Friday, July 31, 2015

amaavaasai -story





அமாவாசை -எஸ்ஸார்சி




'நீர் எப்பிடி என் கார் பார்கிங்க்ல வண்டிய நிறுத்தலாம். உம்ம பவுன்டரிக்குத்தான் பளிச்சின்னு எல்லோ மார்க் இருக்கு. அப்புறம் எங்கிட்டே எதுக்குவரணும்?'
'சிடியில பிளாட் வீடு வாங்கிட்டு அதுவும் இந்த கன்னா பின்னா ஆளுவுளு கூட மல்லுக்கட்டவேண்டிருக்கு'
'எனக்கு இப்ப வண்டி வாங்க முடியல்லே. பிளாாட் கடன மொதல்ல அடைக்கணும் நான் என்ன பண்ண முடியும்'
'சார் அது வரைக்கும் என் பெரிய வண்டி கொஞ்சம் முன்ன பின்ன நிக்கட்டுமே'
'என்ன சாரு நீங்க பேசுறது.எனக்குன்னு மார்க்கு பண்ணினது எனக்கு. உங்க வண்டி ஒரு அங்குலம் கூட எனக்குன்னு உள்ள இடத்துல நுழையக்கூடாது'
'இப்ப என்னன்னுதான் சொல்றீங்க'
'உங்க வண்டிய எடுத்து நவுத்துங்க. ஏன் எடம் கெடக்கும் சும்மாகூட கெடக்கும் இல்ல செமந்துகிட்டு கெடக்கும்'
'மதியம் எடுத்துவைக்கறன்'
'செய்யற்து தப்பு அப்புறம் என்ன அத மதியம் வந்து சரிபண்ணுறது'
'நீர் போஸ்ட் ஆபிசுல வேல செய்யுறாஅளு அதான் அந்த இந்த புத்திய காமிச்சீட்டீறு'
'நா எங்க வேல செஞ்சா உமக்கு என்ன நீரு கோயம்படுல மாம்பழ லோடு வியாபாரம் பண்ற அந்த புத்திய பத்தி நான் ஏதாவது சொன்னேனா'
' வாய மூடும் அல்பை' சொல்லிய வண்டியின் சொந்தக்காரர் வண்டியை எடுத்து நகர்த்தி தன் மஞ்சள் கோட்டுக்குள் நிறுத்திக்கொண்டார்'
''இப்ப் திருப்திதான'
'ஆமாம் சார்.நமக்குன்னு வேண்டாம் உங்களுக்கும்னு வேண்டாம். என்ன சொல்றீங்க'
'போதும் நிறுத்துங்க.நான் பாத்துகுறேன்.ஆப்பு வைக்க எனக்கும் தெரியும் நீர் தாங்க மாட்டீரு பாரும்'
தரைதளத்தில் குடியிருக்கும் அவர் தன் வீட்டுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டார்.அவனுக்கு கொஞ்சம் அச்சமாக இருந்தது.இருந்தாலும் நாம் என்ன தப்பாக க்கேட்டுவிட்டோம். நம் உரிமை நாம் கேட்டோம். சமாதானப்படுத்திக்கொண்டான்.
ஒரு பத்து நாள் ஆனது.
வாசல் கதவை யாரோ தட்டிய மாதிரி இருக்கவே போய் திறந்து பார்த்தான்.
'நீங்க யாரு'
'நாங்க இப்ப டிஸ்டிரிக்ட் கோர்ட்டுலேந்து வர்ரம் அய்யாவுக்குதான் நெனக்கிறேன் ஒரு தபால் இருக்கு நீங்கதான் கே.கிருட்டினமூர்த்தியா'
''பேரு. ஒ கே எனக்கும் கோர்ட்டுக்கும் சம்பந்தம் இல்லையே.எனக்கு எதுக்கு தபால்.ஏதோ தப்பு இருக்கு. நல்லா பாருங்க'
'உங்க அப்பா பேரு கண்ணுசாமி சரியா'
'ஆமாம் சாரு'
'அப்ப நீங்கதான் விலாசத்துல இருக்குற பிளாட் நம்பர் ஃப்ளோர் நெம்பர் அபார்ட்மென்ட் பேரு தெரு பேரு எல்லாம் சரித்தானே'
'இல்ல நா வாங்க மாட்டேன் இதுல தப்பு இருக்கு'
'வாங்குன வாங்குங்க வாங்கல்லேன்னா வாரண்டுதான் வரும் அய்யா கவுர்மென்ட் வேல பாக்குறது எண்ணைக்கும் நெனப்பு இருக்கட்டும்'
'இப்ப என்ன சொல்றீங்க'
'யோவ் கையெழுத்துபோடு தபால வாங்கு உம்மகிட்ட ஒரு காபிக்கு வழி இருக்காது சட்டம் மட்டும் நல்லா பேசுவீரு'
அவன் கையெழுத்துபோட்டு தபால் வாங்கினான்.
'எதனா ஒரு நல்ல வக்கீல பாரு உனக்கு எது உள்ளாற என்னா இருக்குதுன்னு வெளங்கிடப்போவுது' வந்தவன் உடனே அங்கிருந்து கிளம்பினான்.தபாலை வாங்கிய அவன் அதை நேராக அவன் குலதெய்வம் மதுரகாளி படத்தின் முன்னே வைத்து பிரார்த்தனை செய்துவிட்டு பிரித்தான்.
'இப்பவும் நீர் 25 அக்டோபர் 2014 அன்று உம் வீட்டு ஜன்னலைத்திறந்து காக்கைக்கு சோறு வைப்பதகாச்சொல்லி கா கா என்று அழைத்து காகமும் வந்து கீழ் வீட்டுக்காரரின் விலைஉயர்ந்த கோட்டு மற்றும் பட்டு ஆடைகளை நாசம் செய்ய காரணமாகி பின்னர் உம்மை வந்து 'ஏன் அய்யா இப்ப்டி செய்யலாமா? என்று கேட்ட உம் குடியிருக்குக்கு நேர்கீழ் தள குடியிருப்புக்காரர் திரு ஜீவநாதன் த/பெ காப்ரியேல் என்பவரிடம்' உன்னால என்னாத்த புடுங்க முடியுமோ புடுங்கிக்க' என்று கேட்டு மிக மிக அவமானப்படுத்திவிட்டதாகவும் ஆக உம் மீது இரண்டு குற்றங்கள் சுமத்தப்பட்டு இருக்கிறது.இது சம்பந்தமாக நீர் இன்னும் பதினைந்து தினங்களுக்குள் உமது பதிலை உமது வக்கீல் மூலமாகவோ அல்லது நீர் தனித்தோ இந்த கோர்ட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டியது. இது தவறும் பட்சத்தில் உம் மீது மேலும் மான நஷ்ட மற்றும் கிரிமினல் வழக்குத்தொடர்ந்து பிடி வாரண்ட் பிறப்பிக்க ஏதுவாகும் என்பதை நீர் அறியவும்'
அவனுக்குத்தலை கிர்ரென்று சுற்றியது.காலண்டரை எடுத்துப்பார்த்தான். அக்டோபர் 25 மகாளய அமாவாசை என்று போட்டிருந்தது.அன்று அவன் மகாளய தர்ப்பணம் முடித்து காக்கைக்குச்சோறு வைத்தது உண்மை.காகங்கள் வந்தன. உண்டன.தன் தாயும் தந்தையும் அவன் பாசமாய் வளர்த்த தங்கையும் காக்கை உருவில் வந்து சோறு உண்டு போனதாக அகமகிழ்ந்துபோனதும் கூட உண்மை.ஆனால் கீழ் வீட்டுக்காரர் பட்டுச்சேலையும் கோட்டும் காயவைத்ததும் அவை விஜயம் செய்த காக்கைகள் எச்சத்தால் விணாகிப்போனதும் அவர் அது கேட்கத்தன்னிடம் வந்துபோது தான் அவரைக்கண்டபடி திட்டியதாகச்சொல்வதும் எல்லாம் திட்டமிட்ட சதிவேலை.அவரை ஒரு நாள் அவருடைய காரை நகர்த்தி அதனை தன் மஞ்சள் கோட்டுஎல்லைக்குள் நிறுத்திவைக்கச்சொன்னதற்கு அவரின் எதிர்வினை இது என்பது அவனுக்கு மண்டையில் சட்டென்று உரைத்தது.
இனி செய்வதற்கு என்ன இருக்கிறது.யாரைக்கலந்து ஆலோசிப்பது.கோர்ட்டு அதன் வழி வழி சமாச்சாரங்கள் இதுவரை அவன் பார்த்தது இல்லையே.திடீரென யூனியன் தலைவரின் நினைவு வந்தது.அப்படி ஒன்றும் அவன் யூனியன் தலைவர்களுக்கெல்லாம் அவன் பரிச்சியமானவனும் இல்லை.யூனியன் காரர்கள் அவன் போன்றோரை இம்சிப்பதற்கு மட்டுமே அவதாரம் எடுத்து வந்திருப்பதாகத்தான் அவனுடைய கணக்கு..இந்த கோர்ட்டு நோட்டிசு விவகாரம் அலுவலகத்தில் யாருக்கும் தெரிந்தால் என்னாகும்.அதுவேறு அச்சமாக இருந்தது.தன் அலுவலகப்பணிக்கு இடையே யூனியன் தலைவரை எப்படியும் சென்று பார்த்துவிடுவது என்ற முடிவோடு புறப்பட்டான். அலுவலகத்தில் யூனியனுக்கு என்று ஒரு அறை இருந்தது.அதனுள்ளாக தலைவர் அமர்ந்து ஏதோ படித்துக்கொண்டிருந்தார்.
'யாரு சாரு இந்த பக்கம் காத்து அடிக்குது.ஒரு நாளும் இல்லாத திரு நாளா'
'வணக்கம் சார். இத படிச்சு பாருங்க' அவன் வந்த கோர்ட்டு நோட்டிசினை ஒப்படைத்தான்.
தலைவர் தான் அணிந்திருந்த கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு படிக்க ஆரம்பித்தார்.கவனமாகவே படித்தார். படித்து முடித்து விட்டு அவன் பக்கம் திரும்பினார்.
'கொஞ்சம் கதவ சாத்திட்டு ப்பேசுணும்'
அவன் கதவை ச்சாத்திவிட்டு வந்து நின்றான்.
'இப்ப நான் என்ன செய்யுணும்'
'எனக்கு பயமா இருக்கு சார்'
'பயப்பட்டு ஒண்ணும் ஆவாது.நாயி இருக்குன்னா அது நம்மை கடிச்சிடுமேன்னு பயப்படலாம். அதான் இப்ப நல்லா புடிங்கி வச்சிடுச்சில்ல இப்புறம் அந்த நாயிகிட்ட நமக்கு வேல என்ன? மேங்கொண்டு நாம பொழைக்க என்ன செய்யுறதுன்னுதான் பாக்குணும்'
'அதான் சார்'
'இது விஷயம் ஆபிசுல யாருக்கும் தெரியக்கூடாது. தெரிஞ்சா பெரிய பிரச்சனை.ஆபிசுல சொல்லிக்காம போலிசு கோர்ட்டுன்னு எங்கயும் நாம போகக்கூடாது சட்டம் அப்பிடி இருக்குது'
