Thursday, February 25, 2016

Thaatsanyam-story



தாட்சண்யம் -எஸ்ஸார்சி

பட்டுக்கோட்டையிலிருந்து என் நண்பர் தான் கடிதம் எழுதியிருந்தார்.
'பட்னாக்ர் கவிதைகள் சிலதுகள மொழிபெயர்த்து கொடுத்துங்க இலக்கியச்சிறகு இத்ழ்ல வெளியிடலாம்னு இருக்கேன் ' என்கிறபடி.
என் நண்பர் ராமலிங்கம் பட்டுக்கோட்டையிலே இருந்துகொண்டு சிற்றிதழ்கள் ஆங்கிலம் ஒன்றும் தமிழ் ஒன்றும் நிறைவோடு கொண்டு வருகிறார். தமிழ் இலக்கிய இதழ் 'இலக்கியச்சிறகு'.ஆங்கில இதழுக்கு 'ஷைன்' என்று பெயர் வைத்திருந்தார்.
பட்னாகரின் ஆங்கிலக்கவிதைகள் சிலவற்றை ஷைன் இதழில் பட்டுக்கோட்டை ராமலிங்கம் வெளியிட அந்த இதழோடு அவருக்கு தமிழ் இலக்கியச்சிறகும் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது. தவறுதலாகத்தான் இது நிகழ்ந்துவிட்டிருக்கிறது. அனேகம் பேருக்கு இப்படி இரண்டு இதழ்களும் சேர்த்து அனுப்புவதுண்டு.அந்த வகையறாவில் பட்னாகார் பெயரும் சேர்ந்துகொள்ள இரண்டு இதழ்களும் அவருக்கும் சென்றிருக்கிறது.பட்னாகர் குவாலியர் வாசி.அந்த வட மா நிலப்பெரு நகரில் எத்தனையோ தமிழர்கள்வாசம் செய்கிறார்கள்.அவர்களில் சில நண்பர்கள் பட்னாகருக்கு இருக்கத்தானே செய்வார்கள்.அவர்களில் ஒருவரை தேடிப்பிடித்து தமிழ் இதழ் இலக்கியச்சிறகினை கொடுத்துவிட்டிருக்கிறார். அந்த நண்பர் ஆகா ஊகு என்று இலக்கியச்சிறகினை பாராட்டியும் இருக்கிறார். ஆகத்தான் பட்னாகர் பட்டுக்கோட்டை ராமலிங்கத்திடம் தன் கவிதைகள் சிலதுகளை மொழிபெய்ர்த்து இலக்கியச்சிறகில் போடுமாறு கேட்டுக்கொள்ள அது இப்போது என் வரைக்கும் வந்துவிட்டது.
நானும் சில பட்னாகர் கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்துக்கொடுத்தால் நல்லதுதானே என்று 'சரி' செய்கிறேன் பதில் சொல்லிவிட்டேன்.ராமலிங்கம் கேட்டுக்கொண்டபடிக்கு ஒரு நான்கு கவிதைகளை தமிழாக்கி பட்டுக்கோட்டைக்கு அனுப்பி வைத்தேன்..அவை அடுத்த இலக்கியச்சிறகு இதழில் வெளியாகியது. எனக்கும் அந்த இதழ் வ்ழக்கம்போல் வந்தது.பட்னாகருக்கும் ஒரு பிரதி போயிருக்குந்தானே செய்யும்..பத்து நாட்கள் சென்றன.பட்னாகரிடமிருந்து எனக்கு ஒரு புத்தகப் பார்சல் வந்தது. தபால் கொஞ்சம் கனமாகவே இருந்தது.பிரித்த்ப்பார்த்தேன்.உள்ளாக அவர் எழுதிய ஆங்கிலக்கவிதைகளின் நான்கு தொகுப்புக்கள் இருந்தன.அத்தனையும் அந்த பட்னாகர் எழுதியவை.கவிதை நூல்களுள்.ஒரு கடிதம் ஒளிந்துகொண்டு இருந்தது.பிரித்துப்படித்தேன்.நான் மொழிபெயர்த்து வெளியான கவிதைகள் தாங்கிய இதழை ராமலிங்கம் பட்னாகருக்கு அனுப்பிவைத்ததாகவும்.அவை நன்றாகவந்திருப்பதாக தமிழ் படிக்கத்தெரிந்த் அவர் நண்பர் படித்துக்காட்டியதாகவும் அவரே ஒரு ஆண்டு சந்தா தொகையினை ராமலிங்கத்திற்கு அனுப்பிவைத்துவிட்டதாகவும் மொழிபெய்ர்ப்பு செய்து கொடுத்த அதற்கு மிகவும் தான் கடமைப்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டு எழுதியிருந்தார். மனம் எனக்கு குதூகல்ம் ஆனது.எழுத்துப்பைத்தியங்களுக்கு மட்டும்தான் இந்த அல்ப திருப்திகள் விளங்கும் என்பார்கள்
. பட்னாகரின் கடிதத்தில் கடைசி வரியாக ஒரு விஷயம் இருக்கத்தான் செய்தது.' நான் எனது நான்கு கவிதை நூல்களை இத்துடன் அனுப்பியுள்ளேன்.அவைகளில் மொத்தம் சுமார் நானூரு கவிதைகள் இருக்கின்றன.அவைகளில் உங்களுக்குப்பிடித்த ஒரு நூறு கவிதைகளை தமிழாக்கித்தர வேண்டும்.சென்னையில் எனக்கு நண்பர்கள் உண்டு. அது ஒரு நூலாக வெளிவருதல் என் பொறுப்பு..நீங்க்ள் எனக்கு மொழிபெயர்த்து உதவத்தான் வேண்டும்.' கடிதம் முடிந்து இருந்தது.ஒரு தலைவலி முடிந்து இன்னொரு தலைவலியில் அல்லவா மாட்டிக்கொண்டுவிட்டோம்.
நான் ஏதும் கதை எழுதுகிறேன். அவை பின் புத்தகமாக வெளிவர எத்தனையோ பெரிய பெரிய மனிதர்களை சுற்றித்தான் வரவேண்டியிருக்கிறது.காலை கெட்டியாப்பிடித்துக்கொண்டு விடுவோமோ என்கிற பயத்தில், எழுத்தாளர்களிடமிருந்து தங்கள் பொற்ப்பாதங்களை எல்லாம் மூடி மறைத்துக்கொண்டுதானே இந்த பதிப்பக உரிமையாளர்கள் ஆனந்தமாக உலாவருகிறார்கள்.
ஆக ஒரு விஷயம் மட்டும் சரி. இந்த பட்னாகரே அது புத்தகமாக வெளிவருதல் தன் பொறுப்பு என்று சொல்லிவிட்டார். முடிந்தவரைக்கும் ஒருகை பார்ப்போம்.ஒரு நூறு கவிதைகள் மொழிபெயர்த்துவிட்டு அவருக்கும் தகவல் தெரிவித்துவிடுவோம் என்று ஒரு முடிவுக்கு வந்தேன்.பட்டுக்கோட்டை ராமலிங்கம் சாருக்கும் இந்த விஷயம் கடிதத்தில் எழுதியிருந்தேன்.'புதிய சிக்கலில் நான் மாட்டிக்கொண்டு விட்டது குறித்து அவரும் எனக்கு வருத்தப்பட்டு பதில் எழுதியிருந்தார்.
நேரம் கிடைத்தபோதெல்லாம் பட்னாகரின் கவிதைகளை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தேன்.மொழிபெயர்க்க ஆரம்பித்தேன்.எனக்குப்பித்த கவிதைகளாகத் தேர்வு செய்தேன்.நான்கு கவிதைப்புத்தகங்கள் அல்லவா எனக்கு அவர் அனுப்பி வைத்து இருக்கிறார். பிடிக்காத கவிதைகளே அனேகம் இருந்தன.சொல்லிவிட்ட விஷயத்தையே திரும்ப த் திரும்பச்சொன்னால் எனக்கு கவிதைகள் சுவாரசியப்படுவதில்லை. அலுப்புத்தட்டி விடுகிறது.எப்படியோ நூறு கவிதைகள் பொறுக்கி எடுத்த நான் அவைகளைத் தமிழாக்கி விட்டேன்.திரும்பத் திரும்ப படித்து த்திருத்தி அவ்வளவுதான் குவாலியர் நகரத்து பட்னாகருக்கு நமது உழைப்பு என்கிறபடி முடிவுக்கு வந்தேன்.
மொழிபெயர்த்த கவிதை நூலுக்கு தலைப்பு என்ன வைப்பது என்று யோசித்து யோசித்து 'காலம் மாறும்' என்கிற தலைப்பு கிடைத்தது. ஒரு கவிதையின் தலைப்பும் அது.பொதுவுடைமை தத்துவத்தைச் செயலாக்கி உலகுக்கு ஒரு புதிய தரிசனத்தை வழங்கிய சோவியத் நாட்டின் மீது எனக்கு எப்போதும் மிகுந்த மரியாதை இருக்கவே செய்தது.அதனை கவி என்கிற வகையில் பட்னாகரும் உணர்ந்துதானே இருக்கவேண்டும்.ஆக சோவியத் நாடு திரும்பவும் தன் மகத்துவத்தை நிலை நிறுத்தத்தான் போகிறது என்கிற சமாச்சாரத்தை சொல்லும் கவிதை ஒன்றை அந்த பட்னாகர் எழுதியிருந்தார். அதையே என் கவிதை நூலுக்குத்தலைப்பு என முடிவு செய்தேன். எனக்கும் அக்கருத்தில் உடன்பாடு உண்டுதானே.மாகாளி கடைக்கண் வைத்து தந்த ரஷ்ய வெளிச்சம் என்று தமிழ்க்கவிபாரதி வாழ்த்திச்சென்றானே அது இல்லை என்றாகிவிடுமா என்ன? மனதில் எப்போதும் இப்படி ஒரு அச்சம்.
எழுபதுகளில் சோவியத் பயணம் செய்துவிட்டு மாஸ்கோவில் தமிழன் என்று ஒரு நூல் எழுதிய அன்றைய காங்கிரசுக்காரர் தருமலிங்க.ராமச்சந்திரன் எனக்கு நண்பர். சோவியத் சிதறுண்டு போகும் என்று ஆரூடம் எழுதிய அவரை நான் வெறுத்தேன். பொய் பேசுகிறார் என்று முடிவு கட்டினேன்.பின்னர் வரலாற்றில் நிகழ்ந்த சோகம் உங்களுக்குத்தெரியாதா என்ன?எல்லாம் காலம் நிகழ்த்திவிட்டது. மாகாளியை எங்கே போய் த்தேடி முறையிடுவது. புதுக்கவிதை தாடிக்காரர் பிச்சமூர்த்தி மீது எனக்கு வருத்தமுண்டு.'மனு வெள்ளம்போச்சி,மார்க்சு வெள்ளம் போகும்' என்றல்லவா ஒரு கவிதை தந்தார்.மனு வெள்ளம் போகவேண்டும்தான் மார்க்சு வெள்ளம் கூட அப்படியா என்ன?
பட்னாகருக்கு வந்துவிடுகிறேன்.
'காலம் வெல்லும்' என்கிற பெயர்வைத்து பட்னாகரின் நூறு கவிதைகளை மொழிபெயர்த்து வைத்தவுடன் பட்னாகருக்குத்தகவல் சொன்னேன்.
' எனக்கு புத்தகம் அச்சில் வரவேண்டுமே' அவரிடம் பசினேன்.
'சென்னையில் எனக்கு தோழியர் உண்டு அவர்கள் விலாசம் தருகிறேன். அவர்களுக்கு நீங்கள் நேராகவே மொழிபெய்ர்த்தவைகளை அனுப்பிவையுங்கள்'
'அவர்கள் இதனை புத்தகமாக வெளியிடுவதெல்லாம் செய்துவிடுவார்கள்தானே'
'நிச்சயமாக.அவை ஒரு புத்தகமாவது என் பொறுப்பு.விடுங்கள்'
