Tuesday, October 31, 2023

கவிதை -தேவர்மகான்

 


 கவிதை- தேவர் மகான்


சாதிமதம் கடந்த மகான்

தேவர் முத்துராமலிங்கரைப் போற்றுவோம்

தெய்வீகத்தையும் தேசத்தையும்

தன்னிருகண்களாகக் கொண்டாடிய

ஆழம் கூடிய  அற்புதம்

உணவால் சைவத்துக்கு மாறிய

அகவினத்தார்

வள்ளல் இராமலிங்கரை

ஆராதித்த  பெருமகன்

நேதாஜிக்குத் தமிழ் மண்ணில்

வீரர்களைத்திரட்டிய

தேசபக்தர்

மதுரை மீனாட்சி ஆலயத்தில்

அரிசனங்கள் பிரவேசிக்க 

முன்  கை எடுத்த

வைத்யநாதாய்யருக்கு  அரண்

தேசப்பிரிவினையின் போது

தமிழக இசுலாமியர்

நம்மோடு இருப்பர்

உரக்கக்குரல் கொடுத்த  நேர்மையாளர்

மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட

இந்தியப்பாராளுமன்ற உறுப்பினர்

நம்ப முடிகிறதா  உங்களால்.

தேவருக்குச்சரியானதொரு

அரசியல் வாரிசுக்கு

எத்தனைக் காலமாய்த்

தவம் கிடக்கிறது தமிழகம்.

-----------------------------------------------------------------------------------------------



Monday, October 30, 2023

கவிதை -எதிர் வீடு

 


 கவிதை -எதிர் வீடு  


எதிர் வீடு 

பூட்டிக்கிடந்தது

வாடகைக்கு யாரும் வரவில்லை

நாய்களும் பூனைகளும்

இணங்கிப்பிணங்கி உறங்கின

நேற்று எதுவோ ஒரு குடும்பம்

லாரிச்சாமான்களோடு

அந்த வீட்டிற்குள் புகுந்தது

வீட்டு ஓனருக்கும் நிம்மதி

மழைச்சற்றுக்கூடுதல் ஆனால்

வீதித்தண்ணீர் உள்ளே வரும்

நமக்கேன் பொல்லாப்பு

நான் ஒன்றும் சொல்லவில்லை

வாடகைக்கு வீடென்று

ஊரெல்லாம் சுற்றி

கடைசியாய்க்கிடைத்த வீடு

போதுமென அவர்கள் வருகை

நாய்களும் பூனைகளும்

நடுத்தெருவில் சீற்றத்துடன்

அழவும் செய்தன

அறிவுஜீவிப் பாம்பொன்று

அழைத்தது அவைகளை

அமைதியாய்ச்சொன்னது

‘சும்மா கிடக்காது

கட்டிய வீடு

மனிதர்கள் குடி புக வேண்டும்

மனிதர் வர மாடு வரும் ஆடு வரும்

அரிசி வரும் பருப்பு வரும்

எலிகள் வரும் பூனைக்காகும்

கழிவு நீர் தேங்கும் தவளை வரும்

பாம்புக்காகும்

சோறு மீதப்படும் உணவாகும் நாயிக்கே

சூழல் நின்னை ஆள்வதா

சூழலை நீ ஆள்வதா

உபதேசித்த பாம்பு நழுவிப்போயிற்று புற்றுக்குள்

நாய்களும் பூனைகளும்

பிரமித்துப்போய்.

ஒன்றையொன்று பார்த்துக்கொண்டன

                                                                   

Saturday, October 28, 2023

கவிதை- இணையக்கால கவிதை

 

இணையக்காலகவிதை                               28/10/2023


எத்தனை சவுகரியம்

இணையக்கால கவியரங்கம்

சீவி சிங்காரித்துக்

கொள்ளவேண்டாம்

அழுக்குச்சட்டையை மாற்ற வேண்டாம்

சுவாமிக்கு உண்டியலில்

போடுகிற மாதிரி

விருட்சம் உண்டியலில்

போட்டுவிட்டுப்போகலாம

எல்லார்  கவிதையையும்

கேட்க வாய்ப்பு

கவிதை விமரிசனங்கள்

ஏனோ தானோ என்றில்லை

நச்சென்றுதான்

காற்றோடு போய்விடுமோ

நாம் வாசித்த கவிதை

என்ற கவலை மட்டுமேயுண்டு.



Friday, October 27, 2023

 

கவிதை- துப்பாக்கி                           இணையக்கால கவியரங்கு  28/10/23


வெள்ளையோ கருப்போ மாநிறமோ

அமெரிக்காவில் அன்றாடம்

நூற்றி இருபது பேருக்குமேல்

துப்பாக்கியால் சுடப்பட்டு

செத்துப்போகிறார்கள்

அவர்கள் அரசாங்கம் தரும் கணக்கு

உப்பு புளி மிளகாய்போல்

துப்பாக்கியை வாங்கலாம் அமெரிக்காவில்

துப்பாக்கிக்குத்தடை விதித்தாலென்ன

கேட்கிறாய் நீ

அதெப்படி சாத்தியம்

துப்பாகித்தயாரிக்கும் முதலாளிதானே

அமெரிக்க நாடாளுமன்றத்தின்

தூணும் அஸ்திவாரமும்.

 


Thursday, October 26, 2023

கவிதை- அறம்செயவிரும்பு

 


கவிதை- அறம் செய விரும்பு     ( இணையக்கால கவியரங்கு  26/10/23)


அனாதை இல்லம்

நிச்சயம் உதவி 

செய்யவேண்டும்

என்று போனால்

அப்படி ஒன்றும் உங்களை

வா வா என்றழைத்து

நாற்காலி போடமாட்டார்கள்

கொடுங்கள் வாங்கிக்கொள்கிறோம்

என்கிறார்கள் வேண்டா வெறுப்பாய்

அதற்குமேல் ஒன்றுமில்லை

கொடுத்த தொகைக்குச்

சரியான ரசீது பெறுவதற்குள்

போதும் போதும் என்றாகிறது

தருமம் செய்வது ஒன்றும் எளிதன்று

நாம் நினைப்பது போல்

இல்லாத பத்து பேருக்கு

சோறு பிசைந்து போட்டாலும்

அரசாங்கத்துக்குப்

பதில் சொல்லியாகணும்

ஏன் எதற்கு எப்படி எங்கே என்று

அடுக்கடுக்காய் வினா வுண்டு

அவ்வைப்பாட்டி  சொன்னது முற்றிலும் சரி

அறம் செய விரும்பு.





