தொறகுனா இடுவண்டி
சேவா
ஓசை உடைத்த கவிதைகளில் இசை என்னும் தலைப்பில் இசையையும்
இலக்கியத்தையும் பிசைந்து ஒரு எழுத்துப் படைப்பைக்கொண்டு வந்துள்ளார் ரவிசுப்ரமணியன்.
காலச்சுவடு பதிப்பகம் அப்புத்தகத்தை வெளியிட்டுப் பெருமை பெறுகிறது. இசையைத் ஆழத்தெரிந்து அதன் கலா பரிமாணங்களை முற்றாய் ஓர்ந்து
மோகமுள் புதினத்தில் தி.ஜானகிராமன் ரங்கண்ணாவைக்
கொண்டு வந்திருப்பார். மோகமுள் ரங்கண்ணா இசையின் தாளகதியைத் தன் குருதியில் எதிரொலிக்கக்
காண்பவர். தம்புராவை மீட்டுவது அவருக்கு ஆன்ம
சம்பாஷணை.சங்கீத ஞானமு பக்தி வினா என்பதற்கு சாட்சியமாய் நிற்கும் இலக்கிய பிம்பம்.
மோகமுள் ரங்கண்ணாவைத்தாண்டிய சமாச்சாரத்தை
இசைபயில் இலக்கிய மேதமையை இலக்கியப்படைப்பாளிகள்
வேறு யாரும் வாசகர்க்குப் பிரயத்திட்சமாக்கி உலவ விடவில்லை. இப்படைப்பில் ரவிசுப்ரமணியன் 13 கட்டுரைகளோடு இரண்டு
பின்னிணைப்புக்களையும் சேர்த்து 15 கட்டுரைகள் எனக்கொண்டு வந்துள்ளார். ஆசிரியரின்
உடன் பிறவாத்தங்கை காமாக்ஷி ஸ்வாமிநாதனுக்கு இப்புத்தகம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
பெரும்பாலும் இக்கட்டுரைகள் பேசும் புதிய சக்தியில் வெளிவந்தவை. அவ்விதழின் ஆசிரியர்
ஜெயகாந்தன் சஹ்ருதயர் ரவிசுப்ரமணியத்தின் மேல்
வைத்துள்ள நம்பிக்கை மிகச்சரியானது என்பதனை வாசகன் வழிமொழிகிறான்.
என்னுரையில் ரவிசுப்ரமணியம்
இசையின் வல்லமை குறித்து இப்படிப்பேசுகிறார்.
‘வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளக்காதல்
கொண்ட நோயாளியாய்’ நீங்கள் அதைத் தொடர்கையில், முதலில் ரசிகனாக்கி, உணரவைத்து பின் விதிர்க்கவைத்து, மகிழ்ச்சி பரப்பி
பின் உங்களையே தனக்குப் பிரச்சாரகராகவும் ஆக்கிவிடுகின்ற வல்லமை இசைக்கு உண்டு’
இசைப்பேராசிரியர் திவாகர் சுப்ரமணியம் ‘தொகையறா’ என்னும்
தலைப்பிட்டு இந்நூலுக்கு ஒரு முன்னுரையைத்தந்துள்ளார்.
மாமேதை பீத்தோவன் இசையால் உலகத்தை மாற்றமுடியும் என்றார். அத்தகைய ஒரு சமுதாய மாற்றத்திற்கு
அணிவகுக்கும் படைப்புக்களில் இந்தக்கட்டுரைத்தொகுப்புக்கு இடமுண்டு என்கிறார் திவாகர்.
