Tuesday, June 2, 2015

alpam -story



அல்பம் -எஸ்ஸார்சி




பெரும்பொங்கலுக்கு சூரியனுக்குப்படைக்க இரண்டு கரும்புகள் ஜோடியாக வாங்கவேண்டுமாம் எப்போது.யார் ஆரம்பித்து வைத்தார்களோ.அவன் முத்ல் நாளே ஒரு நூறு ரூபாய் கொடுத்து தாம்பரத்தில் இரண்டு கரும்புகள் வாங்கி சைக்கிள் காரியரில் கட்டிக்கொண்டான்.சைக்கிள் எடுத்துக்கொண்டுபோய் கரும்பு வாங்கி வருவது அவனுக்கு நன்கு பழக்காமாகியிருந்தது.சைக்கிள் ஹாண்டில்பாரில் கருப்பங்கழிகளின் முனைப்பகுதியைத் தொங்கும்படி கட்டி சைக்கிள் காரியரில் கரும்பின் அடிப்பகுதியைக்கட்டிவிட்டால் போதும். நீங்கள் உங்கள் பாட்டுக்கு சைக்கிளை மிதித்துக்கொண்டு ஜம் ஜம்மென்று ராஜ பாட்டையில் போயிக்கொண்டே இருக்கலாம்.கரும்பின் சோலையை பத்திரமாக வளைத்துக்கட்டி எடுத்து வரவேண்டும்.சோலை இல்லாத கரும்பு சூரியனுக்கு ப்படைக்க முடியாது என்பது உலக மகாநீதி.
பெரும்பொங்கல் முடிந்தது. வீட்டில் கரும்புகள் இரண்டும் உன்னைப்பார் என்னைப்பார் என்று விழித்துக்கொண்டிருந்தன.அவன் வாங்கி வந்து படைத்து முடித்த அந்த க்கரும்புகளை தின்று முடிக்கவேண்டுமே.அவன் தான் பெற்ற பையன்களிடம் சொல்லிப்பார்த்தான்.கழுத்தில் டை க்கட்டிக்கொண்டு வேலைக்குப்போகும் பிள்ளைகள் கரும்பு தின்பதை எங்கே அறிந்திருக்கிறார்கள்.கதை ஒன்றும் ஆகவில்லை. அவன் மனைவிக்கு சர்க்கரை வியாதி.அவனுக்கும்தான். சுகர் என்பது வியாதியா இல்லை தமிழில் சொல்ல நோயா இல்லை ஒரு ப்ராப்ளமா இல்லை அது ஒரு பிரச்சனையா அல்லது குறைபாடா என்னவோ அது.
தானே தண்ணீீர் ஊற்றி பார்த்து பார்த்து வளர்த்த அவன் தருமங்குடி வீட்டு பலா மரத்தில் பழுத்த முழு பலாப்பழம் ஒன்றின் சுளைகள் அத்தனையும் எடுத்து எவர்சில்வர் பேசனில் வைத்துக்கொண்டு ஒரு நாள் மாலை கணவன் மனைவி இருவரும் வீட்டுக் கூடத்தில் சம்மணமிட்டு சாப்பிட்டுவிட்டுப்பின் தலைசுற்றியது.அருகே இருக்கும் ஒரு டாக்டரிடம் காண்பித்து இருவருக்குமே சுகர்வந்து இருப்பதை தெறிந்துகொண்டார்கள்.தெய்வம் உண்மை என்று தான் அறிதல் வேண்டுமாமே அப்படித்தான் சுகர் விஷயமும்.சுகர் வந்தவர்கள் காலத்தில் கொஞ்சம் அடங்கித்தான் போகிறார்கள்.
நூறு ரூபாய் முழு நோட்டாகக் கொடுத்து வாங்கி வந்த கரும்பை சாப்பிடுவதற்குத்தான் ஆளில்லை. கூடத்து மூலையில் துயின்ற கரும்புகளில் ஒரு கரும்பை எடுத்து பக்கத்து வீட்டு ப்பையன் ஒருவனிடம் ஜம்பமாய்க்கொடுத்து' தம்பி இந்த கரும்பை நீ சாப்பிடு' என்றான்.பையன் வெடுக்கென்று பதில்சொன்னான்.'கரும்பை தின்றதா இல்லை சாப்பிடறதா '. அவனுக்கு ப்பொட்டில் அறைந்த மாதிரிக்கு இருந்தது.கரும்பை வாங்கிக்கொண்டு போனான்.அது கூட பெரிய ஒத்தாசைதான்.இன்னும் இரண்டில் ஒன்று பாக்கி இருந்தது
பாக்கி இருந்த அந்த கரும்பினை அவனே இரண்டாக நறுக்கினான்.அடிப்பகுதி கூடக்கொஞ்சம் இனிக்குமாமே ஆக அதனை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தான்..தெருவில் யாரும் இல்லை.கடைவாய்ப்பல்லில் வைத்து கரும்பைக்கடித்துத்தின்ன ஆரம்பித்தான்.அரைசாண் கரும்புக்கு ஒரு கணு இருக்கவே அதனை கடிக்க முடியாமல் யிணறினான். கணுக்களை கடிக்காமல் அப்படியே விட்டான்.கொண்டு வந்த கரும்பை க்காலி செய்துவிட்டதில் மனம் மகிழ்ச்சி பாவித்தது.இந்த பாழும் மனம் இருக்கின்றதே அது எது எதற்கெல்லாம் மகிழ்ச்சி பாவிப்பது எது எதற்கெல்லாம் துக்கப்படுவது என்கிற வெவஸ்தை இல்லாமல்தான் பழகிக்கொண்டிருக்கிறது.
'கரும்பு சாப்பீட்டாச்சா'
'ஆச்சு இன்னும் பாதி கரும்பு பாக்கி வச்சிருக்கேன் நீ எடுத்த்க்கோயேன்'
'அதயும் தின்னு தொலையறதுதானே ஏன் பாக்கி வக்கணும் காலாகாலத்துல போய்ச்சேரலாமே'
'அதான் எனக்கு சுகராச்சேன்னு பாதியோட நிறுத்திகிட்டேன்..நீ பாதி எடுத்துக்க'
'வயச்சாயிட்து அது ஒண்ணுதான்.எதுக்கு அத திங்க்ணும் அப்படி என்ன அவதிங்கற'
'காசு போட்டு வாங்கி வந்தது. கரும்பு யாரும் தொடல. எனக்கு மனசு கேக்கல'
'என்னவாவது பண்ணிக்கோங்கோ.கீழபடுத்துட்டாதான் தெரியும் மனுஷ லட்சணம் என்னங்கறது' .
அவனும் அவன் மனவியும் பேசிக்கொண்டார்கள்.அன்று இரவு சாப்பிடும்போது காரம் வேண்டாம் என்றான்.நாக்கு சற்று புண் ஆகியிருப்பது அவனுக்குத்தெரிய ஆரம்பித்தது.மறு நாள் காலை பல் துலக்கும்சமயம் கடைவாய்ப்பல் அருகே வ்லித்தது.அது எதோ சாதாரணமாக வலிப்பது இல்லையா என சமாதானம் சொல்லிக்கொண்டான்.மாலையில் ஈறு வீங்கியமாதிரிக்குத்தெரிந்தது.
'வெந்நீரில் கொஞ்சம் உப்பு போட்டு வாய்க்கொப்பளித்தான். ஒன்றும் உபத்திரவம் நின்றபாடில்லை.
' நான் கொஞ்சம் பல் டாக்டரை பாத்துட்டு வரணும்'
'ஏன் என்ன ஆச்சு பல்லுக்கு'
'இல்லை எகிறு வீங்கினமாதிரி தெரியுது'
'பாக்கி அரைக்கரும்பு இன்னும் இருக்குமே அத சாப்பிடுங்க சரியாயிடும்'
'இல்லை காசு போட்டு வாங்குன கரும்பாச்சேன்னு சாப்பிட்டேன்'
'எனாமா கரும்பு உங்களுக்கு யாராவது தர்ராங்க்ளா'
' நானு தந்தனே பாக்கி இருக்குற அரை கரும்பையும் அதே பக்கத்து வீட்டுபையனுக்கு கொடுத்துட்டேன்'
'டாக்டரப்பாத்துட்டுவாங்க'
அவன் மனவியிடம் சொல்லிக்கொண்டு ஒரு பல் டாக்டரைத்தேடிக்கொண்டுபோனான்.அந்த டாக்டரிடமும் கூட்டம் இருந்தது.பல்வலிக்காரர்கள் வரிசையாக அமர்ந்திருந்தார்கள்.ஒவ்வொருவரும் ஒரு பிரச்சனை சொல்லிக்கொண்டு அங்கே நாற்காலியில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
அவன் டாக்டரிடம் பற்களைக்காண்பித்தான்.
'கடைவாய்ப்பல்லு ரெண்டு தேஞ்சி இருக்கு. ஈறு வீங்கி இருக்கு.பல்லு சுத்தம் பண்ணணும்.ரெண்டு கடவாய்ப்பல்லும் வேறுவரையிலும் நோண்டி சுத்த்ம் பண்ணுற பெரிய வேல இருக்கு.ஆக எல்லாமா சேத்து பன்னெண்டு ஆயிரத்துக்கு வரும். என்னா சொல்றீங்க. ஒரு எக்ஸ்ரே எடுக்கணும் இன்னும் மருந்து மாத்திரைங்க வாங்கவேண்டியதுருக்கு'
'வீட்டுல சேதி சொல்லிட்டு பிரகு வர்ரன் டாக்டர்'
'அதுவும் சரி பணத்தோட நீங்க வாங்க பல்லுக்கு நா கர்ரண்டி ' பல் டாக்டர் முடித்துக்கொண்டார்.
வீடு ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கலாம். பொடி நடையாய் வீடு திரும்பினான்.
'' போன சேதி என்ன டாக்டரு என்ன சொன்னாரு'
'பொயிட்டு வந்தவன் சொல்ல மாட்ட்னா பறக்குற கெடந்து' அவன் முடித்த்க்கொண்டான்.பல் வலி அதிகமாயிற்று.சரியாக சாப்பிடமுடியாமல் இருந்தது.இரவில் ஒரு மாதிரியாக வலித்தது.பகலில் வேறு ஒரு மாதிரியாக வலித்தது.வலி வலிதான்.சாப்பிடுவதற்கு முன் ஒரு மாதிரியும் சாப்பிட்ட பின் வேறு மாதிரியும் வலித்தது. வீங்கியிருக்கும் பகுதியை ஒதுக்கி மற்றைய பற்களால் தின்று பார்த்தான். வலி குறைந்தால்தானே. பக்கத்து வீட்டுக்காரன் சொன்னபடிக்கு சிரிராம் கார பல்பொடி வாங்கி இரண்டு மூன்று முறை பல் தேய்த்தான். கருவேலம் குச்சி வைத்து பல் தேய்த்தான்.ஆலும் வேலும் பல்லுக்கு உறுதியாம் சொல்லிக்கொண்டான்.எத்தை தின்றால் பித்தம் தொலையும் என்றபடிக்கு பல் வலி இருந்தது.
அவனுக்கு லேசாக சுரம் வரும் போல் தெரிந்தது.
சாஃப்ட்வேரில் வேலைபார்க்கும் பையன் அப்பாவைப் பார்த்தான்.அவருக்கு ஏதோ பிரச்சனை அவனுக்கு ப்புரிய ஆரம்பித்தது.அம்மா தனக்கும் இந்த பல் வலி பிரச்சனைக்கும் சம்பந்தமில்லை என்று முகத்தைத்தூக்கி வைத்துக்கொண்டாள்..
'வாங்க அப்பா பல் டாக்டர் கிட்ட நானே உங்களை கூப்பிட்டு போறேன்'
சரி என்று சொல்லி உடன் புறப்பட்டான்.அதே பல் டாக்டரிடம் பையன் அப்பாவைக்கூட்டிக்கொண்டு போனான்.. பல் டாக்டர் தந்தையும் மகனும் சேர்ந்து வந்ததில் மகிழ்ச்சி அடைந்தார்.
'ரெடியாதான வந்து இருக்கிங்க' என்ற டாக்டரிடம் இருவருமே ஓரே குரலில் 'ஆம் ' என்றனர். அவனை பல் டாக்டரின் அருகே இருக்குக்ம் நெடுக்கு ப்படுக்கையில் படுக்கச்சொன்ன டாக்டர்' சிஸ்டர் பில் அவரு பையங்கிட்ட கொடுங்க. பணம் கட்டியாச்சுன்னா ட்ரீட்மென்ட் தொடங்கலாம்'. சிஸ்டர் பன்னிரெண்டு ஆயிரத்துக்கு பிரேக் அப்போடு பில் கொடுத்தாள். பையன் அதிர்ந்து போனான்.வெளியில் எதுவும் தெரிகிறமாதிரி காட்டிக்கொள்ளவில்லை.தனது ஏ டி எம் வங்கிக் கார்டு கொடுத்து பில்லை க்கட்டி முடித்தான். மருத்துவப்பணிக்ள் தொடங்கி நடந்தன.
'நாளைக்கும் வரணும் ரெண்டு பல்லுக்கு கேப் போடணும். இன்னொரு நாளைக்கும் வரவேண்டியது இருக்கும் வந்துடுங்க'
டாக்டர் முடித்துக்கொண்டார்.
அவன் தன் பையனிடம்' தம்பி ஒரு சேதி இங்க நடந்த எதுவும் அம்மாவுக்கு தெரிய வேண்டாம்.அதான்'
'நான் ஏன் சொல்லப்போறன். நீ சொல்லாம இருந்தா போதாதா'
பையன் முடித்துக்கொண்டான். எதை அம்மாவிடம் அவன் சொல்லாமல் விட்டு இருக்கிறான்.இருவரும் வீடு நோக்கி நடந்தனர்.
' என்ன வேல முடிஞ்சுதா இப்ப வலி தேவலாமா' அவன் மனைவி ஆரம்பித்தாள்.அவன் தலையை ஆட்டினான்.
'ஏன் பேசக்கூடாதுன்னு டாக்டர் ஏதும் சொன்னாரா'
'வாயில பஞ்சு வச்சி டாக்டர் அனுப்பியிருக்கிறாரு இன்னும் ஒரு மணி நேரத்துக்கு அப்பாவால பேசமுடியாது' பையன் அம்மாவுக்கு பதில் சொன்னான்.பன்னீராயிரம் செலவு ஆனது என்பது பற்றி எல்லாம் அவன் யாருக்கும் சொல்லவில்லை.
ஒரு மணி நேரம் முடிந்தது. டாக்டர் வைத்த பஞ்சை வாயிலிருந்து எடுத்துவிட்டு வாய்க்கொப்பளித்தான். அவனுக்கு இப்போது பல்வலி போன இடம் தெரியவில்லை.' இனிமே பொங்கலுக்கு கருப்பங்கழி மட்டும் வாங்கக்கூடாதுன்னு கண்டிஷனா இருக்கேன்'
வேக வேகமாய்ப்பேசினான்.
அவன் மனைவி பதில் சொன்னாள்' கரும்பு கழிவ வாங்குணும் அத சாமிக்கு படைக்கணும் நாம வாய மட்டும் ரவ பூட்டு போட்டுகணும்'
----------------------------------------------------------------------------------


