Wednesday, October 9, 2024

கவிதை நூல் -லேசுப்பட்டதில்லை மனசு

 

 


லேசுப்பட்டதில்லை மனசு

 



1.வேண்டும் 

 

கவிதை எழுதுதல்  பெரிசல்ல

எழுதிய அதைப்படித்துப்பார்க்க

நிறைவொன்று வரவேண்டும்

மனதிற்குள் நிச்சயமாய்.

யாரும் சால்வை போற்றி

சான்றிதழ்அளித்து

சன்மானம் வழங்குவது

எல்லாம் அதற்குப்பின்னேதான்.

படைப்பாளி

என்றோ எழுதிய வரிகள்

இன்றைக்கு எடுத்துப்படித்தாலும்

வாசிப்பவனோடு பேசிப்பார்ப்பது

வாய்க்க வேண்டும்

உயிர்ப்போடு உலவும்

அவ்வெல்லுஞ்சொல்

  மனத்திரையில் பளிச்சிட வேண்டும்

வாசகனை மிடுக்காய்

அது அசைத்துப்பார்க்க வேண்டும்.

'அட' என்று கவிதை வாசித்த மனம் புன்னகைத்துப்பின்

நகர வேண்டும்.

அதற்கீடாகாது

ஒரு போதும் 

ஆயிரம் புகழ்ச்சிகள்.

 

2. சொந்தக் கதை

 

 

புத்தகங்கள் வாங்கியவை

அடுக்கிக் கிடக்கின்றன

படித்து முடித்து விட்டால்

மனம் நிம்மதிப் படும்

முடியவில்லையே

புத்தகங்கள் கூடிக்கொண்டே போகின்றன

இத்தனைக்குள் 

நாமே எழுதுவதற்கும்

நேரம் ஒதுக்கத் தான் வேண்டும்

அவை படைப்பாய் மலர்ந்து

பேர் சொல்ல வேண்டும்

பதிப்பகத்தின் உறவோ

கத்திமேல் நடப்பது போல்.

அத்தனையும் தாண்டி

விருதுகளின் அரசியல்

சும்மா விடாது படைப்பாளியை.

எழுத்தாளனுக்கு

காசும் வேண்டும்

காத்திரமான உடலும் வேண்டும்

ஆரோக்கியமும் வாய்க்க வேண்டும்

துளி அதிர்ஷ்டம்

வேண்டும்தான்

சொன்னாலும் சொல்லாவிட்டாலும்.

 

3. வருத்தம்தான்

 

 

தேவன் எழுதிய

துப்பறியும் சாம்பு

கதைப்புத்தகத்தை

உன்னிடமிருந்து கடனாகப்

பெற்றுப் படித்தேன்

திருப்பிக் கொடுத்த போது

ஒரு பக்கத்து மூலை

மடங்கியதற்காய்

என்ன பேச்சு பேசினாய் நீ

அத்தோடு சரி

உன்னிடமிருந்து எந்தப்

புத்தகத்தையும்

கடன் வாங்கியதில்லை நான்

எனக்கும் ரோசம்தான்

நீயோ விடைப்நெற்றுச்

சென்றுவிட்டாய் எல்லோரிடமிருந்தும்

நீ நேசித்த அத்தனைப்புத்தகங்களையும்

யார் யாருக்கோ

நின் வீட்டார்

அள்ளி அள்ளிக்கொடுத்து

அலமாரிகளைக்

காலி செய்தது  நீ அறிய மாட்டாய்

யாருக்கும் பிடிபடாதது

எத்தனையோ புதிர்களோடு

என்னவோ உலகம் இது.

 

 

4.. தொலைப்பு

 

அன்றொரு நாள் மதியம் 

தருமங்குடி போனேன்

என் பிறந்த அகம்

அனாதையாய்க் கிடந்தது

அப்பாவும் தாத்தாவும்

ஜப சந்தி செய்த

திண்ணையில்

ஊர் உதிரிகள்

குடித்துப்போட்ட சாராயபாட்டில்கள்

 சயனித்துக்கிடந்தன  

ஓட்டு வீட்டின் 

நாட்டு ஓடுகள் வானரங்களால்

புறட்டப்பட்டு முட்டு முட்டாய்க்கிடந்தன

வீட்டுசசுவரில் ஆலும் அரசும்

வளர்ந்து வரவேற்றன

தேங்காய்களைத் தொலைத்த தென்னை மரங்கள்

பரிதாபமாய் நின்றுகொண்டிருந்தன

வீடு பூட்டிக்கிடக்கிறது

வீட்டுச்சாவி வைத்திருக்கும்

சிவாச்சாரியார் ஊரில் இல்லை.

துருப்பிடித்து  நாதாங்கியில் உறங்கிக்கிடக்கும்

திண்டுக்கல் பூட்டை

முறைத்துவிட்டு

வீடு திரும்பினேன்

பூட்டுதான் என்ன செய்யும்.

 

 

5.. அயோத்தி

 

அயோத்தி ராமர் கோவில்

திறப்பு

பிரதமர் மோடி

அக்னி தீர்த்தத்தில் மூழ்கியதும்

புண்ணிய தீர்த்தக் கிணறுகளில் வாளிகொண்டு

நீர் சேந்தித் தலையில்

கொட்டிக்கொண்டதும்

திருவரங்கத்து ஆனை

ஆண்டாளின் தும்பிக்கையை

வருடிக் கொடுத்ததும்

சாதாரண மனிதனாய்

பிரதமரைக் காட்டியது

உலகுக்கு. .

அதுவே ஓர் அதிசயமாய்

ஆனந்தமாய் பிரமிப்பாய்

சுயநலம் அற்ற  மாமனிதரை 

அடையாளம் காட்டியது எனக்கு.

ஆயிரம் விமரிசனம் எனக்கு

எப்போதும் உண்டுதான் 

அது வேறு இது வேறு.

 

 

 

 

6. அலப்பறை

 

புத்தகக்காட்சிக்குப் போனேன்

நேற்று சிற்றரங்கில்

ஒரு இலக்கியக் கூட்டம்

இரண்டு மணி என்று

போட்டுவிட்டு மூன்று

மணிக்குத் துவங்கினார்கள்

சுய அறிமுகம் என்று நூறு

பேருக்கு மைக்கில் ஆரம்பித்தால் அதற்கே

ஒருமணிக்கு மேலானது

பெரிய பெரியவர்ளைவர்

ஒருவர் ஒருவராய்ப் பேசி

முடித்தனர் 

ஆகா ஊகு

அதெல்லாம் இல்லை

அரைத்த அதே மாவுதான்

அன் டு  திஸ் லாஸ்ட் நமக்கு

காந்தியைத் தந்தது என்றபடிக்கு.

செல்ஃபீ எடுத்துக்கொள்ளும்

மும்முரம் கனஜோர்

அதே மிக்சர் ஒரு கரண்டி

பாயசமாய்த் தேநீர்

புதியதாய் வந்த இளைஞர்கள் நாற்காலியில் உட்கார்ந்து

எழுந்து போனார்கள்

கையில் கட்டாயமாய்

நிகழ்தேதி இல்லா

மெமன்டோவோடு.

 

 

7.. நல்ல விஷயம்

 

 

கோடை வெயிலும்

குளிர்கால மழையும்

சென்னைக்குச் சாபம்

பெருங்களத்தூர்

 என் வீட்டருகே

பெருமழையின் வெள்ளத்தின் மிச்ச சொச்சம்.

திருநீர்மலை வாழ் நூறு வெள்ளை கொக்குகள்

அதிகாலையே

இரை பொறுக்க வருகின்றன

நீர் உறை பூச்சி புழுக்கள் தாம் இரை

எப்போதும் கூட்டமாய்

புறாக்கள் இங்கேயுண்டு

இப்போது கொக்குகள்

நரிக்குறவர்கள் கிராமப்புறத்தில் புறாக்களை

துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு போய்

பசி ஆறுவார்கள்

அதுமட்டும் நிகழ்வதில்லை

இங்கு

 நல்ல விஷயம்.                                           

 

 

 

 

8. சிறகு

 

பதிவுத்தபாலில்

இலக்கிய இதழொன்று

என் முகவரி எழுதி

சரியாகவே வந்தது

இளக்கிய இதழென

பெயரிட்டிருக்கிறார் மனம் இளகி.

ஆசிரியர் சிறகு இரவிச்சந்திரன்

(மட்டும்) ‌ என்பது அடைப்புக்குள்.

துணை இணை உதவி

பகுதி பத்திஆசிரியர்

எல்லாமும் அவரேதான்.

வாரமா மாதமா காலாண்டிதழா எனக்கேட்டால்

அவ்வப்போது வரும் என்கிறார்

இதழுக்கு சந்தா கிடையாது

தன்னார்வ நன்கொடையாம்

நல்ல கண்டுபிடிப்பு

சிற்றிதழ் மட்டுமில்லை

அதற்கு இலவச இணைப்பாய் பெருங்கதை

நூலும் உண்டு

பார்த்த இதழில் சுரேஷ்

ராஜகோபாலின்

ஒருவரி உண்மைகள்

சிக்கெனப்பிடித்தது

சாவியை யாரோ தொலைக்கஅடிவிழுவதோ

அப்பாவிப் பூட்டுக்கு.

 

 

9. அசடு

 

முட்டிவலி யோடிருக்கும்

மனையாளை குரோம்பேட்டை மருத்துவமனைக்கு

அழைத்துப் போனேன்

மணிரெண்டு சாப்பாட்டு நேரம்

நல்ல கூட்டம்

கேண்டீனைத்தேடி உட்கார்ந்தேன்

இருநூறு ரூபாய் காஷியரிடம் கொடுத்தேன்

இரண்டு சாப்பாடு  போக பாக்கி

பன்னிரெண்டு ரூபாய் தந்து

 ஒரு ரூபாய் இல்லை சாரி என்றான்

ஆக சாப்பாடொன்று ரூபாய் தொண்ணூற்று மூணரை

என்ன சித்திரா புத்தன் கணக்கோ

மதிய சாப்பாட்டை

 சில்வர்

தட்டொன்றில் வைத்து

குழம்பு ரசம்

முட்டைக்கோசிலேயே பொறியலும் கூட்டுமெனக்

கொடுத்தான்

தண்ணீர் ஜக் மட்டும் இருந்தது டம்ப்ளர்கள் இல்லை

அப்படியே தூக்கிக் குடியுங்கள் என்றான்.

ஜக்கையோ தூக்கமுடியவில்லை பளு.

மோரோ தயிரோ இல்லையே என்றேன்

குழம்பே மோர்க்குழம்பு 

அப்புறம் எதுக்கு தனியா

தயிரு மோரு என்கிறான்

சாப்பாடு முடித்து

ரெஸ்ட் ரூம் எங்கே தேடினேன் 

'அதுக்கு

ஆஸ்பத்திரிக்குள்ளே தான்

போவணும்அவன்  சொன்ன பதில்.

அசடு நானே தான்.

 

 

10. பிடிபடாதது

 

 

நல்வாய்ப்பு எல்லார்க்கும்

வாய்த்து விடாது

தெரிந்த நல்லதை

யோசிக்காமல் செய்

நல்ல எண்ணங்கள்

தோன்றி அது செயலாக

மலர்வது கொடுப்பினை

எப்போதேனும் உதிக்கும்

நல்லெண்ணம் சட்டென

மறைந்துவிடும்

சாக்குரதை

மனிதனாக வாழ்வதுவே

அடுத்தவர்க்கு நன்மை செய்ய

இவ்வெண்ணம் செயலாக

மாறும்தருணம்

நீ மனிதனாகிறாய்

அதனைப்போற்று.

அது வளரட்டும் உறுதி கொள்

நல்லவனாக நான் இருந்து

என்ன ஆக வேண்டும்

எண்ணிவிடாதே

குறுக்காய் கேள்வி வேண்டாம்

நிறுத்து கேள்வியை

நற்செயல்கள் தொடரட்டும்

அதில் என்னவோ

மறைந்து கிடப்பதுண்மை.

 

11.  என்ன செய்ய?

 

 

காலத்தே படிப்போம்

ஆழ்ந்து படிப்போம்

ஓயாமல் படிப்போம்

படிக்கவேண்டியன படிப்போம்

சிநதனை செழிக்கப்

படிப்போம்

செயலாய் அது கனிய

உழைப்போம்

உழைப்புக்குத்துணை

தோழமை.

துணைகொள்வோம்

தோழமை என்றுமே

நல்லன விழைவோம்

நல்லதே நடக்கட்டும் .

 

 

12. இயற்கை

 

வனம் ஒன்றில்

சிங்கம் புலி ஆனை

என வரிசையாய் வாழலாம்

காட்டுப்பூனை

காட்டு எருமை

காட்டு நாய் என்று

அங்கிருக்கத்தான் செய்யும்

சிங்கத்தால் பூனையை

எருமையை நாயை

அடித்துத் தின்னமுடியும்

ஆனால்

பூனையாக எருமையாக

நாயாக தன் உருவை

மாற்றிக் காட்ட முடியாது

சிங்கம் சிங்கமாய் வாழ

பூனை ஆனை நாய்

அது  அதுவும் அது அதுவாய் வாழத்தான்

விதித்திருக்கிறது இயற்கை.

 

13. பிடிக்காது  ஜல்லிக்கட்டு

 

எனக்கு சுத்தமாய்ப்

பிடிக்காது ஜல்லிக்கட்டு

அரசும் நீதிமன்றமும்

நடக்கட்டும் அதுவென

பச்சைக் கொடி காட்டியபின்

நீங்களும் நானும்

சொல்ல ஒன்றுமில்லை

அதற்காக மவுனம்

காத்திடத்தான் முடியுமா

காளைகள்

 கால் குளம்புகளுக்கிடையே

கூர் கொம்புகளுக்கிடையே

கருதிகொட்டி

சிதைக்கப்படும் மனிதனைக் கண்டும்

எப்படி ஏற்கிறதோ

மனித மனம்.

காளைகளின் விருப்பம்

யார் கேட்டார்கள்

வாயில்லா அவை சொல்லத்தான் போகிறதா?

சிங்கம் புலி ஆனைகளோடு

ஜல்லிக்கட்டு வைத்தாலென்ன?

