Sunday, October 17, 2021

எழுத்தாளர் -எஸ்ஸார்சி

 

எழுத்தாளர் எஸ்ஸார்சி

 நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின் என்னும் வாக்குக்கினங்கவும்; எப்படியும் வாழலாம் என்று எண்ணிச் செயல்படுவோர் மத்தியில் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கொள்கையோடு வாழ்ந்து வருபவரும்; ஒட்டிக் கொள்ள வரும் சோர்வை தட்டித் தள்ளிவிட்டு தாம் கொண்ட பணியில் தஞ்சமடைபவர்களில் ஒருவராகிய எஸ்ஸார்சி என்கிற புனைபெயர் கொண்ட எழுத்தாளர் எஸ். இராமசந்திரன் தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆங்கிலப் புலமைச் சார்ந்த தமிழ்ப் பற்றாளர். இவர் கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம், சிற்றிதழ் என விரிந்த இலக்கிய செயல் வீச்சுடைய பல்துறைப் படைப்பாளி. இவரது ஆழ்ந்த ஆய்வுப் பணியாலும், சீர்மிகு சிந்தனையாலும், தம்முடைய வாழ்வு நெறிகளாலும் தனித்துவம் மிக்கவராக திகழும் இவரின் வாழ்வும் தமிழ்ப் பணி பற்றியும் சுருங்க ஆய்வதாக இந்நூல் அமைகிறது.

வாழ்க்கை வரலாறு

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டத்தை சேர்ந்த தருமநல்லூர் என்னும் சிறிய கிராமம். இக்கிராமத்தில் ஒரு சிவன் கோயிலும் அதன் அருகில் ஒரு அய்யர் வீடு, ஒரு குருக்கள் வீடு என சுமார் நூறு வீடுகள் உடைய அச் சிறு கிராமத்தில் கிராம புரோகிதராக இருந்த திரு.சுந்தரேச ஐயர் – திருமதி மீனாட்சி தம்பதியருக்கு 04.03.1954 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார்.  இவரது பெற்றோர் மூன்றாம் வகுப்பு வரை படித்தவர்கள். இவரது குடும்பத்தின் தாய் மொழி தெலுங்கு என்றாலும், தெலுங்கு மொழியினைப் படிக்க, எழுத தெரியாது. ஓரளவிற்கு தட்டுத் தடுமாறி பேசமட்டுமே செய்கின்றனர். எனவே இவர்கள் சுமார் ஐநூறு (500) ஆண்டுகள் முன்பு தமிழக மண்ணுக்கு ஆந்திர மண்ணிலிருந்து குடி பெயர்ந்த பல்லாயிரம் குடும்பங்களில் ஒன்றாக இருத்தல் வேண்டும் என துணிய முடிகிறது.

குடும்பம்

இவரது உடன் பிறந்தோர் மூன்று தமக்கைகள், இரண்டு அண்ணன்கள் ஒரு தங்கை என எழுவர் ஆவர். மனைவி பானுமதி (வருவாய்த் துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்) மகன்கள் இருவர் அஜாய் சுந்தர், லட்சுமணபாரதி  இவர்கள் இருவரும் பொறியியல் படித்து பணியில் உள்ளனர்.

கல்வித் தகுதி

இளநிலை அறிவியல் (வேதியல்), முதுகலை (ஆங்கிலம்), எம்.ஃபில் (ஆங்கிலம்), இதழியல் (பட்டயம்), ஐந்தாம் வகுப்பு வரை தருமநல்லூர் கிராம கம்மாபுரம் பஞ்சாயத்து யூனியன் பள்ளியிலும்; ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 2. கி.மீ தூரத்திலிருக்கும் வளையமாதேவி கிராம வள்ளலார் உயர்நிலைப்பள்ளியிலும்; ஒன்பதாம் வகுப்பு முதல் பதினொன்று வரை கம்பாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியிலும்; புகுமுக வகுப்பு, இள அறிவியல் (வேதியல்) ஆகியவற்றை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றுள்ளார். மேலும் 1974 ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ, எம்.பிஃல் (ஆங்கிலம்) பட்டமும்; இதழியல், தொழிலாளர் நிறுவாக சட்டம் ஆகியவற்றில் பட்டயங்களும் பெற்றுள்ளார். மேலும், வடமொழியும், இந்தியும் பயின்றவர். தற்பொழுது கன்னடமும் மலையாளமும் பயின்று வருகின்றார்.

பணிநிலை

தொழிலாளர் நலம் (பட்டயம்) பட்டம் படித்து முடித்தவுடன் 1974ம் ஆண்டு வடலூரில் உள்ள சேஷசாயி இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தில் சூப்பர் வைசராக ஆறு மாதம் பணியாற்றியுள்ளார். பிறகு 1975- ஜூலை 15 முதல் 1996 வரை விருத்தாசலம் நகரில் தொலைத் தகவல் துறையில் இயக்குனராகப் (டெலிபோன் ஆப்ரேட்டர்) பணியாற்றியுள்ளார். அதன்பிறகு 1996ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை கடலூர் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) தொலைபேசி துறையில் இளநிலை கணக்கு அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். இறுதியாக 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை சென்னையில் தொலைபேசி துறையில் முதுநிலை தொலைபேசி மேற்பார்வையாளராக 31.03.2014ஆம் ஆண்டு பணி ஓய்வு பெரும் வரையில் பணியாற்றியுள்ளார்.

இளமைப் பருவம்

 விருத்தாசலம் – சிதம்பரம் செல்லும் சாலையில் உள்ள தருமநல்லூர் ஆரம்பப் பள்ளியானது ஆரம்ப காலத்தில் உள்ளூர் மாரியம்மன் கோயில் மண்டபத்திலும், வரிவசூல் செய்யும் சாவடியிலும் நடைபெற்று வந்துள்ளது. அப்பள்ளியில் பயின்றபோது தமிழக முதல்வராக இருந்த காமராஜரை அப்பள்ளிக் குழந்தைகள் அனைவருமாக அருகே சென்று பார்த்ததும். அவர் மகிழுந்து விட்டு இறங்கி மாணவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியோடு பார்த்து அறிவுரைகள் சொல்லிச் சென்றதையும் இன்றளவும் மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்கின்றார். இவரை ஒருநாள் அப்பள்ளி ஆசிரியர் நாளை நடைபெறும் பேச்சுப் போட்டியில் பாரதியாரைப் பற்றிப் பேசவேண்டும் எனக் கூறியதுடன் பாரதியார் நூல் ஒன்றையும் பரிசாகத் தந்துள்ளார். மறுநாள் நடைப்பெற்ற அந்தப் பேச்சுப் போட்டியில் மிகச் சிறப்பாகப் பேசியதாகப் பாராட்டப்பட்டதால் அன்று முதல் பாரதியார் அவருக்கு மிகப்பிடித்த கவிஞராகியுள்ளார்.

தமிழ்ப்பற்று

 தனது எட்டு வயது முதலே திருவள்ளுவர், பாரதியார் மீது கொண்ட பற்றின் காரணமாக இலக்கியத்தில் ஆர்வம் ஏற்பட்டது. இன்றளவும் இவர்களைத் தன் முன்னோடியாக கொண்டுள்ளார். திருக்குறள், திருவாசகம், திருமந்திரம் இம் மூன்று நூல்களையும் பற்றுடன் பயன்றுள்ளார். வளையமாதேவியி, வள்ளலார் உயர் ஆதாரப்பள்ளி (8 ஆம் வகுப்பு வரை) யில் தமிழ் ஆசிரியராய் பணியாற்றிய புலவர் இராசங்கம் அவர்கள் இவருக்கு தமிழ் உணர்வு ஊட்டிய பெருமகன் என நினைவுக்கூறுகின்றார். இவர் கம்மாபுரம் உயர் நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற செயலாளர் பொறுப்பில் இருந்த போது அப்பள்ளியில் நடந்த இலக்கிய மன்ற ஆண்டு விழாவிற்கு வருகைப் புரிந்து வாழ்த்துரை வழங்கிய குன்றக்குடி தெய்வசிகாமணி அடிகளாரின் உரையும்; அதன் பிறகு ஒரு நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை சண்முகம் வந்து உரை நிகழ்த்தியதும் இவருக்குத் தமிழ் ஆர்வத்தைக் கூட்டியது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் போது, சி.பி. இராமசாமி அய்யர் நூலகம் இவரின் தமிழ் ஆர்வத்திற்கு உபயோகமாக இருந்துள்ளது. இவர் பல்கலைக் கழகத்தில் பயிலும் பொழுது ‘பாரதிதாசன் பனுவலில் சில’ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதி சிறப்புப் பெற்றார். இதுவே இவர் இலக்கியத் துறையில் முதன் முதலில் முத்திரைப் பதித்ததாகும். இது 1972 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக மலரில் வெளிவந்து இவருக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இதுதான் இவரது முதல் அச்சு வெளிப்பாடு என்பதுக் குறிப்பிடத்தக்கதாகும்.

காந்திய சிந்தனை

இவர் பள்ளி மாணாக்கனாய் இருந்த பொழுதிலிருந்தே, பாரதியின் கவிதைகள் இவர் உள்ளத்தில் இடம் பிடித்துள்ளன. பின்னர் பாரதிதாசனின் எழுத்துக்களால் கவரப்பட்டதன் காரணமாக காந்திய சிந்தனையில் மனம் லயக்கத் தொடங்கியுள்ளது. இவர் பல்கலைக்கழகத்தில் ‘காந்தியன் ஸ்டடி சர்க்கிள்’ பணிகளில் பங்கேற்றுள்ளார். அதன்பின்பு சிதம்பரம் காந்தி அமைதி நிலையத்தில் நெருங்கிய தொடர்பு கொண்டு சமூகப்பணி ஆற்றியுள்ளார். அந்த அமைப்பின் மூலம் அப்பகுதி ஏழைக் குழந்தைகளுக்குக் கட்டணமில்லாமல் வகுப்பு நடத்தியுள்ளார்கள் அதனில் பங்கேற்று ஏழைக்குழந்தைகளுக்குக் கல்வி பயிற்றுள்ளார். 

 எழுபதுகளில், ஜெய்ப்பிரகாஷ் நாராயணன் தொடங்கி நடத்திய பூரண புரட்சி இயக்கத்திலும், மகாத்மாவின் உதவியாளர் மகாதேவ தேசாயின் மகனார் நாராயண் தேசாயின் சாந்திசேனா அமைப்பிலும் ஈடுபாடு கொண்டுள்ளார். அதன் விளைவாக, மகாதேவ தேசாய் மகனார் நாராயண தேசாயால், அகில இந்திய அளவில் நிர்வகிக்கப்பட்டு வந்த ‘சாந்திசேனா’ என்னும் அமைப்பின் சார்பில் பெல்காம் அருகே கடோலில் நடைபெற்ற அதன் ஆண்டு சேவைமுகாமில் முப்பது நாட்கள் பங்கேற்க வாய்ப்புக் கிட்டிள்ளது. அந்த முகாமில் இந்திய மாநிலங்கள் அனைத்திலிருந்தும் மாணவர்கள் வருகைப் புரிந்து தங்களது, உடல் உழைப்பு, நல்ல இலக்கிய படைப்பு, காந்திய போதனை, நல் ஒழுக்கம் ஆகியவற்றை பகுந்துகொண்டுள்ளனர். அதில் இவர் தமிழ் இலக்கியப் படைப்பு அளித்துள்ளார். அதன் பின்னர் காந்தி அமைதி நிலைய மலர் ‘தொண்டு’ அதனில் உதவி ஆசிரியன் என்கிற பொறுப்பும் வந்துள்ளது.

மதத்தால் ஏற்பட்ட மன வருத்தம்

ஒரு சமயம் சிதம்பரம் நகருக்கு காந்தி சங்கராச்சாரியர் ஜயேந்திரர் வருகைப் புரிந்துள்ளார் அப்பொழுது அவரிடம் ஆசிபெறச் சென்றபோது, காந்தி மிக உயர்ந்தவர் என்கிற விஷயம் தர்க்கப் பொருளாகத் தொடங்கி அது விவாதப் பொருளாகி பின் மடத்திலுள்ளோர்களால் சமாதனப்படுத்தி ஓரங்கட்டப்பட்டுள்ளார். சிதம்பரத்திலிருந்து தன்னைப் பரங்கிப்பேட்டைக்கு வரச்சொல்லிய சுவாமிகளுடன் ஆசி பெறச் சென்றபோது அப்படி நிகழ்வு நடந்தது இவருக்கு மன வருத்ததை அளித்துள்ளது. மேலும், சுவாமிகள் ‘இந்து சமய மன்றம்’ என ஒன்றுத் தொடங்கச் சொல்லியுள்ளார் அதற்கு இவர் என்னால் ஒரு மதம் சார்ந்து இயங்க முடியாதுயென சொல்லி ஏற்காமல் அதனைக் கைவிட்டது குறிப்பிடத் தகுந்ததாகும்.

தொழிச்சங்க ஈர்ப்பு

கடலூர் மாவட்டத்தில் தொழிற்சங்க அரங்கில் ‘சிரில்’ என்னும் தமிழ் இலக்கிய படைப்பாளி பணியாற்றியுள்ளார். பின்னாளில் அவரின் நினைவாக கடலூர் மாவட்ட  தொலைபேசி ஊழியர்களின் (பி.எஸ்.என்.எல்)  சிரில் நினைவு அறக்கட்டளைத் தொடங்கியுள்ளனர். அந்த அமைப்பானது ஒவ்வொரு ஆண்டும் தமிழில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களைப் பாராட்டிப் பரிசு அளிப்பதும் தமிழ் அறிஞர் ஒருவரை கௌரவிப்பதும் என்கிற நடைமுறையைக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. அந்த அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளாராக பத்தாண்டுகள் இருந்து செயல்பட்டுள்ளார். மேலும், பத்தாண்டுகள் கடலூர் மாவட்ட கலை இலக்கியப் பெருமன்ற செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். அந்த மாவட்டத்தில் தொழிற்சங்க பின்புலத்தோடு இயங்கிய அமைப்புகள் இவையே. கலை இலக்கியப் பெருமன்றம் நடத்திய அரங்குகளில், ராஜம் கிருஷ்ணன், பிரபஞ்சன், பொன்னீலன், மகேந்திரன், ஸ்டாலின், குணசேகரன், வெண்ணிலா, தமிழ்ச்செல்வி, பாசுகரன், அகரமுதல்வன், பத்மாவதி விவேகானந்தன், ராஜா, தனுஷ்கோடி ராமசாமி, ஞானக்கூத்தன், பழமலய், குறுஞ்சிவேலன், சபாநாயகம் எனப் பலர் கலந்து கொண்டு பெருமை சேர்த்துள்ளனர். இவ்வாறாக தொழிற்சங்க இயக்கத்தால் மார்க்சீயத்தின்பால் ஈர்க்கப்பட்டுள்ளார். கம்யூனிசத்தில் பற்று கொண்டவரும் இடதுசாரி சிந்தணை கொண்டவரும் ஆவார்.

இதழ்பணி

குறிஞ்சி வேலனைக் கொண்டு வெளிவருகின்ற ‘திசை எட்டும்’ என்னும் மொழி பெயர்ப்பு காலாண்டிதழின் ஆசிரியர்க் குழுவில் இருந்துப் பணி ஆற்றிவருகின்றார். பட்டுக்கோட்டையிலிருது வெளிவரும் ‘இலக்கியச் சிறகு’ ஷைன் (SHINE, ஆங்கில இதழ்) ஆகிய இலக்கிய இதழ்களின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் இருந்து வருகின்றார்.

படைப்புகள்

           இவர் இதுவரை நூற்றுக்கு மேற்பட சிறுகதைகளை எழுதியுள்ளார். அவை, ஆறு  சிறுகதைத் தொகுப்புகளாக வெளிவந்துள்ளது. நான்கு புதினங்களும், மூன்று கவிதைத் தொகுப்புகளும்  எழுதியுள்ளார். மேலும், கட்டுரைத்தொகுதி நான்கு, மொழிபெயர்ப்பு நூல்கள் இரண்டு, ஆங்கில கவிதைத் தொகுப்பு என இவரது பட்டியல் நீள்கின்றது. அவை கீழ் வருமாறு.

1.   சிறுகதைத் தொகுப்பு (6)

1.  மறுபக்கம்                                    

2.  யாதுமாகி                                    

3.  உரைகல்                          

4.  செய்தவம்

5.  பட்டறிவு                                                 

6. தேசம்        

2.   புதினம் (4)

1.  மண்ணுக்குள் உயிர்ப்பு

2.  கனவு மெய்ப்படும்

3.  நெருப்புக்கு ஏது உறக்கம்

4.  எதிர்வு      

3.   கவிதைத் தொகுதி (3)

1. ரணம் சுமந்து

2.  ஞானத்தீ

3. வேதவனம்

4.   கட்டுரைத் தொகுதி (4)

1.  சில ஆய்வுகள் மதிப்புரைகள் விமர்சனங்கள்

2. படித்தலும் படைத்தலும்

3. சிந்தனை விழுதுகள்        

4. பாரதம் போற்றும் பைந்தமிழ் கவிஞர்கள்       

5.   மொழி பெயர்ப்பு நூல்கள் (2)

1.    காலம் மாறும் (மகேந்திர பட்னாகர்)

2.    ஆன்ம தரிசனம் (ராஜாஜி)

6.   ஆங்கில கவிதைத் தொகுதி (1)

          1. Rain Bow (Poem)          

7.   ஆங்கில உரைநடை நூல் (1)

1.    Bacon and Thiruvalluvar (Comparative Study)                    

8.   தொகுப்பு பொறுப்பு (2)

1.    கவிதை மாலை               கடலூர் மாவட்ட கவிஞர்களின்

2.    கவிதை மாலை               கவிதைகள் தொகுப்பு

9.   அச்சில் உள்ள நூல்கள் (2)

1.    சிறுகதைத் தொகுதி

2.    மொழி பெயர்ப்புக் கவிதைகள்

இவரது படைப்புகள், கணையாழி, தாமரை, சுபமங்களா, மஞ்சரி, கவிதாசரண் முதலிய இதழ்களிலும், தோன்றி மறைந்து போன பாட்டாளித் தோழன், சாரல் போன்ற சிற்றிதழ்களிலும் வெளிவந்துள்ளன.  புதுவை அகில இந்திய வானொலியில் இலக்கியம் சார்ந்த உரைகள் நிகழ்த்தி வருகின்றார்.

 

சிறுகதைத் தொகுப்பு

இன்று தமிழில் மிகுதியாய் வளர்ந்துவரும் துறை சிறுகதைத் துறை எனலாம். மேலைநாட்டினர் தொடர்பால் தமிழ் உரைநடையில் வளர்ச்சி நல்ல திருப்பம் கண்டது. அதன் பயனாக உரைநடையில் பல திருப்பங்கள் ஏற்பட்டன. மேலும், பத்திரிகைகளின் வளர்ச்சி சிறுகதை, நாவல்களின் விரைந்த வளர்ச்சிக்கு வித்தூன்றியது எனலாம்.

சுவைவாயன நிகழ்ச்சி அல்லது சூழ்நிலை அமைப்பு; கவர்ச்சியான ஒரு காட்சி; நெருங்கிப் பின்னப்பட்ட சிறு நிகழ்ச்சிகள்; ஒருவரின் தனிப்பண்பு; ஒரு சிறு அனுபவம்; வாழ்க்கையின் ஒரு பெற்றி; அறவுணர்வால் விளந்த ஒரு சிக்கல் – இவற்றுள்; ஏதேனும் ஒன்று நல்ல சிறுகதையின் அடிப்படையாய் அமையலாம். சிறுகதைகளில் நீண்ட வருணனைகளுக்கு இடமில்லை; கதை மாந்தரின் பண்பை விளக்குவதற்கோ கதை நிகழ்ச்சியைப் புலப்படுத்துவதற்கோ ஏற்ற அளவிற்கு உரையாடல் அமையலாம் என இலக்கணம் வகுத்துள்ளர். , ‘சிறுகதை குதிரைப் பந்தயம் போலத் தொடக்கமும் முடிவும் சுவை மிக்கனவாக இருத்தல் வேண்டும்’ என்பார் மேனாட்டு அறிஞர் செட்ஜ்விக்.’

            தமிழில் பஞ்ச தந்திரக் கதைகளும், மதனகாமராஜன் கதையும், விக்கிரமாதித்தன் கதையும் மிகப் பழமையானவை. கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரமா முனிவர். பரமார்த்த குரு கதை முதலிய பல கதைகளைத் தமிழில் எழுதினார். அஷ்டாவதானம் வீராசாமிச் செட்டியார் ‘விநோத ரச மஞ்சரி’ என்னும் நூலை எழுதினர். இதில் அவர்தம் சிந்தனையிலே மலர்ந்த சிறுகதைப் போக்கான கதைகளைக் காணலாம்.

            கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாயூரம் வேதநாயகம்பிள்ளை (1824-89) அவர்கள் ‘பிரதாப முதலியார் சரித்திரமும்’ ‘சுகுண சுந்தரி கதையும்’ எழுதினார். இந்நூல்கள் இக்காலப் போக்குப்படி நாவல்கள் என்று கொள்ளப்பட்டாலும், இந் நெடுங்கதைக்கு இடையிடையே பல சிறுகதைகளும் மலர்ந்துள்ளன என்பதை நாம் அறியவேண்டும். தனித் தமிழ்த் தந்தையார் மறைமலையடிகளார் (1876-1950) ‘கோகிலாம்பாள் கடிதங்கள்’ என்னும் நூலினை எழுதினார். இந்நூல் கடிதத் தொகுப்பேயானாலும், ஒவ்வொன்றும் ஒரு சிறுகதை போலத் தோற்றமளிக்கின்றது. இவை எல்லாவற்றைக் காட்டிலும் வ.வே.சு ஐயர் (1881-1925) அவர்கள் எழுதிய ‘மங்கையர்க் கரசியின் காதல்’ என்னும் நூல் சிறந்த சிறுகதைத் தொகுப்பு நூலாய் விளங்குகின்றது.  சுப்பிரமணிய பாரதியார் கவிஞராக மட்டுமன்றிச் சிறுகதை ஆசிரியராகவும் நமக்குக் காட்சியளிக்கிறார். அவர் எழுதிய ‘திண்டிம சாஸ்திரி’ ‘ஸ்வர்ண குமார்’ முதலான கதைகள் சிறந்த கதைகளாகும். இவ்வகையில் ஆசிரியர் எஸ்ஸார்சியின் சிறுகதைப் படைப்புகளும் சிறப்பானதாக அமைகின்றது. அவற்றினைச் சுருங்க காண்போம்.

Ø  மறுபக்கம் இது இவரது முதல் சிறுகதை தொகுப்பு நூல் ஆகும்.  இந்நூல் இருபத்தியிரண்டு (22) சிறுகதைகளை உள்ளடக்கியதாகும்.  முதல் சிறுகதையின் பெயர் நூலின் பெயராகிய மறுபக்கம். இக்கதை தன்னுடன் பணியாற்றும் ஒரு ஊழியனைப் பற்றியது. அலுவலகத்தில் அனைவருக்கும் சிம்ம சொப்பனமாய் உலாவரும் ஒரு அவன், தன் வாழும் ஊரில் வித்யாசமாக அறியப்படுகிறான். அவனது ஊரில் நடைபெறும் கோயில் திருவிழாவில் நடந்த நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டுவதாக இக்கதை அமைகின்றது. தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதியில் நடைபெறும் அவ்விழாவில் அம்மன் வீதி உலா வருகின்றாள். அந்த தாழ்த்தப்பட்ட சமுகத்திற்குள்ளே அம்மனை வழிபடுவோர், அம்மனை வழிபட தேவையற்றோர், அம்மனை வழிபட அருகதை அற்றோர் என மூன்று விதமாய் மக்கள் பிரித்து கிடக்கும் அவல நிலையைச் சுட்டுகின்றது. அவர்களால் நடத்தப்படும் வீதி உலா நிகழ்வில் காத்தவராயன் கூத்து நடிக்க வந்தவர்களுக்கு உணவு அவ்வூரில் வசிக்கும் மேட்டுக்குடி மக்களே தயார் செய்து அனுப்பி வைக்கிறார்கள். இங்கேயும் சாதியின் இறுக்கம் அவர்களை சற்றுத் தள்ளி நின்று பார்க்கப் பணிக்கிறது. காத்தவராயன் கூத்திலும் ஆரிய மாலையின் மாதவிடாய்த் துணியை துவைத்த ஏகாலி உதை வாங்கி அழுகிறான். மக்கள் பகுத்தறிவை தொலைத்து விட்டு நிற்க ‘சாதி’ அத்தனை பொறுப்போடு வினை செய்கிறது என்பதனை எடுத்துக் காட்டுகிறது. ஆனால் இங்கு மனதுக்கு சற்று ஆறுதலாக இருப்பது கூத்தினை ஊர்மக்கள் எல்லோரும் ஒன்றாக கண்டு களிக்கின்றார்கள என்பதே இவ்வாறாக சமுகத்தின் அவலத்தை அலசுவதாக அமைகின்றது இக்கதை.

அடுத்து வரும் கதை, ஒரு எருமையும் சில மனிதர்களும் என்னும் தலைப்பிட்ட கதையாகும். தற்போது வாழும் சமூகம் எப்படி நம் பண்பாட்டு உன்னதங்களை தொலைத்து விட்டு வெட்கமின்றி இயங்குகிறது என்பதைப் பேசுகிறது. தன்னைப் பெற்ற தந்தைக்கு மாற்று வேட்டி வாங்கித் தர மனமில்லா மகன், தான் மேய்க்கும் எருமை மாடு ஒன்றினைச் சந்தையில் விற்று வேட்டி வாங்க முயற்சி செய்கிறான் தந்தை. இதனால் ஆத்திரம் அடைந்த மகன் தன் தந்தையை புத்தி பேதலித்தவர் என்றும்; நல்ல கறவை மாட்டினை விற்கத் திருட்டுத்தனமாகச் சந்தைக்கு வந்து விட்டார் எனவும் மகனே காவல் நிலையத்தில் பேசுகிறான். விற்க ஓட்டி வந்த எருமை விற்கப்படாமலே வீடு திரும்புகிறது. அந்த எருமைக்கு தந்தையைப் பற்றியும் அவனது மகனைப் பற்றியும் உணரமுடிகிறது. அது செயல்களாலே தன் அன்பை வெளிப்படுத்தத்தான் செய்கிறது. அது இயலுமா என்ன. பெற்ற வளர்த்த மகனைவிட மேய்க்க ஓட்டிப் போகும் ஒரு எருமை மாடு அன்போடு நடந்து கொள்கிறது என்று சமூகத்தை சாடுகிறது. அன்பும் பாசமும் இல்லாக் குடும்பத்தில் தந்தை மாற்று வேட்டிக்கூட இல்லாது அவமானப்படும் அவலத்தைச் சொல்லும் அருமையான சிறுகதை இது.

