Tuesday, August 14, 2018

poypesi



'பொய் பேசி பலவானாக இருந்தாலும்'- எஸ்ஸார்சி


நான் எழுபதுகளில் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தேன்.நண்பர்கள் கல்லூரி முடிந்ததும் அன்றாடம் சிதம்பரம் காந்தி அமைதி நிலையத்தில் கூடுவோம்.அப்போது அந்த மன்றம் வடக்கு ரத வீதியில் இருந்தது.அங்கு பல்வேறு சேவைப்பணிகள் தொடர்ந்து நடக்கும்.ஏழைக்குழந்தைகளுக்கு இலவசமாக பாடங்கள் நடத்துவோம்.மருத்துவமனைக்கு ச்சென்று ஆதரவற்ற நோயாளிகளை கவனித்து வருவோம்.வீட்டில் உபயோகித்து மீதமாய் உள்ள நல்ல மருந்துகளை சேகரித்து மருத்துவமனைக்குக்கொண்டு செல்வோம்.யோகா வகுப்பும் இந்தி வகுப்பும் இந்த மையத்தில் சிறப்பாக நடைபெறும்.வெள்ளிக்கிழமை தோறும் சர்வ மதப்பிரார்த்தனை காந்தி பஜனை என்ற தலைப்பின் கீழ் நடைபெறும்.'ஈசா வாஸ்யாம் இதம் சர்வம் யத் கிஞ்ச்ச ஜகத்யாம் ஜகது' தவறாமல் உப நிடதத்திலிருந்து சொல்லப்படும்.பைபிளும் குரானும் வாசிக்கப்படும்.எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும் பாடுவோம். 'ரகுபதி ராகவ' தொடங்கி 'ஈசுவர அல்லா தேரே' நாம் வரை சென்று முடிப்போம்.தியானம் நிச்சயம் இருக்கும்.
முடிந்தவரை கதர் ஆடை மட்டுமே பயன் படுத்துவோம். காந்தி மன்றத்தில், குஞ்சிதபாதம், ஞானம்,குழந்தைசாமி,ம.ராமசாமி, பாலச்சந்திரன் முத்துசுப்ரமணியம் என இன்னும் எத்தனையோ நண்பர்கள் இருந்தார்கள்.
இயற்கைச்சீற்றம் வந்தபோதெல்லாம் 'மாணவர் அமைதிப்படை' என்கிற பதாகையின் கீழ் சென்று பணியாற்றுவோம்.அருள்மிகு சிவகாமித்தாய் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சியில் மக்களுக்கு ச்சேவையாற்றினோம்.மன்றத்திலிருந்து'தொண்டு' என்கிற இலக்கிய ஆண்டுமலர் வெளிவரும்.அதனில் இலக்கியப்பங்கு கொள்வோம்.
சாந்தி சேனா-என்கிற ஒரு தொண்டு அமைப்பு அப்போது வாரணாசியைத்தலைமை இடமாகக்கொண்டு இயங்கியது.தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் வழிகாட்டுதலில் அவ்வமைப்பு இயங்கிக்கொண்டிருந்தது.
நான்'சாந்தி சேனா' அமைப்பு நடத்திய அகில இந்திய முகாமில் கலந்து கொள்ளப் பணிக்கப்பட்டேன். தேசத்தந்தை மகாத்மாவின் செயலர் மகாதேவ தேசாயின் மகனார் நாராயண்தேசாய் எங்கள் முகாமுக்குத்தலைமை ஏற்றார்.முகாம் கர்நாடக(அப்போது மைசூர் மாநிலம்) மாநிலம் பெல்காமுக்கு அருகிலுள்ள கடோலி என்னும் கிராமத்தில் நடைபெற்றது.இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் நண்பர்கள் அழைக்கப்பட்டிருந்தன.பங்களாதேஷ் லிருந்தும் இருவர் வந்திருந்தனர். முகாமில் பங்கு கொண்டவர்களுக்கு அன்றைய மத்திய ரயில் நிர்வாகம் ஒருவழி பயணச்சலுகை அளித்து உதவியது.
தேசிய முகாமில் இறுதி நிகழ்வாக மே 28-30.1972ல் அகில இந்திய மாநாடு பெல்காம் நகரில் நடைபெற்றது.'what we have achieved and lost during 25 years of independence?'என்பதுவே மாநாட்டின் ஆய்படுபொருளாகும்.இது பற்றியே விவாதம் கருத்தரங்கம் அனைத்தும் நடந்தன..
