Sunday, July 31, 2022

கோவி ஜெயராமனின் சடையப்பவள்ளல்

 

 

கோவி. ஜெயராமனின்  சடையப்ப வள்ளல் ஆய்வு        -எஸ்ஸார்சி

சடையப்ப வள்ளல் (கம்பர் காவலர்)  என்ற தலைப்பிட்டு ஒரு ஆய்வு நூலை கவிஞர் கோவி. ஜெயராமன் படைத்துள்ளார். கோவி. ஜெயராமன் ஒரு மார்க்சியர். தொழிற்சங்கப் பொறுப்பக்கள் பல  ஏற்றுப்பணியாற்றியவர். தமிழ்ப் பற்றாளர்.  வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடினேன் என்று முழங்கிப் பாட்டாளி சமூகத்தோடு தன்னை அடையாளம் கண்ட வள்ளலார் இராமலிங்க அடிகள் மீது  ஈடுபாடு உடையவர் 

 வள்ளலார் ஒரு சமூக ஞானி என்னும் ஒரு நூலை  முன்னம் ஆய்வு நோக்கில்  எழுதியுள்ளார். ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் குறித்த வரலாற்று நூல் ஒன்றையும் அண்மையில் எழுதி வெளியிட்டார். இந்திய விடுதலைப்போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலை அம்மாள் தியாகம்  குறித்து ஈடுபாடுடையவர். அஞ்சலை அம்மாள் நினைவு போற்றப்படவேண்டும் என்பதில்  மிகுந்த கவனம் கொள்பவர். மகாகவி கம்பரை ஆதரித்த சடையப்ப வள்ளல் குறித்த ஆய்வு நூல் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.

கம்பன் பிறந்த தமிழ் நாடு என்று மாகவி பாரதி பெருமையோடு பேசுவார் தமிழ்.இலக்கியங்களில் கம்பராமாயணம் சிறப்பகப்பேசப்படுவது. கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும் கவி பாடுமென்பது வழக்கு. கம்பனை ஆதரித்துப் போற்றியவர் திருவெண்ணய்நல்லூர் சடையப்ப வல்ளல். அந்த சடையப்ப வள்ளல் குறித்த ஒரு ஆய்வே இந்நூல்

.கம்பர் வாழ்ந்த காலம் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு என்பதை உயர்த்திப்பிடிக்கிறார் நூலாசிரியர். கம்பர் அடிப்பொடி சா. கணேசன் தொண்டை மண்டல சதகத்தை ஆதாரமாகக்கொண்டு கம்பர் காலத்தை நிறுவுவதைக் குறிப்பிடுகிறார்.

‘எண்ணிய சகாத்த மெண்ணூற்றேழின் மேற் சடையன் வாழ்வு

நண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்ப நாடன்

பண்ணிய விராமகாதை பங்குனி யுத்தரத்திற்

கண்ணிய வரங்கர் முன்னே கவிரங்கேற்றினானே’

 என்பதுவே அந்த தொண்டை மண்டல சதகப்பாடல்.

ஜெயராமன் தனது கள ஆய்வில்  மயிலாடுதுறையை அடுத்த தெரெழுந்தூர் ஆமருவியப்பன் பெருமாள் கோவிலில் கம்பரும் அவரது மனவியும் சிலையாக வைக்கப்பட்டுள்ளதைக்குறிப்பிடுகிறார். அக்கோவிலின் சற்று அருகே ‘கம்பர் மேடு’ என்னும் தொல்லியல் துறையின் கீழ் உள்ள  மேடானபகுதியையும், உவச்சர் குலத்தில்( கோவில் பூசாரி) பிறந்த கம்பர் பூசித்த காளி கோவிலையும் பற்றி விவரமாகக்குறிப்பிட்டுள்ளார்.

மேலையூர் மாரியம்மன் கோவிலில் கம்பர் வணங்கிய கம்பர் விநாயகர் சன்னதி, கம்பருக்கு கவிதை வரம் தந்த மாகாளி என்று பேசப்படுகிற அங்காளம்மன் கோவில் என்று கம்பர் புழங்கிய இடமெல்லாம் கோவி.ஜெயராமன்பார்வையிட்டு வந்திருக்கிறார்.

சடையப்பவள்ளல் வாழ்ந்த இடம் இது தான் என்று அரிதியிட்டு சொல்லமுடியாமல் போய்க்கொண்டே  இருக்கிறது. விழுப்புரம் அருகே உள்ள திருவெண்ணெய்நல்லூரா  அல்லது மயிலாடுதுறை அருகே இருக்கின்ற வெண்ணெய்நல்லூரா என்கிற விவாதம் வருகிறது.

சோழமண்டலச் சதகத்தில் புதுவைச்சடையன், புதுச்சேரிக்கொடையான் சேதிராயன்  என்கிற சுட்டுதலும் கம்பரின் தனிப்பாடலில் புதுவையான் என்கிற குறிப்பும் சடையப்பவள்ளலின் ஊரை வேறு வேறு இடங்களுக்கு நம்மை ஆற்றுப்படுத்தி  திகைக்க வைக்கின்றது..

திருவாரூரை ஒட்டிய அடியக்கமங்கலம் புதுச்சேரி,கும்பகோணத்தை அடுத்த புதுச்சேரி, புதுச்சேரி மாநிலத்து சேதுராயன்பட்டு என்பனவும் சடையப்பவள்ளலின் ஊர்கள் என்கிறபடி ஆய்வுப்பாதை தொடர்கிறது.

கம்பர் காலத்தில் வெண்ணெய்நல்லூர் என்று அழைக்கப்பட்டதே காலப்போக்கில் கதிராமங்கலமாக மாறிப்போனது என்கின்றன்றனர்  இப்படி மக்கள் செய்தியும் வருகிறது.

உ. வே. சா   மயிலாடுதுறை அருகேயுள்ள திருவெண்ணெய்நல்லூரைப்பார்வையிட்டதாகவும், அந்த ஊர் சடையப்பபிள்ளை கிராமம் என்று வழங்கப்பட்டதாகவும் குறிப்பு எழுதியுள்ளதை ஜெயராமன் சுட்டிச்செல்கிறார்.

ஈரோடு மாவட்டம் தென்முகம் வெள்ளேடு என்ற ஊரிலும் இராசாக்கோவிலிலும் சடையப்பருக்கு சிலைகள் உள்ளன. சடையப்பர்  கொங்கு வேளாளக்கவுண்டர் என்று மொழிவாரும் உளர்.

‘சடையப்பர் இல்லையேல் ஒரு கம்பர் இல்லை,கம்பர் இல்லையேல் கம்பராமாயணம் இல்லை.கம்பராமாயணம் இல்லையேல் தமிழ்ச்சமூகம் ஒருபெரும் இதிகாசத்தை இழந்திருக்கும்’ என்று கூறி, தமிழக அரசின் கடமைகள் பலவற்றில்  கம்பரைக்காத்த சடையப்ப வள்ளல்  வாழ்ந்த ஊரை ஆய்ந்து  உலகிற்கு வெளிப்படுத்துவதும் ஒன்று என நூலாசிரிய்ர்  முடித்துள்ளார்.

ஜெயராமனின்  தொடர் மனிதத்தேடலின் மாண்பாக இவைகளை வாசிக்கவேண்டும்.

கம்பரும் சடையப்ப வள்ளலும் தமிழ் உள்ளளவும் வாழ்வர்.   வள்ளல்  சடையப்பர் குறித்த சரியான வரலாறு சமைப்பதுவும் நமது கடமை.

-------------------

 

 

 

 

 

 


கதை விதியே விதியே

 

 

 

 

விதியே விதியே                      -எஸ்ஸார்சி

 

சென்னையிலும் பெங்களூரிலுமாக வாழ்க்கை ஒடிக்கொண்டிருக்கிறது. பெற்ற குழந்தைகளுக்கு  இறக்கைகள் முளைத்தன. அது அதுகளுக்கு பிழைப்பு எங்கோ,  அங்கு  அங்கு போய்   அவரவர்கள் காலத்தை ஓட்டுகிறார்கள்.  என் பெரிய பையனுக்குக் கலிஃபோர்னியாவில் வேலை. அந்த  அமெரிக்க  வாழ்க்கை  எல்லாம் நமக்குச்   சரிப்படாது.

 சின்னவனுக்கு பெங்களூரில் ஜாகை..  ஆக  அந்த பெங்களூருக்குத்தான்  சென்னையிலிருந்து அடிக்கடி  போய்  வர முடிகிறது. கலிஃபோர்னியா மாநிலத்து  லாஸேஞ்சலிஸ் போய்வருவது  பற்றி எல்லாம்  நினைப்பதுகூட இல்லை. கொரானா அரக்கன்  கண்விழித்தபிறகு அந்த மாதிரிக்கு  இருந்த  யோசனை தீய்ந்துதான் போனது.

என் வீடிருக்கும் முடிச்சூர் அருகே  அடையாறு ஓடுகிறது. அந்த ஆற்றின் வடகரை குடியிருப்புப்பகுதியாய் இருக்கும்  இந்த  நேதாஜி நகருக்கும்   தாம்பரத்திற்கும் ஒரு நான்கு கிலோமீட்டர் இருக்கலாம்.  வீட்டிலிருந்து தாம்பரம் வரைக்கும் ஆட்டோ கீட்டோ என்று பிடித்துக்கொண்டு  போய்விடலாம். பிறகு   புறநகர் ரயில் பிடித்துத்தான்  சென்ட்ரல் போகவேண்டும்.  தாம்பரத்திலிருந்து சென்ட்ரலுக்கு  நேர் ரயில எல்லாம்  ஏது ?  பூங்க்கா ரயில் நிலையத்தில் இறங்கித் தாண்டுத்தப்படியாய் மூட்டை முடிச்சுகளுடன்  அந்த சென்ட்ரலுக்குள்ளே போகவேண்டும்.  அப்படியும் இப்படியும் மொத்தத்தில்  நூறு படிக்கட்டுகள் ஏறி இறங்கவேண்டும். மின்சார ஏணி வேலை செய்யும்  சமயத்தில் படுத்தும் கொள்ளும்.

 தாம்பரத்திலிருந்து மும்பை கொல்கத்தா  டில்லிக்கு ரயிலுண்டு ஆனால் இந்த பெங்களூருக்குத்தான் இல்லை. இதனை எல்லாம் நாம்  எங்கேபோய்ச் சொல்லமுடியும்.

 சென்னைக்குத் தாம்பரம் மாதிரி பெங்களூருக்கு  கே.ஆர் புரம்  அந்த கிருஷ்னராஜபுரம் நிறுத்தத்தில்  டபுள் டெக்கர் ரயிலைவிட்டு இறங்கினேன்.  மதியம் மணி பன்னிரெண்டரை.  என்னோடு என் துணைவியும் வந்திருந்தாள்.ரயில் நிலையம் என்றால் மாடிப்படியும் கூடவே இருக்கத்தானே செய்யும். அதனில்  ஏறவும் இறங்கவும் அவளால் முடிவதில்லை. அறுபது வயது நெருங்கிய பெண்களுக்குப்  படி ஏறுவதும் இறங்குவதும் சங்கடமாகவே இருக்கிறது .மின்சார ஏணி வசதி  என்பதெல்லாம்  இந்த ரயில் நிலையத்தில் இல்லவே இல்லை.

