Tuesday, August 14, 2018

nadum nadappum





திரையுலகம்-ஆகிவந்த தடமே- எஸ்ஸார்சி

பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு.பல இன மத மொழிகளைக்கொண்டது நம் பாரத நாடு. பல கலாசாரக்கூறுகளைத்தன்னகத்தேப்பயிலும் விரிந்த நிலப்பரப்பு.மக்கள் தொகையில் உலகிலேயே இரண்டாவது இடம். மக்களாட்சி என்னும் மந்திரச்சொல்லை ச்சரியாக நடைமுறைப்படுத்தும் ஒரே நாடு என்கிற பெருமையும் நமக்குண்டு.
வல்லரசு நாடுகளில் தானும் ஒன்றாக வேண்டும் என்கிற பெருங்கனவோடு இருக்கின்ற இந்திய நாடு.புத்தரும் காந்தியும் அம்பேத்கரும் பிறந்து பெருமை சேர்த்துக்கொண்ட பூமி.
இந்திய விடுதலையை முன்னெடுத்துச்சென்ற அன்றைய காங்கிரஸ் கட்சியின் ஆளுகையில் பன்னெடுங்காலம் மைய அர்சு இருந்தது . ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட நேர்மையான அரசியல்வாதிகளை நம்பிக்கையோடு ஆதரித்தனர் இந்திய மக்கள். தன் இறப்புக்குப்பின் தன்னுடைய சிதையின் அஸ்தியை வான் ஊர்தியில் கொண்டுபோய் இந்தியா முழுவ்தும் தூவச்செய்து இந்திய விவசாயியின் காலடிக்கலப்பையின் மண்ணோடு கலந்துவிட ஆசைப்பட்ட பேரான்மாவுக்குச்சொந்தக்காரர் அந்த நேரு பிரான்.
அவர் மனிதருள் மாணிக்கம்.பொதுத்துறை நிறுவனங்களைக்கோயிலென நம்பிப்ப்போற்றிய நேர்மையாளர்.
காலம் செல்லச்செல்ல நேரு கண்ட கனவுகள் அவரின் வழிவந்த ஆளுங்கூட்டத்தாலேயே சிதைக்கப்பட்டன.உலக அரங்கில் இந்தியாவின் தனித்தனமை என்பது கொள்ளைபோனது. இன்று அது கார்ப்பொரெட்டுகளுக்கு மட்டுமே நிம்மதியான வாழ்வு என்பதில் முடிந்து போய் நிற்கிறது .பணபலமும் அரசியல் அதிகாரமும் பெறுதல் எப்படி என்பதுதான் இன்றைய பிரதான விஷயங்கள்.
எங்கு பார்த்தாலும் ஊழல் எதிலும் ஊழல் என்பதைப்பார்த்து பார்த்துச்சலித்துப்போன இந்திய மக்கள் சென்ற பாராளுமன்றத்தேர்தலில் வாக்குகளை மாற்றிப்போட்டார்கள்.வேறு வழி தெரியவில்லை.வாய்ப்பந்தல் போடும் வல்லமையும்,மதத்தை மய்யமாக்கி பிரித்தாளும் வித்தையும் கற்று அரங்கேற்றும் அரசியல்வாதிகள் அதிகாரத்துக்கு வந்தனர்.நான்காண்டுகள் முடியப்போகிறது
.ஆள்வோரின் வெற்றுக்கூச்சல் மட்டுமே நாடெங்கும் கேட்கிறது. தேசிய பொருளாதாரத்தை நிமிர்த்திவிடுகிறேன் பார் என்று ஆரம்பித்து புழக்கத்தில் இருந்த உய்ர் மதிப்பு ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று உத்தரவு வந்தது.சாதாரண மக்கள் ஆங்காங்கே நடுத்தெருவில் நிறுத்தப்பட்டார்கள். வாழ்வு சீரழிக்கப்பட்டது. அவர்கள் சிதைந்துபோனார்கள்.கருப்புப்பணம் ஒழிக்கத்தான் வந்ததாம் அந்த மோடிவித்தை. ஆனால் எந்தக்கதையும் ஆகவில்லை. ஆகூ ஊகூ என்கிற முழக்கத்தோடு சரி. நன்மை எதுவுமே நடைபெறவில்லை.நாட்டை கருப்புப்பண முதலைகளிடமிருந்து 'காக்க கசப்பு' மருந்தென்று மக்களிடம் பொய்சொன்னார்கள்.