அண்ணாமலைப்பல்கலைக்கழகத்திலிருந்து நான் ஒருவனே சென்றிருந்தேன்.சிதமபரத்திலிருந்து ரயில் பயணதொட்ங்கிக் கடலூர் வழியாக பெங்களூர் சென்றேன். பயணம் முழுக்க வினோபாஜி எழுதிய 'கீதைப்பேருரைகள்' படித்து படித்து ஆழ்ந்த சிந்தனை வசமானேன்.பெங்களூர் அப்போது ஒருவன் காலால் நடந்தே சுற்றி முடிந்துவிடும் ஒரு எளிய நகரமாக எனக்கு அனுபவமானது.
சிடி ஜங்க்ஷனிலிருந்து மிராஜ் எக்ஸ்பிரஸ் பிடித்து இரவு முழுவதும் பயணித்தேன். பெல்காமை விடியற்காலை நான்கு மணிக்கு அடைந்தேன்.சற்று குளிராகத்தான் இருந்தது.பொதுவாகத்தமிழ் மண்ணில் இருந்து பழக்கப்பட்டவர்களுக்கு வெளியிடம் சென்றால் சாதாரணக் குளிர்கூட தாங்கமுடியாமல்தான் இருக்கிறது.பெல்காம் ரயில் நிலையத்திலிருந்து வெளிவந்து டவுன் பஸ் பிடித்தாக வேண்டும்.முதலில் கிட்டூர் ராணி சின்னம்மா சிலை நிறுத்தத்திற்குச்சென்று பின்னும் ஒரு பஸ் பிடித்து அந்தக்கடோலி சென்றாகவேண்டும்.ரயில் நிறுத்ததிலிருந்து சின்னம்மா சிலை நிறுத்தம் செல்ல ஒரு டிக்கட் 'பந்த்ரா பைசா'.என்னோடு முகாமுக்குச்செல்பவர்கள் சிலரும் வண்டியில் ஏறி இருந்தார்கள். கொஞ்சம் தெம்பாக உணர்ந்தேன் கண்டக்டர் பேருந்தின் அடிக்கூரையில் நீளமாகத்தொங்கவிடப்பட்டிருந்த கயரை ஆட்டினால் டிரைவர் அருகே தொங்கவிடப்பட்டிருந்த கண்டா மணி 'ணங்க்' என ஒலித்தது.
'கடோலி' என்கிற கிராமம் ஏன் தேர்வு செய்யப்பது என்று அங்கு சென்றவுடன் தான் தெரிந்தது. கடோலி கிராம மக்கள் மராட்டி மொழி பேசினார்கள்.மகாராஷ்டிராவும் கர்நாடகாவும் பிரிகின்ற எல்லைக்கோட்டில் அந்தக்கிராமம் இருந்தது.மகாராஷ்டிரா, பெல்காம் பகுதியை தனது என்று உரிமை கொண்டாடி எல்லைப் பிரச்சனை எழுப்பியிருக்கிறது.இன்றுவரை கூட அது தீர்க்கப்படவில்லைதான். கடோலி கிராமத்தில் முத்ன் முதலில் ஒரு வீர சிவாஜி கோவிலைப்பார்த்தேன். மராட்டிய சிவாஜி அந்த மக்களுக்கு தெய்வமாக ஆக்கப்பட்டுவிட்டார் என்பது நமக்குச்செய்தி.
கடோலி கிராமத்தில் ஒரு மாந்தோப்பு.அதனுள்ளாக ஒரு நூறு மாமரங்கள் இருக்கலாம்.மே மாதம் என்பதால் காயும் பழமுமாக மரங்கள் கனத்துப்போய் இருந்தன.இந்த மாந்தோப்பில்தான் பதினைந்து நாட்கள் வாசம்.பத்துக் கூடாரங்கள் தார்ப்பாயால் போடப்பட்டிருந்தன. பெரிய கூடாரங்கள் உணவருந்தவும். விவாதத்திற்கும் என ஒதுப்பட்டிருந்தன.
இந்தியாவின் அனைத்து மாநில நண்பர்களும் ஒன்றாகக்கூடினோம். மகளிர் இருபது பேர்.ஆடவர் எண்பதுக்குக்குறையாது என ஞாபகம்.எல்லோருக்கும் வழிகாட்டியாக காந்தி அமைதி நிலையத்தின் எஸ்.என் சுப்பா ராவ் இருந்தார்.அரைக்கால் சட்டை அணிந்து அரை.குறையாக நரைக்கத்தொடங்கிய தலைமுடியுடன் காணப்பட்டார்.மிடுக்குடன் அவர் ஆங்கிலம் பேசியது எல்லோரையும் கிறங்க அடித்தது.