குட்டிச்சுவர் என்னும் தலைப்பிட்ட அடுத்த கதை பொதுவுடைமை இயக்கம் எப்படி சோகமாய் பிளவுபட்டுப் போனது என்பதை பேசுகிறது. இக்கதையில் வரும் ஒரு கடிதம் இப்படிப் போகிறது. நான் பொதுவுடைமை இயக்கத்தில் என்னை அர்ப்பணித்துக் கொண்டவன். இந்நகரம் முழுமைக்கும் என் காலடிகள் படாத வீதியே இருக்க முடியாது. மக்கள் சக்தி இதழினைத் தெருத் தெருவாய் கூவி, கூவி விற்றவன் என்பதனை அறிய நீ வியப்படைவாய். உயிருக்கு உயிராய் வரித்துக் கொண்ட தோழர்கள் ஒருவரை ஒருவர் துரோகி என அர்ச்சித்துக் கொண்டனர். கருத்து விவாதங்கள் – தோழமைக்கு நஞ்சாய் இன்று மாறியதோ என்று இறங்கிப் போய்விட்டவன் நான். கருத்து மோதல்களில் எதிர் நீச்சலிட்டுத் தெரியாத, பேடி என்று என்னை நீ அழை நான் வருத்தப்பட போவதில்லை கருத்து மாறுபாடு, கருத்துப் பகையாய் மாறியதனை ஜீரணிக்கின்ற திராணி எனக்கு இல்லை தான்என நீள்கிறது. மனிதனைச் சிறுமைப் படுத்திவிடும் கருத்து மோதல்கள் பற்றி ஆழமாகப் பேசும் அர்புதமான சிறுகதை இது.

காரணமாய் பகவானும் என்னும் சிறுகதை, கடவுளை வைத்து எப்படிச் சம்பாதிக்கிறார்கள், கடவுளை கும்பிடுகிறவர்கள் எப்படி எல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்கிற அவலத்தைக் காட்டுகிறது. அதற்கென்றே ஒரு கும்பல் இயங்கிக் கொண்டே இருக்கிறது. அவர்களால் அப்பாவி மக்கள் ஏளனப்படுத்தப் படுகிறார்கள், ஏமாற்றப்படுகிறார்கள். இங்கு சுரண்டல் என்பது தொடர்கதையாகும். எதை முதலீடாக ஆக்கினால் என்ன? பணம் கிடைத்தால் போதும் என்பதாய் சில மனிதர்கள் எந்நேரமும் பணம் பணம் என்றே அலைகிறார்கள். இங்கு திருட்டும் பகட்டும் இணைந்தே செயல்படுகின்றன. என்பவனவற்றைச் சுட்டிக்காட்ட, சிங்கப்பூரில் குடமுழுக்கு என்பதாகப் புறப்படும் சிவாச்சாரியார்கள் சின்னப்பட்டு ஊர்திரும்புவதாக நகைச்சுவையாக செல்கின்றது இக்கதை.

ஆண்டி என்னும் பெயருடைய இக்கதை. பழனி முருகனுக்கு பால்காவடி எடுப்பதாய் வேண்டி அங்கு சென்று திரும்பிய ஒருவரின் அனுபவமாக அமைகின்றது இக்கதை. பழனியில் விடுதிக்காரர்கள், அபிஷேக சாமான்கள் விற்போர், முருகனுக்குப் படைக்கும் ஆசாமிகள், பிச்சைக்காரர்களின் வரிசை என எத்தனை இம்சைகள் உண்டோ அத்தனையும் பிட்டு, பிட்டு வைக்கும் சிறுகதை. வண்டிக்காரர்கள், ஆட்டோ ஓட்டிகள், எல்லோருமாய் பழனிக்கு செல்லும் முருக பக்தர்களை எப்படி எல்லாம் சுரண்டுகிறார்கள் என்பதை மிக அழகாக எடுத்துச் சொல்கிறது. ஆனால் பழனியில் முருகன் மட்டும் தான் ஆண்டிக் கோலத்தில் இருக்கிறார் என்கிற நருக்கென்ற சேதியை சொல்லும் கதையாய் அமைகின்றது.

ஒரேஜாதி என்னும் கதை, பார்ப்பனர்களில் ஏழை எளிய மக்கள், பெரிய பணக்காரர்கள் என்கிற இரண்டு தளமும் எப்படி இயங்குகின்றன என்பதை பேசும் கதையாகும். தானம் வாங்கிச் செல்லும் ஒரு ஏழை அந்தணனைக் கேவலமாக பார்த்துவிட்டு பின் அவனையே பிராமணர்கள் நடத்தும் கூட்டத்திற்கு அழைக்கும் வினோத கதை. வோட்டு என்று வருகிறபோது மட்டும் ஒன்றாக இருப்பதாய்க் காட்டிக் கொள்ளும் நாடகம் இங்கே வெளிச்சப்படுகிறது. இக்கதை இந்திரா பார்த்தசாரதி தொகுத்த கணையாழிப் படைப்புக்கள் என்னும் முதல் தொகுப்பில் இனங்கண்டு சேர்க்கப்பட்டுள்ளது பெருமைக்குரியதாகும்.

பத்திரிக்கைக்குள்ளேயே என்னும் இச்சிறுகதை, ஊருக்கு எல்லாம் ஜனநாயகம், நேர்மை, உண்மை என்று பேசும் நாளிதழ் அங்கு பணியாற்றும் ஊழியர்கட்கு எதையுமே அளிக்காத அவலம் பேசும் படைப்பாகிறது. கட்சி அரசியலுக்கும் காசு அதிகாரத்திற்கும் கைகட்டி சேவகம் செய்யும் பத்திரிகைகள் தனக்குள்ளே நடக்கும் நிர்வாகத்தில் எந்த நேர்மையையும் கடைபிடிப்பது இல்லை என்பதனை எடுத்துரைக்கும் கதை. நியாயம் தர்மம் எல்லாம் பத்திரிக்கைகுள்ளேயே தேடறயா? என்று ஊழியரைக் கேட்கும் நிர்வாகத்தின் குரல் அவிழ்படும் படைப்பு.

இப்படியாக சமுகத்தில் நடக்கும் அவலங்களைத் தோலுரிப்பதாக இதனில் வருகின்ற இருபத்தி இரண்டு (22) கதைகளுமே மனிதனின் மறுபக்கத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் படைப்புகளாகவே அமைந்துள்ளன. இச்சிறுகதைத் தொகுப்பு எழுத்தாளர் வே. சபாநாயகம் அணிந்துரையோடு வெளிவந்துள்ளது.

Ø  யாதுமாகி இதுவும் முதல் சிறுகதைத் தொகுப்பு போன்றே இருபத்திரெண்டு (22) சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு நூலாகும். இந்நூலின் என்னுரையில் ஆசிரியர் எஸ்ஸார்சி குறிப்பிட்டுள்ளது போல், ‘ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் இன்னொரு நிஜமனிதன் இருந்து கொண்டு அவனைக் கேலி பேசுகிறான்’ என்பதனை கருவாக கொண்டு இந்தச் சிறுகதைகள் அமைந்துள்ளன.

இத்தொகுப்பில் வரும் சின்ன கணக்குகள் என்னும் சிறுகதை, ஒரு முடிவெட்டும் நாவிதன் தான் கடன் கேட்டுப் பெற்றுக் கொண்ட இருநூறு ரூபாய்க்கு கணக்குக் கழிக்க முடிவெட்டும் பணியினை சொல்கிறது. கடன் பெற்றவன் ஒரு கணக்குப் போட, கடன் கொடுத்தவன் வேறு கணக்குப் போடுகிறான். அவனும் அவன் இருபிள்ளைகளும், அவன் அண்ணன் பிள்ளைகளும் முடிவெட்டிக் கொண்டும் இன்னும் மீதத் தொகை இவனிடம் பாக்கி இருப்பதாக கூற, அதனால் அந்த நாவிதன் கடையையே மாற்றிக் கொண்டு வேறிடம் சென்று விடுகிறான். இவ்வாறாக சமூகத்தில் ஏழை, எளிய மனிதர்கள் படும் மன அவத்தையை சித்திரமாக காட்டுகிறது இப்படைப்பு.

அடுத்து வரும் நன்றாற்றலுள்ளும் என்னும் இக்கதை, சினிமாவுக்குப் போனவன் அங்கு சின்னப்பட்ட அனுபவத்தைப் பேசுகிறது. பக்கத்து இருக்கையில் அமந்திருந்த ஒருத்தியின் குழந்தையைப் பார்த்து மகிழ்ச்சி பாவித்த அவனுக்கு கொலுசு திருடிவிட்டான் என்கிற பட்டம் கிடைக்கிறது. அதனால், அபராதம் கட்டுவதோடு, திரை அரங்கையே விட்டு வெளியேறும் நிலை ஏற்படுகிறது என்பதாக செல்கிறது கதை.

மந்த்ராலயம் பயனித்த சின்ன மனசுகள் என்னும் சிறுகதையில், மந்த்ராலயத்திற்குப் பயணித்த போது உடன் வந்த குடும்பத்தினர் எத்தனை சுயநலமிகளாக நடந்து கொண்டனர் என்கிற செய்தியைக் கூறப்படுகிறது. நம்மிடம் ஒட்டிக்கொண்டால் நமது சௌகரியத்துக்கு ஆபத்து என்கிற அதி ஜாக்கிரைதையுடன் நடந்து கொள்கிற மக்களின் சின்னதனத்தை இக்கதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இக்கதையில் வரும் இரு குடும்பத்தலைவர்களும் ஒரு காலத்தில் ஒன்றாக ஒரு நிறுவனத்தில் பணியாற்றியவர்கள். காலமும் தூரமும் அவர்களை எங்கெங்கோ கொண்டு சேர்த்துவிடுகிறது. இந்த பயணத்தில் சந்திக்கின்ற இவர்கள், பயணம் முடிகிறபோது ஒருவரை ஒருவர் விசாரித்துக் கொண்டு நெருங்கி வருவது போலவே காட்சி தருகின்றனர். ஆனால் இனி ஆவதற்கு ஒன்றுமில்லை அவரவர்கள் தம் ஊர் செல்ல வேண்டியது தான் என எண்ணும் மனித மனத்தின் சின்னத் தனங்களை சட்டம் போட்டுக் காட்டும் சிறுகதை இது. இக்கதையில் சிந்தனைக்கு காரணமாய் இருந்த நண்பனின் மனைவி ‘புருஷா என்னைக்கும் குள்ளம் தான்’ என்கிற விமர்சனம் வைப்பது நகைமுரணாக அமைகின்றது.

வடக்கும் தெற்கும் என்னும் கதை கதை, மாடு மேய்க்கும் மதுரைக்காரன், வடக்கே உள்ள சேட் வீட்டுக்குப் போக ரயில் ஏறுகிறான். அதற்குள், சேட்டின் தம்பி, தன்னுடைய அண்ணனுடன் மதுரையில் மீண்டும் ஒரு நிதி நிறுவனம் வைக்க கட்டிடம் பார்த்து ஏற்பாடு செய்கிறான்.  அதனால் அந்த மதுரைக்காரன் தன் மச்சானை வடக்கேயுள்ள சேட்டின் ஊருக்கு ரயில் ஏற்றி விட்டுவிட்டு, தான் சேட்டின் தம்பி திறக்க இருக்கும் நிதி நிறுவனக் கட்டிடத்தைச் சுத்தம் செய்ய ஓடுகிறான். இவ்வாறாக ஏழைகளின் யதார்த்த வாழ்வைச் சித்தரிக்கும் கதையே  வடக்கும் தெற்கும். பணம் படைத்தவர்கட்கு தெற்குமில்லை வடக்குமில்லை எல்லாம் அவர்களதுதான் என்ற சேதியைச் சொல்கிறது இப்படைப்பு.

யாதுமாகி என்னும் சிறுகதை, இந்த சிறுகதை தொகுப்பு நூலுக்குத் தலைப்பாகியது. குழந்தையில்லா ஒரு தம்பதியரின் குழந்தையாய் வளர்ந்த பசுங்கன்று இறந்து போகிறது. அதன் தோல் அதனை அப்புறப்படுத்துபவனின் குழந்தைக்கு கொலுசு வாங்கிட முதலாகிறது என்பதுவே யாதுமாகி கதையின் கரு ஆகும். ‘திசை எட்டும்’ என்னும் மொழிப்பெயர்ப்பு இதழ் இந்தக் கதையினை சிறந்த கதையாகத் தேர்வு செய்தது. மேலும், திக்கெட்டும் பரவ வேண்டிய கதை எனத் தன் காலண்டு இதழில் மறு வெளியீடு செய்தது  இக்கதையின் தனிச் சிறப்பாகும்.

இப்படியாக எளிய மனிதர்கள் படும் அல்லல்களை எதார்த்தமாகவும், அவர்களின் மொழியிலும் எடுத்துரைக்கும் இருபத்திரெண்டு (22) கதைகளின் அணிவரிசை இந்நூல். இச்சிறுகதைத் தொகுப்பு ஏனாத்தூர் காஞ்சி சந்திரசேகரேந்திர சரசுவதிப் பல்கலைக்கழகத்தில் பட்டய வகுப்பிற்கு துணைப் பாடமாகவும், அதே பல்கலைக்கழகத்தில் தமிழ் இளங்கலை இரண்டாம் பருவத்திற்குப் பாட நூலாகவும் வைக்கப்பட்டுள்ளது.

Ø  உரைகல் இது இவரது மூன்றாவது சிறுகதை நூலாகும். இந்நூல் 2005 ஆம் ஆண்டு வெளிவந்தது. இது பதினெட்டு (18) சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு நூலாகும். தூக்கிப் பிடிக்கும் உயர்ந்த லட்சியங்களுக்காக சோகங்களைதான் சுமக்கப்பட வேண்டும் என்ற உன்னத தத்துவத்தைப் பேசுகிற படைப்புக்கள் இவை. துன்பம் நேர்கையில் யாழெடுத்து இன்பம் கூட்ட மட்டுமல்லாது, துணிவோடு எதிர் கொள்பவனாய், போராடும் படை அணிவரிசையில் முன் நிற்பவனாய், சமூகத்தின் நம்பிக்கையை பரிணமிக்கச் செய்பவனாய் வாசகனை நகர்த்திப் பார்க்கும் சீரிய படைப்புகளுக்கு வலுசேர்க்கும் கதைகள் இவை. இந்நூல், ஆசிரியரின் படைப்பு முயற்சிகளுக்கு உற்ற துணையாய் என்றும் அமைந்து ஆற்றுப் படுத்துகிற தோழமை இமையம் ‘திசை எட்டும்’ குறிஞ்சி வேலருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நூலின் பதிப்புரையில், கடலூர் மாவட்டத்து குறிப்பிடத்தக்க முன்னணி எழுத்தாளருள் ஒருவரான திரு. எஸ்ஸார்சியின் எழுத்துக்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் எம் பதிப்பகம் “மிகவும் ரசானுபவத்தோடு, தன்னைச் சுற்றி நிகழும் அன்றாட நிகழ்வுகளைக் கருக்கொண்டு” அவர் படைத்துள்ள இனிய சிறுகதைகளின் தொகுப்பாகிய உரைகல் என்னும் நூலைத் தற்போது வெளியிடுவதில் பேருவகை கொள்கிறோம் என்று குறிச்சிப்பாடி, மணியம் பதிப்பத்தின் பேராசிரியர் சு. சம்பந்தன் குறிப்பிட்டுள்ளதை நோக்க எழுத்தாளரின் எழுத்தாளுமை கூடுதலாக புலப்படும்.

சிங்கிநாதம் என்னும் முதல் இச்சிறுகதை, நல்ல புத்தகங்களை வாங்க தமிழகத்தில் வாசகர்களுக்கு இன்னும் கூடுதல் ஆர்வம் வர வேண்டும் என்றும், வாசகர்கள் தரமான எழுத்தாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்கிற நற்செய்தியையும் லாவகமாக தெரிவிக்கிறது. தமிழ்ச்சமூகம் இன்னும் கூடுதல் பொறுப்போடு நல்ல எழுத்தாளர்களையும் அவர்களது நல்ல எழுத்துக்களையும் இனம் காண வேண்டும் எனவும் ஆசிரியர் இக்கதையின் வாயிலாக வேண்டுகோள் வைக்கிறார். நடிகர்களுக்கு திரைப்படத் துறையில் கோடி கோடியாக கொட்டிக் கொடுக்கிறார்கள் அது சில சமயம் கொள்ளை போகிறது. அதுவே நாளை அரசியல் கட்சியாகவும் மலர்கிறது என்கிற செய்தியைச் சொல்லுகிறது. ‘யாரோ எழுதி, யாரோ படித்து, யாரோ வாயசைக்க, நெளித்துக் கொண்டு நிற்பதற்கே கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்துக் கும்பிட்டு நிற்கும் பாக்கியசாலிகள் அல்லவோ நாம்’ என்று மக்களிடத்தில் இருக்கும் திரைப்படத்தின் தாக்கத்தினைப் பேசுகிறது.

காசாம்பு என்கிற சிறுகதையில் காமத்தின் ஆதிக்கத்தை அழகாகக் கையாள்கிறார் கதாசிரியர்.  இப்படிப் போகிறது கதை வர்ணனை, ‘காசாம்புவின் வீடு இருளாய் இருந்தது. அந்த இருவர் மட்டுமே. கடவுளுக்கு வேண்டுமானால் அவர்கள் இருப்பு தெரிந்திருக்கலாம். அந்த காரம் பதுங்கிக் கிடந்தது. சிருங்கார உணர்வை உச்சிக் கொம்புக்கு உந்திச் செலுத்தி தித்திக்கும் தீயாகிப் போயின. அந்தக் கணங்கள் நொடியில் கசிந்த மனங்கள் உரசின. பற்றிக் கொண்டது. அது. அவனுக்கு வானம் வசப்பட்டது. அவருக்கு எட்டாக் கனவு மெய்ப்பட்டது’. என ரசனைமிக்க வர்ணனைகள் இடம் பெற்ற கதையாகும்.

எல்லை என்று தலைப்பிட்ட மூன்றாவது சிறுகதை மனித மனம் படும்பாட்டை சித்திரமாய்த் தீட்டிக் காண்பிக்கிறது. தன் நண்பனின் மனைவி ரெட்டைவடம் சங்கிலி அணிந்துள்ளாள். அது இற்றுக் கொண்டு தொங்கி நிற்கிறது. அதனைப் பார்க்கும் தன் கணவனின் நண்பனை அந்தப் பெண் கீழ்த் தரமாய் நினைத்து நகர்ந்து போகிறாள். இது நடந்த இடமோ மருத்துவமனை. மறுநாள் நண்பன் வீட்டில் இறப்புக்குச் செல்லும் அவன், அந்தப்பெண் சங்கிலியைத் தொலைத்து நிற்பதைக் காண்கிறான். அப்போதும் அவன் கீழான எண்ணமும் நோக்கமும் உடையவனாகவே அநுபவமாகிறான். இங்கு அந்த பெண் மனம் ஒன்று நினைக்கிறது. ஆனால் உலகம் அவனை வேறு விதமாய் பார்க்கிறது. காரணம் மனிதமனம் எப்போதும் குரங்கு பரிணாம வளர்ச்சியில் அது இன்னும் பழவினை பாக்கியில் மாட்டிக் கொண்டு உள்ளதோ யார் கண்டது? செவி வழி கிடைத்த செல்வம் தான்’ என்று போகிறது கதை.

நான்காது சிறுகதை கதலி. ஆடுகள் மேய்க்கின்றவர்களின் அனுபவமும் வாழை வளர்ப்பும் இக்கதையில் வருகிறது. ஆடுகளைப் பற்றி பேசும்போது ’நாளை அறுபட இருக்கும் அவை இன்று வயிறார மேய வேண்டுமே என்கிற கரிசனம்’ஆடு மேய்ப்பவர்களுக்கு என்று இயல்பான நடைமுறையினைச் சொல்கிறார் கதாசிரியர். மேலும் பல இடங்களில் பழமொழிகளைப் பயன்படுத்தியுள்ளார். குறிப்பாக ‘கெஞ்சிக் கடன் கேட்காதே அஞ்சி மணியம் பார்க்காதே’ என்கிற பழமொழி சிந்திக்க தகுந்த சிறப்பான பழமொழியாகும். வாழைத்தாரைக் கொய்து கடைக்கு எடுத்துப்போய் விற்று விடலாம் என்று போனால், கடைக்காரன் பேசுகிறான் இப்படி ‘இது என்னா இம்மாம் பிஞ்சுலேயே கொண்டாந்து இருக்கீங்க, இதுவுள நா எப்படி விக்குறது நாம்பு நாம்பால்ல இருக்கு என்கிறார் ஆசிரியர். மேலும், எங்கிட்டயே நாலு தாரு கெடக்கு, என்னா செய்யுறது? யாரு வாங்குறா?’ என கடைக்காரன் புலம்புவதாகவும் குறிப்பிடுகிறார். வீட்டுத் தோட்டத்தில் வாழைத்தார்கள் திருடுபோகிறது. வாழைத்தார்களை விற்க முடியாமல் தவிக்கும் விவசாயிக்கு வாழைத்தார் திருடு போனதுக்கூட ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியைத் தருவிக்கிறது. இக்கதையில் யாரோ சாப்பிடுவார்கள் நமக்கும் அலைச்சல் இல்லை என்கிற நியாயம் பிடிபடவே செய்கிறது.

கன்னி மணியோசை என்கிற இக்கதையில், கண்ணப்ப நாயனாரின் கதையைப் புரட்டி போட்டு இருக்கிறது ஆசிரியரால். காளத்தி ஆலயமணியை அடித்தற்காக திண்ணன் கண்கள் பிடுங்கப்படுகிறான். இது காளத்தி மலையில் நிகழ்கிறது. திண்ணனின் இனத்து மக்கள் கோவில் மணியை எப்படி அடிப்பது? சிவனை எங்கே தரிசிப்பது? மாடு ஆடு மேய்ப்பவன் சிவனை வணங்க அவனுக்கு திருநீறு அளித்த சிவாச்சாரியார் வலது கை வெட்டப்படுகிறது. அவர் ஊரைக் காலிச் செய்து விட்டு ஒடிப் போய்விட்டதாக நம்புகிறது ஊர். சிவன் கண்களில் குருதி கொட்ட தன் கண்களைப் பிடுங்கி அப்பி வைத்த திண்ணன், கண்ணப்பனாக இனி அழைக்கப்படுவான் என ஊர்த்தலைவன் மக்களைக் கூட்டி அறிவிப்பு செய்ய, ஊர் அதனை ஏற்றுக் கொள்கிறது. சிவன் பார்வதியோடு தோன்றி, கண்ணப்பனை, மேலுலகு அழைத்துச் சென்று விட்டதாக ஊரார் நம்பினர் திண்ணனின் உடல் காளத்தி மலைக் குட்டையில் புதைந்து கிடப்பதை யாரும் அறியவில்லை. கன்னி மணியோசையை மீண்டும் எழுப்பத்தான் இன்னும் யாரும் சிந்திக்கவில்லை என்கிறார் ஆசிரியர்.

உரைகல் என்னும் பெயர்க் கொண்ட சிறுகதை, இத்தொகுப்பு நூலுக்குத் தலைப்பாகிறது. கணபதி ஹோமத்திற்குச் செல்லும் ராமுலுசாஸ்திரி ஊர்த்திரும்பும் சமயம் மழை வெள்ளம். ஏரி உடைந்து நீர்ப் பெருக்கெடுத்து ஓடுகிறது. ‘ஹோமத்தில் சுருட்டிக் கட்டிக் கொணர்ந்தவைகள் பத்திரமாக உள்ளதை ஒரு முறை உறுதி செய்து கொண்டார்’ முதல் நாள் இரவு, வெள்ளத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிய ராமு சாஸ்திரி, வெள்ளம் வந்ததற்கு காரணம் சொல்லி அதற்குப் பரிகாரம் சொல்கிறார். அதற்கும் ஐம்பது ரூபாய் தட்சணைப் பெற்று பெருமிதம் கொள்கிறார். ஊர் மக்கள் சாஸ்திரி சொல்வதிக் கேட்டு வாய்பொத்தி வீடு செல்கின்றனர். சாஸ்திரியின் மனைவி சொல்கிறார், ‘இவா எல்லாம் நீங்க நேத்து ராத்திரி தேர் மேல உக்காண்டு கண்ணால ஜலம் விட்டதை பாக்கணும்’ எப்படிப் பாக்கமுடியும் நேக்கு பன்னெண்டுல கேது ஆட்சின்னு பதில் சொல்கிறார் சாஸ்திரி. இப்படி ஜாதகம் அதற்குப் பரிகாரம் என சொல்லி சம்பாதிக்கும் போக்கினையும் மக்களின் அறியாமை நிலையினையும் சாடுகிறார் ஆசிரியர்.

Ø  செய்தவம் இது நான்காவது சிறுகதைத் தொகுப்பாகும். இது பதினெட்டு (18) சிறுகதைகளை உள்ளடக்கியது. தொலைபேசித் துறையில், தொழிற்சங்கத் தலைவராக சீரிய பண்பாளாராக விளங்கிய பெருந்தகை தோழர் ஜகன் அவர்கட்கு இது காணிக்கை என ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.  

 

இத்தொகுப்பின் பெயராக வரும் செய்தவம் என்னும் தலைப்பிட்ட சிறுகதை, கம்யூனிஸ்ட் தோழர் ஒருவரின் வாழ்க்கையைப் பற்றி எடுத்து வைக்கிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் அவரின் மகத்தான பண்பு, அவரின் சிம்ம கர்ஜனை என்பதெல்லாம் பழைய விஷயமாகி போக, அவர் மெலிந்து, கேட்பார் அற்று இறந்து போகிறார். அவரின் வாரிசுகள் அமெரிக்க மண்ணிலிருந்து வந்து அடக்கம் மட்டும் செய்து, அவசர அவசரமாக அந்த மண்ணிற்கே திரும்புகின்றனர். தே நீரும் டிபனும் கொண்டு வந்து தந்த, டீக்கடைப் பையனும், அவரின் ஒரு நாயும் அவருக்கு அன்பு காட்டி நிறைவு செய்கின்றன. மனிதனின் கம்பீரமும், ஓங்கிய வாழ்வும் மிதிபட்டுப் போகிறது. அவரின் ‘தவம்’ அர்த்தமற்றுப் போய்விட்டது என்கிற வருத்தமான செய்தி சொல்லும் கதை இது.