ஜி எஸ் டி என்று வரிவிதிப்புத்திட்டத்தை அவசர கோலத்தில் நாடெங்கும் அரங்கேற்றம் செய்தார்கள்.சிறு வணிகர்களும் விவசாயிகளும் பெருமளவு பாதிப்புக்கு உள்ளானார்கள். குழப்பமே மிஞ்சியது.
நாட்டுடமை ஆக்கப்பட்ட வங்கிகள் மக்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனங்கள். அப்படிச் செயல்பட்டுவரும் காலம் இனி விடைபெற்றுக்கொண்டுவிடலாம் என்கிற தோற்றம் உருவாக்கப்பட்டு விட்டது.உழைத்துச்சம்பாதித்த பணத்தை,பணி ஓய்வு காலபண பலன்களை வங்கிகளில் வைப்பாகவைத்து நிம்மதியாக இருக்கமுடியாது என்பதாக மட்டுமே அனுபவமாகிறது. கொள்ளையர்கள் மல்லையா, நிராவ் மோடி போன்றோர் எண்ணிக்கையில் கூடிக்கொண்டு போகிறார்கள்.நமது தேசிய வங்கிகள் கொள்ளையடிக்கப்படுகின்றன.மாறாக சிறுகடன் பெற்ற விவசாயிகள் நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள்.
உச்ச நீதிமன்ற விவகாரங்கள் குழம்பிய ஆளுகையின் கீழ் சிக்கித்தவிக்கின்றன.நீதிபதிகளுக்குள்ளேயே முரண்பாடுகள் மனப்புழுக்கங்கள், ஒரு நீதிபதியின் மரணம் அது குறித்து விசாரிப்பதில் முரண்பாடுகள்.
சென்ற தேர்தல்களத்தில் வீதி எங்கும் உலாவந்த 2G வழக்கு சுருங்கிப்போன விவகாரம்,சென்னைத்தொலைபேசியில் முன்னாள் அமைச்சரின் தொலைபேசி துஷ்பிரயோக வழக்கு என நீீர்த்துப்போனதுகளைப் பட்டியலிடலாம்.
காவிரி நீர்ப்பங்கீடுப்பிரச்சனையில் ஓரளவுக்கு உச்ச நீதிமன்ற த்தீர்ப்பு என்கிற ஒன்று வெளிவந்தாலும் அதையெல்லாம் செவிமடுக்க ஆளும் கர்நாடக அரசுக்கு எங்கேமனம் இருக்கிறது. கர்நாடகமெங்கும் தேர்தலில் பெறும் வோட்டுக்கள் பற்றியும் அவை கொணரும் சீட்டுக்கள் பற்றியும் கவலைப்படும் பெரிய பெரிய அரசியல் கட்சிகள்.
ஜம்மு காஷ்மீரத்தில் எப்போதும்போல் அமைதியற்ற சூழல்,சீனாவின் நிரந்தர எல்லைப்பிரச்சனை அது கொண்ரும் முஸ்தீபுகள்,வந்து வந்து போகும் இந்திய நேபாள உறவு உரசல்கள்,ஓயாத இலங்கைக்கடற்படையின் தமிழக மீனவர்களுக்கு எதிரான அடாவடித்தனங்கள் என்று இவை தொடர்கதையாகவே இருக்கின்றன.
அட்டவணை இனத்தோர் மீது தொடரும் வன்முறை,ஆதிவாசிகள் மீது தொடரும் அடக்குமுறைகள், ஏதுமறியாச்சிறுமிகளின் மீது நடத்தப்படும் பாலியல் வன்மங்கள் என்பவைக் கூடிக்கொண்டே போகின்றன.
மையத்தில் ஆளும் அரசு தனது மதவாதப்போக்கினை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.அதற்கு தொடர்ந்து கிடைத்த தேர்தல் வெற்றி அதன் கண்களைக்குருடாக்கி இருக்கிறது.அண்மையில் நமக்கு முன்னே உ பி
யிலும் பிகாரிலும் குஜராத்திலும் நடைபெற்ற பல்வேறு தேர்தல் முடிவுகள். ஆரோக்கியமான தீர்மானகரமன நல்லதொரு மாற்றங்கள் இனி வரலாம் என்கிற ஒரு நம்பிக்கையை வழங்கி இருக்கிறது.