மாடிப்படி ஏறி ரயில் நிலையத்தின் அடுத்த வாயிற்பக்கம் இறங்கியிருந்தால்  ராமமூர்த்தி நகருக்கு எளிதாகச்சென்றுவிடலாம். ஆட்டோ செல வுக்கும் ரூபாய் நூறுதான் ஆகும். மாடிப்படி ஏறுவது நம்மால் ஆகாது என்றால்  கே ஆர் புரத்தின் மெயின் கேட் வழியாகத்தான் வெளியே வரவேண்டும். ஆட்டோவில் ஏறி  ஊர் சுற்றிக்கொண்டு  அந்த ராமமூர்த்தி நகருக்குச் செல்லலாம்.

அப்படித்தான் நானும் என் மனைவியும் ஒரு ஆட்டோவைத்தேடிக்கொண்டு மெயின் கேட் வாயிலில் நின்றோம். பெங்களூர் ஆட்டோக்காரர்களுக்கு அனேகமாக இங்கு புழங்கும் எல்லாபாஷைகளும் தெரிந்தே இருக்கின்றன. கன்னடம் தமிழ் தெலுங்கு மலயாளம் இந்தி ஆங்கிலம் என ஆறு பாஷைகள் தெரிந்தவர்கள்தான் இந்த பெங்களூர்வாசிகள். இன்னும் கூட மராட்டி கூர்க் என மொழி அறிந்தவர்கள்  இங்கே இருக்கிறார்களாம். நான்தான்  அவர்களைப் பார்த்ததில்லை.

‘சார் ஆட்டோ சார் ஆட்டோ ‘ நான்கைந்து ஆட்டோக்காரர்கள் என்னை வழிமறித்தார்கள்.

‘ நான் ’ராகவேந்திரா சர்க்கிள்’ போகணும்’

‘அப்பிடி போங்க அதுக்கு வேற ஆளு வேற ஆட்டோகாரங்க’  டிரைவர்கள் எங்களைத்தள்ளி தள்ளி  விட்டார்கள்.

கடைசியாக ஒரு ஆட்டோக்காரர் எங்களை வழி மறித்து,’ எங்க போவுணும்’ என்றார்.

’ராகவேந்திரா சர்க்கிள் ராமமூர்த்தி நகர்’                          

 ‘ ஆட்டோல ஏறுங்க’

‘எவ்வளவு கேக்குற’

‘ ஏரநூற்று அம்பது’

‘ எர நூறு வாங்கிக’

‘ இண்ணைக்கு  ஆட்டோ கேஸ் என்ன வெல விக்குது’

‘ எப்பவும்   ஆட்டோவுக்கு நூறு நூத்தம்பது தர்ரது’

‘அது மாடிப்படி ஏறி அங்காண்ட போயிட்டா நூற்றம்பதுதான்’

‘அது முடியாமதான இந்தப்புறமா நிக்குறம்’

‘அப்பறம் என்னா பேசுற’

என் மனைவிக்கு ஆட்டோவில் கால்  தூக்கி எடுத்து வைக்க முடியாது. ’அந்தப்படி உயரம். அந்த  உயரம்  என்னால் முடியவே  முடியாது’ என்பாள். எப்போதும் அப்படித்தான். எப்போதும் என்றால்  அது   சமீபமாகத்தான். ஒரு  நான்கைந்து ஆண்டுகளாக இருக்கலாம்.

ஆட்டோக்காரன் ஒரு செங்கல்லை எங்கிருந்தோ தூக்கிக்கொண்டு வந்தான். கீழே கிடத்திப்போட்டு ‘இதுல  மொத ஏறிக  பெறகு வண்டில ஏறு நாங்களும் தெனம் ஜனத்த பாக்குறம்ல’என்றான்.

செங்கல்லில் கால் வைத்து என் மனைவி  மெதுவாக வண்டிக்குள் ஏறிவிட்டாள். அவள் நகர்ந்து உட்கார்ந்தாள். நானும் அமர்ந்து கொண்டேன். ஆட்டோக்காரன் வண்டியை எடுத்தான். கொல்கத்தாவின் தொங்கு பாலம் போல் ஒரு  பெரிய பாலம் சாலையில் தொங்கிக்கொண்டிருந்தது. அதனை ஒரு புறமாக்கி  எங்கள் ஆட்டோக்காரன்  ஒரு ம ஃப்சல் பேருந்து நிலையம் வந்தான்.  ஊர் பேர் எல்லாம் அங்கு எழுதியில்லையே.   ஆட்டோக்காரன் சர்க்கு புர்க்கு என்று  வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தான். ஐ டி ஐ க்கு பக்கமாய் வந்து சேர்ந்தான் ஐ டி ஐ கட்டிடங்கள் இன்னும்தான் பிராணனை வைத்துக்கொண்டு இருக்கின்றன. இங்கு அட்டைக்கருப்பு நிறத்தில் சம்மணமிட்டு அமரும்  தொலைபேசியைத் தயாரிப்பார்கள். அது எல்லாம் நின்று போய்எவ்வளவோ காலம் ஆகிவிட்டது.பொதுத்துறைக்கு எல்லாம் பிரதமர் நரசிம்ம ராவ் காலத்திலேயே குழிவெட்ட ஆரம்பித்துவிட்டார்கள்..

மய்ய அரசு இந்த  ஐ டி ஐ அடிமண்ணை பல்லாயிரம் கோடிகளுக்கு காசாக்கலாம். அதற்கு ஆட்களும்  நேரமும் இன்னும் பொறுத்தமாக அமையவில்லை அவ்வளவுதான்

ஆட்டோக்காரன் வண்டியை தட்டுக்கு புட்டுக்கு என்று பிரேக் போட்டு போட்டு  ஓட்டிக்கொண்டு வந்து, ஐ டி ஐ செண்ட்ரல் ஸ்கூல்  அஞ்சலகம்  பிஎஸ் என் எல்  வாடிக்கையாளர் அலுவலகம்  எஸ்.பி  ஐ கிளை   என்று தாண்டித்தாண்டி  ஐ டி ஐ டவுன்ஷிப்பை விட்டு ஒரு வழியாய்க் கரை ஏறினான்

இந்தப்பகுதியில்  ஐ டி ஐ  பெரிய பூங்காவுக்கு எதிரே  ராகவேந்திரர் கோவில் ஒன்று கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது. அதனைப்பார்த்துக்கொண்டே வந்தேன். கோவிலுக்குப்பக்கமாய் இருந்த  ராட்சத அரசமரத்தின் கீழே ஸ்வாமி படங்கள் ஏகத்துக்கு உடைந்தும் உடையாமலும் பரிதாபமாய்க் கிடந்தன. அதன் அருகே ’ஸ்வாமிபடங்கள் இந்தக் குப்பையிலா? வேண்டாம்  பாவம் மகாபாவம்’ என்று எழுதி விளம்பரம் ஒன்றை வைத்திருந்தார்கள். அரச மரத்தோடு  உடன் உறையும் வேப்பமரம்தான்  கண்ணில் படவில்லை

ஆட்டோ டிரைவர் ஒரு மாதிரியாக வண்டியை ஓட்டியது நன்றாகவே தெரிந்தது. கல்கரே ரோடில் வளைய வேண்டியவன் முன்னமேயே வளைந்துசந்து சந்து எனப் போனான்.எனக்குச் சந்தேகம் வந்தது.

‘எங்கப்பா போற நீ’

‘ நீ டென்ஷன் காட்டாதே’

 ஆட்டோக்காரன் எனக்குப்பதில் சொன்னான்.

ஒரு தெருவின் பின்  அடுத்த தெருவாகப் போய்க்கொண்டிருந்தான். சம்பந்தமே இல்லாத தெருவெல்லாம் வந்தது. எனக்கும் பழகிய ஊர்தானே இது.

‘ ஏம்பா எடம் தெரியலன்னா யாரையாவது கேக்குலாம்’

‘ நீனு டென்ஷன் காட்டாதே’

என் மனைவி அவன் குடித்திருப்பதைத்தெரிந்துகொண்டு’  நீங்க  கொஞ்சம் பொறுமையா வாங்க’

எனக்கு  அறிவுரை சொன்னாள்.

‘ஏம்பா கோஷி ஆஸ்பிடல் தெரியுமா’ இல்லே லோடஸ் கல்யாண மண்டபம் தெரியுமா இல்லே சைதன்யா டெக்னோ  ஸ்கூலாவது தெரியுமா’

‘எல்லாம் எனக்கு  தெரியும் நீ டென்ஷன் காட்டாதே’

கோஷி ஆஸ்பிடலையும் தாண்டி வேறு எங்கோ போய்க்கொண்டிருந்தான்.

‘ வண்டிய நிறுத்து நாங்க இறங்கிகறம்’

வண்டியை நிறுத்தினான் யார் செய்த  புண்ணியமோ.

 வண்டியை விட்டு எறங்காதே’

எங்களுக்குக் கட்டளையிட்டான்.

எதிரே இவனைப்போலவே  நடந்து வந்த இன்னொருவனை நிறுத்தி’ ராகவேந்திரா சர்கிள் எப்பிடி போவுணும்’

ஆட்டோக்காரன் கேள்வி  கேட்டான்.

அவனும் குடித்துத்தான் இருந்தான்.

‘’எலே வண்டிய ராகவேந்திரா சர்கிள் தாண்டி ஓட்டிகினு  வர, வந்த வழியே  ஒரு கிலோமீட்டருக்கு போ  ரைட்டுல திரும்பு எதுத்தாப்புல ராகவேந்திரா சர்கிளு அப்பிடியே அடையாறு, ஆனந்த பவனு  அடுத்தாப்புல லோடஸ் மண்டபம் எங்க எங்கயோ  இவாள  இட்டுகிணு அலையற’

அவன் பதில் சொன்னான்.

‘ உன் வண்டியே எங்களுக்கு வேணாம் நாங்க வேற எதானா பாத்து போய்க்கிறம்’

 உங்களை கும்புடறன் ஒண்ணும் சொல்லாதிங்க எறங்கிடாதிங்க வண்டியிலயே இருங்க’

எங்களிடம் சொன்னான். இரண்டு கைகளாலும் கும்பிட்டான்.

‘ நா அளவா குடிப்பன்.அவன் சாதியில  அய்யிரு  ஆட்டோ ஓட்ட வந்துட்டான் அளவு கிளவு தெரியாம குடிப்பான்.  அய்யிரு சனம் நல்லா இருந்தா முருங்கக்கா வேணாம் கத்திரிக்கா வேணாம்  வெங்காயம் வேணாம்னு பேசும்.  கெட்டு போனா ஆமய சுட்டு, பாம்ப சுட்டு, பல்லிய சுட்டு  தின்னும். பேட்டரி கட்ட பிளாஸ்டிக் செருப்பு  ஊறலுல   போட்டு சாராயம் காச்சுனாலும் வாங்கி குடிச்சி  குண்டி வெடிச்சி  சாவும்.  நீங்க எறங்கிகிங்க  வேற எதனா ஆட்டோல போவுலாம்’  எதிரே நடந்து வந்தவன் எங்களுக்குச்சொன்னான்.

