Thursday, November 18, 2021

கவிதை வாங்கலையோ

 கவிதை வாங்கலியோ                       -எஸ்ஸார்சி

 

 

 நீங்களே பாருங்களேன் இதோ கட்டு கட்டாய் அவன் வீட்டுப் பரணில் கிடக்கிறதே. அவனே தன் கையைச்சுட்டுக்கொண்ட அந்தக் காரியம்.

அவன் எழுதியது ஒரு  கவிதைப்புத்தகம்  ஞானத்தீ என்றுதான் அந்த நூலுக்குப் பெயர் வைத்து இருந்தான். பெயரில் ஒன்றும் குறைச்சல் இல்லை. .

எந்த பதிப்பகத்தாருக்கும் கவிதையைச்சீண்டுவது இல்லை என்கிற ஞானவைராக்யம் சித்தியான பிறகு கவிதைக்கு மவுசு அவ்வளவுதான்..நீங்களும் நானும் என்ன செய்வது. அவநுக்கோ யோசித்து யோசித்து மண்டை வலித்தது. குத்தல் எடுக்க எடுக்க எழுதி முடித்தக் கவிதைகளே அத்தனையும்..

            எக்கேடு கெட்டும் தொலையட்டும் அவை என விட்டு விடத்தான் மனம் ஒப்பியதா. அவன் பெற்றுப்போட்ட பிள்ளைகளாயிற்றே. உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு ஜீவிக்கும் சிற்றிதழ்கள்  விலாசம் சில அவனுக்குத்தெரியும். ஆகத்தான் அவ்வபோது சில கவிதைகள் அச்சாக்கி வெளிவந்தன.  அவை அவனை கிச்சு கிச்சு மூட்டிவிட்டனதான்

அச்சில் வெளிவந்த அந்தக் கவிதைகளை யாருக்கும் தெரியாமல் படித்து படித்துப் பார்ப்பான்  வீட்டில்  அவனைச்சுற்றி இருந்தவர்கள் கவிதை என்பதெல்லாம் என்ன விலை என்றுதான் கேட்டார்கள்.அவர்களைச்சொல்லி குற்றம் இல்லை. இந்தப்படிக்கு பூடக சமாச்சாரம் எல்லாம் பிரம்மனுக்கேகூட பிடிபடுவதில்லலை என்கிறார்களே.. ஆக அது அது அவர்கள் செய்தபுண்ணியம் பாவம். அவ்வளவே..

 சமூக சூழல் கொஞ்சம் என்று இல்லை, ஏகத்துக்கும் மாறித்தானே காட்சியாகிறது. தகவல் பரிமாற்றத்துறையில் தொழில் நுணுக்கம் அம்மாடியோவ் என்கிறபடிக்கு வளர்ச்சி கண்டிருக்கிறது. ஆக எத்தனைப்பிரதிகள் இக்கணம் வேண்டுமோ அத்தனைமட்டும்  ஒருவன் எழுதிய புத்தகத்தை அச்சடித்துக்கொண்டு சாமர்த்தியமாக இருந்துவிடலாம்.

 ஆனால்  இப்படி  சூட்சமாலங்கார பிரிண்ட் ஆன் டிமாண்ட்  டெக்னலாஜி ஜனிப்பதற்குக் கொஞ்சம் முன்னாலேயே அந்தக்கவிதை  நூலை  அவன் போட்டும் விட்டானே அரைகுறையாய் அவனுக்குத் தெரிந்த.அச்சகத்துக்காரன் ஆயிரம் பிரதிகள் அடித்துவிடலாம் என்று உற்சாகமாய்ச்சொல்ல அவனேதான் அச்சகத்து ஆட்களோடு கெஞ்சி க்கூத்தாடி அதனை ஐநூறு பிரதிகள் மட்டுமே எனக்குறைத்துக்கொண்டுவந்தான்.

 நாமே போடும் புத்தகத்தை .ஆயிரம் பிரதிகள் என அச்சடித்து வீட்டில் கட்டுக் கட்டி பரணையில் இருப்பு வைத்துக்கொள்வோம் என்றால் வாடகைக்குக்  குடியிருக்கும் ஒரே ஒரு கட்டில் போடும் அறை, கவ்பீன அளவு ஹால்  கொஞ்சமாகச் சமையலிடம் என்கிற மாதிரிக்கு உள்ள வீட்டில் எல்லாம் இது லேசில் சாத்தியமாகின்ற சமாச்சாரமா என்ன..

