Tuesday, April 9, 2019

pavannan- ettu thisai engum thaeti 7



7 பாவண்ணனின் கட்டுரை நூல்’எட்டு  ’திசையெங்கும் தேடி’’ யை முன் வைத்து..                                              
பாவண்ணன் தன்னுடைய முன்னுரையில் இப்படிக்குறிப்பிடுகிறார்.’எல்லோருக்குள்ளும் கொதித்துக்கொண்டிருக்கிற ஆற்றாமையைத்தான் இக்கட்டுரையின் வரிகள் பதிவு செய்திருக்கின்றன.’அப்பதிவுகள் பாவண்ணன் எழுத்துக்களில் வருகின்றபோது வாசகன் நிறைந்து போகிறான்..தனக்கும் அந்த எழுத்தாளனுக்கும் உணர்வு நிலையில் ஒரு பந்தம் இருப்பதை அவனால் அவதானிக்கவும் வாய்க்கிறது. அதுவே வாசகனுக்கு அந்த எழுத்தாளனோடு ஒரு நெருக்கத்தை உண்டாக்கி வளர்க்கிறது..அப்படி ஒரு வாசகன் என்கிற முறையில் நான் பாவண்ணனோடு பந்தப்பட்டிருக்கிறேன்.
விஷயங்களை எடுத்து வைக்கின்ற போது பிசிறு இல்லாமல் எடுத்துவைக்கின்ற கலை பாவண்ணனுக்கு இயல்பாகச் சாத்தியமாகிறது. .அவர் தன் கருத்துக்களை எழுதிச்செல்லும்போது அதை ப்படிக்கின்ற ஆர்வமுள்ள வாசகன் அவரைத்தொடர்ந்து சென்றுவிடும் வாய்ப்பைப்பெறுகிறான்..அவன் தட்டுத்தடுமாறி இடையே எங்கும் நின்று விடுவதில்லை.அதுவே பாவண்ணனின் எழுத்து வெற்றி.
பாவண்ணனின் எழுத்துக்கள் அவர் எளிய மக்களோடு மக்களாய், தன்னை தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டுவாழ்தலை உரக்கப்பேசுகிறது.தெருவில் சாதாரணமாய் நடந்துபோகிற ஒரு எளியவனின் ஆசாபாசங்களோடு அவர் படைப்புக்கள் உறவாடுகின்றன. ஏழை மக்களோடு இயல்பாக இணங்கி அவர்தம் உணர்வுகளை வலிகளை அபிலாஷைகளை உள்வாங்கிய  பின்னரே அவரின் எழுத்துக்கள் மலர்ந்து நிற்கின்றன.
கிராமத்து இயற்கை உன்னதங்களை அனுபவித்து அவர்களின் மனப்பத்தாயத்து செல்வங்களை ஓர்ந்து அவர்கள் பேசும் மொழி பேசி அவர்களில் தன்னையும் ஒருவனாய் எப்போதும் இனங்காணும் பாவண்ணன் வாசகப்பரப்போடு ஒன்றிவிடுகிறார்.
சமூக அக்கறையும்  அதன் விளைவாக எழும் தார்மீகக்கோபமும் அழகாக ஆரவாரமின்றி வெளிப்படுதலை அவரின் எழுத்துக்கள் சாத்தியமாக்குகின்றன.பாரடா உன்னொடு பிறந்த பட்டாளம் என்கிற பொதுமைச்சிந்தனையைப் பாவண்ணனின் படைப்புக்களில் அடி நாதமாகக்காணமுடிகிறது..
அகரம்  வெளியீடு.தஞசை - 35 கட்டுரைகளை உள்ளடக்கிய ‘எட்டுத்திசையெங்கும் தேடி’ என்னும் இப்புத்தகத்துள் பாவண்ணன் படைத்துள்ள சொல்லோவியங்களை இவண் ஆராய்வோம்.
 முதல் கட்டுரை இப்புத்தகத்தின் தலைப்பாக அமைந்த ’.எட்டுத்திசையெங்கும் தேடி,’ இது மொழிபெயர்ப்பு பற்றி வித்தாரமாகப்பேசுகிறது..பாவண்ணன் ஒரு நல்ல படைப்பாளி.ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளர். கன்னடத்திலிருந்து அனேக இலக்கிய பொக்கிஷங்களை தமிழுக்கு க்கொண்டு சேர்த்த பெரிய் மனதுக்காரர்.மொழி பெயர்ப்புக்காக சாகித்ய அக்காதெமி விருது பெற்றவர். மொழி பெயர்ப்பின் முக்கியத்துவம் குறித்துப் பாவண்ணன் எடுத்த எடுப்பிலேயே எடுத்து இயம்புகிறார்.
‘’இலக்கிய ஆக்கங்களைப்பகிர்ந்து கொண்டே இருக்கும் மொழியில்தான் புதிய உயிர்ப்புள்ள படைப்புகள் தோன்றிய வண்ணமிருக்கும்.எந்த ஒரு குறிப்பிட்ட மொழியிலும் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலம் எந்த மொழிபெயர்ப்பும் வெளிவரவில்லை என்றால் அந்த மொழி உறைந்துவிட்டது என்றுதான் பொருள். மொழியின் உறைவு ஏறத்தாழ மரணத்துக்குச்சமம்.’
தமிழ் நிலத்தில் மொழிபெயர்ப்பாளர்கள் பற்றிய கருதுபாடு அருகிவிட்டிருத்தலை மனம் வருந்தி ச்சுட்டுகிறார் பாவண்ணன். மொழிபெயர்ப்பாளர்கள் யார் யார் அவர்கள் தமிழ் மொழிக்குச் சாதித்த விஷயங்கள் எத்தனை எத்தனை என்கிற கணக்கெடுப்பு எங்கே இருக்கிறது.எனப் பாவண்ணன் கடிந்து கொள்கிறார்.’பெரும்பாலோர்க்கு மொழிபெயர்ப்பு இலக்கியம் குறித்த அறியாமை இருக்கிறது. அதற்காக அவர்கள் கூச்சப்படுவதுமில்லை என்கிறார் .வாசகன் ஒரு முறை அதிர்ந்து பின் கட்டுரையை வாசிக்கத்தொடருகிறான்.