அ. முத்துலிங்கத்தின்
மார்க்கஹிந்தோளம் என்பது முதல் கட்டுரை. இது கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் 22.10.22 அன்று
நடந்த அ. முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்த
கட்டுரைத்தொகுப்பு வெளியீட்டு விழாவில் ரவிசுப்ரமணியனால் வாசிக்கப்பட்டது. இதனில் இசையை அனுபவிக்கத் தெரிந்து
எழுத்திலும் கொணர்பவர்கள் யார் யார் என்கிற
ஒரு பட்டியல் தருகிறார். சுவாமிநாத ஆத்ரேயன்,சிதம்பர சுப்ரமணியன், கு. அழகிரிசாமி,
கி. ராஜநாராயணன்,தி. ஜானகிராமன்,எஸ். வைத்தீஸ்வரன், கிருஷாங்கினி,ஆர். ராஜகோபாலன்,ஆனந்த்,
அபி, பிரம்மராஜன்,நா. விச்வநாதன்,ரெங்கநாயகி, லலிதாராம், சுகா, அருண்மொழிநங்கை. இசைப்பற்றித்தெரியாது
ஆனால் இசையை எப்படி அனுபவிப்பது என்பது தெரியும்
இப்படி ஒரு பட்டியலில் அ. முத்துலிங்கத்தை
ரவிசுப்ரமணியன் முன் நிறுத்துகிறார். முத்துலிங்கத்தின் ‘ரி’ என்னும்
ஒரு கதை. ஒரு தேர்ந்த கலைஞன் எதையெல்லாம்
எப்படியெல்லாம் புனைந்து கதைக்குள் அதனைக்கொண்டு
வருகிறான், வித்தை காண்பிக்கிறான், என்பதற்கு இக்கதை ஒரு சான்று என்கிறார் ரவிசுப்ரமணியன். அ.முத்துலிங்கத்தின்
ராகம் பற்றிய ஒரு விளக்கம் வாசனைக் கிரங்கச்செய்வதைத்
தவறாமல் சுட்டுகிறார்.’
‘இது மார்க்க ஹிந்தோளம். அடிமுடியைக்கண்டுபிடிக்க முடியாதபடிக்கு
ஓர் அபூர்வமான ராகம். ஆயுள் முழுக்க சாதகம் செய்தாலும் இந்த ராகத்தில் மறைந்துகிடக்கும்
சூட்சுமங்களை ஆழம் காணமுடியாது. எனக்குப் பிடித்தராகம்.’
றொறன்றோ பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்காக நிதி திரட்ட
ஒரு வேண்டுகோள்.அ. முத்துலிங்கம் அதற்கு ரவி சுப்ரமணியத்திடம் இப்படி ஒரு உதவி கேட்கிறார்.
‘ ஒரு நிமிடப்பாடல்
எழுதி மெட்டமைத்து பின்னணி இசை அமைத்து கடைசியில்
நிதி கேட்கும் கோரிக்கையாக வாய்ஸ் ஓவர் ஒருவர் தரவேண்டும்’
ரவி சுப்ரமணியம்
ஒத்துக்கொள்கிறார்.பாடல் எழுதி இசை அமைக்கிறார். பாரதிராஜா வாய்ஸ் ஓவர் குரல் கொடுக்கிறார். வெற்றிகரமாய் அந்தத்
திட்டம் உருப்பெறுகிறது. அ.முத்துலிங்கம் இப்படி ஒரு விபரத்தை மட்டும்தான் வெளியில்
சொல்கிறார். தமிழ் இருக்கை அமைப்பதற்கு ரவிசுப்ரமணியத்தின் பாடலும், பாரதிராஜாவின் கோரிக்கையும் வெளியிடப்படுவதற்கு
முன்பாகவே தேவைப்படுகின்ற டோலர்கள் தமிழன்பர்கள்
பலரிடமிருந்து வந்து குவிந்துவிடுகின்றன.
அ.முத்துலிங்கம் எண்ணியாங்கு தமிழ்
இருக்கை நிறுவப்படுகிறது. இவை அத்தனையும் முத்து
முத்தாய் இக்கட்டுரையில் வாசகனுக்குச் சொல்லப்படுகிறது.
’ தடமில்லாப் பாதைவழி பயணமேகிய கத்ரி கோபால்நாத்’ என்னும்
கட்டுரை அடுத்ததாய் வருகிறது. கத்ரி கோபால்நாத் சிகரம் தொடக்காரணமான ஒரு நிகழ்வைப்
பதிவு செய்கிறார் கட்டுரையாளர். இசைமேதை
டி. வி கோபாலகிருஷ்ணன் கோபால் நாத்தை சென்னைக்குக் கூட்டிவந்து மயிலாப்பூர்
முருடீஸ் ல் தங்கவைத்து ’இனி நீ என்கிட்டதான் இருக்கவேண்டும்’ என்று சொல்லி தனக்குத்தெரிந்த
எல்லா இசைக்கலை நுணுக்கங்களையும் சொல்லித்தந்திருக்கிறார்.
