Wednesday, February 5, 2020

நண்பர் மாத்ரு




  நண்பர் மாத்ரு

 நண்பர் மாத்ரு
கோவையிலிருந்து பேசுகிறார்
எப்போதும் நல்ல விஷயங்கள்.
எல்லோருக்கும் நல்லவைகள் மட்டுமே
ஓயாமல் அவர் பேசுவது
என்னைப்பிரமிக்க வைக்கிறது.
அவருக்கென்று சில நண்பர்கள்
ஆத்ம நண்பர்கள்
யாருடனும் கோபிக்கத்தெரியாத
அன்பின் உருவம்
எத்தனை அவமதிப்புக்கள்
எத்தனை மன ரணங்கள்
தாண்டித்தாண்டி வரும் மாத்ரு
சிற்றுயிர் ஒன்றைக்கூட
கவனத்தில் கொள்ளும்
கருணைக்கு உறைவிடம்.
மாத்ருவை நண்பராகப்பெற்றது
யான் செய்த தவமால்.
மாத்ருவின் நண்பர்கள்
ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்
இரண்டாம் கருத்துக்கு
என்றும் இல்லை இடம்.


சின்ன விஷயமில்லை


குப்பையைத்தெருவில்
எங்கேனும் நீங்கள்
கொட்டிவிட முடியாதுதான்.
வீட்டின் சேரும் குப்பையை
அன்றன்றைக்கு அகற்றாவிட்டால்
கொசுக்கள் உற்பத்தி.
டெங்கு  கொரானா இத்யாதிகள் எத்தனையோ.
அதற்கென நியமிக்கப்பட்டவர்கள் இருக்கலாம்.
தெருவில் குப்பையை அள்ளிச்சுத்தம்
செய்வோரை எங்கே பார்க்கமுடிகிறது.
என்றேனும் வருகிறார்கள்
நம் புத்திக்கு எட்டாக்
காரணங்கள் இருக்கலாம். 
தெய்வத்தைப்பார்ப்பதாய் இருக்கிறது
அவர்களின் வருகை.
குப்பயை மூட்டையாய்க்கட்டி
தூரமாய் ச்சென்று  
விட்டெறிந்தே  வரவேண்டும்.
சாகசமாகத்தான் இருக்கிறது.
செய்து பார்க்கிறேன்.
யாரேனும் பார்த்துவிடப்போகிறார்கள்
அச்சம் இருக்கிறது மெய்யாக
குப்பைகள் தவிர்க்கமுடியாதன
அவைகளை நிர்வாகம் செய்தல்
ஆரோக்கியத்துக்கு அடித்தளம்
அது சின்ன விஷயமில்லை.
சுவரெங்கும் எழுதித்தான் இருக்கிறார்கள்
சுத்தம் பிரதானமானது
காரியங்கள் எப்படி நிகழும்தானாக.

 நித்யானுபவம்
.
கூவம் நதியை
அடையாற்றை
பக்கிங்காம் கால்வாயை
காணச்சகிக்கவில்லை
நித்யானுபவம் சென்னை வாசிக்கு.
அங்கங்கு குப்பயை
அள்ளி அள்ளிக்   குவித்திட்ட சிறு சந்தோஷம்
அனுபவமாகலாம் அவ்வளவே.
ஏதேனும் நீர்த்தடம்  ஒன்றிற்கு
நிலையான தீர்வை
கொண்டுவர உருப்படியான
திட்டங்கள் பிறக்கவேயில்லை.
ஆயிரம் தொடக்கங்களுண்டு
எதுவுமே  நிறைவேற இல்லை
சென்னையின் குப்பையைச்
சுமக்க அவ்வாறுகளின்றி
பிறிது ஏது என்பார்கள் அதிகம்.
அவைகள் இல்லா சென்னையைக்
கற்பனை செய்
குப்பைக்  
குன்றுகள் வரிசைவரிசையாய்


பிழைப்பு

எழுதி வைக்கலாம்
என்றாவது அவை போணியாகலாம்.
ஆகாவிட்டால் போகட்டும்
பதிப்பகத்தாரை அணுகுவது
எளிதாக இல்லை
அவர்கள் நம்மை அணுகி
படைப்பைப்பெறுவது
சாத்தியமே இல்லை.
வாய்ப்பில்லாதவர்கள்
தொடங்கலாம் தானே
பதிப்பகம் ஒன்று
தொடங்கியும் பார்த்ததுண்டு.
அது இனி சாத்தியப்படுமா என்ன
சொல்வதற்கில்லை.
காலம் மாறிப்போனது
வணிகயுக்தி அறிந்தவர்கள்
வீரமாக உலா வருகிறார்கள்
 நூலக ஏற்புக்கு அனுப்பி
 நட்டம் தவிர்த்தவர்களுண்டு
அது பழங்கதை..
அரசும் கற்றுக்கொண்டது
கூடாதவைகளை.

வாய்ப்புக்கிட்டாதவன்  
பிதற்றுவான்தான். தெரிகிறதா 
என்னைத்தான் சொல்கிறார்கள்.