இரண்டு விஷயங்கள் முக்கியமானது என மொழிபெயர்ப்பு மீது அக்கறைகொண்டு பாவண்ணன் குறிப்பிடுகிறார். எந்த எந்த மொழியிலிருந்து என்ன என்ன படைப்புக்கள் தமிழில் வந்துள்ளன இது ஒன்று. ஒரு மொழி பெயர்ப்பாளர் தம் வாழ் நாளில் என்ன என்ன படைப்புக்களை மொழிபெயர்த்து இருக்கிறார் என்பது மற்றொன்று. இவை தக்காரின் கவனம் பெறுதல் மிக மிக இன்றியமையாத விஷயமாகும். இப்படிக்  கவனம் செலுத்தவேண்டியவர்கள் அதனில் .சம்பந்தப்பட்டவர்கள் எல்லாம்  இக்கணம் எந்த கதியில் இருக்கிறார்கள் என்பது உலகு அறியும்.
இந்தக்கட்டுரையில் மலையாள மக்களின் மொழி பற்றிய உயர்வான பிரக்ஞையை பாவண்ணன்  பதிவு செய்கிறார். தான் கலந்துகொண்ட  சாகித்ய அகாதெமியின் திருச்சூர் கருத்தரங்கு  பற்றியும் அங்கு வைக்கப்பட்டிருந்த மொழிபெயர்ப்பு நூல்கள் பற்றியும் மிகுந்த அக்கறையோடு சுட்டுகிறார் .தமிழ் மண்ணில் அத்தகைய உணர்வு நிலை இன்னும் அரும்பவில்லையே என மனம் வருந்தி எழுதுகிறார் பாவண்ணன் எழுதிய  தொண்டர்களும் தலைமையும் என்கிற கட்டுரை வாசகனை  க்கொஞ்சம் அசைத்துப்போடும்.  தொழிற்சங்க இயக்கங்கள் பலவோடு நெருங்கிய தொடர்பு அவருக்கு இருந்திருக்க வாய்ப்புண்டு.தொலைபேசித்துறையில் பணி என்கிறபோது இயக்கங்களும் தலைவர்களும் என பலரைச்சந்திக்கவும் முடிந்திருக்கும்.அரசுத்துறைகள் பலவற்றின் இடையே தொலைபேசித்துறை ஆரோக்கியமான தொழிற்சங்க இயக்கங்களைக்கண்டது. தேசப்பற்றும் சமுதாய உண்ர்வும் உலகளாவிய பார்வையும் அங்கே சாதாரணமாகப்பார்க்க வாய்க்கும். அறிவியலை ஆதாரமாகக்கொண்ட துறை என்பதும் கூடுதலாக ஒரு நல்ல சூழல்.
.பாவண்ணன் அழகாக நிகழ் சிக்கலை எடுத்து வைக்கிறார். ‘ஆட்சியும் அதிகாரமும் மிகப்பெரிய போதை.அதன் ஒரே ஒருதுளியை ஒருமுறை பருகியவர்கள்கூட,அதன் பிடியிலிருந்து விடுபடமுடிவதில்லை.அந்த அளவு ஈர்ப்புள்ளதாக உள்ளது அந்த ருசி.  தலைமையோ  ருசிக்கு ஏங்குகிறது..தொண்டர்களும் ருசிக்கு ஏங்குகிறார்கள். இரண்டு பக்கங்களிலும் பொது நலம் மறைந்துபோகிறது.’ பொது நலம் என்று தொடங்கித்தான்  சுத்த சுய நலத்தில் முடிந்து நிற்கிறது.சுய நலம் என்பதன் அளவு அவரவர் திறமை சாமர்த்தியம் என்பதாக முடிகிறது. அரசியல் கட்சிகள் பற்றி இக்கட்டுரையில் ஆரோக்கியமான விமரிசனம் வைக்கிறார் பாவண்ணன்.’  நாலு சீட்டுக்கும் மூன்று சீட்டுக்கும் பேரம் நடத்துகிற தலைமையைக்கண்டு நாம்சிரிக்கத்தேவை இல்லை  நம்மைப்பார்த்தே நாம்சிரித்துக்கொள்ளவேண்டும். அவர்கள் பேரம் பேசுவது தொண்டர்களாகிய நமக்காகத்தான் என்றுதானே சொல்கிறார்கள்./?.அதை இல்லை என்று மறுக்க எந்த இயக்கத்திலிருந்து எந்தத்தொண்டன் முன் வரப்போகிறான்?. மனம் வருந்தி வார்த்தை சொல்கிறார் பாவண்ணன் அவ்வியக்கங்கள் நமதல்லவா!
. இடுப்பில் கட்ட .மாற்று வேட்டி இல்லாத தலைவர்களும் இந்த மண்ணில் உலவித்தான் இருக்கிறார்கள் என்பது பாவண்ணன் அறியாத செய்தி இல்லை. கண்ணெதிரே  சமூகம் மிகவும் சுய நலப்பித்து பிடித்து பேயாட்டம் போடுவதைத்தானே இன்று காண முடிகிறது.
