போட்டுகிட்டா அதை உறுதியா பிடிச்சிக்கணும். இல்லன்னா அது உன்னை ஆட வச்சிடும். முகமூடியிலிருந்து சக்திய நீ உறிஞ்சி எடுத்துக்கணுமே தவிர நீ அதுக்கு அடிமையாக கூடாது ‘ என்கிற உரையாடல் மிக முக்கியமான ஒன்று. இவ்வரிகள் நாடகத்தை விட்டு வெளியேயும் பொருள் பொதிந்த ஒன்றாக விளங்குகின்றன.
பொய்யான வேத ஆகமவரைவுக் கோட்டினை புறந்தள்ளி மனித மனங்கள் பொதுவாக மேல் எழ விழைகின்றன. சமூகம் தனக்குக் கற்பித்தக் கொண்ட நியாயம் என்னும் தளைகள் இடையறாது துளிர்விட்டுக் கொண் டே நிற்கின்றன. உடலின் பசி அறிவியல் விஷயமாகிக் கற்பனை எல்லைகளைத் தவிடுபொடி ஆக்குகிறது. ஆதிக்க வர்க்கம் தனது கொடு விஷத்தை விளைவிப்பதைத் தடுத்து நிறுத்த முடியாமல் கைகட்டிச் சேவகம் பண்ணுகிறது அறிவு முதலாளிகளின் மந்தை. அக்னியும் மழையும் நாடகத்தில் கிரிஷ் கார்னாட் அற்புதமான பெண் பாத்திரங்களை உலவ விட்டு நிம்மதி பெற்றிருக்கிறார். கம்பன் சானகியின் துயர் பற்றிக் குறிப்பிடும் போது பெருங்கடவுள்கள் மூவராலும் கூட பெண்களின் அடிமனம் படும் துயரைக் காண முடியாது என்று குறிப்பிடுவதை நோக்கலாம். தீயைத் தீய்த்துத்தான் தன் கற்பு களவு போகாததைப் புருடோத்தமனுக்குமே அவள் அறிவிக்க வேண்டிய சிறுமை ஏற்கிறாள்.
பாவண்ணன் தொடும் பல மொழிபெயர்ப்புகள் நல்ல வாசிப்பு அனுபவங்கள் கொண்டவையாக உள்ளன. நல்ல நாடக தரிசன அனுபவங்களையும் கொண்டுள்ளன. மொழிபெயர்ப்புகள் வழியாக் ஊக்கம் பெற்று நல்ல படைப்புகள் தமிழில் தோன்றக் கூடும் என்று அவருக்கு நம்பிக்கை இருக்கிறது. அது உருவம் காண தமிழ் எழுத்துலகம் புதிய ஒளிக்கீற்றைத் தனதாக்கலாம். கனியட்டும் கருவும் காலமும் என்பதே இன்றைய விழைவாகிறது. நிறைவும் அதுவே.
***

an australian friend -letter



எஸ்ஸார்சி எழுதிவரும் “வேதவனம்”

This entry is part of 42 in the series 20090115_Issue
எஸ். கிருஷ்ணமூர்த்தி

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
அன்பர் எஸ்ஸார்சி தொடர்ந்து எழுதிவரும் “வேதவனம்” அற்புதமாக இருக்கிறது.
குறுகத்தரித்த உபநிஷதம் என்று சொல்லலாம். தமிழ்ப் பதிவுகளுக்கு நடுவே குந்துமணி போலத் திகழும் “திண்ணை”க்கு வேதவனம் ஒரு மகுடம்.
வாழ்த்துக்கள்.
அன்புடன்
எஸ். கிருஷ்ணமூர்த்தி

ve.sabanayagam - in -yugamaayini



எஸ்ஸார்ஸி – அக்கிரஹாரத்தில் இன்னொரு அதிசயப் பிறவி

This entry is part of 31 in the series 20100312_Issue
வே.சபாநாயகம்

மகாகவி பாரதியின் வரலாற்றை முதன்முதலில் எழுதிய பாரதியின் அணுக்க சீடரான வ.ரா என்கிற
வ.ராமசாமி ஒரு விசித்திர மனிதர். அவர் பிறப்பில் பிராமணராக இருந்தும் பிராமணர்க்கான ஆசார அனுஷ்டானங்களைக் கடைப் பிடிக்காதவர். பூணூலைக் கழற்றி எறிந்தவர். பிராமணர்களின் – பால்ய விவாகம், விதவைக்
கொடுமை, பெண்ணடிமைத்தனம் போன்றவற்றைக் கடுமையாய்ச் சாடி, கட்டுரைகளும் நாவல்களும் எழுதியவர்.
அதோடு சமூகத்தின் கண்மூடித்தனமான மூட நம்பிக்கைகள், அறியாமை ஆகியவற்றையும் சாடிய பகுத்தறிவாளர்.
திராவிடக் கழகத்தார் மட்டுமே பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்பி வந்த அன்றைய நிலையில் சனாதனக் கும்பலி லிருந்து எழுந்த இந்த பகுத்தறிவாளரை வியந்து ‘அக்கிரஹாரத்தில் ஒரு அதிசயப் பிறவி’ என்று பாராட்டினார் அறிஞர் அண்ணாத்துரை. வ.ராவின் குருவான பாரதியும், தான் பிறந்த சமூகத்தின் பிற்போக்குத்தனங்களைத் தனது கவிதைகளில் சாடியவர்தான். அதே போல புதுமைப்பித்தனும், தான் பிறந்த சைவவேளாளர் இனத்தவரைத் தன் கதைகளில் மிகவும் கடுமையாய்க் கேலியும் கண்டனமும் செய்தவர். ஆனால் அவரைப் பாராட்ட, அண்ணாத் துரையின் பெருந்தன்மை பெற்றிராத இன்றைய நவீன(!)ச் சிந்தனையாளர் சிலருக்கு மனமில்லை. சாதிக் கண்ணோட்டத்துடனேயே எதையும் பார்க்கிற ஆன்மரோகிகளான அவர்கள் அவரை சைவவேளாளச் சார்பினர் என்று, சாதிச் சிமிழுக்குள் அடைக்கிற வக்கிர புத்தியைப் பார்க்கிறோம். ஆனால் உண்மையான இலக்கிய
ரசிகர்கள் அவர்களது பிதற்றலைப் புறக்கணித்து வ.ராவைப் போல அவரும் ஒரு புரட்சிவாதி என்றே
போற்றுகின்றனர்.
இன்றைய இளம் படைப்பாளிகளிடையேயும் வ.ரா போன்ற அதிசயப்பிறவிகளைப் பார்க்க முடிகிறது.
இந்த ஆண்டின் ‘தமிழ் வளர்ச்சிக் கழக’ப் பரிசினைப் பெற்றுள்ள ‘நெருப்புக்கு ஏது உறக்கம்’ என்கிற நாவலை எழுதியுள்ள ‘எஸ்ஸார்ஸி’ என்கிற திரு.எஸ்.ராமச்சந்திரன் அவர்களை அக்கிரஹாரத்தின் இன்னொரு அதிசயப்
பிறவி என்று சொன்னால் அது மிகையாகிவிடாது. அவரது இந்த நாவல் அந்த அபிப்பிராயத்தை எனக்கு ஏற்படுத்துகிறது.
