Monday, July 14, 2025

ஜூன் 2025 சிறுகதை குவிகம் தேர்வு

 

ஜூன் 2025  ல் வெளிவந்த சிறுகதைகள் குறித்து.

எல்லோருக்கும் வணக்கம். நான் எஸ்ஸார்சி

குவிகம் நிர்வாகிகள் ஜூன் மாதம் வெளியான . 54 சிறுகதைகளை எனக்கு அனுப்பிவைத்தார்கள் அவைகளை நான் மூன்று தவணைகளில் பெற்றுக்கொண்டேன். அவை அத்தனையும் படித்துப் பரிசீலித்துக் கீழ்க்கண்ட  முடிவுகளைத் தெரிவிக்கிறேன்.

முதல் தகுதி பெறும்  சிறுகதையாக ஜூன் மாதம் அம்ருதாவில் வெளியான’’காலியாகுதல்’ என்னும் சிறுகதையைத்தேர்வு செய்கிறேன். சிறுகதையை எழுதியவர் வண்ணதாசன். சிறப்பான கதைக்கரு.  அற்புதமான நடை.

சிறுகதையில்  வரும் நடராஜன் என்னும் ஆசிரியர் சொர்ணாம்மாவைத்  திருமணம் செய்துகொள்கிறார். தம்பதியர் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள்.  ஆனால்  ஒரு கொடுமையான விஷயம் நடந்து விடுகிறது.   சொர்ணாம்மாள்  தனது  முன்னாள் காதலன் சரவணனுக்கு உடல் நிலை சரியில்லை ஒரு நடை  பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று போய் விடுகிறாள். ஆனால்  அவள்  திரும்பி வரவேயில்லை.

நடராஜன்,  பெருமாள் லட்சுமியை இரண்டாவது திருமணம்  செய்து கொள்கிறார்.

 சொர்ணத்தோடு  தான் வாழ்ந்தபோது கேட்ட அந்தக் கிளிச்சத்தம் மட்டும்  ஏனோ அவருக்குத்திரும்பக் கேட்கவேயில்லை.

இந்த இரண்டு திருமணத்தையும் நண்பர் ஆயான் முன்னின்று நடத்துகிறார்.

சரவணனோடு  வாழ்ந்து வந்த நடராஜனின்  முதல் மனைவி சொர்ணம் செத்துப்போகிறாள்.  சாவு செய்தி  வருகிறது.  ஆயான்  சொர்ணம் சாவுக்குச் சென்று வருமாறு  நடராஜனை வேண்டுகிறார். அவரும்  அதற்குச்செல்லத்தயார் ஆகிறார். அவரோடு பெருமாள் லட்சுமி என்னும் அவரின் இரண்டாவது மனைவியும் மகனும்  இணைந்து செல்லவேண்டும்.  அவரை   எப்போதும் ஆற்றுப்படுத்தும் அனுபவஸ்தர்  ஆயான் அவர்களோடு  உடன் வரவேண்டும் என இருவருமே விரும்புகின்றனர்.

ஓடிப்போன அந்த சொர்ணத்தோடு வாழ்ந்த  சரவணன்,

 ‘நீங்க மூணு பேரும் வந்து அவளை நல்லபடியா வழி அனுப்பி வைக்கணும்’ என்று  சொல்லி அனுப்பிய  சேதியோடு சரவணனுக்கு வேண்டிய இருவர் நடராஜன்  இல்லம் வருகின்றனர்

பெருமாள் லட்சுமி   அவர்களை வரவேற்கிறாள். இருவருக்கும் பவண்டோ  கொடுக்கப்படுகிறது. ஒருவர் உடனே குடித்துவிட்டுக் காலி செய்துவிடுகிறார்.. மற்றொருவர் பாட்டிலைக் கையில் வைத்துக்கொண்டே குடிக்காமல் இருக்கிறார். இதற்குக்காரணம் ஏதுமில்லை. அப்படி அமைந்து விடுகிறது மனித வாழ்க்கை என்கிறார் வண்ணதாசன்.