 

14. சட்டத்தின் அழகு

 

அரிஹாஷா

ஏழுமாத இந்தியக்குழந்தை

அடிபட்டது என ஆஸ்பத்திரிக்குப் போனார்கள்

பெர்லின் நகர குழந்தைகள் நல அமைப்பு

ஜூகண்டாம்டின் கொண்டு சேர்த்தது ஃபாஸ்டர் ஹோமில்

தாயும் தந்தையும்

பெற்ற குழந்தையைக் கவனிக்கவில்லை குற்றச்சாட்டு

நீதிமன்றம் விடுவித்தது

குற்றம் இல்லை அவர்கள் மீதென

ஆண்டுகள் ரெண்டாகியும் குழந்தை

பெற்றோரைச்சேரவில்லை

ஜெர்மன் தேசத்தில் தவிக்கின்ற தாயும் தந்தையும்

பிரதம மந்திரி முதல் மந்திரி

தெரிந்த எம்பிக்கள் என் எல்லோருக்கும்

மனுப்போட்டு மன்றாடுகின்றனர்.

 

15. யாதுமாகி

 

 

என் வீட்டுத்தோட்டத்தில்

வாழைமரமுண்டு ரஸ்தாளி

கட்டாயம் இலை வேண்டும் அமாவாசைக்கு

மகிழ்ச்சி இல்லை வாழை தார் போட்டோலோ

அவளும் நானும்  வீட்டில்

இருவருக்கும் சர்க்கரை

வாழைத்தார் வெட்டி 

மரத்தை அசமடக்கி

அது பழுக்கக்காத்திருந்து

அக்கம் பக்கத்தார்க்குக்கொடுக்க

யார் கேட்டதுஎன்பார்கள்

பின் வாங்கிக்கொள்வார்கள்

வீதியில் எப்போது பசுமாடு வரும்

பழம் போடக்காத்திருப்பதுவா வேலை.

அருகிருக்கும் செல்லித்தாய் கோவிலில்

கொண்டுபோய் வைக்கிறேன்

யாதுமாகியவளுக்கு அத்தனையும்.

 

16. நிராசை

 

உங்க அம்மாவையும் அப்பாவையும்

கண்கலங்காம சந்தோஷமா  வச்சிகணும்

இல்லைன்னா விவாகரத்துதான்னு

சொல்ற பொண்டாட்டிய

கண்ணால பாக்கணும்

எல்லா கணவன் மார்களுக்கும்

அடிமனத்தில் ஆசை

செவியுற்ற பிரமன் சொன்னார்

முயன்று முயன்று தோற்றுப்போனேன்

சாத்தியமில்லை விட்டு விடு

வேறேதேனும் ஆசைப்படு.

 

17. வந்தே பாரத் ரயில்

 

பள பளா வந்தே பாரத்

ரயில் பார்த்து சந்தோஷப்பட்டேன்

பச்சைக்கொடியும் சிவப்புக்கொடியும்

பெரிய பெரிய மனிதர்கள்

வைத்திருந்தார்கள்  கம்பீரமாக.

வண்டிக்கு பிரேக் வாங்கி பொருத்தாமல்

சந்தனப்பொட்டோடு

குங்கும அலங்காரம் மட்டுமே

வண்டிக்கு செய்த கதை

ஓரிசா விபத்தில் அம்பலமானது

மூன்று ரயில்கள் முட்டி சோகம்.

 

 

18 . தீராது நோய்

 

படேலுக்கு நூறு அடி சிலை

வேண்டாம்

ராமானுஜருக்கு நூறு அடி சிலை

வேண்டாம்

வள்ளுவருக்கு நூறு அடி சிலை

வேண்டாம்

விழுப்புரத்தில் சாதிச்சண்டையில்

மண்டை உடைந்தது

கோவிலுக்கு சீல் வைத்தார்கள்

அம்மனுக்கு சிறை

மனம் செம்மையாகாமல் மார்க்கம் ஏது?

 

19. வித்தியாசமாய்

 

பழையனக் கழிதலும்

புதியன புகுதலும் ஆகிப்

போகியும்  வந்தது

பொங்கலும் வந்தது

உழவர் திருநாள் அல்லவா இது

தமிழரின் பெருமைமிகு

விழாநாள்

உழைப்புக்கும் நட்புக்கும்

மெருகு சேர்க்கும் நந்நாள்

கால்நடைச்செல்வமாம்

மாடுகளுக்கு விவசாயி

நன்றி சொல்லும் பொன்நாள்

ஆடவர்கள் தமிழர்களாய்த்தெரிய 

வேட்டி

உடுத்திக் கொண்டார்கள்

உள்ளூர் பூங்கா ஒன்றில்

பெண்களின் கும்மியும் கோலாட்டமும்

எல்லாமும்தான் அரங்கேறிற்று

நான் வசிக்கும் 

தெரு முழுவதும் பொங்கலுக்கு

அழகழகாய்க் கோலம் போட்டிருந்தார்கள்

ஏனோ ஹேப்பி பொங்கல்

ஆங்கில எழுத்தில்

எல்லார்க் கோலத்திலும்.

 

 

20. பொங்கலோ பொங்கல்

 

 

சுழன்றும் ஏர் பின்னது

உலகம் என்பார் வள்ளுவர்

எந்தத் தொழிலிலும்

இடைத்தரகர் மட்டுமே

கொழிக்கின்ற

பொல்லாக்காலமிது

முதலே போடாமல்

லாபம் சம்பாதிக்கத்

தெரிந்தவர்கள் முன்னணியில் நிற்கிறார்கள்

உழவன் கணக்குப்பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது

என்பது நிதர்சனம்

காளை மாட்டின் ஆண்மை அகற்றிய பின்தானே

 அது கொம்பு சீவி

ஏர்உழுது பிணையல் அடித்து வண்டி இழுக்கிறது

அதற்கு நன்றிக்கடனாய்

மாட்டுப்பொங்கல்

என்ன நேர்மையோ.

இந்தியா ஓர் விவசாயநாடு

எந்த உழவன் பாராண்டான்

நாமும் இங்கே கண்டோம்

விவசாயியாய் வேடமிட்டு

மேடைஏறியவன் பின்னேதான் மொத்தமாய் நாம்.

 

 

21. இராமலிங்கம் விடைபெற்றார்

 

 

பட்டுக்கோட்டை மு.இராமலிங்கம்

 இலக்கியச்சிறகு இதழ்

ஆசிரியர்.

 ஷைன்

என்னும் ஆங்கில இதழும்

அவர் நடத்தினார்

இதழ் பணியில் நான்

அவரோடு உடனிருந்தேன்

இன்று காலை அன்னார்

அமரரானார் பட்டுக்கோட்டை ராஜா

ஃபோன் செய்து 

அவர்

இறப்பைச் சொன்னார்

இராமலிங்கம் 

என் சஹிருதயர்.

எழுத்தாளர் வே.சபாநாயகம் வழி

எனக்கு நண்பரானார்

காதம்பரி 

மருத்துவர்அறிவுடைநம்பி

இன்னும் தஞ்சைத்தோழர்கள்

கீரனூர் ஜாகிர்ராஜா

தஞ்சைப் பிரகாஷ்

சுந்தர சுகன் என்னும்

நட்புவட்டத்திற்கு

என்னை அறிமுகப்படுத்தியவர்

பாசத்திற்குரிய இன்னொரு

நட்புப்பொக்கிஷத்தைக்

காலம் கொண்டு போனது

கண்கள் குளமாகின்றன

என் மனம் கனத்துப்போகிறது

 

 

22. அதர்மம்

 

இந்த மண்ணில் பிறந்த பெண்

பெரிய நிறுவனமொன்றில்

சி

லட்சம் லட்சமாய்ச் சம்பளம்

பெற்ற குழந்தையைக் கொன்று சூட்கேசில்

திணித்து சொகுசுக்காரில்

பயணம் போக முடிகிறது

கணவன் மனைவிக்குள்

சண்டை

 நீதிமன்றம் போனார்கள்

விவாகரத்தின் போது

நீதிபதி பெற்ற தகப்பனை

வாரம் ஓர் முறை

குழந்தையைப் பார்க்க

அனுமதித்துவிட்டாராம்

ஆகத்தான் இந்த விபரீத முடிவு

பெற்ற தாய் தன் குழந்தையைக்

கொன்றுவிட்டு

சட்டம் பேசுவதைப்பார்த்தபின்னும்

வானம் பொய்க்காமல் என்ன செய்யும்?

 

 

23 . நிற்க அதற்குத் தக

 

 

அவன் எழுத்தாளன்

அவ்வப்போது மொபைல்

வைத்துப் போட்டோ

எடுத்து எடுத்து 

மகிழ்ந்து

போகிறான்

தன் பெயரை அச்சில்காண

ஓயாது அலைகிறான்

விருதுக்குத்தன் பெயர்

சிபாரிசு ஆகாதா எனப்

பார்த்துப்பார்த்து

தூக்கம் தொலைக்கிறான்.

 மக்கள் போராட்டம் எதனிலும்

அவன் 

முன் கை எடுத்துப் போராடுவதே இல்லை

பெண்கள் சீரழிக்கப்படு வதற்கு எதிராய்க்

குழந்தைத் தொழிலாளர்கள்

உருக்குலைக்கப்படுவதற்கெதிராய் 

குடித்துக் குடித்து இளைய சமுதாயமும்

போதைப்பொருள் உபயோகித்து மாணவச்சமுதாயமும்

சிதைந்து போவதற்கெதிராய்

கற்பழிப்புக் கொலை செய்த

பதினோரு பேர் விடுதலை ஆனதற்கெதிராய்

சுண்டுவிரல் அசைத்திருப்பானா அவன்

திருக்குறளை விடாமல் படித்தான்.

அவனைக் கற்றபின் 

நிற்கத்தான் சொன்னார்

வள்ளுவர்

இந்த நிற்க  இல்லையே அது.

 

 

24.  நாய்

 

 

நாய்கள் குறைப்பது 

தலைவேதனை

நாய்கள் ஓலமிடுவது ரோதனை

நாய்களின் கண்கள்

பேய் பிசாசு மட்டுமில்லை

எமன் வருவதும்

பார்த்துவிடுமாம்

நாய் அழுகை மழை

வரப் போவதைச் சொல்வது என்பார் சிலர்

நாய்கள் தூரத்தில் இருந்தால் அழகு

கிட்ட வந்தால் இம்சை

பாதி மனிதர்கள் நாய்களோடு கூடவே

ஓடியும் வருகிறார்கள்

நாய் வளர்ப்பு மனிதபராமரிப்பை விடச்

செலவு பிடிக்குமாம்

அனுபஸ்வத்தர் சொன்னது

அடுப்பங்கரையில் மீந்திருந்த சோற்றை இப்போது

தெருச்சொறிநாய்

சாப்பிட மறுக்கிறது

நாய்களும் கூட ஜபர்தஸ்து

காட்டுகின்றன நம்மைப்போல.

 

 

25. காலம் மாறுது

 

பேனாவால் எழுதியிருந்தால்

என் பிள்ளைகளே படிக்கமாட்டார்கள்

தாத்தா காலத்து கிரய பத்திரத்தை

இன்றைய தலைமுறை

வாசிக்கவே மாட்டார்கள்

பேனாவை வைத்து எழுதுவது

என்பது விடைபெற்றுக்கொள்ள

மடிக்கணினி அவ்விடத்தை ஆக்கிரமித்தது

அகராதி இல்லாது படிப்பது சாத்தியமில்லை

என்பது போய்

கூகிள்  எஜமானர் இட்டபணி எல்லாமாய்

செய்துகிடக்கிறது

எழுத்துப்பிழை இலக்கணப்பிழை

எல்லாம் கணினியின் நிர்வாகமே

வாயினால் சொல்வதைக்

கணிப்பொறி 

டைப்

அடித்துக்காட்டுகிறது

ஜோராய் ஒரு மொழியில்

தருவதை பிறிதொரு

மொழியில் பெயர்த்துக்காட்டுகிறது

கணிப்பொறியே

 இனி கவிதைகள் எழுதும்

கவியரங்கம் நிகழ்த்தும்.

 

 

 

26. ரேஷன்கடை

 

கியா காரில் வந்திறங்கி

ரேஷன்கடை அரிசி வாங்கி

கறவை மாடுகளுக்கு வைக்கிறார்கள்.

பாமாயில் பாக்கெட்

 வாங்கி ஜோராய்த்

திருவிளக்குப் போடுகிறார்கள்.  

எனக்கு முன்னால்

க்யூவில் நின்ற ஆசாமி

பச்சரிசியும் புழுங்கலரிசியும்

ஒரே  சாக்குபையில் வாங்க

ஏன் அப்படி ? கேட்டேன் நான்

மாட்டுக்குத்தானே அது

பதில் தந்தார்

ரேஷன்கடைக்கு வரும்

அரிசியில் பாதியை அவர்களே எடுத்துக்கொள்கிறார்கள்

எங்கெல்லாம் போகிறதோ அது 

யாரறிவார்

வாங்காத அரிசிக்கு வாங்கியதாய்க்

குறுஞ்செய்தி கட்டாயம் வரும்.

மத்திய மாநில நிர்வாகங்கள் கண்களை மூடி

 கனா மட்டுமே காண்பார்கள்

அவ்வளவே.

 

 

 

27. எங்கே போகிறோம்.

 

 

வார இதழ் விகடனுக்காய்

கல்கிக்காய் துக்ளக் கிற்காய் தெருவாசிகள்

க்யூ கட்டி நின்ற காலம் இருந்தது

மனநலம் கெட்டு  

வேலை தொலைத்த ஹெட்மாஸ்டர் மனைவி

வீதியில் பிச்சைக்கு வருவாள்

கல்கி மட்டும் கடனாகக் கேட்டு

 வீட்டு வாசலில் குந்திப்

படித்து விட்டுப்போவாள்

புத்தகம் படிக்கும் பழக்கத்தை சின்னத்திரை

விழுங்கிப் போயிற்று

வாட்ஸ்ஆப் அதனோடு ஜோடி

சேர்ந்து கொண்டது

பள்ளிப்

 பாடங்கள் படிப்பதுவோ

மதிப்பெண்ணிற்காக மட்டுமே

 யாருக்கும் ஐயமில்லை.