வாழ்க்கை

சூழலின் கைதியாகத்தான்
மனிதன் வாழ முடிகிறது.
அவன்  ஒரு சமூக விலங்கு
கூட்டாகத்தான் நடத்தமுடியும் வாழ்க்கை.
துறவிக்குக்கூட தனித்து
வாழ்ந்திடலாம் என்பது நடவாதது.
அடுத்தவரின் தலையீடு
அது உனக்கு ஒத்தாசையோ உபத்திரவமோ
எதுவாக வேண்டுமானாலும் அமையும்.
நின்னிருப்பும் நினது செயல்பாடும்
அடுத்தவர்க்கு அப்படியே 
அமைந்து நிற்கும் யதார்த்தம் அது.
இதற்குள்ளாகத்தான்
நல்லதைத்தேடு  நின் செயல் பாட்டில்
கொஞ்சமாவது அஃது வெளிப்பட
ஓயாது முயலு.
வெற்றியும் கிட்டலாம். 
ஒன்றும் நிச்சயமான விஷயமில்லையது.
தேர்ந்துகொண்ட நல்லதற்கு
முனைதலும்
நேராய் நிற்றலும் போதும்
நிறைவுதான் அது
பிறிதெதுவுமில்லை நிறைவு.

உலகம்
.
உலகம் ஒரு குடும்பம்
நன்மைகள் எத்தனையோ.
இப்புரிதல் அவசியமானது.
அம்மையும் காலராவும்
பிளேக்கும் போலியோவும்
தடுத்து நிறுத்தினோம்
இன்று கொரானா 
நாளை வேறேதோ  
உலகம் ஒரு குடும்பம் என்கிற
கருத்தின் நீட்சிதான்.அது 
அறிவியலின் ஆயிரம் வசதிகள்
அனுபவிக்கிறோம்
இல்லையென்று சொல்லிவிடுவோமா
தெருவில் பூ விற்கும்
பூக்காரி கையில் கைபேசி
வைத்துக்கொண்டு நடக்கிறாள்.
மின்சாரரயிலில் பிச்சைக்காரர்கள்
கை பேசி இல்லாதவர்களில்லை.
அறிவியல் சாத்தியமாக்கி
அள்ளித்தந்திருக்கிறது எத்தனையோ.
மனம் விசாலப்படும்
யுக்தி மாத்திரம் மனிதற்கு வசப்படவில்லை
அறிவியல்  அங்கேயும்
எட்டிப்பார்க்கலாம் பின்பு  ஒரு நாள்.
------------------------------------------------------------


யோசனை

1மனிதனாக மட்டுமே சிந்திப்போம்
வேறு யோசிப்பு ஏதும்
வேண்டாமே இப்போது
இலங்கையில் குண்டுவெடிப்பு
மனமெல்லாம் நிறைகிறது ரணம்
இயேசு உயிர்த்தெழுந்த நாள்
எப்படிக்குறித்தார்களோ நேரம்
தேவாலயங்கள் மூன்று
துண்டு துண்டாய் மனித உடல்கள்
சுற்றுலா காண வந்த விருந்தினர்கள்
இலங்கை மண்ணில்
சிதறிப்போயிருக்கிறார்கள்
உலக மக்களுக்கு
எச்சரிக்கை தருகிறார்களாம்
சுமந்து வளர்த்து ஆளாக்கிய அன்னையர்
உடன் நின்ற தந்தையர்
கல்வி புகட்டிய பள்ளிகள்
மொத்தமாய்ச்சுமந்தனர் சோக அறுவடை.
நியூசிலாந்தில் பாகிஸ்தானில் பலுசிஸ்தானில்
இலங்கையில் தொடரும்
மனிதக்கொலைகள் கொத்துக்கொத்தாய்
அன்பு தனில் செழிக்கும் வையம்
யாரேனும் சொல்லத்தான் முடியுமா
எங்கே யாரிடம் சொல்வது
தானும் மடிந்து மண்ணையும் மனிதக்குருதியால்
சேறாக்கிப்போனவர்களிடம் பேச முடியுமா
தீவிரவாதம் எப்படித்தான்
பெறுகிறது உயிர்ப்பு 
என்னதான் வேண்டும்
இம்மானுட  மூடர்களுக்கு.

என் தாய் நாடு
.
பாரத தேசத்தில் தேர்தல்
யார் வரப்போகிறார்கள் நாளை
ஆயிரம் ஆயிரம் கோடியாய்
கொட்டி முடித்து இருக்கிறார்கள்
மக்களின் தேர்தல் பெருவிழா
நாடாளும் இயந்திரங்களில்
மக்களாட்சியே சிறப்பு
யாரும் இல்லை என்று சொல்வதில்லை
அறிவியல் சாதனையால்
செவ்வாய் கிரகத்தில் காலடிவைக்கலாம் மனிதன்.
சாதிப்பிரிவினைகள் சாக மறுக்கிறதே.
பணமும் பலாத்காரமும் பல்லக்குத்தூக்க
சாதி அரக்கன் காண்கிறான் 
வீதி உலா..
மதம் எனும் பிசாசுகளுக்கு
சிறகு முளைத்து விட்டிருக்கிறது
வேத புத்தகத்தை சாத்தான்களிடம்
ஒப்படைத்த
தெய்வங்கள் நிம்மதியாய் நித்திரையில்
பகத்சிங் நேதாஜி வ உ சி வாழ்ந்த மண்ணில்
பொரி உருண்டை வழங்கினால்
போதும் மக்கள் தங்களையே 
விற்றுவிட ஓடுகிறார்கள்
காசு கொடுப்பவர்கள்
பின்னே கை கட்டி வாய் பொத்தி நிற்கும்
கயவர்களையா
கருச்சுமந்தாள் பாரதத்தாய்..


