Wednesday, July 31, 2019

Si.Makenthiranin- ThiikkuL viralai vaiththaal



சி.மகேந்திரனின் ‘தீக்குள் விரலை வைத்தேன்’ இலங்கை பேரினவாதத்தின் முடிச்சவிழ்ப்பு.


தீக்குள் விரலை வைத்தேன் படித்து ஆராயலாம். ஏன் பதறிபோகலாம்.கண்கள் நிறைத்துக்கொண்டு சினம் கொப்பளிக்கலாம்.மனித நேயம் போற்றும் மானிட இலக்கணங்களைக்கண்டு தெம்பு கூட்டலாம்.காக்கைகள் பங்கு போட்டுத்தின்னும் தமிழனின் தெரு ரணக்களத்தை தரிசித்துவிடலாம். மனமே இல்லாத மனித உருக்களால் திட்டமிட்டு இனச்சிக்கல் வளர்க்கப்படுவதை கண்டு நோக்கலாம். சி. மகேந்திரனின் ‘தீக்குள் விரலை வைத்தால்’ அற்புதமாய் வந்திருக்கிறது.பக்குவப்பட்ட அரசியல்வாதி என்பதால் படைப்பிலே முதிர்ச்சியை அனுபவிக்க முடிகிறது.பொதுவுடமைவாதியின் கண்களுக்கு முன்னாலேயே இத்தனை அட்டகாசங்களும் தென்படுகிறபோது உலக சகோதரத்துவம் என்பது ஆடிப்போகிறது.
மஎந்திரனின் நூலுக்கு செ.கணேசலிங்கன் அறிமுகம் தந்துள்ளார் ‘’இந்நூல்  நான் பிறந்து வளர்ந்த வாழ்ந்த நாட்டை மேலும் சிறப்பாக எனக்கே அறிமுகப்படுத்துகிறது.’ இது முற்றிலும் மெய் என்பதனை வாசகனும் அங்கீகரித்து விடுகிறான்.இலங்கையின்இனச்சிக்கலை,பேரினவாதத்தை நன்கு விளங்கிக்கொள்ள இந்நூல் துணைபுரியும். நேர்மையாக எழுதப்பட்ட படைப்பு என்பதனை ப்படிக்கிறபோது உணர்ந்து பிரமிக்கச்செய்கிறது. மகேந்திரனின் மாணவப்பருவத்து அமைப்புப்பயிற்சியும்,தாமரையின் இலக்கிய அனுபவமும் பொதுவுடமை அரசியல் பாத்திரப்பணியும் நிகரற்றவை என்றாலும்’’தீக்குள் விரலை வைத்தேன் ’ அனைத்தையும் விஞ்சி நிற்கிறது.ஆம் என்றுமே நிற்கும் என்பதனை உறுதியாகச்சொல்லமுடியும். இலங்கயின் இனச்சிக்கல் இத்தனை எளிமையாய், பன்முகத்தன்மையோடு வெளிப்படுத்துதல் என்பது அவரின் அடிமன ஆர்வத்தை பிரதிபலிக்கிறது.இலங்கையைப்பற்றிய ஓர் இனப்புரிதல் இனி மகேந்திரனின் இந்நூலை விடுத்து சாத்தியப்படாது என்பதனை உணர்த்தி நிற்கிறது.
நடப்பில் ஜன நாயகம் என்கிற எந்திரம் தன் வடிவத்தை எப்படி எளிதாய் மாற்றிக்கொண்டு ஒரு சிறுபான்மை இனத்தின் அடையாளங்களை அழித்துவிட முடிகிறது என்பதனை இலங்கையில் காண நேரிடுகிறது.இலங்கை இனப்பிரச்சனையில் சிங்கள தமிழின முரண்பாடு,தமிழர்களிடையே மலையகத்தமிழர்களின் கையறு நிலை, இசுலாமியத்தமிழர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் என முக்கியமாய் மூன்று கூறுகளைக்காணலாம்.இவை ஒவ்வொன்றையும் அக்கு வேறு ஆணி வேறாக அறிவதற்கு மகேந்திரன் உதவி இருக்கிறார் என்றும் குறிப்பிடலாம். பதிப்புரையில் சொல்லப்பட்டபடி’ இலங்கை பற்றித் தமிழில் வெளிவந்துள்ள நூல்களில் இது தனிப்பட்டதாகும் என்பது சரியான விளக்கமே. உணர்ச்சிப்பிரவாகத்தின் மீது  கொப்பளித்து எழுகின்ற சினக்குன்றின் மீது, துயரக்குகையில் குப்புறப்படுத்து க்குமுறுதலில் ஆழ்ந்து, மானுடத்தை வக்கிரமாக புரிந்துகொண்டு வியூகம் அமைப்பதில் தவறிவிட்டு,குழம்பிக்கொண்டும் குழப்பிக்கொண்டும்.கூக்குரல்  எழுப்பி அலையொலியில் ஒளிந்துகொண்டும், நெளிந்துகொண்டும் படைப்பு என்கிற ஒன்றை  வெளிக்கொணரும் அசாதாரணச் சூழலில் மட்டுமே அனுபவமாகிப்போன வாசகனுக்கு இந்த நூல் நல்ல புரிதலை கொடையாக்கி உதவுகிறது.
சி.மகேந்திரனின் வார்த்தைகளில் கச்சிதமானது அனேகம்.எடுத்துக்காட்டாய் சிலதுகளைச்சொல்லமுடியும். முதல் அத்தியாயத்து இறுதியில் இப்படிச்சொல்கிறார் ஆசிரியர்.’ஜன நாயகம் என்னும் மிக உயர்ந்த அரசியல் வடிவத்தை சிறுபான்மையினரின் உரிமையை நசுக்கும் கருவியாகப்பயன்படுத்தும் போது மோசமான விளைவுகளில் நாடு சிக்கிகொள்கிறது. இது எந்த ஒரு ஜன நாயக  நாட்டுக்கும் ஆகப்பொருத்தமானதே..1972 ல் இலங்கை பெளத்த நாடாக அறிவிக்கப்பட்டதே எல்லாப்பிரச்சனைகளுக்கும் ஊற்றுக்கன்ணாய்ப்போனதை மகேந்திரன் அற்புதமாய்க்கூறிவிடுகிறார். இரத்தம் சிந்துதல் உள்ளிட்ட எந்த கொலைக்கள கூச்சலையும் எழுப்பும் உரிமை பெற்றவர்கள் புத்த பிக்குகள் என்கிற விஷயம் அம்மலப்படுகிறது.
iஇலங்கையின் முற்போக்கு எழுத்தாளர்சங்க இலக்கியப்பேரரங்கின் ஜன நாயகத்தன்மையை புகழ்ந்து சொல்கிறார் ஆசிரியர்.அது மிகச்சரியானதே.உலக அரசியல், சித்தாந்த நெருக்கடியில் சிக்கித்தவித்த பொதுடமை அமைப்புக்கள் நீளவாட்டில் தம்மை கூறுபோட்டு மகிழ்ந்துபோயின. இன்றளவும் இதன் மீது விமரிசனம் எழும்போது பார்த்துக்கொள்கிற ‘சாக்கிரதை மனோபாவம்’ புரட்சி மேகங்களால் அடைகாக்கப்படுகிறது என்பது நிதர்சனம். ப்ரேம்ஜியின் விடையாய் மகேந்திரன் இப்படிச்சொல்கிறார்.