எனக்கு பட்னாகர் பதில் சொன்னார். மொழிபெயர்த்த நூறு கவிதைகளை அவர் சொல்படி சென்னை விலாசத்துக்கு அனுப்பி வைத்தேன். கவிதைகளை பெற்றுக்கொண்ட தோழியர் சென்னை மகளிர் கல்லூரி ஒன்றில் இந்திப்பேராசிரியர்.தமிழ் மொழியும் நன்கு அறிந்தவர் இவை பட்னாகர் எனக்குச்சொன்னவைகள். நானா சென்னைக்குப்போய் பார்த்துவிட்டு வந்தேன். சில நாட்கள் ஆகியது.
'ஒரிஜனல் கவிதைகளை செராக்ஸ் எடுத்து அனுப்புங்கள்.அப்போதுதானே மொழிபெயர்ப்பு எப்படி வந்து இருக்கிறது என்பது எனக்குத்தெரியும்' இப்படி எழுதிக்கொண்டு எனக்கு ஒரு கடிதம் சென்னையிலிருந்து வந்தது.
'ி புத்தகம் அச்சிட தன் கை காசு செலவு செய்பவன் எது சொன்னாலும் சரிதானே என்று நான்கு கவிதைபுத்தகங்களில் பென்சிலால் மார்க் செய்துகொண்ட கவிதைகளை செராக்ஸ்கடைக்கு எடுத்துப்போய் நகல் எடுத்தேன்.அதனைச் சுருட்டி கிருட்டி கொரியர் தபாலில் சென்னை முகவரிக்கு அனுப்பிவைத்தேன். என் வேலை முடிந்ததாய் எண்ணிக்கொண்டேன்.ஒரு வாரம் கழித்து எனக்கு மீண்டும் தபால் வந்தது.அனுப்பிய கவிதைகள் பத்திரமாய் சென்னையிலிருந்து எனக்குத்திரும்பி வந்தன.
'நன்கு வந்திருக்கிறது மொழிபெய்ர்ப்பு. நீங்கள் தேர்ந்திட்ட கவிதைகள் அத்தனையும் 'காலம் மாறும்' என்கிற அந்த பெயரிலேயே அச்சிட்டுவிடலாம் .நீங்கள் முன்னுரை எழுதும்போது எனது பெயரை மறக்காமல் எப்படிக்குறிப்பிடவேண்டுமோ அப்படி குறிப்பிட்டுவிடுங்கள்.வேறு ஒன்றும் நான் எதிர்பார்ப்பதில்லை.புத்தகம் வெளியானதும் இரண்டு பிரதிகள் மட்டும் மறக்காமல் என் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். அரசு நூலக ஏற்பு ஆணை வாங்கித்தருவது விஷயமாக அதுவும் நீங்கள் விருப்பப்ப்ட்டால் என்னோடு தொடர்புகொள்ளலாம்.நன்றி'
படித்துமுடித்தவுடன்.தலை கிர்ரென்றது.
பட்னாகருக்கு கொஞ்சம் கோபமாக ஒரு கடிதம் எழுதினேன். இனி மொழிபெயர்த்த கவிதைகளின் அச்சாக்கம் என்ன ஆவது என்கிறபடிக்கு. உடனே எனக்குப் பதில் கடிதம் வந்தது.
அவர் எங்கே எனக்குப்பதில் எழுதப்போகிறார் என்று கூட நினைத்தேன். ஆனால் பதில் வந்ததே.
'ஒன்றும் தவறில்லை. சென்னை நண்பர் அவருக்கு ஏதோ சந்தர்ப்பம் சரியில்லை. மற்றபடிக்கு மிக நல்ல மனிதர்.கவிதைகளை அப்படியே வைத்திருங்கள்.வேறு யாராவது பார்க்கிறேன். இத்துடன் என் புகைப்படம் அனுப்பியுள்ளேன்.இதனையும் அந்த மொழிபெயர்த்த கவிதைகளோடு பத்திரமாகவையுங்கள்.அட்டைபடத்துக்கு தேவைப்ப்டும்.ஆகத்தான் அனுப்பியுள்ளேன். போட்டோவை பின் அட்டையில் கூடபோடுங்கள் தவறில்லை'.
மொழிபெயர்த்த கவிதைகள் மற்ற கடிதங்கள் அத்தனையும் பரணையில் எடுத்துப்போட்டேன்.'கிடக்கட்டும் சனியன்' என்று சொல்லிக்கொண்டேன்.நாட்கள் ஓடின. பட்டுக்கோட்டை ராமலிங்கத்துக்கும் நடந்தவைகள் அத்தனையும் தகவல் சொன்னேன்.
'சிலர் இப்படித்தான். நல்லா கவிதைங்க எழுதுறாரு ஆனாலும் என்ன செய்ய' இது அவர் தந்த செய்தி. பட்னாகர்
குவாலியரில் தனது நாற்பத்தைந்தாவது தொகுப்பு ஒன்றுக்கு என க்கவிதைகள் எழுதிக்கொண்டுமிருக்கலாம்.அவரிடமிருந்து எனக்கு எந்த தகவலும் இல்லை.பரணையில் இருப்பவைகள் எனக்கு மன உறுத்தல் தர ஆரம்பித்தன.அந்தக்கவிதைகள் கூட என்னிடம் பேசுமா என்ன? கொஞ்சம் பாருங்க நீங்க நெனச்சா புத்தகம் அச்சாகிடும்.மனசு வையுங்க' இவைகளைச் சதா சொல்லிக்கொண்டே இருந்தன.
எப்படியோ சிங்கி அடித்து ஒரு பத்தாயிரம் ரூபாய் புரட்டிக்கொண்டு அருகிருக்கும் சிதம்பரம் அது வன்னியர் தெரு என்றுதான் நினைக்கிறேன் அங்குள்ள தட்சிணாமூர்த்தி புத்தக அச்சகத்தாரிடம் சென்றேன். மொழிபெயர்த்த அந்தக் கவிதைகளை ஒப்படைத்தேன்.
மேலட்டைக்கு மும்பை பிரசித்தம் அந்த குதிரை சவாரி வீரசிவாஜி படம் ஒன்று என்னிடம் இருந்ததை மறக்காமல் கொண்டு சென்றேன்.பின்னட்டையில் பட்னாகர் புகைப்படம் வரவேண்டும் சொல்லிவிட்டுப்புறப்பட்டேன்.
தவறுகள் சரிபார்க்க ஒறுமுறை சிதம்பரம் வன்னியர்தெரு அந்த தட்சணாமூர்த்தி அச்சகம் போனேன். பத்து நாள் கழித்து எனக்கு 'காலம் மாறும்' கவிதை நூல் முந்நூறு பிரதிகள் லோகல் லாரி பார்சலில் வீடு தேடிவந்தது.அச்சாகிய புத்தகத்தை தடவிப்பார்த்துக்கொண்டேன்.பின்பக்க அட்டையில் பட்னாகர் படம் லட்சணமாகத்தான் அச்சாகி இருந்தது. மீண்டும் என் வீட்டுப் பரணையில் பட்னாகரின் கவிதைகள் ' காலம் மாறும்' புத்தகங்கள் என உரு மாற்றிக்கொண்டு துயிலத்தொடங்கின. கிறுக்கு மனம் விட்டால்தானே.
ஒரு பத்து புத்தகங்கள் எடுத்துக்கட்டி பட்னாகருக்கு தபாலில் அனுப்பிவைத்தேன். ஒருவர் ஏதோ இரண்டு புத்தகத்தை
தபாலில் அனுப்பவேண்டுமென்று ஒரு முடிவோடு தபால் ஆபிசுக்குப்போனால் போதும். பார்சலைக்கட்டியது சரியில்லை என்பார்கள்,ஒட்டியது சரியில்லை என்பார்கள்,குவாலியர் உள் நாடா வெளி நாடா என்பார்கள். யாரும் திறந்து பார்க்கும்படிக்கு என்வெலப்பின் மூடிப்பக்கம் இருக்கவேண்டும் என்பார்கள், விலாசம் தெளிவில்லை என்பார்கள்,பின்கோடு எழுதவில்லையா என்பார்கள், அனுப்புனர் விலாசம் தெளிவாக எழுதிக்கொண்டுவாங்களேன் என்பார்கள், பதிவஞ்சலா, வெறும் பார்சலா நூல அஞ்சலா, அச்சிட்ட புத்தகங்களா ஒன்றும் சரியாக எழுதவில்லை நீங்கள், என்பார்கள் சரியானசில்லரையையாவது கொடுங்கள் தபால் அனுப்ப வந்துவிட்டீர்கள் என்பார்கள் நமக்கு ரசீது என்று ஒன்று கொடுப்பதற்குள் நம் முகத்தையே பார்க்காமல் எப்படித்தான் இவை அத்தனையும் செய்வார்களோ.
பட்னாகருக்கு ஒரு கடிதம் எழுதினேன் அதனில் .புத்தகங்கள் பத்து அனுப்பியது சொல்லியிருந்தேன்.
கடிதம் கிடைத்ததுதான் தாமதம் பட்னாகர் டெலிபோனில் பேசினார்.
'புத்தகங்கள் வந்துசேரவில்லை.கொஞ்சம் பாருங்கள்.தபால் ஆபிசில் விசாரியுங்கள். உங்களால் முடியும் முடிந்தால் என் சரியான விலாசம் எழுதி சிரமம் பாராமல் பத்து பிரதிகள் வைத்து மீண்டும்ஒரு பார்சலை அனுப்பித்தாருங்கள்' என்றார்.
அடுத்தவன் படும் சிரம்ங்கள் என்னவென்று கண்டே கொள்ளாமல் தன் காரியம் மட்டும் சாதிக்க நினைப்பவர்கள் நன்றாக கவிதை எழுதுவது எப்படி என்று எனக்கு அய்யம் வர நண்பர் விழுப்புரம் பழமலய்தான் எனக்கு ப்பொட்டில் அரைந்தமாதிரி விடை சொன்னார்,'கையில பேனா எடுத்துட்டா அவன் எழுத்தாளன் ஆயிடுவான் மற்ற நேரம் அவன் சராசரியா மனிதன் இல்ல அதுக்கும் கீழயும் போயிடுவான்'. பட்னாகர் விஷயத்திலும் அது சரி என நினைத்துக்கொண்டு மீண்டும் ஒரு பத்து புத்தகங்களைக்கட்டிக்கொண்டு தபால் ஆபிசுக்குப்போய் பட்னாகருக்கு அனுப்பி வைத்தேன். ஒருவாரம் சென்றது. பட்னாகர் மீண்டும் போனில் பேசினார்.'சார் இரண்டு பார்சல்களுமே ஒரே நாளில் எனக்குக்கிடைத்துவிட்டது.மிகுந்த நன்றி. முடிந்தால் புத்தகத்தை புத்தக விமரிசனத்துக்கு என்று அங்கு அங்கு இலக்கிய இதழ்களுக்கு அனுப்பிவையுங்கள்.உங்களுக்கும் நல்லது என்று ஆலோசனை சொன்னார்.
படபட என வந்தது. எழுந்தேன்.
பரணையில் கிடந்த அத்தனைப்பிரதிகளையும் கீழிறக்கி ஒரே கட்டாகக்கட்டி கோயம்புத்துர்ர் புத்தக விற்பனையாளர் ஒருவர் விலாசம் எழுதி கொட்டை எழுத்துக்களில் 'டு பே' என்றும் போட்டுக்கொண்டு பார்சல் லாரி அலுவலகம் சென்றேன். கோயம்புத்தூரில் அப்படி யார் என்று மட்டும் கேட்காதீர்கள். உங்களுக்கும் எனக்கும் அவர் நண்பர்தான் பார்சல்மீது அனுப்புனர் விலாசம் சரியாக எழுதி என் தொலைபேசி எண்ணும் குறிப்பிட்டு இருந்தேன். அவ்வளவுதான்.என் வேலை முடிந்தது.
கோயம்புத்தூரிலிருந்து தொலைபேசியில் என்னை யாரும் இதுவரை கூப்பிடவில்லை யார் கேட்டாலும் நீங்களும் சொல்லிவிடாதீர்கள்.
--------------------------------------------