தரையில் அமர்ந்து கோபால் நாத் டி வி ஜி முன்பாக பத்துமணிநேரம்கூட அசுர சாதனை செய்தவர்
என்பதைப் பகிர்கிறார் ரவிசுப்ரமணியன். கற்கும் நேரத்தில் அவர் காட்டிய அந்த ஈடுபாடான
அர்ப்பணிப்புதான் பின்னாளைய அவரது எல்லாப் பரிமளிப்புக்கும் அடித்தளம் என்பதைச் சுட்டுகிறார்
கட்டுரையாளர்.
மூன்றாவது கட்டுரையாக வருகிறது தமிழ்+ அன்பு+ பதிப்பகம்=மீரா.
கவிஞர் மீரா பற்றியும் அவரோடு ரவிசுப்ரமணியத்திற்கு
இருந்த தோழமை பற்றியும் அறிந்து நாம் துள்ளிக்குதிக்கலாம்.
அப்படிச்செல்கிறது அவ்விஷயங்களின் கோர்வை.
‘பின்னாளில் அந்தக்கவிஞரை நான் சந்திப்பேன் என்றோ, என்
முதலிரு கவிதைப்புத்தகங்களை அவரது அன்னம் பதிப்பகம் வழியாக அவர் வெளியிடுவார் என்றோ,
என்னைத்தம்பியாக ஏற்று என் விடுதியிலேயே எனது விருந்தினராக இரண்டு ஆண்டுகள் தங்கியிருப்பார்
என்றோ, எண்பதுகளின் தொடக்கத்தில் நான் வாசித்த அவரது கவிதைகளில் இரண்டு மெட்டமைக்கப்பட்டு
2019 இல் பாடலாய்ப் பதுவாகுமென்றோ அப்போது நான் நினைத்திருக்கவில்லை’
படித்துப் பரவசமாகி நிற்கிறோம்.
மீராவின் ‘ என்னை மீண்டும் இசைக்க வைத்துள்ளாய்’ ‘நீ தாமதிக்காதே’ என்கிற இரண்டு கவிதைகளுக்கும்
இசை அமைத்துள்ளார் ரவிசுப்ரமணியன். முதல் கவிதைக்கு ‘தேஷ் ராகத்தைத்தேர்ந்தெடுத்திருக்கிறார்.
தேஷ் ராகத்தைப்பற்றிய ஆசிரியரின் ஒரு விளக்கம் நம்மை அசைத்துப்பார்க்கிறது. தேஷ் -அது
மென்மையான ராகம் உணர்வுகளுக்கு ஏற்றது. தீன பாவத்திற்குப் பொருந்தி வருவது மெலங்க்கலியான
அனுபவத்தைக் கொணர்வது என்கிறார். ஒரு படி மேலே செல்கிறார்.’ வெல்லப்பாகை மேலிருந்து
ஊற்றினால் மடிந்து மடிந்து குழைவதுபோல் குழைகிற
ஒரு வடநாட்டு ராகம். மனசை உருக்கக்கூடிய ராகம்’ இப்படியாய் அழகு விளக்கம் வாசகனுக்குச் சொல்லப்படுகிறது.
’ துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ’ என்னும் பாரதிதாசனின் பாடலுக்கு தண்டபாணி தேசிகர்
மெட்டமைத்துப்பாடியிருப்பார். அது தேஷ் ராகத்தில் பூத்தது என்று சொல்லிச்செல்கிறார்.
இரண்டாவதாக வரும் கவிதைக்கு கானடா ராகத்தைத் தேர்வு செய்துள்ளார்
ரவிசுப்ரமணியன். மீராவின் ‘ நீ தாமதிக்காதே’ கவிதையை மெட்டமைத்துப்பாடி அதனை இசை ஆர்வம்
உள்ள முந்நூறு நண்பர்களுக்குமேலாகவும் அனுப்பிவைக்கிறார்.
எழுத்தாளர் வண்ணதாசன் மட்டுமே இந்தப்பாடலுக்கு இந்த மெட்டு அமைத்துள்ளீர்கள் என்பதனைச்சரியா கண்டுபிடித்துச்சொல்கிறார்.
மாதவம்பட்டி சத்யன் மங்கையர் திலகம் படத்தில் பாடிய பாடலின் ராகமது என்கிறார் ஆசிரியர்.
நகுலனின் ஊர்ந்து செல்லும்நினைவு என்கிற கட்டுரை அடுத்ததாக
வருகிறது. இக்கட்டுரையில் வருகிறது இப்படி.
நண்பர் தேனுகா ஒருமுறை ‘நல்ல கவிஞனாக வரவேண்டுமா பெரிய கவிஞனாக வரவேண்டுமா
என்கிற கேள்வியை நூலாசிரியரிடம் வைக்கிறார்.