ஜன நாயகமும் இலக்கிய நோக்கம் குறித்த பொறுப்புணர்வும்தான் எதனையும் சாத்தியப்படுத்துகிறது. இப்படிப்பேசும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் குறித்து நாம் பெருமிதம் கொள்ளலாம். தோழர் பிரேம்ஜி ஒரு பொதுஉடமைவாதி.
சிங்கள இன அரசு இயந்திரத்தால் யாழ்ப்பானத்திலிருந்து விரட்டப்பட்ட இசுலாமியத்தமிழர்கள் கேட்கும் கேள்வியை நாம் ஒவ்வொருவரும் அது  நமக்கே எனப்பாவிக்கலாம். கேள்வி இது
துப்பாக்கி முனையில் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டபோது தமிழகத்தில் ஏன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை ? அந்த அப்பாவி மக்களுக்கு ஏன் ஆறுதல் வார்த்தைகூட எங்கிருந்தும் வரவில்லை. மெய்யாகவே நமக்குத்தலை தாழ்ந்துபோகிறது. இந்திரா பார்த்தசாரதி ‘பனியும் பறையும்’ என்ற படைப்பில் குறிப்பிட்டுள்ளதனை மகேந்திரனே இங்கே பேசுவதைச்சொல்லி ஆறுதல் தேடலாம். ஒரு ஆஸ்திரேலிய வெள்ளையர் விமானப்பயணத்தின் போது கேள்வி கேட்டாராம்.’இந்தியாவிலுமா தமிழர்கள் வசிக்கிறார்கள் ? என்று. வேதனையின் உச்சம்தானே இது.
இலங்கை மலத்தோட்டங்களில் தம் குருதியைக்கொட்டி தமிழ் இனம் லட்சக்கணக்கில் கேட்பார் அற்றுக்கிடக்கிறது. இலங்கை குடியுரிமை இல்லை. இந்தியாவுக்கு ச்செல்லவும் வழி இல்லை. தலைமுறைகள் ஏழு கடந்தன.வயிற்றுப்பசிக்கு படகில் ஏறிப்போனவர்கள் விலாசம் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள். மனிதப்புழுக்களாய்க்காட்சி தரும் தமிழர்கள். லால்பஹதூர் சாஸ்திரியையும் ராஜிவ் காந்தியையும் சபித்துக்கொண்டு. தமிழ் ச்சகோதரர்கள் விதியின் சதியில்.
இலங்கை மலையகத்தமிழர்களின் வாழ்வுக்குப்போராடிய உத்தமத்தோழர் நடேச அய்யரைப்பற்றிய குறிப்புகள் மகேந்திரன் எழுத்து நேர்மைக்கு ச்சான்று பகர்கின்றன. தமிழ் மண்ணில் இப்படி  எல்லாம் எழுதிவிட்டு குப்பை கொட்டிவிடமுடியாதபடிக்கு. எதோ ஒரு அறிவு திரையிட்டு நிற்கிறது. என்பது வேறு. நடேச அய்யரின் துணைவியார் மீனாட்சி அம்மையின் பேச்சாற்றல், கவிதா வலிமை,தொழிற்சங்க ஆளுமை குறித்தும் மகேந்திரன் பேசுகிறார்.. கண்டி நகரில் கைலி கட்டிக்கொள்வது தமிழனுக்கு பாதுகாப்பு. கண்டித்தமிழன் காது குத்திக்கொள்ள அஞ்சுகிறான். வேட்டிகட்டுதலும் காது குத்துதலும் அவனைக்காட்டிக்கொடுத்துவிடும் அடையாளங்களாக ஈனப்பட்டு நிற்கின்றன. மாத்தளை சோமு தனது எல்லைதாண்டா அகதிகள் என்னும் புதினத்தில் குறிப்பிடும் உண்மையை சுட்டிக்காட்டுகிறார் மகேந்திரன்.’தமிழர்கள் சிங்கள மண்ணைக்கவர்ந்த பகைவர்கள் என்கிற விஷத்தை ஊட்டியே காடையர்கள் என்கிற ரவுடிக்கும்பலை திட்டமிட்டு அரசாங்கம் ஆசிர்வதித்து நடத்துகிறது. நரபலிகள் இலங்கையில் தொடர்கதையாகிறது.
யாழ்ப்பாணம் பற்றிய ஆய்வு நீண்டதொரு கட்டுரையாய் மலர்ந்திருக்கிறது. யாழ்ப்பாண கல்வி நிலையங்கள்,சமுதாய அமைப்பு,சாதீய விஷயங்கள்,சாப்பாட்டு விஷயங்கள், வழிபாடுகள்,இலக்கிய ப்பங்களிப்புகள் அனைத்துமே விரிவாகப்பேசப்பட்டுள்ளன.மறக்காமல் எஸ்.பொ.வையும் அவரின் எழுத்து கம்பீரத்தையும் தொட்டுப்பேசுகிறார் மகேந்திரன்.பொருத்தமாய்ச்சேரனின் கவிதை ஒன்றை யாழ்ப்பாண நிலமைகளுக்குச்சான்றாய் வைக்கிறார் ஆசிரியர்.

‘இரு புறமும் துப்பாக்கி
நடுவில் நான்
எரிகின்ர்ற நெருப்புக்கு
நடுவில் நான்
அவன் ‘இரு’ என்றால்
இவன் ‘ எழும்பு’ என்பான்
அவன் ’’வா  என்றால்
இவன் ’போ’ என்பான்
அவன் ‘இற’ என்றால்
இவன் ‘இரு’ என்பான்
அவன் உடலைக்கொன்றான்
இவன் ஆத்மாவைக்கொன்றான்
இப்போ நான் பிசாசானேன்.