.

Tuesday, February 23, 2016

கலில் ஜிப்ரான் கவிதைகள்l




ஆத்ம ஞானம் -கலில்ஜிப்ரான்

 மனிதன் கேட்கிறான்.
ஆத்ம ஞானம் பற்றிக்கூறுங்கள்'
அவர்  சொன்ன விடை .
பகல் இரவின் அந்தரங்கங்களை
உங்கள் இதய அமைதியில் தெரிந்திருப்பீர்கள்
ஆத்ம ஞானம் பற்றிக்கேட்க
 உங்கள் செவி 
விடாய் பெற்றிருக்கும்
சிந்தனை செறிந்த 
அச்சொற்களை நீங்கள் அறிவீர்கள்
அக்கனவின் நிர்வாணக்கனவுகளை
உங்கள் விரல்கள் 
 ஸ்பரிசிக்கலாம் நிச்சயமாக
ஆன்ம ஊற்று எழ விழையும்
சிற்றுருமல் சாதிக்கும்
 கடல் நோக்கி ஓடும்
ஆழம்காணாமுடியா ஆன்மக்கருவூலம்
கண்களே  அறியும்
அறியமுடியா ச்செல்வத்தை எது கொண்டு அளப்பது
கம்போ அல்லது வேறு கருவிகொண்டோ 
அளவிட விழைவாயோ
கங்குகரைகாண்முடியாத 
அளப்பரிய ஆன்மக்கடல்.
உண்மையை அறிந்தேன்
 சொல்லாதே அப்படி
உண்மை யொன்று 
தெரிந்ததாய்ச்சொல்
ஆன்மாவின் பாதையைக்
கண்டதாய்ச்சொல்லாதே
ஆன்மாநின்வழி 
நடை பயில்வது கண்டதாய்ச்  சொல்
ஆன்மா எத்தடத்திலும் பயணிக்கும்
ஆன்மா கோடு வரைந்து பயணிக்காது 
 ஒரு செடியின் தண்டென நீட்டமாய் வளராது
எண்ணிலடங்கா இதழ்கள்
 போர்த்திய  ஓர்  தாமரைப்பூ
தன்னில் மலர்வதே ஆன்மா.
------------------------------------------.

கலில் ஜிப்ரான் கவிதைகள்l



உள்கட          -கலில்ஜிப்ரான்

பெண் பூசாரி கேட்டார்.
'இறைவழி பாடு பற்றிச்சொல்லுங்கள்.'
அவரின் விடை வந்தது.
துயரமும் தேவையும் 
நெருக்கத்தானே உமது வழிபாடு
மகிழ் நிறைவும்
 வாழ்செழிப்பும் உறுதிப்படுகிறது
அத்தருணம் இறை வழிபாடு ஏதுமுண்டா?
இறைவழிபாடென்பது 
உம்மையே விரித்து வாழும்
பெருவெளியொடு ஏகமாகிடும் அனுபவம்
உமது இருள்துயரத்தை
 மாத்திரமா பெருவெளியொடு பகிருதல்
இதயம் மலருதலை
 மகிழ்வையும் கூட்டித்தான்
ஆன்மா வழிபாடென்று
 அழைப்பு விடும்பொதெல்லாம்
 அழுகை அழுகை
ஆன்மா கடையப்படுதல் தொடர்கிறது.
தொடரும் அழுகை 
அது மகிழ்சிரிப்பாகும்வரை.
வழிபடு போதெல்லாம்
வான்வெளியில் வழிபடு
 பிறரோடு சந்திப்பு
வழிபாடில்லை எனில் 
 அச்சந்திப்புத்தான் நிகழுமா?
ஆலயத்துக்கு ச்செல்கிறாய்
தேடும்அது கண்ணுக்குத்தெரிந்தாலென்ன
 இல்லை என்றால் என்ன
ஆனந்தப்பரவசமும்
 இனிய சந்திப்பும் நிச்சயம்
வேண்டும் இது வேண்டும் அது
இப்படித்தானா  செல்வாய் ஆலயம்
கேட்பது கிடைத்தும் விடுமா
குறுகி குறுகிக்
கெஞ்சி அஞ்சியுமா நீ
எப்படி கிட்டும் உய்ர்வு
அடுத்தவன் ஒருவனுக்கு நன்மையே
 வேண்டுமென ஆலயம் போனதுண்டா
உன் வேட்டல் 
அவன் செவி அப்போதும் ஏறாது
கண்ணுக்குப்புலனாகா ஆலயம்
நின்னுள்  கட உள்
எப்படி கடப்பது 
நான் சொல்லவும் மாட்டேன்
கடவுள் நீ சொல்வது கேட்கவும்மாட்டர்ர்
அவராக உன் வாய்வழி வந்து
 ஏதும் உரைக்கக் 
அது கேட்கும் அவர்க்கு.
கடலும் மலையும் வனமும் பிரார்த்திக்கிறது 
உனக்கு அது கற்பிக்க முடியுமா
கடலொடு மலை வனம்
 நின் பிறப்பிற்கு ஆதாரம்
நின் இதயம் அறியும் அது
நடு நிசிப்போதில் அவைகளின் வேட்டல்
 கவனி  அது கேட்டிருக்கும்

' கடவுள் நம் இருப்புக்கும்
 நம் விருப்புக்கும் மூலம்
கடவுளின் விருப்பே 
உள் போய் நம் விருப்பாகிறது

நம்முன் பகலும் இரவுமாய்
 மாறி மாறி விரிவது
இறை விருப்புத்தான்

யான் என்ன கேட்க
என் தேவை யாவும்
இறை முன்னம் அறிந்து
 எம்பாற் பின்னே பிறப்பது
இறைநீயே எமது விருப்பு.
நின்னை எமக்கு நீயே கொடுக்கிறாய்
 யாம் அனைத்தும் பெறுகிறோம்'

----------------------------------------------------------------








Monday, February 1, 2016

கலில் ஜிப்ரான் கவிதைகள்




கலில் ஜிப்ரான் 

அழகென்பது


'அழகு எது என்று சொல்வாயோ'
 கவியின் கேள்வி
 விடையோ வினாவாய் .
எங்கே அழகைத்தேடுவாய் நீ?
அழகே வழி சமைத்து
அவ்வழகே வழிகாட்டி
அமைய க்கிடைக்கலாம் அழகு

அழகு பற்றி இன்னும்  ?
அழகே மனமிறங்கி அதனை 
அமைத்துக் கொடுக்க 
அது சாத்திய மாகலாம்.

மனம் துன்புற்றவனும் 
உடல் புண்பட்டவனும் சொல்கிறான்.
அழகென்பது கருணை
அழகென்பது அனுசரணை.
இளந்தாய் ஒருத்தி
 தன் பெருமையின் பிடியில்
கொஞ்சமாய் வெட்கப்பட்டு
 நம்மிடையே  நடப்பதொப்பது அழகு.

உணர்ச்சி வயப்பட்டோன் சொல்வான்.
'அப்படி இல்லை
அழகென்பது வலிமை
 அது அஞ்சவும் வைப்பது.
கீழிருக்கும் இப்பூமியை
 மேலிருக்கும் அந்த விண்ணை
உலுக்கிப்போடும் இளம் புயல் அது.

களைப்பும் சலிப்பும் கொண்டவன்
 விடை சொன்னான்.
அழகு மென்மையின் அழைப்பு.
அழகு நம் உணர்வின் உயர் தளத்தில்
 நம்மிடம் சம்பாஷிப்பது..
ஒரு சிறிய ஒளிக்கீற்று
 சூழ்நிழலைக் கிழித்துக்கொண்டு ப்
பாய்வதொக்கும்.

ஆயின் மனக் கவலையில் 
தோய்ந்தவன் சொல்கிறான்.
மலைகளின் நடுவே
 அழகு எழுப்பும் பேரொலி
நாம் கேட்டிருப்போம்.
அதனைத்தொடர்ந்துதானே
புரவிகள் குளம்பொலி
இறக்கைகளின் படபடப்பு
சிங்க கர்ஜனை.

மா நகர இரவுக்
காவலாளி பகர்கிறான்.
அழகென்பது புலரும் காலையில் கிழக்கின் உதயம்.

நண்பகல் உழைப்போனும்
 நடைப்பயணம் செல்வோனும் சொல்கிறார்கள்.
கதிரவன் மறை போதே சாரளமாகி
அழகுப்பெண் பூமி மீது
 ஒய்யாரமாய்ச்சாய்ந்திருப்பாள்.

மாரிக்கால ப்பனி
 போர்த்தியவை சொல்லும்
குன்றின் மீது தவழ்ந்து
வசந்தகாலத்தில் உலா வரும் அழகு.

கோடை வெயிலில்
 கதிர் அறுப்போர் சொல்வர்,
உதிர்ந்த இலைகளிடை 
 அழகுக் கூத்திடுவாள்
 கண்டோம் யாம்
அவள் கூந்தலிடை
 பனி தழுவிச்சென்றதங்கே.

 அழகு குறித்து ப்
 பலரும் பகன்றவை.
அழகு குறித்தா இல்லை இல்லை

உம்  நிறைவேறாத் தேவைகள் அவை
அழகு, தேவையொடு 
தொடர்புடைத்தா என்ன
அது பேரானந்தச்சிலிர்ப்பு.
நாவில் நீர் சொட்டவைக்கும் விடாயோ 
வெறுங்கையின் நீட்சியோ இல்லை அது
இதயம் தரும் ஒளிப்பிரவாகம் 
ஆன்மாவின் ஆனந்த லயிப்பு

பார்க்கும் உருவும்
 நீ கேட்கும் பாடலும் இல்லை அது.