Wednesday, October 25, 2023

இணையக்கால கவியரங்கக் கவிதைகள் சில

 


 கவிதை -சிறைக்கைதிகள் 18/10/2023 இணையகாலக்கவியரங்கில் வாசித்தது.


சிறையில் இருப்பவர்கள் 

எல்லோருமா குற்றவாளிகள்

இல்லவே இல்லை

சிறைவாசிகளில் பாதிக்குமேல்

விசாரணைக்கைதிகள்

விசாரணை முடிவதற்குள்

பாதிவாழ்க்கைப் பைசலாகிவிடும்

கருப்புத்துணியால் கண்களைக்கட்டியபடியே

நீதிக்கடவுள்

கொலையே செய்யாதவனைக்

கொலையாளி ஆக்கலாம்

ஆயுள் கைதியாகி

வாலும் தோலுமாய் அவன்  வெளிவரலாம் ஓர்நாள்

ராக்கெட் விஞ்ஞானி

நம்பி நாராயணனை

பாகிஸ்தானுக்கு உளவாளியென

கேவலப்படுத்தியக் கீழ்மைக்கு

கங்கையில் மூழ்கிட்டாலும்

பாவம் தொலையுமா?

----------------------------


பொது நியாயம்                                19/10/23  இணையக்கால கவியரங்கு.


யாரேனும் ஒரு கன்னத்தில் அறைந்தால்

நீ மறு கன்னத்தையும் காட்டு

சொல்லிவிட்டுச் சிலுவைக்குச்

சென்றார் இயேசு

வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடினேன்

வருந்தினார் அருளாளர் இராமலிங்கர்

வள்ளலுக்குப்பின்னர்

வாடிய பயிருக்கு

யாரேனும் வாடினாரா என்ன

காவிரியில் தண்ணீர் விடாதே

அதற்கு ஒரு பந்த் கரந்நடகாவில்

காவிரியில் தண்ணீர் திறந்துவிடு

அதற்குக்கடை அடைப்பு தமிழ் மண்ணில்

உச்சநீதிமன்றம் உண்டு

காவிரி நீர் ஒழுங்காற்றுக்கமிட்டி உண்டு

எல்லாம்தான் உண்டு

யார் சொல்வதையும் யாரும் கேட்பதில்லை

பொதுவாய் நியாயம் சொல்ல ஆளும் இல்லை

கேட்க இங்கு மனிதர்களும் இல்லை..

----------------------


கல்விக்கூடம்                                                    இணைக்கவியரங்கு  20/10/23


எந்தக்கல்விகூடமும்

மாணவர்கள் பெற்றிட்ட

மதிப்பெண்ணையும் ராங்கையும்

பற்றித்தான் விளம்பரம் செய்கின்றன

நல்ல மாணாக்கர்களை

உயரிய சமூகத்தைப் படைப்பதில்

கல்விக்கூடங்கள் தம் பங்கு பற்றி

வாய் திறப்பதே இல்லை.

நோட்டுப்புத்தகம் ஆய்வகம் கணினி

யூனிஃபார்ம் கேண்டின் ஆஸ்டல் பேருந்து வசதியென

எல்லாவழியிலும் கொட்டுகிறது பணம்

பணிக்கு வரும் ஆசிரியர்களைச்சுரண்டி

பெற்றோர்களைக் கொள்ளையாய்ச் சுரண்டி

கொழுக்கின்றது கல்வி  வணிகம்

உயர்கல்வி நிறுவனங்களின்

எண்ணிக்கை அதிகம் தமிழ் மண்ணில்

அள்ளிக்கொள்ளலாம் பணம்

கல்வி ஒரு தொழில்

கலைமகளோ கார்ப்பரேட்கள்  முன்

கைகட்டி வாய் பொத்தி.

----------------------


மனிதன் அப்படித்தான்                                இணையக்கால கவியரங்கு   21/10/23


லஞ்சம் அழகு தமிழில் கையூட்டு

மறைவதே இல்லை அது

எத்தனை பேர் பிடிபட்டால் என்ன

வாழ்க்கையே மொத்தமாய்

பூச்சியமானால் என்ன

லஞ்சம் எங்கும் என்றும்

சிரஞ்சீவிதான்

அறிவீரோ லஞ்ச ஒழிப்புத்துறை

எது வந்தால் என்ன

நீதிமன்றங்கள் ஆயிரம் குட்டினால் என்ன

நீதிபதிகளே பதவி ஓய்வுக்குப்பின்னே

நியமன நாடாளுமன்ற உறுப்பினராம்

எத்தனை அவலம்

பிறப்பும் இறப்பும்

மனிதன் கையில் இல்லை

லஞ்சம் அங்கு மட்டுமே

கதவு தட்டுவதில்லை.

---------------------------------------------












 



 கவிதை- பட்டாசு வெடிக்காதீர்       (25/10/2023)  இணையக்கால கவியரங்கு


பட்டாசு வெடிக்காதீர்

சின்னச்சின்ன மத்தாப்புக்கள் போதும்

கேள்விப்படும்

பட்டாசு ஆலைச் சாவுகள்

எத்தனைக்கோரம்

இதயம் பிழியும் சோகமோ 

தொடர்கதையாய்.

வயிற்றுப்பசிக்குச்சோறு வேண்டுமென

ஆலைக்கு வந்த

சின்னஞ்சிறுசுகள்

சிதறுண்டு போகின்றன

வெடித்தல் கிளப்பும்

காற்று மாசு அறிவோமா

சர வெடியின் ஒலிக்கொடூரம்

உடல் நலிந்தோறும் சின்னஞ்சிறு குழவிகளும்

படும் துயரம் உணரோமா

இப்படியும் வேண்டுமா

நமக்குத்தப்பான மகிழ்ச்சி

மனசாட்சி உள்ளவர்கள்

மறுபடியும் யோசியுங்கள்

பட்டாசு வாங்காதீர்.



