Saturday, February 17, 2024

 

எஸ்ஸார்சி கவிதைகள்

இன்று நிகழ்ந்த இணையக்கவியரங்கில்
வாசித்த கவிதை.

ரகசியம்

என் வீட்டருகே
வீடு கட்டாத மனையொன்றில்
மாமரம் ஒன்று
பருவம் தோறும்
கொள்ளையாய்க்
காய்க்கிறது
மாவடு பறிக்கும் மாமி
மாங்காய்க்குழம்பு
வைக்கும் பெண்டிர்
உப்பு கொண்டு நசிக்கித்தின்னும் சிறுவர்
மாவத்தல் போடும் ஆயாமார்
உச்சாணிக்காய்ப் பழுத்துச் சுவைக்கும்
அணில் குருவி
என எல்லோரும்
நன்றி சொன்னார்கள்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு.
அவ்வப்போது வெள்ளநீர்
வருகையால்தான்
வீடு இன்னும்
எழாமல் கிடக்கிறது
வெறும் மனையாய்.

அனுபவம்

கவிதை எழுதுவதை
நிப்பாட்ட வேண்டும்
தொடர்ந்தால் துயரமே
கதை எழுதுவதும்
கட்டுரை புதினம்
புனைவதும் சித்திக்காமல்
மனம் சிக்கிக்கொள்கிறது
கவிதை வரிகளில்.
மொழிபெயர்ப்புக்குப்
போனால் அவ்வளவே
சொந்தக்கற்பனையின்
ஊற்றுக்கண்
அடைத்துக்கொள்கிறது
இறுக்கமாய்.
கவிதைக்காரன் கவிதையோடு மட்டுந்தான்
வாழணுமோ.

Friday, January 26, 2024

கவிதை- வேண்டும்

 இணைய கால கவியரங்கம் 100


26/1/24


வேண்டும் 


கவிதை எழுதுதல்  பெரிசல்ல

எழுதிய அதைப்படித்துப்பார்க்க

நிறைவொன்று வரவேண்டும்

மனதிற்குள் நிச்சயமாய்.

யாரும் சால்வை போற்றி

சான்றிதழ்‌ அளித்து

சன்மானம் வழங்குவது

எல்லாம் அதற்குப்பின்னேதான்.

படைப்பாளிக்கு

என்றோ எழுதிய வரிகள்

என்றைக்கு எடுத்துப்படித்தாலும்

அவனோடு பேசிப்பார்ப்பது

வாய்க்க வேண்டும்

உயிர்ப்போடு உலவும்

அவ்வெல்லுஞ்சொல்  மனத்திரையில் பளிச்சிட வேண்டும்

வாசகனை மிடுக்காய்

அது அசைத்துப்பார்க்க வேண்டும்.

'அட' என்று கவிதை வாசித்த மனம் புன்னகைத்துப்பின்

நகர வேண்டும்.

அதற்கீடாகாது

ஒரு போதும் 

ஆயிரம் புகழ்ச்சிகள்.


Thursday, January 25, 2024

கவிதை-வருத்தம்தான்

 இணைய கால கவியரங்கம் 99


25/1/24



வருத்தம்தான்



தேவன் எழுதிய

துப்பறியும் சாம்பு

கதைப்புத்தகத்தை

உன்னிடமிருந்து கடனாகப்

பெற்றுப் படித்தேன்

திருப்பிக் கொடுத்த போது

ஒரு பக்கத்து மூலை

மடங்கியதற்காய்

என்ன பேச்சு பேசினாய் நீ

அத்தோடு சரி

உன்னிடமிருந்து எந்தப்

புத்தகத்தையும்

கடன் வாங்கியதில்லை நான்

எனக்கும் ரோசம் தான்

நீயோ விடைபெற்றுச்

சென்றுவிட்டாய் எல்லாரிடமிருந்தும்.

நீ நேசித்த அத்தனை

புத்தகங்களையும்

யார் யாருக்கோ

நின்வீட்டார் 

அள்ளி அள்ளிக் கொடுத்து அலமாரிகளைக்

காலி செய்தது நீ அறிய மாட்டாய்

யாருக்கும் பிடிபடாதது

எத்தனையோ புதிர்களோடு

என்னவோ உலகம் இது.


Wednesday, January 24, 2024

கவிதை-சொந்தக்கதை

 இணைய கால கவியரங்கம்

98




சொந்தக் கதை



புத்தகங்கள் வாங்கியவை

அடுக்கிக் கிடக்கின்றன

படித்து முடித்து விட்டால்

மனம் நிம்மதிப் படும்

முடியவில்லையே

புத்தகங்கள் கூடிக்கொண்டே போகின்றன

இத்தனைக்குள் 

நாமே எழுதுவதற்கும்

நேரம் ஒதுக்கத் தான் வேண்டும்

அவை படைப்பாய் மலர்ந்து

பேர் சொல்ல வேண்டும்

பதிப்பகத்தின் உறவோ

கத்திமேல் நடப்பது போல்.