தினம் தினம்
.
இந்தியா என் தாய் நாடு
ஒரே நாடுதான் இது.
பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவதும்
ஏழைகள் மேலும் ஏழைகளாவதும்
அரங்கேறுகிறது அன்றாடம்..
குடிகாரர்கள் கூடிப்போகிறார்கள் எண்ணிக்கையில்
பள்ளிச்சிறுவர்கள் பிஞ்சுக்கைகளில்
போதைப்பொருள் பொட்டலங்கள்
மகளிர் சமூகத்தில் நிம்மதி தொலைத்து
எத்தனையோ காலமாயிற்று
மனிதனாக வாழத்தெரியாத நமக்கு
சந்திரனுக்குப்போய்க்  குடியிருக்க ஆசை
தேர்தல் நெருங்கிவர.
வோட்டுக்கு எவ்வளவு பணம் தேரும்
அதே நினைப்பு.த்தான் 
உறக்கம் வரவில்லை

பள்ளிகள்

குழந்தகளைப்பள்ளிகளில்
கொண்டுபோய் ச்சேர்க்கிறார்கள்
பள்ளிகளில்தான் எத்தனை வகை.
அரண்மனை வாசிகள் தொடங்கி
அன்றாடம் காய்ச்சிகள் வரை
ரகம் ரகமாய்ப்பள்ளிகள்
படிப்பு முடித்து வரும் பிள்ளைகள்
எல்லோரும் சகோதரர்களாம் 
அப்படிச்சொன்னால்
நகைப்புக்குத்தான் இடம்
சமூகம் பிரிந்து  பிரிந்து கிடப்பதுபோல்
கல்வி நிலையங்களும்தான்
இந்தியர் யாவரும் உடன் பிறந்தோர்
முழங்கியது  பழங்கதை.
பள்ளிகளில் அது உறுதிமொழியாயில்லை.
கல்வியில் தாராளமயம்
அரக்கனாய் அனுபவமாகிறது.
வெள்ளைத்தாமரை வீற்றிருப்பவள்
மெள்ள மெள்ள போகிறாள் வேறிடம் 
காத்துக்கிடக்கின்றனவே 
கொள்ளையர்களின் கல்விகூடங்கள்



சரவணபெலகெலா

சரவண பெலகெலா
சென்று பார்த்தேன்
பெங்களூருவிலிருந்து நூற்றைம்பது கிலோமீட்டர்
மேற்கில் பயணித்து.
மங்களுர் செல்லும் தார்ச்சாலை
தென்னை மரங்கள் அடர்ந்து
பாக்குத்தோட்டங்கள் இடை இடையே
எழு நூற்று ஐம்பது கல்படிகள்
கொண்ட குன்றின் மீது
கால்களில் செறுப்பின்றி செங்குத்தான ஏற்றம்
வெயில் இல்லா நேரம்
காற்று வீசி அடிக்கா  நேரம்
மழை பெய்யா நேரம்
வேண்டுமிவை முக்கியமாய்
 கோமதீசன் சிலை அறுபதடிக்கு
அம்மணமாய் நிற்கிறது உச்சியில்.
ஆயிரம் ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.
எல்லாம் கடந்த மாமனிதர்க்கு
இடைத் துணி தேவையில்லைதான் .
எதையும் இழக்க மனமே ஒப்பா நாங்கள்
சுற்றி வந்து வணங்கி நின்றோம்.
உடன் வந்த என் பேரக்குழந்தை
உச்சா சாமிய பாத்தாச்சி என்றான்
மீண்டும் எழு நூற்று ஐம்பது அடிகள்
மலை இறங்கி
மூச்சுமுட்ட 
முடிக்கவேண்டும் புனிதப்பயணம்.


மா நரகம்

 எல்லோரும் மா நகரம்
நோக்கித்தான் கூட்டமாய் வருகிறார்கள்
மா நகரம் மக்கள் தொகை கூடி
மா நரக மாகிற்று
சுவாசிக்கும் காற்றும்
குடிக்கும் தண்ணீரும்
தூய்மை தொலைத்தன.
முதியவர்களும் சிறார்களும்
அந்நியமாக உணர்கிறார்கள்.
இடைப்பட்டவர்கள் பணிச்சுமையிலும்
பயண நிர்பந்தத்திலும்
சிக்கித்தவிக்கிறார்கள்.
பெருகிய மக்கள் தொகையை
பெரு நகர வணிகர்கள்
பெரு லாபத்திற்கு வழியெனக்கண்டார்கள்.
ஆரோக்கியமாய் வாழ்வெதெல்லாம்
அவரவர் கொடுப்பினை, 
மருத்துவச்செலவு அது எட்டாக்கனி
சம்சாரிக்கு  என்று ஓயும் பிரச்சனை.
படுத்தவனுக்கு  எப்போது
 வரும் மீளாப்பயணம் 
என்பதிங்கு  இருப்பவனின் வினா,
அவனைச்சொல்லிக் குற்றமில்லை
மனிதனாக வாழ மறுத்திட்ட சூழல்
ஜடமாக்கி யிருக்கிறது அவனை.
காசு காசு அதுவே வாழ்க்கை.
செயற்கையாய் வாழலாம் முடியலாம்
சாத்தியம் அதுவே.


வேறு வழி

வயிறுதான் பசித்து
நம்மை மண் தொலைக்க வைக்கிறது.
திரைகடல் ஓடியும்
திரவியம் தேடலாம்
வாழ்ந்த மண்ணைத்தொலைத்து
வேறிடம் மீத வாழ்க்கை.
பண்பாடு கொஞ்சம் கொஞ்சமாய்
சிறுத்து விடை பெறுகிறது.
எங்கோ வந்து என்னவோ வாழ்க்கை
வங்கிக்கணக்கில் எஜமானர்கள் 
காசு போடுகிறார்கள்
பிடிக்காதவைகள் வாங்கி
வயிறு ரொப்பிக்கொள்ளத் தான்.
பேசிய தாய் மொழி
இற்றுக்கொண்டு விட்டது
வளரும்தலைமுறகள்
தாய்மொழியை தொலைத்துவிட்டு
அம்மணமாய் நிற்கிறார்கள் அறியாமல்.
திருக்குறளும் திருவாசகமும் திருமூலமும்
இனி எங்கே விளங்கப்போகிறது
மண் மாறி, மடை மாறிப்போன
சொந்த சொச்சங்களுக்கு.
எதை இழந்தோம் எத்தனை இழப்பு
அறியாமலே அப்பாவிகள்
நூறு மாடி க்கட்டிடத்தில்
ஏறி இறங்கி ஓடுகிறார்கள்
யாரோ  மூட்டைகட்ட
வாழ்வைத்தொலைத்தவர்கள்
மிடுக்காய் பவனிவந்து
யாரைப்பார்த்தோ 
ஏளனமாய்ச் சிரிக்கிறார்கள்.
-------------------