 என் மனைவிக்கு ஆட்டோவில் ஏற ஒரு செங்கல்  உயரம் வேண்டும்.இறங்கவும் எதாவது உயரமாக  வேண்டும்.  நாங்கள் எங்கே ஏறுவது? எங்கே இறங்குவது?  எனக்குள்ள பிரச்சனையே வேறு.

‘ செத்த பொறு சாரு.  டென்ஷன் மட்டும்  நோ’ என்றான்.

வண்டியை   U  டர்ன்  போட்டான்.  அதே சாலையில் போய் ரைட்டில் திரும்பி ராகவேந்திர சர்கிள் தாண்டினான்.  என் சின்ன பையன் வீட்டு வாயிலில் டக்கென்று நிறுத்தினான்.

அடையாறு ஆனந்த பவனுக்கும் லோடஸ் கல்யாண மண்டபத்துக்கும் இடையுள்ள தெருவில் முதல் வீட்டில்தானே நாங்கள் இறங்க வேண்டும்.

 நானும் என் மனைவியும்  அப்படியே இறங்கினோம்.

எங்கோ தெரு எல்லாம் தேடி ஒரு செங்கல் கொண்டு வந்தான்  ‘ அம்மா இப்ப எறங்குங்க’ என்றான்.என்  மனைவிக்குப்பெரிய ஒத்தாசை அது.

‘ ஆட்டோகாரன்  ஊர  சுத்தி சுத்தி  வந்தான்  பெட்ரோல் என்ன  வெல விக்கறது ஒரு ஐம்பது  ரூபா சேர்த்து குடுங்க ஒண்ணும் காச பாக்கவேணாம்’

என் மனைவியா சொல்வது  நான் பார்த்துக்கொண்டேன். அவள் தான் சொன்னாள்.

முந்நூறு ரூபாய் எடுத்து ஆட்டோக்காரனிடம் கொடுத்தேன்.

‘ சார் வேணாமுங்க இந்தாங்க உங்க ஐம்பது   நா பேசுனது எர நூத்து அம்பது அது போதும் எனக்கு.  நடந்த  தப்பு என் தப்புதான்’

‘ஆட்டோவின் ஸ்டேரிங்க் பிடித்தபடி ஆட்டோ டிரைவர்  எங்களையே பார்த்தான்.

அவன் கண்கள் குளமாகியிருந்தன. அது எதற்காகவும் இருக்கலாம்.

‘ அவன்  அழறானா என்ன’

‘ வேற  எதானா பேசேன்’    என் மனதிலும் சங்கடம். என் மனைவியை நோக்கினேன்.

‘எங்க போறிங்க அடுத்தாப்புல’ ஆட்டோக்காரனைக்கேட்டேன். இது நாம் கேட்க வேண்டுமா? என்ன.                                                                              

‘ சாரு தெரியாதமாதிரிக்கு  கேக்குறீங்க’

சொல்லிக்கொண்டே வண்டியை  ஓட்டினான்.

‘அவன் எங்க போறான்னு தெரியுமா’

‘திரும்பவும்  கே ஆர் புரம்  ரயில்வே ஸ்டேஷனுக்குத்தான்’

‘அதுதான் இல்ல அவன் நேரா அந்த பலான கடைக்குப் போறான்’

‘அது எப்பிடி சொல்றீங்க’

‘பேசனதவிட பத்து ரூபாயாவது  தனக்கு   கூட வேணும்னு சண்ட போடணும். அப்பிடி  போடுறவன்தான்  சரியாத் தொழில் பண்ணுற ஆட்டோக்காரன்.  அவன்மட்டும் தான்  ஆட்டோ ஸ்டேண்டுக்கு   திரும்பவும் போவான்.  சவாரியும் அடுத்ததா ஏத்துவான்.’

‘இல்லன்னா’

‘அவன் அதே நெம்பர்  கடைக்குத்தான் போவான்’

 ’அட  நாராயணா’ மனைவி எனக்குப் பதில் சொன்னாள்.

--------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Friday, July 1, 2022

குறிஞ்சிவேலன் 80


Tue, May 3 at 7:50 AM

செயற்கரிய செய்வார் பெரியர்.               

 

இனிய  நண்பர் ‘திசை எட்டும்’ மொழிபெயர்ப்புக்காலாண்டிதழின் ஆசிரியர்  குறிஞ்சிவேலனுக்கு வயது 80. தீபம் இலக்கிய இதழோடு மிக நெருக்கமாக இருந்தவர்.  மலையாளத்து வி.பி.சி நாயரின்’ முழுமையைத்தேடும் முழுமையற்ற புள்ளிகள்’ என்னும்  வித்தியாசமான மொழிபெயர்ப்புத்தொடரை தீபத்தில் எழுதி இலக்கியவாதிகளின் கவனத்தை ஈர்த்தவர்.   மாபெரும் இலக்கிய ஆளுமை தீபம் நா பார்த்தசாரதி அவர்களின் பேரன்புக்குப்பாத்திரமானவர். மலையாளமொழியைப்பயின்று அந்த மொழியில் உள்ள இலக்கியசெல்வங்களைத்தமிழுக்குக்கொண்டுதந்தவர்.

 எஸ்.கே பொற்றேகாட் எழுதிய விஷக்கன்னி நாவலை மலையாளத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்தமைக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்.  எம். டி.வாசுதேவன் நாயர் எழுதிய இரண்டாம் இடம் நாவலை தமிழில் கொண்டுவந்தமைக்கு இலக்கிய உலகின் பாராட்டுதலைப்பெற்றவர்.

திசைஎட்டும் மொழிபெயர்ப்பு இதழை ஜூலை 2003ல் தொடங்கிய பெரிய  மனதுக்காரர். மொழிபெயர்ப்புக்காக ஒரு இதழினைத் தமிழ் மொழியில் தொடங்கிய சாஹசக்காரர். குறிஞ்சிப்பாடிக்கு அருகே உள்ள சிற்றூர் மீனாட்சிப்பேட்டையிலிருந்து இந்திய தேசத்து இலக்கிய ஆளுமைகளைத்தன்பக்கம் திரும்பிப்பார்க்கவைத்தவர்

அமரர் கி.ரா தான் திசை எட்டும் முதல் இதழை  நெய்வேலி புது நகரில்வெளியிட்டார். இந்து நடராஜன் பெற்றுக்கொண்டார்.

நல்லிகுப்புசாமி செட்டியார்  அன்புத்துணையோடு நல்லிதிசைஎட்டும் மொழிபெயர்ப்பு விருதினை ஆண்டுதோறும்  சிறந்த மொழிபெயர்ப்பாளர்களைத்தேர்ந்து வழங்கி வருபவர் குறிஞ்சிவேலன். நூற்றுக்கணக்கான மொழிபெயர்ப்பாளர்களை  தமிழ் மண்ணில் அடையாளங்கண்டு மேடை ஏற்றிப்பெருமை படுத்தியவர். முதல் திசைஎட்டும்  விருது வழங்கும் விழாவைச்சொந்த மண்ணான கடலூரில் நடத்தினார். வங்கமொழிக்குப்பாலமாய் விளங்கிய  சு .கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்குச்சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கப்பட்டது

இலக்கிய உலகில் சகோதர எழுத்தாளர்களை மொழிபெயர்ப்பாளர்களை கொண்டாடிய ஒரு ஆளுமை குறிஞ்சிவேலனைத்தவிர வேறுயாருமில்லை.

என்னுடைய ‘மறுபக்கம்’ சிறுகதைத் தொகுப்பு,’சில ஆய்வுகள் மதிப்புரைகள் விமர்சனங்கள்’ கட்டுரை நூல் வெளியீட்டுவிழா மற்றும் அறிமுகவிழா பல்லடம் மாணிக்கம் அய்யா முன்கையெடுக்க விருத்தாசலத்தில் 1995ல் நடந்த போது அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த குறிஞ்சிவேலன் அவர்கள்  என்னை குறிஞ்சிப்பாடி மணியம் பதிப்பகத்து  பேராசிரியர் சு.சம்பந்தம் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர்தான் என்னுடைய முதல் நாவல் ‘மண்ணுக்குள் உயிர்ப்பு’ என்னும் நூலை மணியம் பதிப்பகம் வெளியிட்டு என்னை கெளரப்படுத்தியது. பிறகு சிறுகதைத்தொகுப்புக்கள் கட்டுரை நூல்கள் என என்னுடைய  புத்தகங்கள்  தொடர்ந்து வெளிவர  மணியம் பதிப்பகம் சிறப்பாக உதவியது.

விருத்தாசலம் எழுத்தாளர் அமரர் வே. சபாநாயகம்  எழுதிய ‘ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது’  என்னும் அவரின் முதல் புதினம் குறிஞ்சிவேலன் அவர்கள் தோழமை வழிகாட்டலால் மணியம் பதிப்பகம் வெளியிட்டது. தொடர்ந்து வே. சபாநாயகம் எழுதிய  பல இலக்கிய நூல்களை மனியம் பதிப்பகம் வெளியிட்டு அவரைப்பெருமைப்படுத்தியது.

கண்மணி குணசேகரன் எழுதிய முதல் நாவல் ‘அஞ்சலை’. அதனையும் வெளியிட குறிஞ்சிவேலன் மணியம் பதிப்பகம் வழி அன்போடு உதவி செய்தவர். ஜீவகாருண்யனின்’ களரி’  என்னும் சிறந்த புதினத்தை மணியம் பதிப்பகம் வெளியிட்டது

இன்னும் இந்தப்பகுதி படைப்பாளர்களின் எழுத்துக்கள் அச்சு வாகனம் ஏற  குறிஞ்சிவேலன் பேருதவி செய்ததை எண்ணி எண்ணிப் போற்றுகிறோம்.

என்னுடைய புதினம்’ நெருப்புக்கு ஏது உறக்கம்’ தமிழக அரசின்( 2008 )விருதுபெற்றது இப்புதினத்தை குறிஞ்சிப்பாடி  அலமேலு   பதிப்பகம் வெளியிடத் துணையாக நின்ற பெருந்தகை குறிஞ்சிவேலனே என்பதை  இங்கு நிறைவோடு குறிப்பிடவிரும்புகிறேன்..

திசை எட்டும் மொழிபெயர்ப்பு இதழில் ‘திசை எட்டும் பரவ வேண்டிய கதைகள் என்னும் சிறப்புப்பகுதியை குறிஞ்சிவேலன் தொடங்கிவைத்தார். என்னுடைய ‘யாதுமாகி’ சிறுகதையைத்தேர்வு செய்து வெளியிட்டு என்னைப்பெருமைப்படுத்தியதும் என் நினைவில் வந்து நிழலாடுறது.

’கலைஞர் டிவியில் ’சிறப்பு விருந்தினர்’  நேர்காணல் நிகழ்ச்சிக்கு என்னை அனுப்பிவைத்த பெருமையும் குறிஞ்சிவேலனைச்சாரும்..

நெய்வெலி புத்தகக்காட்சி திசை எட்டும்  புத்தக விற்பனை அரங்கிலும், சென்னை புத்தகக்காட்சி திசை எட்டும்  புத்தக அரங்கிலும்  பங்கேற்றுப்பணியாற்றிய அனுபவம் எனக்குண்டு..

