Friday, September 6, 2019

vellam 11




சென்னையில்வெள்ளம் 11



குரோம்பேட்டை வாடகைவீட்டில் சாமான்களை எல்லாம் இறக்கி வைத்துவிட்டு அண்ணன் விடை பெற்றுக்கொண்டார்.
‘ நான் வீட்டுக்கு கிளம்புகிறேன்’
‘மதிய உணவு கொண்டு வந்த ஆதம்பாக்கம் டப்பா இருக்கு’
‘அதுக்கு  இப்ப என்ன அவசரம்’ அண்ணா  என் மனைவியிடம் சொன்னார்.
‘இங்கேந்து ஸ்டேஷன் போகணுமே’ நான் கேட்டேன்.
‘எதாவது ஆட்டோ கெடைக்கும்ல நான் பாத்துகறன்’

‘ நீ இண்ணைக்கு ராத்திரி அடுப்ப பத்தவைக்காத நாளக்கு காலயில ஆறு மணிக்கு அத எல்லாம் வச்சிகொங்க. அப்பதான் நல்ல நேரம்’
‘ராத்திரிக்கு கையில இருக்கிறது போதும்’
என் மனைவி சொல்லி முடித்தாள்.

அன்று இரவே என் மருமகளும் பேத்தியும் ஆதம்பாக்கத்திலிருந்து குரோம்பேட்டைக்கு வந்துசேர்ந்தார்கள். இரவு பன்னிரெண்டு மணிக்கு மேல்தான் எப்போதும் என் பெரிய பையன் பணிமுடித்துவருவான்.எப்படியோ குரோம்பேட்டை வீட்டைக்  கண்டு பிடித்து வந்து சேர்ந்தான். தனது டூ வீலரை நிறுத்துவதற்குத்தான் இடம் சரியாக இல்லை என்று சொல்லிக்கொண்டே வீட்டினுள் நுழைந்தான்.
இப்போது வீடு கட்டுபவர்கள் எல்லாம் வீட்டின் தரைதளத்தினை கார் பார்க்கிங் என்று சொல்லி விட்டுவிடுகிறார்கள். அது ரொம்பவும் சவுகரியமாகவே இருக்கிறது. வண்டி நிறுத்துவதிற்குமட்டுமா, இல்லை இல்லை எது எதற்கோ அது உபயோகமாகிறது.
 மேல் தளத்தில் குடியிருப்பவர்கள் வீட்டில் விழும்  சாவு பின் தொடரும் எழவு கார் பார்க்கிங்கில் வைத்துத்தான் அச்சடங்கு முடிக்கிறார்கள். அப்படிப்பார்த்தால் அது எல்லோருக்கும் சவுகரியமாகவும் இருக்கிறது.

குரோம்பேட்டையில் வாழ்க்கை.பால் காய்ச்சி தொடங்கியாகிவிட்டது. இங்கெல்லாம் வெள்ளம் வந்த சென்னை திண்டாடிக்கொண்டிருப்பதே தெரியாதமாதிரிக்கு காலட்சேபம் போய்க்கொண்டிருக்கிறது. கடைத்தெரு அருகில். ஏ டி எம் அருகில். பால்கடையும் காய்கறிக்கடையும் பக்கமாகத்தான். தீபம் மருத்துவமனையும் கொஞ்ச தூரத்தில்தான். வண்டியொன்றும் வைக்கவேண்டாம். நடந்து போய் வரலாம்.எல்லாமே சவுகரியமாகத்தான் இருந்தது. என் மனைவிக்கு ரொம்பவும்  திருப்தி. 
நேதாஜி நகர் என்றால் தொட்ட தொண்ணூரறுக்கும் வண்டி சின்ன வண்டியாவது கையில் இருந்தால் தான் பஸ் நிறுத்தம் அந்த பார்வதி நகர் வரை போய் வரமுடியும். ஒரு முறை நடக்கலாம். இன்னொரு முறை நடக்கவேண்டும் என்றால் என்ன செய்வது கால் அசந்து வலி எடுக்க ஆரம்பிக்கும்.குரோம்பெட்டையில் அந்த பிடுங்கல் இல்லை.
        ‘காஸ் சிலிண்டர் தீர்ந்துபோனது. காலி சிலிண்டர் ஒன்று கொண்டுபோய் எந்த கேஸ் ஏஜன்சி என்று  பெயர் பார்க்கவேண்டாம்.அவர்கள் நமக்கு காஸ் நிரப்பிய சிலிண்டர் ஒன்றை வழங்குகிறார்கள். காசு வாங்காமல் எல்லாம் இல்லை. அதெல்லாம் சரியாகவே வாங்கிவிடுகிறார்கள். சென்னையில் வெள்ளம் ஆக  உங்களது எந்த ஏஜன்சியென்றெல்லாம் கேட்பதில்லை. அப்படி ஒரு காலி கேஸ் சிலிண்டரை எடுத்துப்போய் மாற்றி வந்தேன்.ஆட்டோ வைத்துக்கொண்டுதான் போய்வர சாத்தியமானது.. அதாவது முடிகிறதே என்கிற மகிழ்ச்சிதான்.
                           நகரம் என்பதன் தரம் கூடக்கூட குப்பையை எங்கே கொட்டுவது என்பது பிரச்சனை ஆகிப்போகிறது. குப்பையை தெருவில்  நகராட்சி நிர்வாகத்தினரால் வைக்கப்பட்டிருக்கும் ஏதேனும் சிமெண்ட் தொட்டி ஒன்றில் கொட்டிவிட்டு நமக்கு என்ன என்று அவரவர் வீட்டுக்குப் போய்விடுவது குரோம்பேட்டையில் முடியவில்லை.குப்பையை பத்திரமாக வைத்து அந்த குப்பை வண்டிக்காரர்கள் வீதியில் வரும்போது போட வேண்டும். கணவன் நனைவி இருவரும் வேலைக்குப்போகும் வீட்டில் குப்பையை எப்படிபோடுவார்களோ. சிரமந்தான்.குப்பையை மக்கும் குப்பை மக்காத குப்பை என்று ரகம் பிரித்து மட்டுமே போடவேண்டும். இப்போது குப்பையில்.பிளாஸ்டிக் வகையறாக்கள் மீது ஒரு தனிக்கவனம் கொண்டு வந்திருக்கிறார்கள்.

