Sunday, July 7, 2024

கதை -சமத்துத்தான்

 

 

சமத்துத்தான்                                                 டைய்லி  விருட்சத்தில்  வெளிவந்தது

நல்ல முகூர்த்த  நேரம் பார்த்து காலை ஆறு மணிக்கு யாத்ராதானம் செய்தாயிற்று.  எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும்  கம்மாபுரம் வெங்கட்ராம சாஸ்திரிதான் எங்கள் வீட்டு வாத்தியார். வாத்தியார் என்றால் புரோகிதர்  அவர்தான்  சம்ப்ரதாயப்படி  யாத்ராதானம் செய்விக்க  வந்திருந்தார்.

உங்களுக்குத்தெரியும், நான் தருமங்குடிக்காரன். சென்னை  மாநகரம் என் தருமங்குடி கிராமத்திலிருந்து இருநூறு கிலோமீட்டர் தூரம்  இருக்கலாம். சென்னை மடிப்பாக்கம் ஏரி. ஏரியை வைத்துத்தான்  இப்போதெல்லாம் சென்னையில் இடம் சொல்கிறார்கள் அந்த ஏரியின் மேலண்டை கரையில் உள்ள  கணேஷ் திருமண மஹாலில் என் பையனுக்குத் திருமணம்.  நாங்கள் பிள்ளை வீட்டார். தருமங்குடி என் வீட்டிலிருந்து சாமான் செட்டுக்கள் ஜவுளிகள் எடுத்துப்போகவேண்டும்.   என் பையன் கல்யாணத்தை உத்தேசித்து என் இல்லம் வந்திருக்கிற என் சொந்த பந்தங்களையும் அழைத்துக்கொண்டு சென்னை போகவேண்டும்.  அதிகாலை கிளம்பினால் பன்னிரெண்டு மணிக்குள் கல்யாண மண்டபம்  போய்ச்சேரலாம்.

இன்று மாலை மாப்பிள்ளை அழைப்பு.  நாளை காலை முகூர்த்தம். மாப்பிள்ளை அழைப்பு எல்லாம் அவசியம் வைத்துத்தான் ஆகவேண்டுமா என்று பெண்வீட்டில்  எங்களைக் கேட்டார்கள். நான் கட்டாயம் மாப்பிள்ளை அழைப்பு வேண்டும் என்றேன். பின் எப்போது நாதசுரம் முழங்க  மாலையும் கழுத்துமாய்  நமது பிள்ளையை  கோட்டும் சூட்டுமாய் ஊர்வலம் அழைத்துப்போவது சொல்லுங்கள். எனக்கு ஆசைதான்.

,என் தம்பி குடும்பம்,  என் சகலர் குடும்பங்கள் ,என் மகள்  மாப்பிள்ளை  மகள் வயிற்றுப்பேத்தி, என் மனையாளோடு நான் என்று  இத்தனைபேருக்கும் என்று ஒரு  வான் சொல்லியிருக்கிறேன்.அருகில் சிறு நகரம் சேத்தியாத்தோப்பு. அங்கு ஒரு ஆட்டோக்காரன் எனக்கு சினேகிதம். தருமங்குடியிலிருந்து  சேத்தியாத்தோப்பு போய்வர அந்த ஆட்டோக்காரன்தான் எப்பவும் ஒத்தாசை. அவன் வராவிட்டால் என் காலட்சேபம் எப்படி ஆகும். திருமுதுகுன்றத்திலிருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் தருமங்குடி என்று இறங்கினால் சட்டென்று  ஊர் வந்துவிடாது.  வெள்ளை பைண்ட்  அடித்துக்கொண்டு நிற்கும் கைகாட்டிதான் என் ஊரைக்காட்டிக்கொண்டு  சாலையில் அனாதையாய் நிற்கும். மண் சாலையில்  ஒரு கிலோமீட்டருக்குப்பொடி நடையாய் நடந்தால்தான் தருமங்குடி வரும் . ஆகத்தான் ஆட்டோ கீட்டோ என்று  வசதிகளைப் பார்க்க வேண்டி  இருக்கிறது.  

அந்த ஆட்டோக்காரன் மூலமாக  என் பையன் கல்யாணத்துக்கு சென்னைக்குபோக   ஒரு வாடகை  வானுக்கு சொல்லியிருந்தேன்.  ஆட்டோக்காரனும் நானும்  வான் டிரைவரோடு பேசினோம்.வானுக்கு  வாடகை ஏழாயிரம் ரூபாய் என்று முடித்து, அட்வான்ஸ் பணம் மூவாயிரத்து ஐநூறு கொடுத்திருந்தேன்.

கைபேசியை எடுத்துக்கொண்டு இங்கும் அங்கும் அலைந்துகொண்டு இருந்தேன்.

‘என்னப்பா இன்னும்தான் வர்ரியா’

‘தோ வந்து கிட்டே இருக்கேன்’

‘இருக்கிறது எட்டு கிலோமீட்டரு. இந்த தூரத்த  எம்மாம் நாழியா வருவ. நாம தூரம் போவணும’

‘தோ வந்துட்டேன், இப்பதான் உங்க ஊரு மண்ரோட்டுல  வந்து சொழலறேன்’

‘அப்ப சரி’

நான் எடுத்துப்போகவேண்டிய  சாமான்கள் எல்லாவற்றையும் திண்ணை மீது எடுத்து வைத்தேன். உறவினர்கள் அங்கும் இங்கும் உலாத்திக்கொண்டு இருந்தார்கள். என் தம்பி அடிக்கொரு தரம் வந்து என்னை விஜாரித்துக்கொண்டே இருந்தான்.

வான் ஒருவழியாய் என் வீட்டு வாசலுக்கு வந்துவிட்டது.

டிரைவர் வண்டியிலிருந்து இறங்கினான்.

‘பட்டுனு  ஜாமான ஏத்துங்க’ சத்தமாய்ச்சொன்னான்

நானும் என் தம்பியும் சாமான்களை சட்டுபுட்டென்று வண்டியில் ஏற்றினோம். உறவினர்கள் வண்டியில் ஒவ்வொருவராக ஏறி அமர்ந்துகொண்டனர்.

‘ஒரு தேங்காவுல கல்பூரம் வச்சி அத  ஏத்தியாங்க, ,  வண்டிய ஒரு சுத்து சுத்துங்க அப்படியே தேங்காய் சூரகாயா வுடுங்க’ டிரைவர் சொல்லிக்கொண்டிருந்தான். நானே ஒரு தேங்காயை ரெடியாக வைத்திருந்தேன். அதன் மீது கல்பூரத்தை வைத்து ஏற்றி வானை ஒரு சுற்று சுற்றி வந்தேன். வாசலில் நின்றுகொண்டிருக்கும் வேப்ப மரத்தில் ஒரு  சின்ன கிளை ஒடித்து வண்டியில் சொறுகினேன்.

‘மாப்பிள தம்பி எங்க’  டிரைவர் கேட்டான்.

’வண்டிலதான் இருக்கேன்’ என் பையன் டிரைவருக்குச்சொன்னான். என் பையக்குச்  சென்னையில்தான் ஐ. ட்டி உத்யோகம். சொந்த ஊரிலிருந்து சாமி கும்பிட்டுவிட்டுக் கல்யாணத்துக்குப் புறப்படவேண்டுமே ஆக தருமங்குடி வந்திருந்தான்.

‘மாப்பிள்ளக்கி கழுத்துல மல்லிகப்பூ மாலையாவது இருக்கணும் எப்பிடி  மாப்பிளன்னு தெரியர்து யாரு எவுருன்னுதெரியணும்ல’ டிரைவர் சொன்னான்.