...

Wednesday, May 27, 2015

pisaku -story




பிசகு -எஸ்ஸார்சி





பெரியசாமி மீது எந்த தவறுமில்லை.எல்லாப்பிழைக்கும் எப்போதும்போல் நானேதான் பொறுப்பு.
மணி முத்தாறு வலமாகச்செல்லும் திருமுதுன்றம் என்னும் ஊரில் டெலிபோன் இலாகாவில் நானும் பெரியசாமியும் வேலையில் சேர்ந்தோம் சிலர் டெலிபோன் இலாகாவில் வேலை பார்த்தோம் என்பார்கள் ஒருசிலர் வேலைசெய்தோம் என்பார்கள் ஒரு அலுவலகத்தில் வேலையைப் பார்ப்பதா இல்லை செய்வதா என்கிற ஆராய்ச்சிக்குள் போய் யாருக்கும் ஒன்றும் ஆகப்போவது இல்லை.
எது எப்படி என்று கேள்விகள் எல்லாம் கேட்காதீர்கள் டெலிபோன் இலாகாவில் வேலை செய்கிறவர்களுக்கு தொழிற்சங்கம் அதன் தொடர்பான பணிகள் எல்லாம்தான் மூச்சுக்காற்று.வேறு எங்காவது வேலைக்குப்போயிருந்தால் தொழிற்சங்கம் இத்யாதிகள் இப்படியெல்லாம் அனுபவமாகுமா என்றால் அதனைச் சொல்லமுடியாததுதான்
.தொலைபேசிப்பணியாளர் தொழிற்சங்கத்தில் இரண்டு மூன்று பிரிவுகள் இருக்கும்.சிவப்பு, சிவப்பிலிலேயே கொஞ்சம் திக்காக வேறு பிற்கு வெள்ளை என ச்சங்கக்கொடிகள் கொண்டவை அவை.
என் நண்பர் பெரியசாமி நான் இருக்கின்ற தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இல்லை எப்படியாகிலும் விஸ்தாரமாய்ப் பேசி என் சங்கத்தற்கு அவரைக்கொண்டு வரவேண்டும்.. இது ரொம்ப நாளாக எனக்கு ஆசை எல்லோருமே நான் இருக்கும் தொழிற்சங்கத்தில் உறுப்பினராகிவிட்டால் தான் சரி என்று கூட எனக்குத்தோன்றும். இந்த் நோக்கத்தோடுதான் நான் எப்போதும் இருந்தேன். இது எல்லாம் சரிப்படுமா இல்லை உறுப்படுமா என்கிற விஷயம் எனக்கு எங்கே தெரிந்தது.அந்த பெரியநெசலூர் பெரியசாமி எந்த சங்கத்தில் இருந்தார் யாருக்குத்தான் என்ன என்று எல்லோரும் வேதாந்தியாய் இருந்துவிட்டால் சண்டை ஏது சச்சரவு ஏது
அப்படியெல்லாம் விட்டுவிடத்தான் முடிகிறதா என்ன. மனக்குரங்கு சதா சர்வகாலமும் விழித்துக்கொண்டு திருவிளையாடலைச் செய்துகொண்டே இருக்கிறதே எங்கே மனிதர்களைச்சும்மா இருக்க விடுகிறதா என்ன.. உலகமே ஒரு மாயை என்று சொல்லிகொள்வானேன் பின் அந்த ஆதிசங்கரர் காவிக்கட்டிகொண்டு கையில் கொடியும் கோஷமுமாய் பாரதம் முழுதும் திரிந்து திரிந்து சங்கர மட க்கிளைகள் நிறுவியது எல்லாம் எதற்கு?.ஆசையே துன்பத்திற்கு ஆதிமூலம் என்று சொல்லி போதி மரத்துக்கீழ் அமர்ந்த புத்தருக்கும் தன் கொள்கையை அகண்ட இந்தியா என்ன இன்னும் தாண்டி தாண்டி பரப்பிவிடத்தான் ஒரு பெரிய ஆசை இல்லாமலா போனது..
சில ஆசாமிகளை ப்பார்த்தால் கொஞ்சம் பேசினால் நான் இருக்கின்ற என் சங்கத்திற்கு வந்து விடுவார்கள் என்று தோன்றும்.சிலரைப்பார்த்தால் இதெல்லாம் ஒன்றும் தேறாதப்பா என்கிறபடிக்கு கல்லுப்பிள்ளையார் மாதிரி தோற்றமளிப்பார்கள்.ஒரு சிலரைப்பார்த்த மாத்திர்மே இவர்கள் நம் சங்கத்திற்கு வரவே வேண்டாம் தோன்றிவிடும். இதற்கெல்லாம் வெளியில் சொல்லிக்கொள்ளும்படியாய்க் காரணம் ஒன்றுமில்லை. ஆனாலும் மனதிற்கு சில ஆசாமிகளை ப்பிடிக்கவில்லையே என்ன செய்ய
தொழிலாளி என்பவனுக்கு வாங்குகிற சம்பளத்திற்கு வேலைசெய்யத்தெரிகிறதோ இல்லையோ கடன் எங்கே எப்படிக்க்ிடைக்கும் என்பது முதலில் தெரியவேண்டும்.கடன் கொடுப்பதற்கு ஒரு வங்கி. இருக்கிறதா என க்கண்டுபிடித்து அதனில் உறுப்பினர் ஆதல் என்பது மிக முக்கியம்.சம்பளம் போடும் அதிகாரியிடம் ஒரு கையெழுத்து வாங்கி சென்னையில் பத்திரமாக இருக்கும் அந்த சொசைட்டிக்கு விண்ணப்பத்தை அனுப்பிவைத்தால் கடன் தொகை கைக்கு வந்துவிடும்.சூரிடி என்பதாய் அதே நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு தொழிலாளி கடன் வாங்குவதற்கு ஜாமின் கையெழுத்துப்போட வேண்டும்.அவரும் கடன் கொடுக்கும் சங்கத்தில் உறுப்பினராக இருப்பது என்பதுதான் இதில் மிக மிக முக்கியமானது.
அந்தப்படிக்கு என் நண்பர் பெரியசாமிக்கு கடன் வாங்க வேண்டிய குடும்ப சூழல். வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்து அந்த பெரியசாமியும் கடன் கொடுக்கும் சங்கத்தில் உறுப்பினர். அவர் கடன் கேட்கும் பத்திரத்தில் சூரிடி கையெழுத்துப்போடத்தான் ஆள் கிடைக்கவில்லை. அவர் உறுப்பினராக இருக்கும் வெள்ளைக்கொடிஉடைய சங்கத்தில் அவருக்கு சூரிடி போட அதாவது ஒரு நபரின் கையெழுத்து வாங்க அலையோ அலை என்று அலைந்தார். ஒன்றும் கதை ஆகவில்லை.என்ன என்னமோ பேசிப்பார்த்தார்.குழைந்து பார்த்தார். நகைச்சுவையாக ப்பேசினார். வீிறாப்பாகப்பேசினார். விறைத்துக்கொண்டு பேசினார். யாரும் மசியவில்லை.
'எனக்கு ஒரு சூரிடி கையெழுத்து வேணுமே'
அவர் என்னிடம்கடைசியாக்கேட்டார்.
'உங்க வெள்ளைக்கொடி சங்கத்தில் உங்களுக்கு யாரும் போடலயா'
'இல்லயே கேட்டுப்பார்த்தேன் கையெழுத்துபோட யாரும் ஒத்துக்கொள்ளவில்லை'
'என் சங்க உறுப்பினருக்கு மட்டும்தான் நான் சூரிடி போடுவேன். உங்களுக்குப்போட முடியாதே.' நான் வெள்ளைக்கொடி சங்கத்தில் உறுப்பினராக இல்லை என்பதை அந்த ப்பெரியசாமி அறிந்தவர்தான்.
'நானு உங்க சாதா சிவப்பு சங்கத்துக்கு வந்துடுவேன். கொஞ்சம் பொறுங்க'
' அதுல என்ன பிரச்சனை'
'சாரு நானு கைமாத்தா அந்த வெள்ளைக்கொடி சங்கத்துக்காரர்கிட்ட வாங்குன பணத்தை த் திருப்பிக்கொடுத்துட்டு பெற்குதான் வரமுடியும்.இப்ப வரமுடியாதே'
'எப்ப அந்த கைமாத்த திருப்பிகொடுப்பிங்க எப்ப நீங்க என் சங்கத்துக்கு வருவிங்க'
'சாரு நீங்க என் சுசைட்டி கடனுக்கு இப்பவே சூரிடி கையெழுத்துப்போடுறீங்க். எனக்கு கடன்பணம் சுசைடியிலிருந்து வந்துடும். அதுல அந்த கைமாத்தயும் அடச்சி புடுவேன். பெறகுதான நானு உங்க சங்கத்துக்கு வர்ரது எல்லாம்'
பெரியசாமி சரியாகத்தான் சொல்கிறார்.நான் அவருக்கு சூரிடி கையெழுத்துப்போட்டுவிடுவது என முடிவுக்கு வந்தேன்.
பெரியசாமி தயாராக வைத்திருந்த சொசைட்டி கடன் விண்ணப்பத்தை நீட்டினார்.
'வார்த்தை மாறக்கூடாது. உறுப்பினர் சந்தா தொகை என் சாதா சிவப்பு சங்கத்துக்குசெலுத்தி ரசீது வாங்கி காட்டுணும். இல்ல நான் விடமாட்டேன்'
'நீங்க என்னை நம்பி சூரிடி கையெழுத்து போடுறீங்க.நானு பேச்சு மாறுவனா.எனக்கும் பேசுன வார்த்தை முக்கியம்' பெரியசாமி என்னிடம் உருக்கமாகப்பேசினார்.
நான் பெரியசாமிக்கு கடன் விண்ணப்பத்தில் சூரிடி கையெழுத்துப்போட்டேன்.. அவர் மகிழ்ந்து போனார். என் வாயைமூடிக்கொண்டு சும்மா இருந்திருக்கலாம் நான்தான் அவரிடம் சொன்னேன்.
' பெரியசாமி நீங்க எங்க சங்கத்துல உறுப்பினரா ஆன பிறகு வர்ர ஆண்டு மாநாட்டுக்கூட்டத்துல உங்களை கவுரவிக்கறம்.சென்னையிலேந்து வர்ர மா நிலச்செயலர் பெரிய தலைவரே உங்களுக்கு சால்வ போத்துவாரு. போதுமா'
'அப்படியே செய்யுங்க' என்றார் பெரியசாமி. கடன் விண்ணப்பத்தில் கடைசியாய் வாங்குகிற சம்பளம், பிடித்தம் இவை குறிப்பிட்டு கணக்கு அதிகாரியிடம் கையெழுத்து வாங்கியபின் கையெழுத்துக்கு அடியில் சீல்போட போய் நின்றசமயம் அலுவலகத்தில் யாரோ நோட்டம்விட்டு நான்பெரியசாமிக்கு சூரிட்டி கையொப்பம் போட்டிருப்பதை வெள்ளைக்கொடித்தலைமைக்குத்தகவல் சொல்லிவிட்டார்கள்,அதிலிருந்து என் நண்பர் பெரியசாமிக்கு மேற்படியார் தொல்லை பல கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.பெரியசாமி எப்படியும் சதா சிவப்பு சங்கத்திற்கு போய்விடுவார் என்பது பற்றி அலுவலகத்தில் குசு குசு பேசிக்கொண்டார்கள்.
'எனக்கு சூரிட்டி போட யாரு வருவாங்கன்னு நாயா பேயா அலைஞ்சன் அப்ப எந்த கழுதயும் வந்து தே நா இருக்குறன்னு வந்து நிக்குல. இப்ப சங்கத்து விட்டு பூடுவேன் அது இதுன்னு எதுக்கு புரளி பேசுறது.' பெரியசாமி ஓங்கிக்கத்தினார்.சில நாட்களுக்கு அமைதியான சூழலே அலுவலகத்தில் நிலவியது.
பிறகு பெரியசாமி புதியதாகக்கட்டிய வீட்டில் கிரகப்பிரவேசம் நடந்தது.நானும் பெரியசாமியும் பார்த்து பார்த்து பத்திரிகை கொடுத்தோம். சாதா சிவப்புசங்கத்திற்கு பெரியசாமி அப்போதுதான் வந்த சமயம் என்பதால் சாதா சிவப்பு சங்கத்தோழர்கள் ஒருவர் விடாமல் எல்லோருமே புதுமனைப் புகுதல் நிகழ்ச்சிக்கு வருகை தந்தனர்.
ஆண்டு மாநாடு வந்தது. மாநாட்டு நிகழ்ச்சியில் எல்லோரும் கூடியிருந்தார்கள்.புதியதாக உறுப்பினராகச்சேர்ந்த பெரியசாமியும் மேடைக்கு எதிரே அமர்ந்திருந்தார்.மாநாட்டுத்தலைவர் ஒரு அறிவிப்பு செய்தார்.
'அதாவது பெரிய நெசலூர் பெரியசாமி நம் சாதா சிவப்பு சங்கத்தில் புதிய உறுப்பினராகச்சேர்ந்துள்ளார். அவர் இப்போது நம் மாநிலச்செயல்ருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிப்பார்'
பெரிய நெசலூர் பெரியசாமி தன் இருக்கைய விட்டு எழுந்தார்.மேடைக்குச்சென்றார். விழாத்தலைவரிடம் சால்வையை வாங்கினார். பிரித்தார் .தானே தன் கழுத்தில் மாலையாக அந்த சால்வையை அணிந்துகொண்டார்.இரண்டு கைகளையும் கூப்பிப் பார்வையாளர்களை வணங்கினார்.தன் இருக்கைக்குச்சென்று அமர்ந்துகொண்டார்.
கூட்டம் அமைதியாய் நிகழ்ந்தது அனைத்தும் பார்த்துக்கொண்டது.நான் வேறு ஒரு சால்வை எடுத்துக்கொண்டேன். விழாத்தலைவரிடம் நடந்துவிட்ட விஷயம் சொல்லி ப்பின் மாநிலச்செயலருக்கு அதை அணிவித்து நிறைவு செய்தேன்.
'இது எல்லாம் அங்கங்க நடக்கிற சின்ன விஷயம்தான் விடுங்க' என்று சொல்லிய மாநிலச்செயலர் ஆண்டு மாநாட்டு அரங்கத்தில் நேர்ந்துதுவிட்ட நிகழ்வைச் சமாளித்து முடித்தார்.
அடுத்த நாளிலிருந்து பெரியசாமி என்னிடம் பேசவே இல்லை.அவருக்கு எதனை யார் எப்படி எப்படிச்சொன்னார்களோ நான் அருகில் போய் 'நண்பரே' என்றுபேச ஆரம்பித்தேன்.
'போதும் சாரு போதும் இனி ஒரு வார்த்தை எங்கிட்ட பேசாதீங்க அதான் ஆண்டு மாநாட்டுலயே அய்யாவை பாத்துட்டேனே நான் உப்பு போட்டுகினுதான் சாப்புடறன் மானஸ்தன்'
வெள்ளைக்கொடி சங்க தகவல் பலகையில் ஒரு செய்தி போட்டிருந்தார்கள். 'தோழர் பெரிய நெசலூர் பெரியசாமி தாய்ச்சங்கத்தில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார்.எத்தனைக்காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' நான் படித்துக்கொண்டேன். எத்தனைக்காலம்தான் ஒருவர் படிப்பது.
-------------------------------------------------------------------------------------------------