கண்களை மூடிட க்காட்சி யாவது
 செவிகளை ப்பொத்திடக்கேட்க முடிவது
பிளவுண்ட மரக்கிளையின் மையப் பகுதி
 சொட்டும் அத்திரவமில்லை அது
நகத்தொடு ஒட்டித்தொங்கும் 
சிறகும் இல்லை அது
பொதெல்லாம் மலர் அவிழும் நந்தவனம் 
தேவ கன்னியர் கூட்டத்து ஓயாப்பேரணி.
.
 ஆர்ஃபலிசு ( Orphalese)  நகரத்து  மாசனங்களே
வாழ்க்கையின் புனித முகம் 
தெரியத்தெரிய
 மனித வாழ்க்கை அழகு.

வாழ்க்கை நீ
அவ்வாழ்க்கையைத் தொலைப்பது நீ.
இதோ ஆடி முன்னே 
தன் அழகு பார்க்கிறது
அமரத்துவ அழகு.

காலத்தை வெல்பவன் நீ
நின்முன்னே நிற்கும் அவ்வாடியும் நீ..
-----------------------------------------------------




Saturday, January 16, 2016

paazum manam - story



பாழும் மனம் -எஸ்ஸார்சி

டெலிபோன் மணி கிர்ரிங்க் கிர்ரிங்க் என் அடித்துக்கொண்டே இருந்தது.ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இப்படித்தான்.காலை ஒன்பது மணி ஆனால் இந்த டெலிபோன் மணி அடிக்கத்தானே செய்கிறது.நானும் இந்த ஊருக்கு வந்து ஒரு ஐய்ந்து ஆண்டுகள் ஆகி யிருக்கும்.இன்னும் இந்த டெலிபோன் அழைப்பு விடாமல் தொடர்கிறதே.
'யார் நீங்க்'
''ச்சீனு இருந்தா பேசச்சொல்லுங்....க'
' இங்க சீனுன்னு யாரும் இல்லை.உங்களுக்கு சீனு என்ன வேணும்'
'அந்த மயிதிலியானு பேச்சொல்லுங்கோ'
'இது ராங்க் நம்பர். நீங்க போன கட் பண்ணுங்க'
வயதான ஒரு பெண்மணியின் குரல் என் டெலிபோனிலிருந்து இற்றுக்கொள்கிறது.ஒவ்வொரு ஞாயிறு அன்று என் மனைவி இல்லை என் மகன் இல்லை நான் என்று பதில் பேசுகிறோம். பேச்சு எப்பவும் இவ்வளவுதான்.எத்தனை முறை ராங்க் நம்பர் ராங்க் நம்பர் என்று அடித்துச் சொன்னாலும் அந்தப்பெண் நாம் சொல்வதை எங்கே கேட்டாள்.
எந்த எண்ணிலிருந்து இந்த அழைப்பு வருகிறது என்பதை அறிய முடியவில்லை. நானும் என்னவளும் யோசித்தோம். அதன்படியே நான் அருகிலிருக்கும் தொலைபேசி நிலையம் சென்றேன்.
'உங்க கிட்ட டிஸ்பிளே வர்ர டெலிபோன் இல்லயா' டெலிபோன் நிலையத்து வாசலில் நீல நிற யூனிஃபாரத்தில் இருந்தவர் என்னிடம் கேள்வி வைத்தார்..
'இல்லை சார்'
'ஒண்ணு ப்ண்ணுங்க அந்த லேடி பேசும்போது நீங்க போன் ரிசிவர தூக்கி தூரமா வச்சிட்டு உடனே இங்க வாங்க அந்த நெம்பரை அப்பத்தான் கண்டு பிடிக்க முடியும். என்ன நான் சொல்றதைச்செய்வீங்களா'
' அப்படியே செய்யறேன் சார்'
சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தேன்.மனைவியிடம் இது விஷயம் சொன்னேன்.
'போன் ரிசிவர எடுத்து தூரமா வச்சிட்டு அப்படியே டெலிபோன் ஆபிசுக்கு எல்லாம் ஓட முடியுமா என்ன? நீங்க டெக்னிகலா விஷயம் தெரிஞ்ச சரியான செக்ஷன்லதான் பேசுனிங்க்ளா இல்ல ஒரு காலத்துல உங்க தங்கச்சிக்கு மாப்பிள்ள பார்த்த கணக்கா அதான் யாரோ தெருவுல நின்னுகிட்டு இருந்த ஒரு மூணாவது மனுசன் கிட்ட விசாரிச்ச அந்த கதையா'
எனக்குப்பதில் சொல்ல வரவில்லை. ஒன்றும் பேசாமல் நின்று இருந்தேன்.
'நான் அந்த டெலிபோன் நெம்பரை என்னன்னு கண்டுபிடிச்சு உங்ககிட்ட சொல்றேன்.அப்புறம் நீங்க என்ன செய்யுறீங்கன்னு பாக்கலாம்'
'எப்படி'
'பாருங்களேன்'
அவள் அவளுக்குத்தெரிந்த நண்பர் ஒருவர் வீட்டிலிருந்து டெலிபோன் எண்களை டிஸ்பிளே செய்யும் ஒரு இன்ஸ்ட்றுமென்ட்டை இரவலாக வாங்கி வந்தாள்.அதுவரைக்கும் என் வீட்டு டெலிபோன் அவர்கள் வீட்டில் பதிலியாக இருந்தது. வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமையும் வந்தது ஒன்பது மணிக்கு ச்சரியாக டெலிபோன் மணியும் அலறி அடித்தது. நான்தான் ரிசிவரை எடுத்தேன்

'கொஞ்சம் சீனுவ பேசச்சொல்லுங்க'
'இங்க யாரும் அந்த பேரில இல்ல'
'மயிதிலி இருப்பாளே'
'இது ராங் நெம்பர். இனி இந்த நெம்பரைக் கூப்பிடாதிங்க' எத்தனை தரமோ இப்படி சொல்லி ஆயிற்று.
டெலிபோனில் டிஸ்பிலே ஆன நெம்பரைச்சரியாக்குறித்துக்கொண்டேன்.
'இப்ப டெலிபோன் ஆபிசுக்குப்போங்க இந்த நெம்பரு வேல செய்யுற விலாசம் வாங்கியாங்க மொதல்ல' அவள் கட்டளை தந்தாள். நான் பழைய பரமசிவமாய் அந்த டெலிபோன் ஆபிசுக்குப்போனேன். நான் எடுத்துகொண்டுபோய் காட்டிய அந்த எண்ணுக்கு 'மேற்கு தாம்பரம் சண்முகம் தெருவில் ஒரு வறுகடலை வியாபாரி' விலாசம் தந்தார்கள்.இனி அங்கு சென்று விசாரிக்க வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தேன்.
'சார் நீங்க் இந்த ஏரியாவுக்கு எப்ப குடி வந்தீங்க'
டெலிபோன் ஆபிசுக்காரர்கள்தான் கேள்வி கேட்டார்கள்
'அய்ந்து வருடம் இருக்கும்'
'அப்ப இந்த அஞ்சி வருஷமா இப்படி ஒரு கால் வருதா'
'ஆமாம் சார். இப்பத்தான் இது என்ன விஷயம்னு கண்டுபிடிக்க யோசனை வந்திச்சு'
'சார் அஞ்சி வருஷத்துக்கு முன்னால சீனுவாசன்னு ஒருத்தருக்கு இதே டெலிபோன் நெபம்ரு வேல செஞ்சிது..அவரு போஸ்ட் ஆபிசுல வேலையும் செஞ்சாரு குடியும் இருந்தாரு. அப்புறம் அவருக்கு திருநெல்வேலி வேல மாற்றலாயிடுச்சின்னு மட்டும் எனக்கு நல்லா தெரியும் நானும் அவரும் மலயாள மாமி மெஸ்சுல அப்பப்ப ஒண்ணா லன்ச் சாப்பிடுவோம்.' கணினித்திரையயை உற்றுப்பார்த்துக்கொண்டே ஒருவர் எனக்குப்பதில் சொன்னார்.
நான் கட கட என் வீடு திரும்பினேன். நடந்த விபரத்தைக் காத்துக்கொண்டிருந்த அவளிடம் சொன்னேன்.
'வருகிற ஞாயிறு காலை ஒன்பது மணிக்கு நேரா தாம்பரம் போயி அந்த பட்டாணிக் கடைக்குப்பக்கத்தில நில்லுங்க. யாரு வர்ரா எப்படி பேசுறான்னு பாருங்க'
மீண்டும் அவள் எனக்கு யோசனை சொன்னாள். எப்படியும் வயதான ஒரு பெண் வந்து போனில் பேசப்போகிறாள்.நாமும் போய் பார்த்துவிட்டு ப்பிறகு இன்னது செய்வது என்று முடிவுக்கு வரலாம். எண்ணினேன்.
மறு நாள் ஞாயிற்றுக்கிழமை .காலையிலேயே கிளம்பினேன். எட்டரை மணிசுமாருக்கு என்னுடைய டூவீலரை எடுத்துக்கொண்டு தாம்பரம் சண்முகம் தெரு முழுதும் தேடினேன். எனக்குத் தெரிந்த அரசாங்க நூலகத்துக்கு அருகே ஒரு செருப்புக்கடைக்கு ப்பக்கமாய் அந்த பட்டாணிக்கடை இருந்தது. கடை வாசலில் போய் நின்றுகொண்டேன்.
'பாண்டு பட்டாணிக்கடை' அழகிய கொட்டை எழுத்துக்கள் வா வா என்று தெருவில் போவோர் வருவோரை அழைத்துக்கொண்டிருந்தது.பட்டாணிக்கடையில் ஒரு ஓரமாக அடுப்பு எரிந்து கொண்டிருந்தது.தலையில் முண்டாசும் முண்டா பனியனும் போட்டிருந்த ஒரு நடுத்தர வயதுக்காரர் பட்டானி வறுத்துக்கொண்டிருந்தார்.மஞ்சள் கரைத்த சிறு சட்டி வாயைப்பிளந்துகொண்டு அருகிருந்தது.வெள்ளை மணலும் கருகிய மணலும் சிறு சிறு முட்டுக்களாய் ஒரு பக்கத்தில் அமர்ந்திருந்தன. அவர் அடிக்கொருதரம் வெற்றிலை போடுபவர் போலிருக்கிறது.வாயைக்குதப்பிக்கொண்டிருந்தார்.அடுப்பிலிருந்து எழும் புகை வெளிப்போகஒரு உயரக்குழாய் அவருக்கு முன்பாக விரைத்துக்கொண்டு நின்றது,
மணி சரியாக ஒன்பதை நெருங்கிகொண்டிருந்தது.எனக்கு மனம் படக் படக் என்று அடித்துக்கொண்டிருந்தது.நான் தவறு ஏதும் செய்யவில்லை இருந்தாலும்தான் என்ன.
தூரத்தில் ஒரு பெண்மணி நடந்து வந்தாள்.தலை வெள்ளை வெளேர் என நரை தட்டியிருந்தது. இரண்டு கைகளிலும் ஒவ்வொரு துணிப் பை,அவை நிறைத்துக்கொண்டிருந்தன அவள்.கடை அருகே வந்து விட்டாள்.முகம் வாடி க்கருத்து இருந்தது.வயது அறுபதுக்கும் எழுபதுக்கும் இடையில் இருக்கலாம்.தலை வாரி பல காலங்கள் ஆகியிருக்குமோ. என்னவோ அப்படித்தானே இருந்தது.காதி மூக்கில் எந்த அணிகலனுமில்லை.கழுத்தில் ஒரு மஞ்சள் நிற மணி மாலை மட்டும் அழகாகக்கிடந்தது.
தன் ஜாக்கெட்க்குள்: கை விட்டு குட்டை நோட்புக்கை கையில் எடுத்தாள்.
'சாரு'
கல்லாவில் இருந்த பட்டாணிக்கடை நாடார் டெலிபோனை ரிசிவ்ரோடு எடுத்து அந்தப்பெண்மணியிடம் கொடுத்தார். குட்டைப்புத்தகத்தைப்பார்த்துக்கொண்டே அந்தப்பெண் டெலிபோன் எண்ணை தட்டினாள். ரிசிவரைக்காதில் வைத்துக்கொண்டாள்.
'ச்சீனுவ பேசச்சொல்லுங்கோ'
'அப்ப மயிதிலி' அந்தப்பெண் டெலிபோனில் பேசுவது(?) எனக்குக்கேட்கிறது. ஒரு நிமிடம் கூட இல்லை. அந்தப்பெண்
டெலிபோனை ரிசிவரோடு அந்த பட்டாணிக்கடை நாடாரிடம் ஒப்படைத்தாள். தயாராக வைத்திருந்த நாணயம் இரண்டை அவரிடம் நீட்டினாள். கீழே கிடத்தி வைத்திருந்த இரண்டு பைகளையும் திரும்பவும் எடுத்துக்கொண்டாள். ஆகாயத்தைப் பார்த்து ஒரு முறை லேசாக ச்சிரித்துக்கொண்டாள்.
தாம்பரம் ரயில் நிலையம் பக்கமாகத்தான் நடையைக்கட்டினாள்.
நான் பட்டாணிக்கடை நாடாரிடம் நேராக சென்று என் மனைவிக்குப்பிடித்த உப்புக்கடலை நூறு கிராம் வாங்கினேன்.
''இப்ப கூட இந்த இந்த மாதிரி டெலிபோன் பேசறதுக்கு எல்லாம் ஆளு இருக்காங்க போல'
'சாரு.இந்த பொம்பள எத்தினி வருஷமாவோ இந்த நம்பருக்கு கால் போடும்.ஞாயிற்றுக்கிழமையே தவறினாலும் இந்த அம்மா வர்ரது மட்டும் நிக்காது. நானு ரூவா ரெண்டு வாங்கிகறேன் பேச வுடுறேன்.இந்த அம்மா தன் தம்பியதான் டெலிபோனில் கூப்பிடுது. நல்ல குடும்பத்து பொம்பளயாவே கூடம் இருக்கும். அந்த அம்மா தேடுற தம்பி அவுரு உயிரோடத்தான் இருக்காரோ அப்படி இருந்தா எந்த ஊருல இருக்காரோ. இந்த பொம்பளைக்கி மூள கொஞ்சம் கோளாறுன்னு தெரியுது.தாம்பரம் ரயில்வே பிளாட்பாரத்துல உக்காந்து கைய நீட்டும்.பிச்சை கிச்சை யாராவது போடுறாங்க:ளே உலகம் இன்னும் ஒண்ணும் அழிஞ்சிடலயே'
சண்முகம் தெருவில் நடந்து போன அந்த பெண்ணின் உருவம் மறைந்து போனது.உப்புக்கடலை பொட்டலத்தைக்கையில் வாங்கினேன்.கை லேசாச்சுட்டது.
'இப்பக்கி அடுப்பிலேந்து எடுத்த சரக்குல்ல' பட்டாணிக்கடைக்காரர் சொல்லிக்கொண்டார்.
டூவீலரை எடுத்துக்கொண்டு நான் என் வீடு திரும்பினேன்.மனம் என்னவெல்லாமோ செய்தது.சுகர் வியாதியும் வந்து மூளையும் சற்று கோளாறாகி வயது நாற்பது கூட தொடாமல் பாதியிலே போய்விட்ட என் தங்கையின் நினைவு வந்து உறுத்திற்று.
வீட்டுக்கு வந்து நடந்த விபரம் முழுவதுமாய் என் மனைவியிடம் சொன்னேன்..
' 'அந்த டெலிபோன் நெம்பர் வேண்டவே வேண்டாம் அத உடனே மாற்றிட்டு வேற நல்ல நெம்பரு ஏதாவது வாங்கிடுங்க' அவள் எனக்குக் கட்டளை தந்தாள். எனக்குத்தானின்னும் மனம் ஒப்பவே இில்லை.
-------------------------------------------------