அண்மையில் எழுத்தாளர் விட்டல்ராவ் அவர்களை பெங்களூரில் அவர் இல்லத்தில் சந்தித்துப்பேசிக்கொண்டு இருந்தோம் எழுத்தாளர் பாவண்ணன் அவரோடு உரையாடிக்கொண்டிருந்தார்.  விட்டல் ராவ்   குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள வெங்ககடாம்பேட்டை கிருஷ்ணன் கோவிலுக்கு குறிஞ்சிவேலன் அழைத்துப்போய்க் காட்டிய நிகழ்வை அற்புதமாய் விவரித்தார். வடலூர் வள்ளல் ராமலிங்கரின் ஞானசபைக்கும் அழைத்துச்சென்றதாகக்குறிப்பிட்டார். என்னையும் குறிஞ்சிவேலன் அவர்கள் அந்த புராதன  வைணவத்திருக்கோவிலுக்கு அழைத்துச்சென்று காட்டியமை மறக்கமுடியாத  நிகழ்வாகும்.

கிட்டத்தட்ட இருபதாண்டுகளாகத் திசை எட்டும்  மொழிபெயர்ப்பிதழ் குறிஞ்சிவேலன் அவர்களின் இடையறா முயற்சியால் சீரும் சிறப்புமாகவெளிவந்துகொண்டு இருக்கிறது. ஆண்டுதோறும் திசை எட்டும்  இலக்கிய விழாக்களை தமிழமெங்கும் பெரிய நகரங்களில் நடத்தி இலக்கிய ஆளுமைகளை அழைத்துப்பேசவைத்து கெளரவம் செய்திட்ட நிகச்சிகள் எத்தனையோ.

சாகித்ய அகாதெமியார் செய்யவேண்டிய மொழிப்பணியை, ஒரு தேசியப்பணியை  குறிஞ்சிவேலன் அவர்கள்  தாம் ஒருவராகவே நல்லி குப்புசாமி செட்டியார் அவர்களின் உற்ற தோழமை உதவியோடு நிறைவேற்றிக்கொண்டுவருவது போற்றிப்பாராட்டப்படவேண்டிய விஷயமாகும்.

குறிஞ்சிவேலன் துணைவியார்காந்திமதி. அய்யாவைப்பார்க்க அவர் இல்லம் செல்லும்பொதெல்லாம் இன்முகத்தோடு உபசரித்த சகோதரியாவார்.குறிஞ்சிப்பாடி ரயில் நிலைய நிறுத்தத்திலிருந்து மீனாட்சிப்பேட்டை அவரின் இல்லம்  செல்ல இரண்டு  கிலோமீட்டருக்குள்ளாக நடக்கவேண்டிவரும். நடந்த களைப்பே தெரியாமல் விருந்து உபசரித்து நிறைவடையச்செய்வார் அந்தத்தோழியர்.  குறிஞ்சிவேலனின் மக்கட்செல்வங்கள் அவரோடு இணைந்து இலக்கியப்பணி ஆற்றிவருவதும் மகிழ்ச்சிதரும் விஷயங்களாகும்.

நான் தொலைபேசித்துறையில்  படைப்பாளிகள் நிறைந்த விருத்தாசலத்தில் இருபதாண்டுகள் பணியாற்றினேன். கடலூரில் 13 ஆண்டுகள் பணிய்யாற்றிப்பின் சென்னைக்கு வந்தேன். கடலூர் மாவட்டத்துக்குள் பணியாற்றியபோது  மீனாட்சிப்பேட்டை அவர் இல்லம் செல்வதும் திசைஎட்டும் பற்றி  விவாதிப்பதும் அவ்வப்போது நடைபெறும்.

ச.சிவராமன் வேர்கள் ராமலிங்க, ஜீவகாருண்யன், பல்லவிக்குமார் பாரதிக்குமார்,ஆயிஷா நடராஜன், செல்வம், கசப்பு குப்புசாமி என அன்பு நண்பர்கள் கூடுவோம். எல்லோருடனும்  சிரித்த முகத்தோடு பழகி இலக்கியத் தோழமையைப்பகிர்ந்துகொண்ட பெரிய மனதுக்காரர் குறிஞ்சிவேலன் அவர்கள்.

வையவனின் தாரணி பதிப்பகம் வெளியிட்ட ‘உலகச்சிறுகதைகள்’ என்னும் மொழிபெயர்ப்பு நூலை அவருக்குக்காணிக்கை ஆக்கினேன்.என் மனம் நிறைவுற்றது.

குறிஞ்சிவேலனுக்கு அறுபது ஆண்டு நிறைவு குறிஞ்சிப்பாடியில் சிறப்பாக நடைபெற்றது. அப்போதும் ஒரு இலக்கிய மலர் வெளியிடப்பட்டது. அதனில் பட்டுக்கோட்டை இலக்கியச்சிறகு  ஆசிரியர் மு. ராமலிங்கம்  எழுதியக்கட்டுரை  நினைவுக்கு வந்துபோகிறது.  ஐந்து செண்ட் நிலம், முழுமையைத்தேடும் முழுமையற்றபுள்ளிகள் இவை மு.ராமலிங்கத்திற்கு மிகவும் பிடித்த  குறிஞ்சிவெலனின் மொழிபெயர்ப்புக்களாகும்.

மொழிபெயர்ப்பு பற்றித் ’ தமிழ்ப்பல்லவி ’இதழுக்கு அளித்தபேட்டியில் குறிஞ்சிவேலன் இப்படிக்குறிப்பிடுகிறார்.

‘மூலமொழியிலுள்ள வரிகளை மொழிமாற்றம் செய்வதல்ல மொழிபெயர்ப்பு. மூலமொழியிலுள்ள ஆத்மாவை அப்படியே மாற்றும் மொழி( Target Language) க்குக்கொண்டுவரவேண்டும். மொழியாக்கம் என்பது நாற்றைப்பிடுங்கி இன்னொரு இடத்தில் நடுவு செய்வது போன்றதாகும்’

தமிழ் மொழியின் மொழிபெயர்ப்பு வரலாறு வரையப்படும்போது குறிஞ்சிவேலனின் சாதனைகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்.

‘செயற்கரிய செய்வார் பெரியர்.

--------------------------------------------------

 

 

 

 

 

 

 




நிலநடுக்கோடு படைத்திட்ட விட்டல் ராவ்

 விட்டல் ராவின் ’நில நடுக்கோடு’     -

 

கன்னடத்தைத் தாய்மொழியாகக்கொண்டவர் விட்டல் ராவ். தமிழில் பத்து புதினங்களுக்கு மேலாக எழுதியுள்ளார். சிறுகதைத்தொகுப்பு கட்டுரை  நூல் எனப் பலவற்றைப்படைத்துள்ளார். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துலகில் உழைப்பாளி.. தீவிர இலக்கிய வாசகர்கள் அவர் எழுத்துக்களை நிச்சயம்  வாசித்தே  இருப்பர்.

தொலைபேசித்துறையில் சென்னையில் பணியாற்றி,  பணி ஓய்வுக்குப்பின் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவரது ‘போக்கிடம்” புதினம் இலக்கியச்சிந்தனையின் பரிசு (1971) பெற்றது.

நில நடுக்கோடு என்னும் புதினம் அனேகமாக விட்டல் ராவின் சுயசரிதை என்றும் சொல்லிவிடலாம்.  அவர் வாழ்க்கையே  ஒரு  நிலநடுக்கோடு என்கிறபடி அனுபவம் ஆவதை வாசகன்  இங்கே அவதானிக்கலாம்.

 சென்னைப் பெரு நகரை அழகுச்சித்திரமாக இப்புதினத்தில் தரிசிக்க வாய்க்கிறது. தந்தையை இழந்தவன்  தேவ். இப்புதினத்தின் கதா நாயகன். ஹமீத் என்னும் இசுலாமியர் தேவின் தந்தைக்கு நண்பர். அவரே தேவுக்கு ஆதரவாக இருந்து வழி காட்டுகிறார். அவரே தேவை சென்னை நகருக்கு எக்ஸ்ரே டெக்னீஷியன் பயிற்சிக்கு அனுப்பி வைக்கிறார். சென்னையில் தங்குவதற்குத் தனக்கு நெருக்கமான  மிஸ்டர் ஹெல்ட் என்னும் ஒரு ஆங்கிலோ இந்தியர் குடும்பத்தைத் தேர்வு செய்து  அங்கேயே  தேவை அனுப்பி வைக்கிறார்.

ஓலவக்கோடு பாசஞ்சர் ரயில் நிலக்கரியால் இயங்கி நீராவியால் இழுத்துச்செல்லப்பட்டதை விட்டல் குறிப்பிடுகிறார். ‘கரிதூவிக்கொண்டு கீதம் இசைத்தவாறு ரயில் பயணித்தது’  இப்படியாய் வாசகனுக்குச்சொல்கிறார்.

அன்றைய சென்ட்ரல் ரயில் நிலயத்தில் இறங்கிய தேவ் வால்டாக்ஸ் சாலையில் கிழக்குமுகமாய்  அமைந்திருந்த ரயில்வே கேண்டீனில் டிபன் சாப்பிடுகிறான். அங்கே  டிபன் சாப்பிடுபவர்களுக்குப் பல் துலக்க ‘ சிறிய டப்பா ஒன்றில் இளஞ்சிவப்பு நிற நஞ்சன் கூடு பல் பொடி வைக்கப்பட்டிருந்தது’ என்பதைத்தவறாமல் சொல்லிக்கொண்டுசெல்கிறார்.

அந்தக்காலத்தில் சென்னையில் கை ரிக்‌ஷாக்கலின் புழக்கம் அதிகம்.  தேவ் ஒரு கைவண்டியில் ஏறினான். மதராஸ் பாஷையை விட்டல் இங்கே நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

‘ நீ சொல்லுற எடமெல்லாம்  ஒரே சந்து பொந்து. நம்ம ரிக்‌ஷான்னா அசால்டா பூந்து போய்ரும்’

தேவ் விலாசத்தை  ’போர்ச்சுகீஸ்  சர்ச் தெரு பதி மூணாம் நம்பர்’ என்று சொல்ல ரிக்‌ஷாக்காரன்,

‘அதான் ஒருவாட்டி சொல்லிட்டல்ல, சொம்மா சொல்லிகினே வராதே’ என்று கட் அடித்துப்பேசுகிறான். ரிக்‌ஷாக்காரர்கள் சென்னையில்  சட்டம் பேசுவதை  இப்படியாய் அனுபவித்தவர்கள் நிச்சயம்  நினைத்துத்தான்பார்ப்பார்கள்.

தேவ் தங்கியிருந்த அந்த ஆங்கிலோ இந்தியக்குடும்பத்தில் ‘ரேடியோகிராம் ஜெர்மன் க்ரண்டிக்’  இருக்கிறது. அதனை தேவ் ஆச்சரியத்தோடு பார்க்கிறான். ’இசைத்தட்டின் ஒரு பக்கம் ஓடிமுடிந்தவுடன்  ரேடியோகிராமின் கை போன்றதொரு சாதனம் எழுந்து இசைத்தட்டைத்தூக்கித் தோசையைத் திருப்பிப் போடுவதுபோல திருப்பிவைத்து மறுபக்க இசையை ஓட வைத்த இயந்திர மின்சார சாதனையைக்கண்டு தேவு பிரமித்தான்.’  இப்படிக்குறிப்பிடுகிறார் விட்டல்.