Tuesday, October 24, 2023

கவிதை -வீட்டுச்சிறை

 

வீட்டுச்சிறை   ( இணைய கால கவியரங்கம்  22-10-23) விருட்சம்

 

மண் சுவர் ஓட்டுவீடு தாத்தாவுக்கு

ஓடுமாற்றி ஒட்டடை அடித்து

கூட்டிப்பெருக்கி குப்பையை அள்ளினால்

போதும் போதும் என்றானது

இரட்டை புளிய மரங்கள் மகசூலை

மணியம் செய்தாள் பாட்டி

தாத்தா காலமானார்

பாட்டியையும் கூட்டிக்கொண்டார்

செங்காவியும் சுண்ணாம்பும்  என்றோ அடித்த

வீட்டுத்திண்ணையில் சாராயம் குடித்துவிட்டு

சீட்டாடினர் ஊர் மக்கள்

தாத்தாவீட்டை அடிமாட்டு விலைக்குப்பேசி

மாநகரில் இடம் வாங்கிய அப்பா

வங்கிக்கடன் பெற்று

வீடென்று கட்டிக்குடிவந்தார்.

சதா இருமி இருமி இருப்பை அறிவிக்கும் அம்மாவோடு

அப்பா நொண்டி அடித்தபடி இன்று.

பெற்ற பையனுக்கும் மருமகளுக்கும்

கலிபோர்னியாவில் வேலை

அட்டைச்சுவர் கட்டைத்தரை

ஆகாயத்தில் வாங்கிய அபார்ட்மெண்டுக்காய்

விடுப்பே இல்லா அடிமை வேலை ராப்பகலாய்

அவனுக்கும் ஒரு பிள்ளை

அமெரிக்காவில்  பள்ளி போகிறான் இன்று

அவன் எங்கே  வீடு வாங்கி

எப்படிக்கழிப்பானோ காலத்தை.

 

 

 

Saturday, October 21, 2023

 

 

 கோவி. ஜெயராமனின்   ’சனாதன மறுப்பாளர் வள்ளலார்’  என்னும் நூல்  குறித்துச் சில பகிர்வுகள்                                                                      -எஸ்ஸார்சி

 

கோவி.ஜெயராமன் இயல்பாய் நல்ல கவிஞர் மார்க்சியவாதி. தொலைபேசித்துறையில்   அகில இந்திய அளவிலே தொழிற்சங்கத்தலைவர்.வடலூர் வள்ளல் ராமலிங்கர் பால் அளவிலா ஈடுபாடு கொண்டவர்.வடலூர் மண்ணில் வாழ்ந்து வள்ளலின் கருத்துக்களை உள்வாங்கிய  கொடுப்பினைக்காரர்.  அருள் வள்ளல்  ராமலிங்கரர் குறித்து  அனேக நூல்கள் எழுதியுள்ளார்.

 ’சனாதன மறுப்பாளர் வள்ளலார்’ என்னும் இந்த நூல் அணமையில் வெளிவந்தது. தாமரை இலக்கிய இதழ் ஆசிரியரும் இந்தியப்பொதுவுடமைக்கட்சியின் மூத்த தலைவருமான தோழர். சி .மகேந்திரன் இந்த நூலை வடலூரிலேயே வெளியிட்டதும்( 14/10/2023) குறிப்பிடப்படவேண்டும்.

சமீபமாய் வடலூர் இராமலிங்கர் குறித்து ‘வள்ளலார் சனாதனத்தின் உச்சம்’ என்று ஒரு பெரிய மனிதர் வடலூரில் பேசிவிட்டுச்சென்றதைக் கணக்கில் கொண்டு இந்த நூலை எழுதியதாக கோவி. ஜெயராமன் தனது என்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

சாதிய நஞ்சுக்கு எதிராகவும் சமயப்பிணக்குகளுக்கு எதிராகவும் ஜீவ காருண்யத்திற்கு ஆதரவாகவும் ஆன்ம நேய ஒருமைப்பாட்டைத்தூக்கிப்பிடித்தும் கவிதைகள் தந்தவர் இராமலிங்கர். அனைத்தும் எளிய நடையிலே  யாவருக்கும் விளங்கும் வகையிலே வெளிப்பட்ட கவிதைகள். ஒரு வகையில் மாகவி பாரதியாருக்கு  வடலூர்  வள்ளல் இராமலிங்கர் முன்னோடி என்று கூறமுடியும்.

இந்த நூலுக்கு எழுத்தாளர் பன்முக ஆளுமை  கடலூர் வளவ.துரையன் பொருத்தமானதொரு அணிந்துரை வழங்கிப்பெருமை சேர்த்துள்ளார்.

’சனாதனம் கூறும் சடங்குகளை வள்ளலார் வெறுத்ததையும், அவர் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்துக்குரல் கொடுத்ததையும் இந்நூல் விரிவாகப்பேசுகிறது’ என்று வளவ.துரையன் அணிந்துரையில் குறிப்பிடுகிறார்.

இந்நூல் ஆரியமும் சனாதனமும், வேதாந்தம் சைவ சித்தாந்தம், தமிழ் மரபில் சன்மார்க்கம், வள்ளலார் முதல் நிலை வழிபாடு, அருட்சோதி வழிபாடு இறுதிநிலை, வள்ளலார் கண்ட சன்மார்க்கம், மதம் சமயம், சாதி, சமூகப்பொருளாதாரப்பார்வை, சிதம்பரம், வள்ளலார் கண்ட நிறுவனங்கள், வள்ளலார் மறைவும் மறைவுக்குப்பின்பும், திருவருட்பா பாடல்கள் சில என்று பல்வேறு தளங்களில் வள்ளலார் பயணித்தத்  தடங்கள் குறித்து விரிவாகப்பேசுகிறது.

பிறப்பால் மனிதருக்குள் பேதம் கற்பிப்பதை நூலாசிரியர் கோவி.ஜெயராமன் கடுமையாகச்சாடுகிறார். அதனை அதர்மம் என்கிறார்.சமூக வேறுபாடுகளை வளர்த்தும் அவற்றை மைய்யப்படுத்தியும் உணவு உடை உறையுள் வாழ்வியல் இவற்றின் பேரால் மேல் நிலை கீழ் நிலை என்று உருவாக்கப்படுவதை ஒரு போதும் ஏற்க முடியாது என்கிறார்.

கோவி.ஜெயராமனின்  தமிழ் மரபில் சன்மார்க்கம் என்னும் கட்டுரை மிகச்சிறப்பாக காணப்படுகிறது. சைவ சமயத்து  அறுபத்து மூன்று நாயன்மார்களைச் சாதிவாரியாகக் கணக்குத்தருகிறார். அந்தணர் 12 அரசர் 12 வணிகர் 6 வேளாளர் 13 ஆதிசைவர் 4, குயவர், சான்றார்,வேடர்,இடையர்,பறையர்,வண்ணார், மாமாத்திரர்,பரதவர், சாலியர், பாணர், என்கிற மரபில் ஒவ்வொருவர், மரபு  அறியப்படாதவர் 6  ஆக அறுபத்து மூவர்.