‘நான் வைரமுத்து மாதிரி’ பெரிய கவிஞனாக வரவேண்டும் என்கிறார் ரவிசுப்ரமணியன். அந்த
சம்பாஷணை இப்படி நீள்கிறது ,
‘ சுத்தம். அந்தக்கசண்டெல்லாம் வேண்டாம்னுதான உங்கள நான்
திருப்பப்பாக்குறேன். அங்கயே போய் போய் நிக்கிறிங்க’
‘ஏன் அவர்ல்லாம் பொயட் இல்லியா சார்?’
‘அத காலமே சொல்லிடும். ஹீ ஈஸ் ய லிரிக் ரைட்டர் அவ்ளோதான்.அத
தாண்டி ஒரு மண்ணும் இல்ல’
நகுலனின் கவிதை ஒன்றைப் படிக்கத் தொடங்குகிறார் ரவிசுப்ரமணியன்.
‘ரயிலை விட்டிறங்கியதும்
ஸ்டேஷனில் யாருமில்லை
அப்பொழுதுதான்
அவன் கவனித்தான்
ரயிலிலும்யாருமில்லை
என்பதை
ஸ்டேஷன் இருந்தது
என்பதை
‘அது ஸ்டேஷன் இல்லை’
என்று நம்புவதிலிருந்தும்
அவனால் விடுவித்துக்கொள்ள
முடியவில்லை
ஏனென்றால்
ஸ்டேஷன் இருந்தது’
2007 ல் துவங்கி இதுவரை (ஆகஸ்ட் 2021) 85 கவிதைகளுக்கு
மேல் ரவிசுப்ரமணியன் மெட்டமைத்துள்ளார். முதன்
முதலில் மெட்டமைத்தது நகுலனின் கவிதைக்குத்தான்.
இசையோடு கூடிய பாடலாக அது பதிவாகுதல் மட்டும் கைகூடவில்லை. வருத்தப்படுகிறார் நூலாசிரியர்.
நகுலனின் இக்கவிதையோடு இந்தக்கட்டுரை முடிகிறது.
‘இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்’
நகுலன் இல்லாது தமிழ்க்கவிதை வெளிதான் எப்படிச்சாத்தியம்.
அடுத்து வரும் கட்டுரை ‘உணர்வுகளின் குரலொலியாய் உலவும் எஸ். பி.பி. அவரைத் ’தான்மையற்றவர் ’என்று குறிப்பிடுகிறார்
நூலாசிரியர். எதனிலும் தான் தான் என்று தன்னை
முன் நிறுத்திக்கொள்ளாதவர் என்பதால் தான்மையற்றவர்
என்கிற புது வார்த்தைப் பிரயோகத்தை நிறுவுகிறார். மெச்சத்தக்க வரிகள் எஸ்.பி.பி யின்
பெருமை பேசுகின்றன.
‘ எஸ் பி பி அவர்
இன்று இல்லை.ஆனால் அவர் குரல் நம் சந்ததிகள் வாழும் வரை வாழும்.கேட்டதும் சட்டெனக்
கடந்து வேறு வேலைகளில் ஈடுபட வைக்கிற ஒரு சராசரிக்குரல் இல்லை அது.நம்முள் ஊடுருவி
ஏதோ செய்துவிடுகிற குரல்.அது வெறும் குரல் மட்டுமா…? நூறு சதவிகித அர்ப்பணிப்போடு
,சங்கதிகள்,அஹாரங்கள்,சிட்டா ஸ்வரங்கள்,ப்ருகாக்களென உணர்ச்சிப்பெருக்கோடு, நம்மோடு
இருந்த பல தருணங்களின், குரல். ’என் உணர்வு உன் குரலில்’ என்று பல சமயம் நம்மை நெகிழவைத்த குரல். மகிழ்ச்சி,
காதல்,துள்ளல்,நையாண்டி,கழிவிரக்கம் பேச்சு,இருமல்,துயரம், காமம், உரையாடலெனப்பலவிதமான
பாவங்களோடு என் வாழ்வின் பல சமயங்களில் என்னோடு இருந்தது போலவே என் பிள்ளைகளோடும்என் பேரப்பிள்ளைகளோடும் இருக்கப்போகிற
குரல் அது. இதுதானே ஒரு கலைஞனின் உண்மையான
அசாத்திய வெற்றி. சரியான அர்த்தத்தில் அசல் கலைஞனாக வாழ்ந்தவனுக்கு ஒரு போதும் சாவு
இல்லை. அது வெந்ததைத்தின்று விதியின் கூற்றுக்குக் காத்திருந்து மாயும் பிரகிருதிகளுக்கு
மட்டுமே’
இவற்றை வாசிக்கின்ற வாசகனுக்கு பாரதியின் ‘தேடிச்சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி’ என்னும் கவிதை வரிகள் மனதில் நிழலாடவே செய்யும். எஸ். பி.பியின் வருகையை
‘ அரியவை எப்போதாவது நிகழும்’ என்று நெஞ்சம் திறக்கிறார் ரவிசுப்ரமணியன். இவற்றை எல்லாம் இருந்து கேட்க அவரை இயற்கை விட்டுவைக்கவில்லையே என்று வாசக மனம் ஏங்குகிறது.