Tuesday, May 12, 2015

nerutal -story




நெருடல் -எஸ்ஸார்சி




அவன் எழுதிய ஒரு கட்டுரை நூல்தான் 'படித்தலும் படைத்தலும்' அதற்கு நெல்லிகுப்பம் பெரியவர் ஜிஜியார் விமரிசனம் எழுதியிருந்தார். த்ரமான ஒரு இலக்கிய பத்திரிகையிலும் அது பிரசுரமாகி வெளி வந்திருந்தது.. அந்த இலக்கிய பத்திரிகையைப்பிரித்து அதனைப்பார்த்ததுமே அத்தனை மகிழ்ச்சி.அதே இலக்கிய பத்திரிகையில் அவ்வப்போது அவன் எழுதிய கட்டுரைகள்தான் சமீபத்தில் இப்படி ஒரு புத்தகமாக வந்தது...
அவன் எழுதி அவை வெளியும் வந்து சற்று பேசவும் பட்ட அவைகளை த் தொகுத்து ஒரு நூலாகவெளியிட சின்னதாக அவனுக்கு ஆசை. எங்கு எங்கோ போனான் எவர் எவரையோ கேட்டுப்பார்த்தான்.ஒன்றும் கதை ஆகவில்லை.கடைசியாக அண்டை ஊரில் ஒரு பதிப்பாளருக்கு ஒரு இலக்கிய நண்பர் வழி காட்டினார். நண்பர் ஊரும் பெயரும் மட்டும் சொல்லக்கூடாதுதான்.அவனுக்கு அங்கு போக அரைகுறை மனது. இருந்தாலும் போய்விட்டு வந்தான்.
யார் வேண்டாம் என்றார்கள். புத்தகத்தை த் தானே அச்சிட்டும் வெளியிடலாம். அப்படியெல்லாம் ஒரு காலம் இருந்தது.அதற்கு அரசாங்க நூலகங்களின் ஏற்பாணை வந்து சேரும். புத்தகம் அச்சிட செலவு செய்த காசு கையைக்கடிக்காமல் அந்தந்த மாவட்ட நூலக நிர்வாகத்திலிருந்து தாமதமாகவாவது அந்தப் படைப்பாளியின் வங்கிக்கணக்குக்கு வந்து சேர்ந்துவிடும். புத்தகம் போட்டதில் நட்டம் என்று ஆகிவிடாது. புத்தகம் போடாமல் எப்படி ஒரு எழுத்தாளன் ஜீவிப்பது என்கிறபடிக்கு நினைப்புள்ள முந்திரிக்கொட்டைகள் ஒருவிதமாய்ப் பிழைத்துக்கொண்டு விடலாம்.
புத்தகத்தேர்வு என்னும் சடங்கு அதில் தரமாவது கிரமாவது நூலக ஏற்பிற்கென்று குறுக்கு வழிகள் நிச்சயமாக உண்டென்பார் சிலர் . அப்படியும் சென்று வென்று வென்று வந்தவர்கள் ஏராளம் உண்டு. வெற்றி எனபது என்ன என்று கேள்வி எல்லாம் கேட்டு வைக்காதீர்கள். ரொம்பவும் சிரமம்.அவனுக்கு அது எல்லாம் தெரிந்திருந்தால் ஏன் இப்படி..நேர்வழி போகவே உன்ன்னைப்பிடி என்னைப்பிடி என்பதுதானே அவன் சமாச்சாரம்அவனைச்சொல்லி குற்றமில்லை. அவன் வந்த வழி அப்படி.
கைகாசு போட்டு இலக்கியக் கட்டுரை நூலை அச்சிட்டு.
அதற்கு அரசாங்க நூலக ஆணையும் கிட்டாது போய்விட்டால் அப்போது என்ன செய்வது.
அரசாங்கம் தன் ஊழியருக்கு ஒதுக்கிய வீடுதானே அவன் குடியிருப்பது ஆக வீட்டுப்பரணையில் சில மாதங்கள் அச்சிட்ட அந்தப் புத்தகங்களை துயில் கொள்ளச்செய்யலாம். பிறகு பழைய புத்தகம் பேப்பர் பிய்ந்த பிளாஸ்டிக் செருப்பு இத்யாதிகள் வாங்க கள்ளத்தராசு சகிதம் வீதி வலம் வரும் அரிச்சந்திர பூபதிளிடம் . எடைக்குப்போட்லாம். வெங்காயம் தக்காளி எனச்சிலதுகள் வாங்கலாம். அப்படி மனம் வருமா என்னா. வேறு வழி தெரியவில்லையே
.பார்ப்பது அரசாங்க உத்யோகம்.மாதம் பிறந்தால் சம்பளம். அதனைக் கையில்.வாங்கவும் இன்னார் இன்னாருக்கு கொடுத்து பட்டுவாடா செய்யவும்தான் அவனால் முடிந்தது.
அண்டையூர் புத்தகப் பதிப்பாளரை அவரை ப்புத்தக வியாபாரி என்று சொன்னால் அது மிகச்சரி
ஒரு நாள் அந்த அண்டையூர் பதிப்பாள்ர் அவனிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். 'சார் உங்க கட்டுரை பத்தகம் ரெடி நீங்க வரலாம் நீங்க கொடுத்த அந்த பத்தாயிரத்துக்கும் ஒரு நூறு காபி எடுத்துக்கலாம், நீங்க எப்ப முடியுமோ அப்ப வாங்க' அவன் மகிழ்ந்து போனான்.இப்படிஎல்லாம் கூட டெலிபோனில் கூப்பிட்டு விஷயம் சொல்லும் பெரிய மனமுள்ள ஒரு பதிப்பாளர் எந்த எழுத்தாளருக்கேனும் கிடைப்பாரா என்ன? மனதில் எண்ணிப்பார்த்தான். ஒரு பேருந்து பிடித்து அடுத்த ஊருக்குப்போய் வந்துவிடவேண்டியத்தான் அச்சிடப்பட்ட அந்த ப் புத்தகம் பார்க்காமல் மனம் கிடந்து அடித்துக்கொண்டது. ஒரு குழந்தையைப் பிரசவித்து மருத்துவ மனையில் அவன் மனைவி படுத்துக்கிடப்பது போலவும் உடன் தான் போய்ப்பார்க்காவிட்டால் எப்படியாவது என்கிறமாதிரியும் அவனுக்குத்தோன்றியது.ஒரு புத்தகம் அச்சில் வந்து அதனை அச்சுக்கூடத்தில் போய் முதல் முதலாய்ப்பார்த்தல் என்பது ஒரு படைப்பாளியாய் இருந்து அனுபவித்துப்பார்த்தால் மட்டுமே தெரியவரும். மற்றபடி இது விஷயம் பற்றி எவ்வளவு எழுதினாலும் அது சரிப்படாது.
பதிப்பகம் இருக்கும் அந்த அண்டை ஊருக்குப் பேருந்து பிடித்து அதனில் ஏறி அமர்ந்து கொண்டான்.மனம் புத்தகம் பற்றிய அதே நினைப்பில் நிறைந்து கிடந்தது.பேருந்தில் டிக்கட் வாங்கி அவனோடு அமர்ந்து பயணிப்பவர்களை ஒரு முறை பார்த்துக்கொண்டான்.ஏன் எல்லோருமே அவனைவிட உயரத்தில் ஒரு சாண் குறைந்த மாதிரியே தெரிகிறார்கள். அவனுக்கு அந்த சூட்சுமம்தான் பிடிபடவில்லை பேருந்தைவிட்டு இறங்கி நடந்தான். பதிப்பகம் இன்னும் தூரத்தில் இருந்தது.அது ஆட்டோ பிடித்துப்போகும் தூரத்திலும் இல்லை. ஆட்டோ வேண்டாம் நடந்தே சென்று விடலாம் என்கிற தூரத்திலும் இல்லை.இரண்டு கெட்டானாய் ஒரு தூரம் அது. வீதி வழி செல்லும் ஆட்டோக்காரன் ஒருவன்' சாரு எங்க போகணும்' என்று கேட்டதுதான் தாமதம். அந்த ஆட்டோவில் ஏறி அமர்ந்து கொண்டான்.இப்படி லபக் என்று ஏறி ஆட்டோவில் அமர்ந்து கொள்ள ஆலாய்ப்பறக்கும் தனக்கு வேகு வேகு என்று நடக்கிற பிடிவாதம் எல்லாம் எதற்கு அவன் மனசாட்சியையே அவன் கேட்டுக்கொண்டான்.இது மாதிரி இன்னும் எத்தனையோ நடந்து தானே இருக்கிறது. நண்பர் வீட்டிற்குச்சென்று அங்கு சாப்பிடச்சொன்னால் முதலில் பிகு செய்வது பிறகு சாப்பிட உட்கார்ந்து மொத்தமாய் சமைத்த எல்லாவற்றையும் காலி செய்வது. சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு முறை அவன் தோழர்களோடு காவேரி க்கல்லணைக்கு உல்லாசப்பயணம் போனான். காவேரியில் தண்ணீர் நிறைந்து கரையைத்தொட்டுக்கொண்டுபோன அந்தக்காலம்.கர்நாடகக்காரர்கள் தண்ணீர் பஞ்ச்சாயத்தில் இத்தனை சூது வாது புரட்டல் இத்யாதிகள் கற்றுக்கொண்டிராத நல்ல காலம் டூருக்குப்பணம் கட்டிவிட்டதால் வேறு வழி இன்றி போகவேண்டியதாயிற்று. டூருக்குக்கிளம்பும் அந்த சமயம் பார்த்து அவனுக்கு வயிறு என்னமோ செய்தது. வயிற்றை ப்பற்றி யாரும் லேசில் எடை போட்டுவிடாதீர்கள். ஒருவன் வாய் கிழியப் பேசிய அந்த ஜம்பத்தை எல்லாம் நான்கு முறை வயிறு கலக்கிக்கொண்டு பின்புறம் போய் போய்வந்த பிறகுதான் பார்க்க வேண்டும். கல்லணை டூருக்கு வரமுடியவில்லை உடம்பு கொஞ்சம் சுகம் இல்லை என்றால் அவன் கட்டிய காசு கோவிந்தா என்றார்கள்.டூர் நடத்துனர்கள் லேசுப்பட்டவர்களா என்ன.டூருக்கு வந்தவர்களுக்கு எல்லாம் சொன்னபடி இட்டலி பொட்டலம் வினியோகித்தார்கள்.அவனும் ஏழு இட்டலிகள் துயின்ற ஒரு பொட்டலம் வாங்கிச் சாப்பிட்டான் அந்த டூர் நிர்வாகிதான் அவனைப்பார்த்துக்க்கேட்டார்'உடம்பு சரியில்லை டூருக்கே வருவது சந்தேகம் என்றாய் எண்ணெய் மிளகாய்ப்பொடி முக்கிய ஏழு இட்டலிகள்.சாப்பீட்டு விட்டாய் பரவாயில்லை ' இப்படி எத்தனையோ வாங்கிக்கட்டிக்கொண்டுதானிருக்கிறான். கிடக்கிறது நம் கதைக்கு வந்துவிடுவோம். அவன்.
பதிப்பாளர் வீட்டு வாயிலில் ஆட்டோ விலிருந்து இறங்கிக்கொண்டான்.பதிப்பாளருக்கு வீடு அலுவலகம் எல்லாம் ஒன்றுதான்.
'வாங்க தசுரா வாங்க புத்தகம் பாக்க வந்தீகளா'
'ஆமாம். புத்தகம் பார்க்கத்தான் வந்தேன்'
' என் டேபிள்ள பத்திரமா ஒரு காபி இருக்கு பாருங்க உங்களுக்குச்சேரவேண்டியது அந்த நூறு காபியும் ஒரு பார்சலா கட்டி வச்சிருக்கேன். எடுத்துகுங்க. வேறு என்ன செய்தி' என்றார் பதிப்பாளர். அவன் திண்டாடித்தெருவில் நின்று ரூபாய் பத்தாயிரம் அவரிடம் கொடுத்துத்தான் இருந்தான்.பதிப்பகத்தாருக்கு ஒன்றும் நட்டம் இல்லை. நூலக ஆணை வந்தால் லாபம் அப்படி இல்லை என்றால் ஒன்றும் குடி முழுகி விடாது..பதிப்பகத்தில் புதிய புதிய அச்சிட்ட புத்தகங்கள் இறைந்து கிடந்தன. எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டான்.அவன் எழுதிய கட்டுரை நூல் படித்தலும் படைத்தலும் மேசையின் மீது அழகாக அமர்ந்திருந்தது.கையில் எடுத்துக்கொண்டான்.தான் எழுதிய அந்த 'என்னுரை' யை வாசிக்கத்தொடங்கினான்.முதல் பக்கத்திலேயே எழுத்துப்பிழைகள். அவனுக்கு மனம் நொந்துபோனது.பக்கம் பக்கமாகப்புரட்டினான்.எழுத்துப்பிழை இல்லாத பக்கமே இல்லை. வாக்கிய்த்திற்கு வாக்கியம் எழுத்துப்பிழை.