யாழ்ப்பாண நூலகம் எரிப்பு என்னும் மீளமுடியாத சோகம் துக்க சாகரமாய் உணரப்படுவதைத்தவறாமல் மகேந்திரன் குறிப்பிடுகிறார். வரலாற்று ரீதியாக த்தமிழ் மக்களின் உரிமை மறுக்கப்பட்டுத்தான் வந்திருக்கிறது என்பதை அப்பட்டமாய் ஒத்துக்கொள்ளும் கம்யூனிஸ்ட் தலைவர் டி.யூ. குணசேகராவை ஆசிரியர் அடையாளம் காட்டுகிறார். சிங்கள மக்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக க்காடையர்கள் ரவுடிகள் என்று முடிவுகட்டுதல் நியாயமாகாது என்கிற நல்ல செய்தியையும் சொல்கிறார். தமிழர்களை மணந்துகொண்ட சிங்களவர்களும் சிங்களவர்களோடு வாழ்க்கையைத்தொடங்கிய தமிழர்களின் முன்னுதாரணங்கள் எத்தனையோ இருப்பதை மறக்காமல் சுட்டிக்காடுகிறார் மகேந்திரன்.
இலங்கையின் வெளிக்கடை சிறைச்சாலையில் நிகழ்ந்த கலவரத்தில் தப்பி டேவிட் அய்யா பற்றிய மகேந்திரனின் எழுத்தாக்கம் வாசகனை நெஞ்சத்தால் வணங்க வைக்கிறது. மகேந்திரனின் சித்திர எழுத்தினை இப்படிக்காணலாம்.
‘அர்த்தமற்று வாழும் வாழ்க்கை என்ற மதிப்பீட்டுக்குள்ளிருக்கும் அர்த்தங்கள் நம்மை அதிர்ச்சியுறச்செய்யும்’- எத்தனை ப்பொருள் பொதிந்த வாசகம் இது.ஒவ்வொரு வாசகனும் படித்து சிந்தித்து சொக்கிபோய் பிரமிக்க வேண்டியிருக்கிறது. எந்த கர்வத்தினையோ யாருமே செய்யத்தயங்கும் தியாகத்தையோ தான் செய்துவிட்டதற்கான ஆணவத்தையோ கிஞ்சித்தும்  வெளிக்காட்டாத மாமனிதன் டேவிட் அய்யாவை தரிசிக்கத்தந்த ஆசிரியரின் மானுடப்பிடிப்பை ப்போற்றிப்பெருமிதம் அடைகிறோம்.
மகேந்திரனின் எழுத்தாற்றல் வெளிப்பாடு இந்த நூல். இது அவரின் எழுத்து நேர்மையை உரக்கப்பேசுகிறது. நெஞ்சுக்கு நேர்மையாய் அவர் வெளிப்படுத்திய விஷயங்கள் மனசாட்சி உள்ளோரை ரணப்படுத்தியே முடிக்கும்.அதுவே மானுட இருப்பின் நியாயமும் கூட..
(மே 2004 தாமரை)
 .





Sunday, July 28, 2019

sirilin- kathaiyulagam



சிரிலின் கதையுலகம்


தமிழகத்தொலைபேசி ஊழியர்கள்  வேறு துறை ஊழியர்களைவிடச் சற்று சமூகப்பார்வை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.எந்த ஒரு சிறு நகரத்திலும் தொழிலாளர் பிரச்சனைகளைக்கூர்மையாகக்கவனித்து அது தீர்க்கப்படுவதற்கு வழிமுறைகளைக்காணும் குழாத்தில் அவர்கள் தவறாமல் காணப்படுகிறார்கள்.
 நெல்சன் மண்டேலா சிறைப்பட்டதற்கும் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கும் பிகார் பூகம்பத்திற்கும்,ஒரிசாவின் புயல் சேதத்திற்கும் தஞ்சை டெல்டா விவசாயிகள் காவிரியின் வறட்சியால் சிக்கித்தவித்தபோதும் ஓடோடி வந்து தோழமைக்குரல் கொடுக்கிறார்கள்.பொருளுதவி செய்கிறார்கள்.இந்தப்பார்வை எப்படிச்சாத்தியமாயிற்று எனக்கேள்வி வைக்கலாம்.அதற்கு விடை சொல்லவேண்டுமென்றால் தோழர் சிரில் என்னும் ஒரு வழிகாட்டியை நல்லதலைவனை இலக்கியவாதியை போராளியை கொண்ட கடமை முடிக்கும் தொழிலாளியைத் தவறாமல் குறிப்பிடவேண்டும்.
கடலூர் மாவட்டத்து நிலக்கரி நகராம் நெய்வேலியில் தொலைபேசி இலாகாவில் தோழர் சிரில் மெகானிக்காக பணியாற்றி தொழிற்சங்கவாதியாகவும் இலக்கியவாதியாகவும் தன் வாழ்வை அமைத்துக்கொண்டவர். 19.05.1974 ல் தனது 46 ஆம் அகவையில் மறைந்த தோழர் சிரில் பற்றி அன்றைய ஜனசக்தி தன்னுடைய 30.05.1974 இதழில் இப்படியாகச்செய்தி வெளியிட்டது. தொழிற்சங்கத்தலைவர் சிரில் மறைதார் எனக்குறிப்பிட்டு அவரது 20 ஆண்டுகால தொழிற்சங்கப்பணியை ப்பாராட்டி புகழ்ந்து எழுதியது. தேசி, வேந்தன், என்னும் புனைபெயரில் சாகாச்சிறுகதைகள் பல எழுதியவர் சிரில் எனவும் குறிப்பிடுகிறது.
சிரிலின் சிறுகதைகள் இரண்டு தொகுப்புக்களாய் வெளிவந்துள்ளன. வேலை கொடு, பாலம் என்பவை அவை. யதார்த்தவாதப்பாணியில் எழுதுவதைத்தன் தடமாய்க்கொண்டு எழுதியவர் சிரில்.அன்றைய சரஸ்வதி, தாமரை,ஆனந்தவிகடன்,கல்கி, தினமனிக்கதிர் ஆகிய பத்திரிகைகள் அவரின் படைப்புகளை வெளியிட்டன.கவிதைகள் எழுதுவதிலும் தன் ஆர்வத்தைச்சிரில் காட்டியிருக்கிறார். தேன்கூடு,என்னும் இலக்கிய இதழுக்கு ஆசிரியராகவும் அவர் விளங்கியிருக்கின்றார் என்பதைக்குறிப்பிடலாம்.
சிறுகதைகள் சிலவற்றை ஆய்வு செய்வதன் வழி அவரின் எழுத்தாளுமையை அவரின் சிந்தனை மையத்தை நாம் தெரிந்துகொள்ளலாம். கதைகளில் நடுத்தர வர்க்க கதாபாத்திரங்களை அதிகம் காணமுடிகிறது. கண்டக்டர், ஆசிரியர், நர்ஸ் எனத்தொழிலாளர்களையும் கூலித்தொழிலாளர்கள் ஏதுமற்ற ஏழைகள் எனப்பலபாத்திரங்களையும்  வாசகனுக்குக்கொண்டுதருகிறார்.
