Monday, January 27, 2014

poyyethum kavithai

பொய்யேதும் சொல்வானோ                   -எஸ்ஸார்சி

செப்பு மொழி பதினெட்டு
சிந்தனையோ ஒன்று
கவிதை சொன்னது மெய்
பேராசைக்கானல்லவே  மாகவிஞன்
பாரத அன்னையே  நீ
எப்படிச்சகிக்கிறாய்
மண்டிக்கிடக்குதே பிணக்குகள்
மனம்தான் ஒப்புமோ நினக்கு
மணிக்கொடி காத்த திருப்பூர்குமரன்
பாரத அன்னைக்கு  அழகுக்கோவில் எழுப்பிய சிவா
வங்கக்கடலில் கப்பல் ஓட்டியதால்
கோவைச்சிறையில் செக்கிழுத்த  சிதம்பரம்
நின் புகழ்ப் பாடியே நாளும் வலம் வந்த பாரதி
தன் மக்கள் கல்விக்கு த்தன்னையே கொடுத்த காமராசு
பொதுமை நினைவாலே பூத்த மலர் ஜீவா
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய
எம் வள்ளலென
வாழ்ந்த தமிழ் மண்ணில்
காவேரித்தண்ணீர் பெறக் கோடி முயற்சிகள்
அத்தனையும் கால்படு தூசியாம் கருநாடகத்துக்கு
ஏர்க்கலப்பை பிடித்த எம்மவன்
நஞ்சுண்டா முடிவது
உச்ச நீதி மன்றமென்ன
அரசு கெசட்டென்ன
படைத்த பிரம்மனே சொன்னாலும்
கேட்கத்தான் மாட்டார்
உழுதவன் அழுகைச் செவிடர்க்கு எட்டாது
காரியச்செவிடர்கள் எப்போதும் டில்லியில்
பெரியாற்றுத்தண்ணீர் அரபிக்கடல் சேர்ந்து
பேரழிந்து போனாலும்
 உனக்கு இல்லை தமிழா அது என்கிறான்.
காந்த மலை உச்சியில்
மகர ஜோதி தெரிந்துமென்ன
மனம் தொலைத்து ப்பேசுகிறானே மலயாளி.
கண்ணகிக்கோவிலுக்குச்சென்று
கற்பூரம் ஏற்றிக்கைதொழத்தான்
எத்தனைக்கெடுபிடிகள் அப்பப்பா
சீனாவில் இருக்கிறதா அந்தக்
கண்ணகியின் திருக்கோவில்.
கச்சத்தீவு கைவிட்டுப்போனபின்னே
அந்தோணியரைக் கும்பிடப்போனால்
போதும் போதுமென பிட்சுக்கள் உறுமல்கள்.
பாலாற்றுக்கதையோ சோகம்
ஏழுமலையான் மூடிய கண்கள் திறக்க வேண்டும்
ஆந்திரர்கள் குறுக்கணை கட்டுவதில்
வல்லவர்கள் எப்போதும்.
தரும மிகு சென்னையின்  உலகமயப்பசி
மணல் கொடுத்தே மரணிக்குது பாலாறு.
அரவமில்லாமல் அணை க்கட்டும் ஆந்திரர்கள்
அரவமிட்டு மட்டுமே அது நடத்தும் கன்னடர்கள்
அரபிக்கடல் போனாலென்ன வெள்ளம்
தமிழர்க்கில்லையதுபோ   அநியாயக் கேரளர்
உலகின்பக்கேணியாவது எப்படியோ.
வீர சிவாஜியின் வழிவந்த
மராட்டியனோ பிகாரிக்கு மும்பையில்
வேலை யில்லை விரட்டுகிறான்.
காந்தி பிறந்த மண்ணிலே
மதமான பேய்கள் கொட்டம்.
எப்போதும் கரும் புகை எழுப்பும்
காலிஸ்தான் கூடாரம் நிச்சயமாய்
பஞ்ச நதி பாயும் பஞ்சாபில்.
உச்சிமீது எப்போதும்
அச்சத்தில் வாழும் சொச்ச காசுமீரிகள்.
குரங்கும் கழுகும் தோழமை கொண்ட
கருப்பன் ராமனுக்கு
அயோத்தியில் கோவில் கட்ட
கங்கைக்கரையில் சுருட்டுச் சாமியார்களின்
அரிவாள் மந்தை.
மொத்தமாய்  பாரத மண்ணோடு
ஒட்டவே  முடியாமல்
கீழை இந்திய மஞ்சள் மக்கள்.
தமிழ் மட்டுமே பேசியதால்  மொத்தமாய்ப் பொசுங்கிய
ஈழச்சோதரர்கள் சோகம்
கூடிச்சிந்திக்க எட்டவேயில்லை இன்னும்.
மின்சாரம் இல்லா வீட்டில்
ஓசி க்காற்றாடி கிரைண்டர் மிக்சிக்கு
உச்சி வெயிலில் நாயாய் அலையும்
நாணம் தொலைய விட்ட  நம்மவர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
படிப்பதுதான் கண்கொள்ளாக்காட்சி.
பேசும்மொழி பதினெட்டு
சிந்தனையோ ஒன்று
பொய்யேதும் சொல்வானோ மாகவிஞன்.
------------------------------------------------------