பதிப்பாளர் தன் மேசையில் ஜோசியப்புத்தகம் எதையோ ஒன்றை வைத்துகொண்டு 'மாமாங்க வருடத்தில் திருமணம் செய்யலாமா' என்பதைப் படித்துக்கொண்டிருந்தார்.
'சார் இந்த புத்தகத்துக்கு ப்ரூஃப் பார்த்தது யாரு'
'ஏன் வழக்கமா ப்பாக்குற அந்த தீர்த்தமலைதான் '
'எனக்கும் அவரை த்தெரியுமே தீபம் தீர்த்தமலை தானே நீங்க சொல்றது'
'ஆமாம் அவரேதான் அந்த வயசான மனுசன் உயரமா தல க்கூட வழுக்கயா'
'கொஞ்சம் அவுரு டெலிபோன் நெம்பரு இருந்தா கொடுங்களேன்'
' ரைட்டா தர்ரேன் இதோ டேபிள் மேலேயே எழுதி வச்சிருக்கேன் பாருங்க'
அவன் அந்த தீர்த்தமலையின் டெலிபோன் எண்ணை ப்பார்தததுமே உடன் தன் செல் பேசி எடுத்துக்கொண்டு அடித்துப் பேசினான்.
'யாரு தீர்த்தமலை சாருதானா வணக்கம் சார்'
'யாரு பேசுறதுன்னு சொல்லிட்டு பேசலாமே'
'தப்புதான் நான் தசுரா பேசுறன்'
'அந்த தருமங்குடி சுந்தரேசன் ராமச்சந்திரன் தானே.'
'ஆமாம் சார் நானேதான் பேசுறேன்'
' உங்க கட்டுரை புத்தகம் பார்த்தேன். ப்ரூஃப் திருத்தணும்னு பதிப்பகத்துல குடுத்தாங்க. கவனமா படிக்க ஒரு வாய்ப்பு கிடைச்சிது. ரொம்ப ப்பிரமாதம்னு வச்சிகுங்க. தொடர்ந்து எழுதுங்க சாரு, நீங்க எல்லாம் எழுதறத வுட்டுடப்பிடாது. ஆழமா இருக்கு அழகாவும் வருது.எனக்கு உங்கள நேரா கூப்பிட்டு பாராட்டணும்னு ஆசை.ஆனா உங்க நெம்ப்ரு தெரியலே. அதான்'
' அதே புத்தகத்துக்கு நான் எழுதியிருக்கிற என்னுரையில என் என் டெலிபோன் நெம்பரு கொடுத்து இருக்கேன் பாத்து இருக்கலாமே'
' ஆனா எனக்கு தோணலே. வயசாச்சி பாருங்கோ தசுரா நான் என்ன பண்ணுவேன்'
'பதிப்பகத்துக்காரங்க சொன்னாங்க தீர்த்தமலைதான் ப்ரூஃப் பார்த்ததுன்னு. அதனாலே உங்களை கூப்பிட்டு நான் ஒரு நன்றி சொல்லணும் இல்லயா அதுக்குத்தான் கூப்பிட்டேன்'
' இந்த காலத்துல இப்படி எல்லாம் நன்றி யாரு சொல்லுறா. தசுரா சார்னா ஒரு தனிரகம்னு சொல்வேன்'
'ரொம்ப நல்லா ப்ரூஃப் பார்த்து இருக்கிங்க நன்றி ரொம்ப நன்றி சாரு'
'என் கடமையை நான் செஞ்சேன். இதுல எனக்கு என்ன நன்றி அது இது எல்லாம்'
'அப்படி சொல்லக்கூடாது சார் நீங்க பெரிய வா நான் உங்களுக்கு எப்பவும் கடமைப்பட்டவன்'
'நீங்க பேசினதே ரொம்ப மகிழ்ச்சி..கொஞ்சம் பிசி மன்னிச்சுக்கணும் தசுரா'
தீர்த்தமலை டெலிபோனை வைத்துவிட்டார்.
அவன் பதிப்பாளரை ப்பார்த்துக்கொண்டான்.'
'சாரு தீர்த்தமலைண்ட பேசினீங்களா என்ன சொல்லுறாரு'
'ஒண்ணும் இல்லே ஒரு நன்றி சொன்னேன்'
'இதுல என்னா இருக்கு. சொல்லவேண்டிய விஷயம்தானே'
அவன் வேறு எதுவும் பதிப்பகத்தாரிடம் பேசவில்லை. அப்படிப்பேசித்தான் இனி என்ன ஆக இருக்கிறது;
'உங்க் புத்தகங்க நூத்தையும் எப்படி எடுத்த்கிட்டுப்போறீங்க இங்க இட நெருக்கடி புத்தகங்க வீணா போயிடும் இப்பவே எடுத்துகிணு போயிடுங்க அதான் நல்லது'
'இப்ப அப்படி வருல்லே. வேற ஒரு வேல இருக்கு அத முடிச்சிகிட்டு நான் ஊருக்கு ப்போகணும்'
'அப்படி என்னா வேல சாரு'
'அதையும் சொல்லிடறேன் நண்பர் பொண்ணுக்கு இன்னக்கி மஞ்ச தண்ணீ அதுக்குத்தான் வந்தேன் அப்படியே புத்தகத்தையும் பாத்துட்டு போலாம்னு'
'அப்படியா எனக்கும் ஒரு மஞ்ச தண்ணீருக்குப்போகணும் நீங்க எங்க சார் போகணும்'
அவனுக்கு கடுப்பாக வந்தது.பதிப்பாளருக்கு பதிப்பக வேலை ஒன்று மட்டுமா என்ன நினைத்துக்கொண்டான்.
மனதில் தைர்யத்தை வரவ்ழைத்துக்கொண்டு' அந்த கரும்பு விவசாயிங்க சங்க மண்டபத்துல அந்த நிகழ்ச்சிய வச்சிருக்காங்க. அங்கதான் போகணும்'
'அப்படி ப்போடுங்க நானும் அதே மண்டபத்து அதே மஞ்சதண்ணீருக்குத்தான் போறன். அவுரு உங்களுக்கு உறவா அவுரு ரெட்டியாரு இல்ல'
' எனக்கு அவர் உறவு இல்ல நண்பரு'
' அதானே பாத்தேன்.வாங்க நானு வண்டியில போறன். என் வண்டியிலயே உங்கள கூட்டிகினு போயி உட்டுடுறன் என்ன சாரு'
' மன்னிக்கணும் ஒரு அன்பளிப்பு வாங்கியாகணும் அதுக்கு கொஞ்சம் நேரம் வேணும் கடைத்ருவுல நாலு கட ஏறி எறங்கி வாங்கணும் சும்மா வாங்க முடியுமா'
'ஒரு புத்தகத்தையே பரிசா குடுக்கலாம் நீங்க எழுதின அந்த கட்டுரை நூலை கூட அன்பளிப்பா கொடுக்கலாம் அப்பதான் நீங்க ஒரு எழுத்தாளர்னு பளிச்சினு தெரியும்'
'நாம்ப எழுதறத நம்ப பொண்டாட்டி புள்ளங்களே படிக்க மாட்டேங்குது அப்பிடி இருக்கறப்ப ஏன் அந்த சின்ன பொண்ண தொந்தரவு பண்ணிகிட்டு'
'அப்புறம் உங்க சவுகரியம்' பதிப்பாளர் பேச்சை முடித்துக்கொண்டார் அவன் கையில் இன்னும் அந்த கட்டுரைப் புத்தகம் இருந்தது.மனம் கிடந்து அடித்துக்கொண்டது.பதிப்பகத்தை விட்டுக்கிளம்பினான்.
மஞ்சள் நீர் சடங்குக்கு வந்தது என்பதெல்லாம் அவன் சும்மாவிட்ட கதைதானே ஆமாம் அது எப்படி பதிப்பாளருக்கும் அதே மண்டபத்தில் ஒரு மஞ்சள் நீர் சடங்கு போகவேண்டும் என்கிறார். யோசிக்க யோசிக்க அவனுக்கு மண்டை விண் விண் என்று வலித்தத்து.
அவன் பொடி நடையாய் பேருந்து நிலையம் வந்தடைந்தான்.ஆட்டோ வாவது கீட்டோவாவது.அவன் நடக்கின்ற அசுர வேகத்தில் எந்த ஆட்டோக்காரன் தான் பேசுவான். கட்டுரைப்புத்தகத்தை அச்சிடுகிறேன் என்று சொல்லி அதனை வீணாக்கி க்கொடுத்திருக்கிறார் அந்த பதிப்பாளர்.இனி என்ன செய்ய இருக்கிறது.ஆனது ஆயிற்று.கொட்டிய பாலும் உடைந்த கண்ணாடியும் ஒப்பாரிவைத்து அழுதால் திரும்ப வந்துவிடுமா நமக்கு எதிலும் அவசரம் எதை ஒழுங்காய் ச்செய்ய நமக்கு யோக்கியதை இருக்கிறது. அவனையே அவன் திட்டித்தீர்த்தான்.
கையிலிருந்த கட்டுரைப்புத்தகத்தை வீசி எறிந்து விடலாமா என யோசித்தான்.நாம் பெற்ற பிள்ளை நொண்டியோ முடமோ நம்மோடு என்று சமாதானம் சொல்லிக்கொண்டான்.புத்தகத்தின் மேலட்டை யாருக்கும் தெரியாமல் இருக்க ஒரு நியூஸ் பேப்பரால் அட்டை போட்டு அடக்கமாய் க்கையில் வைத்துக்கொண்டான்.புத்தகத்தைப்பிரித்துப்பார்க்கவே பயமாக இருந்தது.
அவன் கை எழுத்தும் அத்தனை மோசம்.நன்றாக எழுதவேண்டும் என்றாலும் அவன் எழுதுவான்தான். சமயத்தில் கிறுக்கியும்விடுவான். ஆனால் புத்தகம்போட க்கொடுத்த அத்தனையும் அச்சில் வெளி வந்தவையின் செராக்ஸ் நகல் தானே பின் ஏன் இப்படி என்று அவனையே அவன் நொந்துகொண்டான். வீட்டில் கொண்டுபோய் யாருக்கும் கண்ணில் படாமல் இருக்க அந்த க்கட்டுரைப் புத்தகத்தை வைத்தான்.ஒருக்கால் மனைவி கண்ணில் பட்டுவிட்டால் போனது மோசம் இத்தனை பிழை கொண்ட புத்தகம் அச்சிட எத்தனைச் செலவு என்பாள்
.நூறு புத்தகம் நமக்கென்று அங்கு கட்டிக்கிடப்பது பதிப்பாளரிடமே கிடக்கட்டும்.அது வீட்டுக்கே வரவேண்டாம் என முடிவோடு இருந்தான்.இப்படியாகக்காலம் சென்று கொண்டிருந்தது.இன்னொரு நல்ல புத்தகம் பிழை இல்லாமல் போட்டால் மட்டுமே மனம் ஆரும். அவன் மனம் ஆறினால் யாருக்கென்ன ஆறாவிட்டால் யாருக்கென்ன இருக்கிறது.
இப்படி வெட்டியாய் க்காலம் சென்று.கொண்டிருக்கும்போதுதான் ஜிஜியார் எழுதிய விமரிசனம் அதே இலக்கிய இதழில் வெளிவந்தது. அதிலும் சூப்பர் விஷயம் இதுதான்.'தசுரா அவர் நேரத்தையும் வீணாக்கி நமது நேரத்தையும் வீணாக்கிட இப்படி ஒரு கட்டுரை நூல் எழுதாமல் இருந்திருந்தால் அதுவே ஒரு இலக்கிய சேவையாக இருந்திருக்கும்'. இதைவிடவும் அவனுக்கு வேறு என்ன பரிசு வேண்டும். இந்த புத்தகத்தை ஜிஜியாருக்கு எந்த புண்னியவான் அனுப்பிக் கொடுத்தானோ.நன்றாக எழுதியதாய் ஒரு புத்தகத்தை ஊரெல்லாம் சொன்னாலும் ஒருவரி விமரிசனம் எழுத கையையும் காலையும் பிடிக்க வேண்டியிருக்கிற கலி காலம். இது யாருக்கும் தெரியவே வேண்டாம் என்று நினைத்து அவன் ஒரு முடிவோடு இருக்கும் அந்தக் கட்டுரை நூலுக்கு விமரிசனம் வேறு. .ஜிஜியார் மீது தப்பில்லை. அவர் சரியாத்தான் எழுதியிருக்கிறார்.
பதிப்பாளரிடமிருந்து ஒரு கடிதம் வந்திருப்பதை அவன் மனைவி அப்போதுதான் அவனிடம் காண்பித்தாள்.
' உங்களின் கட்டுரை நூலுக்கு அரசு நூலக ஏற்பு. ஆணை கிடைத்துள்ளது. தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்' அவன் படித்துமுடித்தான்
அவன் தன் நண்பர் எழுத்தாளர் சபாவிடம் பதிப்பாளர் பற்றிச் சொல்லிக்குறை பட்டுக்கொண்டான் இந்தக்கட்டுரை நூல் பிழை மலிந்து அச்சான அந்த விதம் பற்றித்தான். சபாசார்தான் அவனுக்கு ஆறுதலாய்ச் சொன்னார்' இலக்கிய பத்திரிகையில வந்திருக்குற அந்த ஜிஜியார் விமரிசனத்தை.ப்படிச்சிப்பார்க்கப்போறவங்க ரெண்டே பேரு ஒண்ணு நீங்க, ரெண்டு விமரிசனம் எழுதினதாலே அந்த ஜிஜியார். அதோடு சரி இதுல வருத்தப்பட என்ன இருக்கு தள்ளுங்க கழுதய'
---------------------------------------------------