‘மாலைய போட்டதுதான் கழட்டி ஆணில  சட்டமா தொங்கப்போட்டுட்டு வராரு மாப்புள’ என் மனைவி டிரைவருக்குப்பதில் சொன்னாள்.

‘நெத்தில சந்தனம்’

‘அதெல்லாம் இருக்கு.  சந்தனம் குங்குமம் திருநீறு எல்லாம் ஏகத்துக்கு   நெத்தில வச்சி இருக்கு’

வண்டியை   தருமங்குடி மேலத்தெரு விநாயகர் கோவில்  வாயிலில் நிறுத்தசொன்னேன். நல்ல காரியத்திற்குப் போகிறவர்கள் இந்த நாகமணிந்த விநாயகரை வணங்கி சதுர்காய் உடைத்துவிட்டுத்தான் செல்வார்கள். என் தம்பி தேங்காய்  இன்னொன்றைக்கையில் வைத்துக்கொண்டு இருந்தான்.  தருமங்குடியில் மேற்கு பார்த்த விநாயகர் கோவில்.  இப்படிக்கோவில் அமைவது அரிதினும் அரிது.மேற்கு பார்த்தபடிக்கு விநாயகர் கோவிலை எங்காவது கேள்விப்பட்டு இருக்கிறீர்களா. சீர்காழி பழைய பஸ் ஸ்டேண்ட் அருகே  நான்  எப்போதோ பார்த்திருக்கிறேன். அதுவும்  செல்லி அம்மன்கோவில் ஒன்றினுள் ஒரு பக்கமாய் இருக்கும். தருமங்குடி விநாயகர் கோவில் அளவுக்குப்பெரிதுமில்லை அது.

‘எல்லாம் நவுந்து நின்னுகணும்’ தம்பி சொன்னான். சிதறு தேங்காய் உடைத்தான். எல்லோரும் விநாயகரை வணங்கி முடித்தோம். வண்டி புறப்பட்டது.

‘வண்டில டிவி செட்  இல்லயா’ என் பையன் டிரைவரைக்கேட்டான்.

‘அதெல்லாம் இப்ப யாருங்க பாக்குறா. அது அதும் கையில போன் வச்சிகிட்டு அது அது டேஸ்டுக்கு புரோகிராம் பாக்குது’

‘பாட்டு மட்டும் கேக்குறாப்புல வான்ல செட் பண்ணியிருக்கிங்களா’

‘அதெல்லாம் இல்ல தம்பி’ டிரைவர் பரிதாபமாகப்பதில் சொன்னான்.  வண்டியில்  கருப்பு ஸ்பீக்கர்கள் செத்துக்கிடந்தன

நான் என் பையனைப்பார்த்துக்கொண்டேன்.

வான் நகர ஆரம்பித்தது. ’கோவிந்தா நாராயணா’ என்று சொல்லிக்கொண்டேன்.

‘ரைட் ரைட்’ என்றேன். எனக்கு  ஜானுவாச டிபன் நேரத்துக்குள் சென்னை செல்லவேண்டுமே என்கிற கவலை மட்டுமே இருந்தது.

‘வண்டிய இப்பிடி அமத்துவாளா’ என் மனைவி ஆரம்பித்தாள்.

‘எனக்கு மட்டும் எப்பிடி தெரியும்’

‘சொல்லியிருக்கணும்.  நாங்க கல்யாணத்துக்கு போறம் டி வி செட் கண்டிப்பா  இருக்கணும்னு’

‘அதோடதான் வண்டி வரும்னு நா நெனச்சேன்’

‘ எல்லாத்தையும்  நாம்பளே நெனச்சிகறதா’’

‘சண்ட வேணாம் கல்யாணத்துக்குல்ல நாம போறம்’ என் தம்பி என்னிடம் சொல்லிக்கொண்டான்

வானில் உள்ள சீட் அமைப்பெல்லாம் கண்ணறாவியாக இருந்தது.  எதையும்சட்டை செய்யாமல் என் ஷட்டகர் இருவரும் ஏதோ சொந்தக் கதைகளைப்பேசிக்கொண்டே வந்தனர்.  என் பையனைப் பார்த்துக்கொண்டேன். அவன் ஒன்றுமே பேசவில்லை. அவன் முகம் சரியாக இல்லை.

‘நல்லா வான் அமத்தியிருக்கே’ மெதுவாகச்சொன்னான்.

டிரைவர் காதில் அது விழுந்திருக்கவும் வேண்டும்.

‘ அந்த ஆட்டோக்காரரு என் சினேகிதம்.  நானும் அவுரும்  சேத்தியாத்தோப்பு ஆண்டாள் பிரைமரி ஸ்கூல்ல எம்மா நாளா புள்ளிங்கள கொண்டு வுடறம் கூட்டியாறம். அவருதான  கூட இருந்து இது அமத்துனது.  படிக்குற பசங்களுக்கும் லீவு. ஸ்கூலு இல்ல’

‘ஸ்கூலுக்கு ஓடுற வண்டியா’ என் பையன் டிரைவடிடம் கேட்டான்

‘ஸ்கூலுக்கு பசங்கள ஏத்திம்போற வண்டிதான்’

‘பசங்க உங்கள என்ன கேக்கப்போறாங்க’

‘கேக்குட்டுமே’

‘ஸ்கூல பசங்க.  எல்லாரும் ஒரு அரை மணி நேரந்தான்,  ஏறிடுவாங்க  எறங்கிடுவாங்க’

‘அது சரி’

‘ஸ்கூல் பஸ் எடுத்துகிட்டு இப்படி  டூர் போவாங்களா’

டிரைவர் எதுவும் பதில் சொல்லாமல் வண்டியை ஓட்டினான். வண்டி மெதுவாகத்தான் சென்றது.வேகம் கூட்டினால் எஞ்சின் சப்தம்  செவிகளில் நாராசமாய் வர்ஷித்தது.

‘இதுக்கு மேல  வண்டி வேகம் போவாதா’ நான் தான் டிரைவரைக்கேட்டேன். இந்த வேகத்தில்  வான் போனால் எப்போது சென்னைக்குப்போவது என்கிற கவலை எனக்கு.

‘பதனமா போவுணும்ல’ டிரைவர் எனக்குப் பதில் சொன்னான்.

இதற்குமேல் டிரைவரிடம் பேசி ஒன்றும் ஆகாது என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன். என் பையனைப் பார்த்துக்கொண்டேன். அவன் அரைத்தூக்கத்தில் இருந்தான். உறவினர்கள் அவரவர்க்குத் தோன்றியதைப்பேசிக்கொண்டும் வேடிக்கை பார்த்துக்கொண்டும் வந்தார்கள்.

‘ஜானுவாச டிபனுக்குப்  போகணுமே’ என் மனைவியும் சொல்லிக்கொண்டாள்.

 சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு வந்தது.  சென்னை கும்பகோணம் சாலையும், சேலம் சிதம்பரம் சாலையும் சந்திக்கும் இடம். வெள்ளாறு ராஜன் என்கிற கால்வாயில் தண்ணீர் நுரைத்துக்கொண்டு சென்றது. கரிகால் சோழன் கட்டிய வீராணம் ஏரியிலிருந்து வரும் காவேரித் தண்ணீர் வெள்ளாற்றைத்தாண்டிக்கொண்டு இந்தக்கால்வாயில் ஓடுகிறது.  வான் சென்னை சாலையில் திரும்பிக்கொண்டது. வண்டி சற்று வேகம் எடுத்தது. சாலை நன்றாக இருப்பதும் காரணமாக இருக்கலாம். வண்டியிலிருந்து  ஆனாலும் அந்தக் கடபுட ஒலி வந்துகொண்டேதான் இருந்தது.  பக்க வாட்டில் இருந்த பல்புகள் உடைந்து காணப்பட்டன.