பத்து குடில்கள் அமைக்கப்பட்டு இருந்தன.குடிலுக்கு எங்களை அனுப்புவதில் ஒரு புதிய அனுபவம்.என் குடிலில் ஒரு அஸ்ஸாம்காரர்,ஒரு மராட்டியர்,ஒரு ஆந்திராக்காரர்,ஒரு ஒரிசாக்காரர்'ஆந்திராவின் வெங்கடேசலு,ஒரிசாவின் மொகந்தி,மராட்டிய ராமச்சந்திரபாகேல் இவர்களே நினைவுக்கு வருகின்றனர்.மொகந்தி மருத்துவ மாணவர்.அசாம்காரர் பெயர் மறந்து போனது.
முகாமில் இரவு முழுவதும் விழித்து இருந்து இருவர் காவல் பணி ஆற்ற வேண்டும்.விடியற்காலை ஐந்து மணிக்கு ஐவர் கொண்ட குழு ஒரு பாடலை இசைத்துக்கொண்டு அனைவரையும் எழுப்பும்.பிறகு சரியாக ஆறு மணிக்கு பிரார்த்தனை.தொடர்ந்து 'ஸ்ரமதான்' என்னும் உடல் உழைப்பு.இது 9 மணி வரை.சாலை அமைத்தல்,ஏரி ஆழப்படுத்துதல்,துப்புரவுப்பணி என்று வரையறை.பிறகு காலை உணவு. உணவு தயாரிப்பும் பரிமாறுதலும் முகாமில் பங்கேற்பவர்கள்தான்.உணவு உட்கொள்கின்றபோது ஒரு தேசியப்பாடல் பாடவேண்டும்.'நல்ல மனிதன் நல்ல காரியங்களை மட்டுமே செய்வான்.பொய் பேசுபவன் எவ்வளவு பலவானாக இருந்தாலும் நல்லகாரியங்களைச்செய்யமுடியாதவன்' இந்தக்கருத்தைச்சொல்லும் பாடல் அது.இன்று நினைத்தாலும் எனக்கு இந்த வரிகள் மன வலு சேர்க்கின்ற பாடல் வரிகளே..
துவக்க நாளில் அனேக நண்பர்கள் பரிமாறிய உணவில் மிகுந்த சேதத்தை ஏற்படுத்திவிட்டனர்.முகாமின் முன்னணித்தோழர்கள் வரணாசி அசோக் பங்க் என்பவரின் தலைமையில் புறக்கடையில் நின்று கொண்டு மீீீதமாய் எறியப்படுபவனவற்றை எல்லாம் சேகரித்து அவற்றைத்தாமே பங்கிட்டு உண்டனர்.உணவை மீதமாக்கி எறிந்தவர்கள் அவர்கள் முன் வெட்கித்தலைகுனிந்தோம்.அன்றிலிருந்து ஒரு பருக்கை உண்வு எறியப்படுதல் மனித உழைப்பை அவமதிப்பது என்பதனைப் புதியதாக்கற்றுக்கொண்டோம்
பத்து மணியிலிருந்து மாலை ஒரு மணி வரை கருத்தரங்கம் நடைபெற்றது.அனேகமாக இந்தியிலும் எப்போதேனும் ஆங்கிலத்திலும் சொற்பொழிவு இருந்தது.இந்தி தெரியாத ஒரு ஐந்து பேருக்கு ஒரு மொழி பெயர்ப்பாளர் இருந்தார். ஐந்து பேர் அனைவரும் தமிழர்களே.ஆந்திராக்காரரான அவர் ஆங்கிலத்திலும் இந்தியிலும் புலமை பெற்றவராக இருந்தார் தமிழும் அறிந்திருந்தார்.அவருக்கு தமிழ் நாட்டை அடுத்த அந்த சித்தூர் பக்கத்திலே ஒரு கிராமம் சொந்த ஊர்.
.'தமிழுக்குத்தாலாட்டு' இந்திக்கு .?' தமிழ் எங்கள் உயிர் இந்தி எங்கள் .?' என்றுகண்ட கண்ட சுவர்களில் எழுதி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வரை போராடியது எல்லாம் நினைவலையில் ஓடியது.வரலாறு என்ன எல்லாமோ செய்துவிட்டதுதான்.
எனக்கு இன்றும் நினைவில் இருப்பது' man and machine' ஒரு பேராசிரியர் எடுத்த வகுப்பு.. முடிவில் இயந்திரங்களின் வருகை மனித ஆன்ம நேயத்தை சுருக்குப்போட்டுவிட்டதாக உணர்ந்தோம்.
மதிய உணவிற்குப்பிறகு மீண்டும் கூடுவோம்.காலையில் நிகழ்ந்தவைகள் பற்றிய ஒரு ஆய்வு நடைபெறும். தேநீருக்குப்பதிலாக மாங்காய் ஜூஸ் கொடுப்பார்கள்.அது இளஞ்சூட்டில் இருக்கும்.அது அத்தனை இனிமையாக இருந்தது.பிறகு விளையாட்டு நிகழ்ச்சி.மைதானத்தில் ஒரு இந்தியாவே விளையாடுவது போன்ற உணர்வு இருந்தது.