வாழ்க்கைப் பாடத்திற்கான

ஆசான்கள்  எங்கோ தொலைந்து போயினர்

 

28 .எழுத்து

 

மலை மலையாய்
எழுதுகிறார்கள்
பிரமித்துப்போகிறோம்
யதார்த்தத்தில் எப்படி எல்லாமோ வாழ்கிறார்கள்
சிலர் இலக்கிய மகுடம்
பெறுகிறார்கள்
ஆயின் என்ன?
அவர்கள் மீது மதிப்பில்லை
எனக்கு
எழுதிய வண்ணம்
கிஞ்சித் தேனும் வாழ்ந்து காட்டினால் வாழ்த்திப்
பாராட்டலாம் வணங்கி
மகிழலாம்.
திறமையும்
ஆற்றலும் உச்சத்தில்
இருப்பதால் மட்டும் என்ன
அடுத்தவனுக்கு நல்லன
சாதிக்க பயன்படுகின்றனவா
என்பதே மனிதனை அளக்கும் அளவுகோல்.
எதிரில் இருப்போரை
தூசாக மதித்து விட்டு
ஆயிரம் எழுதி என்ன ஆவதற்கு ?
இவை பித்தலாட்டங்கள்

சுயநலத்திற்குப்பற்பல வேடங்கள்
கண்முன்னே அலுத்துக் போகிறது நடப்பு.
மனிதனாய் வாழாதவன்
பேனாவை கீழே போட்டால் உலகம் உருப்படும்

  

29. யாதானும் நாடாமால்

 

இந்த மண்ணில்

படித்துப் பட்டம் வாங்கி

வேலைதேடி

அமெரிக்கா போனால்

அங்கேயே தங்கியும் விடுகிறார்கள் நிரந்தரமாய்

பிறந்த பொன்நாடும்

செப்பிய செந்தமிழும்

தூரம் போய்விடுகின்றன

அடுத்த தலைமுறையோ முற்றுமாய்

இற்றுக்கொண்டு விடுகிறது

வள்ளுவர் சொன்னாரே

யாதானும் நாடாமால்

 ஊராமால் என்னொருவன்

சாந்துணையும் கல்லாதவாறு

அது இது தானோ.

 

30.  மக்களாட்சியைத்தேடு.

இலங்கை தேசத்தில்                                     
சகோதரத்தமிழர்கள்
கொல்லப்பட்டார்கள்
லட்சக்கணக்கில்.
ஆப்கனில் நடந்தேறிய
அடாவடித்தனம் உலகறியும்.
ரோஹிங்யா முசுலிம்கள்
ஆயிரம் ஆயிரமாய்
துரத்தப்பட்டார்கள் புத்த
பர்மாவிலிருந்து.
உக்ரைன் ரசியா ஓரினம்
முடிந்தபாடில்லை இன்னும்
போர்.
லட்சம் போர்வீரர்கள்
சாம்பலாயினர் மொத்தமாய்.
மணிப்பூரில் மனித உடல்கள் கேட்பாரற்றுக்கிடக்கின்றன
பிணக்கிடங்கில்

.
சீன நீர்மூழ்கிக்கப்பலில்
வேவுபார்த்த அய்ம்பது விஞ்ஞானிகள்

 ஜலசமாதி   ஆனார்கள் அண்மையில்.
ஆரம்பமாகிவிட்டது
இஸ்ரேல் ஹமஸ் சண்டை
யூதர்களும் இசுலாமியர்களும்
செத்துப்போகிறார்கள் அன்றாடம்
பிணங்களை எண்ணி எண்ணிக்

 கணக்குக் தருகின்றன மீடியாக்கள்.
துப்பாக்கிக் குண்டுகள்
விற்றால் போதுமென
பெருமுதலாளிகள் இருக்கிறார்கள்
அவர்கள் அள்ளிப்போடும்
பிச்சைக்காசில்
தேர்தல் மகோற்சவம் நடக்கிறது.
எந்த நாடானாலும் என்ன
வல்லவன் முன்னே
நல்லவன் மண்டியிட்டபடி
இது என்றைக்கும்தான்.
வல்லவனே நல்லவனாய்
இருப்பது
புராணங்களில் மட்டுமே.

 

 

31. மாற்று ஆள்

காம்பவுண்டு சுவர் எழுப்ப
பீகார்க்காரன்
வெள்ளை அடிக்க அஸ்ஸாமி
ஜல்லிபோட
ஜார்கண்ட் காரன்
சலூன்கடைக்குப்போனால்
சப்பைமூக்கு நேபாளி
சாப்பிட ஓட்டலுக்குப்போனால்
கல்தோசைபோடவும்
கல்லா அமரவும்
ஒரியாக்காரன்
எக்மோர் ஸ்டேஷனில்
ஸ்பானர் கொரடாவோடு
வங்காளி
மெட்ரோவுக்கு குழிவெட்ட
சிவப்பு பட்டையோடு
உபிகாரன்
ரயில்வே சிப்பந்தியில்
தமிழ் பேசுபவன்
தடைசெய்யப்பட்டு
ஆண்டுகள் எத்தனையோ
வங்கியில் இங்கொன்றும்
அங்கொன்றுமாய் தமிழ்
தெரிந்த கிளார்க்குகள்
நண்பனைக்கேட்டேன்
நம்ப ஆட்களை
எங்கேயும் காணோமே
ஏனப்பா?
விடை சொன்னான் நண்பன்
துபாயில் சிங்கப்பூரில்
கனடாவில் யூகேயில் ஈரோப் ஆஸ்திரேலியா
அமெரிக்காவில் என
குப்பை கொட்டுகிறான்
தமிழன் என்றார்.
சுமங்கலிப்பெண்டுக்கும்
பிராமணார்த்தத்திற்கும்
கோவில் பூசைக்கும்
மட்டுமே
அதே அய்யர்கள்
அதே மாமிகள்
மாத்தாளே வரக்காணும் இன்னும்

 

 

32. ராசி

சென்னையில் மீண்டும்
வெள்ளம் என் வீட்டிலும் தான்
ஆராயிரம் ரூபாய்
அரசு தருதிறதாம்
வந்திருக்கிற லிஸ்டில்
என் பெயரில்லை
ஏன் இல்லை அதுதான்
யாருக்கும் தெரியாது
விண்ணப்பம் எழுதிக்கொடுங்கள்
என்றனர்
அது எங்கே கிடைக்கும் என்றேன்
சில கிலோமீட்டர்களுக்கு அப்பால் விலாசம்
தந்தார்கள்
அவ்விலாசம்
சென்றேன் தேடினேன்
கொடுப்பவர்கள் வரவில்லை என்றனர்
விண்ணப்பம் பெறுபவர்கள் மட்டுமே வந்திருந்தனர்
நாளை அவர்கள் வருவார்களா?
நாளை வந்து பாருங்கள்
பதிலாய் வந்தது
எது எதை வைத்து
எப்படி எழுதிக் கொடுக்க
வேண்டுமோ அப்படிக் கொடுத்தால்
வருமோ அது.
எதுவும் எளிதல்ல
என்னைப் பொறுத்தவரை.
வெள்ளம் நேர்படத்தான் நடந்து
கொண்டது
அதற்கு வஞ்சனையே
இல்லை.
கும்பத்திற்கு இன்று சனி வந்திருக்கிறான்

 ஆக அப்படித்தான் என்கிறாள்
அவள்.

 

 

33. அன்றும் இன்றும்

எழுபதுகளில் எழுத்தராய்
தொலைபேசிச் சேவையில் சேர்ந்தபோது
மாதம் முந்நூறு ரூபாய் சம்பளம்
ஒருமாத சம்பளத்தில்
ரெண்டு சவரன் தங்கம்
வாங்கலாம்
டெல்லிக்கு கால் மூன்று நிமிடம் பேச அறுபது ரூபாய்
மூன்று மணி காத்திருப்பு
பர்டிகுலர் பர்சனல் காலானால்
இன்னும் முப்பது ரூபாய்
கூட்ட வேண்டும்
மாதம் மூன்று டிரங்க்கால்
டில்லிக்குப்பேசினால்
மாத சம்பளம் காலி
ஓவர்சீஸ் கால் பற்றி
பேசவே கூடாது
நீண்ட நீலக்கவர் ஒன்றே வழி
இன்று அமெரிக்காவில்
படிக்கும் பேத்தியோடு
மணிக்கணக்கில் பேசுகிறான் காசில்லை
ஆயிரம் கடிதங்கள்
ஆயிரம் விலாசங்கள்
உலகெங்கும் அனுப்பினாலும்
கட்டணமில்லை
தகவல் துறையில் மட்டும்
இவ்வதிசயம் எப்படிச் சாத்தியம்
செல்பேசி இணையதளம்
வழங்கிய விஞ்ஞானிகளே
அத்தனையும் சாத்தியமாக்கிய
சாதனையாளர்கள்
என்றேனும் ஒரு கணம் நினைப்போமா நாம்.

 

34 . புத்தகக்காட்சி

 

புத்தகக்கண்காட்சி
வரவிருக்கிறது சென்னையில்.
ஆயிரம் அரங்குகளில்
புத்தகம் விற்பார்கள்
ஒவ்வொருவரும் தமக்கென்று
நான்கு அரங்குகளைத்
தேர்வு செய்யுங்கள்
போதும் அதற்கே நேரம்
சரியாக இருக்கும்.
நான்கு நண்பர்களைச்
சந்தியுங்கள் அதுவே போதும்
மீறினால் நட்பு நீர்த்துப்போகும்
சில அரங்குகளைக்
கண்களை மூடிக்கடக்கலாம்
சில அரங்குகளை விட்டு
வெளிவர மனசே வராது
ஆனால் வருவோம்.
திருவேறு தெள்ளியராதலும் வேறு.
பணம் செலவாக செலவாகக்
கையில் வாங்கிய புத்தகங்கள்
எடை கூடும்
அட்டை மட்டுமே அழகாக இருக்கும் புத்தகம்
தலைப்பு மட்டுமே அழகாக
இருக்கும் புத்தகம்
முதல் அத்யாயம் மட்டுமே
நமக்குப்பிடிக்கும்
புத்தகம்
இப்படி இப்படி
முழுவதும் சிறப்பாய்
இனிதான் எழுதுவார்கள்.
வாங்கிய புத்தகங்களை
வீட்டுக்கு வந்து பார்த்தால்
ஏற்கனவே அதனை இருமுறை வாங்கி ஓரமாய்க்கிடக்கும்.
நுழைவு டோக்கனை
விலாசம் எழுதி பெட்டியில்
போட்டு ஆனந்தப்படாதீர்கள்
எனக்குத்தெரிந்து பரிசு
பெற்றவர்களை நான்
கண்டதே இல்லை.
யாரேனும் பதிப்பகத்தார்
ஃப்ரீ டோக்கன் இதோ சாப்பாட்டுக்குப் போங்கள்
என்றால் போகலாம்
சந்திராஷ்டமம் உங்களுக்கு.
நூலரங்கிற்குச் செல்லுமுன்

 பழைய புத்தகக்கடையில் எப்போதேனும்
அரிய புத்தகங்கள் முன்னோர் விட்டுச்சென்றது

நம்மை ஈர்க்கலாம்.
ஆயிரம் கொனஷ்டைகள் சொல்லலாம்
ஆனாலும்
புத்தகக்கண்காட்சி
அழகுதான் போங்கள்.

 

35. வீடு வாங்கணும்

சென்னையில்தான்
வீடொன்று வாங்கணும்
என்றான் பையன்
இரண்டாயிரத்து பதினைந்து வெள்ளம்
வந்த ஏரியா வேண்டாம்
இடுகாட்டுக்குச் சவம் போகும் தெரு வேண்டாம்
தெருவின்கடைக்கோடி
வீடு வேண்டாம்
சிஎம்டிஏ அப்ரூவல்
கட்டாயம் வேண்டும்
தண்ணீருக்கு போரும்
கழிவுநீர்ச் சாக்கடையும்
சரியா இருக்கணும்
வீட்டு வாசலில் டிரான்ஸ்ஃபார்மர்
நிற்கக் கூடாது
வீடு கட்டிப் பத்து வருஷத்துக்குள் இருக்கவேணும்
சொத்து டாகுமென்ட்
வில்லங்கம் இல்லாம இருக்கணும்
அடிமண் ரெண்டாயிரம் சதுர அடி
டயூப்லெக்ஸ் வீடு கூடாது
வாசப்படி வடக்கு பாத்து இருக்கணும்
சந்துகுத்து தெருக்குத்து
வேணவே வேணாம்
பக்கத்துல பஸ் ஏற எறங்க
சவுகரியம் இருக்கணும்
பள்ளிக்கூடம் ஆஸ்பத்ரியுந்தான்
வீட்டுக்கு நெருக்கமா
சரச்சோ கோவிலோ
கூடவே கூடாது
இன்னும் சில சொன்னான்
கொஞ்சம் பாருங்களேன்
என்றான் பவ்யமாய்.
எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்
எது கொஞ்சம்?

 

36. செல்லம்மாவுக்கு

 

செல்லம்மாவுக்குச் சிலை
வைத்தார்கள்
கடையத்தில்
சமீபமாய்
கொண்டாடினார்கள்
கடையத்துச் சனங்கள்
தாழ்த்தப்பட்டோனைப்
பாரதி
தன் தெருவழியே கூட்டிவரத்
தீட்டுப் பட்டுவிடும் தெருவெல்லாம்
ஜாக்கிரதை எச்சரித்தார்கள்
கழுதையொன்றை
அடுத்த நாள்
கழுத்தில் கைபோட்டு
நடத்திவரப்
பைத்தியக்காரா போ என்றார்கள்
கழுதை வரலாம் தெருவழியே
ஓர் மானிடன் வந்தால்
தீட்டாமோ தெரு?
பாரதி வினா வைத்தான்
அக்கிரகாரத்தில் ஏதிடம் உனக்கு?
கடையத்து அவாள்கள்
அடித்தார்கள் துரத்தி
கடையத்து மலையடிவார
ஆலமர நிழல்
படுத்தக் கவிஞன்
ஞானப் பாடல்கள் தந்தான்
என் செய்வாள் அவள்
ஊரே பேசியது கேலி
வேளைக்குச் சமைத்து
கணவனுக்கு அது கொடுத்து
மீள்வாள் செல்லம்மா
மாகவிக்கு வாக்கப்பட்ட
சகோதரி சந்தித்த சோதனைகள் ஏராளம்
துணைவியை ஓர் நாளும்
சீ என்று சொல்லாத
பாரதி அன்புமலை.
மாகவிஞன் வயிற்றுப் பசிக்குச்
சோறிட்ட செல்லம்மா
நினக்கு
சொக்கத் தங்கத்தில்
எழுப்பலாம் சிலை.