'அப்ப என்ன செய்யுறது'
' அது கெடக்கட்டும் உம்ம பிரச்சனை எப்பிடி ஆரம்பிச்சுது?'
பிளாட் குடியிருப்பில் கீழ்த்தள காரேஜில் வண்டியை மஞ்சள்கோட்டுக்குள் நிறுத்துவது தொடர்பாக வந்த வாய்த்தகறாறு பற்றி விளக்கிச்சொன்னான்.
யூனியன் தலைவருக்கு சிரிப்பு வந்தது.
'சாரு நாம எல்லாம் கவர்மென்ட் சர்வன்ட் நமக்கு.கையி வாயி இன்னொண்ணு.மூணும் பதனம் வேணும். மாச சம்பளத்துல பத்து ரூபா கொறஞ்சா நமக்கு அழுவ வந்துடும்.எந்த கூட்டத்துக்கு எந்த போராட்டத்துக்கு நீரு வந்து இருக்குறீரு. ஒண்ணலயும் உங்க மூஞ்சிய நானு பாத்தது இல்லையே . எப்பனா பத்து காசு யூனியனுக்கு நன்கொடை குடுத்து இருப்பீரா இப்ப வந்து தலய சொறிஞ்சிகிட்டு நிக்குறீருல்ல'
அவன் பேசாமல்தான் இருந்தான்.எல்லா விஷயமும் பேசத்தெரிந்தவன்தான்.ஆனாலும்...
'கோர்ட்டுபக்கம் ஒரு வக்கீலு ஆபிசு பக்கம் நீரு போயிடாதீரு தெரிதா. நம்மஆபிசுல பாத்துகிட்டேதான் இருப்பாங்க. அங்கங்க ஆளுங்க போவும் வரும். நாமள பலான எடத்துல பாத்துட்டான்னா புள்ளி வச்சிடுபுடுவான்.அப்புறம் குய்யோ முறையோன்னா ஒண்ணுமாவாது.நொண்டிகிட்டுதான் சொச்ச காலமும் ஆபிசுல தள்ளுணும். எவன் எப்ப மாட்டுவான்னுதான் சுத்தி இருக்குற எல்லாரும் மனசுல கணக்கு போடுவான். வெளில பாக்க உம்மகிட்ட பல்ல காட்டுவான் சிரிப்பான் கொஞ்சுவான் அது பொய்யி. பொய்யி.எங்க மேல அதிகாரிவுளுக்கு ரவ ரவ பயம் இருக்குன்னா அது சின்ன விஷயம் இல்ல. அதுக்கு எம்மானோ வெல குடுத்துகிட்டு இருக்கம். அது எல்லாம் உமக்கு வெளங்காது'
'இப்ப நானு என்ன செய்யுணூம்'
'இந்த நோட்டிசை ரெண்டு செராக்ஸ் எடும். அதோடு ஒரு அஞ்சி ரூவா வச்சி எங்கிட்ட குடுத்த்ட்டு போவுணும்'
'அஞ்சி ரூவான்னா'
'இது. வெளங்குலயா ஐயாயிரம்'
'வேற என்ன நானு செய்யுறது'
' கட்ட பஞ்சாயத்து வச்சி இந்த பிரச்சனைய ராசி பண்ண பாக்குணும்.உம் எதிரி எதுல எப்பிடி மடங்குவான்னு பாத்து அத சரிப்பண்ணி அப்புறம் சமாதானம் ஆவுணும். இந்த அஞ்சி ரூவா காணாது இது ஆரம்பம்தான். நம்ம ரூமு கதவு இன்னும் மூடிதான இருக்கு. எந்த கழுதயாவது காது வச்சிகிட்டு நாயாட்டம் கேட்டுகிட்டு நிக்கும்'
'மூடிதான் இருக்கு சார்'
'அப்ப சரி இன்னும் இருவது ஆவும்னு நெனக்கிறேன்.அப்புறம் நானு உம்மை பாக்குறேன்'.
அவன் இடத்தைக்காலி செய்தான். உள்ளுக்குள் சொர சொர என பயமாக இருந்தது.ரெண்டு செராக்ஸ் காபி கேட்டதில் ஒன்று தலைவரே எடுத்துக்கொண்டு போய் அலுவலத்தில் கொடுக்கவேண்டிய இடத்தில் கொடுத்துவிட்டால் நம் கதி என்னாகும் மனம் என்னவெல்லாமோ யோசித்தது. அருகில் இருக்கும் தன் வீட்டுக்கு நடந்தான்.
குடியிருக்கும் அபார்ட்மென்ட் வாயிலில் ஒரு பிள்ளையார் கோவில் இருந்தது.அதன் பூசைக்கார அய்யர் பிள்ளையார் சிலைக்கு நல்லெண்ணெய் தடவிக்கொண்டு இருந்தார்.அவன் பிள்ளையார் சிலையைப்பார்த்தான்.
'இங்க தான் குடியிருக்குறீங்க பத்து நிஷம் கழிச்சிகூட நீங்க சாமிய வந்து பாக்கலாம் சேவிக்கலாம்'
'அதுவும் சரி சாமி' சொல்லி அபார்ட்மென்ட் வாசலுக்கு ப்போனான்.
வண்டி நிறுத்துமிடத்திற்குச்சென்று பார்த்தான்.அவனுக்குச்சொந்தமான இடத்தில் யாரும் வண்டியை நிறுத்தவில்லை.அவரவர்கள் வண்டி அவரவர்கள் கோட்டுக்குள் சமத்தாக இருந்தது.அவசரப்பட்டு விட்டோமோ என்று நினைத்தான்.பிறகு பிள்ளையாரைச்சென்று சேவித்தான். விபூதி வாங்கி நெற்றியில் இட்டுக்கொண்டான்.
'இண்ணைக்கு சாயந்திரம் ஒரு நல்ல சேதி வரும்.வந்தா பிள்ளையாருக்கு ஒரு அபிஷேகத்துக்கு கொடுக்கணும்'
'சாமி நல்லது செய்யட்டும் நானு அபிஷேகத்துக்கு கொடுத்துடறன்' அவன் பதில் சொன்னான்.மனதிற்கு கொஞ்சம் நிம்மதியாத்தான் இருந்தது.பிரச்சனை வராதவரை கோவில் கோபுரங்கள் எல்லாம் சிறியதாக க்கண்ணுக்குத்தெரிந்தன.பிரச்சனையில் மாட்டிக்கொண்ட பிறகு கோபுர உயரங்கள் ஏனோ கூடிக்கொண்டன.
அன்று மாலையே அவன் வீட்டுக்கு யூனியந்தலைவர் ஆள் அனுப்பினார்.கோயம்பேடு மார்கெட் வாசலில் ஏழுமணிக்கு நிற்க வேண்டும் என்று சேதி வந்தது.அவன் பிள்ளையாரை மனதில் நினைத்துக்கொண்டு புறப்பட்டான்.கோயம்பேடு மார்கெட்டில் நல்லகூட்டம்.காய் கனிகள் அழுகிய துர் நாற்றம்.அவன் மூக்கைப்பிடித்துக்கொண்டான்.
கீழ்த்தள ஜீவ நாதன், யூனியன் தலைவரோடுபேசிக்கொண்டே நின்றுகொண்டிருந்தார்.அவரோடு பழ வணிகர் சங்க செயலாளரும் இடை இடையே பேசிக்கொண்டிருந்தார்.யூனியன் தலைவர்தான் அவனுக்குஅந்த பழ வணிகர் சங்கத்தலைவரை அறிமுகம் செய்துவைத்தார்.
'எனக்கு கோர்ட்டு செலவு அது இதுன்னு ஆயிடிச்சி என் வக்கீலுக்கு நான் காசி தரணும்.ஒரு பத்து ரூவா கொடுங்க முடிச்சிகிடலாம்'
'அப்புறம் இதுல பேச என்னா இருக்கு ராசியாவுறதுன்னுதான முடிவு' என்றார் பழ வணிகச்செயலர்.
யூனியன் தலைவர் அவனைப்பார்த்தார்.
'அய்யா எப்பிடி சொல்றிங்களோ அப்பிடி' என்றான் அவன்.
'இது எப்பவும் கவனத்துல இருக்குணும்' என்றார் பழ வணிக சங்கத்துக்காரர்.
யூனியன் தலைவரே பத்தாயிரம் ரூபாயை தன் வசமிருந்து எடுத்து ஜீவ நாதனிடம் ஒப்படைத்தார்.தான் தயாராக வைத்திருந்த காகிதத்தை எடுத்து யூனியன் தலைவர் நீட்ட அதில் பிரச்சனை சுமுகமாக முடிந்தது என எழுதி நால்வரும் கையொப்பமிட்டனர்.
'என் வக்கீலுகிட்ட இத குடுத்து நான் முடிச்சுகுறன்' என்றார் ஜீவ நாதன்.
'சாரிங்க'
'அண்ணைக்கு நா ரொம்ப அலச்சல்ல வந்தன் வண்டி ரவ நவுத்தி நிறுத்திபுட்டன். கரண்டும் சரியா இல்ல வந்து வந்து போச்சி. அத இவ்வளவு தூரம் கொண்டுனு போயிட்டு இப்ப ராசியாகி திரும்பறம்'
'வெரி சாரிங்க வெரி வெரி சாரிங்க' அவன் சொல்லி முடித்த்தான்.பழ வணிக சங்கத்தலைவரும் ஜெப நாதனும் புறப்பட்டனர்.
தான் தயாராக க்கொண்டுவந்த செக் புக்கை எடுத்து ஒரு செக் ஸ்லிப்பில் அவன் கையெழுத்து மட்டும் போட்டு யூனியன் தலைவரிடம் கொடுத்தான்.
'மொதல்ல அஞ்சி குடுத்து இருக்கன்.இப்ப எவ்வளவு இன்னும் தரணும்' அவனே அறியாமல் அவன் முகம் மகிழ்ச்சிப்பிரவாகத்தில் மலர்ந்து இருந்தது.
' உம்ம பேங்க் அக்கவுண்ட்ல எவ்வளவு பணம் இருக்குது'
'ஒரு பதினைந்து ஆயிரத்துக்குள்ள இருக்கும்'
'அதான் பிளாங்க் செக்க நீட்டுறீரு' சொல்லிய தலைவர் புறப்பட்டார்.பிள்ளையார்கோவில் குருக்கள் சொன்ன மாதிரியே அதுவும் அன்று மாலையே அந்த நல்லது நடந்துவிட்டதாகவும் அபிஷேகத்துக்கு சாமான்கள் வாங்க ஒரு லிஸ்ட் தயாரிக்கவேண்டும் என்றும் மனதில் எண்ணினான்.
'ஒரு சேதி நீரு காரு கீரு வாங்குனப்பறம் அத நிறுத்தற எடத்த பாத்துக்கலாம்.அதுவரைக்கும் கொஞ்சம் அடக்கி வாசியும்' என்றார் கொஞ்ச தூரம் போய் திரும்பிய யூனியன் தலைவர்.'ஒரு நன்றிகெட்ட வேல வொலகத்துக உண்டுன்னா அது எங்க தொழிற்சங்கவேலதான்' சொல்லிக்கொண்டே தலைவர் நடந்தார்.அவனுக்கு அதெல்லாம் காதிலா விழுந்தது.
ஒன்று அவனுக்கு மறந்துபோனது. இனி அமாவாசைக்கு அமாவாசை காக்கைக்கு எப்படிச்சோறு வைப்பது என்பதுதான் அது.
-------------------------------------------------------


.