அத்தனையும் தாண்டி

விருதுகளின் அரசியல்

சும்மா விடாது படைப்பாளியை.

எழுத்தாளனுக்கு

காசும் வேண்டும்

காத்திரமான உடலும் வேண்டும்

ஆரோக்கியமும் வாய்க்க வேண்டும்

துளி அதிர்ஷ்டம்

வேண்டும்தான்

சொன்னாலும் சொல்லாவிட்டாலும்.


Tuesday, January 23, 2024

கவிதை-தொலைப்பு

 இணைய கால கவியரங்கம் 97


23/1/24


தொலைப்பு


நேற்று மதியம் 

தருமங்குடி போனேன்

என் பிறந்த அகம்

அனாதையாய்க் கிடந்தது

அப்பாவும் தாத்தாவும்

ஜப சந்தி செய்த

திண்ணையில்

ஊர் உதிரிகள்

குடித்துப்போட்ட சாராயபாட்டில்கள் சயனித்து உறங்குகின்றன

ஓட்டு வீட்டின் 

நாட்டு ஓடுகள் வானரங்களால்

புறட்டப்பட்டு முட்டு முட்டாய்க்கிடந்தன

வீட்டுசசுவரில் ஆலும் அரசும்

வளர்ந்து வரவேற்றன

தேங்காய்களைத் தொலைத்த தென்னை மரங்கள்

பரிதாபமாய் நின்றுகொண்டிருந்தன

வீடு பூட்டிக்கிடக்கிறது

வீட்டுச்சாவி வைத்திருக்கும்

சிவாச்சாரியார் ஊரில் இல்லை.

துருப்பிடித்துக் கதவு நாதாங்கியில் உறங்கிக்கிடக்கும்

திண்டுக்கல் பூட்டை

முறைத்துவிட்டு

வீடு திரும்பினேன்

பூட்டு என்னதான் செய்யும்.


Monday, January 22, 2024

கவிதை-அயோத்தி

 இணைய கால கவியரங்கம் 96


22/1/24


அயோத்தி


அயோத்தி ராமர் கோவில்

திறப்பு

பிரதமர் மோடி

அக்னி தீர்த்தத்தில் மூழ்கியதும்

புண்ணிய தீர்த்தக் கிணறுகளில் வாளிகொண்டு

நீர் சேந்தித் தலையில்

கொட்டிக்கொண்டதும்

திருவரங்கத்து ஆனை

ஆண்டாளின் தும்பிக்கையை

வருடிக் கொடுத்ததும்

சாதாரண மனிதனாய்

பிரதமரைக் காட்டியது

உலகுக்கு .

அதுவே ஓர் அதிசயமாய்

ஆனந்தமாய் பிரமிப்பாய்

சுயநலம் அற்ற  மாமனிதரை 

அடையாளம் காட்டியது எனக்கு.

ஆயிரம் விமரிசனம்

எப்போதும் உண்டுதான் 

அது வேறு இது வேறு.


Sunday, January 21, 2024

கவிதை- அலப்பறை

 இணைய கால

கவியரங்கம் 95

21/1/24


அலப்பறை


புத்தகக்காட்சிக்குப் போனேன்

நேற்று சிற்றரங்கில்

ஒரு இலக்கியக் கூட்டம்

இரண்டு மணி என்று

போட்டுவிட்டு மூன்று

மணிக்குத் துவங்கினார்கள்

சுய அறிமுகம் என்று நூறு

பேருக்கு மைக்கில் ஆரம்பித்தால் அதற்கே

ஒருமணிக்கு மேலானது

பெரிய பெரியவர்ளைவர்

ஒருவர் ஒருவராய்ப் பேசி

முடித்தனர் 

ஆகா ஊகு

அதெல்லாம் இல்லை

அரைத்த அதே மாவுதான்

அன் டு  திஸ் லாஸ்ட் நமக்கு

காந்தியைத் தந்தது என்றபடிக்கு.

செல்ஃபீ எடுத்துக்கொள்ளும்

மும்முரம் கனஜோர்

அதே மிக்சர் ஒரு கரண்டி

பாயசமாய்த் தேநீர்

புதியதாய் வந்த இளைஞர்கள் நாற்காலியில் உட்கார்ந்து

எழுந்து போனார்கள்

கையில் கட்டாயமாய்

நிகழ்தேதி இல்லா

மெமன்டோவோடு.