...


. .



.
.

Tuesday, March 3, 2015

Bali -short story

'

பலி -எஸ்ஸார்சி


யார் வீட்டு வாசலில் சென்னை விலாசம் எழுதிக்கொண்ட ஒரு போலிஸ் வேன் வந்து நிற்கிறது.இரண்டு பெண் போலிஸ்காரர்கள் ஒரு போலிஸ் அதிகாரியும் அதனிலிருந்து இறங்கி நிற்கிறார்கள். ஹெட் கிளார்க் அந்த எபனேசர் மேடம் வீட்டு வாசலில்தான்.
'ன்' என்றோ 'ர்' என்றோ ஒருவரின் பெயர் முடிந்தால் அது ஆடவரைமட்டும்தான் குறிக்குமா என்ன . அப்படி சட்டென்று யாரும் ஒரு முடிவுக்கும் வந்துவிட வேண்டாம். விஷயம் தெரிந்தவர்கட்கு இது தெரியும். கொஞ்சம் தெரியாதவர்கட்குமட்டுந்தானே நானும் எப்போதும் சொல்கிறேன்.
சமுத்திர குப்பம் கோர்டர்சில் டெலிபோன் ஊழியர்களுக்கு என்று ஒரு நூறு வீடுகள் இருக்கலாம்.சின்னதும் இல்லை பெரிசும் இல்லை. ஒரே சீராகத்தான் அவை. ஒரு தொழிலாளருக்கு குடும்பத்தில் எத்தனை பேர் என்பதெல்லாமா ஒரு கணக்கு,சம்பளம் உனக்கு எத்தனை பெரிதாக வருகிறதோ அத்தனை பெரிய வீடு அந்த க்ஷத்ரிய அரசன் மனு சொன்ன படிக்குத்தான் எல்லாம்.
( மனு அவன் பார்ப்பனன் இல்லை அவன் அசல் க்ஷத்ரியன் என்று ஒரு உண்மையைச் சொன்னால் விவரணையில் ஒரு சின்ன மிளகு சேர்த்தமாதிரி . இதே போல் இன்னொன்று மட்டுமாவது சொன்னால் தேவலை. இதிகாச நாயகன் தசரத சக்கரவர்த்தி குமாரன் அந்த அயோத்தி . ராமபிரான் மனையாள் சீதையை அலாக்காகத்தூக்கிக்கொண்டு கொழும்புக்கு வான் வழிப்.போன அந்த பத்துத்தலை ராவணன் ஒரு பார்ப்பனன். தமிழ் நாட்டில் நூற்றுக்கு தொண்ணூத்து ஒன்பது பேருக்கு இந்த நல்ல(?) விஷயம் தெரியாது அப்படியே தெரிந்தாலும் ஒத்துக்கொள்ள மனம் ஒப்பாது.சோற்றால் மடை அடைக்கும் சோழ நாட்டில் பிறந்து வயிற்றுச் சோற்றுக்கு நடு நாட்டு வெண்ணை நல்லூர் சடையப்பரிடம் வந்து கவி பாடிய அந்தக்கமப நாடனுக்கு விஷயம் அத்துப்படி.ஆக யாருக்கும் பிரச்சனை இல்லை.)
அந்த மனு சாத்திரத்தில் மக்களை எப்படி எப்படி எல்லாம் பிரித்து வைத்தானோ அப்படித்தான் அந்த வெள்ளைக்காரனும் தொழிலாளர்களை நான்கு வர்ணமாய் பிரித்து பிரித்து வைத்தான் நாமும் அந்தப்படிக்குத்தான் அய்யா இன்னும் போக வேண்டியிருக்கிறது. சாமி கும்பிடப்போனால் என்ன சரக்கு க்கடைக்குப்ப்போனால் என்ன ஏ பி சி டி என்கிற பிரிவு பிரிவு மட்டும் சாசுவதம். சரக்கின் வீர்யம் தலைக்கு ஏறிவிட்டால் அது தலையிலிருந்து இறங்கும் வரை 'ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே' தான் அந்தக்கதை வேறு.. இந்த நான்கு பிரிவுக்கு மேலாக அதிகார மைதானத்தில் ஒரு தேவ ஜாதி யை அறிவீர்கள்.அது யுபிஎஸ் சி என்னும் டில்லிப்பரிட்சை எழுதிப் பாஸ் செய்துவிடக்கிட்டுவது.அது கிட்டிவிட்டால் அப்புறம் அந்த ஆசாமிக்குக் கால்கள் தரையில் பாவாது அவரவர் கையால் தரையிலிருந்து மூன்று சாண்களுக்கு மேலேதான் கால்கள் நிற்கும் கண்களும் இமைக்காது கழுத்தில் அணியும் மலர் மாலைகள் வாடுவதுவும் இல்லை. இது நிற்க. .
மெயின் விஷயத்துக்கு வந்துவிடுவோம்..இந்த சமுத்திர குப்பம் டெலிபோன்கோர்டர்சில் ஊழியர்களில் மூன்றாம் பிரிவுக்காரர்களுக்கு மாத்திரமே வீடுகள் கட்டப்பட்டிருந்தன.இப்படிக்கட்டியதில் எதுவும் உள்குத்து இருக்கலாம்..யாரோ ஒரு உள்ளூர் பிரகஸ்பதியின் பிரத்யேக யோசனை என்கிறார்கள்..
இந்த கோர்டர்சின் தரைதளத்தில் எபனேசரின் வீடு.அது மட்டுமே இரு சக்கர வண்டிகள் நிறுத்தும் ஷெட்டின் எதிரே இருந்தது. அவ்வீட்டின். பக்கத்தில் ஒரு பெரிய அரச மரம். நூற்றாண்டுகள் சில பார்த்து முடித்து விட்ட அந்த மரத்தின் வேர் ப்பகுதியில் அம்மிக்குழவி போலே கருங்கற்கள். இரண்டு. குத்துக்கல் கணக்காக அவை நடப்பட்டுத்தான் இருந்தன.அண்ணனும் தம்பியும் தாம் அவை என்று காலம் காலமாய் வாழும் அந்த சமுத்திர குப்பத்து சனங்கள் பேசிக்கொள்வார்கள்....
கூடை முடையும் அம்மி,குடைக்கல் கொத்தும் குறவர்களுக்கு அவை குடி சாமி. சாமி கும்பிட இன்னும் விட்டு விடாமல் வரும் அந்த முண்டாசு கட்டிய குறவர்கள் உயர உயரமான காம்பவுண்டு சுவருக்கு வெளியே மட்டுமே அவர்கள் சிரத்தையோடு கொண்டு வந்த சாமிச்சேவல்களை அறுத்த்ப் படைத்து விட்டு செல்வதுண்டு.
எபனேசருக்கு பெரிய அஞ்சலகம் பக்கமாயிருந்த தொலைபேசி மேலாளர் கட்டுமான அலுவலத்தில் தலைமை எழுத்தர் வேலை.எபனேசர் பற்றிச்சொல்லிவிடலாம் முதலில். சொந்த ஊர் திருநெல்வேலி. சரியாகச்சொன்னால் அங்கு ஜங்க்ஷன். அந்த ஊரில் ஜங்க்ஷன் என்றால் ரயில்வே ஜங்க்ஷனை மட்டும் அது குறிப்பதில்லை அந்தப்பகுதி மக்கள் வாழும் பகுதிக்கே ஜங்க்ஷன் என்கிற அந்தப்பெயர்தான்.ஐந்தாம் நெம்பர் டவுண்( வட தமிழ் மண்ணில் -ன்) பஸ் பிடித்து ஏறினால் வழியில் வருமே அந்த சாராடக்கர் பெண்கள் கல்லூரியில் மூன்றாண்டுகள் வேதியியல் பட்டம் படித்து முடித்த எபனேசர் டெலிபோன் இலாகாவில் சம்பந்தமே இல்லாத எழுத்தர் வேலைக்குச்சேர்ந்தார்.
.திருநெல்வேலிச்சீமையிலே அந்தப்படிக்கு வேலைக்கு வருவதற்கு ஒருவர் எப்படியெல்லாம் கண் விழித்துப்படித்திருப்பார் தேர்வில் மதிப்பெண் மொத்தமாய் வாங்கியிருப்பார் எனபது தாமிரபரணித் தண்ணீர் எடுத்துப் புழங்கியவர்களுக்கு மட்டும்தான் தெரியவரும்.
அதே டெலிபோன் இலாகாவில் பணிபுரிந்த வில்லியம்ஸ் என்னும் பெயர் கொண்ட சமுத்திர குப்பத்துக்காரரை எபனேசர் மணந்துகொண்டார்..அவருக்கும் டெலிபோன் ஆபிசில் அதே எழுத்தர் வேலை. சமுத்திர குப்பம் டெலிபோன் குவார்டர்சிலேதான் வீடு.எபனேசர் திருமணம் முடிந்த கையோடு சமுத்திரகுப்பம் மாற்றலாகி வந்தார். அதுதானே முறையும்.ஆண்டுகள் சில உருண்டன,அன்பின் விளைச்சலாய் ஒரு பிலிப்பை ப்பெற்றார்கள். நிறைவாக வந்தது இருவரின் சம்பளம். அவர்களுக்கு நன்றாகத்தான் ஓடியது காலம் எனும் மாயச் சக்கரம்.
யார்தான் எதிர்பார்த்திருப்பார்கள் இப்படி எல்லாம் ஒருவர் வாழ்க்கையில் நடந்து விடும் என்று.இறைவன் என்ன நினைத்தானோ ஒரே ஒரு நாள் காய்ச்சலில் ஜேம்சை அந்த இறைவன் நிரந்தரமாய் நித்திரைக்கு அழைத்துக்கொண்டார். சமுத்திர குப்பத்து மனித முயற்சிகள் தோற்றுப்போயின