‘வேலைகொடு’ என்னும் சிறுகதை இலங்கை சென்ற தொழிலாளி பிழைக்கப்போன இடத்தில் பட்ட கஷ்டமும்,அவன் திரும்ப இந்தியாவுக்கு அனுப்பப்பட்டதும் பற்றிப்பேசுகிறது.தாய் மண்ணின் மீது பற்றுள்ளவன் இங்கே இருந்துமட்டும் என்ன பெரிதாய்ப்பெற முடிகிறது என்கிறார் சிரில்.
‘ நிர்வாணம்’ என்னும் சிறுகதை புடவையை ப்பிணத்தின் பெட்டியிலிருந்து-பிணத்தை நிர்வாணமாக்கித்தான் – திருடி துணியே இல்லாமல் அலையும்  ஒரு அபலைக்கு அளிக்கிறகதை.அவள் புதுப்புடவை கட்டி அந்தப்பகுதியிலே நடமாடியதும்,பிணக்குழி திறந்துகிடந்ததும் விஷயத்தை க்காட்டிகொடுத்துவிடுகிறது.அந்தப்பகுதியே கலவரமாகி நிற்கிறது என்பதாகச்சொல்லும் கதை. பாலம் என்னும் கதை 1.06.1958 கல்கியில் வெளியாகியுள்ளது.இதுவே ஒருதொகுப்பின் தலைப்பகவும் ஆகிபோனகதை.. கொள்ளிடம் பாலம் கட்டியபோது அந்தப்பாலம் கட்டும் தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாய் வாழ்ந்ததும்,அந்தப்பாலம்,அதன் தூண்கள் எழும்ப எழும்ப அவர்கள் வாழ்வில் பல்வேறு நிகழ்ச்சிகள் நிகழ்ந்து போனதையும் சொல்லும் கதை. அவர்கள்கட்டிய பாலம் திறந்து அது உபயோகத்துக்கு வரும் சமயம் அந்த உழைப்பாளிகள் அதன் அருகே கூடவரமுடியாமல் பிழைப்புக்காக வேறு  ஒரு இடம் தேடிச் செல்லும் கதை. உழைப்பு அங்கீகரிக்கப்படாத சோகம் பேசும் கதை. சிரிலின்  வர்ணனை ஓவியமாக அமைந்துகிடக்க  கதை படிக்கும் வாசகனின் கண்கள் ஈரமாகி நிற்பதைக் காணமுடியும்.
‘ஒரு வேளை சோறு’ என்னும் கதை கல்கியில் வெளிவந்துள்ளது.8.01.1958 தேதியிட்ட இதழில் இதனைக்காணலாம் இது .பசிக்குத்திருடியவனின் கதை. டால்மியாபுரம் சிமெண்ட் ஆலை இயக்கத்திற்கு வந்தபின் எங்கு நோக்கினும் சிமெண்ட் பூசும் கலாச்சாரம் தொடங்கிற்று. ஏழை ஒருவனின் வீட்டுக்கூரை டால்மியா சிமெண்ட் மூட்டையின் அட்டை உறைகளால் வேயப்பட்டுள்ளது..அவர்கள் வீட்டு கூரைக்கும் டால்மியா சிமெண்டுக்கும் எப்படியோ ஒரு சம்பந்தம் ஏற்பட்டதில் அவர்களுக்கு ப்பெருமை என்கிறார் சிரில்.
உருவககதைகள் எழுதுவதில் முனைப்புக்காட்டியிருக்கிறார் சிரில். காலம் தாழ்ந்தபின் என்னும் உருவகக்கதை 31.03.1963 ஆனந்தவிகடனில் பிரசுரமாகியுள்ளது.அத்னில் வரும் குளத்து நீர் இப்படிப்பேசுகிறது.
‘’அவர்கள் பேசமட்டுமே தெரிந்த மனிதர்கள் .அவர்களில் சிந்திக்கதெரிந்தவர்கள் பேசத்துணிவதில்லை. பேசத்துணிந்தவர்களுக்கு சிந்திக்கத்தெரிவதில்லை. அதுதான் மனித இயல்பு’’ சிரிலின் தெளிவு இங்கே வெளிப்படுவதைக்காணமுடியும்.
ஆனந்தவிகடன் 21.10.1962 ல் 30 காசு விலையில் வெளிவந்து இருக்கிறது.அதனில் ‘ஓடுகள்’ என்னும் உருவகக்கதை எழுதிடுள்ளார்.கீழ்வரும் உரையாடல் அந்தக்கதையில் அற்புதமாய் அமைந்து நிற்பதை உற்று நோக்க சிரிலின் எழுத்துத்திறனை போற்றலாம். இப்படிச்செல்கிறது’ஓடுகள்’.
மண் ஓடு மண்டை ஓட்டை நோக்கி,”அண்ணா ?’
மண்டை ஓடு: சீ நீயா தம்பி உறவு கொண்டாடுகிறாயா ! வாயை மூடு!
மண் ஓடு: ஒரே இனத்தவர்களாகிய நாம் தம்பி உறவு கொண்டாடுவது குற்றமா ?
மண்டை ஓடு: மண் ஓடும் மண்டை ஓடும் ஒரே இனமா ? நீ என் படைப்பு. நான் கடவுளின் படைப்பு. மனிதன் என் மூலப்பொருள். நீ கேவலம் களிமண்.இப்போது சொல் நீயும் நானும் உறவு கொண்டாடும் ஒரே இனமா ?
அந்த வழியே வந்த ஒரு பிச்சைக்காரன் மண் ஓட்டைக்கையில் எடுத்தான்.அது ஓட்டை உடைசல் இல்லாத உருப்படியான மண் ஓடு என்று தெரிந்ததும் மகிழ்ச்சியோடு அத்துடன் நகர்ந்தான். அவன் அறியாமலேயே அவன் காலால் எத்திவிட்ட மண்டை ஓடு அவனுக்கு முன்னால் சற்று தூரம் உருண்டோடி நின்றது.அவனது இதமான அரவணைப்பில் இருந்த மண் ஓடு இந்த மனிதர்களின் போக்கே புரியாமல் திகைத்து க்கொண்டிருந்தது. இங்கே அற்புதமாகக் கதை சொல்கிறார் சிரில்.சொக்கிப்போகவேண்டும் வாசகன்.எழுத்தின் உச்சம் என இதனை நிறைவாய்ப்பாராட்டலாம்.