குரோம்பேட்டை வாழ்க்கை அது ஒரு தினுசாக ஓடிக்கோண்டு இருந்தது,கடை கோவில் ஆஸ்பத்திரி இவை அருகில் என்பதில் என் மனைவிக்கு ரொம்பவும் திருப்தி. நேதாஜி நகருக்குபோகாமல் இங்கேயே தங்கிவிட்டால்கூட பரவாயில்லை என யோசிக்க ஆரம்பித்தாள். எனக்குத்தான் அச்சமாக இருந்தது. நேதாஜி நகர் வீடு என்னாவது என்கிற யோசனை. எனக்குத்தான் அது அதிகம் இருந்தது.
நான்  சென்னை தொலைபேசி நிர்வாகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவன். ஓய்வுபெறும்போது அவர்கள் கொடுத்த பணிக்கொடை இத்யாதிகளை என் பெரிய மகனுக்குக்கொடுத்து அவனும் வீட்டுக்கடன் வங்கியில் கடன் வாங்கி அதனையும் சேர்த்து ஒருவீடு வாங்கினான். அந்த வீடும் நேதாஜி நகருக்கு அருகில்தானே  இருந்தது. பெரிய பையன் வீட்டைசொல்ப வாடகைக்கு விட்டிருந்தான்.அந்த  வீட்டையும் வெள்ளம் விட்டுவைக்கவில்லை. அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவர் குடும்பத்தோடு வீட்டைப்பூட்டி விட்டு மறைமலை நகருக்கு அருகே ஒரு உறவினர் வீட்டுக்குச்சென்றதாகச்சொல்கிறார்கள்.

என் பெரிய பையனுக்கு என் வீட்டின் அருகிலேயே ஒரு வீடு கிடைத்தது ஒரு பெரிய அதிர்ஷ்டமாக எண்ணியிருந்தேன். ஆனால் அருகிலே அடையாறு செல்கிற சமாச்சாரம் இந்த வெள்ளம் வந்த பிறகே என் மூளைக்கு எட்டுகிறது. நானும் என் பெர்ய பையனும் சென்னையில் அலையாத இடம் இல்லை. அவன் தனி வீடு வாங்கினால் பரவாயில்லை என்றான். தனி வீடு வாங்குவது என்பது லேசுபட்ட காரியமும் இல்லை.கையில் இருக்கும் பணமும் வங்கிக்காரன் கொடுக்கும் கடனும் வைத்து தனி வீடு வாங்கவேண்டுமென்றால் மறைமலை நகருக்கு அப்பால்தான் அது சாத்தியம் என்று சொன்னார்கள்.
                                          ஆனால் என் வீட்டருகே ஒரு தனி வீடு கிடைத்து அதனையும் வாங்கிவிட்டதை பெருமையாக எண்ணியிருந்தேன். இந்த மழை அந்த நினைப்பை எல்லாம் தவிடு பொடி ஆக்கியது. அவனுக்காவது வெள்ளம் வராத ஒரு மேட்டுப்பகுதியில் வாங்கியிருக்கலாம். தவறிவிட்டோம் என மனம் கனத்தது.  ரணமாகியிருந்தது. மாதம் ஒன்றுக்கு முப்பதாயிரம் அவன் சம்பளத்தில் பிடித்துக்கொள்கிறார்கள். இன்னும் இருபதாண்டுகளுக்கு இப்படித்தொடரலாம். கொடுத்த பணத்தைப்போல் மூன்று பங்குக்கு திரும்பவும் கட்டவேண்டும். வங்கிக்காரன்என்றால்  லேசு பட்டவன் இல்லை. இப்படி எல்லாம் வட்டி, இல்லை அதற்கு  இன்னொரு பெயர் எதுவும் சொல்லியோ   ஏழை நடுத்தர மக்களிடம்  வாங்கினால்தான் அவன்  ஏமாற்றுக்காரர்களுக்கு பெரியதொகையை  மொத்தக்  கடனாகக்கொடுத்துவிட்டு திவாலாகி விழிக்க முடியும். 
           அங்கே வேலைசெய்து பிழைக்கலாம் என்று  படித்துவிட்டு வந்தவனும் வேலையை தொலைத்துவிட்டு நடுத்தெருவுக்கு வந்து அழ முடியும்.  எல்லாம்  இந்த அமைப்பில் உள்ள கோளாறுகள் இதனைஎல்லாம் நீங்களும் நானும்  சரிசெய்யத்தான் ஆகுமா? மனம்  என்னவெல்லாமோ எண்ணி எண்ணிப்பார்த்து ஓய்ந்து போனது.
‘                   நம்ம கையில என்ன இருக்கு. எது எப்படி நடக்கணும்னு இருக்கோ அப்படித்தான் நடக்கும்’ என் மனைவி அடிக்கடி சொல்வது என் நினைவுக்கு வந்து போகும். என் அம்மாவின் அக்கா என் பெரியம்மாதான் சொல்வார்கள்.’அண்ணைக்கு எழுதினவன் இப்புறம் அழித்துவிட்டா மீண்டும் எழுதப்போகிறான்’ என்று. அந்த பெரியஅம்மா சிதம்பரத்தில் இருந்தார்கள். என் பெரியப்பாவுக்கு அந்த அண்ணாமலை ப்பல்கலைக்கழகத்தில் எழுத்தர் வேலை. அங்குதான் என் பெரியம்மா வீட்டில் தங்கி நானும் பட்ட வகுப்பு பயின்றேன். எந்தகாலத்து சமாச்சாரம்.ஒரு ஐம்பதாண்டுகள் ஆகப்போகிறது. நேற்று பிறந்தமாதிரிக்கும் பள்ளிக்கூடம் போனமாதிரிக்கும் மனம் சொல்லிக்கொண்டு இருந்தால் என்ன நரை த்துவிட்ட தலை முடி கண்ணாடியைப்பார்க்கும்போதெல்லாம் ஆச்சுப்பா வயசு என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது,.