 

37 .எதிர் வீடு

 

 

எதிர்வீடு ரொம்ப நாளாய்ப்
பூட்டிக்கிடந்தது
வாடகைக்கு யாரும் வரவில்லை
நாய்களும் பூனைகளும்
இணங்கிப் பிணங்கி உறங்கின
நேற்று எதுவோ ஒரு குடும்பம்
லாரிச் சாமான்களோடு
அந்த வீட்டிற்குள் புகுந்தது
வீட்டு ஓனருக்கு நிம்மதி
மழைச்சற்றுக்கூடுதலானால்
வீதித்தண்ணீர் உள்ளே வரும்
நமக்கேன் பொல்லாப்பு
நான் ஒன்றும் சொல்லவில்லை
வாடகைக்கு வீடென்று
ஊரெல்லாம் சுற்றி
கடைசியாய்க்கிடைத்த வீடு
போதுமென அவர்கள் வருகை
நாய்களும் பூனைகளும்
நடுத்தெருவில் சீற்றத்துடன் அழவும் செய்தன
அறிவுஜீவிப் பாம்பு
அழைத்தது அவைகளை
அமைதியாய்ச் சொன்னது
சும்மா கிடக்கவா கட்டியவீடு
மனிதர்கள் குடிபுக வேண்டும்
மனிதர் வர மாடுவரும்
ஆடு வரும்
அரிசி வரும்
பருப்பு வரும்
எலிகள் வரும் பூனைக்காகும்
கழிவுநீர்தேங்கும் தவளை வரும்
பாம்புக்காகும்
சோறு மீதப் படும் நாயுக்காகும்
சூழல் நின்னை ஆள்வதா
சூழலை நீ ஆள்வதா
உபதேசித்த பாம்பு நழுவிப்
போயிற்று புற்றுக்குள்
நாய்களும் பூனைகளும்
ஒன்றையொன்று பார்த்துக்கொண்டன
பிரமித்துப் போய்.

 

 

38. சமத்துவம்

 

சாதாரண குப்பனும் சுப்பனும் எத்தனைக்குப்

புழுவாய்ச் சுருக்கிக்கொள்கிறார்கள்

என்பதைக் கண்முன்னே

காண்பீர்கள்.

நீதிமன்றங்கள் நிகழ்போது

போய்ப் பாருங்கள்.

ஆண்ட அரசர்கள்எல்லாம்

இல்லாது போக

இம்மண்ணில் எப்படி

நீதித்துறையில் மன்னர்கள்

அவதரித்தனர் விந்தையாய்.

நீதிமன்ற வளாகத்தில்

நீதி அரசர்கள் நடைபோது

பெரிய பெரிய அட்வகேட்டுக்களே

சுவரோடு பல்லியென

ஒட்டிக்கொள்வதைத் தரிசியுங்கள்.

நீதிபதியின் இருக்கைக்கு

நேராய் கடந்து செல்லும்

யாவரும் முதுகை நெளித்து வளைத்துக் கொண்டு போகும் 

காட்சி காணுங்கள்

எல்லோரும் ஓர்நிறை

எல்லோரும் ஓர் விலை

எல்லோரும் இந்நாட்டு மன்னர்

இசையோடு பாடுங்கள்

அதில் குறை வைக்ககாதீர் எப்போதும்.

 

 

39.  பெண்டிரை மதிப்போமா.

 

 

பாரதி மாகவி சொன்ன சொல்

பாதகம் செய்பவரைக்கண்டால்

பயங்கொள்ளாதே நீ

காரி உமிழ்  அவர் முகத்தில்

போது மிதி

சாத்தியமாகிறதா இன்று

கற்பைச்சூறையாடும்

எத்தனைபேர் ஆட்சியின் அங்கமாய்

ஆகப்பெரிய பதவி வகிப்போராய்

பவனி வருகிறார்கள்

பல்லக்கில்.

உலக மேடையில் நாட்டின்

கவுரவத்தைக் கூட்டிய சோதரிகள்

பதக்கத்தை வீசி எறிகிறார்கள்.

தாம் கீழ்மையாய் நடத்தப்பட்டதற்குக்

கண்ணீர் விடுகின்றனர்.

பெண்மையை காலால் மிதித்துவிட்டு

காரியம் பார்க்கிறவர்கள்

கடவுளையும் கேலி பேசுகிறார்கள்

மகுடம் சூட்டிய மகாராசா என்கிறார்கள்

பூவுலகில் வாழத்தகுதியற்ற புல்லர்கள்.

 

40. சூட்சுமம்

 

தெரியாதவர்க்கு அகங்காரமாய்

தெரிந்தவர்க்கு இறையாய்

அகப்படா விஷயமொன்று

எப்போதும் இருக்கவே செய்கிறது.

எத்தனை வேகமாய் எழுதினாலும்

எத்தனை வேகமாய்ப்

பேசினாலும் பிடிபடா ஒன்று சாசுவதமாய் 

கூடவே இருக்கிறது நின்னோடு.

அகப்படா அது

எப்போதும்

நகைக்கிறது

அத்தனையும் வென்று.

 

 

41. தெரிவார்

 

 

வாய்மை உண்மையொடு

கேள்வி அமைதி

அய்ம்புலனடக்கம்

மனவடக்கம்

வறியார்க்கு ஈதல்

தியானம்

நற்செயல்கள் இவை

அத்தனைக்கும் மணமுண்டு

ஒளியுண்டு நாவுண்டு

யாரே தெரிவார்

 வினா வைத்தால்

தெரிந்தவர் தெரிவார்

 இதை

என்பதே விடையாய்.

 

42 . தலைப்பு

 

 புத்தகத்திற்குப் பெயர்

வைப்பதில்

எத்தனையோ இருக்கிறது

ஒரு சொல் சரி

இரு சொல் தேவலாம்

மூன்று சொல் கூடாது

அபசுரம் வரக்கூடாது

கர்நாடகமாய்த் தோன்றக்கூடாது

புத்தகம் சொல்வது தலைப்பில் புலப்பட வேண்டும்

மை எக்ஸ்பிரிமென்ட வித் ட்ரூத்

தேசபிதா காந்தி தந்தார்

பின்தொடரும் நிழலின் குரல் 

ஜெயமோகனின்

எழுத்துக்கொடை

என்ன சொல்கிறோம்

என்பதே பிரதானம்

தலைப்பில் ஒன்றுமில்லைதான்.

 

 

43.  நேரு கெட்டிக்காரர்

 

பாரதபூமியில்

மொழிவாரி மாநிலம்

பிரித்ததால்தான்

திராவிடம் சிதைந்து போனது

பொதுவுடமைக் கட்சி தெற்கில் சுருங்கிச் சிறுத்தது

இந்தி பேசும் மாநிலங்கள்

தாமே சட்டாம்பிள்ளையெனத்

துருத்தித் திரிகின்றன

கன்னடக்காரர்கள்

மொழிவெறிபிடித்து

ஆட்டம் போடுகிறார்கள்

மொழிவாரி மாநிலம்தான்

சரியென்றால் ஏன்

தெலுங்கு பேசுவோர்

மாநிலத்தை இரண்டாய்ப் பிரித்தார்கள்

புதுச்சேரியில் தமிழ்தானே

ஏன் நம்மோடு ஒட்டமுடியாமல் நிற்கிறது

கவிதையில் விடை தாருங்களேன்

யான் ஐயம் தெளிவேன்.

 

44. ஜல்லிக்கட்டு

 

தமிழ்மண்ணில் ஜல்லிக்கட்டு

பொங்கல் முடிந்து வரலாம்

மய்ய  அரசும் நீதிமன்றமும்

பச்சைக் கொடி காட்டி ஆயிற்று

ஜல்லிக்கட்டுச் செல்கிறது 

அதன் ராஜபாட்டையில்

ஜல்லிக்கட்டில் மாடுமுட்டி

காயமடைந்தோரை

இறந்தோரை

 யாரும்

பேசுவதில்லை 

அவர்கள் மறக்கப்படுகின்றனர்

மாடுகள் விடும் கண்ணீர்

பற்றி யாரும் வாய்திறப்பதில்லை

காளையை அடக்கிவிட்ட

உனக்குப் பரிசு

காளை உன்னை வென்றாலும் பரிசு உனக்குத்தான்

காளைக்கு   எதுவும் இல்லை

ரொம்ப நாளாய்  எனக்கு ஐயம்

ஜல்லிகட்டுக்கு

 ஏன்

ஆண்கள் மட்டும்தானா?

 

 

45 .  ஜனநாயகம்

 

டிசம்பர் 13, ஈராயிரத்து இருபத்து மூன்று

டெல்லி பாராளுமன்றக்

கட்டிடத்துக்குள் பார்வையாளர்கள் யாம்

பொய் சொல்லி

நுழைந்த இரு அடாவடிகள்

கலர் புகை எழுப்பி

அதிர வைத்திருக்கிறார்கள்

பாரதமாதா கி ஜே கோஷம் வேறு

நான்கடுக்குப் பாதுகாப்பு

கேவலமானது

 தேசத்திற்கு தலைகுனிவு

எம்பி அதுவும்

 ஆளும்

கட்சிக்காரர் சிபாரிசாம்

ஒன்று வெளிச்சமானது

அத்தனைக்கு முக்கியமான

இடத்தில் செக்யூரிட்டி பணி

எத்தனைக்குத் தாழ்வாய்

ஏனிப்படி கேள்வி வைத்த

எதிர்கட்சி எம்பிக்கள் 

மொத்தமாய்

சஸ்பென்ஷன்

என்ன ஜனநாயகமடா இது

மக்களால் மக்களே மக்களுக்காகவா?

சாட்சியாய் செங்கோல் வேறு.

 

 

46.  கிறிஸ்துமஸ்

 

ஏழைகள் பால்

இரக்கம் காட்டு

மன்னிக்கப்பயில்

அன்பினைக் கை கொள்

தன்னைப்போல் பிறரைநினை

ஒரு கன்னத்தில் அறை வாங்கிய நீ

அவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு

அடுத்தவனுக்குக் கொடுக்காமல் நீ

எதையும் எடுத்துக் கொள்ளாதே

உபதேசித்த கருணையின்

உருவே யேசுவே

நீ பிறந்த நாளில்

வெட்கப்படுகிறோம்

அப்பாவி மக்களைக்கொல்ல

ஆயுதமே விற்றுக்காசு

பார்க்கிறவர்கள் நின்

சந்நிதியில். படோடோபமாய்க் குழுமி

நிற்கிறார்கள்

நீ பிறந்து ஈராயிரம்

ஆண்டாகியும்

இப்பூலகம் நேர்படவில்லை

நினக்கு வானுயர்

கோபுரங்கள் ஆயிரம் எழுப்புவோம்

அத்தோடு நிறுத்திக்கொள்வோம்

அதற்கு மட்டுமே நீ.

 

 

47. யார் கவிஞன்?

 

 

இறையை உணர்ந்தோன்

இயற்கையைப் போற்றுவோன்

உயிர்களை நேசிப்போன்

உண்மையே பேசுவோன்

உழைப்பை உயர்த்துவோன்

எளிமை ஏற்போன்

சண்டை சச்சரவு வெறுப்போன்

வன்முறைக்கு எதிரி

வருவது உரைப்போன்

பிறர் நலம் விரும்பி

நல்லதே நாடுவோன்

பேராசை அற்றோன்

பெருமை விரும்பி

குழந்தையை மதிப்போன்

பெண்மை போற்றுவோன்

மனசாட்சி பேணுவோன்

மக்களோடு நிற்போன்

யாரென்று கேட்பீர்

கவிஞன் அவனே.

 

 

48 .பிராப்தம்

 

அது ஒரு கனாக்காலம்

இளமை ஊஞ்சல் ஆடிற்று  அவன் என்னவெல்லாமோ

நினைத்துக் கொண்டிருந்தான்

என்ன என்னவோ ஆனது

சாண ஏற முழம்

சறுக்கிற்று

போட்ட கணக்குகளுக்கு

விடைகளோ தப்புத்தப்பாய்

யாரும் உதவிக்கு வரவில்லையே

எதிர்பார்ப்புகள் ஏமாற்றி

நகைத்தன

மனச்சோர்வு ஜீரணிக்கும்

ஞானமாவது கிட்டியிருக்கலாம்

சற்றேனும் ஆறுதலாயிருக்கும்.

எதற்கும்  ஒரு பிராப்தம்

வேண்டுமென்கிறார்கள்

விஷயம் தெரிந்தவர்கள்

 காலமோ எதனையும்

சட்டை செய்யாமல்

அதன் போக்கில் அது.

 

 

49 மொழிபெயர்ப்பு

 

 

இலக்கியப் படைப்பொன்றை

எழுதிவிடலாம்

மொழிபெயர்ப்போ

கடினமானது 

ஒரு படைப்பாளி

மூலமொழியில் வாசகர்க்குத் தந்ததை

வேறு ஒரு மொழியில்

மொழிபெயர்ப்பாளன்

கடத்தித்தர வேண்டும்

மூலமொழியின் பண்பாடும் அது புழங்கு

நிலவியலும்

அப்படைப்பாளியின்

ஆன்மாவும் வசமாகவேண்டும் முதலில்

தன் கருத்தை நுழைக்காது

மொழிபெயர்ப்பு விரதம்

காக்க வேண்டும்

மொழிபெயர்ப்புத்தான்

இதுவென வாசகன்

உணரவே கூடாது

படைப்பு நெஞ்சில்

நிறையவேண்டும்

மெய்யான வாசகன்

வாழ்த்துவான் மொழிபெயர்ப்பாளனை.

கா ஸ்ரீ ஸ்ரீ மராத்தியகாண்டேகரை

தமிழ் உலகில் நிலைக்கச்செய்தார்

மொழிபெயர்ப்பின்

உச்சம் அது.

 

 

50. செயற்கை அறிவு.

செயற்கை அறிவு
எங்கெங்கும்
செயலாற்றத் தொடங்கிவிட்டதாம்
கற்ற அனைத்து ஊறும் அறிவு
மனிதர்க்குத் தெரிந்த குறள்
இயந்திரங்கள் செயற்கை
அறிவோடு
செயல்கள் பல ஆற்றக்
காத்துக்கொண்டிருக்கின்றன
கவிதை எழுதுமாம்
மொழிபெயர்ப்பு செய்யுமாம்
புனைகதை படைக்குமாம்
பிரச்சனை என்னால்
விடை கொடுக்குமாம்
கணிப்பொறியில்
ரோபோ ஒன்று பிணையக் கிடைக்குமாம் செயற்கை அறிவு
மக்களிடை புரட்சி செய்யத்தான்
கைகட்டி நிற்கிறது அது
சிந்திக்க ஒரு இயந்திரம்
வந்த பின்
மனிதன் உச்சமாய் செய்ய
எதுவுமில்லை
மனிதன் சிந்திப்பதை நிறுத்தினால்
செத்துப்போவானே.

 


 51.ளிதல்ல இல்வாழ்க்கை

 

இப்போதெல்லாம்

மணமுறிவு சர்வ சாதாரணமாய்.

ஆண்களும் பெண்களும்

கூட்டம் கூட்டமாய்

நீதிமன்றங்களைப் பாருங்கள்

மனமுடைந்து போவீர்கள்.

ஏதுமறியா குழந்தைகள் தாம் 

பலிகடா ஆகின்றனர் பாவம்.

திருமணத்திற்கு முன்பாக

ஆணுக்கும் பெண்ணுக்கும்

குடும்பம் என்னும் 

ஒரு வகுப்பு கட்டாயம் வேண்டும்.