மனிதன் நிகழ்ந்துவிட்ட கசப்பான விஷயத்தை மனதிலிருந்து அகற்றி வாழ முயற்சித்தல் சிறந்தது  என்னும் உயரிய மானுடப் பண்பு போற்றும்  சிறகதை.  சிறப்பான படைப்பு.

நன்றல்லது அன்றே மறத்த்ல் நன்று என முடியும்  குறளை வாசகன் எண்ணிப்பார்க்கிறான்.

பிற கதைகள் பற்றி,

உயிர் எழுத்து வில் வெளியான இன்னொரு கதை’ முறிவு’ எழுதியவர் அபிமானி. அணிலுக்குச் சாப்பாடு கொடுத்து மகிழும் கதாநாயனின் கதை. எச்சில் சோறு கொடுத்தால் தொடாத அணில் பற்றிய செய்தியொன்று கேட்கிறோம். கல்வியில் வேலை வாய்ப்பில் இடது ஒதுக்கீடு பற்றி ஒரு விவாதத்தை அணிலின் கதையோடு முடிச்சுப்போடுவதுதான் நெருடலாக எனக்குப்படுகிறது.   மற்றபடி அபிமானியின் கதை சொல்லல் சிறப்புத்தான்.

மீண்டும் ஒரு உயிர் எழுத்து கதை.’ ஒரு பைத்தியக்காரனும் ஒரு சைக்கோகாரனும்’ எழுதியவர் கோவிந்த் பகவான். சிறப்பான நடை. செழுமையான விவாதம் .  ’அவன் அப்படித்தான் காபி சாப்பிடும் போது காபியை மட்டுமே சாப்பிடுவான். நல்ல கழுகுப்பார்வை ஆசிரியருக்கு

.பவா செல்லதுரை எழுதிய  வீணை என்னும் சிறுகதை  விகடனில் வெளியானது. காதல் படுத்தும் பாடு பேசு பொருளாகியிருக்கிறது. வீணைஎன்னும் இசைக்கருவி காதலர் இடை கிடந்து திண்டாடுகிறது. விரு விருப்பான கதை.

’இன்றைக்கு என் பெயர்’  நெய்வேலி பாரதிக்குமார்  எழுதி குமுதத்தில் வெளியான  படைப்பு.   தமிழ் ஆசிரியர்  பரிதி அய்யா பற்றிய ஒரு புதுமையான கதை.’ நதியில் விளையாடி கொடியில் தலை சீவி’ கரும்பலகையில் எழுதிப்போட்டு எதுகை மோனை இலக்கண விளக்கம் தரும்  ஒரு தமிழ் ஆசான் பற்றிய கதை. அற்புதமான எழுத்து.

ரேவதி பாலு எழுதிய  ’மது ஒழிப்பு மாநாடு’  சிறுகதை நடுகல்லில்  வெளி வந்திருக்கிறது. பேசுபொருள்  சாராயக்கடை திறப்பதை எதிர்த்து ஒரு இயக்கம்.  உயரிய நோக்கம். வாழ்த்துக்கள்.

பொதுவாக சில  சிறுகதைகள் சாதாரணமாகவே  இருந்தன. பாலியல் மிகையாய்ச் சில கதைகள் காணப்பட்டன.

25, 26  பக்கங்கள் எழுதி அதனைச்சிறுகதையெனச் சொல்லும் படைப்புக்களும் உண்டு.  சிறுகதை எழுத்தாளர்கள்  எல்லோருக்கும்  எனது வாழ்த்துக்கள்.

நல்வாய்ப்பு வழங்கிய குவிகத்திற்கு எனது நன்றிகள்.

மிக்கஅன்புடன்

எஸ்ஸார்சி

 

 

 

 

No comments:

Post a Comment