எஸ்ஸார்சி வாசித்த கவிதை 3
அழகென்பது. – கலீல் ஜிப்ரான்
அழகு எது என்று சொல்வாயோ
கவியின் கேள்வி
விடையோ வினாவாய்
எங்கே அழகைத் தேடுவாய் நீ?
அழகே வழி சமைத்து
அவ்வழியே வழி காட்டி
அமையக்கிடைக்கலாம் அழகு
அழகு பற்றி இன்னும்?
அழகே மனமிறங்கி அதனை
அமைத்துக்கொடுக்க
அது சாத்தியமாகலாம்
மனம் துன்புற்றவனும்
உடல் புண்பட்டவனும் சொல்கிறான்
அழகென்பது கருணை
அழகென்பது அனுசரணை இளந்தாய்
ஒருத்தி தன் பெருமையின் பிடியில்
கொஞ்சமாய் வெட்கப்பட்டு நம்மிடையே
நடப்பதொப்பதழகு
உணர்ச்சி வயப்பட்டோன் சொல்வான்
அப்படி இல்லை அழகென்பது
வலிமை அது அஞ்சவும்
வைப்பது கீழிருக்கும்
இப்பூமியை மேலிருக்கும் அவ்விண்ணை
உலுக்கிப் போடும் இளம்புயல் அது
களைப்பும் சலிப்பும் கொண்டவன்
விடை சொன்னான்.
அழகு மென்மையின் அழைப்பு
அழகு நம் உணர்வின்
உயர் தளத்தில் நம்மிடம்
சம்பாஷிப்பது
ஒரு சிறிய
ஒளிக்கீற்று சூழ்நிழலைக்
கிழித்துக்கொண்டுப் பாய்வதொக்கும்
ஆயின்
மனக்கவலையில் தோய்ந்தவன் சொல்கிறான்.
மலைகளின் நடுவே
அழகு எழுப்பும் பேரொலி
நாம் கேட்டிருப்போம்
அதனைத் தொடர்ந்து தானே
புரவிகள் குளம்பொலி
இற்க்கைகளின் படபடப்பு சிம்ம கர்ஜனை
மாநகர இரவுக்காவலாளி பகர்கிறான்
அழகென்பது புலரும் காலையில் கிழக்கின் உதயம்
நண்பகல் உழைப்போனும் நடைப்பயணம்
செல்வோனும் சொல்கிறார்கள் கதிரவன் மறைபோதே
சாரளமாகி அழகுப் பெண் பூமி மீது
ஒய்யாரமாய்ச் சார்ந்திருப்பாள்
மாரிக்காலப் பனி போர்த்தியவை சொல்லும் குன்றின் மீது
தவழ்ந்து வசந்த காலத்தில் உலாவரும் அழகு
கோடை வெயிலில் கதிர்
அறுப்போர் சொல்வர் உதிர்ந்த இலைகளிடை
அழகுக் கூத்திடுவாள்
கண்டோம் யாம்
அவள் கூந்தலிடைப்பனி
தழுவிச்சென்றதங்கே.
அழகு குறித்துப்பலரும் பகன்றவை
அழகு குறித்தாயில்லை இல்லை
உம் நிறைவேறாத்தேவைகளவை
அழகு தேவையொடுத்
தொடர்புடைத்தா என்ன
அது பேரானந்தச்சிரிப்பு
நாவில் நீர் சொட்ட வைக்கும் விடாயோ
வெறுங்கையின் நீட்சியோ இல்லையது
இதயம் தரும் ஒளிப்பிரவாகம் ஆன்மாவின்
ஆனந்த லயிப்பு
பார்க்கும் உருவும் நீ கேட்கும் பாடலுமில்லையது
கண்களை மூடிடக்காட்சியாவது
செவிகளைப்பொத்திடக் கேட்க முடிவது
பிளவுபட்ட மரப்பகுதி சொட்டும் திரவமில்லையது
நகத்தொடு ஒட்டித்தொங்கும் சிறகும் இல்லை
அது போதெல்லாம் மலரவிழும் நந்தவனம்
தேவ கன்னியர்க் கூட்டத்து ஓயாப்பேரணி
ஆர்ஃபலிசு நகரத்து மாசனங்களே வாழ்க்கையின்
புனித முகம் தெரியத்தெரிய மனித வாழ்க்கை அழகு
வாழ்க்கை நீ
அவ்வாழ்க்கையைத் தொலைப்பது நீ
இதோ ஆடி முன்னே
தன் அழகு பார்க்கிறது
அமரத்துவ அழகு
காலத்தை வெல்பவன் நீ
நின் முன்னே நிற்கும்
அவ்வாடியும் நீ.
No comments:
Post a Comment