             “தேசபிதா காந்தி மனம் ரணமாகி நவகாளியில் அமைதியை யாசித்துக் கண்ணீர் உகுத்து நடந்து கொண்டிருந்தார். கதறிக் கெஞ்சினார். பாரதம் குலுங்கியது. திகைத்தது. திண்டாடியது திக்கு முக்காடியது திணறியது திமிறிப்பார்த்தது, உறுமியது, உருண்டது, உலுக்கித் தீர்த்தது. சாந்தி சாந்தி சாந்தி என்கிற வேத கோஷங்கள் சமாதி அடைந்தன. உலகமே அச்சத்தோடு வேடிக்கைப் பார்த்து, வாயடைத்து நின்றது. இசுலாமியர்களையும் இந்துக்களையும் அவரவர் விரும்பும் மண்ணில் கொண்டு போய் விட ரயில்வே நிறுவனத்தார் மிகவும் பிரயத்தனப்பட்டனர். இரயில் இன்ஜின்கள் திணறிச் சீறின. ரயிலை ஓட்டிச் செல்வதற்கு வீரமிக்க தேசபக்தர்கள் தேவையாயினர். அந்த ரயில் ஓட்டுகின்ற படையில் முன்னதாய் நின்று லாகூருக்குப் புதுடில்லிக்குப் ரயில் ஓட்டியவர்தான் தோழர் முருகானந்தம்.” இப்படி போகிறது கதையின் கதி,

கதை இன்னும் இப்படிப் போகிறது,”பங்காளிக்காரர்கள் இருவர் ராமக்கட்டியை இழைத்து சவத்திற்குப் பட்டை பட்டையாய் நாமமிட்டு நடுவே குங்குமத்தைப் பளிச்சென்று வைத்துக் கச்சிதமாய் வேலை முடித்தனர். முருகானந்தம் நெற்றியில் நாமம் பெரியதாய் இடப்பட்டுத் தரை கிடந்தார். சவந்தானே போகட்டும்” என்று இருந்தனர் என்கிறார்.

இரண்டாவது கதையாக வருவது மனுநீதி. விதவையான அபலை பெண்ணொருத்திப் பற்றிய கதையாகும். அந்த பெண் விதவை பென்ஷன் பெற மனு எழுதிக் கொடுத்த அந்த எழுத்துக்காரனே அவளின் பவுன் தோட்டைத் திருடிக் கொண்டு ஓடிவிடுகிறான். தபால்காரன் வருகின்ற பென்ஷன் பணத்தில் பத்து சதம் பிடித்துக் கொண்டு மீதத்தை அவளிடம் தருகின்றான். இப்படி நேர்மையான மத்திய அரசாங்க உத்யோகம் பார்ப்பவர்கள் என, ஆதரவற்ற விதவையின் நிலை பற்றி இந்தக் கதையில் வரும் வரிகள் சிந்திக்க வைப்பவை.

 கண்கள் பணித்துத்தான் தர்ம ஆவேசம் கொப்பளிக்க நேரும். ”ஊரின் தெற்கே ஓடும் மணிமுத்தாற்றுப் படுகைக் குழியில் நிரந்தரமாய் சவுந்தலாவின் கணவன். அவரைப் புதைத்த மேட்டில் கை கையாய்ச் சப்பாத்தி முளைத்து விட்டிருக்கிறது. அவன்தான் இவளுக்கு விதவைப் பட்டமாவது அருளியிருக்கிற ஆண்மகன். அவனும் இவனைக் கட்டி மடிந்து போகிவிட்டால் அந்த விதவைப் பட்டத்திற்கு சவுந்தலா என்ன செய்ய முடியும்” ‘கழுத்தில் தாலி ஏறாத கன்னியர்கள் தருமங்குடியில் படும் அன்றாட பாடு எல்லாம் மடியிலும் மார்பிலும் மனைவிமார்களை அணைத்து வைத்துக் கொண்டு அருள் பாலிக்கின்ற கடவுளர்க்குத் தெரிய நியாயம் இல்லை’ எனக் கூறுமிடத்து சமூக அக்கரை மிளிர்கிறது.

அடுத்து வரும் தெளி என்கிற கதை. மும்பைக்குத் லாரியில் தினமும் உயிர் மீன்களை ஏற்றிக் கொண்டு, கடலூர் துறை முகத்திலிருந்து செல்லும் ஒரு டிரைவரின் கதை. அந்த டிரைவர் பேசுவதாக வரும் பின்வரும் வரிகள் வாசகரின் நெஞ்சத்தைத் தொடுவன அமைகின்றன. “சாரு சாரு மொதல்ல நா யாருண்ணு சொல்லிபுடுனும் கடலூரு துறைமுகத்துலேந்து அந்த பம்பாயிக்கு உசுறு மீனுவ அய்சு வச்சி லாரில ரொப்பி கொண்டும் போறவன். நம்பூரு லட்டு மீனுவ பம்பாயில் பாப்பார சனம் கூடப் சாப்பிடும். சும்மா இல்ல ஒரு நாப்பத்தெட்டு மணி நேரத்துல சரக்க கொண்டு போயி பம்பாயி சேக்கலண்ணா லாரி மீனுவ மொத்தமாக நாறிபூடும். மீனுவ நாறுனா குப்பைல கூட கொட்ட வுட மாட்டானுவ தெறித்தி அடிப்பானுவ பம்பாயில” என்று சொல்லிவிட்டு அந்த டிரைவர் வழியில் எத்தனை இடத்தில் என்ன என்ன அனுசரிக்க வேண்டி வருகிறது என்று சொல்கிறார்.

”கடலூருல டீசெலு ஒரு டாங்கு போட்டு பாயை லாரிய கெளப்பி வுட்டாருண்ணா அத்தோட நம்பபாடு. மெட்ராசு போலிசு, ஆந்த்ரா போலீசு, கருநாடகா போலீசு, பம்பாயி போலீசு இதே கணக்குல அங்கங்க செக்கு போஸ்டுவ, குறுக்க நெடுக்க சீப்புல வர்ர செங்கிங் இன்னும் பலான விசயம்ங்க எத்தினியோ இருக்கு எல்லாத்துக்கும் மாமுலு குடுத்து, அப்புறம் கீழ் சிந்துன மீனுவ எடுத்து போட்டுகினும் போவுனும்” என்று அன்றாடும் அத்திவாசிய பொருட்களைக் கொண்டும் செல்லும் லாரி டிரைவர்களின் துன்பத்தை புலப்படுத்துகிறார்.

நான்காவது கதையாக அமைவது அவதாரம் என்னும் கதையாகும். இக்கதை, ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு வந்து விட்ட எழுத்தாளர், இரவு படைப்பாளியின் வீட்டில் தங்கி விடுகிறார். அங்கு நிகழ்ந்த சம்பாஷணையில் கேள்வி பதிலாக சில விஷயங்கள் வருகின்றன. அவை ஆழமான அழுத்தமான விடியல்கள் என்பதனைப்  பின் வருமாறு காணலாம்.

வினாவும் விடையும்

வினா:                        சாதி சமாச்சாரம் ஆரியர் வருகைக்கு முற்பட்டதா?

விடை:          பாபானுங்க வருகையால் சாதி நஞ்சாகிக் கெட்டிப்பட்டதுண்மை.

வினா:                        சைவ சாப்பாடு என்பது முதன் முதலில் எப்படி வந்தது?

விடை:           சைவ சாப்பாடு புத்த மதத்தால் வந்த சமாச்சாரம்.

வினா:                        வடமொழி ஞானம் இன்றி தமிழ் அறிதல் குறைபாடு உடையதா?

விடை:           வேத உபநிடத இதிகாச புராண சாத்திரங்கள் கொஞ்சமும் தெரிஞ்சிக்காம வெறுந்தமிழ் போதாது தான்.

வினா:            பிராமணர்களுக்கும் கோவில்களில் நடக்கிற சிலை வழிபாடுகளுக்கும் தொடர்பு எத்தனை ஆழமானது?

விடை:           தீயினைக் கும்பிடுவர் பார்ப்பார்.

வினா:                        மானுட வாழ்க்கைக்கு ஏதும் கனமான அர்த்தங்கள் உண்டா?

விடை:           பிறிதின் நோய் தன் நோயாக உணர்தல் மானுடம்.

மேலும் இந்த கதையில் வரும் இன்னும் சில விளக்கங்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.

‘வேத காலத்து சமூகத்துல மூணு பிரிவுதான். பெறகு நாலாச்சி, பசுமாடு சாப்புடறத வுட முடியாமப் போயி அது அஞ்சில முடிஞ்சிது இன்னிக்கு வோட்டு வாங்க சாதி கை கொடுக்குது. பொதுவுடமை ஆளுங்களும் சாதி பாத்துத்தான் தேர்தல்ல ஆட்களை நிறுத்துது. யுக்தின்று கூட அத சொல்லிகிறாங்க’ என்பன போன்ற விஷயங்கள் பலவோடு, கூர்மையான விமர்சனமும் இந்த கதையில் பொதிந்து கிடப்பதைக் காணமுடிகிறது.

இறுதியாக வரும் கதை தோழன். ஒரு உண்மையான தொழிற்சங்கத் தோழனின் வாழ்க்கை வரலாற்றைப் பேசுகிறது. வர்க்க ஞானம் கொப்பளித்து வரும் படைப்பாக மிளிரும் கதைதான் தோழன். தன் வருமானம், தன் பதவுவுயர்வு, தன் குடும்பம் என்கிற நிலையை உதறி, உலக மேன்மைக்காக, பாட்டாளிகளின் உயர்வுக்காக, மதம், இனம், சாதி கடந்து நேசிக்கின்ற ஒரு உயரிய தத்துவத்தை தூக்கிப் பிடிக்கின்ற ஒரு இசுலாமியத் தோழன் மஜ்கரின் வாழ்க்கைக் கதை இது. மனித வாழ்வு எத்தனை உன்னதமானது என்பதைப் பேசும் மெய்யான சித்திரம் இது. கண்ணுக்கு முன்னால் நிகழும் சம்பவங்களையும் மானுட வாழ்வில் கிட்டும் பல்வேறு அனுபவங்களையும் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் வகையில் வடிக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு செய்தவம் என்பதில் ஐயமில்லை.

 

Ø  பட்டறிவு இது ஆசிரியரின் ஐந்தாவது சிறுகதைத் தொகுப்பாகும். கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்தது. இத்தொகுப்பு இருபத்தொன்று (21) சிறு கதைகளைக் கொண்டிருக்கிறது. இக்கதை மனித வாழ்க்கை, அதில் நடைபெறும் நிகழ்வுகள் என்னும் பல புள்ளிகளைக் கொண்டதாக அமைந்து கிடக்கிறது. தனக்கு நேர்படும் புள்ளிகளை இணைத்து ஒரு கோலமாய் மாற்றிக் காட்ட ஒரு எழுத்தாளன் முயற்சி செய்கிறான் என்று ஆசிரியர் தன்னுரையில் குறிப்பிடுகிறார். இக்கதைகளைப் படித்து முடித்த பின்னர் எஞ்சி நிற்கும் நற்செய்தி ஒன்று படைப்பின் தன்மையினை சொல்ல வல்லதாகிறது. எத்தனை காலமானாலும், மனம் பாதித்த ஒரு நிகழ்வின் சிறு எச்சம் மறப்பத்தாயத்தின் ஒரு மூலையில் சேமிக்கப்பட்டு இருத்தலை ஒருவனால் உணர முடிகிறது. இந்நூலின் பதிப்புரையில், ‘இவர்தம் நடையில் நகைச்சுவை என்பது எல்லா இடங்களிலும் பொன்னிழையாக ஊடாடி நிற்பதும் மற்றோர் சிறப்பு’. என்று அருட்செல்வன் என்னும் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

விதியின் பிழை எனபது இத்தொகுப்பின் முதல் கதையாகும்.  இது தாழ்த்தப்பட்ட மக்களின் துயரம் பேசும் கதையாக அமைகின்றது. பிறப்பிலும் ஒதுக்கப்பட்டு, இறப்பிலும் சுடுகாடு மறுக்கப்பட்டு உழலும் வாழ்க்கை பேசப்படுகிறது. இக்கதையில் செருப்புக் கடித்து செத்தவனும் உண்டு பாம்புக் கடித்துப் பிழைத்தவனும் உண்டு என்கிற பழமொழியை ஆசிரியர் கையாள்கிறார். ‘அரசாங்க மருத்துவ மனைகளில் நமக்கு நல்ல நேரம் இருந்தால் எந்த மருந்தாவது வேலை செய்யும்’ என்று முடிக்கிறார்.

‘போச்சி போச்சி இந்த அத்திபட்டுல ஏது காலனி ஆளு. இது என் சொந்த ஊரு இங்க எல்லாருமே சாதிகிறிஸ்துவங்க மொத்தமும் கொத்தா உடையார் சனம்’ என்று கதையில் வரும் வரிகள், சாதி என்னும் விடயம், மதங்களை எல்லாம் விழுங்கிய எமனாக நிற்பதைக் காணமுடிகிறது. ‘காலனி ஆளுன்னா ஊரு காட்டுல ஒரு செண்டு பூமி வாங்க முடியாது. செத்துப் போனாலும் சுடலையில பொதைக்க முடியாது’ என்கிற மனதை சுடும் விஷயம் இக்கதையில் சொல்லப்படுகிறது.

இரண்டாவது சிறுகதை தேடல் எனப்பதாகும். திருபெரும்புதூர் நகரின் புஷ்கரணி அருகே கதாசிரியர் நடந்து செல்கிறார். மீன் கடைகள் நாற்றம் என மூக்கைப் பிடித்து நடக்கிறார். மீன்காரி சொல்கிறாள், ‘ஏன் மூக்கை மூடுற அப்புறம் தொறக்குற அப்படியே இறுக்கிப் புடிச்சிகினுதான் போவுறது. வவுத்துக்கு வாயுக்கு கொடுப்பன இல்லாத பாவிவ’ எத்தனை கூர்மையான விமரிசனம் இங்கே விழுகிறது எனபதை நம்மால் உணரமுடிகிறது.

வைணவம் பற்றி ஒரு சேதி சொல்கிறார் ஆசிரியர் “வைணவம் தமிழுக்குள் மூழ்கி நீர்த்துப் போகாமல் இருக்க சாட்சாத் திருமாலே திருபகிந்தபுரத்தில் தேசிகனை அவதரிக்கச் செய்தார் என்று அபனுகுச் செய்தி சொல்லி இருந்தார்கள்” என்கிறபடி வரி அமைந்து கிடக்கிறது. ’இராமானுசர் வைணவத்தை ரொம்பவும் விளாவி விட்டார் என்கிற பழிக்குப் பிராயச்சித்தம் செய்தது தேசிகனே என்பது அவன் தெரிந்து கொண்ட விஷயம். இப்படிச் சொல்வதில்கூட குறை ஏதும் இருக்கலாம்தான் என்று முடிக்கிறார். ‘எனக்கு நரகமே உறுதி என்றாலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திருமந்திரம் தொடர்ந்து உபதேசித்துக் கொண்டே இருப்பேன்’ என பல நூறு ஆண்டுகள் முன்னே இப்படி முழங்கிய அந்த இராமானுசரைத்தான் அவர் இல்லாத இடங்களில் எத்தனைக் காலம் தேடு வானோ? என்கிற வினாவோடு கதை முடிகிறது.

மாய பிம்பம் என்னும் மூன்றாவது கதை, ஒரு தொழிற்சங்கத் தலைவரின் அணுகுமுறை பற்றிப் பேசுகிறது. சாதாரண ஊழியன் தலைவரைத் தெய்வமென பாவிக்கிறான். ஆனால் தலைவனோ அவனை எளிதாக கணக்குப் போட்டு நடத்துகிறான். ‘தன் பெயரை மட்டுமாவது தலைவர் கேட்டிருக்கலாம் என எண்ணி அவனே ஒரு முறைச் சொல்லிக் கொண்டான். அத்தனை விரக்தியை தொண்டன் அனுபவிக்கவே செய்கிறான்.’ என்னும் செய்தி சுட்டப்படுகிறது.

இத்தொகுப்பில் வரும் அம்மா என்கிற சிறுகதை, வித்தியாசமான ஒரு அனுபவத்தை நமக்கு எடுத்துச் சொல்கிறது. +2 படிக்கும் ஒரு பையனின் தாய் ஒருவனுடன் ஒடி போய்விடுகிறாள். ‘இந்த வயசுல அந்தப் பொம்பளைக்கு கேவுலம்ங்க பெத்த மவன் தோள்வரைக்கும் வளர்ந்து நிக்குறான். நெத்தம் வெடியக் காலைல பாலு ஊத்தற அந்தப் பயலோட ஓடியிருக்கிறான்னு சொன்னா நீ என்னா சொல்லுவ?’ ஒரு பொய் கட்டிக் கொண்டு வந்தவள் அனுமதிக்கவில்லை ஆக தாயையும் தந்தையையும் சரியாக கவனிக்க முடியாமல் போயிற்று என்று சாக்கு சொல்லும் ஆண்களைப் பார்த்து எழுத்தாளர் கேட்கிறார். ‘அசிங்கம் ராமு இப்படிப் பேசுற ஆம்பளைய நான் ஒத்துகறது இல்லே என்னா நியாயம் சொல்லு, எங்கேயிருந்தோ வர்ற ஒரு பொண்ணை நாம கட்டிகறதும் அதுக்கு நாம தாய் தகப்பன் பட்ட கஷ்ட நஷ்டம் எப்படித் தெரியும். அதுக்குன்னு அந்த பொம்பளைய காரணம் காட்டி நாமளும் ஒதுங்கிப் பூடுறது என்ன நேர்மை? சரி உன் மனசாட்சிக்கு உங்கிட்ட என்ன பதிலிருக்கு நீ ஒண்ணுமே செய்யுலயா? சொல்லு ராமு’ கண்ணத்தில் அறைகிற மாதிரி ஒரு வினா இது. மேலும் சொல்கிறார் ஆசிரியர், ‘ஆயி அப்பனைக் கவனிக்காதவன் அதுக்குக் கட்டிகிட்டு வந்த பொம்பளையச் சாக்கு சொல்றவன் எல்லாம் ஒரு மனுஷன், எங்க உலகம் வெளங்குறது? பொக்கையாலே போச்சாம் பொரிமாவு’ நல்ல விமரிசனம் இது. ஆரோக்கியமான வினாவும் இதுவே.

நூலுக்கும் பெயராக வந்துள்ள பட்டறிவு என்று தலைப்பிட்ட இச்சிறுகதை. நாம் விளைச்சல் செய்த பயிரை எப்படி இருக்கிறது என்று பார்க்க தானே போகாது, வேறு யாரையும் அனுப்பித் தெரிந்து கொள்வது என்பது எப்போதும் சிக்கலில் முடியும் என்று பேசுகிறது. ’கொல்லைக்குச் சொந்தக்காரன், கொல்லை மகசூலை தானே போய்ப் பார்த்து வர வேண்டும் என்கிற முறை மட்டும் இன்றும் தருமங்குடியில் கறாராய் நடைமுறையில் இருந்து வருகிறது.’ என்று முடிக்கிறார் ஆசிரியர்.

நதிமீது குற்றமில்லை என்னும் சிறுகதை, தொழிற்சங்கங்கள், ஜனநாயகத்தைத் தொலைத்துவிட்டு அரக்கத்தனமாய் நடந்து கொள்வதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. எளியவர்களைத் தேர்ந்து சங்கத்தின் வலுக்கூட்டும் சங்கம் அவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்க மறுக்கிறது. கேள்வி கேட்க முனைவோருக்குப் பதில் கிடைக்கவில்லை. மாறாகத் துரோகி என்கிற பட்டம் மட்டுமே கிடைக்கிறது. எல்லாவற்றிற்கும் தலையை ஆட்டுபவர்கள் மட்டுமே சங்கத்தில் தொடர்ந்து தலைமைக் குழுவில் இடம் பெறமுடிகிறது. என்கிற நடைமுறை விஷயத்தை நயமாக சொல்கிறது இக்கதை.

Ø  தேசம் இது இவரின் ஆறாவது சிறுகதைத் தொகுதியாகும். தேசம் என்று தலைப்பிட்ட சிறுகதை இந்திய தலைநகர் டில்லில் போலியோவால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் கற்பழிக்கப்படும் சோகத்தைப் பேசுகிறது. அவள் ஒரு பேராசிரியை, குடியரசு தினக் கொண்டாட்டங்களில் அவளின் இனிய குரல் கேட்கிறது. ஆனால் அவள் கற்பழிக்கப்பட்டு உயிருக்குப் போராடி மருத்துவமனையிள் கிடக்கிறாள். கடைசியாக ‘ஜாரே சஹான் அச்சே’ ஒரு முறை பாடி பின் இறந்து போகிறாள். டில்லியில் ராணுவ வண்டிகள் சிம்ம கர்ஜனை இட்டு சாலையில் செல்கின்றன. ஆகாய விமான சாகசங்கள் தொடர்கின்றன என கதை நடுவே வருகிறது. ‘ஒரு விஷயம் மட்டும் சத்தியம் உலக மயமாதல் வந்த பின்னரே இந்திய விவசாயிகள் விதவைகள் ஆயினர். காயடிக்கப்பட்ட அவர்களை குடைராட்டினத்தில் குந்த வைத்து குளிர்ப்பானம் கொடுக்கிறார்கள்’ என்று சொல்லிச் செல்கிறார் ஆசிரியர்.

இத் தொகுப்பில் வரும் முதல் கதையின் பெயர் விதி. இக்கதையில் இலங்கையரசன் இராவணன் மாளிகைக் கட்டித்தர, சிவபெருமான் அதில் குடியிருக்க வேண்டும் என்று இராவணனே ஆசைப்படுகிறான். சிவபெருமான் சுடலையில் வாழ்வது ராவணனுக்குப் பிடிக்கவில்லை. அவனுக்கு ஒரு விண்ணப்பம் ‘சிவன் கையால் அவன் சாக வேண்டும்’ என்பதாய் ‘பார்க்கலாம் எனக்கு மாளிகை எழுப்பி பின் வா’ என்கிறார் சிவன். மாளிகை தயார் ஆனது. சிவனை அழைக்கிறான் ராவணன். மாளிகைக்கு வருமுன் தன் வரம் பற்றிக் கேட்கிறான். திருமாலே இராம அவதாரம் எடுத்து ராவணனைக் கொல்ல இருப்பதால் ராவணனுக்கு வரம் ஏதும் அளிக்க வேண்டாம் என திருமால் எச்சரிக்கை தருகிறார். நீ போய் மாளிகையில் உன் மனைவியோடு வாழ் உன்னை தெய்வம் கடை சேர்க்கும் என்பது உறுதி. ஆனால் என்னால் மட்டும் உன்னைச் கொல்ல முடியாது. நீ சிவ பக்தன். திருநீறு பூசியவன் இராவணா! என்கிறார் சிவன். ’பெருவிதி’ என்று ஒன்றுண்டு. அது கடவுளுக்கும் மீறியது அதற்குக் கட்டுப்பட்டவர்கள் கடவுள்களும் என்கிறார் சிவன். அயோத்திப் பெருமன்னன் தசரதனின் பளிங்கு அரண்மனையில் தனிமையில் இருந்த அரசப் பேரழகி கைகேகியின் அந்தப்புர பட்டுமஞ்சத்தில் மந்தரை என்னும் கூனி அமர்ந்து கொள்கிறாள் என்று விஷயத்தையும் சொல்லி ஊழின் வலிமையை உணர்த்துகிறார்ஆசிரியர்.

அவம் என்னும் சிறுகதை சோவியத் யூனியன் சிதறுண்டு போனது பற்றி இப்படிச் சித்தரிக்கிறது. ‘மனசாட்சியக் சாகடிக்காம நேர்மையோட புகழ்ந்து இருந்தா அந்த சோவியத்தும் கூட அழிஞ்சி போயிருக்காது. ரெண்டு லட்சம் மனித உசிரை பலி கொடுத்து ஒரு சமூகத்தை புதுசா அங்கு சிருட்டிச்சாங்க. அந்த தியாக பர்வதத்தை தொலைச்சிட்டு குற்ற உணர்வு கஞ்சித்தும் இல்லாம எப்படித்தான் மொத்தமா நிமிர்ந்து நிக்கறிங்களோ?’ நீங்க  சவுரியமா மறந்து போறது இதுதான் ஒருத்தன் எழுதுகோல் புடிச்சி எழுதித்தான் அந்த மார்க்சீயம் வந்துச்சிங்கறது என்கிற ஆசிரியரின் விமர்சனம் சற்று கடுமையானது ஆனாலும் நேர்மையான விமரிசனமே.

பட்டறிவு என்னும் சிறுகதை சற்று பெரிய கதை. புதுகட்டில் செய்ய ஆசாரியை அழைத்து வரப்பட்ட அவத்தையை அவிழ்க்கும் படைப்பு. எள்ளல் நிறைந்த சிறுகதை இது. மும்பை சென்று நண்பனின் மகன் வீட்டில் தங்கி அங்கே பார்த்த ஒரு மரக்கட்டில் போல் செய்ய அவன் ஆசைப்படுகிறான். அவன் மனைவியும் விரும்பியதுதான். அந்தக் கட்டிலுக்காக மரம் வாங்கி இழைத்து அதனைக் கோர்த்து கட்டிலாக உருபெறுவதற்குள் எத்தனைபாடு. கடைசியில் அது எதிர்பார்த்த படிக்கு இல்லை.  சோகம்தான் எஞ்சி நிற்கிறது. தான் வாழும் அரசாங்க குவார்ட்டர்ஸில் ஒரு பெரிய இரும்பு கேட் இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் ஒரு தடவை கூட அது முடியது இல்லை. பின் ஏன் இதனைச் செய்தார்கள். அரசாங்கம் என்றால் இது எல்லாம் சகஜமப்பா என்கிறார் ஆசிரியர்.

வீதியில் வள்ளலார் நகர் என்கிற பெயர்ப் பலகை இருக்கிறது. அதனில் வள்ளலார் என்பதை தார் பூசி அழித்து இருக்கிறார்கள். ‘வள்ளலாரைப் படிக்காதவர்கள் கூட இந்த உலகத்தில் இருப்பார்களா என்ன? யோசித்துக் கொண்டோ மெயின் ரோடுக்குச் செல்லும் பாதையில் வண்டியைச் செலுத்தினான். சேட்டுக்கள் வியாபாரம் செய்வது பற்றி ஒரு விமரிசனம் இப்படி வருகிறது.’ ‘அது என்னமோ தங்கம் இரும்பு சிமெண்ட் பெயிண்ட் எல்லாம் இங்கே சேட்டுக்கள் மட்டுமே வைத்து வியாபாரம் செய்கிறார்கள் வாழைப்பழம், பூ, வெற்றிலை இட்லிக்கடை வைக்க மட்டும் வருவதில்லை’ சேட்டுவிடம் ஆசாரி இப்படிப் பேசுகிறான். ‘நாமதான் சொல்லுணும் சேட்டு. அவுங்க என்னத்தைக் கண்டாங்க.  சாணிய சின்ன சின்னதா உண்டி இது மருந்துன்னு சொன்னாலும் வாங்கி சாப்புடற ஜனமாச்சே என இங்கு சேட்டுவோடு ஆசாரியும் தன்னை இணைத்துக் கொண்டு பேசுவதைப் பார்க்க முடிகிறது.