Saturday, July 25, 2015

thotu kai story




தொடு -கை -எஸ்ஸார்சி




உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம் இதுவா பிரச்சனை ஆகிவிடும். ஆகிவிட்டதே.முதுபெருங்களத்தூரில் ஒரு பகுதி புதியதாகத்தோன்றி வளர்ந்து வரும் பகுதி.சென்னை மா நகரோடுல் எங்கோ ஒரு மூலையில் ஓரமாகத் தொத்திக்கொண்டு நிற்கிறது. பெயர் சூட்டும் பெரிய மனிதர்கள் அந்தப்பகுதிக்குப்பெயர் நன்றாகத்தான் வைத்திருக்கிறார்கள்.ரெங்கபுரி.உடனே இங்கு ரெங்க நாதருக்கு ஆலயம் ஏதேனும் உண்டா என்று கேட்டு வைக்காதீர்கள்.இது வரை அப்படி ஒரு கோவில் இல்லை. இனி வரலாம். எந்த சாமிக்கு எந்த ஊரில் எழுந்தருளப் பிராப்தமோ யார் கண்டார்கள்
.ரெங்கபுரியில் பிரதானமாக ஒரு தெருவின் முடிவில் ஒரு பிள்ளையார் கோவில்.பிள்ளையார்கோவில் என்று ஆரம்பித்து ஒவ்வொரு சாமியாக எல்லா சாமிகளும் கோவிலுக்குள் கொலு கொண்டுவிட்டார்கள். எல்லா சாமிகளும் என்றால் நவக்கிரகமும் தட்சிணாமூர்த்தியும் ஆஞ்சனேய சுவாமியும் அவசியம் உண்டு.அட்டமத்து ச்சனி ஏழரைச்சனி எட்டில்பாதிச்சனி சாதகத்தின் பன்னிரு கட்டங்களில் ரெண்டு ஏழு எட்டு இந்த இல்லங்களில் சனியார் உட்கார்ந்து மக்களைப் படுத்தும்பாடு சாதாரணமா ? அறிந்தவர்களுக்கு அனுபவப்பட்டவர்களுக்கு விஷயம் நான் சொல்ல வேண்டியதில்லை.அப்புறம் ஒரு சமாச்சாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை நாலரை ஆறு ராகு காலம் பகழ் துர்க்கையம்மனுக்கு அங்கு ஏற்றப்படும் திருப்பிப்போட்ட எலுமிச்சை த்தோல் விளக்குகள் யாரும் பார்த்தும் இருக்கலாம். அப்பேர்பட்ட துர்க்கை அம்மனுக்கு ஒரு சன்னதியும் இந்த பிள்ளையார் கோவிலில் உண்டு..
அது சரி கோவிலுக்கு பன்னிரெண்டு வயது ஆகிவிட்டதால் மீண்டும் ஒரு குடமுழுக்கு செய்தாகவேண்டும். சுவாமியின் சக்தி பன்னிரெண்டு வருடங்கள்தான் மூலவர் சிலைமீது அமர்ந்திருக்கும்.பிறகு அது கொடி மரம் மீது கொலுவிருக்கும் பிறகு கோபுரக்கலசம் மீது மட்டும் குடி இருக்கும் அதற்குப்பிறகு தல விருடசத்திற்கு வரும் அப்புறமாய் அது வானகம் சென்று விடும். இது எல்லாம் எழுதி வைத்துவிட்டுப்போயிருக்கிறார்களே. ஆக ரெங்கபுரி பிள்ளையார் கோவிலுக்கு க்கும்பாபிஷேகம் செய்தாக வேண்டும் என்று ரெங்கபுரி வாசிகள் முடிவுசெய்தார்கள்.பேருக்கு ஒரு வைஷ்ணவர் கூட இல்லாத ரெங்க்புரியில் எப்படி ஒரு பிள்ளையார்கோவில் சாத்தியம் என்று யோசிக்க வேண்டாம்.பிள்ளையார் கோவில் எல்லாம் பிற்பாடு வந்தது.இங்கு மண்ணிவாக்கம் பெரிய ஏரித்தண்ணீர் பாசனம்.நெல் கரும்பு விளைந்த அற்புதமான பூமிதான் ரெங்கபுரியாக மாறி இருக்கிறது. இந்த விளையும் பூமிக்குச்சொந்தக்காரர் திருப்பெயர் ரெங்கமன்னார்.சைவப்பிள்ளைதான் அவர். அவருக்கு எப்படி ரெங்க மன்னார் என்று பெயர் வந்தது என்று கேட்டால்.அவர் திருவில்லிப்புத்தூர்க்காரர் ஆக அப்படி என்பார்கள்.ரெங்க மன்னார் திருவீதி உலா வரும் சமயம் பிறந்த குழந்தை என்பதால் ரெங்க மன்னார் என்று திரு நாாமம் சூட்டித்தான் ஆகவேண்டும் என்று அவர்தாய்மாமா வகையறா அடம்பிடித்தனராம் மற்றபடி அதற்குள் நீட்டாக ஏன்போகவேண்டும் அய்யா விடுங்கள்.
ராஜகோபால் பிள்ளைதான். இங்கு பிள்ளையார் கோவிலில் தேவாரம் பாடிக்கொண்டிருந்த பெரிய மனிதர்.அவருக்கு ப்பிள்ளையார்கோவிலில்தான் படுக்கை. அவரைத்தருமங்குடி ப்பிள்ளை என்கிறார்கள்.மற்றபடி அவருக்கு க்குடும்பம் இத்யாதிகள் உண்டா என்று தெரியவில்லை. யார் இது எல்லாம் அவரிட்ம் கேட்டார்கள்.யார் எப்படி ப்போனால் என்ன.நமக்கு க்காரியம் அதாவது ஆக வேண்டியகாரியம் ஆனால் சரி என்பதாகத்தான் வாழ்க்கை வாழ பழகிக்கொண்டிருக்கிறோம்.
பிள்ளையார்கோவில் கும்பாபிஷேகத்திற்கு நாள் குறித்தாகிவிட்டது..கும்பாபிஷேஹ கமிட்டி போட்டு அது தன் பாட்டில் வேலை செய்து கொண்டிருந்தது. கோவில் கட்டிடத்தில் போனது வந்தது பார்த்து வர்ணமிட்டு சுதைவேலைகள் பாக்கி இருப்பது நேர்செய்து ஆசாரி வேலைகள் விட்டுப்போனது எல்லாம் முடித்துக்கொண்டே வந்தார்கள்.கோவி வாயிலில் இரண்டு கல் வெட்டு நல்ல உயரத்துக்கு நிறுவப்பட்டு இருந்தது.ஐயாயிரம் நன்கொடை வழங்கியவர்கள் ஒன்றிலும் பத்தாயிரத்துக்கு நன்கொடை அளித்தவர்கள் இன்னொன்றிலும் இடம் பிடித்துக்கொண்டார்கள். நன்கொடைகள் எல்லாம் கூட்டிப்பார்த்தால் பல லட்சங்கள் வந்தன. பிள்ளையார் கோவில் ஆராய்ச்சி மணியில் .குருமூர்த்திபுரம் ஆலூர் ஜெயராமன் உபயம் என்று எழுதியிருந்தது.பிள்ளையார் சன்னதியின் பிரதான கேட்டில் தியாகராய நகர் அட்வகேட் சந்திரசேகரன் மற்றும் அவர் மனைவி லதா என்று இரும்பு க்கம்பியால் வளைத்து வளைத்து எழுதியிருந்தார்கள்.சுதைவேலைகள் பெரிய மண்டபம் சுற்றிலும் அழகாகச்செய்து வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு சிலைக்கும் கீழாக அதன் உபயம் யார் என்று பெயர் எழுதியிருந்தார்கள். மின்சார விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அந்த ஒளிக்குழாய்களுக்கு இடையில் பளிச்சென்று இது தருமங்குடி கார்கேய கோத்திரத்து சிட்ல சதாசிவ அய்யர் உபயம் என்று எழுதி இருந்தது.தரை கிரானைட் கற்கள் மட்டும் சும்மாவா என்ன குருகைகாவலப்பர்கோவில் முனிபல்ல மருத்துவர் உமாமகேசுவரன் சகுந்தலா தம்பதியர் உபயம் என்று எழுதிவைத்திருப்பதை க்கண்சிமிட்டி பார் பார் எனக்காட்டியது.
கும்பாபிஷேக ச்செலவுக்கு பணம் போட்டவர்கள் பெயர் ஒரு பெரிய டிஜிடல் பேனரில் எழுதி அருகே அவர்களின் போட்டோக்கள் அழகாக சிரித்துக்கொண்டு இருந்தன.கும்பாபிஷேக நோட்டிசு அடித்த வகையில் காசு கொடுத்து உதவிய பெரிய மனிதரின் திருப்யெர் நோட்டிசுக்கு அடியில் கடைசி வரியாக அமைந்து வாசிப்போர்க்குச் செய்தி சொன்னது.
ரெங்கபுரி சித்தி விநாயகர் பெயர்தான் எந்த மூலையில் எழுதி இருக்கிறது என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆனால் மூலவர் பின்னே நிற்கும் பித்தளை திருவாட்சி ஆறுமுகம் பால் வியாபாரம் ரெங்கபுரி என்று எழுதியிருந்தது சேவார்த்திகள் அனைவ்ரின் கண்களிலும் பளிச்சென்று பட்டது.தீபாராதனை தட்டுகள் அனைத்தும் அதனை யார் யார் வாங்கிக்கொடுத்த பெரியவர்கள் என்பதனைச்சொல்லிக்கொண்டன.மனிதமனம் தன் இருப்பினை இந்த மண்ணில் விட்டுச்செல்லவே இத்தனை ஆசை.ஒன்று மட்டும் உறுதி தான் நாம் இல்லாதுபோய்விடுவோம்.இந்த உலகம் நாம் இல்லாது அதுபாட்டுக்கு இயங்கும்.சினிமாவுக்குப்போகிறவர்கள் அவர்கள் பாட்டுக்குப்போவார்கள் .சீட்டாடுபவர்கள் அவர்கள் பாட்டுக்கு ஆடுவார்கள்.சாராயம் குடிப்பவர்கள் கடை வாசலில் முண்டி அடித்துக்கொண்டு குடிப்பார்கள். இது சாராயம் இது கொடிய நஞ்சு இதனைக்குடிக்க குடிக்க தான் செத்துப்போவேன் இது உறுதி என் குழந்தை குட்டிகள் தெருவில் பிச்சைஎடுக்கும் எனக்குத்தெரியும் தெரிந்துதான் நான் குடிக்க்கிறேன் என்று பத்து தடவை சொல்லியபின்னர்தான் சாராயபாட்டில் கையில் கொடுப்பார்கள் என்று சொல்லுங்களேன்.