‘கண்டம் பண்ணவேண்டிய வண்டி’ என்றான் பையன்.

எனக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. வடலூர் தாண்டி வண்டி சென்று கொண்டிருந்தது.

‘அருட்பிரகாசர் வள்ளலாரை மனதில் நினைத்துக்கொண்டேன்.

‘ அந்த காலத்துல சேஷசாயி இன்சுலேட்டர் ஆலை இங்கதான் இருந்துது’ என்றேன்.

‘அதெல்லாம் எந்தக்காலம்’ டிரைவர் எனக்குப்பதில் சொன்னான்.

பண்ருட்டி தாண்டினோம். பலாப்பழங்கள் சாலையில் முட்டு முட்டாய் குவித்து வைக்கப்பாட்டிருந்தன. சில கடைகளில் முந்திரிப்பருப்பு பாக்கெட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. வெள்வரிக்காய்கள், பிஞ்சுகள் சிலர் வைத்துக்கொண்டு விற்றார்கள்.   செங்காயாகக் கொய்யாப்பழங்களும் விற்பனைக்கு இருந்தன.

‘எதாவது வங்குணுமா’

‘ஒண்ணும் வேணாம்’ டிரைவருக்குப்பதில் சொன்னேன்.

’இல்ல வேணும்னா சொல்லுங்க’

‘நாம நேரத்தில் சென்னை போவுணும்’

‘அதான் போயிட்டு இருக்கம்ல’

கோலியனூர் கூட்டுரோடுதாண்டியது. வண்டி சென்னை நெடுஞ்சாலையில் ஏறிக்கொண்டது.

‘இப்புறம் நல்ல ரோடு  டாண் டாண்ணு போக வேண்டியதுதான்’ டிரைவர் சொல்லிக்கொண்டான். வண்டியில் இருந்தவர்களில் சிலர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.  அவர்களுக்கு என் மனைவி பட்சணங்கள் சிலதுகளை  விநியோகம் செய்தாள். குடிக்கத்தண்ணீர் கொடுத்தாள். வான் விக்கிரவாண்டி தாண்டிச்சென்றுகொண்டிருந்தது.

‘வண்டிய நிப்பாட்டலாமா’ என்றான் தம்பி.

‘எதுக்கு’

‘பாத் ரூம் போறவங்க போவாங்க’

‘ இங்க எதுவும் வேணாம் செத்த பொறுங்க. நானே நிப்பாட்டுறேன்’ டிரைவர் எங்களுக்குச்சொன்னான். திண்டிவனம் தாண்டி, வீடூர் அணை தாண்டி வான் சென்றுகொண்டிருந்தது.

கூட்டேரிப்பட்டு சாலை ஓரத்தில் ஒரு சுமாரான டீக்கடை. அதன் அருகே நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் மெக்கானிக் ஷெட் இருந்தது. வான்கள் அங்கே நான்கைந்துக்கு நின்றுகொண்டிருந்தன. வான் டிரைவர் வண்டியை நிறுத்தினான்.

‘எல்லாம் எறங்கிகுங்க. பாத்ரூம் போறவங்க போவுலாம்.’ என்று சப்தமாகச்சொன்னான். நாங்கள் எல்லோரும் இறங்கிக்கொண்டோம். வான்  டிரைவர்   ஷெட்டில்  இருந்த மெக்கானிக் ஒருவரிடம் கவனமாய்ச் சில விஷயங்களைச் சொல்லிக்கொண்டிருந்தான். இருவரும் ஏதோ குசு குசு எனப் பேசிக்கொண்டனர். என்னையும் இடுக்கில் ஒருமுறை வான் டிரைவர் பார்த்துக்கொண்டான்.

எல்லோரும் வானுக்குத் திரும்பிக்கொண்டிருந்தோம்.  வண்டியின் டிரைவர்  எங்களிடம் வந்தான்.

‘வண்டி மாத்தியாச்சி . இப்புறம் நீங்க  அதுலதான்  போவுணும்.  நானு இதோட நின்னுகறன். வேற ஒரு வான் இதோ  தயாரா நிக்குது.. அந்த டிரைவர்கிட்ட பேசிட்டன். அதுல வீடியோ இருக்கு. டேப் இருக்குது. சீட்டெல்லாம் பள பளன்னு இருக்கு. புது வண்டி. நீங்களும் கல்யாணத்துக்கு போறீங்க. என்மனசு கேக்குல.   மேற்கொண்டு போவுறதுக்கு அத அமத்தி பேசிவுட்டன்.  குடுத்த  அட்வான்ஸ் போக எனக்கு பாக்கி தரவேண்டிய தொகைய  நீங்க இந்த  வண்டி டிரைவரிண்ட கொடுத்துடணும். அதுதான் சேதி. அது அது  சாமான கையில எடு. எடு. அந்த வான்ல ஏறிக்க ஏறிக்க.’ என்றார் டிரைவர்,

நாங்கள் அந்த  வேறு  வானுக்கு  வேக வேகமாய் மாறினோம். என் பையன் மகிழ்ச்சியாகக் காணப்பட்டான். அது புதிய வான். ‘திருப்பதி மலை வாழும் வெங்கடேசா’ ஒலியும் ஒளியும் உள்ளே ஓடிக்கொண்டிருந்தது.   வண்டியில் அமரும் சீட்டு பளிச்சென்று  வழ வழப்பாய் இருந்தது. வண்டியின் சப்தமே கம்பீரமாய் இருந்தது.

‘இதுதான் கல்யாணத்துக்கு போற வண்டி’ என் தம்பி என்னிடம் சொல்லி திருப்தி பட்டுக்கொண்டான். எல்லோருக்கும் முகம் மலர்ச்சியாய் இருப்பதை  ஒருமுறை பார்த்துக்கொண்டேன். என் சகலர்கள் அவர்கள் குடும்பம் கூடுதல் மகிழ்ச்சியாக பயணத்தை அனுபவித்தார்கள்.

‘காசு செலவு செய்யறம் அத விதர்ணயா பண்ணணும்’ என்றான் தம்பி.

‘என்ன படம்வேணுமோ அத போட்டுகலாம்’

டிரைவர் எங்களுக்குச்சொல்லிகொண்டிருந்தான். என் பையன் டிரைவரிடம் ஏதோ சொன்னான். உடன் ஒரு இந்தி படம் ஓட ஆரம்பித்தது. என் தம்பி முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டான். தம்பியின் மனைவி ‘எதாவது தமிழ் படம் போடலாம்ல’ என்று முனகிக்கொண்டிருந்தாள்.சகலர்கள் குடும்பம் எதையும் கண்டு கொள்ளாமல் சென்னை எப்போது வரும் என்று ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

’உங்களுக்கு,  நாங்க மொதல்ல வந்தமே அந்த டிரைவர பழக்கமா’ நான்  தான் டிரைவரிடம் ஆரம்பித்தேன்.

‘அப்பா ஏதோ ஆரம்பிக்கிறார்’ தன் அம்மாவிடம் சொன்னான் என் பிள்ளை.

டிரைவர் எனக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தான். வண்டி செங்கல்பட்டு தொட்டுக்கொண்டிருந்தது.

‘நல்லா தெரியுமே அந்த டிரைவர. மீன்சுருட்டி காரரு. வண்டிய சேத்தியாத்தோப்பு ஸ்கூல்ல  ஓட்டுறாரு. வண்டிய  எஃப் சி க்கு அனுப்பணும். அதுக்குதான் கொண்டாந்து உட்ருக்காரு. வழக்கமா இங்கதான் வண்டி வேலய எல்லாம் பாப்பாரு.’