ஆழ்வார்களில் திருப்பாணாழ்வார் என்னும் தாழ்த்தப்பட்ட குலத்துப் பாணரை தோளில் சுமந்து  தன் சந்நிதிக்கு  அழைத்து வருமாறு அந்தணர் லோகசாரங்கருக்குத்  திருவரங்கன் கட்டளையிட்டதாகவும்  அவரும் அப்படியே செய்த வரலாற்றையும் பதிவு செய்துள்ளார்.

நாயன்மார்கள் ஆழ்வார்களின் விக்கிரகங்கள்  சைவ வைணவ திருக்கோயில்களில் இன்றும் சாதி பேதமின்றி  வழிபாட்டில் உள்ளன என்பதை எழுத்து  நேர்மையோடு குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.

சங்கப்புலவர்களின் சான்றாண்மையை ஆதாரங்களோடு குறிப்பிட்டு இப்புத்தகம் தமிழ் மரபு பற்றி உயர்த்திப்பேசுகிறது.

முப்பத்து ஐந்து வயது வரை முருகப்பெருமான்,தியாகப்பெருமான்,துலுக்காணத்து அம்மன், வடிவுடையம்மன் என பற்பல தெய்வங்களை உருவ வழிபாடு செய்துவந்தவர் வள்ளலார்.  தில்லைமீது நாட்டம் கொண்டது உருவ வழிபாட்டிலிருந்து அருவுருவ வழிபாட்டை நோக்கி  முன்னெடுத்த அடுத்தகட்டமாகவே பார்க்கத்தோன்றுகிறது. சிதம்பரம் ஆகாயத்தலம் அங்கே சிதம்பரம் ரகசியம் என்கிற  வழிபாடு இன்றளவும்  நடைபெறுதலையும் வாசகர்க்குச்சொல்கிறார் ஜெயராமன்.

வள்ளலார் மரபு என்னும் கட்டுரை  இராமலிங்கரை தொழுவூர் வேலாயுத முதலியார் வள்ளலார் என்கிற பட்டப்பெயர் இட்டு அழைத்ததையும்  அதுவே வரலாற்றில்  பின்னர் நிலைத்துப்போனதையும் பற்றிப்பேசுகிறது.

பெண்களையும் ஆண்களையும்  உயர்த்திப்பிடித்து உலகுக்கு அறிவித்த வள்ளலார் எப்படி சனாதனி ஆக முடியும் என்று வினா வைக்கிறார் நூலாசிரியர். பெண்களை இழிவு படுத்தும் சனாதனத்துக்கு மாற்றடி  கொடுத்த வள்ளலார் ஒரு சன்மார்க்கி ஆவார் என்று  முடிவு சொல்கிறார்.

மதம் சமயம் சாதி என்னும் கட்டுரை வள்ளார் இவைகளை எப்படி வெறுத்து ஒதுக்கினார் என்பது பற்றிப்பேசுகிறது.

‘நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா

நவின்ற கலைச்சரிதமெலாம் பிள்ளை விளையாட்டே

மேல்வருணம் தோல்வருணம்

கண்டறிவார் இலை’                                                               ( 4174)

‘சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே

சாத்திரச்சந்தடிகளிலே  கோத்திரச்சண்டையிலே

ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்

அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே      ( 5566)

சாதி மதம் குலம் ஆச்சாரம்  வெறுத்து ஒதுக்கிய வள்ளலாரின்  பொறுத்தமான  அற்புத பாடல்  வரிகளை வரிசையாக அடுக்கிச்செல்கிறார் நூலாசிரியர்.

கண்முன்னே நிகழும் கொடுங்கோல்  வெள்ளைய அரசுக்கு எதிராகக்குரல் கொடுக்கும் வள்ளலாரை நமக்குக்காட்டிச் செல்கிறார் ஜெயராமன்.

‘உரங்காணும் அரசியற்கோல் கொடுங்கோல் ஆனால்

ஓடி எங்கே புகுவது எவருக்கு உரைப்பதம்மா’                   ( 2808)

 

பட்டினிக்கிடப்பாரைப் பார்க்கவும்நேரீர்

பழங்கஞ்சியாயினும் வழங்கவும் நினையீர்                          (5561)

‘கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக

அருள் நயந்த நன்மார்க்கர்  ஆள்க                                             (5618)

 வருணாச்சிரம மயக்கம்,  சமயம் மதம் எனும் பேதமை, ஆச்சார கொதிப்பு வேதாகமக்கூச்சல் , கொலை களவு புலை இவை அனைத்தும் நீங்கும் ஓர்நாள்.

அந்தத்தருணம் நல்ல தருணம். அருள் செய்ய ஏற்ற தருணம் என்கிறார் அருட்ஜோதி இராமலிங்கர்.

 அந்தத் தருணத்தை நோக்கிப்பயணிக்க  எளிய  மக்களை  சாதாரணர்களை  வள்ளல் இராமலிங்கர்  அன்போடு  அழைக்கிறார்.

அது எல்லார்க்கும் எல்லாம் என்கிற பொதுவுடமை.  அதுவே  எல்லோருக்கும்  ஏற்ற நல்வாழ்வு  நிறைவாழ்வு.  வள்ளல் இராமலிங்கர்  விழைவது  அன்பு வழி  அற வழி  அருள் வழி.

வாழ்த்துக்கள் கோவி. ஜெயராமனுக்கு.

 

 

 

 

Thursday, October 12, 2023

 

 

’ஏகம் சத் ’    கதை                                                                                                                       

 

எனக்கு வில்லியம் என்றொரு நண்பன் இருந்தான். அவனும் நானும் ஒன்றாகக்கல்லூரியில் பட்டவகுப்பு படித்தோம். நான் பட்ட வகுப்போடு அஞ்சல் இலாகாவில் வேலைக்குச்சேர்ந்தேன். அவன் முதுகலை பயின்றான்.  தேர்வுகள் சில எழுதினான். நாங்கள் படித்த கல்லூரியிலேயே ஆசிரியராக  வேலையில் சேர்ந்தான். எங்கள் நட்பு எப்போதும் ஒன்று போலவே இருந்தது.  அடிக்கடி  நாங்கள் சந்திப்போம். ஏதேனும் சுவாரசியமாய்ப் பேசிக்கொண்டிருப்போம். கிரிக்கெட்டில் ஆரம்பித்து உலக நடப்புக்கள் எதையும் விடமாட்டோம்.  நாங்கள் மாறி மாறி விவாதம் செய்வோம். எனக்குத்தெரிந்ததை அவனுக்குச்சொல்வேன். அவனுக்குத் தெரிந்ததை அவன் எனக்குச்சொல்வான்.