திரு.எஸ்ஸார்ஸி அடிப்படையில் ஒரு தொழிற்சங்கவாதி. இவரது முதலிரண்டு நாவல்களான – ‘மண்ணுக்குள் உயிர்ப்பு’, ‘கனவு மெய்ப்படும்’, என்பவை முறையே – வடலூர் பீங்கான் தொழிற்சாலைத்
தொழிலாளர் பிரச்சினையைப் பேசுவதாகவும், அவரது சொந்த ஊரான தருமநல்லூரின் சில பிற்போக்குத் தனங்களைச் சாடுவதாகவும் அமைந்தவை. ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய’ வள்ளலாரைப்போல, இவரும் தன் ஊரிலும், தன் பணி இடங்களிலும் ஒடுக்கப்பட்ட ஆதரவற்றோரின் துயர் கண்டு மனம் வாடி அவற்றைத் தன் படைப்புகளில் பதிவு செய்பவர். இவரும் வ.ரா போலவே சனாதனக் கருத்துடைய அக்கிரஹாரத்தில் பிறந்தவர் தான். அவரது குடும்பத்தார் இன்னமும் ஆசார அனுஷ்டானங்களை விடாது பின்பற்றுகிறவர் கள்தான். அந்தப் பின்னணியில் வளர்க்கப்பட்டவர்தான். ஆனால் கல்லூரிப் படிப்பினாலும், பணியிட அனுபவங்
களாலும் மார்க்சீயத்தில் ஈடுபாடு கொண்டதால் சமூக நீதிக்காகப் போராடும் மனஉரம் பெற்றவர். சாதி மத சழக்குகளை முற்றாக வெறுப்பவர். அதனால், இவர் தன் ஊராரும், தன் இனத்தாரும் முகம் சுளிக்கிற கற்பனையை இந்நாவலில் துணிந்து பதிவு செய்துள்ளார்.
ஆர்.கே.நாராயணினின் ‘மால்குடி’போல, இவர் தனது ஊரான தருமநல்லூரை – ‘தருமங்குடி’ என்ற
பெயரில் தனது கதைகளிலும், நாவல்களிலும் களமாகக் கொண்டு எழுதுகிறார். அந்த தருமங்குடியில் பிறந்த அக்கிரஹாரத்து தருமு என்கிற பெண்ணும், ஊர்ச் சேரியைச் சேர்ந்த பழமலய் என்கிற பையனும் அண்ணாமலைப் பல்கலையில் படித்து, அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்குச் சென்று, அங்கே காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டு அமெரிக்காவிலேயே தங்கி விடுகிறார்கள். ஊர்ப்பக்கம் திரும்பவே இல்லை. தருமுவின் பெற்றோர் – உள்ளூர் கோவில் அர்ச்சகரும், அவரது மனைவியும் – மகளைத் தலைமுழுகி விடுகிறார்கள். பழமலையின் தகப்பனார் – கோபால் என்கிற சுதந்திரப் போராட்டத் தியாகி மட்டும் ஊரில் தங்கி இருக்கிறார்.
பிறந்த ஊரையும் தன் மண்ணின் கலாச்சாரத்தையும் மறவாமல், பழமலய் தன் மகனுக்கு தன் பிராந்தியத்துப் பழக்கத்தின்படி – கொளஞ்சி என்று பெயர் வைத்து, தமிழும் தமிழ்க்கலாச்சாரமும், தமிழ் இலக்கியங்களும்
கற்பித்து வளர்த்திருக்கிறார். ஒரு நாள் கொளஞ்சி தாத்தாவையும், தன் பெற்றோரது ஊரையும் பார்க்கக் கிளம்பி வந்தவன், தன் ஊர் மக்களின் அவல வாழ்க்கையையும், தலித்துகள் நந்தன் காலத்திலிருந்து வஞ்சிக்கப் பட்டிருப்பதையும் அந்த இடங்களுக்கெல்லாம் போய்ப் பார்த்து அறிந்து, அமெரிக்கா திரும்பாமல் இங்கேயே தங்கி தன் ஊர் மக்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க முனைகிறான். இதுதான் கதை.
பிராமணப் பெண்ணுக்கும் தலித் பையனுக்கும் திருமணம் செய்து வைத்தது ஒன்றும் புதிய புரட்சி அல்லதான். ஆனால் சொந்த கிராமத்தில், இன்னும் அறியாமையும் சாதிக் கட்டுப்பாடும், சனாதனப் பழம்
பஞ்சாங்கங்களும் இருக்கிற நிலையில், தன் குடும்பமே ஏற்காத தன் இனத்தவரின் எதிர்ப்புக்குரிய புரட்சிகரமான கற்பனையைத் துணிந்து – அதனால் வரும் பின்விளைவுகளுக்கு அஞ்சாமல் – எழுத்தில் வடித்திருப்பது அவரைப் பொறுத்தவரை, அவரது ஊராரைப் பொறுத்தவரை பெரிய புரட்சிதான். இந்நாவலில் வரும், சதா வண்டையாய்ப் பேசும் ஒரு பாத்திரமான சபாபதிப் பிள்ளை (தற்போதும் ஜீவியவந்தராய் தருமநல்லூரில் வாழ்பவர்) இந்நாவலைப் படிக்க நேர்ந்தால், அவர் கோயில் அர்ச்சகரை அடிக்கடி ‘இழித்துப்பேசுகிற ‘பாப்பாரக் குசும்பு’ என்ற வசையைச் சொல்லி திட்டக்கூடும். அது மட்டுமல்ல – அமெரிக்கவின் நவீன சுக வாழ்வை கொளஞ்சி துறப்பதும், தன்
பணிக்குத் துணையாய் சென்னையில் நல்ல பதவியில் உள்ள, அமெரிக்கா செல்லும் வாய்ப்பைப் பெற்றிருந்த சந்துரு என்கிற பிராமண இளைஞனையும் தன் வளமான எதிர்காலத்தைத் துறந்து தன்னுடன் தங்க வைத்ததும், உள்ளூர்ப் பெரிய மனிதர் சேதுராமன் பிள்ளை என்பவர் தன் 60 ஏக்கர் நிலத்தையும், தனது நிர்வாகத்தில் இருந்த மேனிலைப் பள்ளியையும் கொளஞ்சி பேரில் உயில் எழுதி விட்டு இறந்ததும், அந்த நிலங்களைக்
கொளஞ்சி ஊர் மக்களுக்குப் பிரித்துக் கொடுப்பதும், வேலை வாய்ப்புக்காக ஊருக்கு சர்க்கரை ஆலை ஒன்றை நிறுவுவதும் ஆனவை – அந்த ஊருக்கு கற்பனையில் கூடக் கண்டிராத புரட்சிகள் ஆகும். இப்படியெல்லாம்
நடக்குமா நடப்பது சாத்தியமா என்ற யதார்த்தத்தை ஒட்டிய கேள்வி எழலாம். ஆனால் இப்படி நடக்குமா என்பதல்ல ஆசிரியரின் நோக்கம்! இப்படி நடக்க வேண்டும் என்பதுதான் அவரது ஆசை! இலட்சியம் என்றும் சொல்லலாம்.
