Monday, October 30, 2023

கவிதை -எதிர் வீடு

 


 கவிதை -எதிர் வீடு  


எதிர் வீடு 

பூட்டிக்கிடந்தது

வாடகைக்கு யாரும் வரவில்லை

நாய்களும் பூனைகளும்

இணங்கிப்பிணங்கி உறங்கின

நேற்று எதுவோ ஒரு குடும்பம்

லாரிச்சாமான்களோடு

அந்த வீட்டிற்குள் புகுந்தது

வீட்டு ஓனருக்கும் நிம்மதி

மழைச்சற்றுக்கூடுதல் ஆனால்

வீதித்தண்ணீர் உள்ளே வரும்

நமக்கேன் பொல்லாப்பு

நான் ஒன்றும் சொல்லவில்லை

வாடகைக்கு வீடென்று

ஊரெல்லாம் சுற்றி

கடைசியாய்க்கிடைத்த வீடு

போதுமென அவர்கள் வருகை

நாய்களும் பூனைகளும்

நடுத்தெருவில் சீற்றத்துடன்

அழவும் செய்தன

அறிவுஜீவிப் பாம்பொன்று

அழைத்தது அவைகளை

அமைதியாய்ச்சொன்னது

‘சும்மா கிடக்காது

கட்டிய வீடு

மனிதர்கள் குடி புக வேண்டும்

மனிதர் வர மாடு வரும் ஆடு வரும்

அரிசி வரும் பருப்பு வரும்

எலிகள் வரும் பூனைக்காகும்

கழிவு நீர் தேங்கும் தவளை வரும்

பாம்புக்காகும்

சோறு மீதப்படும் உணவாகும் நாயிக்கே

சூழல் நின்னை ஆள்வதா

சூழலை நீ ஆள்வதா

உபதேசித்த பாம்பு நழுவிப்போயிற்று புற்றுக்குள்

நாய்களும் பூனைகளும்

பிரமித்துப்போய்.

ஒன்றையொன்று பார்த்துக்கொண்டன

                                                                   

No comments:

Post a Comment