 அரசாங்கத்தார் அரசு நூலகங்களுக்கு ப்புத்தகங்கள் கொள்முதல் செய்வார்கள். ஒன்று இரண்டு என ப்புத்தகம் சொந்தமாய் செலவுசெய்து கொண்டுவருவோர் நூலக ஆணை பெற்றுவிட்டால் நஷ்டம் ஏதும் இல்லாது தப்பித்துவிடுவார்கள். ஆனால் இன்றைக்கோ அதெல்லாம் கதைக்கு உதவாது. சரியானபடிக்கு அந்தப் பலான  ஆசாமியைக் கண்டுபிடித்து.வெட்டுவதை வெட்டிவிட்டல்  அரசு நூலக ஆணை உங்களைத்தேடிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடுகிறது என்கிறார்கள்.அவர்கள் விஷயம் தெரிந்தவர்கள்..அவனால் எல்லாம் ஆகின்ற கதையா இது.

அதுவும் அவன்  கொணர்ந்திருப்பது ஒரு கவிதை நூல்.தமிழ் நாட்டில் மக்கள் தொகையைவிடக் கவிஞர்கள் தொகையே அதிகம் என்று பேசத்தெரிந்தவர்கள் ஏகடியம் பேசுவதெல்லாம் அவன் காதில் விழாமலா .அது நமக்கு சொல்லப்பட்டதே இல்லை என்றல்லவா அவன் காலட்சேபம் செய்துகொண்டுவருகிறான்..உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி என்று வரும் திரைப்படப்பாடலை அடிக்கொருதரம் அசைபோட்டுக்கொள்வான்.

அவனுக்கு சமுத்திரகுப்பத்தில் ஒரு ஆத்மசினேகிதன் இருந்தான்.அவனும் கவிதைகள் எழுதினான். கவிதைகள் நன்றாகத்தான் இருந்தன.சென்னையில் துலாக்கோல் என்னும் ஒரு புத்தக வெளியீட்டாளர் அதனை நூலாக்கி வெளியிட்டார்.சும்மா ஒன்றும் இல்லை அவனுக்கு ஆயிரம் ஆயிரமாக ரூபாய் செலவானது  ஒரே ஒரு பிரதியில்  அன்புடன் என்று எழுதி கையெழுத்தும்  போட்டு அவனுக்குத் தந்தான்.

வாழ்வில் முன்னேற வழிகள் நூறு என்று தலைப்புடன் கவிதை நூலின் அட்டை இருந்தது.அதற்குக்கீழாகக் கண்ணதாசதாசன் என்று பெயர் அச்சாகி இருந்தது. அவன் பெயர்தான் அது. ஜேசுதாசன் என்கிற அவன் இயற்பெயரை இப்படி மாற்றி ஒரு  புனை பெயராகவைத்துக்கொண்டான். யாரும் கேட்டால் நான் கண்ணதாசனுக்கு தாசன் என்பான். அது அவன் விருப்பம்.அதில் நமக்கு தாவா ஏதுமில்லை. புத்தகத்தின் தலைப்பு ஒரு கவிதை நூலுக்கான தலைப்பாக இல்லையே என்று அவனிடம் கேட்டும் விட்டான்.  ”அது புப்ளிஷர் பண்ணின வேல. கவிதை நூலை லைப்ரரிக்கு தள்ளிவிடணும்னா இப்படி தலைப்பை மாத்திட்டாதான் வேலைக்கு ஆகுமாம் ஆக க்கட்டுரை நூலைப் போல  புத்தகத்து பேர மாத்தி அச்சடித்து கொணாந்து இருக்காரு. புத்தக தலைப்பு உங்கள மாதிரி ஞானத்தீ ரணம் சுமந்து வேதவனம்ன்னா யாரு தொட்டுபாப்பாங்க நீங்களே சொல்லுங்க” என்றான் அந்தக் கண்ணதாசதாசன். நல்ல விபரம்தான் அந்த நண்பனிடம் ஒன்று கேடகப்போய் அவனுக்கு ஒன்பது கிடைத்தது.

 கவிதை நூலுக்கு வெளியீட்டு விழா எல்லாம் உண்டா என்ன? அதற்குப் படைபலமும் பணபலமும் கொஞ்சமாவது வேண்டுமே அவனுக்கு .ஏதும் இலக்கிய அமைப்பு கிமைப்பு ஆடல் கூடல் சாடல் பாடல் நாடல் என்று பெயர் வைத்துக்கொண்டு உறவாகவும் இல்லை. ஐநூறு புத்தகங்கள் அச்சடித்ததில் நூறு புத்தகங்கள் செலாவணி ஆகியது. நேராகவும் கொடுத்தான் தபாலிலிலும் அனுப்பினான்  சும்மாதான். ஏது ஏதோ ஊரிலிருந்து நான்கு பிரதிகள் போட்டிக்கு அனுப்புக என்றால் அன்றே அனுப்பினான்.பரிசு கிரிசு எல்லாம் வந்துவிடாது என்பது அவனுக்குத்தெரியாததுவா தபால் செலவும் கொரியர் செலவும் ஆனது .