எங்கும் எப்பொழுதும் நல்ல முயற்சிகளுக்குத் தடங்கல் ஏற்படுவது போலவே கொளஞ்சியின் கனவும்
நிறை வேறுவதாயில்லை. உள்ளூரின் ஆதிக்க சக்தியினரின் சதியால், ஊருக்கு அருகில் வேகமாக வளர்ந்து வரும்
நெய்வேலி சுரங்கப் பணிக்கு அவனது இட்சிய கிராமத்தையும் கையகப்படுத்தி விடுவதால் அவனுள் எரியும்
நெருப்பு அணைக்கப்படுகிறது. ஆனால் நெருப்பை அணைக்கலாம்; அழிக்கமுடியுமா? நெருப்புக்கு ஏது உறக்கம்? அது இங்கில்லை என்றாலும் வேறு எங்காவது புதிய உத்வேகத்துடன் மீண்டும் உயிர் பெற்று எரியும் என்னும்
சிந்தனையோடு கதை முடிகிறது.
‘எஸ்ஸார்சி’ யின் பாத்திரப் படைப்பும் தத்ரூபமானவை. ஒவ்வொரு ஊரிலும் மேலே சொன்ன – ஊருக்கு எந்த நல்லதும் நடந்து விடுவதைச் சகிக்காத சபாபதிப் பிள்ளைகள் இருப்பது கண்கூடு. இந்த நாவலில்
அவர்தான் ‘வில்லன்’. கொளஞ்சியின் கனவைப் பாழடிப்பவர் அவர்தான். அவரது பாத்திரப் படைப்பு அசலானது – நம்மில் பலருக்கும் பரிச்சயமானது என்பதால் வாசிப்பு நெருக்கமாகிறது. அதே போல அஞ்சாம்புலி, அவனது மனைவி சாரதம் இருவரும் நாம் கிராமங்களில் அபூர்வமாய்க் காண்கிற எளிய, எப்போதும் நல்லதையே எண்ணுகிற வெள்ளந்தி பாத்திரங்கள். அவர்கள் இருவரது உரையாடல்கள் எப்போதும் எடக்கு மடக்காகவே இருப்பதும் அதனால் அவர்களுக்கிடையேயான பந்தத்தில் நெருக்கம் ஏற்படுவதும் ரசிக்கத்தக்கவை. இன்னும்
தியாகி கோபால், பேராசிரியர் சீனுவாசன், நாட்டாண்மை முத்தையா சேதுவராயர் என்று நிறைய நினைவில்
நிலைத்து விடுகிற பாத்திரங்கள் மிகையில்லாமல் இயல்பாய்ப் படைக்கப்பட்டு இருக்கின்றனர். நாவல் நெடுக கடலூர் மாவட்டத்தின் வட்டார வழக்கு மொழி சரளமாய்ப் பிரயோகமாகி வாசிப்புக்கு இதம் சேர்க்கிறது. இடையிடயே விரவியுள்ள சமஸ்கிருத மற்று தமிழ் இலக்கிய எடுத்துக்காட்டுகளும், மார்க்சிய சிந்தனைச்
சிதறல்களும் ஆசிரியரின் பரந்துபட்ட அனுபவ மற்றும் அறிவுஜீவித்தனத்தைக் காட்டுவதாக உள்ளன.
குறை என்று சொல்வதானால் எல்லாப் புத்தகங்களுக்கும் சொல்கிற அச்சுப்பிழை அனர்த்தம், தவிர்த்திருக்கக் கூடிய – வாசிப்பில் உறுத்துகிற சில சொல்லாக்கங்களைச் சொல்லலாம். கைக்கும் கனமான
இந்நாவலை கவனமாய் எடிட் செய்து இன்னும் இறுக்கமாகச் செய்திருக்கலாம். ஆனால் நாவலின் விறுவிறுப்
பான கதையோட்டம் காரணமாக அவை வாசகர் கவனத்தைச் சிதற விடவில்லை என்பது சாதகமான அம்சம்.
மொத்தத்தில் கவிஞர் பழமலய் சொல்கிறபடி இது ஒரு சமுதாய சீர்திருத்த நாவலல்ல – இது ஒரு இலட்சிய நாவல்! 0
நூல்: நெருப்புக்கு ஏது உறக்கம்.
ஆசிரியர்: எஸ்ஸார்சி.
வெளியீடு: அலமேலு பதிப்பகம், குறிஞ்சிப்பாடி.
விலை: ரூ.160/-
Series Navigation

Monday, January 20, 2020

paaymarakkappal -paavannan.6





6 பாவண்ணனின் பாய்மரக்கப்பல் ஓர் மீள்வாசிப்பு. 



எளிமையும் நேர்மையும் அணிகலனாய்க்கொண்ட அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை பாவண்ணனைவிட அழகாகச்சொல்ல யார் இருக்கிறார்கள்.கண்ணியமான  எழுத்துச் சித்தரிப்பின் வழி ஒரு பாத்திரத்தின் மெருகு கூட்டுதல் பாவண்ணனுக்கு இயல்பாகவே அமைந்து விடுகிறது
.விவரம் பெரிதாக ஏதும் அறியாத ஒரு உழைப்பாளியின் வாழ்க்கை எத்தனை அழகானது ஆழமானது அர்த்தமானது என்பதனை பாவண்ணனின் கண்கள் யதார்த்தமாய் நோக்குகின்றன. அதனை வாசகனுக்கு தன்பாணியில் கொண்டு தருகிறார் பாவண்ணன்.. வாசகன் ஒரு புன்னகையோடு படைப்பாளிக்கு சபாஷ் சொல்லிவிட்டு வாசித்தலைத் தொடர்கிறான்.ஓவ்வொரு படைப்புமே ஒரு செய்தியை வாசகனோடு பகிர்ந்துகொள்ள  மட்டுமே என்பதுவாய் தனது எழுத்தின் நேர்மையை நிறுவுகிறார் பாவண்ணன்.
காவ்யா தனது பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளபடி’ பாவண்ணன் தமிழ் நாவலாசிரியர்கள் வரிசையில் தனிரகம்தான். இவர் தனக்கென ஒரு பாதையைத்  தேர்ந்து  அதனில் பயணம் செய்வதை வேள்வியாகச்செய்து வருபவர்.
பாய்மரக்கப்பல் என்னும் புதினம் பாவண்ணனின் எழுத்து லட்சியத்தை  வாசகர்களோடு மிகச்சரியாய் பகிர்ந்து கொள்கிறது. எத்தனை இடர்கள் அடுக்கி வரினும்  மனித வாழ்க்கையில் சோரம் போகா எளிய மனிதர்களின் பெரு மனக்கார்ர்களின் வாழ்க்கைச்சித்திரத்தை எழுதிக்காட்டுகிறது.
