Saturday, July 25, 2015

thotu kai story




தொடு -கை -எஸ்ஸார்சி




உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம் இதுவா பிரச்சனை ஆகிவிடும். ஆகிவிட்டதே.முதுபெருங்களத்தூரில் ஒரு பகுதி புதியதாகத்தோன்றி வளர்ந்து வரும் பகுதி.சென்னை மா நகரோடுல் எங்கோ ஒரு மூலையில் ஓரமாகத் தொத்திக்கொண்டு நிற்கிறது. பெயர் சூட்டும் பெரிய மனிதர்கள் அந்தப்பகுதிக்குப்பெயர் நன்றாகத்தான் வைத்திருக்கிறார்கள்.ரெங்கபுரி.உடனே இங்கு ரெங்க நாதருக்கு ஆலயம் ஏதேனும் உண்டா என்று கேட்டு வைக்காதீர்கள்.இது வரை அப்படி ஒரு கோவில் இல்லை. இனி வரலாம். எந்த சாமிக்கு எந்த ஊரில் எழுந்தருளப் பிராப்தமோ யார் கண்டார்கள்
.ரெங்கபுரியில் பிரதானமாக ஒரு தெருவின் முடிவில் ஒரு பிள்ளையார் கோவில்.பிள்ளையார்கோவில் என்று ஆரம்பித்து ஒவ்வொரு சாமியாக எல்லா சாமிகளும் கோவிலுக்குள் கொலு கொண்டுவிட்டார்கள். எல்லா சாமிகளும் என்றால் நவக்கிரகமும் தட்சிணாமூர்த்தியும் ஆஞ்சனேய சுவாமியும் அவசியம் உண்டு.அட்டமத்து ச்சனி ஏழரைச்சனி எட்டில்பாதிச்சனி சாதகத்தின் பன்னிரு கட்டங்களில் ரெண்டு ஏழு எட்டு இந்த இல்லங்களில் சனியார் உட்கார்ந்து மக்களைப் படுத்தும்பாடு சாதாரணமா ? அறிந்தவர்களுக்கு அனுபவப்பட்டவர்களுக்கு விஷயம் நான் சொல்ல வேண்டியதில்லை.அப்புறம் ஒரு சமாச்சாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை நாலரை ஆறு ராகு காலம் பகழ் துர்க்கையம்மனுக்கு அங்கு ஏற்றப்படும் திருப்பிப்போட்ட எலுமிச்சை த்தோல் விளக்குகள் யாரும் பார்த்தும் இருக்கலாம். அப்பேர்பட்ட துர்க்கை அம்மனுக்கு ஒரு சன்னதியும் இந்த பிள்ளையார் கோவிலில் உண்டு..
அது சரி கோவிலுக்கு பன்னிரெண்டு வயது ஆகிவிட்டதால் மீண்டும் ஒரு குடமுழுக்கு செய்தாகவேண்டும். சுவாமியின் சக்தி பன்னிரெண்டு வருடங்கள்தான் மூலவர் சிலைமீது அமர்ந்திருக்கும்.பிறகு அது கொடி மரம் மீது கொலுவிருக்கும் பிறகு கோபுரக்கலசம் மீது மட்டும் குடி இருக்கும் அதற்குப்பிறகு தல விருடசத்திற்கு வரும் அப்புறமாய் அது வானகம் சென்று விடும். இது எல்லாம் எழுதி வைத்துவிட்டுப்போயிருக்கிறார்களே. ஆக ரெங்கபுரி பிள்ளையார் கோவிலுக்கு க்கும்பாபிஷேகம் செய்தாக வேண்டும் என்று ரெங்கபுரி வாசிகள் முடிவுசெய்தார்கள்.பேருக்கு ஒரு வைஷ்ணவர் கூட இல்லாத ரெங்க்புரியில் எப்படி ஒரு பிள்ளையார்கோவில் சாத்தியம் என்று யோசிக்க வேண்டாம்.பிள்ளையார் கோவில் எல்லாம் பிற்பாடு வந்தது.இங்கு மண்ணிவாக்கம் பெரிய ஏரித்தண்ணீர் பாசனம்.நெல் கரும்பு விளைந்த அற்புதமான பூமிதான் ரெங்கபுரியாக மாறி இருக்கிறது. இந்த விளையும் பூமிக்குச்சொந்தக்காரர் திருப்பெயர் ரெங்கமன்னார்.சைவப்பிள்ளைதான் அவர். அவருக்கு எப்படி ரெங்க மன்னார் என்று பெயர் வந்தது என்று கேட்டால்.அவர் திருவில்லிப்புத்தூர்க்காரர் ஆக அப்படி என்பார்கள்.ரெங்க மன்னார் திருவீதி உலா வரும் சமயம் பிறந்த குழந்தை என்பதால் ரெங்க மன்னார் என்று திரு நாாமம் சூட்டித்தான் ஆகவேண்டும் என்று அவர்தாய்மாமா வகையறா அடம்பிடித்தனராம் மற்றபடி அதற்குள் நீட்டாக ஏன்போகவேண்டும் அய்யா விடுங்கள்.
ராஜகோபால் பிள்ளைதான். இங்கு பிள்ளையார் கோவிலில் தேவாரம் பாடிக்கொண்டிருந்த பெரிய மனிதர்.அவருக்கு ப்பிள்ளையார்கோவிலில்தான் படுக்கை. அவரைத்தருமங்குடி ப்பிள்ளை என்கிறார்கள்.மற்றபடி அவருக்கு க்குடும்பம் இத்யாதிகள் உண்டா என்று தெரியவில்லை. யார் இது எல்லாம் அவரிட்ம் கேட்டார்கள்.யார் எப்படி ப்போனால் என்ன.நமக்கு க்காரியம் அதாவது ஆக வேண்டியகாரியம் ஆனால் சரி என்பதாகத்தான் வாழ்க்கை வாழ பழகிக்கொண்டிருக்கிறோம்.
பிள்ளையார்கோவில் கும்பாபிஷேகத்திற்கு நாள் குறித்தாகிவிட்டது..கும்பாபிஷேஹ கமிட்டி போட்டு அது தன் பாட்டில் வேலை செய்து கொண்டிருந்தது. கோவில் கட்டிடத்தில் போனது வந்தது பார்த்து வர்ணமிட்டு சுதைவேலைகள் பாக்கி இருப்பது நேர்செய்து ஆசாரி வேலைகள் விட்டுப்போனது எல்லாம் முடித்துக்கொண்டே வந்தார்கள்.கோவி வாயிலில் இரண்டு கல் வெட்டு நல்ல உயரத்துக்கு நிறுவப்பட்டு இருந்தது.ஐயாயிரம் நன்கொடை வழங்கியவர்கள் ஒன்றிலும் பத்தாயிரத்துக்கு நன்கொடை அளித்தவர்கள் இன்னொன்றிலும் இடம் பிடித்துக்கொண்டார்கள். நன்கொடைகள் எல்லாம் கூட்டிப்பார்த்தால் பல லட்சங்கள் வந்தன. பிள்ளையார் கோவில் ஆராய்ச்சி மணியில் .குருமூர்த்திபுரம் ஆலூர் ஜெயராமன் உபயம் என்று எழுதியிருந்தது.பிள்ளையார் சன்னதியின் பிரதான கேட்டில் தியாகராய நகர் அட்வகேட் சந்திரசேகரன் மற்றும் அவர் மனைவி லதா என்று இரும்பு க்கம்பியால் வளைத்து வளைத்து எழுதியிருந்தார்கள்.சுதைவேலைகள் பெரிய மண்டபம் சுற்றிலும் அழகாகச்செய்து வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு சிலைக்கும் கீழாக அதன் உபயம் யார் என்று பெயர் எழுதியிருந்தார்கள். மின்சார விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அந்த ஒளிக்குழாய்களுக்கு இடையில் பளிச்சென்று இது தருமங்குடி கார்கேய கோத்திரத்து சிட்ல சதாசிவ அய்யர் உபயம் என்று எழுதி இருந்தது.தரை கிரானைட் கற்கள் மட்டும் சும்மாவா என்ன குருகைகாவலப்பர்கோவில் முனிபல்ல மருத்துவர் உமாமகேசுவரன் சகுந்தலா தம்பதியர் உபயம் என்று எழுதிவைத்திருப்பதை க்கண்சிமிட்டி பார் பார் எனக்காட்டியது.
கும்பாபிஷேக ச்செலவுக்கு பணம் போட்டவர்கள் பெயர் ஒரு பெரிய டிஜிடல் பேனரில் எழுதி அருகே அவர்களின் போட்டோக்கள் அழகாக சிரித்துக்கொண்டு இருந்தன.கும்பாபிஷேக நோட்டிசு அடித்த வகையில் காசு கொடுத்து உதவிய பெரிய மனிதரின் திருப்யெர் நோட்டிசுக்கு அடியில் கடைசி வரியாக அமைந்து வாசிப்போர்க்குச் செய்தி சொன்னது.
ரெங்கபுரி சித்தி விநாயகர் பெயர்தான் எந்த மூலையில் எழுதி இருக்கிறது என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆனால் மூலவர் பின்னே நிற்கும் பித்தளை திருவாட்சி ஆறுமுகம் பால் வியாபாரம் ரெங்கபுரி என்று எழுதியிருந்தது சேவார்த்திகள் அனைவ்ரின் கண்களிலும் பளிச்சென்று பட்டது.தீபாராதனை தட்டுகள் அனைத்தும் அதனை யார் யார் வாங்கிக்கொடுத்த பெரியவர்கள் என்பதனைச்சொல்லிக்கொண்டன.மனிதமனம் தன் இருப்பினை இந்த மண்ணில் விட்டுச்செல்லவே இத்தனை ஆசை.ஒன்று மட்டும் உறுதி தான் நாம் இல்லாதுபோய்விடுவோம்.இந்த உலகம் நாம் இல்லாது அதுபாட்டுக்கு இயங்கும்.சினிமாவுக்குப்போகிறவர்கள் அவர்கள் பாட்டுக்குப்போவார்கள் .சீட்டாடுபவர்கள் அவர்கள் பாட்டுக்கு ஆடுவார்கள்.சாராயம் குடிப்பவர்கள் கடை வாசலில் முண்டி அடித்துக்கொண்டு குடிப்பார்கள். இது சாராயம் இது கொடிய நஞ்சு இதனைக்குடிக்க குடிக்க தான் செத்துப்போவேன் இது உறுதி என் குழந்தை குட்டிகள் தெருவில் பிச்சைஎடுக்கும் எனக்குத்தெரியும் தெரிந்துதான் நான் குடிக்க்கிறேன் என்று பத்து தடவை சொல்லியபின்னர்தான் சாராயபாட்டில் கையில் கொடுப்பார்கள் என்று சொல்லுங்களேன்.அதனால் என்னவாம் பத்து தடவை என்ன நூறு தடவையானாலும் சொல்லிவிட்டு குடிப்பவர்கள் குடிப்பார்கள். ஆக ஒன்றும் ஆகிவிடாது.அயோத்தி ராமனும் மதுராவின் கிருட்டினனும் செத்துதானே போனார்கள்.உலகத்தில் செத்துப்போகாதவர்கள் யாருமில்லை.புத்தர் சொன்ன விஷயம்தான்.ஆக தான் இந்த உலகைவிட்டுப் போனபின்னரும் தன் பெயர் இருப்புக்கு இங்கு என்ன வழி என்பது சின்ன சிந்தனை ஆகிவிடுகிறது.தானிருக்கும் வரை தன் பெயர் பளிச் பளிச் என்று எழுதி த்தெருவெங்கும் தொங்க வேண்டும் சராசரி ஆசை.. கும்பாபிஷேகத்திற்கு டிஜிடல் பேனர் வைத்திருந்தார்கள்.விநாயகர் படத்தோடு போட்டி போட்டுக்கொண்டமாதிா தான் ரெங்க புரி வாழ் தலைவர் படங்கள்.தலைவர்களில் மூன்று ரகங்கள் இருந்தன..யோசனைக்கு ஒருத்தர்,அடிதடி குத்து வெட்டு என்றால் அதற்கு இன்னும் ஒருவர்.காசு பணம் புரட்டி க்கொடுக்கும் மற்றுமொருவர். இவர்களுக்கு கீழாக அப்படியே மூன்று வரிசை சின்ன தலைவர்கள்.மற்றவர்கள் எல்லாம் பேனரில் பெயர் வரும் வராமலிருக்கவும் செய்யவும் எதையும் வாயைத்திறந்து கேட்டுவிடலாம் என்றால் அது நடக்காத கதை.பிள்ளையார் கோவில் குருக்க்ள் மட்டும் சின்னவரா என்ன அவரின் திருப்பெயரும் படத்தோடு இடம் பெற்றுவிட்டது.யாரும் பாக்கி இல்லை.ரெங்கபுரி க்காரர்கள் அனேகமாய் எல்லோரும் தட்டியில் இடம் பிடித்துவிட்டார்கள். தேவாரம் பாடும் தருமங்குடி ராஜகோபால் பிள்ளை பெயர்தான் எங்குமே இல்லை.
.குடமுழக்கு அன்று யாகசாலையில் கடம் புறப்படுவதற்கு சற்று முன்னர்தான் அந்த கடைசிக்கால பூரணாஹூதி முடிந்தது. அதற்கும் முன்பாக வேத கோஷங்கள்.தொடர்ந்து திராவிடத்தோத்திரப்பிரியா திராவிடத்தோத்தரம் உப தாரயா'( காதில் விழுந்த வரைக்கும்) என்றார் பிரதான சிவாசாரியார். உடன் தேவார ம் பாடும் ராஜகோபால் பிள்ளை சிவா திருச்சிற்றம்பலம் என்று தொடங்கி, 'உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம் தெள்ளத்தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் கள்ளப்புலனைதும் காளா மணி விளக்கே' என்று ஓங்கிப்பாடிமுடித்து நமப்பார்வதி பதயே அர அர மகாதேவா என்று கோஷம் சொன்னார்.நாதஸ்வரக்காரன் மல்லாரி வாசிக்கத்தொடங்கினான்.. வெட்டிப்பைய வந்தான் விறகொடிச்சான் வெந்நி தண்ணி வச்சான் அப்ப அப்ப அய்யய்ய சுப்பப்ப தப்பப்ப எப்பப்ப பெப்பப்ப பப்பப்ப பா.... பா என்று மல்லாரி பிரகாரத்தில் அசுர வேகத்தில்தான் பிரவாகித்து வந்தது.
கோவில் குருக்களுக்கு தேவார ராஜகோபால் பிள்ளை மீது ரொம்ப நாளாக ஒரு வருத்தம்.ஒரு நாள் பிள்ளை தைப்பூசம் என்று வடலூர் சென்றுவிட்டார். அன்றைய தினம் பார்த்தா அந்த தாம்பரம் ஆர் டி வோ ரெங்கபுரி பிள்ளையார் கோவிலுக்கு வர வேண்டும். எல்லாம் நேரம்தான்.பிளாட் வாங்குவது அல்லது விற்பது சம்பந்தமாக ரெங்கபுரி வந்தவர் சித்தி விநாயகர் கோவிலுக்கு வந்துவிட்டார். வந்தவர் பிள்ளையாரைப்பார்த்தமா ரெண்டு குட்டு குட்டிக்கொண்டு விபூதி வாங்கி நெற்றியில் இட்டுகொண்டு போயிருக்கலாம்.
' என்ன சிவாச்சாரியார் எந்த ஊருங்காணும் நீர்? பிள்ளையார் மேல அருணகிரி நாதர் பாடியிருக்கிற ஒரு பாட்டு தெரியுமோ? என்று கேட்டு விட்டார்.'தப்பும் தவறுமாதான் மந்திரம் சொல்வீர் அது ஊர் அறிஞ்சது பிராம்ணன்ல சொல்ற மந்திரத்திற்கு அர்த்தம் தெரிஞ்சவாளை நா இன்னும் பாக்கல்ல. ஆக தெரிஞ்ச தமிழ்ல ஒரு பாட்டாவது பிள்லையார்மேல பாடலாமே' என்றார் ஆர் டி வோ.
குருக்கள் பேசாமல் இருந்துமிருக்கலாம் அவருக்குத்தான் ரெண்டில் சனி உட்கார்ந்து இருக்கிறானே எப்படி சும்மா இருக்கத்தான் முடியும் சொல்லுங்கள்.
'தேவாரம் பாடுற ராஜகோபால் பிள்ளை இண்ணைக்கு வடலூர் போயிருக்கிறார்.நேக்கு தமிழ் பாட்டு சரியா பாடம் இல்லே'
கோவிலுக்கு வந்த ஆ ர் டி வோ 'உம் மேல குத்தம் இல்லே'
என்று கிளம்பிச்சென்றுவிட்டார்.மறு நாள் கோவிலுக்கு வந்த ராஜகோபால் பிள்ளையிடம் அருணகிரி நாதர் பிள்ளையார் மேல் பாடிய பாட்டை ச்சொல்லிகொடுக்கும்படி கேட்டார். ராஜகோபால் பிள்ளை குருக்களிடம் ஒரு கேள்வி கேட்டார். ' தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்த்னை ஓய்?'
குருக்களுக்கு ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது.இது எல்லாம் யார் கண்டார்கள்.குருக்கள் மனதிற்குள் சொல்லிக்கொண்டார்..இந்த தேவாரம் ராஜகோபால் பிள்ளையை இந்தக்கோவிலை விட்டு கிளப்பி விடவேண்டும் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டே இருந்தார். அப்போதுபார்த்துதான் இந்த குட முழுக்கு விழா டிஜிடல் பேனர் ஒத்தாசை செய்தது.கும்பாபிஷேகக்கமிட்டித்தலைவரிடம் போனார்.' முதலியாருக்கு நமஸ்காரம். ஒரு சேதி. அதாவது இந்த பிள்ளையார் கோவிலை சுற்றி கல்வெட்டுல அதுல இதுல உபயதாரர்கள் பேருங்க எல்லாம் எழுதிவச்சிருக்குறது தேவாரம் பாடுற ராஜகோபால் பிள்ளைக்கு பிடிக்கல. அதக்கிண்டல் பண்ணிப்பேசறார். ஒரு நாள் நானே என் காதாலே கேட்டேன்.. கும்பாபிஷேகத்து அண்ணைக்கு அவர் பாடின தேவாரப்பாட்டு உங்களுக்கு ஞாபகம் இருக்கோ ;உள்ளம் பெருங்கோவில் ஊன் உடம்பு ஆலயம் தெள்ளத்தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்னு அப்பிடி இப்படி பாடினது இது எல்லாம் நாம கோயில்ல செய்யுறது வெற்று ஆடம்பரமாம் வெளி வேஷம் மொதல்ல மனசு சுத்தம் இருக்குணும் அதுதான் தெய்வம். இந்த கல்வெட்டும் அதுல நம்ப பேரு எழுதிக்கறதும் இல்லே அது இதுன்னு பேசறார்'
'என்ன குருக்களே நெஜமாவா சொல்லுறீர்'
'அப்புறம் நான் எதுக்கு உங்க்ளண்ட பொய் சொல்றன்'
'அது எல்லாம் இருக்கட்டும் அதுகளை நான் பாத்துக்கிறேன்.உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்ங்க்ற பாட்டு யாரு பாடினது சொல்லுமே'
'தெரியல'
'மொதல்ல அது தெரிஞ்சிகும் குருக்களே.சுவாமிக்கு பூசைன்னா நாம அவர தொடுறது பெரிய விஷயமே இல்லே அவரு நம்ம தொடுவாறான்னு பாத்துக்கணும்ணும் அதான் பூசை'
'அப்ப நான் புறப்படறேன்'
'உம்மை முதுகை ப்பாரும் மொதல்ல.பெறகு பாக்கலாம் எல்லாத்தையும் அந்த தாம்பரம் ஆர்டிவோ என்னையும் பார்த்துட்டுதான் ஊருக்குப்போனார்'
கும்பாபிஷேக டிஜிடல் பேனரில் இந்த முதலியாரின் போட்டோ மாதிரிதான் இருந்தது. அது பிள்ளையார் சைசுக்கும் கொஞ்சம் பெரிசாதான் இருந்துது. ஆனா அவர் இப்ப பேசுறதோ வேற தினுசா இருக்கே' மனதிற்குள் சொல்லிக்கொண்டே ஒரு தடவை அந்த பேனரைப்பார்த்துவிடுவது மட்டுமே சரிஎன்று அது நட்டு இருந்த இடத்துக்கு வேக வேக மாய் நடந்தார். டிஜிடல் பேனர் இருந்த இடத்தில் கம்பம் நட்டிருந்த குழிகள் மட்டுமே பாக்கி இருந்தன.. .
-----------------------------------------------------------------------------------------------.