’தமிழிசையே ஆதி இசையென நிறுவும் மம்மது’ என்னும் அடுத்த
கட்டுரை வேறு ஒரு புது செய்தியைச்சொல்கிறது.
‘ஸ்ருதி என்று இன்று நாம் அழைக்கும் சொல்லுக்குத்தூய தமிழ்
சொற்கள் இருபத்திரெண்டு உள்ளன.ஆனால் அத்தனையும் வீழ்த்தி ‘ஸ்ருதி’என்ற சொல் வழக்கிற்கு வந்துள்ளதே! தமிழன்
எவ்வளவு ஏமாந்த சோணகிரி’ என்று மம்மது விசனத்தோடு
சொல்லும் போது, அது குறித்தும் அதன் பின்னுள்ள
மொழி அரசியல் குறித்தும் நாம் யோசிக்காமல் இருக்க முடியவில்லை’ என்கிறார் ரவிசுப்ரமணியன்.
பாடித்திரிந்த பாடினிகள் என்னும் அடுத்து வரும் கட்டுரையில்
, தாம்பரம் கிருத்துவக்கல்லூரிப் பேராசிரியர் முனைவர். சு. சதாசிவம் 50 பெண்பாற்புலவர்களைப்
பெயர்களோடு கண்டடைந்து நிறுவுகிறார் என்பதை ஆசிரியர் குறிப்பிடுகிறார். இது ‘சங்கப்பெண்பாற்புலவர்
வரலாறு’ என்னும் அவரது நூலில் வருகிறது என்பதை
அறிகிறோம்.
நெஞ்சு, மிடறு, நாக்கு, மூக்கு, அண்ணம், உதடுகள்,பற்கள்,தலை
இவை எட்டு உடல் உறுப்புகள். எடுத்தல், படுத்தல்,மெலிதல்,கம்பிதம்,குடிலம்,ஒலி, உருட்டு,
தாக்கு இவை எட்டும் முறையே அவற்றின் செயல்பாடுகள்.
இவை அனைத்தும் இசைந்து செயல்படுவதால்’ பண்’’ஆயிற்று, என்கிறார் அடியார்க்குநல்லார்.
இப்படியொரு காத்திரமான விளக்கம் இந்தக்கட்டுரையில் கிடைக்கிறது. அடியார்க்குநல்லார்
தமிழ்ப்பண்கள் மொத்தம் 11991 இருந்தன என்கிறார்.
அறிவியல் தொழில்நுட்பக் கருவிகளின் நிழலே இல்லாத ஒரு காலத்தில் இத்தனை அற்புதங்கள்
இம்மண்ணில் சாத்தியமாகி இருக்கிறது.
’காலத்தைத் தன் கலைக்குள் உறையவைத்த கலைஞன் இளையராஜா’ எனும் அடுத்த கட்டுரை ஆசிரியர் இசைஞானியை எப்படிப்புரிந்திருக்கிறார்
என்பதனைத் தெரிவிக்கிறது. இளையராஜாவை எல்லோரும் நன்றாகவே அறிவோம் என்றாலும் ரவிசுப்ரமணியத்தின்
எழுத்து வழி அறிதல் நம்மை நெகிழச்செய்கிறது. இதற்கு மேலுமா ஒரு கலைஞனை வாழ்த்திவிட
முடியும் என்று வாசகனைப் பிரமிக்க வைக்கிறது. ஜெயகாந்தன் திராவிட இயக்கத்திற்கு ஒவ்வாதவர்.