‘பெரிய பாட்டாளி. முத்துசாமிக்கவுண்டர்னா ஊருக்கே தெரியும்.இந்த சொத்தெல்லாம் அந்த ஆளு சம்பாதிச்சதுதான்.தாத்தா சம்பாதிச்சதை பேரன் அழிக்கிறான்.எல்லாம் தலை எழுத்து’   நாவலில் மேஸ்திரி சித்தாளுக்கு சொல்கிற செய்தி இது. நம் எல்லோருக்கும் படைப்பாளி சொல்கிற தொடக்கச்செய்தியாகவும் இதனைப் பார்க்கலாம்  நமது .தாத்தா தலைமுறையினர். வாழ்ந்த வாழ்க்கை நமது பேர்க்குழந்தைகளுக்கு பிடிபடவில்லை.
தொண்ணூறு வயதைக்கடந்து விட்டவருக்கு உலகமே தலைகீழாக மாறிவிட்டதை உணரமுடிகிறது. அந்தப்பெரியவரைப்பற்றி ப்படைப்பாளி இப்படிச்சொல்கிறார்.
‘மண்ணின் சூட்சுமங்களை அவர் மனசு அறியும். காற்று மழையின் வரவுகளைத்துல்லியமாய் அவர் மூக்கு உணர்ந்துவிடும். இயற்கையைப்பற்றி கொண்டிருந்த ஞானம் எந்த விஞ்ஞானப்புத்தகத்திலும் சேகரிக்க முடியாத சொத்து..தெருவில் யார் நிறுத்திப் பேசினாலும் அவர் நாலு நிமிடம் பேசத்தயங்குவதில்லை. எல்லாக்குழந்தைகளையும் தலைத்தொட்டு ஆசிகள் வழங்குவார்.திருமண ஜோடிக்கு த்தாலியை முதலில் தொட்டு ஆசீர்வாதம் செய்து அவர்தான் கொடுப்பார்.விரோதம் கொள்ளும் புருஷன் மனைவியைக்கூப்பிட்டுப்பேசி ராசியாக்கி அனுப்புவார். இப்படிப்பட்ட ஒரு பெரிய மனசுக்காரரைத்தான் ஊராட்சித்தலைவராக்கிப்பார்க்க அந்த மக்கள் முயற்சிக்கிறார்கள் அவர் ஒத்துக்கொள்ளவில்லை. ஒரு தேசியக்கட்சி அவரை பாராளுமன்ற உறுப்பினராக்கிவிடலாம் எனத்தீர்மானிக்கிறது. ஆனால் தோல்வியே கண்டது. எந்தச்சபலமும் இல்லாத அவரது மன உறுதி பலரையும் வெட்கிக்கூசவைத்தது இப்படிக்கூறும் பாவண்ணன்  தாய் நாட்டுவிடுதலைக்கு ப்போராடிய கள்ளமில்லாத ஒரு தலைமுறையை நம் கண்முன்னே  காட்சிடாக்குகிறார்..
 இன்று இறைவழிபாட்டையும் அதன் வழி எழும் பூசலையும் வாக்கு வாங்கியாக மாற்றி அரியணையில் அமர்ந்திருக்க வாய்த்திருக்கிறது. வாழ்ந்துமுடித்த பெரியவர்களை நோக்கக் காலம் நம்மை எங்கேயோ கொண்டு சேர்த்து க்கேலியாய்ச்சிரிப்பதைக்காண வாய்த்திருக்கிறது.கண்கள் செய்துவிட்ட பாவம்தான் அத்தனையும்.
 பாவண்ணன் படைப்பு என்றால் ஏரி பற்றி நிச்சயமாய் சித்தரிப்பு இருக்கும்.வர்ட்ஸ்ஒர்த் என்னும் ஆங்கிலக்கவி எப்படி இயற்கையை ஆராதித்தானோ அப்படி ஏரிக்கரைகளை கண்மாய்களை நீற்றொழுக்கை ஆறுகளை மலை முகடுகளைச் சிலாகித்துச் சிலாகித்து எழுத்தில் கொண்டு வருபவர் பாவண்ணனுக்கு அவர்  பிறந்து வளர்ந்த  வளவனூரின்  ஏரி அவருக்குக் குலதெய்வமோ என்கிறபடிக்கு வாசகன் உணர்கிறான்.
’மாடுகள் மேயத்தொடங்கியதும் முத்துசாமி மரத்திலேறி ஆடுகளுக்குத்தழை பறித்துப்போடுவான்.ஆடுகளின் சிவந்த நுனி நாக்கு பார்க்க அழகாக இருக்கும்.ஓவென்று கூவியபடி ஏரியை நோக்கி ஓடும் மற்ற பிள்ளைகளோடு சேர்ந்துகொள்வான்.’  இப்படி அடுக்கிச்சொல்கிறார் பாவண்ணன். ஆடுகளின் சிவந்த நுனி நாக்கைத்தவறாமல் குறிப்பிடும் பாவண்ணன் இயற்கையை நன்றாகவே ஆராய்கிறார்.
விவசாயக்குடும்பத்தோடு நெருங்கிய படைப்பாளி என்பதை அவரின் எழுத்து வாசகனுக்கு அறிவித்துச்செல்கிறது.’ வயலில் உழவின் போது மாடுகளின் பின்னால்  ஓர் ஏரோட்டி கால்களை அகட்டி அழுந்திச்செல்லும் நடையை பாவண்ணன் சரியாக குறிப்பிடுகிறார். வளைவுகளில் கலப்பையை ஊன்றி அழுத்திக்கொண்டு மாடுகளை லாவகமாய் வளைக்கிற வித்தை பாவண்ணனுக்கு பரிச்சயமாகி இருக்கிறது. அழுத்திப்பிடித்த உள்ளங்கைகள் ரத்தம் கட்டிப்போவதும் அதற்கு மஞ்சள் அரைத்து பத்து போடுதல் வரை உள்வாங்கியிருப்பது படைப்பாளியின் சொந்த பந்தங்கள் பட்ட பாட்டை நேரில் கண்டதன் விளைவாகவும் இருத்தல் சாத்தியமே.
விவசாயிக்கு ஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும் விவசாயி என்று சொல்லிக்கொள்வதில் இருக்கிற ஆனந்தத்தைப்பற்றி ச்சொல்கிறார் பாவண்ணன். இவ்வானந்தத்தை வைத்துத்தான் அரசியல் சொக்கட்டான் ஆடுகிறது இன்றைய அரசியல்.
‘மண்ணில் தூவிய விதைமணிகள் கண்முன்னாலேயே பயிராய்மாறி நிற்கிற அழகு கண்கொள்ளாத காட்சி.அந்தப்பயிரில் இருந்து எழும் பச்சை மணம் நெஞ்சை அள்ளும்.அதன் நிறம் தெளிவு குளுமை எல்லாமே நிகரற்றவை.காற்றுடன் அது உறவு கொண்டாடிக்குழைந்து சாய்வதும் சரிவதும் நிமிர்வதும் இனிமையான நாடகம். ஒரு நடனக்காரிபோல நாலு புறமும் திரும்பிச்சுழன்று குலுங்கும் அதன் குதியாட்டத்தில் அடிமையாகும் மனம்’                     
சொல்லிக்கொண்டே போகிறார் பாவண்ணன். வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடினேன் என்பார் வடலூர் அருட்பிரகாச வள்ளலார்.விவசாயி ஒருவனுக்கும் இந்த ஆன்மீக ஞானிக்கும் ஒரு பந்தம் இல்லாமலா இப்படிப் ‘பயிர்’ என்ற சொல்லை அவர் பயன்படுத்தி இருக்கமுடியும்.