.
.. .
.
.

Monday, July 13, 2015

Nesam- story





நெசம் -எஸ்ஸார்சி


ராமாபுரம் சமுத்திரகுப்பம் அருகேயுள்ளசிற்றூர்.அங்கேதான் என் அத்தை குடியிருந்தார்.அத்தையின் கணவருக்கு ஓமியோபதி டாக்டர் வேலை.நிலபுல ன்கள் கொஞ்சம் இருந்தன. பெட்டை மண் போர்த்திக்கொண்ட பூமி. வாழை கரும்பு செந்நெல் என எல்லாம் விளையும் வயல்கள். வயல் வெளியிலிருந்து பார்த்தால் கேப்பர் மலை தூரத்தில் சிரியதாகத் தெரியும். அங்கேதான் வெள்ளைக்காரன் கட்டிய கேப்பர் குவாரி ஜெயில் இருக்கிறது. மாகவி பாரதியாரும் புதுச்சேரி விட்டு புறப்பட்ட சமயம் கைதாகி அங்குதான் சிறையில் இருந்தார். முழுப்புரட்சி என க்குரல் தந்த ஜெயப்பிரகாஷ் நாராயணனும் தான் அங்கே சிறைவாசமிருந்தார். பாரதியை இன்னும் துளி துளி ஞாபகத்தில் வைத்துக்கொண்டுதானிருக்கிறோம் ஆனால் அந்த ஜெயப்பிரகாஷ் நாராயணனை யாரேனும் நினைவில் வைத்துக்கொண்டு இருக்கிறார்களா என்ன?.இந்தியத்திருநாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்த அந்த இந்திரா அம்மையார் மட்டும்தான் அவரைப் பூரணமாக அறிவார்.
ராமாபுரம் ஊரின் மத்தியில் அத்தைக்கு நாட்டோடு போட்ட இரண்டு கட்டுவீடு. அத்தை குடியிருக்கும் அந்த வீடு கட்டி நூறு ஆண்டுகள் கடந்துமிருக்கலாம். அத்தை வீட்டுத்தோட்டத்தில் பாக்குவெட்டி பம்ப் ஒன்று. அது. கை பம்புதான். அதனைத்தான் பாக்கு வெட்டி பம்ப் என்று சொன்னேன். அது அரைகுறை உப்புத் தண்ணீரை வழங்கிக்கொண்டிருந்தது.நான்கு பெண் இர்ண்டு ஆண் குழந்தைகள் அத்தைக்கு.எல்லாம் அது அது அங்கு அங்கு செட்டில் ஆகிவிட்டபடியால் ஒன்றும் செய்யவேண்டிய பெரிய கடமை என்று சொல்லிக்கொள்ளுகிறமாதிரிக்கு பாக்கி இல்லை.
அந்த ராமாபுரம் அத்தையின் சின்ன பையன் ஒரு நாள் திடிரென என் வீட்டிற்கு வந்தான். அப்படி யெல்லாம் அடிக்கடி வருபவன் இல்லை அவன்.தலை கலைந்து கிடந்தது.போட்டிருக்கும் சட்டை அழுக்காகி சகிக்க முடியாமல் கண்ணுறாவியாக இருந்தது.
'மாமா அப்பாவுக்கு ஆக்சிடன்டு ஆயிடுச்சி. பெரிய ஆஸ்பத்திரியில சேத்துட்டு வரன்' கண்கள் நிறைத்துக்கொண்டு வந்தது.அழ ஆரம்பித்தான்.
'என்னப்பா ஏன் என்ன ஆச்சி அம்மா எங்க'
'அம்மா ஆஸ்பத்திரியில இருக்கு. நீ வா மாமா. எனக்கு பயமா இருக்கு.அப்பா பொழப்பாரா மாட்டாரான்னு.தெரியல.நா என்ன செய்யப்போறன்'
நான் அவனோடு பெரிய ஆஸ்ப்த்திரிக்கு க்கிளம்பினேன். நடந்துபோகும் தூரம்தான்.
ராமாபுரத்திலிருந்து சமுத்திர குப்பம் கிளம்பிய அத்தையின் கணவர் ஆதி மாமா இரு சக்கர வாகனத்தில் சாலை ஓரமாகத்தான் வந்து இருக்கிறார்.ராமாபுரம் பகுதியில் விளைந்த கரும்பினை வெட்டி ஏற்றிக்கொண்டு அருகே இருக்கும் நெல்லிக்குப்பம் பாரி சர்க்கரை ஆலைக்கு டிராக்டர்கள் செல்வது வழக்கம்.கரும்புச்சுமை இழுக்கும் டிராக்டர் எஞ்சினுக்குப் பின்னே டிரக்கில் கரும்புக்ள் அரவைக்கு ஏற்றப்பட்டிருக்கும்.சாதாரணமாக ஒரு டிரக்கை பூட்டிகொண்டு நெல்லிக்குப்பம் புறப்படும் டிராக்டர்களில் சில பேராசையில் இரண்டு சுமை டிரக்குகளை கோத்துக்கொள்ளும்.அப்படி இரண்டு டிரக்குகளை பூட்டிக்கொண்ட டிராக்டரின் இரண்டாவது டிரக் முன் சக்கரத்தில் தன் இரு சக்கர வாகனத்தை விட்டு விட்டார் அத்தையின் கணவர். டிராக்டரின் இரண்டாவது டிரக் ஏறி இறங்கிய அவரின் உடலைத்தூக்கிகொண்டு பெரிய ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கிறார்கள்.முனபாக ஒரு தனியார் மருத்துவ மனைக்கும் போயிருக்கிறார்கள். அங்கு அவன் முடியாது என்று கையை விரித்து விடவே சமுத்திரகுப்பம் பெரிய ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கிறார்கள்.
நானும் என் அத்தை பையனும் நடந்து கொண்டிருந்தோம்.என் அத்தையின் சின்ன மகன் சமுத்திரகுப்பம் சிப்காட் எனும் தொழிற்பேட்டையில் ஒரு வெல்டிங்க் கம்பெனியில் வேலை பார்த்தான்.பெரிய சம்பளம் என்று இல்லை.அதை விட்டாலும் வேறு என்ன வழி இருக்கிறது.அவன் சகோதரன் ரயில்வேயில் வேலை பார்க்கிறான். இவனும் எழுதி எழுதி போட்டான் தேர்வு வந்தது. எழுதிப் பார்த்தான். வேலைக்கான தேர்வுகள் எல்லோருக்குமா பலன் தந்து விடுகின்றன.அவன் சகோதரனுக்குத் தற்காலம் எங்கோ வடக்கே சந்திரபுர்ம் என்னும் ஊரில் ரயில்வே சிக்னல்லிங்கில் மெக்கானிகல் வேலை.
அத்தையின் க்தறல் ஒலி எனக்குக் கேட்கிறது.
'என்னப்பா அத்தை குரல் மாதிரி இருக்கு'
'ஆமாம்'
அத்தை பிணவரை வாயிலில் விழுந்து புரண்டு அழுதுகொண்டிருந்தாள்.மாமா காலமாகி அவர் சடலம் பிண்வரைக்கு க்கொண்டு வந்திருப்பார்கள்.இல்லை என்றால் அத்தை இந்த கட்டிடத்தின் வாயிலுக்கு வ்ரவேண்டிய அவசியமே இல்லை இரண்டு போலிசுகாரர்கள் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.அவர்களோடு ஒரு கருப்பு அங்கி அணிந்த வக்கீல் ஏதோ இடை இடையே குறுக்கிட்டுப்பேசினார்.இந்த மூவரையும் சுற்றி இன்னும் நான்கைந்து பேருக்கு நின்று வேடிக்கை பார்த்தார்கள்'
'தம்பி அப்பா நம்பள ஏமாத்திட்டு போயிட்டாரு என் தலையில கல்லு தூக்கி போட்டுட்டாரு. இனி நானு என்ன செய்யுவேன் ஏது செய்யுவேன்'.அத்தை ஓப்பாரி வைத்து அழுதுகொண்டிருந்தாள். ஆதி மாமாவின் சடலம் பிண்வறையில் கிடத்தப்பட்டுகிடந்தது.அவரே போட்டிருந்த உருட்டைய்பூண் நூல் வைத்து அவர் இரண்டு கைகளையும் சேர்த்துக் கட்டியிருந்தார்கள்.அருகே கிழவி ஒருத்தியின் நிர்வாணச்சடலம்.அந்த சடலம் அருகே ஒரு சிறுவன் உட தலை நசுங்கிய நிலையில் கிடந்தது.சுவர் ஓரமாக வாலிப வயதுப்பெணொருத்தியின் தீயில் கருகிய சடலம்.தரையெல்லாம் கரி. துர் நாற்றம் குப் குப் என்று வந்துகொண்டிருந்தது. பிணவறையின் தரையில் ரத்தம் நிணம் சிந்திக்காய்ந்து போன அசூசைகள் சகிக்கவே முடியாமல் இருததை நானும் என் அத்தை பையனும் அச்சத்தோடு பார்த்தோம்.அவன் தந்தையின் உடலைத்தொட்டுப்பார்த்து ஓ அப்பா என்று கூவிக்குரல் தந்தான்.
'யார்ரா இது சுதி மதி இருக்குதா இல்லையா' பிணவறைக்காவலாளி குரல் எதிர் கொடுத்தான்.உள்ளே போய் பிணம் பார்த்த நபர்கள் அவனுக்கு தலா பத்து ரூபாய் கொடுத்தனர். அவன் வாங்கி சட்டைப்பையில் திணித்துக்கொண்டான்.
'நாதியில்லா பொணம் ஆ உள்ள கெடக்கு யாரு வரா பாக்குறா அது அது கொடுப்ப்னை இருக்குணும்.தல மாட்டுல குந்தி ரெண்டு உறவு சனம் அழுவுலன்னா அந்த பொணம் எப்பிடி என்னா பொணம் பூமிக்கு நாம வரகுள்ள என்னாத்த வரமுன்னு வாங்கிகினு வந்தமோ அதான்' பிணவறைக்காவலன் சொல்லிக்கொண்டான்.
.பிணவறையின் முன்பாக இருந்த நான்கு வேப்ப மரங்கள் காய்களை கொத்து கொத்தாகத் தம் கிளை முழுவதும் வைத்துக்கொண்டிருந்தன.காக்கைகள் பழுத்த வேப்பங்காய்களை க்கொத்திதின்பதில் போட்டி போட்டன வேப்ப மர வேர்களில் நான்கு நாய்கள் ஒவ்வொன்றும் ஒரு திசை பார்த்து உறக்கத்தில் இருந்தன.
அத்தை மகனும் நானும் போலிசுகாரர் எங்களைக்கூவி அழைக்க அவரிடம் சென்று நின்றுகொண்டோம்.
'தம்பி அப்பா போயிட்டாரு ஆகவேண்டியது பாக்குணும்'
'சொல்லுங்க் சார்'
'முதல்ல எஃப் ஐ ஆர் போடுணும். உங்க கம்ப்ளயின்ட சரியா இல்ல அதை மாத்தி நா சொல்லுறது மாதிரிதான் எழுதி தரணும்'
'எப்பிடி' என்றான் அத்தை மகன்.
'அப்பா அடி பட்டது ரெண்டாவது டிரக்குல ஒரு டிராக்டருக்கு ஒரு டிரக்குதான் கோக்குலாம் சட்டம் . ரெண்டாவது டிரக்கு கோத்தா அது..தப்பு. கேசு எடு படாது. கைக்கு காசு வராது இன்சூரன்சுகாரன் ஒத்துகமாட்டான் வண்டி ஆர் சி பூடும் டிரைவர் லைசென்சு காலியாயிடும் என்ன செய்வே'
'இல்லையே. ரெண்டாவது டிரக்குலதான் அடிபட்டு இறந்து இருக்குறாரு அப்பா. அப்படித்தான நான் எழுதணும்'
' இந்த ராமாயணம் பாரதம் எல்லாம் எனக்கும் தெரியும்'
' அந்த டிரைவரையே கேளுங்க சொல்லுவாரு நேரா பாத்த ஜனம் இருக்குதே'
நான் கொஞ்சம் குறுக்கிட்டேன்.'தம்பி கொஞ்சம் நிதானமா பேசுங்க. அப்பா இறந்துபோனதுல்ல துக்கத்துல இருக்க்றீங்க. பட படன்னு பேசக்கூடாது'
'ஸ்டேஷன்ல இருக்குறாரு டிர்ராக்டரு ஒட்டுன அந்த டிரைவரு. நாங்க புடிச்சி வச்சிருக்கம் சும்மா வுட்டுற முடியுமா ? அவுரு என்னா சொல்ல் இருக்கு. உங்க வூட்டுல கரும்பு ஆலை அரைவைக்கு வெட்டுனா நீங்களும் டிரைவருக்கு கூட அய் நூறு கொடுப்பிங்களாம். அப்பிடி ரெண்டு டிரக்கு செம கோக்குற்து உண்டாமே'
'யாரு சொல்றது.அப்பிடி எல்லாம் இல்ல.எங்க அப்பா அப்பிடிபட்ட ஆளு கெடயாது'
பதில் சொன்னான் அத்தை மகன் போலிசாரிடம்.
' உங்க அப்பா இல்லன்ன உங்க ஆத்தா கொடுத்துருக்கும்.இது எதுக்கு அறியாபுள்ளகிட்ட நாம பேசிகிட்டு. வக்கீலு வந்து இருக்குறாரு. அவர வச்சி பேசிக்குலாம்'
என்றார் போலிசுக்காரர்.
ஒரு டூவீலர் ஒன்றில் வெள்ளைச் சட்டை முழுகையாக போட்டுக்கொண்ட மூத்த வக்கீல் ஒருவர் சரியாக அவ்விடம் வந்து சேர்ந்தார்.
'செரு பையன் கிட்ட என்ன பேச்சு.கெழவி இருக்குல்ல அதுகிட்ட பேசுங்க.காசி வாங்கப்போறது அதுதான்.எங்க அந்த அம்மா,அத இங்க கொண்டாங்க.அது எங்கயானு முகாரி ராகம் வுட்டுகினு கெடக்கும். புருசன் உசுரா இருக்கக்குள்ள ரவ தண்ணி சாச்சிக் கொடுத்துதுவோ இல்லையோ யாரு கண்டா காசு வாங்குணும்னா அய்யா வே துரையே என் சாமின்னு ஆரம்பிச்சுடுமாச்சே'
'என்ன பேசுறீங்க தப்பு தப்பா பேசுறீங்க் நீங்க யாரு' என்றான் அத்தை பையன்.
' செறு பையன் அம்மாம் வொலக அனுபவமில்லாத ஆளு போல. வுடு.ஆவுற காரியத்த பார்ப்போம்'
என்றார் மூத்த வக்கீல்.தயாராக தான் எழுதி வந்திருக்கிற வெள்ளை பேப்பரில் அத்தையிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டார்.அத்தை பேப்பரை அவசர அவசரமாக வாங்கினாள் கையெழுத்து போட்டாள்.
' ஆயிரம் சொன்னாலும் மூத்தது பக்குவம்தான்' என்றார் வக்கீல்.
'என்ன எழுதியிருக்குன்னு பாக்காம கை எழுத்து போடுலாமா' என்றான் அத்தை பையன்.
'தம்பி நா பெத்த மொவனே நீ செத்த சும்மா இரு என் தெய்வமே என்னை வுட்டுட்டு பூட்டுது.தோ பாரு உள்ளார கசமாலத்தோட கசமாலமா கெடந்து நாறுது. சொறிநாயிவெட கேபுலம் அது அங்க கெடக்குற கெடப்பு நீ பாக்குல ஆவுறது ஆவுட்டும் போவுறது போவுட்டும் எல்லாம் அந்த தலைவாசல் பெரியஆலமரத்தடி கருப்பண்ணன் என் குல தெய்வம் அறிவாரு வுடு'
அத்தை சொல்லித்தரைமீது புரண்டாள்.
என்னிடம் ஒருவர் வந்தார். யாரென்று கூட எனக்குத்தெரிந்தால்தானே. சில சேதிகள் சொல்லி அந்த ப்பையனிடம் சொல்லிவையுங்க என்றார் காக்கி சட்டைக்காரர். இடுப்பில் பச்சைக்கைலி .வக்கில் குமாஸ்தாவா இல்லை இந்த காரியங்க்ளுக்கு எல்லாம் இந்த வட்டாரத்தின் ஏஜன்ட் யாரேனுமா எனக்குத் தெரியவில்லை.
'கேசு முடிய ஆறு மாசம் ஆவும்..ஒண்ணரைக்கு கொறையாம கைக்கு வரும் செத்த ஆளு வயிசு சம்பாத்தியம் எல்லாம் இருக்குதுல்ல அதுதான் வரப்போற காசிக்கு கணக்குக்குப் பேசும். ஆம்பளய தொலச்ச அந்த அம்மாவுக்கு முக்காலு ரூவா வரும் அப்பிடிஇல்லைன்னா ஒண்ணுக்குள்ள வரும். சொச்சம் இருக்குறது அதுஅது அங்க அங்க போவேண்டிய எடம்போயிடும் எல்லாம் நாங்க பாத்துகுவோம். அயிசு பொட்டில ராசா கணக்கா அய்யாபொணத்தை வச்சி எடுத்துகிட்டு ராமாபுரம் போங்க கொற கதயும் பாருங்க'
இதுதான் அந்த பச்சைகைலி என்னிடம் சொன்ன சேதி.
நான் பொறுப்பானவன் அத்தை பையனோடு கூட இருப்பவன் என்பதாக ஒரு போலிசுகாரர் மூத்த வக்கீலிடம் விளக்கிச்சொன்னார்.
அந்த மூத்த வக்கீல் என்னிடம் சொன்ன விஷயம்.' இறந்துவிட்ட ராமாபுரம் ஆதி அய்யாவுக்கு டூவீலர் வண்டி ஓட்டுற லைசன்ஸ், வண்டிக்கான இன்சூரன்சு, ஆர் சி புக் இதுங்க பக்காவா ரினுவல் ஆகி இருக்குதா வண்டி கண்டிஷனா இருந்திச்சா,அய்யா.கண் பார்வை எப்பிடி ரத்த கொதிப்பு எப்பிடி சுகர் மயக்கம் இருந்துதா மருந்து மாத்திரை உடாம சாப்புடுறாரா, காலு நரம்பு சுருட்டிகுமா தண்ணி கிண்ணி பொழக்கமுண்டா பான் பராக் சமாச்சாரம் தொடுவாரா இன்னும் ஆயிரம் கேள்விங்க வரும் அத்தினியும் நான் கோட்ர்டுல சமாளிக்கணும் ஒண்ணு மறந்துட்டேன்.ஓமியோபதி படிச்சி இருக்குறாரா இல்ல சும்மா கதை வுட்டுகினு அலோபதி மருந்து குடுக்குற டுபாக்கூர் டாக்டரான்னு கூட அங்கு கேப்பாங்க'
இது அத்தனையும் அமைதியா காது கொடுத்துக் கேட்ட அத்தை.' வக்கீல் அய்யா என் பெரிய மொவன்ன அது தினுசு வேற அவந்தான் கிட்ட இல்ல எங்கயோ எட்டத்துல வடக்க கெடக்குறான்.என் சின்ன மொவன் செறு புள்ள வெள்ளந்தியா மனசுல பட்டது பேசுவான் எம் புருஷன் கணக்கு அவன். இந்நேரம் அவனுக்கு குடும்பம் கிடும்பம்னு ஆயி இருக்குமே. நெசம் நெசம்னு நெசத்த பேசி பேசித்தான் இப்ப சந்தியில நிக்குறான். அவரும் தோ போயிசேந்துட்டாரு இது நிக்குது அந்தராசியா வக்கீல் அய்யா கொவிச்சிகிடாதிங்க நீங்க எப்பிடி சொல்றீங்களோ அதான் எங்க முடிவு.அய்யா நீங்க சமுத்திரகுப்பத்துல ஆயிரம் கேசுவ பாத்து இருப்பிங்க இது என்னா புதுசா' சொல்லி மூக்கை சீந்தினாள். மீண்டும் ஒங்கி மார்பில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள். போஸ்ட்மார்ட்டம் எனும் சடங்கு முடிந்தது. டாக்டர்கள் பிணவறைவிட்டுக்கலைந்தனர், எங்கும் த்லைவலித்தைல நாற்றம். லைஃப்பாய் சோப்பின் நெடி.வேப்ப மர வேர் படுத்த நாய்கள் சட்டென்று இடத்தைக்காலி செய்தன.
'பொணம் வெளிய வந்துதுன்னா நாயுவ இந்த வாடைக்கு பயந்துகிட்டு கெள்ம்பிடுதுவ' ஆஸ்பத்திரி சிப்பந்திகள் பேசிக்கொண்டு லேசாக ச்சிரித்தனர்.செவிலியர்கள் யாரும்தான் கண்ணில் படவேயில்லை. .
வெள்ளைத்துணி சுற்றிய ரெண்டு அடிக்கு நீளம் இருக்கும் ஒரு பிளாஸ்டிக் பொட்டலத்தை அய்ஸ் பெட்டியில் வைத்து ஆம்புலன்சில் ஏற்றினார்கள். அத்தையையும் அத்தை பையனையும் கூடவே ஆம்புலன்சு வண்டியில் அழைத்துக்கொண்டார்கள்.
இப்ப ஆன செலவுக்கு அயியாரம் கொடுத்துட்டு நீங்க வண்டிய நவுத்தலாம்' என்றான் ஆம்புலன்சிலிருந்து இறங்கிய அந்த காக்கி சட்டை போட்ட பசைக்கைலி. தலை மொட்டையாக இருந்தது.
'எல்லாம் பெரிய அண்ணந்தான்' என்றான் அந்த மொட்டைத்தலையைப்பார்த்துக்கொண்டே நின்றிருந்த பிணவறைக்காவலாளி.
'நான் இந்த அஞ்சி ரூவாயுக்கு பொறுப்பு வண்டி நகரட்டும்' என்றேன்.
'சரி ஒரு நமோதான ஆளு சொல்லுது வுட்டுடு வண்டியை' சொன்னது காக்கி சட்டை போட்ட பச்சைக்கைலி.ஆம்புலன்சின் டிரைவர் வண்டியைக்கிளப்பினார்.
என் சட்டைப்பையிலிருந்தது என் ஏ டி எம் கார்டை எடுத்துக்கொண்டு மெயிரோடுக்கு வந்தேன்.. ரூபாய் ஐந்தாயிரத்தை எடுத்தேன். காக்கி சட்டைபோட்ட பச்சைக்கைலியிடம் கொடுத்து முடித்தேன்.என் வீடும் அருகில்தானே இருந்தது. என் டூ வீலரை எடுத்துக்கொண்டு ஆம்புலன்சின் பின்னே மெதுவாகச் சென்றுகொண்டிருந்தேன்.ராமாபுரம் செல்லும் வழி எல்லாம் மக்கள் கூடி 'ஓமியோபதி டாக்டரு பூட்டாராமே. கரும்பு டிரக்கு ஏறிீடிச்சாம் ஊருக்கெல்லாம் வாத்தியாருதான் இப்ப என்ன செய்வ ' சொல்லிக்கொண்டே ஆம்புலன்சை வேடிக்கை பார்த்தனர்.அத்தை ஆம்புலன்சு உள்ளே தன் இரு கண்களையும் பொத்தி அழுதுகொண்டே இருந்தாள்.
'இந்தகண்ணுறாவிய நான் பாக்குணுமா இதுதான் என் குடுப்பினையா என்ன பெத்த ஆத்தாவே என் அப்பாரே இது அடுக்குமா' மீண்டும் மீண்டும் அழுது புலம்பினாள்.என் அத்தையின் பையன் நான் வண்டி பின்னே டூ வீலரில் தொடர்ந்து வருவதை மட்டும் உறுதிசெய்து பார்த்துக்கொண்டே இருந்தான்.
----------------------------------------------------------------------------------------------------------------------------