‘நாங்க அந்த வண்டிய அமத்திகிட்டு வந்தம்’

‘அதுல தப்பு  என்ன,  அந்த வண்டில லைட்டு சரியா இருக்காது, சிட்டிக்குள்ள  எல்லாம் போ முடியாது. இதுவரைக்கும் ஓட்டியாந்ததே அவுரு சாமர்த்தியம். இந்த பட்டரைக்கு சும்மா ஓட்டியாறம  உங்கள ஒரு   சவாரியா  இட்டாந்துட்டாரு.  இப்ப அவுருக்கும் காசு.  எனக்கும் காசு. ஒண்ணுக்குள்ள ஒண்ணு  எல்லாம் பொழப்புதான் வவுறு இருக்குது. குடும்பம் இருக்குது’

‘நாங்க கல்யாணத்துக்கு போறம்’

‘எத்தினி மணிக்கு அங்க இருக்கணுமோ அத சொல்லுங்க. நா கொண்டுபோய் விட்டுடுவேன்’

வண்டி நல்ல வேகத்தில் சென்று கொண்டிருந்தது. தாம்பரம் சமீபித்தது.

‘இன்னிம் அரை மணி நேரம். மடிப்பாக்கம் வந்துடும்’ டிரைவர்  என்னிடம் சொன்னான். எல்லோரையும் ஒரு முறை பார்த்துக்கொண்டேன். அவரவர்கள் தலை வாரிக்கொண்டார்கள். முகம் துடைத்து பொட்டு வைத்துக்கொண்டார்கள். என் பையன் இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் இந்தி சினிமாவை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான். வான் சேலையூர் தாண்டிக்கொண்டிருந்தது.

‘வண்டிய எங்கள எறக்கிவிட்டுட்டு என்னா பண்ணுவ’

‘நா சட்டு புட்டுன்னு கெளம்பிடுவன். வேல இருக்கு.  நீங்க வந்திங்களே   மொத  வண்டி. அத எஃப் சீக்கு  ரெடி பண்ணணும். பெயிண்டு, ப்ரசு, லைட்டுங்க ஆணிவ ஸ்குரூங்க, டயர் டியூபுங்க  எஞ்சின் சாமானுவன்னு ஒரு லிஸ்டே வச்சிருக்கேன். எல்லாத்தையும் எங்களுக்கு  வாடிக்கயா சப்ள பண்ற  ஸ்பேர் பாட்ஸ்   கட  ஒண்ணு இருக்கு.  கடப்பேரில. அதுலயே ஜாமானுவ  வாங்கிகுவம். ரவைக்கி எந்நேரம் ஆனாலும் கூட்டேரிபட்டு போய் சேந்துடணும்’

‘பேச்ச நிறுத்துங்க மடிப்பாக்கம் வந்தாச்சி.’ மனைவி எச்சரித்தாள்.

எல்லோரும் ரெடியானோம்.  நான் நெற்றிக்கு சந்தனம் மீண்டும்  வைத்துக்கொண்டேன். அங்கவஸ்திரத்தை சரியாய் போட்டுக்கொண்டேன். இந்தி படம் முடிந்து பையன் முகம் துடைத்துக்கொண்டான். கிச்சென்று டீ சர்ட் போட்டுக்கொண்டு ரெடியானான். சகலர் குடும்பங்கள் பளிச்சென்று மாறியிருந்தது. என் மனைவி முடிந்த அளவுக்கு தன் நெஞ்சை  நிமிர்த்திக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

‘மண்டபம் வந்தாச்சு’

என் தம்பி அழகாகச்சொன்னான்.

ஆரத்தியோடு மண்டப வாசலில் எங்களை வரவேற்க சம்பந்திமார் குடும்பம் நின்றுகொண்டிருந்தது.’ரா ராமா இண்டி தாக’ வாசித்துக்கொண்டு நாதசுர செட் நின்றது.

டிரைவரிடம் வண்டிக்கு பாக்கி  தொகை மூவாயிரத்து ஐநூறை எண்ணி எண்ணிக் கொடுத்தேன். சம்பந்தி வண்டிக்குள் எட்ட்டிப்பார்த்துவிட்டுச்  சாமான்கள் கொண்டுவந்ததை இறக்கிக்கொண்டு இருந்தார்.

‘எல்லாம் சாமான்களும் விடுதி ஆத்துக்கு வந்துடும். நீங்க  கை வீசிண்டு பேஷா போலாம்’ என்றார்.

நாங்கள் கை வீசிக்கொண்டுதான் நடந்தோம்.

‘வான் சூப்பர், இந்த ஊர்ல இப்பிடி வண்டி கெடைக்குமான்னு சொல்லமுடியாது’ என்றார் சம்பந்தி.

‘எல்லாம் அப்பா ஏற்பாடு’ என்றான் என் பையன்.

டிரைவர் வண்டியை ரிவர்சில் திருப்பி ’வணக்கம்’ சொல்லிக்கொண்டு புறப்பட்டான்.

‘ காபி  ஒரு வா சாப்டு போலாம்’ சம்பந்தி டிரைவரிடம் சொல்லிக்கொண்டார்.

எதையும் காதில் வாங்கிக்கொள்ளாத வான் டிரைவர்  அவர் வழியில் போய்க்கொண்டே இருந்தார்.

‘சமத்துத்தான் போங்கோ’

என் மனைவி சொல்லிக்கொண்டாள். என்னைப்பார்த்துதான்.  ’சமத்து என்று அவள் சொல்வது இந்த அசடைப் பார்த்துத்தான்’ நான் என்னுள் சொல்லிக்கொண்டேன்.

------------------------

 

 

 

 

                                                                                                                     

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நல்ல நேரம் பார்த்து காலை ஆறு மணிக்கு யாத்ராதானம் செய்தாயிற்று. அருகில் கம்மாபுரம் வெங்கட்ராம சாஸ்திரிதான் எங்கள் வீட்டு வாத்தியார். வாத்தியார் என்றால் புரோகிதர்தான் பிறகு வேறென்ன.

 

 

சுற்றுசூழல் குறித்து அலட்டிக்கொள்ளாத உலகம்                                                Bookday  ல்  வெளிவந்தது

 

‘சுத்தம் சோறு போடும்’ என்பது நம்மிடையே வழங்கும் பழமொழி.   இப்பழமொழியின் பொருள் நம்மால் இன்னும்  உணர்வு  பூர்வமாக  கிரகித்துக் கொள்ளப்படவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக பொது நல அமைப்புக்கள் தோன்றியுள்ளன. சுற்றுப்புறத்தை எப்படித்தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றிய கற்பித்தலை  அவை பிரதானமாய்ச் செய்து வருகின்றன.  சமூக பிரக்ஞை மேலோங்கிய சில நல்ல குடிமக்களின் செயல்பாடாக மட்டுமே அவை அங்கீகரிக்கப்படுகின்றன.

 அறிவியலிலின் பங்களிப்பால் முன்னேறிய நாடான அமெரிக்காவில் கலிஃபோர்னியா  மாநிலத்தில்  அண்மையில் நான்  பயணம் மேற்கொண்டேன். சாதாரணமாக அங்கு அனுசரிக்கப்படும் சுத்தம் பற்றிய உணர்வு என்னைச் சிந்திக்க வைத்தது. வாகனங்கள் செல்லும்  சாலைகளில் தூய்மையைக் காணும் போது பெருமிதமாக இருந்தது. இப்படியும் சாலையைத் தூய்மையாக வைத்துக் கொள்வது சாத்தியமா என்கிற ஆச்சரியம்  என்னைக் கவ்விக்கொண்டது.