.. ..

Friday, August 14, 2015

saivam -story




சைவம் -எஸ்ஸார்சி



அவன் தன் வீட்டை வாடகைக்கு விட்டிருந்தான்.தனக்கு அலுவலத்துப்பணியில் சமுத்திரகுப்பம் மாற்றல்.முதுகுன்ற நகரத்திலிருந்து ஒரு மணி பேருந்தில் பயணிக்க அந்த சமுத்திரகுப்பம் போய்ச்சேரலாம்.முதுகுன்ற நகரில் அவன் ஒரு வீடு சொந்தமாகக்கட்டி அதனில்தானே குடியிருந்தான். பணி இடம் மாற்றல் ஆக அவன் முதுகுன்ற வீட்டை வாடகைக்கு விடவேண்டும்.வீடு வாடகைக்கு என வெள்ளைத்தாளில் ஸ்கெச் பேனா கொண்டு எழுதி காம்பவுண்ட் சுவரில் ஒட்டினான்.மறக்காமல் தன் தொலைபேசி எண்ணையும் அதனில் எழுதி வைத்துவிட்டுத்தான் சமுத்திரகுப்பம் சென்றான்.
அவன் அலுவலகத்தொலைபேசி எண்ணைத்தான் எழுதி உடன் பி பி என்றும் போட்டிருந்தான்.இது இப்போதைய செல் பெசி ஜனங்களுக்கு விளங்காதுதான். தொலைபேசி சாம்ராஜ்ஜியத்தில் கைபேசி பிறப்பதற்கு முன் என்கிற காலம் ஒன்று இருந்தது. அப்போதெல்லாம் எப்போதும் பி பி கால் பேசும் இனம் ஒன்று உண்டு.
ஒரு சிலர் போனில் அவன் வாடகைக்கு விடும் வீடு பற்றி விசாரித்தார்கள். அந்த முதுகுன்றத்து வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொள்ள எனக்கு உனக்கு என போட்டி போட்டுக்கொண்டு யாரும் வரவில்லை.
திடீரென ஒரு நாள் முதுகுன்ற நகரில் அவன் வீட்டுக்குப்பின்புறம் குடியிருப்பவரின் பையன் சமுத்திரகுப்பம் வந்தான். அவன் வேலை பார்க்கும் டெலிபோன் அலுவலகத்துக்கு நேராக வந்து 'வீடு வாடகைக்கு வேண்டும்' என்றான்.'யாருக்கு' என்றான் அவன்.'என் நண்பர் ஒருவருக்கு' வந்தவன் பதில் சொன்னான். வீீடு பூட்டிக்கிடப்பதில் என்ன பிரயோசனம் என்று எண்ணி ' நீங்கள் சொன்னால் சரிதான்' என்றுமுடித்தான்.அட்வான்ஸ் தொகையொன்று கை மாறியது. ஏதோ தொகை. கைவசம் அவன் தயாராக வைத்திருந்த முதுகுன்ற வீட்டுச் சாவியை அவனிடம் ஒப்படைத்தான்.'மாதம் ஆயிரம் வாடகை' சொல்லியாயிற்று. ஆயிரமே பெரியதகைதான். சிறியது வீடு.ஒரு வழியாக முதுகுன்ற வீட்டை வாடகைக்கு விடுவது என்கிற பிரச்சனை முடிவுக்கு வந்தது.மனம் லேசாக சந்தோஷப்பட்டது.மனைவிக்கு போன் போட்டான்.'வாடகைக்கு வர்ர ஆளு சைவமான்னு கேட்டிங்களா' அவள் கேள்வி வைத்தாள்.'சைவமாதான் இருக்கும். இல்லாகாட்டி நமக்கு தெரிஞ்ச ஒரு பையன் நம்மகிட்ட அந்த மனுஷனை வாடகைக்குன்னு கொண்டு வந்து விடுவானா' அவன் சமாளித்தான்.அவள் அமைதி ஆனாள்.
இரண்டு வாரம் சென்றது.அவனும் அவளும் விடுமுறைத்தினதன்று முதுகுன்றம் புறப்பட்டார்கள். அவன் வீட்டையும் வீட்டில் குடியிருப்பவரையும் பார்த்துவரலாம் என்பதாக யோசனை.இருவரும் முதுகுன்ற நகரில் பேருந்தை விட்டு இருந்து இறங்கினார்கள். வாடகைக்கு விட்ட அந்த வீடு திருவள்ளுவர் நகரில் இருந்தது. இருவரும் பைய நடந்தார்கள்.தன் வீட்டு வாசலில் நாற்காலிபோட்டுக்கொண்டு ஒரு ஆள் உறங்கிக்கொண்டிருந்தார்.ஒரு பெண் புழுங்கல் அரிசியை கும்பலாகக்கொட்டி அதனை முறத்தால் கிளறியபடியே இருந்தாள்.
'சார் நாங்கதான் வீட்டு சொந்தக்காரங்க வந்துருக்கம்' அவன் கொஞ்சம் உரத்துக்குரல் தந்தான்.'யாரு வூட்டுக்காரரு' அந்தப்பெரியவர் ஆரம்பித்தார்.
'நீங்க குடியிருக்குற வீட்டுக்கு சொந்தகாரரு'
'அப்படியா எம் மருமொவள கூப்பிடறேன்.இதுல எனக்கு சோலி என்னா இருக்கு'
மருமகள் வீட்டின் உள்ளிருந்து வெளியே வந்தாள்.
'யாரு யாரு'
'நாங்கதான் வீட்டுக்கு சொந்தக்காரங்க'
'வாங்க வாங்க சரியான நேரத்துக்கு தான் வந்துருக்கீங்க. வூட்டு உள்ள இருக்குற முனிசிபாலிடி கொழாயில தண்ணி வருல.தெருவுல பூமிவுள்ளாற போற மெயின் கொழாயிக்கு நேரா பள்ளம் எடுக்கணும். ஒரு துண்டு குழாய் போட்டு இழுத்துடணும். நம்ம வூட்டு வாசல்ல ஒரு தொட்டியும் கட்டுணும்'
'இது என்னா புது சேதி' அவன் மனைவி தொடர்ந்தாள். வீட்டு சொந்தக்காரரைப் பார்த்த உடனே இப்படியுமா ஆரம்பித்துவிடுவார்கள் அவனின் அவளுக்கு சங்கடமாக இருந்தது..
'ஒண்ணும் புது சேதி இல்லே. தண்ணி வரவேண்டிய போர்சுல வருல. வர்ர தண்ணியும் வூட்டுக்கு ஏறமாட்டேங்குது.அதான் குழி வெட்டி கொஞ்சம் வேல செயிணும் ஒரு தொட்டி கட்டணும்.அது உள்ள அந்த தண்ணி உழுவுணும். அதுல சின்னதா ஒரு மோட்டார் போட்டு அத வூட்டு உள்ளாற கொண்டாறணும்.வேல இருக்கு'
'இப்பதான நீங்க வந்து பதினைஞ்சி நாளு ஆவுது'
'அதுக்குன்னு தண்ணி இல்லாம என்னா செய்யிறது'
'ரொம்ப செலவு வரும்போல' அவன் அச்சத்தோடு சொன்னான். அவன் மனைவிக்கு எரிச்சலாக வந்தது.அமைதியாகவே இருந்தாள்.
'ஒண்ணும் பெரிய விஷயம் இல்லே.நேரா பீச்ச கை வாட்டமா தார் ரோட்டே பொனீங்கன்னா ஒரு எண்ணெ மில்லு வரும். வெங்கடேஸ்வரா ஆயில் மில்லுன்னு நெனைக்கிறேன்.பக்கத்துல தனலச்சுமி ரைசு மில்லு அதுக்கு பக்கத்துல சிமெண்டி தொட்டி செய்யுற கடை.அந்த ஓனரு.இந்த வேலய எல்லாம் காண்டிராக்டா எடுத்து செய்யுறாரு.ஒரு எட்டு போங்க பேசுங்க.காசு என்னா ஆவும் அது அது எவ்விடம்னு தெரிஞ்சிகிட்டு வந்துடுங்க'
'அவுரு இந்த தெருவுல இது மாதிரி வேல செஞ்சி இருக்குறாரா?'
அவன் மனைவி ஒரு கேள்வி கேட்டாள்.
;ஓ ரைட்டா இதே தெருவுல மூணு பேரு வூட்டுல இந்த வேல பாத்து இருக்குறாரு.வூட்டுக்கு பதினைஞ்சி ரூவா வாங்குனாருன்னு கேள்வி'
'என்னம்மா சொல்றீங்க ஒரு ஆயிர ரூவா வாடகைக்கு வந்துட்டு இப்ப பதினைஞ்சி ஆயிரம் செலவு சொல்றீங்க'
'வொங்க வூடு நீங்க செய்யுறீங்க.தண்ணி முக்கியமில்ல ஒரு குடுத்தனகார பொம்பள தண்ணி இல்லாம என்ன செய்வா'
'எம் மூஞ்சில அப்பிடி என்னா இருக்கு.எதுக்கு என்னை பாக்குறது.போயி அந்த காண்டராக்டரை பாத்துட்டு வாங்க' செலவு என்று வந்துவிட்டால் இப்படியாக சூடாப்பேசுவது அவளுக்குப்புதிதல்ல.அவன் அறிவான்.
'காசி குடுக்குணுமுல்ல'
'குடுக்குறதுதான் அப்புறம் என்ன செய்யுவே' அவன் மனைவி அதட்டலாய்ச்சொன்னாள். .
அவன் நேறாகப்புறப்பட்டு அந்த சிமென்ட் காங்கிரீட் செய்யும் கடைக்குச்சென்றான்.தொட்டிகள் சின்னதும் பெரியதுமாக அங்கங்கே நின்று கொண்டு இருந்தன.பாத் ரூமுக்குள் வைக்கப்படும் ஜன்னல் ஜாலிகள் அடுக்கப்பட்டுக்கிடந்தன.என்றோ செய்த அண்ணா சிலையொன்று கேட்பாரற்றுக்கிடந்தது.
'சாருக்கு என்ன வேணும்'
அறுபது தாண்டிய ஒருவர் கைலி கட்டிக்கொண்டு மர நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
'நானு சமுத்திர குப்பத்திலிருந்து வர்ரன் என் வீடு இங்க திருவள்ளுவர் நகர் மூணாவது தெருவுல இருக்கு. வீட்டுல இருக்குற முனிசிபாலிடி குழாய்ல வர்ர தண்ணி வீட்டுக்குள்ள ஏறமாட்டேங்குது. நீங்க அந்த வேலயா காண்ட்றாக்டா செய்யுறதா சொன்னாங்க அதான் வந்தன்'
'சொல்லுங்க உங்க தெருவுல மூணு வூட்டுல செஞ்சி குடுத்துருக்கன். நீங்க பாருங்க. நம்மகிட்டவேல சுத்தமா இருக்கும்.வூட்டுக்கு பதினஞ்சி ஆயிரம் வாங்க்றன்.சாரு நீங்க எங்க வேல செய்யுறீீங்க'
'நானு சமுத்திரகுப்பத்துல இருக்கன்.கணக்கு அதிகாரியா வேல பாக்குறன்'
'எதுல'
'டெலிபோன்ல'