ஆனால் திராவிட இயக்கத்தினரால் கொண்டாடப்பட்டவர். எழுத்துக்கலை அவரைக் கொண்டு போய் அங்கே சேர்க்கிறது.
இளையராஜா ஆத்திகர். கடவுளை மறுத்த ஈ.வெ ரா
பெரியார் திரைப்படப் பாடலுக்கு இசை அமைக்க
ஒப்பாதவர். கோடிக்கணக்கான தமிழர்களை இசையால் வசப்படுத்தியவர்.அவர் கருத்தோடு முரண்படும்
தமிழர் உண்டு. ஆயின் அவரின் இசையைப் போற்றாத தமிழர் உண்டோ?
அற்ப, லெளகீக லாப நஷ்ட விஷயங்களின் வழியே , அதுவும் நமக்குத்தெரிந்த பாமர அளவீடுகளின் வழியே ஒரு தேர்ந்த கலைஞனை அளவிடுதல் சரியாகாது என்கிறார் ஆசிரியர்.
ஓசை உடைத்த கவிதைகளில் இசை என்னும் கட்டுரை பக்தி இலக்கியங்கள்
தமிழிசைக்கு அளித்த கொடை பற்றிப்பேசுகிறது.
உலக அளவிலும் கூட இந்தப் பங்களிப்பை வேறு எந்த மொழியிலும் காண்பதரிது என்கிறார் கட்டுரையாளர். புதுக்கவிதை
யுகம் வந்தது கவிஞர்கள் கவிதை தந்தார்கள்.இசையின்
பிரக்ஞை இல்லாத கவிதைகள் பிறந்தன. கவிதைக்கலைக்கும் இசைக்குமான தொடர்பு விட்டுப்போயிற்று.
இரண்டு கலையும் முகிழ்த்தலில் கிடைக்கும் அரும் பயன் வாராது போயிற்று. தமிழ் மொழி நஷ்டப்பட்டுப்போனது.
மணிக்கொடி எழுத்தாளர்கள் இந்தியவிடுதலைப்போரை மறந்து இலக்கியம்
படைத்தார்கள். அது ஒப்பவே சமகாலக் கவிஞர்கள்
இசையைப் புறந்தள்ளி கவிதை பொழிகிறார்கள். எது இவண் குறையோ அதனை லாகவமாய்ச் சுட்டுகிறார் ரவிசுப்ரமணியன்.
வள்ளலாரின் வானத்தின் மீது மயிலாடக்கண்டேன் ( மாண்ட்)
பாரதியின் சின்னஞ்சிறு
கிளியே
( காபி)
பாரதிதாசனின்
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ ( தேஷ்) இவையும் இவைபோன்ற பிறவும் இசையால் கவிதைக்குச்
சேர்ந்த சம்பத்து என்கிறார் நூலாசிரியர்.
அடுத்துவரும் கட்டுரை ‘மல்லாரி-நாத லயத்தின் வழியே ஒரு
வாசமாலை. கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் சந்நிதியிலேயே
பிறந்து வளர்ந்தவன் நான் என்கிறார் ஆசிரியர். ’கோயில் என்பது வெறும் மூலஸ்தான விக்ரஹத்தை
வணங்கி வழிபடும் ஒரு இடம் மட்டுமேயல்ல, இசை, கதை சொல்லும் கதாகாலட்சேபம்,பிரவச்சனம்,தமிழ்க்கல்வெட்டுகள்,நாட்டியம்,
ஓவியம் ,சிற்பம்,ஆடு மாடு பாம்பு பறவைகள் போன்ற
உயிரினங்கள், நந்தவனம்,ஸ்தல விருட்சம்,மூலிகைகள்,கேணிகள்,குளங்கள்,பூஜை சின்னங்களின்
வகைகள் தீப தூப வகைகள், பூ வாசனாதி திரவிய ஆடை அலங்கார வகைகள்,பாத்திர சமையல்வகைகள்,வான
சாஸ்திரம்,கட்டிடக்கலை,ஸப்ததாள படிக்கட்டு, இசைத்தூண்கள் என இப்படி நூறு நூறு கலாச்சார
சம்பத்துகள் நிறைந்த புனித இடம்’. கோயிலுக்கு
முன்னும் பின்னும் நிகழும் அனைத்து செயல்பாடுகளையும் உள்ளடக்கிய ஒரு சூட்சுமத்தை நமக்குக்கொண்டு
தருகிறார் நூலாசிரியர். சிதம்பரம் நடராஜர்
திருக்கோயில் மல்லாரி வாசிப்பு பற்றி அரியதொரு
விளக்கம் இந்தக்கட்டுரையில் காண்கிறோம்.