 புத்தக .விமர்சனத்திற்கு என்று கொஞ்சம் பிரதிகள் அனுப்பினான். சில இதழ்கள் வரப்பெற்றோம் எனமட்டும் வெளியிட்டு சிறிய மரியாதை செய்தன அதற்கே கொஞ்சம்  போதை வந்தமாதிரி தெரிந்தது. இது என்னப்பா கேவலம்  இத்தனை ஈனத்தனம் என்று தன்னையே நொந்து கொண்டான்.

இன்னும் நானூறு பிரதிகள் கட்டுக்கு ஐம்பது என எட்டு கட்டுககளாக ப்பரணையில் கிடந்தன பார்க்கும்போதெல்லாம் மனம் என்னவோ செய்தது. தெருவில் மூன்று சக்கர சைக்கிளை உருட்டிக்கொண்டு  கோணல் தராசு பத்திரமாய் வைத்திருக்கும்  பத்தமடை பேப்பர் காரனிடம் போட்டுவிடலாம்.. மனம் கிடந்து அடித்துக்கொண்டது. ஞானத்தீ என்றல்லவா கவிதைப்புத்தகத்தின் தலைப்பு. அதுவேறு மனசாட்சியைக்கொஞ்சமாகவா ரணப்படுத்தியது.

ஒரு நாள்  அவனுடைய  மூத்த சகோதரர் அதிசயமாக  அவன் வீட்டிற்கு விஜயம் செய்தார். கையில் மஞ்சள் நிறத் துணிப்பை.அதன் உள்ளிருந்து கட்டு கட்டாக பத்திரிகைகளை எடுத்து வெளியில் வைத்தார்.

‘தம்பி எனக்கு மணிவிழா வருது. ஆயிட்டுது எனக்கும் வருஷம் அறுவது. இதுக்கு போயி  எதுக்கு  ஒரு விழான்னு வீண் செலவுன்னு யோசனையில் இருந்தேன். பாப்பாவும் மாப்பிள்ளையும் வுடமாட்டேன்னு வம்பு பண்ணிட்டாங்க.   உன் அண்ணியும் மாப்புள சொன்னதை எததான் தட்டி இருக்கா. பெறவு என்ன பண்ணுவ  நானும் சரி செய்யுங்கன்னு சொன்னன். இந்தா  பத்திரிகை.. நாலு நாளுக்கு முன்னாடி வந்துடு. காரியம் கெனமா கெடக்கு‘ அண்ணன் ஒரு பத்திரிகையை அவனிடம் ஒப்படைத்தார்.

‘எனக்கெல்லாம் பத்திரிக எதுக்கு  கூடப்பொறந்த அண்ணனுக்கு அறுவது.  நான் தம்பி எனக்கு பத்திரிக வைக்குணுமா. வாடா கழுதன்னா வரப்போறன்’. பதில்சொன்னான்.

‘ நீ இனிமேலுக்கா பேச கத்துக்க போற’ அண்ணன் சிரித்துக்கொண்டார்.

  தேனீர் ஒரு கோப்பை போட்டு எடுத்துவந்து அண்ணன் முன்பாக வைத்தான்.

‘எங்க யாரும் காணும் உன் மவ, பொண்டாட்டி அதுவ எங்க’

‘  சனிப்பிரதோஷம்னு அந்த செவன்கொவிலுக்கு போயிருக்காங்க’

‘ரொம்ப நல்லது, வந்தா  விஷயம் சொல்லு நான் நேரில வந்தேன்னும் சொல்லு’. ’ அண்ணன் புறப்பட்டார்.