‘எந்த பொம்மனாட்டி நல்ல புருசனைக் கட்டிகிட்டாள். அதனால தான் நான் சந்தோசமா வாழுறன்னு சொல்லி இருக்கா. கடவுளு பரமேசுவரனையே கட்டிகிட்டாலும் அந்தப் பார்வதி நானு சந்தோசமா இறுக்கிறான்னு சொல்லப்போறா. பொம்பளையா பொறந்தா எண்ணிக்கும் எப்பவும் கொரைதான். தன்னை விட தம் புருசன் ஒரு மொழம் கூட மக்குன்னுதான் இந்த உலகத்துல இருக்கிற எல்லா பொம்பளையும் நினைக்கிறா’ என்று பேசும் பாத்திரம் எள்ளலை நகைச்சுவையோடு வெளிப்படுத்துகிறது. எள்ளலின் உச்சமாக இப்படிச் சொல்கிறது கதை, ‘யாரைச் சொல்லி என்னா செய்ய, மான் மார்க் கொடை கையில இருந்தாலும் மழை பெயகுள்ள அது விரிஞ்சி நிக்கனும் அது மக்காறு பண்ணிச்சின்னா என்னா சொல்லுவே’ ஆசாரியிடம் மாட்டி அவத்தை பட்ட அவன் தன் நண்பனிடம் இப்படிச் சொல்கிறான். 

இத் தொகுப்பின் பெரும்பாலான கதைகள் வாழ்வின் உண்மை நிகழ்வாகவே ஒளிர்கிறது. புனைவு, வருணைகள் ஏதும் இல்லையானாலும் நடையாலும் எழுத்தாளனின் மன உணர்வை நாமும் உள்வாங்குவதாலும் கதை வெற்றி பெற்றிருக்கிறது. குறிப்பாக ஒரு சில கதைகள், ஜரகண்டி எனும் தலைப்பில் அமைந்த சிறுகதை எள்ளலானது. அரசு விழாக்கள் எப்படி இருக்கும் என்பதைக் காட்டுகிறது. ஒரு மாசம் கொல்கத்தாவுல செங்கொடிக்காரங்க ஆட்சியில இருந்தப்ப வந்து தங்கி இருந்து நேராவே அனுபவிச்சி இருந்தா உண்மை தெரிச்சிருக்கும் உங்களைச் சொல்லி குத்தம் இல்ல. வங்கத்துல தேனாறும் பாலாறும் ஓடுதுண்டு மட்டும்தானே எழுதுவிங்க; இன்னைக்கும் கூட அது எல்லாம் அங்க ஓடலயே. மனசாட்சியக் காயடிக்காம நேர்மையோட புகழ்ந்து இருந்தா அந்த சோவியத்தும் கூட அழிஞ்சி போயிருக்காது. என கொல்கத்தாவைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் கூறுவதாக அவம் சிறுகதையில் வருகிறது. மேலும், சாதாரண அனுபவங்களான எலி பிடித்தல், கட்டில் செய்தல், பதிப்பாளர் படுத்தும்பாடு, மணமகளின் தலைமுடி பற்றிக் கூறுதல் போன்றவையும் நல்ல கதைகளாக வெளி வந்துள்ளன. மார்க்சியத்தின்பால் ஈடுபாடு கொண்டதினால் சோவியத்தின் வீழ்ச்சியை வேறு கோணத்தில் பார்க்கிறார்ஆசிரியர்

 

புதினம்

மனித மனம் கதையிலும் வரலாற்றிலும் ஆர்வம் காட்டுவது எனபது உணர்ச்சிகளுக்கு ஒரு வடிவம் தரவேண்டும் என்று விரும்புவதுதான். அதாவது ஒருவரது வாழ்வே நாவல் எனலாம். எனவேதான், மேலைநாட்டு ஆசிரியர் ஒருவர் சாதாரண மனிதர்கூடத் தத்தம் வாழ்வினையே வடித்தெடுத்தெழுதினாற்கூட ஒரு நாவலாகிவிடும் என்று கூறிப்போத்தார். இத்துறை மேலை நாட்டார் தொடப்பால் வளர்ந்ததாகும். புதினத்தில் நம் வாழ்க்கையை அவ்வாறே எடுத்துக் காட்டுவதாகக் கதை அமைய வேண்டுவதில்லை. ஆனால், வாழ்க்கையோடு இயைந்ததாக அமைய வேண்டும். மக்களின் வாழ்க்கையைவிட, உயர்ந்த வாழ்க்கையாக, பெருமைமிக்க வாழ்க்கையாக, ஆற்றல்மிக்க வாழ்க்கையாகக் கதையின் கற்பனை அமையலாம். ஆயினும் மக்களின் உணர்ச்சிகளையும் குறிக்கோள்களையும் ஒட்டியதாகவே அந்தக் கற்பனை வாழ்க்கை அமைதல் வேண்டும். நாவலில் கூடியவரையில் ஆசிரியர், தமக்கு நன்கு தெரிந்த வாழ்க்கைப் பகுதிகளையும் இடங்களையும் அமைத்தே எழுதுதல் நல்லது என்பர்.

நாவல்துறை சென்ற நூற்றாண்டின் இறுதியில் சிறப்புடன் தொடங்கியது. மாயூரத்தில் முனிசீப் வேலை பார்த்த வேதநாயகம் பிள்ளையவர்கள் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரத்திலிருந்து தமிழ் நாவல் தொடங்குகின்றது. இந் நாவல் வெளிவந்த காலம், கி.பி 1870 ஆம் ஆண்டாகும். அடுத்து, இவர் எழுதிய ‘சுகுண சுந்தரி கதை’ (1887) புதினத்தின் பல கூறுகள் கொண்டுள்ளது. 1865இல் சித்தி வெவ்வை மறைக்காயர் முகமது காசிம் என்னும் இலங்கை வாசி எழுதிய ‘அசன்பேயுடைய கதை’ தமிழின் இரண்டாவது நாவலாகவும் திகழ்கிறது. தொடக்க காலத்தில் புதினங்கள் தனிமனிதரின் வாழ்வியலைப் பேசும் வடிவங்களாக வெளிவந்தன. முன்சீப் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் மேற்கண்ட முறையில் அமைந்தது எனலாம். இதனை ஒட்டியே இராஜம் ஐய்யரின் பத்மாவதி சரித்திரம் எனத் தொடர்ந்த ஆரம்ப கால புதின இலக்கியங்கள் சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்தது.

தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களின் வீரச்சிறப்பு, புகழ், கொடைத்தன்மை ஆகியவை எழுச்சியையும் ஆர்வத்தினையும் ஊட்டும் வகையில் மன்னர்களின் வரலாறுகள் புனை சார்ந்து எழுதப்பட்டன. கல்கியின் அலை ஓசை, சிவகாமியின்  சபதம், சாண்டில்யன் புனைவின் ஆக்கங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்த்தனர். விடுதலைக்குப் பின்னர் தமிழக அரசியல்வாதிகள் தங்களின் கொள்கைக் கோட்பாடுகளைப் பரப்பும் வண்ணமாக புனைகதைகளை அமைத்தனர். கவிஞர் பாரதிதாசனை இதற்குச் சரியான உதாரணமாகக் குறிப்பிடலாம்.

            1970 வது வரையிலும் இயக்கம், கோட்பாடு, கொள்கை சார்ந்த புனைபுகளே மக்களிடத்தில் மிகுதியாகப் பரவி இருந்தன. இக்கால கட்டத்திற்குப் பின்னர் வர்க்கப் போராட்டங்களை முன்னிருத்தும் புனைவுகள் தமிழ் மொழிபெயர்ப்புகளாக தமிழ்ச் சூழலில் பரவியது. மார்க்சின் கார்க்கியுன் தாய், லியோடால்ஸ்டாய் படைப்புகள் வெளிவந்து பொதுவுடமைச் சிந்தனையை பரப்பியது. 1980 களுக்குப் பின்னரே தமிழில் தனிச்சிறப்பான நவீன இலக்கியங்கள் வரப்பெற்று வரவேற்பையடைந்தன.  இதுகாரும் வெளிவந்த புதினங்கள் அனைத்தும், கோட்பாடு, இயக்கம் நகரத்து மனிதர்கள் என முழுமையானப் புனைவுகளைச் சார்ந்தே இயங்கியத் தமிழ் உலகம். மண்ணையும் மக்களையும் யதார்த்தச் சூழலில் படைத்தது. அதிகார வர்க்கத்தினரின் முகத்திரையை வெளிப்படுத்தும் விதமாகவும் அவைகள் அமைந்தன.

மேலும், அடித்தட்டு மக்களின் வாழ்வியலைக் காட்டும் கருவியாக இப்புதினங்கள் அமைந்தன என்று உறுதிப்படலாம். இத்தகைய கால கட்டத்திற்குப் பிறகுதான் சமூகம், சமயம், சார்ந்த மக்களின் முறைகள் புதினங்களாகப் படைக்கப்பட்டன. அடித்தட்டு மக்களின் வாழ்வியலைப் பேசும் தலித் இலக்கியமாகவும், பெண்களின் சுயத்தைப் பேசும் பெண்ணியப் புதினங்களும், வீறுகொண்டு எழுந்தன. இவ்வாறே இசுலாம், கிறித்துவம், மீனவர்கள், மலைவாழ்மக்கள், துப்புரவு வேலை செய்வோர், சாயத் தொழில், தோல்தொழில், புலம்பெயர் மக்களின் வாழ்வியல் என அடித்தட்டு மக்களின் வாழ்வியல் போராட்டங்களைப் பல்வேறு வடிவங்களுடன் படைப்பாளிகள் வெளிக்கொணர்ந்தனர். மேற்கண்ட புதினங்கள் மரபுகளைக் கட்டுடைத்தல் (Reconstraction), மீறுதல் என்பதனைக் கொண்டு பழமையை முடிந்தவரையில் வேரோடுப் பிடுங்கிப் போட முயற்சித்தன என்பதே சரியானது. அவ்வையில் ஆசிரியர் எஸ்ஸார்சியின்  நான்கு நாவல்களும் அமைகின்றன.

Ø  மண்ணுக்குள் உயிர்ப்பு பெரும்பாலான புதினங்கள் மூலக்கதைகள் போலவே அமைந்துவிடுகின்றன. அதாவது, நிர்வாகத்துக்கு எதிராகத் தொழிற்சங்கங்கள் கட்டுதல், மோதல், காதல், ஊர்வலம், பலி, முடிவில் தொழிற்சங்க வெற்றி என்ற ரீதியில் விரியும். ஊர்வலமே ஒரு குறியீடு போல் இருக்கும். ஆனால் இந்த புதினம், புதிய களம் புதிய அனுகுமுறை, புதிய செய்திகள், யதார்த்தமான உண்மைகள் என்று மிக வித்தியாசமாக இருக்கிறது. துவக்கத்தில், ஆலைப்பற்றிய அறிமுகமே சிறப்பாக அமைந்துள்ளது. இப்புதினத்தில் ஒரு நவீனமான ஆனால் அன்றாடம் பார்க்கும் பொருளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையைப் பற்றிய பரிசயமில்லாத நிலையில் ஒரு வாசகனின் மனம் கவரும் வகையில் விவரிப்பதாக இருக்கிறது. ஆற்றலைச் சுமக்கும் அணுவின் துகள்களே மின்சாரமாகத் திகழ்கிறது. அந்த மின் சக்தி தரையைத் தொடக்கூடாது; தொட்டால் ஆபத்து; தரையைத் தொடாத வரை மட்டுமே நமக்குச் சக்தி ஊற்று என அறிவியல் சார்ந்த இக்கருத்தை இலக்கிய நயத்துடன் சொல்லும்பாங்கு நாவலுக்கு சிறப்பைத் தருகிறது. தொழிற்சாலையின் இயக்கதையும் பயனையும் விவரிக்கும் வரிகளில் அற்புதமாக வருணை விரிகிறது. உடைந்து பயனுற்றுப் போகும் குழிழ்கள் கூட எப்படியெல்லாம் பயன்படுகின்றன என்பதை விவரிக்கும்போது அதை நம் கண்முன் காட்சியாகக் காணமுடிகிறது.

காலம் காலமாக உழைக்கும் வருக்கத்தை அடிமையாக்கி மேலாண்மை செய்வதற்கான சமூக நிலையங்களும் நீதி நெறிகளும் வலிமை பெற்று நடப்பில் இருந்து வருகின்றன. உழைப்பாளிகள் தன்னுணர்வு பெற்று எழும்பிவிடக் கூடாது என்பதற்காக பொன்முட்டை இடும் வாத்தையே கொன்று விடுகிறதுபோல் ஆலைகளில்…………… நாங்கள் உண்மையாக உழைக்கிறோம். அதே அளவிற்கு எங்கள் உழைப்பைச் சார்ந்து நிற்கும் நிர்வாகமும் நேர்மையுடனும் உள்ளார்ந்த உண்மை உணர்வோடும் நியாயம் வழங்கட்டும் என்ற இலட்சியத்தோடு சொல்லப்படும் வாஞ்சி, சேகர் போன்ற தொழிற்சங்க வாதிகள் இந்த வரலாற்றில் மிஞ்சவில்லை. பாட்டாளி வருக்கம் ஆட்சியைக் கைப்பற்றிய சமுதாயம் அமைக்க முயன்ற மாற்றங்கள் கூட, அறுபது ஆண்டுகளுக்குமேல் தாக்குப் பிடிக்காதாவை நாம் இந்த யுகத்தில் காண்கிறோம். ஆனால் இது மிக மிகத்துவக்கலை அசைவுகள். காரணமாக இத்தகைய நாவல்களில் நீண்ட சித்தார்த்த உண்மைகள் அலுப்பூட்டக்கூடியதாக ஆங்காங்கு குறுக்கிடும். இத்தாலியில் எடுத்ததை வைக்கத் தோன்றாமல் ஒரே மூச்சில் படிக்கும்படி ஊக்கமாகச் சம்பங்களில் நடப்புக்களும் உரையாடல்களும் வர்ணணைகளும் அன்போடு கலந்து இருக்கின்றன. உண்மை கற்பித்தான் ஆனாலும் எந்த ஒரு செயலுக்கும், முயற்சிக்கும் பயன் அல்லது விளைவு இல்லாமல் போகாது இறுதியில் வரும் வரிகள் நெஞ்சைத் தொடுகின்றன.

நம்பளையே நம்ப அறிவியல் பார்வையோடு மானிடமாத்து குறைமை காப்பாத்திட்டு போராட்டத்தை நடத்தினாலும்……… ஆன மண்ணுக்குள்ளே வேரு உயிர்ப்போடு தன் இருக்கு!

நெல்லு மிரட்டிங்க பாடுபடுற வயல்கள்ள மட்டும் இல்ல சமுதாயத்திலயுந்தான். மக்கள் நாமதான் விவரமா இருக்கணும்…!

தமிழ்ப்புத்திலக்கியத்துக்கு ஓர் அருமையான வரவு

Ø கனவு மெய்ப்படும்  (2001)

நிலாவில் கால்வைத்த ….. இக்காலத்திலும் சாதிப் பேய்களின் சதியாட்டமும், வர்ணாசிரமப் பேதங்களின்  முடக்குவாத நடைமுறைகளும், புதிய அரசியல் வன்மங்களும் கோலோச்சிய, தருமங்குடி என்னும் கிராமத்தின் சகலப் பிரிவு மனிதர்களையும் உள்ளபடிச் சித்தரித்து ஆசிரியர் இப்புதினத்தை வடித்துள்ளார். இக்கதை கருப்பொருளாலும், வட்டார வழக்கு நடையழகாலும் உயர்ந்து மிளிர்கின்றது.

இடத்திற்கும், பாத்திரத்திற்கும் பொருந்திய உயிரோட்டமான உரையாடல் புதினமெங்கும் சுடர்வீசுகின்றன. கதை மாந்தர் எல்லோருமே யதார்த்தத்தின் அச்சுக்கள் என்றாலும், முடிதிருத்தும் நாகலிங்கமும், துணி வெளுக்கும் சிங்காரமும், மாசிமகத் திருவிழாவிற்காக நாள் முழுவதும் பயணித்து நடக்கும் , வழிநெடுக நேரும் அவர்தம் சுகானுபவக் காட்சிகளும் பேச்சுகளும் படிப்போர் எவர்க்கும் நல்ல நகைச்சுவை தருவன. நம் தமிழகத்தில் – தருமங்குடி என்னும் மாதிரி கிராமத்தின் சூழலில், அங்குள்ள மக்களின் வாழ்வில் நேர்ந்த ஏற்ற, இறக்கங்களை வரைந்து காட்டும் இப்புதினம், நம் நாட்டின் இன்றைய ஒட்டுமொத்த சமூகத்திற்கு விழிப்பூட்டும் நல்ல படிப்பினையாக அமைந்துள்ளது.

நடு நாட்டுக் கிராமப்புற நிலவியல் அமைப்புகளை, அங்கு உலா வருகின்ற அன்புச் சகோதர அமைப்புக்களை, அவர்களிடையே எழும் சிக்கல்களை, பெறப்படுகின்ற அவமானங்களை, அவ்வவமானங்கள் விளைவிக்கின்ற மன ரணங்களை, தன்மான எழுச்சி அங்கு தருவிக்கும் போராட்டங்களை, அப்போராட்டங்கள் பின் சிறுமைப் படுத்தப்படுதலை, ஈன அரசியலின் சித்து விளையாட்டுக்களை, சுயம் பற்றிய சிலரின் சிந்தனைச் சிறுமையை, தருமங்குடி மக்களின் எளிமையை, வெகுளித்தனத்தை, கோபாவேசத்தை, வக்கிர உக்கிரங்களின் ஆக்கிரமிப்பு பெறாத பிஞ்சு உள்ளங்களை, எஞ்சி நிற்கின்ற பண்ணை அடிமைத்தனத்தின் கொடு விஷத்தை, பிரச்சனைகளின்றும் ஒதுங்கி வாழ்கின்ற சத்தியவான்களை, உழைத்து உழைத்து வயிற்றுப்பசி மட்டுமே ஆற்றி இற்றுக் கொள்ளும் மனித அவலங்களை இந்நாவல்  வெளிப்படுத்துகின்றது.

            சமூகப் பிரச்சனைகளின்றும் சாதாரண மக்களை மீட்டெடுப்பது அவ்வளவு சுலபமல்ல என்பதையும், கிராமம்புற வர்ணாச்ரம அடக்கு முறைகள் தொடர்ந்து உயிர்ப்போடு நிலவுவதையும், மாற்றம் என்பது புரட்சிகரமானதுவாய், வெகு எளிதில் கிட்டி விடுவதல்லதாய், வீழ்த்திவிட முடியாததுவாய், பூரணமாய் அமைந்து விடுவதில்லை என்பதையும் – நிகழ் அரசியலில் அறம் மறந்து தன்னிருப்பு மட்டுமே துருத்திக் கொண்டு நிற்கின்ற அவலம் தொடர்கின்றவரை, புரட்சிகர மாற்றம் என்பது ஏமாற்றமே என்பதையும் இந்நாவல் உணர்த்துகின்றது. பிரதானமாய் இப்படைப்பு, கிராமப்புறப் தொன்ம வழிவந்த தொழிலாளர்களின் சோகம் பற்றிப் பேசுகிறது. முடிதிருத்தும் கலைஞனும், துணி வெளுக்கும் தொழிலாளியும் சந்திக்கின்ற மனித நேயமற்ற அன்றாட நடப்புகளை எடுத்தியம்புகிறது.

            மார்க்சீயமும் அறிவியலும் சமூகக் கொடுமைகளைக் களைவதில் தம்பங்கு ஆற்றுகின்றன என்பதை உள்வாங்கிய ஆசிரியரின் சிந்தனை – மார்க்சீயம் அதனின் நடைமுறை பலவீனங்களை கணக்கில் எடுத்துக் கொண்டும் கூட, இன்றளவும் வேறு மாற்று வெடிபடாததை, வேறு சிந்தனைத்தடம் அதனைப் புறந்தள்ள முடியாத அற்புதத்தை, மார்க்சியம் மீது சாதாரண மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத அற நம்பிக்கையை – நிறைவோடு இப்படைப்பில் யதார்த்தமாய் வெளிப்படுத்துகிறது.

வட்டார வழக்குச் செழுமையுடன் கிராமிய தொழில்களும் தொழில் சார்ந்த மக்களும், இன்றைய பொருளாதார சுற்றுச் சூழலில் எதிரிடும் அவலங்களையும், வர்க்கப் போராட்டங்களையும் மிக நேர்த்தியாகக் கனவு மெய்ப்படும் சித்தரிக்கிறது. கண்மணி ஆசிரியர், சின்னவன் ஆகியோரின் பாத்திரப்படைப்பும்; ஒரு சமூகப் போராட்டம் தோல்வியைத் தழுவும் போது கண்மணியின் தங்கை களத்தில் புகுவதும் சமூக உயிர்ப்பையும் நம்பிக்கையையும் நிலை நிறுத்துகிறது.

பி. கு.  2002 ஆம் ஆண்டு எட்டையபுரத்தில் பாரதி விழாவில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து நடத்திய இலக்கியப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது.

29.09.2002 ஆம் ஆண்டு திருப்பூர் தமிழ்ச் சங்கம்   நடத்திய  ‘2001 – ஆம் ஆண்டு இலக்கிய விருது’  பரிசுப் போட்டியில்  ரூ. 2000/ ரொக்கப்பரிசும் நினைவுப் பரிசும் பெற்றுள்ளது.

2005 ஆம் ஆண்டு சென்னையில் நடைப்பெற்ற சிறந்த எழுத்தாளர்களூகான விழாவில் பாரத ஸ்டேட் வங்கியின் இலக்கியப் பரிசு பெற்றுள்ளது.

Ø நெருப்புக்கு ஏது உறக்கம்

கடலூர் மாவட்டம் என்பது இயற்கையின் பேரழிவால் பாதிக்கப்படுவதுடன், நிலக்கரியாலும் பாதிப்படைகிறது என்பது எதார்த்தம். அது மட்டுமல்ல, சாதிப் பிரச்சனையாலும் இன்னும் விடுபட்டதாகத் தெரியவில்லை. அவ்வாறு சாதிப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட தர்மங்குடி  என்னும் கிராமத்தின் வரலாறுதான் இந்த நாவல். கடலூர் மாவட்டத்திற்கேயுரிய பேச்சு வழக்கோடும் உழைப்பு மிக்க மனிதர்களோடும், அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணத் துடிக்கும் ஓர் இளைஞனின் கதைதான் நாவலின் கரு. எளிமையான நடையில் நீரோட்டமான கதை சொல்லலில் மிகவும் சுவையுடன் செல்கிறது நாவல்.

நமது கிராமங்கள் இன்னும் சாதிய வலைக்குள்ளே வதைப்பட்டுக்கிடக்கின்றன. வண்ணத் தொலைக்காட்சி வந்திருக்கிறது. செல்தொலைப்பேசிக் கோபுரங்கள் தென்படுகின்றன. சிறார்கள் சீருடையில் பள்ளிக்குச் சென்று வருகிறார்கள். நவீன அறிவியலின் ஆளுகை தன் சிறகை விரித்துப் பலப்பல சௌகர்யங்களை வழங்கி இருக்கிறது.

மக்கள்தான் பிரிந்து பிரிந்து கிடக்கிறார்கள். பிரிதல் கெட்டிப்பட்டுக் கிடக்கிறது. எல்லா நன்மையும் தீமையும் விலைப் பேசப்படுகின்றன. வோட்டுக்கள் கூடுவதும் குறைவதும் எப்படி என்கிற கணக்கைப் போடுபவர்களாகக் கொடி தூக்கி உலா வருகிறவர்கள் அனுபவமாகிறார்கள்.

நம் கண்முன்னே நகரங்கள் அரிகாரம் பூசிக்கொண்டு காட்சி தருகின்றன. தம் மெய்யான முகங்களைத் தொலைத்தவர்கள் நகரங்களில் ஏகபோகமாய் வலம் வருகிறார்கள். சாதிய மத துவேஷங்கள் அகன்று போனதாய்  வீர்யம் தீத்துப் போய் விட்டதாகக் கணக்குக் காட்டுகிறார்கள். பொய்கணக்கு அது எனத் தெரிந்தே கூட கைதட்டி ஆரவாரம் செய்யும் ஒலி கூடிக்கொண்டே இருக்கிறது.

திட்டுத்திட்டாகக்  கிராமங்களில் இன்னும் கூறுபோட்டுக் கொண்டே நம்சனங்கள் வாழ்கிறார்கள் இந்தப் புதினத்தில் வரும் ‘தருமங்குடி’யும் அதனைப்படம் பிடித்துக் காட்டுகிறது. காலம் காலமாக ஒடுக்கப்பட்ட சமூகம் அதன் வாழிடம், பூகோள எல்லைகள், சலனப்படாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறது.

நகரம் வந்தேரிகள், கெட்டிக்காரப் பிள்ளைகளை உருவாக்குவது எப்படி என்கிற கணக்கும், அதிகாரமும் பணமும் சம்பாதிப்பது எப்படி என்கிற கணக்கும் மட்டுமே போட்டுக் கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள். கற்றல் என்பது அறம் தொலைத்து நிற்கிறது. இப்புதினத்தில் வரும் கொளஞ்சி வித்யாசமாய் வாசகனுக்கு அனுபவமாகிறான். பூர்வீக மண்ணோடு இணைத்துக் கொண்டு தன் வாழ்க்கையைத் துவக்கத் திட்டமிடுகிறான். மேலைய கலாச்சார விஷக் கொடுக்குகளிலிருந்து மீண்டு ‘தருமங்குடி’ க்கு வந்து சேர்கிறான். தன் தாத்தா தியாகி கோபாலின் மனசாட்சி மறு உருவெடுத்து தன்னுள் செயல்வீச்சு கொள்வதாய்க் கொளஞ்சிக்கு அனுபமாகிறது.

கடவுளின் திருநாமம் ஒன்று. ஆனால் கோவிவின் பூகோல இருப்பிடம் வேறுவேறு. ஆக அந்த பகுதி மக்களுக்கு மட்டுமே அது கடவுளாகக் காட்சி தருகிறது. மற்றையோர்க்கு இல்லை. எத்தனை அவலம் இது.

வாழ்க்கையை முடித்துக் கொண்ட மனிதன் இடுகாட்டுக்குச் செல்லும் அப்போதும் சாதி குறுக்கே நிற்கிறது. சாதி பிரித்து பிரித்துத்தான் கிராமச்சுடலையும்,தாழ்த்தப்பட்டவர்கட்கு என்று தனிச்சுடுகாடு, தனித்திருக்கோவில்கள், தனிக்குளங்கள், தனித்தனியே வண்ணார்கள், முடிதிருத்துவோர், ஏன் அய்யர்கள், எல்லேமே. என்றுதீர்வது இந்த கொடுமைகள், யார் பொறுப்பேற்றுக்கொள்வது. கொளஞ்சி தோழமையோடு இப்புதினத்தில் திட்டமிடுகின்றான். வெற்றி இன்னும் எட்டாக் கனியாகவே இருப்பதை புதினம் பேசுகிறது.