 மழை நீர் செல்லும் கால்வாயை  பாலத்தின் அருகே இருந்து நோக்கினேன். அதனில் தண்ணீர் மட்டுமே சல சலத்துச் சென்று கொண்டிருந்தது. ஒரு சின்னக்  கடுதாசி கூட  அநாவசியமாய் மிதந்து  செல்வதைக்  காண முடியவில்லை. அமெரிக்கர்  ஒவ்வொருவரும்  ஒரு வளர்ப்பு நாயை தன்னோடு கூடவே  அழைத்துசெல்கின்றனர். நம்மூர்  சாலையில் அலைகின்ற நாய்களைப் போல் அங்கே  அவைகளைக்காண முடியாது.  அமெரிக்கர்கள் வளர்க்கும் நாய்களின் கழிவுகள் வீதியில் பிரத்யேகமாய் அமைக்கப்பட்ட கூடை அமைப்புக்களில் சேகரிக்கப்படுகின்றன. நீச்சல்குளங்களில்  எப்போதும்  சுத்தமான தண்ணீர்  நிரப்பப்படுகிறது. நீச்சல் பழகுவதற்கு வருபவர்களின் ஆரோக்கியம் தெரிவு செய்யப்பட்டே தண்ணீரில் இறங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.காய்கறிக்கடைகளும் கனி விற்பனை செய்வோரும் மக்களின் ஆரோக்கியத்தைக் கணக்கில் கொள்வதை கண் எதிரே பார்க்கமுடியும்.

சுற்றுப்புறச்சூழல் பற்றி யோசிக்கும் வேளையில்  சென்னையின் அடையாறும் கூவம் நதியும் பக்கிங்க்ஹாம் கால்வாயும் மனத்திரையில் நிழலாக ஓடத்தான் செய்கின்றன. புற நகர் தொடர் வண்டியில் எக்மோரிலிருந்து   பீச் செல்வதற்குள் நாம் சந்திக்கும்  நீர்த்தடங்களில் எத்தனை மாசுகள் மலை மலையாய்  குவிந்து கிடத்தலைப் பார்த்து இருக்கிறோம்.  வரலாற்றில்   புனித நதியாய் விளங்கியது  சென்னையின் கூவம்  என்றால் இன்று யாராவது நம்புவார்களா? மருத்துவக்கழிவுளை மொத்தமாய்ச் சுமந்து வரும் அடையாற்றிலிருந்து எழும் துர்நாற்றம் சகிக்கத்தான் முடிகிறதா?.  பள்ளிக்கரணை சதுப்பு நிலக்காடுகள்  அயல் நாட்டுப்பறவைகளின்  அரிய  சரணாலயமாய் விளங்கிய பெருமை பெற்றது.  இன்று காண்பதுவோ  சதுப்பு  நீர் நிலைகளில் மலை மலையாய் குப்பைகளின் ஆக்கிரமிப்பு.

அண்மையில்  சென்னையில் வீசியது மிக்ஜாம் புயல். வெகுவாய்  வெள்ளம் சுமந்தது கொசஸ்தலை ஆறு. குப்பைகள் குன்றென ஆற்றில் மிதந்து சென்றன. திருவள்ளூர் நகர பஞ்சாயத்துக்களில் வசிக்கும் மக்கள் குப்பை கொட்டும் இடமாக கொசஸ்தலை ஆற்றின் ஒரு பகுதி மாறிப்போயிருக்கிறது.

 2023 ஆம் ஆண்டு  டிசம்பர் 26 அன்று எண்ணூர் கோரமண்டல்  உர ஆலையின்  அமோனியா கசிவு காற்றில் விடப்பட்டது.  அமோனியா வாயுக்கசிவால்  மீனவர்கள் அல்லலுற்றனர் .  சதுப்பு நிலப் பறவைகள் கடல் வாழ் உயிர் இனங்கள் சித்திரவதைக் குள்ளாயின. மீனவப்  பெண்களும் குழந்தைகளும் பட்ட அவஸ்தைகளை எண்ணிப்பார்ப்போம்.

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி

பிறவும் தமபோற் செயின் (குறள் 120)

இது ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர்  நமது தமிழ் மண்ணின்  வணிக அறம்.  அடுத்தவன்  பொருளைத் தமது பொருளாய்ப் போற்றுவதும் பேணுவதும் என்பதுவே அது. நுகர்வோர் இடத்தில் தன்னை வைத்து  ஒரு வியாபாரி செயல்படவேண்டும். அத்தகைய மாண்புகளுக்கு இன்று எங்கே போவது. வணிகக்கண்ணோட்டம் என்பது சுயலாபத்தை மட்டுமே கணக்கில் கொள்வது என்பதுவாய்  காட்சி மாறிப்போயிருக்கிறது.

 சென்னை வாசிகளில் கோயம்பேடு காய்கறிச் சந்தைக்குச் சென்று வந்தவர்கள் அங்கு காய்கறிகள் கனிகள் அழுகி நாறும் துர் நாற்றத்தை அனுபவிக்காமல் திரும்ப முடியாது. வியாபார யுக்தியாய்   கார்பைடு  கல் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைப்பதுவும், கனிகளின் மீது ரசாயனம் தடவி அவை பளிச்சென்று நம் கண் முன்னே காட்சியாவதும் நாம் அறிந்திருப்போம்.

மதராஸ் உயர் நீதிமன்றம் இருக்கும் பிரதான சாலையில் வழக்கறிஞர்கள் பதிவு அலுவலகம் முன்பாக எத்தனை அசுத்தங்கள்.  முகம் சுளிக்க   வீசும் துர்நாற்றம். மெத்தப் படித்தவர்கள் இடையேதான் கூடுதல்  சமூகப்பொறுப்பின்மை.

பொருளீட்டலும் சுயநலமும் மட்டுமே குருதியில் ஏற்றி,  மதிப்பெண் அட்டையைக் கையில் கொடுத்து  இன்றைய  கல்விக்கூடங்கள் பிள்ளைகளைச்  சமுதாயத்துக்குப் பிரஜைகள் என  அனுப்பி வைக்கின்றன.  மாறாக இந்திய விடுதலைக்கான தீவிர இயக்கங்கள் நடந்த காலை தேசபிதா மகாத்மாவின் கட்டளையை ஏற்றுக் கல்விக்கூடங்களை விட்டு  வெளியேறிய அன்றைய மாணவர்கள் வீதிக்கு வந்தனர். பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப்போராடி சிறைக்கூடம் ஏகினர். அன்றைய காலத்தின் தேவை கருதி நமது முன்னோர்கள் தம் வாழ்க்கையை தாய் நாட்டிற்காய் அர்ப்பணித்தனர்.

இன்றைக்கு  நமது ரயில் நிலையங்களும் பேருந்து நிலையங்களும் நாம் தூய்மையைப் பேணுவதில் எத்தனைக்கு அக்கறை காட்டுகிறோம் என்பதை உலகுக்குப் பறை சாற்றுகின்றன.  திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் சாயத்திரை என்னும் தனது நாவலில் திருப்பூர் பகுதி நீர்த்தடங்கள் சாயப்பட்டறைக் கழிவுகளால் எப்படி தமது  சுத்தத்தைத்தொலைத்து  நஞ்சாக மாறி ஊறு விளைவிக்கின்றன என்பதனைச் சொல்லியிருப்பார். நொய்யலாற்றின் சோகம் சொல்லில் அடங்காது.  நொய்யல்  கொணரும் நீரைக் கால்நடைகளும் அருந்தாது வயல்களுக்கும் பாய்ச்ச முடியாது. 160 கிலோமீட்டர் ஓடும் ஆறு 152 கிலோ மீட்டருக்கு சாக்கடையாய்க்காட்சி தருகிறது.