பெரும்பணக்காரர்களின் பசுமையான வாழ்க்கையே தனது மூச்சுக்காற்றாக ப்பாவித்துச் செயல்படும் ஆளும் கட்சிக்கு சாதாரண நடுத்தர மக்களை ஏழைகளைப்பற்றியகவலை எல்லாம் படுவதற்கான அக்கறையை எதிர்பார்க்க முடியுமா?.மதவாத அரசியல் ஆரோக்கியமான் அரசியல் அல்ல என்பதை வருங்கால தேர்தல்முடிவுகள்தான் அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.
இந்திய இடதுசாரி இயக்கங்களுக்குத் தங்களின் சமூக ப்பார்வையை ஆகச்சரியாகஅமைத்து ஜன நாயக சக்திகளின் பலம் சிதறிவிடாமல் பொறுப்போடு காத்து, தேசத்தை ப்பாசிச தீயசக்திகளிடமிருந்து மீட்கவேண்டிய பெரும் பொறுப்பு இருக்கிறது.மதவாத சக்திகளிடமிருந்து இத்தேசத்தை மீட்காது போனால் வரலாறு இடதுசாரிகளை மன்னிக்காது.
அந்த வகையில் மக்கள் இயக்கங்கள் ஆற்றவேண்டிய பெருங்கடமை அவர்கள் முன்னே நிற்கிறது.
'எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்டே' என்பார்களே அதனைத்தான் தமிழகத்தின் அரசியல்களத்திற்கு ஒப்பாகச்சொல்லமுடியும்.ராஜாஜியும்,ஓமந்துர்ராரும்,காமரஜரும்,அண்ணாதுரையும் ஆட்சிசெய்த தமிழகத்திற்கு இந்தியாவின் மாநிலங்களுக்கு மத்தியில் மிகப்பெரியமரியாதை உண்டு.பிரிட்டீஷ்காரர்கள் இந்தியாவின் ஆளுகையை கவர்னர் ஜெனரல் ராஜாஜியிடம் ஒப்படைத்துச்சென்றார்கள்,இந்தியாவுக்கு பிரதமராக இந்திராகாந்தி வரவேண்டும் என்பதை தமிழகத்து காமராஜர்தான் முடிவுசெய்தார். ஒப்பற்ற ஓமந்தூரார் நேர்மைக்கு இலக்கணமாக தமிழகத்தில் ஆட்சிசெய்தவர். பிரதமர் நேரு மாநில அரசியலில் ஒரு யோசனைவைக்க அவரோடு கருத்து முரண்பட்டு தன் ஆட்சிக்கட்டிலை தூக்கி எறிந்த நெஞ்சுரம் வாய்ந்தவர் அந்த ஓமந்தூரார்..
ஆனால் இன்று அரசியல் எப்படி ஆகிப்போய் இருக்கிறது முதல்வர் ஜெயலலிதா காலமான்பிறகு தமிழக அரசியல் மய்ய அர்சின் ஆடுகளமாகி இருக்கிறது.
அம்மையாரின் மறைவுக்குப்பின் கட்சி மூன்றாக ஏன் நான்காக உடைந்து போனது. தேறிய இரண்டு பிரிவுகளுக்கு பிரதமர் மோடி அவர்கள் ஒட்டுப்போட்டு வைத்தார். தமிழக ஆட்சி என்னும் வண்டி தள்ளாடி தள்ளாடி ஓடிக்கொண்டு இருக்கிறது.எல்லா அரசியல் அலங்கோலங்களுக்கும் சாட்சியாக கொலுவிருக்கும் அந்த தமிழகஆளுநர்.
போக்குவரத்துதொழிலாளிக்கு ஓய்வு ஊதியம் வழங்குவதில் கூட தீராத சிக்கல். அந்தப் போராட்டம் நடக்கும்போதே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் உயர்த்திக்கொண்ட அழகு இங்கே நிறைவேறியது..
இடது சாரிகளே இல்லாத சட்டசபையைப் பெற்றிட்ட தமிழகத்தை என்னவென்று சொல்வது. காசுகொடுத்து எப்படியும் பெற்றுவிடலாம் தேர்தலில் வோட்டு என்றாகிவிட்டஇச்சோகம் தமிழக மக்களை எங்கேயோ கொண்டு நிறுத்தி இருக்கிறது. அரசியலில் எரிமலையாய்ப்பொங்கிய பொதுவுடமைத்தோழர் பாலதண்டாயுதமும்,சட்டசபையில் கர்ஜித்த ஜீவாவும் விடுதலைப்போராளி ராமமூர்த்தியும் வாழ்ந்து மறைந்த மண்ணில்தான் இத்தனையும் காட்சியாகிறது. .