பாகப்பிரிவினை சமாச்சாரம்  குறித்து பாவண்ணன் நன்கு அலசி எழுதுகிறார். ஒரு தாயின் மூன்று மக்களில்  ஒருவன் ஒரு ஆட்டுக்குட்டி தனக்கு வேண்டும் என எத்தனை ஆவேசம் கொள்கிறான். அதனை மூன்றாக ப்பிய்த்து தரமுடியாது ஆக அது  பெற்ற அம்மாவிடம் இருக்கட்டுமே என்ர்று பஞ்சாயத்தார் முடித்து வைத்தால் அதனை ஏற்க மனம் வரவில்லயே.. நானும் காசாம்புக்கவுண்டனுக்குப்பொறந்தவந்தான் அத ஞாபகத்தில் வச்சிக்கோ’ என்கிறான்.ஆட்டை காலாலே எட்டி உதைக்கிறான். அந்த ஆட்டுக்குட்டி சின்னா பின்னப்பட்டு நிற்கிறது. அண்னன்கள் மேல் பக்தியும் பாசமும் பிள்ளைகள் மேல் அன்பும் நெருக்கமும் கொண்டிருந்த ஒருவர் அனைத்தையும் ஒரே இரவில் துறந்துவிட்டு எப்படி மாறமுடிந்தது. என்பது புரியாத புதிராக அமைகிறது.. கண்ணாறு மட்டும்தான்  எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்று ஆயா புலம்பி அழுவதை அழகாகக்குறிப்பிடுகிறார் பாவண்ணன்.
நமது பழம்பெரும் காப்பியங்கள் நமக்கு மனத்திரையில் வந்து போகின்றன. சகோதரர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ராமாயணத்தையும் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு மகாபாரதத்தையும் அசைபோட்டவர்கள் தானே நாம்.  நம் நாடு விடுதலை பெறும்போது இனக்கலவரம் வந்து லட்சக்கணக்கில் சோதரர்கள் மாய்ந்து மடிந்த சோக வரலாறு நமக்கு இருக்கத்தானே செய்கிறது. எங்கோ  ஒட்டமன் நாட்டில்  ஒரு சுல்தானுக்கு  நடந்த ஒரு விஷயத்துக்கு  இந்த மண்ணில்  ஒற்றுமையாக   கிலாஃபாத்  இயக்கம் கண்ட நமக்கு இந்தியப்பிரிவினை நிகழ்வு சாபந்தானே. கிலாஃபாத் இயக்கம்  என்னும் ஒற்றுமை விருட்சம் காப்பாற்றப்பட்டிருந்தால் இந்தியா பாகிஸ்தான் பங்ளாதேஷ் என்கிற கூறு போடுதல் நிகழ்ந்திருக்காது.  ஆயிரம் சோகங்களை மக்கள் சுமந்து கொண்டு அங்கங்கு சொந்தங்கள் வாழ்கிறார்கள். இன்று  இந்தியக்குடியுரிமைச் சட்டத்திருத்தம் வரைக்கும் வந்து அது விளங்க மறுக்கும் அவஸ்தையில் அல்லவா நாட்கள் நகர்கின்றன.

ஒரு கிழவனும் ஒரு கிழவியும் எப்படி எல்லாம் வாழ்க்கை வாழ்ந்திருந்தார்கள்.ஒருவரை ஒருவர் எப்படி புரிந்துகொண்டு காலம் சென்றது. தாம்பத்தியத்தின் கம்பீரம் எப்படி ஒரு ஆலமரம் போல் தழைத்துக்குளிர்ச்சி தந்தது என்பதைத்துல்லியமாக  குறிப்பிடுகிறார் பாவண்ணன்.
’கிழவர் பழசை எல்லாம் நினைத்து நினைத்து உருகுவதைக்கண்டு பரிதாபப்பட்டாள் நாவாம்பாள். அவர் நினைத்த திசையில் குடும்பம் செல்லவில்லை என்பது ஒரு மர்ம அடிபோல அவர் நெஞ்சில் விழுந்துவிட்டது. அத்தோல்வி தந்த நுணுக்கமான  அவமானத்தில் அவர் நெளியத்தொடங்கிவிட்டார் என்பதும் அந்த வேதனையிலிருந்து அவராகவே மீண்டுவந்தாலொழிய வேறு மீட்சி எதுவுமில்லை என்பதும் அவளுக்குத்தெரிந்தே இருந்தது..தனக்கென்று அந்த பிரத்யேகமான உலகமும் இல்லாதவள் அவள்.’ ஒரு கணவனும் மனைவியும் ஒரு உயிர் இரு உடலாக வாழ்ந்திருந்ததை நமக்கு சொல்லிச்செல்கிறார் பாவண்ணன். தன்னைக்காத்துக்கொண்டு தன்னை மணந்தானை க்காத்து இல்லறத்துக்கு பெருமைதரும் சொற்களையே பேசி சோம்பல் இல்லாதவளாக நாவாம்பாள் பாத்திரத்தைக்கொண்டு நிறுவுகிறார்   வாழ்வியல் அறம் சொன்ன திருவள்ளுவர் இப்படித்தானே இல்லறம் பேணும்  மனையாளுக்கும் வரையறை தருகிறார்.
 வளர்க்கப்படும் விலங்குகள் மனிதரோடு இணக்கமாய் வாழ்வன. அவற்றில் பசு எல்லாவற்றையும் விஞ்சியது.  வளமான ஏரியுடைய ஒரு கிராமத்து.ப்பசுக்கள் அவ்வூரின் செல்வ ஆதாரம்.. ஒரு பசுவை வைத்து ஒரு குடும்பமே தன் பசி ஆற்றிக்கொண்டு வாழ்ந்துவிடும்.அப்படிப் பசுக்கள்  காலம் காலமாய் வள்ளல்களாய் வாழ்ந்து வருபவை. பாவண்ணன் பசுவைப்பற்றி எழுதிக்கொண்டே போகிறார்.
‘’அப்பசுக்கள் வேண்டுவதெல்லாம் நிற்க ஒரு நிழலும் புல் நீட்ட ஒரு ஆதரவானகையும்தான். பசுவோ தன்னை அந்தக்கையிடமே ஒப்படைத்து விடுகிறது. அந்தக்கைக்காகத்தாய்மை அடைகிறது.அந்தக்கைகளிடமேயே தன் கன்றுகளைத்தருகிறது.அதற்காகவே சலிக்காமல் சுரந்து ஊட்டுகிறது’
உண்மையில் மனிதர்களைவிட விலங்குகள் மேலானவையாகவும் அன்பை எதிர்கொள்ளவும் அன்புக்கு வணங்கவும் தமக்குத்தெரிந்தவிதத்தில் அன்பைக்காட்டவும் தெரிந்து வைத்திருக்கின்றன. இப்படி  அவை குறித்து விளக்கம் கொடுக்கிறார் பாவண்ணன்.