‘காவிரித் தென் பெண்ணைப்பாலாறு-தமிழ்

கண்டதோர் வையை பொருனை-நதி-என

மேவிய ஆறு பல ஓடத் திரு

மேனி செழித்த தமிழ்நாடு.’

என்றார் மகாகவி பாரதி.   மேனி செழிக்கிறதா என்ன? இன்று காவிரியும் தென்பெண்ணையும் பாலாறும் வைகையும் தாமிரபரணியும் எத்தனை வகை  வகையாய் குப்பை கூளங்களைச் சுமந்து செல்கின்றன. நதிகளைத் தாய்த்தெய்வமாக வழிபடும் மரபு நமது.  சரஸ்வதி,  சிந்து ,கங்கை,பத்மா,  நர்மதை, காவேரி, பொன்னி, வைகை, பெண்ணை எனப் பெண்குழந்தைகளுக்கு நதிகளின் பெயர் வைத்து அழைப்பவர்கள் நாம்.

கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதிI

நர்மதே சிந்து காவேரி

ஜலேஸ்மின் சன்னிதிம் குரு II

என்று   சப்த (ஏழு) கங்கைகளை அழைத்து வணங்கி  மட்டுமே  நீராடும்  பண்டை மரபு  நமது.  இறை தொழ நமது உடலும் உள்ளமும் அப்படித்தான் தூய்மையாயின.

பாலிதீன் பைகளை உபயோகிப்பதில் அனேக கட்டுப்பாடுகளைச் சில ஆண்டுகள் முன்னே ஆட்சியாளர்கள் கொணர்ந்தார்கள். நெகிழிகள். அவை மண்ணில் மக்குவது அத்தனை எளிதில் நிகழ்வதில்லை. கால்நடைகள் அவைகளை உணவென விழுங்கி அவதியுறுகின்றன. வானிலிருந்து விழும் மழை நீர் பூமியின் அடி ஆழத்தைச்  சென்றடைவதை நெகிழிகள் தடுக்கின்றன. பூமியின்  நீர் சேமிக்கும்  அரிய குணாம்சத்தை அவை  வெகுவாய்ப்  பாதிக்கத்தொடங்கின.  

சில காலங்கள் முன்னே மஞ்சள் துணிப்பை உபயோகம்  அரசாங்கத்தால்  வெகுவாக விளம்பரப்படுத்தப்பட்டது.  மக்கள் பாலிதீன் பைகள் உபயோகிக்காமல் இருப்பதைக் கவனமாகப் பின்பற்றத்தொடங்கினர்.  உணவுப்பொருட்களை  மட்டுமா தேநீரையும் காபியையும் கூட  பார்சலில் வழங்கிய  உணவு நிறுவனங்கள்,  பாலிதீன் பைகள் உபயோகிப்பதை நிறுத்தின. மக்கள் தம் வீட்டிலிருந்து பாத்திரங்களை டிபன்  டப்பாக்களைக் கொண்டு வந்து உணவகங்களில் பார்சல் உணவு வாங்கினார்கள். மளிகைக்கடைகள்  பாலிதீன் பைகளை உபயோகிப்பதைக் குறைத்துக்கொள்ள ஆரம்பித்தன. மக்கள் துணிப்பையை எடுத்துக்கொண்டு சாமான்கள் வாங்க கடைத்தெருவுக்குப் போனார்கள். பேப்பர் கப்புகள் தட்டுக்கள் பாக்கு மட்டைத்தட்டுக்கள்  என்பன அதிகமாக உபயோகத்திற்கு வந்தன. ஆரோக்கியமான சூழ்நிலை நோக்கிய  நமது பயணம் துவங்கி விட்டதாக எண்ணத்தொடங்கினோம்.

யார் எதிர் பார்த்தார்கள், கொரானா என்னும் கொடிய உயிர்க்கொல்லி ( கோவிட் 19 )நோய் உலகெங்கும் பரவியது. மனித  நுரையீரலை கடுமையாக பாதிக்கும் வைரஸ்  SARS-CoV-2  அதற்குக் காரணமாகியது. கொரானாவால் லட்சக்கணக்கான மனித உயிர்கள் கொல்லப்பட்டன.  விண்ணில் தெரியும் நிலாவிலும் செவ்வாயிலும் மக்கள் குடியேறமுடியுமா என்பது பற்றி   விவாதித்தவர்கள்  நம்மிடையே உண்டு. ஆயின் கொரானா உயிர்கொல்லி கண்டு இப்பூஉலகம்  விழிபிதுங்கித் தவித்தது. மனிதக்கண்களால் பார்க்கமுடியாத உயிரினம் மனத சமூகத்தை திக்குமுக்கு ஆட வைத்தது. இயற்கைக்கு என்ன கணக்கோ  நாம் அறிய மாட்டோம். ஆயினும்  தாவரங்களும் விலங்குகளும்  பாதிப்பு ஏதுமின்றி உயிர்தப்பின. சீன  தேசத்து உஹான்  உயிரியல்  ஆய்வகத்திலிருந்து இது பரவியதாய் சொல்லப்படுகிறது. வைரஸ்  பாதித்த வவ்வாலைத் தின்றது ஒரு சீனப் பாம்பு.அதனை உணவாக உட்கொண்ட சீன  மனிதன் வழி உலகம் முழுவதும் அந்நோய் கடத்தப்பட்டதாகச் சொல்கிறார்கள். உலகம் கொரானாவால் ஸ்தம்பித்துப்போயிற்று. கொரானா பாதித்த காலம் சற்றேரக்குறைய மூன்றாண்டுகள். மனிதர்கள் தப்பிப் பிழைப்போமா மாட்டோமா என்று அஞ்சினார்கள்.

பாலிதீன் பை உபயோகம் கூடாது  பற்றி எல்லாம்  எங்கே பிரச்சாரம் செய்வது.கொரானா சவங்களை பாலிதீன் பைகள் கொண்டே மூட்டை கட்டி உலகெங்கும் அகற்றினார்கள். மருத்துவர்களும் செவிலியர்களும் பாலிதீனும் பிளாஸ்டிக்கும் கொண்ட கவசங்கள் அணிந்தே  மருத்துவ சேவைகளைச் செய்தார்கள்.  மனித உயிர்கள்  கொரானா  அசுரனை விஞ்சி இவ்வுலகம் வாழுமா என்கிற அச்ச இருள் எங்கும்  பரவியது. மனித குலத்தால் வாழ்தலின்  அத்யாவசியம்  உணரப்பட்டது. மும்முரமாய் மேற்கொண்ட அறிவியல் ஆய்வுகள் கொரானா தடுப்பூசிகளைக்  கொண்டுவந்தன. உலகை கொரானா பாதிப்பிலிருந்து காப்பாற்றியதில் நமது பாரத நாட்டின் பங்கு மகத்தானது. ஆகப்பெரிய செல்வந்த நாடுகள் தாம்  வாழ்தலை மட்டுமே  பிரதான இலக்காய் எடுத்துப்பணியாற்றின. மக்கள் தொகை வெகுவாய்க்கொண்ட வளரும் நாடு இந்தியா. இந்தியத் திருநாட்டின் பெரிய மனம் உலக மக்களால் உணரப்பெற்றது.’ வசு தெய்வ குடும்பகம்’ என்னும்  இந்தியாவின்  மனித நேய  விசுவாசம்  உலக மக்களால் அங்கீகரிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையில் வீட்டோ பவர் கொண்ட நாடுகள் தம் சுய நலத்தை மட்டுமே பிரதானப்படுத்திச் செயல் பட்டன. எங்கிருந்தாலும் மனிதகுலம் ஒன்றே  என்று இந்தியா தன் பங்கை ஆற்றியது. எப்படி எல்லாமோ போராடினோம். மருத்துவப்பணியாளர்கள் பலர் உயிர்த்தியாகம் செய்தார்கள்.  ஒரு வழியாய் கொரானா விடை பெற்றது. உலக அரங்கில் மக்கள் தொகையில்  இரண்டாவதாக  இருந்த  நமது நாடு இந்தியா,  சீனாவை விஞ்சி முதல் இடத்திற்கு வந்திருக்கிறது.  உயிர்க்கொல்லி கொரானா அந்த அளவுக்கு சீனாவைப் பாதித்தும் இருக்கலாம்.