'தேவுலாம் டெலிபோன் சொன்ன உடனே எனக்கு பழைய நெனப்பு வருது. சிரிப்பாவும் இருக்குது. நீங்க யாரோ எவுரோ. ஒரு முப்பது வருஷத்துக்கு முன்னால இதே டவுன்ல டெலிபோன வேல செய்யுற பசங்களோட நானும் தங்கி இருந்தன். நல்லா படிச்ச பசங்க. ரூமு பஸ் ஸ்டேண்டு கிட்ட இருந்துது. காமாட்சி நாயரு தியேட்டரு பக்கத்துல. அந்த பசங்க பேருகூடம் மறந்துபோச்சி.பாலு சாலுன்னு செல்லமா கூப்பிடவும்.அது என்ன பாலுவோ அது என்ன சாலுவோ முழு பேரு எனக்கு நெனப்புல இல்ல'
'அது என்ன சேதி'
'அதாங்க நானு ஒரு நாலு பேருக்கு இட்டுகிணுபோய் டெலிபோனு ஆபிசுல வேல பாக்குற ஒரு ஆள நாலு தட்டு தட்டுனம்.ராத்திரி பன்னெண்டு மணி இருக்கும். டூட்டி முடிச்சிட்டு அந்த ஆளு மணிமுத்தாத்து பாலத்துமேல சைக்கிளு உட்டுகினு வந்தாபுல. சைக்கிள ஹாண்டில்பாரை புடிச்சி நிறுத்துனும் போட்டம் ஒரு போடு அந்த ஆளு நானு டெலிபோன் ஆபிசுகாரன் நான் உங்களை என்னய்யா பண்ணுனேன்னு ஓங்கி கத்துனான் நாங்க வுடுவுமா'
'அப்புறம்'
'அவ்வவுளதான் இண்ணைக்கி பழச நெனச்சி பாக்குறேன் நீங்களும் டெலிபோன் ஆபிசுன்றீங்க'
'எதுக்கு அவர அடிச்சிங்கன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்'
'அதெல்லாம் இப்ப ஞாபகமா இருக்கு. ஆபிசுல ஓயாம குடைச்சலு குடுத்தாராம் அவரு. அந்த ஆள கொஞ்சம் தட்டிவக்கணும்னு சாலுவும் பாலுவும் என் கிட்ட பேசுனாங்க.அவரு பாப்பார சாதின்னும் சொன்னாங்க..அவருக்கு என்னாத்துக்குதான் அம்மாம் கிருதோ'
'யாரு உங்களை அடிக்கச்சொன்னாங்கன்னு சொன்னீங்க'
'அந்த பாலுவும் சாலுவும்தான்.ஆனா அவுங்க அந்த பாலக்கரை ஸ்பாட்டுக்கு வருல. நாந்தான் நாலு பேர இட்டுகினு போயி அந்த அடிக்குற காரியத்தை செஞ்சன்.இண்ணைக்கு நெனச்சாலும் ரவ மனசுக்கு கஸ்டாமாதான் இருக்கு. அப்ப எங்களுக்கு செறு வயசு. அப்புறம் மூலைக்கு ஒருத்தரா அவுங்க அவுங்க பிரிஞ்சி போயிட்டம்'
'கெடக்கு வுடுங்க. நம்ம காரியத்த பாக்குலாம்.அட்வான்சா அய்யாயிரம் தர்ரேன் வச்சிகினு வேலய ஆரம்பிங்க.பாக்கி பத்தும் உங்களுக்கு கரெக்டா வந்துபுடும்'
' உங்க வூடு எதுன்னு சாரு சொன்னிங்க'
திருவள்ளுவர் நகர் மூணாவது தெருவுன்னு சொன்னேனே. வூட்டு நெம்பர் 9. போஸ்டாபீசு இருக்குற தெருவு'
'ஆமாம் அந்த வூட்டுல இப்பதான் வீராணம் ஏரி மீனுவ விக்குற ஆசாமி குடிவந்தாரு'
'அப்படியா சொல்றீங்க. வீட்டு வாசல்ல கூட ஒரு பெரியவரு இருந்தாரு'
'ஆம் அதே வூடுதான். மீனு காரரு இந்நேரம் வீராணம்.ஏரிக்கரைக்கு போயி இருப்பாரு.சரக்கு புடிச்சாரணுமே'
'வூட்ட வாடகைக்கு நானு வுட்டன் அதான்.வேற ஒண்ணும் எனக்கு தெரியல'
'ஆமாம் சாரு. அந்த வூட்டு பொன்ண ஒரு பையன் காதலிச்சான் அவன் ஒசந்தசாதி. பையன் வூட்டுல கல்யாணத்துக்கு ஒத்துகுல.ஆனா பொழங்கின பொண்ண அவன் வுடுலயே. கட்டிகினான். நல்ல பையன்.பட்னமோ பம்பாயோ பூட்டான்'
'யாரு அந்த பையன் சாரு'
'அந்த வூட்டுக்கு பின்னாடி வூட்டுக்காரன் சாரு அவனும் அவன் தகப்பனுக்கு ஒரே பையன் அவுங்க கறீ மீனு திங்குற சாதி இல்ல'
'அது கெடக்கு வுடுங்க நமக்கு எதுக்கு ஊரு கதை. என் வூட்டுல கொழாதண்ணி சுகுறா வர்ராமாதிரி உங்க வேல இருக்குணும். நானு கெளம்புறேன் என்ன'
அவன் தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான்.அவனுக்குள் இத்தனை நாளாய் அவனை முதுகுன்ற மணிமுத்தாறு பாலத்தில் அடித்தது யாரென்று தெரியாமல் இருந்தது. அலுவலப்பணியின்போது ஏதோ பேசி ப்பேசி அது இழுத்துக்கொண்டு போனது. இப்படி அப்படி என்றாகி அவன் பாலக்கரையில் அடிபடுவதில் முடிந்து போனது. அவன் நெஞ்சறிய யாருக்கும் தவறு ஒன்றையும் செய்துவிடவில்லை. ஆனாலும் யாருக்கோ அவன் மீது தீராக்கோபம். அது மெய்யாக இருக்கலாம் யார் அவனை அடித்தார்கள் என்பதே அவனுக்குத் தெரியாமல் இருந்தது. முதுகுன்ற போலிசில் புகார் கூட செய்தான். அரசாங்க உத்தியோகத்தில் இருந்துகொண்டு யாரைக்கேட்டுக்கொண்டு நீ போலிஸ் ஸ்டேசனுக்குப் போனாய் புகாார் கொடுத்தாய் என்று ஆரம்பித்த அதிகாரிகள் அவனுக்குத் தண்டனை மட்டுமே தந்தார்கள். யார் அவனை அடித்தார்கள் என்பதே விளங்காமல்தான் இக்கணம்வரை இருந்தது.. அவனுக்கு இன்றுதானய்யா அதற்கு ஒரு விடை கிடைத்தது. பாருங்கள் விஷயம் இன்று நடந்ததுபோல் இருக்கிறது. அதற்குள் எத்தனையோ ஆண்டுகள் ஓடியேதான் விட்டன. அவனுக்கு அந்த பாலுவும் சாலுவும் இன்றும் இனிய நண்பர்களே.
. எல்லோருக்கும் வயதுமட்டும் ஆகிவிட்டிருக்கிறது.அவ்வளவுதான். மீண்டும் பொடி நடையாய் தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான். போஸ்டாபீஸ் தெருவில் அவன் வீட்டுக்கு நேராக பெரிய மீன் கூடை கட்டிய சைக்கிள் நின்றது. வீட்டிலிருந்து ஒரு நடுத்தர வயது ஆள் தெருவுக்கு வந்தார்.
'வாங்க சாரு நீங்க வந்தீங்கன்னு என் வூட்டுக்காரி சொன்னாங்க எனக்கு ரொம்ப. சந்தோஷோம்'
' நீங்க தான் குடியிருக்குறதா' அவனிடம் கேட்டு முடித்தான்.
அவன் மனைவி திடு திடு என்று வாசலுக்கு வந்தாள்.தோட்டத்தில் இருக்கும் மாமரத்து நிழலில் அமர்ந்திருந்தவள்.
'கிளம்புலாமா' என்றாள்.துளசி மாடமும் பாரிஜாத ச்செடியும் தோட்டத்தில் விட்டுவிட்டுப்போனதைக் காணவில்லை.மனம் சற்று அவளுக்குக் கனத்துப்போனது.
'ஏன் ஒரு மாதிரியா'
'ஏனா. நம்ம வூட்டு மொட்ட மாடி பூரா கருவாடு காயுது. எனக்கு இங்க நிக்கமுடியல' அவனிடம் மெதுவாகச் சொன்னாள்.
'சும்மா சொல்லக்கூடதுங்க வுங்க வீடு ராசிதான். எம் பொண்ணுக்கு இந்த வூட்டுக்கு வந்த ஒரு வாரத்துலயே கல்யாணம் முடிஞ்சி போச்சி. மாப்பிளதம்பி வீடும் தே இருக்குதே பின் வீடு. பையனும் நல்ல பையன் உங்களுக்கு தெரிஞ்சிம் இருக்கும்.' மீன் கூடை கட்டிய சைக்கிள் வண்டிக்காரர் அவனிடம் சொல்லிக்கொண்டார்.
'கெளம்பலாம் நேரம் ஆவுது' என்றாள் அவள்.
'முனிசிபாலிடி தண்ணி வூட்டு க்குள்ள வர்ரதுக்கு ஏற்பாடு பண்ணி அட்வான்சும் நீங்க சொன்ன அதே ஆளுகிட்ட கொடுத்து இருக்கன். சாய்ந்திரமா வேலை ஆரம்பிக்க ஆளுங்க வரும்'
'அதாங்க ரைட்டு. போனமா வேல முடிஞ்சிதான்னு இருக்குணும். உங்களை எனக்கு ரெம்ப புடிச்சிருக்குது சாரு' மீன்காரரின் மனைவி சொல்லி நிறுத்தினாள்.
வீட்டு வாசலில் இருந்த பெரியவர் 'புதுசா வந்த சரக்குல வீராணம் ஏரி வாளைவ இருந்தா குடுத்தனுப்புலாம். சமுத்திரகுப்பத்துலயும் மீனுவ இருக்குதுன்னு சொன்னாலும் ஏரி மீனுவ எண்ணைக்கும் ராசவம்ஷம்' என்றார்.
யாருக்குமே ஏனோ இது காதில் விழவில்லை.பெரியவர் அமைதி ஆனார்..
தன்னை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பாக இந்த ஊர் பாலக்கரையில் மறித்து அடித்தவர்கள் யாரென்பதை தான் தெரிந்துகொண்டசெய்தியை அது நல்லதோ அல்லது கெட்டதோ அவளுக்குச்சொல்வதா இல்லை வேண்டாமா என்கிற தீவிர யோசனையில் அவன் இருந்தான்.
'நான்தான் வீட்டுக்கு குடி இருக்க வர்ரவங்க சைவமான்னு கேட்டு அத மொதல்ல தெரிஞ்சிகணும் அப்புறமா அந்த அடவான்சை வாங்க்ணும்னு படிச்சி படிச்சி உங்ககிட்ட சொல்லி இருந்தனே' அவள் ஆரம்பித்தாள்..
-----------------------------------------------------------------------
..