. அடுத்து ஒரு கட்டுரை.’எங்கெங்கு காணினும் சுவரொட்டிகள்.’.டிஜிடல் தொழில் நுட்பம் நுழைந்த பிறகு எதற்கெடுத்தாலும் சுவரொட்டி வைப்பது என்கிற நோய் சமூகத்தைப்பிடித்து உலுக்கத்தொடங்கிவிட்டது.விளம்பரம் என்பதுவே மைய விஷயமாக மாறிவிட்டது..படம் வைப்பதும், எதற்கு எதற்கோ வண்டி வண்டியாய் நன்றி சொல்வதும் மலிந்துபோய்விட்டதை அனுபவிக்கிறோம்..வலது கை கொடுப்பதை இடது கை அறியாது என்கிற கலாசாரம் எல்லாம் பொசுங்கிப்போய் எத்தனையோ காலம் ஆகிவிட்டது. டிஜிடல் பேனர்களில் நன்றி நன்றி நன்றி இப்படி மண்டை மண்டையாய் எழுதியிருப்பது கண்டு பாவண்ணனுக்கு ஆத்திரம் எழுகிறது. ‘ நன்றி என்கிற. தமிழ்ச்சொல்லை இதைவிடவும் கேவலமாக யாரும் பயன் படுத்த முடியாது. அச்சொல்லை இன்னொரு முறை பயன்படுத்த க்கூடக்கூச்சமாக இருக்கிறது’இப்படி மனம் குமுறி எழுதுகிறார் பாவண்ணன். இந்த சுவரொட்டிக்கும் ஒரு அரசியல் கணக்கு இல்லாமலா? என்று ஒரு உள் விஷயத்தை எடுத்து வைக்கிறார்.
‘ நம் கண்ணுக்கு எழுத்துக்களாகத்தெரிகின்றவை உண்மையில் பெரிய பெரிய தூண்டில்களாகும்.பெறும் பலன்களின் அடிப்படையில் இத்தகு சுவொரொட்டித்தூண்டில்களின் அளவும் வண்ணமும்மாறுபடுகிறது..சுய நலம் என்னும் வியாதி சமூகத்தை அப்படிப்பிடித்து ஆட்டிக்கொண்டே இருக்கிறது என்கிறார் கட்டுரையாளர். தத்துவ விஷயத்தில் எப்போதும் சற்றுத் தோய்ந்துவிடும் பாவண்ணன்,கோடிக்கணக்கான உயிர்கள் வாழ்கிற இவ்வுலகில் ஒவ்வொருவரும் தன்னையே முதன்மையாகக்கருதிக்கொள்வது மிகப்பெரிய அறியாமை,மயக்கம்,தன்முனைப்பு என்றுகூடச்சொல்லலாம்’என்று தீர்மானத்துக்கு வருகிறார். மனித மனம் .சுய நலத்தால் அழுகிக்கிடப்பதை வாசகர்க்கு எடுத்துச்சொல்கிறார் கட்டுரையாளர்..
சுற்றுச்சூழல் பற்றி இப்பொழுது அங்கங்கு பேசவாவது தொடங்கியிருக்கிறோம்.அவ்வளவே. 
பூவுல உயிரின் இருப்புக்குத்தண்ணீர் எத்தனை முக்கியத்துவம் என்பதனை அறியாமலே வாழ்ந்துவிட்டோம்.வாழ்கிறோம்.ஒரு காலத்தில் பசி பட்டினியால் மடிந்தவர்கள் இந்த மண்ணில் லட்சக்கணக்கானவர்களுண்டு..வங்கப்பஞ்சம் என்பது கேள்விப்படாதவர்கள் இருக்கமாட்டோம்.. நம்மூரில் கஞ்சித்தொட்டி திறந்து பசியின் கொடுமையினின்று. மக்களைக்காப்பாற்ற முயன்ற வரலாறுண்டு .வடலூர் மகான் ராமலிங்கர் பசிப்பிணி துயர் துடைக்க அணையா அடுப்புக்களை தொடங்கிவிட்டுச்சென்றவர்.இன்றும் அந்நெருப்பு அணையாமல் அங்கே காத்து வருவது அறிவோம். அறிவியலின் தாக்கத்தால் மிகையாய் விளைந்து அதனை விற்றுவிட விவசாயிகள் படும் வேதனை சொல்லிமாளுமா?அன்று பட்டினி இன்று விளைவின் மிகுதி .இரண்டும் சோகமே. திருமண நிகழ்வென்றால் நடைபெறும் விருந்து அதனில் எத்தனை வகை பரிமாறுதல்.எவ்வளவு உணவுப்பண்டங்கள் குப்பைக்குச்செல்கிற து.யாருக்கும் அக்கறை என்பதில்லை. தாங்கொணா வெளிச்சமும் ஆரவாரமும் கூச்சலும் திருமண நிகழ்வை அனுபவிக்கத்தான் வைக்கிறதா நம்மை
..பாவண்ணன் பறிபோன பச்சைக்காடுகளுக்காக ஏங்குகிறார்.’ நம்மால் ஒரு மாளிகையைக்கட்ட இயலும்.ஆலையைக்கட்ட இயலும். ஒரு நிழல் வழங்கு தோப்பை உருவாக்கமுடியுமா? ஒரு காட்டை உருவாக்க இயலுமா? என்று பொருள் பொதிந்த வினா தொடுக்கிறார் பாவண்னன். நெஞ்சம் பதறுகின்ற கேள்விகள் அவர் கட்டுரையில் வந்து வீழ்ந்துகொண்டே இருக்கின்றன.அறிவியல் ஞானம் வளர்ந்து இருக்கிறது.ஆனால் நாம் பழைய மனிதர்களாக இல்லை. வெற்று எந்திரங்களாகி நிற்கிறோம்.. அன்று வீட்டுக்கிணற்றில் பத்தடி ஆழத்தில் தண்ணீர் கிடைத்தது.இப்போது இரு நூற்று ஐம்பது அடி போனாலும் தண்ணீர் இல்லை எத்தனை சோகம் என்கிறார் பாவண்ணன்.பள்ளிச்சிறார்களின் மனம்  நொறுக்கப்பட்டு அவர்களின் சிறகுகள் வெட்டப்பட்டு சிறகு இழந்த பறவைகளாக அவர்கள் வலம் வருவதை த்தன் கட்டுரையில் சுட்டுகிறார். நட்பைத்தொலைத்த ஒரு தலைமுறை கண்முன்னே வளர்ந்துகொண்டிருக்கிறது..அன்பு,இரக்கம்.கனிவு,பாசம்,கொடுத்தல்,பெறுதல்,அரவணைப்பு,ஆதரவு,தேற்றுதல்,வலியுணர்தல் இந்த எல்லாவற்றிற்கும் நட்புதான் நாற்றங்கால் என்பதை மறந்த சமூகம் எங்கே போய் முடியும் என்று நம்மைச் சிந்திக்கச்சொல்கிறார் பாவண்ணன். நட்பு என்பது ஒரு வலிமை என்பதனை உணர்த்த தவறிவிட்டோம் என்கிறார் கட்டுரையாளர்.