..

Monday, July 6, 2015

volakam- story







வொலகம் -எஸ்ஸார்சி



தேரோடும் வீதிய்ல்தான் அந்த சவம் கிடந்தது.சவம் என்றால் சவம் இல்லை.முண்டம்தான் கிடந்தது. யாருடைய உடல் அது தலை எங்கே போனது. தெருவில் பத்து பேருக்குக்குறையாமல் இங்கும் அங்கும் விறைத்துகொண்டு நடக்கிறார்கள். ஏதோ விபரீதம் நடந்துவிட்டிருக்கிறது.வீதி என்று முத்லில் சொன்னதைத் தெரு என்று கொஞ்சம் மாற்றிச்சொல்லி இருக்கிறேன்.கொலை அல்லவா நடந்து முடிந்திருக்கிறது.ஆகத்தான் அப்படி.. காண்போரிடம் எல்லாம் என்னாய்யா நடந்தது அவன் கேட்டான்.. தெருவில் நடமாடிய பத்து பேரில் ஒருவன் அவனை வாயை மூடிக்கொள் என்று செய்கை காட்டினான். அவன் வாயைமூடிக்கொண்டான்.
வந்து நின்ற ஆம்புலன்சிலிருந்து இரண்டு பெரிய ஆஸ்பத்திரி சிப்பந்திகள் வெள்ளை சட்டை போட்டுகொண்டு கையில் ஸ்டெச்சரோடு இறங்கினார்கள்.முண்டத்தின் மீது வெள்ளை நிற சாக்கு மூடியிருந்ததை அப்புறப்படுத்திவிட்டு முண்டத்தின் கைகளை மார்பின்மீது வைத்துக்கட்டினார்கள்.கயிறு ஒன்றும் எடுத்து வராததால் முண்டத்தின் மார்பில் இருந்த பூண் நூலையே எடுத்துக்கொண்டார்கள்.அவன் யோசித்தான் செத்தவன் பார்ப்பனனாக இருக்கலாம்.இருந்தாலும் பூண் நூல் மட்டும் வைத்து எப்படி இன்னார் என்று முடிவுக்கு வருவது.செட்டிமார்களும் ஆசாரிகளும் வன்னியர்களும் கூடத்தான் பூண் நூல் அணிகிறார்கள்.ஆக யாரென்ற முடிவுக்கு வர முடியாமல் அவனுக்குக் குழப்பமாக இருந்தது.ஆம்புலன்சு உள்ளாக அவன் நோட்டம் விட்டான்.பாலிதீன் பை ஒன்றில் தலை பத்திரமாக இருந்தது. பையில் உள்ள துண்டிக்கப்பட்ட தலையின் கீழே இரத்தம் உறைந்து இரத்தக்குழாயும் வெள்ளை நரம்பும் முறிந்த குறுத்தெலும்புகளும் முறுக்கிக்கொண்டிருந்தன. ஆகா நெற்றியில் நாமம். யூ வடிவத்தில் அழகாகக்கொலுவிருந்தது.காதுகளில் வெள்ளைக்கற்கள் பதித்த கடுக்கன். ஆக ஒரு அய்யர்தான் கொலையுண்டிருக்கிறார்.அவன் முடிவுக்கு வந்தான்.
'யாரு அய்யிரு மாதிரி இருக்கு'
'ஆமாம் அய்யிருதான்'
'மேலத்தெருவுல மளிகைக்டை வச்சிருக்கிற அய்யிரு' முண்டத்தை தூக்கிவந்த மருத்துவமனை சிப்பந்தி அவனுக்குப்பதில் சொன்னன்..அவனுக்கு ஒன்றுமே புரியாமல் இருந்தது. ஆம்புலன்சு விரைந்து மறைந்து போயிற்று.வேகு வேகு என்று இங்கும் அங்கும் நடந்த வண்ணம் இருந்த பார்ப்பனர்கள் யாரையும் காணோம்.மேலத்தெரு முக்கில்தான் அந்த அய்யரின் மளிகைக்கடை.அங்கே போனால் செய்தி எதுவும் கிடைக்கலாம். அய்யரின் கடை மூடிக்கிடந்தது.கடையின் பின்புறம்தான் அய்யரின் வீடு.அங்கு சென்று பார்த்தான்.வீடு பூட்டிக்கிடந்தது. இப்படிகூடவா ஆகிவிடும்.ஒன்றுமே பிடிபடவில்லை.திரும்பவும் வாசலுக்கு வந்து மூடிக்கிடந்த கடை வாயிலில் நின்றுகொண்டான்.ஒரு வயதான கிழவி.கையில் ஒரு துணிப்பையோடு கால் தாங்கித் தாங்கி நடந்து வந்தாள்.
'யாரை பாக்கணும்னு கை வண்டிக்காரரு வந்துருக்காரு '
'அய்யருக்கு என்ன ஆச்சி என்ன சேதி இது தெரியணுமே' கிழவியைப்பார்த்துக்கேள்வி கேட்டான்
'பாக்கறதையும் பாப்பிரு என்னை கேப்பிரு என்ன வண்டிக்காரரே சேதி'
'அய்யரை யாரோ கொண்ணு போட்டுட்டாங்க. அது மட்டுந்தான் தெரியுது.ஆனா என்ன சேதி ஏன் இப்படின்னுதான் தெரியல முழிக்கிறன்'
'மளிகைக் கடைய வித்துட்டு பட்ணம் போற அய்யிரு.ஆனா நேரா மேலயே பூட்டாரு. ஆள முடிச்சிட்டாங்க'
'அதான் எனக்கும் அய்யிரு சொன்னது ஆனா இது என்ன கொடுமை'
'அய்யிரு கடைய வூட்ட விக்கறதுன்னு முடிவாகி அச்சாரம் வாங்கி இருக்குறாரு.அச்சாரம் குடுத்த ஆளு சின்ன ஆளு அவரும் பட்னத்து ஆசாமி. அவுருக்கு இந்த ஊர்ல தான் விக்க கொண்டார சாமானுவ சிடாக் வக்கணும் இந்தப்பக்கமா அதுவுள சப்ளை பண்ணணும் அதுக்கு ஒரு எடம் வேணும் அதான் '
'மேல சொல்லு ஆயா'
' அய்யிரு இந்த வூடும் கடையும் பட்னத்து ஆளுக்கு விக்கற சமாச்சாரம் இதே ஊர் உசந்துவூட்டு பலான ஆளுக்கு தெரிஞ்சது. அப்புறந்தான் பத்திகிச்சி விஷயம்.'நான் மேலத்தெருவுல ஒரு ஓட்டல் கடை வைக்க இடம் தேடுறன். எடம் கிடைக்கல.நீரு எங்கிட்டதான் உம்ம வூட்டை கடைய விக்கணும்னு கண்டிஷன் வந்துருக்கு. அய்யிரு அச்சாரம் வாங்கிபுட்ட சேதி சொல்லி இருக்குறாரு. அது எல்லாம் எனக்கு சொல்லுற ஒரு பதில் இல்ல. உன் வூடு கடையை எனக்கு கிரயம் குடுக்கறியா இல்லையான்னு மறுபடியும் சேதி அய்யிருக்கு வநதுது. அய்யிரு முழி முழின்னு முழிச்சி இருக்குறாரு. முடியாதேன்னு கையை விரிச்சி இருக்குறாரு.இது இனி இது சரிப்பட்டு வராது. இந்த அய்யிரு உசுரோட இருந்தாதானே அந்த கிரயம் அது இது எல்லாம். அவுரே இல்லேண்ணா அப்புறம் என்னா இருக்குன்னு கதை முடிஞ்சி போச்சி. உசந்த வூட்டு க்காரரு செஞ்ச காரியம்தான்.அய்யிரு வூட்டு அம்மாவுக்கும் எனக்கும் இது தெரியும் வேற யாருக்கும் தெரிய நியாயமில்லே.அவ்வளவுதான்'
'எங்க அப்பா நாள்ளேந்து எனக்கு அய்யிரு பழக்கம்.அதான் என் மனசு கெடந்து அடிச்சிகுது'
'ஏன் எங்க அம்மா குப்பு இந்த அய்யிர தூக்கி வளத்து ஆளாக்குன அந்த சேதி சொல்லும் நானும் வெனவு தெரிஞ்ச நாளா மளிகை கடையில அய்யிரு கிட்ட பொடைக்க கூட்ட சுத்தம் பண்ணுற வேல செய்யுறன்'
' நானு பாத்து இருக்குறேன்'
'அய்யிரு ஏன் மளிகைக்கடை வச்சாருன்னா அது ஒரு வெஷயம்.கோவிலு படைச்சவருதான் அய்யிரு. கோவில்ல பெருமாளு சாமி மேல கெடந்த பவுன் நகையைகானும்னுட்டு வெசாரணை வந்துது. அய்யிரு கிட்ட கேக்ககூட்டாத கேள்வி எல்லாம் போலிசு கேட்டு இருக்காங்க. அண்ணைக்கே எனக்கு இந்த வேல தோதுபடாது. மளிகை கடையில பொட்ணம் கட்டி பொழப்பு நடத்துறேன்னு நொண்டி செட்டியார் கிட்ட வேலைக்கு வந்தவருதான்.நொண்டி செட்டியார் கிட்ட வேலை செஞ்சிதான் புள்ளவள படிக்கவச்சாரு.அதுவ ஆளாச்சி மேல மேல வந்துது.நொண்டி செட்டிக்கும் புள்ள இல்ல. அப்படியே கடையை குடுத்துட்டு பூட்டாரு. இந்த கடை வெடம் அய்யிரு வெடம்தான் கடை மட்டும்தான் நொண்டி செட்டியார் வச்சிருந்தாரு'