திருமணம் என்ன

 என்பதே

தெரியாமல் மணம் செய்து

முட்டிக்கொள்கின்றனர்

நீதி மன்றத்தில்.

யாரேனும் ஒருவர்

ஈகோ இல்லாமல் இருந்தாலொழிய இல்லற

வாழ்க்கையில்

 வெற்றி

சாத்தியமே இல்லை.

கல்யாணத்தில் சப்தபதி

என்னும் ஏழடி எடுத்து வைக்கும்

வைதீகச்சடங்கின் மந்திரத்தை

செந்தமிழில் சொன்னால்

எல்லோருக்கும் விஷயம் விளங்கலாம்

மனதில் அச்சம்

சற்றேனும் அரும்பலாம்.

 

52. கலிகாலம்

 

கார்ப்பரேட் என்ற ஒன்றைச்

சிருட்டித்து

லாபம் நஷ்டம்

நல்லது கெட்டது

எல்லாவற்றிர்க்கும்

பொறுப்பாக்கி முதலாளிகள் சவுகரியமாய்

ஒதுங்கி நிற்கிறார்கள்

திருமணம் என்கிற

புனித உறவைப் புறந்தள்ளி 

 நோ கிட்ஸ் நோ கிச்சன் குரூப்-

லைஃப் காண்ட்ராக்ட்- லிவிங்டுகெதர்

 என்று எது எதுவோ கொண்டுவந்து விட்டார்கள்

பெற்ற தாய் எனும் கடவுள்

ஸ்தானத்தை நீர்க்க வைத்துக்

கம்பீரமாய் வாடகைத்தாய்

 வழக்கத்திற்கு வந்தும்

விட்டது

முதியோர் இல்லத்தைக்

கேலி பேசிய காலம்போய்

அதுவே நல்ல தீர்வு என்னும் சகஜநிலை

வந்தாயிற்று

ஆண் விந்துவையும் பெண்முட்டையையும்

மருத்துவ வங்கியில்

சேமிக்கிறார்கள் எப்போதோ இறந்துபோன

தாயுக்கும் தந்தைக்கும்

வாடகைத்தாய் வழி வாரிசு

உண்டென்பது உறுதியாயிற்று

மரபுகள் நீர்த்துப்போகும்

கலிகாலம் கண்முன்னே

புலிவாலைப்பிடித்த நாயராய் நாம்.

 

53. குடிப்பழக்கம்

 

 

மக்கள் குடித்து அழிக்கிறார்கள்

மக்கள் குடித்து

அழிகிறார்கள்

கள்ளச்சாராயம் காய்ச்சிக்

குடிப்பதால் சாகிறார்கள்

வாய்மையே வெல்லும்

சொல்லும் அரசாங்கம்

சாராயம் விற்கிறது

கொள்ளை லாபம் பார்ப்பவர்கள்

தொடர்ந்து கல்லா கட்டுகிறார்கள்

தேசபிதா மகாத்மா

குடிப்பழக்கம் இல்லாத தேசத்தை உருவாக்க

ஆசைப்பட்டார் பாவம்

பரிதாபமாய்த் தோற்றுப்போனார்

குடிக்காத பெண்களை

மாநகரில் விரல்விட்டு

எண்ணிவிடலாம்

ஐடி தொழில் வந்தபிறகு

குடிக்கத்தெரியாதவன்

சுத்தப் பட்டிக்காடு

நஞ்சுண்பார் கள்ளுண்பவர் சொன்ன வள்ளுவருக்குக்

குமரிமுனையில்

வானுயர சிலை வைத்தாயிற்று

பிறகென்ன விடுங்கள்

 

54. லேசு  பட்டதில்லை மனசு

 

கோபம்தான் மனிதப்பிரச்சனைக்கு

மூலகாரணம்

கோபம் வாராமல்

தடுக்க முடிகிறதா

என்றால் அதுதான் இல்லை

தான் நினைப்பதுவும்

செய்வதுவும் மட்டுமே சரி

அதுபோல் அடுத்தவனுக்கும்

நினைக்க உரிமை உண்டென்பதை

ஏற்க மறுக்கிறது பாழும் மனம்

மனம் விசாலமாகத்தான்

கற்றதும் பெற்றதும்

கை கொடுக்க வேண்டும்

மாறாகத்  தான் என்கிற

கர்வம் மட்டுமே

கெட்டிப்பட்டால். துன்பமே

விஞ்சுகிறது

துன்பம் சுற்றி வளைக்கின்ற போது

இதற்குக் காரணம்  தானுமே

என்பதை

மனித மனம்

 லேசில்  ஏற்பதில்லை.

 

 

 

 

 

55. பாவம் சென்னை

 

மாற்றமே இல்லை

ஏமாற்றமே விஞ்சுகிறது

சென்னை மீது வைத்த

மதிப்பெல்லாம் பூச்சியமாகிறது

பெருமழையைத்தாங்கி

ஊரைக்காப்பாற்ற முடியாத

திட்டங்கள் சாமான்யனை

கண்ணீர் சிந்த வைக்கிறது

அது இது என்று பட்டியலிட்டுச் செய்தவை

எல்லாமே

எதற்கும் உதவவில்லை

பெருமழை வந்தபோது.

மார்கழி இசையும்

தை புத்தகக்காட்சியும்

சோகத்தோடுதான் இவ்வாண்டு.

வேறு என்ன செய்வார்கள்

உட்கார்ந்து சிந்திக்காதவர்கள்

ஓடிப்போகிறார்கள்

பிரச்சினையை

வழக்கம் போல்

மக்களிடமே விட்டு விட்டு.

 

 

 

 

56. மொட்டைத் தலையும்

முழங்காலும்.

 

நீர்வழிப்படூஉம் படைத்த

தேவிபாரதிக்கு

விருதென்றார்கள்

வாழ்த்துக்கள்  குவித்தார்கள்

அறிவிப்பு வரவில்லை என்றார்கள்

யாரது முந்திரிக்கொட்டை

சேதி எப்படி வெளிவந்தது

என்றார்கள்

இந்தக் களேபரத்துக்கும்

அந்தப்படைப்பாளிக்கும்

என்ன பொறுப்பு

அவரது தேர்வு தனி

குப்பைச்சலசலப்பு

ஒருவரது தேர்வை

எப்படிப்பாதிக்குமோ

அவ்விருதுக்குழுவும்

அதனியக்கமும்

அதுபுழங்கு வெளியும்

எப்போதுமே புரியாப்புதிர்தான்

அதில் யாருக்கும் அய்யமே இல்லை.

 

 

 

57. அவர்கள் நியாயம்

 

 

 

 

கைரேகை வைத்துத்தான்

பொருள் பெறவேண்டும்

அந்த வக்கணையில்

ஒன்றும் குறைவில்லை.

வீட்டில் ரெண்டுபேர்

இருவருக்குமே நீரிழிவு

அவர்களுக்கு ஏன் சீனிவிநியோகம்

ரேஷன்கடை அரிசிவாங்கி

மாட்டுக்கும் பன்றிக்கும்

போடுகிறார்கள்

எல்லோரும் அப்படியில்லை

நிச்சயம் பலர் செய்கிறார்கள்.

அரசுக்குத் தெரியாதா என்ன

ஆகத்தகுதியுடைய இல்லாதவனுக்கு

மட்டுமே அரிசி இனாம் 

அரசாங்கம் என்று சொல்வதுவோ?

வோட்டு எல்லோருக்கும்

இருக்கிறதே.

ரேஷன்கடை பாமாயிலை

சாமி விளக்குக்குப்பயன்

படுத்துகிறார்கள்

யாருக்குத் தேவையோ

அவர்கட்கு அதுபோய்ச்சேர்வது இல்லை.

ஒருவரின் வருமானம்தெரிந்து

அவருக்கு இலவசமாய்

அரிசி தருகிறதா அரசாங்கம்

இல்லவே இல்லை

மக்கள் வாங்காத அரிசி

மொத்தமாய் எங்கோ போகிறது

எத்தனைக்காலமாய்

இப்படிக்கொள்ளை.

அரசு தரும் ஆயிரம் ரூபாய்

உரிமைத்தொகை பெறுவோரில்

பாதிபேருக்குமேல்

பித்தலாட்டம்.

மகாத்மாகாந்தி நூறுநாள்

வேலைத்திட்டத்துக்கு

இன்னொரு வடிவம் இது.

நாம் எவ்வளவோ கொள்ளை அடிக்கிறோம் இதெல்லாம்

ஜுஜுபி இருக்கட்டும்

என்பதுவே அவர்களின்

நியாயமாய்.

 

 

 

 

 

58. எது கவிதை?               

 

 

கலைகளில்  கவிதை தனித்தது

கஷ்டம் வரும்போதுதான்

கவிதை வரும்

கிரவுஞ்சப்பறவையின்

ஆண் துணை அம்பு எய்தப்பட்டு

அழிந்ததைக்கண்டுதான்

மலர்ந்தது வான்மீகி ராமாயணம்

பூவுலகில் அதை மீறிய காவியம்

இன்றளவும் இல்லைதான்

காவியங்களில் துன்பவியல் பாராட்டப்படுவது

மனிதச்சோகம்தான் கவிதையின் ஊற்றுக்கண்

மெய்யாய் கவிதை எழுதுபவர்கள்

குஷிப்படுத்தவோ கும்மாளமடிக்கவோ எழுதவில்லை

கண்ணீர்ப்பூக்கள் கவிதை வரிகள்

படைப்பாளி அறியாததுவா என்ன?

குந்தியின் சோகம்தான்

வியாசனின் பாரதம்

கஷ்டத்தில் மலர்வதுதானே கவிதை.

 

 

59. பாரதி

 

பாரதிக்கு எதிராகக் கலகக்குரல்
கொடுக்க முடியாத அளவுக்கு
புகழின் எட்டாச்சிகரத்தில்
அவன் எப்போதும் வாழ்கிறான்
தமிழ்த்தாயின் ஆசீர்வாதம்
நிறைவாய் உண்டு பாரதிக்கு.
சிந்தையில் பாரதியோடு
வாழ்ந்தவர் சி
பாரதியை நாவில் சுமந்தார் .ரா.
பாரதியைத்தோளில் சுமந்தவர் ஜீவா
பாரதியின் சொற்கள் அத்தனையும் வழிமொழிந்தார் பாவேந்தர்
இவர்களோடு ஓராயிரம்
உத்தமர்கள் அவனோடு
வாழ்ந்தது அவனுக்கு க்கிட்டிய வரலாற்றுப்பேறு.
இன்றைய சேற்று அரசியலும் சோற்று அரசியலும் அன்றில்லை
அது மாற்றுக் குறையா
அரசியல்
மனசாட்சி உள்ள மறவர்களின்
மாற்று அரசியல்.

 

 

 

60. சென்னை 2023

 

என்னவெல்லாமோ செய்தார்கள்
அடையாற்றை ஆழப்படுத்தினார்கள்
கட் அண்ட் கவர் கால்வாய்
அமைத்தார்கள்
ஆற்றின் கரையை
உயர்த்தினார்கள்
புதுப்புது ஷட்டர் அமைத்தார்கள்
சிமெண்ட் சாலை போட்டார்கள்
வண்ணமடித்தார்கள்
இரும்புக் கம்பி வேலி போட்டார்கள்
விளம்பரப்பலகை வைத்தார்கள்
கோடிகோடியாய்ச் செலவு
செய்தார்கள் .
மிக் ஜாம்
புயல் வருகை
போயிற்று
எல்லாம் .
தெருவில் இடுப்புவரைத் தண்ணீர்
வீடுதரைத் தளமெல்லாம்
சாக்கடைத் தண்ணீர்
மின்சாரம் இல்லை
குடிதண்ணீர் இல்லை
போக்குவரத்து
வசதியில்லை மக்கள் தத்தளிக்கிறார்கள்
வீடு கட்டாதே இங்கு
சிஎம்டிஏ சொன்னதுண்டா
இங்கு வீடு வாங்காதே
எந்த வங்கியும் சொன்னதில்லை
யார் சந்தி சிரித்தால்
இவர்களுக்கென்ன?
கொண்ட ஆசைக்கும்
வாங்கும் சம்பளத்திற்கும்
இடையே போராடித்தவிக்கும்
சிறு துரும்பாய் எளிய மனிதனின் வாழ்க்கை
எப்போதும்.

 

61. தலைகீழாய் உலகம்

 

சென்னையில் இடம் வாங்கி

வீடு கட்டிய லடசணத்திற்கு

இராப்பகலாய்த்தூக்கமில்லை

இரண்டாயிரத்து பதினைந்தை

எங்கே மறப்பது

இப்படியாய் நான் யோசிக்கும்போது

இரண்டாயிரத்து இருபத்து மூன்று வெள்ளம் வந்து

கொன்று போட்டது  சென்னையை

திருச்சிக்கு மாற்றலாம் தமிழ்நாட்டின் தலைநகரை

எம் ஜி ஆர் சொன்னபோது

அவரைக்கேலிபேசியவர்கள் நாம்

இட ஒதுக்கீட்டில் வருமானத்தை முற்போக்காய் எண்ணி

 இணைக்க விரும்பிய நல் மனத்தை

புதுவையில் தோற்கடித்தோம்

எந்தப்பாவமும் யாரையும்  சும்மா விடாது

முடிச்சூர் வீட்டை  நல்ல வெயில் நாளில் விற்றுவிட்டு

அரவம் தெரியாமல் வெளியூர் போய்விடலாம்

யோசனையில் தீவிரமாய் இருக்கிறேன்

ரியல் எஸ்டேட் பணிபுரியும்

இளம்பெண்கள் ஓயாமல் போன் போடுகின்றனர்

பாதி சென்னையும் வெள்ளத்தில் நாறுகின்ற தருணமே

சென்னையில் பிளாட் சார்’ 

நீட்டி முழக்கி முடிக்கின்றனர்

அவர்களுக்குச் சம்பளம் தருகின்றானே  ஒருவன்.

 

62. அழகிய சிங்கர் 70

கதைஞன் கவிஞன்
விருட்சம் வெளியீட்டாளன்
நவீன விருட்சம் இதழாளன்
சொல்புதிது இசைபுதிது
கண்டவன்
என்பா அவன் தந்தது
கவிதை நேசிப்பு
கவிதை வாசிப்பு
கதை அலசல்
அழகியசிங்கரின் தீட்சண்யவெளி
ஞானக்கூத்தனும்
அசோகமித்திரனும்
சாயாவனம் கந்தசாமியும்
உற்றத் தோழமை
எப்போதும் ஏதேனும்
புதிது செய்யத் தப்பாத
தமிழண்ணல்
எதையுமே மறைக்கத்தெரியாத மாசிலி
தேய்ந்த பற்கள் பளிங்கென உள்ளம் திறந்து காட்டும்.
சும்மா இருப்பதறியா பெம்மான்
எழுபதாண்டு கண்ட இளையோன்.
இன்புற்று வாழ்க
இப்புவியில் நூற்றாண்டு.