மனம் என்னும்  நல்ல நிலம் என்கிற கட்டுரையில் மனித உளவியலை.அலசிச்செல்கிறார் பாவண்ணன். பெண்மையை நாம் தவறாகப்புரிந்துகொண்டு மனித வாழ்க்கையை அணுகுவது கொடுமையானது. எப்போதும் அவள் ஒரு காமப்பொருளாகவே பார்க்கப்படுவது என்பது கொடுமையான உண்மை..ஒரு மிருகம் போல ஓடத்தொடங்குகிற மனிதன் வழியில் அகப்படும் உயிர்களை எல்லாம் தாம் உண்ணக்கிடைத்த இரைகளாக எண்ணிவிடுகிறான்.. பொன்னுக்கும் பொருளுக்கும் மதிப்பளிக்கத்தெரிந்த நமக்குப்பெண்ணை மதிக்கத்தெரியாமல் இருப்பதுதான் முதல் பிழை என்று பேசுகிறார்..தையலை உயர்வு செய் என்பான் மாகவி பாரதி.அதனை உள்வாங்கிக் கட்டுரையாளர் செல்வதைப்பார்க்க முடிகிறது..
’வன் முறையின் கரிய நிழல்’ என்னும் அனல் தெறிக்கும் கட்டுரைக்கு வருவோம்.மாபாரத யுத்தத்தில் அஸ்வத்தாமன் மட்டுமே இன்னும் உயிரோடு இருக்கிறான்.பீஷ்மரும் கர்ணனும் இன்னும் எல்லோரும் பூவுலக வாழ்க்கையினின்றும் விடை பெற்றுக்கொண்டு விட்டார்கள் .துரியோதனன் பக்கமிருக்கும் அஸ்வத்தாமன் தன் தலைவனுக்காய் திரொளபதியின் உறங்கும் பிள்ளைகள் அய்வரை பஞ்ச பாண்டவர்கள் என நினைத்து.எரித்துக் கொன்று முடிக்கிறான்.
.பாவண்ணன் சொல்கிறார்.’யார் மீதோ விசுவாசத்தைக்காட்ட யாரையோ அழிக்கக்கிளம்பி வேறு யாரையோ கொன்றுவிட்டுப்போன அஸ்வத்தாமனை நினைத்தால் பாவமாக இருக்கிறது.ஒரு வகையில் நாம் அனைவருமே அஸ்வத்தாமன்கள்தாமோ என்று நினைக்கத்தோன்றுகிறது.’
தம் தலைவனுக்குச்சிறு அவமானம் என்றால் அதனை ஒருவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லையே.அதற்காக ஊரையே கொளுத்திவிட்டு மகிழ்ச்சி பாவிக்கும் கும்பலை நாம் கண்ணால் பார்க்கிறோம்.இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் இறந்துபோன தன் மொழியே தெரியாத தன் முகமே பார்த்திராத தலைவனுக்காக வுருந்தி த்தலை மழித்து மொட்டைபோட்டுக்கொண்டவர்கள் இங்கு எத்தனைபேர்?. பெற்ற தாயை பெற்ற தந்தையை பட்டினியொடு அம்மணமாகத்  தெரு தெருவாக அலையவிட்டு வேடிக்கை பார்க்கும் இவர்கள் மனிதர்கள்தானா என்று அய்யம் வரவே செய்கிறது..பாவண்ணனின் எள்ளல் வினா  வாசகன் மனம் தொட்டுப்பேசுகிறது.
‘கொடுத்த கடனை திருப்பித்தர தாமதப்படுத்துகிறாயே என்று கடன்காரன் வாசலேறி வந்து கேட்கும்பொதெல்லாம் வராத அவமான உணர்வும் துக்கமும் நம் தலைவரை ஒருவர் பழித்துரைத்துவிட்டால் பொங்கி வந்துவிடுகின்றன’
. தலைவரின் மேலுள்ள பக்தி இறைவனின் மேலுள்ள மரியாதையைவிட பலமடங்கு அதிகமாகவே  ஒரு தொண்டனிடம் இருக்கக்காண்கிறோம்.சிந்தனை என்பதை முழுவதுமாக ஓரங்கட்டிய ஒரு படை, தலைமைக்கு எப்போதும் தேவையாகிறது.தலைவரின் கனம் பொருத்து படைவரிசைகளின் எண்ணிக்கை கூடலாம் குறையலாம்..திருக்கோவில்களில் அரோகரா சொல்லும் கூட்டமாக தொண்டர்கள் காட்சியாகின்றனர்..இப்படி த்தொண்டர்களை உற்பத்திசெய்யும் ஒரு அரசியலின் போக்கு நம்மை எங்கு கொண்டு போய்ச் சேர்க்கும் என்று மனம் அதிர்ந்து பேசுகிறார் கட்டுரையாளர். சிந்தனையாளர் பெர்னாட்ஷா  சமூகத்தைக் கறாராக விமரிசனம் செய்வதொப்ப தன் கட்டுரையைப் பாவண்ணன் எழுதிக்கொண்டு செல்கிறார்.