ஒருயோசனை அவனுக்குத் திடீர் என்று வந்தது. ’மணிவிழா அண்ணனுக்கு என்றால் எப்படியும் உற்றார் உறவினர்ன்னு கூட்டம் வரும். அவுங்களுக்கு எல்லாம் தாம்பூலப்பையில தேங்கா ஒண்ணு போட்டு போட்டு தருவாரு அண்ணன்.  அது ஒரு மரியாதையாச்சே. அப்ப தேங்கா போடாம அதுக்கு பதிலா நம்ப கவிதை ப்புத்தகம் ஞானத்தீ ஒரு பிரதிய அந்த பையில போட்டு குடுத்துட்டா என்ன.  நம் வீட்டு பரண்ல செம கொஞ்சமாதிரிக்கும் இருக்கும். அண்ணனுக்கு உதவினதாவும் இருக்கும்’  சரி எப்படியோ இந்த புத்தகக்கட்டுகள் இடம் பெயர்வதற்கு ஒரு வழி கிடைத்துதான் விட்டது. மகிழ்ச்சிபாவித்தான்.   லேசாக ஒரு சிரிப்பும் சிரித்துக்கொண்டான்..

மணிவிழா நாளும் வந்தது. அவன் மனைவிக்கும் இந்த புத்தகக்கட்டுகள் இந்த இடத்தைவிட்டு வேறிடம் செல்வதில் திருப்திதான்.  ஆனாலும் அவன் மனைவிக்கு ஒரு சந்தேகம். அந்த மூத்தார் இந்த ஞானத்தீ புத்தகத்தை தாம்பூலப்பையில் போட்டு அனைவருக்கும் வழங்வியும்விடுவாரா என்று. இதனை எல்லாம் வெளியில் சொல்லாமல் அழுத்தமாய் இருந்தாள். நமக்கு ஏன் பொல்லாப்பு என்றபடிக்கு அவளின் சாமர்த்தியம்தான் காரணம்.

டவுன் பஸ்சில் ஏறினால் நாலாவது நிறுத்தம் மணிவிழா நிகழ் மண்டம். ஆனாலும் அவன் ஒரு ஆட்டோ வாடகைக்கு அமர்த்தினான்.அவனும் அவன் மனைவியும் ஆட்டோவில் மையமாய் அமர்ந்துகொள்ள  அவர்களைச்சுற்றிலும்  கவிதைப்புத்தகக்கட்டுகளை அடிக்கி வைத்துக்கொண்டு மண்டம் நோக்கிச்சென்றார்கள்.ஆட்டோகாரன் கடுப்படித்துகொண்டே வண்டியை ஓட்டினான்

.’இது என்னா டெம்போவா  ஆட்டோதானே, ஏறுனா ஆளுவதான் குந்தலாம். பத்து கட்டு புத்தகத்தை தூக்கியாந்து  உக்காந்துகற ஆள சுத்தி வச்சிகிட்டா அது என்னா இந்த சனத்துக்கு அம்மாம்  சாமர்த்தியம்ங்கறன்’

‘இப்ப என்ன சொல்லுற’

‘ நூறுன்னு பேசுனதை நூற்றி அம்பதா குடுங்க’

‘மூணு பேரு ஆளு மட்டுமே ஏறி இருந்தா அப்ப என்ன சொல்லுவ’

‘’அப்ப சொல்ல என்ன இருக்குது.  இப்ப வண்டில செம ஏத்துனதாலதான பேசுறன்’

‘அத அங்கய  நீ சொல்லி இருக்கலாமுல்ல’

‘சொன்னா வேற ஆட்டோகாரன தேடுவிங்க எம் பொழப்புன்னு ஒண்ணு இருக்குல்ல’

‘சரி  அத வுடுங்க உங்களுக்கு எத எப்ப எப்பிடி செய்யிணும்னு எண்ணைக்குதான் வெளங்கிச்சி’

அவன் மனைவிக்கு ஆட்டோவில் சும்மா உட்கார்ந்து இருக்கப்பிடிக்காமல் தன் பங்குக்கு அள்ளிப்போட்டாள்..

அதற்குள்ளாக ஆட்டோ விழா மண்டபத்திற்கு வந்தும்விட்டது. ஆட்டோகாரன் இறங்கி புத்தகக்கட்டுகளை இறக்கி ஒரு ஓரமாக வைத்துக்கொண்டிருந்தான்.

அவனும் அவளும் மெதுவாக ஆட்டோவைவிட்டு இறங்கிக்கொண்டிருந்தனர்.

அரை மனதோடு அவன் நூற்றைம்பது ரூபாயை எண்ணி எண்ணி ஆட்டோகாரனிடம் ஒப்படைத்தான்.

‘ மண்டபத்துக்குள்ளாற இந்த பொத்தக செமயை கொண்டுபோய் வச்சிடலாமுல்ல’

அவன் ஆட்டோகாரனிடம் பரிதாபமாய்க் கெஞ்சினான்.

அதற்குள்ளாக அவன் அண்ணனும் அண்ணியும் அந்த இடத்திற்கு வந்து’ வாங்க எல்லோரும் வாங்க’ என்று அழைப்பு தந்தனர்.