ஒருநாள் மாலை  சோகமாய் வந்திருந்தான். வழக்கமாக  நாங்கள் தருமங்குடிக்கு மய்யமாய்  நிற்கும் பெரிய அரச மரத்தடியில்தான் பேசிக்கொண்டிருப்போம். அந்த மரத்தின் கீழ் இரண்டு சிமெண்ட் பெஞ்சுகள் போடப்பாட்டிருக்கும். அதனில்தான் அமர்ந்திருப்போம்.

‘ஏன் ரொம்ப டல்லா இருக்கே’

‘மனசு சரியில்லைடா’ வில்லியம் சொன்னான்.

‘ஏன் என்ன ஆச்சு’

‘என் தங்கயை பெண் பார்க்க போன வாரம் ஒரு மாப்பிள்ளை வீட்டார் வந்திருந்தார்கள்.  மாப்பிள்ளை சென்னையில் ஒரு தனியார் வங்கியில் நல்ல வேலையில் இருப்பவன். என் தங்கையைப் பெண் பார்த்தார்கள். அவர்கள்  ’ஊருக்குப்போய்  நாங்கள் கடிதம் போடுகிறோம்’ என்றார்கள். எங்களுக்கும் அந்த மாப்பிள்ளையைப்பிடித்துத்தான் இருந்தது. நல்ல குணம் நல்ல வேலை. நல்ல மனிதர்கள் யாருக்குத்தான் அந்த வரனைப்பிடிக்காது. என் தங்கை நிறத்தில் கருப்புதான். ஆனால் முகம்  களையாக இருப்பாள். நீதான் பார்த்திருப்பாய் உனக்குத்தான் அவளை நன்றாகத்தெரியுமே’

‘நான் பார்த்திருக்கிறேன். எனக்குத்தெரியாமல் என்ன’                                        

‘கொஞ்சம் மாநிறமாக பெண் இருந்தால் தேவலை  என்பதே எங்கள் எல்லோருக்கும் அபிப்ராயம். எங்களுக்குப்பொய் சொல்லப்பிடிக்கவில்லை.  சகுனம் போட்டுப்பார்த்தோம் உத்தரவு சரியாக கிடைக்கவில்லை அது இது என்று  சாக்கு போக்கு சொல்லவும்  மனம் வரவில்லை. உண்மையைச்சொல்லிவிட்டோம்’ என்று கடிதம் எழுதிவிட்டார்கள்.  இந்த விஷயத்தை என் தங்கையிடம்  நான் சொல்லவில்லை. என் பெற்றோர்களுக்கும் இப்படி ஒரு கடிதம் வந்த செய்தி  தெரியாது’

எனக்கும் வருத்தமாகவே  இருந்தது.

’நான் நாளை ஊரில் இல்லை. திருப்பதி போகிறேன்.  திருவேங்கடவனைத் தரிசித்து  ரொம்ப நாள் ஆகிவிட்டது’ என்றேன்

‘நாங்களும் வேளாங்கன்னிக்குச் செல்வோம் அப்படித்தான்’ அவன் பதில் சொன்னான்.

‘நா ஒண்டியாதான் போறேன். என்கூட வீட்டிலிருந்து யாரும்  வரவில்லை. அவரவர்கள் ஏதோ ஒரு காரணம் சொல்லிவிட்டார்கள்.நீ  வருவியா என்னோடு’  வில்லியத்தைக்கேட்டுவிட்டேன்.

‘நான் எந்த மதம் என்பது உனக்குத்தெரியாததா என்ன. நான்  திருப்பதிக்கு வரலாமா நீயே சொல்’

‘நீ விரும்பினால் வரலாம்   சும்மா ஒரு கம்பெனிக்காக வாயேன் என்னோடு’ நான் அழைத்தேன்.

‘உன்னோடு  பயணத்துணைக்கு   நான் வரவேண்டும் என்று சொல் வருகிறேன்’

‘அப்படித்தான் வைத்துக்கொள். எப்படியோ நீ வந்தால் மகிழ்ச்சிதான்’

வில்லியம்  தன் வீட்டில் தாய் தந்தையர்களிடம்   திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் ஒரு தகவல் அறியவேண்டும் அதற்காக திருப்பதி போகிறேன். மேற்கொண்டு படிக்க விரும்புகிறேன் என்று ஒரு சாக்கைச் சொல்லிவிட்டு என்னோடு புறப்பட்டான். நாங்கள் இருவரும் திருப்பதிக்குப்புறப்பட்டோம்.

’பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்’ அப்படித்தான்.

‘திருப்பதிக்கு மட்டும் ஏழுமலையான் விருப்பப்பட்டால்தான் நாம் போகமுடியும்’

‘அப்படியா சொல்ற. எனக்கும்  அது பொறுந்துமா  என்ன’’

‘எல்லோருக்கும் ஒரே பதில்தான். அவர் நம்மை திருமலைக்கு  அழைத்தால்தான் நாம் போகமுடியும்’

நானும் என் நண்பனும் தருமங்குடியிலிருந்து சிதம்பரம் புறப்பட்டோம். சிதம்பரத்திலிருந்து   திருப்பதிக்குச்செல்லும் பேருந்தில்  ஏறி அமர்ந்துகொண்டோம்.  ஆறு மணி நேர பேருந்துப்பயணம். வழியில் திண்டிவனம் காஞ்சிபுரம் சித்தூர் என ஊர்கள் வந்தன. ஒருவழியாய்  திருப்பதி வந்து  சேர்ந்தோம்.  ஒரு பேருந்து பிடித்துத் திருமலைக்கும் வந்தாயிற்று. தனியார் லாட்ஜ் ஒன்றில் அறை போட்டோம். குளித்துமுடித்தோம். நாங்கள் ஏழுமலையானைத்தரிசிக்ககப் புறப்பட்டோம். தரும தரிசனம்  காணத் தொடங்கும்  பாதை எங்கே இருக்கிறது எனத்தேடினோம். எப்போதும்  நான் தரும தரிசனப்பாதையில் சென்று அந்தத் திருவேங்கடவனைத்தரிசனம் செய்வதையே வழக்கமாய்க்கொண்டிருந்தேன். வில்லியத்திற்கு உள்ளூர பயம்தான்  யாராவது  ஏதாவது  சொல்லிவிடப்போகிறார்கள் என்று. ஆனால் தனக்கு பயம்  எதுவுமே இல்லை என்பதாய்க்காட்டிக்கொண்டேன்.