எக்ஸ்ரே பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள் மாணவர்கள் எப்படி எப்படி எல்லாம் நடந்துகொண்டார்கள் என்பதை சுவாரசியமாகக்குறிப்பிடுகிறார்.’ ஆங்கிலோ இந்தியர்கள்  விருப்பத்தோடு வாங்கிப்படிக்கும் மெயில் இதழ் பற்றிய செய்தி வருகிறது.  ஆங்கிலோ இந்தியர்கள் குதிரைப்பந்தயமான கிண்டி ரேசில் மிகவும் ஈடுபாடு உடையவர்களாக இருந்தார்கள் என்பதனை அறிகிறோம். ஆங்கிலோ இந்தியப்பெண்கள் ‘ஜொலிக்கும் உடையில் மணக்கும் மேனியில் கிலுகிளுக்கும் சிரிப்பில் பார்க்கையில் வெகுவாய் விலகிப்போய் மிகவும் அந்நியனாய் உணர்ந்தான் தேவ். சற்று முன்னிருந்த அவர்களின் தோற்றத்தை நினைவுபடுத்திக்கொண்டான்’  ஒப்பனையின் வீச்சு ஆங்கிலோ இந்தியப்பெண்களிடையே எத்தனை ஆகிருதியோடு இருந்தது என்பதனை நாம் ஊகித்துக்கொள்ளலாம். ஆங்கிலோ இந்தியப்பெண்களுக்கு நடனம் என்பது நம்மூர்ப்பெண்களுக்குக்கோலம் போடுவது போல என்று சொல்கிறார் ஆசிரியர்.

டவுன் பஸ் கண்டக்டர் சென்னையில் அன்று  ஒரு  பைசா டிக்கட்டுக்கு பத்து பைசா வாங்கிக்கொண்டு மூன்று பைசா திருப்பித்தந்ததை வாசிக்கும்போது பிரமிப்பாகத்தான் இருக்கிறது. ‘எல்லாரும் பத்து பைசா நீட்னா நாந்தான் சில்லரைக்கு எங்கே போறது?’ எரிந்து விழுகிறார் கண்டக்டர். காலம் எங்கோ சென்றுவிட்டதை வாசகன் மனத்திரையில் கோலம் போட்டுப்பார்க்கிறான்.

திராட்சைப்பழத்தைக்கூவிக்கூவி ஏழைப்பெண்கள் விற்கிறார்கள். அவர்களை நோட்டம் விட்டுக்கொண்டு சில ஆண்கள் நிற்கிறார்கள். திராட்சைப்பழ வியாபாரம் பாலியல் ரீதியான போட்டியாகப் பொறாமையாக மாறிவிடுகிறது. திராட்சை விற்கும் பெண்களின்  குடிகார கணவன்மார்கள் அவ்விடம்  தோன்றி ஜபர்தஸ்து காட்டுகிறார்கள்.

‘இன்னாம….. இன்னாம…… கம்னிரும…’ என்றபடி.

 அங்கே போலிசு வருகிறது.

லத்தியால் தட்டுகிறது. விரட்டுகிறது. இப்போது அந்த பழ வியாபாரப்பெண்களிடையே வெறுப்பு பொறாமை சண்டையெல்லாம் மறைந்து ஒற்றுமை சகோதரிப்பாசமெல்லாம்  திரும்பியிருந்தன.

‘ஏய் மாமன் வர்ராண்டி …. மாமன் வர்ரான்…’

‘யக்கா, மாமன் வர்ரான்’   ஓர் அழகுச்சிறுகதையாக இதனை வாசகன் அனுபவிக்க முடிகிறது.

தேவ் ஃபஸ்ட் லைன் பீச் பக்கம் செல்கிறான். சிறுநீர் கழிக்க இடம் தேடுகிறான். சுண்ணாம்புக்காரை கட்டுமானம் சிலதுகள் கண்ணில் படுகின்றன. இவைதான் இயற்கை அழைப்புக்குப் பொது ஜனத்திற்கு  ஒத்தாசை. அங்கு எதிர்படும் ஒரு பொது ஜனம் தேவிடம்  இப்படிப்பேசுகிறது.

‘இதெல்லாம் உலக மகாயுத்தம் வந்தப்ப  அவங்க கட்டின வார் பங்கருங்க. பங்கர்னா பதுங்கியிருந்து எதிரியை சுடற அறை. எதிரி கப்பலுங்க வந்து ஹார்பரைத்தாக்கினா மறைஞ்சியிருந்து சுடறதுக்குன்னு இந்த சந்துங்க. இது மாதிரி இந்த பீச்சுல ஏழெட்டு பங்கர் இருக்கு. தோ தெரியுதா?’

மருத்துவமனையில் வார்டு பாயாக ஆரிமுத்துக்கு  அரசு  வேலை. வெளியிலும் டாக்டராக வேலை பார்ப்பது.  போலி டாகடர்தான். மருத்துவ மனையிலிருந்து மருந்துகள் திருடுவது அரசாங்க மருத்துவ மனையிலுள்ள நோயாளியை  தன் வீட்டுக்கு சிகிச்சைக்கு அழைப்பது எனப்பல அல்டாப் வேலைகள்  செய்து மாட்டிக்கொண்ட ஆரிமுத்து ஒரு நோயாளியை இறக்கவும் விட்டு விடுகிறான். ஆரிமுத்து பணி நீக்கம் செய்யப்படுகிறான். விசாரனை தொடர்கிறது. தேவ் அத்தனையும் பார்க்கிறான்.

புரசைவாக்கம் செயிண்ட் இமானுவேல் சர்ச் பற்றிய செய்தி. ’தேவாலயம் பெரிது. பெரிய ஜன்னல் கண்ணாடிகள் ஸ்டெயின் கிளாஸ் ஓவியங்களால் அழகுறத்தோன்றின.போலவே அதன் மணியோசையும். மணியோசைக்கு ஒருவித பூடகமான தெய்வீக சக்தி இருப்பதை பல கோயில்களிலும் கிறிஸ்துவ தேவாலயங்களிலும் கேட்டுணர நேர்ந்திருக்கிறது’

ஜான் த பாப்டிஸ்ட் கோலார் தங்க வயலில் பனிசெய்தவர். சென்னை வருகிறார். ஓயாமல் இருமுகிறார். தங்க சுரங்கப்பகுதியில் சயனைட் பயன்படுத்தப்படுவதாகவும் அதனால் அனேகர் சீக்காளியாகி வேலையை வேண்டாமென்று சொல்லி பெங்களூர் சென்றுவிட்ட விஷயமும்  நமக்குச்சொல்லப்படுகிறது.

சென்னைக்கடற்கரையில் கூவம் கடலோடு கலக்குமிடத்தில் காதல் கடற்கரை இருந்ததை விட்டல் ராவ் பதிவு செய்கிறார்.’ அங்கங்கே  இடம் விட்டு இடம் பூக்காத தாழம்பூ புதர்கள் மற்றும் பிற புதர்கள் மண்டிக்கிடக்கும் ,மணல்வெளி இந்த சூழலின் வசதியில் இளஞ்சோடிகள், கள்ளக்காதலர்கள் புதுமணத்தம்பதிகள், என்று ஜோடி ஜோடியாய் ஆண்கள் பெண்கள் தங்கள் அந்தரங்கம் பேணி யார் பார்வைக்கும் சட்டென்று பட்டுவிடாமல் செளகர்யமாய் ஒளிந்து உட்கார்ந்தோ அருகருகே சயனித்தோ ஒருவர் மடியில் இன்னொருவர் சாய்ந்தோ உரசி உலகை மறந்து உவகையுறும் விதத்தில் அவர்களுக்கு அந்தக்கடற்கரைக்காணி நிலம் கிடைத்திருக்கிறது. காதலே இங்கு பூர்ண சுதந்திரமும் செளகர்யமுமில்லாமல் கள்ளத்தனமாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது.’

மரினா கடற்கரையை கண்முன்னே கொண்டு நிறுத்துகிறார் விட்டல் ராவ். காணி நிலம் என்றதும் பாரதியின் நினைவும் காதல் காதல் காதல் என்னும் அவரின் காதல்பாட்டு வரிகளும்  மனத்திரையில் எட்டிப்பார்க்கின்றன.

ஆங்கிலோ இந்திய குடும்பத்தை விட்டு வேறு இடம் செல்லவேண்டிய சூழல் தேவுக்கு வந்தது. அவர்கள்  வீட்டு லீசு முடிந்து வீட்டைக்காலிசெய்ய தேவும் வேறு அறைக்குச்செல்வது என முடிவாகியது. அப்போதுதான் முதல் முறையாக மின்சார ரயிலில் ஏறுகிறான் தேவ்.

‘கக்கூஸ் இல்லையா?’

‘அதெல்லாம் இதிலே இருக்காது’ அறை தேடிகொடுக்கும் புஷ்பநாதன் தேவுக்குப்பதில் தருகிறான்.

மின்சார விசிறி சுழன்று சுழன்று ரயில் பெட்டியில் வீசுவது காண்கிறான் தேவ். ரயில் பெட்டியில் ‘பில்ட் இன் நேப்பிள்ஸ், இட்டலி’  என்கிற விவரம் எழுதியிருப்பதை தேவ் படித்துப்பார்க்கிறான்.

 நுங்கம்பாக்கம் செளராஷ்டிர நகரில்  தேவ் தங்குவதற்கு கொட்டகைக் ஏற்பாடாகிறது.  அது தெலுங்குப்பெண் கக்கூஸ் அள்ளும் குடியிருப்பு. காலை ஏழரைக்குத்தான் சுத்தம் செய்யும்  ஆள் வரும். அதற்கு நாம்தான் தண்ணீர் இறைத்து ஊற்ற வேண்டும். குடியிருப்பவர்களுக்கு அது முறைப்படி வரும். அவள் தண்ணீர் சேந்திவிடமுடியாது. தொடர்ந்தார்போல் மாட்டுக்கொட்டகை ஒன்று. கொசுக்களின் ஆக்கிரமிப்பு.  தங்கும் அறையிலோ மூட்டைப்பூச்சிகளோடு போர்.  ஆக தேவ் சண்முகராயன் தெருவுக்கு குடிமாறுகிறான். அது ஏன் மலம் அள்ளுபவர்களும் செறுப்புத்தைப்பவர்களும் தமிழ் மண்ணில் தெலுங்கு பேசிகளாக மட்டுமே இருக்கிறார்களோ? ஒட்ட தெலுங்கு ’ கிந்த குந்து’ (கீழே உட்கார்) அவர்கள் பாஷை.

ஆங்கிலோ இந்தியரை ஆப்பக்காரன் என்று ஒரு கிழவி அழைப்பதும் நமக்குச்செய்தியாகிறது. ஹாஃப் காஸ்ட் காரன் ( கலப்பினம்) என்பது ஆப்பக்காரனாய் மாறிய  அந்த சூட்சுமம் சொல்லப்படுகிறது.