எபனேசர் ஒண்ணரை வயது குழந்தை பிலிப்போடு வாழ்க்கையில் சுருங்கிப்போனாள்.எபனேசருக்கு வயது இருபத்தைந்து இருக்கலாம் அவ்வளவுதான். பெண்ணை .என்றும் கலாசார விலங்கிடும் இந்திய மண். எபனேசர் அவள் கணவனில்லாதவள். கைக்குழந்தைக்காரி. எப்படி எல்லாமோ சமூகம் அவளைச் சிறுமைப்படுத்தியது.சின்னப்பட்டாள்.சின்னத்தனங்கள் அரங்கேற எத்தனையோ பேர் நாக்கைத்தொங்க விட்டு சுற்றி சுற்றி வந்தார்கள். ஆடவரின் மனம் நாய் மனம். ரொம்பவும் நல்லது போல் பாசாங்கு மட்டுமே காட்டும். இவை அத்தனைக்கும் மத்தியில் எபனேசர் நெருப்பென வாழ்ந்தாள். அவள் தன் தனித்த இருப்புக்கு பண்பாட்டு மெருகு சேர்த்தாள்.பிலிப்பின் தாய் அல்லவா அவள்.
எபனேசரை த்தவறாக யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாதபடிக்கு அவளின் நடப்பு இருந்தது மகன்.பிலிப் வளர்ந்தான். அவள் அவனைத்தன்அலுவலகத்துக்குக்கூட்டி வருவாள்.எபனேசர் பிள்ளை என எல்லோருக்கும் அந்த பிலிப் அறிமுகம் ஆனான்.அவன் மறைந்த சக தோழன் ஜேம்சின் பிள்ளையும்தானே ஆக எல்லோரிடமும் அனபாகப்பழக முடிந்தது.
யாருக்கும் செல்லப்பிள்ளையானான் பிலிப்.அவன் பெரியனாகி தன் தாய் எபனேசரை மிதி வண்டியில் வைத்து அலுவலகத்துக்கு கூட்டி வருவான்.எபனேசர் அலுவலத்தில் ஒரு ஸ்கூட்டர் லோன் போட்டுக்காத்திருந்து அது வாங்கித்தந்தாள்.எபனேசரை அந்த ஸ்கூட்டரில் பிள்ளை பிலிப் தாயைஅமரவைத்து டெலிபோன் கட்டுமானஅலுவலகம் வந்து போவான். உருவில் தந்தை ஜேம்ஸ் போலவே அவன் வளர்ந்து ஆளானான். கடலெனக்கிடக்கும் உள்ளூர் செயின் ஜோசெப் பள்ளியில் படித்து முதல் மாணாக்கன் எனப்பெயர் எடுத்தான். எபனேசரின் மொத்த அலுவலகம் அவனை உச்சிமேல் வைத்துக்கொண்டாடியது.பொறியியல் படித்தான். கணிப்பொறி பாடத்தில் சிறப்பு நிலை எய்தி சென்னை பழைய மஹாபலிபுரம் சாலையில் விண் முட்டும் மென்பொருள் அலுவலகம் ஒன்றில் பணிக்குச்சேர்ந்தான். கை நிறைய சம்பளம் வாங்கினான்.எபனேசர் தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு நியாயத்தீர்ப்பு கிடைத்து விட்டதாக மனப்பூர்வமாக எண்ணினாள்.
மண வயது நெருங்க பிலிப்புக்கு த்திருமணம் ஆனது. சென்னையில் அவனுக்கு இறை விருப்பபடி ஒரு பெண் கிடைத்தாள்.தொலைபேசி ஊழியர்கள் அதிகாரிகள் ஒருவர் பாக்கி இல்லாமல் பிலிப்பின் திருமணத்துக்கு வந்து வாழ்த்தினர். சமுத்திர குப்பத்து ரெட்டியார் மண்டபத்தில் மகிழ்ச்சியாய் பெரு விருந்து உண்டனர். ஜேம்சும் எபனேசரும் அவர்களோடு உடன் பணியாற்றியவர்கள் ஆயிற்றே. பாவம் ஜேம்ஸ்தான் எப்போதோ முடிந்து போனான்.
எபனேசருக்கு அத்தனை நல்லபெயர் அலுவலகத்தில். சுனாமியும் தானேப்புயலும் கொஞ்சி விளையாடிய சமுத்திரகுப்பத்தில் அவள் தொலைத்தகவல் நிர்மாணிப்பு திட்டமிடல் செக்ஷனில் பணியாற்றினாள்.மாநிலத்திலேயே சமுத்திரகுப்பத்து அந்தத்திட்டமிடல் பணி பாராட்டப்பட்டது எபனேசருக்கு மாநில நிர்வாகம் .'தொலைத்தகவல் திரு' என்கிற கவுரவம் தந்தது..எப்போதேனும் ஒரு முறை தகுதியானவர்களுக்கும் அது கொடுக்கிறாகள். பாராட்டத்தான் வேண்டும்.
அதெல்லாம் சரி இப்போது என்ன நடக்கிறது எபனேசர் வீட்டு வாயிலில்.அக்கம் பக்கம் குடியிருப்பவர்கள் கூடி நின்றார்கள்.
சென்னையிலிருந்து வந்திருந்த காவல் ஆய்வாளர் இப்படிச்சொன்னார்.
'வரதட்சிணைக்கொடுமையில் இந்த எபனேசர் இப்போது கைது செய்யப்படுகிறார்.இவர் மகன் பிலிப் நேற்றே சென்னையில் கைது செய்யப்பட்டு புழல் சிறைக்குப்போயாயிற்று. எபனேசர் மருமகள் எஸ்தர்ராணி கொடுத்த மனு மீது எடுக்கப்படும் நடவடிக்கை இது. கைது உத்தரவுகள் இதோ.யாருக்கும் ஏதும் அய்யம் இருந்தால் பார்க்கலாம். இங்கு எல்லோரும் படித்தவர்கள். எங்களுக்கும் தெரியும் எபனேசர் எங்கு பணியாற்றுகிறார். இனி அவர்மீது எடுக்கப்பட இருக்கும் இலாகா ஒழுங்கு நடவடிக்கைகள், தொடரும் பணி நீக்க உத்தரவு பிற எல்லாமும். வேறு என்ன செய்வீர்கள்'
மகளிர் காவலர் ஒருவர் கைகளில் விலங்கிட்டு எபனேசரை போலிஸ் வேனில் ஏற்றினாள். எபனேசரின் அந்த க்குனிந்த தலை. அது தரையை மட்டுமே பார்த்தது.
கூடியிருந்த பெண்கள் கண்ணீர் சிந்தினார்கள்.' எபனேசர் இருப்பதோ சமுத்திர குப்பத்தில்.ரூபாய் ஐம்பதாயிரம் மாத சம்பளம், மரியாதையோடு அலுவலகத்தில் வேலை பார்க்கிறாள். ஒரு கைம்பெண்.தன் மகனை ஒன்ற்ரை வயதிலிருந்து வளர்த்து ஆளாக்கிய ஒரு உத்தமி. வரதட்சணையாம் கொடுமையாம் ஆக எபனேசர் கைதாம் என்ன அக்கிரமம் இது.என்ன உலகமடா இது' பேசிக்கொண்டே இருந்தார்கள்.
'நீதி மன்றம் இவ்வழக்கை விசாரித்து எது சரியோ அதனைச்சரி என்று சொல்லும், நானும் நீங்களும் ஒன்றும் செய்யமுடியாது' சொல்லிய காவல் ஆய்வாளர் வேகமாக அந்த வண்டியில் ஏறினார் வண்டியின் கதவுகள் அடைக்கப்பட்டு அது எபனேசரோடு புறப்பட்டது.
'நீதி மன்றம் எப்போது தீர்ப்பு சொல்லும்' துணிச்சலாய் கூடியிருந்தவர்களில் ஒரு நான்காம் பிரிவு ஊழியன் காவல் ஆய்வாளரைக்கேட்டான்.
'விசாரணை முடிந்து பின் தீர்ப்பு சொல்லும்' ஆய்வாளர் பதில் சொன்னார்.
'எப்போது விசாரணை முடியும். மீண்டும் அந்த நான்காம் பிரிவு ஊழியன் கேட்டான்.
வண்டி நகர்ந்துபோயிற்று.டெலிபோன் குவார்டர்ஸ் ஒட்டிய வள்ளலார் தெருவில் கிளி ஜோஸ்யக்காரன் தன் கிளிச்செல்வத்தோடு 'சோசியம் கிளீ சோசியம் பாக்குறது பட்சீ சாஸ்திரம் பாக்குறது' சொல்லிக்கொண்டே நடந்து போனான்.
எபனேசருக்கு ஒரு மாதம் நண்பர்கள் போராடி ஜாமின் வாங்கினார்கள்.இன்னும் அதிகமாய் ப்போராடித்தான் அந்த பிலிப்புக்கு ஜாமின் வாங்கினார்கள்.இப்போது கோர்ட்டுக்கு மட்டுமே போய்வருவது அவள் பணி.
தான் குற்றம் அற்றவள் என்று உலகத்திற்கு நீருபிக்கும் வேலை இன்னும் பாக்கியிருக்கிறது. சமுத்திரகுப்பத்து வேலை போயிற்று குவார்டர்ஸ் காலி செய்தாள்..வயதாகி த்தலை நரைத்த எபனேசருக்கு இலாகா பணி ஓய்வும் வந்தது.நீள மூக்குக் கணக்கு அதிகாரிகள் அலசி ஆராய்ந்து எபனேசருக்கு அரைகுறையாய் ஒரு பென்ஷன் தருகிறார்கள்.
அவள் அவமானத்தை த்தலையில் சுமந்துகொண்டு கையில் இருக்கும் சில காசுகளோடு சென்னையில் வானம் பார்க்கும் அந்த சிவப்புச்சுவர்களை சுற்றி சுற்றி வருகிறாள்.வாய்மை எப்போதாவது வெல்லட்டும்.
---------------------------------------------------------------------------------------------
..