பிரெஞ்சுக்காரத்துரையை நத்தி வாழும் சீத்தாராம ரெட்டியார் குறித்து அறிய விவரணைகள் தொடர்கின்றன.பிர்ஞ்சுக்காரர்கள் இந்த ப்புதுச்சேரிப்பகுதியை கைப்பற்றி ஆண்டதினால் மட்டுமே இந்த ஊரின் வளர்ச்சி விரிவு செல்வாதாரம் அத்தனையும் என்கிற கருத்தில் ரெட்டியாருக்கு அய்யமே இல்லை. இந்த ஊருக்கு நாகரீகம் எப்படி வந்தது என்ற கேள்விக்கு விடை சொல்லவேண்டுமானால் அது பிரஞ்சுக்காரர்கள் வழியேதான் வந்தது என்று சொல்லவேண்டும். இப்படி இப்படியாய்  சீத்தாராம ரெட்டியார் குண நலன் பற்றி  வாசகன் அறிய வாய்க்கிறது..அந்த ரெட்டியாரின் மகன் உள்ளூர் கவுண்டர் ஒருவரின் மகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குகிறான். அந்தபெண்ணைக் கொன்று மண்ணில் புதைத்துவிடுகிறார்கள். மண் வாய் திறக்கப்போவதுமில்லை.பெண்களின் சோகம் தீரப்போவதுமில்லை.
சனங்களின் கதை கவிதை நூல் எழுதிய கவிஞர் பழமலய்  தான் வசித்த உள்ளூரில் ரெட்டியார் ஒருவர் பண்ணையாராக இருந்தார். அவருக்கு கீழான சாதிக்காரர்கள் கல்லூரிக்கு ச்சென்று மேற்படிப்பு படித்தால் பிடிக்கவே பிடிக்காது என்கிற செய்தியை ’‘இவர்கள் வாழ்ந்தது’’ தொகுப்பில் கவனமாய்க் குறிப்பிடுவார்.
சமூக சாதிய அமைப்புக்கள் எப்படி எப்படி தன்னை நிலை நிறுத்திக்கொண்டு நகர்கின்றன என்பதைப்படம் பிடித்துக்காட்டுகிறார் பாவண்னன். மேல் தட்டு சாதியினர் பணக்காரர்களாக பண்ணையார்களாக தங்களை எப்படியாக தொடர்ந்து நடத்திக்கொள்கிறார்கள் என்பதை ச்சித்திரமாக தீட்டுகிறார். நாவலில் வரும் பார்த்தசாரதி அய்யர் வாசகனுக்கு எத்தனை கம்பீரமாகக்காட்சியாகிறார். அவரிடம் ஒரு யோசனையோ உதவியோ கேட்க வருகின்ற கீழ்த்தட்டு மக்கள் ‘கும்புடறன் சாமி கும்புடறன் சாமி’ என்று தொழுது நிற்கின்றனர். முத்துசாமியும்  அய்யரிடமிருந்து ஒரு துண்டு நிலம் வாங்கிவிட கைகளைக்கட்டிக்கொண்டு நிற்கிறான்.
‘ம்ம் என்னடா என்ன விஷயம்’
‘எந்த ஊருடா நீ’
‘என்னடா பேரு’
‘தோப்பனார் பேரு’
‘கவுண்டனா?’
‘அந்த ஊர்ல என்ன செஞ்சிண்டு இருந்தே’
’ அப்பறம் எதுக்குடா இங்க வந்த?’
‘இந்த ஊரு புடிக்கலைன்னா இன்னொரு ஊருக்குப்போவே,அப்படித்தானே?’
வினாக்கள் அடுக்காக கச்சிதமாக மேட்டுக்குடித்தனம் விரவி அய்யரிடமிருந்து வருவதை எண்ணிப்பார்க்கிறோம்..
கோர்க்காட்டிலிருந்து கட்டை வண்டி புறப்படுகிறது. வண்டியில் ரங்கசாமி.அவன் அப்பா.அம்மா .அமாசி வண்டியை ஓட்டிவருகிறான். வண்டி வளவனூர் நோக்கி பயணமாகிறது.
பிரஞ்சுக்கொடி பறக்கும் ஒரு குடிசை இடை வருகிறது. நான்கைந்து போலிசுகாரர்கள் அங்கே நிற்கிறார்கள்.அவர்கள்  அந்தக்கால கம்யூனிஸ்ட்காரர்களை தேடுகிறார்கள்..
‘யாருடா நீங்க? எங்க போறிங்க இந்த நேரத்துல’ என்கிற அவர்களின் வினாவுக்கு ரங்கசாமி பதில் சொல்கிறார்.வளவனூருக்குச் சென்று பிழைப்பு  ஏதும் தேடவிருப்பதாகச்சொல்கிறார்.
‘எவந்தான் நா காங்கிரஸ் காரன் இல்ல. கம்யுனிஸ்ட் காரன்னு சொல்லிட்டுப்போறான்.’என்று ஆரம்பிக்கிறார் போலிசுகாரர்.
சரி சரி பாஸ்போர்ட் வச்சிருக்கயா புதுச்சேரி பார்டரைத்தாண்டறதுக்கு பர்மிஷன் வச்சிருக்கயா’
புதுச்சேரி பார்டர்லேந்து இந்தியா பார்டருக்குள்ள போவனுமின்னா பாஸ்போர்ட் வேணுமின்னு தெரியாதா ஒனக்கு’
‘ஒழுங்கா உண்மையைச்சொல்லு. இல்ல முட்டிக்கு முட்டி பேத்துருவேன்.காங்கிரஸ் காரந்தானா நீ?’
‘அப்ப கம்யூனிஸ்டா?’
‘சுப்பையாவ தெரியுமா உனக்கு?’
‘தெரிஞ்சா சொல்லு சர்க்கார்ல பணம்கொடுப்பாங்க’
‘ஒழுங்கா ஒத்துக்கோ வீணா ஒதப்பட்டுச்சாவாத’
அன்றைய ந,மது மக்களின் யதார்த்த வாழ்க்கை விஷயத்தை அழகாக எடுத்துச்சொல்கிறார் பாவண்ணன். புதுச்சேரி விடுதலைக்குப்போராடிய வ.சுப்பையாவை நாட்டுப்பற்றுள்ள ஒவ்வொரு இந்தியனும் மறக்கத்தான் முடியுமா? அவர் பட்ட சிறைவாசமும் கொடுமையும் சொல்லிலடங்குமா?.கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தனது சொத்தை புச்சேரி மக்களுக்காகத்தந்த பெரிய மனதுக்காரர் .பாண்டிச்சேரியின் நேருபிர்ரன் என்றழைக்கப்பட்டவர். அவர் மனைவி சரசுவதி சுப்பையா புரட்சிக்கவிஞர் பாரதிதாசனோடு தேர்தலில் சட்டமன்ற உறுப்பினருக்கு நின்று தோற்றுப்போனார்.. இந்த மண்ணில் பொது உடமை ச்சிந்தனை சிறுத்துப்போனதில் திராவிடக்கட்சிகளுக்கும் பேராயக்கட்சியின் பிரதமர் நேருக்கும் பங்கில்லாமல் என்ன?.
