Sunday, April 25, 2021

நல்லனவெல்லாம்தரும்..

 

 

 நல்லனவெல்லாம்தரும்..

 

தற்காலத்தமிழ் இலக்கிய படைப்பாளிகளுக்குள்ளே தனக்கென ஓர் தனியிடத்தைப்பெற்றுள்ளார் பாவண்ணன். தனது இலக்கியப்பங்களிப்பால் தமிழ் நாட்டு வளவனூர் சார்ந்த தனது மண்ணின் மனிதர்களை அனேக இடங்களில் உயிர்ப்போடு உலவவிட்டு சாதனைகளைத் தனதாக்கியுள்ளார்.

 ஆகப்பெரிய அறிவியல் தொழில் நுட்ப சாகசங்களை தான் பணியாற்றியதுறையிலே அனுபவமாய்க்கண்ட பாவண்ணன் கல் உடைக்கும் மண்சுமக்கும் சாதாரண மனிதர்களின் அனுபவங்களைப்படித்து அவதானிப்பதிலே தனிக்கவனம் செலுத்திய யதார்த்த எழுத்தாளர்.

           அனேக தருணங்களில் மனித மனம் ரணமாகி நிற்பதை அப்பட்டமாய் க்காட்டுவன அவரின் எழுத்துக்கள். சமீபமாய் .மனிதர்களின் வளமையும் வாழ்முறையும் அவர்களை ஏற்ற இறக்க சமுதாயத்தட்டுக்களில் அடைத்து, இறுக்கி, விறைப்பாக்கி நிறுத்தியிருப்பதை வேதனையோடு காண்கிறோம்.  தான் வாழும் சமுதாயத்தில் .அன்பு என்னும் சொல் நீர்த்துப்போன,தைப் பாசத்திற்கு ஏங்கித்தவிக்கும் மனித உள்ளங்களை சமூகத்தின் பல் வேறு தளங்களிருந்து சிறுத்துச் செயல்படும் அடிமன அலைகளை த் தனது எழுத்தில் பாவண்ணன் ஓவியமாகத்தீட்டிக்காட்டுகிறார். இலக்கிய சிந்தனை ப்பரிசுபெற்ற ‘முள்’ தொடங்கி  பாவண்ணனின் சிறுகதைகள் வாசகனை அப்படித்தான் சிந்திக்கவைக்கின்றன..

பெண்மையின் பேதமையும் மேன்மையும் பேசும் ‘கல்’ எனும் சிறுகதை வாய்வீச்சாளர்கள் பம்மாத்து செய்ய மேலட்டை மட்டுமே வைத்து நிகழ்த்தப்படும் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வை ச்சித்தரிக்கும் ‘வேஷம்’ என்னும் சிறுகதை  பச்சை மரங்களை நேசிக்கும் படைப்பாளியாய் வாசகனுக்குத்தன்னையுணர்த்தும் ’’‘மரங்களின் கதை இவை’ நம் நெஞ்சைவிட்டு அகன்றுவிடுமா என்ன?

அடிப்படையில் ஒரு கவிஞனாய்  பாவண்ணன் இருப்பதை அவருடைய படைப்புக்கள் நமக்குச்சொல்கின்றன. ’‘திரும்பி வராத குருவிகள்’ என்னும் ஒரு கவிதை பாவண்ணனின் மன கன பரிமாணத்தை அறிவிப்பு செய்வதாய் விளங்குகிறது. குருவிகள் ஏனோ தாம் வாழ்ந்த கூட்டிற்குத்திரும்பி வரவில்லை. ஏன் அவை திரும்பவில்லை என்பதற்காய்ப் பல் வேறு வினாக்களை த்தானே வைத்துக்கொள்கிறார் பாவண்ணன். அவருக்கு நிறைவு ஏற்படவில்லை. அவை அமர்ந்த தத்தித்தாவிய பேசிக்கொஞ்சிய இடங்களையெல்லாம் வரிசையாகக்கண்டும் அவை இல்லாமையின் வெறுமை அவரைச்சுண்டுகிறது.. இனி அவை வாரா என்கிற முடிவோடு அவை வாழ்ந்து காலியாய் விட்டுச்சென்ற குருவிக்கூட்டைப்பார்த்து ஆறுதல் பெறுகிறார்.  அவரின் கவிமனத்திற்கு அவை விட்டுச்சென்ற காலிக்கூடு சற்று இதம் அளிக்கிறது என்கிறார் பாவண்ணன்.

பாவண்ணன் ஏதோ ஒரு ஆழமான கேள்விஒன்றிற்கு விடை தேடுவதைத்தன் படைப்புக்களில் காணமுடிகிறது.  மானிட வாழ்வுக்கு பொருள் என்ன என்பதை, வாழ்க்கை என்னும் புதிருக்கு அவிழ் முடிச்சு ஏதும் இருக்குமோ என்பதை ஆராயும் மனவெளி அகழ்வாராய்ச்சியில் பாவண்ணனுக்கு இசைவு இருப்பதை நம்மால் அவதானிக்க முடிகிறது. மெளனியின் எழுத்துக்களில் உறையும் அடர்வு கூடிய அமைதி. இவரின் எழுத்துக்களிலும் காணவாய்க்ககிறது.

‘தஸ்தாயெவ்ஸ்கி என்னும் ருசிய படைப்பாளி  மனித வாழ்க்கை ஒரு புதிர் அது அவிழ்க்கப்படும் வரை படைப்பாளியின் தேடுதலுக்கு ஓய்வில்லை என்பார்.

ஏதோ ஒரு மின்னல்  சிந்தையில் தென்படுவதும்  நொடியில் அது  தன்னை மறைத்துகொள்வதுவும் இப்பிரபஞ்சப்புதிருக்கான விடையின் ஓர் அணுவோ என்று படைப்பாளி யோசிப்பதுண்டு.

பாவண்ணனின் எழுத்துக்கள் வாசகனை இப்படி அப்படியெல்லாம் சிந்திக்கவைத்து வாசகனோடு கண்ணா மூச்சி விளையாடுகின்றன.

பிற நாட்டுப்பல அறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் ஆக்கம் பெறவேண்டும் என்னும் பெருங்கவிஞன் விண்ணப்பத்திற்குச் செவி சாய்ப்பதாக அவரின் மொழிபெயர்ப்புக்கள் விளங்குகின்றன. தமிழ் மண்ணில் சாதியக்கொடுவிஷத்தை அரசியல் ஆதாயத்திற்கு ஆதாரமாக்கி இலகு அரசியல் நடத்தும் கயமை தொடர்ந்துகொண்டிருக்க தலித்திய கன்னட படைப்புக்களைத்தேர்வு செய்து அவைகளைத் தமிழில் கொண்டு தருவதைத்தன் முழுமுதற்கடமையாகக்கொண்டு இயங்கும் படைப்பாளியவர்.

ஆங்கிலக்கவிஞர் கீட்சின் கவிதைவரிகளில்.’Heard melodies are sweet,but those unheard are sweeter’ என்கிற விஷயமாய் பாவண்ணனிடமிருந்து இன்னும் இலக்கிய அற்புதங்கள் தொடர்ந்து பெறப்படவேண்டும். தமிழ் இலக்கிய உலகில் ஆரோக்கியமான  இலக்கியச்சூழல் ஆங்காங்கு இருக்கவேசெய்கின்றன. அவை பாவண்ணனின் படைப்புக்களை எப்போதும் சிரத்தையோடு அலசுகின்றன.                                                    

                        ----------------------------                                            

 

 

 

 


No comments:

Post a Comment