                        என் அம்மா கூட இப்படி அடிக்கடி சொன்னது நினைவுக்கு வரும்.’ நேத்துதான் சிதம்பரம் ராமசாமி  செட்டியார் ஸ்கூலுக்கு படிக்க ப்போனதுமாதிரி இருக்கிறது. அதுக்குள்ள இத்தனை காலம் ஓடிப்போய்விட்டது.’ என்பார்கள். என் தந்தை தான் சொல்ல்க்கொண்டிபுப்பார்’ வாழ்க்கைன்னா ஒண்ணும் பெரிசா இல்லேடா கண்ண தொறந்து மூடிப்பாத்தா கட கடன்னு ஓடி முடிஞ்சியே போகும்’’ அதெல்லாம் என் நினைவுக்கு வருகிறது
                            நல்லவை மட்டுமே சிந்தித்து நல்ல  மனிதனாய் மட்டுமே  வாழவேண்டும்.யார் எப்படி இருந்தாலும் அதுபற்றி  நமக்கொன்றுமில்லை என்பதை. என் அப்பா எத்தனைமுறையோ  சொல்லியிருக்கிறார்.
‘                                 நேதாஜி நகர் வீட்டை ப்போய் பார்த்துவிட்டு வரலாம் எனத்தீர்மானித்தேன். அங்கே என்னவானது என்கிற கவலை சதா இருந்துகொண்டே இருந்தது. என் பேத்தியை என் மனைவிதான் பார்த்துக்கொள்கிறாள். மருமகள் வேலைக்குச்செல்வதால் வேறு வழியில்லையே. என் பெரிய மகனும் அவன் மனைவியும் தங்கள் தங்கள் பணிக்குச்சென்று குரோம்பேட்டை வீட்டுக்கே திரும்பினார்கள்.
                                   பெங்களூரில் இருக்கும் சின்னவன் சென்னைக்கு வந்து வெள்ள சமாசாரங்கள்  நேரில் அறிந்து கொள்ளவேண்டும் என்று செய்திசொன்னான்.அவன் மனைவியும் குழந்தையும் திருச்சி சம்பந்தி வீட்டில் இருக்கிறார்கள். பிரசவத்துக்குப்போனவள். அவர்களின் ஜாகைதானே என் வீட்டுக் கீழ் தளத்தில் இருந்தது. என் பையன் சென்னைக்கு மாற்றலாகி வந்துவிடுவான் என்றும் நாங்கள் எண்ணியிருந்தோம். அது ஒன்றும் நடக்கிறகதையாகத்தெரியவில்லை. அவன் குடியிருந்த அந்தப்   பகுதிதான் இந்த சென்னை வெள்ளத்தில் பாதிப்புக்குள்ளானது. என்ன என்ன போய் எது எது  பாக்கி எனக்கணக்குப் ப்பார்க்க  அவன் சென்னை வருகிறான்.
                              நானும் நேதாஜி நகர் செல்வதாகச்சொல்லிப்  புறப்பட்டேன்.என் சின்ன பையன் பெங்களூரிலிருந்து நேராக அங்கு வருவதாக ச்சொல்லியிருக்கிறான்.
                 ‘வேலையை முடித்துக்கொண்டு வந்து சேருங்கள் என் மனைவி’ கட்டளை யிட்டிருக்கிறாள். சென்னை கொஞ்சம் கொஞ்சமாகப் பெருவெள்ளம் மழை என்கிற சோகத்திலிருந்து  மீள ஆரம்பித்தது. வெள்ளப்பாதிப்பே சற்றுமில்லா குரோம்பேட்டையிலிருந்து கொண்டு அப்படிச்சொல்லக்கூடாது.
                     குமரன்குன்றத்திலிருந்து குரோம்பேட்டை தேசிய நெடுஞ்சாலைக்கு வரவேண்டும்.அங்கிருந்து ஏதோ ஒன்றை பிடித்து தாம்பரம் பிறகு இந்த முடிச்சூர் சாலைக்கு இன்னொரு வண்டி என்று நேதாஜி நகருக்குபோய்ச்சேரவேண்டும். தேசிய நெடுஞ்சாலை நடந்து போகிற தூரம் இல்லை.பஸ் ஒன்றும் வருவதாகவும் தெரியவில்லை. சாலையில் நடக்க ஆரம்பித்தேன். சாலை குண்டும் குழியுமாக இருந்தது. மழை எப்படியெல்லாமோ சாலையை தன் இஷ்டத்துக்கு உருமாற்றி இருக்கிறது.ஆட்டோக்கள் சாலையில் செல்லாமல் இல்லை.ஒன்று இரண்டு என ச்செல்கிறது.எதுவும் காலியாக இல்லை.ஜனங்களை நிறைவாக ஏற்றிய ஆட்டோக்கள் விரைத்துக்கொண்டு பறந்தன. போக்கு ஆட்டோ என்பார்களே அது ஏதும் வரலாம். ஆட்களை இறக்கி விட்டுவிட்டு க்காலியாக ஸ்டேண்டுக்கு த்திரும்புவன.
                    ‘திரும்பி வரகுள்ள நா காலியத்தான் வருணும். யாரு வரப்போரா என்று அதற்கும் சேர்த்து க்காசு வாங்கிய ஆட்டோக்காரர்கள் திரும்புகையில் சாலையில் யாராவது ஆட்டோவுக்கு காத்துருக்கிறார்களா என்று நோட்டம் விடுவார்கள்.அப்படி ஒரு ஆட்டோக்காரன் எதிரில் தெரிந்தான்.