அந்த காலத்திலேயே காவல் துறை ஒரு ஆட்டுக்குட்டியை லஞ்சமாகப்பெற்றுக்கொண்டு சாலைக்குக்குறுக்கே நின்ற கம்பை விலக்கிக்கொண்டு வண்டிக்கு வழி விடுகிறது. இவ்விஷயத்தை அற்புதமாகச்சொல்கிறார் படைப்பாளி.இந்த விவரணையில் படைப்பின் யதார்த்தம் வாசகனுக்கு அனுபவமாகிறது.
‘எல்லாம் ஒன்னிதா’
‘ஆமாங்க’
‘சரி சரி அத அவுத்து தூண்ல கட்டு’
என்று ஒரு ஆட்டைச்சுட்டிக்காட்டுகிறான் போலிஸ்காரன் .மனசில்லாமல் ஓர் ஆட்டைக்கும்பலிலிருந்து பிரித்துக்குடிசையின் தூணில் கட்டிவிட்டு போலிஸ்காரர்களைப்பார்த்துக்கும்பிடுகிறார் அந்த க்குறுக்குக்கம்பம் உயர்ந்து வண்டிக்கு வழிவிட்டது. அதிகாரக் கம்பம்  வழிவிட  (உயர)  மனிதன் மனிதன் தாழவேண்டிய நிலமை அன்று இன்று நாளைக்கும்தான். இங்கே .கூர்மையான அரசியல் பார்வை  படைப்பில் பீறிட்டுக்கொண்டு  நமக்குக் காட்சியாகிறது.
நதிகளைப்பற்றி விளக்கிப்பேசும்போது பாவண்னன் எழுத்தின் உச்சத்தைத்தொட்டு விடுகிறார். செடியில் விரிகின்ற   மலரின் இதழ்களென வார்த்தைகள் பிறப்பெடுக்கின்றன. அந்த ரசானுபவம் நம்மை உலுக்கிப்பார்க்கின்றது.எல்லா படைப்பாளிக்கும் இப்படி எழுத்து நளினம் வசப்பட்டுவிடும் என்று சொல்ல முடியாது.
‘ நதிகள் பகல் இரவு பார்ப்பதில்லை.வெயில் மழையைப்பொருட்படுத்துவது இல்லை. தன் போக்கில் வந்து கலந்துவிடும் எந்த களங்கத்துக்கும் அது கலங்குவதுமில்லை.களங்கங்களே தன் ஆகிருதியை மறைத்துப்போலிதோற்றம் காட்டினாலும் அவற்றின் அடியில் அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கும் அவை.. அவற்றின் எழுச்சியான தோற்றமோ பொங்குதலோ எந்த வசீகரத்தையும் புலப்படுத்துவதற்காக அல்ல.அதன் பாய்ச்சலும் ஓட்டமும் எதையும் யாருக்கும் நிரூபித்துக்காட்டுகிற துடிப்பில் உருவாகுபவையல்ல. நதிகளின் சுபாவமே அதுதான்.’ நதி என்ற சொல்லை எடுத்துவிட்டு  மேற்கண்ட வரிகளில் பாவண்ணன் என்று  நாம் மாற்றிப்போட்டுப்பார்க்கலாம். அது மிகச்சரியாகவே இருக்கும் என்பதை நான் உணர்கிறேன்.
இப்புதினத்தில் காங்கிரஸ் காத்தவராயன் என்னும் ஒரு பாத்திரத்தை வாசகர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கிறார் பாவண்ணன்.மகாத்மா காந்தி கி ஜெய் .பாரத் மாதா கி ஜெய். இரண்டு கோஷங்களும் அவருக்கு இதயத்துடிப்பு மாதிரி என்கிறார் பாவண்ணன். தன்னுடைய மனைவிக்கு ஒரு புடவை வாங்க காத்தவராயன் விழுப்புரம் நகருக்கு  வருகிறார். புடவைக்குப்பணம் அவளே சம்பாதித்துக்கொடுத்தது.அவள் வயிற்றில் ஒரு குழந்தையும் உருவாகி இருக்கிறது. காத்தவராயனின் தாய் அந்த பிள்ளைத்தாய்ச்சியின்  புடவைஆசையை. பூர்த்தி செய்து வைக்க த்தன் மகனைப்பணிக்கிறார். விழுப்புரம் ரயில் நிலயத்திலோ பெருங்கூட்டம். மறு நாள் சென்னையில் மறியல் போராட்டம். வெள்ளையனே வெளியேறு என்பது மட்டுமே பிரதான கோஷம். அந்தக்கூட்டத்தைக்கண்ட காத்தவராயன் சென்னைக்கு ரயில் ஏறிவிடுகிறார். கைதாகிறார். ஜபல்பூருக்கு அழைத்துச்செல்லப்படுகிறார். மூன்றாண்டுகளுக்குமேலாக சிறைவாசம். திரும்பி ஒரு நாள் காச நோயாளியாக வளவனூர் திரும்புகிறார். அவரை மனைவிக்கே அடையாளம் தெரியாமல் இருக்கிறது. உருவமே சிதைந்து போய் காட்சி தருகிறார். அவரின் தாய் இறந்துபோய் வெகு காலமாகிவிட்டது. அவள் மனைவி சுமந்திருந்த வயிற்றுக்குழந்தைக்கு  இப்போது மூன்றரை வயதாகிறது.
காங்கிரஸ் கட்சி  ஜவுளிக்கடை நாயுடுவுக்கும், நகைக்கடை முதலியாருக்கும், மருந்துக்கடை சேட்டுக்கும் வருநாளில் சொந்தமாகிப்போனது. காங்கிரஸ் காத்தவராயன்கள் அவர்கள் தயவில் வாழப்பழகிக்கொண்டார்கள். சுதந்திரம் வந்த பிறகு  காத்தவராயனுக்கு தியாகி என்ற பட்டத்தைக்கொடுத்தார்கள்.  வாழும் ஊரைத்தாண்டி எங்கோ ஒரு ஏக்கர் நிலம் இனாமாகத்தந்தார்கள்.  அவ்வயலில் முதல் மகசூல்காணும்போதே மகாத்மா கொல்லப்படுகிறார். காத்தவராயன் மூன்று நாட்கள் உணவருந்தாமல் திக்கித்திணறிப்போகிறார். இரண்டாம் மகசூல் பார்த்த அவர் மூன்றாம் மகசூலுக்கு இறந்தே போகிறார். இப்படி  எழுதிச்செல்லும் பாவண்ணன் சமுதாயத்தின் மீது எத்தனை ஆழமான விமரிசனத்தை எழுத்தில் தந்திருக்கிறார். ஏழைப்பங்காளர்கள் காமராஜுக்கும் கக்கனுக்கும் இன்று எங்கே போவது நாம்.