இன்றைய கல்வி ஒருவனை உலகம் சுற்ற வைக்கிறது. அறிவியல் சாதனைகளில் உச்சத்தைத் தரிசிக்க கொண்டு சேர்க்கிறது. பணம் பண்ணச் சொல்லிக் கொடுக்கிறது. அவன் மேடைகளில் ஏறி அடுக்கடுக்காய்ப் பேசி முடிக்கிறான். சுற்றிச்சுற்றி வரும் உள்ளீடமற்றா மனிதர்கள் அவனை மகிழ்விக்கிறார்கள். முடிந்து போகிறது கூச்சல். அடுத்தவன் மேடை ஏறி மீண்டும் அதனையே ஆரம்பிக்கிறான். இதுவா மனித வாழ்க்கை. இதுஅல்ல என்கிறான் நாவலில் வரும் கொளஞ்சி.

எங்கேயும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். நல்ல உள்ளங்கள் வாழ்கின்றன.நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்பது சாத்தியமாகிறது. ஆனால் அவர்கட்கு பகட்டு தெரியவில்லை. பம்மாத்து வசமில்லை. நம் அளவுகோலால் படிக்கவில்லைதான் அவர்கள். அப்படி அஞ்சாபுலியும் சாரதமும் இப்புதினத்தில் கண்முன்னே தெரிகிறார்கள். இம்மண்ணில் நல்ல வண்ணம் வாழ வழி தெரிந்தவர்கள். கோவில் வாத்தியாரும் மரகதமும் இந்தச் சமூதாய தளத்தில் கிடைத்த எளிய வாழ்க்கையையும் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள். சூழல் இத்தகைய மனிதர்களின் வாழ்க்கையை விளையாடாக்கி வைத்திருக்கிறது. வதை படுகிறது வாழ்வு.

பணம் பண்ணும் பேராசிரியர்களிடமிருந்து வேறுபட்டு நிற்கும் பேராசிரியர் சீனுவாசன், அரசியல் வாதிகளின் சதியில் சிக்கிக் கொள்ளாமல் இன்னும் நல்லவை காத்துநிற்கும் செம்மலர், கேட்டிலும் துணிந்து நிற்கும் நம்பிக்கை மிகுந்த சாரதம், மனிதம் மாண்டு போகாமல் காத்து நிற்கும் குளிர் நிழலாய் வரும் நாட்டாண்மை சேதுவராயர், கல்விக் கூடங்களை கலைமகளின் இருப்பிடமாய்க் கண்டு தருமங்குடி மக்களின் வாழ்வுக்கு வேராக நின்ற சேதுராமன் பிள்ளை எனப் பல மாந்தர்கள் புதினத்திற்கு வலு கூட்டுகிறார்கள்.

            எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி உள்ளே ஒத்து உரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் என்ரு கேட்கும் வள்ளல் இராமலிங்கரின் வினாவரியில் உள்ளே ஒத்து என்கிற சொற்களில் உள்ளே என்கிற பதத்தின் கனத்தை அதிர்ந்து நோக்குகிற வாசகப்பார்வை அளிக்கின்ற படைப்பாக இது அமையும் என்பது விழைவு.

            வித் என்கிற மூலம் தரும் வேதத்தை அறிவுச் செல்வத்தை, கடவுள் என்கிற பதத்தை உள்கட என்றமைத்து, ஒருவன் மன ஆகாயத்தைத் தேடிக் கண்டடைகிற பெரு விஷயத்தை ஆன்ம அனுபவத்தை பைசா பண்ணும் விவகாரமாய் மாற்றிய ஈனச்சன்மங்களைத் தோலுரித்துக் காட்டிட எழுந்த ஒருசிறு முயற்சியே இப்புதினம்.

சமூக யதார்த்ததை விளங்கிக் கொள்ளாமல் அறிவியல் விளைச்சலைக் கண்டு விடத்துடிக்கும் விருப்பத்தை மறு ஆய்வுக்குட்படுத்த சிபாரிசு செய்யும் ஓர் முயற்சி இது.

பெற்ற கல்வியை காசு பண்ணும் தந்திரமாக, அரசியலை வோட்டுக்கள் சாதிக்கும் சொக்காடனாக, அதிகாரத்தை அமரும் பீடத்தை விட்டு அசைத்து விடாத அஸ்திவாரமாக காத்துக்கொள்கின்ற ஒரு அமைப்பு சமூகக் கொடுமைகளை சரி நேர்மையோடு எப்படி எதிர்கொள்வது என்கிற விமர்சனத்தை வைக்கிறது இப்புதினம்.

 

Ø எதிர்வு (புதினம்) – 2013

படைப்பாளிகளின் படைப்புத் தலைப்புகளை இருவகையாகக் கொள்ளலாம். முதலில் படைப்பாளி தன் படைப்பு எழுதிமுடித்தவுடன் ஒரு குறியீட்டுப் பெயர்க் கொண்டுத் தலைப்பிடுதல் ஒருவகை. மற்றொன்று தலைப்பையிட்டு அதன் மேலே பயணம் செய்வது ஒருவகையாகும். இப்புதினத்தினை ஆசிரியர் குறியீட்டு நிலையும் தன் புதினத்தில் தலைப்பினைச் சூட்டியுள்ளார்.

கதைக்களம்

கதைக்களமானது சிதம்பரம், சீர்காழி, கடலூர் என அதனைச் சுற்றிய  சிறு கிராமங்களைப் படைப்பின் களமாக கொண்டுள்ளார். படைப்பாளி பிராமணச் சமூகத்தைச் சார்ந்தவராதலால் கதைக்களமும்  அம்மக்களைப் பற்றியே விரிகின்றது. தமிழகத்தின் மிகுந்த வளமான ஆற்றுப்படுகையில் தான் பிராமணர்கள் குடியமர்த்தப்பட்டனர். எனபது வரலாற்றின் மூலம் நாம் அறிந்ததே. இப்புதினத்திலும் காவிரி ஆறு பாயும் குருபுரத்தில் இருந்து கதைத் தொடங்குகிறது. தன் ஊரில் பாயும் காவிரி ஆற்றினை,

குருபுரத்துக் காவிரிக்கு மணிகர்ணிகை என்று பெயர் மணிகர்ணிகையின் மேற்கு திசையிலே இருபுறத்துச் சுடலை. ஆக அங்கே பெண்கள் வருவதில்லை.எப்பொழுதும் கிழக்கே செல்வார்கள் பெண்கள். மேற்கில் ஆண்கள். மணிகர்ணிக்கு இது ஒன்றும் புதிது இல்லை. எல்லாம் அவள் பெற்ற மக்களே. அவள்தான் உயிர்தந்தாள் உடல்தந்தால் உணவுதந்தாள் வாழ்ந்திட உறையுள் தந்தாள். மண்ணாகி மக்கிப் போனால் என்ன, எரிந்து சாம்பலாகி முடிந்தால் என்ன அவள் வசமாகித் தான் எதுவும் முடிகின்றன. ஆக அவள் தாய். பெருந்தாய் மடிதாங்கும் தெய்வம். குருபுறத்து மணிகர்ணிகை அவள். (ப.6)

என காவிரி ஆறுதான் அவ்வட்டார மக்களின் வாழ்வியலைத்  தீர்மாணிக்கிறது எனபதைப் படைப்பாசிரியர் புலப்படுத்துகிறார். பிராமணர்களின் சடங்கியல் முறைகளையும் கதைகளில் விவரித்து செல்கிறார். கதையானது பிராமணர்களின் வாழ்வியல் குறித்துப் பேசப்படுவதால் கதையில் வரும் மீனா கணவனை  வாலிபப் பருவத்திலே இழந்துவிடுகிறாள். அவளின்  மகள் லீலாவதி தனக்குப் பெண் குழந்தை இருந்தாள் தன்னுடைய அழகான முகவடிவத்தை மாற்றி மொட்டையிட்டு தன் மகளின் வாழ்க்கையினை ஒளியேற்றச் சமூகத்துடன் தொடர்ந்து போராடுகிறான் அல்லது எதிப்பு செய்கிறாள் என்றவாறு கதை செய்கிறது. மக்களின் வாழ்வியலைப் புதினத்தில் படைக்கும் போது அவர்களின் மொழித் தவறாது இடம் பெறுவது இயல்பாகின்றது. சில செய்திகளை இலை மறைகாயாகச் சொல்வதற்கு இப்பழமொழிகளே சிறந்தகருவியாக அமைகின்றது.

பல்லுபோனவன் பட்டாணிக்கடை வச்சாப்புல (ப.37) முதன்மைப் பாத்திரமான மீனா சில நேரங்களில் தன் சமூகத்தைப் பழிப்பவளாகவும் தான் விதவையாய் இருப்பது கண்டு இச்சமூகம் தன் மீது கொண்டுள்ளத் தாக்குதல்களைப் பார்த்து நாயாவது பிறந்திருக்கலாம் (ப.35) என நினைப்பதோடு படைப்பாளி பெண்ணியத்திற்கு ஏற்படும் துன்பங்களைத் தம் பார்வையால் அவர்களை விடுதலையை நோக்கி அழைத்துச் செல்கிறார். புதினத்தில் பன்டைபாளி மிகக் கற்பனைகளை உலாவ விட்டுள்ளார் எனலாம்.  கதைக்களம் ஒரு சமூகத்தினுள்ளே நடைப்போடுவதாலலும் உரையாடப் சில இட

மீனாவின் மகள் லிலாவதி தன் வயசுக்குரிய பருவ எதிர் நோக்குதலை மிகுந்தச் சிரமத்துடனே கடந்து சென்றுள்ளதை காட்டுகிறார். ‘கவனம் தன் தடத்தை மாற்றிக் கொள்ள லீலாவதி சமஸ்கிருத வகுப்புக்கும் சுலோ வகுப்புக்கும் கூட சென்று வந்தாள்’ (ப. 95) படைப்பாளி தன் வட்டாரத்தில் விளையும் விளைபொருள்களையும் படைப்பில் வெளிப்படுத்தியுள்ளார்.  கசப்பு நாரத்தே மஞ்சள் கிழங்கு, மாயவரம் கருணைக்கிழங்கின் குணத்தினையும் அதன் புகழினையும் வெளிப்படுத்துகிறார். காவிரி ஆறானது கருநாடகாவில் இருந்து வரும் யதார்த்த நிலையைப் பதிவு செய்துள்ளது முக்கியப் பதிவாகும்.

உலகயமாக்கள், பொருளாதார மயமாக்கம் எனப் புதிய புதிய சொல்லாடல்கள் நாம் காதுகளைத் தொடாலும் மக்களின் மனநிலையாசை ஆணியடித்தாற்போல உள்ளதைச் சுட்டுகிறார். தீண்டாமை குறித்து எவ்வளவோ பேசியும் எழுதியும் போராடியும் இருந்தாலும் அதனை மாற்ற முடியவில்லை என்பதை படைப்பாசிரியர் ஒப்புக்கொள்கிறார்.

அந்த அம்பட்டனுக்கும் சேத்தா  நீ என்னடி  சொல்றே’ ‘நாகலிங்கத்திற்கு அப்புறமா சாப்பாடு போடலாம்’ (ப.111) எனத் தாழ்த்தபட்ட வன் சம்மமாக சாப்பிடக் கூடாது எனச் மானங்கெட்ட புத்தி படித்தவர்களிடமும் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். மேலும் படைபாளி பூனூல் தொன்ம மரபுக்கு எதிராகத் தொடர்ந்து தன் கலாசாரத்தை தேவைப்படும் இடங்களில் எல்லாம் இட்டுச் செல்கிறார். குடும்பங்களில் நிகழும் சொத்துப் பிரச்சனை, அபகரித்தல் போன்றவற்றை கதையினஅல் மீனாவிற்குத் தொடுக்கப்படும் வாழ்வியல் சிக்கள்களை பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்களாகக் கொள்ள வேண்டும் என்பதனை படைப்பாளி வலியுறுத்துகிறார். பார்ப்பணர்கள் தான் சமூகத்தில் அறிவாளிகள் என பொதுபுத்திக்காக பல் காலமாக நிலவி வருவதையும் படைப்பாளி சுட்டிக்காட்டுகிறார்.

அதான பாத்தன் இம்புட்டு ரச்சணமா சேதிய கேக்கிறது பாப்பார சனம் தான் இருக்கும்’ (ப.205) தமிழ் படைப்புலகில் ‘தாது வருடப்’ பஞ்சத்தினை மிகுதியானப் படைப்புகளில் காணமுடிகிறது. தாது வருடத்தில்  மக்களின் அவள வாழ்வினை படைப்பாளியின் காலக்கட்டத்தில் வாழ்ந்த மற்ற படைப்பாளிகளும் தவறாது குறிப்பிட்டுள்ளனர். அதில் பா

படைப்பாளி தன் புதினத்தில் பிராமண சமூகத்தை முன்னிருதப்ப் அடைத்திருப்பதும் அவ்வாடாரத்தில் உள்ள மற்ற மக்களின் வாழ்வியல் வளம், போன்றவற்றைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். தான் சார்ந்த சமூகத்தில் உள்ள நச்சுப் பழக்க வழக்கங்கள், பழமையான மனிதர்கள், மனோநிலைகள் என்பது குலத்து காய்த்தல் உவத்தல் இன்றி  சுட்டிக்காட்டுவது படைபாளியின் நேர்மையினை உறுதி செய்வதற்குரிய ஆதரா களமாக விளங்கும், 

கவிதைத் தொகுப்பு

தான் அனுபவித்த ஓர் உணர்ச்சியை அப்படியே பிறரும் அனுபவிக்கத் தூண்டும் உள்ளத்தின் வெளிப்பாடே கலை. உள்ளதை உள்ளவாறே உரைக்காமல், உள்ளதை உணர்ந்தவாறு உரைக்கும் உன்னதக் கலை கவிதைக்கலை. இலக்கிய வடிவங்களுள் மிகத் தொன்மையானதும், முதன்மையானதுமாகக் கருதப்படுவதும் கவிதைக் கலையே. ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுக்கால வரலாற்றுச் சிறப்பினையுடைய இக்கவிதைக்கலை கால மாறுபாட்டால் உருவத்தாலு, உள்ளடக்கத்தாலும் பல்வேறு கோலங்களைப் பெற்றுத் துலங்குகிறது. மனிதன் இயற்கைவாழ்வு நடாத்திய சங்க காலம் தொட்டு, இயந்திரங்களோடு இயைந்து வாழும் இக்காலம் வரை பல்வேறு மாற்றங்களைப் பெற்றுவருகிறது. அவ்வக்காலக் கவிதை உலகில் மேலோங்கி நின்ற கருப் பொருட்களை விளக்கும் வண்ணம் அமைந்த காதற் கவிதை, நீதிக்கவிதை, அருட்கவிதை, கதைக் கவிதை, கைக்கிளைக் கவிதை, போற்றிக் கவிதை, தேசியக் கவிதை, கிராமியக் கவிதை, புதுக்கவிதை முதலிய பல்வேறு கவிதைகள் வரலாற்றில் கவிதைக்கலை பெற்ற மாறத்தை வளர்ச்சியை உணர்த்தி நிற்கின்றன.

தமிழ்க் கவிதையின் நீண்ட வரலாற்றுச் சாரமாகத் திகழ்வது அதன் மானுடக் கண்ணோட்டம்தான். சங்கக் கவிஞர்கள்  முதல் வள்ளுவன், இளங்கோ, சாத்தனார், கம்பன், பாரதி, பாரதிதாசன் வரை தமிழ்க்கவிதைக்கு ஒரு மானுடக் கண்ணோட்டம் உண்டு. இந்தக் கண்ணோட்டம்தான், வருங்காலத்தைப் பற்றி ஆக்க ரீதியான படைப்புக் கற்பனைதான் தமிழ்க் கவிதையில் தொடர்ந்து வரும் உயிர்ப்புள்ள சாராம்சமாகும். இந்த மனிதநேயக் கருத்துகள் இடம்பெறும் கவிதைகளின் தொடர்ச்சியாகத் தான் எழுத்தாளர் எஸ்ஸார்சியின் கவிதைகள் அமைகின்றன. அவற்றைக் இனி சுருங்க காண்போம்.

Ø ரணம் சுமந்து (ஏப்ரல் 1997)

முதலாவது கவிதை நூல் கவிதைக்கு ஆதாரம் உண்மை உணர்ச்சி அழகு. உணமைக்கு நிறை அழகுண்டு. உணமையே நிறை அழகுண்டு. உண்மையே அழகு. உள்ளம் உண்மையை ஓர்கின்றபோது – எழுப்புகின்ற போது அதுவே உணர்ச்சியாய் கவிதையாய் உருப்பெறுகின்றது.

இத்தொகுப்பின் கவிதைப் படப்புகள் பெரும்பாலும் மனிதப் பண்புகள் கேலிக்குரியனவாய் இழிக்கப்பட்ட போது கொப்பளித்தவை. பேணிப் போற்றப்பட வேண்டிய மாண்புகள் நொறுங்கி வீழ்வது கண்டு நொந்து கொள்பவனாய் மனிதன் வாழநேர்கிற்து. அவனைச் சுற்றிலும் எங்கும் உவர் நிலமாய் சிறுமை கண்டு பொங்குதலுக்கு எல்லையே இல்லாத நிலையிலும் மனித விழுமியங்கள் காக்கப்படவே அவாவுகிறான் பின் அந்நிகழ்வுகளின் ஊடே அவன் தன் நெஞ்சில் ரணத்தைச் சுமக்கிறான். அப்படிச் சுமப்பதிலும் மகிழ்ச்சியை நிறைவைக் காண்கின்றான். மனித உன்னதத்தை உயர்த்திப்பிடித்து, நெஞ்சிக்கு நேர்மையாய் அவன் சிந்தித்து செயல்பட்ட போது கிட்டிய எதிர்வினைகள் ரணமாய்ச் சூழினும் அவன்  தன் அளவில் நேர்மையாய் நிறைவாய்…

யுகப் புரட்சிக்கு கவிதை வித்திட்ட மாகவிஞன் பாரதி வழியில் புதுமைக் கவிதைகள் படைக்க முற்பட்டவர் கவிஞர். புரட்சி விடியலுக்கு, கூவிக் கொக்கரித்த செம்மைச் சேவல் என பாரதியை வியக்கும் ஆசிரியர் எண்ணக் குமுறல்கள் எழுத்தில் கொப்பளிக்க சூடான கவிதைகளை படைத்திருக்கிரார்.

                        சிந்தையில் தெளிந்ததை

                   பந்தியில் கொணராத

                   பகல் வேஷக் காரர்களின்

                   சாயச் சங்கதியை

உலகிற்கு உணர்த்தாத படைப்பாளிகளை அவர் சாடுகிறார்.

                        எழுத் தென்னும் வேள்வியை

                   வணிகமாக்கி

                   கலையை வேசியர் தொழிலாக்கும்

                   கொள்ளையரின் முழுமுதலை

                   சுட்டெரிக்கும் சுடுகனலை

                   எழுத்துச் சுடரொளியை

படைப்புலகம் பெறவேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார்.

            கவிஞரின் கவிதைகள் சுட்டெரிக்கும் சுடுமனலை உள்ளடக்கியிருக்கின்றன என்று சொல்லலாம். சாதியும் மதங்களும் புரியும் தீமைகளையும், அவற்றைப் போற்றுவாரின் போலித் தனங்களையும் அவர் வெளிப்படையாகவும், அங்கதமாகவும் சுட்டுக் காட்டுகிறார் கவிதைகளில்.

                        முன் தொகை ஐந்நூறு

                   முழுத் தொகையோ மும்மடங்கு

                   முதல் வகுப்பு பயணித்து

                   மூக்கைப் பிடிக்க உண்டு

                   கூத்தபிரான் கோவிலிலே

                   ஆயிரங்கால் மண்டபத்தில்

                   கூவியதே இம் முழக்கம்

                   அநித்யானி சரீரானி

                   விளங்காது தான்.

                   மனித வாழ்வு

                   நீர்மேல் குமிழ் அன்றோ

                   அறிதல் எப்போது

                   அறிவிலிகாள் என்றபடி (வயிறும் வாயும்)

இப்படி சொல் வேறு, செயல் வேறாக வாழ்க்கை நடத்துகிறார்கள் அரசியலிலும் இருக்கிறார்கள். அவர்கள் போக்குகளை கவிஞரின் கவிதைகள் காட்டுகின்றன.

                        அரிச்சந்திரன் ஓர் துரோகி

                   மீதம் வைக்காமல்

                    உண்மையே பேசித் தீர்த்தான்

                   என் அரசியல் வாதிகட்கோ

                   பஞ்சம்

என்று பொய் புரட்டுகளிலே உல்லாசமாக வாழ்கிற அரசியல் வாதிகளின் தன்மையைக் கூறுகிறது ஒரு கவிதை.

                        கானல் நீரைக் காணாதோர் வருக

                   எங்கள் நாட்டு

                   சோஷலிசம் அழைக்கிறது

என்று நயமாக அம்பலப்படுத்துகிறது அவர் கவிதை.

                        ஒப்புரவாய் நாம் வாழ

                   சண்டாளர்

                   கொட்டமடங்கி

                   கூத்திடும் நாள்

                   எம் மண்ணில்

                   எப்போது வருகுவதோ!

என்பது அவரது உள்ளக்குரலாக ஒலிக்கிறது.

                        வேதத்தை அறிவென்று

                   அறியாது பிச்சை பெறவொரு

                   பாத்திரமாய் ஆக்கி

                   ஆசி கூறும்

                   மடங்களை மன்னிக்க முடியாது

என்று கொதிப்புறுகிறார் கவிஞர்.

            மண்ணே கோவில் –எம் மக்களே தெய்வம் என்னும் உண்மை ஞானத்தை கவிதை மூலம் உணர்த்துகிறார் ஆசிரியர்.

            தேடுதலே வாழ்க்கை என்று உணரும் கவிஞர் வாழ்க்கை பற்றி அதிகம் சிந்திப்பதை அவர் கவிதைகள் காட்டுகின்றன்.

                        வாழ்க்கை வழுக்கிக் கொண்டு

                   போகிறது

                   வாந்தவர்கள் வாழ்ந்து போனார்கள்

                   நிவையாய் வாழ்ந்தேன் நான் (என்று)

                   சொல்பவரை தேடினேன் வரலாற்றில்

                   தென்படவில்லை இன்னும்

                   வாழாது முடிதலே வாழ்க்கை

                   ரணத்தைச் சுமந்து

                   விடைபெற்றவர்களே அதிகம்

                   பூரணமாய்

                   சுபம் எழுதி

                   முடியாதே அது

என்று கவிஞர் வாழ்க்கை பற்றி வேறொடு கவிதையில் அழகாக விவரிக்கிறார்.

                        விரும்பாது அரும்பிவிடும்

                   வேண்டாது கிடைத்துவிடும்

                   விடியாது முடிவுபடும்

                   புரியாது முடிந்துவிடும்

                   அறியாது அழிந்துவிடும்

                   உணராது கரைந்துவிடும்

                   அணுகாது விலகிவிடும்

                   அகலாது அகன்றுவிடும்

                   அள்ளாது குறைந்துவிடும்

                   சொல்லாது சொத்தைபடும்

                   வாழாது வாழ்வுபடும்

                   இப்படியாய் இத்தனையாய் இன்னும் (வாழ்க்கை)

சமூக அங்கதம் (சோஷியல் ஸ்ட்டயர்) எஸ்ஸார்சியின் கவிதைகளில் உயிர்ப்புடன் மிளிர்கிறது. பச்சைத் தமிழரின் நிலைமையைக் கூறும் கைபர் விஷ(யம்) பசிக்கடவுள், பலவான், ..ப்பூநூல், பகுத்தறிவு, ரேஷனரிசி, யித்தி, சனநாயகம் போன்ற கவிதைகள் நல்ல சான்று ஆகும்.

            உபநிடதக் கவிதைகள் என்று செயல் , பயணம், தெளிதல், மானுடம் என்னும் தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள கவிதைகள் சிந்தனை ஒளி பொதிந்தவை சீரிய வாழ்க்கைக்கு ஏற்ற நற் கருத்துக்களை வெளியிடுபவை.

                        நோக்கம் சிதையாது

                   உணர்வுகள் சங்கமித்து

                   அன்பில் வெளிப்படட்டும்

                   வாழ்வில் பொலியட்டும்

                   எண்ணங்கள் ஒன்றாகி

                   திண்ணிய ஒற்றுமை

                   ஒன்றிப்போடு வாதிடுவோம் ஒளிபெறுவோம்

                   மானுடம் மாண்புறட்டும் என்று ஒரு கவிதை விரும்புகிறது.

மானுடம் மாண்புற ஒளி நிறைந்த கவிதைகளை  எழுதியுள்ளார். (அணிந்துரை வல்லிக்கண்ணன்) 62 தலைப்புகளில் கவிதை உள்ளன.

Ø ஞானத்தீ (2005)

இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பாகும். இத்தொகுப்பில், மனிதன், தேடல், இயற்கை, அவனவன், பூட்டிவை, கணக்கொன்று போடலாம், பெயர்ப்பலகை, நிலைமை, அங்கீகாரம், ருசு, கிருபை, தப்புக்கணக்குகள், இலக்கணம், சங்கநாதம், நிறை, மாற்றம், பேரன்பு, வேட்டல், பிரார்த்தனை, வாணிப்பூசணை, வேடம், சொந்தம், பார்வைகள், மறக்கவோ தமிழ், தேசியம், நடப்புகள், அப்பா, அம்மாவும் அப்பாவும், கடமை, கணக்கு, தலைகீழ், சிதம்பரரகசியம், ஞானத்தீ, எச்சரிக்கை, அவாள், சுனாமி, முரண், சுயங்கள், கவிழ்தலை, பொது உடமை, நுண் கவிதைகள், மண், காலம், அனுபவம், நேர்படவாழ், மன்னிப்பு, மறதி, நெருடல், இறை என்னும் 49 கவிதைகள் உள்ளன. இயற்கையின் அழகினைப் பாடாத கவிஞர்கள் இல்லை எனலாம். ஆனால் இன்றைய காலத்தில் இயற்கையை நாம் எப்படியெல்லாம் மாசுப்படுத்துகிறோம் என்பதை,

                        ஆகாயக் குடையை

                   சல்லடை ஆக்கி

                   புகைகக்கி புகைகக்கி

                   பூவுலகை சூடாக்கி

                   பிளாஸ்டிக் புழங்கி

                   மண்ணை ரணமாக்கி

                   நச்சு நீராய்க்

                   கடலைக் கெடுத்து

                   காடுகள் கொன்று

                   மணல் கொள்ளைபோய்

                   ஆறு ஏரிக்குளங்கள்

                   பிளாட்டுக்களாய்

உறுமாறி

மண்ணை மலட்டாக்கி

………………………

மிக நேர்த்தியாக இயற்கை என்னும் இக்கவிதையில் சுட்டுகிறார்.

நாவின் ஆற்றலை வள்ளுவர் நாவினால் சுட்ட வடு என்றார். இவர் நாக்கினை நரியுடன் உவமைக்கின்றார். எல்லா சண்டைகளுக்கும் நாக்குதான் காரணம் ஆதலாம் நாக்கினை பூட்டி வையுங்கள் அதனால் நலம் தொடரும் என்கிறார். இதனை,

                        ………………………….