ஒரு பத்துமணி  நேரம் வரிசையில் காத்திருந்தோம். இது ஒன்றும் அதிகம் என்று சொல்லமுடியாது. தரிசனத்திற்கு  வரிசையில்  அமர்வோர்  நிற்போர் தங்கும் இடத்தில் எல்லாம் வில்லியமும் நானும் பேசிக்கொண்டே இருந்தோம்.

‘கோவிலுக்கு வந்தா இப்பிடியா பேசுவிங்க. கேசவா கோவிந்தா நாராயணான்னு இப்பிடி எதாவது  சொல்லிகிட்டு வரலாமுல்ல’

கூட்டத்தில் ஒரு பெரியவர் எங்களைப்பார்த்துச்சொன்னார்.

நாங்கள் இருவரும் அமைதி ஆனோம். வில்லியம்சற்று அச்சமுற்றான்.

 எங்களை அடுத்து வட இந்திய பக்தர்களின் வரிசை. அவர்கள் என்ன மொழி பேசுகிறார்கள் என்றே தெரியவில்லை. எங்களுக்கு முன்னால் கன்னட மொழி பேசிக்கொண்டும் கோவிந்தா கோவிந்தா என்று இடை இடையே முழக்கிக்கொண்டும் மக்கள் இருந்தார்கள். இந்தியாவின் எந்த மூலையிலிருந்தும்  திருப்பதிக்குப் பக்தர்கள்  வந்துகொண்டேதான் இருக்கிறார்கள்.  இறைவனுக்கு மொழி யெல்லாம் ஒரு எல்லையா என்ன.

ஒருவழியாக உள்ளிருக்கும்  பிரதான வாயிலை அடைந்தோம். அங்குதான் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. உள்ளே போவோரும் வெளியே வருவோரும் முட்டிக்கொண்டு நின்றனர். கோவில் நிர்வாகத்தார்  என்ன என்னவோ முயன்றுதான் பார்க்கிறார்கள்.  ஆனால் ஒழுங்கு படுத்துதல் என்பது நிறைவாகவில்லை. நானும் வில்லியமும் ஒருவரை ஒருவர் கைகளைப்பிடித்துக்கொண்டோம். யாரிடமும் எந்த லக்கேஜும் இல்லை அதுவே ஒரு பெரிய சவுகரியம். எடுத்துப்போகவும் கூடாது என்று  நிர்வாகம் தடை விதித்திருக்கிறது. குடிக்கத்தண்ணீரும் பசிக்கு சிலவும் காத்திருப்போருக்கு கிடைக்கச் செய்திருக்கிறார்கள்.  சேவார்த்திகளின் இயற்கை அழைப்புக்கும்  வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

 தூரத்தில் வெங்கடாசலபதி என் கண்களில்  ஜஜஜோதியாய்த் தெரிந்தார். நான் என்னையும் அறியாது ’கோவிந்தா கோவிந்தா’ என்று கோஷம் கொடுத்தேன்.

வில்லியம் என்ன செய்கிறான் என்று பார்த்தேன். அவன் அமைதியாகத்தான் நின்றுகொண்டிருந்தான். திருவேங்கடவனின் சந்நிதியை நெருங்கிவிட்டோம். கர்ப்பகிரகத்திலிருந்து    தக தக எனும் ஒளிப்பிரகாசம் வெளிப்படுகிறது. அதன் நடுவே வெங்கடாசலபதி நின்று அருள்பாலித்துக்கொண்டிருந்தார். ஜெரகண்டி  ஜெரகண்டி என்று கோவில் சிப்பந்திகள்  பாதுகாவலர்கள்   வழிபட வந்தோரை விரட்டியடித்துக்கொண்டு இருந்தார்கள்.  தரிசிக்க வந்தவர்கள் கடவுளைப்பார்த்தார்களா இல்லையா என்பதெல்லாம்  யார்  கவனிக்கிறார்கள் கேட்கிறார்கள். எப்போதும்  ஜெரகண்டி சத்தம்தான். அப்படி இல்லை என்றாலும் கூட்டத்தை எப்படித்தான் சமாளிப்பது அது தெரியவில்லையே. திருமலையில் திருக்கோவிலை கட்டிய  போது  வளர்ந்து கொண்டே  வரும்  மக்கள் தொகையை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டா கட்டியிருப்பார்கள். சாத்தியமே இல்லை.  இன்றோ போக்குவரத்து வசதிகள் பல்கிப் பெருகிவிட்டிருக்கின்றன.  ஆகத்தான்  நாட்டின்  எந்த மூலையில் இருந்தும் மக்கள் இங்கு வரமுடிகின்றது. பொதுமக்களுக்கு இக்கடவுள் மீது இருக்கும் நம்பிக்கைக் கூடிக்கொண்டே இருக்கின்றது. அதற்கெல்லாம் விளக்கமோ வியாக்கியானமோ  கொடுத்துவிட சாத்தியப்படுமா என்ன?

நான் ஒரு அரை  நிமிடம் கூட மூலவர் சந்நிதியைத்தரிசித்து இருக்கமாட்டேன். என்னை போ போ என்று தள்ளி விட்டு  அனுப்பினார்கள்.  ஆனால்  என் நண்பன் வில்லியம்  திருமலை கோவில் சிப்பந்தி ஒருவரோடு நின்று  ஐந்து நிமிடம்  ஏழுமலையான் சந்நிதியைப் பார்த்துக்கொண்டிருந்தான். யாரும் அவனை  ஜெரகண்டி என்று சொல்லவே இல்லை. பிறகு அவனே என்னை நோக்கி வந்து சேர்ந்துகொண்டான்.

‘என்னோடு நின்ற எல்லோரையும்  நெட்டித்தள்ளி விரட்டி விட்டார்கள்’ நான் சொன்னேன்.