காங்கிரஸ் காத்தவராயனுக்குப்பிறந்த குழந்தைக்குத்தாண்டவராயன் என்ற பெயரை அவன் மனைவி சூட்டியிருந்தாள். சிவகாமி அப்படி வைத்த பெயரைத்தான் காத்தவராயன் ‘சத்யசீலன் என்று மாற்றி வைத்தார்.அவருக்குத்தன் மகன் மகாத்மாகாந்தி போல் வரவேண்டும் என்கிற ஆசை.
விதி வேறுவிதமாக இருந்தது. அந்த சத்யசீலனோ சினிமாவில் சண்டை போடும் ஸ்டண்ட் மாஸ்டரானான். ஒரு சண்டைக்காட்சியை ப்படமாக்கும் சமயம்  அவன் கொடுத்த அடி எக்கு தப்பாகிப்போனது. ரஜினியின் மூக்கு கிழிந்து ரத்தம் வழிந்தது. அது ரஜினியின் தவறுதான் என்பதை சத்யசீலன் அழகாகப்பேசுகிறான் இன்றைய  பிடிபடாத அரசியல் சூழலில் அந்தப்பெயர் தாங்கிய நடிகரை எங்கோ உச்சியில் கொண்டு போய்வைத்துவிட்டு இந்தத் தமிழ்ச்சமூகம் காத்துக்கிடக்கிறது என்பது வேறுகதை.
துரைசாமியின் சாராய வியாபாரம் அதனில் குடுமியான்குப்பத்துக்காரனின் சரக்கு கலந்திருப்பது என்று புதினம் நகர்கிறது. சரக்கு கலந்த  அச்சாராயம் குடித்த நால்வரின் மரணம் துரைசாமியை உலுக்கி எடுக்கிறது. எதிர்க்கட்சிக்காரர்கள் இதனைச்சாக்காகவைத்து நிகழ்த்தும் போராட்டங்கள்.தொடர்கின்றன. கட்சி அரசியலில்  பெரிய புள்ளிக்கு இந்த விஷயம் எட்டினால் துரைசாமி நிலமை பூஜ்ஜியமாகிவிடும்.துரைசாமி திணறிப்போகிறான். தனது அப்பாவையும் தனது தாத்தாவையும்  துரைசாமி நினைத்துப்பார்க்கிறான். பாவண்ணன் இங்கே விவசாயிக்காக தன் எழுத்தை ப்பயன்படுத்துகிறார்.அற்புதமான ஓர் இடம் இது .இந்த பாவண்ணன் வேறு எங்கே தேடினும் கிடைக்கமாட்டார்தான். தன் குருதியோடு ஒன்றாகிப்போன ஒரு தொழில் பற்றி எழுதும் தருணம் அல்லவா இது.
‘வெறும் நிலத்துக்காகவே தம் வாழ் நாளை ஒப்படைத்துக்கொண்ட விவசாயிகள் அவர்கள்.பயிரிடுவதைத்தவிர எந்த ஞானமும் இல்லாதவர்கள்.தன் செல்வத்தைத்தானே அறியாத அஞ்ஞானிகள்.’ சமீபத்தில் புது டில்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய தொடர் போராட்டம் மனக்கண் முன் வந்து போகிறது.  அதனை த்தவிர்க்கமுடியவில்லை. உழைப்பாளியை ஒரு விவசாயியை அவமானப்படுத்திய பெரும்பதவிக்காரர்களை யாரேனும் மன்னிக்கத்தான் முடியுமா.சுழன்றும் ஏற்பின்னது உலகம் என்பதை ஒரு முறை சொல்லிப்பார்க்கிறோம். அவ்வளவே.
புதினத்தின் இறுதிப்பகுதியில் ஒரு முனிவரின் கதை வருகிறது. முனிவருக்கு ஐந்து பெண்மக்கள் ஐந்து ஆண் மக்கள். காடுகளில் திரிந்து பழங்கள்  விறகுகள் சேகரித்த ப்பெண்களை ராஜகுமாரன் கண்டு ஆசை கொள்கிறான். முனிவர் அவனிடம் இந்த ஆசை நிறைவேறாது என்று அடித்துச்சொல்கிறார். அவனை ஆண்மக்கள் ஐவரும் காட்டைவிட்டு அப்புறப்படுத்துகின்றனர். அர்சனுக்கு இந்த விஷயம் எட்ட அவர் முனிவரோடு பெண்கேட்டுப்பேசிப்பார்க்கிறார். முனிவர் முடியவே முடியாது என்று மறுத்துவிடுகிறார்.அரசன் முனிவரை சிறையிலடைக்க உத்தரவிட்டான். முனிவன் சிறைப்பட்டால் அவரின் பெண்கள் தன் வசம்தானே என அரசன் தப்புக்கணக்குப்போட்டான். முனிவரின் மந்திரத்தால் பெண்கள் ஐவரும் ஐந்து  பசுக்களானார்கள். ஆண்கள் ஐவரும் காளைகள் ஆனார்கள். ராஜா மனம் திருந்தவில்லை. முனிவரைச்சித்திரவதைப்படுத்தி மீண்டும் செபித்து அவர்களை ஆண்களும் பெண்களுமாக  மாற்ற  நிர்பந்தித்தான். முனிவர் மறுத்தார். மரணித்தார்.அதிலிருந்து அந்த பசுக்களையும் காளைகளையும் இன்னும் யாராலும் மீட்டு எடுத்து மனிதர்களாக்கமுடியவில்லை. அவை மிரள மிரள விழித்துக்கொண்டு நம்மைப்பார்ப்பதற்கு இதுவே காரண விஷயம்.  ஆக ஒவ்வொரு பசுவும் விமோசன மந்திரத்துக்குக்காத்திருக்கும் ஒரு பெண் என்பார்கள் என்று முடிக்கிறார் பாவண்ணன்.
ஆறுமுகம் நிலைகுலைந்து போய் நிற்கிறான். கிழவரோ அவனோடு கிடந்து போராடிப்பார்க்கிறார். அப்போது பசுக்களிடையே வரும் கிழவர் சொல்லும் அழகான கதை. தான் மேலே சொல்லப்பட்டது. ஒரு ஷேக்ஸ்பியரின் கிங்லியருக்கு இணையாக மன அசை போடும் ஒரு பாத்திரமாக அமையும்  இந்தக்கிழவரோ வாசக நெஞ்சங்களைத்தொட்டுவிடுகிறார்.
தென்னங்கன்றுகள் மனிதர்களை விட பண்பு நலன் கொண்டவை. அவைகளை நடுவதில் கிழவர் நிறைவு எய்துகிறார்.
’‘இனிமே இதுதான் புள்ள பேரன் பேத்தி’ என்று சொல்லும் கிழவரின் செய்தியே. சமுதாயத்தின் மீது வைக்கப்படும் விமரிசனமாக வாசகன் தெரிவு செய்யலாம். அமைந்து நிற்கும் இயற்கைச்சூழலை த்தேர்ந்த அறிவோடு பயன்படுத்திக்கொள்ளத்தவறிவிட்ட மனிதர்கள் பற்றிப்பேசுகின்றது பாய்மரக்கப்பல்.
பாவண்ணனின் வெற்றிப்படைப்பு இப்புதினம்..


















.