‘சார் வரீங்களா’
நான் அந்த ஆட்டோக்காரனிடம் விரைவாகச்சென்றேன்.
‘தலைக்கு இருவது ஏறுங்க’
‘பத்துதான் கொடுக்கறது’
‘ரோடு எப்பிடி இருக்கு கண்ணால பாக்குற  டயரு வண்டி என்னாத்துக்கு ஆவுறது.என் திரேகம் படுற பாடு வண்டி படுற பாடு. மெக்கானிக்கு இருக்கான் அவன் எங்கள வச்சி பொழக்கிறான். போலிசுகாரன் அப்புறம் சங்கத்துக்காரன் கோவில் திருவிழாக்காரனுவ பேட்ட தலைவருவ அப்பிடி இப்ப்டி போனா ரவ போட்டுக்குவம் அந்த கருமம்தான் வேற என்னா செய்வ.  காத்தாடிகு கீழ குந்திகினு உத்தியோகம் பாக்குறமா’
‘குடும்பம் இருக்குதா’
‘சாமி இருக்கு. ரெண்டு பொட்ட புள்ள  இருக்கு.  ரோசக்காரி பொண்டாட்டி இருக்கா. ஆயி அப்பனுவ எல்லாம் அது அத போய் சேந்தாச்சி’
நான் வண்டியில் ஏறி அமர்ந்தேன். வேறு ஒருவருமே நான் வந்து கொண்டிருக்கும் ஆட்டோவை நிறுத்தி ஏறவில்லை. டூவீலர்கள் ஏகத்துக்கு ச்சென்றவண்ணம் இருந்தன.
                         தேசிய நெடுஞ்சாலையில் அனேக இடங்களில் மேம்பாலங்கள் கட்டியிருக்கிறார்கள். குரோம்பேட்டையிலும் அப்படி ஒன்று இருக்கிறது. பிரம்ம ராக்‌ஷஸ் என்று சொல்லும்படிக்கு அது  சாலையை அடைத்துக்கொண்டு கிடந்தது. அது  போக்குவரத்துக்கு வசதியாத்தான் இருக்கிறது. அதன்மீது நடந்து செல்பவர்களுக்கு வேலை இல்லை. விரையும் வண்டிகள் மட்டுமே மேம்பாலம் மீது ஏனோ  ஊர்ந்து செல்கின்றன. சைக்கிள்காரர்கள் ஒருவரையும் பார்க்கமுடிவதுவில்லை.  நான் குரோம்பேட்டை பேருந்து நிலையம் இறங்கித்  தயாராக நின்றிருந்த ஷேர் ஆட்டோ ஒன்றில் ஏறிக்கொண்டேன்.
                    தாம்பரம் சானிடோரியத்தில் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பெரிய  பெரிய கோவில்களை சாலையோரம் கட்டிருக்கிறார்கள். இரண்டு கோவில் கதவுகளும் பூட்டிக்கிடந்தன. நெடிய கதவுகள் வண்ணமடிக்கப்பட்டு கம்பீரமாக நின்றுகொண்டிருந்தன.  பெரிய திண்டுக்கல் பூட்டுக்கள் கதவில் தொங்கிக்கொண்டு இருந்தன. பூட்டு தாழ்ப்பாள் எல்லாம் அரிச்சுவடி வகுப்புத்திருடர்களுக்கு என்று பிறந்தவை,
                பெரிய பெரிய திருடர்கள் அடுக்கு மாளிகையில் வாழ்ந்துகொண்டு ஏரோப்ளேனில் பறப்பவர்கள்..அவர்கள் திருடுவதை ஆராய்ச்சி செய்துதான் கண்டுபிடிக்கமுடியும்.அப்படியே கண்டுபிடித்து விட்டாலும் நபர்கள் இங்கு இருக்கமாட்டார்கள். அவர்களை பிடித்து க்கொண்டு வருவதற்குள் பல நூறு கோடிகள் அரசாங்கம் செலவுசெய்ய வேண்டும்.
                அல்பத்திருடர்கள்  நடுரோட்டில்  மணி பர்ஸ்திருடி கழுத்துமணிகள் அறுத்து செருப்படிபட்டு ஜெயிலுக்குப்போவார்கள். அவரவர்கள் அதிர்ஷ்டத்தை பொறுத்தது..திருடர்களுக்கும் அஷ்டமத்துச்சனி  அர்த்தாஷ்டமசனி  நீசபங்க ராஜ யோகம் கஜ கேசரியோகம் ஒன்பதாம் இடத்துல  குரு எல்லாம்தான் தன் தன் வேலையைச்செய்தாகவேண்டும்.
               ஷேர் ஆட்டோ தாம்பரத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. தாம்பரத்தில் எப்போதும் மக்கள் கூட்டம்.சுற்றுப்பட்டில் ஏகத்துக்கு கிராமங்கள்.இன்று எல்லாம் மாநகரங்களாகி இருக்கின்றன. மழையும் வெள்ளமும் வந்து கொஞ்சம் மக்களை சிந்திக்கத்தான் வைத்தன. நமக்கு மிஞ்சி இங்கு யாருமில்லை என்கிற அகம்பாவத்தை சற்று ஆட்டித்தான் பார்த்திருக்கின்றன.
              பெங்களூரிலிருந்து வரவேண்டிய சின்ன மகன் தயாராக தாம்பரம் பேருந்து நிறுத்தம் அருகே நின்றுகொண்டு என்வருகையை எதிர்பார்த்தபடி இருந்தான்.
‘வா அப்பா’
ஷேர் ஆட்டோவைவிட்டு இறங்கிட நான் யாரது அப்பா என்று கூப்பிடுகிறார்கள் என்கிற யோசனையில் சுற்றும் முற்றும் பார்த்தேன்.
‘’இங்க  நிக்கறது தெரியல’ சிக்னல் கம்பம் அருகே நின்றிருந்தான். நான் அவனருகே சென்றேன்.