அதனால் என்னவாம் பத்து தடவை என்ன நூறு தடவையானாலும் சொல்லிவிட்டு குடிப்பவர்கள் குடிப்பார்கள். ஆக ஒன்றும் ஆகிவிடாது.அயோத்தி ராமனும் மதுராவின் கிருட்டினனும் செத்துதானே போனார்கள்.உலகத்தில் செத்துப்போகாதவர்கள் யாருமில்லை.புத்தர் சொன்ன விஷயம்தான்.ஆக தான் இந்த உலகைவிட்டுப் போனபின்னரும் தன் பெயர் இருப்புக்கு இங்கு என்ன வழி என்பது சின்ன சிந்தனை ஆகிவிடுகிறது.தானிருக்கும் வரை தன் பெயர் பளிச் பளிச் என்று எழுதி த்தெருவெங்கும் தொங்க வேண்டும் சராசரி ஆசை.. கும்பாபிஷேகத்திற்கு டிஜிடல் பேனர் வைத்திருந்தார்கள்.விநாயகர் படத்தோடு போட்டி போட்டுக்கொண்டமாதிா தான் ரெங்க புரி வாழ் தலைவர் படங்கள்.தலைவர்களில் மூன்று ரகங்கள் இருந்தன..யோசனைக்கு ஒருத்தர்,அடிதடி குத்து வெட்டு என்றால் அதற்கு இன்னும் ஒருவர்.காசு பணம் புரட்டி க்கொடுக்கும் மற்றுமொருவர். இவர்களுக்கு கீழாக அப்படியே மூன்று வரிசை சின்ன தலைவர்கள்.மற்றவர்கள் எல்லாம் பேனரில் பெயர் வரும் வராமலிருக்கவும் செய்யவும் எதையும் வாயைத்திறந்து கேட்டுவிடலாம் என்றால் அது நடக்காத கதை.பிள்ளையார் கோவில் குருக்க்ள் மட்டும் சின்னவரா என்ன அவரின் திருப்பெயரும் படத்தோடு இடம் பெற்றுவிட்டது.யாரும் பாக்கி இல்லை.ரெங்கபுரி க்காரர்கள் அனேகமாய் எல்லோரும் தட்டியில் இடம் பிடித்துவிட்டார்கள். தேவாரம் பாடும் தருமங்குடி ராஜகோபால் பிள்ளை பெயர்தான் எங்குமே இல்லை.
.குடமுழக்கு அன்று யாகசாலையில் கடம் புறப்படுவதற்கு சற்று முன்னர்தான் அந்த கடைசிக்கால பூரணாஹூதி முடிந்தது. அதற்கும் முன்பாக வேத கோஷங்கள்.தொடர்ந்து திராவிடத்தோத்திரப்பிரியா திராவிடத்தோத்தரம் உப தாரயா'( காதில் விழுந்த வரைக்கும்) என்றார் பிரதான சிவாசாரியார். உடன் தேவார ம் பாடும் ராஜகோபால் பிள்ளை சிவா திருச்சிற்றம்பலம் என்று தொடங்கி, 'உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம் தெள்ளத்தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் கள்ளப்புலனைதும் காளா மணி விளக்கே' என்று ஓங்கிப்பாடிமுடித்து நமப்பார்வதி பதயே அர அர மகாதேவா என்று கோஷம் சொன்னார்.நாதஸ்வரக்காரன் மல்லாரி வாசிக்கத்தொடங்கினான்.. வெட்டிப்பைய வந்தான் விறகொடிச்சான் வெந்நி தண்ணி வச்சான் அப்ப அப்ப அய்யய்ய சுப்பப்ப தப்பப்ப எப்பப்ப பெப்பப்ப பப்பப்ப பா.... பா என்று மல்லாரி பிரகாரத்தில் அசுர வேகத்தில்தான் பிரவாகித்து வந்தது.
கோவில் குருக்களுக்கு தேவார ராஜகோபால் பிள்ளை மீது ரொம்ப நாளாக ஒரு வருத்தம்.ஒரு நாள் பிள்ளை தைப்பூசம் என்று வடலூர் சென்றுவிட்டார். அன்றைய தினம் பார்த்தா அந்த தாம்பரம் ஆர் டி வோ ரெங்கபுரி பிள்ளையார் கோவிலுக்கு வர வேண்டும். எல்லாம் நேரம்தான்.பிளாட் வாங்குவது அல்லது விற்பது சம்பந்தமாக ரெங்கபுரி வந்தவர் சித்தி விநாயகர் கோவிலுக்கு வந்துவிட்டார். வந்தவர் பிள்ளையாரைப்பார்த்தமா ரெண்டு குட்டு குட்டிக்கொண்டு விபூதி வாங்கி நெற்றியில் இட்டுகொண்டு போயிருக்கலாம்.
' என்ன சிவாச்சாரியார் எந்த ஊருங்காணும் நீர்? பிள்ளையார் மேல அருணகிரி நாதர் பாடியிருக்கிற ஒரு பாட்டு தெரியுமோ? என்று கேட்டு விட்டார்.'தப்பும் தவறுமாதான் மந்திரம் சொல்வீர் அது ஊர் அறிஞ்சது பிராம்ணன்ல சொல்ற மந்திரத்திற்கு அர்த்தம் தெரிஞ்சவாளை நா இன்னும் பாக்கல்ல. ஆக தெரிஞ்ச தமிழ்ல ஒரு பாட்டாவது பிள்லையார்மேல பாடலாமே' என்றார் ஆர் டி வோ.
குருக்கள் பேசாமல் இருந்துமிருக்கலாம் அவருக்குத்தான் ரெண்டில் சனி உட்கார்ந்து இருக்கிறானே எப்படி சும்மா இருக்கத்தான் முடியும் சொல்லுங்கள்.
'தேவாரம் பாடுற ராஜகோபால் பிள்ளை இண்ணைக்கு வடலூர் போயிருக்கிறார்.நேக்கு தமிழ் பாட்டு சரியா பாடம் இல்லே'
கோவிலுக்கு வந்த ஆ ர் டி வோ 'உம் மேல குத்தம் இல்லே'
என்று கிளம்பிச்சென்றுவிட்டார்.மறு நாள் கோவிலுக்கு வந்த ராஜகோபால் பிள்ளையிடம் அருணகிரி நாதர் பிள்ளையார் மேல் பாடிய பாட்டை ச்சொல்லிகொடுக்கும்படி கேட்டார். ராஜகோபால் பிள்ளை குருக்களிடம் ஒரு கேள்வி கேட்டார். ' தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்த்னை ஓய்?'
குருக்களுக்கு ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது.இது எல்லாம் யார் கண்டார்கள்.குருக்கள் மனதிற்குள் சொல்லிக்கொண்டார்..இந்த தேவாரம் ராஜகோபால் பிள்ளையை இந்தக்கோவிலை விட்டு கிளப்பி விடவேண்டும் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டே இருந்தார். அப்போதுபார்த்துதான் இந்த குட முழுக்கு விழா டிஜிடல் பேனர் ஒத்தாசை செய்தது.கும்பாபிஷேகக்கமிட்டித்தலைவரிடம் போனார்.' முதலியாருக்கு நமஸ்காரம். ஒரு சேதி. அதாவது இந்த பிள்ளையார் கோவிலை சுற்றி கல்வெட்டுல அதுல இதுல உபயதாரர்கள் பேருங்க எல்லாம் எழுதிவச்சிருக்குறது தேவாரம் பாடுற ராஜகோபால் பிள்ளைக்கு பிடிக்கல. அதக்கிண்டல் பண்ணிப்பேசறார். ஒரு நாள் நானே என் காதாலே கேட்டேன்.. கும்பாபிஷேகத்து அண்ணைக்கு அவர் பாடின தேவாரப்பாட்டு உங்களுக்கு ஞாபகம் இருக்கோ ;உள்ளம் பெருங்கோவில் ஊன் உடம்பு ஆலயம் தெள்ளத்தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்னு அப்பிடி இப்படி பாடினது இது எல்லாம் நாம கோயில்ல செய்யுறது வெற்று ஆடம்பரமாம் வெளி வேஷம் மொதல்ல மனசு சுத்தம் இருக்குணும் அதுதான் தெய்வம். இந்த கல்வெட்டும் அதுல நம்ப பேரு எழுதிக்கறதும் இல்லே அது இதுன்னு பேசறார்'
'என்ன குருக்களே நெஜமாவா சொல்லுறீர்'
'அப்புறம் நான் எதுக்கு உங்க்ளண்ட பொய் சொல்றன்'
'அது எல்லாம் இருக்கட்டும் அதுகளை நான் பாத்துக்கிறேன்.உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்ங்க்ற பாட்டு யாரு பாடினது சொல்லுமே'
'தெரியல'
'மொதல்ல அது தெரிஞ்சிகும் குருக்களே.சுவாமிக்கு பூசைன்னா நாம அவர தொடுறது பெரிய விஷயமே இல்லே அவரு நம்ம தொடுவாறான்னு பாத்துக்கணும்ணும் அதான் பூசை'
'அப்ப நான் புறப்படறேன்'
'உம்மை முதுகை ப்பாரும் மொதல்ல.பெறகு பாக்கலாம் எல்லாத்தையும் அந்த தாம்பரம் ஆர்டிவோ என்னையும் பார்த்துட்டுதான் ஊருக்குப்போனார்'
கும்பாபிஷேக டிஜிடல் பேனரில் இந்த முதலியாரின் போட்டோ மாதிரிதான் இருந்தது. அது பிள்ளையார் சைசுக்கும் கொஞ்சம் பெரிசாதான் இருந்துது. ஆனா அவர் இப்ப பேசுறதோ வேற தினுசா இருக்கே' மனதிற்குள் சொல்லிக்கொண்டே ஒரு தடவை அந்த பேனரைப்பார்த்துவிடுவது மட்டுமே சரிஎன்று அது நட்டு இருந்த இடத்துக்கு வேக வேக மாய் நடந்தார். டிஜிடல் பேனர் இருந்த இடத்தில் கம்பம் நட்டிருந்த குழிகள் மட்டுமே பாக்கி இருந்தன.. .
-----------------------------------------------------------------------------------------------.