Tuesday, February 4, 2020

தேடு




தேடு

ஈசன் சிரசில் கங்கைப்புனல்
இந்திய சிரசில் காசுமீர் அனல்
அனல் மூட்டியவர்கள்
முனைந்தால் முடியலாம்
அவர்கள் மனமோ
தாழிட்டுக்கொண்டிருக்கிறது
தகவல் தெரிந்தவர்கள்
தமாசு பழகுகிறார்கள்.
மும்பைக்குக்கனத்துப்போனது தலை
வடக்கத்தியர் விரட்டப்பட்டு
தலை நிமிர
ஆட்டுகிறது வாலை

குசராத்தில் பணம் பெருத்தவர்கள்
மனம் சிறுத்து
மதப்பேயொடு
தேன் நிலா போகிறார்கள்
கீழை இந்தியாவில்
விதம் வேறு
மண்ணில் பிறந்தவர்களோடு
யாரெல்லாம் கூடுவது
கூடியவர்களின் எண்ணிக்கைக்
கூடிக்கொண்டே எப்படி?
ஒரிசாவிலும் மைசூரிலும்
சாமிச்சண்டை
எந்த சாமியப்பா அதிகம் போணி
வோட்டுக்கள் வேண்டுவோர்
வேட்டுக்கள் வேண்டுவோர்
நாட்டுக்குள் மலிந்தனர்
எப்படிப்பொறுக்கும்  இறை
இலங்கையில்
நித்தம் குண்டு மழை
தமிழ் ரத்தம் யாருடம்பில்
வீர்யமாய் ஓடுகிறது
முஸ்தீபு நடக்கிறது . 
பொன்விழா காணலாம்
உள்ளூர் நட்பிங்கு. 
’சந்திராயணம்’ தயாராகட்டும் சந்தோசம்
வல்லரசுக்கு அறிகுறி வரலாற்றில்.
நல்லரசு வேண்டும்
நாம் எங்கே போவது
தொலைந்துவிட்ட
தேசபிதாவைத்தேடிக்கண்டுபிடி
தெரியவரும் விடை..  (இலக்கியச்சிறகு 15/2009)
------------------------------------------------

ஈழம் மலரும்

வரலாறு மன்னிக்காது
என்றும் எம்மை
முள்ளிவாய்க்கால் சோகங்கள்
சொல்லி முடிவதுவா
ஆயிரம் ஆயிரம் சொந்த சோதரர்கள்
குருதிச்சேற்றில்
எத்தனை அழுகுரல்கள் அவலங்கள் அவமானங்கள்
அம்மணமாக்கிப்பொசுக்கித்தள்ளினர்.
லங்கையின் ராட்சதன் ராஜபட்சே
ஆணைதந்தான் தெய்வங்கள் ஊமையாயின
ரோசம் தொலைத்து
மோசம் போனது மொத்தமாய் யாம்
இலவசங்கள் பெருவதும்
இளித்து நிற்பதுவும் நடைமுறையாகி
தடித்துபோனது தமிழன் தோல்
இந்துவின்  ராம் வழிகாட்டுவதா எமக்கு.
இருபத்தோறாம் நூற்றாண்டில் வாழ்கிறோம் யாம்
அகங்காரம் விண்ணைமுட்ட
கொலைகள் கொலைகள் கொலைகள் மட்டுமே
புத்தரின் வழியில் ரத்தக்காட்டேறிகள்
யாதும் ஊரே யாவரும் கேளிர் சொல்லிக்
கண்ணை மூடிக்கொண்ட கயவர்கள் யாம்
தன்னினத்தான் மடிய சாட்சிகளாய் நிற்கும்
தமிழனை எப்படிப்பேசினால் என்ன
எருமைத்தமிழர்கள் யாம்  
வள்ளுவர்க்கோவாரிசு
நாட்டின் சொந்த மக்களையே
கொன்று குவித்த மோசக்காரனுக்குப்
பாசம் காட்டும் நீசர்கள்
சத்மேவ ஜயதே சொல்கிறார்கள்
அம்மணமாய் நிறுத்திவைத்து
அறுசுவை உண்டி தந்தால்
யார் எக்கேடு கெட்டால் என்ன
மீசைதான் யமக்கெதற்கு?
கொலைகள் முடிந்து கோரம் நிகழ்ந்தபின்னே
கண்ணைத்திறந்துகொண்டான்
அமெரிக்கன் அய்யோ போர்க்குற்றம் போர்க்குற்றம்
மலை மீதுஏறி முழங்கினான்
சங்கு பிடித்து..
ராஜபட்சேயை சொல்லாதே அப்படி
சுருங்கிப்போகிறார்கள்
கங்கையின் மைந்தர்கள் கீதை படித்தபடி
சங்கையில்லாது யாம்தான்
சட்டைபோட்டுக்கொண்டு உலா வருகிறோம்.
கிரிக்கெட்டு விளையாட லங்கைப்பயணம்
நேற்றும் இன்றும்
தாயை சகோதரியை அம்மணமாக்கி
சிதைத்த வெறி நாய்
கிலுகிலுப்பை ஆட்டிக்காட்டுகிறது
வழித்துக்கொண்டு வாயைப்பிளக்கிறோம் யாம்
இப்படியே போய்விடாது காலம்
கணக்கு நேர் செய்வோம் யாமும்
சாம்பலில் எழும் பீனிக்ஸ் பறவை
தருகிறது எமக்குப்பாடம். 
மண்ணுக்குள் உயிர்ப்பாகி மறைந்து கிடக்குது
எங்கள் தன்மானம்
இப்போ சொரணைகெட்டுக்கிடப்பதற்கு
வெட்கித்தலைகுனியும்
நாள் ஒன்று வராமலா போகும்
அன்றெங்கள் தமிழீழம் மலரும்.
---------------------------------------------( கலை இலக்கிய முகாம் கடலூர் NFTE 27/7/2012)
அது
வரவிருக்குது யுத்தம்
நான் எந்த ஆயுதம்
எடுக்கவேண்டுமென்று
என் எதிரி தீர்மானிக்கிறான்.
யார் எதிரி எனக்கு
எப்போதும் நானே
தீர்மானிக்கிறேன்- அது.