 பூவுலகம் பருவநிலை மாற்றத்தால் திணறத்தொடங்கியது.மண்ணில் உலாவும் மிருகங்களும், தாவர வகைகளும் வறட்சியை உணரத்தொடங்கின. பூமியின் சராசரி வெப்பம் உயரத்தொடங்கியது. கிழக்கு மற்றும் மத்திய  பசிபிக் பெருங்கடலின் தென் பகுதியில் வெப்பம் அதிகரிக்கத்தொடங்கியது. அதன்காரணமாக இந்துமகா சமுத்திரத்தின் வெப்ப நிலையில் மாறுதல் உண்டானது. இது அதீத மழையையும் அதீத வெப்பத்தையும் கொடுத்துப் புவியைக் கெடுத்து  வருவதைக்காண்கிறோம். இதனை எல்நினோவின் பாதிப்பு என்று குறிப்பிடுகிறார்கள்.

பூமியின் வெப்ப நிலை ஒரு டிகிரி செல்ஷியஸ் உயர்ந்தாலும் அது  ஆர்டிக் துருவப்பகுதிகளில் பனிமலைகளை உருகச்செய்துவிடும். பூவுலகின் தட்ப வெப்ப சூழலில் அது வெகுவாக பாதிப்பை ஏற்படுத்தும். பருவநிலை மாற்றம் இந்தியத் திருநாட்டின் கடற்கரை ஒட்டிய நகரங்களில் பேரழிவை ஏற்படுத்தும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். புவி வெப்ப மயமாதலைத் தடுக்க  அனல் வழி மின்சாரம் தயாரிப்பதைத் தடுத்து நிறுத்தி கடல் அலைகள், வீசும்  காற்று, நீர்நிலைகள் இவைகளைப்பயன் படுத்தி  மட்டுமே மின்சாரம் தயாரிக்க வேண்டிய கட்டாயம் வந்தாயிற்று. மின்சாரம் தயாரிக்கும்  டர்பைன்களை சுழற்ற நீர் ஆவியைப்பயன்படுத்துகிறோம். அப்படி  மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆலைகளில்  எரிபொருளாக நிலக்கரி பயன் படுத்தப்படுகிறது. அணு உலைகளும் வெகுவாய் மின் சாரத்தைத் தயாரிக்கின்றன.அணு உலைகள் வெளியிடும் வெப்பம், அணு உலைகள் வெளியிடும் கழிவுகள் ஆபத்தை விளைவிப்பவை. மின்சாரத்தின் தேவை பன்மடங்கானதுவே இதற்கு அடிப்படைக்காரணம்.

மக்கள் தேவையை அனுசரித்துப் போக்குவரத்து சாதனங்களின் எண்ணிக்கைப் பன் மடங்கு பெருகியது. அவை உபயோகிக்கும் பெட்ரோல் டீசல் இவற்றால் வெளியேறும் புகையில் கார்பன் மோனாக்சைடு (CO) கார்பன் டை ஆக்சைடு CO2) போன்றவற்றின் அளவு கூடிக்கொண்டே போகிறது.  உயிரினங்கள் சுவாசிக்கும் காற்று,  உயிர் வளி ( o2) நஞ்சாகிறது. புவியின் வெப்ப நிலை கூடிக்கொண்டே போகிறது.

உலகெங்கிலும்  பொருட்களைப் பாதுகாக்கும் குளிர் சாதனப்பெட்டிகளும், குளிர்சாத சாதனங்கள் பொறுத்தப்பட்ட அறைகளும்  குளோரோ ஃப்ளுரோ கார்பன்கள் (CFC)   எனும் வாயுவை வெளியிட்டு ஓசோன் என்னும்  இயற்கைப் புவியரணை நாசப்படுத்துகின்றன. ஓசோன் அரண் எனும்  புவிக்காப்பில் அண்டார்டிகாவிற்கு நேர் மேலாக  ஓட்டை  விழுந்திருக்கும் பேராபத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அறிவித்து இருக்கிறார்கள்.

புவி கூடுதலாய்  வெப்பம் அடையவே கூடாது. கரியமில வாயுக்கள் வெளிப்பாடு கட்டுப்படுத்தப்படவேண்டும். சாலைகளில் விரையும் வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். பெட்ரோல் டீசல் பயன்பாட்டில்  மிகக்கவனமாய் இருத்தல் வேண்டும்.  ஆகத்தான்   பாட்டரி கார்கள் சாலைகளில் ஓட ஆரம்பித்திருக்கின்றன. அவைகளின்  உபயோகம்  கூடுதலாக  ஊக்குவிக்கப்படவேண்டும்.

சமீபகாலமாக  வீட்டுக்கு வீடு சோலார் பாட்டரிகள் நிறுவப்பட்டு மின்சாரம் சூரிய சக்தியினின்று தயாரிக்கப்படுகிறது.   இவ்வமைப்பிற்கு அரசாங்கமும்  சில சலுகைகள்   வழங்கியிருக்கிறது. கார்களுக்கும் எலக்ட்ரிகல் ரீசார்ஜ் சூரிய சக்தியினின்று கொடுக்கப்படவேண்டும். இரண்டு சக்கர வாகனங்கள் பாட்டரி மின்சாரத்தில் வெகுவாக இயங்கத்தொடங்கியுள்ளன. புகை நச்சு வளிமண்டலத்தில் கலப்பதை அவை வெகுவாகக் குறைக்க உதவுகின்றன.

’புதியதோர் உலகம் செய்வோம்

கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’.

என்று உலகிற்கு நல்லது விழைந்தார் பாவேந்தர் பாரதிதாசன். ஆயின்  யுத்தபேரிகை முழங்குவது எங்கே நின்றது. ஒரு நாட்டின் பொருளாதாரத்தைச் சூன்யாமாக்கும் போர், என்றேனும் சுற்றுச்சூழலைப் பொருட்படுத்தியது உண்டா என்ன?நாடுகளுக்கு இடையே  எழும் போர் முதலியவற்றால் மனித உயிர்கள் லட்சக்கணக்கில் பலியாவது மட்டுமா நிகழ்கிறது. யுத்த களத்தில் துப்பாக்கிகளும் டாங்குகளும் வெடிகுண்டுகளும் கிளப்பும் புகை நச்சு சொல்லி மாளாது. ஆண்டொன்றுக்கு மேலாய் உக்ரைனுக்கும் ருஷ்யாவிற்கும் சண்டை, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் எப்போதும்  முஸ்தீபு. இன்னும் எத்தனையோ  அப்பாவி அழுகுரல்கள் உலகெங்கும்  தொடர்கதையாகி நிற்கிறது.