 


63. முரண்படுவோம் மார்க்ஸோடு.               

மதம் ஒரு போதை

மதம் நசுக்கப்பட்டவர்களின் அபயக்குரல்

மதம் இதயமற்ற உலகின் இதயம்

மதம் ஆன்மாக்கள் வீழிடம்

துளிர்க்கும்  புத்தான்மா

மார்க்ஸ்தான் சொன்னார்

மண்டையில் ஏற்றினோம்

அது மட்டுமன்று மதம்

மதம் அரசுக்கு எடுபிடி

மக்களை மதம் மயக்கத்தில் வைக்கும்

முதல்  ஆட்சி  செய்யும்

சொன்னார் மார்க்ஸ்

மதம் அரசுக்கு

முதலாகும் சொன்னாரா?

வாக்கு வங்கியை மதமே

நிரப்பும் சொன்னாரா?

முதலாளிகள் மதங்களை ரட்சிக்கிறார்கள்

மதங்கள் முதலாளிகளை ரட்சிக்கின்றன

செங்கோல் தாங்கும் கோமாளிகள் மட்டும்

மேடையில் மாறி மாறி

காட்சியாகிறார்.

 

 

64. தட்டச்சு புராணம்

 

வாட்ஸ் ஆப்பில்
தட்டச்சுப்பலகை
முந்திரிக்கொட்டை
நான் ஒன்று அடித்தால்
தான் ஒன்று அடிக்கிறது
நூலரங்கு என்று அடித்தால்
நூலகம் என்று போட்டுக்கொள்கிறது
அது பரவாயில்லை
யோக்கியவான் என்றடித்தால்
அயோக்கியவான் என்றும்
தாய் என்றால் நாய் என்றும்
எழுதிக் காட்டுகிறது
எத்தனை முறைத் திரையை
உற்று முறைத்தாலும்
எந்தத் தப்பேனும்
தப்பித்துக் கொள்கிறது
பளிச்சென்று நம்மை
நக்கல் அடிக்கிறது
ஒருவன் அடிக்க
இன்னொருவன் கவனிக்க வென்று
இருந்தால் தப்பலாம்
அது எப்படிச் சாத்தியமாகும் இப்போதைக்கு.
மதி என்று அடித்தால்
மிதி என்னும் அதைச்சதி
என்றே சொல்லலாம்
யோசித்தேன் அதற்குள்ளாய்
ரதி என்று போட்டுக்கொள்கிறதே அது.

 

 

 

65. அம்மா சொன்னது

 

என் வயதான அம்மா
சொன்னாள்
உனக்கும் வயதாகும்
ஒருநாள் தள்ளாமை வரும்
மருமகள் ஏதேனும் தின்னக்
கொண்டு தந்தால்
இப்போது வேண்டாம்
பிறகு கொடேன்
சொல்லிவிடாதே
வாங்கு அதனை உன் அருகில்
இருப்பில் வை
மறந்துவிடாதே
பசி எடுக்கும் உனக்கு
போனது எதுவும் திரும்ப வராது ஒருபோதும்.
எனக்கு அனுபவமானதை
உனக்குச் சொன்னேன்
பாக்கி இருந்தது
இது ஒன்று
அதையும் சொல்லிவிட்டேன்
பிறகு உன்பாடு
இல்லை திண்டாடு.

 

 

66. வெர்டிகோ

 

 

அது அதுவும் பட்டால்தான்
தெரிகிறது
சில தினங்களாய்
வெர்டிகோ அவஸ்தை
தலைச் சுற்றுகிறது
நடந்தால் தள்ளுகிறது
வாய் உமட்டுகிறது
ஏன் வருகிறது வெர்டிகோ
எப்போது போகுமிது
எதுவும் யாருக்கும் தெரியாது
மனிதனைச்சித்திரவதைக்கு
உள்ளாக்கி
கட்டிப்போடு
ம்
நோய்
வெர்டிகோ அன்றிவேறில்லை.
தமிழில் இதற்கு என்னபெயரோ
எந்த மொழி ஆனால் என்ன
வலிக்கும் நோவுக்கும்
ஒரேபாஷை
ஆளுக்கொன்றாய் வைத்தியம் சொல்கிறார்கள்
பாடாய்ப் படுகிறேன் நான்.

 

 

 

67. நிதர்சனம்

வருகிறது புயல்
மிக்ஜாம் புயல்
தொடக்கத்தில் சென்னைக்கும் மசூலிப்பட்டினத்திற்கும்
இடையே கூத்தாடி
வரும் என்றார்கள்
அப்புறமாய் அறிவியலார்
நெல்லூrருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும்
இடையே தான் அது என்கிறார்கள்
இன்னும் மாற்றங்கள் வரும் வரலாம்
இலங்கையில் காலூன்றி
புயல் தமிழ்நாடு ஆந்திரா ஒரிசா வங்காளம்
எனத்தாண்டித்தாணடி
வங்கதேசத்துக்கு
வழக்கமாய்ப் போவதுண்டு
இதற்குப்பின்னால்
அரசியல் எதுவுமில்லை
கார்ப்பரேட் சூழ்ச்சி இல்லை
ஆரியசதியோடு. அமெரிக்க
சதியுமில்லை
தீவிரவாதிகள் கைவரிசை
இல்லை
என்பதுமட்டுமே
நிதர்சனம்.

 

 

68. சின்னத்திரைக்குப்பின்னால்

 

சின்னத்திரைக் கலைஞர்களை

யாராவது நினைத்துப்பார்க்கிறார்களா?

அழுவதும் சிரிப்பதும்

அடுத்தவனோடு படுத்துச்சுகிப்பதுமாய்

நடிப்பதுவும்

உன்னையும் என்னையும்

மகிழ்விக்கத்தான்

தனது சொந்த வாழ்க்கையைச் 

சுட்டுச்சாம்பலாக்கி

அதில் கிடைக்கும் காசுக்காய்

தன்னையே விற்றுக்கொள்கிறார்கள்.

தம்மை ஊரே கொண்டாடுவதாய்

ஏமாந்து போகிறார்கள்

தலை நரைத்துப்பல்

விழுந்து கூனாகிக் குறுகி

கண்ணீர் விடுகிறார்கள்

தன்னந்தனியாய்.

மேடைக்கலைஞர்களில்

ஆண் எப்படியோ தப்பித்துப்போகிறான்.

அதுதான் பார்க்கிறோமே நடைமுறையில்

பெண்கள் எதை இழந்தார்கள்

என்பதை அறியவே மாட்டார்கள்

பளபளக்கும் ஆடை

வெளிச்ச வெள்ளம்

மயக்கும் இசை

சுற்றியும் ஆரவாரம்

கட்டுக்கட்டாய்ப்பணம்

உயரமான மேடை உல்லாசமான வாழ்க்கை

காரும் பங்களாவும்

வேலை ஆட்கள் பலரும்

மானுடப்பிறப்பு மட்டுமே பூச்சியமாய்.

 

 

 

69. அப்படியும் இப்படியும்

 

ஏக்கர் ஆராயிரம் என்று 

என்றோ வாங்கிய

நிலத்தைச்சதுரடி

ஆராயிரம் என்று விற்று

கோடி கோடியாய்

மூட்டை கட்டுகிறார்கள்

சிஎம் டி அப்ரூவலுக்கு

சமையல் கட்டொன்றுக்கு

முப்பதாயிரம் லஞ்சம்

என்று சம்பளத்தோடு  எந்த முதலும் 

போடாத அதிகாரிகள்

கோடி கோடியாய்ச் சம்பாதிக்கிறார்கள்

வீட்டுக்கு த்ரீ ஃபேஸ் வாங்க

ஈபி காரருக்கு லஞ்சமாய்

நாற்பதாயிரம் ஒரு இணைப்புக்கு

அலுவலக சம்பளத்தோடு 

அவர்கள் அள்ளிப்போகிறார்கள்

வீடு கட்டுவதற்கு . அடிக்கு

இத்தனை ஆயிரம் என்றுக்கணக்குப்போட்டு

கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள்

அய்ம்பது லடசம் கடனுக்கு

ஐம்பது லட்சம் வட்டியாம்

வங்கிக்கடனுக்கு இரவு பகலாய்ப்

படித்து மார்க்கு வாங்கிய இளைஞர்கள்

கண்காணாத தேசத்தில்

தேகம் அழிக்கிறார்கள்

கிழவனும் கிழவியும்

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு

வாங்கிய வீட்டுக்கு வாட்ச்மென்களாய்

வானம் பார்த்து

நாட்களை எண்ணுகிறார்கள்.

 

 

 

 

 

 

 

 

 

70. புதிர்

 

காகத்திற்குச் சோறு வைக்க

தினம் மொட்டை மாடிக்குப் போய்வருவேன்

படியேறி மேல் செல்ல

சோம்பேறித்தனம்

அதே காக்காய்க்கு

ஜன்னல் வழியாய்ப் போடலாமென

மாற்றிக்கொண்டேன்

எப்போதும்போல் கா கா என்றால்

அதே காகங்கள் வர மறுக்கின்றன

வருத்தம் என்னவோ

 அறிவார் யார்?

காக்காய்க்கு வைத்த சோறு

உண்ணாமல் காய்ந்திருக்க

நாயுக்கு அதை மடை மாற்றினேன்

நாய் உண்டு சமத்தாய்ப் போனது

சாப்பிடறதுக்கு முன்னாடி சோறு

காக்காய்க்கு வைக்கணும்

சாப்பிட்ட பின்னாடி சோறு

நாயுக்குப்போடணும்

அது அதுக்கும் ஒரு மொறன்னு இருக்கு

மொட்ட மாடிக்கே போய் வாங்க

சட்டமாய்ச்சொன்னாள் அவள்.

 

 

 

 

71.. என்னைத்தான்

 

ஜன்னல் துடைக்கமாட்டீர்

கதவுப் பூட்டுக்கு எண்ணெய் விடமாட்டீர்

ஒட்டடை அடிக்க மாட்டீர்

ஸ்டவ் க்ளீன் செய்யவும் மாட்டீர்

வாஷிங் மெஷினில் துவைத்த துணியை

காயவைக்கவும் மாட்டீர்

காய்ந்த துணியை எடுத்து

மடிக்கவும் மாட்டீர்

சூடு ஏறாது மக்கார் செய்யும்  அயர்ன் பாக்சைப்

பற்றிக்கவலைப்பட மாட்டீர்

காய்கறி கறிவேப்பிலை

பால் தயிர் இருப்பு

எதுவுமே தெரியாது

பூக்காரி தெருவில் வந்தால்

பூ ஒரு முழம் வாங்க மாட்டீர்

இலக்கியக் கூட்டத்திற்கு மட்டும்\

சட்டைபோட்டு தலைவாரி

எப்படி அய்யா கிளம்புகிறீர்

நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு

என்னைத்தான் கேட்கிறாள்

வேறு யாரையும் இல்லை அய்யா.

 

 

 

 

72. நடப்பு

 

தேசத்தின் வளர்ச்சிக்கு

சாலை அமைக்கிறார்கள்

உத்ராகண்டில்

சுரங்கப்பாதை அமைப்பு

இடிபாட்டுக்குள் ஐம்பது தொழிலாளர்கள்

செத்துக்கொண்டிருக்கிறார்கள்

இந்நேரம் என்ன ஆனார்களோ

முன்னம் இங்கே அணை  ஒன்று 

கட்டினார்கள்

நூற்றுக்கணக்கில்

மக்கள் செத்துப்போனார்கள்

இமய மலையின்

நில ஆய்வு அரைகுறையாய்

எந்தத்திட்டமும் அவசர கதியில்

நிறைவேற்றம்

சூழலியல் பின் தள்ளப்பட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட்

ஆமதாபாத்தில் கொண்டாட்டம்

எப்படித்தான் மகிழ்ச்சி தருமோ.

 

73.  சின்ன விஷயம்                                                                 

 

 

சின்ன வயதில்

பேருந்துப்பயணம்

எனக்குப்பிடித்திருந்தது

காரணம் இதுதான்

என் அப்பா என்னையும்

என் அம்மா தம்பியையும்

தூக்கித்தூக்கி

வைத்துக்கொள்வார்கள்

ரொம்ப நாளாக

விஷயம் புரியவில்லை

கண்டக்டருக்குச்சேதி

சொல்ல ஏற்பாடாம்

தம்பி சின்னவன்

டிக்கட் இல்லை

எனக்கு அரை டிக்கட்

கண்டக்டர் போடத்தான்

இந்தத்தூக்கல் கொஞ்சல்

ஏற்பாடு அத்தனையும்.

வயது கூடகூடத்தான்

உரைத்தது சூட்சுமம் எனக்கு.

 

 

 

 

74.சங்கடம்

ஒரு வாரம் ஊரில் இல்லை

வந்து வீட்டைத்திறந்தால்

கப் என்று இருக்கிறது

ஜன்னல் திறந்து 

வீடு கூட்டி

ஃப்ரிட்ஜை நேருக்கு

கொண்டு வரணும்

பால் தயிர் தோசைமா

பச்சை மிளகாய் தேங்காய்

காய்கறி சிலவோடு

வீடு வந்தாயிற்று

டிவியை ஆன் செய்தேன்

ரெண்டு ரிமோட்டையும்

 அழுத்தி அழுத்திக் கைதான் 

வலித்தது.

டி வி இல்லாத வீட்டில்

ஏதோ ஒரு பெருங்குறை

நாளை மறுநாள்

உலகக் கோப்பை கிரிக்கெட்

இந்தியா ஃபைனலில்

கவிதை நோட்டைக்

கையில் எடுத்தால்

அவள் தான் என்னிடம்

பேசுகிறாளா

இல்லை ஏசுகிறாளா.

 

75. நியாயம்

 

நேற்றுக் கவிதை எழுதி

முடித்த பக்கத்தில்

இன்னும் பாதி காலியாக இருந்தது

புதிய பக்கத்தைப்புறட்டி

தேதி போட்டுக் 

கவிதை எழுதினேன்

பேரன் பார்த்துக்கொண்டே

இருந்தான்

என்ன பார்க்கிறாய் என்றேன்

அப்பா கிட்ட சொல்றேன் பார்என்றான் என்னிடம்

அலுவலகம் முடிந்து

அவன் அப்பா வந்தான்

தாத்தா பாதி பேஜை காலியா வுட்டுட்டு

புது பேஜுல எழுதறார்

நீயே பாத்துகோஎன்றான்

என் மகன் என்னைப்பார்த்தான்

நான் பேரனைப்பார்த்தேன்

ஆள் ஆளுக்கு ஒரு நியாய்மா

என்கிறான் பேரன்.