‘என்னிடம் ஒருவரும் ஒன்றுமே சொல்லவில்லை.  சுவாமியை நிறைவாகப்பார்த்துவிட்டு வந்தேன் நான்  சுவாமியைத்தரிசிக்கச் சற்று அதிக நேரம் எடுத்துக்கொண்டது எனக்கே தெரிந்தது. பாதுகாப்புக்காக இருந்த  செக்யூரிடி என் அருகே நின்றுகொண்டு எனக்கு உதவி மட்டுமே செய்தார்’. வில்லியம் என்னிடம் சொன்னான். அவன் சொன்னது எனக்கு ஆச்சரியமாகக்கூட இருந்தது.

 ’சொர்க்கபுரி என்பது ஒன்று உண்மையிலேயே இருக்குமானால் அது  இப்படித்தான் இருக்குமோ அத்தனைப்  பிரகாசம் அத்தனை  ஜ்வொலிப்பு’ வில்லியம் சொல்லிக்கொண்டான்.  விலையேதுமில்லாமல் விநியோகிக்கப்படும் பிரசாதத்தை இருவரும் மறக்காமல்  வாங்கிக்கொண்டோம்.    லட்டுப்பிரசாதம் விற்கும் கவுண்டரில்  திருப்பதி  லட்டு  இரண்டு மட்டும் வாங்கினோம். அவனுக்கு ஒன்று கொடுத்தேன். அதனை எத்தனைப் பவ்யமாய் வாங்கிக்கொண்டான். பிரகாரத்தில் இருந்த ப்ரும்மாண்ட உண்டியலில் நான் ஓராயிரம் ரூபாய் மட்டுமே  காணிக்கைச் செலுத்தினேன்.   வில்லியம் நான் என்ன என்ன  செய்கிறேன் என்பதைக்கவனித்துக்கொண்டான். இருவரும்  திருக்கோவிலை விட்டு வெளியே வந்தோம். கோவில் புஷ்கரணிக்கரையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தோம். நல்ல குளிர் காற்று வீசிக்கொண்டு இருந்தது.

அன்னதான சத்திரத்திற்குச்சென்றோம். இருவரும் சாப்பிட்டோம்.  மக்களோடு மக்களாய் இங்கு  வந்து சாப்பிடுவதுதான் எனக்குப்பிடிக்கும்.  தரும சத்திரத்தில்  சாரை சாரையாய் ஜனம்  வந்து  சாப்பிட்டு விட்டு சென்றுகொண்டே இருந்தார்கள்.’ பசி  ஆற்றுதல் பெரிய காரியம்தான்’ என்றான் வில்லியம்.

பொருள் வசதி படைத்தோர் தமது பொருட் செல்வத்தைச்சேமித்து வைக்கும் இடம் ஏழைகளின் வயிறு என்பதனைத் திருவள்ளுவர் சொல்லியிருப்பது அறிவாயோ என்றேன்.

‘அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள் வைப்புழி’  வில்லியம் எனக்குக் குறளைச்சொன்னான்.

இருவரும் பேசிக்கொண்டே லாட்ஜ்க்கு வந்து அதனைக்காலி செய்தோம்.  திருமலைப்பேருந்து நிலையம் வந்து திருப்பதிக்கு புறப்பட்டோம். கொண்டை ஊசிப்பாதைகள் அதிகம் இல்லை. திருப்பதியில் பேருந்து நிலையம் எத்தனை விஸ்தாரமாய் வசதியாகக் கட்டியிருக்கிறார்கள். சிதம்பரம் செல்லும் பேருந்து ஒன்றையுமே காணோம். முதுகுன்றம் செல்லும் பஸ் தயாராகக் காத்துக்கொண்டிருந்தது.

‘இப்படியும் நம்மூருக்கு போகலாம்’

‘அதுக்கென்ன போகலாமே’

இருவரும் முதுகுன்றம் பேருந்தில் ஏறிக்கொண்டோம்.  முதுகுன்றத்திலிருந்து சிதம்பரம்  பஸ் பிடித்தால் தருமங்குடியை அடைந்து விடலாம்.  பேருந்து திருவண்ணாமலை திருக்கோவிலூர் உளுந்தூர்பேட்டை  எனப்பயணித்து  முதுகுன்றம் வந்து சேர்ந்தது. போகும்போதும் சரி  திரும்பி வரும்போதும் சரி மழை கிழை என்று  எந்த தொந்தரவும் இல்லை.  படுத்தி எடுக்கும்  வெயிலுமில்லை.  ஒரு சிதம்பரம் பஸ் பிடித்து தருமங்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம்.

வில்லியம் திருமலைக்குச்சென்று வேங்கடவனை வணங்கிய அதே சிந்தனையில் இருந்தான்.

‘என்னவோ போல் இருக்கிறாயே ஏன்’

‘சுவாமியைப்பார்த்ததிலிருந்து எனக்கு  ஒரு குழப்பமாய்க்கூட உணர்கிறேன்.இப்படி நான் உணர்ந்ததே இல்லை, இது ஒரு புது அனுபவமாக இருக்கிறது ‘

‘திருப்பதிக்குப்போய் வந்தால் ஒரு திருப்பம்  வரும் என்று எல்லோரும் சொல்வார்கள்’

வில்லியம் லேசாகச் சிரித்துக்கொண்டான்.

தருமங்குடியில் வில்லியம் வீடு தாண்டிதான் என் வீடு. இருவரும் நடந்து சென்றுகொண்டே இருந்தோம். வில்லியம் வீட்டு வாசலில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது.

‘என்னப்பா கார் நிக்குது உன் வீட்டு வாசல்ல’

‘ஆமாம், என்ன விஷயம்னு தெரியல’

‘நீயும்தான்  வாயேன் வீட்டுக்கு’ என்றான்

‘சரி போகலாம்’

இருவரும்    வீட்டுக்குள்  சென்றோம்.

வில்லியத்தின் பெற்றோர்கள் அவன் தங்கை என்று மூவர் மட்டுமே வீட்டில் இருந்தார்கள். யாரேனும் விருந்தினர்கள்  வந்துமிருக்கலாம்.

‘வாங்க தம்பி’    சமீபமாய் அவன் வீட்டுக்குப்பெண்பார்க்க வந்துபோனவர்கள் தான்.

‘வாங்க வாங்க’  அவனும் சொன்னான்.

என்னையும்  அவன் ஒரு  நாற்காலியில் அமரச்சொன்னான்.