’… முதல் நாள்
சங்கராபரணம் தொடங்கி, ரீதி கெளளை,
சக்கரவாகம்,ஹம்சபிரமரி, என நான்கு நாட்கள்
ஐந்தாம் நாள் ஐந்து தாளத்தில் மல்லாரி
ஆறம் நாள் சண்முகப்பிரியா, ஏழாம் நாள்
காம்போதி, எட்டாம் நாள் ஒடக்கூறு எனும் தனி உருப்படி.
(தாருகா வனத்து ரிஷிகளுக்கு நிலையற்ற இந்த உடல் கூற்றின்
இரகசியத்தை பிட்சாடனர் உருக்கொண்டு சிவபெருமான்
பாடம் போதித்த உணர்வே ஒடக்கூறு. நாதநாமக்கிரியா ராகம் அன்று வாசிக்கப்படும்’
ஒன்பதா நாள் அன்று தேர் மல்லாரி
பத்தாம் நாள்
முத்துத்தாண்டவர் அம்பலவன் மீது பாடிய
பாடல்கள்.
பதினொன்றாம் நாள்
உசேனி வாசிக்கப்படும். உடன் விழா நிறைவெய்தும் என்று பட்டியல் தருகிறார்
ரவி சுப்ரமணியன். கேரளத்து செண்டை மேளம் இங்கே
வரலாம் அது நாகஸ்வரத்தின் இடத்தை ஆக்கிரமித்தல் அழகல்ல என்கிறார் கட்டுரையாளர்.
’பாமரர் மெட்டிலும்
பாடிய பாரதி’ என்னும் அடுத்து வரும் கட்டுரை
வாசகனைக் கிறங்கச்செய்துவிடும். பாரதி இசை அறிந்த தமிழ்க்கவிஞன்.’தமிழ்ழ்சபைகளிலே எப்போதும்
அர்த்தம் தெரியாத பிற பாஷைகளில் பழம் பாட்டுக்களை
மீட்டும் மீ ட்டும் சொல்லுதல் நியாயமில்லை.அதனால் ,நமது ஜாதி சங்கீத ஞானத்தை
இழந்து போகத்தான் நேரும்’ என்று பாரதி நெஞ்சம் வருந்திச் சொன்னதை மேற்கோள் காட்டுகிறார்
கட்டுரையாளர். பாரதியாருக்கு தியாகராஜ சுவாமிகள் முத்துசாமி தீட்சிதர் ஆகியோர்
மேல் மிகுந்த மரியாதை இருந்திருக்கிறது. தியாகய்யரைப் பாரதி ரஸக்கடல் என்றழக்கிறார்.
தீட்சிதரின் கீர்த்தனைகள் கங்கா நதி. கம்பீரமானது
என்கிறார் பாரதி. ஆயினும் பாமரர்க்குப்புரியும்படி தமிழில் பாடவேண்டும்
என்பதே பாரதியின் விருப்பமாக எப்போதும் இருந்தது.
‘எந்த ஜில்லாவுக்குப் போ,எந்த கிராமத்துக்குப் போ எந்த
வித்வான் வந்தாலும் இதே கதைதான். தமிழ் நாட்டு ஜனங்களுக்கு இரும்புக்காதாக இருப்பதால்,
திரும்பத்திரும்ப ஏழெட்டுப் பாட்டுக்களையே வருஷக்கணக்கில் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்’
என்று சாடுகிறார் பாரதி.
‘பொதுப்பள்ளிக்கூடத்திலே சங்கீதம் கற்றுக் கொடுக்க வேண்டும்.
இது மற்ற நாகரீக தேசங்களிலே சாதாரணமாக நடந்து
வருகிறது. உயிரிலே பாதி சங்கீதம்’ இப்படிப் பாரதி முத்தாய்ப்பாய்ச் சொல்வதை ரவிசுப்ரணியன்
குறிப்பிட்டு இக்கட்டுரையை முடிக்கிறார்.