 

76.  நீட்சி

இது நாள் வரை யான்

பார்த்த கவியரங்கங்களில்

சிறப்பு

இணையக்கால கவியரங்கம்

அழகிய சிங்கரின் கண்டுபிடிப்பு

பல்வேறு கருத்துக்கள்

பலப்பல குரல்களில்

யாருக்குத்தெரியும்

எத்தனை நாள் தொடருமோ

அறிவியலின் சாதனையை

அழகாய்க் கையாளும்

இணையக்கால கவியரங்கம்

விருட்சத்தின் நீட்சி

விருட்சத்தின் வெற்றி.

 

77. எங்கே போனார்கள்

 

தலையில் முண்டாசு கட்டிய

பெட்ரோமாக்ஸ்காரன்

ரேடியோ டிரான்சிஸ்டர் ரிப்பேர்காரன்

பாத்திரத்திற்கு ஈயம் பூசி

சைக்கிளுக்குப் பஞ்சர் ஒட்டி

அம்மா சோறுஎன்னும்

ராப்பிச்சைக்காரன்

எல்லோரும் மொத்தமாய்ச்

சமூக மேடையைக்

காலி செய்துதான்

விட்டார்கள்

சாதித்துவிட்டு நிற்கிறது அறிவியல்.

 

 

 

78. டிஜிடல் மயம்   ஜகது

 

நடுத்தர வயதிருக்கும்

கிராமத்துப்பெண்

மூன்று சக்கர வண்டி ஓட்டுகிறாள்

காய்கறிகள் வண்டி நிறையக்

கொட்டிக்கிடக்கிறது

இன்ன இன்ன காய்கள்

இன்ன இன்ன விலை சொல்லி

டேப்ரெகார்டெர்வாங்க அம்மா வாங்க

அம்சமாய்ப்பேசுகிறது

வண்டியை நிறுத்தி நிறுத்தி

வியாபாரம் நடக்கிறது

டிஜிடல் தராசில்

எடை போடுகிறாள்

வேலையை அசமடக்கி

திரும்பவும் வண்டியை எடுக்கிறாள்.

தொண்டை வறளத்  தெருவில்

கத்தி கத்தி  விற்கும் காலம்

மலையேறிப்போச்சு.

சில்லரை குடுங்க

என்னா இது நோட்டு கந்தலா இருக்கு

பத்து ரூவா துட்டு நா வாங்குறதே இல்ல

எந்த கூப்பாடும் இல்லை

க்யூ ஆர் கோடு வைத்து

ஜம்ஜம்மென்று  நடக்கிறது 

வியாபாரம்

டிஜிடல் உலகு யாரை

விட்டு வைத்திருக்கிறது

மின்சார ரயில் பிச்சைக்காரியிடம்

டேப்ரெகார்டர் உண்டு

நல்ல செறுப்பும் ஹாண்ட் பேக்கும் 

உண்டு அவர்களிடம்

க்யூ ஆர் கோடு மட்டுமே பாக்கி.

 

 

79. வரலாறு

 

கணக்குப்போட்டு விளம்பரப்படுத்தி

காய் நகர்த்துபவர்கள்

மேடையில் தொடர்ந்து

பிரகாசிக்கிறார்கள்

நொடிப்போதும் தந்நலமற்று

வாழ்ந்த வாழ்க்கை

சமூகத்தால் கவனிக்கப்படுகிறதா

என்றால் இல்லை

சமூகம் அவரைக்

கணக்கில் கொள்கிறதா

அது பற்றி அவரும் 

கவலைப்பட்டால்தானே

எல்லோர்க்கணக்கும்

நேராக வேண்டுமென்று

ஆசைப்படலாம்

ஆசைப்படுவது நிகழ்த்தப்பட

வேண்டுமென்று

வரலாற்றுக்குக்கட்டாயமில்லை

நேர் செய்யப்படாத

கணக்குகள் ஏராளமுண்டு

எப்போதும் வரலாற்றில்.. 

 

 

 

   80.  நம்பிக்கை

 

உதிக்கும் கதிரவனும்

பொழியும் மழையும்

சிரிக்கும் மழலையும்

பூக்கும் மலர்க்கொடியும்

பசுமைப் புல்வெளியும்

நம்பிக்கையின் ஊற்றுக்கண்

மானுட வாழ்க்கையில்

நம்பிக்கை தரும் கவிதைகளை

எழுதிட எனக்கும் ஆசைதான்

நம்பிக்கைத் தருவிக்கும்

சமாச்சாரங்கள் கண்முன்னே

நிகழ்ந்தால் மகிழ்வேன்

எழுதுவேன் கவிதைகளை

சமூக நடப்புக்கள்

எல்லாவற்றுக்கும் பின்னேவோர்

அரசியல் ஒளிந்துகொண்டு

நகைப்பதைக் காண்கிறேனே

காக்காய்க்குச்சோறு போடுவதிலிருந்து

கப்பல் கட்டுவதுவரை

எல்லாவற்றுக்குள்ளும்

கள்ளமொன்று கண் சிமிட்டுகிறதே

எதையும் ஏறெடுத்துப்பார்க்காமல்

எந்நேரமும் உழைக்கும்

விவசாயி தொழிலாளி

நேர்மையின் மீதுதான் தோழா

இப்பூவலகம் சுழல்கிறது.

 

81. மனிதன்

 

போக்குவரத்தின் ஆக்கிரமிப்பு

எங்கும் இரைச்சல்

மனிதர் வாழ் நகரங்கள்

இரைச்சலின் மொத்த குத்தகை

காடுகளுக்குச்சென்று 

தவமியற்றி அமைதியாய்

வாழ்ந்த காலம் இருந்தது

இப்போது வீடுகளுக்குள்ளாக

எத்தனைத் தொலைக்காட்சி சேவைகள்

எப்போதும் ஏதேனும்

தொலைக்காட்சி விளம்பர ஒலி

தொடரும் கைபேசி ஆரவாரம்

அளவுக்கு மிஞ்சினால்

அமிர்தமும் நஞ்சென்பதே

இவை தரும்  செய்தி.

யாரும் யாருடனும் 

பேசக்கூச்சப்படுகிறார்கள்

எல்லோருக்கும் மொபைலும் கையுமாய்

வாழ்க்கை

மொபைல் மனிதனின் 

இன்னுமொரு இதயம்

மானிடர்க்கு விடுதலை

இனி சாத்தியமே இல்லை.

 

 

 

82. மனமும் உறவும்           

 

மனித உறவுகள்

அரிய சூட்சுமம்

அதை நிர்வகித்தல்

எளிதானதல்ல

மனித உறவுகள் கண்ணாடியாலானது

கவனம் தேவை

எப்போதும்தான்

வாய்தவறி விழும் வார்த்தை

ஆண்டாண்டு உறவினை

 விழுங்கி விடும்

மன விலாசமே 

மனித உறவுகளின் அடிப்படை

மன விலாசம் எப்படியோ

அப்படிக்கு உறவு ஆழப்படும்

மனித மனம் விசாலப்படத்தான்

மார்க்கம் தெரிவதேயில்லை.

 

 

 

 

 

83. முயற்சித் திருவினையாக்கும்

 

உழைத்தவர்கள் எல்லோருமே

உச்சத்தைத் தொட்டுவிட மாட்டார்கள்

விடுதலைக்குப் போராடியவர்களில்

எத்தனை பேர் தேச விடுதலையைக்

காணமுடிந்தது

எழுதிக்குவித்தவர்களில்

எத்தனை பேருக்கு அங்கீகாரம்

சாத்தியமானது

அற்புதக்குரலும்

இணையிலா இசைஞானமும் பெற்றவர்கள்

எத்தனை பேர்

மேடை ஏறாமலே முடிந்து போனார்கள்

நிலவுக்குப்பயணம் போன

விஞ்ஞானிகளில்

நீல் ஆம்ஸ்ட்ராங்க் மட்டுமே

நினைக்கப்படுகிறார்

முயற்சிகள் தொடர்கதை

முயலாமல் வாளா நிற்பது

மானுட விழுமியமாகாதே.

 

 

 

    84. பள்ளிக்கூடம்                   

 

கோவில்கள் இருந்தன கிராமங்களில்

சாவடி இருந்தது 

சத்திரம் இருந்தது

மாடு அடைக்க பட்டி இருந்தது

கக்கூசெல்லாம் யாருக்குத்தெரியும்

ஏரிக்கரைதான் எல்லாத்துக்கும்

பள்ளிக்கூடக்  கட்டிடம் இல்லை

 வாகன மண்டபத்தில்

வகுப்புக்கள் நடக்கும்

வெள்ளியோ சனியோ

மாலை நேரம்

சாணம் போட்டு வகுப்புத்தரையை

மெழுகி முடிப்பர் மாணவர்கள்

குடி தண்ணீருக்குப்பானையொன்று

  வட்டமாய் மடக்கொன்று.

சர்க்கார்  கிணறு அருகிருக்கும்

சேந்தி வருவார் தண்ணீரை

இன்ன கிழமையில் இன்ன வேலை

அட்டைப்பட்டியல்  தொங்கிக்கிடக்கும்

அதுப்படிதான் எல்லாம் நடக்கும்

வீடு வீடாய்ச் சுற்றிச்செல்வோம்

பிள்ளைகளைக்கொண்டு வருவோம்

காமராஜர்  அருளிய  மதிய உணவு 

பள்ளிப்பிள்ளைகள் தானே வந்தனர்

கரும்பலகை அழிக்கக் கோவை இலைகள்

தண்டனைக்கு

நீட்டுக்குச்சி

கட்டாயம் இருக்கும் மேசை மீது.

காதைப்பிடி போடு தோப்புக்கரணம்

விரட்டி எடுப்பர் ஆசான்கள்

கண்ணு ரெண்டு   இருக்கட்டும் 

பாக்கி எதுவும்  போனாலும்

புள்ள மட்டும் நல்லா  படிக்கணும்

  வேண்டிச்சென்றனர் அப்பாக்கள்

ஆசிரியர்கள்  ராப்பட்டினி

அக்கறையோடு பாடம் சொன்னார்

அரி நமோத்து சிந்தம்

 குரு வாழ்க குருவே துணை

சொல்லிச்சொல்லி பாடம்  துவங்கும்

இப்படித்தானே  பள்ளிக்கூடம்

இப்போது சொன்னால் ஒப்புவார்களா.

 

85. காலம்             

 

அது அதுவும் அங்கங்கே

நிகழ்ந்து கொண்டேதான்

யார் எங்கு போனால் என்ன

போகாவிட்டால் என்ன

எதற்காகவும் நிற்பதில்லை எதுவும்

புலம்பல்கள் இருக்கலாம்

புகழ்ச்சிகள் இருக்கலாம்

வசைகள் இருக்கலாம்

வம்புகள் இருக்கலாம்

வழிபடல் இருக்கலாம்

யாருக்காகவும் எதுவும்

காத்திருப்பதில்லை

அதன் ராஜபாட்டையில்

தொடர்கிறது காலம்

யாரையும் சட்டைசெய்யாமல்

கதியைக்கூட்டுவதுமில்லை

குறைப்பதுமில்லை காலம்

யாரிட்ட கட்டளையோ

வரம்பு எதுவும் உண்டோ

யார் அறிவார்

யார் புகல்வார்

பார் சுழலும் ரகசியத்தை

யாரே பகர வல்லார்.

----------------------

 

86. நீர்வழிப்படுஊம் புணை       

 

தருமங்குடி சிவன் கோவில் அக்கிரகாரத்தில்

எங்களின் ஓட்டு வீடு

தாத்தாவுக்குப் பிறகு

அப்பா இருந்தார்

பிள்ளைகள் நாங்கள்

மாநகரம் வந்தாயிற்று

துளசி பூஜை

விடாமல் நடந்த வீட்டின்

முற்றத்தில் காட்டுப்பூனைகள்

அட்டகாசமாய்க்

குடும்பம் நடத்துகின்றன

நாட்டு ஓடுகளை பிரித்துப் பிரித்து

குரங்குகளின் கும்மாளம்

காஞ்சி சங்கராச்சாரியார் வந்திறங்கி

நெல் குவியலில் சம்மணமிட்டு  அமர்ந்து

ஆசீர்வதித்த நடுக்கூடத்தில்

வவ்வால் புழுக்கைகளின் ஆட்சி

தாத்தா ஜோசியம் சொன்ன

வீட்டுத்திண்ணையில்

சாராயம் குடித்துவிட்டு சீட்டாடும் கிராமத்தார்

வீட்டை விற்க மனம் வரவில்லை

கட்டி அழவும்  முடியவில்லை

வயதுகூடி கிழடு தட்டிப்போகிறது

எங்கள் வாரிசுள் அந்நிய மண்ணில்

எது பற்றியும்  சட்டையே செய்யாமல்.

 

 

 

 87.  வன்மம் குறையவில்லை       

  

புத்தனும் ஏசுவும்

தோற்றுப்போனார்கள்

வாழும் மாந்தரிடை வன்மம் குறையவில்லை

அகிம்சையைத்தூக்கிப்பிடித்த

காந்தியின் தேசமிது

தேசபிதாவைக்காப்பாற்றிக்கொள்ள முடியாமல்

கொன்றுபோட்டோமே நாம்.

அறிவினான் ஆகுவதுண்டோ

பிறிதின் நோய்  தந்நோய் போல்

போற்றாக்கடை சொன்ன வள்ளுவமும்

வாடிய பயிரைக்கண்போதெல்லாம்

வாடினேன் வழங்கிய வள்ளலாரும்

ஹமசிடமும் இஸ்ரேலிடமும்

நின்று பேசிடத்தான் முடியுமா ?

அறிவுக்குருடர்கள் 

கேள்விச்செவிடர்கள் முன்னே

ஆயிரம் ஆயிரமாய்

மாண்டு போவது பெண்களும் குழந்தைகளும்.

ஐக்கிய நாடுகள் சபையொன்றுண்டு

அறிவீரோ

மார்கழியில் பஜனை செய்வார்களாம்...

 

                                                       

 

88. அரசியல்                 

 

எங்கும் அரசியல்

எதிலும் அரசியல்

கட்சியில் சேர்ந்தால்

கணம் கணம் அரசியல்

சங்கத்தில் சேர்

பொறுப்புக்களைத்

தீர்மானிக்கும் அரசியல்

இலக்கிய அரங்கமா

அசடுக்குப்புரியாதா நுண்ணரசியல்.