' நானும் இந்த சேதி சொல்லுறன்னா ஆளு யாரு எவுருன்னு நூறு தரம் பாத்துட்டுதானே சொல்லுறன்.டப்பு டிப்புன்னு இந்த சேதி சொல்லிட முடியுமா' என்றாள்.
' இப்ப அய்யரூட்டு ஜனம் எங்க அய்யிரு பொணம் பெரிய ஆஸ்பத்திரிக்குதான போயிருக்கு'
'அந்த கதய கேட்டா இன்னும் கேபுலம்.இந்த ஊர்ல அய்யிருக்கு யாரு இருக்குறா. அய்யிரு மொவனும்மவுளும் சிங்கபூர்ல இருக்குதோ இல்ல இன்னும் எங்கயோதான் போயி இருக்குதோ. காசு வேணும்னுட்டு கைலாசம் பாக்க போனதுதானே அய்யிருட்டு அம்மா தான் இங்க இருக்கு. உசந்த வூட்டு ஆசாமி நேரா இங்க வந்த்து. ' என்ன பிரச்சனையோ ஏது பிரச்சனையோ யாரு கண்டா பட்டப்பகல்ல உம் புருசனை யாரோ வெட்டிபோட்டுட்டு போயிட்டானுவ இனி நீ இந்த வூட்டுல தனியா கெடந்து என்னா செய்யுவ வா என் வூட்ட பக்கம் நானு கொற சேதியும் பாத்துகுறேன்னு' சொல்லி அத கூட்டிகினு உசந்த வூட்டு பெரிய கையி அவுரு வூட்டுக்கே போயிருக்கு.அங்க அந்த அம்மா இந்த கதியில போவுலாமா இல்ல கூடாதா இதுகேள்வி . கூடாதுன்னே வச்சிக அது என்னா செய்யும். நட்ட நடு தெருவுல புருஷன தல வெட்டி போட்டு கதை நாறி கெடக்கு. எந்த சனம் அந்த அம்மாவ தாம் வூட்டுகு இட்டுகினு போவும். பாப்பாரசாதியில கேக்குணுமா யாரும் செத்துட்டா ஒரு பொணம் உழுந்துட்டா திரு திருன்னு திருட்டு முழி முழிப்பானுவளாச்சே. அவன் அவன் சாவாம இந்த பூமியிலேயே சாசுவதமா கெடக்கப்போற மாதிரிதான எப்பவுமே அவுனுவ நடக்கறதும் போவறதும் இதுங்கறது எல்லாம்'
'இப்ப நீ எங்க இந்த பக்கமா வந்த ஆயா'
'செம்மாதான் வந்தன் பாழும் மனம் கேக்குல.நேத்து எங்கிட்ட பேசிகினு இருந்தாரு அய்யிரு.எல்லா கதயும் சொல்லுவாரு. அந்த அம்மாவும் சொல்லும்.புள்ளிவ அசலூர் மண்ணுக்கு சம்பாரிக்க போயிடுச்சி.பொணத்த அயிசு பொட்டில வச்சி அதுவ வந்த பொற அடக்கம் பண்ணுவானுவன்னு நெனைக்கிறேன்'
அந்த பூட்டிக்கிடந்த அய்யர் மளிகைக்கடைக்கு முன்னால் ஒரு போலிசு வான் நின்றது.இரண்டு போலிசுகாரர்கள் வண்டியிலிருந்து கீழே இறங்கினார்கள். உள்ளே நாய் ஒன்று கம்பீரமாய் எட்டிப்பார்த்தது. பின் இறங்கி இங்கும் அங்கும் முகர்ந்து வன்டிக்குள் ஏறிக்கொண்டது.
அவர்கள் கொண்டு வந்த அலுமினியப் பெட்டியைத்திறந்து கடைக்கு சாணிக்கலரில் சீல் வைத்தார்கள்.
'நீங்க ரெண்டு பேரும் யாரு'
'அய்யா நானு அய்யிரு கடையில ஜாமானுவ பொடச்சி நோம்பி குடுக்குற பொம்பளை'
அந்த க்கிழவி சொன்னாள்.'நீனு' என்றார் ஒரு போலிசுகாரர் அவனிடம்.
'அய்யா நானு கை வண்டி இழுக்குறவன் அய்யிருக்கு மளிகை ஜாமானுவ கொண்டாருவன் போவேன் வருவேன்'
' ஒண்ணும் புண்ணியம் இல்லாத கேசுவ. வேற பொழப்பு இருந்தா பாருங்க போங்க போங்க'
என்றார் இதுவரை அமைதியாயிருந்த வேறு போலிசுகாரர்.
'கதை எப்பிடி போவுது இப்ப'
' அய்யிரு கடைய வூட்ட வாங்க அச்சாரம் கொடுத்த ஆளு சென்னையில இருக்கான் அவன தூக்கியார போலிசு ஆளு போயிருக்கு. அவன கொண்டு வந்துட்டு இப்புறம் கதை ஆரம்பிக்கணும். அய்யிரு சனம் சிங்கப்பூர்ல இருந்து வந்துதுன்னா அய்யிரு பொணத்தை ஒப்படைச்சி அசமடக்கி புடலாம் பெறகு வுட்ட கொற முடிக்கணும்'
ஒரு போலிசுக்காரர் சொல்லிக்கொண்டிருந்தார்.
மறு நாள் காலை விமானம் பிடித்து அய்ய்ர் மகன் மகள் குடும்பங்கள் வந்தன. உறவினர் ஏதோ நான்கைந்து பேருக்கு எட்டிப்பார்த்தனர்..உசந்த வீட்டுக்காரர் தயவில்தான் அய்யரின் இறுதிப்பயணம் இத்யாதிகள் நிகழ்ந்தது.அய்யரைப்போலவே இருந்த அய்யரின் மகன் கீழ்பாச்சி கட்டி க்கொண்டான்.சவரம் செய்துகொண்டான். அய்யருக்கு க்கொள்ளி வைத்து குடம் உடைத்து அன்றே பாலும் தெளித்துமுடித்தான்.பாக்கி காரியம் எல்லாம் சென்னையில் என்று முக்கியமானவர்கள் முடிவு செய்தார்கள்.தங்காயா உசந்த வீட்டார் வாசலிலேயே குத்திட்டு அமர்ந்திருந்தாள்.
அய்யர் வீட்டு சாவுக்கு காரியம் சடங்கு பாத்த அய்ய்ர் நல்ல வரும்படியோடு வேலை முடித்தார்.' உனக்கு வெத்துல கித்துல வேணுமா' என்றார் சடங்கு செய்த அய்யர். தங்காயா ஏனோ அந்த அய்யருக்கு பதில் எதுவும் சொல்லாமல் இருந்தாள்.
அய்யர் வீட்டு அம்மா தனியாய் நின்றிருந்த தங்காயா கிழவியிடம் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு எடுத்துக்கொடுத்தாள்
'வேணாம்மா எனக்கு ' என்றாள் தங்காயா.
சொல்லி வைத்தார் போல் பார வண்டி இழுக்கும் அவனும் வந்து தங்காயா அருகே நின்றான். அய்ய்ர் வீட்டு அம்மா தெரு வாசலுக்கு இறங்கி வந்தார் அவனிடம் அந்த ஐ நூறு ரூபாயை நீட்டி ' நீ வாங்கிக்கோ நாங்க எல்லாம் இப்ப மெட்றாசுக்கு கெளம்பறம்' என்றாள்.
'நா காசு வாங்க மாட்டேன்' என்றான் கை வண்டிக்காரன்.
உசந்தவீட்டு பெரிய மனிதர் இல்லத்து வாசலில்தானே இத்தனையும் நடந்தது. அவரே அந்த நேரம் பார்த்து அவ்விடம் வந்தார்.' அய்ய்ரே இந்தாரும் இந்த ஐ நூறை நீர் வச்சிகும்' என்று சொல்லி அந்த அய்யர் வீட்டு அம்மா கைவசமிருந்த ஐ நூறு ரூப ாய் நோட்டை வாங்கினார். சாவு காரியம் பார்த்து முடித்த அந்த அய்யரிடம் ஒப்படைத்தார்.
'நானும் தாம்பாளத்துல தட்சணையா உக்காரவச்சி குடுத்தாதான் வாங்கிகறது. இருந்தாலும் பெரியவா இப்ப கொடுக்கறேள். நான் வாங்க்கிகறேன்' என்று சொல்லி காரியம் பார்க்க வந்த அந்த அய்ய்ர் பணத்தைவாங்கிக்கொண்டார்.
'அய்ய்ரு வூட்டு அம்மா இனி மேலுக்கு சிங்கப்பூரு பூடும். மளிகைக்கடை பூட்டி சீல் வச்சிட்டாங்க. நாம பொழப்ப நாம பாக்குணும்' சொல்லிய கை வண்டிக்காரன் புறப்பட்டான்.
'ரவ வண்டியில் குந்திகறன் என்ன இசுத்துகினு போயி அந்த சன்னதி மொகனையில வுட்டுடு நடக்க முடியல ராசா' என்றாள் தங்காயா.
அவள் ஏறி அமர வண்டி நகர்ந்தது.அந்த இருவரையும் பார்த்து பார்த்து கண்களைத்துடைத்துக்கொன்டிருந்தார் அய்ய்ர் வீட்டு அம்மா.
'என்னா வொலக்ம்டா இது . சாமி பூதம் எல்லாம் செத்துதான் பூடுச்சி' சொல்லிக்கொண்டே வண்டியில் பயணம் போனாள் தங்காயா.
---------------------------------------------------------------------------------- .


.


.

...
. ... 