மெல்ல மனம் இனிச்சாகும் என்கிற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரை மென்பொருள் பொறியியலில் சிக்குண்டு வாழ்க்கையைப் பறிகொடுத்துவிட்டு அது அறியாமலேயே கையில் காசு மட்டுமே பார்க்கும் இளைஞர்கள் பட்டாளம் பற்றிப்பேசுகிறது.. பருத்தியும் புண்ணாக்கும் தின்றுவிட்டு டிராக்டரில் மட்டுமே ஊர்ப் பயணித்து வேளைக்கு பத்து பதினைந்து லிட்டர் பால் கொடுக்கும் அந்த பால் மாடுகளைப்போல ஜட வாழ்க்கை வாழும் மென்பொருள் பணியாளர்கள் பற்றி பாவண்ணன் மிகவும் அக்கறையோடு பேசுகிறார்.’இவர்களனைவருமே அறிவாளிகள் என்பதில் சந்தேகமில்லை.இருந்துமென்ன? தொலைந்து போனதுதானே மானிடனாய் வாழவேண்டிய அவர்களின் வாழ்க்கை.
உலகியல் அறிவின் முக்கியத்துவம்  முதலில் உணரப்படவேண்டும்.இரண்டு ஜெர்மனிக்கு இடையே அரசியல் வாதிகள் எழுப்பிய நெடிய சுவர் வரலாற்றில் தகற்கப்பட்டதை உணர்ச்சிகரமாகக்குறிப்பிடுகிறார். அந்த சுவருக்கு அகந்தையின் சுவர்கள் என்று பெயரிடுகிறார். அச்சுவர் பாவண்ணனால் பொருத்தமாக பெயரிடப்பட்டு இருப்பதை வாசகன் உணரவே செய்கிறான்.
குழந்தைகளைப்பற்றிய அக்கறை ஒரு கலைஞனுக்கு எப்போதும் இருக்கவேசெய்யும்.சுந்தர.ராமசாமி என்னும்மிகப் பெரிய  இலக்கிய ஆளுமை குழந்தைகள்  பெண்கள் ஆண்கள் .என்னும் நாவல் எழுதியிருப்பார். குட்டிக்குழந்தைகளோடு நான்கு ஆண்டுகள் வாழும் வாழ்க்கை ஒவ்வொரு மனிதனுக்கும் எவ்வளவு தேவையானது என்பது பற்றிக்குறிப்பிடுவார்.அன்னமூட்டும் கை –என்னும் பாவண்ணனின் கட்டுரை குழந்தைக்கு அன்னமூட்டும் தாய்மார்களைப்பற்றி வித்தாரமாகப்பேசுகிறது.குழந்தையின் மொழியைப்புரிந்துகொள்ள நமக்குப்பொறுமையும் காலமும் அவசியமாகிறது. தாய்மார்கள் வேலைக்குப்போகும் இன்றைய சமூகச் சூழலில் குழந்தை வளர்ப்பு ஒரு சவாலாகத்தான் மாறிப்போகிறது. ஒரு வீட்டு விலங்கை வளர்த்து விடுவது போல ஒரு குழந்தை வளர்ப்பையும் எண்ணிவிடுவது பெரிய தவறு என்பதை மறக்காமல் சுட்டுகிறார்.’
இளைதாக முள் மரம் கொல்க’ என்னும் கட்டுரையில் சாதியின் கொடு நாக்கு எப்படியெல்லாம் சமுதாயத்தில் பரவி விரவிக்கிடக்கிறது என்பதனை கவனமாய்ச் சொல்கிறார். சாதிய சமாச்சாரம் இங்கு இன்னும் வேர்விட்டுகூடுதலாய் வளரத்தான் நேர்ந்திருக்கிறது. சாதியம் ரத்தத்தில் ஊறிப்போன விஷயமென நமக்கு அனுபவமாகிறது. நாட்டில் நடைபெறுவது .மக்களாட்சி எதற்கும் ஓட்டு எண்ணிக்கையே பிரதானம் என்று ஆகிய பிறகு சாதிக்குப் புதிய சிறகு முளைத்துவிட்டிருக்கிறது.பொதுவுடைமை இயக்கமே ஆனாலும் சாதி பார்த்து ஆட்களை நிறுத்தினால்தான் கட்டிய டிபாசிட்டாவது தேறும் என்பது யதார்த்தம் .சமுதாயம் அதுவும் இந்தியச் சமுதாயம் சாதி என்பதன் வலிய சட்டத்துக்குள் சாமர்த்தியமாக தன்னை நிலை நிறுத்திக்கொள்ள த்தந்திரம் தெரிந்தே இயங்குகிறது.
.பாவண்ணன் இக்கட்டுரையில் ‘ஒரு திருமணத்தில் கலந்துகொள்ளவும் ஒரு குழந்தையைப்பழகவிடவும்கூட சாதி பார்க்கின்ற நமக்கு இன்னொருவரின் தப்பைச்சுட்டிக்காட்ட தகுதி இருக்கிறதா? என்று கேள்வி வைக்கிறார். நமக்கு இதில் எல்லாம் கூட வெட்கம் வந்துவிடுமா என்கிற செய்தியை நமது கள்ளமனம் சொல்லிக்கொண்டுதானே இருக்கிறது.