.
.. .
.
.

Monday, July 13, 2015

Nesam- story





நெசம் -எஸ்ஸார்சி


ராமாபுரம் சமுத்திரகுப்பம் அருகேயுள்ளசிற்றூர்.அங்கேதான் என் அத்தை குடியிருந்தார்.அத்தையின் கணவருக்கு ஓமியோபதி டாக்டர் வேலை.நிலபுல ன்கள் கொஞ்சம் இருந்தன. பெட்டை மண் போர்த்திக்கொண்ட பூமி. வாழை கரும்பு செந்நெல் என எல்லாம் விளையும் வயல்கள். வயல் வெளியிலிருந்து பார்த்தால் கேப்பர் மலை தூரத்தில் சிரியதாகத் தெரியும். அங்கேதான் வெள்ளைக்காரன் கட்டிய கேப்பர் குவாரி ஜெயில் இருக்கிறது. மாகவி பாரதியாரும் புதுச்சேரி விட்டு புறப்பட்ட சமயம் கைதாகி அங்குதான் சிறையில் இருந்தார். முழுப்புரட்சி என க்குரல் தந்த ஜெயப்பிரகாஷ் நாராயணனும் தான் அங்கே சிறைவாசமிருந்தார். பாரதியை இன்னும் துளி துளி ஞாபகத்தில் வைத்துக்கொண்டுதானிருக்கிறோம் ஆனால் அந்த ஜெயப்பிரகாஷ் நாராயணனை யாரேனும் நினைவில் வைத்துக்கொண்டு இருக்கிறார்களா என்ன?.இந்தியத்திருநாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்த அந்த இந்திரா அம்மையார் மட்டும்தான் அவரைப் பூரணமாக அறிவார்.
ராமாபுரம் ஊரின் மத்தியில் அத்தைக்கு நாட்டோடு போட்ட இரண்டு கட்டுவீடு. அத்தை குடியிருக்கும் அந்த வீடு கட்டி நூறு ஆண்டுகள் கடந்துமிருக்கலாம். அத்தை வீட்டுத்தோட்டத்தில் பாக்குவெட்டி பம்ப் ஒன்று. அது. கை பம்புதான். அதனைத்தான் பாக்கு வெட்டி பம்ப் என்று சொன்னேன். அது அரைகுறை உப்புத் தண்ணீரை வழங்கிக்கொண்டிருந்தது.நான்கு பெண் இர்ண்டு ஆண் குழந்தைகள் அத்தைக்கு.எல்லாம் அது அது அங்கு அங்கு செட்டில் ஆகிவிட்டபடியால் ஒன்றும் செய்யவேண்டிய பெரிய கடமை என்று சொல்லிக்கொள்ளுகிறமாதிரிக்கு பாக்கி இல்லை.
அந்த ராமாபுரம் அத்தையின் சின்ன பையன் ஒரு நாள் திடிரென என் வீட்டிற்கு வந்தான். அப்படி யெல்லாம் அடிக்கடி வருபவன் இல்லை அவன்.தலை கலைந்து கிடந்தது.போட்டிருக்கும் சட்டை அழுக்காகி சகிக்க முடியாமல் கண்ணுறாவியாக இருந்தது.
'மாமா அப்பாவுக்கு ஆக்சிடன்டு ஆயிடுச்சி. பெரிய ஆஸ்பத்திரியில சேத்துட்டு வரன்' கண்கள் நிறைத்துக்கொண்டு வந்தது.அழ ஆரம்பித்தான்.
'என்னப்பா ஏன் என்ன ஆச்சி அம்மா எங்க'
'அம்மா ஆஸ்பத்திரியில இருக்கு. நீ வா மாமா. எனக்கு பயமா இருக்கு.அப்பா பொழப்பாரா மாட்டாரான்னு.தெரியல.நா என்ன செய்யப்போறன்'
நான் அவனோடு பெரிய ஆஸ்ப்த்திரிக்கு க்கிளம்பினேன். நடந்துபோகும் தூரம்தான்.
ராமாபுரத்திலிருந்து சமுத்திர குப்பம் கிளம்பிய அத்தையின் கணவர் ஆதி மாமா இரு சக்கர வாகனத்தில் சாலை ஓரமாகத்தான் வந்து இருக்கிறார்.ராமாபுரம் பகுதியில் விளைந்த கரும்பினை வெட்டி ஏற்றிக்கொண்டு அருகே இருக்கும் நெல்லிக்குப்பம் பாரி சர்க்கரை ஆலைக்கு டிராக்டர்கள் செல்வது வழக்கம்.கரும்புச்சுமை இழுக்கும் டிராக்டர் எஞ்சினுக்குப் பின்னே டிரக்கில் கரும்புக்ள் அரவைக்கு ஏற்றப்பட்டிருக்கும்.சாதாரணமாக ஒரு டிரக்கை பூட்டிகொண்டு நெல்லிக்குப்பம் புறப்படும் டிராக்டர்களில் சில பேராசையில் இரண்டு சுமை டிரக்குகளை கோத்துக்கொள்ளும்.அப்படி இரண்டு டிரக்குகளை பூட்டிக்கொண்ட டிராக்டரின் இரண்டாவது டிரக் முன் சக்கரத்தில் தன் இரு சக்கர வாகனத்தை விட்டு விட்டார் அத்தையின் கணவர். டிராக்டரின் இரண்டாவது டிரக் ஏறி இறங்கிய அவரின் உடலைத்தூக்கிகொண்டு பெரிய ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கிறார்கள்.முனபாக ஒரு தனியார் மருத்துவ மனைக்கும் போயிருக்கிறார்கள். அங்கு அவன் முடியாது என்று கையை விரித்து விடவே சமுத்திரகுப்பம் பெரிய ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கிறார்கள்.
நானும் என் அத்தை பையனும் நடந்து கொண்டிருந்தோம்.என் அத்தையின் சின்ன மகன் சமுத்திரகுப்பம் சிப்காட் எனும் தொழிற்பேட்டையில் ஒரு வெல்டிங்க் கம்பெனியில் வேலை பார்த்தான்.பெரிய சம்பளம் என்று இல்லை.அதை விட்டாலும் வேறு என்ன வழி இருக்கிறது.அவன் சகோதரன் ரயில்வேயில் வேலை பார்க்கிறான். இவனும் எழுதி எழுதி போட்டான் தேர்வு வந்தது. எழுதிப் பார்த்தான். வேலைக்கான தேர்வுகள் எல்லோருக்குமா பலன் தந்து விடுகின்றன.அவன் சகோதரனுக்குத் தற்காலம் எங்கோ வடக்கே சந்திரபுர்ம் என்னும் ஊரில் ரயில்வே சிக்னல்லிங்கில் மெக்கானிகல் வேலை.
அத்தையின் க்தறல் ஒலி எனக்குக் கேட்கிறது.
'என்னப்பா அத்தை குரல் மாதிரி இருக்கு'
'ஆமாம்'
அத்தை பிணவரை வாயிலில் விழுந்து புரண்டு அழுதுகொண்டிருந்தாள்.மாமா காலமாகி அவர் சடலம் பிண்வரைக்கு க்கொண்டு வந்திருப்பார்கள்.இல்லை என்றால் அத்தை இந்த கட்டிடத்தின் வாயிலுக்கு வ்ரவேண்டிய அவசியமே இல்லை இரண்டு போலிசுகாரர்கள் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.அவர்களோடு ஒரு கருப்பு அங்கி அணிந்த வக்கீல் ஏதோ இடை இடையே குறுக்கிட்டுப்பேசினார்.இந்த மூவரையும் சுற்றி இன்னும் நான்கைந்து பேருக்கு நின்று வேடிக்கை பார்த்தார்கள்'
'தம்பி அப்பா நம்பள ஏமாத்திட்டு போயிட்டாரு என் தலையில கல்லு தூக்கி போட்டுட்டாரு. இனி நானு என்ன செய்யுவேன் ஏது செய்யுவேன்'.அத்தை ஓப்பாரி வைத்து அழுதுகொண்டிருந்தாள். ஆதி மாமாவின் சடலம் பிண்வறையில் கிடத்தப்பட்டுகிடந்தது.அவரே போட்டிருந்த உருட்டைய்பூண் நூல் வைத்து அவர் இரண்டு கைகளையும் சேர்த்துக் கட்டியிருந்தார்கள்.அருகே கிழவி ஒருத்தியின் நிர்வாணச்சடலம்.அந்த சடலம் அருகே ஒரு சிறுவன் உட தலை நசுங்கிய நிலையில் கிடந்தது.சுவர் ஓரமாக வாலிப வயதுப்பெணொருத்தியின் தீயில் கருகிய சடலம்.தரையெல்லாம் கரி. துர் நாற்றம் குப் குப் என்று வந்துகொண்டிருந்தது. பிணவறையின் தரையில் ரத்தம் நிணம் சிந்திக்காய்ந்து போன அசூசைகள் சகிக்கவே முடியாமல் இருததை நானும் என் அத்தை பையனும் அச்சத்தோடு பார்த்தோம்.அவன் தந்தையின் உடலைத்தொட்டுப்பார்த்து ஓ அப்பா என்று கூவிக்குரல் தந்தான்.
'யார்ரா இது சுதி மதி இருக்குதா இல்லையா' பிணவறைக்காவலாளி குரல் எதிர் கொடுத்தான்.உள்ளே போய் பிணம் பார்த்த நபர்கள் அவனுக்கு தலா பத்து ரூபாய் கொடுத்தனர். அவன் வாங்கி சட்டைப்பையில் திணித்துக்கொண்டான்.
'நாதியில்லா பொணம் ஆ உள்ள கெடக்கு யாரு வரா பாக்குறா அது அது கொடுப்ப்னை இருக்குணும்.தல மாட்டுல குந்தி ரெண்டு உறவு சனம் அழுவுலன்னா அந்த பொணம் எப்பிடி என்னா பொணம் பூமிக்கு நாம வரகுள்ள என்னாத்த வரமுன்னு வாங்கிகினு வந்தமோ அதான்' பிணவறைக்காவலன் சொல்லிக்கொண்டான்.
.பிணவறையின் முன்பாக இருந்த நான்கு வேப்ப மரங்கள் காய்களை கொத்து கொத்தாகத் தம் கிளை முழுவதும் வைத்துக்கொண்டிருந்தன.காக்கைகள் பழுத்த வேப்பங்காய்களை க்கொத்திதின்பதில் போட்டி போட்டன வேப்ப மர வேர்களில் நான்கு நாய்கள் ஒவ்வொன்றும் ஒரு திசை பார்த்து உறக்கத்தில் இருந்தன.
அத்தை மகனும் நானும் போலிசுகாரர் எங்களைக்கூவி அழைக்க அவரிடம் சென்று நின்றுகொண்டோம்.
'தம்பி அப்பா போயிட்டாரு ஆகவேண்டியது பாக்குணும்'
'சொல்லுங்க் சார்'
'முதல்ல எஃப் ஐ ஆர் போடுணும். உங்க கம்ப்ளயின்ட சரியா இல்ல அதை மாத்தி நா சொல்லுறது மாதிரிதான் எழுதி தரணும்'
'எப்பிடி' என்றான் அத்தை மகன்.
'அப்பா அடி பட்டது ரெண்டாவது டிரக்குல ஒரு டிராக்டருக்கு ஒரு டிரக்குதான் கோக்குலாம் சட்டம் . ரெண்டாவது டிரக்கு கோத்தா அது..தப்பு. கேசு எடு படாது. கைக்கு காசு வராது இன்சூரன்சுகாரன் ஒத்துகமாட்டான் வண்டி ஆர் சி பூடும் டிரைவர் லைசென்சு காலியாயிடும் என்ன செய்வே'
'இல்லையே. ரெண்டாவது டிரக்குலதான் அடிபட்டு இறந்து இருக்குறாரு அப்பா. அப்படித்தான நான் எழுதணும்'
' இந்த ராமாயணம் பாரதம் எல்லாம் எனக்கும் தெரியும்'