Friday, January 16, 2015

katamaiyaissey -short story






கடமையைச்செய் -எஸ்ஸார்சி


அவன் தங்கைக்குத்திருமணமாகி ஒரு வாரம்தான் ஆகி இருக்கலாம். அதற்குள் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்ன அவள்.இன்று தனியாகவே சென்னை புரசைவாக்கம் மில்லர்ஸ் சாலை தன் கணவன் வீட்டிலிருந்து பிறந்த வீட்டிற்கு வந்திருக்கிறாள்.அவளின் பிறந்த ஊர் தருமங்குடி. சென்னையிலிருந்து இரு நூறு கிலோமீட்டர்களுக்கு அப்பாலுள்ள ஒரு குக்கிராமம்.
மஹாபாரதக்கதையில் வரும் அந்த பஞ்ச பாண்டவர்களில் மூத்தவன் தருமன் முக்கண்ணன் சிவனை வழிபட்ட ஊர் இது. ஆகவேத்தான் இந்த ஊருக்குப்பெப்பெயர் தருமங்குடி. இங்கேயுள்ள தருமாம்பிகை உடனுறை தருமை நாதர் சிவன் கோவிலில் தருமனுக்கு ஒரு சன்னதியும் இருக்கிறது..
குக்கிராமம் என்றால் முதலில் அதனையும் கொஞ்சம் சொல்லிவிட வேண்டும். பேருந்து செல்லும் தார்ச்சாலை வழியில் வண்டியை விட்டு இறங்கியவுடன் அந்த ஊர் டபக்கென்று உங்கள் கண் முன்னே வந்து நின்று விடாது. அரை மணி நேரத்துக்கு பொடி நடையாய் நடந்து.போய் மட்டுமே அடையப்படுவது. இப்படிச்சொன்னால் அது சரி....
திருமுதுகுன்ற நகரில் அவனுக்கு த்தபால் இலாகாவில் வேலை. ஊர் பெயரில் குன்று வருகின்றதே என்று போய்த் தேடினால் குன்று எதுவும் உங்கள் கண்ணில் அகப்படாது. ஒரு காலத்தில் குன்று இருந்ததாம் பிறகு அது மறைந்து போனது ஆகவேதான் இல்லையாம். ரொம்பவும் நோண்டினால் சுவாமிமலையில் ஒரு மலை கிலை உண்டா என்ன என்று பதில் கேள்வி வைப்பார்கள்.
அவன் வேலை பார்க்குமிடம் அந்த முதுகுன்றத்துக்கு மய்யமாயுள்ள பெரிய போஸ்ட ஆபிஸ். தருமங்குடி யிலிருந்து திருமுதுகுன்றம் அரை மணி நேர பேருந்துப்பயணம்.பேருந்து நிலையத்திற்கு அருகிலேதான் அந்தப் பெரிய அஞ்சல் அலுவலகம். தருமங்குடியிலிருந்து திருமுது குன்றத்துக்கு அரை மணிக்கு ஒரு பஸ் வரும் போகும்.
அவன் நான்கு மைலுக்கு வேகு வேகு என நடந்து கம்மாபுரம் என்னும் பேரூர் போய்தான். கழக உயர் நிலை ப்பள்ளியில் படித்தான். ஜில்லா போர்டு பள்ளியை அப்படித்தானே அன்று அழைத்தார்கள். அவன் அப்பா தருமங்குடிப் புரோகிதர். புரோகிதர்கள் நாட்டை ஆளும் அரசனுக்கு யோசனை சொன்னது கி மு ஐயாயிரமாயிருக்கலாம். உள்ளூர் ஜனங்கள்.தானத்தில் வைத்துக்கொடுத்த எட்டு முழ வெள்ளை வேட்டியை க்கிழித்து அவனுக்குச் சட்டையும் டிராயரும் அப்பா தைத்துக்கொடுத்தார்.
மதிய சாப்பாடு எடுத்துச்செல்ல பிடியில்லாத ஒரு அலுமினிய டிபன் பாக்ஸ். எவர்சில்வர் தூக்கு என்பது எல்லாம் அப்போது நினைத்துப் பார்க்கமுடியாது. ஒரு ஜோடி எவர் சில்வர் டபரா டம்ள்ரே வாங்க முடிந்தால்தானே.. அம்மா கையி னால் தைத்த ஒரு துணிப்பையினுள் அலுமினிய தூக்குப் பதுங்கிக்கொள்ளும். அது அவன் தோள் பட்டையில் தொங்கி ஆடி ஆடி அவனோடு பள்ளிக்கு வரும். ஒரு நீட்டு பத்தை .காய்ந்து போன நார்த்தங்காய் ஊறுகாய் டப்பா உள்ளே பழைய சோற்றின் மீது ஒய்யாரமாக நீச்சலடித்துக்கொண்டிருக்கும்.
இப்போது வோட்டு க்கு வீங்கிகள் கொடுத்த இலவச பஸ் பாசெல்லாம் அப்போது ஜனித்துவிடஇல்லை. அப்படியாய் இருந்ததே அந்த ஒரு காலத்தில் அவன் எஸ் எஸ் எல் சி படித்தான். முன் வகுப்பைப் பாஸ் செய்துவிட்டு ப்போனவர்கள் அரை விலைக்குக்கொடுத்த பழைய.புத்தகங்கள் வாங்குவான்.புத்தகத்தின் மேலட்டை தொடங்கி அடியட்டைவரை கடம் அடிப்பான். தெரியாதவர்களுக்கு மட்டும் சொல்கிறேன் கடம் அடித்தல். என்றால் மனப்பாடம் செய்வதுதான். பொது ஜனம் வேண்டிய மட்டும் ஆகா ஊகு என்கிற எஸ் எஸ் எல் சி பரிட்சை எழுதினான்.+2 சமாச்சாரம் எல்லாம் அப்போது யாருக்கும் தெரியாது.. அந்த எஸெசெல்சி தேர்வில் அவன் வாங்கிய மொத்த மார்க்கு வைத்து இந்திய அஞ்சல் இலாகாவில் அவனுக்கு ஒரு எழுத்தர்.வேலை கொடுத்தாகள். அய்ந்து பைசாவுக்கு பாய்க்கடையில் வாங்கிய வெள்ளை பேப்பரில் விண்ணப்பம் எழுதி நாலணாவுக்கு போஸ்டாபிசில் விற்கும் வெள்ளை குட்டி க்கவரில் அதை மடக்கி வைத்துதானே அனுப்பினான். மெய்யாலும் ஒரு நல்ல வேலை கிடைத்தது..
வேறு எங்குபோய் குட்டிக்கர்ணம் போட்டாலும் அவனொத்த கஷ்ட ஜீவனங்களுக்கு வேலை கிடைக்குமா என்ன..அவன் பிறந்த விட்ட அந்த ஜாதியோ ஒரு பிரச்சனை. அது அவனை முன்னால் போனால் முட்டும் பின்னே போனால் உதைக்கும்.
.யார் வீட்டு வாசலில் ஒரு கால் படி அரிசிக்கும் ஒரு வாழைக்கச்சலுக்கும் அவன் தந்தை கால் கடுக்க நிற்கிறாறோ அவர் சமூகத்தில் மிக மிக பிற்படுத்தப்பட்டபிரிவு என்கிறார்கள். அவர் வீட்டுப்படியேறி பசிக்கு ப்பிச்சை கேட்கும் அவன் அப்பாதான் முன்னேறிய வகுப்பாம்.இதெல்லாம் இங்கே பேசலாமோ என்னமோ யாராவது சண்டைக்கு வந்தாலும் வரலாம்..தப்பு தப்பு.
அஞ்சல் இலாகாவில் அவன் இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதினான்.கடின மான தேர்வுதான். புத்தகமும் கிடைக்காது புரட்டிப்பார்க்க கைடும் விற்காது.விடுப்பு எடுத்துக்கொண்டு கிடைத்த கிழிந்த நைந்த புத்தகங்கள் சிலது வைத்துப்படித்தான்.திருமுதுகுன்றத்து பழமலையப்பன் கருங்கல் பிரகாரத்தில் கத்திரி வெய்யிலில் உட்கார்ந்துதான் படித்தான்.அவன் மட்டுமே தேர்வு எழுதிய நூற்றுக்கணக்கானவர்களில் பாஸானான். அஞ்சல் இன்ஸ்பெக்டர் ஆக பதவி உயர்வுப் பயிற்சிக்கு என அவனை மைசூர் அனுப்பி வைத்தார்கள். ஆய்வாளருக்கான பிரத்யேக பயிற்சி எடுத்தான். பயிற்சியின் போதும் அவன் தானே அங்கு முதல் ராங்க் வாங்கினான்.
திருமுதுகுன்றம் பகுதியிலேயே உடன் அஞ்சல் ஆய்வாளர் பணிக்கும் சேர்ந்தான்.கிளை அஞ்சலகங்களின் கணக்குகளை சரி பார்ப்பதில் நிபுணன் என எளிதில் வாங்க முடியாத ஒரு நல்ல பெயர் வாங்கினான்.ஊழல்கள் ஆங்காங்கே நிகழ்ந்ததையும் ஆய்ந்து வெளிக்கொணர்ந்தான். இலாகாவில் மக்கள் செலுத்தும் பணம் கறாராக வரவு வைக்கப்படுதலை இலாகா செய்யும் செலவுகள் சரியாகத் தணிக்கையாதலை ஊர்ஜிதம் செய்தான்.அவன் பணி நேர்த்தி கண்டு அவனை இலாகா பாராட்டிப்பெருமைப் படுத்தியது. மாவட்ட்ம் முழுவதும் அலுவலகப்பணிக்காகவே பம்பரமாய்ச்சுற்றி சுழன்று வந்தான்.மாநிலத்திலேயே முதல் தரத்திற்கு அந்த அஞ்சல் சேவைப்பகுதியை மாற்றிக்காட்டினான்.ஆக அவனை அறியாதவர்கள் அந்தப்பகுதியில் யாரும் இல்லை. அவனை ஒரு மாடல் எம்ப்ளாயீ எனத்தான் அஞ்சல் அலுவலகங்கள் அனைத்தும்.பதிவு செய்தன.அறிக்கை பலகையில் அப்படி எழுதி அழகு பார்த்தன..