‘ என்ன இங்க பொஸ்தகம் எல்லாம்’

அவன் அண்ணன் ஆரம்பித்தார்.

‘ நீ தாம்பூலப்பையில போட்டுக்குடுக்க நானு நாநூறு புத்தகம் கொண்டாந்து இருக்கன்  எல்லாம் நான்  எழுதின கவிதைங்க ஞானத்தீ

அண்ணனுக்கு பதில் பவ்யமாய்ச் சொன்னான்.

‘என்னா இது தாம்பூலப்பைய்ல போட்டுகுடுக்கறதா  இந்த பொஸ்தகத்தயா நல்லா இருக்கு க.தெ. இதுங்க எல்லாம் யாரு யோசனை’ என்று சொல்லி அவன் கூட நிற்கும் அவன் மனைவியை, இறுக்கமாய் ஒரு பார்வை பார்த்தார். அவன் மனைவி தனக்கும் இந்த யோசனைக்கும் சம்பந்தமில்லை என்று உதட்டைப்பிதுக்கினாள்.

ஆட்டோகாரன் அங்கயே நின்றுகொண்டிருந்தான். அவனுக்கு மண்டபத்தில் ஏதும் வேறு கிராக்கி கிடைக்கலாம் என்கிற தொழில் யோசனை.

‘ஏ ஆட்டோ இந்த பொஸ்தகக்கட்டுங்களை அப்படியே நீ எங்க ஏத்துனயோ அந்த வூட்டுலயே கொண்டுபோய் எறக்கிடு’

‘என்ன அண்ண நா ஆசை ஆசையா கொண்டாந்து இருக்கன் இப்படி என்னைக் கெடாவிப் பேசுற’

‘ நீ எதனா எழுதுவ அத கவிதம்ப நாலு பேரு அத ஆமாம்பான். யார் இல்லேங்கறாங்க.. அதுக்குன்னு இத தாம்பூலப்பைல போடுறேன்னு  உனக்கு யோசனை  வந்தா அது வெளங்குமா.’

அதற்குள்ளாக அண்ணனின் மனைவி ஒரு கவிதைப் புத்தகத்தை எடுத்து தடவிப்பார்த்தாள். அவனுக்கு மகிழ்ச்சியாகக்கூட இருந்தது.அவன் மனவி கூட அப்படி  அந்தப்புத்தகத்தை எல்லாம் எங்கே தொட்டுப்பார்த்தாள்.

‘ஞானத்தீ’ ன்னு புத்தகம் பேரு. தீ தீயின்னு வருது அதப் போய் சுப நிகழ்ச்சியில தாம்புலப்பையில போடுவாங்களா’ அண்ணியார் நன்றாகவே பேசினார்.அவனுக்கு சுரீர் என்றது .தலையில் யாரும் குட்டிதான் இருப்பார்களோ என்று தடவிப்பார்த்தான்.

ஆட்டோகாரன் புத்தகக்கட்டுக்களை ஆட்டோவில் அடுக்கிவைத்துக்கொண்டான்.

‘ நீங்க யாரு வர்ரீங்க’

‘ நீ போயி  தம்பி வூட்டு வெளி கேட்டை லேசாதள்ளிபுட்டு இதுவுள உள்ளாற வச்சிடு. அவுங்க அப்புறமா வந்து அத எடுத்து எங்க வக்கிணுமோ அங்க வச்சிகுவாங்க. இந்தா நூறு ரூவா. உனக்கு ஆட்டோ சார்ஜுக்கு வச்சிகு’ அண்ணனே ஆட்டோகாரனிடம் எடுத்துக்கொடுத்தார்.  பணத்தை வாங்கிக்கொண்ட ஆட்டோகாரன் வண்டியை நகர்த்தினான்.

‘ ஒரு தேங்காய போட்டு  தாம்பூலப்பையில குடுத்தா  தோசக்கி இல்ல இட்டிலிக்கி ருசியா ஒரு சட்னிக்கு ஆவும்  இந்த பொஸ்தகம் என்னாத்துக்கு ஆவும் சொல்லு’

அண்ணன் அவனிடம் சொல்லி நிறுத்தினார்.

ஆட்டோகாரனும் இதனைக் காதில் வாங்கிக்கொண்டான்.

‘ நீ ஏன்பா  இன்னும் நிக்குற கெளம்பு’ கெளம்பு ’ என்றார் அவனின் அண்ணன் ஆட்டோகாரனிடம்.

---------------------------------------------------------------------------

No comments:

Post a Comment