' அந்த டிரைவரையே கேளுங்க சொல்லுவாரு நேரா பாத்த ஜனம் இருக்குதே'
நான் கொஞ்சம் குறுக்கிட்டேன்.'தம்பி கொஞ்சம் நிதானமா பேசுங்க. அப்பா இறந்துபோனதுல்ல துக்கத்துல இருக்க்றீங்க. பட படன்னு பேசக்கூடாது'
'ஸ்டேஷன்ல இருக்குறாரு டிர்ராக்டரு ஒட்டுன அந்த டிரைவரு. நாங்க புடிச்சி வச்சிருக்கம் சும்மா வுட்டுற முடியுமா ? அவுரு என்னா சொல்ல் இருக்கு. உங்க வூட்டுல கரும்பு ஆலை அரைவைக்கு வெட்டுனா நீங்களும் டிரைவருக்கு கூட அய் நூறு கொடுப்பிங்களாம். அப்பிடி ரெண்டு டிரக்கு செம கோக்குற்து உண்டாமே'
'யாரு சொல்றது.அப்பிடி எல்லாம் இல்ல.எங்க அப்பா அப்பிடிபட்ட ஆளு கெடயாது'
பதில் சொன்னான் அத்தை மகன் போலிசாரிடம்.
' உங்க அப்பா இல்லன்ன உங்க ஆத்தா கொடுத்துருக்கும்.இது எதுக்கு அறியாபுள்ளகிட்ட நாம பேசிகிட்டு. வக்கீலு வந்து இருக்குறாரு. அவர வச்சி பேசிக்குலாம்'
என்றார் போலிசுக்காரர்.
ஒரு டூவீலர் ஒன்றில் வெள்ளைச் சட்டை முழுகையாக போட்டுக்கொண்ட மூத்த வக்கீல் ஒருவர் சரியாக அவ்விடம் வந்து சேர்ந்தார்.
'செரு பையன் கிட்ட என்ன பேச்சு.கெழவி இருக்குல்ல அதுகிட்ட பேசுங்க.காசி வாங்கப்போறது அதுதான்.எங்க அந்த அம்மா,அத இங்க கொண்டாங்க.அது எங்கயானு முகாரி ராகம் வுட்டுகினு கெடக்கும். புருசன் உசுரா இருக்கக்குள்ள ரவ தண்ணி சாச்சிக் கொடுத்துதுவோ இல்லையோ யாரு கண்டா காசு வாங்குணும்னா அய்யா வே துரையே என் சாமின்னு ஆரம்பிச்சுடுமாச்சே'
'என்ன பேசுறீங்க தப்பு தப்பா பேசுறீங்க் நீங்க யாரு' என்றான் அத்தை பையன்.
' செறு பையன் அம்மாம் வொலக அனுபவமில்லாத ஆளு போல. வுடு.ஆவுற காரியத்த பார்ப்போம்'
என்றார் மூத்த வக்கீல்.தயாராக தான் எழுதி வந்திருக்கிற வெள்ளை பேப்பரில் அத்தையிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டார்.அத்தை பேப்பரை அவசர அவசரமாக வாங்கினாள் கையெழுத்து போட்டாள்.
' ஆயிரம் சொன்னாலும் மூத்தது பக்குவம்தான்' என்றார் வக்கீல்.
'என்ன எழுதியிருக்குன்னு பாக்காம கை எழுத்து போடுலாமா' என்றான் அத்தை பையன்.
'தம்பி நா பெத்த மொவனே நீ செத்த சும்மா இரு என் தெய்வமே என்னை வுட்டுட்டு பூட்டுது.தோ பாரு உள்ளார கசமாலத்தோட கசமாலமா கெடந்து நாறுது. சொறிநாயிவெட கேபுலம் அது அங்க கெடக்குற கெடப்பு நீ பாக்குல ஆவுறது ஆவுட்டும் போவுறது போவுட்டும் எல்லாம் அந்த தலைவாசல் பெரியஆலமரத்தடி கருப்பண்ணன் என் குல தெய்வம் அறிவாரு வுடு'
அத்தை சொல்லித்தரைமீது புரண்டாள்.
என்னிடம் ஒருவர் வந்தார். யாரென்று கூட எனக்குத்தெரிந்தால்தானே. சில சேதிகள் சொல்லி அந்த ப்பையனிடம் சொல்லிவையுங்க என்றார் காக்கி சட்டைக்காரர். இடுப்பில் பச்சைக்கைலி .வக்கில் குமாஸ்தாவா இல்லை இந்த காரியங்க்ளுக்கு எல்லாம் இந்த வட்டாரத்தின் ஏஜன்ட் யாரேனுமா எனக்குத் தெரியவில்லை.
'கேசு முடிய ஆறு மாசம் ஆவும்..ஒண்ணரைக்கு கொறையாம கைக்கு வரும் செத்த ஆளு வயிசு சம்பாத்தியம் எல்லாம் இருக்குதுல்ல அதுதான் வரப்போற காசிக்கு கணக்குக்குப் பேசும். ஆம்பளய தொலச்ச அந்த அம்மாவுக்கு முக்காலு ரூவா வரும் அப்பிடிஇல்லைன்னா ஒண்ணுக்குள்ள வரும். சொச்சம் இருக்குறது அதுஅது அங்க அங்க போவேண்டிய எடம்போயிடும் எல்லாம் நாங்க பாத்துகுவோம். அயிசு பொட்டில ராசா கணக்கா அய்யாபொணத்தை வச்சி எடுத்துகிட்டு ராமாபுரம் போங்க கொற கதயும் பாருங்க'
இதுதான் அந்த பச்சைகைலி என்னிடம் சொன்ன சேதி.
நான் பொறுப்பானவன் அத்தை பையனோடு கூட இருப்பவன் என்பதாக ஒரு போலிசுகாரர் மூத்த வக்கீலிடம் விளக்கிச்சொன்னார்.
அந்த மூத்த வக்கீல் என்னிடம் சொன்ன விஷயம்.' இறந்துவிட்ட ராமாபுரம் ஆதி அய்யாவுக்கு டூவீலர் வண்டி ஓட்டுற லைசன்ஸ், வண்டிக்கான இன்சூரன்சு, ஆர் சி புக் இதுங்க பக்காவா ரினுவல் ஆகி இருக்குதா வண்டி கண்டிஷனா இருந்திச்சா,அய்யா.கண் பார்வை எப்பிடி ரத்த கொதிப்பு எப்பிடி சுகர் மயக்கம் இருந்துதா மருந்து மாத்திரை உடாம சாப்புடுறாரா, காலு நரம்பு சுருட்டிகுமா தண்ணி கிண்ணி பொழக்கமுண்டா பான் பராக் சமாச்சாரம் தொடுவாரா இன்னும் ஆயிரம் கேள்விங்க வரும் அத்தினியும் நான் கோட்ர்டுல சமாளிக்கணும் ஒண்ணு மறந்துட்டேன்.ஓமியோபதி படிச்சி இருக்குறாரா இல்ல சும்மா கதை வுட்டுகினு அலோபதி மருந்து குடுக்குற டுபாக்கூர் டாக்டரான்னு கூட அங்கு கேப்பாங்க'
இது அத்தனையும் அமைதியா காது கொடுத்துக் கேட்ட அத்தை.' வக்கீல் அய்யா என் பெரிய மொவன்ன அது தினுசு வேற அவந்தான் கிட்ட இல்ல எங்கயோ எட்டத்துல வடக்க கெடக்குறான்.என் சின்ன மொவன் செறு புள்ள வெள்ளந்தியா மனசுல பட்டது பேசுவான் எம் புருஷன் கணக்கு அவன். இந்நேரம் அவனுக்கு குடும்பம் கிடும்பம்னு ஆயி இருக்குமே. நெசம் நெசம்னு நெசத்த பேசி பேசித்தான் இப்ப சந்தியில நிக்குறான். அவரும் தோ போயிசேந்துட்டாரு இது நிக்குது அந்தராசியா வக்கீல் அய்யா கொவிச்சிகிடாதிங்க நீங்க எப்பிடி சொல்றீங்களோ அதான் எங்க முடிவு.அய்யா நீங்க சமுத்திரகுப்பத்துல ஆயிரம் கேசுவ பாத்து இருப்பிங்க இது என்னா புதுசா' சொல்லி மூக்கை சீந்தினாள். மீண்டும் ஒங்கி மார்பில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள். போஸ்ட்மார்ட்டம் எனும் சடங்கு முடிந்தது. டாக்டர்கள் பிணவறைவிட்டுக்கலைந்தனர், எங்கும் த்லைவலித்தைல நாற்றம். லைஃப்பாய் சோப்பின் நெடி.வேப்ப மர வேர் படுத்த நாய்கள் சட்டென்று இடத்தைக்காலி செய்தன.
'பொணம் வெளிய வந்துதுன்னா நாயுவ இந்த வாடைக்கு பயந்துகிட்டு கெள்ம்பிடுதுவ' ஆஸ்பத்திரி சிப்பந்திகள் பேசிக்கொண்டு லேசாக ச்சிரித்தனர்.செவிலியர்கள் யாரும்தான் கண்ணில் படவேயில்லை. .
வெள்ளைத்துணி சுற்றிய ரெண்டு அடிக்கு நீளம் இருக்கும் ஒரு பிளாஸ்டிக் பொட்டலத்தை அய்ஸ் பெட்டியில் வைத்து ஆம்புலன்சில் ஏற்றினார்கள். அத்தையையும் அத்தை பையனையும் கூடவே ஆம்புலன்சு வண்டியில் அழைத்துக்கொண்டார்கள்.
இப்ப ஆன செலவுக்கு அயியாரம் கொடுத்துட்டு நீங்க வண்டிய நவுத்தலாம்' என்றான் ஆம்புலன்சிலிருந்து இறங்கிய அந்த காக்கி சட்டை போட்ட பசைக்கைலி. தலை மொட்டையாக இருந்தது.
'எல்லாம் பெரிய அண்ணந்தான்' என்றான் அந்த மொட்டைத்தலையைப்பார்த்துக்கொண்டே நின்றிருந்த பிணவறைக்காவலாளி.
'நான் இந்த அஞ்சி ரூவாயுக்கு பொறுப்பு வண்டி நகரட்டும்' என்றேன்.
'சரி ஒரு நமோதான ஆளு சொல்லுது வுட்டுடு வண்டியை' சொன்னது காக்கி சட்டை போட்ட பச்சைக்கைலி.ஆம்புலன்சின் டிரைவர் வண்டியைக்கிளப்பினார்.
என் சட்டைப்பையிலிருந்தது என் ஏ டி எம் கார்டை எடுத்துக்கொண்டு மெயிரோடுக்கு வந்தேன்.. ரூபாய் ஐந்தாயிரத்தை எடுத்தேன். காக்கி சட்டைபோட்ட பச்சைக்கைலியிடம் கொடுத்து முடித்தேன்.என் வீடும் அருகில்தானே இருந்தது. என் டூ வீலரை எடுத்துக்கொண்டு ஆம்புலன்சின் பின்னே மெதுவாகச் சென்றுகொண்டிருந்தேன்.ராமாபுரம் செல்லும் வழி எல்லாம் மக்கள் கூடி 'ஓமியோபதி டாக்டரு பூட்டாராமே. கரும்பு டிரக்கு ஏறிீடிச்சாம் ஊருக்கெல்லாம் வாத்தியாருதான் இப்ப என்ன செய்வ ' சொல்லிக்கொண்டே ஆம்புலன்சை வேடிக்கை பார்த்தனர்.அத்தை ஆம்புலன்சு உள்ளே தன் இரு கண்களையும் பொத்தி அழுதுகொண்டே இருந்தாள்.
'இந்தகண்ணுறாவிய நான் பாக்குணுமா இதுதான் என் குடுப்பினையா என்ன பெத்த ஆத்தாவே என் அப்பாரே இது அடுக்குமா' மீண்டும் மீண்டும் அழுது புலம்பினாள்.என் அத்தையின் பையன் நான் வண்டி பின்னே டூ வீலரில் தொடர்ந்து வருவதை மட்டும் உறுதிசெய்து பார்த்துக்கொண்டே இருந்தான்.
----------------------------------------------------------------------------------------------------------------------------