'என்னடி ஆச்சு உனக்கு இப்படி தன்னந்தனியா வந்து நிக்கற?' பதறிப்போய் அவன் தங்கையைக் கேட்டான்.
அவனுக்கு அவள் பதில் சொன்னால்தானே.திருமணமாகி ஒரே ஒரு வாரம் மட்டுமே ஆகியிருக்கிறது.அதற்குள் தனியாகவே தன் தங்கை, பிறந்த வீடு.திரும்புகிறாள்.
அம்மா அடுக்களையிலிருந்து வேக வேகமாக அவன் தங்கையைக்கட்டிக்கொண்டாள்.
'இப்படி நீ வரக்கூடாது உனக்கு யாரும் சொல்லலயா' அம்மா அதிர்ந்து போய் க்கேட்டாள். அம்மாவுக்கும் அவள் பதில் சொன்னால்தானே அவன் தந்தை உள்ளூர் செல்வ விநாயகர் கோவிலுக்குச்சென்றிருக்கலாம். அது அவர் வயிற்றுப்பிழைப்புக்கு பூசை செய்யும் சிறிய கோவில். அவர் வேறு எங்கும் கூட சென்றிருக்கலாம்..அருகம் புல் ஒரு கைப்பிடி பறித்து தெருவில் நடமாடும் பசு மாடுகளில் ஏதேனும் ஒன்றிற்கு க்கொடுத்துவிட்டு அது மென்று தின்று.முடிப்பதை பார்த்துக்கொண்டே நிற்பார்.
அவன் வீட்டு வாசலில் ஒரு பெரிய அரச மரம்.அதன் கீழ்த் தரையில் கிடக்கும் காய்ந்துபோன அரசங் குச்சிகளைப்பொறுக்கி ச் சிறியதாகக் கட்டி கட்டி வைப்பார் அவன் அப்பா. தருமங்குடியில் யார் வீட்டிலேனும் ஹோமம் இத்யாதிகளுக்கு அவரை த்தேடி வந்துதான் அது கேட்பார்கள்.
அவன் தங்கை அழுது கொண்டே கூடத்தில் நின்றிருந்தாள்.
'ஒன்றும் பேச வேண்டாம் கொஞ்சம் விடு. அவளே சொல்வாள்' என்றாள் அம்மா.ஆனால் அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி ஓடியது.அவன் தன் தாய் அருகே சிலை போல் நின்றிருந்தான்.
.' இது எது வாசல்ல புதுசா ஒரு ஜோடி செறுப்பு கெடக்கு, பொம்மனாட்டி செறுப்பு. எம் பொண்ணு . கல்யாணத்து அண்ணைக்கு நேரா மண்டபத்துக்கு முடியாதவா யாராவது கல்யாணம் விஜாரிக்கலாம்னு ஆத்துக்கு வந்து இருக்கலாம்'' சொல்லிக்கொண்டே அவன் தந்தை உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்.
கூடத்தில் நின்று கொண்டிருந்த அவள், தன் தந்தை வந்ததும் அவர் கால்களைப்போய்க்கட்டிக்கொண்டாள்.'அப்பா, ஒரு படு பாவிக்கு வாக்கு பட்டு அது தாங்க முடியாம உங்கிட்டயே திரும்ப வந்துட்டேனே'. தலையில் கைகளால் ஓங்கி பட் பட் என அடித்துக்கொண்டாள்.' என்னைப்பெத்த அப்பா இனி நான் என்ன செய்வேன் அந்த நாசமா போனவனுக்கு மொதல்லயே ஒரு கல்யாணம் ஆகி பொண்டாட்டியோட ஒரு பொண் கொழந்தையும் இருக்கே. ஆத்துக்கு பத்து பாத்திரம் தேய்க்க வந்தாளாம் ஒரு செறு பொண்ணு. அவன் அவளை விட்டு வைக்கலயாம். எல்லாம் ஆச்சி. இப்ப ஒரு நாள் விட்டு ஒரு நாள் அவ வீட்டுக்கும் போயிட்டு ராத்திரி தங்கி இருந்துட்டு அப்புறமாதான் அவன் சொந்த ஆத்துக்கு வர்ரது பழக்கமாம். எனக்கு என்னமோ சந்தேகம் வந்துது.. அக்கம் பக்கத்தில கேட்டேன். பக்கத்துல இருக்கறவா சொன்னா 'அவனுக்கு ஒரு குடும்பம் ஒண்ணு மொதல்லயே இருக்கு இது சமாச்சாரம் தெரிஞ்சிதான் இங்க என்னை க்குடுத்தும் இருக்கலாம்னு' நாக்குல நரம்பு இல்லாமலே பேசினா. நா பாழுங்கிணத்துல உழுந்துட்டேனே அப்பா.எனக்கு இது கேள்விப்பட்டதிலேந்து கண் இருட்டித்தே, வயிறு கலங்கி கலங்கி வயித்தால போச்சே. அங்க .தவிச்சிப்போயி நிற்கதியா நின்னேனே..எனக்கு இது விஷயம் தெரிஞ்சி போச்சின்னு ஆனதும் எம்மாமியாரும் வீட்டுல இல்லாம எங்கேயோ போயிட்டா. எனக்கு அங்க யாரையும் கண்ணால பாக்க பிடிக்கல்ல. அந்த கடங்காரங்கிட்ட பேசினா இன்னும் எதுவும் விபரீதம் ஆயிடுமோன்னு பயம் மென்னிய பிடிச்சது. இப்படி செய்யுறவன் இன்னும் எதைதான் செய்ய மாட்டான். அந்த ஊரையே கொளுத்திட்டு வந்துடணும்னு நேக்கு அடி வயத்துலேந்து ஆத்திரமா பொங்கிண்டு வந்துது. என்ன செய்யறது. கிளம்பிட்டேன். திட்டக்குடி போற பஸ் கண்ணில பட்டுது.ஏறி உக்காந்துண்டு டிக்கட் வாங்கக்கூட சரியா காசில்லே கண்டக்டர் என்னமோ குறையறதுன்னான். அவனண்டை . தெய்வமே எங்கிட்ட இல்லப்பா. நீயே போட்டுக்கோன்னு சொல்லி அழுதேன். அவன் ஒண்ணும் பேசல,.அப்படியா திருமுதுகுன்றம் வந்தேன்.எதிர் வீட்டு இயரிங்க் எய்டு காதுல வச்சிண்டு இருக்குற சண்முக பிள்ளை கண்டக்டர் ஞாபகம் வந்துது. அந்த ராஜேஸ்வரி பஸ்சை தேடினேன்.,அதுவும் ஸ்டாண்டுல நின்னுது. எப்பிடியோ.ஏறி உக்காந்துண்டேன். நம்ப ஊர் தருமங்குடி வந்துது. இறங்கிண்டேன்.. இந்த பஸ்சுல டிக்கட்டுக்கு காசு ஏது. அந்த சண்முகம் பிள்ளையே போட்டுண்டு இருப்பார்' அவள் இன்னும் அழுது கொண்டே இருந்தாள்..
' நீ ஒண்ணும் பேசவேண்டாம். மொதல்ல சாப்பிடு. பாக்கி எல்லாம் அப்புறம் ' அவன் அப்பா அவளிடம் சொல்லி க்கண்களைத்துடைத்துக்கொண்டார்.அவரின் நெஞ்சு படபடத்துக்கொண்டிருந்தது.
அவன் அம்மா முற்றத்தில் மய்யமாய் நின்றுகொண்டு 'சூரியா நாராயணா அங்கேந்து நீ இத எல்லாம் பாத்துண்டுதான் இருக்கயா, நட்ட நடு ஆத்துல இருக்கயே துளசிமாதா எல்லாரும் உன்னை தாய்னு சொல்வாளே உனக்கும் மனசுங்கறது இல்லயா. ஏமாந்து போனேனே எம் பொண்ணு தலயில நெருப்பு அள்ளி வச்சிட்டாளே.இப்ப என்ன பண்ணுவேன்'.அவள் துளசி மாடத்தைப்பிடித்துக்கொண்டு ஓங்கிப் ப்புலம்பினாள்.
அவன் அடுத்த அஞ்சல் மாவட்டத்துத்தலை நகராம் கடலூரில் சேமிப்புக் கணக்குத்தணிக்கையில் கவனிக்க வேண்டிய பிரதான விஷயங்கள் பற்றி வகுப்பெடுக்கக்குறிப்புக்கள் சிலவற்றை மும்முரமாய் தயார் செய்து கொண்டிருந்தான்.
எத்தனை பசியோ சரியாய்த்தூங்கி எத்தனை நாளாயிற்றோ அவன் தங்கைதான் சாப்பிட்டுக்கொண்டு அப்படியே உறங்கிப்போனாள். அவளருகில் அவன் தந்தை கண்களை மூடி அமர்ந்திருந்தார்.. .
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
..