’வேலை கொடு’ என்னும் சிறுகதைத்தொகுப்பின் முன்னும் பின்னும் சில செய்திகள் சிரில் பற்றி நாம் அறியக்கிடக்கின்றன. சிரிலின் தோற்றம் 19.11.1924. மறைவு 19.05.1974.. நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனாய் இங்கிவரை யாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டோம்’ என்று எழுதிப்பெருமை பேசுகிறது. தொழிற்சங்கத்தலைவர் ஜெகன் அத்தொகுப்பின் முன்னுரையில்,’’ தோழர் சிரிலின் கண்களிருந்து எந்த சிறு நிகழ்ச்சியும் தப்பியதில்லை’ என்று குறிப்பிடுறார்.எழுத்தாளர் சித்தார்த்தன் (சிவா) சிறுகதைத்திறனாய்வு என்னும் உரைகல்லில் சுடர்விடும் சித்திரங்கள் அவரது சாகா ச்சிறுகதைகள் என்று பேசுகிறார்.
‘சொல்லும் கசக்கும்’ என்னும் தாமரையில் வெளிவந்த கதை சோஷலிசம் பற்றி சில விஷயங்கள் சொல்கிறது. இன்றைய அதிகார வர்க்க அசகாய சூரர்கள் சோஷலிசத்தின் பெயராலேயே தொழிலாளர்களை மட்டுமல்ல அவர்களின் குடும்பத்தையே கொத்தடிமைகளாக்கிவிடும் திறமைசாலிகள் என்றோ. குமரேசன்  புரிந்துகொள்வதற்கு நியாயமே இல்லை. ஏனென்றால் சோஷலிசம் என்ற சொல்லை யார் சொன்னாலும் நம்பிவிடும் இந்த நாட்டின் லட்சோப லட்சம் அப்பாவிகளில் அவனும் ஒருவன்.. ஒவ்வொரு விஷயத்தையும் கழுகுக்கண்கொண்டு பார்க்கும் பார்வை சிரிலுடையது என்பதை நாம் இங்கே காண்கிறோம்.
‘கங்கை வற்றி விட்ட்து’ என்னும் சிறுகதையில் இளைஞர்கள் வயிற்றுப்பசிக்காக ஏதும் செய்யத்துணிந்த நிலையில் அவர்களைத்தவறான திசைவ்ழியில் செலுத்தி காசு பண்ணுகிறார்கள் கயவர்கள் என்று சொல்கிறார் சிரில். வாழ்ந்து உய்ர வேண்டிய இளைஞர்களைக்கடத்தல் தொழிலுக்குப்பயன்படுத்தி பணம் பெருக்கிக்கொள்ளும் கொடுமையைக்கண்டு மனம் பதைக்கிறார். இளைஞர்களுக்கு பாலியல் உணர்வு த்தூண்டலை மட்டுமே செய்து பணப்பையை நிரப்பிக்கொள்ளும் சமுதாய ஈனப்பிறவிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டுதான் போகிறது மனம் பதைக்கிறார் சிரில்.
இத்தனை அவலங்களைப்பார்த்தபிறகும் இன்னும் கங்கையும் காவிரியும் வற்றவில்லை என்று கதை அளந்து கொண்டு இருக்கிறோம்.அப்படிச்சொல்லி சொல்லியெ இந்த நாட்டு இளைஞர்களின் உள்ளத்தில் ஊற்றெடுக்கவேண்டிய அத்தனை உணர்வுகளையும் வற்றவைத்துவிட்டோம் நாம் பாவிகள்தான்.
மனோகரா பஸ் என்னும் சிறுகதையில் ‘மனிதர்களை வெறும் டிக்கட்டுகள் என்றே ஏற்றி இறக்கும் கண்டக்டர் என்று இலக்கணம் சொல்கிறார் சிரில்.
திருச்சிராப்பள்ளி தந்திப்பொறியியல் துறையைச்சார்ந்த தோழர்களால் ‘தேன் கூடு’ என்னும் இதழ் ஆரம்பிக்கப்படுகிறது. சிரில் அதன் ஆசிரியராகப்பணி ஆற்றுகிறார். புதுவைத்தொலைபேசியிலே பணிசெய்த சிரில் அந்த இதழில் ஒரு துண்டு சீட்டு வைத்து வினியோகிக்கிறார். வாசகர்கள் கவனம் பெறவேண்டும் என்பதே சிரிலின் விழைவு.
‘புதுவை தொலைபேசி அலுவலக இலக்கிய நண்பர்களுக்கு,
நமது தோழர்களால் துவங்கப்பெற்றிருக்கும் இந்த மலரை கண்ணுற்ற பிறகு இலக்கிய ஆர்வமுள்ளோர் அனைவரும் இதில் மனமுவந்து பங்கு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இப்படியோர் நல்ல இலக்கிய முயற்சி வெற்றி அளிக்கும்படி  அன்பர்கள்  தேன்கூடு காவலர்களாகவும் தங்களைப்பதிவு செய்துகொண்டு மாதா மாதம் நன்கொடை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.இதற்கு சம்மதம் உள்ளோர் தங்கள் பெயருக்கு அடியில் தே.கா என்று குறிப்பிடவும்.ஏனையோர் படித்துவிட்டமைக்கு அறிகுறியாக கையெழுத்திடவும்.
அன்புடன்
பொ.தே.சிரில் (தே.கா.)
கு.செந்தில் (தே.கா.)
ஜீவிராமன் (தே.கா)
அருணா கனகம்
·          காவலர்களுக்கு ஒரு பிரதி கொடுக்கப்படும்
இப்படிச்செல்கிறது சிரிலின் க்றிப்புச்சுற்றறிக்கை.இது சிரிலின் இலக்கிய அடிமன ஆழத்தை ஆர்வத்தை தெளிவாக்குகிறது. காவலர்களுக்கு ஒரு பிரதி இலவசமாக கொடுக்கப்படும் என்று எழுதுவதை த்தவறு என்று அவதானிக்கும் சுயமரியாதைக்காரரான சிரிலைக்கண்டு நெகிழ்ந்து போகிறோம்.
தற்காப்பு –என்னும் கதை எழுதி பாண்டிச்சேரி வானொலிக்கு அனுப்பியிருக்கிறார் சிரில். லூஸ் கிருஷ்ண மூர்த்தி பற்றி இப்படி வருகிறது கதையில்.
‘இது கூட உங்களுக்குப்புரியலையா? ? அது ரொம்ப சிம்பிள் சார் நம்ப சூழ்னிலையிலே இப்படி ஒருவன் உருவாக முடியாது.அப்படி ஒருத்தன் உருவாயிட்டா அவன் லூசாகத்தான் இருக்கணும். இல்லேன்னாலும் நாம் அவனை லூஸ் ன்னுதான் சொல்லணும்.அப்பத்தானே தப்பித்தவறிக்கூட நமக்கே அவனைப்போல இருக்கணும் என்கிற இன்ஸ்பிரேஷன் ஏற்படாமலிருக்கும் ? அவ்வளவு தற்காப்புணர்ச்சி சார் மனுஷனுக்கு என்று சொல்லி விட்டு மூர்த்தி வாய்விட்டு சிரித்தான்.