தேசபிதாவுக்கு
மாலைபோட
மண்டை உடைந்தது
நீயா அது நானா.
சண்டை ஏனாம்
சரியாப்போச்சு
பாற்கடலைக்கடைந்தபோதே
பங்கிடுதலில் கோளாறு.
வேண்டுமொரு
விசாரணைக்கமிஷன் -அது.


இல்லாத ஒன்றை
இருப்பதாய்ச்சொல்லு
இருப்பதொன்றை
இல்லாததுவாய்ச்சொல்லு.
உள்ளதைச்சொல்பவன்
உட்கார்ந்திருக்கட்டும்.
சும்மா இருந்தானே…
உண்மையின் கால்களைச்
சிதைத்துப்
பொய்மைக்குச்
சிறகு செய்யும் தருணம்-அது. (யுகமாயினி-1/2008)

அரக்கச்சிரிப்பு

பாசத்தால்
பாதரட்சைகள்
ஆட்சிக்கட்டிலில் ஏறிய
எம்மண்ணில்
ஆர் டி எக்ஸ்களின்
அமோக விளைச்சல்
மும்பை ரயில்கள்
மனிதக்குருதி
மனித நிணங்கள்
சுமக்கும் சுமை வண்டிகளாய்
பெற்றன மாற்றம்
எட்டு குண்டுகள்
தொடர்ந்து வெடித்தன
வாழைத்தோலாய்
இருப்புப்பெட்டிகள்.
மனிதர்கள் ஆயிரமாய்
குருதிச்சேற்றில்.
மும்பை நகரில்
இரண்டாம் முறை
அரக்கச்சிரிப்பு.
தொடருமோ இன்னும்!
மும்பாதேவிக்கும்
தொந்திக்கணபதிக்கும்
எட்டினால்தானே விஷயம் .
எறும்புகள் மிதிபடக்கூட
மனம் ஒப்பா
எம்மண்ணில்
எப்படிச்சாத்தியமிது
தத்துவத்தின் மூலக்கோளாறு
செயல் பாட்டில் வக்கிரமம்
ஆண்மையின் அம்மணம்
நெறிகள் கற்பிழந்தன.
யாருக்குப்பிரச்சனை
யார் சாவது?
ஏதும் அறியா
அப்பாவிகளைக்
கிழித்துப்போட்டது
மானுட அசிங்கம்.
அவமானம் அச்சம் 
பேடித்தனத்தின் உச்சம்
காறி உமிழலாம் கழுகுகள் கூட!
பூமித்தாயின்
வயிறு பற்றி
எரிகிறது
புத்தன் ஏசு
காந்தியையும் பெற்றிட்ட
பூமித்தாயின்
வயிறு பற்றி எரிகிறது.
--------------------------------------------------- (இலக்கியச்சிறகு 12/2006

குறுங்கவிதைகள்

மலையேற்றப் பயணம்
புழுக்கை புழுக்கையாய்ப்பேருந்துகள் வரிசை
இயேசு அழைக்கிறார்
எதிரே எழுதிச்சிரிக்கும் கல்.

மார்கழி வந்தால்
மந்தமாகின்றன காதுகள்
புளித்துப்போய்விட்ட 
அதே பக்திப்பாடல்கள்


அவிழ்வதில் சிக்கல்
உச்சிக்குப்போனபின்னே
விடுதலை நாள்  
கொடியேற்றம்.

கால் ஒடிந்த அம்மா.
கிராமத்துக்கொட்டகையோடு  
மாடிவீட்டு வாழ்க்கை
பட்டினத்தில் அவனது.---------------
-
அடிபட்டுக்கிடப்பவனை
கண்ணு உனக்கு எங்க பொடரியிலா
கேள்வி கேட்டார் ஆட்டோ ஓட்டி. 
காந்தி பொம்மை யொன்று 
பொக்கைச் சிரிப்போடு 
அவருக்கு முன்னால் 
காலை மடித்தபடி.. 
.
வாழிடத்தே மனிதக் குருதியோடை 
கண்களை மூடிக்கடந்தார்கள்
கையில் பெரிய பகவத் கீதை.

அவன் பொருளைப்பார்க்க
நான் எடைக்கல்லை
கடவுள் பொதுவாமே.

ஆண்குழந்தைக்கு ஐநூறு
பெண் குழந்தைக்கு இருநூறு
பிரசவ வார்டில் சமூக நீதி.