Monday, June 29, 2015

vesayam -story





வெசயம் -எஸ்ஸார்சி



அனேகமாக புது வீட்டின் ஆசாரி வேலைகள் முடியும் சமயம்.நான்கு ஆசாரிகள் ஒரு மாதமாக தட்டி தட்டி வேலை செய்து நான்கு அறுகால் ஆறு ஜன்னல்கள் மஞ்சளைப் பூசிக்கொண்டுதயார் ஆனது.அவன் அனுவலகத்துக்கு ஒருமாதம் விடுப்பு போட்டான்..இதற்கு செலவு ஆகாத விடுப்பு பின் எதற்கு என்றுதான் தோன்றிற்று.
ரெடிமேடாகவே அறுகாலும் ஜன்னலும் மரவாடியில் தயாராக விற்பனைக்கு இல்லையா என்ன. நாமே ஆசாரி வைத்து செய்வது போல் ஆகுமா என்று சொல்கிறார்களே.
ரெடிமேடு ரெடிமேடு தான் நாம ஆசாரி வச்சி செய்யுறதுன்னா அது வேறதான் இப்படித்தானே பேச்சு காதில்விழுகிறது.
பூதாமூர் அவுசிங்க் போர்டுக்கு அருகில் மனை வாங்கியிருந்தான். அவனுக்குத் தெரிந்தவர்களும் அங்குதானே மனை வாங்கினார்கள்.கடைகால் போட்டு கிடக்கிறது.தரைக்கு மேலே இரண்டு அடிக்கு கருங்கல் சுவர் வெளியே தெரிகிறது.அதற்கு மேலாக காங்க்ரீட் பில்ட் போட்டிருக்கிறது'..மேற்கொண்டு வேலை ஆரம்பிப்பது அறுகால் ஜன்னல் ரெடியான பின்னர்தான் என்று அவனுக்கு க் கோவிதராஜு மேஸ்திரி அறிவிப்புகொடுத்துவிட்டார்.
'காலைல மாலைல தண்ணீய மாத்திரம் தவறாம காங்க்ரீட் கட்டு சுவத்துல அடிச்சிகிட்டே இருங்க.அது ரெம்ப முக்கியம்' சொல்லிப்போன மேஸ்திரி இன்னும் திரும்பி வந்து கட்டு வேலை தொடங்க ஒருமாதமாகலாம். அதற்குள் மர வேலைகள் முடிக்க வேண்டும். அனேகமாக மர வேலைகள் எல்லாமும் முடித்துவிட்டார்கள் நான்கு ஆசாரிகளுக்கு வேலை..அன்றுதான் கடைசி நாள்.வேலை வேலை சஞ்சாயம் என்பதால் இப்படி காண்ட்றாக்ட் என்று விட்டிருந்தால் இந்நேரம் வேலை எப்பவோ முடிந்து இருக்கும்.எட்டு மணி நேர உழைப்பு எட்டு மணி நேர உல்லாசம் எட்டு மணி நேர உறக்கம் என்கிற மூன்று 'உ' க்கள் எல்லாம் வேலை காண்றாக்ட் என்று சொல்லி விட்டால் பறந்தே போய்விடுகிறது.. .
'சாரு ராயல் கடைக்கு போயி பட்டை சீல வாங்கியாருணுமே'
' என்ன பெரிய ஆசாரியாரே வேலை சாய்ந்திரம் முடியப்போவுது இப்ப வந்து பட்டை சீல அது இது ண்றீரு'
'இதான் உங்கள் கிட்ட எனக்கு புடிக்காத வெஷயம். நான் என்னா வாயில போட்டு முழங்கிடப்போறனா; வாங்கியாங்க எதா இருந்தா என்ன வேலயானாதும் மிச்சத்தை சொச்சத்தை கெடாவிட்டுப்போறவன். நா வூட்டுக்குப் போவகுள்ள பாத்துகுங்க என்னா மடியில முடிஞ்சகிட்டு போறன்னுட்டு'
''நீங்க கேக்கறது எல்லாம் அப்ப அப்ப நா வாங்கித்தருலயா இப்ப வேல முடியப்போவுதேன்னு கேட்டேன்'
' இங்க உங்க வூட்டுக்கு தச்சு வேல நடக்குது சரக்கு முடிச்சி நா இங்க வச்சிருக்கிறதை நாலு பேரு பாத்தா ஆசாரி தேவுலாம். வாங்குன காசிக்கு வேலயும் நடந்து இருக்குன்னு நெனைக்கணும். வேற என்னா ஒரு வெஷயம் நீயும் நானும் காலமாயிப்போனாலும் நம்ம பேரனுக்கு பேரன் நம்ம தச்சு வேலய பாப்பான் தேவுலாம் வேலன்னு சந்தோஷப்படுவான் தெரிதா சாரு '
'இப்ப என்னா வேணும்'
'பட்டை சீலன்னு கேளு நாலு நறுக்கா ராயல் கடையில கேட்டு வாங்கியாரணும். ராயல்கடை பெரியபாயிக்குதெரியும் வேலாயுதம் காந்தி நகரு ஆசாரின்னு சொல்லுணும் அது .சொல்லுலன்னா காரியம்தான் சுகுரா எப்பிடி ஆவும்'
'பட்டை சீல எதுக்கு'
'ஆரம்பிச்சிட்டீகளே. இப்பதானே இம்மாம் பேசுனேன். ரம்பத்துல கூரம் இல்ல.சுத்தமா போயிட்டுது பட்டை சீல வச்சி சொரண்டியாவணும். வேலன்னா சுத்தமா இருக்குணும்ல'
அவன் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
முதுகுன்றம் ஜங்க்ஷன் ரோடில் ராயல் ஹார்டு வேர் ஸ்டோர் இருந்தது.பெரிய பாய் கடையில் நான்கைந்து ஆசாரிகள் நின்று கதைப்பேசிக்கொடிருந்தனர். கதை என்றால் கதை இல்லை. இவர்களுக்கு வேலை இல்லாமலா இங்கு நின்று இது பேசிக்கொள்கிறார்கள்.யார் வீட்டிலேனும் தச்சு வேலையில் மும்முரமாக இருப்பார்கள்.இடுக்கில் ராயல் கடைக்கு வந்து ஆசாரிகளுக்குள் விஷயம் பரிமாரிக்கொள்வார்கள்.விஷயம் என்றால் என்ன என்கிற அந்த பரம ரகசியம் எல்லாம் சொல்லியா தெரிய வேண்டும்..
'பட்டை சீல நாலு வேணும்'
'ஆசாரி யாரு'
'ஆசாரி யாரா இருந்தா என்னா பாயி'
'உன் நல்லதுக்குதான் சொல்றன்.வாங்கிகினு போயி அங்க முழிக்காம இருக்கணும்ல'
'காந்தி நகர் வேலாயுதம் ஆசாரி'
' அப்பிடிபோடு அருவாளை இண்ணைக்கு மாலையோட வேல முடியுதா'
'ஆமாம் அது எப்படி அந்த சேதி உங்களுக்குத்தெரியும் பாயி'
'இந்தா நாலு பட்டை சீல கொண்டு போயி அந்த ஆசாரிண்ட கொடு எனக்கு என் வேல கெடக்கு' அவன் நூறு ரூபாயை பெரிய பாயிடம் கொடுத்தான். பாக்கி வாங்கிக்கொண்டான்.சைக்கிள் காரியரில் வாங்கிய பட்டை சீலையை பத்திரமாக வைத்துக்கொண்டு அவன் சைக்கிளை மிதித்தான்.
பூதாமுர் வளையும் சாலையில் வண்டியைத்திருப்பினான்.எதிரே தலையில் பத்து தேக்க சட்டங்களைச்சுமந்துகொண்டு ஆசாரி ஒருவர் மெதுவாக தார்ச்சாலையைக்கடந்தார். மணிமுத்தார்ற்றுப்பக்கமாகத்தான் அவர் நெளித்து நெளித்து நடந்துகொண்டிருந்தார்..
'யாரு ஆசாரி போறது'
'ஏன் நாந்தான்'
அவன்வீட்டில் வேலைசெய்துகொண்டிருந்த நான்கு ஆசாரிகளில் ஒரு ஆசாரிதான் அவர்.தாடி வைத்தக்கொண்டிருந்தார்.
'என்ன சட்டம் எல்லாம் எடுத்துகிட்டு போறீங்க் யாருது எவ்ருது என்னா சேதி இது எல்லாம்' சத்தமாகக்கேட்டான்.
'என்னா சாரு இண்ணைக்கு வேல முடியுது.உங்க கெரகபிரவேஷம் இன்னும் வருணும் அதுக்கு ஆசாரிவ நாங்க ஒரு முக்காலி ஒரு விளக்குதண்டு ஒரு மணைப்பலகை இந்த மூணும் புத்சா சேஞ்ஜி தரோணும். எங்க மொறன்னு ஒண்ணு இருக்கு.புள்ளயாரு குந்த முக்காலி காமாட்சி வெளக்கு குந்த அப்படி இல்லைன்னா ரட்சுமி வெளக்கு.குந்த ஒரு வெளக்குதண்டு, ஊட்டுக்குவர்ர வூட்டுக்கு வர்ர அந்த அய்யிரு குந்த மணைப்பலக இதுவ மூணுமில்லன்னா அது அப்புறம் ஒரு வூடாவரது தான் எப்பிடி.நானு அந்த மூணையும் ரட்சணமா செஞ்சி கொண்டாந்து புது வீடு குடி நொழையகுள்ள கூடத்துல வைப்பன்'
அவனுக்குத்தலை சுற்றியது.ஆசாரி எதோ திருடிச்செல்வதாகவும் தான் அதனைக்கண்டு ப்பிடித்து விட்டதாகவும் மனதில் கணக்கு போட்ட அவனுக்கு ஒரு புது செய்தியை இந்த தாடி வைத்த ஆசாரி சொன்னார்.
' நீங்க ராமமா இல்ல பூசையா'
'பூசை' சரியாகத்தான் சொன்னோமா என்று யோசித்தான்.
' சாரு அதுக்குத்தக்கன ரட்சுமி வெளக்கு இல்லன்னா அந்த காமாட்சி வெளக்குக்கு தண்டு நானு செய்யகுள்ள அந்த குறி வைக்கோணும்'.
' சரிசரி ஆவுட்டும்'
அவன் வீடு நோக்கி சைக்கிளை மிதித்தான்.வீட்டில் மூன்று ஆசாரிகள் மட்டும் உட்கார்ந்து கதை சொல்லிக்கொண்டிருந்தனர்.
'இந்தாங்க பட்டை சீல'
'அப்பிடி வையுங்க சாரு'
'அவுசரமா வேனும்னு சொன்னீங்களே'
'வேல முடிஞ்சிப்போச்சி. இப்ப என்னாத்துக்கு பட்டை சீல அப்ப்டி வையுங்க'
'என்ன வேல முடிஞ்சிப்போச்சி'
'உங்க வூட்டு ஆசாரி வேலவ முடிஞ்சி போச்சின்னேன்'
'இப்ப வாங்கியாந்தது என்ன செய்ய கொண்டு போயி ராயல் கடையில பெரிய பாயிண்ட நானு குடுத்துடலாமா ஆசாரியாரே'
'ஓ அப்பிடி போவுதா சமாச்சாரம். நல்லா இருக்குது கதை. வேற வேல இருந்தா பாருங்க சாரு'
'இனி பட்டை சீலைக்கு வேலை இல்லதானே'
'சாரு நாங்க எங்க ரம்பத்துக்கு புதுசா கூரம் வச்சாதாம் நாளைக்கு ஒருத்தன் வீட்டுக்கு வேலைக்குப்போவுலாம்.அதுக்கு பட்டை சீல வேணாமா'
'சரி கெடக்கட்டும். இன்னொரு ஆசாரி தாடி வச்சவரு இருந்தாரே அவரு எங்கே'
'வருவாரு. வயிறு செத்த வலிக்குதுன்னு வெளியில போனாரு'
'எப்பிடி வருவாரு இங்க நானு என் கண்ணால பாத்தனே வர்ர வழியில. அது என்னா தேக்க சட்டம் எல்லாம் வாரிகிட்டு போறாரு'
'நீங்க கேட்டதுக்கு தாடிக்காரரு என்னா சொன்னாரு'
' புதுசா விளக்கு தண்டு முக்காலி மணைப்பலகைன்னு செய்து கொண்டாரென்னாரு'
'ரொம்ப மோசம் சாரு நீங்க ஒரு வெஷயத்தை தெரிஞ்சிகிட்டு அப்புறம் எங்கிட்டயும் கேக்குறது என்னா நெயாயம்' ..என்றார் அந்த காந்தி நகர் வேலாயுதம் ஆசாரி.
பாக்கி ரெண்டு ஆசாரிகளும் வெற்றிலை போட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் கள்ளமாக பார்த்துக்கொண்டனர்.
'அந்த மூணு ஜாமானும் கெரகபிரவேசத்துக்கு வந்துபுடும்ல ஆசாரியாரே'
'கெடக்கு வுடுங்க அதையே பேசிகிட்டு. நாங்க கிளம்புறம் கோவிந்த ராசு மேஸ்திரி வந்தார்னா சேதி சொல்லுங்க.அவுரு வேல முடிச்சாருன்னா நானு வந்து கதவுவுள எல்லாம் மாட்டி ஆட வுட இங்க வருணும். அந்த வேல பாக்கி கெடக்கு'.
அந்த மூன்று ஆசாரிகளும் அப்போதே கிளம்பிப்போயினர்.கோவிந்தராசு மேஸ்திரி அவர் சொன்னபடி வந்தார் கட்டுவேலை பூச்சு வேலை எல்லாம் முடித்தார்.பின்னே அந்த காந்தி நகர் வேலாயுத ஆசாரி வந்தார் கதவுகளை அங்கங்கு மாட்டி மாட்டி ஆடவிட்டார்.
கிரகப்பிரவேசம் திருநாளும் வந்தது.கோவிந்தராசு மேஸ்திரியும் வேலாயுத ஆசாரியும் வந்தனர். அவன் இரண்டு பேருக்குமே தங்க மோதிரம் வேட்டி சட்டை வாங்கி வைத்துக்கொடுத்தான்.
'என்னா ஆசாரியாரே அந்த முக்காலி,விளக்கு தண்டு.மணைப்பலகை செஞ்சி கொண்டாரென்னு என் தேக்க சட்டத்தை கொண்டுபோன தாடி வச்ச ஆசாரி வருல'
'சாரு படிச்சிருக்கிங்க ஆனா அந்த அளவுக்கு வெசயம்தான் எட்டுல' வேலாயுத ஆசாரி அது மட்டுமே அவனிடம் சொல்லிவிட்டு அந்த காந்தி நகர் நோக்கி ப்புறப்பட்டார்..
--------------------------------------------------------------------------------------------------------------


ி
.

Thursday, June 25, 2015

theravusu -story



தெரவுசு -எஸ்ஸார்சி



அவன் வீட்டுத்தோட்டம் சின்னது அதனில் வேலி ஓரமாக நான்கு தேக்கு மரங்கள் இருந்தன.தருமங்குடிக்கு பக்கமாகத்தான் முதுகுன்றம்.. அந்த முதுகுன்றத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை. அந்த சந்தையில் வாங்கிய தேக்கங்கன்றுகள்தான் அவை.
மஞ்சள் வண்ண தலைப்பாகை கட்டிய சைக்கிள் காரனிடம்.அய்ந்து கன்றுகள் வாங்கினான்.ஈர சாக்கில் சுற்றப்பட்டு சைக்கிள் காரியரில் அவை மொத்தமாக சயனித்து இருந்தன அவன் . வீட்டு த்தோட்டத்தில் வேலி ஓரம் நட்ட அத்தனையும் பிழைத்தன. வளர்ந்தன. வானம் தொட்டன.ஒன்று மட்டும் ஓங்காமல் ந்ரேல் என்று இருந்தது. அப்புறம் கரேல் எனக் காய்ந்து போனது. அதனை ப்பிடுங்கி எறிந்தான்.பிழைத்தவையோ ஓங்கி ஒய்யாரமாக வளர்ந்தன. தேக்க இலைகள் ஒருவர் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு அகலித்து வெடித்தன. இலைகள் அவனிடம் என்னைப்பார் என் அழகைப்பார் என்றன.
'சார் வூட்ட்ல இருக்குறா'
வீட்டு வாயில் புறம் மோட்டார் சைக்கிளில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர்தான் கூப்பிட்டு இருக்க வேண்டும்.
'நீங்க யாரு உங்களுக்கு என்ன வேணும்'
'நான் உங்க வீட்டு மனைக்கு பின் புற மனைக்காரன்.என்னை பாத்து இருக்க மாட்டிங்க.நான் வேல பாக்குறது வடலூர். அங்க பீங்கான் ஆலையில இருக்கேன். இப்ப இங்க என் மனையில ஒரு ஊடு கட்டுலாம்னு ஒரு யோசனையில இருக்கன்'
'உள்ள வாங்களன் வண்டியில இருந்துகிட்டு பேசுணுமா'
' உள்ள வந்து என்ன செய்யப்போறன்.வேலி ஓரமா இருக்குற நாலு தேக்கு மரங்களையும் நீங்க வெட்டி எடுத்துடணும்'
பச்சை மரங்களை வெட்டி எடுப்பது. எப்படி அவன் அதிர்ந்துபோனான்.
'என்னா யோசனை மரங்களை வெட்டி எடுத்துடுங்க. அவ்வளவுதான்.ஒரு பத்து நாளு பாப்பேன். ஒண்ணும் கதை ஆவுலன்னா அப்புறம் நானே வெட்ட வேண்டி வரும். எதுக்கும் வெஷயத்தை சொல்லிபுடணும்.அதான்'
அவன் ஒன்றும் பதில் சொல்லாமல் இருந்தான். என்ன சொல்வது என்றுமே அவனுக்குத்த்தெரியவில்லை.
'அப்புறம் நான் கெளம்புறேன்' அவன் மோட்டார் சைக்கிளைத்திருப்பிக்கொண்டு வேறு பக்கம் போனான்.கூடவந்தனும் அவனோடு தொத்திக்கொண்டான்.
ஒரே குழப்பமாக இருந்தது.அவனுக்கு ஒரு அண்ணன். அவன் சென்னையில் வக்கீல் வேலை பார்த்தான்.அவனிடம் போன் போட்டு விவரம் கேட்கலாம் என்ற யோசனை வந்தது.தோட்டத்து பக்கமாய்ப்போய் ப்பார்த்தான்.நான்கு தேக்க.மரங்கள் நான்கும் கோபித்துக்கொண்ட மாதிரியே தெரிந்தது.'நாங்கள் என்ன பாவம் செய்தோம்.அதற்குள்ளாக எங்களை வெட்ட முடிவு எடுத்துவிட்டீர்கள் நீங்கள்' என்று அம்மரங்கள் அவனிடம் காற்றில் ஆடி ஆடித்தம் குறை சொல்லின..
நான்கு தேக்கு மரங்களையும் தொட்டுப்பார்த்தான்.ஒவ்வொரு மரமும் பதினைந்து அடி உயரத்துக்கு பருத்து உய்ர்ந்திருந்தது.அதற்கு மேலும் அவை உயரம்தான். கட்டாயம் பதினைந்து அடிக்கு உயரம் குறையவே செய்யாது.மரத்தை கைகளால் அணைத்துப்பார்த்தான்.அவற்றின் கனம் அறிந்தான்,எப்படியும் மொத்தமாக அறுபது சதுரத்துக்கு தேறும்.
வக்கீல் அண்ணனுக்கு போன் போட்டான். வக்கீல் அண்ணன் சென்னை தியாகராய நகரில் குடி இருந்தான்.அவனைக்கேட்காமல் அவன் எதுவும் செய்தது இல்லை.கேட்காமல் செய்து விட்டால் பின்னால் அண்ணனிடம் யார் பாட்டு வாங்குவது. கைபேசியை எடுத்து அண்ணனைக்கூப்பிட்டான்.
'அண்ண நானு பேசுறேன். ஒரு சேதி'
'சட்டுனு சொல்லு. உனக்குன்னு எதாவது சேதி இருந்துகிட்டே இருக்கும்'
' என் தோட்டத்துல இருக்குற தேக்க மரங்களை வெட்டுணுமாம் அந்த பின்புற மனகாரரு வூடு கட்டப்போறாராம்'
'அவருக்கு மரங்க இடைஞ்சலா இருக்குதா நீ பாத்தியா'
'பாத்தேன் அப்படி ஒண்ணுமில்லே இருந்தாலும்'
' இப்படியா பேசறது. அந்த மரங்க அவுரு மனைக்கு இடஞ்சலா இல்லையா அது மட்டும் சொல்லு'
'இடஞ்சல் தான்'
'அப்புறம் இதுல என்னா பேசுறது.நாட்டுதேக்கு சதுரம் ஆயிரத்து முந்நூறுன்னு கணக்கு போட்டா நாலும் எத்தனி சதுரம் வருது எம்மாம் காசு வருதுன்னு பாரு. உனக்கு மரம் தேவை கீவை யிருக்கா இல்லன்னா வெட்டு நல்ல வெலைக்கு குடுத்துடு; அப்புறம் வேற'
'வேற ஒண்ணும் இல்லே நான் வச்சிடறேன்' பேசி முடித்தான்.
நேறாகத் தென்கோட்டை வீதி நாடார் மர வாடிக்கு சைக்கிளை எடுத்துக்கொண்டு போனான்.மரவாடி கல்லாவில் ஒரு முதியவர் அமர்ந்திருந்தார்.
'என்னா வேணும்'
'தேக்கு மரம் சதுரம் என்ன விலைன்னு தெரிஞ்சிகிணும்'
'ஏன் மரம் வேணுமா இல்லையா அத மொதல்ல சொல்லு சாரு'
'இல்ல வெல தெரியணும்'
'வெலயா அதுவ ப்ர்மா சரக்குன்னா ரூவா ஆயிரத்து ஐநூறு கேரளான்னா இன்னும் நூறு கூட வரும்'
'நமப ஊர் தேக்கு வெல தெரியணும்'
'நாங்க அத எப்பவுமே விக்குறது இல்ல அப்புறம் வேற என்னா வேணும்'
' என் வூட்டுல நாலு தேக்கு மரம் இருக்கு. வெலைக்கு கொடுக்குலாம்னு'
'இது ஆசாரிவகிட்ட பேசுற சமாச்சாரம் மரவாடின்னா இங்க அய்ர்ன் சரக்குதாம் விக்குறம் நாட்டு மரம் எல்லாம் இல்ல'
'அயர்ன் சரக்குன்ன என்னங்க அய்யா'
'நீரு எடத்தைக்காலி செய்யி.மொத நீ கெளம்பு கெளம்பு'
அவன் வீட்டுக்கு உடன் புறப்பட்டு வந்தான். சைக்கிளை உருட்டிக்கொண்டேதான் வந்தான்.ஏறி பெடல் செய்து பார்த்தான். பின் வீல் அடிபட்டது. பின் சக்கர டயரில் காற்று குறைந்து இருந்தது.. சைக்கிள் கடைக்காரன் யாருமே கடை திறந்த பாடில்லை.
அவன் வீட்டு வாசலில் இருவர் நின்று பேசிக்கொண்டே இருந்தனர்.அதை நோட்டமிட்டான்.
'தேக்கு மரம் வெலைக்கு த்ர்ரீங்கன்னாங்க அதான் வந்தம்'
'யாரு சொன்னது'
'ஏன் மரவாடியிலபோயி கேட்டுகிட்டு வந்திங்க அது எங்களுக்கு தெரியும்ல'
' அந்தக்கதை ஏன் பேசிகிட்டு மரத்தை வந்து பாருங்க வாங்க தோட்டத்துக்கு போவுலாம்'
வீட்டுக்கு வந்த இருவரும் தேக்கமரத்தை தட்டி தட்டி பார்த்தனர். 'ரெண்டு மரம் சுகுரா இருக்கு.ரெண்டு மரத்துல சரியா நாதம் வருல.பொற கிற இருக்குலாம்'
என்றான் வந்தவர்களில் மூத்தவன்.
'நல்லா இருக்குறதுக்கு காசு அப்புறம் என்னா'
என்றான் வந்தவர்களில் இளையவன்.
இது கேட்டு அவன் திரு திரு என்று விழித்தான். அவனுக்கு குழப்பமாகவும் இருந்தது.
'இது அதோட பஞ்சாங்கம் எல்லாம் எதுக்கு எம்மாம் காசு கொடுப்பிங்க் அது மட்டும் சொல்லுங்க
'ம் மரத்தை அறுத்து போட்டாதான் சொல்லுலாம்'
' மரத்தை அறுத்துடுவம்' என்றான் இளையவன்.
'மரத்தை அப்புறம் அறுக்கலாம் மொதல்ல காசு எம்மான்னு பேசுவோம்' அவன் சுதாரித்துக்கொண்ட மாதிரி பேசினான்.
'ஏம் வெட்டியா பேசிகிட்டு, நாலு தேக்க மரம் நால்ரெண்டு எட்டு தர்ரம்'
'என்ன எட்டாயிரம்த்ானா பிச்ச காசா இருக்கு. எனக்கு எண்பதாயிரம் வருணும்'
கட கட என சிரித்தான். மூத்தவன்.