..

Monday, July 6, 2015

volakam- story







வொலகம் -எஸ்ஸார்சி



தேரோடும் வீதிய்ல்தான் அந்த சவம் கிடந்தது.சவம் என்றால் சவம் இல்லை.முண்டம்தான் கிடந்தது. யாருடைய உடல் அது தலை எங்கே போனது. தெருவில் பத்து பேருக்குக்குறையாமல் இங்கும் அங்கும் விறைத்துகொண்டு நடக்கிறார்கள். ஏதோ விபரீதம் நடந்துவிட்டிருக்கிறது.வீதி என்று முத்லில் சொன்னதைத் தெரு என்று கொஞ்சம் மாற்றிச்சொல்லி இருக்கிறேன்.கொலை அல்லவா நடந்து முடிந்திருக்கிறது.ஆகத்தான் அப்படி.. காண்போரிடம் எல்லாம் என்னாய்யா நடந்தது அவன் கேட்டான்.. தெருவில் நடமாடிய பத்து பேரில் ஒருவன் அவனை வாயை மூடிக்கொள் என்று செய்கை காட்டினான். அவன் வாயைமூடிக்கொண்டான்.
வந்து நின்ற ஆம்புலன்சிலிருந்து இரண்டு பெரிய ஆஸ்பத்திரி சிப்பந்திகள் வெள்ளை சட்டை போட்டுகொண்டு கையில் ஸ்டெச்சரோடு இறங்கினார்கள்.முண்டத்தின் மீது வெள்ளை நிற சாக்கு மூடியிருந்ததை அப்புறப்படுத்திவிட்டு முண்டத்தின் கைகளை மார்பின்மீது வைத்துக்கட்டினார்கள்.கயிறு ஒன்றும் எடுத்து வராததால் முண்டத்தின் மார்பில் இருந்த பூண் நூலையே எடுத்துக்கொண்டார்கள்.அவன் யோசித்தான் செத்தவன் பார்ப்பனனாக இருக்கலாம்.இருந்தாலும் பூண் நூல் மட்டும் வைத்து எப்படி இன்னார் என்று முடிவுக்கு வருவது.செட்டிமார்களும் ஆசாரிகளும் வன்னியர்களும் கூடத்தான் பூண் நூல் அணிகிறார்கள்.ஆக யாரென்ற முடிவுக்கு வர முடியாமல் அவனுக்குக் குழப்பமாக இருந்தது.ஆம்புலன்சு உள்ளாக அவன் நோட்டம் விட்டான்.பாலிதீன் பை ஒன்றில் தலை பத்திரமாக இருந்தது. பையில் உள்ள துண்டிக்கப்பட்ட தலையின் கீழே இரத்தம் உறைந்து இரத்தக்குழாயும் வெள்ளை நரம்பும் முறிந்த குறுத்தெலும்புகளும் முறுக்கிக்கொண்டிருந்தன. ஆகா நெற்றியில் நாமம். யூ வடிவத்தில் அழகாகக்கொலுவிருந்தது.காதுகளில் வெள்ளைக்கற்கள் பதித்த கடுக்கன். ஆக ஒரு அய்யர்தான் கொலையுண்டிருக்கிறார்.அவன் முடிவுக்கு வந்தான்.
'யாரு அய்யிரு மாதிரி இருக்கு'
'ஆமாம் அய்யிருதான்'
'மேலத்தெருவுல மளிகைக்டை வச்சிருக்கிற அய்யிரு' முண்டத்தை தூக்கிவந்த மருத்துவமனை சிப்பந்தி அவனுக்குப்பதில் சொன்னன்..அவனுக்கு ஒன்றுமே புரியாமல் இருந்தது. ஆம்புலன்சு விரைந்து மறைந்து போயிற்று.வேகு வேகு என்று இங்கும் அங்கும் நடந்த வண்ணம் இருந்த பார்ப்பனர்கள் யாரையும் காணோம்.மேலத்தெரு முக்கில்தான் அந்த அய்யரின் மளிகைக்கடை.அங்கே போனால் செய்தி எதுவும் கிடைக்கலாம். அய்யரின் கடை மூடிக்கிடந்தது.கடையின் பின்புறம்தான் அய்யரின் வீடு.அங்கு சென்று பார்த்தான்.வீடு பூட்டிக்கிடந்தது. இப்படிகூடவா ஆகிவிடும்.ஒன்றுமே பிடிபடவில்லை.திரும்பவும் வாசலுக்கு வந்து மூடிக்கிடந்த கடை வாயிலில் நின்றுகொண்டான்.ஒரு வயதான கிழவி.கையில் ஒரு துணிப்பையோடு கால் தாங்கித் தாங்கி நடந்து வந்தாள்.
'யாரை பாக்கணும்னு கை வண்டிக்காரரு வந்துருக்காரு '
'அய்யருக்கு என்ன ஆச்சி என்ன சேதி இது தெரியணுமே' கிழவியைப்பார்த்துக்கேள்வி கேட்டான்
'பாக்கறதையும் பாப்பிரு என்னை கேப்பிரு என்ன வண்டிக்காரரே சேதி'
'அய்யரை யாரோ கொண்ணு போட்டுட்டாங்க. அது மட்டுந்தான் தெரியுது.ஆனா என்ன சேதி ஏன் இப்படின்னுதான் தெரியல முழிக்கிறன்'
'மளிகைக் கடைய வித்துட்டு பட்ணம் போற அய்யிரு.ஆனா நேரா மேலயே பூட்டாரு. ஆள முடிச்சிட்டாங்க'
'அதான் எனக்கும் அய்யிரு சொன்னது ஆனா இது என்ன கொடுமை'
'அய்யிரு கடைய வூட்ட விக்கறதுன்னு முடிவாகி அச்சாரம் வாங்கி இருக்குறாரு.அச்சாரம் குடுத்த ஆளு சின்ன ஆளு அவரும் பட்னத்து ஆசாமி. அவுருக்கு இந்த ஊர்ல தான் விக்க கொண்டார சாமானுவ சிடாக் வக்கணும் இந்தப்பக்கமா அதுவுள சப்ளை பண்ணணும் அதுக்கு ஒரு எடம் வேணும் அதான் '
'மேல சொல்லு ஆயா'
' அய்யிரு இந்த வூடும் கடையும் பட்னத்து ஆளுக்கு விக்கற சமாச்சாரம் இதே ஊர் உசந்துவூட்டு பலான ஆளுக்கு தெரிஞ்சது. அப்புறந்தான் பத்திகிச்சி விஷயம்.'நான் மேலத்தெருவுல ஒரு ஓட்டல் கடை வைக்க இடம் தேடுறன். எடம் கிடைக்கல.நீரு எங்கிட்டதான் உம்ம வூட்டை கடைய விக்கணும்னு கண்டிஷன் வந்துருக்கு. அய்யிரு அச்சாரம் வாங்கிபுட்ட சேதி சொல்லி இருக்குறாரு. அது எல்லாம் எனக்கு சொல்லுற ஒரு பதில் இல்ல. உன் வூடு கடையை எனக்கு கிரயம் குடுக்கறியா இல்லையான்னு மறுபடியும் சேதி அய்யிருக்கு வநதுது. அய்யிரு முழி முழின்னு முழிச்சி இருக்குறாரு. முடியாதேன்னு கையை விரிச்சி இருக்குறாரு.இது இனி இது சரிப்பட்டு வராது. இந்த அய்யிரு உசுரோட இருந்தாதானே அந்த கிரயம் அது இது எல்லாம். அவுரே இல்லேண்ணா அப்புறம் என்னா இருக்குன்னு கதை முடிஞ்சி போச்சி. உசந்த வூட்டு க்காரரு செஞ்ச காரியம்தான்.அய்யிரு வூட்டு அம்மாவுக்கும் எனக்கும் இது தெரியும் வேற யாருக்கும் தெரிய நியாயமில்லே.அவ்வளவுதான்'
'எங்க அப்பா நாள்ளேந்து எனக்கு அய்யிரு பழக்கம்.அதான் என் மனசு கெடந்து அடிச்சிகுது'
'ஏன் எங்க அம்மா குப்பு இந்த அய்யிர தூக்கி வளத்து ஆளாக்குன அந்த சேதி சொல்லும் நானும் வெனவு தெரிஞ்ச நாளா மளிகை கடையில அய்யிரு கிட்ட பொடைக்க கூட்ட சுத்தம் பண்ணுற வேல செய்யுறன்'
' நானு பாத்து இருக்குறேன்'
'அய்யிரு ஏன் மளிகைக்கடை வச்சாருன்னா அது ஒரு வெஷயம்.கோவிலு படைச்சவருதான் அய்யிரு. கோவில்ல பெருமாளு சாமி மேல கெடந்த பவுன் நகையைகானும்னுட்டு வெசாரணை வந்துது. அய்யிரு கிட்ட கேக்ககூட்டாத கேள்வி எல்லாம் போலிசு கேட்டு இருக்காங்க. அண்ணைக்கே எனக்கு இந்த வேல தோதுபடாது. மளிகை கடையில பொட்ணம் கட்டி பொழப்பு நடத்துறேன்னு நொண்டி செட்டியார் கிட்ட வேலைக்கு வந்தவருதான்.நொண்டி செட்டியார் கிட்ட வேலை செஞ்சிதான் புள்ளவள படிக்கவச்சாரு.அதுவ ஆளாச்சி மேல மேல வந்துது.நொண்டி செட்டிக்கும் புள்ள இல்ல. அப்படியே கடையை குடுத்துட்டு பூட்டாரு. இந்த கடை வெடம் அய்யிரு வெடம்தான் கடை மட்டும்தான் நொண்டி செட்டியார் வச்சிருந்தாரு'