இவன் கழுத்தை அவனும்
அவன் கழுத்தை இவனும்
பாசிச வேர் அறுப்பு கூடித்தான்.

விற்பதற்கும்
கொள்முதலுக்கும்
அளக்கும் படிகள் வேறு வேறு
சரியளவோ ஆயுதபூசைப்பொட்டு..

அவள் கைவிட்டாள் அதே இடத்தில் நானும்
தபால் பெட்டி.

சாமியைக்காணோம்
எல்லோரும் ஆனார்கள் சாமியாய்
சாமியே சரணம்.


தெளிதல்

.அயல்மொழி ஆண்டமொழி
அவ்வாண்டை மொழிகொண்டு
எழுதியிருக்கிறார்கள் சுவரெங்கும்
நல்லதுகள் பயிராகவேண்டும்.
மா நகராம் பெங்களூரு ராமமூர்த்தி நகரில்
தேவாலயம் மய்யமாய்
கிறித்துவின் பிறந்த நாள் கூட்டம்.
பலவண்ண பொம்மைகளின் குவியல்.
இயேசு குழந்தையாய் மாட்டுத்தொழுவமொன்றில்
ஒளிர்ந்து தருகிறார் காட்சி .
மின்சார விளக்கு தெய்வீகக்காட்சியாய்க்
கனம்கூட்டிக்காட்டியது.
மண்டியிடுகிறார்கள் மன்றாடுகிறார்கள்
மகிழ்ந்து நிற்கிறார்கள்
புத்தாடை அணிகலன் புதுமலர்கள் எனத்
தின்பண்டங்கள் பரிமாறியபடி மக்கள்
ஆசிவழங்கும் வெள்ளைச்சீருடை
சிரம் தொட்டு த்தொட்டு ஓய்ந்துபோனது சரிதான்
ஆலய வாயிலில்
‘அம்மா அப்பா அண்ணா’
தமிழ்க்குரல் கேட்கிறது காய்ந்த தலையோடு.
ஈராயிரம் ஆண்டுகள் முடிந்துபோனது
ஏசுவை என்று சரியாய்த்தெளிவது நாம்..

மக்களாட்சி

. மக்களாட்சி இன்று
எங்கேபோய் முடிந்திருக்கிறது
மக்களைப்பிரித்து ப்பிரித்து
ஒருவரை ஒருவர்
புரிந்துக்கொள்ளவே முயலக்கூடாது
என்பதுவாக
இந்தியா என்பதில்லை
அமெரிக்கா என்று சொன்னாலும்
இழிக்குணம் இதுவே.
வோட்டுக்கள் பெறுவதெப்படி
என்பதுவே ஒரே யுக்தி.
மக்களாட்சி என்பது
கணக்குப்போடுவதாய் 
சுருங்கிப்போனது.
அரசியல் என்பது தொழிலாக
அனுபவமாகிறது.
தியாகமும் சேவையும்
விலாசம் தொலைத்து நிற்கச்
சாதியும் இனமும் மதமும் தோல் நிறமும்
நடத்துகின்றன பேரம்
மக்களாட்சி பாரெங்கும்
நீர்த்துத்தான் கிடக்கிறது
மக்களை  மெய்யாக மதிக்கும்
முறையொன்று மலரத்தான் வேண்டும் மாற்றாக.

மொழியுறவு

.ஆங்கிலம் படித்து
அல்லலுற்றதாக பாரதி சொன்னார்
கதையும் கட்டுரையும்
அம்மொழியில் எழுதிப்படைத்தவர் பாரதி.
கணினி வந்த பின்னே
தமிழ் எழுத்துக்கள் திரையில் வர
ஆங்கில எழுத்துக்கள் வினையாற்றி
தமிழாய்ப்பிறப்பெடுக்கின்றன.
ஏ எம் எம் ஏ ஏ ஆங்கில எழுத்துக்கள்  ஒன்றாய்க்  கூடி 
‘அம்மா’ என்று திரை காட்டுகிறது அழகாய்.
தமிழின் படைப்புகள்
எல்லாம் இன்று ஆங்கில எழுத்தைத்
தடவித்தடவி தமிழில் பிரசவமாகின்றன.
வசதிகள் ஆயிரம் கணினியில்
உலகம் சுற்றுகின்றனவே கவிதைகள்.
இணைய வழியில் ஆங்கில எழுத்தின்
ஆதாரம் தமிழுக்குத்தோழமை
விடைபெற்ற  தலைமுறைக்கு இது பழக்கமில்லை..
தனித்தமிழ் இயக்கம்
பிடிவாதமாய்த்  
துவங்கினால்கூட ஆங்கில அறிவு
அவசியமென்பது அனுபவமாகிறது.
வேறு ஏதும் அக அரசியல் 
உண்டென்று  யூகித்தாலும் 
மொழிகள் ஒன்றையொன்று
நேசிக்கின்றன மெய்யாக.



எல் நினோ

.பருவ நிலை மாற்றங்கள்
பாடாய்ப்  படுத்துகின்றன.
இந்திரபிரஸ்தமான டில்லி
அவத்தையின் தலமானது
புகையும் புழுதியும் மூச்சை
இறுக்கத்  திணறிப்போகிறார்கள் மக்கள்.
சுனாமி இந்தோனிசியாவை
விழுங்கிவிடப்பார்க்கிறது.
எரிமலைகள் எதிர்பாராமல் கீழை தேசத்தில்
வெடித்துச்சிதறி வேதனைதருகின்றன.
பனிப்புயல் புழுதிப்புயல் அனல் காற்று
பேய்மழை எதைப்பேச முடிகிறது.
வாழ்க்கை முறையை கோணலாக்கி
ஆரோக்கியத்தை க்கரியாக்கி நிற்கிறோம்.
மருந்தும் மாத்திரைச்சிலவும்
மக்களை ஏலம் போடுகின்றன மொத்தமாய்.
கல்விக்கட்டணங்கள்  புளியமரப்  பிசாசாகி 
எவ்வளவோ காலமானது.
சூழல் நம்மைக்கைதியாக்கி
கைகொட்டிச் சிரிக்கிறது.
பொறுப்பற்ற வாழ்க்கைக்கு
மனிதகுலம் பெருவிலை தருகிறது.