கல்வி சிறந்த தமிழ் நாட்டில் நல்ல கல்விக்கு எத்தனை விலை. பணம் லட்சக்கணக்காக நன்கொடையாகத்தந்து மழலைப் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்ப்பது.பட்டிதொட்டி எல்லாம் பொறியியல் கல்லூரிகள் த்ரம் பற்றிய அக்கறை இல்லை.மருத்துவப்படிப்புக்கு மய்ய அரசின் நீட் தேர்வுப்பிரச்சனை.சமச்சீர்கல்வி என்பது நீர்த்துப்போய் சி பி எஸ் ஸியின் பின்னால் ஓடுவது என்கிற அவலம்.துணைவேந்தர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பிறகு அவர்களின் நியமனத்தில் ஆயிரம் பித்தலாட்டங்கள். இன்னும் எத்தனையோ.
மஞ்சுவிரட்டுதல் என்னும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்குத்தடை அதை எதிர்த்துப் பிறகு வரலாறு காணாத மக்களின் எழுச்சிப்போராட்டம் அதனில் பெற்ற வெற்றி.
காவிரியில் நீர்ப்பங்கீடு குறித்து உச்ச நீதிமன்ற ஆணையை என்றும் மதிக்காத கர்நாடகம்,அதற்கு எதிராகத் தமிழக மக்களின் எழுச்சிப்போராட்டங்கள்,மய்ய அரசின் மெத்தனப்போக்கு, அதற்குக் காரணமான கர்நாடக மாநிலத்தில் வர இருக்கின்ற தேர்தல் அதன் தாக்கம். சென்னைக்கு வந்த ஆகப்பெரிய பிரதமரை திரும்பிப்போ என்று கருப்புச்சட்டை அணிந்து தமிழர்கள் நடத்திய எழுச்சிமிகு போராட்டாம்,ஐ பி எல் கிரிக்கெட்டு க்கு சென்னையில் நடந்த உணர்ச்சிமிகு எதிர்ப்பு.பிறகு அவ்விளையாட்டு பூனே நகருக்கு மாற்றம்.
தொடர்ந்து நமது தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் நசுக்கப்படுகிறார்கள்.முடிவில்லாத சோகம் இது. ஓகிப்புயலும் அவர்களின் வாழ்வை உலுக்கி எடுத்து மீளாத்துயர் தந்தது.
தமிழ் மண்ணில் சாராயாக்கடைமூடப்பட பெண்களின் போராட்டங்கள்,காவிரிப்படுகையில் ஹை ட் ரோ கார்பனுக்கு எதிரான டெல்டா மக்களின் போராட்டம், தூத்துகுடி ஸ்டெரிலிட் நச்சு ஆலை எதிர்ப்பு ப்போர் இவை இவை இங்கு ஆரோக்கியமான சமூக நிகழ்வுகள்.
.தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான அடக்குமுறை என்பதுவோ சாதிய அதிகாரமய்யங்களால் தொடர்கதையாக நிகழ்த்தப்படுகிறது.பெயருக்குப்பின்னால் இங்கே தமிழ்மண்ணில் சாதிப்பட்டம் இல்லை.வெறும் பெயருக்கு அது மட்டுமே இல்லை.
நம்மூர் பல்கலைக்கழக பெரும்பத்விகளில் எப்படி இத்தனை அழுக்கு. இவற்றிற்கு ச்சரியான பரிகாரம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை தென்படவில்லை.நம்பிக்கை இல்லாத மனிதன் வாழ்வதற்கே தகுதியற்றவன் என்கிறார்கள்.என்னசெய்வதோ?
வெண்திரையில் மக்கள் கண்ட காட்சி நாயகர்கள் இன்று தமிழக அரசியலுக்கு வந்து நல்லது சொல்லத்துவங்கியிருக்கிறார்கள்.போகப்போகத்தெரியலாம் போகும் இடம் எதுவென்று.நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.தமிழக அர்சியலுக்குத் திரையுலகம்கூட ஒரு ஆகிவந்த தடமே.
----------------------------------------------------------------.
---------------------------- எஸ்ஸார்சி -எழுத்தாளர்.

No comments:

Post a Comment