                   வார்த்தைகளில்

                   மாட்டிக் கொள்ளாதீர்கள்

                   நாக்கு – நரி

                   ஓய்வு கொடுங்கள்

                   ஒழுங்காக

                   நாலாயிரம் சண்டைக்கும்

                   நாக்குத்தானே

                   நாயகன்

                   நேற்றுமின்றும் என்றும்

                   பூட்டி வையுங்கள்

                   …………………

என பூட்டி வை என்னும் கவிதையில் குறிப்பிடுகிறார்.

                        என்ன துக்கம்

                   எங்கிருந்து பேதமை

                   அனைத்துமே தன்னுள்ளாய்

                   தாமே அனைத்துலுமாய்

                   எண்ணுதல் நண்ணிய பின்

                   அன்பு செய்தல் மட்டுமே

                   சத்தியமும் சாத்தியமுமாய்

என்னும் கவிதை அன்பின் ஆற்றலைப் புலப்படுத்துகிறது.

கடவுளைக் காட்டி காசு பறிப்பவர்களைக் குறிவைத்து கூறுவதாக அமைந்த,

            பொருள் பிடிபடா ஒன்றை

          பொருள் கொணர்

          ஏற்றமொடு இறக்கம்

          அருள் பொருளாக்கி

          பொருள் கரப்பதற்காய்

          மக்களை மக்களாய்

          மருளவைத்து

          இருளுக்கு உறவாக்கும்

          குருக்களாய் அவாள்கள்

அவாள் என்னும் இக்கவிதை அமைகிறது. மேலும், அம்மாவும் அப்பாவும், ஞானத்தீ, மாற்றம் போன்றன நெஞ்சைத் தொடும் கவிதைகள் ஆகும்.                    

Ø  வேதவனம்

வேதங்கள் இரகசியப் பொக்கிஷங்கள் போலவும், அவற்றை ஓதவும், உரைக்கவும் ஒரு குறிப்பிட்ட இனத்தவர் மட்டுமே தகுதியுடையோர் என்பது போலவும் ஒரு பரப்புரை நடந்து வருகிறது. அப்படியெல்லாம் இல்லை. வேதங்கள் மானுட குலத்துக்குப் பொதுவானதே. எல்லோரும் அறிந்து கொல்ல வேண்டியதே! அவை எழுதப்பட்ட காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்வியல் பதிவுகள் தான் வேதங்கள். வாழ்ந்த  முறையும், வாழ வேண்டிய முறைமையும்  எதுவென உரைப்பவையே அவைகள். உலகில் தோன்றிய ஜீவராசிகள் நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற கோரிக்கையை, எல்லாம் வல்ல இறை முன் வைக்கின்றன வேதங்கள்.

சிந்தனை – கற்பனையை மய்யமாகக் கொண்டது ரிக் வேதம். வேள்வி வழிபாடுகளை முன்னிருத்துகிறது யசூர். வேத விஷயங்களை இசையமாக உரைக்கிறது சாமம். மருத்துவம், வாழ்வியல், அரசியல் போன்ற தளங்களில் உரைக்கப்பட்டது அதர்வணம் என்பதை மிக எளிய நடையில் அழகிய வசன கவிதைகளாக வார்த்திருக்கிறார் ஆசிரியர்.

            வேதங்களில் எத்தனையோ செய்திகள் மறைந்து உறைவதாயும் அதனை எளிதில் அறிந்து கொள்ளுதல் இயலாது என்று நம்புவதும் பேசுவதும் நமக்கு வழமை ஆகியிருக்கிறது. அப்படி மறைந்து கிடக்க வேண்டிய விடயங்கள் ஏதுமில்லை எல்லோரும் அதன் பொருள் அறிதல் வேண்டும் என்று கொள்வதே நியதி.. மக்களைச் சாதிசாதியாப் பிரித்து வேதம் ஓதுவதற்கென மட்டுமே இன்ன சாதி என்று வேதங்கள் எவ்விடத்தும் சொல்லவேயில்லை.

            அறிவு வயிற்றுப் பிழைப்பாய் உருமாறும்போது சின்னத்தனங்கள் ஞானமேடையில் நுழைந்துகொண்டன. முந்திக் கொண்ட சின்னதனங்கள் எப்போதும் ஆளும் கையோடு கள்ள உறவு பேணுவன.உள்ளதை உள்ளபடி உரைத்தலும், ஓர்தலும் அறிவின் முதற்படி.. ஆக, வேதங்கள் மக்களின் வாழ்க்கையை விழைவை, வேண்டுதலை அவர்கட்குத் தெரிந்த அன்றைய நியாயத்தைச் சொல்கின்றன.

பயிர்ப்பச்சைகள், செடிகொடிகள், ஆடுமாடுகள், பிற விலங்குகள்,பறவைகள், மனிதர்கள் இனிதே வாழவேண்டும் என்கிற கோரிக்கையை வேதம் இயற்கையிடம் வைக்கிறது. வேத காலங்களில் இந்திரன், சூரியன், உஷை, காற்று, தண்ணீர், பூமி, தீ இவை மக்கள் வணக்கத்திற்குரியன ஆயின அக்கினியை முக்கியமாய் வழிபடுவதும், சோமபான விவரணையும் வாசகனுக்கு வேதங்களில் சிறப்பாய் அனுபவமாகின்றது.

            ஆண்குழந்தைகள் வீரமுடையவர்களாக இருத்தலை முன் நிறுத்துவதும், தச்யுக்கள் என அழைக்கப்படும் இனத்தாரை எப்போதும் அவர்களின் எதிரிகளாக வரித்துக் கொண்டு அவர்களைப் போரில் வென்று, கொன்று முடிப்பதே வேத காலத்தவர் தம் தலையாய பணியாக இருந்ததையும் வேதம் இயம்புகிறது.

பயிர்த்தொழிலில், உழவு செய்தலை, கலப்பையை, நுகத்தடியை, மண்வளத்தை, வேதங்கள் பேசுகின்றன. ஓடும் தண்ணீரை நிலங்களில் தேக்கி பயிர்கட்குப் பாய்ச்சுவதை வேதம் குறிப்பிடுகிறன்றது. அளிக்கத் தெரியாதவன் அறிவிலி என்றும், பங்கிட்டு உண்ணாதோன் பாவி என்றும் வேதங்கள் பேசுகின்றன.தீயவையின்று நன்மை, இருளிலிருந்து ஒளி, அழிவினின்று ஆக்கம் எனச் செம்மையை அவை வேண்டுகின்றன. வேள்விகளில் விலங்குகள் பலியிடப்படுவது அறியமுடிகிறது. பலியானதன் உடல் வேள்வி நடாத்துவோரின் உணவுக்கும் அதன் ஆன்மா மேலுலகமும் பயணிக்கின்றன.

பிராம்ணர்கட்கும், வேதம் ஆக்கியோர் குழாத்துக்கும் ஓரு வித்தியாசக்கோடு இருந்ததையும், வேதங்களில் இருந்து அறிய முடிகின்றது. கணவனோடு வாழும் சுகத்தை, குழந்தைகளோடு பெறும் இன்பத்தை, வதியும் வீடு, வாழும் ஊர் இவைகளின் இலக்கணத்தை வேதம் பேசுகிறது.

            ரிக் வேதம், மனிதச்சிந்தனைக்கும் கற்பனைக்கும் பிரதான இடம் கொடுக்கிறது. யஜூர் வேதமோ, வேள்விச் சடங்குகளை மையப்படுத்துகிறது. சாமம், வேத விடயங்களை, தானறிந்த இசை ஞானத்தோடு முன் நிறுத்துகிறது. அதர்வணம் மிகுதியும் மருத்துவக் குறிப்புக்காளவும் , லௌகீக வாழ்க்கை, அரசியல் அறிவு பற்றிய கருத்துகள் கொண்டு விளங்குகிரது. முறும் மாகவிதைகளான வேதங்கள் நிச்சயம் வாசிப்புச் சுகம் அளிப்பன.

தொடர்ந்து வந்த உபநிடதங்கள் எப்போதும் முக்கியமாய் ஞான விடயக்கள் பேசுகின்றன. உலகத்து ஞானக் கருத்துக்கள் அனைத்தின் மொத்தக் கருவூலமாய் அவை விளங்குகின்றன. சிந்தனை அறிவின் ஆகப் பெரும் உச்சத்தை உபநிடதங்களில் எட்டிய ஒரு மக்களினம் எப்படி காசுக்கு முன் தன்னை தண்டனிட கற்றுக் கொண்டது எனபது வேதனைக்குரிய, ஆய்வுக்குரிய, விரிந்த களமாகி வாசகனுக்கு அனுபவமாகிறது.

            நிறைவினின்று எழுவது நிறைவு. நிறைவு பங்கிடப் பட எஞ்சுவது, நிறைவு, மெய் நிறைவு. பகிரக் குறையாதது என்கிற அறிவின் விடுதலை உபநிடத்தில் துல்லியமாய்த் தெரிவிக்கப்படுகிறது. ஒற்றுமை பேணுதலை செயல்கள் செம்மையாய் செய்யப்படுதலை ஒன்றித்த சிந்தனையின் வெற்றியை வேதங்கள் எடுத்துப் பேசுகின்றன.

வேதங்கள் மக்களின் பொதுச்சொத்து. எல்லோருக்கும் உரிமை உடைத்து. அவை நமக்குப் புரியாத விடயங்கள் பல பற்றியதன் மொத்த உருவன்று. மக்கள் பேசிய வார்த்தைகளே வேதங்களாக கவி உருக்கொண்டன. கள்ளமற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசகத்து உட்பொருட்கள் அங்கே மிகவும் உண்டு. உழைப்பை, வீரத்தை, சோம ரசத்தை, போர்ச்செய்தலை, பயிர்த்தொழிலைப் பற்றியெல்லாம் அது வித்தாரமாய்ப் பேசுகிறது.

            தக்யுக்கள் என்பவர்களோடு மோதி நிற்பதை விடாப்பிடியாய் பிரதானமாய் வேதம் முன்னிறுத்துகிறது. தக்யுக்கள் இவர்களொடு ஒத்துப் போகா, இந்நிலத்துப் புராதன மக்களாக நாம் கொள்ளமுடியும்.

இயற்கைத் தெய்வத்தை மட்டுமே வழிபட்ட மக்கட்கு இன்றைக்கு பேராயிரம் பரவி ஏத்தும் பெம்மானாய் அவன் மாறிப்போனது காலத்தின் வினை, உடன் நம்முன் எழும் வினா என்பது  இதுவே.

            புரியாதமொழியில் எப்போதும் தள்ளியே நிற்பவர்களால் ஓதப்படும் அது, எப்படி எங்குகிருப்போனை, எதிலுமிருப்போனைப் பேசிடச் சாத்தியமாகும். மகோன்னதமான ஒரு மலையின் பல்வண்ணச்சிகரங்களின் மேலாகத் தன் போக்காக இனிய கீதம் பாடிப் பறந்த ஒரு கிளி, திடீரென்று ஏதோ சாபமேற்று மலையடிவாரத்தில் ஒரு வளைப்பொந்தில் சுருண்டு, நெளிந்து வாழும் ஓர் ஊர்வன வகை உயிரினமாக மாறினால் எப்படியோ, அதைப் போன்ற இந்தப் பண்பாட்டுப் பரிணாமம் இவண் நேர்ந்து விட்டிருக்கிறது.

            ஆதார வலிவு போய், அழுகல் எஞ்சி நிற்கிறது. மாக்சுமுல்லரின் இக்கேள்விச் சிந்தனையை மலையாள சுகுமார் அழீகோடு தன் தத்துவமசி கட்டுரை நூலில் பதிவு செய்கிறார். ருத்ர துளசிதாசின் தகு தமிழாக்கம் தத்துவமசி வாசிப்போர்க்கு பிரத்தியட்ச ஆனந்தம் வழங்கி நிச்சயம் அறச்சீற்றம் கொணரும்.

என்னைப் பாதித்த ருத்ர துளசிதாசின் தமிழ் வடிவ தத்துவமசி உங்கள் எல்லோரையும் பாதிக்க வேண்டி  வேதவனம் உள் நுழைந்து, விருட்சங்கள் தரிசித்தேன். உண்மையுமாய், இன்மையுமாய் அத்தனையும் கொண்டது.ஒரு வனம் என்பதைப் பதிவு செய்தல் நேர்மையானது திண்ணை தளத்தில் நெடிது அமர்ந்து, வேத வன அனுபவம் பகிரச் சாத்தியமானது எனக்குக் கிடைத்த ஒரு பெரும்பேறு.

வேத க்கவிதைகள் ஆழ்ந்து பயில ஞானம் வசப்படலாம்.

            புதுக்கவிதை வடிவத்தில் அவர் இவற்றை மொழிபெயர்த்திருப்பது தமிழுக்கு ஒரு புது வரவு.  வேதங்களால் ஆட்கொள்ளப்பட்ட மகாகவி பாரதியும் கூட, வேதப் பொருளை விரித்துரைக்கத்தான் வசன கவிதை பாடியிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. இவரின் எளிய வசன கவிதையின் மூலம், வேத கால வாழ்க்கையைப் பற்றி சம்ஸ்கிருதம் தெரியாதவர்களும் புரிந்துகொள்ள முடிகிறது. பல வானிலை உண்மைகளை வேத காலத்தில் இயல்பாகவே அறிந்து வைத்திருந்தார்கள். அவர்கள் வலைமை வேண்டுமென்று உபாசனை செய்தார்கள். ஆநிரைச் செல்வம் வேண்டுமென்று இயற்கைத் தெய்வங்களை வழிபட்டார்கள்.

            இக்காலத்தில், விவாதிக்கப்படுகின்ற பல பாலியல் சம்பந்தமான சர்ச்சைகளும், அக்காலத்தில் இருந்திருக்கின்றன. யமனுக்கும், அவனுடைய சகோதரியாகிய யமிக்குமிடையே நிகழும் சம்வாதம் மிக சுவாரஸ்யம் வாய்ந்தது. ஆசிரியர் அதை அழகாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.

வெதங்களில் இக்காலத்தில் முற்போக்கு அடையாளமாகக் கருதப்படும் பல கருத்துக்கள் நடைமுறையில் இருந்திருக்கின்றன. இவற்றைப் படித்தால்தான் நமக்கு இதில் நமக்காக எத்தனை ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன என்பது புரியும். ஆசிரியர் நான்கு வேதங்களினின்றும், உபநிஷதங்களிலிருந்தும் தேர்ந்தெடுத்த பகுதிகளை சீரான நடையில் நமக்குத் தந்திருக்கிறார். பிற்காலத்தில் தோன்றிய ஸ்மிருதிகளை வைத்துக் கொண்டு, அக்காலத்திய இந்து சமயத்தை எடை போடக் கூடாது. வேதகாலத்தில், பெண்கள் ஆண்களுக்குச் சமமான படிப்புள்ளவர்களாகவும், சிந்தனைப் பூர்வமான விவாதம் செய்யகூடியவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். கார்கி, கோஷா, அபாலா, லோபமுத்திரா போன்றவர்கள்.

பெண்கள் கணவன் இறந்தபிறகு விதவைக் கோலம் கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை. அல்லது உடன்கட்டை ஏறும் வழக்கமும் இருந்ததில்லை.

பெண்ணே ! இனி நடக்க வேண்டியதைக் கவனி. இறந்தவனிடம் நீ ஏன் உட்கார்ந்துள்ளாய்? இங்கே வா. உன்னை விரும்புவனை மணம் செய்துகொள். என்ற பாடல் ரிக் வேதத்தில் வருகிறது.

 

கட்டுரைத் தொகுப்பு

Ø சில ஆய்வுகள் மதிப்புரைகள் விமர்சனங்கள்

நல்ல சிறுகதையாளராக மட்டுமன்றி கட்டுரையாளராக, ஆய்வாளராக விமர்சகராக, வானொலியில் பேச்சாளராக இவர் விளங்குவதை இந்நூல் விளக்குகிறது.  இந்நூலில், மனுவும் மனிதமும், கணையாழிக் கவிதைகள், மொழியியல் சில புரிதல்கள், எது அறம், வங்கத்துத் தங்கம் சுபாஷ், காதுகள் என்னும் ஆறு ஆய்வுக்கட்டுரைகளும்; பாண்டியன் பரிசு, க்ரீஷ்கர்னாட்டின் (தலெதண்டாவும் துக்ளக்கும்), தீரர் சத்தியமூர்த்தி, பாவேந்தர் கண்ட பாரதி என்னும் நான்கு வானொலி உரைகளும்; பூமணியின் ‘பிறகு’ – ஒருபார்வை, மாஸ்கோவில் தமிழன், யாவர் வீட்டிலும், தி தலித் கிறிஸ்டியன்ஸ் ஹிஸ்டரி, ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது என்னும் ஐந்து மதிப்புரைகள்; மார்க்சீயம் ஒரு விஞ்ஞானம், மார்க்சீயம் ஒரு விஞ்ஞானம் என்றால், போனா போவுதுன்னு, சேக்கிழார் அன்றும் இன்றும் என்றும், எரிதழல் கொண்டுவா என்னும் ஐந்து விமரிசனக் கடிதங்கள் உள்ளன. இந்நூலில் மனுவும் மனிதமும் என்னும் ஆய்வுக் கட்டுரையில், காலத்திற்கு ஒவ்வாத, பகுத்தறிவுக்குப் பொருந்தாத அநேகக் கருத்துக்கள் மனுவில் உண்டென்றாலும் இன்றளவும் உயிரோடு இருக்கின்ற, என்றும் இருக்கப் போகின்ற சில அரிய விஷயங்களும் அதனுள்ளே இருக்கத்தான் செய்கின்றன என்றும் சொல்லப்படுகின்றது. உதராணமாக, வர்த்தகம், ஸ்வீட் செய்தல், பாட்டுத் தொழில், வங்கித் தொழில், கூலி வேலை இவைகளை பிராமணன் செய்தாலும் அவனும் சூத்திரனுக்குச் சமமாகத்தான் கருத வேண்டும் என்று சொல்கிறது. அதாவது இன்று வங்கித் தொழிலில் உள்ள பிராமணர்கள் அத்துனை பேரும் சூத்திரர்களே என்கிறது மனு. மேலும், அரசனுக்கு கீழ்கண்டவைகளை அங்கமாகச் சொல்கிறது. மந்திரி, நகரம், அரசாங்க அமைப்பு, வங்கி நிர்வாகம், படை, நட்பு இவைகளில் எது ஊனம் ஆகினும் அரசனுக்கு ஆபத்தில் முடியும் என்று ஆலோசனை தருகிறது.

மனுவில் எத்தனையோ நல்ல விஷயங்கள், ஆய்வுக்குரிய விஷயங்கள் இருக்கின்றன. மனுவில்,’பிராமணர்களுக்கு மாமிசம் கூடாது’ என்ற இடைச் செருகல் வேலைகளும் நடந்திருக்கின்றன. மனுவை ஒதுக்கித் தள்ளி நிற்காமல் அதனை ஆய்வுக்குரிய பொருளாக்கும் மனோ பவாம் வளர்க்கப் படவில்லை.  மலத்தையும் ஆய்வு செய்து மனிதர்களைக் காப்பாற்றச் சொல்லித்தரும் அறிவியல் பார்வை நமக்கு என்று கிட்டுமோ? எல்லாம் தெரியும் என்ற போதை அகன்ற மார்க்ஸீயர்களுக்கும் அறிந்து கொள்ள விஷயங்கள் உண்டு மனுவில்….என நேர்மின்னோட்டமும், எதிர் மின்னோட்டமும் ஒருசேரக் கொண்ட மின்னாற்றலைப் போல் இருமுகங்கொண்ட கருத்தாளராக இவர் இருப்பதை ‘மனுவும் மனிதமும்’ கட்டுரை காட்டுகிறது. மனுதர்மத்தை நியாப்படுத்தி நிலைப்படுத்த முயன்ற கையோடு, அறம் என்பது என்ன? அறத்திற்குப் பல பொருள் சொல்ல முடியும். ஈதல் என்றார் ஔவை. இன்சொல் இனிதே அறம் என்று கூட இலக்கணம் சொல்லலாம். பொய்யாமையை அறமாக வள்ளுவர் சொல்லியிருக்கின்றார்.

                        பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

                   செய்யாமை செய்யாமை நன்று (குறள்.)

என இருமுறை பொய்யாமையும், செய்யாமையும் ஈண்டு கருத்தினை வலியுறுத்தவே உரைக்கப்பட்டிருத்தல் ஆராயலாம். இன்பம் என்பது அறத்தான் வருவதே. பிறவழியில் சென்று அதனைப் பெறுதல் இயலாது. அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்றும் குறிப்பிடுவார் வள்ளுவர். அன்பும் அறனும் இல்வாழ்க்கையில் குணமும் அதன் வெளிப்பாடாகவும் அமைதல் வேண்டும்.  அறன் வலியுறுத்தல் – அறத்துப்பாலில் திருவள்ளுவர் –

மத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்

ஆகுல நீர பிற (குறள்.)

என்கிறார். என ‘எது அறம்’ என்னும் கட்டுரையில் குறளைப் போற்றியும் பாராட்டியும் பேசுவதைப் பார்க்க முடிகிறது. விவாதத்திற்குரிய இக்கட்டுரைத் தொகுப்பில் படிப்பவர் உடன்படுவதற்கும் முரண்படுவதற்கும் நிறையவே இடமுண்டு. ஆங்கில இலக்கியம் பயின்று பட்டம் பெற்ற இவர் பல மொழிகள் அறிந்தவராகவும் இருப்பது இந்நூலிற்கு கனம் சேர்க்கிறது. வலதுசாரி இயல்பு கொண்ட வைதிகச் சிந்தனையாளராய் புலப்படும் இவரிடம் இடதுசாரி மனோபாவம் நிறைந்த மார்க்சீயக் கருத்தோட்டங்களையும் காணமுடிகிறது. பழைய இலக்கியம், புதிய இலக்கியம் இரண்டையும் சரியாகவே தொட்டுப் பேசும் இவர், தான் காலூன்றி நிற்கும் கருத்துத் தளத்தை உறுதியாகவும் தெளிவாகவும் புலப்படுத்துவது போற்றுதற்குரியது.

 

Ø படித்தலும் படைத்தலும் (கட்டுரைத் தொகுப்பு)

படித்தலும் படைத்தலும் என்னும் கட்டுரைத் தொகுப்பாகிய இந்நூலில், படித்தலும் படைத்தலும், வள்ளுவரின் மதம், சொந்த மண்ணில் சுருங்கிய பௌத்தம், வீழ்ந்தோமா நாம், பாரதியின் உரைநடை, வள்ளலாரின் பெண்டிற் குறித்த வித்தியாச நோக்கு, ஜோதிராவ்புலெ, இந்திய சிந்தனைத் தடம், சிந்தனைச் செல்வர் சிங்காரவேலர், இடசாரி இலக்கியப் போக்குகள், கண்கள் செய்துவிட்ட பாவம், இலக்கிய படைப்பாளி கண்டு சொன்ன வந்தே மாதரம், கால்டு வெல்லின் ஒப்பாய்வு, எம்.என்.ராய் யார்?, புரிந்து கொள்வோமா புதுமைப் பித்தனை, பின் நவீனத்துவம் ஒரு பார்வை, உலகத் தரத்திற்கு தமிழில் நவீன இலக்கியம் இல்லையா?, பின் நவீனத்துவ நவீனத்துவம், ராமனுஜரும் சிபெரும்புதூர் கூழும், ஜி.யு.போப்பின் குறள் மொழி ஆக்கம் என்னும் இருபது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.  இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பல கணையாழி இதழில் வெளிவந்து வாசகர்களின் வரவேற்பை பெற்றவையாகும்.  சில கட்டுரைகள் மஞ்சரி இதழில் வெளிவந்துள்ளன.  இம்மண்ணின் மனித நேயத்திலும், மார்க்சீயத்தின்பால் பிடிப்பும் கொண்ட ஆசிரியரின் சிந்தனையில் பாதித்த விடயங்களே கட்டுரைகளாக உருப்பெற்றுள்ளன.

            தனது முதல் கட்டுரையில் மனிதனுக்குப் பகுத்தறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஏனோ புரிதலில் இன்று கீழ்நிலையே மனிதனுக்கு வாய்க்கப் பெற்றிருக்கிறது என்பதை, “அன்று ஆரியர்கள் தொடங்கி, துருக்கியர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், பார்சிகள் என்ற வரிசையோடு கொலம்பசும் இந்தியா கண்டுவிடவே தன் பணி துவங்கினான். மகாகவி மில்டன் தன் இழந்த சொர்க்கம் என்னும் காவியத்தில் Indi – gold என்று குறிப்பிடுவான். சீன யாத்திரிகனும் அலெக்சாண்டரும் இன்னும் பலரும் இந்தியா காணவே விழைந்தனர். அன்னிபெசண்டும், நிவேதிதாவும், தெரசாவும் இந்திய மண்ணை நேசித்து தம் வாழ்வு முடித்து வரலாற்றில் இடம் பெற்றனர். காவி முண்டாசுக்காரன் விவேகானந்தன்  சிகாகோவில் இந்தியப் பெருமை பேசி நம் தத்துவங்களுக்கு ஒரு சிறப்பிடம் ஏற்பருத்தினான்.

ஆனால் இன்றோ, தத்தகுத்தி வென்றுப் படித்து வெளியேறுபவர்கள் அமெரிக்காவை தன் வாழ்நிலமாய் மாற்றிக் கொண்டு கூடுதலாய் மகிழ்ந்து போகிறார்கள். அடுக்குமாடிகள் பொடிபட்டாலும் சிறப்பாய் படித்து முடித்தல் என்பது அமெரிக்க மண்ணில் உலா வருவதற்காகத்தான் என்ற பிரமை பிடித்து ஆட்டுகிறது நம் மக்களை. அமெரிக்க கிளிண்டன் ஆந்திர மாநிலத்திற்கு வருகை தந்தபோது அவருடன் கை குலுக்கிவிட நம் ஆகப்பெரும் தலைவர்கள் முண்டியடித்துக் கொண்ட சோக வரலாற்றுக்கு சொந்தமாகிப் போனோம் ஏனோ?” எனத் தமிழர்களின் இழிநிலையைச் சாடுகின்றார்.

‘வீழ்ந்தோமா நாம்?’ என்னும் கட்டுரையில் ஆசிரியர், தமிழர்கள் சாதியத்தால்தான் வீழ்ந்தனர் என்கிறார். திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பது முற்றும் சரி என்று சொல்லி விடமுடியாது என்கிறார். புத்தரை, மகாவீரரை, ஏசுவை, இராமலிங்கரை, இன்னும் இப்படிப்பட்டோர் வழிய் வந்தவர்களையோ, ஏன் பொதுவுடைமை வாதிகளையோ, அம்பேட்கர் கருத்துக்களை எடுத்து கொண்டிருக்கிறது. இந்த மண்ணின் அவமானச் சின்னமான சாதியம். சொல்லப் போனால் அது இப்போது தான் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத உத்வேகம் பெற்றுள்ளது.

