Monday, May 29, 2023

சகோதரி நிவேதிதை

 

கோதரி  நிவேதிதையின் பார்வையில் இந்தியா.                     

ஆதாரம் -The Complete Works of Sister Nivedita-  அத்வைத ஆஸ்ரமம்  கொல்கத்தா வெளியீடு.

இந்தப் புத்தகத்தை வாசித்துச் சில அரிய செய்திகளை  வாசகர்கள் உங்களோடு பகிர்ந்துகொள்வதில் நிறைவு ஏற்படலாம். அயர்லாந்து தேசத்து நிவேதிதை நாம் அறிவோம் மாகவி பாரதியார் தன் குருவாக ஏற்றுக்கொண்டு போற்றியப் பெருந்தகை.

வாழ்வில்லம் மிக எளிமையானது  குடும்ப மகிழ்ச்சியோ  பெரிதாய்க்கிடைப்பது,   கண்விழித்து  உலகில் நடமாடித்  தாம் கண்கள் மூடி முடியும் வரை, சுயநலமேயில்லாமல் தன்னைத் துருத்திக்கொள்ளாமல் பொறாமைப்படாமல், அன்போடு நேசித்துச்சேவை மட்டுமே செய்வதென்பது, இந்தியப்பெண்களால் மட்டுமே நிகழ்த்தப்படுகிறது. இந்திய மாதர் குறித்து நிவேதிதையின்  இலக்கணம் இப்படிச்சொல்கிறது.

இந்துமதத்தின் உன்னதச்சிகரமென்பது உபநிடதம்.  இன்றைய உலகில் நாம் பார்க்கும் அனைத்து இறைதொடர்பான பிரபலமான கருத்தாக்கங்களும் பாரதத்தின் உபநிடதங்களோடு பந்தப்பட்டவை ஏன் அவற்றின் தொடர்ச்சியே எனவும் கூறமுடியும்.

புத்தர் மடாலயம் நிறுவவில்லை. சமூக சடங்குகளை அங்கீகரிக்கவில்லை. பிறந்த சிசுவை அங்கீகரித்து ஏற்று நிற்கவில்லை.திருமணத்தை புனிதப்படுத்தவில்லை. விடைபெற்ற உயிர்களுக்கு  இளைப்பாறுதல் தரவில்லை.

பவுத்த நியதியை மட்டுமே நிறுவினார். பவுத்தக் கருத்துக்களைத்தொடர்ந்துபேசினார். நிர்வாணத்தைப்பற்றியசெய்திகளைப்பகிர்ந்தார். திருமணத்திற்கும் பிற குடும்ப சடங்கிற்கும்  அதனில் ஆசிபெறவும் எளியமனிதர்கள் பிராமணர்களைத்தேடவேண்டியிருந்தது.  சடங்கு பற்றிய விசாரணைகளை மக்களால் துறந்துவிடமுடியவில்லை.  அப்பிணைப்பு அத்தனை எளிய விஷயமாய்  இல்லை. சத்தியத்தைக்கொண்டு மாயையினின்று விடுதலை பெறுதல் போன்ற கனமான விஷயங்கள் சமூக அரசியலில் போணியாகவில்லை. பிராமணர்களில் சடங்கு செய்வோர் மக்கள் மத்தியில் கலகலப்பாய்   வாழ்ந்திட பவுத்தத்துறவிகளோ மடலாயங்களில் தனித்து  வாழ்ந்தனர்.

கடினமான சட்டவிதிகள் எதுவும் கொண்டு இந்துமதம் தோன்றவில்லை.  மானிட   இறைஎண்ணங்களின் ஓடுபாதை அது. முற்போக்கான விஷயங்களை காலக்கதியில் சந்திக்கின்றநேரும்போது அவைகளையும் அது அங்கீகரித்து எடுத்துக்கொள்கிறது. உயிர்ப்பலிகள் கொடுக்கப்படுவதை வழக்கமாய்க்கொண்ட ஒரு மதம் புத்தரின் வருகையால் அதனை மாற்றிக்கொண்டது.

தொடக்க கால வைணவத்தில் இலக்குமி என்னும் கடவுள் ஏது? வரலாறு கொண்டு சேர்த்ததே அப்பெண்கடவுள். வாசகச் சிந்தனையைக் கிளறிவிடுகிறார் நிவேதிதா. ராஜபுதனத்தப்பெண்  கிருஷ்ணப்ரேமி  மீராபாய்க்கும் வங்காளத்திற்கும் ஒரு தொடர்பு இருந்திருக்கிறது. இஸ்லாமியர்களின்  வசமிருந்த கயாவை மீட்க ராஜபுதனத்து இளவரசர்கள் விரும்பினார்கள்.சைதன்யரைப்போல் கிருஷ்ணனை பிரேமித்த மீரா வங்களாத்து கிருஷ்ண வழிபாட்டை கையிலெடுத்தார்.வைணவ வரலாறு  வங்கத்து மகான் சைதன்யரோடு பிணைந்ததே. சுடலைக்கு உறவான  சிவபெருமான் அர்த்தநாரி ஆனார். சிவனே மஹாதேவர் ஆனார்.ஆதிசங்கரருக்கு இதனில் பங்கில்லாமல் இல்லை.