‘ நீ எப்ப வந்தே’
‘ நா வந்து ஒரு மணி நேரம் ஆச்சி. உனக்கு போன் போட்டேன்.கிடைக்கில’
‘அது என்ன கோளாறோ.ஒண்ணும் சொல்லிக்க முடியல. எதோ நடக்கறது’
‘அத விடு இப்ப நேதாஜி நகர்ருக்கு எப்படி போறம்’
’55 ந்னு  நெம்பர் போட்ட ஒரு பஸ் வரணும் இல்லன்னா ஷேர் ஆட்டோ தான்‘
‘முடிச்சூர் முடிச்சூர் மண்ணினாக்கம்’ ஒரு ஷேர் ஆட்டோக்காரன் கத்திக்கொண்டு வந்து நின்றான்.
‘எங்க போவுணும்’
‘பார்வதி நகர்’
‘’ஜோரா ஏருங்க நா அங்கதான் போறன் ஆனா டிக்கட் முப்பது ரூவா’
‘இது என்ன ரொம்ப அநியாயம்’; என்றேன்.
அதற்குள்ளாக என் பையன் வண்டியினுள் ஏறி அமர்ந்துகொண்டுவிட்டான். நானும் ஏறி அமர்ந்தேன். வண்டியில் இருக்கைக்கு மூன்று பேராக அமர்ந்துகொண்டிருந்தனர்.
‘எடம் குடு ஏறுர ஆளுக்கு இடம் குடு அட்ஜஸ்ட் பண்ணு இல்ல எறங்கிக’ ஷேர் ஆட்டோக்காரன் அதட்டலாகப்பேசினான்.
‘ ஒரு சீட்டு முப்பது ரூவா ஒரு நெடுக்கு சீட்டுல ஏன் நாலு பேரு உக்காரணுமா’
நான்தான் கோபமாய்க்கேட்டேன்./
‘ நீ எறங்கிக தாம்பூலத்தட்டு வச்சி  உன்ன நா கூப்புட்டு  நீ வருல’
என் பையன் ‘ நீ செத்த சும்மா இரு’ என் பையன் என்னை நெறிப்படுத்தினான். வண்டி நிறைந்து போனது. தாம்பரம் இந்து மிஷன் ரவுண்டானா தாண்டி சென்று கொண்டிருந்தோம்/
வெள்ளைசட்டை போட்ட ஒரு உயரமனிதர் வண்டியை நிறுத்தினார். அவரிடம் ரெண்டு நூறு ரூபாய் நோட்டிக்களை எடுத்துக்கொடுத்தார் ஷேர் ஆட்டோவின் ஓட்டுனர்.
‘போவுலாம்’
வெள்ளை சட்டைக்காரர் நகர்ந்து கொண்டார்.
‘இதெல்லாம் தெனப்படி மாமுலு. இது கட்டியாவுணும்.போலிசு  ஆபிசுன்னு இன்னும் எம்மான் கத கெடக்கு. மீசை வச்ச கட்சிக்காரனுவ இருக்கான் மீசை வழிச்ச  கோவிலு ஆசாமிவ இருக்கு.. ரோடு கண்றாவியா இருக்கு. டயரு காலியாவுது. வண்டிகார சேட்டுக்கு  தெனம் காசு போவுணும். வண்டிக்கு  மெக்கானிக் செலவு  இருக்கு. பெட்ரோல் போடுணும் நாங்க சோறு திங்கணும் குடும்பம் ஆயி அப்பன் ஓடம் பொறப்பு  காயிலா கருப்பு  எம்மானோ இருக்கு . முப்பது ரூவா அது இது ந்றே’ என்றான் ஆட்டோ ஓட்டுபவன். நான் என் மகனைப் பார்த்துக்கொண்டேன்.
                     சாலை கன்னாபின்னா என்று உடைந்தது கிடந்தது.குண்டும் குழியுமாக கோரமாகக்காட்சி அளித்தது. பன்றிக்குட்டிகளும் நாய்களும் மூலைக்கு ஒன்றாய் நின்று ஆகாயம் பார்த்தன.  ஒரு நாய் நரி போல் ஊளையிட்டது. ஆக இன்னும் மழை வரும் என்று சொல்கிறதோ என்னவோ.. மனம் அச்சப்பட்டது. பெங்களூர் செல்லும் மேம்பாலத்தில் வரிசையாக வண்டிகள் சென்று கொண்டிருந்தன.
            கிருஷ்ணா நகரில் இன்னும் வெள்ள நீர் வடிந்தபாடில்லை.சாலையோரக்கடைகளில் தண்ணீர் புகுந்து நாசமாக்கி இருந்தது.கடை முதலாளிகள் என்ன பாடு பட்டிருப்பார்களோ. ஆந்திரா வங்கி முன்னாடி பெரிய பள்ளமாக இருந்தது. சாலையில் செல்லும் வண்டிகள் வளைந்து நெளிந்து சென்றன.
‘பாரதி நகர் எறங்கு’
ஆட்டோ ஓட்டி கத்தினான்/’ நீங்க எறங்குலயா’ என்னைப்பார்த்து க்கேட்டான்.
‘ நாங்க  பார்வதி நகர் எறங்குறம்’
பார்வதி நகரையும் பாரதி நகரையும் குழப்பிக்கொள்ளாதவர்கள் ஒருத்தர் கூட இல்லை.அன்னை அருள் மருத்துவ மனை தாண்டி பத்மா கல்யாண மண்டபம் அது தாண்டி சேட்டு ஒருவர் கட்டியுள்ள கல்யாண மண்டபம் வேஷம் கட்டும்  நடுத்தரவகுப்பாருக்கும் மேல்தட்டு மக்களுக்குமென அவை இயங்கி வருகின்றன. ஏழை மக்களின் திருமணங்கள்  திருக்கோவில்களின் பிரகாரங்களில் மட்டுமே நடந்து முடிகின்றன.  கையில் இருக்கும் பொருள் எத்தனை  கனம் என்பதுதான் நாம் எப்படி வாழ்வது என்பதனைத்தீர்மானிக்கிறது. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்றார் வள்ளுவர். பிறகு யார்தான்  என்ன செய்ய?
                   பெருங்களத்தூரில்  வடக்கு நோக்கி நிற்கும் அம்பேத்கர் சிலை முன்பாக வண்டி நின்றது. நானும் என்னும் பையனும் தவிர எல்லோரும் இறங்கி விட்டனர்.
‘பார்வதி நகர் வண்டி போவாது நீங்க எறங்கிகலா’ம்
‘ஏன் போவாது’
‘இப்ப நீயி எறங்கப்போறயா இல்ல உன்ன தாம்பரத்துக்கு இட்டுகினு ப்பூடலாமா’
என் பையன் இறங்கிவிட்டான்.  சண்டை சச்சரவு வம்பு  இதற்கெல்லாம் அவன் தயாரில்லை. எப்போதும் அப்படித்தான். எனக்கு  ஆத்திரம்தான்.
‘துட்டு குடுத்துட்டு போ’
 அறுபது ரூபாயை இருவருக்குமாகக்கொடுத்துவிட்டு அந்த பழைய பெருங்களத்தூர் நிறுத்தத்திலிருந்து  பார்வதி நகருக்குள் நடக்க ஆரம்பித்தோம்.
                       வெள்ளத்தில் மாட்டாதவர்கள் அவரவர்கள் தங்கள் தங்கள் வேலைகளைக்கவனித்துக்கொண்டிருந்தனர். வெள்ளத்தில் மாட்டிய எங்களைப்போன்றவர்கள்தான் படாதபாடு பட்டுக்கொண்டிருந்தோம்.
               எங்கு வீடு வாங்கினாலும் மனை வாங்கினாலும் அந்தப்பகுதிக்கு நல்ல மழைக்குப் பிறகு ஒருமுறைபோய் ப்பார்த்து வந்துவிடவெண்டும். மழைத் தண்ணீர் எப்படி நிற்கிறது போகிறது என்பது தெரிய வேண்டும் நல்ல வெயில் காலத்தில் அங்கு தண்ணீர் சரியாகக்கிடக்கிறதா என்பதையும் உறுதி செய்யவேண்டும்.  வாங்குமிடத்திற்கு போக்குவரத்து வசதி பற்றி ஒரு தெளிவு இருக்கவேண்டும். இது எல்லாம் இப்போது பேசி யொசித்து என்ன ஆகப்போகிறது.
‘என்ன யோசனை?’
‘ஒன்றுமில்லையப்பா’’
இருவரும் பேசிக்கொண்டே நேதாஜி நகருக்கு வந்து சேர்ந்துவிட்டோம். வீட்டு வாயிலில் உள்ள இரும்புகேட் திறந்துகிடந்தது. யாராவது உள் நுழந்து  பழைய இரும்பு சாமான்கள் கிடைக்குமா என்று பார்த்து சென்றிருக்கலாம்.
‘ரெண்டு டூவிலரும் கண்றாவியா நிக்குது’
‘அதுக்கும் ஒரு வழி பண்ணணும்’
 என் பையனுக்கு ப்பதில் சொன்னேன். அவன் கீழ்வீட்டின் கதவைத்திறந்தான். உள்ளே நுழைந்தான்.. படுக்கும் அறை சமையல் அறை ஹால் எல்லாம் ஆராய்ந்து பார்த்தான். பிரோவைத்திறந்து பார்த்துக்கொண்டான். கண்கள் ஈரமாகியதைக்கவனித்தேன்.
 வருஷக்கணக்கா ‘கஷ்டப்பட்டு வாங்குன இந்த சாமானுவ எல்லாம் இப்ப எதுக்கும் தேறாது போல’’
‘எல்லாம் குப்பைக்குத்தான் என்ன செய்வ’ நான் பதில் சொன்னேன். சட்டையைக்கழட்டி ஒரு ஆணியில் மாட்டினான். எது தேறாது என்று முடிவு கட்டினானோ அவற்றை த்தெருவுக்கு க்கொண்டு போனான். நானும் கூட மாட அவனோடு ஓடி ஓடி முடிந்தவரைக்கும் உதவிக்கொண்டிருந்தேன்.
                 அவனது புத்தகங்கள் என்று இப்போது ஏதுமில்லை. லேப்டாப். பெரிய டிவி ஃப்ரிஜ் வாஷிங் மெஷின் கிரைண்டர் ஏ சி  மிக்சி சீலிங் ஃபேன்கள் சுவிட்சுகள் வீட்டில் இருந்த ஆல்பங்கள் மளிகை சோபா செட் துணிமணிகள் படுக்கைகள் போர்வைகள் பாய் என இவற்றோடு கீழிருந்த போர்வெல் மோட்டார்  ஈ பி மீட்டர் என எல்லாம் போயிற்று. கேஸ் அடுப்பு மஞ்சள் நிறத்தில் காட்சி தந்தது.  சகதி துரு எதைச்சொல்வது. முன்னமே கொஞ்சம் சுத்தம் செய்து விட்டதனால் வீட்டினுள் நின்று பார்க்கவாவது முடிகிறது.
               எல்லாம் எப்படியும்.மூன்று லடசத்திற்கு நஷ்டமாகியிருக்கலாம். வீடு சுத்தம் செய்து பையிண்டிங் கொடுத்தால்தான் குடியிருக்க முடியும். எல்லாவற்றையும் என் சிறிய பையன் பார்த்துக்கொண்டான்.
        இருவரும் மேல்வீட்டுக்கு சென்றோம்.அதுவும் என்னமோ வீச்சமடித்துக்கொண்டிருந்தது. இன்னது அது என்று சொல்லமுடியவில்லை. சுவரெல்லாம் பச்சை பச்சையாய் பாசி மாதிரிக்கி ஏதோ  தெரிந்தது.. மழை என்னவெல்லாமோ செய்துவிட்டிருக்கிறது. ஃபிரிஜ் செத்துக்கிடந்தது. சிலிண்டர் அடுப்பு மட்டும் எரியும் நிலையில் இருந்தது. சமையல் அறையில் ஒரு பிரத்யேக துர் நாற்றம்.மளிகை சாமான்கள் எல்லாம் இனி உபயோகப்படுத்தமுடியுமா என்றால் அதுவும் சொல்வதற்கில்லை.
            ‘கரண்ட் வந்த பிறகுதான் எதுவும்’
‘ஆமாம் மின்சாரம் இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை என்பதாய் முடிந்துபோய்விட்டோம். ஆதிவாசிகள் மலைமேல் இருப்பவர்கள் மின்சாரம் இல்லாமல் இருப்பார்களோ என்னவோ’ என்றான் பையன்
‘அவர்களையும் நாம் கெடுத்துக்கொண்டுதான் வருகிறோம்’
‘அது கெடுதல் என்று சொல்லமுடியாது அப்படித்தான் சமூக மாற்றம் என்பது அமையும்.கல்வி கற்க கற்க அது செயலை மாற்றத்தை கொண்டுவரத்தானே செய்யும்’
‘என்னமோ பேசிக் கொண்டோம்.
‘’பேருந்து நிறுத்தம் சென்று ஒரு டூ வீலர் மெக்கானிக்கை பார்ப்போம்.சின்ன வண்டியாவது சரிசெய்து வைத்தால்தான் உனக்கு   குரோம்பேட்டையிலிருந்து வர போக செளகரியப்படும். பெரிய வண்டியை பிறகு பார்க்கலாம்‘
‘சரி’ என்றேன்.
இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே கிளம்பினோம்.சின்ன வண்டியை அவன் உருட்டிக்கொண்டு வந்தான்.
ஈ பி தொழிலாளர்கள் ஆங்காங்கே மரத்தை சரி செய்துகொண்டு இருந்தார்கள் டிரான்ஸ்ஃபார்மர் மாற்றிக்கொண்டு இருப்பதாகவும் சொன்னார்கள்.
‘கரண்டு எப்பவரும்’
‘வந்துடும் ஆனா ஆளுவு இல்லை வெளியூர் ஆளுவதான் நாங்க, புதுக்கோட்டையிலிருந்து வந்துஇருக்கம். எங்கள மாதிரி ஏகப்பட்ட ஆளு வந்து இருக்கு. சாமானுவ இல்லை மரங்க இல்லை கம்பி இல்ல டிரான்ஸ்ஃபார்மருவ இல்லை பீங்கான் சாமானுவ இல்லை என்ன செய்வ. மொத்தமா இப்படி கொள்ள போனா யருதான் என்ன செய்ய’
              ஈ பி காரர் சொல்லிக்கொண்டே போனார்.
‘வீட்டுல கரண்டு வர நாங்க என்ன செய்யுணும்’ நான் தான் கேட்டேன்.
‘;வீடு செவுறூவ காஞ்சி இருக்கா ச்விச்சு போர்டு  ஃபேனுங்க உள்ள ஈரம் இருக்கா  தண்ணி மோட்டர்  தொடச்சி காயவச்சி இருக்குதா   கரண்டு மீட்டரு பாக்சு எப்பிடின்னு பாக்குணும். ஆயிரம் இருக்கு. எலக்ட்ரீசியன் ஒருத்தரு பாத்துட்டுதான் எதயும்  சொல்லுணும்’

‘பாக்கலாம்’ என்றான் பையன்.
இன்னும் எத்தனையோ வேலை தலைக்குமேல் இருப்பது சுள்ளென்று உரைத்தது.
ரேஷன் கடை வழியாக இருவரும் நடந்து முடிச்சூர் சாலைக்கு வந்து ஒரு டூவீலர் மெக்கானிக்கைத்தேடினோம்.
‘அங்க அம்பேத்கார் செலயிண்ட ஆளு இருக்கு’
தெருவில் நடந்து செல்லும் ஒரு சிறுவன் எங்களுக்கு ஆறுதலாகச்சொன்னான்.
இருவரும் நடந்தே அம்பேத்கார் சிலைக்கு வந்தோம். அவன் தான் வண்டியை உருட்டிக்கொண்டு வந்தான்.
அம்பேத்கார் சிலை எதிரே மோட்டர்  வண்டி மெக்கானிக் வண்டிகளை சுற்றிலும்  வைத்துக்கொண்டு வேலை பார்த்தான். அவனுக்குத்துணைக்கு இருவர் கூட இருந்தனர்.
‘என்ன வெள்ளத்துல மாட்டுனதா’
‘ஆமாம்’
‘வண்டிய சேஃப்டி பண்ணி இருக்கணும். உட்டுட்டிங்க. இங்க ஆயிரம் வண்டிங்க கெடக்கு. அர்ஜெண்டுன்னா ரெண்டாயிரம், ஆர்டினரின்னா ஆயிரம் எப்பிடி சவுகரியம்’
’உடனே வேணும்’
‘ஒரு சேதி இப்ப பாக்குறது தெறமான ரிப்பேர் ஆவாது அப்புறமா சுகுரா ஒரு தபா பாக்குணும் இப்ப வண்டி ஓடும்’ மெக்கானிக் என்னிடம் சொன்னான்.
 வண்டியை மேலும் கீழும் தூக்கி தூக்கி ஆட்டினான். மோட்டர் கார்புரேட்டர் பகுதியை கழட்டினான். தூசு மண் தண்ணீர் எல்லாம் துடைத்தான்.தண்ணீர் சொட்டு கூட இல்லாமல் துடைத்து ப்ளொயர் போட்டான். நாசிலை சரிபார்த்தான். வண்டியைப்பூட்டி ஒரு உதை கொடுத்தான். வண்டி ஜிவ்வென்று ஓசை கொடுத்து ச்சரியானது.
‘இப்ப போவுலாம்’
என் சிறிய பையன் ரூபாய் ரெண்டாயிரத்தை மெக்கானிடம்கொடுத்தான்/
‘ஒரு நூறு கொறச்சிகலாம்’
மெக்கானிக் சிரித்தான். ‘லட்சம் வண்டிங்க கெடக்கு நாயாட்டம். நா உங்க வண்டியை பாத்து குடுத்தேன். இதுல என்னா பேச்சு இருக்கு. கெளம்புங்க’
‘வீட்டுல பெரிய வண்டி கெடக்கு அதுவும் வெள்ளத்துல மாட்டுனதுதான் அதயும் சரிபண்ணணும்.உங்களுக்கு எங்க வீடு தெரியும்ல’
‘தெரியாமலா எத்தினி தபா வந்துரக்கன் போயி இருப்பன்’
‘அத எப்ப சரி பண்ணுறது’
‘சாரு போயி எடுத்தாற இப்ப எங்கிட்ட ஆளு இல்ல. கொஞ்சம் பொறுங்க. நானு சீர் பண்ணி தர்ரேன்’
என்னிடம் மெக்கானிக் சொன்னான்.
இருவரும் வண்டியில் ஏறிக்கொண்டு குரோம்பேட்டைக்குப்புறப்பட்டோம்.
‘’ஹெல்மெட் எதுவும் வேணுமா’
‘இந்த மழயில அந்த ரூல்ஸ் எங்க பாக்கறது. இன்னும் நிலமை சரிஆவுல. அதுவரைக்கும் யாரும் அத கேக்கமாட்டாங்க. நீ போவுலாம்’ நான் சொல்லி முடித்தேன்.
வண்டி சரியாகி ஓடியது பெரிய ஒத்தாசையாக உணர்ந்தேன். இருவரும் குரோம்பேட்டை ஜாகைக்கு ச்சென்றோம்.
என் மனைவி தன் சிறிய மகனுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தாள். சில லட்சங்களாவது அவனுக்கு இழப்பு இருக்கும்.
‘லேப்டாப் டீவி மிக்சி கிரைண்டருன்னு எல்லாம் காப்பாத்தி இருக்கலாம் அதலகொஞ்சம் தவறிப்போனோம்’
நான் எதுவும் பதில் சொல்லவில்லை. அவன் அப்படிச் சொல்வதில் தவறில்லை. இன்னும் கொஞ்சம் யோசனை வேண்டும்.  ஆனால் உயிர் தப்பித்தால் போதுமெனப்  புறப்பட்டு வந்தது அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். இரண்டும் வேறு வேறு நிலை.
அவனுக்கு அவன் அம்மா எதோ டிபன் தயாரித்துக்கொடுத்தாள். சாப்பிட்டான்.
‘’உன் மனைவியும் குழந்தையும் நலமா எப்போது பார்த்துவந்தாய்’
‘இல்லை அப்பா போகவேண்டும். போய் நாளாகிறது’
‘தினம் போனில் பேசுவாய்’
‘ஆமாம்’ அவன் பதில் சொன்னான்.
‘ நீ சென்னைக்கு வருவது என்ன ஆனது’
அவன் அம்மா கேட்டாள்.
‘குழந்தையும் அவளும் சென்னைக்குத்தான் வருவார்கள். நான் தான்  இங்கு வர முயற்சி செய்யவேண்டும் முயற்சி செய்யாமல் இல்லை,. இன்னும்  ஒன்றும் சரியாக அமையவில்லை’/  அவன் பதில் சொன்னான்.
‘அண்ணாவும் அண்ணியும் எப்போது வருவார்கள்’
‘இரவ ஆகிவிடும்’
‘சிறுசேரியில் தானே வேலை’
‘ஆமாம் இருவருக்கும் அங்குதான் வேலை. கணிப்பொறி ஆட்களின் ஆளுகைக்கு உட்பட்டதே அந்த பழைய மகாலிபுரம் சாலை. நெடுக சாஃப்ட் வேர் நிறுவனங்கள்’ அவள் அவனுக்கு ச்சொல்லிக்கொண்டாள்.
‘ நீ தான் சாஃப்ட்வேர் வேண்டாம் என்பாய். நீ மெக்கானிகல் சாஸ்த்ராவில் படித்துக்கொண்டிருந்த  சமயம் கணிப்பொறி  மென்பொருள் துறையில் ஒரு வீழ்ச்சி. நேர்ந்தது. மென்பொருள் வேலை பார்த்தவர்கள் வீதிக்கு வந்து கண்ணீர் விட்ட சோகக்கதைகள் ஏராளம்.லட்சக்கணக்கானவர்கள் அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியால் இங்கே  நம் ஊரில் பட்டினி கிடக்க நேர்ந்தது’ எனக்குத்தெரிந்ததைச்சொன்னேன்.
‘                             ’நீ கோர் சப்ஜெக்ட்டில் வேலைக்குப்போ’ என் அண்ணன் தான். எனக்கு அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தான்.. நான் சாஃப்ட்வேர்  கேம்பஸ் ரிக்ரூட்மெண்ட் என்றால் அங்கு எட்டியே பார்க்கமாட்டேன்’‘ அவன் சொல்லிக்கொண்டான்.
‘அது சரி இந்த பக்கம் வா. பெங்களூர் வேண்டாம்‘
               ‘என்னம்மா இத்தனை வெள்ளம் பார்த்தும் இந்த சென்னைதான்’ வேண்டுமா . நீயு ம் அப்பாவும்  பெங்களூர் வந்துவிடுங்கள்’
‘தமிழ் நாட்டை விட்டு வர என்னால் முடியும் என்று தோன்றவில்லை’ நான் பதில் சொன்னேன். அவன்  பெங்களூருக்கு க்கிளம்பினான். மறு நாள் காலை அவனுக்கு வேலைக்குச்செல்லவேண்டும்.
-----------------------------------------





.
  



.




.
.



No comments:

Post a Comment