அவசர அவசரமாய், குல தர்மப் பணியை அனுசரிக்கலாம் என்று யோசனை வைத்த ராஜாஜி குப்புறத் தள்ளப்பட்டது இம் மண்ணில்தான். என்னதான் அது நடைமுறைக்கு, அப்போதிருந்த பொருளாதார பலத்திற்கு வேறு வழியில்லாது ஏற்றது என்று சொத்தை வாதம் செய்தாலும் தவறு என்பதை திட்டவட்டமாய் முழங்கிய இந்த சமுதாயத்தில் இன்று சாதியின் பேரால் கட்சிகள், அரசியல் கட்சிகள் முளைத்து வேர் விட்டிருக்கின்றன. மெத்தப்படித்தவர்கள், மேல்பதவி வகித்தவர்கள், அறிவியலாளர்கள், சாதியின் விஷக் கொடுக்குக்கு இரையாகி ராஜ நடை நடக்கிறார்கள் என்பது வேதனையான விஷயமே என்கிறார்.

 

Ø சிந்தனை விழுதுகள் (கட்டுரைத் தொகுப்பு)

 நல்லவை நாட அல்லவை தேயும். நல்லதே பெரிதாகும். அதற்குத் துணையாக நிற்றலே அதற்குத் தக நிற்றல் என்பது. சிந்தனையில் பூத்த பூக்கள் இங்கே இந்நூலில் விழுதுகளய் விரவிக் கிடக்கின்றன. மனிதனின் உன்னதத்தை அலாவிய பெருமக்களின் சிந்தனை விஷயங்கள் நமக்கு என்றும் வலு கூட்டுவன. ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்பார்களே; அப்படி ஒவ்வொரு மலரும் ஓர் அழகு. ஒரு தனித்த மணம். புகழோடு தோன்றிய பெருமக்களின் உலகப் புரிதல்கள் இக்கட்டுரை நூலில் இடம் பெற்றுச் சிறப்புச் சேர்க்கின்றன.

அவர்தம் ஆய்ந்த மொழி, இலக்கியம், ஆன்மீகம், சமூகம், தேசம் இவை சார்ந்த பல்துறைச் செய்திகளையும் செறிந்த கருத்தோட்டத்துடன் தொடுத்து மணமிக்க சிந்தனை மலர்ச் சரங்களாகவும், என்றென்றும் ஒளிவீசும் கருத்துப் பெட்டகங்களாகவும் இருபத்தோர் அரிய கட்டுரைகளின் சீரிய தொகுப்பாக இந்நூல் விளங்குகிறது.

‘நூலோர்’ எனும் வகையின் கீழ் வள்ளுவர், வள்ளலார், மகாகவி பாரதியார், பாரதிதாசன், புதுமைப்பித்தன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தேசியத் தலைவர்களின் வரிசையில் அமரர்கள் திரு. ஜோதிராவ் புலே, திரு. சிங்கார வேலர் மற்றும் தீரர் சத்தியமூர்த்தி ஆகியோர் குறித்த கட்டுரைகள் இதனுள் அணி செய்கின்றன.

இலக்கிய ஆய்வுகளாக – கவி பாரதியின் உரைநடையும், கவிதையும் குறித்தும், உலக அரங்கில் தமிழிலக்கியத்தின் இடம் பற்றியும் கட்டுரைகள் இதனுள் இடம் பெற்றுள்ளன.

பிற மொழிச் சான்றோர்களாக ஜி.யு.போப் மற்றும் கால்டுவெல் இவர்கள்தம் தமிழ்ப் பணிகள் குறித்தும் இரு சீரிய கட்டுரைகள் இத்தொகுப்பை அலங்கரிக்கின்றன.

எண்ணம் எவ்வழி, வாழ்வு அவ்வழி என்னும் உண்மையினால் வாழ்வாங்கு வாழ்ந்த சான்றோர்களின் சிந்தனைகளோடும் அவர்தம் உயர்ந்த எண்ணங்களோடும் நம்மை ஈடுபடுத்திக் கொண்டால், நாமும் நம் வாழ்வும் உயர்வது திண்ணமாகும். இவ்விதம் நம் வாழ்வின் எழுச்சிக்கும் மலர்ச்சிக்கும் வழிகோலும் வகையில் மாந்தர்கோர் கலங்கரை விளக்கமாக இக் கட்டுரை நூல் திகழ்கின்றது.

Ø பாரதம் போற்றும் பழந்தமிழ்க் கவிஞர்கள் (கட்டுரை நூல்)

தனி வாழ்விலும், பொது வாழ்விலும் நாம் அன்றாடம் நேர்கொள்ளும் துன்பியல் நிகழ்வாயினும் சரி அல்லது இன்பியல் நிகழ்வாயினும் சரி, நம் மனதில் சட்டென அந்த அனுபத்தின் வெளிப்பாடாக ஓர் எண்ணக் கீற்று சட்டென மின்னல் வெட்டும். அந்த எண்ணத்தின் வார்த்தை வடிவம் நமக்குக் கை கூடுவதற்குள், அது குறித்த ஒரு கவிதை வரியோ, பாடல் வரியோ நம் உள் மனதுக்குள் இசையோடு எழுந்துவிடும். அவை பெரும்பாலும் பாரதியின் வரியாக இருக்கும் அல்லது கண்ணதாசனின் வார்த்தைகளாக இருக்கும்.

காலங்களைக் கடந்து மனித வாழ்வின் அகம், புறம் சார்ந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் அடையாளமாய் பொருந்திப் போகும் பாரதி, பாரதிதாசன், நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை, கண்ணதாசன் ஆகியோரது கவிதை வைரங்களை தேர்ந்தெடுத்து, எளிய முறையில் தெளிவாக தனித்துவமாக உரைப்பட்டை தீட்டி இருக்கிறார் ஆசிரியர். அதுவே பாரதம் போற்றும் பைந்தமிழ்க் கவிஞர்கள்.

தமிழ்க் கவிதைக் கடலில் இந்த நால்வரின் கலன்களும் தனித்துவமானவை. எளிமையானவை. காலங்களைக் கடந்தும் கடலுக்கும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் கம்பீரம் நிறைந்தவை. ஒவ்வொரு கவிஞனின் வாழ்வும் ஒரு வரலாறுதான் கவிதைகளைப் பற்றிப் பேசும்போதே அவர்களுடைய வாழ்க்கை நிகழ்வுகளைப் பற்றியும் ஆங்காங்கே சுவையான தகவல்களைத் தெளித்திருப்பது இந்நூலுக்கு மேலும் மெருகூட்டுகிறது.

பாரதி, பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கண்ணதாசன் ஆகிய நான்கு மகாகவிகளைப் பற்றியும் அவர்களுடைய எழுத்துக்களின் வலிமை பற்றியும் இவரின் பார்வை புதிதாக இருக்கிறது. நால்வரிடையே உள்ள் ஆற்றல் அளவுகளை கவிநயத்தை அவர் ஒப்பீடு செய்யவில்லை எனினும் நூலை வாசித்து முடிக்கும் போது நமக்குள் ஓர் ஒப்பீடு உருவாவது நூல் வாசிப்பில் ஒரு புது அனுபவம் என பாராட்டியுள்ளனர்.

மொழிபெயர்ப்பு நூல்கள்

Ø காலம் மாறும் (மகேந்திர பட்னாகர்)

முனைவர் மகேந்திர பட்னாகரின் ஐந்து கவிதைத் தொகுதிகளிலிருந்து, காலம் மாறும், உறுமல் ஒலி, எழுதுகோலுக்கு, நம்பிக்கை, ஆசியா, எதிர்ப்பு, கடமை, அனுபவம் நிரூபணம், இனியேது, பாட்டாளிகள், விலங்கிடப்படாத குரல், வாழ்தல், ஒருநாள், அர்த்தப்படுத்துதல், பொருத்தம், நிருபனம், ஒரு ஆசை, கடமை, அறிவிப்பு, வாழ்க்கை இன்று, நடுநிலை, விடியல், அறிவோம் நாம், எத்துனை மனிதர்கள், முளை, மனிதனும் கனவும், கொசுவின் இசை, உடைக்காதே, வற்புறுத்தல், இரங்கல், சுய அனுபவம், மகிழ்ச்சி, உச்சம், கட்டிடம், விருப்பம், முன்னர் நிகழவில்லை, காத்திருப்பு, பிறந்தநாள், உண்மை, ஒருபுதிர், சிந்தனை, இடர் அறுப்போம், முறி, தைரியம், வாழ்க்கை, ஒப்புமை, மரணதேவதை, இறப்பின் தத்துவம், போதுமென்பது, நற்பார்வை, உள்ளுணர்வின் புரிதல், நீ யார், நிலவின் நித்திரை அழகு, மனிதன், பார்வை, இளமை, எதுமறைபொருள், சபிக்கப்படபெண், நான் ஏற்கிறேன், யார், வாழும் நேர்மையின் அன்பளிப்பு, பெண்ணின் மீள்பார்வை, பாடு, ஒரு தடவை மட்டும், விதியை எதிர்கொள், வனப்பு, அங்கீகாரம், தோற்றேன், தொடுதல், கூட்டம், காற்று, நிலவொளி, நிலவுக்கு, அருளப்பட்டவள் மனிதன், விதியின் நகைப்பு, சமர்பணம், ஏற்றுக்கொள், குறையொன்றுமில்லை என்னும் தலைப்புகளில் எழுபத்தெட்டு கவிதைகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. பட்னாகரின் கவிதை நூல்கள் இந்தியில் வெளியாகி அவை ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டுள்ளன. அவைகளில் சிறந்த ஆசிரியருக்குப் பிடித்த கவிதைகளைத் தேர்ந்து தமிழில் தந்துள்ளார். இதில் சில பட்டுக்கோட்டை மு. இராமலிங்கம் அவர்களால் வெளியிடப்பெறும் இலக்கியச் சிறகில் வந்துள்ளன. இந்திய கலாசார தத்துவ வடிவங்களை தன்னுள்ளே செரித்து புதிய பாரத்துக்கு வலிமை கொண்ட தாயகத்திற்கு இளைஞர்களை அழைப்பதாய் பட்னாகரின் கவிதைகள் அமைந்துள்ளன என்பதற்குச் சான்றாக,

                  எஃகாய் உறுதி எப்படிச் சிதறம்

                   உழைக்கும் மக்களின் கொதிக்கும் ரத்தம்

                   கொணர்ந்து தானே அது.

                   அவர்களின் எலும்புகள்

                   கரும்கல்லாய் இரும்பாய்.

                   திண்ணிய எண்ணத்தால்

                   எத்தனை மௌனத்தியாகிகள்

                   அஸ்திபாரமாய் மாறிப் போயினர்.

                   புதிய வாழ்க்கைக்கு ஓர் உறுதி

                   வெற்றுப்பார்வைக்கு மட்டுமா அது

                   அது இலக்கு அல்லாதது வா

                   எண்ணிக்கை கூடிய தகர்ப்புக்கள்

                   அழிக்க முடியாத அதன் உறுதியை.

                   ஆண்டுக்கணக்கில் போர்

                   மக்களின் விழ்ப்புச்சக்தி கொணர்

                   இருளின் சமாதி இறுதியானதுவே.

                   உலகில் பளிச்சென்று உண்மை பிரகாசிக்க

                   இரும்புத் திரையாய் மக்கள் சக்தியே.

                   கோட்டைச் சுற்றி ஒடுக்கப்பட்டோர்

                   ஒன்றுமே இல்லாதோர்

காக்கப்படத் தானே சுவர்கள் எழுத்தன

ஏகாதிபத்திய நிணத்தின் மீதேறி நின்று

வர்க்க பேதத்தைக் கேள்விக்குள்ளாக்கிய

அந்தச் சுவரா நொறுங்கிச் சிதறுவது

மண்ணுக்குள் உயிர்ப்பாகி எழும் ஒருநாள்

புதிய ஐக்கியமாய் எதிர்ப்பு அலைகள் மோதலால்

வீழும் விட்டில்கள் அவை காலக்குப்பையில்.

என்னும் கவிதையைக் கூறலாம்.

Ø ஆன்ம தரிசனம் (ராஜாஜி)

ஆன்ம தரிசனம் என்னும் இந்நூல் இந்திய தத்துவப் புரிதலின் அடிப்படை, ஞானம் செறிந்த மேதை ராஜாஜியின் Hindusim Doctrine and Way of Life என்னும் பாரதீய வித்யாபவன், மும்பை, வெளியிட்ட ஆங்கில நூலின் தமிழாக்கம்.

இந்திய மண்ணின் பண்பாடு அனைத்துலகப் பண்பாட்டின் ஆதி என உரைக்கலாம். மதப்பிணக்குகள் இந்தியத் தத்துவச் செல்வங்களை மெய்யாய் கற்றுணர்ந்தவர்களால் ஒத்துக்கொள்ள முடியாத ஒன்று நமது உபநிடதச் செல்வங்கள் வழிந்து கொடுக்கும் ஞானமோ சிந்தை தெளிய வைக்கும் அரு மருந்து. உலகின் அனைத்து மத நல்லறங்கள் அதற்குள்ளாய் ஒளிந்து கொண்டிருக்கின்றன.

 

வேதஞானம் என்பது சமூகக் கடமைகளுக்கான ஒரு மனநிலையை உருவாக்கும். இது துவக்கக் கட்டுரையிலேயே சொல்லப்பட்டிருந்தாலும், இந்த நூலைப் படிப்பவர்கள் இந்து தத்துவ ஞானத்த்தியும் வாழ்முறையையும் இன்னதுதான் என அறிதலும் நிறைவானதே. ஆர்வம் மிகுந்த அந்நிய நாட்டவர்களுக்குக் கூட இந்துமதம் இன்னும் ஆய்படு பொருளாகவே இருந்து வருகிறது. சிலர் இங்கு நிலவும் சமூக அமைப்பினால் மனம் வெறுப்புண்டு. இந்துமத தத்துவத்தையே அர்த்தமற்றது எனக் கண்டனம் தெரிவிக்கிறார்கள். வேறுசிலர் இதனில் அரியபெரிய விஷயங்களைத் தரிசித்தவர்கள், எனினும் தாம் போற்றியவற்றைப் பிறர்க்கு குழப்பியோ, புரியாப் புதிரில் ஆழ்த்தியோ, ஒரு முடிவில்லாத நிலையையே வாசகருக்குச் சொந்தமாக்கினார்கள். இது எதிர்பார்க்கக் கூடிய ஒன்றே, மொழி பற்றியும் அதனுள் பிரயோகம் பற்றியும் உள்ள சிக்கல்கள் ஆழ்ந்த மொழி அறிவினாலேயே வெற்றிகொள்ள முடிந்தவை. ஆனால் தத்துவத்தில் படிப்படியாக நிகழ்ந்த தொகுப்பு முறையும், சமூகப் பரிணாமமும் சற்று சிக்கலானவை. பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக நிலை பொருளுக்கும், அற்ப விஷயங்களுக்கும் ஆன நித சிக்கல் விதவிதமான வரலாற்று நிகழ்மாற்றங்களைப் பிரதிபலிப்பதால் அந்நிய நாட்டாருக்கு இவைகளைப் புரிந்து கொள்வதும், விளக்கி வைப்பதும் இலகுவாக இல்லை. இந்துமத நம்பிக்கைகள், தருமங்கள் இவைகளை சுருக்கமாக நிறைவாக ப் புரிந்துகொள்ள இந்த புத்தகம் தக அமையும் என்று நம்பிக்கையோடு இந்தியா அவைபற்றி என்ன சொல்கிறது என்பதறியவும் இந்நூல் உதவும்.

            உலக அரங்கில் இந்தியாவிற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. இந்தியக் கலாச்சாரம் பற்றிய கூறுகளின் விஷயங்கள் இந்த நாட்டை அறிந்து கொள்வதிலும் நன்கு உதவும். இந்திய அரசாங்கத்தின் மதச் சார்பின்மை என்பது எந்த ஒரு மதத்தையும் ஆதரிக்காமல் அனைத்துக் கருத்தோட்டங்களுக்கும் சமநிலையாக இருதலில் பின்பற்றப்பட  வேண்டிய உறுதியே ஆகும். ஆனால் இப்படிச் சொல்வதன் மூலம் இந்திய மக்கள் தங்கள் கலாச்சார ஆதாரத்தையும், அதன் குணபரிமாண ஆக்கங்களையும் புனித அறநெறிகள் இந்திய வாழ்க்கைமுறையாகவே ஆகி இருப்பதை இந்நூல் பரிசீலனை செய்கிறது.

ஆங்கில கவிதைத் தொகுதி

Ø Rain Bow (Poems)

ஆங்கில உரைநடை நூல்

Ø Bacon and Thiruvalluvar (Comparaty study)

தொகுப்புப் பொறுப்பு

Ø கவிதை மாலை -1

Ø கவிதை மாலை -2

தொகுப்புரை

            அதனால் மார்க்சிய விஷயங்கள் அவருக்கு அறிமுகமாயின. இதனால் சமூக அக்கறையும் கூடுதலாகியது என்கிறார்.

கடின உழைப்பு, காட்சிக்கு எளிமை, கடுஞ்சொல் இன்மை, கனிவு, பணிவு, துணிவு, கடமையுணர்வு, செயலாற்றல், தெளிவு, எண்ணியது முடித்தல், உலகத்துடன் ஒத்துப்போதல், பழமைப் பாராட்டல் போன்ற ஒப்பற்ற பண்புகளை ஒருங்கேப் பெற்ற ஆசிரியர் எஸ்ஸார்சி. ‘நல்ல வழிகளே நல்ல முடிவுகளுக்கு ஆதாரம் என்பதில் மட்டும் விடாப்பிடியாக இருந்துள்ளதை அறியமுடிகிறது.  கம்யூனிசத்தில் பற்று கொண்டவரும் இடதுசாரி சிந்தணை கொண்டவருமான இருக்கு சமூக அக்கறை மேலோங்கி இருப்பதை இவரது படைப்புகளில் காணமுடிகிறது. இவரது படைப்புகள் யாவும் பெரும்பான்மையாய் மனிதர்களின் மறுபக்கத்தை வெளிக்கொணரும் முயற்சியாகவே உள்ளளதை அறியமுடிகிறது.  ‘வெளியுலகு புரிந்து கொள்ள மறுக்கின்ற, அல்லது உதாசீனப்படுத்துகின்ற ஒரு சாதாரண மனிதனின் குமுறுகின்ற உள்ளத்தைத் திறந்து பார்க்க முற்படுகின்றார்’ இவர் என அறிஞர்கள் இவரைப் பாராடியுள்ளனர்.  இவர் பல்வேறு சமூக இயக்கங்களில் பணியாற்றியுள்ளாதால் சாதி மதம் கடந்த மனித நேயத்தை இவரிடம் காணமுடிகிறது. இதனைக் கருத்தில் கொண்ட அறிஞர் ஒருவர் இவரை அக்ஹாரகத்தில் ஒரு அதிசயப் பிறவி என்று இவரைப் பாராட்டியுள்ளார். தொழிற்சங்க இயக்கத்தின் அனுபவங்களும் இவரது சிந்தனைப் புலத்திற்கு ஆதாரமாகின்றன என்பதும் அறியமுடிகிறது. சில இடங்களில் தன் சமூகத்திற்கு எதிராகவும் போராடவேண்டும் என்ற மனோ நிலையை படைப்பாளியின்  சிந்தனை யோட்டத்தில்  உள்ளது என்பதும் ஆழ்ந்த பழக்கம் வாசகர்கள் உணர்ந்து கொள்வார்கள் இப்படி இத்தகைய ம பிசத்தினைப் படைப்பாளிளை தமிழ் இலக்கிய உலகம் புறந்தள்ளுகிறது என உண்மையாலும் இருக்க முடியவில்லை. இத்தகையப் படைப்பாளிகளைத் தமிழுலம் அரவணைப்பதுதான் இலக்கிய உலகிற்குப் பெருமை சேர்ப்பதாக அமையும்.

இவரது எழுத்துப்பணி சிறக்கவும் நலமுடன் வாழவும் இறைவனை வேண்டுகின்றேன்.

பெற்ற விருதுகள் / சிறப்புக்கள்

1.   எட்டையபுரம் பாரதி விழாப் பரிசு (நாவல் - கனவு மெய்ப்படும்)

2.   திருப்பூர் தமிழ்ச்சங்க விருது (நாவல் - கனவு மெய்ப்படும்)

3.   மாநில வங்கிப் பரிசு (நாவல் - கனவு மெய்ப்படும்)

4.   சேலம் தாரையார் விருது (நாவல் – நெருப்புக்கு ஏது உறக்கம்)

5.   தமிழக அரசின் விருது (நாவல் – நெருப்புக்கு ஏது உறக்கம்)

6.   கம்பம் பாரதி சங்க விருது (பாரதம் போற்றும் பைந்தமிழ்ப் புலவர்கள்)

7.   தமிழக அரசின் மொழிபெயர்ப்பு உதவித்தொகை (ஆன்ம தரிசனம்)

8.   மைசூர் மைய பன்மொழி  நிறுவனம் நூலக ஏற்பு (சிந்தனை விழுதுகள்)

9.   நெய்வேலி பழுப்பு நிலக்கரி (NLC) சிறந்த எழுத்தாளர் பாராட்டு

10.      புதுவை வானொலியில் கவிதை, கதைகள் படிக்க தேர்வு செய்யப்பட்டது.

சிறப்புக்கள்

1.     ‘வெயிலொழுகும் குடிசைகள்’ கவிதை தொகுப்பு தொகுப்பாசிரியர், மு. இராமலிங்கம், பட்டுக்கோட்டை, ‘கணக்கொன்று போடலாம்’ – தினமணி கலாரசிகனால் பாராட்டப்பெற்றது. (கவிதை 2008)

2.    துங்கபத்திரை கட்டுரைகள் பாவண்ணனின் – சமர்ப்பணம் 2008

3.    Babu -  கவிதை வங்களாத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ‘சாகித்ய உத்ஸவ்’ ல் வெளிவந்தது (7/2000)

4.    ‘வழிப்போக்கன்’ கவிதை தொகுப்பு கவிஞர் ஆ. வின்சென்ட்ராஜ் ன் நன்றி கூறல்.

5.    கணையாழி களஞ்சியம் – இ.பா. ‘ஒரே ஜாதி’ கதை சேர்க்கப்பட்டது.

6.    அக்கிரஹாரத்தில் இன்னொரு அதிசயப்பிறவி – வே. சபாநாயகம் கட்டுரை – யுகமாயினி (3/2010)

7.    ‘கவிதை மாலை’ தொகுப்பு (ஞானக்கூத்தன் தலைமை) கவியரங்கம் தொகுப்பாசிரியர் குழு பெருமன்றம் கடலூர்.

8.    ‘கவிதை மாலை’ – தொகுப்பாசிரியர் (இரா. காமராசு) பெருமன்றம் கடலூர் (2008).

9.    வேதவனம் – வெளியீடு  திருப்பூர் கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார் நரசய்யா (2011)

10. ‘பைந்தமிழ்க் கவிஞர்கள்’ – வெளியீடு மு. மேத்தா பெற்றுக் கொண்டவர் ராஜ்ஜா

11. ‘அது’ கவிதைகள் – யுகமாயினி 1/2008.

12. பொன்னீலனின் ‘ஜீவநதி’ கட்டுரையில் குறிப்பு கடலூர் பெருமன்றம்.

13. ‘தொண்டு’ ஆசிரியர்க்குழு 8/1972

14. கீதா அருள்செல்வி – எம்.பிஃல் ஆய்வு ‘கனவு மெய்ப்படும்’

15. ‘யாதுமாகி’ (திசை எட்டும் பரவ வேண்டிய சிறுகதை) 6/08

16. சிந்தனை விழுதுகள் – மைசூர் மத்திய பன்மொழி நிறுவனம் நூலகத் தேர்வு.

17. வளவ. துரையன் – நேரு பிறந்த கதைக்கு முன்னுரை

18. அண்ணாமலை பல்கலைக்கழகம் – மலர் பாரதிதாசன் பனுவலில் சில 1972.

19. சிரில் அறக்கட்டளை – குறிப்பு கடலூர் மாவட்ட NETE ஆண்டறிக்கை 2006.

20. தோழர் ரகுநாதன் பணி ஓய்வு மலர் தொகுப்பாசிரியர் 6/2002.

21. விருத்தாசலம் இணைச் செயலாளர் (NETE) 1991.

22. தனுஷ்கோடி ராமசாமி இலக்கியத்தடம் இரா. காமராசு (தொகு.ஆ) – கட்டுரை இடம் பெற்றது.

23. குறிஞ்சிவேலனின் மணிவிழா மலர் கட்டுரை (2002)

24. ராஜாஜியின் ‘Hindusim Doctrine and way of life’ ஆன்ம தரிசனம் மொழிபெயர்ப்பு (தமிழக அரசின் பரிசு பெற்றது)

25. ‘யாதுமாகி’ – காஞ்சி சந்திர சேகரேந்திர சரஸ்வதி பல்கலைக்கழக பட்டபகுப்பு துணைப் பாடத் தேர்வு.

26. மகேந்திர பட்னாகரின் ஆங்கிலக் கவிதைகளை ‘காலம் மாறும்’ என வெளியிட்டது.

27. Writers International -  கவிதை ஆங்கிலம் 2007

28. Writers International -  கவிதை ஆங்கிலம் 2010

29. Writers International -  கவிதை ஆங்கிலம் 2011

30. Writers International -  கவிதை ஆங்கிலம் 2012

31. Writers International -  கவிதை ஆங்கிலம் 2013

32. Sileat stream – V. Vijayaragahavan Life –என்னும் கவிதை இடம் பெற்றது. 12/2000.

33. Indo Asian Liteature  ல் கவிதை வெளிவந்துள்ளது. 10/08

34. ‘The Bran Wand’ aunlygape கவிதை

35.  Review பல  

36. Shine இலக்கியச் சிறகு, திசை எட்டும் ஆசிரியர்க் குழு பணி

37. Rain bow  கவிதை தொகுப்பு

38. Bacon in thiruvalluvar  உரைநடை

39. தொழிற்சங்க இதழ் தொலை பேசித் தோழனில் பல தலையங்களில் எழுதியது.

நேர்காணல் வினா நிரல்

கேள்வி:        தாங்கள் இயற்பெயர் என்ன? புனை பெயர் ஏதேனும் உண்டா? கூறுங்கள் ஐயா!

பதில்:            இயற்பெயர்: சு.இராமசந்திரன்

புனைபெயர்: எஸ்ஸார்சி (SRC)

கேள்வி:         தாங்கள் பிறந்த தேதி, ஊர், மாவட்டம் மற்றும் குடும்பத்தினர் விபரம் பற்றிக் கூறுங்கள்?

பதில்: பிறந்தேதி      : 04.03.1954

ஊர்                 : தருமநல்லூர்

மாவட்டம்      : கடலூர்

தந்தை:           சுந்தரேசன்

தாய்:               மீனாட்சி (இருவரும் 2000, 2002ல் மறைந்து போயினர்)

மனைவி பானுமதி, அஜாய் சுந்தர், லட்சுமண பாரதி என இரண்டு குமாரர்கள் (இருவரும் பொறியியல் படித்து பணியிலுள்ளனர்) மூன்று தமக்கைகள், ஒரு தங்கை (தங்கை 2002ல் காலமானார்), இரண்டு அண்ணன்கள்.