மாபாரதக்கதையில் திரவுபதியை மணம் முடிக்க நடக்கும் போட்டியில் பஞ்சபாண்டவர்கள் ஐவரும் அந்தணர்களாய் வேடமிட்டுச்சென்றதை நிவேதிதா குறிப்பிடுகிறார். பிராம்ண கஷ்த்ரிய கலப்புத்திருமணம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பதை நமக்குச்சொல்கிறார்.

பிராமணர்களுக்கும் க்‌ஷத்ரியர்களுக்குமாய் மட்டுமே  இருந்த அறிவுசார் விஷயங்களை சமூகதளம் முழுமைக்கும் விஸ்தரித்த பெருமை புத்தத்திற்கே உண்டு. சமூக ஒருமைப்பாட்டை புத்தமே தோற்றுவித்தது. ஜனநாயகப்படுத்துதல் என்பது அப்போதிலிந்துதுதான் துவங்கியது. அதுவே இந்துமதம் என்கிற  கட்டமைப்பு உருவாகவும் அடித்தளமிட்டது. இன்றுவரை இந்துமதம் என்கிற  பிணைப்புப் பாரம்பரியத்தை வரலாற்றில் பவுத்தமே சாத்தியமாக்கியது. எந்தகுடியில் பிறந்தாலென்ன சாதாரணர்களுக்கும் அன்பின் வழி விடுதலை என்பதை பவுத்தம் உறுதிப்படுத்தியது. மக்களின் அரசராய் விளங்கிய அசோகரின் மனத்தை பவுத்தமதக் கருத்துக்கள் ஈர்த்தன.

இந்துமதம் பற்றி நிவேதிதாவின்  வார்த்தைகள் அன்று நிலவிய யதார்த்தத்தைப் படம்பிடித்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. பிராமணர்களின் தனித்துவமான அணுகுமுறை இந்துமதத்தை தேசியக்கண்ணோட்டம் கொள்ள அனுமதிக்காது. பிராமணர்களுக்கு எதிரான ஓர் மையம் நிறுவப்பட்டு அது  இந்துமதத்தை கையில் எடுத்துக்கொண்டால் மட்டுமே  இந்து மதம் தேசியப்பார்வையைத் தனதாக்கும். நிவேதிதாவின் வார்த்தைகளில் பார்த்தால் இது  இன்னும் சிறப்பாக இருக்கலாம்.

‘Hinduism alone in its completeness can never create a nationality for it then tends to be dominated by exclusiveness of Brahmin caste,whose ideal is naturally and rightfully its central type .Learning and austerity are the characteristic virtues of the ideal.  Exclusiveness is its characteristic weakness and vice. It is only therefore when there is within Hinduism itself a counter-centre to the Brahmin, ‘that Hinduism can suffice to create a nationality. This counter-centre was found during the Ashokan period in the personality of Buddha who was a kshatriya by birth.’ (Ibid page 262)

வாசகர்க்கு இவண்  விவேகானந்தரும், பசும்பொன் முத்துராமலிங்கதேவரும் மனதில் வந்துபோவதைதவிர்க்கமுடியாது. புதிய பாராளுமன்றத்திறப்பு நிகழ்வுக்கு  பிரதமர் மோடி  சைவ ஆதினங்களை அழைத்தார். பார்ப்பனச் சங்கரமடங்கள் தவிர்க்கப்பட்டன.

பேரரசர்கள்  பவுத்த  அசோகரும்  மொகலாய அக்பரும் இந்தியாவில் தேசிய உணர்வு அரும்ப அடித்தளமிட்டார்கள் என்கிற ஒரு கனமான செய்தியை நிவேதிதா இந்த நூலில் பதிவுசெய்துள்ளார்.

 இந்துக்களும் இசுலாமியர்களும் எப்படி ஒற்றுமையோடு இருக்கிறார்கள் என்பதை நிவேதிதா குறிப்பிடுகிறார். இந்துக்களுக்கு இசுலாமியர்கள் வேண்டும். இசுலாமியர்களுக்கு இந்துக்கள் வேண்டும். இந்திய தேசம் அப்படித்தான் உருவாகவேண்டும் என்று சமூக பொறுப்போடு எழுதுகிறார்.