Friday, August 7, 2015

bantham- story



பந்தம் -எஸ்ஸார்சி


நேற்று எம் ஜி ஆர் நகர் மாரி அம்மன் கோவில் பூசாரி எங்கள் வீட்டிற்கு வந்தார்.எம் ஜி ஆர் நகர் என்றால் அது ஒன்றும் சென்னையிலுள்ள அண்ணா நகர் போன்றது இல்லை.முதுகுன்றமே ஒரு சிறு நகரம்தான்.இப்போதுதான் அது தன் கால்களை அகலமாக்கி 'இதோபார் என்னை 'என்கிறமாதிரி வளர்ந்துவிட்டிருக்கிறது. அந்த முதுகுன்றத்து கிழக்குப்பகுதியில்தான் இருக்கிறது இந்த எம் ஜி ஆர் நகர். ஒரு நூறு சலைத்தொழிலாளர்க்கு அன்றைய முதல்வர் இனாமாக மனை ப்பட்டாவழங்கியதுதான் இதன் ஆரம்ப வரலாறு.
.நம் நாடே கொஞ்சம் வளர்ச்சி பெற்று இருக்கிறது என்பதுண்மை.முதுகுன்றம் மட்டும் விதிவிலக்கா என்ன.இல்லையென்றால் பேருந்திலும் ரயிலிலும் பிச்சை எடுப்பவர்கள் சட்டமாக பிச்சை கொடு என்று கேட்பதும், அவர்களே நூறு ரூபாய் நோட்டினை சர்வ அலட்சியமாக பார்ப்பதும் பிரத்யட்சமான பின்னே நாம் என்னத்தைச் சொல்வது.
செல் போன் இல்லாத பிச்சைக்காரர்களை எனக்குக் காட்டுங்களேன். பார்ப்போம்.இல்லை அய்யா. .அது எப்படி இதுகள் சாத்தியமா என்று கேட்கா தீர்கள்.நான் காலில் மாட்டிக்கொண்டிருக்கும் செருப்பைவிடவும் அணிந்திருக்கும் சட்டையைவிடவும் என் தோளில் தொங்கும் பேக்கைவிடவும் நான் தெருவில் சந்திக்கும் பிச்சைக்காரர்கள் நன்றாகவே வைத்துக்கொண்டு இருப்பதை நான் பார்த்த பிறகுதான் உங்களுக்குச் செய்தி சொல்கிறேன்.
. எம் ஜி ஆர் நகருக்கு அருகிலேதான் நாங்கள் குடியிருக்கும் திருவள்ளுவர் நகர். அதனில் மூன்றாவது தெருவில் ஒன்பது எண் கொண்டது என் வீடு.நேற்று இரவுதான் என் வீட்டில் பூட்டியிருந்த பீரோவில் இருந்த நகையும் பணமும் திருடுபோனது. முதுகுன்ற கடைதெருவுக்குப் போய் கொஞ்சம் மளிகைசாமான்கள் வாங்கி அந்தக் கொளஞ்சி அப்பனை த்தரிசித்துவிட்டு வீடு திரும்பி வருவதற்குள்ளாக இப்படி எல்லாமா நடக்கும் என்றால் நடந்து விட்டதே. வீடு திரும்பிய நான் வீட்டின் கதவைத்திறக்க சாவி எடுத்தால் வாயில் கத்வு உள் புறமாக தாளிடப்பட்டு இருந்தது. ஏதோ ஞாபகத்தில் வீட்டில் யாரோ நம்மவர்கள் தான் உள்ளே இருக்கிறார்கள் என்கிற நினைப்பில் நான் காலிங் பெல்லை வசமாக அமுக்கினேன். வீட்டின் கதவுபடார் எனத் திறந்து கொண்டது. வீட்டின் உள்ளிருந்து ஜட்டி மட்டுமே போட்டிருந்த இரு திருடர்கள் வீச்சென்று எங்களைத்தாண்டிக்குதித்து புயலாகச் சென்று மறைந்தனர். வீட்டின் உள்ளே சென்றேன். என் மனைவி வாசலிலிருந்து திருடன் திருடன் என் அலறினாள்.நான் தினம் சோறு போட்டு ஜீவிக்கும் நாயொன்று தனக்கு எதுவும் தெரியாது என்கிறபடிக்கு வாசலில் படுத்துக்கிடந்தது.அக்கம் பக்கத்துக்காரர்கள் நான்கு பேருக்கு வந்து வாசலில் நின்றனர். காலிங்க் பெல்லை அமுக்கி நான் இமாலயத்தவறு செய்துவிட்டதாகச்சொன்னார்கள். வாயில்கதவை அப்படியே நாதாங்கி போட்டிருந்தால் திருடனை லட்டு மாதிரி பிடித்திருக்கலாம் என்றும் இலவச யோசனை சொன்னார்கள்.பாப்பான் வீட்டு நாயும் அரிவாளும் எதுக்கும் தேறாது என்றுகூடப் பேசிக்கொண்டார்கள்.
மறு நாள் முதுகுன்ற நகரத்துப் போலிசுகாரர்கள் என் வீட்டிற்கு விஜயம் செய்தார்கள். நான் போய்ச்சொல்லிதான் அழைத்து வந்தேன். அவர்கள் வீட்டை ஒரு சுற்று வந்து பிறகு எங்களை விசாரித்தார்கள். என்னையும் என் மனைவியையும்தான். விசாரணையை எப்படி எனக்கேட்டால் அசந்துபோவீர்கள்.என் மனைவி மிகவும் பயந்தே போனாள்.திருடுபோன நகை வைத்திருந்த இரும்பு பீரோவின் சாவிக்கொத்து எங்கே வைப்பீர்கள் அந்த சாவிக்கு டூப்ளிகேட் உண்டா எப்போதும் பீரோ பூட்டி இருக்குமா இரவில் மட்டும் பூட்டுவதா கடைத்தெருவுக்குப்போனால் பூட்டுவீர்களா வெளியூர் போனால்தான் பூட்டுவீர்களா,வேலைக்காரி வைத்துக்கொண்டு வீட்டு வேலை செய்கிறீர்களா இல்லை நீங்களே வீட்டு வேலை செய்துகொள்கிறீர்களா திருடு போன இரண்டு தங்க வளையல்களை எங்கே வாங்கினீர்கள்,அதற்கு ரசீது இருக்கிறதா அவை உங்களுடையது தானா இல்லை இரவல் நகையா. உங்களுக்கு கவரிங் நகை அணியும் பழக்கம் உண்டா இப்படிக் கேள்வி மேல் கேள்விகள். வீட்டில் திருடு போய்விட்டது என்று போலிசில் சொன்னால் அவர்கள் நம்மோடு சேர்ந்துகொண்டு கண்ணை கசக்கிக்கொண்டு நிற்பார்கள் என நான் முதலில் நினைத்ததுண்டு. போகட்டும் விடுங்கள்.. விசாரணை ஒரு வழியாகமுடிந்தது. தடய சாஸ்திரம் பயின்ற விரல் ரேகை வித்துவான்கள் தாம் கொணர்ந்த வெள்ளை நிற பவுடர் ஒன்றை பீரோவின் மேலும் கீழும் இடுக்கிலும் கைப்பிடியிலும் தடவித்தடவி ஒரு நோட்டு புத்தக விஷய்த்தோடு ஒத்து பார்த்தார்கள்.
அப்புறம்தான் அந்த நாய் வருகை.போலிசு இலாகாவின் செல்ல மோப்ப நாயை சமுத்திரகுப்பத்திலிருந்து ஒரு கருப்பு வேனில் அழைத்துக்கொண்டு வந்தனர். அதனை என் வீடெல்லாம் சுற்றி வந்து காண்பித்து பின் ஓட விட்டார்கள். 'ரன்' 'ரன்' என்று ஆங்கிலத்தில்தான் நாயிக்கு க்கட்டளைதந்தார்கள். மோப்ப நாயின் பெயர் 'ரோஸ்'. அதன் உயரம் நம் இடுப்பு வரைக்கும் இருந்தது. அது ஓயாமல் காதுமடல்களை மடக்கி மடக்கி த்திறந்தது கண்கள் ஏதோ செய்தி சொல்வதுபோல இருந்தன.