சினிமா சுவரொட்டிகளோடு  சகோதரர் பாலாசீர் லாறி பிரசங்கக்கூட்ட அழைப்பான’ குருடர்கள் பார்க்கிறார்கள்,செவிடர்கள் கேட்கிறார்கள் ஊமைகள் பேசுகிறார்கள் சப்பாணிகள் நடக்கிறார்கள்’’ என்பதையும் விட்டல் ராவ் குறிப்பிடுகிறார்.

எக்ஸ்ரே பயிற்சியில் சேகரித்த எலும்புத்துண்டுகளை சேலம் வீட்டில் அழகாய் அடுக்கிவைக்கிறான் தேவ். அவன் தங்கை இரவில்  அவை கண்டு அரண்டுபோகவே அவன் அம்மா அவைகளை சுடுகாட்டுக்குக்கொண்டுபோய் எறியச்சொல்கிறாள். சேலம்  கல்ரம்பட்டி சுடுகாட்டில் கொண்டுபோய்  எலும்புகளை எறிந்துவிட்டு தலைமுழுகிக்குளித்து வீட்டுக்கு வருகிறான் தேவ்.

 எக்ஸ்ரே டெக்னீஷியன் வேலை  உடனே கிடைப்பது  சாத்தியம் இல்லை என்பதால் தேவ்  மத்திய அரசின்  டெலிபோன் ஆப்ரேட்டர் வேலைக்கு விண்ணப்பிக்கிறான்.  ஆங்கிலோ இந்தியப்பெண் உதவி செய்கிறாள். மவுண்ட்ரோடு தொலைபேசியகத்தில் வேலையில் சேருகிறான்.

லைன்மென் யூனிஃபார்ம்,  பற்றிப்பேசுகிறார். ‘கவர்மெண்டிலே லோயஸ்ட் கொடேஷன் கால்டு ஃபார்னு  கேட்டாக்க இதுமாதிரிதான் சப்ளையாகும்’ அரசின் மீதும்  நல்ல விமரிசனம் வருகிறது.

சிப்பந்திகளில்  பிரம்மசாரியாயிருப்பவர்கள் பருவமழைக்காலத்து வேலைப்பளு ,கெடுபிடி, நெருக்கடி நிலைமையைக்கருத்தில்கொண்டு இரவு பகலாய்  இணைப்பகத்திலேயே இருந்துவிட்டனர்.

‘ஓ டி. யாம் ஓ. டி . யாருக்கய்யா ஓவர்டைம் வேணும்.  ஒண்ணும் வேணாம் ஆளவுடு படுத்தா போதும்னு இருக்கு’

‘’சார் இந்த போஸ்ட்ல பாம்பு ஏறிப்படுத்திகினுருக்கு என்னால ஆவாது’

இவ்வகை கெடுபிடிப்பேச்சுக்களையும் விட்டல் ராவ் பதிவு செய்திருக்கிறார்.

தேவ்  ஒரு  நாள்  சேலத்தில்  பித்துக்குளி முருகதாஸ் கச்சேரிக்குப்போய்வருகிறான். சென்னையிலிருந்து  சேலத்திற்கோ  டிரெயின்  எஞ்சின் அறைப்பயணம்.  ஷொரனூர் பாசஞ்சர் வண்டி.  ஆங்கிலோ இந்திய நண்பர் லான்சி  தேவ்வை  சேலத்திற்குக் கூட்டிப்போகிறார்.

‘முருகதாசின் குரலும் மொழி ஞானமும் தேவுவை பிரமிக்க வைத்தது.சந்நியாசிபோல காவிக்கோலத்தில் தலைக்குக்க்காவி கட்டி,கருப்புக்கண்ணாடி அனிந்திருந்த முருகதாஸ் ஹார்மோனியத்தோடு இசையில் நடனமாடினார்.’  என்று சொல்கிறார் விட்டல்.

பிறகு ஒரு சமயம் சென்னையில் ஜெனரல் பாட்டர்ஸ் சாலை அருகே பிள்ளையார் கோவிலில்  பித்துக்குளி முருகதாஸ் கபீர் தாஸ் பக்திப்பாடலை ப்பாட   ‘இந்தியில் ஏன் பாடுகிறாய் நிறுத்து,  ’தமிழ் எங்கள் உயிர்  இந்தி எங்கள்  மயிர்’ எனக்கூவிக்கொண்டு ஒரு  கும்பல் வருகிறது. பிள்ளையாருக்கும் முருகதாசுக்கும் இடையே மிகப்பெரிய கட்டி கல்பூரம் ஏற்றி  முருகதாசை மூச்சுத்திணற வைத்து கச்சேரியை நிறுத்துகிறது.   கலவரம். தேவ் செருப்பு வார் அறுந்து ஓடியதாய்க் குறிப்பிடுகிறார் விட்டல்.

பிரதமர் நேரு காலமான துயர  அறிவிப்பு வருகிறது. தொலைபேசிகள் அத்தனையும் இயங்கி எக்சேஞ்ச் படு படு  பிசியாகிற விஷயம் சொல்லப்படுகிறது.

நாட்டில் உணவுப்பஞ்சம்  ‘தினமும் ஒருவேளைச் சாப்பாட்டை விட்டு விடவும்-மிஸ் எ மீல்- ப்ரொகிராம் பிரதமரால் மக்களுக்கு  அறிவிக்கப்படுகிறது.

இந்தி மொழி மத்திய அரசு ஊழியர்களுக்குச்சொல்லிக்கொடுக்கப்படுகிறது. மைய அரசு  தரும் சலுகை சன்மானம் உண்டு.’ பரீட்சையிலே கேள்விக்கு பதில் எழுதத்தெரியலேனா கேள்வித்தாளை அப்படியே பாத்து பிரதியெடுத்து எழுதித்தந்தா போதும்,பாஸ் மார்க் போட்டுடுவோம்’ இந்தி கற்பிக்கும் ஆசிரியை சொல்கிறார்.

சிவப்புச்சாயம் பூசிக்கொண்ட தொலைபேசி

 தொழிற்சங்க  கூட்ட அரங்குகள் பற்றியும் தவறாமல் குறிப்பிடுகிறார் விட்டல்.

எம் ஜி ஆரை எம் ஆர் ராதா  துப்பாக்கியால் சுட்ட நிகழ்வு வருகிறது. தமிழகமே அல்லோல கல்லோல படுகிறது. பிரபல நடிகரின் உயிர் பிரச்சனை ஆனது. இது  எதிர்க்கட்சிக்கு’ கூரையைப்பிய்த்துக்கொண்டு கொட்டிய கணக்கு’  என்கிற கூர்மையான அரசியல் விமரிசனம் வைக்கிறார் விட்டல் ராவ்.

அண்ணா மறைந்த செய்தி அதன் பின் நிகழ்வுகள் பற்றியும் விவரம் சொல்கிறார் விட்டல்..

நாடு தழுவிய வேலை நிறுத்தம் வருகிறது. தோழர்கள் ஜெகனும் முத்தியாலுவும்  கூட்ட நிகழ்ச்சியில் பேசுவதாயிருந்ததால் ஆஜர் முற்றிலுமாயிருந்தது. மாலையில் தோழர் மஜீதும்,ஏகேவியும் கலந்து கொள்வதாயிருந்தது.  விட்டல் எதனையும் விட்டு வைக்கவில்லை.

தேவ் கமலம் என்றொரு பெண்ணை க்காதலித்து மணக்கிறான். திருநீர்மலைக்கோவிலில் திருமணம் நடக்கிறது. நண்பர்கள் மட்டுமே உதவி. உதவிக்கு வேறு யாருமில்லை.

 பின்னர் ஒரு நாள்  பெண்ணின் தந்தை மருத்துவ மனையில் இருக்கின்றபோது தன்னுடைய குருதியை அவருக்குக்கொடுத்து அவரை தேவ் காக்கிறான்.  உரவு துளிர்க்கிறது. தேவின் தாய்  செங்கல்பட்டில் மகள் வீட்டில் இருந்துவிட்டு உடல்நிலை மோசமாகி தேவ் இல்லம் வருகிறாள் மறு நாளே  மரணிக்கிறாள்.

தேவ் என்னும் கதாபாத்திரம் வழி  உலகைப்புரிந்துகொள்வதெப்படி என்னும் விஷயத்தை வாசகர்க்கு எளிதாக்குகிறார் விட்டல் ராவ்.

,  இவண் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையைச்சித்திரமாக்கித்தந்திருப்பதால் எழுத்தாளர் பாவண்ணன் இப்புதினத்தை ‘விடுபட்டவர்களின் வரலாறு’ என்று  பொருத்தமாகவே அழைக்கிறார்.

பாரதிபுத்தகாலயம் வெளியிட்டுள்ள இந்நூல் வாசகர்க்கு வெகு நிறைவு தருகிறது.

-------

 குன்றக்குடியை உள்வாங்குவோம்.            

 

தவத்திரு  குன்றக்குடி அடிகளார் நூல்திரட்டு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை நூலை சாகித்ய அகாதெமி வெளியிட்டுள்ளது. தொகுப்பாசிரியர் மரு.பரமகுரு.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்(1925-1995) குன்றக்குடியிலுள்ள திருவண்ணாமலை ஆதீனத்தின் 45 வது குரு மகா சந்நிதானம் ஆவார்.

 அடிகளார் பல்வேறு விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றவர். சங்க காலம் தொடங்கிச் சமகாலம் வரைக்குமான தமிழ் இலக்கியங்கள் தத்துவங்கள் ஆகியவற்றைச்சமுதாய நோக்கோடு ஆய்வு செய்தவர். அடிகளார் எழுதிய தேர்ந்த  கட்டுரைகள்  சில அடங்கிய தொகுப்பே  இப்புத்தகம்.

சங்க காலத் தமிழர் வாழ்வியல் தொடங்கி சைவ சித்தாந்தமும் மார்க்சியமும் என்கிறவரைக்குமான  17 கட்டுரை மலர்களை இவண் நுகர வாய்க்கிறது. குன்றக்குடி அடிகளார் வாழ்க்கைக் குறிப்பு என்னும்  பகுதியிலிருந்து சில செய்திகளை நாம்  வாசிக்கிறோம். மனம் நிறைவெய்துகிறது.

குன்றக்குடி அடிகளார் 11 ஜூலை 1925ல் நடுத்திட்டு கிராமத்தில் தஞ்சைப்பகுதியில் பிறந்தவர்.இயற்பெயர் அரங்கநாதன்  அடி நாட்களில் சிதம்பரம் அண்ணாமலை நகரில் வாழ்ந்திருக்கிறார். ரா.பி சேதுப்பிள்ளை, சுவாமி விபுலாநந்தர் ஆகிய தமிழ் அறிஞர்களோடு தொடர்புகொண்டவர். இந்திய விடுதலைப்போராட்டத்தில் நாட்டம் மிக்கவர்.  பூதான இயக்கப்பெருந்தலைவர் வினோபாபாவே பெயரில் படிப்பகம் நடத்தியிருக்கிறார்.