 வாழும் பூமியில்

அத்தனை இன்னல்களையும்
மனிதன்தானே முயன்று
வெற்றிகொள்கிறான்.
வக்கணையாய்ப் பேசவும் எழுதவும்
இசைபாடவும் ஓவியம் தீட்டவும்
கற்றுக்கொண்டான்.
அறிவியலால் ஆயிரம் சாதனைகள்
அடுக்கடுக்காய் சாதித்து நிற்கிறான்.
மருத்துவத்தில் வானியலில்
வேளாண்மை உற்பத்தியில்
அறிவியல் தொழில் நுட்பத்தில்
தகவல் அரங்கில் இமயமலையென
சாதித்தவை எத்தனையோ.
பிரபஞ்ச ரகசியம்  அது பிடிபடாவொன்று
விடுவிக்க முனைந்து
தொடர்ந்து தோற்றுப்போகிறான்.
விடுவதாயில்லை மனிதக் குலம்
படைப்பின் ரகசியம்
அறியத்துணியும் பயணம்
வாழ்க்கையொரு கோணலாய் அரும்பி 
முன்னும் பின்னும் இன்னும்
காரிருள்தான் எஞ்சி நிற்கிறது.
அவை விடுபட வேண்டுமா
இல்லை வேண்டாவா 
அறிதல் அத்தனை எளிதுமில்லை.
தோற்றலில் நிறைவு மனிதனுக்குத்
தோல்வியோ வெற்றித்தடத்தில் ஒரு படி
மொத்தமாய்ப்படிகள் எத்தனையுண்டு 
யார் அறிவார்.

அனுபவி

. சென்னை வாழ்க்கை
பெயருக்குத்தான் அது
மய்ய சென்னையில்
இசையும் நாடகமும் இயலும்
கொட்டிக்கிடக்கிறது.
மார்கழி மாதம் சொல்லவே வேண்டாம்.
சென்னையைச்சுற்றிய
சிற்றூருக்கு வாய்ப்புகள் 
அந்தப்படிக்கு  இல்லை.
நகரின் ஆக்கிரமிப்பு நச்சு 
எளியவர்களின் ஏக்கங்களுக்கு
இரக்கம் காட்டாது.
வெள்ளைக்காரன் போட்ட
மா நகர ரயிலும்
இல்லாமல் போனால்
ஏழை எளியோர்க்கு சென்னை வாழ்க்கை
ருசிக்கச்  செய்யாது துளியேனும்
பேருந்தில் ஏறி  மா நகரில் 
ஓரிடம் சென்று திரும்ப
இரண்டு மணி நேர அவகாசம்
போதவே போதாது.
போவதற்கும் மீள்வதற்கும்
நான்குமணி நேரம் அனர்த்தமாய்ப் போய்விடும்.
கையில் காசும்
மய்யமாய் குடியிருப்பும்
இல்லா மா நகர வாழ்க்கை
எளியோர்க்கு என்றும் 
விதிக்கப்பட்டே கிடக்கிறது.
யார் கேட்கப்போகிறார்கள்
நான் புலம்பிக்கொண்டிருக்கிறேன்.

 நல்ல சினிமா

.பரியேறும் பெருமாள்
படம் பார்த்தேன் நல்ல படம்
பத்தாண்டுகளுக்கு மேலாக
படமொன்றும் பார்க்கவில்லை.
பரியேறும் பெருமாள்
மாரி செல்வராஜின்
மனதைத்திரை கொப்பளிக்கிறது.
நீர்த்துப்போகாத
கனமான சிந்தனை
பாடல்கள் வசனங்கள்
படமெடுப்பு அத்தனையும்
அற்புதமாக வந்திருக்கிறது.
தமிழிலா இப்படம் என்று
நெகிழ்ந்து போனேன்
கதா நாயகனும் அவனுக்கு நண்பனும்
மனதை கொள்ளை கொண்டார்கள்.
கொலைகாரப்பெரியவரும்
தந்தையாய்வரும் நாயகச்சாயல்
பெரிய மனிதரும்
கதையின் நாயகியும்
கல்லூரி முதல்வராய்வரும் டை கட்டிய
செருப்புத்தொழிலாளியின் வாரிசும்
நெகிழத்தான் வைத்தனர்.
‘ நீங்க மாறணும்’ சுடும் உண்மை.
காலம் இருண்டுதான் கிடக்கிறது
எத்தனை யுகத்திற்கு அய்யா 
சொல்லிக்கொண்டே போவதிப்படி.
9. இரண்டரை லட்சம் கொடுத்தால்
பேரப்பிள்ளையை  எல் கே ஜி யில் சேர்ப்பார்கள்.
மருமகள் சொல்கிறாள்
பெங்களூரு வாசம் சின்ன மகன்.
சென்னையில் ஒண்ணரை லட்சம்
போதும் எல் கே ஜி க்கு
பெரிய மகன் சொன்னான்.
கல்வி முடித்து ஒரு குழந்தை
நிறைவாய் வெளிவர
எத்தனை லட்சங்கள்
கொட்டிக்கொடுப்பார்கள்.
பெற்றோர் இக்காலத்தில்
கல்வி கொள்ளை போனது
பண்ணையார் பிள்ளையும்
யானும் அரசுப்பள்ளியில்
காலணா செலவில்லாமல்
கற்றோம் கல்வி.
காமராஜரும் கக்கனும்
ஆண்ட காலமொன்று இருந்தது.
நம்பத்தான் மாட்டார்கள்.
மருத்துவச்செலவுக்கு
மூட்டை மூட்டையாய்
ரொக்கம் வேண்டும்  இப்போது. .
வந்தே மாதரம் அடிமனதிலிருந்து
வரவேண்டுமாம் கோஷம் 
ஞாபகமில்லை
எங்கோ படித்தது.