தி.ஜானகிராமனின்’ நாத மோக உபாசனை’ என்னும் அடுத்த கட்டுரைக்கு
வருவோம். தி. ஜா வின் சிருஷ்டியில் ரங்கண்ணா என்னும்
மோகமுள் கதாபாத்திரம் இசையும் இலக்கியமுமாய்,
நாத பிந்துவாய் வாசகனுக்குத்தெரிகிறார். மோகமுள்
நாவல் நெடுகிலும் இசை ஒரு தோன்றாத் துணைவனாய் வாசகர்க்கு அனுபவமாதலை உணரமுடியும்.
‘பிராண பலம் வேணும் , மனோ பலம்,ஆத்ம பலம், எல்லாம் இருக்கணும்.
எல்லாத்துக்கும் சரீரம் வேணும். ஆனா இதுக்கு சரீரம் ரொம்ப ரொம்ப வேணும், டாப்பா ரொம்ப
வேணும்.பிராண சக்தி கண்ணுக்குத்தெரியாது. அதைத்தான் முரட்டுத்தனமா வளர்த்தாகணும். ஜெண்டை வரிசை ஆகும்போது வெள்ளைக்கடுக்கன்
வேணும் போலிருக்கும்,வர்ணம் வந்தா மயில்கண் வேஷ்டி, மல்லுச்சட்டை., கீர்த்தனம் வந்தா கொஞ்சம் அத்தர் இருந்தாத் தேவலை போலிருக்கும்.
அப்புறம் எங்க தேவடியா வீடு இருக்குன்னு உடம்பு அலையும்.’ தி.ஜா வாசகனை அசரவைத்துவிடுவார்.
’மோகமுள்ளில் புரளும்
மொழியின் சரளம் அறுபதுகளில் சுழித்தோடிய காவேரி ஜலம். தன் பெருக்காத மார்பைப்பிடித்து
பிடித்து அடிக்கடி ரகசியமாய் வருடிப்பார்க்கிற ருதுவானவளின் கை போல இயல்பாய் வந்து
வந்து செல்லும் காமம். நம்முள்ளிருக்கும் கசடுகளை
நோக்கி நீளும் கேள்விகள் இயற்கையின் ஏகாந்தம்
என்று சொல்லித்தீருமோ மோகமுள்’ என்கிறார் கட்டுரையாளர்.
இப்புத்தகத்தின் பின் இணைப்பாக ரவி சுப்ரமணியனின் இரண்டு
நேர்காணல் கட்டுரைகள். ஒன்று சுவாமிநாத
ஆத்ரேயனுடன். தி.ஜானகிராமன் பற்றி அவர் சுழித்தோடும்
காவிரிபோல் பொங்கிப்பொங்கிப்பேசுகிறார்.
‘அவர் (.தி.ஜா)
வந்து சம்பாஷ்ணயையே சங்கீதமாக்கிப்புடுவார் எம்ட்டன் லயத்தையே சங்கீதமாக மாத்தி –சங்கீதமா, லயமா, பாவமா, வார்த்தையான்னு
தெரியாம ஒண்ணுக்கொன்னு, மலைத்தேனும் பசும்பாலும்
குடிக்கும் சூட்டில் கலந்தாற்போல, செய்ஞ்சு பதமா தர வித்தை,
அவர்கிட்ட குடிகொண்டிருந்தது’
கொஞ்சமாவது அகம்னு வச்சுக்கலைன்னா’ என்கிற தலைப்பில் நெய்வேலி
சந்தானகோபாலனுடன் அடுத்த ஒரு நேர்காணல். உங்களுக்கு ஒரு சான்று சந்தான கோபாலினின் பதிலிலிருந்து.
‘தியாகராஜ சுவாமிகள்லாம் பொறக்கறதுக்கு மின்னயே தமிழ் நாட்ல்
தமிழிசைதான் இருந்திருக்கு. அதைத்தான நம்ம முன்னோர்லாம் பாடிண்டு இருந்துருக்கா? சரபோஜி
வந்தப்புறம்தானே தெலுங்கு அவ்ளோ பிராபல்யம் ஆயிருக்கு……… தமிழிசைதான் முதல்ங்கிறதுல , மூத்ததுங்கறதுல இங்க யாருக்கும் அபிப்ராய பேதமில்லே!
ரவிசுப்ரமணியனின் இந்தப்புத்தகம் தமிழ் படைப்புலகம் ஆழ்ந்து
வாசிக்கவேண்டிய ஒன்று. வாசகர்களின் புரிதலை ஆழப்படுத்திட இத்தகைய புத்தகங்களின் வாசிப்பு
கட்டாயம் என்பதுவே என் பணிவான அபிப்ராயம்.
-----------------------------------------------------
‘