அனேகமாக தமிழ் நாட்டுக்காரர்கள் தவிர ஆடவரும் பெண்டிரும் சகசமாக விளையாடிக்கொண்டிருந்தனர்.எங்களுக்கு அவ்விதம் பழக்கம் இல்லை என்று நாங்கள் சொன்னோம். உங்களுக்கு மனதில் அழுக்கு என்று துடுக்காக பதில் தந்தார்கள்.
மாலை ஆறு மணிக்குப் பிரார்த்தனை.அனைத்து சமயப்பிரார்த்தனை.அனைத்து மொழிகளின் பாடல்கள் இடம் பெற்றன. சுப்பா ராவ் தமிழ் பாரதியின் பாடல் ஒன்றைப்பாடினார். 'ஆத்திச்சூடி இளம்பிறை அணிந்து மோனத்திருக்கும் முழுவெண் மேனியான்' என்று தொடங்கும் அந்தப்பாடல்.
தாகூரின் பாடல்கள் வங்கத்து நண்பர்கள் பாடினார்கள்.பிறகு எளிய இரவு உணவு.இரவு பத்து மணிவரை கலை நிகழ்ச்சி.மனித நேயம் வலியுறுத்தும் கலை நிகழ்ச்சிகள்.ஒரு பிரார்த்தனைப்பாடல். அத்தோடு அவரவர் குடிலுக்குச்சென்று உறங்கிவிடுவோம்.
மருத்துவகுழுவில் ஒரு டாக்டர் இருந்தார். எங்கள் குடிலின் ஒரிய மொகந்தி மருத்துவ மாணவர், அவரோடு மருத்துவ சேவை செய்தார்.
குடில் அருகிலே ஒரு சிறு மலை இருந்தது.அங்கு அனைவரும் சென்று வந்தோம். அந்த மலைவாசிகளின் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதறிந்தோம்.முதலில் எங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்குள் அனுமதிக்க மறுத்தார்கள். கடோலி ஊர் மக்கள் அவர்களுக்கு எங்களை அறிமுகம் செய்துவைத்து உத்வினார்கள்
இப்படியாக ப்பதினைந்து நாட்கள் முடிந்தன.பெல்காம் கல்லூரி ஒன்றிலே தேசிய மாநாடு நடந்தது.கல்வித்திட்டத்தைத் தகுந்த முறையிலே மாற்றி அமைக்காமல் இந்தியாவில் எந்த சாதனையும் நிகழ்த்திவிட முடியாது என்ற முடிவுக்கு வந்தோம்.
யங் இந்தியாவில் 10.09.1931ல் மகாதமா காந்தி எழுதிய வாசகம்,' I shall work for an india,in which the poorest shall feel that it is their country,in whose making they have effective voice, an India in which there shall be no higher class and low class of people,an India in which all communities shall live in perfect harmony.There can be no room in such an India for the course of the intoxicating drniks and drugs.women will enjoy the same rights as men.'
இதுவே தேசிய மாநாட்டின் பிதான விவாதப்பொருளாக இருந்தது.
மாநாடு முடிந்து அனைவரும் கிளம்பிக்கொண்டிருந்தனர்.கல்கத்தாகாரர் சக்ரபர்த்தியும் உர்மிளாவும் அங்கிருந்து கோவாவுக்குச்சென்றுவிட்டனர்.இதனைச்சிலர் 'குசு குசு' என பேசிக்கொண்டனர்.இயற்கையும் அதன் திருப்பணியை செய்யாமல் இருக்குமா என்ன?தவறில்லை ச்சரியே.
மாநாடுமுடிந்து பெங்களூர் வழியாக சிதம்பரம் திரும்பினேன்.
இது எல்லாம் முடிந்து இன்று ஐம்பது ஆண்டுகள் ஓடி விட்டன. அந்த 'வசு தெய்வ குடும்பகம்' மனதில் நிழலாக வந்து வந்து போகிறது..
ஜயப்பிரகாஷ் நாராயணனை யருக்கேனும் தெரியுமா? தெரிந்தவர்களைத்தேடினேன். எங்கும் காணோம். 'வந்தேமாதரம்' பாடிய என் தேசத்தில்
குடியும்,போதைப்பொருளும், சாதிய வன்கொடுமையும்,பெண்களின் விசும்பலும் விசுவ ரூபமெடுத்து இருக்கக்காண்கிறேன்..
இன்றும் 'பொய் பேசுவோன் பலவனாக இருந்தாலும் நல்லவைகளைச்செய்துவிட முடியாது' என்று அந்தக்'கடோலி' முகாமின் பாடல் வரி மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது..
----------------------------------------------------------

.
.

No comments:

Post a Comment