தோழமை
.
பழமலய் அய்யாவை நேரில்
பார்த்துக்காலங்கள்
பல ஆயிற்று.
கடலூர் வாசியாய் இருந்தபோது
அய்யாவோடு பழகி
மகிழ்ந்திருக்கிறேன் பல காலம்.
பேசுவதே கவிதையென
அனுபவமானது அவரின் வார்த்தைகள்.
நேர்மை என்றால் அப்படி ஒரு நேர்மை
எளிமை என்றால் அப்படி ஒரு எளிமை
தெளிவு என்றால் அப்படி ஒரு தெளிவு
எங்கு போய்த்  தேடுவது
தோழமையின் திரு உருவை.
சென்னையிலா தேடத்தான்கிட்டுமா
பழமலய்க்கு ஓர் இணை.
என்றேனும் ஒரு நாள்
விழுப்புரம் சென்று அய்யாவைக்
கண்டுவந்தால் தேவலாம்.
தமிழரின் பெருமை
வடலூர் ராமலிங்க வள்ளலை
வடலூர் மண் மீது நெஞ்சு விழ வணங்கவேண்டும்.
பழமலய் சொன்னது.
சபா என் சகிருதயர்
பழமலய்க்கு ஆசான்.
என்னுள் என்றும் இனியர்
பழமலயை வணங்குவேன்



எதிர்பார்ப்பு

. எதிர்பார்த்து ஏமாந்தோம்
மழை இல்லாமலே போனது
இரண்டாயிரத்து பதினெட்டு
வந்துவிடுமா பெருவெள்ளம்
சென்னையில் மீண்டும்
அடிவடிற்றில் புளிகரைக்கக்காத்திருந்தோம்
அக்டோபர் நவம்பர் டிசம்பர்
என ஓடியேபோனது
ஆறுகளை த்தூர் வாரினேன்
ஏரிகளை ஆழப்படுத்தினேன்
எனக்கதை சொன்னார்கள்
சில நடந்தன பல கடந்தன
கல்லா கட்டியவர்கள் பலர் 
மராமத்து நடந்ததைச்
சோதித்துப்பார்க்கலாம்
மழை வந்தால்தானே அது வரவில்லை
மழை கூட காசு பார்த்தவர்களுக்குச் 
சாதகமாய் ஒதுங்கி நிற்குமா என்ன?
பருவ நிலை மாற்றம்
சென்னைப்பெரு நகரை ப்புரட்டி புரட்டி
பொழுது கழிக்கிறது.
கோடை சமீபிக்கிறது
சென்னைக்கோடை சொல்லவே வேண்டாம்
அனல் பொழியும்
சித்திரைக்காத்துக்கிடக்கிறது.
சென்னை எனக்கு வாழிடம்.


நண்பர்   பி எஸ்

தொலைபேசிச்சங்கத்து
கடலூர் தோழர்
எங்கள் பி எஸ் மறைந்து போனார்
முதுகுன்றத்துத்தோழர்களில்
முத்திரை பதித்தவர்
மாவட்டச்செயலராக
வரவேண்டும் அவரென
கடலூருக்கு அனுப்பி வைத்தோம்
நல்ல தோழனுக்கு உடல்
ஆரோக்கியம் ஒத்துழைக்க மறுத்தது
இதயத்தில் கோளாறு
எங்கள் பி எஸ் மனம் கரும்பின் இனியது.
சமுதாயத்தின் அடித்தட்டு
மக்களிடை மலர்ந்த
மகரந்தத்தோழர் அவர்.
விருதை ரகுவோடு வங்கிக் கந்தசாமி வர
தோழர் பூத உடல் கண்டு கலங்கினோம்.
நட்புக்கருவூலத்தில் பெரு நட்டம் கண்டு
ரகு தேம்பித்தேம்பி அழுதார்.
தோழமையின் அழகு
தொலைந்து போனது உணர்ந்தோம்.
.
புத்தக நட்பு

தேடித்தேடி வாங்கிய
புத்தகங்களோடு  எனது வாழ்க்கை
நேற்றா இன்றா
நினைவு தொடங்கிய நாள் தொட்டு
இப்படியேதான்
கணினி இல்லை கைபேசியோடு
என்பதுவாய் மனித வாழ்க்கை
இலக்கணம் காண்கிறது 
யாரிடம் இல்லை கைபேசி.
எல்லோரும் பேசிக்கொண்டே
இருக்கிறார்கள் கைபேசியில்
துழாவிக்கொண்டே
இருக்கிறார்கள் கைபேசியில்
பயணிப்பவர்களில் பாதிக்கு மேல்
கைபேசியோடு-மீதியும்
காதில் எதையோ செறுகி எதையோ
கேட்டபடியே நகர்கிறது வாழ்க்கை
முகமலர்வதும்
கனிந்த பார்வையும்
அகம் தெரிய மொழிதலும்
அருகிப்பொனது.
நல்ல விஷயமாக மட்டுமே
அறிவியல் மலர
கவனம் கொள்வது எப்போது?