 சாதி பார்த்துப் பழகும் நமக்கு இறைவனிடம் நின்று பிரார்த்திக்க என்ன தகுதி இருக்கமுடியும் என்கிற வினா எழும்போதே இறைவனையும் சாதி சட்டத்துக்குள் எப்போதோ அடைத்துவிட்டதாகச் செய்திவந்து சேர்கிறது. எட்டாத இடம்போன தண்ணீர் என்கிற தலைப்பில் எழுதப்பட்டுள்ள ஒரு கட்டுரை மனித வாழ்முதலான தண்ணீரை த்தொலைத்துவிட்டு நிற்கும் சமுதாயம் பற்றி விபரமாகப்பேசுகிறது. புதுச்சேரியின் நீர் வளம் குன்றி கடல் நீர் அடிபுகுந்து கிணறுகள் நீர் நிலைகள் உப்பாகிப்போன சோகம் பேசுகிறது...ஒருமுக்கியமான விஷயத்தைமறக்காமல் இங்கு பாவண்ணன் கொண்டுதருகிறார்..விவசாயத்துக்கான ஆதாரமாகத்தான் ஏரியும் குளமும் பார்க்கப்பட்டதே தவிர  மானிட வாழ்வின் ஆதாரமே அவைதாம் என்கிற எண்ணம் சுத்தமாக நினைவுக்கு வராமல் போனது. என்பதே அது. எங்கோ ஒரு மேசையில் அமர்ந்து .மாதச்சம்பளம் வாங்கிச்சட்டைப்பையில் போட்ட அடுத்த கனமே  நிலத்தின் மீது இருந்த பிடிப்பு இற்றுக்கொண்டது என்பதனை ஓங்கிச்சொல்கிறார் பாவண்ணன்.
ஒரு நகரில் கட்டிட அனுமதி தருகின்ற போது பூங்கா ஒன்று அவசியம் என்கிறோம் ஒரு குளம் ஒன்று தோண்டப்படுதல் மிக மிக அவசியம் என்று மாற்றிச் சிந்திக்கவேண்டும் என்கிறார் பாவண்ணன்..தொடர்புடையவர்கள் இதனை கணக்கில் எடுத்துக்கொண்டால் நலம் பயக்க வாய்ப்பு ஏற்படும்.
தற்கொலைகளின் வேர்களைத்தேடி –என்கிற கட்டுரை இந்திய விவசாயி படுகின்ற பாட்டை இயம்புகிறது..கஜாப்புயல் வந்து பட்டுக்கோட்டை தென்னை விவசாயி நடுத்தெருவுக்கு வந்து கேவி க்கேவி அல்லவா அழுதான்..அதற்கு முன்னால் டில்லித்தலை நகரில் ஆயிரம் அலங்கோலம் பண்ணிக்கொண்டு ப்பார்த்தான்..ஹைடிரோகார்பன் இங்கு வேண்டாம் என்கிறான் அந்தக்கதிராமங்கலத்து விவசாயி யாருக்காவது அவன் சோகம் புரிகிறதா என்றால் இல்லை. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்று யாரிடமாவது போய்ப்பேச நம்மைக் கேலி பேசுவார்கள்தான்.
 விவசாயி மண்ணோடு ரத்த உறவு பேணி வாழ்ந்த வாழ்க்கை விதை நெல்லை க்கடையில் பொட்டலமாகக்கட்டி. எடுத்துப்போய் போடு உன் நிலத்தில் என்று வியாபாரிக்குக் கட்டளை தந்த அன்றே செத்துப்போனது. பாடுபட்டு ப்.பயிராக்கிய தக்காளியை, வெங்காயத்தை கறவை,மாடுகள் தந்தஅமுதப் பாலை தார்ச்சாலையில் கொட்டி அவன் போராட்டம் நடத்துகிறான் என்றால் அவன் நெஞ்சு எப்படியப்பா துடித்திருக்கும் என்பதை உணராத அரசு இயந்திரம் இருந்தென்ன போயென்ன.? நகரம் கிராமத்தைக்கபளிகரம் செய்வதை காலியாக்கி மகிழ்வதை வருத்தத்தோடு பதிவு செய்கிறார் பாவண்ணன்.விவசாயம் என்கிற  புனிதவிஷயத்தோடு தொப்புள்கொடி உறவு அவருக்குண்டு என்பதனை நாம் அனுமானிக்க முடிகிறது.
அதிகாரத்தின் கனிகள் என்னும் கட்டுரை பாவண்ணன் இதயம் பேசும் கட்டுரையாக இருக்கிறது.இத்தனை தைர்யமாக பாவண்ணன் எழுதியிருப்பது நம்மைச்சிந்திக்க வைக்கிறது. ஒரு காவல் நிலையத்தில் நடக்கும் அக்கிரமங்கள் எத்தனை கொடுரமானவை என்பதனை அடுக்கிக்கொண்டே போகிறார். கீதை நாயகன்.கண்ணன் பிறப்பில் கம்சனின் அரசு நடத்திய கொடுரக்கொலைகள் தொட்டு பாவண்ணன் பேசிப்பார்க்கிறார். அரசும் அதிகாரமும் காவல் துறையினரால் எப்படிக்காப்பாற்றப்படுகிறது என்பதனை வேதனையோடு பதிவு செய்கிறார்.’இன்னும் முப்பது நூற்றண்டுகள் ஆனாலும் அரசும் இப்படித்தான் நடந்து கொள்ளும்.அரசுக்குக்கட்டுப்பட்ட காவல் துறையும் இப்படித்தான் நடந்துகொள்ளும் என்று சொல்லும் பாவண்ணன் அதிகாரத்தை ருசித்தவர்கள் எப்படி  அதனை விடுவார்கள் என்று மையமான விஷயத்தைச்சொல்லி நம்மை யோசிக்க வைக்கிறார். இங்கு பாவண்ணனின் ஈரத்தை வீரம் வெற்றிகொண்டு விடுகிறது.
படைப்பூக்கமும் போட்டியுணர்வும் என்கிற கட்டுரையில் பாவண்ணன் படைப்பூக்கம் எப்படிச் சமூகத்தை வளப்படுத்துகிறது  ஒழுங்கு படுத்துகிறது ஆரோக்கியமான அடித்தளத்தை க்கட்டமைக்கிறது என்று பேசுகிறார். படைப்பூக்க்கம் இல்லா போட்டியுணர்வு மட்டுமே உள்ள மனித மனம் புதிய ஒன்றை படைப்பதற்குப்பதிலாகச் சமூகத்தை ப் பொறாமை உணர்வோடு சுற்றி ச்சுற்றி ஆக்கிரமிக்கிறது..அமைதி நிலவுவதற்கு மாற்றாகக் குழப்பமே தலைஎடுக்கிறது..