இன்றைய உலக நடப்பை அங்கதமாய்ச்சொல்லும் அழகு சாத்தியமாயிருக்கிறது சிரிலுக்கு.
‘கடத்தல்’ என்னும் சிறுகதை சிரி காலமான பிறகு தாமரையில் வெளிவந்த அவரின் கடைசசிக்கதை. சிரில் படத்தோடு வெளிவந்திருக்கிறது. தாமரைக்கு நல்ல இலக்கியவாதிகள் என்றும் கடன் பட்டவர்களே.,
தொலைபேசி இலாகாவிலே அன்று பணிபுரிந்த சிரில் ’தனக்கு முன் சேவை,’ நிறைவு’ என்னும் இரண்டு கதைகளை பணியிடம் அதன்  கெடுபிடிகள் இத்யாதிகளோடு இணைத்து எழுதிகிறார். ஒரு ரயிலின் பயணத்தை நிறுத்திவிட்டது பெருமழை. தகவல் அறியும் தொடர்பு  இற்றுக்கொண்டது.   செய்தி தொடர்பு எடுத்துச்செல்லும் அந்த தந்திக்கம்பம் சாய்ந்து கீழே விழுந்துவிட்டது. அப்போதெல்லாம் ரயில்வே தொலைபேசி இலாகாவோடு இணைந்து வேலைசெய்தால்தான் ரயில் வண்டி நகரவே முடியும். இன்று நிலமை அப்படியில்லை. ரயில்வே தனக்கென ஒரு ரைல்டெல் சேவையை  வைத்துக்கொண்டுள்ளது. கதைக்கு வருவோம். ஒரு தொழிலாளி  இரவில் மழையில் நனைந்துகொண்டே பழுது நீக்கி மக்கள் பயணிக்கும் ரயிலை இயங்கவிட்டு விட்டு தன்வீடு திரும்புகிறார். அந்த லைன்மென் பெயர் சின்னசாமி .மறு நாள் அவருக்கு சரியானகாய்ச்சல் வந்துவிடுகிறது. தன் வீட்டருகே உள்ள ஒரு தனியார் மருத்துவரிடம் தன் உடலைக்காண்பித்து மருந்து மாத்திரை வாங்கிச்சாப்பிடுகிறார். இலாகா அதிகாரிகளோ   வைத்தியம் செய்துகொண்டதற்கு அவர் அனுப்பிய  அந்த மெடிகல் கிளைம் பில்லை ஏற்காமல் திருப்பிவிடுகின்றனர் ஒரு. தனியார் மருத்துவரிடம் எப்படி நீ உன் உடலைக்காண்பிக்கலாம் என்பது அதிகாரிகளின்  அந்த மெடிகல் பில் திருப்பலுக்கான வாதம்.. அரசு விதிகள் எப்படி யதார்த்தத்திற்கு தொடர்பே இல்லாமல்  தொழிலாளர்  நலனுக்கு எதிராக இருக்கிறது என்கிறார் சிரில்.
‘ நிறைவு’ என்னும் கதை தன் குழந்தைக்கு புது  யூனிஃபார்ம் எடுத்து தைக்க முடியாத ஒரு தொழிலாளிக்கு அரசு தனக்குத் தந்த புது புது யூனிஃபார்மோடு பணிக்குச்செல்ல நேர்கிறது.
குழந்தை கேட்கிறது. ‘உனக்கு மட்டும் எப்படி புது த்துணி ?
தொழிலாளி பதில் சொல்கிறான்..’ இது நான் தைக்கலம்மா. அப்பா தைச்சா இப்படியா கை நீளமா காலு குட்டையா தொள ட்தொளன்னு தைச்சுக்குவேன் ?
சிரில் இலாகா தொழிலாளிக்கு வழங்கிய யூனிஃபாரம் எப்படி இருந்தது என்கிற விமரிசனத்தையும் வைத்துவிடுகிறார்.
நல்ல வேலைக்காரன் என்று பெயர் வங்கியவர் சிரில். அனேக தொலைபேசி நிலையங்களை நிர்மாணித்தவர் சிரில். நல்ல தொழிலாளர்களை உருவாக்கியவர் சிரில்., சீர்மிகு தலைவர்களை உருவாக்கி உலவவிட்டவர். தமிழக தொலைபேசிஊழியர்களின்  இதயங்களில் என்றென்றும் வாழ்கின்ற கலங்கரை விளக்கமாய், காட்டில் மேட்டில் பனியில் குளிரில் ,,உடல் வருத்தி உழைத்த  ஆயிரம் ஆயிரம் மஸ்தூர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றிய மாமனிதராய் எளிமையாய் மட்டுமே வாழ்ந்து விடைபெற்றுக்கொண்ட அன்பின் திருஉரு, ஜெகன் அவர்களை உருவாக்கிய பிரம்மா போற்றுதலுக்குரிய அந்த சிரில்.
விருந்து தன் வீட்டுக்குவந்தபோது ‘இன்னொரு இலை’ இன்னொரு உலை அல்ல என்று தோழமையோடு வாழ்ந்துகாட்டிய்வர் சிரில்.
கவிதை எழுதுவதிலும் தன் ஆளுமையை செலுத்தி இருக்கிறார் சிரில்.’இன்றைய பொங்கல்’ என்னும் கவிதை சுண்டுமுத்து கவிராயர் என்னும் புனை பெயரில் வெளியாகி இருக்கிறது.
‘மாடும் மனிதனுமாய்
பாடுபட்டபின்னரே
காடும் கழனிகளும்
கதிர்மயமாய்க்காட்சி தரும்’
மனித உழைப்பும் மனிதனோடு தோழமை பேணும் அந்த மாட்டின் உழைப்பும் பெருமைகொள்கிறது சிரிலின் கவிதையில்.
இன்றும் தொலைபேசி ஊழியர்கள் நெய்வேலியில் ஆண்டுதோறும் மே 19 அன்று சிரில் நினைவு நாளை பொறுப்போடு கொண்டாடிவருகிறார்கள்.
கடலூர் விழுப்புரம் மாவட்டத்து தொலைபேசி ஊழியர்கள் (NFTE) சிரில் அறக்கட்டளை நிறுவி ஆண்டு தோரும்  தங்களின் வழிகாட்டியாய் வாழ்ந்த  சிரில் பெயரால் விழா நடத்துகிறார்கள். தமிழ்ச் சான்றோர் ஒருவரை  அழைத்துகெளரவப்படுத்துகிறார்கள். தொலை பேசி ஊழியர் அதிகாரிகளின் குழந்தைகளில் பத்து பதினொன்று வகுப்பு பொதுத்தேர்வுகளில் தமிழில் அதிக மதிப்பெண் பெற்ற. மாணவர்களுக்கு ஆயிரம் ஆயிரம் என ரொக்கப்பரிசும் சான்றிதழும் வழங்குகிறார்கள்.