'மரத்தை அறுத்துபோட்டு வச்சிகிறேன் வெலய தெரிஞ்சிகிட்டு.அப்புறம் விக்குறது பாக்குலாம்'
'சாரு தேக்கு மரத்தை என்னுமா வெட்டுவ லேசுபட்ட சமாச்சரம் இல்லே.மரத்தை எப்பிடி ஏத்துகினு போவ எந்த மரவாடிகாரன் எப்பிடி அறுப்பான் பாரெஸ்ட் ரெவுன்யு ஆபிசரு டவுனு வியேவோ எல்லாம் எதுக்கு கொழா சட்டை போட்டுகினு குந்தி இருக்குறாங்க உன்னை வுட்டுடுவாங்களா' என்றான் வந்தவர்களில் இளையவன்.
அவனுக்குத்தலை சுற்றியது. இது எல்லாம் உண்மையா சும்மா இவர்கள் விடும் ரீலாக இருக்குமா என யோசித்தான்.
'இந்தா நாலு மரத்துக்கும் நாலு ஆயிரம் அச்சாரம் மேங்கொண்டு இன்னும் பத்து ரூவா தர்ரன் அது மரம் வெட்டகுள்ள குடுப்போம். என்னா எம் பேரு சங்கர ஆசாரி தே இருக்குற கார்குடல்தான் என் ஊரு இந்த பக்கத்துல யாருக்கும் தெரிஞ்ச பெரிய ஆசாரியும் தான் நான் ' என்றான் வந்திருந்த முதியவன்.
பணத்தை வாங்குவதா வேண்டாமா என்று யோசித்தான்.மனம் சலனமானது. உடன் சற்றுபயமாகவும் இருந்தது.அச்சத்தோடு நான்காயிரத்தை வாங்கி சட்டைப்பையில் பத்திரமாக வைத்துக்கொண்டான்.
' எண்ணைக்கு வருவிங்க மரம் வெட்ட'
'இண்ணைக்கு என்னா வெசாழனா அடுத்த வெசாழனுக்குள்ள சொச்ச காசு குடுத்துட்டு மரத்தை எடுத்துகுறம்.மரம் உள்ளார பொறன்னா எங்களுக்கு நஸ்டம்தான் என்னா செய்வ வெயாபாரம்னா வரும் போவும் அத பாக்குலாமா சாரு. மரம் பத்திரம் நாங்க வர்ரம்'
முதியவன் வாசலுக்கு வந்தான். இருவரும் அங்கிருந்து கிளம்பிப்போயினர.
அவன் பிரச்சனை ஓரளவுக்கு தீர்ந்துவிட்டமாதிரி நினைத்தான்.அடுத்த வியாழன் வந்தது. இன்னும் அடுதத வியாழன் வந்தது. நாட்கள் ஓடின.தோட்டத்து மனைக்காரன் வந்தால் என்ன பதில் சொல்லுவது.அவனே மரங்களை வெட்டிக்கொண்டு பணம் கொடுக்க முடியாது என்பானோ என்று யோசித்தான்.
'சாரு சாரு'
'யாரது சாரு பூருன்னுகிட்டு' மெதுவாகத்தான் சொல்லிக்கொண்டான்.
'ரெண்டு நாளா என்னா ஒரே ரோசனையில இருக்க்றீீங்க என்னா சேதி' எதிர்வீட்டு பால்கடைக்காரன் ஆரம்பித்தான்.
'இல்ல தோட்டத்து மனையில வூடு கட்டப்போறாங்களாம். தேக்க மரம் வெட்டுணும்னு சொன்னாங்க. அச்சாரம் நாலாயிரம் வாங்கிப்புட்டேன். அந்த பாழாபோன ஆளுவ இன்னும் வருல நாளு இருவது ஆச்சி வந்து மரத்தை இன்னும் வெட்டுல'
'இப்ப என்ன அதுக்கு . நாளும் ஆயிபோச்சி இருவதுக்கு மேல நீவருல தோட்டத்து மனைக்காரன் என்னமுடுக்குறான். என்னா செய்வேன்னு சொல்லுறது. இப்ப இப்ப .எனக்கு ஒரு யோசனை அந்த பாக்கி பத்தாயிரம் நா தர்ரேன்.மரத்தை வெட்டிகுறன். எனக்கும் மரம் தேவை இருக்குது. கெடக்கட்டுமேன்னு இருந்தேன். நேரம் காலம் கூடி வருதே என்னா நான் சொல்றது'
'ரொம்ப நல்லது சாரு அந்த அச்சார பனம் நாலாயிரம் எங்கிட்ட இருக்குது. நானு என்ன செய்ய'
'அந்த நாயிவ வரும் வருட்டும். நா பாத்துகுறன். ஏங்கிக்க்ட்ட அந்த நாயை இட்ட்ாங்க உங்களுக்கு இதுல என்னா சோலி இருக்கு நா பாத்துக மாட்டனா பின்ன'
அவனுக்கு மனதிற்கு ஆறுதலாக இருந்தது. பழமலை நாதக்கடவுள் மட்டும் சும்மாயில்லை. அவரும் ஏதோ முடிந்தவரை உதவி செய்கிறார். மனத்திற்குள் பழமலை என்று சொல்லிக்கொண்டான்.
அவனுக்கு எப்படியோ ஒரு பதிநான்காயிரம் கைக்கு வந்து சேர்ந்துவிட்டதில் மகிழ்ச்சி.தேக்க மரங்களை வெட்டி எதிர் வீட்டு பால் கடைக்காரனே எடுத்துப்போனான்.
தோட்டத்து மனைக்காரன் கடைக்கால் பறிக்க வருவான் வருவான் என்று அவன் எதிர்பார்த்துக்கொண்டே இருந்தான்.தேக்க மரம் வெட்டி அவனுக்கு ஒத்தாசை செய்துவிட்டதைச்சொல்லி விடலாம் என்று தினம் தினம் யோசனையில் இருந்தான்.
ஒரு நாள் தோட்டத்துபக்கம் குல்லாவைத்த ஒரு பாய் ஏதோ சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தார்.
'அய்யா யாரு' அவன் கேட்டான்.
'என்னா சாரு என்ன மறந்துட்டிங்க.நானும் நீங்களும் ஒண்ணாதான் மனைவாங்குனம்.அந்த வள்ளல் முதலிகிட்ட.நானு துபாயி போயி ஆச்சி பத்து வருஷம் இருக்கும். நேத்துதான் ஊருக்குத் திரும்பி வந்தன்.நீங்க தோட்டத்துல தேக்கங்கண்ணு வச்சது கூடம் எனக்கு தெரியும்.அதுவுளயும் காணும் வெட்டிட்டிங்களா'
''இப்பதான் வெலைக்கு குடுத்தேன்.தோட்டத்துல தேக்க மரம் இருந்தா குடும்பத்துக்கு ஆவாதுன்னு எங்க ஊரு அய்யிரு வேற ஓயாம சொன்னாரு'
தேக்க மரத்தை எல்லாம் வெட்டச்சொன்னதும் ஆசாரியாக வந்து மரம் வெட்டிக்கொள்ள அச்சாரம் தந்ததும் அவன் எதிர்வீட்டு பால்கடைக்காரன் போட்ட நாடகம் என்று அவனுக்கு மண்டையில் உரைத்தது.
அவன் தோட்டத்தைவிட்டு த்தெரு பக்கம் வந்தான். பூணல் போட்டுக்கொண்ட புது ப்புது ஆசாரிகள் எதிர்வீட்டின் முன் கிடந்த தேக்க மரங்களை அளந்து அளந்து சாக் பீசாலும் கரிக்கட்டியாலும் வருவி கோடு போட்டுக்கொண்டிருந்தனர். 'நம்ம தெரவுசு யாருக்கு வரும்' என்று சொல்லி வாயிற்கதவை மட்டும் தாழிட்டு ப்படுத்து உறங்கிப்போனான்..
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
.












..
'