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதையில் பொறாமை எப்படி மனிதனை அழித்துமுடிக்கிறது என்பதனை எடுத்துக்காட்டாக வைக்கிறார் ’..தனக்கு ஒரு கண்ண் போனாலும் பரவாயில்லை அடுத்தவனுக்கு இரண்டு கண்களும் போகவேண்டுமே அது முக்கியம்’ என்கிறகுணம் நம்மைப்பிடித்து பேயாட்டம் ஆடவைக்கிறது என்பதனை அழகாகச்சொல்லிக்கொண்டு போகிறார் ..ராஜராஜசோழன். தஞ்சையில் பெரிய கோவிலை கட்ட அவன் குமாரன் ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒரு பெரிய கோவிலை நிர்மாணித்தான். இது படைப்பூக்கம் விரவிய போட்டியுணர்வால் சாதிக்க முடிந்தது என்கிறார் கட்டுரையாளர்.
புதியதாய் முளைக்கும் தந்திரங்கள் என்னும் தலைப்பிட்ட கட்டுரை குறுக்கு வழியில் எப்படி முன்னேறலாம் என்பதில்கூடுதல் முனைப்பு  காட்டும் சமூகமாக நாம் மாறி வருகிறோம் என்பதை வெளிச்சத்துக்குக்கொண்டுவருகிறது..எந்தத் தந்திரம் நமக்கு சாதகமாக அமைந்து அடுத்தவனைவிட நம்மை ஆதாயம் பார்ப்பவனாக மாற்றுமோ அதனைக் கெட்டியாக பற்றிக்கொள்ள கற்றுக்கொண்டு விட்டோம்.அந்த தந்திரத்திற்குச் சாமர்த்தியம் என்றும் திறமை என்றும் பெயர் வழங்கி இருக்கிறோம்..பாவண்ணன் மக்களின் மனோபாவத்தை அப்படியே படம் பிடித்துக்காட்டுகிறார்.
நம் கல்வியறிவு முழுக்க நம் தவறுகளையும் பிசகுகளையும் சரியென்று நிறுவிக்காட்ட மட்டுமே துணை புரிகிறது. என்று கடுமையான விமாரிசனம் ஒன்றை வைக்கிறார். ஆக நமது கல்வித்திட்டம் ஒரு மொண்ணையான கல்வித்திட்டமோ என்கிற அய்யம் உடன் வந்து நம்மை ஆக்கிரமிக்கிறது.விண்வெளியில் ஆயிரம் சாதனை புரிவது ஒரு பக்கம் இருக்க அந்த விஞ்ஞானிகளையே அரசியல் சூட்சியில் சிக்கவைத்த கொடூரமும் இங்கே நிகழ்ந்துதானே இருக்கிறது.
கழிவுகளை எப்படி நிர்வகிப்பது என்பதில் நமக்கு ஞானம் வசப்படவில்லை.தண்ணீரும் காற்றும் நஞ்சாகி நிற்கிற அவலம். டில்லித்தலை நகரில் சுவாசிக்க நல்ல காற்று இல்லை என்கிற விஷயம் உலகமே அறிந்திருக்கிறது.. நகரவாசியாக ஆகலாம். நகரம் எப்படி இருக்கிறது என்கிற பிரக்ஞை முதலில் நமக்கு வந்தாகவேண்டும்.ஏரிகளை தூர்த்து வீதிகளை சமைத்து விடுகிறோம். இதற்குள் கட்டிடம் கட்ட அரசாங்க எப்படியோ அனுமதியும் கிடைத்துவிடுகிறது..அனுமதிக்கப்பட்டபடி யாரும் கட்டிடம் கட்டுவதே இல்லை .ஒரு நான்கு கட்டிடம் கட்டும் கம்பெனிகள் வேண்டுமானால் அப்படி  இப்படி அதிசயமாக இருக்கலாம். ஆனால் நகரங்களில்.. நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது சதவிகிதம் விதிமீறல் கட்டிடங்கள்தாம். அவைகளை சரிசெய்ய நம்மைப்படைத்த அந்த இறவனால் கூட சாத்தியமில்லை என்கிறபடி விஷயம் சிக்கலாகி இருக்கிறது பணி நிறைவு சான்றிதழ் முறையாக வாங்கிய கட்டிடங்களுக்குத்தான் வங்கிக்கடன் கிடைக்கும் என்று  உத்தரவு கொண்டுவர யாருக்கும்.விருப்பம் இல்லை.வங்கிகள் வாழ் நிலையோ பரிதாபகரமாகத்தானே இருக்கிறது.
ஒரு பாட்டில் ரத்தம் என்னும் கட்டுரை அரசியல்வாதிகளுக்கு உயிரைவிடத்தயாராக இருக்கும் தொண்டனை ஒரு பாட்டில் ரத்தம் யாரோ ஒரு பெயர் தெரியாத ஏழைக்குக் கொடுக்க முதலில் தயாராகுமாறு வேண்டுகோள் வைக்கிறது.. நம் நாட்டில் பெய்கிற கொஞ்சம் மழைக்கும் கூட இந்த பெயர் அறியாத ஒருவனுக்கு கொடுக்கும் குருதிக்கொடையே ஆதாரம் என்று பாவண்ணன் நெஞ்சு தொட்டுப்பேசுகிறார்.
இன்றைய தேதியில் கல்வி ஒரு மூலதனம். பெட்டிக்கடை வைக்கவோ தள்ளுவண்டியில் காய்கறிவிற்கவோ செலவிடுகிற முதலீடுபோல பிற்காலத்தில் எதோ ஒருவேலைக்குச்சேர்ந்து சம்பாதிக்க இன்று செய்யப்படுகிற மூலதனம்.. இப்படி ஒரு தவறான கருத்து ச்சமூகத்தில் பதிந்துகிடப்பதை வருத்தத்தோடு சுட்டுகிறார் பாவண்ணன்.