தொழிற்சங்க வாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தலைவர்களுக்கு ‘சிரில் விருது’ தங்க மெடல் ஒரு சவரன் அளித்து கடலூர்  தொலைபேசிமாவட்டசங்கம் சிரிலின் நினைவுக்கு அவ்வப்போது கூடுதல் விழுமம் சேர்க்கிறது. தோழர்கள் ரகுநாதன், ரெங்கநாதன் சிரிலோடு பழகிய  இவ்விரு தோழர்கள். அந்த கெளரவத்தைப்பெற்றார்கள்.
தொழிலாளர்களை ஒற்றுமைப்படுத்த ,சமுதாய உணர்வு மேம்பட, அநீதி கண்டு போராட சிரிலின் சிந்தனைகள் என்றென்றைக்கும் தேவை.. நல்லன எல்லாம் தர  சித்தமானவையே  அந்தத்தோழர் சிரிலின் எழுத்துக்கள்
----------------------------------------------------

.
  .
.




Thursday, July 25, 2019

yayaathi- kaantekarum kaa sri sri yum


யயாதி வழங்கிய காண்டேகரும் மொழிபெயர்த்த  கா ஸ்ரீ ஸ்ரீ யும் 
மகாபாரதக்கதையில் வரும் பாண்டவர்களின் முன்னோர்களில் ஒருவன் யயாதி.அத்தினாபுரத்துச்சக்கரவர்த்தி நகுஷனின் குமாரன். நகுஷனோ இந்திரனை வெல்லும் ஆற்றல் பெற்றும் அகத்தியமுனியிடம் சாபம் பெற்றவன்.
யதி, யயாதி இருவரும் நகுஷனின் புதல்வர்கள் .யதி அரண்மனையை விட்டு நீங்கி வனத்தை சரண் அடைகிறான். யயாதி அரண்மனையை அலங்கரித்துக்கொண்டே வளர்கிறான்.’நகுஷ ராஜாவின் மக்கள் ஒரு போதும் சுகமாக வாழமாட்டார்கள்’ என்கிற அகத்திய முனிவனின் சாபம் இந்த சகோதரர்களுக்கு தலைக்கு மேலாக அச்சுறுத்திக்கொண்டே நிற்கிறது.
’யயாதி’ என்கிற இந்த நாவல் ஒரு புராண நாவலன்று.புராணக்கதையினை ஆதாரமாகக்கொண்டு காண்டேகர் மராத்தியில் படைத்திட்ட மாபெறும் அற்புதம்.யயாதியை பெண் பித்தனாக நிறுத்தும் மகாபாரதத்தினின்றும் சற்று ஆழமாகச்சிந்தித்து பெருங்கவி காளிதாசனோடு காண்டேகர் ஒத்துப்போகிறார்.
அக்கினியை அந்தணர்களை சாட்சியாய்க்கொண்டு யயாதி தேவயானியை மணக்கிறான்.தேவயானியோ அசுர குரு சுக்ராச்சாரியரின் மகள். தேவயானி யயாதிக்கு வழங்க மறுத்த அந்த அன்பினை தேவயானியின் பணிப்பெண்ணாய் ப்பணிக்கப்பட்ட சர்மிஷ்டை வழங்குகிறாள்.
காளிதாசனின் கூற்றுப்படி தன் சொந்த சுகத்தையும் கடந்து கணவனின் அன்புக்காக நிற்பவளாய் பெண் வெற்றி பெறுகிறாள்.சர்மிஷ்ட்டயை  காண்டேகர் அப்படித்தான் பார்க்கிறார்.கணவனுக்கு மனைவியிடமிருந்து கிடைக்க வேண்டிய அன்பிற்குத்தேவையான பரிவு ஈரம் தீவிரம், மேன்மை ஆகிய எதுவும் தேவயானிடமிருந்து யயாதிக்குக்கிட்டவில்லைதான்.
சஞ்சீவினி என்னும் உயிர்ப்பிக்கும் வித்தையை சுக்கிராச்சாரியரிடமிருந்து கற்றுக்கொண்ட கசன் தேவருலகம் செல்கிறான்.துறவி கசன் தேவர்களின் குரு பிரகஸ்பதியின் குமாரன்.ஆங்கிரச முனிவரின் பேரன். மகாபாரதக்கதையிலிருந்து  காண்டேகரின் கசன் வித்தியாசமானவன் .அளவறிந்து வாழ்பவன்.எல்லைகளை மதித்து வெற்றிகொள்பவன்.தேவயானியிடம் கொள்கின்ற முதற்காதலை ஞானத்தால் செரித்து வெற்றி கொள்கிறான். காமவிஷயத்தை ஆத்மபலத்தால் சமாளித்து எழுகிறான்.யயாதி அவனின் சகோதரன் யதி சர்மிஷ்டை சர்மிஷ்டைக்கும் யயாதிக்கும் புதல்வனான புரு ராஜமாதா நகுஷனின் மனைவி அனைவரிடமும் இணையான அன்பினை ப்பொழிகின்ற மனோதர்மத்தை தனதாக்கிக்கொள்கிறான்.
காண்டேகர் கசனின் கடிதத்தை தேவயானி படிப்பதாக எழுதுகிறார். இயற்கைக்கும் இறைவனுக்கும் நடுவிலே மிகச்சிறந்த இணைப்பாகத்திகழ்பவன் மனிதன் என்றும் தாகத்தினால் தவிக்கும் மனிதனின் வேட்கையைத்தணிக்கும்  அந்த ஆறு அவன் சிறிது முன்னால் ஆழத்தில் சென்றால் அவனுடைய உயிரையே பறித்து விடுகிறது என்னும் விஷயத்தைச்சொல்கிறார்.
மனிதன் இரட்டைகளாகவே உலகைப்பார்க்கிறான். நன்மை தீமை, தர்மம் அதர்மம்,உடல் ஆத்மா,ஆண் பெண், என்கிறபடியாய்.இறைவனோ எல்லா இரட்டை நிலைகளையும் கடந்தவன் என்கிறார் காண்டேகர். வடலூர் வள்ளல் ராமலிங்கரின் இறைவன் கல்லார்க்கும் கற்றவர்க்கும்,வல்லார்க்கும் மாட்டார்க்கும்,மதியார்க்கும் மதிப்பவர்க்கும், நரர்களுக்கும் சுரர்களுக்கும் என்கிற இரட்டை நிலைகளைக்கடந்தவன் என்பதை இங்கே நினைவுபடுத்தி சிந்திக்கலாம்.