Saturday, June 20, 2015

manjal -story




மஞ்சள் -எஸ்ஸார்சி




தருமங்குடிக்கு நடு நாயகாமக இருந்தது ஒரு நந்தவனம்.அந்த நந்த வனத்திலிருந்து பறித்து எடுத்த மலர்களை மாலையாத்தொடுத்து தருமை நாதன் கோவிலுக்கு த்தானே தன் கையால் பின்னிய தென்னங்குடலையில் சுமந்து வருவார் அந்த கொட்டை கட்டி வாத்தியார். கழுத்தில் ஒரே ஒரு உருத்திராட்ச மணியை சிவப்புக்கயற்றில் கோர்த்துத்தன் கழுத்தில் கட்டிக்கொண்டிருந்தார் அவரை க்கோவில் வாத்தியார் கொட்டை கட்டி வாத்தியார் மாலைகட்டி வாத்தியார் இன்னும் ஏதோ பெயர் வைத்து தருமங்குடிக்காரர்கள் பாசமாக அழைத்தார்கள். வாத்தியார் என்பது மட்டும் வருமொழியில் இருத்தல் அவசியம்.நந்தவனத்தைச்சுற்றி தென்னை மரங்களை வளர்த்து ஆளாக்கி விட்டிருந்தனர் தருமங்குடிப்பெரியவர்கள். யாழப்பாண வகை தென்னை மரங்கள் சிலவும் நடு நடுவே இருந்தன.
.தருமங்குடி வெள்ளாழத்தெரு நீண்ட தெரு. இரட்டை சாரியும் வீடுகள்.சைவப்பிள்ளைகள் சிவ பூஜையும் திருமுறையோடு வெங்கல தாளமும் கை கொண்டு அவர்கள் ஊரை வலம் வந்த காலம் ஒன்று இருந்தது.அக்கிரகாரத்து பார்ப்னர்களின் வேத சாத்திர ஆகம சந்தேகங்களுக்குப்பதில் சொல்லி வழி காட்டுபவர்களாய் இருந்த பெரியவர்களுமே அந்த வெள்ளாழத்தெருவில் வசித்து வந்தார்கள். பார்ப்பனக்குடும்பங்களுக்குள் எழும் உள் நாட்டுப் பிரச்சனைகள் பலவற்றிற்கும் தீர்ப்பு சொல்பவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள்.அப்படிச்சொல்லப்படும் அந்த தீர்ப்புக்கள் வேத வாக்காக தருமங்குடி வாழ் பார்ப்பனர்களால் ஏற்கப்பட்டன.
ராமுவோடு சந்துருவும் சிவராமனும் பாலுவும் தருமங்குடி ச்சிறுவர்கள். ஐந்தாம் வகுப்பு. கிராம பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் பயின்றனர். தருமை நாதனின் கோவில் நந்தவனம் சுற்றி இந்த ப்பையன்களின் வீடுகள் இவர்களில் ராமுவோடு சந்துரு அக்கிரகாரத்து அம்பிகள்.மற்றவர்களுக்கு இருப்பிடம் அந்த வெள்ளாழத்தெரு.சிவராமனும் பாலுவும் கொஞ்சம் தைர்யசாலிகளாக இருந்தார்கள்.
அக்கிரகாரத்து சந்துருவுக்கு அசாத்திய துணிச்சலுண்டு.பாம்பை க்கையில் பிடித்துக்கொன்டு பாம்பு பார் பார் என்று கூவியபடி தட்டாமாலை சுற்றுவான்.கல் வீசினான் என்றால் எவ்வளவு உயர தென்னை மரம் இல்லை அது மாமரமானால்தான் என்ன காய்கள் அவன் எறிந்த கல் அவைமேல் பட்டதும் கீழே வந்து அவன் சொன்னது கேட்கும். அக்கிரகாரத்தில் இப்ப்டி எல்லாம்கூட பையன்கள் இருப்பார்களா என்ன இந்த சந்துரு மட்டும் அப்படி வித்தியாசமாக இருந்தான்.அவன்தான் பெரிய சைக்கிளை இரண்டாம் வகுப்பிலேயே பழகிக்கொண்டவன்.இரண்டு கைகளையும் ஹாண்டில்பாரைவிட்டு எடுத்துவிட்டு சைக்கிளை அவன் நெடுந்தூரம் ஓட்டிக்கொண்டுவருவதை ஊர் சனங்கள்அச்சத்தோடு பார்ப்பார்கள். தருமங்குடியில் எந்த கிணற்றிலும் இறங்குவான். வாளியைக்குடத்தை கிணற்றில் போட்டுவிட்டவர்கள் அவன் பின்னே சுற்றி சுற்றி வருவார்கள். காதில் ஒரு முறை அவனுக்கு சீழ் வந்ததது. ஆக பிளாஸ்டிக் பேப்பர் பையினால் தலையை மூடி இறுக்கிகட்டிக்கொண்டான். தருமைநாதன் கோவில் கிணற்றில் குதித்து குருக்களுக்கு அபிஷேக்குடத்தை எடுத்துக்கொடுத்தான்.தண்ணீரில் மூழ்கி குடத்தை எடுத்துக்கொண்டு தண்ணீர் மட்டத்திலிருந்து வெளி வந்துவிட்டபின்னரும் அவன் தலையில் கட்டியிருந்த பிளாஸ்டிக் பேப்பரை எடுக்க முடியாமல் மூச்சுத்திணறினான். உயிரே போயிருக்க வேண்டிய கட்டம். எப்படியோ சமாளித்துக்கொண்டு பிழைத்து எழுந்தான். கிணற்றின் கரையில் நின்றிருந்த கோவில் குருக்கள் சாமா துடி துடித்துப்போனார் அந்த .தருமாம்பாள்தான் அவனைக்காப்பாற்றிவிட்டதாக அவனிடம் சொன்னார்.சாமா குருக்களுக்கு அவனிடத்தில் எத்தனையோ பிரியம். எல்லா கோவில் விசேஷங்களுக்கும் அவனைக்கட்டாயம் அழைத்துச்செல்வார்.
ராமுதான் அவன் நண்பர்கள் குழாத்திலேயே பயந்தாகொள்ளி.எதற்கெடுத்தாலும் ராமுவுக்கு அச்சம்.அவனும் தென்னைமரம் ஏற கற்றுக்கொண்டான்.. வாடகை சைக்கிள் கொண்டு வந்து பௌர்ணமி இரவு முச்சூடும் பழகினான். பட்டினத்தான் வாய்க்காலில் நீச்சல் அடிக்க மட்டும் அவனுக்கு ஏனோ நண்பர்க்ள் கொஞ்சம் தாமதமாக சொல்லிகொடுத்தனர்.
தருமங்குடி பேருந்து நிறுத்தத்தில். இறங்கினால் முதலில் ஒரு மணிப்பிள்ளை மோட்டார் கொட்டகை வரும். பேருந்து நிறுத்தம் எதிரே நெட்டை நாராயணன் மகன் வேலாயுதம் டீக்கடை போட்டிருந்தான்.தருமங்குடி செல்லும் கப்பி சாலையில் நடந்தால் தருமங்குடி சுடுகாடு தான் முதலில் கண்ணில் படும். ஏன் இப்படி என்று எல்லோரும் கேட்டுக்கொள்வார்கள். விடைதான் யாருக்கும் தெரியவில்லை. சுடலை தாண்டி பட்டினத்தான் வாய்க்காலுக்குப்.பிறகு பிள்ளையார்கோவில். மேற்கு நோக்கிய பிள்ளையார் கோவில்.இந்த சுற்றுப்பட்டில் என்ன தமிழகம் முழுவதும் தேடினாலும் மேற்கு பார்த்த பிள்ளையார் கோவிலை பார்க்கமுடியுமா என்றால் முடியாதுதான். அதுவும் நாகத்தை இடுப்பில் சுற்றிக்கொண்ட விநாயகர் சிலை.
. ராமுவுக்கு தருமங்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி த்தனியாக இரவில் ஊர் உள் வர அச்சம்.வழியில் தருமங்குடி சுடுகாடு வரும்.அங்கு பேய்கள் நடமாடும் என்று விஷயம் தெரிந்தவர்கள் அவனிடம் சொல்லி இருக்கிறார்களே.அவன் அம்மாதான் மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு என தோத்திரம் சொல்லிக்கொண்டு சுடுகாட்டை க்கடக்க அவனுக்குச்சொல்லிக்கொடுத்திருந்தாள்.எது சொன்னால் என்ன பயம் மட்டும் போக மாட்டேன் என்றுதான் அடம் பிடித்தது. தீப்பெட்டி ஒன்றை பாக்கெட்டில் வாங்கிப்போட்டுக்கொண்டு இரவில் நடப்பான்.எடை குறைவு விலை குறைவு வெட்டும் புலி தீப்பெட்டி மட்டும்தான். கையில் தீப்பெட்டி இருந்தால் பிசாசுகள் விலகிப்போகும் அவன் அம்மா சொன்னதுதான். சட்டைப் பையில் தீப்பெட்டி இருந்ததற்காக அவன் சிகரெட் பிடிக்கக்கூடும் என்று ஊகித்த வகுப்பு ஆசிரியரிடம் செமத்தையாய் அடி வாங்கியிருக்கிறான்.
சந்துருவும் பாலுவும் சிவராமனும் சேர்ந்து நந்தவனத்தில் யாழ்ப்பாண இள நீர் க்காய்கள் பறித்து சாப்பிட்டால் என்ன என முடிவு செய்தனர். கோவிலார்தான் நந்தவனப்பொறுப்பாளி.கோவிலார் என்றால் அவரும் வெள்ளாழத்தெருவில்தான் பெரிய வீட்டில் இருக்கிறார். இருந்தாலும் அவரைப்பார்க்க எல்லோருக்கும் பயமாக இருக்கிறதே பின் என்ன செய்வது.ஆகத்தான் நந்தவனத்திலுள்ள யாழ்ப்பாண தென்னை மரத்தில்.ஏறித்தேங்காய் இள நீர்க்காயாக பறித்து விடுவது என முடிவு செய்தார்கள். சந்துரு மரத்தில் ஏறுவது பாலுவும் சிவராமனும் இள நீர்க்காய்களை ப்பொறுக்கி எடுத்துக்கொண்டுபோய் நந்தவனத்தில் கீழ்ப்பகுதியிலுள்ள சிங்கபூர்கனக்கம்பரச் செடிகளுக்கு இடையில் பத்திரமாக பதுங்கவைப்பது என முடிவாகியது. வேறு ஒரு விஷயம் பிறகுதான் நினைவுக்கு வந்தது.வெள்ளாழத்தெருவில் பகல் ஒரு மணி முதல் நான்கு வரை யாரும் வெளியில் வரமாட்டார்கள்தான். ஆனால் தென்னை மரத்திலிருந்து தொப் தொப் என்று காய்களைப் பறித்துப்போட்டால் .சத்தம் வரும் அது அவர்களை எழுப்பிவிட்டுவிட்டால் என்ன செய்வது.ஆக தேங்காய் பறித்து அதனை முதுகில்கட்டிக்கொண்டுபோகும் பை ஒன்றில் போட்டுக்கொள்ள வேண்டும். பின்னர்தான் சந்துரு மரத்திலிருந்து கீழே இறங்க வேண்டும். சிவராமன் இந்த யோசனைசொன்னான்.
தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை வேறு யார்கண்ணிலும் படாமல் இந்தத் திருட்டுக் காரியம் கச்சிதமாக நடை பெறுகிறதா என்பதைக்கண்காணிக்க ஒருவன் அவசியம் வேண்டுமே இப்படி பாலு ஒரு குறுக்குசால் ஓட்டினான்.சந்துரு தான் பஞ்சாங்க அய்யர் பிள்ளை ராமு பையனை அந்த ரகசிய வேலைக்கு அழைத்து வருவதாக உறுதி சொன்னான்.சிவராமனுக்கும் பாலுவுக்கும் ராமுவின் மேல் நம்பிக்கை இல்லை.'அவன் சுத்தமா த்கிர்யம் இல்லாத பயல். இந்த காரியம் எல்லாம்போய் அந்தப் பய செய்வானாம்' சிவராமன் கிண்டல் செய்தான்.'திருட்டு செய்றோம்னாலும் அதுக்கு ஒரு காவலு இல்லாம கதை ஆவாது' என்றான் மீண்டும் பாலு.சந்துருதான் எப்படியோ பேசி ராமுவை அழைத்து வந்து விடுவதாக உறுதி சொன்னான்.
மறு நாள் தருமங்குடி நந்தவனத்தில் யாழ்ப்பாண இள நீர் பறிக்கும் திருட்டு வேலை திட்டமிட்டபடி நடந்தது.ராமு காவல் காக்கும் வேலைக்கு வந்தான். 'வெள்ளாழத்தெருவுல யாராவது வருவது தெரிந்தால் நீ உன் வீட்டு நாயை அழைப்பத்போலே' ட்ரோதா ட்ரோதா' என்று மட்டும் குரல் கொடு அது போதும் என்றான் சந்துரு அவனிடம்.
நால்வருக்கும் நான்கு இள நீர் க்காய்கள் பறிக்க முடிவாகியது. சந்துரு சொன்னபடி தன் முதுகில் கட்டிக்கொண்ட யூரியா பையினுள் காய்களை போட்டுக்கொண்டு மரத்திலிருந்து இறங்கினான்..ஆளுக்கு ஒரு இள நீர்க்காய் என சந்துருவும் பாலுவும் தூக்கிக்கொண்டு நந்தவனத்துக்கள் போயினர். 'ராமு உன் காய் கீழ இருக்கு எடுத்துகிட்டு பின்னாலேயே வா' சிவராமன் கட்டளை தந்தான்.ராமு பைய நடந்து தென்னை மரத்துக்குக்கீழாகப்போனான்.அவர்கள் மூவரும் சிங்கப்பூர் கனகாம்பரப்புதருக்குள் சென்று அமர்ந்து கொண்டனர். ராமு இள நீர்க்காயை கையில் எடுக்கும் சமயம் கொட்டை கட்டி வாத்தியார் நந்தவனம் எதிர்பக்கமுள்ள திருக்குளத்திலிருந்து திரும்பி அங்கே வந்து நின்றார்.
'ஏண்டா உனக்கு இந்த வேலை ராமு இந்த வேகாத வெயில்ல தேங்கா அடிக்க கெளம்பிட்ட' கொட்டை கட்டி கத்த ஆரம்பித்தார். அவன் ஒன்றும் சொல்ல முடியாமல் திரு திரு என்று விழித்தான். கனகாம்பரப்புதருக்குள் இருந்து ஒன்றும் குரல் வரவேயில்லை. ராமு அவ்விடம் பார்ப்பதை நிறுத்திக்கொண்டான்.கோவிலார் வீட்டிற்கு கொட்டை கட்டி ராமுவை தர தர என்று இழுத்துக்கொண்டு போனார். திண்ணைக்கு வந்த கோவிலாரிடம் கொட்டைகட்டி வாத்தியார் சேதி சொன்னார். ராமு தரையைதான் பார்த்துக்கொண்டிருந்தான்.' பாப்பார புள்ள நீ என்னா காரியம் செய்யுற போடா இனிமே இந்த மாதிரி ஈன காரியம் எல்லாம் செய்யாத தெரிதா காதைப்புடி அஞ்சி தோப்புக்கரணம் போடு அப்புறம் கெளம்பு' என்றார் கோவிலார். தோப்புக்கரணம் காதைப்பிடித்துக்கொண்டு போட்டு முடித்தான் ராமு.
கொட்டைகட்டி கொண்டுபோன இள நீர்க்காயை வெட்டி கோவிலாருக்கு ஒரு கிளாசில் நிறைத்துக்கொடுத்து தன் ராஜ விசுவாசத்தைக்காட்டி முடித்தார்.இள நீர் மட்டையில் இருந்த வழுக்கையை கொட்டைகட்டியே எடுத்துக்கொள்ள கோவிலார் உத்த்ரவு போட்டார்.ராமு கண்கள் சிவக்க தன் வீடு திரும்பினான்.சிவராமன் பாலு சந்துரு மூவரும் அரசமரத்தடியில் ஜில்லி விலையாடிக்கொண்டிருந்தார்கள்.
'திருட்டு இள் நியை வூட்டுக்கொண்டு போயிட்ட என்னா பைய நீ' சிவராமன் ராமுவைப்பார்த்துக்கத்தினான்.
'மஞ்சக்கொல்லையார் கடையில தேங்காய கொண்டு போட்டு காசு வாங்கி முடிஞ்சிருப்பான்' பாலு தன் பங்குகுக்கு சொன்னான்.
'உன்ன இந்த வேலைக்கு கூட்டிகினு வந்தன் பாரு நான்' சந்துரு சொல்லி முடித்தான்..
ராமு அவர்களை ப்பார்க்கவே இல்லை. தன் வீட்டிற்குள் நுழைந்தான்.அப்பாவும் அம்மாவும் தயாராக நின்றுகொன்டிருந்தனர்.
'ஏண்டா உனக்கு இண்ணைக்கு தருமங்குடி ஸ்கூல்ல இருந்து ரெகார்ட் ஷீட் வாங்கிண்டு போயி.வளயமாதேவி ஸ்கூல்ல சேர்க்கணும். கையில சுத்தமா காசு இல்லே.அம்மா பத்து தேங்காய பொறுக்கி வச்சிருக்கா.அப்படியே வாழைக்கா பத்து இருக்கு.இந்த கூடய தூக்கிகோ.ஸ்கூலுக்கு போகலாம் வா வா' சொல்லிய அவன் அப்பாவிடம்
'கூடைய நீங்க எடுத்துகோங்கோ' அவன் அம்மா குரல் தாழ்த்திச் சொன்னாள்.
.ராமுவின் அம்மா அவன் தலைவாரி நெற்றிக்கு விபூதி இட்டுவிட்டு'கெளம்பு கெளம்பு ஸ்கூல்ல உன் ரெகார்ட் ஷீட் மட்டும் வாங்காம கெடக்காம் சந்துரு சிவராமன் பாலு இவா எல்லாரும் வாங்கிண்டு போயி அந்த வளயமாதேவி கோதண்டராமன் ஸ்கூல்ல சேத்துட்டா கையில காசு இல்லே அதனாலே பஞ்சாகங்கத்துல ஜனங்க அப்பாக்கு தானமா வச்சி குடுத்ததுல நல்லத பொறுக்கி இந்த கூடையில வச்சிருக்கேன்.
எடுத்துண்டு போயி சாத்தபாடிலேந்து பெரிய குட புடிச்சிண்டுண்டு நடந்து வர்ர அந்த பழனி வாத்தியாருண்ட கொடுத்துட்டு நமஸ்காரம் பண்னு உன் ரிக்கார்ட் ஷீட்ட கேளு' அம்மா சொல்லி முடித்தாள்.
அப்பா கூடையை எடுத்துக்கொண்டு நடக்க ராமு பின்னால் நடந்தான்.வெள்ளாழத்தெரு வழியாக ப்போய்த்தான் இடது பக்கம் திரும்பினால் நாகமணிந்த விநாயகர் கொவிலுக்கு எதிரே அந்த பள்ளிக்கூடம்.
வெள்ளாழத்தெரு நடு நாயகமாக இருந்த கோவிலார் வீட்டு வாசலில் கொட்டை கட்டி நின்று கொண்டிருக்க கோவிலார் திண்ணைமீது அமர்ந்திருந்தார்.
'என்ன அய்யரே கூடையில என்ன. உம் வீட்டுக்கு எப்பவும் கூடயில வரும் இப்ப போவுது'
''பையனுக்கு ரிகார்ட் ஷீட் வாங்கணும். வளயமாதேவி ஸ்கூல்ல சேர்க்கணும் கையில அஞ்சி பத்து இல்லே .கூடையில தேங்காயும் வாழைக்காயுமா பொறுக்கி எடுத்துண்டு இருக்கேன். இத எல்லாம் எடுத்துண்டு அந்த சாத்தப்பாடி பழனி வாத்தியார் சாட்சாத் அந்தப் பழநி முருகனா இருந்து மனசு வக்கணும். எனக்கு ரிகார்ட் ஷீட் கொடுக்கணும்'
'கூடய காட்டும்' கோவிலார் கட்டளையிட்டார்.
அப்பா கூடையைப்பிள்ளையிடம் காண்பித்தார்.சின்னதும் பெரிசுமாக அங்கங்கே மஞ்சளைப் பூசிக்கொண்டு தானத்தில் வந்த தேங்காய்கள் உள்ளே பத்திரமாக இருந்தன. ராமுவின் அப்பாதான் தருமங்குடி ஜனங்கள் வீட்டில் காரியம் செய்யும் போது தேங்காய்களில் அந்த மஞ்சளைப்பூசி இருக்கவும் வேண்டும்.வாழைக்காய்கள் மட்டும் கூடை ஓரமாக சயனித்துக்கிடந்தன.
'யாழ்ப்பாணக்காயுவ எதாவது உண்டான்னு பாத்தேன்'
' பிள்ளைவாளுக்கு தெரியாதா யாழ்ப்பாண காயுங்களை பிராம்ணனுக்கு யாராவது தானமா கொடுப்பாளா என்ன'
' இல்லே ' என்று சொல்லிய பிள்ளை ராமுவை முறைத்துப்பார்த்தார்.அவன் வெள்ளாழத்தெருவின் புழுதிகூடிய தரையை மட்டும் பார்த்துக்கொண்டான்.
' நான் ஸ்கூலுக்குப்போறன் அவன் தலை எழுத்தாவது இந்த தர்ப புல்லையும் மாங்கொத்துமா தூக்கிண்டு வீட்டுக்கு வீடு பல்ல காட்டிண்டு நிக்காம இருக்கணும். தருமாம்பா கண்ண திறந்து பாக்கணும்' சொல்லிய ராமுவின் அப்பா தேங்காய்க் கூடையோடு நடந்தார்.அவன் அப்பாவோடு கை யைபிடித்துகொண்டு பின்னே போனான்.
----------------------------------------------------.