பெண்ணிற்கு மறுமணம் என்பதை இந்த சமுதாயம் இன்னும் முழுமனதோடு ஏற்றுக்கொள்ளாத சூழல் நிலவுவதை துக்கத்திற்குரிய விஷயமாகவே எழுதுகிறார் கட்டுரையாளர்.
படித்தவன் பாவம் செய்தால் போவான் போவான் அய்யோ என்று போவான் என்பார் மகாவி, அப்படியே பாவண்ணன் சாதாரண மக்களிடமிருந்து பணம் திருடுவதற்குத்தான் கல்வியின் வழியே சிலர் கற்றுக்கொண்டார்கள்  எனில் அவர்கள் தானும் கெட்டு கற்ற கல்வியையும் அவமானப்படுத்துகிறார்கள்  என்று குறிப்பிடுகிறார்.
.கிராமங்களில்பள்ளிப் படிப்பை அரை குறையாய் விட்டுவிட்டு வீதி சுற்றி வருபவர்களை வானம் பார்த்த பூமியாகத்திரிபவர்கள் என்று அங்கதமாகச்சொல்கிறார்.. பாவண்ணனின்  இயல்பான சொல்லாட்சி இங்கு வெளிப்படுகிறது. அப்படி வானம் பார்த்தவர்களே பின்னாளில் அடியாட்களாக கட்டைப்பஞ்சாயத்து ஏஜண்டுகளாக மாறி ப்போகின்றசோகமும் நிகழ்கிறது.
தாய்மொழியின் முக்கியத்துவம் பற்றிக்கருதாமல் அதனை உதாசீனப்படுத்தி ஆங்கிலம் கற்றுக்கொண்டுவிட்டால் வாழ்வின் உச்சத்தைப் பொருளாதாரத்தில் நிறைவை எளிதில் எட்டலாம் என்கிற தப்புக்கணக்கு சமூகத்தில் வேர்கொண்டு நிற்பதை வேதனையோடு சுட்டுகிறார்.  பசுமை மரங்கள் பற்றிப் பாவண்ணனுக்கு எப்போதும் கரிசனம் நிறையவேஉண்டு .மரங்களின் மத்தியில் தன்  வாழ்வை கிராமச்சூழலோடு தொடங்கியவர் அல்லவா, ஆகத்தான்... தன் கவிதைகளில் வானுயர்ந்த மரங்களை உடன் பிறந்த மக்கள் எனவே ச்சுட்டுவார். ஒவ்வொரு மரமும் ஏதோ ஒரு வகையில் நமக்குத்தாயாகவும் தந்தையாகவும் சகோதர ச்கோதரியாகவும்  நிற்கிறது என்ப்பேசுகிறார். வாசகனுக்குச் சங்க கால இலக்கியங்களின் நினைவுகள் மனத்திரையில் எழும்பி ஓய்கின்றன..
 சமூக ஆரோக்கியத்தை க்கெடுக்கின்ற செல் பேசி சம்பாஷணைகள். செயல்பாடுகள்  மனித உடல் ஆரோக்கியத்தை க்குட்டிச்சுவர் ஆக்குகின்ற செல் பேசிக்கதிர்வீச்சுக்கள் இவை எல்லாவற்றையும் சுட்ட பாவண்ணன் தவற்வில்லை.
தாசில்தார் அலுவலகங்களுக்குச்செல்லும்போது லஞ்சம் கொடுக்க பணம் எடுத்துக்கொண்டு போனால் நீங்கள் தப்பிவிடலாம் இல்லை என்றால் உங்களை நிர்வாண மனிதனை விடக்கேவலமாக பார்ப்பார்கள் என்று கோபத்தோடு எழுதுகிறார் பாவண்ணன். இப்படியாக .அனுபவம் எல்லோருக்கும் நேர்ந்துதான் இருக்கும்.
தொலைக்காட்சிப்பெட்டிகள் எப்படி நம்மை ஆக்கிரமிக்கின்றன.எப்படி நம் சக்தியை உறிஞ்சி நம்மை சக்கையாக்குகின்றன என்றும் பேசுகிறார் பாவண்ணன். அரை மணி நேரத் தொலைக்காட்சித்தொடரே ஆறு மணி நேரத்துக்கான நம் சக்தியை எடுத்துக்கொண்டு விடும் என்கிற எச்சரிக்கையை விடுக்கிறார்.  நம்.வீட்டு முற்றத்தில் டி வி எனும் ரத்தம் உறுஞ்சும் அட்டை எப்போதும் தயாராகவே இருக்கிறது என்று வருத்தப்பட்டு ச்சொல்கிறார். .ஓய்வெடுத்தல் என்பது தொலைக்கட்சி முன் அமருதல் என்று தவறாக ப்புரிந்துகொண்டுள்ளோம்.. நமக்கு உயர்.ரத்த அழுத்தம் கூடுவதற்குக்கூட தொலைக்காட்சிமுன் அதிக நேரம் அமருதல் காரணம் என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்தான்.
நம் கண்முன்னே நிகழும் அக்கிரமங்களைப்பார்த்துவிட்டு வாளா இருந்துவிடக்கூடாது.அதற்கான சிறு எதிர்ப்பையாவது பதிவு செய்யாமல் இருப்போம் என்றால் நாம் மனிதனாகப்பிறந்து,  நமக்குச் சுரணை இருந்து என்ன பயன் என்று வினா வைக்கிறார் பாவண்ணன்.
சமூக அக்கறையுள்ளவனேஒரு எழுத்தாளன்  .பாவண்ணன் இவ்வழிச் சாதித்து  நம் மனதில் மிக உயர்ந்து நிற்கிறார்..
-------------------...
.




No comments:

Post a Comment