காண்டேகர் குறிப்பிடுகிறார் ‘இல்லறம் என்பது உயர்ந்த தூய வேள்வி. ஆயிரம் அசுவமேத யாகங்களின் புண்ணியம் இதில் அடங்கிக்கிடக்கிறது. எனினும் இந்த இல்லற வேள்வி அது நிறைவேறவேண்டுமானால் கணவனும் மனைவியும் அதற்குக்கொடுக்கவேண்டிய முதல் அவி தங்கள் தங்கள் அகங்காரத்தை துறப்பதுதான் இந்த அற்புத விஷயத்தை தமிழ் வள்ளுவரின் மங்கலம் என்ப மனை மாட்சியோடு எண்ணிப்பார்க்கலாம்.
ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து                 குறள் எண் 48).. என்கிற துறவறத்தை வெல்கின்ற இல்லறத்தையும் ஒப்பிட்டு நோக்கலாம். இந்தப்புனிதத்தில் ஆணுக்கு ஒரு விளக்கமும் பெண்ணுக்கு ஒரு விளக்கமும் தருகிறார் காண்டேகர். ஆண் உருவமற்ற பொருட்களின் பின்னால் ஓடுகிறான்..புகழ், ஆத்மா,,தவம், வீரம் ஆண்டவன்முதலிய விஷயங்கள் அவனை விரைவில் கவர்கின்றன.ஆனால் பெண் இவற்றில் சடக்கென்று மயங்குவதில்லை.அவளை க்காதல், கணவன்,குழந்தை,,தொண்டு,குடும்பம் என்கிற உயிருள்ள பொருள்களே பெரிதும் கவர்கின்றன.
காண்டேகர் ஒரு வரையறை தருகிறார்.’’ பெண் மனத்தை அடக்கித்தியாகம் செய்வாள்.ஆனால் அது உயிருள்ள பொருள்களுக்காக மட்டுமே. உருவமற்ற பொருள்களிடம் ஆணைப்போல் அவள் ஆர்வம் கொள்வதில்லை தன்னிடமுள்ள அனைத்தையும் தந்து வழிபடுவதற்கு அல்லது தன் கண்ணீரை அபிஷேகம் செய்வதற்கு அவளுக்கு மூர்த்தம் வேண்டும். ஆண் இயல்பிலேயே வானத்தை வழிபடுகிறான்.பூமியை வழிபடுவதே பெண்ணுக்கு மிகவும் பிடித்தமானது’
பொறுப்புள்ள வாசகனை, காண்டேகரின் எழுத்துக்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. படித்து படித்து, சிந்தித்து சிந்தித்து,ரசித்து ரசித்து புரிதலை ஆழமாய் அகலமாய் க்கொண்டுமட்டுமே இந்த ப்படைப்பினை அணுகமுடிகிறது.
யயாதியின் உயிர் நண்பன் மாதவன் .சர்மிஷ்டையைக்காத்து அப்புறப்படுத்தியதில் இயற்கையின் இடரால் ஆரோக்யம் இழந்து மாய்ந்தவன். நட்புக்காக த்தன் உயிரைத்தியாகம் செய்த உத்தமன்.அவனின் இழப்பில் யயாதி இப்படிப்பேசுகிறான்.
‘மனிதன் என்று நாம் எவனை மதித்துப்போற்றுகிறோமோ ஆண்டவனின் இவ்வுலகத்து ப்பதுமை என்று கூறி எவனுடைய செயல் திறமையை வழிபடுகிறோமோ அந்த மனிதன் எவன் ? உலகம் என்ற விரிவான மரத்திலுள்ள சிறிய இலை அவன்’ இந்தப்பேரண்டத்தைப்பெருவனமாய் இப்பூவுலகத்தினை ஒரு விருட்சமாய் மனித இருப்பை ஒரு இலையாய் ஒப்பீடு செய்கிறார் காண்டேகர் மாகவி.பாரதியின் காலமும் காளிசக்தி என்னும் ஒரு வண்டும் நம் நினைவுக்கு வந்துவிடும்.
சர்மிஷ்டை குமாரன் பிருகுவுக்குக் கசன் தன் தவ வலிமையால் இளமையை மீட்டுத்தருகிறான் புதிய வாழ்வை பெற்றுக்கொண்ட யயாதி இத்தகு அறிவுரை வழங்குகிறான்.’காமம் பொருள் என்னும் இவ்விரு புருடார்த்தங்களை எப்போதும் கடிவாளமிட்டு காக்க வேண்டிய கடமை அறம் என்னும் புருடார்த்தத்திற்கானது. அறம் பொருள் வீடு என்கிற புருடார்த்தங்களில் இன்று  பொருளும் இன்பமும் மலிந்து கிடக்கின்றன.அறம் அதனைக்கட்டுப்படுத்தாது செயலிழந்து ஊனமாகிக்கிடப்பதையும் சுட்டுவது தன் விழைவு என்கிறார். காண்டேகரின் பெரு விருப்பம் அது என்று அறிந்து நாம்  பிரமிக்கிறோம்.
யயாதியைத்தமிழில் தந்த கா.ஸ்ரீ .ஸ்ரீ( கா.ஸ்ரீ. ஸ்ரீ நிவாசார்யார்) மொழிபெயர்ப்பில் உச்சத்தை எட்டியிருக்கிறார்.மூலமா அல்லது மொழிபெயர்ப்பா என்பதனை வாசகன் பிரித்து அறியமுடியாமல் திக்குமுக்கு ஆடுகிறான்.மூலத்தை வென்று நிற்கும் மொழிபெயர்ப்பு என்பது யயாதியில் சித்தித்து இருக்கிறது. நாவலைப்படிக்கும் போதெல்லாம் மேலட்டையைத்திருப்பி திருப்பி மொழிபெயர்ப்புதான் என்று உறுதி செய்துகொள்ள வேண்டியதாகிறது.
தமிழ் வாசகர்களுக்கு காண்டேகரை அறிமுகம் செய்து ஞானசம்பந்தம் ஏற்படுத்திக்கொடுத்தமை கா ஸ்ரீ ஸ்ரீ என்கிற மொழிபெயர்ப்பாளனுக்கு வசப்பட்டிருக்கிறது. தாய்மொழி தமிழ் ஆகி பல இந்திய மொழிகளில் வல்லமை பெற்று நமது தமிழ் பண்பாட்டுக்கு கருத்து வளம் சேர்த்தமை போற்றுதலுக்குறிய தொண்டு என்று வரலாறு அவரின் படைப்பு பற்றி என்றும் பெருமையோடு பேசும்.
--------------------------------------------------------

 .