தருமை ஆதீன 25 ஆவதுசந்நிதானம் தீட்சை தர  அரங்கநாதன், கந்தசாமித்தம்பிரான் ஆகிறார் பின்னர் தருமபுரம் தமிழ்க்கல்லூரியில் பயில்கிறார். 1949 ல் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன இளைய பட்டம் ஏற்கிறார்.  ஸ்ரீலஸ்ரீ தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என்கிற பட்டம் ஏற்கிறார். . 1952 ல் தமிழ்நாடு நாளிதழ் அய்யாவுக்குத் தவத்திரு குன்றக்குடி அடிகளார்  என்கிற பெயர் சாற்றி அப்பட்டப்பெயரைத்தொடங்கிவைக்கிறது.

1954ல் இராஜாஜி தலைமையில்  அடிகளார் அருள்நெறித் திருக்கூட்ட மாநாடு நடத்துகிறார்.1956 ல் அறிஞர் அண்ணா குன்றக்குடி மடத்துக்கு வருகை தருகிறார்.  அடிகளார் பின்னர்   நாத்திக இயக்கத்தலைவர் ஈ.வெ .ரா பெரியாரைச்சந்திக்கிறார். சர்வோதயத்தலைவர் வினோபாபாவே திருமடம் வந்து  அடிகளாரைக்காண்கிறார்.1958 ல் பாரதப்பிரதமர் நேரு குன்றக்குடி மடத்திற்கு விஜயம் செய்கிறார்.

 அடிகளார் 1961ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழ் அருச்சனை தொடங்கும் நிகழ்வில் பங்குகொள்கிறார். 1966ல் தமிழ் நாடு தெய்வீகப்பேரவை தோற்றம் பெருகிறது.

1969ல்  அன்றைய முதல்வர் மாண்புமிகு மு. கருணாநிதி  அவர்கள் விருப்பத்தின்படி அடிகளார் சட்டமேலவை உறுப்பினரானார். 1970 சாதி வேறுபாடின்றி அனைவரையும் அருச்சகர் ஆக்கவேண்டும் எனப்  புரட்சி உரைநிகழ்த்துகிறார்.

இராமநாதபுரம், மண்டைக்காடு புளியங்குடி ஆகிய இடங்களில் நிகழ்வுற்ற இனக்கலவரங்களுக்கு எதிராக  அடிகளார் அமைதிப்பணி ஆற்றியவர். தமிழகரசு நிறுவிய திருவள்ளுவர் விருதினைமுதன் முதலில் பெற்றவர். குன்றக்குடியில் அடிகளார் செய்திட்ட சமூக சேவை இந்திய அளவில் புகழ் பெற்று அது Kunrakkudi Pattern என்று அறிவிக்கப்பட்டது.

1989ல் அண்ணாமலைப்பல்கலைக்கழகம் அடிகளாருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிப்பெருமை சேர்த்தது.1993ல் மதுரைக்காமராசர் பல்கலைக்கழகம் தமிழ் பேரவைச்செம்மல் என்கிற விருதினை வழங்கியது.

1995ல் அடிகளார் இறைநிலை எய்தினார்.

இக்கட்டுரைத்தொகுப்பில்

’சங்கத்தமிழர் வாழ்வியல்’ என்னும் முதல் கட்டுரை தமிழர்தம் தொன்மைச்சிறப்பு பேசுகிறது .தமிழ் மாந்தர் தம் அறம் பண்டு உச்சிமேல் வைத்து மெச்சத்தக்கதாய் இருந்தமையை எடுத்துவைக்கிறது.

புறம் 18  ’  நீரின்றி அமையா யாக்கைக்கு எல்லாம்

                   உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

                   உண்டி முதற்றே உணவின் பிண்டம்

                  உணவெனப்படுவது நிலத்தொடு நீரே.’

என்று பேசும் குடபுலவியனார் கவிதை ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரே தமிழர் நீர் ஆளுகையின் இன்றியமையாமையை அறிந்திருந்தனர் என்பதை அறிவிக்கிறது.

நாடென்ன காடென்ன மேடென்ன பள்ளமென்ன இவை கிடக்கடும் ஆடவர் நல்வழி செல்லுதல்மட்டுமே ஒரு நாட்டின் மாண்பினைப்பேணுகிறது என்கிறது சங்கப்பாட்டு.

தலைமுடி  ஒன்றுகூட நரைத்தலே இல்லாது ஒரு முதியவர் காட்சிதருகிறார். காரணம் யாது என வினவ, விடை வருகிறது.

’யாண்டு பலவாக நரையில ஆகுதல்

யாங்காகியர் என வினவுதிராயின்

மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர்

யான்கண்டனையர் என் இளையரும் வேந்தனும்

அல்லவை செய்யான் காக்கும்.அதன்தலை

ஆன்றவிந்தடங்கிய கொள்கைச்

சான்றோர் பலர் யான் வாழுமூரே’

புலவர் பிசிராந்தயர் பெருமையோடு குறிப்பிடும் இச்செய்திகள்நம்மை என்றும் வியக்கவைக்கின்றன.

கணியன் பூங்குறனாரின் தமிழர் பெருமை பேசும்பாடல் தொட்டு அடிகளார்பேசுகிறார்  யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று தொடங்கும் அந்தப்பாடல் என்றும் நம் சிந்தனையைக்கிறங்கவைக்கும்பாடலாகும். இறப்பு என்ன நமக்கு புதியதா வாழ்வது இன்பம் கொணர் மகிழ்ச்சி ஊற்றா என்று சொல்லிக்கொண்டே போகிறார். இறுதியாய்

மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே! என்று முடிக்கிறார்.

திறவோர் காட்சியில் நாங்கள்  அறிவில் தெளிந்தனம் ஆகவே பெரியோரை வியத்தலும் சிறியோரை இகழ்தலும் செய்யோம். சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே என்கிறாரே புலவர். இந்தப்பண்பாட்டின் உச்சத்தை எட்டிய தமிழ் மக்களின்று எப்படி எப்படி எல்லாம்  நடந்துகொள்கிறார்கள் என்பது அனுபவம் ஆகும் போது  அடிகளாருக்கு நெஞ்சம் நோகிறது.

‘செல்வத்துப்ப்யனே ஈதல்

துய்ப்பேம் எனினே தப்புந பலவே  (புறம் 189)

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கே  தமிழ் மண்ணில் பொதுவுடமை துளிர்விட்டிருக்கிறது. இச்செய்தியை உலகத்திற்கு ஓங்கிச்சொல்லவேண்டியது தமிழ்மொழியை  ஆழ்ந்து படித்த  ஒவ்வொரு மனிதனுடைய கடமையேயாகும்.

பரிபாடல் 5.78-81 இப்படிப்பேசுகிறது.

..யாம் இரப்பவை

பொருளும் பொன்னும்போகமும் அல்ல நின்பால்

அருளும் அன்பும் அறனும் மூன்றும்

உருள் இணர்க்கடம்பின் ஒலிதாரோயே

 உலகம்மாயை என்று கூறிய ஆதிசங்கரர் கனகதாரா தோத்திரம் இயற்றி பொன்மழை பெய்ய அவாவுகிறார். ஆனால் பரிபாடல் தந்த தமிழ்க்கவியோ இறைவனிடம்  பொருளும்பொன்னும்   போகமும் எனக்கு  வேண்டாம் அருள் வேண்டும் அன்பு வேண்டும் அறன் வேண்டும் என்கிறார். எத்தனைப்பெரிய வேறுபாடு.

அடுத்துவரும் கட்டுரை ‘வாழ்விக்க வந்த வள்ளுவம்’. அது அறிவு நெறி, ஆள்வினை  பொருள், அன்பு நெறி,ஒழுக்க நெறி, ஒருமை நெறி, அருள் நெறி, என்று பல்வேறு தளங்களில் அடிகளாரால் இவண் திருக்குறள் ஆராயப்படுகிறது.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு( குறள் 80)

இவ்வுலகில் உயிர் நிலைத்து நிற்பதற்கு அன்பு மட்டுமே ஆதாரம் என்கிறார் வள்ளுவர்.

திருக்குறள் போன்ற ஒரு முழுதுறழ் அறநூலைத் தர தகுதியடையதாக வாழ்ந்த இனம் தமிழினம் என்று சிறப்பாகப்பேசுகிறார் அடிகளார்.

மூன்றாவது கட்டுரை சிலம்பு நெறி.  அடிகளார் இக்கட்டுரையில் தீண்டாமை குறித்துப்பேசுகிறார்.அதன் கொடுமைகள் என்றேனும் முடிவுறுமா என்று ஏங்குகிறார்.மனித இனம் இன்னும் தன்னைத்திருத்திக்கொள்ளாதது ஏனோ என்று கேள்வி வைக்கிறார்.

‘தீண்டாமை குற்றம்.தீண்டாதார் என்று ஒதுக்குதல் கூடாது.சாதிவேற்றுமைகளை அறவே விலக்கவேண்டும்.எல்லாரும் ஓர்குலம் என்ற கருத்து சங்க காலத்திலிருந்து இலக்கியங்களில் ஒரேமாதிரியாக உரத்த குரலில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.யாராவது கேட்டார்களா? பின்பற்றினார்களா? படித்ததில் என்ன குறைவா?உரைகள் எழுதி அச்சிடவில்லையா?பட்டிமன்றங்களில் பேசி மகிழவில்லையா? ஆனால் நடைமுறை என்பது என்ன?’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது என்னவாயிற்று? தெருச்சண்டைகள்தானே வளர்ந்தன.’

இப்படி அடுக்கிக்கொண்டே போகிறார் அடிகளார்.

நான்காவடாக வரும் கட்டுரை ’திருமுறைகளின் மாண்பு’   இவண் அப்பர் பெருமான் குறித்துச்செழுமையான விவாதம் வைக்கிறார்.

தமிழ்ச்சமூகத்தின் மொழிவழி நாகரிகத்தையும் அவர் பேணிக்காக்கப்பெருந்தொண்டாற்றியமை மறக்க முடியாதது.சமணத்தின் நுழைவினால் சைவமும் தமிழும் குன்றிக்குற்றுயிராகிக்காலப்போக்கில் மறைந்தொழிய ஏதுவாகுமெனக்கருதியே சமணர்களால் உண்டான இன்னல்களை எல்லாம் எதிர்த்துப்போராடினார்.இசையைத் துய்க்கத்தெரியாத அனுபவிக்கத்தெரியாத அன்றையச்சமணர்கள்’மலரை மணக்காதே’ என்பதுபோல்’இசையைப்பொழியாதே’ என்பதுபோல் ‘இசையைச்சுவைக்காதே’ எனத்தடைபோட்டார்கள். தடைவரினும் படைவரினும் தளராது தன்னம்பிக்கையால் உளவலிமையால் இன்னிசை பொழிந்து இசைத்தமிழ் வளர்த்தார் அப்பரடிகள்: என்று அரிய செய்தியை எடுத்து வைக்கிறார். இதுகாறும் இசைகுறித்துச்சமணம் என்ன விளக்கம் தருகிறது என்று  ஆய்வாளர்கள்யாரும் எடுத்து இயம்பியதாகத்தெரியவில்லை. இனி இது குறித்து செழுமையான விவாதம் எழுப்பப்படவேண்டும்.

சமணம் இப்படி  என்றால் பெளத்தம் மதம் இசை குறித்து என்ன நிலைப்பாடு கொண்டுள்ளது என்பதுவும் விவாதப்பொருள் ஆகி  கருத்தாக்கங்கள்  பெறப்படவேண்டும்.