Thursday, June 11, 2015

vizippu -story




விழிப்பு -எஸ்ஸார்சி




'விழிப்பு' என்கிற புதினத்தை நான் எழுதி முடித்தேன். என் எழுத்துக்களை எப்போதும் வெளியிடும் அதே தருமங்குடி பானுசந்திரன் பதிப்பகம்தான் அதனையும் வெளியிட்டது.பானுசந்திரன் பதிப்பகம் எங்கே அந்த பதிப்பகத்தின் உரிமையாளர் யார் என்று யாரும் தேடிப்போய்விட வேண்டாம்.அப்படியாருமே எங்கும் இல்லை.பானுமதியில் முதலில் இருக்கும் பானுவையும் ராமசந்திரனில் கடைசியில் இருக்கும் சந்திரனையும் எடுத்துக்கொண்டு பானு சந்திரன் பதிப்பகம் என்று எனது பதிப்பகத்திற்குப் பெயர் வைக்க என் நண்பர் சபாதான் யோசனை சொன்னவர்
.காசே செலவில்லாமல் ஒருவன் தன் மனைவியைக்கொஞ்சம் மகிழவும் செய்துவிடலாம். அதில் அவருடைய நண்பனாகிய எனக்கும் சில சவுகரியங்கள் ஏற்படலாம். சபாசார் இதனை எல்லாம் நினைத்துக்கொண்டுதான் இப்படிச்சொல்லியிய்ருக்கவேண்டும். அந்த யுக்தியும் கொஞ்சம் வேலை செய்தது இல்லை என்று சொல்லிவிடமுடியாது. எனது கவிதை த்தொகுப்பு 'ரணம் சுமந்து' நானே சொந்தமாய் அதனை வெளியிட்டபோது என் மனைவி தனது இரண்டு வளையல்களைக் கழட்டிக்கொடுத்து உதவி செய்தாள்.
சபா சாரும் சாதாரண ஆளா என்ன பெரிய மனிதர் பிரபல பத்திரிகைகளில் எல்லாம் எழுதி எழுதி பெரிய ஜாம்பவான் என்கிறபடிக்குப் பெயர் வாங்கியிருக்கிறார். அவர் எனக்குச்சொன்ன யோசனை வீண்போகவில்லை.
மனைவியரின் பெயரை ஒரு எழுத்தாளன் தான் தொடங்க இருக்கிற பதிப்பகத்துக்கு வைத்து விடுவதானாலேயே எல்லாம் ஆ ஊ என்று எகிறிக்குதித்து மனம் மகிழ்ழ்ழ்ந்து போகிற சிறிய அல்லது பெரிய மனசுக்காரர்கள் யாராவது எங்கேயாவது உண்டா என்ன.இப்படி போட்டச்சின்னக் கணக்கு ஒரு காலத்தில் என்னிடம் இருந்ததுண்டு. புத்தகத்தை படிக்க கையில் எடுத்தவுடன் 'கொஞ்சம் கடைக்கு ப்போய்வரணும்' சொல்லாமல் இருந்தால் அதுவே பெரிய பெரிய ஒத்தாசை.
என் அம்மா பெயர் மீனாட்சி ஆக மீனாட்சி பதிப்பகம் என்று பெயர் வைக்கலாமென்று எல்லாம் அடி மனதில் நான் யோசனையில் இருந்தேன். சபாவிடமும் இது விஷயம் சொன்னேன்.' ஏதும் தெரிஞ்சிதான் யோசன பண்றீீங்களா' அவர் என்னைக்கடிந்துகொண்டார்.'இன்னும் யாரிடமும் இது பற்றி நான் சொல்லவில்லை உங்களிடம் மட்டும்தான் சொல்லி இருக்கிறேன்' நான் அவரிடம் மெதுவாகச் சொன்னேன்.' நல்ல காலம் எங்காவது ஒளறி கிளறி கொட்டிடாதிங்க' என்று எச்சரிக்கை வேறு தந்தார்.நான் இப்படி எல்லாம் நாக்கைப்பிடிங்கிக்கொண்டு பதிப்பகம் வைத்து ஏன் புத்தகம் போட வேண்டும் என்று கேள்வி உங்களுக்குள் எழலாம். எழவேண்டும். அதுவே சரி.
உங்களுக்கும் தெரிய்ம்தானே ஒருவரின் எழுத்துப்படைப்பில் ஆகச்சிறந்தது கவிதையாம். அது எழுதிப்பார்த்தால் அப்புறம் தெரியும் எந்த பதிப்பகத்தாரும் கவிதைகளைத் தொட்டுக்கூடப்பார்க்கமாட்டார்கள்.'யாரு சாரு இந்த காலத்துல கவிதையை எல்லாம் படிக்குறா. வேற என்ன உங்க கிட்ட இருக்கு' என்பார்கள்.நம்மிடம் இல்லாத ஒன்றை எப்படியோ தெரிந்து கொண்டு அது மட்டுமே இப்போது போணியாகிறது என்பார்கள்.ஆக பதிப்பகத்தாரிடம் போய் நின்று நின்று மொத்துக்கள் பல வாங்கி முடியாமல் போகவே நான் சொந்தமாகவே பதிப்பகம் வைத்து புத்தகம் போட்டுவிடுவது என்கிற ஒரு முடிவுக்கு வந்தேன்.
நல்ல முடிவோ இல்லை கெட்ட முடிவோ. சொந்தமாய்ப்பதிப்பகம் வைப்பது என்றால் ஒன்றும் பெரிய விஷயமில்லை. டபக் என்று குத்தினால் உங்கள் விலாசம் பேப்பரில் விழும் ஒரு ரப்பர்ஸ்டாம்பும் சாணி க்கலரில் ஒரு லெட்டர் பேடும் கைவசம் வந்து விட்டால் நீங்கள் பதிப்பாளர்தான். ஒரு மேசை நாற்காலி கூட எதற்கு?.தெருவுக்கு வரும் தபால்காரனிடம் பதிப்பகம் இருப்பதைச் சொல்லி வைக்க வேண்டும். அப்படிச்சொல்லிவைிக்காவிட்டால் உங்கள் பாடு திண்டாட்டம் ஆகிவிடும்.
தருமங்குடிக்கு அருகிலே உள்ள நகரம்தான் சமுத்திரகுப்பம்.மாவட்டத்தின் தலை நகரம் அது. சமுத்திரகுப்பத்துக்காரர்களில் இலக்கிய ப்பரிச்சியமுடைய அனேகமாக முன் பக்கமாவது கொஞ்சம் நரைத்துவிட்ட தலைமுடிக்காரர்கள் சிலர்கூடி ஒரு இலக்கிய அமைப்பு ஒன்றை நடத்திவந்தார்கள். 'நெய்தல்' என்பது அந்த இலக்கிய அமைப்பின் திரு நாமம் ஊர் சமுத்திரகுப்பம் என்பதால் நெய்தல் என்னும் பெயர் ஆகச்சரி என முடிவுக்கு வந்தார்கள்.அந்த அமைப்பில் நான் எழுதிய விழிப்பு புதினத்துக்கு ஒரு விமரிசனக்கூட்டம் நடத்துவதாக முடிவாகி எனக்கு அழைப்பு வந்தது.நானும் சட்டைக்கு எல்லாம் இஸ்திரிபோட்டுக்கொண்டு புறப்பட்டேன்.ரெண்டு தினங்கள் முன்பாகவே தருமங்குடி நாகலிங்கத்திடம் தலையைக்காட்டி முடி திருத்திக்கொண்டேன்.நாகலிங்கம்தான் எங்களூர் தருமங்குடியில் பரம்பரை நாவிதன்.
இலக்கியக்கூட்ட அழைப்பின் படி என் புதினத்தை விமரிசனம் செய்ய 'பொழிதல்' என்னும் இலக்கிய அமைப்பின் செயலாளர் ஜடாதரன் ஜம்புநாதனைப்போட்டிருந்தார்கள்.பொழில் இலக்கிய அமைப்பும் சமுத்திரகுப்பத்தில்தான் இயங்கி வந்தது. வாட்ட சாட்டமான ஜ்.ஜம்பு நாதனை அடியேனுக்குத்தெரியும்.அவர் கவிஞ்ராக அறியப்பட்டவர்.எந்தக்கவிதை வேண்டுமானாலும் எப்போது வந்து கேட்டாலும் எத்தனை நீளத்துக்கு நீங்கள் வேண்டும் என்றாலும் அவரிடம் நிச்சயம் கிடைக்கும்.இது இந்தப் பக்கத்தில் எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்.தெரியாத ரகசியங்கள் பலது இருக்கலாம்.அது பற்றி எல்லாம் நமக்கு.வியாஜ்ஜியம் எதுவும் இல்லை.
தமிழ்த்தாய்வாழ்த்து முடிந்து இலக்கியக் கூட்டம் ஆரம்பமாகியது.நெய்தல் அமைப்பின் தலைவர் நடு நாயகமாய் அமர நானும் ஜ்.ஜம்பு நாதனும் பக்கத்திற்கு ஒருவராக அமர்ந்துகொண்டோம்.எதிரே நாற்பதுபேருக்கு நாற்காலி போட்டிருந்தார்கள்.பாதி நாற்காலிகள் சும்மாதான் கிடந்தன.இலக்கிய கூட்டத்திற்கெல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகள் என்பது சாத்தியாமா என்ன.ஒரு சின்ன சந்தேகம் தமிழ்த்தாய்வாழ்த்து பாடும்போது கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலயாளமும் தாய் மொழியாகக்கொண்ட இலக்கிய பிரகஸ்பதிகள் என்ன செய்ய வேண்டும் யோசித்து வையுங்கள்.
வரவேற்புரை முடிந்தது.தலைவர் உரை முடிந்தது.எனக்கு ஒரு வெள்ளை வேளேர் என்று ஒரு கதர்த் துண்டு போட்டு அமரவைத்தார்கள்.தலைவர் உரத்த குரலில் சொன்னார்.'இப்போது பொழில் இலக்கிய அமைப்பின் பொறுப்பாளர் ஜ்.ஜம்பு நாதன் தனது இலக்கிய விமரிசனத்தைத்தொடங்குவார்.அவர் குறைந்தது முப்பது மணித்துளிகள் எடுத்துக்கொள்ளலாம்.பிறகு நேருக்கு நேர் என்னும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும். பேசப்படும் பொருள் 'விழிப்பு ஒரு சமூகப்புதினம்'. தலைவர் அமர்ந்து கொண்டார்.
ஜம்பு நாதன் பேசத்தொடங்கினார். எதிரே உட்கார்ந்திருந்த அனைவரையும் அவர்களே இவர்களே உவர்களே என்றார். கூட்டத்தலைவர் அவரின் காக்கைப்பாடினியத்தில் ஆழ்ந்த பயிற்சி பற்றிப்பேசினார். நெய்தல் என்னும் பெயர் இந்த இ;லக்கிய அமைப்பிற்கு எத்தனைப்பொருத்தம் என்று ஆரம்பித்து ப்பேசிக்கொண்டே போனார்.
சமுத்திரகுப்பம் அதன் வரலாறு என்று அடிக்கினார்.விழிப்பு நாவலுக்கு உங்களை நான் அழைத்து வருகிறேன். இப்படி ஆரம்பித்து .பேசிய அவர் போராட்டம் இல்லாமல் மனித வாழ்வில் ஒன்றும் இல்லை சமூகத்தில் .பெண்கள் விடுதலை அவர்களின் சரிபங்கு இல்லாமல் எதுவுமில்லை.சாதிய நஞ்சு சமூகத்தை எப்படி எப்படி எல்லாம் சீரழித்துவிட்டது என்று சொல்லிக்கொண்டே போனார். மார்க்சீயம் காட்டும் வெளிச்சத்தை முற்றாய்த் தெரிந்துகொள்ளுங்கள். கடைசியாய் ஒரு சமாச்சரம் உங்களுக்கு என்றார்.நமது தாய்த்தமிழ் மொழியின் வளர்ச்சி அதனில் நம் ஒவ்வொருவரின் கடமை என்ன என்று பட்டியலிட்டார் இவை அத்தனையும் வாசகனுக்கு மிகமிக அழகாக சொல்லப்பட்டிருக்கும் ஒரு அற்புதமான புதினம் விழிப்பு. புதினத்தில் வரும் பாத்திரங்கள் அனைவருமே போராளிகள். புதினத்தில் ஆசிரியரின் நடை தெளிந்த நல் நீரோடை.புத்தகத்தை கையில் எடுத்தவர்கள் முடித்துவிட்டு மட்டுமே கீழே வைப்பார்கள்.வாங்கிப்படியுங்கள் விழிப்பு புதினத்தை.வாழ்க்கையில் நீங்கள் தவறாமல் படிக்க வேண்டிய ஒரு புத்தகம் என்றால் அது விழிப்பு. படித்தவன் சொல்லுகிறேன் புதினத்தைப் படித்தவர்கள் இங்கு பாக்கியவான்கள். விழிப்பு புதினத்தை ஆசிரியர் மிக கவனமாக மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்.நல்ல ஒரு முயற்சி. தொடர்க அவர் எழுத்துப்பணிச்சிறக்க வாழ்த்துக்கள். ஒரு முக்கிய விஷயம் மாநில அரசின் இவ்வாண்டு புதினத்துக்கான விருது ஆசிரியரைத் தேடிவருவது என்பது மட்டும் நிச்சயம்' ஜடாதர ஜம்பு நாதன் முடித்துக்கொண்டார்.
பேசி முடித்த அவருக்கு என் பாராட்டுக்கள் சொன்னேன்.புதினத்தை க்கண்ணால் பார்க்காமலேயே பேசிமுடித்தவிதம் அவர் எத்தனை க்கெட்டிக்காரர் என்பதை எனக்கு சொல்லிற்று. புரட்சி போராட்டம் மார்க்சீயம் மகளிர் விடுதலை தமிழ் மொழி என்பது எதுவுமே ஒரு வார்த்தைக்கூட வராமல் எழுதப்பாட்ட பள்ளிக்கூடம் தெரியாத ஒரு ஆடு மேய்ப்பவனின் அன்றாட வாழ்க்கையைச்சித்தரிக்கும் ஒரு புதினம் விழிப்பு. விமரிசனக்கூட்டத்திற்கு போடப்பட்டிருந்த நாற்பது நாற்காலிகளில் பத்து நாற்காலிகள் மட்டும் நிரம்பியிருந்தன.மற்றயவை காலியாகக்கிடந்தன.நேர்காணல் கீர் காணல் எல்லாம் இல்லை
கூட்டம் முடிந்தது தலைவர் அறிவித்தார். சமுத்திரகுப்பத்திலிருந்து நான் கவலையுடன் வீடு திரும்பினேன். வெள்ளை நிற கதர்த்துண்டு என்னிடம் பத்திரமாக இருந்தது.மறு நாள் காலை ஜம்பு நாதன் தான் என்னோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.' அய்யாவுக்கு வாழ்த்துக்கள். நான் இலக்கியக் கூட்டத்தில் சொன்னபடியே இந்த ஆண்டு புதினத்துக்கான விருது அய்யாவுக்கு ன்னு ஜனமணி பேப்பர்ல செய்தி வந்திருக்கு. என் வாழ்த்துக்கள்'
' நன்றி சொல்லிவிட்டு போனை க்கீழே வைத்தேன்.பிறகு என்ன்னையே தெரியாத சிலர் தொலைபேசியில் கனமாக வாழ்த்து .சொன்னார்கள். சமுத்திர குப்பத்து அதே ஜ்.ஜம்பு நாதன் எனக்கு ஒரு பாராட்டுக்கூட்டம் தனது பொழில் இலக்கிய அமைப்பின் சார்பாக நடத்த இருக்கிறார். செய்தி வந்திருக்கிறது. நான் விருது வாங்கியவுடன்தான் அது. ஜ ஜவின் அழைப்பிதழ் வந்ததும் உங்களுக்கும் அனுப்பி வைப்பேன் அவசியம் தங்கள் வருகையை நான் எதிர்பார்க்கிறேன்.
------------------------------------------------------------------------------------------