அழகாய்ச்சொல்வார்கள்

அரசியல் கலவாமல்

எழுதுங்கள் கவிதை

அதுவுமே அரசியல்.

மலரை மகளிரை

தாயைத்தனயனை

வானைக்கடலை

மலையை அருவியை 

காகத்தைக் கொக்கைப்பார்

கெஞ்சு கொஞ்சு

எழுது கவிதை

யார் செத்தாலென்ன

யார் பிழைத்தாலென்ன.

 

 

89. நன்றி சொல்லி முடியுமா   

 

செய்த உதவிக்கு

நன்றி என்று எழுதுகிறோம்

நன்றி நன்றி என்று

உரக்கச்சொல்கிறோம்

உதவி சிறிதெனினும்

நன்றி மறத்தல் நன்றன்று

பொய்யாமொழி அல்லவா.

பொழியும் மழைக்கும்

காக்கும் கதிரோனுக்கும்

உயிர் வளி  அருளும்

விருட்சங்களுக்கும்

சோறு போடும் உழவனுக்கும்

தம்மை உருக்கி நம்மை ஈனும்

தாய்மார்களுக்கும்

நன்றி சொல்லி முடியுமா

நெஞ்சிருக்கும்வரை

நினைவில் வைத்துப் போற்றலாம்

ஈடாகாது அப்படியும் 

அவர்களிடம் நாம் பெற்ற கடன்.

பெற்றதாயொடு எண்ணக்கடவுளும் இல்லைதானே.

 

 

90. தேவர் மகான்

 

சாதிமதம் கடந்த மகான்

தேவர் முத்துராமலிங்கரைப் போற்றுவோம்

தெய்வீகத்தையும் தேசத்தையும்

தன்னிருகண்களாய்க் கொண்டாடிய

ஆழம் கூடிய  அற்புதம்

உணவால் சைவத்துக்கு மாறிய

அகவினத்தார்

வள்ளல் இராமலிங்கரை

ஆராதித்த  பெருமகன்

நேதாஜிக்குத் தமிழ் மண்ணில்

வீரர்களைத்திரட்டிய

தேசபக்தர்

மதுரை மீனாட்சி ஆலயத்தில்

அரிசனங்கள் பிரவேசிக்க 

முன்  கை எடுத்த

வைத்யநாதாய்யருக்கு  அரண்

தேசப்பிரிவினையின் போது

தமிழக இசுலாமியர்

நம்மோடு இருப்பர்

உரக்கக்குரல் கொடுத்த  நேர்மையாளர்

மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட

இந்தியப்பாராளுமன்ற உறுப்பினர்

நம்ப முடிகிறதா  உங்களால்.

தேவருக்குச்சரியானதொரு

அரசியல் வாரிசுக்கு

எத்தனைக் காலமாய்த்

தவம் கிடக்கிறது தமிழகம்.

-------------

 

 

 

 

 

91.-எதிர் வீடு  

 

எதிர் வீடு 

பூட்டிக்கிடந்தது

வாடகைக்கு யாரும் வரவில்லை

நாய்களும் பூனைகளும்

இணங்கிப்பிணங்கி உறங்கின

நேற்று எதுவோ ஒரு குடும்பம்

லாரிச்சாமான்களோடு

அந்த வீட்டிற்குள் புகுந்தது

வீட்டு ஓனருக்கும் நிம்மதி

மழைச்சற்றுக்கூடுதல் ஆனால்

வீதித்தண்ணீர் உள்ளே வரும்

நமக்கேன் பொல்லாப்பு

நான் ஒன்றும் சொல்லவில்லை

வாடகைக்கு வீடென்று

ஊரெல்லாம் சுற்றி

கடைசியாய்க்கிடைத்த வீடு

போதுமென அவர்கள் வருகை

நாய்களும் பூனைகளும்

நடுத்தெருவில் சீற்றத்துடன்

அழவும் செய்தன

அறிவுஜீவிப் பாம்பொன்று

அழைத்தது அவைகளை

அமைதியாய்ச்சொன்னது

சும்மா கிடக்காது

கட்டிய வீடு

மனிதர்கள் குடி புக வேண்டும்

மனிதர் வர மாடு வரும் ஆடு வரும்

அரிசி வரும் பருப்பு வரும்

எலிகள் வரும் பூனைக்காகும்

கழிவு நீர் தேங்கும் தவளை வரும்

பாம்புக்காகும்

சோறு மீதப்படும் உணவாகும் நாயிக்கே

சூழல் நின்னை ஆள்வதா

சூழலை நீ ஆள்வதா

உபதேசித்த பாம்பு நழுவிப்போயிற்று புற்றுக்குள்

நாய்களும் பூனைகளும்

பிரமித்துப்போய்.

ஒன்றையொன்று பார்த்துக்கொண்டன

     

92. இணையகால கவிதை.

 

 

எத்தனை சவுகரியம்

இணையக்கால கவியரங்கம்

சீவி சிங்காரித்துக்

கொள்ளவேண்டாம்

அழுக்குச்சட்டையை மாற்ற வேண்டாம்

சுவாமிக்கு உண்டியலில்

போடுகிற மாதிரி

விருட்சம் உண்டியலில்

போட்டுவிட்டுப்போகலாம்

எல்லார்  கவிதையையும்

கேட்க வாய்ப்பு

கவிதை விமரிசனங்கள்

ஏனோ தானோ என்றில்லை

நச்சென்றுதான்

காற்றோடு போய்விடுமோ

நாம் வாசித்த கவிதை

என்ற கவலை மட்டுமேயுண்டு.

                                                              

 

 

 



 

 

 

93.  துப்பாக்கி                         

வெள்ளையோ கருப்போ மாநிறமோ

அமெரிக்காவில் அன்றாடம்

நூற்றி இருபது பேருக்குமேல்

துப்பாக்கியால் சுடப்பட்டு

செத்துப்போகிறார்கள்

அவர்கள் அரசாங்கம் தரும் கணக்கு

உப்பு புளி மிளகாய்போல்

துப்பாக்கியை வாங்கலாம் அமெரிக்காவில்

துப்பாக்கிக்குத்தடை விதித்தாலென்ன

கேட்கிறாய் நீ

அதெப்படி சாத்தியம்

துப்பாகித்தயாரிக்கும் முதலாளிதானே

அமெரிக்க நாடாளுமன்றத்தின்

தூணும் அஸ்திவாரமும்.

 

 

 

94. அறம் செயவிரும்பு 

 

அனாதை இல்லம்

நிச்சயம் உதவி 

செய்யவேண்டும்

என்று போனால்

அப்படி ஒன்றும் உங்களை

வா வா என்றழைத்து

நாற்காலி போடமாட்டார்கள்

கொடுங்கள் வாங்கிக்கொள்கிறோம்

என்கிறார்கள் வேண்டா வெறுப்பாய்

அதற்குமேல் ஒன்றுமில்லை

கொடுத்த தொகைக்குச்

சரியான ரசீது பெறுவதற்குள்

போதும் போதும் என்றாகிறது

தருமம் செய்வது ஒன்றும் எளிதன்று

நாம் நினைப்பது போல்

இல்லாத பத்து பேருக்கு

சோறு பிசைந்து போட்டாலும்

அரசாங்கத்துக்குப்

பதில் சொல்லியாகணும்

ஏன் எதற்கு எப்படி எங்கே என்று

அடுக்கடுக்காய் வினா வுண்டு

அவ்வைப்பாட்டி  சொன்னது முற்றிலும் சரி

அறம் செய விரும்பு.

 

 

 

 

 

 95.சிறைக்கைதிகள்.

 

சிறையில் இருப்பவர்கள் 

எல்லோருமா குற்றவாளிகள்

இல்லவே இல்லை

சிறைவாசிகளில் பாதிக்குமேல்

விசாரணைக்கைதிகள்

விசாரணை முடிவதற்குள்

பாதிவாழ்க்கைப் பைசலாகிவிடும்

கருப்புத்துணியால் கண்களைக்கட்டியபடியே

நீதிக்கடவுள்

கொலையே செய்யாதவனைக்

கொலையாளி ஆக்கலாம்

ஆயுள் கைதியாகி

வாலும் தோலுமாய் அவன்  வெளிவரலாம் ஓர்நாள்

ராக்கெட் விஞ்ஞானி

நம்பி நாராயணனை

பாகிஸ்தானுக்கு உளவாளியென

கேவலப்படுத்தியக் கீழ்மைக்கு

கங்கையில் மூழ்கிட்டாலும்

பாவம் தொலையுமா?

----------------------------

 

96. பொது நியாயம்                               

 

யாரேனும் ஒரு கன்னத்தில் அறைந்தால்

நீ மறு கன்னத்தையும் காட்டு

சொல்லிவிட்டுச் சிலுவைக்குச்

சென்றார் இயேசு

வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடினேன்

வருந்தினார் அருளாளர் இராமலிங்கர்

வள்ளலுக்குப்பின்னர்

வாடிய பயிருக்கு

யாரேனும் வாடினாரா என்ன

காவிரியில் தண்ணீர் விடாதே

அதற்கு ஒரு பந்த் கர்நாடகாவில்

காவிரியில் தண்ணீர் திறந்துவிடு

அதற்குக்கடை அடைப்பு தமிழ் மண்ணில்

உச்சநீதிமன்றம் உண்டு

காவிரி நீர் ஒழுங்காற்றுக்கமிட்டி உண்டு

எல்லாம்தான் உண்டு

யார் சொல்வதையும் யாரும் கேட்பதில்லை

பொதுவாய் நியாயம் சொல்ல ஆளும் இல்லை

கேட்க இங்கு மனிதர்களும் இல்லை..

----------------------

 

97.கல்விக்கூடம்                                                   

 

எந்தக்கல்விகூடமும்

மாணவர்கள் பெற்றிட்ட

மதிப்பெண்ணையும் ராங்க்கையும்

பற்றித்தான் விளம்பரம் செய்கின்றன

நல்ல மாணாக்கர்களை உருவாக்கி

உயரிய சமூகத்தைப் படைப்பதில்

கல்விக்கூடங்கள் தம் பங்கு பற்றி

வாய் திறப்பதே இல்லை.

நோட்டுப்புத்தகம் ஆய்வகம் கணினி

யூனிஃபார்ம் கேண்டின் ஆஸ்டல் பேருந்து வசதியென

எல்லாவழியிலும் கொட்டுகிறது பணம்

பணிக்கு வரும் ஆசிரியர்களைச்சுரண்டி

பெற்றோர்களைக் கொள்ளையாய்ச் சுரண்டி

கொழுக்கின்றது கல்வி  வணிகம்

உயர்கல்வி நிறுவனங்களின்

எண்ணிக்கை அதிகம் தமிழ் மண்ணில்

அள்ளிக்கொள்ளலாம் பணம்

கல்வி ஒரு தொழில்

கலைமகளோ கார்ப்பரேட்கள்  முன்

கைகட்டி வாய் பொத்தி.

----------------------

 

98. மனிதன் அப்படித்தான்                             

 

லஞ்சம் அழகு தமிழில் கையூட்டு

மறைவதே இல்லை அது

எத்தனை பேர் பிடிபட்டால் என்ன

வாழ்க்கையே மொத்தமாய்

பூச்சியமானால் என்ன

லஞ்சம் எங்கும் என்றும்

சிரஞ்சீவிதான்

அறிவீரோ லஞ்ச ஒழிப்புத்துறை

எது வந்தால் என்ன

நீதிமன்றங்கள் ஆயிரம் குட்டினால் என்ன

நீதிபதிகளே பதவி ஓய்வுக்குப்பின்னே

நியமன நாடாளுமன்ற உறுப்பினராம்

எத்தனை அவலம்

பிறப்பும் இறப்பும்

மனிதன் கையில் இல்லை

லஞ்சம் அங்கு மட்டுமே

கதவு தட்டுவதில்லை.

---------------------------------------------

 

 

99. பட்டாசு வெடிக்காதீர்     

 

பட்டாசு வெடிக்காதீர்

சின்னச்சின்ன மத்தாப்புக்கள் போதும்

கேள்விப்படும்

பட்டாசு ஆலைச் சாவுகள்

எத்தனைக்கோரம்

இதயம் பிழியும் சோகமோ 

தொடர்கதையாய்.

வயிற்றுப்பசிக்குச்சோறு வேண்டுமென

ஆலைக்கு வந்த

சின்னஞ்சிறுசுகள்

சிதறுண்டு போகின்றன

வெடித்தல் கிளப்பும்

காற்று மாசு அறிவோமா

சர வெடியின் ஒலிக்கொடூரம்

உடல் நலிந்தோறும் சின்னஞ்சிறு குழவிகளும்

படும் துயரம் உணரோமா

இப்படியும் வேண்டுமா

நமக்குத்தப்பான மகிழ்ச்சி

மனசாட்சி உள்ளவர்கள்

மறுபடியும் யோசியுங்கள்

பட்டாசு வாங்காதீர்.

 

 

 

 

100. வீட்டுச்சிறை   

 

மண் சுவர் ஓட்டுவீடு தாத்தாவுக்கு

ஓடுமாற்றி ஒட்டடை அடித்து

கூட்டிப்பெருக்கி குப்பையை அள்ளினால்

போதும் போதும் என்றானது

இரட்டை புளிய மரங்கள் மகசூலை

மணியம் செய்தாள் பாட்டி

தாத்தா காலமானார்

பாட்டியையும் கூட்டிக்கொண்டார்

செங்காவியும் சுண்ணாம்பும்  என்றோ அடித்த

வீட்டுத்திண்ணையில் சாராயம் குடித்துவிட்டு

சீட்டாடினர் ஊர் மக்கள்

தாத்தாவீட்டை அடிமாட்டு விலைக்குப்பேசி

மாநகரில் இடம் வாங்கிய அப்பா

வங்கிக்கடன் பெற்று

வீடென்று கட்டிக்குடிவந்தார்.

சதா இருமி இருமி இருப்பை அறிவிக்கும் அம்மாவோடு

அப்பா நொண்டி அடித்தபடி இன்று.

பெற்ற பையனுக்கும் மருமகளுக்கும்

கலிபோர்னியாவில் வேலை

அட்டைச்சுவர் கட்டைத்தரை

ஆகாயத்தில் வாங்கிய அபார்ட்மெண்டுக்காய்

விடுப்பே இல்லா அடிமை வேலை ராப்பகலாய்

அவனுக்கும் ஒரு பிள்ளை

அமெரிக்காவில்  பள்ளி போகிறான் இன்று

அவன் எங்கே  வீடு வாங்கி

எப்படிக்கழிப்பானோ காலத்தை.

 

 

 

   

 

 

 

 

.