ஐக்கிய நாடுகள் அமைப்பு பெயரளவுக்கு மட்டுமே ஒரு அமைப்பாக  இயங்க முடிகிறது.  மனஞ்சிறுத்துப்போன அமெரிக்க ஐக்கிய நாடு (USA) தனக்கு  யுத்த தளவாடங்கள் போணியானால் சரி என்று சொத்தை நியாயத்தைத் தொடர்ந்து பேசிவருவது வேதனையான விஷயமாகும்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனப்பிரச்சனையோடு, காசா முற்றுகை  ஹமஸ் அமைப்புடன் சண்டை என ஓயாத துப்பாக்கி வெடிகுண்டுச் சத்தங்கள் கேட்ட வண்ணமே உள்ளன. யாருக்கு யார் நியாயம் சொல்வது. சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாடு பற்றியெல்லாம் இந்த மக்களிடம் விவாதம் செய்ய சாத்தியப்படுமா.  வவுனியாவில் ஒன்றரை   லட்சம் தமிழர்கள் சமாதி ஆனார்கள். சொச்ச இலங்கைத்தமிழர்கள் உலகம் முழுவதும் அகதிகளாக  இரண்டாம் பிரஜைகளாக அங்கங்கே வாழ்ந்து வருகிறார்கள்.சொந்த மண்ணும் வீடும் நிலபுலனும் எங்கோ இருக்க அரை வயிற்றுக்கஞ்சிக்காய் உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்று வயிற்றுப்பசிக்கு  கூலி வேலை செய்கிறார்கள். மிச்சமாய் சிலவர் இலங்கையில்.  இலங்கையோ பொருளாதார கிடுக்கில் சிக்கிச் சீரழிகிறது.  இவர்களிடம்  எல்லாம் போய் நாம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு  பருவநிலை மாற்ற  ம் என்பது  எல்லாம்  பற்றி விவாதிப்பது  நேர்மையாகுமா?

ஆப்கானிஸ்தான்  ஒரு நாடு. இன்னும் ஆரோக்கியமான மக்கள் சமூகம் அங்கு ஸ்திரப்படவில்லை. ஆட்சியாளர்கள் உலக அரங்கில் அங்கீகரிக்கப் படாதவர்களாக காலம் போய்க்கொண்டே இருக்கிறது. முன்னர் ரஷ்யா  ஆப்கனை ஆக்கிரமித்தது.பின்னர் அமெரிக்கா ராணுவ  முகாம் அமைத்தது. அதுவும் முகாமைக்காலி செய்தது. இன்று கொம்பு முளைத்தவர்க:ள் தலையீடுகள் இல்லை. ஆனால் ஒரு ஜனநாயகச் சூழல் அங்கு மலரவில்லை. அன்றாடம் தீவிரவாதிகளின் செயல்பாடுகள் அரங்கேறுகிறது. தலிபான்கள் அரசு நிர்வாகப் பொறுப்பு எடுத்தார்கள்.  ஆப்கனிலிருந்து உலக நாடுகள் அச்சத்துடன் சற்றுத்தள்ளியே நிற்கின்றன. வாழ்நிலையே  கேள்விக்குறியாகி விட்டபோது சுற்றுச்சூழல் பற்றி சிந்திக்க சாத்தியப்படுமா என்ன?

ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல்  திட்டங்கள் பருவ நிலை மாற்றங்களுக்காகக் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறது.  கரியமில வாயு வெளிப்படுதலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. விவசாயம், கட்டுமானம், வனப்பராமரிப்பு ,தொழிற்சாலை போக்குவரத்து ஆகிய துறைகளில் அரசாங்கங்கள் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை (UNO) சவலைக்குழந்தைதானே.

க்ரீன்ஹவுஸ் வாயுக்கள்( பசுமை இல்ல வாயுக்கள்) என்பன கார்பன் டை ஆக்சைடு ( CO2),மீதேன்( CH4) ,  நைட்ரஸ் ஆக்சைடு( N2O), செயற்கை ரசாயனங்கள். க்ரீன்ஹவுஸ்  என்பது கண்ணாடியால் ஆன வீடு. மோசமான வெப்ப தட்ப நிலையிலிருந்து தாவரங்களைக் காப்பாற்றி வளர்க்க இவை நிறுவப்படுகின்றன. இவையே  தாம் பெற்ற வெப்பத்தை இருத்தி வைத்துக்கொள்கின்றன. பசுமை இல்ல வாயுக்களே புவி வெப்பமாவதற்குப் பிரதான காரணிகள். இப்போதிருக்கும்  வெப்ப நிலையில்  1.5 டிகிரி செல்ஷியஸ் புவியின் வெப்பம்  இன்னும் கூடிப்போனால்  சொல்லொணாத் துயரங்களை மக்கள் சமூகம் எதிர்கொள்ளவேண்டிய சூழல் உருவாகும். அறிவியலாளர்கள் தொடர்ந்து இதனை வலியுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். செய்யவேண்டியவர்கள் புவி வெப்பம் குறைவதற்காய் உருப்படியாய் எதுவும் செய்யப்படவில்லை.

இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடற்கரைக்கு யாத்திரை என்று சென்று பார்த்தவர்கள்   புனித நீராட வரும் மக்கள் கடற்கரையை எவ்வளவு அசுத்தமாக்கியிருக்கிறார்கள் என்பதை அறியலாம்.  வட இந்திய யாத்திரைக்குச் செல்கிறவர்கள் கங்கைக்கரைகள் எவ்வளவுக்கு அசுத்தமாய் வைக்கப்பட்டுள்ளன என்பதைப்பார்ப்பார்கள்.

 பிளாஸ்டிக் கழிவுகள் ஆற்றில் கொட்டப்பட்டு அவை கடலை அடைந்து கடல் வாழ் உயிரினங்கள் வாழ்க்கையை சின்னா பின்ன மாக்குகின்றன. சிறிய மீனிலிருந்து பெரிய திமிங்கிலம் வரை பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு நோயுற்று மடிகின்றன. ஆண்டொன்றுக்கு எண்பது லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கொட்டப்படுகின்றன.மீன்களின் வாழ்க்கைச் சக்கரத்தில் பிளாஸ்டி பேரிடி தரும் பெரிய விஷயமாகும். பிளாஸ்டிக்கை விழுங்கிய மீன்களுக்கு ஏற்படும்  அபாயம்  மீன்களை உணவாகக்கொள்ளும்  உட்கொள்ளும் மனிதர்களுக்கும் நீளும்தானே. பிளாஸ்டிக் கழிவுகள் பவளப்பாறை உயிரினங்களை அழித்தொழித்துவிடும் என்று எச்சரிக்கின்றனர் கடல்சார் விஞ்ஞானிகள். அரியவகை தாவரங்கள், கிளிஞ்சல் உயிரினங்கள் இவைகளின் இருப்பு கேள்விக்குறியாகி  நிற்கிறது.

ஆண்டொன்றுக்கு  மூன்று டிரில்லியன் டாலர்  ராணுவத்திற்குச்  செலவு செய்கின்றன  உலக நாடுகள். ஒரு டிரில்லியன் என்பதற்கு ஒன்று போட்டு 13 பூச்சியங்கள்.ராணுவச்செலவு குறைக்க முடியாததுவா. மனம்தான் செம்மையாகவில்லை.  கணம் தோறும்   மாசுபடும் சுற்றுச்சூழல் குறித்து  பருவ நிலை மாற்றம் குறித்து  இப்புவி அழியும் விளிம்பில் இருப்பது குறித்து எவ்வளவு அக்கறையோடு ஆட்சியாளர்கள் செயல்படுகிறார்கள் என்பது வேதனை.

-------------------------------------------