‘உங்களத்தான் எதிர்  பாத்துகிட்டே இருக்கம். நீங்க வந்துட்டீங்க. எங்கள மன்னிச்சுக்கணும்’

‘என்ன பெரிய வார்த்தையெல்லாம்’

‘இல்ல. இப்ப நானும் என் மனைவியும் வந்துருக்கம். உங்க வீட்டுல பொண்ணு பாக்க வந்த அண்ணிக்கு என் பையன் வந்துருந்தான். நாங்க உங்களுக்கு ஒரு தபாலும் எழுதிப்போட்டோம். என் பையனுக்கு ஆபிசுல ஒரு நெருங்கிய சிநேகிதன்.  அவன் என் பையன் கிட்ட  இது பத்தி விவரமா பேசியிருக்கான். என் பையனுக்கும் உங்களுக்கு  இப்படிக் கடிதம் எழுதிய விஷயத்தில் ஏற்கனவே  உடன்பாடில்லைதான்.  அலுவலகத்திலிருந்து நேராக வீட்டுக்கு வந்தான்’ நீங்கள் இருவரும் இப்போதே புறப்பட்டு தருமங்குடி செல்லுங்கள். நாம் பார்த்துவிட்டு வந்த அந்தப்பெண்ணை நாம் திருமணம் செய்யச் சம்மதம் என்பதை அந்தப்பெண்ணின் பெற்றோர்களிடம் தெரிவியுங்கள்’ என்றான்.

‘ஏனிந்த மாற்றம்’  எங்கள் பையனைக்கேட்டோம்.

‘என் சிநேகிதன்  எனக்கு ஆலோசனை சொன்னான். மனிதர்களின் தரம்தான் பிரதானம். நிறமா பிரதானம் இல்லவே இல்லை. நீ செய்தது தவறு என்றான். எனக்குச்சங்கடமாய்ப்போனது. ஆக உடனே தருமங்குடி புறப்படுங்கள். அவர்களுக்கு சம்மதம் சொல்லுங்கள்’   இதனை எங்கள் பையன் எங்களிடம் சொன்னான். நாங்கள் அவனிடம்  பதில்  ஏதும் பேசவில்லை.   நானும் என் மனைவியும் புறப்பட்டு  இங்கு வந்துவிட்டோம்.

வில்லியத்தின் பெற்றோர் அவன் என்ன சொல்கிறான் என்பதைப்பார்த்துக்கொண்டேயிருந்தனர். அவர்கள் எழுதிய அந்தக்கடித்தத்தை வில்லியம் தன்னிடம்தான்  வைத்திருந்தான்.

எனக்கு மட்டுமே  கடிதத்தில் கண்டுள்ள  அந்தத்தகவல் சொல்லியிருந்தான்.

‘ உங்களிடமிருந்து கடிதம் எதுவும் வரவில்லை. அதைத்தான் நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்’  வில்லியத்தின் பெற்றோர்கள் சொன்னார்கள்.

‘கடிதம் வரவில்லை   என்றால்  மிகவும் நல்லது. அதான் நாங்கள் வந்துட்டோமே. எங்கள் பையன் தனது  பூரண  சம்மதத்தை உங்களிடம் தெரிவிக்கச் சொன்னான்’.

‘ரொம்ப சந்தோஷம். மேற்கொண்டு நிச்சயதார்த்தத்துக்கு நாள் பார்த்து தகவல் சொல்றோம். நீங்கள் ஒரு மண்டபம் பாருங்கள் வில்லியம் பிள்ளை வீட்டாரிடம் சொன்னான்.

மாப்பிள்ளையின் பெற்றோர் காபி மட்டுமே சாப்பிட்டுவிட்டு வில்லியத்தின் தங்கையைப்பார்த்து ‘ பாப்பா  நாங்க  பொறப்படுறோம்.  அங்க வர்ரவரைக்கும்   நீ பதனமா இருந்துகோ. உன் வீடு இனி  எங்க வீடுதான்.  ஆக  நம்ம வீட்டுக்கு  நீ வந்து சேரணும். தெரிதா.   திருமணநிச்சயத்துல மறுபடியும் சந்திப்போம்.  உனக்கு  நாங்க பரிசம் போடுணும்  . இப்பக்கி  போயி வரம்’ அவர்கள் இருவரும் காரில் புறப்பட்டுச்சென்றனர்.

வில்லியம் அவர்களிடமிருந்து வந்த கடிதத்தை ,அவனேதான்  இன்னும் வைத்திருந்தான்.

’ நான் என் வீட்டுக்குப்  புறப்படுறேன்’

‘ஜஸ்ட் வைட்’ என்றான் என்னிடம்.

நான் அவன் பெற்றொர்களிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டேன். என்னோடு அவன் திருப்பதி வந்ததும் அவர்கள் பெற்றோர்களுக்குத் தெரியாது.

 அவனும்  நானும் என் வீட்டு வாயிலில் உள்ள அரச மரத்தடிக்கு வந்தோம். அவன் அவர்கள் போட்ட அந்தக்கடிதத்தையும்  ஒரு ஆயிரம் ரூபாய் பணத்தையும் என்னிடம்  கொடுத்தான்.’ நெக்ஸ்ட் டைம் திருப்பதி போனா இந்த கடிதத்தையும் ஆயிரம் ரூபாய் பணத்தைடும்  திருவேங்கடவனுக்கு உண்டியல்ல என் காணிக்கையா  சேர்த்துடு. நான் இப்படி  மாப்பிள்ளை வீட்டார்  திரும்பவும் வருவாங்கன்னு நெனச்சிகூட பாக்குல . அவுங்க கிட்டேந்து  சம்மதம்னு  நல்ல சேதி வரும்னு எதிரும் பாக்குல.  ஒண்ணு மட்டும்  நிச்சயம்    அந்த ஏழுமலையான்  அருள் இல்லாம இது நடந்திருக்காது’

வில்லியம் என்னிடம் சொன்னன்.

‘ஏகம் சத் விப்ரா பஹுதா வதந்தி. இது  வேத வாக்கியம்’ என்றேன் நான்.

‘தமிழ்ல சொல்லுலாமே’

‘கடவுள் ஒருவரே.  அவரைத்தெரிந்தவர்கள்  பல பெயர்களில் அழைக்கிறார்கள்.’

வில்லியம் என்னைத்தழுவிக்கொண்டான். நான் என் வீட்டுக்குத்திரும்பிக்கொண்டிருந்தேன்.

 

----------------------------------------------------------------------------------------------------------------------------