' நானும் இந்த சேதி சொல்லுறன்னா ஆளு யாரு எவுருன்னு நூறு தரம் பாத்துட்டுதானே சொல்லுறன்.டப்பு டிப்புன்னு இந்த சேதி சொல்லிட முடியுமா' என்றாள்.
' இப்ப அய்யரூட்டு ஜனம் எங்க அய்யிரு பொணம் பெரிய ஆஸ்பத்திரிக்குதான போயிருக்கு'
'அந்த கதய கேட்டா இன்னும் கேபுலம்.இந்த ஊர்ல அய்யிருக்கு யாரு இருக்குறா. அய்யிரு மொவனும்மவுளும் சிங்கபூர்ல இருக்குதோ இல்ல இன்னும் எங்கயோதான் போயி இருக்குதோ. காசு வேணும்னுட்டு கைலாசம் பாக்க போனதுதானே அய்யிருட்டு அம்மா தான் இங்க இருக்கு. உசந்த வூட்டு ஆசாமி நேரா இங்க வந்த்து. ' என்ன பிரச்சனையோ ஏது பிரச்சனையோ யாரு கண்டா பட்டப்பகல்ல உம் புருசனை யாரோ வெட்டிபோட்டுட்டு போயிட்டானுவ இனி நீ இந்த வூட்டுல தனியா கெடந்து என்னா செய்யுவ வா என் வூட்ட பக்கம் நானு கொற சேதியும் பாத்துகுறேன்னு' சொல்லி அத கூட்டிகினு உசந்த வூட்டு பெரிய கையி அவுரு வூட்டுக்கே போயிருக்கு.அங்க அந்த அம்மா இந்த கதியில போவுலாமா இல்ல கூடாதா இதுகேள்வி . கூடாதுன்னே வச்சிக அது என்னா செய்யும். நட்ட நடு தெருவுல புருஷன தல வெட்டி போட்டு கதை நாறி கெடக்கு. எந்த சனம் அந்த அம்மாவ தாம் வூட்டுகு இட்டுகினு போவும். பாப்பாரசாதியில கேக்குணுமா யாரும் செத்துட்டா ஒரு பொணம் உழுந்துட்டா திரு திருன்னு திருட்டு முழி முழிப்பானுவளாச்சே. அவன் அவன் சாவாம இந்த பூமியிலேயே சாசுவதமா கெடக்கப்போற மாதிரிதான எப்பவுமே அவுனுவ நடக்கறதும் போவறதும் இதுங்கறது எல்லாம்'
'இப்ப நீ எங்க இந்த பக்கமா வந்த ஆயா'
'செம்மாதான் வந்தன் பாழும் மனம் கேக்குல.நேத்து எங்கிட்ட பேசிகினு இருந்தாரு அய்யிரு.எல்லா கதயும் சொல்லுவாரு. அந்த அம்மாவும் சொல்லும்.புள்ளிவ அசலூர் மண்ணுக்கு சம்பாரிக்க போயிடுச்சி.பொணத்த அயிசு பொட்டில வச்சி அதுவ வந்த பொற அடக்கம் பண்ணுவானுவன்னு நெனைக்கிறேன்'
அந்த பூட்டிக்கிடந்த அய்யர் மளிகைக்கடைக்கு முன்னால் ஒரு போலிசு வான் நின்றது.இரண்டு போலிசுகாரர்கள் வண்டியிலிருந்து கீழே இறங்கினார்கள். உள்ளே நாய் ஒன்று கம்பீரமாய் எட்டிப்பார்த்தது. பின் இறங்கி இங்கும் அங்கும் முகர்ந்து வன்டிக்குள் ஏறிக்கொண்டது.
அவர்கள் கொண்டு வந்த அலுமினியப் பெட்டியைத்திறந்து கடைக்கு சாணிக்கலரில் சீல் வைத்தார்கள்.
'நீங்க ரெண்டு பேரும் யாரு'
'அய்யா நானு அய்யிரு கடையில ஜாமானுவ பொடச்சி நோம்பி குடுக்குற பொம்பளை'
அந்த க்கிழவி சொன்னாள்.'நீனு' என்றார் ஒரு போலிசுகாரர் அவனிடம்.
'அய்யா நானு கை வண்டி இழுக்குறவன் அய்யிருக்கு மளிகை ஜாமானுவ கொண்டாருவன் போவேன் வருவேன்'
' ஒண்ணும் புண்ணியம் இல்லாத கேசுவ. வேற பொழப்பு இருந்தா பாருங்க போங்க போங்க'
என்றார் இதுவரை அமைதியாயிருந்த வேறு போலிசுகாரர்.
'கதை எப்பிடி போவுது இப்ப'
' அய்யிரு கடைய வூட்ட வாங்க அச்சாரம் கொடுத்த ஆளு சென்னையில இருக்கான் அவன தூக்கியார போலிசு ஆளு போயிருக்கு. அவன கொண்டு வந்துட்டு இப்புறம் கதை ஆரம்பிக்கணும். அய்யிரு சனம் சிங்கப்பூர்ல இருந்து வந்துதுன்னா அய்யிரு பொணத்தை ஒப்படைச்சி அசமடக்கி புடலாம் பெறகு வுட்ட கொற முடிக்கணும்'
ஒரு போலிசுக்காரர் சொல்லிக்கொண்டிருந்தார்.
மறு நாள் காலை விமானம் பிடித்து அய்ய்ர் மகன் மகள் குடும்பங்கள் வந்தன. உறவினர் ஏதோ நான்கைந்து பேருக்கு எட்டிப்பார்த்தனர்..உசந்த வீட்டுக்காரர் தயவில்தான் அய்யரின் இறுதிப்பயணம் இத்யாதிகள் நிகழ்ந்தது.அய்யரைப்போலவே இருந்த அய்யரின் மகன் கீழ்பாச்சி கட்டி க்கொண்டான்.சவரம் செய்துகொண்டான். அய்யருக்கு க்கொள்ளி வைத்து குடம் உடைத்து அன்றே பாலும் தெளித்துமுடித்தான்.பாக்கி காரியம் எல்லாம் சென்னையில் என்று முக்கியமானவர்கள் முடிவு செய்தார்கள்.தங்காயா உசந்த வீட்டார் வாசலிலேயே குத்திட்டு அமர்ந்திருந்தாள்.
அய்யர் வீட்டு சாவுக்கு காரியம் சடங்கு பாத்த அய்ய்ர் நல்ல வரும்படியோடு வேலை முடித்தார்.' உனக்கு வெத்துல கித்துல வேணுமா' என்றார் சடங்கு செய்த அய்யர். தங்காயா ஏனோ அந்த அய்யருக்கு பதில் எதுவும் சொல்லாமல் இருந்தாள்.
அய்யர் வீட்டு அம்மா தனியாய் நின்றிருந்த தங்காயா கிழவியிடம் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு எடுத்துக்கொடுத்தாள்
'வேணாம்மா எனக்கு ' என்றாள் தங்காயா.
சொல்லி வைத்தார் போல் பார வண்டி இழுக்கும் அவனும் வந்து தங்காயா அருகே நின்றான். அய்ய்ர் வீட்டு அம்மா தெரு வாசலுக்கு இறங்கி வந்தார் அவனிடம் அந்த ஐ நூறு ரூபாயை நீட்டி ' நீ வாங்கிக்கோ நாங்க எல்லாம் இப்ப மெட்றாசுக்கு கெளம்பறம்' என்றாள்.
'நா காசு வாங்க மாட்டேன்' என்றான் கை வண்டிக்காரன்.
உசந்தவீட்டு பெரிய மனிதர் இல்லத்து வாசலில்தானே இத்தனையும் நடந்தது. அவரே அந்த நேரம் பார்த்து அவ்விடம் வந்தார்.' அய்ய்ரே இந்தாரும் இந்த ஐ நூறை நீர் வச்சிகும்' என்று சொல்லி அந்த அய்யர் வீட்டு அம்மா கைவசமிருந்த ஐ நூறு ரூப ாய் நோட்டை வாங்கினார். சாவு காரியம் பார்த்து முடித்த அந்த அய்யரிடம் ஒப்படைத்தார்.
'நானும் தாம்பாளத்துல தட்சணையா உக்காரவச்சி குடுத்தாதான் வாங்கிகறது. இருந்தாலும் பெரியவா இப்ப கொடுக்கறேள். நான் வாங்க்கிகறேன்' என்று சொல்லி காரியம் பார்க்க வந்த அந்த அய்ய்ர் பணத்தைவாங்கிக்கொண்டார்.
'அய்ய்ரு வூட்டு அம்மா இனி மேலுக்கு சிங்கப்பூரு பூடும். மளிகைக்கடை பூட்டி சீல் வச்சிட்டாங்க. நாம பொழப்ப நாம பாக்குணும்' சொல்லிய கை வண்டிக்காரன் புறப்பட்டான்.
'ரவ வண்டியில் குந்திகறன் என்ன இசுத்துகினு போயி அந்த சன்னதி மொகனையில வுட்டுடு நடக்க முடியல ராசா' என்றாள் தங்காயா.
அவள் ஏறி அமர வண்டி நகர்ந்தது.அந்த இருவரையும் பார்த்து பார்த்து கண்களைத்துடைத்துக்கொன்டிருந்தார் அய்ய்ர் வீட்டு அம்மா.
'என்னா வொலக்ம்டா இது . சாமி பூதம் எல்லாம் செத்துதான் பூடுச்சி' சொல்லிக்கொண்டே வண்டியில் பயணம் போனாள் தங்காயா.
---------------------------------------------------------------------------------- .


.


.

...
. ...