.அது என்னவோ பாருங்கள் நான் பார்த்தவரையில் நாய்களுக்கு யாரும் தமிழில் பெயர்வைப்பது இல்லை.ஜெனி,ஜூலி,பிரவுனி,ஜில்ஸ்,ஃபெர்ரோ,டார்கி, ரைனி., சைனி,இவை எல்லாம் நாய்களுக்கு வைத்திட்ட திருப்பெயர்கள். ஏனோ தமிழ்ப்பெயர் ஒன்று கூட இல்லை.ஒருக்கால் தமிழில்பயர்வைத்தால் நாயின் மதிப்பு கன்னாபின்னா என்று குறைந்துபோவிட்டால் என்னசெய்வது என்கிற அச்சம் ஒரு இருக்கலாம்.சரியாக வேட்டை கீட்டை பிடிக்காவிட்டாலும்தான் என்ன செய்வது.ராமு மணி அப்பு அம்மு இவைகூட நாய்களின் பெயர்கள்தான் இவை 'ட்ரோதா' என்று கூப்பிட்டால் நாம் விட்டெறியும் எச்சிலையை நக்கி விட்டு வால் மட்டும் ஆட்டி க்காண்பிக்கும் பீ யைத்தின்னும் நாட்டு நாய்கள்.
நேற்று அதான் இப்படித் திருடு போவதற்கு முதல் நாள் என் வீட்டில் ஒரு சமாச்சாரம் நடந்தது. மீண்டும் அதனைச்சொல்ல ஆரம்பிக்கிறேன்.
எம்ஜியார் நகர் மாரியம்மன் கோவில் பூசாரி என் வீட்டிற்கு வந்திருந்தார்.எங்களை சத்தம்போட்டு 'சார்' என அழைத்தார்.
'கோவிலுக்கு திருவிழா வருது மாரியாத்தாளுக்கு என்ன காணிக்கை செலுத்துறீங்களோ செலுத்திடுங்க. நானும் தே இருக்கே அந்த எம் ஜி ஆர் நகர்தான்.அந்த நகருல மெயின் ரோடுல இருக்குற அந்த ஆத்தா கோவில்லதான் நான் பூச செய்யுறேன்'
'வேற எதாவது சேதி இருக்கா' என் மனைவி கேட்டாள்.பூசாரியை நன்கு அறிந்தவள் மாதிரி. எனக்குத்தான் ஒன்றுமே புரியவில்லை..
' நான் இப்ப என்ன கேட்டுட்டன் நீங்க ஏன் மூஞ்சில அடிச்சமாதிரி பேசுறீங்க'
'வேற ஒண்ணும் சேதி இல்லன்னா நீரு போயிகிட்டே இருக்கலாம் பூசாலியாரே'
'இது நல்லா இல்லே'
'எது'
பூசாரி என் வீட்டிலிருந்து இறங்கி விறு விறு என நடந்துகொண்டிருந்தார்.இப்படி என் மனைவி பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.வருத்தமாகவும் இருந்தது.நான் குறுக்கே புகுந்து எதுவும் பேசிவிடலாம்.ஆனால் நாம் ஒன்று நினைத்துக்கொண்டு பேச அது அடுத்தவர்களுக்கு அனேக நேரங்களில் தப்பாகவும் போய்விடுகிறதே.என் அம்மாதான் சொல்வார் நாம் 'தாயே' என்றுதான் அழைத்து இருப்போம் ஆனால் எதிரே இருப்பவர்கள் 'யாரைபார்த்து நாயே என்கிறாய்' என்று சொல்லி பிலி பிலி என்று சண்டைக்கு வந்துவிடுவார்கள்.ஆக நான் மவுனமாகவே இருந்தேன். பிறகு ஆரம்பித்தேன்.
'ஏன் இப்படி பூசாரியிடம் பேசினாய் இது சரியா உன்னிடம் இருந்தால் கொடு இல்லையென்றால் எதற்கும் ஒரு மரியாதை இல்லையா என்ன'
'எனக்குத்தெரியும் நீங்கள் உங்கள் வேலை ப்பாருங்கள்'
'இது சரியா என்கிறேன்'
'நான் அந்த மாரி கோவிலுக்கு சென்ற வெள்ளிக்கிழமை சென்று வந்தேன்.அங்கு இந்த பூசாரியை ப்பார்த்தேன்'
'என்ன பார்த்தாய்'
'அது உங்களுக்கு வேண்டாம் விட்டு விடுங்கள்'
'நீ செய்ததுதான் சரி என்று சாதிக்கிறாயா'
'வீட்டிற்கு வந்த கோவில் பூசாரியிடம் எப்படி ப்பேசுவது என்பது அறியாதவளா நான்'
எனக்கு ஒன்றுமே பிடிபடவில்லை.ஏதோ ஒரு உறுத்தல் மனத்தில் இருந்துகொண்டே இருந்தது. அன்று இரவேதான் என் வீட்டில் திருடு போனதும் போலிசு காரர்கள் வந்ததும் பின் அந்த விரல் ரேகைக்காரர்களைத், தொடர்ந்து மோப்ப நாய் வந்ததும் என் கண் முன்பாக நடந்துகொண்டிருந்தது.
போலிசுகாரர்கள் கொணர்ந்த சமுத்திரகுப்பத்து மோப்ப நாய் 'ரன்' என்ற கட்டளையைப் பெற்றுக்கொண்டவுடன் மின்னலென ஓடியது.ஓடியது ஓடிக்கொண்டே இருந்தது.. எம் ஜி ஆர் நகர் மாரியம்மன் ஆலயம் வரை ஓடியது. கோவில் பூசாரி அம்மன் சன்னதி முன்பாக நின்று ஏதோ சேவார்த்திகளிடம் பேசிக்கொண்டிருந்தார்.மோப்ப நாயோடு ஒடிய இரண்டு காவலர்கள் அந்த நாய் நிற்க அவர்களும் நின்று கொண்டார்கள்.நான் மெதுவாக என் சைக்கிளை எடுத்துக்கொண்டு மாரியம்மன் கோவில் வாசலில் போய் நின்று கொண்டேன்.
'இதுவரைக்கும் திருடன் நடந்து அல்லது ஓடி வந்து இதற்கு ப்பிறகு ஏதோ ஒரு வெய்கிளில் ஏறி சென்று இருக்கவேண்டும். அதுதான் இப்பத்திக்கு சொல்லமுடியும்' என்றனர் நாயுடன் ஓடிவந்த காவலர்கள். வேறு ஒன்றும் அங்கு நடந்துவிடவில்லை.முதுகுன்ற நகர் எங்கும் சுற்றி என் வீட்டில் திருடிய அந்தத் திருடனை மோப்ப நாய் ரோஸ் கையைக்கவ்வி என் முன்னால் கொண்டுவந்து நிறுத்தி விடும் என எதிர்பார்த்தேன். எனக்கு ஏமாற்றமாகத்தான் இருந்தது.
திருடு போன தங்கவளையல்கள் இரண்டும் என் அண்ணன் மனைவியுடையவை.அண்ணன் அதனை வங்கியில் வைத்து பணம் வாங்கித்தரும்படி என்னிடம் கேட்டிருந்தார்.பிரோவில் இருந்தபணம் பத்தாயிரமும் என் அப்பா கொடுத்தது. நான் பாதுகாப்பாகத்தானே வைத்திருந்தேன். வரவிருக்கும் அவரின் சதா அபிஷேகச்சிலவுக்கு அது என அவர் என்னிடம் கொடுத்து வைத்திருந்தார்.
அண்ணனுக்கு அவர் மனைவியின் தங்க வளையல்கள். அதுவும் அவை என் வீட்டில் வைத்து திருடுபோனது எனக்கு என்னவோ போல் இருந்தது.நான் ஒன்றும் செய்வதற்கில்லை. என் அண்ணன் 'சரி விடு இதற்கு யார்தான் என்ன செய்வது' என்றார்.அப்பாவின் சதாபிஷேக ச்செலவுக்குத்தான் நான் பத்தாயிரம் கடன் வாங்க வேண்டியதாயிற்று.
எனக்குள் இன்னும் அந்த மாரிகோவில் விசேஷத்துக்கு காணிக்கை கேட்டு என் வீடு தேடிவந்த பூசாரியிடம் அன்று என் மனைவி பேசியவிதம் ரணமாய் உறுத்திக்கொண்டே இருந்தது.
போலிசின் மோப்ப நாய் திருடுபோன என் வீட்டிலிருந்து ஓடியது. அது சரி. ஏன் அந்த நாய், மாரியம்மன் கோவில். வாசல்வரை ஓடி பின் நின்றுகொண்டது.இதனை அடிக்கடி யோசித்துப்பார்த்துக்கொள்வேன்..
இந்த இரண்டிற்கும் கொஞ்சமும் சம்பந்தம் கிடையாதுதானே...
-------------------------------------------------------------------------------------------------------------