‘The Hindu needs the Mohammedan,the Mohameddan needs the Hindu, if there is to be an Indian nation.’  ( Ibid page 291)

 1947ல் நாம் இந்தியாவை உடைத்துப் பெற்ற விடுதலையை நிவேதிதா எதிர்பார்க்கவில்லை.  அவர் 13-10-1911ல் மறைந்துவிட்டார். இந்த மண்ணில் நடைபெற்ற மதக்கலவரங்கள் படுகொலைகள்  தேசபிதா கொலையுண்டது தொடர்ந்து பாகிஸ்தானோடு மோதல்கள் இவை எல்லாம் அவர் அறியாத வரலாற்றுச் சோகங்கள். ஒன்றுபட்ட இந்தியா எப்படி அமையவேண்டும் என நிவேதிதா ஆசைப்பட்டார். இந்திய மக்கள் மீது மாற்றுக்குறையாத நம்பிக்கையை  அவர் எப்படி எப்படியெல்லாம் வைத்திருந்தார் என்பதை அறிய நாம் நெகிழ்ந்துபோகிறோம்.

‘Do they Indian people doubt that they are a nation, with a national character of their own? Can they doubt when they look back on their literature, on their epics, on their heroes, on their history? Could they compare the corresponding possessions of any other people with their own? Does the Indo –Mohameddan doubt his own power, his own part in a consolidated Indian nationality? (Ibid page 307)

வரலாறு வேறுவிதமாக அமைந்துவிட்டது. யாருக்கும் நிறைவில்லை என்பதுவே மிச்சம்.

புத்தர் சூத்திரர்களின் இறையாண்மைக்கு விஷயதானம் செய்தவர். உலகில் வரலாற்றில் வேறு எங்குமே கண்டிராத அதிசயத்தை இம்மண்ணில் நிகழ்த்தியவர். பேரரசர் அக்பருக்குப்பிறகு நான்கு மொகலாய மன்னர்கள் அவர் போன்றே வரலாற்றில் அமைந்தது குறிப்பிடப்படவேண்டும். இரு பெரும்  மதப்பிரிவுகள் சரியான விஷய ஞானம் பெறுமானால் தேசப்பிரிவினை என்பது  அர்த்தமற்றுப்போய்விடும்.

சாதிகளை உச்சிமீதுவைத்துப்புகழ்வதோ, சாதிக்கு மிருகபலம் ஊட்டுவதோ விடுத்து  சாதிகள் எப்படி முளத்தன என்பதை விளங்கிக்கொள்வது உசிதமானது என்கிறார் நிவேதிதா. அவர் ஒரு அய்ரீஷ்காரர்.  ஓர் பெண். அவர் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக  இந்திய சமூகத்தை எப்படிப்பார்த்திருக்கிறார் என்பதை அறிந்து இன்றைய படித்த இந்தியர்கள் நாம் வெட்கப்படவேண்டும்.

‘It is better to understand caste, than either praise or vilify it.’  ( Ibid page 308)

இந்துமதம் பரந்து விரிந்த பேருண்மைகளை தன்னகத்தே கொண்டது.இசுலாமும் கிறித்துவமும் தனித்தவை ஆயினும் அவைகளின் பிரதிபலிப்பையும்  கூட இந்துமதத்தில் நாம் கண்டடையமுடியும். ஆக இந்தியா என்பது ஒன்றுபட்ட சமூகமே.  அவ்வொற்றுமை  நிலவுவது இன்றும் என்றும்.

கல்வியைப்பற்றிப்பேசும் நிவேதிதா  வருமானம் அல்லது  சம்பாதிப்பு என்பதற்காக மட்டுமே கற்றல் என்பது மானிட ஆன்மாவைக் கேவலப்படுத்துவது என்கிறார். மனிதன் தன் வயிற்றுப் பசியைப்போக்கிக்கொள்ளத் தனது மன ஆற்றலைச் செலவழிப்பது என்பது  தான் வாழும் நாட்டினை ச் சிறுமைப்படுத்துவதாகும். நாம் உண்மையை நேசித்து அதற்காக உழைத்து  அதனில் வாழ்ந்து  அதனையே அனுபவிப்பவர்களாக இல்லாவிடில் நமது  இதயத்திற்கு இயைந்த பெருவிஷயங்களும் புத்திசாலித்தானமும் தமது கதவுகளை தாழிட்டுக்கொண்டுவிடும். பொது உணர்வு என்பது மனிதனுக்கு அரும்பி   ஒரு தரத்தை எட்டும் போது அதற்குச்சிறகுகள் தானாகவே தோன்றிவிடும்.