கேள்வி:         தங்களின் கல்வித் தகுதி மற்றும் பணி விபரம் பற்றிக் கூறுங்கள்?

பதில்:          இளநிலை அறிவியல் (வேதியல்), முதுகலை (ஆங்கிலம்), எம்.ஃபில் (ஆங்கிலம்), இதழியல் (பட்டயம்), தொழிலாளர் நலம் (பட்டயம்) பட்டம் படித்து முடித்தவுடன் – சேஷசாயி இண்டஸ்ட்ரிஸ் வடலூர்  - நிறுவனத்தில் சூப்பர் வைசர் பணி ஆறு மாதம் (1974); 1975- ஜூலை 15 முதல் விருத்தாசலம் நகரில் தொலைத்தகவல் இலாகாவில், ஆப்ரேடர் பணி; 1996 – 2009  ஆண்டுகளில் கடலூரில் இளநிலை கணக்கு அதிகாரி பணி; 2010 – 2014 சென்னை தொலைபேசி முதுநிலை தொலைபேசி மேற்பார்வையாளர் பணி; 31.03.2014 ல் பணி ஓய்வு.

கேள்வி:         உங்களுக்கு தமிழிலக்கிய ஈடுபாடு எப்படி ஏற்பட்டது?

பதில்:          கவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை, மொழிபெயர்ப்பு என இத்தளங்கள் அனைத்தும் எனக்கு பிடித்தவை. பாரதிதான் என்னை இயங்க வைத்த மாமனிதர். ‘தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி’ என்று தொடங்கும் கவிதை என்னைச் சிந்திக்கவைத்த கவிதை. நான் முதன் முதலில் எழுதிய ’பாரதிதாசன் பனுவலில் சில’ என்னும் கட்டுரை அண்ணாமலைப் பல்கலைக்கழக மலரில் (1972) வெளியானது. பணிக்கு வந்தபின் மார்க்சீயம் அறிந்தேன்.  ஜீவா எனக்கு மிகவும் பிடித்த இலக்கியவாதி. ஆன்மீகத் தத்துவ விஷயங்கள் என் குடும்பம் தொடங்கி பிறகு பல தரவுகளில் அறியலானேன்.

கேள்வி:         உங்களது இளமை பருவம் குறித்து கூறுங்களேன்?

பதில்:          மூன்றாம் வகுப்பு என நினைக்கிறேன். பாரதி பற்றிப் பேசி பள்ளியில் பாராட்டப்பட்டேன். மிகச் சிறிய பள்ளிதான். எட்டாம் வகுப்புவரை படித்த பள்ளியில் தமிழாசான் புலவர் இராசாங்கம் எனக்குத் தமிழ் மீது பிடிப்பு ஏற்படுத்தினார். உயர் நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற செயலாளனாய் பணி ஆற்றிய அனுபவம் பலன் தந்தது. குன்றக்குடி அடிகளாரும், உளுந்தூர்பேட்டை சண்முகமும் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசினர். பிறகு அண்ணாமலைப் பல்கலைக்கழக படிப்பு, ராமசாமி அய்யர் பெரிய நூலகம் தமிழ் படிக்க உதவியது. காந்தி மன்றம் சிதம்பரம் எனக்கு காந்திய நெறியகளை மனதில் பதிய வைத்தது. பணிக்கு வந்த பின் மார்க்சீயம் பயின்றேன்.

கேள்வி:         உங்களை பாதித்த மனிதர், நிகழ்வு குறித்து அறிந்துக்கொள்ளலாமா?

பதில்:          நெய்வேலி தொலைபேசி நிலையத்தில் கணேசன் என்கிற டெலிபோன் இன்ஸ்பெக்டர் இருந்தார். அவர் தொழிற்சங்கவாதி, இலக்கியவாதி, மனிதநேயம் மிக்கவர். தொழிற்சங்கக் கூட்டங்களில் கதைகள் சொல்லுவார். அவர்தான் என்னைக் கணையாழி இதழ் வாங்கிப் படிக்கச் சொன்னவர். நிறைவான மனிதர். நல்ல இலக்கிய பரிச்சியமுள்ள அவர் இப்போது இல்லை. அவரை நான் எப்போதும் நினைவில் கொள்கிறேன். என் முதல் சிறுகதை தொகுப்பு ‘மறுபக்கம்’ அதனில் என்னுரையில் குறிப்பிட்டுள்ளேன் இவ்விஷயம்.

1972 வாக்கில் சிதம்பரத்திற்கு காஞ்சிப் பெரியவர் வருகை புரிந்தார். தில்லை நடராஜருக்கு வைர அங்கியை தூக்கிய திருவடியில் சாத்துவதற்கு அவரைத் தரிசிக்க பார்ப்பனர்கள் குடும்பம் குடும்பமாக சென்றனர். நான் குடியிருந்த வீட்டில் ஒரு விதவை தலைமுடி வைத்திருந்தாள் அவள் போகவில்லை கேட்டதற்கு முடிவைத்துக்கொண்ட விதவை ஆச்சாரிய சுவாமியைப் பார்த்தால் தோஷப்பட்டுவிடும் என்றார். கனவனை இழந்த பெண்களை எவ்வளவு கேவலமாக நடத்துகிறது இந்த மதம்? என மனம் நொந்துப் போனேன். என் எதிர்வு நாவலில் இது பேசப்படுகிறது.

கேள்வி:         தங்களது படைப்புகளின் பின்புலம், அதில்வரும் கதாபாத்திரம் ஆகியவற்றைப் பற்றி…

பதில்:          எனது படைப்புகளின் புன்புலம் கிராமம், தொழிற்சாலை, பயணிக்கும் ரயில், பேருந்து, பங்கேற்கும் தொழிற்சங்கம், இலக்கிய அரங்கம்,  எனது குடும்பம், எனது நண்பர்கள் எனச் சொல்லலாம். எதிர்படும் சாதியச் சிக்கல்கள். எனது புதினங்களில் மண்ணுக்குள் உயிர்ப்பு காசிநாதன் – என்னும் உண்மையான தொழிற்சங்கத் தலைவன் – வாஞ்சியாக இங்கு காட்டப்படுகிறான். இந்த நாவலில் நான் தொழிற் சங்க அரங்கில் பணியாற்றியது எனக்கு உதவியது. கனவு மெய்ப்படும் புதினத்தில் வரும் நாகலிங்கமும் சிங்காரமும் தருமங்குடியில் வாழ்ந்து மறைந்த சிகை அலங்கரிக்கும் தொழிலாளியும் துணி வெளுக்கும் தொழிலாளியும் ஆவர். அவர்களை நேசித்தவன் நான். தொடர்ந்து என் படைப்புகளில் வரும் தருமங்குடி என் கிராமம் அதுவே தருமநல்லூர் ஆகும்.

நான் வடலூர் பிங்கான் இன்சுலேட்டர் ஆலையில் பணி புரிந்தேன் அது மண்ணுக்குள் உயிர்ப்பு எழுத உதவியது. விருத்தாசலம் அரசு பீங்கான் ஆலை மூடப்பட்டது மைய விஷமானது இந்த புதினத்தில் நெருப்புக்கு ஏது உறக்கம் சாதி என்னும் விஷயம் எப்படி கிராமங்களை இன்றும் விலங்கிட்டு வைத்துள்ளது. அரசியல்வாதிகள் எப்படி அதனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். சுரண்டல்காரர்கள் எப்படி எல்லா தீய செயல்களுக்கும் உடந்தையாக நிற்கிறார்கள் என்று பேசப்படுகிறது. இப்புதினம்.

எதிர்வு நாவலில் பெண்கள் கைம்பெண்கள் படும் அவதி அவமானம் குறித்துப் பேசப்படுகிறது. என் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த என் அம்மாவின் அத்தை மொட்டை பாப்பாத்தியாய் வெள்ளைப் புடவைக் கட்டிக் கொண்டும் 11 வயதில் விதவையானது – என் மனதில் கனன்று கொண்டிருந்த விஷயம் உருப் பெற்றது இந்த நாவலில்.

சிறுகதைகளில் வரும் மாந்தர்கள் எவரும் நான் அனேகமாக சந்திந்தவர்களே. இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கும் அவர்களுமுண்டு. அவர்களுக்கு நான் கடமை பட்டவன் இதில் மறைந்து போனவர்களும் உண்டு. என் இயங்கு சக்தி எளிய மனிதர்களின் மாறாத அன்பு என்பதனை குறிப்பிட வேண்டும்.

கேள்வி:         தங்களின் படைப்பிற்கான கரு – அனுபவமா? கற்பனையா?

பதில்:          படைப்பிற்கான கரு என் அனுபவத்தினின்று தான் கிடைக்கிறது. அதனை ஒரு முழுப்படைப்பாக மாற்ற கதை மாந்தர்கள் தேவைப்படுகிறார்கள். அரசு ஆலை மூடப்பட்டு தனியார் ஆலை வருவதை எதிர்க்கும் தலைவன் – மண்ணுக்குள் உயிர்ப்பு புதினத்தில் கதாநாயகன் – என்னோடு நகையும் சதையுமாக வாழ்ந்து மறைந்தவன்.

கனவுமெய்ப்படும் நாவலில் வரும் சிங்காரமும், நாகலிங்கமும் என் சிற்றூர் துணி வெளுப்பவனும் முடிதிருத்துபவனும் ஆவான். அந்த சாதிக்காரர்கள் எப்படி பிற ஆதிக்க சாதிகளால் கேவலப்படுத்தப்படுகிறார்கள் என்பது நான் நேரில் பார்த்து கலங்கிப் போனவன். கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்களை தூரத்தில் குடி அமர்த்தி கேவலமாய் நடத்தும் விடியல்களைக் கண்டு கொதித்துப் போனவன் ஆக அது கனவு மெய்ப்படும் புதினத்தில் கருவானது. கண்மணி ஆசிரியரும் செம்மலரும் என் கற்பனைப் பாத்திரங்கள்.

நெருப்புக்கு ஏது உறக்கம் புதினம் கிராமங்கள் சாதிய நஞ்சால் நசுக்கப்பட, சுரண்டல்காரக்களும் அரசியல் கட்சிகளும் தம் பிழைப்பு மட்டுமே பார்க்க, நெய்வேலி கரி எடுக்கும் நிறுவனத்தார் ஊரில் கரி எடுக்க கிராமத்தைக் காலி செய்து குறுக்கு சால் ஓட்டுகின்றனர். புரட்சி படைக்கப் புறப்பட்ட நெருப்பு அது உறங்காமல் இருக்கவே படைக்கப்பட்டது. என்பது பேசும் புதினம்.

எதிர்வு புதினத்தில் – சிதம்பரம் நடராஜர் கோவிலில் கூத்தனின் தூக்கிய திருவடிக்கு வைர அங்கி அணிவிக்க காஞ்சி சங்கராச்சாரியார் வருகிறார். அதனில் பங்கேற்க தலை முடி வைத்துக் கொண்ட விதவைப் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. அது என் மனதில் நெருடிய விஷயம். என் அம்மாவின் அத்தை 11 வயதில் மொட்டை பாப்பாப்பாத்தியாய் வெள்ளைப் புடவையில் நான் பார்த்தது என்னை உறுத்தியது. என் அம்மாவின் சடலத்தை அலங்கரிக்கும்போது பிறப்புறுப்பில் சாணம் பூசினார்கள். என் தங்கையின் சடலத்தை அலங்கரித்தபோது பிறப்புறுப்பில் மஞ்சள் பூசினார்கள். அம்மா விதவை, தங்கை சுமங்கலி ஆக இப்படி மனம் ரணமானது. விஷயமும் கதையில் வருகிறது. சிறுகதைகளில் வரும் சம்பவங்கள் அனைத்தும் நான் எதிர் கொண்டதும் நான் கேள்விப்பட்டதுமே. அவை கதையாக மலர சிலதுகள் சேர்க்கப்பட்டிருக்கலாம். பொன்னொடு செம்பும் சிறிது சேர்க்க ஆபரணமாவது ஒப்பவே அது.

கேள்வி:         அக்காலச் சூழலில் நீங்கள் பொதுவுடைமை இயக்கத்திற்கு வருவதற்கு காரணமாக இருந்தது என்ன?

பதில்:          தொழிற்சங்கமே காரணமாக இருந்தது. உழைப்பாளி என்பவன் தன்மானமுள்ளவன். அவன் உழைத்தால் அன்றி இங்கு எதுவுமில்லை. வயிறு பசிக்கிறது. அவன் வேலைக்கு வந்துதான் தீர வேண்டும் என்கிற விஷயத்தை பொதுவுடைமை இயக்கங்கள் உடைத்துப் போட்டன. இழைக்கப்படும் அநீதியை எதிர்த்துக் கேட்க தொழிலார்களின் ஒற்றுமை தேவையானது. எந்த இயக்கம் தேசபக்தியோடு சாதீய விஷயங்களில் நடுநிலைமை எடுக்கிறது என்பது இங்கு அனுபவமானது. பெண்கள் மற்றும் எளிய தொழிலார்கள் நம்பிக்கைக்குறிய இயக்கமாக செங்கொடிச் சங்கங்கள் செயல்பட்டன. அதன் வழி நடத்தும் தலைவர்கள் உதாரண புருஷ்ர்களாகத் திகழ்ந்தார்கள். சாதி பார்க்காமல், அந்தஸ்து அதிகாரம் இவை பார்க்காமல் தோழமையோடு பழகினார்கள். மேலதிகாரிகள் – செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டினார்கள் – பேசினார்கள் – போராடினார்கள் ஆக எனக்கு பொதுவுடமை இயக்கம் பிடித்தது. தொலைத்தகவல் துறையில் தினக்கூலிகளாக மஸ்தூர்கள்  - அஞ்சல் துறையில் துறைசாரா ஊழியர்கள் (Extra Departmental) ஆக லட்சக்கணக்கான ஊழியர்களின் உழைப்பு சுரண்டப்பட்டது. அரசாங்கமே இப்படிச் செய்வது நியாயமா என்று எண்ணம் உறுத்தியது. தொடர் போராட்டத்தால் தொலைத்தகவல் துறையில் மஸ்தூர்கள் நிரந்தர ஊழியர்கள் ஆனார்கள். அஞ்சல் துறையில் இன்றும் கூட  EDக்கள் EDக்களே.

சாதிபார்க்காமல் இயங்கும் இயக்கம் பொதுவுடமை கருத்து கொண்ட சங்கங்களே என்று அனுபவமானது. அங்கும் கூட தேர்தல் என்று படுகிறபோது சாதி தன் விஷத்தைக் கக்கவே செய்கிறது. என்பதும் பிறகு அனுபவமாகத்தான் செய்தது. இனம், மொழி, மதம் கடந்து ஒன்றுபடுவதற்கு தொழிலாளி என்னும் பதம் பேருதவி செய்கிறது என்பதனால் பொதுவுடமை இயக்கங்கள் பிடித்தன ஆயிரம் சிக்கல்களுக்கு மத்தியிலும் மனிதனின் உழைப்பை மதிக்கின்ற விஷயம் ஆராதனைக்குறியதாகவே நான் கருதுகிறேன்.

கேள்வி:         தமிழ்மொழி, தமிழினம் பற்றிய தங்கள் கருத்து என்ன?

பதில்:          தமிழின் சுவை கண்டார் அமரர் நிலை கண்டார் என்பார் பாரதி. தமிழ் மொழியை விட பழமையானது இவ்வுலகில் இல்லை. ஆகத் தொன்மையான மொழி தமிழே. கால்டுவெல்லும், ஜியு போப்பும் இதை ஒத்துக் கொள்கின்றனர். இங்கு தமிழைச் செம்மொழி என ஒரு மைய்ய அரசு ஒத்துக்கொள்ள எத்தனைக் காலம்? பிடித்தது. மைய அரசு எந்தச் சூழலில் அதனை ஏற்றது. உடன் அடுத்தடுத்து, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழியினையும் செம்மொழி என பறைசாற்றியது இது எத்தனை நேர்மை மனம் வேதைனைப்படுகிறதுதானே. ‘யாது ஊரே யாவரும் கேளிர்’ ’தமக்கென முயலா நோந்தாள் பிறர்கென முயலுநர் உண்மையானே உண்டலெம்ம இவ்வுலம்’ என்கிற சத்திய வரிகளைக் கொண்டது இம்மொழி என்பதனை ஓரும் நிலையில் யாரும் இல்லையா?

இந்திய விடுதலை இயக்கத்திலும் தமிழரின் பங்கு எந்த வகையில் மைய அரசால் முன் எடுத்துச் செல்லப்பட்டது? என்றும் நிரந்தர வினா எழவே செய்கிறது. பிறமொழிகளிலிருந்து தமிழ் மொழிக்கு மொழி மாற்றம் நிறைய நிகழ்ந்திருக்கிறது. ஆனால் தமிழ் மொழியிலிருந்து பிற இந்திய மொழிக்கு என்கிறபோது மொழி மாற்றம் அரசியல் நுழைவது வேதனையையே அளிக்கிறது. ‘தமிழினம் இலங்கையில் அழித்தொழிக்கப்பட்ட போதெல்லாம் இந்தியா அதனை வேடிக்கை பார்த்து சும்மாதான் இருந்தது’ என்று தமிழ்நாட்டில் சாதாரண மனிதனும் சொல்லும் நிலைதான் ஆரோக்கியமான விடயமா இது.

தமிழ்மொழி தொன்மையானது. தமிழினம் தொன்மையானது ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே தேன்வந்து பாயுது காதினிலே’ என்பது உணர்ந்து உரைத்தவர் பாரதி.

கேள்வி:         தாழ்த்தப்பட்ட மக்களின் நிலைபாடு குறித்து தங்கள் கருத்து யாது?

பதில்:          பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்ததாக கருதப்படுதல் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவனுக்கு எப்படிச் சாத்தியமாகும். நமது நாட்டின் கிராமப்புறங்களில் இன்றும் உடைபடா சாதி அமைப்பு அவர்களை சாதி இந்துக்களிடமிருந்து தள்ளியே குடி அமர்த்தி வைத்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களிடையேயும் இன்றும் வண்ணார், முடிதிருத்துவோர், சக்கிலியர் என்றும் இன்னும் கீழ்பட்ட சாதியும் வள்ளுவர் என்கிற உயர்ந்த சாதியும் இருப்பதைக் காணும்போது சாதி என்னும் நஞ்சு தன் அகிருதியை எப்படி எல்லாம் பரப்பி வைத்திருக்கிறது என்பதறியமுடியும். தலித் இன மக்களை சமுதாயத்தின் மையத்திற்கு கொண்டு வருதலும், தமிழ் மொழியை இறைமொழியாக ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்துதலும், மகளிருக்குச் சரியான அந்தஸ்த்தினை மீண்டும் வழங்கி நேர் செய்தலும் நிகழாது எதுவுமே இங்கு  சாத்தியமில்லை. ‘அன்பே சிவம்’ என்பதனை உளமாறச் சொல்லும் மனிதனுக்காக இந்து மதம் இன்னும் ஏங்கித்தவிக்கிறது. வடலூர் வள்ளல் இராமலுங்கர் எத்துணையும் பேதமுறாது எவ்வுயிருக்கும் தம் உயிர் போல் எண்ணி உள்ளே ஒத்து உரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர்? அவர்? அந்த வித்தகர் தம் அடிக்கு ஏவல் செய்ய விழைகின்றது என்கிறார். அந்தச் சரிநிலையைப் புரிந்து கொள்ளும் மனநிலை என்று வரும்? காக்கையையும் குருவியையும் எங்கள் சாதி என்றும், நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் என்றும் முழங்கிய கவிஞர் சொல் என்று நடப்புக்கு வரும் என்று ஏங்கித் தவிக்கின்றது உள்ளம். சமூகத்தில் நிகழ்ந்து விட்ட கொடுமைகளுக்கு உளமாற சிந்தித்துக் கண்ணீர் விடும் நிலைமை படித்த மேற்சாதி மக்களிடை என்று காண்பது? ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்னும் வள்ளுவரின் சொல் இம்மண்ணில் சத்தியவாக்காவது என்று? வாய்மை தானாக வெல்லுமா?  இங்கு என்பதே கேள்வி.

கேள்வி:         தமிழ்மொழி (தாய்மொழி)க் கல்விக் குறித்து தங்களின் கருத்து…

பதில்:          பாரதி சொல்வார் ‘தமிழிலிருந்து பூ மண்டலத்தில் உள்ள பாதைகளெல்லாம் பிறந்து நிற்பதாகக் கூவின மாத்திரத்திலே ஒருவன் தமிழபிமானியாக மாட்டான் பள்ளிக்கூடத்து சாஸ்திரங்களெல்லாம் தமிழ்ப் பாஷையில் கற்றுக் கொடுக்கும்படி முயற்சி செய்கிறவன் தமிழபிமானி’ அறிவியலில் மருத்துவத்தில் பொறியியலில் கூடுதலாகச் சாதிக்க வேண்டுமென்றால் தாய்மொழி (க்கல்வி) - வழி - பயிலுதல் மட்டுமே கைக்கொடுக்கும். ஆனால் தாய்மொழிக் கல்வியில் கவனம் என்பது இங்கு ஒப்புக்காகவே செய்யப்படுவதாய் அனுபவமாகிறது.அதுவும் உலகமயமாதல் (Globalisation) என்னும் யுக்தி வந்தபிறகு ‘பணம்’ என்பது மட்டுமே ஒரு பொருட்டாகி மானுட மாண்புகள் மிதிபடலாயின பொருளில்லாதவர்க்கு இவ்வுலகமில்லை என்கிற விஷயம் மட்டும் மக்களின் மனதில் ஆழப்பதிந்து உள்ளது. அறிவின் மாட்சி என்பது டாலர்களின் இருப்பாகத்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது. அடிவயிற்றிலிருந்து தமிழ் வழிக் கல்வியை நேசிக்கின்ற மனம் ஏன் வரவில்லை என்பதனை இன்றும் ஆராய்ந்து கொண்டுதான் இருக்கிறோம். இந்திமொழி எதிர்புக்கு புறப்பட்ட ஆர்வம் தமிழைத் தன் தகுதிக்கு உயர்த்த எழும்பவில்லையே ஏன்? ஐம்பது ஆண்டுகலாகியும் இன்றும் நீதி மன்றத்தில் தமிழைக் கொண்டு வரமுடியவில்லை. மனங்கள் இன்னும் இருண்டு கிடக்கின்றன. திருக்குறளையும், திருவாசகத்தையும், திருமூலரின் பாடல்களையும் படிக்காதவர்கள் தமிழ்நாட்டில் இல்லை என்கிற நிலை  உயர்நிலை என்றுவரும் என்று மனம் ஏங்கித் தவிக்கிறது. தமிழ் வழி பயின்றவன் நெஞ்சை நிமிர்த்தி நடக்க இந்தச் சமுதாயம் இன்னும் தரவு அமைக்கவில்லை. மனித மனம் செம்மையாவதுதான் எப்போது?

கேள்வி:         தற்போது வாசகர்களிடையே நவீன ஊடகங்களின் தாக்கம் எவ்வாறு உள்ளது?

பதில்:          காட்சி ஊடகங்கள் வந்தபிறகு வாசிப்பு என்பது அருகிப் போனது மேட்டுக்குடிகளிடையே வாசிக்கப்பட்ட மாத வார இதழ்கள் கூட தம் மதிப்பை ண்பு அருகி ‘வலைதளம்’ என்று வசதி ஆக்கிரமித்துக் கொண்டது. பழையனக் கழிதலும் புதியனப் புகுதலும் வழுவல கால வரையிளானே என்னும் விடயம் இருந்த போதிலும் பழையன வற்றுள்ள விழுமியங்கள் காப்பாற்றப்படுதல் மிக முக்கியமானது. மாணவர்கள் அறிவாளிகளாக இருக்கிறார்கள், ஆற்றல் மிக்கவர்களாக இருக்கிறார்கள். பெண்கள் படித்து மேல் நிலைமையை எய்தி இருக்கிறார்கள் பாராட்டப்படவேண்டியதே. ஆனால் ‘மனிதாபிமானம்’ என்கிற விஷயம்தான் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஊடகங்கள் வழி நல்ல விஷயங்கள் வருகின்றன. அவை இளைஞர்களின் மனத்தை ஆக்கிரமிக்க முடியாமல் தோற்றுப் போகின்றன. குடிப்பழக்கம் இளைஞர்களிடையே அசுரத்தன்மை பெற்றுவிட்டது. பெண்களும் குடிப்பதில் தவறில்லை என்று பேசுவதும் காதில் விழுவே செய்கிறது. நல்லவைகளைப் போற்றக் கற்றுக் கொடுக்க ஆளில்லை. லாபம் வருமா என்பதில் தானிங்கு அக்கறை வளர்ந்திருக்கிறது. ஒழுக்கமில்லாத கல்வி நிறுவனங்கள் எங்கு நோக்கினும் தென்படுகின்றன. கல்வி வியாபாரப் பொருளாவது கோரம். இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரும் அண்ணா ஹசாரேயும், அப்துல்கலாமும் நமக்கு நம்பிக்கை தருகிறார்கள். நல்லது நடக்க வேண்டும் விளம்பரமும், வணிகமும் மனிதனுக்கு வேட்டியும் சட்டையுமாக மாறி இருக்கிறது. ஊடகங்கள் பொருப்பில்லாமல் தம்பணியை தொடருதல் சோகமே.

கேள்வி:         இன்றைய சமூக வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்ற காரணிகள் குறித்து தங்களது கருத்து என்ன?

பதில்:          இன்றைக்குச் சமூகம் வளர்ச்சி பெற்றிருக்கிறது. ஆனால் அது ஆரோக்கியமான போற்றத்தகும் வளர்ச்சியா என்று சிந்திக்க வேண்டிய நிலைமை. இன்றைய வளரும் பிள்ளைகள் நல்ல லட்சியம் தெரியாதவர்களாக, சமூக அக்கறையற்றவர்களாகத் தெரிகிறார்கள். மதிப்பெண் பெறுவதும், அமெரிக்க டாலர்கள் சம்பாரிப்பதும் தான் அவர்களின் பிராத்தனையாக இருக்கிறது. உலக அரங்கில், மனித நேயத்திற்கு மதம் சாரா அரசியலுக்கு, பெண்மை போற்றும் பண்பிற்கு பாரத மக்களாகிய நாம் எப்பொழுதும் நிற்கிறோம். இதனை மனதில் இருத்த வேண்டிய பெரும்பொறுப்பு குறிப்பாக இனைய சமுதாயத்திற்கு உடனடிக் கடமையாகிறது. அப்படி எடுத்துச் சொல்லவும், இளைய சமுதாயத்தைக் கேட்க வைக்கவும் அப்பழுக்கற்ற ஒரு மகாத்மா தேவையாகிறார். அண்ணா ஹசாரே அந்த வழியைத் திறந்து காட்டி உணர்த்தி நமக்கு  இருப்பதும் அதுவே. நம்பிக்கையோடு நமது கடமைகள் தொடரட்டும்.


No comments:

Post a Comment