Monday, May 6, 2024

கவிதை ரகசியம்

 இன்று நிகழ்ந்த இணையக்கவியரங்கில்

வாசித்த கவிதை. 16\2\24 ?




ரகசியம்



என் வீட்டருகே

வீடு கட்டாத மனையொன்றில்

மாமரம் ஒன்று

பருவம் தோறும்

கொள்ளையாய்க்

காய்க்கிறது

மாவடு பறிக்கும் மாமி

மாங்காய்க்குழம்பு

வைக்கும் பெண்டிர்

உப்பு கொண்டு நசிக்கித்தின்னும் சிறுவர்

மாவத்தல் போடும் ஆயாமார்

உச்சாணிக்காய்ப் பழுத்துச் சுவைக்கும்

அணில் குருவி

என எல்லோரும்

நன்றி சொன்னார்கள்

செம்பரம்பாக்கம் ஏரிக்கு.

அவ்வப்போது வெள்ளநீர்

வருகையால்தான்

வீடு இன்னும்

எழாமல் கிடக்கிறது

வெறும் மனையாய்.



அனுபவம்



கவிதை எழுதுவதை

நிப்பாட்ட வேண்டும்

தொடர்ந்தால் துயரமே

கதை எழுதுவதும்

கட்டுரை புதினம்

புனைவதும் சித்திக்காமல்

மனம் சிக்கிக்கொள்கிறது

கவிதை வரிகளில்.

மொழிபெயர்ப்புக்குப்

போனால் அவ்வளவே

சொந்தக்கற்பனையின்

ஊற்றுக்கண்

அடைத்துக்கொள்கிறது

இறுக்கமாய்.

கவிதைக்காரன் கவிதையோடு மட்டுந்தான்

வாழணுமோ.


No comments:

Post a Comment