தமிழர் திரள் மூன்று பெரியோர்களுக்கு என்றும் கடன் பட்டவர்கள். அவர்களன்றித் தமிழ் இல்லை. அவர்கள் திருவள்ளுவர்,திருமூலர்,மாணிக்கவாசகர் ஆகியோர்.  திருக்குறளும் திருமூலமும் திருவாசகமும் நமது  சிந்தனைச்செல்வங்கள்.மனிதகுல விழுமியங்கள் அவை.

திருவாசகத்தேன் என்பது அடுத்தக் கட்டுரை. அடிகளார் சராசரி மனிதனைக்குறித்துப் பேசுகிறார். மனிதன் விரும்புவது புகழ்.ஆசைப்படுவது புகழ்,ஆனால் புகழ் விருப்பம்கூடமனிதனைக்கெடுத்து வீழ்த்தி விடும் என்பதே அறநெறிதருமுடிவு என்கிறார்.

மாணிக்கவாசகர் உயிருண்ணிப்பத்து என்னும் பகுதியில் இறைவனிடம் இப்படியாய் விண்ணப்பம் வைக்கிறார்.

வேண்டேன் புகழ் வேண்டேன் செல்வம்

வேண்டேன் மண்ணும் விண்ணும்

வேண்டேன் பிறப்பிறப்புச்சிவம்

வேண்டார் தமை நாளும்

தீண்டேன் சென்று சேர்ந்தேன் மன்னு

திருப்பெருந்துறை இறைதாள்

பூண்டேன் புறம் போகேன் இனிப்

புறம்போகல் ஒட்டேனே.

அடுத்துவரும் இராமனும் சீதையும் என்னும் கட்டுரையில் கம்பனின் கருத்துப்படி இராமன் ஒரு சிறந்த தலைமகன் தெய்வத்தன்மை உடையவன். ஆனால் வால்மீகியின் கருத்துப்படி இராமன் ஒரு சாதாரண மனிதனே. வால்மீகி இராமனைத்தெய்வத்தன்மையுடையவனாக யாண்டும் குறிப்பிடவில்லை என்று எடுத்துவைக்கிறார் அடிகளார். தந்தைபெரியாரின் இராமாயணக்கருத்துக்கள் குறித்து

நல்லதொரு மறுப்பு விவாதமும் செய்கிறார் அடிகளார்.

பெரியார் வலிந்து மரபு மீறி பாத்திரங்களைக்களங்கப்படுத்துகிறாரே என்று ஒரு விமரிசனத்தையும் அடிகளார் வைக்கத் தவறவில்லை.

ஏழாவது கட்டுரையாக மலர்ந்திருப்பது’ குமரகுருபரரின் உயிர்க் கொள்கை’. உயிர்கள் என்றும் உள்ளவை. உயிர்கள் வளர்வதற்கு உணர்வு தேவை.உணர்வுக்குத்துணையாயிருந்து தூண்டிச்செய்வது ஆற்றுப்படுத்துவது கடவுள். இந்தச்செய்தியை குமரகுருபரரின் உயிர்க்கொள்கையாக அடிகளார் வாசகனுக்குத்தெரியவைக்கிறார்.

அடுத்துவரும் கட்டுரை தாயுமான சுவாமிகள் .  மனித உயிர் ‘அறியாமைச்சாரின் அதுவாய் அறியும்,  நெறியான போது அதுவாய் நிற்கும்’ என்கிறார் தாயுமானவர். ஆணவம் உயிரின் கண்ணை மறைத்துவிடும்.  அந்த ஆணவமே அறியாமை, உயிர் சிவ நெறி பட்டபோது ஆணவம் தானே மறைந்துபோகும்.

‘ஆரியம் கதவைச்சாத்தும்,தமிழ் கதவைத்திறக்கும்’ என்கிற ஒரு பிரத்யேக மொழிப்புரிதலை அடிகளார்  நமக்கு வழங்குகிறார்.

தொடர்ந்துவரும் வள்ளலார் நெறியில்  சமூக சிந்தனையைச்சொல்லிச்செல்கிறார் . ’நம் நாட்டிலே அர்ச்சகர் வீட்டிலே அர்ச்சகன் பிறந்துவிடுகிறான்.அவனுக்கு ஞானம் வேண்டாம் ஒழுக்கம் வேண்டாம்,ஆனால் தாசில்தார் வீட்டிலோ தாசில்தார்பிறப்பதில்லை.தண்டல் நாயகம் வீட்டில் தண்டல் நாயகம் பிறப்பதில்லை’ தண்டல் நாயகம் எனில் அது மாவட்ட ஆட்சியர் என்பதறிவோம்.

வள்ளற்பெருமான் கண்ட பொதுமை நெறி வையகத்தில் மலரவேண்டும் என அவாவுகிறார் அடிகளார். வள்ளற்பெருமான் கண்ட பொதுமை நெறி கடவுள் நம்பிக்கையில் தோன்றிய பொதுமை நெறி என்று பேசுகிறார். எள்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணி உள்ளத்தில் பூரணமாய் ஒத்து அவ்வுயிர்  முழு உரிமை உடையதாய் உவக்கின்ற மனம் வேண்டுகிறார் வள்ளலார்.

10,11,12 ஆகிய மூன்று கட்டுரைளுமே பாரதி பற்றியன. பெண் விடுதலைக்குக்குரல் தந்த பாரதியைப் புகழும் அடிகளார்’ எந்தக்காரணத்தைமுன்னிட்டும் பெண்ணை ஒரு விளம்பரப்பொருளாகப் பயன்படுத்துகிற கவர்ச்சிப்பொருளாகப் பயன்படுத்துகிற அனைத்தும் தடை செய்யப்பட்டால் ஒழிய இந்த நாட்டினுடைய பெண்களுக்குத் தரமான தகுதி வராது.’ என்கிற எச்சரிக்கையை நமக்கு விடுகிறார்.

ரஷ்யப்புரட்சியை ‘ஆகா என்று எழுந்ததுபார் யுகப்புரட்சி’ என்று  வரவேற்ற முதல் இந்தியக்கவிஞன் பாரதியைப் புகழ்கிறார் அடிகளார்.

வாணவேடிக்கைகள் அழகொழுகும் பேச்சுக்கள்,பகட்டான பேரணி,அணி அணியாக ஊர்ந்துவரும் கார்கள் இவைகள் மக்களாகிய மன்னர்களின் அதிகாரத்தைக்கெடுக்கும் முதலாளித்துவத்தின்  நச்சுப்பூச்சிகள் என்கிறார் அடிகளார். நாம் என்றுதான் விழித்துக்கொள்வது என்று வினா வைக்கிறார்.

அடுத்துவருவது குடும்பவிளக்கும் குறளும் என்னும் கட்டுரை. பாரதிதாசனின் குடும்ப விளக்கு  தமிழில் ஒரு சாகா இலக்கியம் என்று பேசுகிறார் அடிகளார். அடுத்துவரும் பட்டுக்கோட்டையின் பாடல்கள் என்னும் கட்டுரை  பொதுமைக்கவிஞர் கல்யாணசுந்தரம்   கவிதைபற்றி ச்சிறப்பாகப்பேசுகிறது.

‘எல்லோருக்கும் நம்பும்படி சொல்லும் திறனிருந்தால்

சொல்லிலே உண்மையில்லை

உள்ளதை உள்ளபடி சொல்லும் மனிதனிடம்

உணர்த்திடும் திறமையில்லை

உண்மையும் நம்பவைக்கும் திறனும் அமைந்தவனை

உலகம் ஏற்பதில்லை.’

பட்டுக்கோட்டையின் இக்கவிதை வரிகளை ச்செம்மையுறக்காட்டி அடிகளார் அக்கவிஞரை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

அடுத்து வரும் இரு பெரும் கட்டுரைகள் ஒன்று நமது நிலையில் சமயம் சமுதாயம், இரண்டு சைவ சித்தாந்தமும் மார்க்சியமும் என்பன.

சேக்கிழார் நந்தனார் வரலாற்றில் நந்தனாரைச்சிந்தை குளிரச்செவி குளிர ‘ஐயர்’ என்று பலதடவை போற்றுவது எண்ணத்தக்கது என்கிறார் அடிகளார்.

’தீண்டாமையை நமது சமயத்திலிருந்து அறவே அகற்றிக்கோடானுகோடி மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றத்தவறிவிடுவோமானால் நமது கடமையை நாம் செய்யத்தவறியவர்கள் ஆவோம்’ அடிகளாரின் அறிவுரை நம் மனம் தொட்டுப்பேசுகிறது. தொடர்கின்றன வினாக்கள்.

தமிழ் நிலத்தில், பழுத்த அனுபவத்தில் தோன்றிய இறைவழிபாடு, இன்று முதிராப்பிள்ளைகளின் சிறு விளையாட்டுப் போல் அமைந்துவிட்ட கொடுமையை நினைந்து உட்கி வெட்கமுறாதார் நெஞ்சம் என்ன நெஞ்சம்?’ அடிகளாரின் இக்கேள்வி சிந்திப்பாளர்களை உறங்கவும் விடுமா என்ன?

புழுதியில் கிடக்கும் மனிதர்களைப்பற்றிச்சிந்திக்காத இத்திருமடங்கள் என்னதான் செய்யவிருக்கின்றன?

மக்களைத்தழுவி வளர்க்காத சமய நிறுவனங்கள் எதற்காக?

நடமாடும் கோயில்களை நாடிப் போற்றாத நிறுவனங்கள் எதற்காக?

‘பதவுரையும் பொழிப்புரையும் எழுதினார்கள் இலக்கணக்குறிப்புகள் எழுதினார்கள் தெளிவாகச்சொன்னால் இலக்கியச்சிந்தனை என்ற பெயரால் திருவள்ளுவர் ஏற்றி வைத்த புரட்சி விளக்கை அணைத்தே விட்டார்கள். இன்னும் திருக்குறள் தந்த திருவள்ளுவர் வழிபாட்டுக்குத்தான் பயன்படுகிறார்.கவியரங்கம் பட்டிமன்றங்களுக்குத்தான் பயன்படுகிறார்.  படிக்கப்படிக்க வாசக  மனம் வலிக்கிறது.

விருத்தாச்சலம் நகரில் பழமலநாதர்  கீழைக் கோபுரம் முன்பாய் முற்போக்கு எழுத்தாளர் சங்க மேடையில் அடிகளார்,’ இந்த தமிழ் சமூகத்தைச்சற்றாவது  உயர்த்திவிட யான்  அவாகொண்டேன் முடியவில்லை. என்னை வளர்த்து ஆளாக்கிய இச்சமூகத்தை ஒரு அங்குலம்  கூடப் பண்பாட்டில் உயர்த்தாமல் என் வாழ்க்கை முடியப்போகிறதே என் செய்வேன்?’ இப்படிக் கண்ணீர் மல்கி அழுத பெரு உள்ளம் அல்லவா அது. பிறகு மேடைஎதுவும் ஏறினாரில்லை. சிந்திப்பதை அவர் நிறுத்திக்கொண்டார்.

----------------------------------------------------------------------------------------------