இமாலயத்திலிருந்து கன்னியாகுமரிவரை  கல்வியை விநியோகித்த மெஷினரிகளை இந்திய மக்கள் நன்றியோடு நினைவில் வைத்திருக்கிறார்கள். ப்ராடெஸ்டண்ட் அல்லது ரோமன் கத்தோலிக் அவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இன்றும் கூட கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்து  மாணவர்கள் பாரம்பரியமாக, ஸ்காட்லாந்து நாட்டுக்காரரான டேவிட் ஹேர்  அவர்களின் கல்லறைக்குப்புனிதப்பயணம் மேற்கொள்கிறார்கள். ஒரு நூறு ஆண்டுகள் முன்பு  கல்கத்தாவில் ஒரு பள்ளியைத்தொடங்கியவர் டேவிட் ஹேர்.அப்பள்ளி பின்னர்  கல்லூரி யாகிப் பல்கலைக்கழகமாக வளர்ந்தது. காலரா நோயினால் பாதிக்கப்பட்ட இந்திய மக்களுக்கு மருத்துவ உதவி செய்தவர் டேவிட் ஹேர். அவருக்கும் காலரா நோய் தொற்றியது. அவர் மரணமானார். அவர்  சவத்தை எந்த கிறுத்துவ அமைப்பும் அடக்கம் செய்ய ஒத்துக்கொள்ளவில்லை. அவர் புரட்சிகரமான எண்ணங்களைக் கொண்டிருந்தார் என்பதுதான் அதற்குக் காரணம். அவரது பூதஉடலைச்  சுமந்து வந்த மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே அதனை ப்புதைத்து கல்லறை  எழுப்பி  மரியாதை செய்தார்கள். அந்த மரியாதை செய்தல் இன்றளவும் தொடர்கிறது என்கிறார் நிவேதிதா.

அரைத்தம்பிடியில்( Half a Penny) தபால் சேவையும், மிக மலிவான ரயில் கட்டணமும்,  சமூகத்தில் மெச்சப்பட்ட  ஆங்கிலக்கல்வியும்  முப்பது கோடி மக்கள் வாழும் இந்தியாவை அய்க்கியப்படுத்திய விஷயங்களில் அடங்கும் என்று  சர் நில்லியம் ஹண்டர் குறிப்பிட்டதை நிவேதிதாவும் குறிப்பிடுகிறார்.

மேலய நாட்டில்  அவரிடம்  கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்  பகுதியொன்று வருவதை  இந்தப் புத்தகத்தில் வாசகர்கள் காணலாம். சில வினாக்களும் விடைகளும்.

உங்கள் சொந்த நாட்டையும் தேசியத்தையும் துறந்துவிட்டீர்களா?

நிச்சயமாக இல்லை. ஏன் நான் துறக்கவேண்டும்.

நீங்கள் கிறித்துவ மதத்தைத் துறந்துவிட்டீர்களா?

இல்லை. நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்.  ராமகிருஷ்ண மெஷின் கெளவுரமாய் அங்கீகரித்த மூன்று கிறித்துவர்களில் நானும் ஒருத்தி. இந்தியாவில் தங்கியுள்ளேன்.

நீங்கள் நடத்தும் பள்ளிகள், பள்ளிகள் மட்டுந்தானா?

என்ன கேள்வி இது. நான் யாரையும் கிறுத்தவமதத்திற்கு மாற்ற முயல மாட்டேன்.  ஒரு கிறித்துவரை வேறு மதத்திற்கோ, ஒரு முகமதியரை இந்து அல்லது கிறித்துவ மதத்திற்கோ மாற்றிவிட  எதுவும் நான் செய்யவே மாட்டேன். இந்தப்பதில் போதுமா? நான் ஒவ்வொரு மதத்தாரும் அவரவர் மதத்தை உச்சபட்சமாய் மதித்தலைக் கற்பிக்க விரும்புகிறேன் இப்படி முடிக்கும் நிவேதிதாவை நாம் இப்புத்தகத்தில் காணமுடிகிறது.

’In India, my friends love me, for my love of Christianity and talk with me about it for hours together’.  என்கிறார் அவர்.    மனம் விசாலித்த  ஒரு நிவேதிதாவை இனி நாம் என்று காண்போமோ.  

ராய் வில்லா டார்ஜிலிங்கில் 13-10-1911 அன்று மார்கரெட் எலிசபெத் நோபல்  என்னும்  இயற்பெயர் கொண்ட சகோதரி நிவேதிதா   இயற்கை எய்தினார்.  அவர் 44 ஆண்டுகள் மட்டுமே பூவுலகில் வாழ்ந்தவர்.

அய்ரிஷ் நாட்டில் பிறந்து  இந்தியப்பெண்களை  ஆழமாய் நேசித்த அற்புதமும்  அதிசயமும் அவரே.

யாதும் ஊரே யாவரும் கேளிர்.

-----------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment